Wednesday, June 24, 2026

கிருஷ்ணாபுரம் வெங்கடாஜலபதி கோயில்.

கிருஷ்ணாபுரம் வெங்கடாஜலபதி கோயில்
கிருஷ்ணாபுரம் வட்டம்
பாளையங்கோட்டை
திருநெல்வேலி மாவட்டம் 

மூலவர் பெயர் வெங்கடாஜலபதி

தாயார் / அம்மன் பெயர் 
அலர்மேல் மங்கை, ஸ்ரீதேவி, பூதேவி

தலமரம் துளசி

அருகில் உள்ள கோவில்கள்:

தென்காசி ஸ்ரீகாசி விஸ்வநாதர் கோயில், 
குற்றாலநாதர் கோயில், 
ஆழ்வார்குறிச்சி பெருமாள் கோயில்

செல்லும் வழி : திருநெல்வேலியில் இருந்து திருச்செந்தூர் சாலையில் 10 கி.மீ. தொலைவில் கிருஷ்ணாபுரம் அமைந்துள்ளது. ஊரின் மத்தியில் வேங்கடாசலபதி திருக்கோயில் உள்ளது.

சிற்பங்கள் கருவறையில் மூலவர் வெங்கடாசலபதி உருவம் கருங்கல்லால் நான்கு அடி உயரத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது. நான்கு கரங்களுடன் நின்ற கோலத்தில் ஸ்ரீதேவி, பூதேவி புடைசூழ அமைந்துள்ள பெருமாளின் மேலிரண்டு கைகள் சங்கு மற்றும் சக்கரம் பற்றியுள்ளன; கீழிரண்டு கைகள் அபய மற்றும் கடிஹஸ்த முத்திரைகள் காட்டுகின்றன. 

உற்சவர் பெயர் ஸ்ரீனிவாசன், மூலவரைப் போலவே நான்கு கரங்களுடன் நின்றகோலத்தில் ஸ்ரீதேவி பூதேவி புடைசூழ காட்சியளிக்கிறார். 

கோயிலின் வடக்குத் திருச்சுற்றில் உள்ள வீரப்ப நாயக்கர் மண்டபத்தின் நுழைவாயிலில் இரண்டு யானைச் சிற்பங்கள் காணப்படுகின்றன. 
இக்கோயிலில் மொத்தம் 42 அழகு மிளிரும் சிற்பங்களைக் காணமுடிகின்றது. இவை உலகப்புகழ் பெற்றவை. மண்டபத்தின் தூண்களில் ஆளுயர உருவம் கொண்ட எழில் கொஞ்சும் சிற்பங்கள் புராணங்களின் அடிப்படையில் செதுக்கப்பட்டுள்ளன. ஆறு தூண்கள் மிக நேர்த்தியான வடிவமைப்பு கொண்ட சிற்பங்களை உள்ளடக்கியுள்ளன. 

இக்கோயிலிலுள்ள வீரப்பர் மண்டபமும், அரங்க மண்டபமும் உன்னத சிற்பங்களைக் கொண்டுள்ளன. வீரப்பர் மண்டபத்தின் முன்னுள்ள அர்ஜுனன், குறத்தி ராஜகுமாரனைத் தூக்கிச் செல்லுதல், நாடோடிப் பெண்ணின் நடனம், கர்ணன், குறவன் அரசகுமாரியைத் தூக்கிச் செல்லுதல், தேவகன்னியின் நடனம், மன்மதன், அரங்க மண்டபத்திலுள்ள வீரபத்திரன், மன்மதன், பீமன், புருஷாமிருகம், தருமர் ஆகிய சிற்பங்கள் உள்ள கற்றூண்கள், நடனமாது, ரதிதேவியும் தோழிகளும், வீரபத்திரன் ஏவலாளர் ஆகிய சிற்பங்கள் நாயக்கர் காலச் சிற்பியின் கைவண்ணத்தைக் காட்டுகின்றன.

தலத்தின் சிறப்பு 

500 ஆண்டுகள் பழமையானது. நாயக்கர் கலைப்பாணி

கி.பி.16-ஆம் நூற்றாண்டில் விசயநகரப் பேரரசின் கீழ் தமிழகத்தை ஆண்ட மன்னருள் ஒருவரான கிருஷ்ணப்ப நாயக்கர் இந்த கோவிலைக் கட்டி சிற்பங்களை நிறுவியுள்ளார். 110 அடி உயரத்தில் ஐந்து நிலை இராஜகோபுரமும், கருங்கல்லிலான திருச்சுற்று மதில்களும் சூழப்பெற்று விசாலமாக 1.8 ஏக்கர் (0.73 ஹெக்டேர்) பரப்பில் நாயக்கர் கலைப்பாணியில் எழிலுடன் விளங்கும் அளவில் பெரிய வாழ்வியல் மற்றும் புராண சிற்பங்களைக் கொண்டு இக்கோயில் அமைந்துள்ளது. கிருஷ்ணாபுரம் கோவில் ஒரு வைணவ வழிபாட்டுத் தலம் ஆகும். கிருஷ்ணப்பரின் மகன் வீரப்பரின் திருப்பணிகளும் இங்கு உள்ளன. கிருஷ்ணப்பர் நினைவாக இங்குள்ள கோவிலை அடுத்த ஊர் கிருஷ்ணாபுரம் என அழைக்கப்படுகிறது.

                                       . ஓம் நமசிவாய படித்து பகிர்ந்தது
 இரா இளங்கோவன்
 நெல்லிக்குப்பம். 

கும்பகோணத்தை சுற்றியுள்ள 6 சிவாலயங்கள்.

*கும்பகோணத்தை சுற்றியுள்ள 6 சிவாலயங்கள்*
                             
*நாகேஸ்வரர்*

கும்பகோணத்தில் கிழக்குப் பகுதியில் அமைந்துள்ளது, நாகேஸ்வரர் திருக்கோவில். பூமியைத் தாங்கிக்கொண்டிருந்த ஆதிசேஷனுக்கு, அதன் பாரத்தை தாங்கும் சக்தி இல்லாமல் போனது. 

இதனால் மகாவிஷ்ணுவை வணங்கிய ஆதிசேஷன், தனது இயலாமையை எடுத்துரைத்து, தொடர்ந்து பூமியைத் தாங்கும் சக்தியைத் தருமாறு வேண்டினார். 

அதற்கு மகாவிஷ்ணு, “நீ.. கும்பகோணம் சென்று அங்கு ஒரு தீர்த்தத்தை உருவாக்கி, அந்த நீரைக்கொண்டு அபிஷேகித்து நாகேஸ்வரரை வணங்கு. அதன் மூலம் பூமியைத் தாங்கும் வல்லமை உனக்குக் கிடைக்கும்” என்று அருளினார். 

அதன்படியே கும்பகோணம் வந்து நாகேஸ்வரரை வணங்கிய ஆதிசேஷன், பூமியைத் தாங்கும் முழு சக்தியையும் பெற்றார். இந்த ஆலயம் பிரமாண்டமாக அமைந்துள்ளது. இங்கு வடக்கு திசையில் சிவகாமி அம்மை சன்னிதியும், தென் திசையில் சிங்கமுக தீர்த்தமும் இருக்கின்றன.

*கோடீஸ்வரர்*

கும்பகோணத்தில் அமுத கலசத்தின் மீது அம்பு எய்தார், சிவபெருமான். அந்த கலசத்தில் இருந்து தெறித்த ஒரு துளி அமிர்தம், கும்பகோணம் அடுத்துள்ள கொட்டையூர் கோடீஸ்வரர் ஆலயத்தின் குளத்திற்குள் விழுந்தது. 

இதையடுத்து அந்த குளம், அமிர்தக் கிணறாக மாறியது. எங்கும் ஒளி ரூபமாக வீற்றிக்கும் சிவபெருமான், இங்கு கோடீஸ்வரர் என்ற திருநாமத்தைத் தாங்கி நிற்கிறார். இங்குள்ள சிவலிங்கம், தன்னகத்தே, கோடி லிங்கங்களை அடக்கியதாக காட்சி தருகிறது. 

ஒரு முறை மத்ரயோகி என்ற முனிவர், தான் இழந்த தவ பலத்தை திரும்பப் பெறுவதற்காக, கோடி சிவலிங்க தரிசனத்தைக் காண விரும்பினார். அதன்படி இந்த ஆலயத்தில் உள்ள இறைவனையும் தரிசிக்க வந்தார். 

அப்போது இத்தல இறைவன், தன்னுள் இருந்த கோடி சிவலிங்கத்தை முனிவருக்கு காட்டி அவருக்கு அருள்புரிந்தார். இங்குள்ள பரிவார தெய்வங்கள் அனைத்தும் ‘கோடி’ என்ற அடைமொழியோடே அழைக்கப்படுகின்றன.

*அபிமுகேஸ்வரர்*

சிவபெருமான் வேடனின் உருவம் தாங்கி வந்து, அமுத குடத்தை அம்பு எய்து சிதைத்தபோது, அந்த குடத்தின் மேல் இருந்த தேங்காய் ஓரிடத்தில் போய் விழுந்தது. 

