Tuesday, July 7, 2026

அருள்மிகு வீழிநாதேஸ்வரர் திருக்கோயில்*

*அருள்மிகு வீழிநாதேஸ்வரர் திருக்கோயில்*
*மூலவர் :* நேத்திரார்ப்பணேசுவரர், விழியழகீசர், விழியழகர்.
*உற்சவர் :* கல்யாணசுந்தரர்
*அம்மன் :* சுந்தரகுஜாம்பிகை, அழகுமுலையம்மை.

ஸ்தல விருட்சம் : வீழிச்செடி
தீர்த்தம் : வீஷ்ணுதீர்த்தம், 25 தீர்த்தங்கள்
புராண பெயர் : திருவீழிமிழலை
ஊர் : திருவீழிமிழலை
மாவட்டம் : திருவாரூர்

*ஸ்தல வரலாறு :*
------------------------------------------------------
மஹாவிஷ்ணுவின் கையில் இருந்த சக்ராயுதம் தேய்ந்துபோனபோது, ஆற்றல் பொருந்திய வேறொரு சக்கரத்தைப் பெறுவதற்காக சிவபெருமானை மஹாவிஷ்ணு பூஜித்ததாகப் பல்வேறு புராணத் தகவல்கள் உண்டு. அப்படி சிவபெருமானை விஷ்ணு பூஜித்ததாக திருமாற்பேறு (திருமால்பூர்), திருப்பைஞ்ஞீலி, திருவீழிமிழலை ஆகிய சிவஸ்தலங்களின் தல புராண வரலாறுகள் கூறுகின்றன. இம்மூன்று தலங்களில், திருவீழிமிழலை மிகவும் முக்கியமானதாகக் கருதப்படுகிறது.

சலந்திரனைச் சம்ஹரிக்க திருமாலுக்கு சக்கரம் தேவைப்படுகிறது. அதை சிவபெருமானிடம் இருந்து பெறுவதற்காக திருவீழிமிழலைக்கு வருகிறார். ஆயிரம் தாமரை மலர்களால் சிவனை அர்ச்சித்தால் எண்ணியது கிடைக்கும் என்று அறிகிறார். அதன்படி, ஆயிரம் தாமரை மலர்கள் சேர்த்து அர்ச்சனை செய்ய ஆரம்பித்து 999 மலர்களால் அர்ச்சனை செய்துவிடுகிறார். விஷ்ணுவை சோதிக்க நினைத்த சிவபெருமான், 1000-வது மலரை மறைத்து விடுகிறார். 1000-வது மலரைக் காணாமல் விஷ்ணு தவிக்கிறார். இன்னொரு தாமரை மலரைக் கொண்டு வந்து அர்ச்சனையைத் தொடர நேரமும் இல்லை. குறைந்த ஒரு மலருக்குப் பதிலாக, தாமரை மலருக்கு ஒப்பான தனது இரு கண்களில் ஒன்றையே பிடுங்கி எடுத்து, எந்தக் குறையும் இல்லாமல் பூஜையை முடித்தவுடன், சிவபெருமானும் காட்சி கொடுக்கிறார். அத்துடன், திருமால் விரும்பியபடி அவருக்கு சக்ராயுதத்தையும் கொடுத்து அருள் செய்கிறார். இப்படி மஹாவிஷ்ணு தன் கண்ணையே கொடுத்து சிவனை அர்ச்சித்த தலம்தான் திருவீழிமிழலை. இப்படி ஈசனை திருமால் வழிபட்ட செய்தியை திருநாவுக்கரசர் தனது பதிகம் மூலமாகப் பாடுகிறார். நான்காம் திருமுறையில் இடம் பெற்றிருக்கும் “பூதத்தின் படையர் பாம்பின்” என்று தொடங்கும் பதிகத்தின் 8-வது பாடலில், இத்தல வரலாறு குறித்துப் பாடுகிறார்.

கிழக்கு நோக்கிய 5 நிலை ராஜகோபுரத்துக்கு முன் பெரிய அழகிய திருக்குளம் உள்ளது. இறைவன் நேத்ரார்ப்பனேஸ்வரர் சந்நிதி கிழக்கு நோக்கி இருக்கிறது. மூலவர் சுயம்பு உருவில் சுமார் 5 அடி உயரத்தில் நற்காட்சி தருகிறார். மூலவர் லிங்கத்துக்குப் பின்புற கர்ப்பக்கிருக சுவரில், பார்வதி – பரமேசுவரர் திருமண கோலத்தைக் காணலாம். இறைவன் உமையை மணந்துகொண்ட தலம் என்னும் நிலைக்கேற்ப, கர்ப்பக்கிருக வாயிலில் அரசாணிக்கால் என்னும் தூணும், வெளியில் மகாமண்டபத்தில் பந்தக்கால் என்னும் தூணும் உள்ளன. மகாமண்டபத்தில், மாப்பிள்ளை சுவாமியாக கல்யாணசுந்தரர் காட்சி தருகிறார். இவரே இத்தலத்தின் உற்சவமூர்த்தி. அவரது வலது பாதத்தின் மேலே திருமால் அர்ச்சித்த கண்மலரும், அதன் கீழே சக்கரமும் இருக்கக் காணலாம்.

கைலாயத்தில் வசிக்கும் சிவபெருமானுக்கும், காத்தியாயணி அம்பிகைக்கும் திருமண வைபவம் நடைபெற்ற தலம் திருவீழிமிழலை. ஆகவே, இத்தலம் ஒரு திருமணத்தலம். கோவிலின் பிரதான நுழைவு வாயில் கோபுரத்தைவிட, கர்ப்பக்கிருஹத்தின் மேல் இருக்கிற 16 சிம்மங்கள் தாங்கக்கூடியதாக உள்ள விமானமே சிறப்பானது. இதற்கு விண்ணிழி விமானம் என்று பெயர். சக்கரம் பெற்ற திருமால், வைகுண்டத்தில் இருந்து கொண்டுவந்து இந்த விமானத்தால் இக்கோவிலை அலங்கரித்ததாகப் புராணங்கள் சொல்கின்றன. இறைவி சுந்தர குசாம்பாள் சந்நிதி, மூலவர் சந்நிதிக்கு அருகில் உள்ளது. ஆலயத்தின் முதல் பிராகாரத்தில் இருக்கும் நூற்றுக்கால் மண்டபம், சிற்ப வேலைக்கு ஒரு எடுத்துக்காட்டாக திகழ்கிறது. மூலவரின் வலப்பக்க மண்டப அறையில், கையில் கண்ணோடு அர்ச்சிக்கும் பாவனையில் திருமால் காட்சி தருகிறார்.

இத்தலம் வீழிச்செடி, சந்தனம், சண்பகம், பலா, விளா முதலிய மரங்கள் அடர்ந்த காடாகப் பல காலம் இருந்தது. மிழலைக் குறும்பர் என்னும் வேடுவர் ஒருவர் இத்தலத்தில் வசித்து வந்தார். அவர் தினம் ஒரு விளாங்கனி நிவேதனம் செய்து வீழிநாதரை வழிபட்டு வந்தார். அதன் பலனாக, ஈசன் அவர் முன் தோன்றி அருளாசி வழங்க, அவர் தவக்கோலம் பூண்டு, அருந்தவங்கள் செய்து அட்டமாசித்திகள் கைவரப் பெற்றார். இந்த மிழலைக் குறும்பருக்கு இத்தலத்தில் தனி சந்நிதி உள்ளது.

இக்கோயிலில் உள்ள வெளவால் நெத்தி மண்டபம், மிகச் சிறப்பான வேலைப்பாடுகள் கொண்டதாகும். அக்காலத்தில், கோயில் திருப்பணிகள் செய்யும் ஸ்தபதிகள், திருவீழிமிழலை வெளவால் நெத்தி மண்டபம் மற்றும் திருவலஞ்சுழி கல் பலகணி போன்ற அரிய திருப்பணிகள் நீங்கலாக மற்றவை செய்து தருகிறோம் என்று ஒப்புக்கொள்வார்கள். அத்தகைய சிறப்புபெற்ற இந்த வெளவால் நெத்தி மண்படம், இன்று கல்யாண மண்டபமாக விளங்குகிறது.

ராஜகோபுரம் கடந்து நுழைந்தவுடன், வலதுபுறம் உள்ள இந்த வெளவால் நெத்தி மண்டபம் அகலமான அமைப்புடன் நடுவில் தூண் இல்லாமல், சுண்ணாம்பு கொண்டு ஒட்டப்பட்டுள்ள வளைவான கூரை அமைப்புடன் உள்ள இந்த மண்டபம், கட்டட வேலைப்பாட்டில் மிகமிக அபூர்வமானது. வெளவால்கள் வந்து வசிக்க முடியாதவாறு கூரை அமைக்கப்பட்டுள்ளது இதன் சிறப்பம்சமாகும். சித்திரை மாதத்தில், இறைவன் – இறைவி திருக்கல்யாணம் நடைபெறுகிறது.

