Showing posts with label #navarathiri #amman #hindu #india. Show all posts
Showing posts with label #navarathiri #amman #hindu #india. Show all posts

Tuesday, September 27, 2022

சுவாரஸ்ய பகுதி.. மகிஷாசுரனை வதம் செய்த அம்பிகை... நவராத்திரி உருவான புராண கதை...!! நவராத்திரி உருவான கதை

சுவாரஸ்ய பகுதி. மகிஷாசுரனை வதம் செய்த அம்பிகை... நவராத்திரி உருவான புராண கதை...!!
                நவராத்திரி உருவான கதை...!!


சக்தி வழிபாட்டின் பண்டிகைகளில் முக்கியமானவை ஒன்பது நாட்கள் கொண்டாடப்படும் மிகச்சிறப்பு வாய்ந்த நவராத்திரி விழா தான்.

மனிதனின் முக்கிய தேவைகளான கல்வி, செல்வம், வீரம் ஆகிய இம்மூன்றையும் வேண்டி அவற்றிற்கு அதிபதிகளான சரஸ்வதி, லட்சுமி, துர்க்கை என்ற மூன்று சக்தி அம்சங்களையும் வழிபடுதலே நவராத்திரி வழிபாட்டின் முக்கிய நோக்கமாகும்.

நவராத்திரி உருவான கதை :

மகிஷாசுரன் என்னும் ஓர் அரக்கன் மூவுலகையும், தேவர்களையும் அடிமைகளாக்கி அனைவரையும் துன்புறுத்தி வந்தான். அவன் ரம்பன் என்பவனுக்கும், எருமை உருவம் கொண்ட அரக்கிக்கும் பிறந்தவன். அதனால்தான் மனித உடலுடனும், எருமை தலையுடனும் தோன்றினான். மகிஷாசுரன், பிரம்மனை நினைத்து மேருமலையில் பதினாறாயிரம் ஆண்டுகள் தவம் செய்தான். பிரம்மன் அவன் முன் தோன்றியதும் சாகாவரம் வேண்டும் என்று கேட்டான். இவ்வுலகில் பிறந்த யாவருக்கும் இறப்பு என்பது நிச்சயம் நடந்தே தீரும். அதனால் உன் வரத்தை மாற்றி கேள் என்றார் பிரம்மதேவர்.

அதற்கு மகிஷாசுரன் முன்யோசனை ஏதுமின்றி எனக்கு தேவர்கள், அசுரர்கள், மானிடர்களால் மரணம் ஏற்படக்கூடாது. கன்னி பெண்ணால்தான் மரணம் ஏற்பட வேண்டும் என்று வரம் கேட்டான். அவ்வரத்தையே பிரம்மதேவரும் அருளினார். பெண்கள் பூ போல் இருப்பதால் அவர்களால் இரும்பை விட வலிமையான தன்னை கொன்று விட முடியாது என்று மகிஷாசுரன் நினைத்ததால் இப்படி ஒரு வரத்தை பெற்றான்.

வரத்தை பெற்றதும் மகிஷாசுரனின் அராஜகம் ஆரம்பித்தது. தேவலோகத்தையே கைப்பற்ற நினைத்தான். இதனால் தேவர்கள் பயந்து மகாவிஷ்ணுவிடம் உதவி கேட்டனர். மகாவிஷ்ணு தேவர்களுக்கு உதவி செய்ய மகிஷாசுரனிடம் போருக்கு சென்றார். ஆனால், மகிஷாசுரனை விஷ்ணுபகவானால் வீழ்த்த முடியவில்லை.

எதனால் மகிஷாசுரனை அழிக்க முடியவில்லை என்று குழப்பத்தில் ஆழ்ந்தார். பின் பெண்ணால்தான் தமக்கு மரணம் வரவேண்டும் என்ற வரத்தை பிரம்மனிடம் பெற்றதால் தான் மகிஷாசுரனை அழிக்க முடியவில்லை என்பதை உணர்ந்து, விஷ்ணுபகவான் சிவனிடம் சென்று முறையிட்டார்.