விழுந்த இடத்தில் ஒரு தென்னை மரமும், அதன் அடியில் ஒரு சிவலிங்கமும் தோன்றின. தேங்காய்க்கு, ‘நாளிகேரம்’ என்ற பெயர் உண்டு. தென்னை மரத்தின் அடியில் தோன்றியதால், இத்தல இறைவன் ‘நாளிகேசர்’ என்று அழைக்கப்பட்டார். 

இத்தல அம்பாளின் திருநாமம், ‘அமுதவல்லி’ என்பதாகும். ஒரு முறை மகாமக குளத்தில் நீராடுவதற்காக நவ கன்னியர்கள் வருகை தந்தனர். 

அவர்கள் தரிசிப்பதற்கு ஏதுவாக, கிழக்கு நோக்கி அமர்ந்திருந்த நாளிகேசர், மேற்கு நோக்கி திரும்பினார். இதனால் இத்தல இறைவனுக்கு ‘அபிமுகேஸ்வரர்’ என்ற பெயர் வந்தது. அபிமுகம் என்றால் நேர்முகம் என்று பொருள்.

*காளகஸ்தீஸ்வரர்*

இந்தப் பெயரைக் கேட்டதுமே நம் நினைவுக்கு வருவது, திருப்பதி அருகே உள்ள காளகஸ்தீஸ்வரர் திருக்கோவில்தான். 

ஆனால் நாம் பார்க்கப்போவது அதேபோன்று, கும்பகோணம் உப்பிலியப்பன் ஆலயம் அருகே அமைந்துள்ள காளகஸ்தீஸ்வரர் திருக்கோவில் ஆகும். திருப்பதி அருகே உள்ள காளகஸ்தியில் செய்ய வேண்டிய பரிகார பூஜைகளை, 

அங்கே செல்ல முடியா தவர்கள், இந்த ஆலயத்தில் செய்யலாம் என்று சொல்லப்படுகிறது. நீண்ட காலமாக திருமணம் ஆகாத ஆண்களும், பெண்களும் இந்த ஆலயம் வந்து, இத்தல இறைவனை வேண்டினால் விரைவில் திருமணம் கைகூடும் என்கிறார்கள். 

இங்குள்ள துர்க்கை அம்மனை வேண்டினால், வேண்டிய வரம் உடனே கிடைக்கும் என்பது ஐதீகம். ஓம்கார வடிவில் அமைந்துள்ள அம்மனின் பிரகாரத்தில் உள்ள மணியை அடித்தால், ‘ஓம்’ என்ற நாதம் ஒலிப்பது சிறப்புக்குரிய அம்சமாகும்.

*அமிர்தகலசநாதர்*

கும்பகோணத்தில் இருந்து சுமார் 4 கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது, சாக்கோட்டை பகுதி. இங்குதான் அமிர்தவல்லி உடனாய அமிர்தகலசநாதர் கோவில் இருக்கிறது. 

இந்த ஆலயத்தைச் சுற்றிலும் கோட்டை ஒன்று இருந்த காரணத்தால் ‘கோட்டைக்கோவில்’ என்றும் இது அழைக்கப்படுகிறது. சிவபெருமான் வேடனாக வந்து அம்பெய்தி கும்பத்தை உடைத்தபோது, கலசம் மட்டும் போய் விழுந்த இடம் இதுவாகும். 

சோழர் கால சிற்பக்கலையின் மிகச் சிறந்த வேலைப்பாடாக விளங்கும் இத்தல மூலவர், சிவலிங்க ரூபமாக காட்சி தருகிறார். எனவே தான் இத்தல இறைவன் ‘அமிர்தகலசநாதர்’ என்று பெயர் பெற்றார். 

மூலவர் சன்னிதிக்கு வடக்குப் பகுதியில் தென் திசை நோக்கிய சன்னிதியில் அமிர்தவல்லி அம்மன் வீற்றிருக்கிறார். அம்மனுக்கு தவத்தின் பயனை இறைவன் உணர்த்திய தலம் இதுவாகும்.

*ஏகாம்பரேஸ்வரர்*

கும்பகோணம் மத்திய பேருந்து நிலையத்தில் இருந்து சுமார் 2 கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது ஏகாம்பரேஸ்வரர் ஆலயம். இந்த ஆலயத்தில் மூலவருடன், காமாட்சி அம்மன் வீற்றிருந்து அருள்பாலிக்கிறார். அம்மன் சன்னிதியின் இருபுறமும் தீட்டப்பட்டுள்ள காயத்ரி தேவியின் திருவுருவமும், காமாட்சி அம்மனின் ஒவியமும் காண்போரை கொள்ளைகொள்வதாக அமைந்துள்ளன. 
                           -  வேலாயுதம் செ 
ஏகாம்பரேஸ்வரர், காளியம்மன் மற்றும் நவக்கிரகங் களுக்கு தனித்தனியாக சன்னிதிகள் காணப்படுகின்றன. இங்குள்ள காளிகாபரமேஸ்வரி என்னும் ராகுகால அம்மன், அசுரனை சம்ஹாரம் செய்யும் திருக்கோலத்துடன் காட்சி தருகிறாள். 

பொதுவாக துர்க்கை அம்மனுக்குத்தான் ராகுகால வழிபாடு நடத்தப்படும். ஆனால் இங்கு, காளிகாபரமேஸ்வரி அம்மனுக்கு ராகுகால வழிபாடுகள் செய்யப்படுகின்றன.
ஓம் நமசிவாய 
படித்து பகிர்ந்தது 
இரா இளங்கோவன் 
நெல்லிக்குப்பம். 

Wednesday, June 17, 2026

தஞ்சாவூர் வடபத்ர காளியம்மன்.

தஞ்சாவூர் வடபத்ர காளியம்மன். 
திருவாலங்காட்டுச் செப்பேட்டு வரிகளின் மூலம் தஞ்சை நகரில் சோழர் ஆட்சி மலரும்போதே நிசும்பசூதனி தேவி என்கிற வடபத்ர காளியம்மன் திருக்கோயிலும் எழுந்தது தெரிய வருகிறது.

பேரரசர்கள் தங்கள் வெற்றிக்குத் தெய்வமாக விளங்கும் கொற்றவைக்கு ஆலயங்கள் அமைப்பது பண்டைய மரபு. தஞ்சை நகரின் புகழுரைக்கும் செந்தலைத் தூண்கள் (நியமத்துத் தூண்கள்) சுவரன்மாறன் எனும் பெரும்பிடுகு முத்தரையன் எடுப்பித்த நியமத்து மாகாளத்துப் பிடாரி கோயிலின் தூண்களே என்பது குறிப்பிடத்தக்கது.
அந்த நியமத்து மாகாளத்துப் பிடாரி தேவியைப் பாண்டியன் மாறஞ்சடையன், தெள்ளாறு எறிந்த மூன்றாம் நந்திவர்ம பல்லவன், சோழ மன்னன் ராஜகேசரி வர்மனான ஆதித்தன் போன்ற பெரு மன்னர்கள் போற்றி வழிபட்டனர் என்பதை அதே தூண்களில் உள்ள கல்வெட்டுகள் எடுத்துரைக்கின்றன. இதனால் தமிழகத்து, அனைத்து மன்னர் மரபினர்களும் தேவிக்கு எத்துணை ஏற்றம் தந்து வழிபட்டனர் என்பது தெரிய வருகிறது. இதே நெறியில்தான் விஜயாலயனும் தஞ்சையில் நிசும்பசூதனியை பிரதிஷ்டை செய்தான்.


கோயில் நுழைவுவாயில்
அன்னை பராசக்தி துர்க்கையாக, காளிதேவியாகப் பல்வேறு வடிவங்கள் பூண்டு, தீமையின் உருவாகத் திகழ்ந்த அரக்கர் பலரை வதம் செய்தாள் என்பதைத் தேவி மகாத்மியம் உரைக்கிறது. தேவியின் உன்னதத்தை வேதத்தில் கூறப்படும் 'ராத்திரி சூக்தம்' என்பதிலிருந்து பல நூல்கள் எடுத்துரைக்கின்றன.

கோயில் முகப்பு
தேவி துர்கா பரமேசுவரியாக இரத்தபீஜன் எனும் அரக்கனை அழித்தபோது, முதலில் நிசும்பனும் பின்னர் அவன் தம்பி சும்பனும் தேவியுடன் போர் தொடுத்தனர். அகம்பிடித்த அரக்கர்கள் இருவரையும் தேவி அழித்தாள். அப்போது அவள் பூண்ட வடிவே 'நிசும்பசூதனி' என்பதை நூல்கள் கூறுகின்றன.