*கோயில் சிறப்புகள் :*

இங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார்.
 
இங்கு பாதாள நந்தி உள்ளது. முழு கோயிலே நந்திக்கு மேல் அமைந்திருப்பது போல் உள்ளது.
 
இங்கு இறைவன் காசியாத்திரைக்கு கிளம்பும் மாப்பிள்ளை கோலத்தில் அருள்பாலிப்பதால், மாப்பிள்ளை சுவாமி எனப்படுகிறார்.
 
கொடிமரம் அருகே சிவலிங்கம் அமைந்திருப்பது இன்னொரு சிறப்பம்சம்.
 
தேவார மூவராலும் பாடல் பெற்ற தலங்கள் பல உண்டு. அவற்றில் திருவீழிமிழலை தலமும் ஒன்றாகும். இத்தலம் 23 திருப்பதிகங்களையுடையது. வீழிச்செடிகள் நிறைந்திருந்ததால் இவ்வூருக்கு திருவீழிமிழலை என்று பெயர் ஏற்பட்டது.
 
திருமாலின் உற்சவத் திருமேனி ஒன்று ஒரு கையில் தாமரை மலரும், மறுகையில் கண்ணும் கொண்டு, நின்ற கோலத்திலிருப்பதை இக்கோயிலில் காணலாம். இங்கு இறைவனுக்கு முன்னே நந்தி தேவருக்குப் பதிலாக, திருமால் கூப்பிய கரத்தோடு நின்றிருக்கிறார் !
 
திருநாவுக்கரசரும் திருஞானசம்பந்தரும் சேர்ந்தே இத்தலத்துக்கு வருகிறார்கள். அவர்கள் வரும்போது, நாட்டில் கடும் பஞ்சம். மக்கள் உணவின்றித் தவிக்கின்றனர். இந்த நிலையில் அப்பர், சம்பந்தர் இவர்களுடன் வந்த அடியார்களுக்கு உணவு அளிப்பது சிரமமாக இருக்கிறது. இருவரும் கோவிலுக்குச் சென்று இறைவனை வணங்கி பதிகங்கள் பாடுகிறார்கள். மறுநாள் காலையில், கிழக்கு பலிபீடத்தில் ஒரு படிக்காசும், மேற்கு பலிபீடத்தில் ஒரு படிக்காசும் இருப்பதை இருவரும் காண்கிறார்கள். அவற்றைக் கொண்டு அடியவர்களுக்கு உணவு அளிக்கின்றனர். நாட்டில் பஞ்சம் தீரும் வரையில் இவ்வாறு தினமும் படிக்காசு பெற்று தொண்டு செய்திருக்கின்றனர். படிக்காசு அளிப்பதிலும், அப்பருக்கு நல்ல காசும், சம்பந்தருக்கு மாற்றுக் குறைந்த காசும் இறைவன் கொடுத்தார். சம்பந்தர் அதைப் பார்த்து “வாசி தீரவே காசு நல்குவீர்” என்னும் பதிகம் பாடிய பிறகு அவருக்கும் நல்ல காசு கொடுத்து அருள் செய்தார். அவ்வாறு வைத்தருளிய பலிபீடங்கள், கோயிலின் கிழக்கிலும் மேற்கிலும் உள்ளன. படிக்காசுப் பிள்ளையார், மேற்கு பலிபீடத்தின் அருகில் உள்ளார். அருகில் சம்பந்தர், அப்பரின் உருவங்கள் உள்ளன. இவ்விருவரும் தங்கியிருந்த திருமடங்கள், வடக்கு வீதியில் கீழ்க்கோடியிலும் (சம்பந்தர்) மேற்குக் கோடியிலும் (அப்பர்) உள்ளன.

படிக்காசு விநாயகர் கோயிலில் சம்பந்தர், நாவுக்கரசர் திருஉருவச்சிலைகள் உள்ளன. இருவரும் தாம் பெற்ற படிக்காசுகளைக் கொண்டு பொருட்களை வாங்கிய கடைத்தெரு, இப்போது ஐயன்பேட்டை என்றழைக்கப்படுகிறது. அங்கே உள்ள சுவாமி பெயர், செட்டியப்பர். அம்பாள், படியளந்த நாயகி. ஐயன் தராசு பிடித்த கையோடும், அம்பிகை படியைப் பிடித்தபடியும், உற்சவ மூர்த்தியாகக் காட்சி அளிக்கின்றனர்.
 
கோயிலின் எதிரில் பெரிய குளம் உள்ளது. மிகப் பெரிய கோயில். கோயில் கிழக்கு நோக்கியுள்ளது. இக்கோயில் மாடக்கோயில் அமைப்புடையது.
 
இத்திருக்கோயிலைச் சுற்றி; பத்ம தீர்த்தம், புஷ்கரணி, விஷ்ணு தீர்த்தம், திரிவேணி சங்கமம், குபேரதீர்த்தம், இந்திர தீர்த்தம், வருண தீர்த்தம், இலக்குமி தீர்த்தம், வசிட்ட தீர்த்தம் முதலாக 25 தீர்த்தங்கள் உள்ளன.

ஸ்தலவிருட்சம் ஒவ்வொரு யுகத்திற்கும் ஒன்றாக மாறுபடுகிறது என்பர். இப்போது பலா, தலமரமாக விளங்குகிறது.
 சோலை சூழும் திருவீழிமிழலையில் வாழும் பெருமாளே! (முருகா, குமரா, உயிர்கா என ஓத அருள்தாராய்!) சூரனுக்கு அஞ்சி, முனிவர்களும் தேவர்களும் ஓலமிட்டதை இங்கு அருணகிரியார் பாடியுள்ளார். கந்தபுராணத்திலும் இக்கருத்தை உடைய பாடல் வருகிறது.
 
*திருவிழா:*

மகா சிவராத்திரி, மார்கழி திருவாதிரை

*நடை திறக்கும் நேரம்:*

காலை 6 மணி முதல் 12 மணி வரை,
மாலை 4 மணி முதல் இரவு 8மணி வரை திறந்திருக்கும்.

*முகவரி*

அருள்மிகு நேத்ரார்ப்பணேஸ்வரர் திருக்கோயில், திருவீழிமிழலை,
திருவீழிமிழலை அஞ்சல்,
குடவாசல் வட்டம்,
திருவாரூர் மாவட்டம் – 609 505.
போன்:  +91-4366-273 050, 94439 24825

*அமைவிடம் :*

மயிலாடுதுறை – திருவாரூர் சாலையில் பேரளம் வழியாக பூந்தோட்டம் வந்து, அங்கிருந்து 10 கி.மீ. தொலைவில் அரிசிலாற்றின் வடகரையில் இத்தலம் அமைந்துள்ளது. கும்பகோணத்தில் இருந்து நாச்சியார்கோவில் வழியாக பூந்தோட்டம் செல்லும் சாலையில் சென்று தென்கரை என்ற இடத்தில் இறங்கி 1 கி.மீ. சென்றாலும் இத்தலத்தை அடையலாம். 
ஓம் நமசிவாய
 படித்து பகிர்ந்தது 
இரா இளங்கோவன் 
நெல்லிக்குப்பம். 

Monday, June 29, 2026

படியேறி தரிசித்தால் நைனாமலை வரதராஜப்பெருமாள்.

படியேறி தரிசித்தால் வளம்தரும் நைனாமலை வரதராஜப்பெருமாள்


சேலத்தில் இருந்து திருச்சி செல்லும் பிரதான சாலையில் இருக்கும் புதன்சந்தை, நாமக்கல் மாவட்டத்தின் பிரசித்தி பெற்ற பகுதி. இங்கிருந்து 3 கிலோ மீட்டர் தூரத்தில் இருக்கிறது நைனாமலை வரதராஜப்பெருமாள் கோயில். திரும்பிய திசையெல்லாம் பசுமை மிளிர, இயற்கை எழில் கொஞ்சும் மலையின் உச்சியில்2,600 அடி உயரத்தில் அமர்ந்து அருள்பாலிக்கிறார் வரதராஜப்பெருமாள். குவலயவல்லித் தாயார் சமேத வரதராஜப்பெருமாள் நின்ற கோலத்தில் காட்சியளிப்பது தனிச்சிறப்பு. ‘‘நைனாமலை இதிகாச காலத்திற்கு முன்பிருந்தே இருந்துள்ளது. எம்பெருமாள் தங்கியிருந்து அருள்பாலித்து வரும் திருத்தலங்களுள்  முதன்மையானது என்றும் புராணக்குறிப்புகள் கூறுகிறது. 

பிரம்மாவால் பாடப்பெற்ற பிரமாண்ட புராணத்தில் பதினாறாவது அத்தியாயத்தில் இந்த மலையின்  சிறப்பு தெளிவாக விளக்கப்படுகிறது. பிரசித்தி பெற்ற இந்த கோயில் பல்லவர் காலத்தில் கட்டப்பட்டது. பின்னர் திருமலை நாயக்கமன்னரின் தம்பியான கோவிந்தப்ப நாயக்கரால் சில பகுதிகள் கட்டப்பட்டது’’ என்கிறது தலவரலாறு. மலையடிவாரத்தில் பாதமண்டபத்திலிருந்து மலையின் படிகள் தொடங்குகின்றன. 