சிவன் தன் சக்தியால் 'சந்தியாதேவி" என்ற சக்தியை உருவாக்கினார். அந்த சக்தியின் கண்கள் கறுப்பு, சிவப்பு, வெண்மை என்ற நிறத்தில் இருந்தது.

மகிஷாசுரன் தன்னிடம் போர் செய்ய வரவேண்டும் என்ற எண்ணத்தில் சந்தியாதேவி மகிஷாசுரனின் பார்வையில் விழும்படி நடந்து சென்றாள். சக்தியின் அழகில் மயங்கிய அவன், சக்தியை திருமணம் செய்ய தூது விட்டான். இதை அறிந்த சந்தியாதேவி, 'தன்னை யார் போர் செய்து வீழ்த்துகிறார்களோ அவரைதான் நான் திருமணம் செய்வேன்" என்று தூதுவனிடம் சொல்லி அனுப்பினாள்.

இதனால் மகிஷாசுரன் தன் வீரர்களை தேவியிடம் போருக்கு அனுப்பினான். ஆனால் தேவியிடம் போர் செய்தவர்கள் உயிருடன் திரும்பவில்லை. இதை கண்ட மகிஷாசுரன், கடைசியாக தேவியிடம் யுத்தத்திற்கு வந்தான். தேவி, மகிஷாசுரனிடம் பலமாக போராடி அவனுடைய எருமை தலையை தன் சக்கரத்தால் வெட்டி வீழ்த்தினாள். மகிஷாசுரன் மாண்டான்.

இதை கண்ட தேவர்களின் மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. மகிஷாசுரனிடம் போராடி போர் செய்து தேவலோகத்தையும், பூலோகத்தையும் காப்பாற்றியதால் மகிஷாசுரமர்த்தினி என்று தேவியை போற்றினார்கள். ஒன்பது நாள் போர் செய்து பத்தாவது நாள் தேவி வெற்றி பெற்றதால் விஜயதசமி உருவானது.

Sunday, September 25, 2022

சிவபெருமானுக்கு ஒரு ராத்திரி 'சிவராத்திரி". அம்பாளுக்கு ஒரு ராத்திரி 'நவராத்திரி"

நவராத்திரி ஆரம்பம்... கொலு வைப்பது எப்படி? உகந்த நேரம் இதோ...!!
                நவராத்திரி ஆரம்பம்...!!
சிவபெருமானுக்கு ஒரு ராத்திரி 'சிவராத்திரி". அம்பாளுக்கு ஒரு ராத்திரி 'நவராத்திரி" என்பது ஆன்றோர்களின் வாக்கு.

அம்பிகையை வழிபடுவதற்கு பல விழாக்கள் இருந்தாலும், சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அம்பிகையை மூன்று வடிவங்களில் ஒன்பது நாட்கள் தொடர்ச்சியாக விரதம் இருந்து வழிபடக்கூடிய ஒரு விழாவாக, நவராத்திரி விழா விளங்குகின்றது.

முக்கிய விரதங்களில் ஒன்றான நவராத்திரி விழா நாளை (26.09.2022) திங்கட்கிழமை ஆரம்பமாகின்றது. 

நவராத்திரி :

மக்களின் பண்பாட்டை வளர்க்கும் விழாக்களில் முக்கியமானது நவராத்திரி. புரட்டாசி மாதம் அமாவாசைக்கு பிறகு வரும் பிரதமை திதியில் ஆரம்பித்து நவமி திதியில் முடியும் ஒன்பது இரவுகளே நவராத்திரி ஆகும்.

நவராத்திரி விழாவையொட்டி கோவில்கள் மற்றும் வீடுகளில் கொலு வைத்து வழிபாடு நடத்தப்படும்.

தனம், தானியம், நிலையான இன்பம், ஆரோக்கியம், சொர்க்கம் மற்றும் வீடுபேறு அடைதல் என்ற அனைத்தையும் தரக்கூடிய விரதமாக நவராத்திரி விரதம் கொண்டாடப்படுகிறது.