விஜயாலயன் பிரதிஷ்டை

தஞ்சை கீழவாசலில் விஜயாலய சோழன் பிரதிஷ்டை செய்த நிசும்பசூதனி என்கிற வடபத்ர காளிதேவியின் வடிவம் பீடத்தின் மேல் அமர்ந்த கோலத்திலுள்ளது. இச்சிற்பத்தின் வலக்கால் மடங்கி ஆசனத்தின் மீது அமர்ந்திருக்க, இடக்கால் தொங்கிய வண்ணமாக உள்ளது. கையில் கத்தியும் கேடயமும் உள்ளன. மேல் பாகத்தில் வலக்கையில் ஏந்திய சூலத்தைக் கொண்டு காலடியில் இருக்கும் அரக்கனைக் குத்தித் தள்ளுவது போல அமைந்துள்ள இத்திருமேனிக்குப் பாம்பினாலாகிய குசபந்தமும், சடைமுடியும் விளங்குகின்றன.

நிசும்பசூதனி என்கிற வடபத்ர காளியம்மன்</strong>
நிசும்பசூதனி என்கிற வடபத்ர காளியம்மன்
கீழவாசல் பூமால் ராவுத்தன் கோயில் தெருவில் யோக பட்டத்தில் அமர்ந்திருக்கும் சிவனாரது திருவுருவமும், காளி கோயிலை ஒட்டிய மணற்பகுதியில் மார்பு வரை புதைந்துள்ள கெளமாரி உருவமும் மிகப் பழமையான 8 - 9 ஆம் நூற்றாண்டுச் சிற்பங்களாகும். இந்தப் பழைமை எச்சங்களோடு தேவி இங்குக் கோயில் கொண்டுள்ளாள். பொதுவாக எல்லா ஊர்களிலும் காளி கோயிலாக அல்லது பிடாரி கோயிலாகத் தேவியின் திருமுற்றங்கள் காணப்படும். இங்கு இடம் பெற்றிருக்கும் திருவுருவங்கள் 4 அல்லது 8 கரங்களுடன் திகழும். பெயர்களும் காளி, காளாபிடாரி, பட்டாரகி என்பனவாகக் குறிக்கப்பெறும்.


ஆனால் தஞ்சையில் விஜயாலயன் பிரதிஷ்டை செய்த தேவிக்கு "நிசும்பசூதனி' என்ற சிறப்புப் பெயர் காணப்படுகிறது. இதனால், இவ்வடிவம் மற்றக் காளி, பிடாரி உருவங்களிலிருந்து மாறுபட்டுத் திகழ்ந்திருக்க வேண்டும். தஞ்சைக் குயவர் தெருவிலுள்ள உக்கிரமாகாளி மற்ற இடங்களில் காணப்படும் முற்காலச் சோழர் கலைப்பாணியில் அமைந்த, காளாபிடாரியாகவே காணப்படுகிறாள். ஆனால் தஞ்சை பூமால் ராவுத்தன் கோயில் தெரு வடபத்ரகாளியோ தமிழகத்தில் வேறு எங்கும் காணமுடியாத புதுமையான வடிவில் திகழ்கிறாள்.



ஆறு அடி உயரத்துக்கும் மேலுள்ள இச்சிலையில் தேவி அமர்ந்து காணப்படுகிறாள். பல கரங்கள். அக்கரங்களில் பல படைக்கலன்கள். தலையில் கேசம் தீச்சுடர்போல் மேல் எழுகிறது. முகத்தில் ஓர் உறுதி. அசுரப் பூச்சிகளை அழிக்க வேண்டும் என்னும் சீற்றம். வலது காதில் பிரேத குண்டலம். இடக்காதில் பெரியகுழை. சதை வற்றிய உடலில் வெறும் எலும்புதான். ஆயினும் திண்மையான நீண்டு தொங்கும் மார்பகங்கள். அவற்றைச் சுற்றிலும் பாம்பு கச்சாகச் சுழல்கிறது. மண்டை ஓடுகள் பூணூலாக அவள் உடலில் திகழ்கின்றன. எட்டுக்கரங்கள். அவை சூலம், வில், மணி, கத்தி, பாசம், கேடயம், கபாலம் தரித்துள்ளன. ஓர் இடக்கரம் காலின் கீழ் கிடக்கும் அசுரரைச் சுட்டுகிறது. அவளது வலது அடி துண்டிக்கப்பட்ட ஒரு தலையின் மீது ஊன்றியுள்ளது. அந்தத் தலையே பெரிதாக உள்ளது. அதன் மீது ஊன்றியுள்ள அவளது காலில், எலும்பாக இருப்பினும், அழுத்தும் வலிமையைக் காணலாம். அவளது இடக் காலை அசைத்துக் கிடத்தியுள்ளாள். அவ்விருக்கையின் கீழ் நான்கு அசுரர்கள் சிக்கித் தவிக்கின்றனர். மூச்சுத் திணறுகின்றனர். ஓடுகின்றனர். என்ன பெருமிதமான சிற்பம். மயிர்க்கூச்செறியும் அமைப்பு. சண்டன், முண்டன், சும்பன், நிசும்பன் என்னும் அசுரர்கள் நால்வரும் வதைபடும் காட்சியைக் காணக் கண்கோடி வேண்டும்.

இந்தக் கோயிலையும் தரிசிக்கலாமே.. பித்ரு, மாத்ருஹத்தி தோஷம்  நீக்கும் திருமங்கலம் சாமவேதீசுவரர் திருக்கோவில்

<strong>வடபத்ர காளியம்மன்</strong>
வடபத்ர காளியம்மன்
கம்பீரமான தோற்றம்


தீமையை அழித்து அடியவர்களுக்கு அன்னை அருளமுது அளிக்கின்றாளோ எனக் கருதுமாறு கம்பீரமாக அமர்ந்துள்ளாள். இதை ஒத்ததொரு வடிவம் தமிழகத்தில் வேறு எங்கும் கிடையாது. மத்தியப் பிரதேச மாநிலத்தில் இதேவடிவில் அன்னை எலும்புருவில் காட்சியளிக்கும் மற்றொரு சிற்பம் இருப்பதாகச் சிற்பவியல் வல்லுநர்கள் கூறுகின்றனர். இவள்தான் விஜயாலயன் வடித்த நிசும்பசூதனி என்பதில் ஐயமில்லை.

அவளுக்காக விஜயாலயனால் எடுக்கப்பட்ட கோயில் அழிந்தாலும், திருமேனி நிலை குலையாமல் இருப்பது தஞ்சையின் பெரும் பேறாகும். வரலாற்று ஏடுகள் குறிக்கும் தஞ்சை நகரின் தொன்மையான தேவியின் தெய்வத் திருவுருவமும் இதுதான் என்பது சிறப்புக்குரிய செய்தி.

வேண்டிய சக்தியைக் கொடுத்த காளி


விஜயாலய சோழன் காலம் முதல் வேண்டிய சக்தியைக் கொடுத்து அருள்புரிகிறாள் நிசும்பசூதனி என்கிற வடபத்ரகாளியம்மன். சிறப்பாக ஆட்சிபுரிவதற்கு இக்காளியையே விஜயாலய சோழன் நாடினான். இக்கோயில் தேவியை வழிபட்ட சோழ மன்னர்கள் தொடர்ந்து வெற்றி பெற்று வந்தனர்.

இக்கோயிலில் ஆப்பசார பூஜைகள் செய்தால் மன மற்றும் உடல் ரீதியான முடக்கத்தை நீக்கி, சோர்விலிருந்து விடுவித்துக் கொள்ளலாம். பொதுவாக, எதிரியைக் கண்டுபிடித்துவிடலாம்; ஆனால், துரோகியைக் கண்டறிய முடியாது. இக்கோயிலுக்குச் சென்று வழிபட்டால் அனைத்து எதிர்ப்புகளும் உடைத்தெறியப்படும். காரியத் தடை எதுவாக இருந்தாலும் தகர்த்தெறியப்பட்டு, வெற்றியைத் தரும்.

இந்தக் கோயிலையும் வலம் வரலாம்.. நவக்கிரக தோஷம் போக்கும் தஞ்சை சக்கரத்தாழ்வார்

மண்டபத் தூண்களில் வடிவமைக்கப்பட்டுள்ள எண் திசை காளிகள்
ராகு, கேது நிவர்த்தி தலம்

இக்கோயிலுக்கு தொடர்ந்து 9 வாரங்கள் வெள்ளி அல்லது ஞாயிறு அல்லது செவ்வாய்க்கிழமைகளில் ராகு காலத்தில் சென்று வழிபட்டால் ராகு, கேது தோஷங்களான தார தோஷம், செவ்வாய் தோஷம், களத்திர தோஷம், திருமணத் தடை போன்றவற்றுக்கு நிவர்த்தி கிடைக்கும். இதேபோல, தொழில், வேலை போன்ற காரியத்தில் தடைகள் இருந்தாலும், தொடர்ந்து 9 வாரங்கள் செவ்வாய் அல்லது வெள்ளி அல்லது ஞாயிற்றுக்கிழமைகளில் சென்று வழிபட்டால் வேண்டுதல் நிறைவேறும். பெரிய பிரச்னைகள் ஏற்படும்போது, பசும்பாலால் அம்பாளுக்கு அபிஷேகம் செய்து வழிபட்டால் நிவர்த்தியாகிவிடும்.