உச்சிக்கு சென்று வரதராஜரை வழிபட 3360 படிகளை கடந்து செல்ல வேண்டும். பாத மண்டபத்தில் கூப்பிய கரங்களுடன் பக்தர்களின் நலனுக்காக இறைவனை வேண்டி வணங்கி நிற்கிறார் ஆஞ்சநேயர். அவரை வணங்கிய பின்னரே பக்தர்கள் படியேற துவங்குகின்றனர். மலைஉச்சியின் முகப்பில் கோயிலின் பெரிய மண்டபமும், திருமடைப் பள்ளியும் கட்டப்பட்டுள்ளது. விழாக்காலங்களில் பக்தர்கள் தங்கி ஓய்வெடுத்துச் செல்லும் வகையில், மண்டபம்  விசாலமாக பரந்து கிடக்கிறது. 

திருமடைப்பள்ளியை தாண்டியதும் கோயில் படிகள் தொடங்குகின்றன. உபய வரதராஜ பெருமாளின் கோயிலுக்கு வலப்புறம், பாறையில்  வாலி சுக்ரீவர் திருவுருவங்கள் செதுக்கப் பட்டுள்ளன. அதை தாண்டி சென்றதும், கோயிலின் தல விருட்சமான நெல்லி மரம் உள்ளது. அதனையடுத்து கம்பீரமான எம்பெருமாள் வரதராஜ பெருமாள் சன்னதியை மலையின் உச்சியில் காணலாம். 

மூலவராக வரதராஜப்பெருமாள் ஸ்ரீதேவி, பூதேவி சமேதராக எழில்கோலம் தாங்கி அருள்பாலித்து வருகிறார். கோயிலில் கர்ப்பக் கிரகம், அர்த்த மண்டபம், மகா  மண்டபம் என மூன்று மண்டபங்கள் உள்ளன. மகா மண்டபத்தில் ராம லட்சுமணர், சீதாதேவி, நவநீத கிருஷ்ணர், ராதா ருக்மணி வேணுகோபால், துவார  பாலகர்கள் ஆகியோரின் விக்கிரகங்கள் உள்ளன. கருடாழ்வார் கோயிலின் எதிரில் உள்ளார். கல்லால் செய்யப்பட்ட தீபஸ்தம்பமும் உள்ளது. 

தீபஸ்தம்பத்தில் பெருமாளுக்கு  திருமஞ்சனம் செய்யும் போதெல்லாம் திருக்கோடி தீபம் ஏற்றப்படுகிறது. பெருமாளின் வலது புறத்தில் குவலய வல்லி தாயாரின் தனி சன்னதி அமைந்துள்ளது. தமிழ் வருடம் ஆனி முதல் தேதியிலிருந்து, ஆடி மாதம் 30ம் தேதி முடிய  இரண்டு மாதங்களும் கதிரவன் உதிக்கும் போது கதிரவனின் கதிர்கள் சுவாமியின் மீது நேரே விழுந்து பிரகாசிப்பது கண்கொள்ளாக் காட்சியாகும். மலை மீது 108 தீர்த்தங்கள் இருந்ததாக கூறப்படுகிறது. 

தற்போது அரிவாள் பாழி, பெரியபாழி, இடுக்கு பாழி, அம்மம்பாழி, பாண்டவ தீர்த்தம் அல்லது ஐந்தாம் பாழி என்று 5 தீர்த்தங்கள் உள்ளன. திருப்பதியை போன்றே பெருமாளுக்கு வாய்ப்பூட்டு பாதுகையுடன், கோமாளி வேஷம் ஆகியவை செலுத்துவது நடைமுறையில் இருந்து வருகிறது. புரட்டாசி மாதம் சனிக்கிழமைகளில் ஒரு லட்சத்திற்கும் அதிகமானோர்  பெருமாளை தரிசனம் செய்கின்றனர். திருப்பதிக்கு இணையான வரதராஜப் பெருமாளை படியேறி வழிபட்டால் வளமும், நலமும் பெருகும்.
ஓம் நமசிவாய 
படித்து பகிர்ந்தது 
இரா இளங்கோவன்
நெல்லிக்குப்பம். 

Saturday, June 27, 2026

மச்சபுரீசுவரர் கோயில்ஊர் தேவராயன்பேட்டை

மச்சபுரீசுவரர் கோயில்
ஊர் தேவராயன்பேட்டை
வட்டம் கும்பகோணம்
மாவட்டம் தஞ்சாவூர்
கும்பகோணம் அருகேயுள்ள கோயில் தேவராயன்பேட்டையில் உள்ள திருக்கோயில் மச்சபுரீசுவரர் கோயில் என அழைக்கப்படுகிறது. பெரிய புராணத்தில் இத்தலம் திருச்சேலூர் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இத்தல இறைவனை மீன் ஒன்று வழிபட்டதால் இறைவனுக்கு மச்சபுரீசுவரர் என்று பெயர் ஏற்பட்டது. இப்புராண நிகழ்வை எடுத்துக்காட்டும் வகையில் கோயிலின் முன்மண்டபத்தில் சிவலிங்க வடிவிலான இறைவனை மீன் வழிபடுவது போன்ற சிற்பம் காணப்படுகிறது. இத்திருத்தலம் தேவார வைப்புத்தலமாகும். இங்குள்ள இறைவன் மச்சபுரீசுவரர் ஆவார். இறைவி சுகந்த குந்தளாம்பிகை ஆவார்

காலம் : கி.பி.9-ஆம் நூற்றாண்டு

ஆட்சியாளர் : முதலாம் ஆதித்த சோழன்

கல்வெட்டு:  இக்கோயிலில் 55 கல்வெட்டுகள் காணப்படுகின்றன. இங்கு இக்கோயிலைச் சார்ந்து ஒரு ஆதுலர் சாலை (மருத்துவமனை) இயங்கியதாகக் கல்வெட்டுகள் கூறுகின்றன. மகாவிஷ்ணு மச்ச அவதாரம் கொண்டு சிவனை வழிபட்ட சின்னம் கோவில் முகப்பில் கருங்கல்லால் புடைப்பு சிற்பமாக செதுக்கப்பட்டுள்ளது.

சிற்பங்கள் : மச்சபுரீஸ்வரர் கோவிலில் முருகனுக்கு தனி சன்னிதி உள்ளது. முருகன் ஆறுமுகத்தினராய், 12 கரங்களுடன் விளங்குகிறார். வலது கையில் சங்கும், இடது கையில் சக்கரமும் ஏந்தியுள்ளார். திருமாலுக்கு உள்ளதைப்போல இங்கு முருகனுக்கும் சங்கு, சக்கரம் இருப்பது குறிப்பிடத்தக்கது. ஆறுமுகனுடன், வள்ளி தெய்வானையும் உடன் உள்ளனர். கருவறை விமானத்தின் தென்புறக் கோட்டத்தில் தென்முகக் கடவுள், மேற்கில் விஷ்ணு, வடக்கில் நான்முகன் காட்டப்பட்டுள்ளனர். அர்த்தமண்டப வடபுறக் கோட்டத்தில் துர்க்கை, தெற்கில் கணபதி உள்ளனர்.

தலத்தின் சிறப்பு 1200 ஆண்டுகள் பழமையானது. 
கோயிலின் அமைப்பு : இக்கோயில் முதலாம் ஆதித்த சோழன் காலத்தில் கட்டப்பட்ட, முற்காலச்சோழர் கலைப்பாணியைச் சேர்ந்தது. கருவறை தொடங்கி, அந்தராளம், அர்த்தமண்டபம், மகாமண்டபம், முகமண்டபம், எனவும், நந்தி, பலிபீடம், கொடி மரம் என ஒரே நேர்கோட்டில் அமைந்துள்ளன. இரு நுழைவாயிலைக் கொண்ட இக்கோயிலின் உள், வெளித் திருச்சுற்றுகள் உயர்ந்த செங்கற்சுவற்றினால் அமைக்கப்பட்டுள்ளது. வெளித்திருச்சுற்றில் இறைவி சன்னதியான திருகாமக்கோட்டம் அமைந்துள்ளது. மேலும் நிலைவாயிலுக்கு எதிரில் நந்தியுடன் சிறு மண்டபம் உள்ளது. முன் மண்டபத்தில் இடது புறத்தில் தர்ம விநாயகர், நவக்கிரகம், சனீசுவரர் சன்னதிகள் உள்ளன.

அருகில் உள்ள கோவில்கள்:  திருப்பாலைவனம்

செல்லும் வழி : பாபநாசம்-தஞ்சாவூர் சாலையில் பாபநாசத்திலிருந்து 3 கிமீ தொலைவில் பண்டாரவாடையை அடுத்து கோயில் தேவராயன்பேட்டை உள்ளது. 

