Showing posts with label #Murugan #Kandan #kadamban #Palani #Tamil Nadu #Hindu India. Show all posts
Showing posts with label #Murugan #Kandan #kadamban #Palani #Tamil Nadu #Hindu India. Show all posts

Monday, June 3, 2024

முருகப்பெருமானின் வேறு பெயர்கள்....

முருகப்பெருமானின் வேறு பெயர்களும், அதற்கான விளக்கமும்...!
சிவபெருமான் தனது நெற்றிக்கண் நெருப்பினை வெளியிட்டபோது அதனை தாங்கிய வாயு பகவான் சரவணப் பொய்கை ஆற்றில் விடவே, அதிலிருந்து வெளிப்பட்ட தீ பிளம்புகள் ஆறு குழந்தைகளாக கார்த்திகைப் பெண்களிடம் வளர்ந்தனர்.

அன்னை பார்வதி தேவி ஆறு குழந்தைகளையும் ஒன்றாக அனைக்கும் பொழுது ஆறுமுகனாக முருகப் பெருமான் தோன்றினார். தமிழ் கடவுள் என்றும் போற்றப்படுகிறார். 

இவருக்கு, கந்தன், கதிர்வேலன், கார்த்திகேயன், ஆறுமுகன், குகன், காங்கேயன், சுப்பிரமணியன், மயில்வாகனன், தண்டாயுதபானி, சண்முகன், சுவாமிநாதன், வேலன், சரவணன், வேந்தன் என்று வேறு பெயர்களும் உண்டு. 

அப்பனுக்கே பாடம் சொல்லிய மகன் என்ற பெருமையும் முருகப் பெருமானுக்கு உண்டு. அப்படிப்பட்ட முருகப் பெருமானுக்கு இருக்கும் வெவ்வேறு பெயர்கள் மற்றும் அதற்கான விளக்கங்கள் குறித்தும் இந்தப் பதிவில் நாம் காண்போம்.

ஆறுமுகம்: ஈசானம், தத்புருஷம், வாமதேவம், அகோரம், சத்யோஜாதம் என்ற ஐந்துடன் அதோமுகமும் சேர்ந்து ஆறுமுகமானது.

குகன்: குறிஞ்சி நிலத் தெய்வம், மலைக் குகைகளில் கோயில் கொண்டதால் குகன் என்று பெயர் பெற்றார்.

குமரன்: மிக உயர்ந்தவன், இளமையை எப்போதும் உடைவன், பிரம்மச்சாரி ஆனவன்.

முருகன்: முருகு என்பதற்கு அழகு என்று பொருள், எனவே முருகன் ஒப்புமையற்ற பேரழகன்.

குருபரன்: கு - அஞ்ஞான இருள், ரு - நீக்குபவர், ஆன்மாக்களின் அறியாமை இருளை அகற்றுபவன் குரு சிவனுக்கும், அகத்தியருக்கும், அருணகிரிக்கும் குருவாய் நின்று பிரணவத்தை உபதேசிப்பவன் குருநாதன்.

காங்கேயன்: கங்கையின் மைந்தன்.

கார்த்திகேயன்: கார்த்திகைப் பெண்களால் வளர்ந்தவன்.

கந்தன்: கந்து - யானை கட்டும் தறி. கந்தன் ஆன்மாக்களுக்குப் பற்றுக் கோடாய் இருப்பவன். பகைவர் வலிமையை அழிப்பவன் கந்தன். தோள் வலிமை மிக்கவன். ஆறு திருமேனியும் ஒன்றானவன்.கடம்பன்: கடம்ப மலர் மாலை அணிந்தவன்.

சரவணபவன்: சரம் - நாணல், வனம் - காடு, பவன் - தோன்றியவன், நாணல் மிக்க தண்ணீர் உடைய காட்டில் தோன்றியவன்.

ஸ்வாமி: ஸ்வம் - சொத்து, எல்லா உலகங்களையும், எல்லா உயிர்களையும் சொத்தாக உடையவன். சுவாமி என்ற பெயர் முருகனுக்கு மட்டுமே உரியது. சுவாமி உள்ள மலை சுவாமி மலை.