ஒரே இடத்தில் எண் திசை காளிகள்

அக்காலத்தில் தஞ்சை நகரைச் சுற்றி எட்டுத் திசைகளிலும் காளி கோயில் அமைக்கப்பட்டது. இதில், முதலாவது காளி கோயில் வடபத்ர காளியம்மன் கோயில். எட்டு திசைக்கும் செல்ல முடியாத பக்தர்கள் இக்கோயிலுக்கு வந்தால், தூண்களில் உள்ள எண்திசை அம்பாள்களையும் ஒரே இடத்தில் வழிபட்டுவிடலாம்.

ஆண்டுப் பெருவிழா

இக்கோயிலில் தை மாத முதல் வெள்ளிக்கிழமை தொடங்கி கடைசி வெள்ளிக்கிழமை வரை 21 நாள்களுக்கு ஆண்டுப் பெருவிழா விமரிசையாக நடைபெறும். இதில், பல்வேறு உற்சவங்கள் நடைபெறுவது வழக்கம். இதேபோல, ஆடி வெள்ளிக்கிழமைகள், மாசி மகம், நவராத்திரி, பெளர்ணமி, தேய்பிறை அஷ்டமி, அமாவாசை ஆகிய நாள்களிலும் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்று வருகின்றன.

செல்லும் வழி

தஞ்சாவூர் பழைய பேருந்து நிலையத்திலிருந்து கீழவாசல் பகுதிக்குச் சென்று பூமால் ராவுத்தன் கோயில் வழியாக இக்கோயிலுக்குச் சென்றடையலாம். தஞ்சாவூர் பழைய பேருந்து நிலையத்திலிருந்து ஏறத்தாழ 2 கி.மீ. தொலைவில் உள்ள இந்தக் கோயிலுக்கு நடந்தும், ஆட்டோ, கார் போன்ற வாகனங்களிலும் செல்லலாம். வெளியூர்களிலிருந்து ரயிலில் வருபவர்கள் தஞ்சாவூர் ரயில் நிலையத்தை வந்தடைந்து, அங்கிருந்து ஆட்டோ மூலம் பயணம் செய்யலாம். விமானத்தில் வருபவர்கள் திருச்சி விமான நிலையத்திலிருந்து சாலை வழியாக தஞ்சாவூருக்கு வந்து வரலாம்.

ஓம் நமசிவாய 
படித்து பகிர்ந்தது 
இரா இளங்கோவன் 
நெல்லிக்குப்பம். 

Monday, June 15, 2026

காலபைரவர் பெருமானுக்கு எட்டு படை வீடுகள் உள்ளன.

காலபைரவர் பெருமானுக்கு எட்டு படை வீடுகள் உள்ளன .
கால பைரவர் சிவபெருமான் சார்பாக நவக்கிரகங்களையும் மனிதர்களையும் நிர்வாகம் செய்து வருகிறார்.

அதனால் கால பைரவருக்கு கால தேவன் என்று ஒரு பெயர் உண்டு.

காலபைரவர் உடைய மூச்சுக்காற்றுதான் வாக்கிய கணித பஞ்சாங்கம் திருக்கணித பஞ்சாங்கம் என்று விரிவடைகிறது.

கர்மவினையை நீக்குவதற்கு அதுவும் நம்முடைய முற்பிறவி கர்மவினைகளை  ஒரே பிறவியில் நீக்குவதற்கு பைரவர் வழிபாடு  செய்ய வேண்டும்.

பைரவ மந்திரம் தினமும் 108 முறை எழுதி வர வேண்டும்.

மிக வேகமாக வரம் தரும் கடவுள்களில் பைரவர் வராகி காளி சின்ன மஸ்தா பிரித்திங்கரா தேவி பத்ரகாளி அங்காள பரமேஸ்வரி ருத்ரகாளி மகாகாளி போன்ற தெய்வங்கள் முதன்மையானவை.

தமிழ்நாட்டில் காலபைரவருக்கு எட்டு படை வீடுகள் உள்ளன.

இந்த எட்டு படை வீடுகளும் சிவன் கோயில்களாக உள்ளன.

இந்த கோயில்களில் மூலவராக சிவலிங்கம் இருக்கிறது.

அப்படி சிவலிங்கம் இருந்தாலும் அந்த சிவலிங்க வடிவத்தில் காலபைரவர் தான் இருந்து அருள் பாலித்து கொண்டு இருக்கிறார்.

போன மூன்று பிறவிகள் முழுவதும் பழுத்த சிவனடியாராக இருந்திருந்தால் இந்த பிறவியில் பைரவர் வழிபாடு செய்ய முடியும் 

அல்லது 

போன மூன்று பிறவிகளில் ஏதாவது ஒரு பிறவியில் மட்டுமாவது சித்தர் ஒருவருடைய நேரடி சீடராக 40 வருடங்கள் வரை வாழ்ந்து இருந்தால் இந்த பிறவியில் பைரவர் வழிபாடு  நமக்கு கிடைக்கும் என்பதை உணர்ந்து கொள்ளுங்கள்.

சிவனும் பைரவரும் ஒருவரே என்பதை  நிரூபணம் செய்வதற்காக எட்டு படை வீடுகளில் சிவலிங்க வடிவத்தில் காலபைரவப் பெருமான் அருள் பாலித்து வருகிறார்.

 1.திருக்கோவிலூர் சிவன் கோயில்

2.பண்ருட்டி அருகில் உள்ள திருவதிகை சிவன் கோயில்

 3 .தஞ்சாவூரில் இருந்து திருவையாறு செல்லும் வழியில் எட்டாவது கிலோமீட்டர் தொலைவில் உள்ள திருக்கண்டியூர் அருள்மிகு  பிரம்மசிர கண்டீஸ்வரர் திருக்கோயில்(ரோகினி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் அடிக்கடி வந்து வழிபட வேண்டிய பைரவர் கோயில் இது)

4. திருக்கடையூர் காலசம்கார மூர்த்தி கோயில் மற்றும் திருக்கடையூர் மயானம் என்ற சிவன் கோயில்

5. மயிலாடுதுறை அருகில் உள்ள செம்பனார்கோயில்

6. மயிலாடுதுறையில் இருந்து திருவாரூர் செல்லும் வழியில் 12 கிலோமீட்டர் தொலைவில் உள்ளடங்கிய பகுதியில் அமைந்திருக்கும் வழுவூர் வீரட்டானம்(அனுஷம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் அடிக்கடி வந்து வழிபட வேண்டிய அனுஷ நட்சத்திர பைரவர் கோயில் இது)

7. திருவாரூரில் இருந்து நாகை செல்லும் வழியில் ஐந்து கிலோ மீட்டர் தொலைவில் அமைந்திருக்கும் திருவிற்குடி (இங்கேதான் மகாவிஷ்ணுவுக்கு செல்வத்தின் கடவுள் என்ற வரத்தை மகா கால பைரவ பெருமான் வழங்கினார்)

8. மயிலாடுதுறையில் இருந்து மணல்மேடு செல்லும் வழியில் 18 கிலோமீட்டர் தொலைவில் அமைந்திருக்கும் கொறுக்கை

இங்கேதான் ஈசனுடைய நெற்றிக்கண்ணில் இருந்து புறப்பட்ட நெருப்பு மன்மதனை எரித்து சாம்பலாக்கியது. இந்த கோயிலுக்கு அருகில் ஒரு தென்னந்தோப்பு அமைந்துள்ளது. அங்கு இன்றும் மன்மதனின் சாம்பல் இருக்கிறது.

நிறைவாக சிதம்பரம் சென்று அங்கே உள்ள ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ சொர்ண ஆகர்ஷண பைரவரை வழிபாடு செய்ய வேண்டும்.

இந்த எட்டு கோயில்களையும் தரிசனம் செய்வதற்கு குறைந்தது 4 நாட்கள் ஆகும் .

இந்த கோயில்களுக்கு சென்று வந்தால் போதுமானது சென்று வழிபட்டு வந்தால் போதுமானது.

உங்களுடைய ஜென்ம நட்சத்திரம் பைரவ மந்திரத்தை கீழே கொடுக்கின்றோம் .

 இந்த கோயில்களில் ஒரு மணி நேரம் வரை அமர்ந்திருக்க வேண்டும்.

 அவ்வாறு அமர்ந்திருந்து  உங்களுடைய ஜென்ம நட்சத்திர கால பைரவ மந்திரத்தை ஒரு மணி நேரம் வரை ஜெபிக்க வேண்டும்.

 இதன் மூலமாக மிகப் பெரிய அளவில் உன்னுடைய கருமவினை குறைந்து விடும் என்பது உறுதி.

 இந்த எட்டு கோயில்களுக்கும் நீங்கள் சென்று வழிபட்டு முடித்து ஒரு வருடம் ஆக வேண்டும் .