                         ஓம் நமசிவாய 
படித்து பகிர்ந்தது
 இரா இளங்கோவன் 
நெல்லிக்குப்பம். 

Friday, June 26, 2026

சிவபெருமான் நரசிம்மருக்கு விமோசனம் அளித்த தலம்.


சிவபெருமான் நரசிம்மருக்கு விமோசனம் அளித்து ஆட்கொண்ட தலமான,
அஷ்ட பைரவர் தலங்களில் ஒன்றானதும்,
#நகரத்தார்_கோயில் ("சிற்பக்கோயில்")
என்று அழைக்கப்படும் 
#இரணியூர் என்ற #ஹிரண்யனூர்
#ஆட்கொண்டநாதர் (இரணிஸ்வரன்)
என்ற #நரசிம்மேஸ்வரர்
 #சிவபுரந்ததேவி திருக்கோயில் வரலாற்றையும் புகைப்படங்களையும் காணலாம் வாருங்கள் 

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே ஆயிரம் ஆண்டுகளுக்கு மேல் பழமையான இரணியூர் கோயில். நகரத்தாரின் 9 கோயில்களில் ஒன்றாக இரணியூர் ஆட்கொண்டநாதர் கோயில் உள்ளது. இக்கோயில் சிற்பக்கோயில் என்று அழைக்கப்படுகிறது.
ஆயிரம் ஆண்டுகளுக்கு மேல் பழமையான இக்கோயில் சிதிலமடைந்த நிலையில் 1941 முதல் 1944-ம் ஆண்டு வரையிலான காலக்கட்டத்தில் அழகிய சிற்ப வேலைபாடுகளுடன் நகரத்தார் புதுப்பித்து கட்டினர்.

நகரத்தார் கோவில்களில் ஒன்றான இரணியூர் கோவில் மிக சிறப்பான கலை நயத்துடன் அமைந்துள்ள மிக பழமையான கோவிலாகும். இரணியனை சம்ஹாரம் தோஷம் நீங்க அருளை பெற்ற தளம் என்பதால் இவ்வூர் இரணியூர் என்று அழைக்கப்படுவதாக கூறுகின்றனர்.

அதிகமான சிற்பங்கள் அமைந்திருப்பதால் இச்சிவாலயத்தினை சிற்பக் கோயில் என்றும் அழைக்கின்றார்கள். ஆலையத் தூண்களில் அஷ்டலட்சுமி, வல்லப கணபதி, வீரபத்திரர், முப்புரம் எரித்தவர், நவதுர்க்கை, இரணிய சம்ஹாரம் போன்ற சிற்பங்கள் இடம்பெற்றுள்ளன.

இச்சிவாலயத்தின் மூலவர் ஆட்கொண்ட நாதர் எனவும், அம்பிகை சிவபுரந்த தேவி எனவும் அழைக்கப்படுகிறார். இச்சிவாலயத்திற்கு சிவாகமப் படி பூசைகள் செய்யப்படுகின்றன. தலவிருட்சமாக வில்வ மரம் அமைந்துள்ளது.

கார்த்திகை மாதத்தில் சம்பகசஷ்டி, திருவாதிரை, கார்த்திகை மற்றும் சிவராத்திரி போன்ற விழாக்கள் இக்கோயிலில் நடைபெறுகின்றன.

இரணியூர் தலத்தில் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கும் ஆட்கொண்டநாதர், தொழிலில் வெற்றி அருளும் ஈசனாக போற்றப்படுகிறார். பிரகாரத்தில் முருகன், வள்ளி, தெய்வானை அனைவரும் மயில் வாகனத்தில் அருள்பாலிப்பது தனிச்சிறப்பு.

இப்பகுதியில் உள்ள 9 நகரத்தார் கோயில்களில் இதுவும் ஒன்றாகும், இது நகரத்தார் சமூகத்தின் தனி குலங்களுடன் (பிரிவு) தொடர்புடையது.

கி.பி 713-ம் ஆண்டில் காருண்யா பாண்டிய மன்னர்களால் இக்கற்சிற்பக் கோவில்கள் கட்டப்பட்டது.பின்னர் மகுட தனவைசியர் என்னும் நாட்டுக்கோட்டை நகரத்தார்களில் ஒரு பிரிவினரான திருவேட்பூருடையார் என்பவர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

இக்கோவிலைஸ் சுற்றிலும் பாண்டிய மன்னர் கால சிற்ப கல்வெட்டுகள் காணப்படுகின்றன. இரணியனை சம்ஹாரம் செய்த நரசிம்மர் இரணியன் மார்பை கீறி வழுந்தோர் வேகம் மாற இரணியூர் ஈசனை வணங்கினான்.

ஈசனும் சிங்க முகமும், மானிட உடலும், மிருகத்தின் காலும், வாலும், பறவையின் இறக்கையும், இணைந்த வீரசபேஸ்வராய் உருவெடுத்து நரசிம்மரை ஆட்கொண்டு சாந்தப்படுத்தினார் என்பது வரலாறு

இதனால் இத்திருத்தலத்தில் அமைந்துள்ள ஈசனை ஆட்கொண்ட நாதர் என்றும் இரணிஸ்வரன் என்றும் அழைக்கப்படுகிறார். ஆட்கொண்ட நாதரால் இத்திருத்தலத்தில் நரசிம்மர் குளிச்சி பொருந்திய நீலமேக பெருமாளாக இத்திருத்தலத்தில் கோவில் கொண்டுள்ளார். இக்கோவில் உள்ள தூண்களில் கலை நயமிக்க சிற்பங்கள் காண்பவரை வியக்க வைக்கிறது. மேலும் இச்சிற்பங்கள் விலைமதிப்பற்ற பொக்கிஷங்களாக கருதப்படுகிறது.

ஆட்கொண்ட நாதர் சுயம்பு மூர்த்தியாக காட்சியகிக்கிறார். இக்கோவிலில் அமைக்கப்பட்டு இருக்கும் விமானம் சுவாமி அம்சம் என்பது ஐதீகம். நடை அடைக்கப்பட்டிருக்கும் வேளையில் விமானத்தையே சுவாமியாக கருதி வழிபடுவது வழக்கமாக இருக்கிறது. கோவில் முன் மண்டபத்தில் இருந்து ஒரே சமயத்தில் சாமியையும் விமானத்தையும் தரிசிக்கும் விதத்தில் அமைக்கப்பட்டு இருக்கிறது.

இவற்றுள் அம்பாள் முன் உள்ள தூர்க்கை மண்டபத்தில் உள்ள தூணில் செதுக்கப்பட்டுள்ள நவதூர்க்கை சிற்ப வல்லுனர்களால் போற்றும் பொக்கிஷமாய் திகழ்கிறது.

#கோயில்_குறிப்புகள்:

*மூலவர்: ஆட்கொண்ட நாதர்

*அம்மன்: சிவபுரந்ததேவி 

*தல விருட்சம்: வில்வம் 

*ஆகமம்: சிவாகமம் 

*ஊர்: இரணியூர்

*மாவட்டம்: சிவகங்கை 

#தல_வரலாறு: 

திருமால், நரசிம்ம அவதாரம் எடுத்து அசுரனான இரண்யனை சம்ஹாரம் செய்தார். இதனால் அவருக்கு தோஷம் ஏற்பட்டது. தோஷம் நீங்க சிவனை வழிபட்டார். சிவன், திருமாலுக்கு காட்சி அருளி தோஷம் நீக்கினார். திருமாலின் வேண்டுதலுக்காக சிவன், இத்தலத்தில் ‘ஆட்கொண்ட நாதர்’ என்ற பெயரில் எழுந்தருளினார். நரசிம்மருக்கு விமோசனம் தந்தவர் என்பதால் இவருக்கு, ‘நரசிம்மேஸ் வரர்’ என்றும் பெயருண்டு.

திருமாலின் உக்கிரம் கண்டு அம்பிகையும் உக்கிரமடைந்தார். அதனால் நவகாளியாக வெளிபட்டு சிவனை வணங்கினார்.சிவனை வழிபட்டு சாந்தம் அடைந்தமையால் சிவபுரந்த தேவி என்று அழைக்கப்படுகிறார்.

அஷ்ட பைரவர் எழுந்தருளிய எட்டுத் தலங்களில் இதுவும் ஒன்றாகக் கருதப்படுகிறது. இதனாலேயே இங்கு கால பைரவர் சிறப்புடன் வழிபடப்படுகிறார். இங்குள்ள மற்ற புராணங்களின்படி, குபேரனும் வாயுவும் இக்கோயிலிலும் வழிபட்டுள்ளனர்.