நவராத்திரிக்கு கொலு வைப்பது ஏன்?

ஆதிபராசக்தி இப்பூவுலகம் முழுவதிலும் அருளாட்சி செய்கிறாள். புல், பூண்டு, புழு, மரம், பசு, புலி மற்றும் மனிதர் என எல்லாவித உயிர்களுமாக விளங்குகிறாள் பராசக்தி. அனைத்து உயிர்களிலும், பொருட்களிலும் அவளை காண வேண்டும் என்பதே கொலு வைப்பதன் நோக்கம்.


முதல் படி, அதாவது கீழ் படியில் - ஓரறிவு உடைய உயிரினமான புல், செடி, கொடி போன்ற தாவர பொம்மைகள்.

இரண்டாம் படியில் - இரண்டறிவு உடைய நத்தை, சங்கு பொம்மைகள்.

மூன்றாம் படியில் - மூன்றறிவு உடைய கரையான், எறும்பு பொம்மைகள்.

நான்காம் படியில் - நான்கறிவு உடைய நண்டு, வண்டு பொம்மைகள்.

ஐந்தாம் படியில் - ஐந்தறிவு கொண்ட நான்குகால் விலங்குகள், பறவைகளின் பொம்மைகள்.

ஆறாம் படியில் - ஆறறிவு உடைய மனிதர்களின் பொம்மைகள்.

ஏழாம் படியில் - சாதாரண மனிதர்களுக்கு மேலான மகரிஷிகளின் பொம்மைகள்.

எட்டாம் படியில் - தேவர்களின் உருவங்கள், நவகிரக பகவான்கள், பஞ்சபூத தெய்வங்களின் பொம்மைகள்.

ஒன்பதாம் படியில் - பிரம்மா, விஷ்ணு, சிவன் என்ற மும்மூர்த்திகளையும், சரஸ்வதி, லட்சுமி, பார்வதி ஆகிய பெண் தெய்வங்களையும் வைக்க வேண்டும்.

கொலு வைக்க சிறந்த நேரம் :

காலை - 06.15 மணி முதல் 07.15 மணி வரை

நண்பகல் - 12.05 மணி முதல் 02.05 மணி வரை

மாலை - 06.05 மணி முதல் 09.05 மணி வரை
நவராத்திரி சிறப்புகள் :

நவராத்திரியின் ஒன்பது நாட்களும் சர்க்கரை பொங்கல், உளுந்து வடை போன்ற நெய்வேத்தியம் செய்தால் கூடுதல் பலன்கள் கிடைக்கும்.

நவராத்திரி நாட்களில் வீட்டில் அரிசி மாவை பயன்படுத்தி கோலமிட வேண்டும். இவ்வாறு செய்வதால் குடும்ப ஒற்றுமையும், செல்வமும் வளரும்.

நவராத்திரியின் ஒன்பது நாட்களும் வாசலில் மாவிலை கட்டி பூஜை செய்தால் ஐஸ்வர்யம் உண்டாகும்.

நவராத்திரி நாட்களில் பகலில் சிவ பூஜையும், இரவில் அம்பிகை பூஜையும் செய்வதே சிறந்த வழிபாடாகும்.

தினந்தோறும் நவராத்திரி பூஜையின் நிறைவாக, பலவிதமான மங்கல பொருட்களை ஏழைகளுக்கு தானமாக அளிக்க வேண்டும். தான தர்மங்கள் தான் நவராத்திரி பூஜைகளை நிறைவு செய்ய உதவி புரிகின்றன.

Followers

பிள்ளையார் விரும்பும் 'மோதகம்' நைவேத்தியம் என்றால் என்ன❓

பிள்ளையார் விரும்பும் 'மோதகம்' நைவேத்தியம் மோதக் என்றால் உற்சாகம், மகிழ்ச்சி என்று பொருள். அகம் என்ற சொல்லுக்கு ‘வழங்கக்...