அதன் பிறகு உங்களுடைய போன நான்கு முற்பிறவி பற்றிய உண்மை ரகசியங்கள் உங்களைத் தேடி வரும்.

 எனக்கு அவ்வாறு கிடைத்தது !!!

அந்த அனுபவத்தை உங்களுக்கு பகிர்ந்து கொள்கிறேன்.

 அடியேனது குரு அகத்தியரின் ஆணைப்படி இதை உங்களுக்கு தெரிவிக்கின்றோம்.

நம்முடைய ஜென்ம நட்சத்திர பைரவ மந்திரத்தை ஜெபிக்க வேண்டும்.

வார தாரக சித்தர் என்பவர் பைரவ உலகத்தில் வாழ்ந்து வரும் தலைமை பைரவ சித்தர் ஆவார்.

 இவரை உபாசனை செய்து தான் ஆரியபட்டர், பாஸ்கராச்சாரியார் போன்றவர்கள் அழியா புகழ் பெற்ற ஜோதிட நூல்களை இயற்றினார்கள்.

நாம் வாழ்ந்து வரும் இந்த பூமியில் 

24 மணி நேரம் என்பது ஒரு நாள் என்றும்
 ஏழு நாட்கள் என்பது ஒரு வாரம் என்றும்

 30 நாட்கள் என்பது ஒரு மாதம் என்றும்

 365 நாட்கள் ஒரு வருடம் என்றும்

 காலத்தை நிர்ணயம் செய்தவர் இவர் தான்!!!

 மகா காலபைரவர் பெருமாளின் பரிபூரண ஆசீர்வாதம் பெற்ற பைரவ சித்தர் இந்த வார தாரக சித்தர் ஆவார்.

 ஜோதிடராக இருக்கும் ஒவ்வொருவரும் தினமும் காலையில் இவரை ஒரு முறையாவது  நன்றியோடு நினைக்க வேண்டும்.

அசுபதி ,மகம், மூலம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் பின் வரும் மந்திரத்தை இங்கே 90 நிமிடங்கள் ஜெபிக்கவேண்டும். 

ஓம் ஹ்ரீம் ஶ்ரீ் வாரதாரக சித்த குரு நமஹ
ஓம் ஹ்ரீம் பம் பிஷன பைரவாய நமஹ

பரணி, பூரம் ,பூராடம் நட்சத்திரம் ஒன்றில் பிறந்தவர்கள் பின்வரும் மந்திரத்தை இங்கே 90 நிமிடங்கள் ஜெபிக்க வேண்டும்.

ஓம் ஹ்ரீம் ஶ்ரீ வார தாரக சித்த குரு நமஹ

ஓம் ஹ்ரீம் பம் ருரு பைரவாய நமஹ 

 கார்த்திகை, உத்திரம், உத்திராடம் நட்சத்திரங்களில் பிறந்தவர்கள் பின்வரும் மந்திரத்தை இங்கே 90 நிமிடங்கள் ஜெபிக்க வேண்டும்.

ஓம் ஹ்ரீம் ஶ்ரீ வார தாரக சித்த குரு நமஹ

ஓம் ஹ்ரீம் பம் ஶ்ரீ ஶ்ரீ ஶ்ரீ சொர்ண பைரவாய நமஹ

 ரோகிணி ,அஸ்தம், திருவோணம் நட்சத்திரங்களில் பிறந்தவர்கள் பின் வரும் மந்திரத்தை இங்கே 90 நிமிடங்கள் ஜெபிக்கவேண்டும் 

ஓம்  ஹ்ரீம் ஶ்ரீ வார தாரக சித்த குரு நமஹ
ஓம் ஹ்ரீம் பம் கபாலபைரவாய  நமஹ

மிருகசீரிடம், சித்திரை ,அவிட்டம் நட்சத்திரங்களில் ஒன்றில் பிறந்தவர்கள் பின் வரும் மந்திரத்தை இங்கே 90 நிமிடங்கள் ஜெபிக்கவேண்டும் 

ஓம் ஹ்ரீம் ஶ்ரீ வாரதாரக சித்த குரு நமஹ

ஓம் ஹ்ரீம் பம் சண்ட பைரவாய நமஹ

திருவாதிரை, சுவாதி, சதயம் நட்சத்திரங்களில் பிறந்தவர்கள் பின் வரும் மந்திரத்தை இங்கே 90 நிமிடங்கள் ஜெபிக்கவேண்டும் 

ஓம் ஹ்ரீம் ஶ்ரீ வாரதாரக சித்த குரு  நமஹ

ஓம் ஹ்ரீம் பம் சம்ஹார பைரவாய நமஹ

புனர்பூசம், விசாகம், பூரட்டாதி நட்சத்திரங்களில் ஒன்றில் பிறந்தவர்கள் பின்வரும் மந்திரத்தை இங்கே 90 நிமிடங்கள் ஜெபிக்க வேண்டும்.

ஓம் ஹ்ரீம் ஶ்ரீ வாரதாரக சித்த குரு நமஹ

ஓம் ஹ்ரீம் பம் அசிதாங்க பைரவாய நமக

பூசம், அனுஷம் ,உத்திரட்டாதி நட்சத்திரங்களில் ஒன்றில் பிறந்தவர்கள் பின்வரும் மந்திரங்களை இங்கே 90 நிமிடங்கள் ஜெபிக்கவேண்டும்.

ஓம் ஹ்ரீம் ஶ்ரீ வார தாரக சித்த குரு நமஹ

ஓம் ஹ்ரீம் பம் குறோதன பைரவாய நமக

ஆயில்யம் ,கேட்டை, ரேவதி நட்சத்திரங்களில் ஒன்றில் பிறந்தவர்கள் பின் வரும் மந்திரங்களை இங்கே 90 நிமிடங்கள் ஜெபிக்கவேண்டும்.

ஓம் ஹ்ரீம் ஶ்ரீ வார தாரக சித்த குரு நமஹ

ஓம் ஹ்ரீம் பம் உன்மத்தபைரவாய நமஹ

ஓம் நமசிவாய 
படித்து பகிர்ந்தது 
இரா இளங்கோவன் நெல்லிக்குப்பம்.

சிவபுரம் சிவகுருநாதசுவாமி காலடியில் ராகுவுடன் கோவில்.

*சிவபுரம் சிவகுருநாதசுவாமி கோவில்*
*காலடியில் ராகுவுடன் இருக்கும் தட்சிணாமூர்த்தியின் அபூர்வக் கோலம்*
*சிவபுரம் என்று சிவபெருமானின் நாமத்தினைக் கொண்டு அழைக்கப்படும் சிறப்பினைப் பெற்ற ஒரே தலம் இதுவேயாகும்*

சிவனின் தேவாரப்பாடல் பெற்ற 276 சிவாலயங்களில் இது 130 வது தேவாரத்தலம் ஆகும்.

 இறைவன் திருநாமம் சிவகுருநாதசுவாமி. இறைவியின் திருநாமம் ஆர்யாம்பாள், சிங்காரவல்லி.

*இத்தலத்தில், பூமிக்கடியில் ஓர் அடிக்கு ஒரு சிவலிங்கம் இருப்பதாக ஐதீகம்*. 

*இதனாலேயே ஞானசம்பந்தர் முதலியோர் இத்தலத்தில் நடக்காமல், அங்கப்பிரதட்சணம் செய்து சுவாமியை தரிசித்துப் பின்பு ஊர் எல்லைக்கு அப்பால் தள்ளி நின்று பெருமானைப் பாடியதாக வரலாறு*.  அவ்வாறு பாடிய இடம் இன்று 'சுவாமிகள் துறை ' என்றழைக்கப்படுகிறது. 

*சிவாலயங்களில் அங்கப்பிரதட்சணம் செய்யக்கூடிய சிறப்புமிக்க தலம் இது ஒன்றேயாகும்.*

பொதுவாக சிவாலயங்களில், சுற்று சுவற்றில் காட்சி தரும் தட்சிணாமூர்த்தியின் காலடியில் முயலகன் இருப்பார். ஆனால் இத்தலத்தில் காலடியில் முயலகன் மட்டுமின்றி ராகுவும் இருப்பது ஒரு விசேடமான அம்சமாகும். இவரை வழிபட குரு, நாகதோஷம் நீங்கும்.

ஒருமுறை நந்தியின் சாபத்துக்கு ஆளாகி வராகமாக உருமாறிய மகாவிஷ்ணு, இத்தலத்தில் இறைவன் வழிபட்டு தனது சாபம் நீங்கப் பெற்றார். தட்சிணாமூர்த்திக்குப் பக்கத்தில் சுவரில் இத்தல வரலாறாகிய திருமால் வெண்பன்றியாக இருந்து சிவனை வழிபட்ட சிற்பம் உள்ளது. #ஈசனைதேடிகுழு2026--
முன் மண்டபத்தில் தெற்கு நோக்கிய அம்பாள் சந்நிதி அமைந்துள்ளது. இங்குள்ள நடராசர் திருமேனி மிகவும் அழகானது. 