*கோயில் சிறப்பு: 

சுயம்பு மூர்த்தியாக ஆட்கொண்ட நாதர் அருள்பாலிக்கிறார். கோயில்களில் அமைக்கப்பட்டிருக்கும் கோபுரம், விமானம் சுவாமியின் அம்சமாக இருப்பதாக ஐதீகம். நடை அடைக்கப்பட்டிருக்கும் வேளையில் விமானத்தையே சுவாமியாக கருதி வழிபடும் வழக்கம் உள்ளது. இக்கோயில் முன்மண்டபத்தில் இருந்து ஒரே சமயத்தில் சுவாமியையும், விமானத்தையும் தரிசிக்கும் விதமாக அமைக்கப்பட்டுள்ளது. இங்கு அதிக எண்ணிக்கையில் சஷ்டியப்தபூர்த்தி, சதாபிஷேகம் நடைபெறுகிறது.

*கல்வெட்டுகள்:

கோயில் இணையதளத்தின்படி, இந்த இரணியூர் கோயில் கி.பி. 714 ஆம் ஆண்டில் நாட்டுக்கோட்டை நகரத்தார்களிடம் ஒப்படைக்கப்பட்டது. எனவே, மூலக் கோயில் 8 ஆம்  நூற்றாண்டைச் சேர்ந்தது.

இந்தக் கோயில் சிவகங்கை மாவட்டத்தின் 34 கிராமங்களில் வசிக்கும் 3800 குடும்பங்களுக்குச் சொந்தமானது. நாட்டுக்கோட்டை நகரத்தரின் வரலாற்றின்படி, கவிரிபூம்பட்டினம் கிழக்கு வீதியில் வசித்து வந்த 502 குடும்பங்கள், பாண்டிய மன்னரின் வேண்டுகோளை ஏற்று இளையதாங்குடியில் குடியேறினர். 7 ஆம்  நூற்றாண்டில், அந்த 502 குடும்பங்களில் இருந்த இரண்டு சகோதரர்கள் இவ்விடத்திற்கு வந்து ஸ்ரீ அட்கொண்டநாதர் கோயிலைப் புதுப்பித்து விரிவுபடுத்தினர். 

இக்கோயில் தொடர்பான பதிவேடுகளின்படி, இந்த இடம் நகரத்தார் சமூகத்திற்கு கிபி 714 இல் வழங்கப்பட்டது (கலியுகம் ஆண்டு 3815 என பதிவு செய்யப்பட்டுள்ளது). முக்கிய கோவில் அந்த தேதிக்கு முன்பே இருந்ததாக நம்பப்படுகிறது. பாண்டிய மன்னன் சுந்தர பாண்டியனின் ஆட்சியின் கீழ் நகரத்தார் சமூகத்திற்கு பல்வேறு நிலங்களும், கோயில்களை (9 நகரத்தார் கோயில்கள் உட்பட) பராமரிக்கவும் நிர்வகிக்கவும் அனுமதிகள் வழங்கப்பட்டன.

அசல் கோவில் 2000 ஆண்டுகளுக்கு மேல் பழமையானதாக கருதப்படுகிறது; இருப்பினும், இந்த கோவில் சுமார் 500 ஆண்டுகளுக்கு முன்பு முழுமையாக புதுப்பிக்கப்பட்டது, அன்றிலிருந்து வழக்கமான புதுப்பிப்புகள் மற்றும் பராமரிப்புகள் உள்ளன. இப்பகுதிக்குள், சிற்ப கோயில் அல்லது சிற்பங்களின் கோயில் என்று பிரபலமாகக் அழைக்கப்படுகிறது – காரணம் இல்லாமல் அல்ல. இங்குள்ள சுவர்கள் மற்றும் தூண்களில் உள்ள சிற்பங்களின் எண்ணிக்கையும், அந்த சிற்பங்களில் உள்ள விவரங்களும் கிட்டத்தட்ட ஒப்பிடமுடியாது.

பிற சிவாலயங்களை விட மிக முக்கியமான ஒன்று இத்திருத்தலத்தில் நவக்கிரக சன்னதியின் அருகில் மேலே குபேரர் கல்லில் செதுக்கப்பட்டுள்ள சிற்பத்தில் காட்சியாளிக்கிறார். இரணியூர் கோவிலில் உள்ள குபேரர் தன் வாகனமான குதிரையில் உள்ளபடி கட்சியாளிக்கிறார்.

மேலும் இங்கு தமிழ் வருடப் பிறப்பன்றும், அட்சய திருத்தி அன்றும் குபேர பூஜையானது நடைபெறும்.

வரலாற்று சிறப்பு மிக்க கலைநய மிக்க கற்சிற்பங்கள் நிறைந்த இக்கோவிலினை அதிகமான பக்தர்களும், சுற்றுலாப் பயணிகளும் கோடை விடுமுறை நாட்களில் காண வருகின்றனர்.

ஆட்கொண்ட நாதரை தரிசித்து விட்டு அங்கு ஒவ்வொரு தூணிலும் செதுக்கப்பட்டுள்ள சிற்பங்களை அருகில் சென்று கண்டு வியக்கின்றனர். சிற்ப கலையில் முன்னோர்களின் செயல்மிகு திறனை ரசிக்கின்றனர்.

இத்தகைய சிறப்புக்கு சொந்தமான கோவிலானது சிவகேங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே உள்ள இரணியூர் இந்த ஊரானது திருப்பத்தூர் இருந்து சுமார் 13 கீ.மீ தொலையில் உள்ளது.சென்று ஆட்கொண்ட நாதரையும், அழகிய சிற்பங்களையும் தரிசித்து விட்டு வாருங்கள்.

*கோவில் நேரங்கள்:

கோயில் காலை 06.00 மணி முதல் 12.00 மணி வரையிலும், மாலை 16.30 மணி முதல் 19.30 மணி வரையிலும் திறந்திருக்கும்.

*சென்றடைவது எப்படி?

இரணியூரில் உள்ள கோயில், திருப்பத்தூரிலிருந்து சுமார் 14 கி.மீ., திருமயத்திலிருந்து 18 கி.மீ., காரைக்குடியிலிருந்து 26 கி.மீ., திருச்சிராப்பள்ளியிலிருந்து 86 கி.மீ. மற்றும் சென்னையிலிருந்து 412 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது.      

ஓம் நமசிவாய 
படித்து பகிர்ந்தது
 இரா இளங்கோவன் 
நெல்லிக்குப்பம். 

Wednesday, June 24, 2026

கிருஷ்ணாபுரம் வெங்கடாஜலபதி கோயில்.

கிருஷ்ணாபுரம் வெங்கடாஜலபதி கோயில்
கிருஷ்ணாபுரம் வட்டம்
பாளையங்கோட்டை
திருநெல்வேலி மாவட்டம் 

மூலவர் பெயர் வெங்கடாஜலபதி

தாயார் / அம்மன் பெயர் 
அலர்மேல் மங்கை, ஸ்ரீதேவி, பூதேவி

தலமரம் துளசி

அருகில் உள்ள கோவில்கள்:

தென்காசி ஸ்ரீகாசி விஸ்வநாதர் கோயில், 
குற்றாலநாதர் கோயில், 
ஆழ்வார்குறிச்சி பெருமாள் கோயில்

செல்லும் வழி : திருநெல்வேலியில் இருந்து திருச்செந்தூர் சாலையில் 10 கி.மீ. தொலைவில் கிருஷ்ணாபுரம் அமைந்துள்ளது. ஊரின் மத்தியில் வேங்கடாசலபதி திருக்கோயில் உள்ளது.

சிற்பங்கள் கருவறையில் மூலவர் வெங்கடாசலபதி உருவம் கருங்கல்லால் நான்கு அடி உயரத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது. நான்கு கரங்களுடன் நின்ற கோலத்தில் ஸ்ரீதேவி, பூதேவி புடைசூழ அமைந்துள்ள பெருமாளின் மேலிரண்டு கைகள் சங்கு மற்றும் சக்கரம் பற்றியுள்ளன; கீழிரண்டு கைகள் அபய மற்றும் கடிஹஸ்த முத்திரைகள் காட்டுகின்றன. 

உற்சவர் பெயர் ஸ்ரீனிவாசன், மூலவரைப் போலவே நான்கு கரங்களுடன் நின்றகோலத்தில் ஸ்ரீதேவி பூதேவி புடைசூழ காட்சியளிக்கிறார். 

கோயிலின் வடக்குத் திருச்சுற்றில் உள்ள வீரப்ப நாயக்கர் மண்டபத்தின் நுழைவாயிலில் இரண்டு யானைச் சிற்பங்கள் காணப்படுகின்றன. 
இக்கோயிலில் மொத்தம் 42 அழகு மிளிரும் சிற்பங்களைக் காணமுடிகின்றது. இவை உலகப்புகழ் பெற்றவை. மண்டபத்தின் தூண்களில் ஆளுயர உருவம் கொண்ட எழில் கொஞ்சும் சிற்பங்கள் புராணங்களின் அடிப்படையில் செதுக்கப்பட்டுள்ளன. ஆறு தூண்கள் மிக நேர்த்தியான வடிவமைப்பு கொண்ட சிற்பங்களை உள்ளடக்கியுள்ளன. 