சுரேஷன்: தேவர் தலைவன் சுரேசன்.

செவ்வேல்: செந்நிற முடையவன், ஞானச் செம்மை உடையவன்.சேந்தன்: செந்தழல் பிழம்பாய் இருப்பவன்.

சேயோன்: சேய் - குழந்தை, குழந்தை வடிவானவன்.

விசாகன்: விசாக நட்சத்திரத்தில் ஒளியாய் உதித்தவன்.

வேலவன், வேலன்: வெல்லும் வேல் உடையவன். அறிவாக, ஞான வடிவாக விளங்கும் வேல், கூர்மை, அகலம், ஆழம் என்னும் மூன்றும் உடையது.

முத்தையன்: பிறப்பிலேயே முத்து ஒளியுடையது. மற்ற மணிகள் பட்டை தீட்டினால் தான் ஒளிரும். எனவே இயல்பாகவே ஒளிர்பவன் முத்தையன்.

சோமாஸ்கந்தன் : ச - உமா - ஸ்கந்தன்: சிவன் உமை முருகன்; சத்து - சிவம், சித்து - உமை, ஆனந்தம் - கந்தன், முருகன் ஆனந்த வடிவானவன்.

சுப்ரமணியன்: சு - மேலான, பிரம்மம் -பெரிய பொருளிலிருந்து, நியம் தோன்றி ஒளிர்வது. மேலான பெரிய பிரம்மத்தில் இருந்து தோன்றி ஒளிர்பவன்.

வள்ளற்பெருமான் : முருகன், மண்ணுலகில் அவதரித்த வள்ளி இச்சா சக்தி மூலம் இக நலன்களையும், விண்ணுலக மங்கை தெய்வானை கிரியா சக்தி மூலம் பரலோக நலன்களையும், வேலின் மூலம் ஞானசக்தியையும் ஆகிய மும்மை நலன்களையும், முக்தி நலன்களையும் வழங்குகிறார்கள்.

ஆறுபடை வீடுடையோன்: மூலாதாரம், சுவாதிஷ்டானம், மணிபூரகம், அநாகதம், விசுத்தி, ஆக்ஞை என்ற ஆறாதாரங்களை ஆறுபடை வீடுகளாய் உடையவன்.

மயில் வாகனன்: மயில் - ஆணவம், யானை -கன்மம், ஆடு - மாயை இந்த மூன்றையும் அடக்கி வாகனமாய் கொண்டவன்.

தமிழ் என்றால் முருகன். முருகன் என்றால் தமிழ். இரண்டையும் பிரிக்க முடியாத அளவிற்கு இணைந்தே இருக்கும். 

உதாரணமாக 12 உயிரெழுத்து என்பது முருகனின் 12 தோள்களை குறிக்கும். 18 மெய்யெழுத்து என்பது முருகனின் 18 கண்கள் (முருகன் சிவனது நெற்றிப் பொறியிலிருந்து தோன்றியவர் என்பதால், இவரது ஒவ்வொரு முகத்திலும் இவருக்கும் நெற்றிக்கண் உண்டு)

6 இன எழுத்து என்பது 6 முகங்களை குறிக்கும். ஃ என்ற ஆயுத எழுத்து வேலை குறிக்கும். வேலை வணங்குவதையே வேலையாக கொண்டால் வாழ்வில் சகல சவுபாக்கியங்களும் கிடைக்கும்.

ஓம் நமசிவாய 
படித்து பகிர்ந்தது 
இரா இளங்கோவன் 
நெல்லிக்குப்பம். 

Followers

வியாக்ரபுரீஸ்வரர் திருப்பெரும்புலியூர், தஞ்சாவூர்

வியாக்ரபுரீஸ்வரர் திருக்கோயில்,  திருப்பெரும்புலியூர்,  தஞ்சாவூர் மாவட்டம்-613204 *மூலவர்: வியாக்ரபுரீஸ்வரர் *இறைவி:...