வெளிப் பிராகாரத்தில் இத்தலத்தில் தெற்கு நோக்கி எழுந்தருளியுள்ள பைரவர் விசேஷமான மூர்த்தி. இவருக்கு 11 தேய்பிறை அஷ்டமியில் தயிர்சாதமும், வடைமாலையும் சார்த்தி அர்ச்சனை செய்துவந்தால் தீராத நீதிமன்ற வழக்குகளில் வெற்றி பெற, இழந்த பொருள் மற்றும் செல்வத்தை திரும்பப் பெற, தொழில் வளம் பெற பலன் கிட்டும். ஏழரைச் சனி, அஷ்டமத்து சனி ஆகிய சனி உபாதைகளும் 11 தேய்பிறை அஷ்டமியில் இத்தலத்து இறைவனையும், பைரவரையும் வழிபட நீங்கும்.  இத்தலத்தில், கோவிலுக்கு எதிரிலுள்ள சந்திர தீர்த்தத்தில் கார்த்திகை மாதத்தில் நீராடுவது சிறப்பாகும். குபேரன், ராவணன், அக்னி முதலானோர் இத்தல இறைவனை வழிபட்டுள்ளனர். ஒருமுறை நந்தியெம்பெருமானின் சாபத்துக்கு ஆளான குபேரன் தனது பதவியை இழந்தான். குபேரன் பூவலகில் தனபதி என்ற பெயருடைய மன்னனாகப் பிறந்து இத்தலத்து இறைவனை வழிபட்டு அருள் பெற்றான். தீபாவளி நாளில் இத்தலத்தில் குபேர பூஜை மிகச் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. அதன்படி, இங்கு வந்து இத்தல இறைவனை வழிபட செல்வ வளம் உண்டாகும் என்பது ஐதீகம்.

முருகப்பெருமான் ஒரு திருமுகத்துடனும் நான்கு திருக்கரங்களுடனும் தனது தேவியர் இருவருடன் மயிலுடன் நின்ற கோலத்தில் எழுந்தருளியுள்ளார். தேவியர் இருவரும் காலணிகளுடன் விளங்குவது மிகவும் சிறப்பானதாகும்.

கும்பகோணம் - திருவாரூர் நெடுஞ்சாலையில் சாக்கோட்டை சென்று, சாக்கோட்டையிலிருந்து சிவபுரி செல்லலாம். 

திருவேற்காடு தேவி கருமாரியம்மன்.

*அருள்மிகு தேவி கருமாரியம்மன் திருக்கோவில்*
                  
.  
இங்கு மிகப்பெரிய நாகப் புற்று உள்ளது. 

மரச்சிலை அம்மன் என்ற சன்னதி இத்தலத்தில் உண்டு. 

*சுவாமி* : தேவி கருமாரியம்மன். 

*தீர்த்தம்* : வேலாயுத தீர்த்தம். 

*தலவிருட்சம்* : கருவேல மரம். 

*தலச்சிறப்பு* : இந்த தலத்தின் அம்மனுக்கான விசேஷ நாளாக ஞாயிற்றுக்கிழமை பின்பற்றப்பட்டு வருகிறது. அந்நாளில் ஏராளமான பக்தர்கள் இக்கோயிலுக்கு வருகை தந்து தங்கியும் செல்கின்றனர். 

இங்கு மிகப்பெரிய நாகப் புற்று உள்ளது. புற்றில் பாலூற்றி வழிபடுவோர்க்கு வாழ்வு அளித்து இராகு கேது போன்ற கிரகங்களால் வரும் தோஷங்களை நீக்குவேன் என்பது அன்னையின் அருள் வாக்கு. 

ஆடி உற்சவத்தின் போது புற்றுக்கு பால் ஊற்றுதல் சிறப்பு நிகழ்ச்சியாக செய்யப்படுகின்றது.  

மரச்சிலை அம்மன் என்ற சன்னதி இத்தலத்தில் உண்டு. இங்கு ரூபாய் நோட்டு மாலையாக அம்மனுக்கு அணிவிக்கப்படுகிறது. இந்த சந்நிதியில் நாணயங்கள் கொட்டிக் கிடக்கின்றன. 
கடன் தீர்த்தல், வியாதி, வழக்குகளில் நொடிந்து போனவர்கள் இத்தலத்தில் வேண்டிக் கொள்கின்றனர். பூட்டுகளை கொண்டு வந்து சந்நிதி முன்பாக பூட்டி தொங்க விட்டுச் செல்வது வழக்கமாக உள்ளது. இப்படிச் செய்வதால் தங்கள் பிரச்சினைகள் தீர்வதாக நம்பப்படுகிறது. 

*தல வரலாறு* : அந்த காலத்தில் வெள்வேல மரங்கள் இவ்விடத்தில் அதிகம். எனவே வேற்காடு எனப்பெயர் பூண்டது. நான் மறைகளே வெள்வேல மரங்களாகி நின்ற வரலாறு இதோ! வெள்ளத்தால் உலகம் ஒரு முறை அழிவுற்றது. 

சிவன் உலகை மீண்டும் படைக்க எண்ணினார். வெள்ளம் வற்றியது, பின் வேதங்களை குறிப்பிட்ட இடத்தில் மரங்கள் ஆக்கினார். அவற்றின் அடியில் லிங்கம் தோன்றியது. லிங்கத்துடன் அன்னையும் தோன்றினாள். 

அன்னையின் அருளால் மீண்டும் தேவர்களும், மும்மூர்த்திகளும் தோன்றினர். மீண்டும் உலகம் இயங்க ஆரம்பமானது. வெள்வேல மரமும், அதனடியில் லிங்கமும், அன்னையும் தோன்றிய இடம் திருவேற்காடு. 

தேவர்கள் தோன்றிய இவ்விடத்தின் ஒரு பகுதி 'தேவர் கண்ட மடு' என்று அழைக்கப்படுகிறது. இதுவே திருவேற்காடு வரலாறு. 

இந்த திருவேற்காடு பாலி ஆற்றின் கரையில் அமைந்துள்ளது. 

நடைதிறப்பு : காலை 5.00 மணி முதல் இரவு 9.00 மணி வரை திறந்திருக்கும். 

பூஜை விவரம் : ஆறு கால பூஜை, (குறிப்பு:- அர்த்தஜாம பூஜை ஞாயிறு இரவு 10.30 மணிக்கு நடைபெறுகிறது) 
                  -  வேலாயுதம் செ 
.  
திருவிழாக்கள் : சித்ராபௌர்ணமி, ஆடித் திருவிழா(12 வாரங்கள்), தைப்பூசம், மாசிமகம், ஆங்கில புத்தாண்டு தினத்தன்று நள்ளிரவு 12.00 மணிக்கு சிறப்பு பூஜை நடைபெறுகிறது.

கோவில் முகவரி : அருள்மிகு தேவி கருமாரியம்மன் திருக்கோவில், திருவேற்காடு – 600 077, சென்னை, திருவள்ளூர் மாவட்டம்.

குல_தெய்வங்கள்தோன்றிய வரலாறு



குல_தெய்வங்கள்
தோன்றிய வரலாறு  
( சாந்திப்பிரியா)

நான்கு முகங்களுடன் பிரும்மா தோன்றியவுடன் அவர் முகத்தில் இருந்து லட்ஷக்கணக்கான உயிரினங்கள் வெளிப்பட்டன. அதைத் தொடர்ந்து பரப்பிரும்மனிடம் இருந்தும் பல தெய்வங்கள் வெளிவந்தன. பிரும்மா நான்கு முகங்களுடன் வெளிவந்தபோது முதல் முகத்தில் இருந்த கண்கள் திறந்து இருக்கையில், அடுத்த மூன்று திசைகளை நோக்கி இருந்த முகங்களின் கண்கள் மூடி இருந்தன4.

நான்கு முக பிரும்மா

முதலில் பிரபஞ்சத்தில் படைத்த உயிரினங்களில் ஏழு ஆன்மாக்களை மஹரிஷிகளாக உருமாற்றிய பிரும்மா, உயிரினங்களின் வாழ்வாதாரத்தையும் துவக்கி வைத்தார். அதற்கு முன்பாக அவை அனைத்தும் இயங்குவதற்காக அதுவரை பரமாத்மாவின் சக்திக்கதிர்களில் கண்களுக்குத் தெரியாமல் மறைந்து இருந்த ஒரு பூமியை வெளிக்கொண்டு வந்தார். பிரும்மா முதலில் உருமாற்றிய ஏழு மஹரிஷிகளைக் குறித்து சற்றே முரண்பட்ட செய்திகள் உள்ளன. ஜைமினியா உபநிஷத் எனும் எனும் சமிஸ்கிருத நூலின்படி (जैमिनीय उपनिषद्-ब्राह्मण) அந்த ஏழு மஹரிஷிகள் அகஸ்தியர், அத்ரி, பாரதிவாஜா, கவுதம், ஜமதக்கினி, வசிஷ்டர், விசுவாமித்திரர் என்பவர்கள் ஆவர். ஆனால் பிரஹதாரண்ய உபநிஷத்தில் ஏழாவது மகரிஷியாக அகஸ்தியருக்கு பதில் பிருஹு முனிவரின் பெயர் காணப்படுகின்றது. அதை போல வேறு பல நூல்களிலும் முரண்பட்ட பெயர்கள் காணப்படுகின்றன.