இக்கோயிலிலுள்ள வீரப்பர் மண்டபமும், அரங்க மண்டபமும் உன்னத சிற்பங்களைக் கொண்டுள்ளன. வீரப்பர் மண்டபத்தின் முன்னுள்ள அர்ஜுனன், குறத்தி ராஜகுமாரனைத் தூக்கிச் செல்லுதல், நாடோடிப் பெண்ணின் நடனம், கர்ணன், குறவன் அரசகுமாரியைத் தூக்கிச் செல்லுதல், தேவகன்னியின் நடனம், மன்மதன், அரங்க மண்டபத்திலுள்ள வீரபத்திரன், மன்மதன், பீமன், புருஷாமிருகம், தருமர் ஆகிய சிற்பங்கள் உள்ள கற்றூண்கள், நடனமாது, ரதிதேவியும் தோழிகளும், வீரபத்திரன் ஏவலாளர் ஆகிய சிற்பங்கள் நாயக்கர் காலச் சிற்பியின் கைவண்ணத்தைக் காட்டுகின்றன.

தலத்தின் சிறப்பு 

500 ஆண்டுகள் பழமையானது. நாயக்கர் கலைப்பாணி

கி.பி.16-ஆம் நூற்றாண்டில் விசயநகரப் பேரரசின் கீழ் தமிழகத்தை ஆண்ட மன்னருள் ஒருவரான கிருஷ்ணப்ப நாயக்கர் இந்த கோவிலைக் கட்டி சிற்பங்களை நிறுவியுள்ளார். 110 அடி உயரத்தில் ஐந்து நிலை இராஜகோபுரமும், கருங்கல்லிலான திருச்சுற்று மதில்களும் சூழப்பெற்று விசாலமாக 1.8 ஏக்கர் (0.73 ஹெக்டேர்) பரப்பில் நாயக்கர் கலைப்பாணியில் எழிலுடன் விளங்கும் அளவில் பெரிய வாழ்வியல் மற்றும் புராண சிற்பங்களைக் கொண்டு இக்கோயில் அமைந்துள்ளது. கிருஷ்ணாபுரம் கோவில் ஒரு வைணவ வழிபாட்டுத் தலம் ஆகும். கிருஷ்ணப்பரின் மகன் வீரப்பரின் திருப்பணிகளும் இங்கு உள்ளன. கிருஷ்ணப்பர் நினைவாக இங்குள்ள கோவிலை அடுத்த ஊர் கிருஷ்ணாபுரம் என அழைக்கப்படுகிறது.

                                       . ஓம் நமசிவாய படித்து பகிர்ந்தது
 இரா இளங்கோவன்
 நெல்லிக்குப்பம். 

கும்பகோணத்தை சுற்றியுள்ள 6 சிவாலயங்கள்.

*கும்பகோணத்தை சுற்றியுள்ள 6 சிவாலயங்கள்*
                             
*நாகேஸ்வரர்*

கும்பகோணத்தில் கிழக்குப் பகுதியில் அமைந்துள்ளது, நாகேஸ்வரர் திருக்கோவில். பூமியைத் தாங்கிக்கொண்டிருந்த ஆதிசேஷனுக்கு, அதன் பாரத்தை தாங்கும் சக்தி இல்லாமல் போனது. 

இதனால் மகாவிஷ்ணுவை வணங்கிய ஆதிசேஷன், தனது இயலாமையை எடுத்துரைத்து, தொடர்ந்து பூமியைத் தாங்கும் சக்தியைத் தருமாறு வேண்டினார். 

அதற்கு மகாவிஷ்ணு, “நீ.. கும்பகோணம் சென்று அங்கு ஒரு தீர்த்தத்தை உருவாக்கி, அந்த நீரைக்கொண்டு அபிஷேகித்து நாகேஸ்வரரை வணங்கு. அதன் மூலம் பூமியைத் தாங்கும் வல்லமை உனக்குக் கிடைக்கும்” என்று அருளினார். 

அதன்படியே கும்பகோணம் வந்து நாகேஸ்வரரை வணங்கிய ஆதிசேஷன், பூமியைத் தாங்கும் முழு சக்தியையும் பெற்றார். இந்த ஆலயம் பிரமாண்டமாக அமைந்துள்ளது. இங்கு வடக்கு திசையில் சிவகாமி அம்மை சன்னிதியும், தென் திசையில் சிங்கமுக தீர்த்தமும் இருக்கின்றன.

*கோடீஸ்வரர்*

கும்பகோணத்தில் அமுத கலசத்தின் மீது அம்பு எய்தார், சிவபெருமான். அந்த கலசத்தில் இருந்து தெறித்த ஒரு துளி அமிர்தம், கும்பகோணம் அடுத்துள்ள கொட்டையூர் கோடீஸ்வரர் ஆலயத்தின் குளத்திற்குள் விழுந்தது. 

இதையடுத்து அந்த குளம், அமிர்தக் கிணறாக மாறியது. எங்கும் ஒளி ரூபமாக வீற்றிக்கும் சிவபெருமான், இங்கு கோடீஸ்வரர் என்ற திருநாமத்தைத் தாங்கி நிற்கிறார். இங்குள்ள சிவலிங்கம், தன்னகத்தே, கோடி லிங்கங்களை அடக்கியதாக காட்சி தருகிறது. 

ஒரு முறை மத்ரயோகி என்ற முனிவர், தான் இழந்த தவ பலத்தை திரும்பப் பெறுவதற்காக, கோடி சிவலிங்க தரிசனத்தைக் காண விரும்பினார். அதன்படி இந்த ஆலயத்தில் உள்ள இறைவனையும் தரிசிக்க வந்தார். 

அப்போது இத்தல இறைவன், தன்னுள் இருந்த கோடி சிவலிங்கத்தை முனிவருக்கு காட்டி அவருக்கு அருள்புரிந்தார். இங்குள்ள பரிவார தெய்வங்கள் அனைத்தும் ‘கோடி’ என்ற அடைமொழியோடே அழைக்கப்படுகின்றன.

*அபிமுகேஸ்வரர்*

சிவபெருமான் வேடனின் உருவம் தாங்கி வந்து, அமுத குடத்தை அம்பு எய்து சிதைத்தபோது, அந்த குடத்தின் மேல் இருந்த தேங்காய் ஓரிடத்தில் போய் விழுந்தது. 

விழுந்த இடத்தில் ஒரு தென்னை மரமும், அதன் அடியில் ஒரு சிவலிங்கமும் தோன்றின. தேங்காய்க்கு, ‘நாளிகேரம்’ என்ற பெயர் உண்டு. தென்னை மரத்தின் அடியில் தோன்றியதால், இத்தல இறைவன் ‘நாளிகேசர்’ என்று அழைக்கப்பட்டார். 

இத்தல அம்பாளின் திருநாமம், ‘அமுதவல்லி’ என்பதாகும். ஒரு முறை மகாமக குளத்தில் நீராடுவதற்காக நவ கன்னியர்கள் வருகை தந்தனர். 

அவர்கள் தரிசிப்பதற்கு ஏதுவாக, கிழக்கு நோக்கி அமர்ந்திருந்த நாளிகேசர், மேற்கு நோக்கி திரும்பினார். இதனால் இத்தல இறைவனுக்கு ‘அபிமுகேஸ்வரர்’ என்ற பெயர் வந்தது. அபிமுகம் என்றால் நேர்முகம் என்று பொருள்.

*காளகஸ்தீஸ்வரர்*

இந்தப் பெயரைக் கேட்டதுமே நம் நினைவுக்கு வருவது, திருப்பதி அருகே உள்ள காளகஸ்தீஸ்வரர் திருக்கோவில்தான். 

ஆனால் நாம் பார்க்கப்போவது அதேபோன்று, கும்பகோணம் உப்பிலியப்பன் ஆலயம் அருகே அமைந்துள்ள காளகஸ்தீஸ்வரர் திருக்கோவில் ஆகும். திருப்பதி அருகே உள்ள காளகஸ்தியில் செய்ய வேண்டிய பரிகார பூஜைகளை, 

அங்கே செல்ல முடியா தவர்கள், இந்த ஆலயத்தில் செய்யலாம் என்று சொல்லப்படுகிறது. நீண்ட காலமாக திருமணம் ஆகாத ஆண்களும், பெண்களும் இந்த ஆலயம் வந்து, இத்தல இறைவனை வேண்டினால் விரைவில் திருமணம் கைகூடும் என்கிறார்கள். 

இங்குள்ள துர்க்கை அம்மனை வேண்டினால், வேண்டிய வரம் உடனே கிடைக்கும் என்பது ஐதீகம். ஓம்கார வடிவில் அமைந்துள்ள அம்மனின் பிரகாரத்தில் உள்ள மணியை அடித்தால், ‘ஓம்’ என்ற நாதம் ஒலிப்பது சிறப்புக்குரிய அம்சமாகும்.

*அமிர்தகலசநாதர்*

கும்பகோணத்தில் இருந்து சுமார் 4 கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது, சாக்கோட்டை பகுதி. இங்குதான் அமிர்தவல்லி உடனாய அமிர்தகலசநாதர் கோவில் இருக்கிறது. 