பரபிரும்மனின் சக்திக்கதிர்களில் இருந்து முதலில் வெளிவந்த தெய்வங்கள் ஆண் மற்றும் பெண் என இருந்ததினால் பிரும்மாவும் தான் படைத்த உயிரினங்களை ஆண் மற்றும் பெண் என்ற பிரிவுகளில், குறிப்பிட்ட எண்ணிக்கையில் படைத்தார். ஆனால் அதன் விவரம் தெரியவில்லை. அவர்கள் இரு வேறுபட்ட தோற்றங்கள் மற்றும் குணாதிசயங்களைக் கொண்டவர்கள் என்பதை வெளிப்படுத்திக் காட்டவே அந்த ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இங்கு ஒரு கருத்தை தெளிவுபடுத்த வேண்டி உள்ளது. பிரும்மாவுக்கு தெய்வங்களை வெளிப்படுத்தும் அதிகாரம் கொடுக்கப்படவில்லை என்றாலும் அவருக்கு மட்டுமே ஆகாயத்தின் மேல் பிரும்ம லோகம், தேவலோகம், போன்ற பல தெய்வீக லோகங்களை உருவாக்கி, அங்குள்ள கடவுட்களுக்கு உதவிடும் வகையிலான தேவ கணங்கள் அனைவரையும் படைக்கும் சக்தி தரப்பட்டு இருந்தது. பூலோகத்தில் தெய்வீகத்தைப் பரப்பி, நன்னெறிமுறைகளை மனித குலத்தில் அமல்படுத்த இரண்டாம் கட்ட கடவுட்கள் தேவைப்பட்டன. ஆகவே பிரதான நான்கு தெய்வங்களும் பரப்பிரம்மனால் படைக்கப்பட்ட பின்னர், அடுத்த நிகழ்வாக விநாயகப் பெருமான், தேவேந்திரன், இந்திரன், யமதர்மராஜர் மற்றும் மனித வாழ்வின் நல்ல, தீய நிலைகளை நிர்ணயிக்கும் ராகு, கேது, புதன், சந்திர சூரியர்கள் போன்ற தெய்வங்களும், அக்னி, வாயு சனி , மற்றும் வருண பகவான்கள் போன்றவர்கள் பரபிரும்மனின் சக்திக்கதிர்களில் இருந்து தோற்றுவிக்கப்பட்டனர். துவக்கத்தில் மனிதர்களுக்கு தெய்வங்களின் மீது நம்பிக்கை எற்படக் காரணமாக இருந்த தெய்வங்கள் அக்னி, வாயு மற்றும் வருண பகவான்கள் ஆவார்கள்5.

ஏழு மகரிஷிகளும் பிரும்மாவின் முன் தாம் எதற்காக படைக்கப்பட்டோம் என்பது தெரியாமல் நின்றார்கள். அவர்களை தமது நேரடித் தூதர்கள் எனக் கூறிய பிரும்மா, உலகில் படைக்கப்பட்டவை எத்தனை ஜனன மரண நிலைகளைக் கொண்டிருக்கும், ஆண் பெண் தத்துவம், குழந்தைகள், வாழ்வு நெறிமுறைகள், நல்லவை, தீயவை, தெய்வங்கள் வெளிப்பட்ட வரலாறு, தெய்வீகம், இறை வழிபாடு, பிரும்ம நியதி போன்றவை அனைத்தையும் விரிவாக எடுத்துரைத்தப் பின் அவர்கள் பூலோகம் சென்று அனைவரும் அவற்றை அறிந்திடும் வகையில் போதனைகளை செய்து பரப்புமாறு ஆணையிட்டார்.

ஏழு மகரிஷிகள்

அதேபோல அந்த மஹரிஷிகள் பூமியிலே தமக்கு சிஷ்யர்களை உருவாக்கிக் கொண்டு அவர்கள் மூலம் குரு சிஷ்ய பரம்பரைத் தத்துவம் மற்றும் பிற தத்துவங்களையும் பரப்ப வேண்டும் என்றும், மனிதகுலத்தை நல்வழிப்படுத்தி தூய்மைகளைக் கடைப்பிடிக்க வழிகாட்டி அவர்களைக் காத்தருள தெய்வங்கள் எந்த நேரத்தில் எங்கெங்கு அவதரிக்க உள்ளார்கள் என்பதையும் குலதெய்வம் எனும் கருத்தையும் விரிவாக எடுத்துரைத்தார்.

அனைத்தும் முடிந்த பின் அந்த முனிவர்கள் அனைவரும் அவரவருக்கு தோற்றுவிக்கப்பட்ட பெண்களை மணந்து கொண்டு பிரும்ம தத்துவங்களை பரப்பிட பூலோகத்துக்கு சென்றார்கள். அங்கு சென்றவர்கள் ஒரே குழுவாக தங்கிடாமல் பல்வேறு இடங்களில் சென்று தங்கி, தமக்கு சில சிஷ்யர்களை உருவாக்கிக் கொண்டார்கள். அதே நேரத்தில் மனிதப் பிறப்பு எடுத்து இருந்த ஆத்மாக்களும் சிறு குழுக்களாக பிரிக்கப்பட்டு பல்வேறு இடங்களில் சென்று தங்கும் நிலையில் பிறப்பு எடுக்கப்பட வைக்கப்பட்டார்கள். அந்த மனிதப் பிறவிகள் மனதில் முதலில் பயம் எனும் உணர்வை ஏற்படுத்தினார்கள். அப்போதுதான் பய உணர்வில் அவர்கள் அங்கு அவதரிக்க உள்ள தெய்வங்களை அடையாளம் கண்டு கொண்டு அவர்களிடம் சென்று சரணடைய முடியும் என்பதற்காக செய்யப்பட்ட ஏற்பாடு அது.

உலகம் படைக்கப்படப் பின்னர் மனித பிறப்புக்கள் இலக்கை எழில் கொஞ்சும் சூழ்நிலையில் இருந்த மலை அடிவாரங்கள், நதிக்கரை, சுற்றிலும் மரங்கள், செடிகள் நிறைந்த இடங்களில் சென்று வாசிக்கலானார்கள். அவர்கள் இடையே ரிஷி முனிவர்கள், சாது சந்யாசிகள் என்ற உருவங்களில் சில தெய்வங்களும் அங்கங்கே அவதரித்து தங்கினார்கள். மனித பிறவிகள் என்ன மொழியை பேசினார்கள், அவர்களின் உருவங்கள் என்ன, அவர்களின் வாழ்க்கை முறைகள் என்ன, அவர்கள் வணங்கிய தெய்வங்கள் என்னென்ன என்பவற்றைக் குறித்த செய்திகள் தெரியவில்லை. பிரபஞ்ச தோற்றத்தின் நிலைகள் குறித்த செய்திகள் அனைத்தையும் ஆராய்ந்து வரும் ஆராய்ச்சியாளர்களையும் பண்டிதர்களையும் குழப்ப வைப்பது என்ன என்றால் “உலகம் தோன்றியவுடன் குரங்குகளாக இருந்தவர்களே காலப்போக்கில் மனிதர்களாக மாறினார்கள் என்றும், மெல்ல மெல்லத்தான் நாகரீகம் பரவி வந்தது என்றும் விஞ்ஞானிகள் கூறி வருகையில், முதல் யுகத்திலே அவதரித்ததாக கூறப்படும் சப்தரிஷிகளான அத்ரி, விசுவாமித்திரர், காஷ்யபர், வசிஷ்டர், அங்கீரஸ, அத்ரி மற்றும் பிருகு போன்றவர்களின் மாபெரும் சக்திகளையும், அபாரமான ஞானத்தையும், வாழ்க்கை நெறிமுறைகளையும், போதனைகளையும், சாதனைகளையும் நோக்குகையில் அந்த யுகத்தில் வாழ்ந்திருந்த மனிதப் பிறவிகளுக்கும் அதீத அறிவு இருந்திருக்க வேண்டும் என்றே கருத முடியும். இல்லை என்றால் அவர்களால் அந்த முனிவர்களின் தெய்வீக, ஆன்மீக தத்துவார்த்த போதனைகளை கிரகித்துக் கொண்டு இருக்க முடியாது. இராமாயண, மஹாபாரத நிகழ்வுகள் அந்த யுகத்தில்தான் நடந்தவையா? இராமாயண, மஹாபாரத கால கட்டத்தில் இருந்த மக்கள் எந்தெந்த தெய்வங்களை வணங்கி வந்திருந்தார்கள்?”  இந்த குழப்பத்துக்கு வலு சேர்க்கும் வகையிலான விளக்கங்கள் இன்னும் தெளிவாக கிடைக்கவில்லை. காலம் காலமாக அனைத்துமே நம்பிக்கையின் அடிப்படையில் நம்பப்பட்டு வந்துள்ளது என்பதே உண்மை.