இந்த ஆலயத்தைச் சுற்றிலும் கோட்டை ஒன்று இருந்த காரணத்தால் ‘கோட்டைக்கோவில்’ என்றும் இது அழைக்கப்படுகிறது. சிவபெருமான் வேடனாக வந்து அம்பெய்தி கும்பத்தை உடைத்தபோது, கலசம் மட்டும் போய் விழுந்த இடம் இதுவாகும். 

சோழர் கால சிற்பக்கலையின் மிகச் சிறந்த வேலைப்பாடாக விளங்கும் இத்தல மூலவர், சிவலிங்க ரூபமாக காட்சி தருகிறார். எனவே தான் இத்தல இறைவன் ‘அமிர்தகலசநாதர்’ என்று பெயர் பெற்றார். 

மூலவர் சன்னிதிக்கு வடக்குப் பகுதியில் தென் திசை நோக்கிய சன்னிதியில் அமிர்தவல்லி அம்மன் வீற்றிருக்கிறார். அம்மனுக்கு தவத்தின் பயனை இறைவன் உணர்த்திய தலம் இதுவாகும்.

*ஏகாம்பரேஸ்வரர்*

கும்பகோணம் மத்திய பேருந்து நிலையத்தில் இருந்து சுமார் 2 கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது ஏகாம்பரேஸ்வரர் ஆலயம். இந்த ஆலயத்தில் மூலவருடன், காமாட்சி அம்மன் வீற்றிருந்து அருள்பாலிக்கிறார். அம்மன் சன்னிதியின் இருபுறமும் தீட்டப்பட்டுள்ள காயத்ரி தேவியின் திருவுருவமும், காமாட்சி அம்மனின் ஒவியமும் காண்போரை கொள்ளைகொள்வதாக அமைந்துள்ளன. 
                           -  வேலாயுதம் செ 
ஏகாம்பரேஸ்வரர், காளியம்மன் மற்றும் நவக்கிரகங் களுக்கு தனித்தனியாக சன்னிதிகள் காணப்படுகின்றன. இங்குள்ள காளிகாபரமேஸ்வரி என்னும் ராகுகால அம்மன், அசுரனை சம்ஹாரம் செய்யும் திருக்கோலத்துடன் காட்சி தருகிறாள். 

பொதுவாக துர்க்கை அம்மனுக்குத்தான் ராகுகால வழிபாடு நடத்தப்படும். ஆனால் இங்கு, காளிகாபரமேஸ்வரி அம்மனுக்கு ராகுகால வழிபாடுகள் செய்யப்படுகின்றன.
ஓம் நமசிவாய 
படித்து பகிர்ந்தது 
இரா இளங்கோவன் 
நெல்லிக்குப்பம். 

Wednesday, June 17, 2026

தஞ்சாவூர் வடபத்ர காளியம்மன்.

தஞ்சாவூர் வடபத்ர காளியம்மன். 
திருவாலங்காட்டுச் செப்பேட்டு வரிகளின் மூலம் தஞ்சை நகரில் சோழர் ஆட்சி மலரும்போதே நிசும்பசூதனி தேவி என்கிற வடபத்ர காளியம்மன் திருக்கோயிலும் எழுந்தது தெரிய வருகிறது.

பேரரசர்கள் தங்கள் வெற்றிக்குத் தெய்வமாக விளங்கும் கொற்றவைக்கு ஆலயங்கள் அமைப்பது பண்டைய மரபு. தஞ்சை நகரின் புகழுரைக்கும் செந்தலைத் தூண்கள் (நியமத்துத் தூண்கள்) சுவரன்மாறன் எனும் பெரும்பிடுகு முத்தரையன் எடுப்பித்த நியமத்து மாகாளத்துப் பிடாரி கோயிலின் தூண்களே என்பது குறிப்பிடத்தக்கது.
அந்த நியமத்து மாகாளத்துப் பிடாரி தேவியைப் பாண்டியன் மாறஞ்சடையன், தெள்ளாறு எறிந்த மூன்றாம் நந்திவர்ம பல்லவன், சோழ மன்னன் ராஜகேசரி வர்மனான ஆதித்தன் போன்ற பெரு மன்னர்கள் போற்றி வழிபட்டனர் என்பதை அதே தூண்களில் உள்ள கல்வெட்டுகள் எடுத்துரைக்கின்றன. இதனால் தமிழகத்து, அனைத்து மன்னர் மரபினர்களும் தேவிக்கு எத்துணை ஏற்றம் தந்து வழிபட்டனர் என்பது தெரிய வருகிறது. இதே நெறியில்தான் விஜயாலயனும் தஞ்சையில் நிசும்பசூதனியை பிரதிஷ்டை செய்தான்.


கோயில் நுழைவுவாயில்
அன்னை பராசக்தி துர்க்கையாக, காளிதேவியாகப் பல்வேறு வடிவங்கள் பூண்டு, தீமையின் உருவாகத் திகழ்ந்த அரக்கர் பலரை வதம் செய்தாள் என்பதைத் தேவி மகாத்மியம் உரைக்கிறது. தேவியின் உன்னதத்தை வேதத்தில் கூறப்படும் 'ராத்திரி சூக்தம்' என்பதிலிருந்து பல நூல்கள் எடுத்துரைக்கின்றன.

கோயில் முகப்பு
தேவி துர்கா பரமேசுவரியாக இரத்தபீஜன் எனும் அரக்கனை அழித்தபோது, முதலில் நிசும்பனும் பின்னர் அவன் தம்பி சும்பனும் தேவியுடன் போர் தொடுத்தனர். அகம்பிடித்த அரக்கர்கள் இருவரையும் தேவி அழித்தாள். அப்போது அவள் பூண்ட வடிவே 'நிசும்பசூதனி' என்பதை நூல்கள் கூறுகின்றன.


விஜயாலயன் பிரதிஷ்டை

தஞ்சை கீழவாசலில் விஜயாலய சோழன் பிரதிஷ்டை செய்த நிசும்பசூதனி என்கிற வடபத்ர காளிதேவியின் வடிவம் பீடத்தின் மேல் அமர்ந்த கோலத்திலுள்ளது. இச்சிற்பத்தின் வலக்கால் மடங்கி ஆசனத்தின் மீது அமர்ந்திருக்க, இடக்கால் தொங்கிய வண்ணமாக உள்ளது. கையில் கத்தியும் கேடயமும் உள்ளன. மேல் பாகத்தில் வலக்கையில் ஏந்திய சூலத்தைக் கொண்டு காலடியில் இருக்கும் அரக்கனைக் குத்தித் தள்ளுவது போல அமைந்துள்ள இத்திருமேனிக்குப் பாம்பினாலாகிய குசபந்தமும், சடைமுடியும் விளங்குகின்றன.

நிசும்பசூதனி என்கிற வடபத்ர காளியம்மன்</strong>
நிசும்பசூதனி என்கிற வடபத்ர காளியம்மன்
கீழவாசல் பூமால் ராவுத்தன் கோயில் தெருவில் யோக பட்டத்தில் அமர்ந்திருக்கும் சிவனாரது திருவுருவமும், காளி கோயிலை ஒட்டிய மணற்பகுதியில் மார்பு வரை புதைந்துள்ள கெளமாரி உருவமும் மிகப் பழமையான 8 - 9 ஆம் நூற்றாண்டுச் சிற்பங்களாகும். இந்தப் பழைமை எச்சங்களோடு தேவி இங்குக் கோயில் கொண்டுள்ளாள். பொதுவாக எல்லா ஊர்களிலும் காளி கோயிலாக அல்லது பிடாரி கோயிலாகத் தேவியின் திருமுற்றங்கள் காணப்படும். இங்கு இடம் பெற்றிருக்கும் திருவுருவங்கள் 4 அல்லது 8 கரங்களுடன் திகழும். பெயர்களும் காளி, காளாபிடாரி, பட்டாரகி என்பனவாகக் குறிக்கப்பெறும்.


ஆனால் தஞ்சையில் விஜயாலயன் பிரதிஷ்டை செய்த தேவிக்கு "நிசும்பசூதனி' என்ற சிறப்புப் பெயர் காணப்படுகிறது. இதனால், இவ்வடிவம் மற்றக் காளி, பிடாரி உருவங்களிலிருந்து மாறுபட்டுத் திகழ்ந்திருக்க வேண்டும். தஞ்சைக் குயவர் தெருவிலுள்ள உக்கிரமாகாளி மற்ற இடங்களில் காணப்படும் முற்காலச் சோழர் கலைப்பாணியில் அமைந்த, காளாபிடாரியாகவே காணப்படுகிறாள். ஆனால் தஞ்சை பூமால் ராவுத்தன் கோயில் தெரு வடபத்ரகாளியோ தமிழகத்தில் வேறு எங்கும் காணமுடியாத புதுமையான வடிவில் திகழ்கிறாள்.



ஆறு அடி உயரத்துக்கும் மேலுள்ள இச்சிலையில் தேவி அமர்ந்து காணப்படுகிறாள். பல கரங்கள். அக்கரங்களில் பல படைக்கலன்கள். தலையில் கேசம் தீச்சுடர்போல் மேல் எழுகிறது. முகத்தில் ஓர் உறுதி. அசுரப் பூச்சிகளை அழிக்க வேண்டும் என்னும் சீற்றம். வலது காதில் பிரேத குண்டலம். இடக்காதில் பெரியகுழை. சதை வற்றிய உடலில் வெறும் எலும்புதான். ஆயினும் திண்மையான நீண்டு தொங்கும் மார்பகங்கள். அவற்றைச் சுற்றிலும் பாம்பு கச்சாகச் சுழல்கிறது. மண்டை ஓடுகள் பூணூலாக அவள் உடலில் திகழ்கின்றன. எட்டுக்கரங்கள். அவை சூலம், வில், மணி, கத்தி, பாசம், கேடயம், கபாலம் தரித்துள்ளன. ஓர் இடக்கரம் காலின் கீழ் கிடக்கும் அசுரரைச் சுட்டுகிறது. அவளது வலது அடி துண்டிக்கப்பட்ட ஒரு தலையின் மீது ஊன்றியுள்ளது. அந்தத் தலையே பெரிதாக உள்ளது. அதன் மீது ஊன்றியுள்ள அவளது காலில், எலும்பாக இருப்பினும், அழுத்தும் வலிமையைக் காணலாம். அவளது இடக் காலை அசைத்துக் கிடத்தியுள்ளாள். அவ்விருக்கையின் கீழ் நான்கு அசுரர்கள் சிக்கித் தவிக்கின்றனர். மூச்சுத் திணறுகின்றனர். ஓடுகின்றனர். என்ன பெருமிதமான சிற்பம். மயிர்க்கூச்செறியும் அமைப்பு. சண்டன், முண்டன், சும்பன், நிசும்பன் என்னும் அசுரர்கள் நால்வரும் வதைபடும் காட்சியைக் காணக் கண்கோடி வேண்டும்.

இந்தக் கோயிலையும் தரிசிக்கலாமே.. பித்ரு, மாத்ருஹத்தி தோஷம்  நீக்கும் திருமங்கலம் சாமவேதீசுவரர் திருக்கோவில்

<strong>வடபத்ர காளியம்மன்</strong>
வடபத்ர காளியம்மன்
கம்பீரமான தோற்றம்


தீமையை அழித்து அடியவர்களுக்கு அன்னை அருளமுது அளிக்கின்றாளோ எனக் கருதுமாறு கம்பீரமாக அமர்ந்துள்ளாள். இதை ஒத்ததொரு வடிவம் தமிழகத்தில் வேறு எங்கும் கிடையாது. மத்தியப் பிரதேச மாநிலத்தில் இதேவடிவில் அன்னை எலும்புருவில் காட்சியளிக்கும் மற்றொரு சிற்பம் இருப்பதாகச் சிற்பவியல் வல்லுநர்கள் கூறுகின்றனர். இவள்தான் விஜயாலயன் வடித்த நிசும்பசூதனி என்பதில் ஐயமில்லை.

அவளுக்காக விஜயாலயனால் எடுக்கப்பட்ட கோயில் அழிந்தாலும், திருமேனி நிலை குலையாமல் இருப்பது தஞ்சையின் பெரும் பேறாகும். வரலாற்று ஏடுகள் குறிக்கும் தஞ்சை நகரின் தொன்மையான தேவியின் தெய்வத் திருவுருவமும் இதுதான் என்பது சிறப்புக்குரிய செய்தி.

வேண்டிய சக்தியைக் கொடுத்த காளி


விஜயாலய சோழன் காலம் முதல் வேண்டிய சக்தியைக் கொடுத்து அருள்புரிகிறாள் நிசும்பசூதனி என்கிற வடபத்ரகாளியம்மன். சிறப்பாக ஆட்சிபுரிவதற்கு இக்காளியையே விஜயாலய சோழன் நாடினான். இக்கோயில் தேவியை வழிபட்ட சோழ மன்னர்கள் தொடர்ந்து வெற்றி பெற்று வந்தனர்.

இக்கோயிலில் ஆப்பசார பூஜைகள் செய்தால் மன மற்றும் உடல் ரீதியான முடக்கத்தை நீக்கி, சோர்விலிருந்து விடுவித்துக் கொள்ளலாம். பொதுவாக, எதிரியைக் கண்டுபிடித்துவிடலாம்; ஆனால், துரோகியைக் கண்டறிய முடியாது. இக்கோயிலுக்குச் சென்று வழிபட்டால் அனைத்து எதிர்ப்புகளும் உடைத்தெறியப்படும். காரியத் தடை எதுவாக இருந்தாலும் தகர்த்தெறியப்பட்டு, வெற்றியைத் தரும்.

இந்தக் கோயிலையும் வலம் வரலாம்.. நவக்கிரக தோஷம் போக்கும் தஞ்சை சக்கரத்தாழ்வார்

மண்டபத் தூண்களில் வடிவமைக்கப்பட்டுள்ள எண் திசை காளிகள்
ராகு, கேது நிவர்த்தி தலம்

இக்கோயிலுக்கு தொடர்ந்து 9 வாரங்கள் வெள்ளி அல்லது ஞாயிறு அல்லது செவ்வாய்க்கிழமைகளில் ராகு காலத்தில் சென்று வழிபட்டால் ராகு, கேது தோஷங்களான தார தோஷம், செவ்வாய் தோஷம், களத்திர தோஷம், திருமணத் தடை போன்றவற்றுக்கு நிவர்த்தி கிடைக்கும். இதேபோல, தொழில், வேலை போன்ற காரியத்தில் தடைகள் இருந்தாலும், தொடர்ந்து 9 வாரங்கள் செவ்வாய் அல்லது வெள்ளி அல்லது ஞாயிற்றுக்கிழமைகளில் சென்று வழிபட்டால் வேண்டுதல் நிறைவேறும். பெரிய பிரச்னைகள் ஏற்படும்போது, பசும்பாலால் அம்பாளுக்கு அபிஷேகம் செய்து வழிபட்டால் நிவர்த்தியாகிவிடும்.

ஒரே இடத்தில் எண் திசை காளிகள்

அக்காலத்தில் தஞ்சை நகரைச் சுற்றி எட்டுத் திசைகளிலும் காளி கோயில் அமைக்கப்பட்டது. இதில், முதலாவது காளி கோயில் வடபத்ர காளியம்மன் கோயில். எட்டு திசைக்கும் செல்ல முடியாத பக்தர்கள் இக்கோயிலுக்கு வந்தால், தூண்களில் உள்ள எண்திசை அம்பாள்களையும் ஒரே இடத்தில் வழிபட்டுவிடலாம்.

ஆண்டுப் பெருவிழா

இக்கோயிலில் தை மாத முதல் வெள்ளிக்கிழமை தொடங்கி கடைசி வெள்ளிக்கிழமை வரை 21 நாள்களுக்கு ஆண்டுப் பெருவிழா விமரிசையாக நடைபெறும். இதில், பல்வேறு உற்சவங்கள் நடைபெறுவது வழக்கம். இதேபோல, ஆடி வெள்ளிக்கிழமைகள், மாசி மகம், நவராத்திரி, பெளர்ணமி, தேய்பிறை அஷ்டமி, அமாவாசை ஆகிய நாள்களிலும் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்று வருகின்றன.

செல்லும் வழி

தஞ்சாவூர் பழைய பேருந்து நிலையத்திலிருந்து கீழவாசல் பகுதிக்குச் சென்று பூமால் ராவுத்தன் கோயில் வழியாக இக்கோயிலுக்குச் சென்றடையலாம். தஞ்சாவூர் பழைய பேருந்து நிலையத்திலிருந்து ஏறத்தாழ 2 கி.மீ. தொலைவில் உள்ள இந்தக் கோயிலுக்கு நடந்தும், ஆட்டோ, கார் போன்ற வாகனங்களிலும் செல்லலாம். வெளியூர்களிலிருந்து ரயிலில் வருபவர்கள் தஞ்சாவூர் ரயில் நிலையத்தை வந்தடைந்து, அங்கிருந்து ஆட்டோ மூலம் பயணம் செய்யலாம். விமானத்தில் வருபவர்கள் திருச்சி விமான நிலையத்திலிருந்து சாலை வழியாக தஞ்சாவூருக்கு வந்து வரலாம்.

ஓம் நமசிவாய 
படித்து பகிர்ந்தது 
இரா இளங்கோவன் 
நெல்லிக்குப்பம். 

Followers

அருள்மிகு வீழிநாதேஸ்வரர் திருக்கோயில்*

*அருள்மிகு வீழிநாதேஸ்வரர் திருக்கோயில்* *மூலவர் :* நேத்திரார்ப்பணேசுவரர், விழியழகீசர், விழியழகர். *உற்சவர் :* கல்யாணசுந்தரர் *அம...