இயற்கை சீற்றங்களில் பயமுறுத்தும் வகையிலான உருவங்கள் தெரிந்தன.

மனிதப் பிறவிகள் வாழாத் துவங்கிய இடங்களில் பிரும்ம நியதிப்படி சில தெய்வங்கள் அவதாரம் எடுத்துத் தங்கினார்கள். 5அந்த தெய்வங்களின் தோற்றம் சிலரது கண்களுக்கு தெரிந்தவாறும், மற்றவர்களது கண்களுக்கு புலைப்படாமலும் காணப்பட்டன. மேலும் அப்படி அவதரித்த தெய்வங்கள், காதுகளைக் கிழிக்கும் வகையிலான இடி மின்னலுடன் கூடிய பேய் மழை, வெள்ளம், சூறாவளி, போன்ற இயற்கை சீற்றங்களை உருவாக்கி அவற்றின் இடையே அவதரித்தார்கள். அவற்றைக் கண்டு அச்சம் கொண்ட மனிதப் பிறவிகள் தம்மைப் பாதுகாத்துக் கொள்ள புதியதாக அங்கு வந்த, சில நேரங்களில் கண்களுக்கு புலப்பட்டு பல நேரங்களில் மறைந்து இருந்த தெய்வங்களிடம் சரண் புகுந்தார்கள், அவர்களைத் தேடி அலைந்தார்கள். அங்கங்கே குழுக்களாக தங்கி இருந்த மனிதப் பிறவிகள், புதிதாக அவதரித்த தெய்வங்களை தமது பாதுகாவலர்களாக கருதத் துவங்கினார்கள். ஒவ்வொரு பிரிவை சேர்ந்த மனிதக் குழுவினரும் அவரவர்கள் பகுதியில் தோன்றிய அவதாரங்களை ஏற்றுக் கொள்ளாத துவங்க இப்படியான சூழ்நிலையில் இறை வழிபாட்டு முறையும் , குலதெய்வ வழிபாடும் துவங்கின.

பூமியிலே தங்கி இருந்த மகரிஷிகளும் தமது சீடர்கள் மூலம் அவ்வப்போது ஏற்பட்ட இயற்கை சீற்றங்களை அமானுஷ்ய ஆவிகளாக காட்டி, அவை மனிதப் பிறவிகளைவிட சக்தி மிக்க ஆத்மாக்களால் இயக்கப்படுகின்றன என்று கூறி, புதியதாக அவதரித்த தெய்வங்களுடன் அவற்றை சம்மந்தப்படுத்தி சில கதைகளைக் கூறி அவர்களை வழிப்பட்டால் அந்த சீற்றங்களில் இருந்து தப்ப முடியும் என்ற பிரமையை ஏற்படுத்தி வந்தார்கள். ஆனால் இவை எதற்கும் ஆதாரபூர்வமான சான்றுகள் இல்லை என்றாலும், வாய்மொழிக் கதைகளாக பல்லாயிரம் ஆண்டுகளாக பரவி வந்துள்ளன.

யுகம் எனப்படும் முதல் நிலைப் படைப்பில் பல லட்ஷக்கணக்கான உயிரினங்கள் படைக்கப்பட்டு ஆட்டி வைக்கப்பட்ட பின் 1,728,000 மனித ஆண்டுகள் கழிந்து விடும். அந்த ஆத்மாக்களுக்கு இன்னும் நான்கு நிலை மரண ஜனன நியதி உள்ளதே என்பதினால் அவற்றை எங்கு அனுப்புவது என யோஜனை செய்த பிரும்மா உடனடியாக அந்த ஆத்மாக்கள் செல்ல நான்கு யுக தளங்களை உருவாக்க முடிவு செய்தார். அப்போதுதான் முதல் யுகத்தில் இருந்து  நான்கு யுகத்திற்கும் அந்த ஆத்மாக்கள் அவற்றின் விதிப்படி செல்ல முடியும் என்பதையும் உணர்ந்தார்.

பிரும்மாவின் நான்கு முகங்களில் இருந்தும், நான்கு திசைகளிலும் படைத்தவை வெளிவந்தன

4இப்படியாக நான்கு யுக தளத்தை உருவாக்கத் துவங்கியதும் தமது முதல் முகத்தின் கண்களை மூடிக்கொண்டு இரண்டாம் முகத்தின் கண்களைத் திறந்து பார்க்க அதில் இருந்து இரண்டாம் யுக தளம் வெளிப்பட்டது. முதல் யுகத்தின் முடிவில் அந்த யுகத்தின் ஆத்மாக்கள் இங்கு வந்தவுடன் என்னென்ன நிகழ்வுகள் அதில் நடைபெற வேண்டும் என்று அந்த தளத்தில் சக்தியூட்டிய பின் அதை கண்களுக்குப் புலப்படாமல் மறைத்து வைத்தார். இப்படியாக அவர் முதல் யுகத்தைத் தொடர்ந்து பிற மூன்று பக்கங்களிலும் மேலும் மூன்று யுக தளங்களை படைத்தவுடன் அவை அனைத்தும் ஒன்றன் பின் ஒன்றாக தோன்றி முந்தைய யுகத்தின் ஆத்மாக்களை சுவீகரித்துக் கொள்ளும் என்ற நிலையையும் உருவாக்கி, அவற்றையும் கண்களுக்குப் புலப்படாமல் மறைந்து இருக்க வைத்தார்.

முதல் யுகத்தின் முடிவில் தோன்ற இருந்த ஒவ்வொரு யுகத்துக்கும் தனித்தனியான காலகட்டம் வரையறுக்கப்பட்டது. அந்தந்த யுகங்களுக்கு ஏற்ப சில தன்மைகளும் சக்தியூட்டப்பட்டு அவற்றுக்கேற்ப அவற்றில் தோன்ற இருந்த மனிதர்கள் தூய எண்ண அலைகளில் இருந்து மெல்ல மெல்ல தீய எண்ணங்களைக் கொண்டவர்களாக மாறும் வகையில் அமைத்தார்.

சத்திய நெறிகளை பிரதானமாகக் கொண்ட முதல் யுகமான சத்ய யுக முடிவைத் தொடர்ந்து வெளிவர இருந்த அடுத்தடுத்த யுகங்களில் தூய்மையான எண்ணங்களைக் கொண்ட மனிதப் பிறவிகளின் தன்மைகள் மெல்ல மெல்ல மறைத்து தீய தன்மைகளைக் கொண்டவையாக மாறிக்கொண்டு வரும் என்பதினால் அந்த மனிதப் பிறவிகளை ஒழுங்குபடுத்தி வைக்க அதிக தெய்வங்களின் தோற்றம் தேவை என்பதை உணர்ந்தார்.

2ஒவ்வொரு புதிய யுக தோற்றத்திலும் குல தெய்வங்கள் உட்பட பல தெய்வ அவதாரங்கள் வெளிப்பட்டு வந்துள்ளன என்பது தெளிவாக தெரிகின்றது. கல்கி யுகத்தில்தான் மிக அதிகமான தெய்வங்கள் தோன்றி உள்ளதாக பண்டிதர்கள் கூறுகின்றார்கள். வேத காலம் முதல் இராமாயண, மஹாபாரத நிகழ்வு நடைபெற்ற காலங்களில் தோன்றிய காலங்களை ஒப்பிட்டுப் பார்த்தாலும் இந்த உண்மை விளங்கும்.

ஒவ்வொரு புதிய யுக தோற்றத்திலும் அதிக எண்ணிக்கையிலான குல தெய்வங்கள் உட்பட பல தெய்வ அவதாரங்கள்  வெளிப்பதின் அவசியம் என்ன என்பதற்கு காரணம் கீழுள்ளவையாக இருக்கலாம் :

முதல் யுகத்தில் சத்தியத்தைக் கடைப்பிடித்து தூய்மையுடன் இருந்த பிறவிகள் அடுத்தடுத்த யுகங்களில் அந்த தூய தன்மைகளை இழந்து தீய தன்மைகளைக் கொண்டவர்களாக மாறி வந்தார்கள். அவர்களை ஒழுங்கீனப்படுத்த அதிக தெய்வங்கள் தேவைப்பட்டன.
முதல் யுகத்தில் பிரும்மாவினால் படைக்கப்பட்ட அனைத்து ஆத்மாக்களுமே பிறவி எடுக்கவில்லை. அப்போது பிறப்பு இருந்த ஜனத்தொகை மிகக் குறைந்த அளவிலேயே இருந்தது. பிறப்பு எடுக்காமல் இருந்த மற்றவை விண்வெளியில் மிதந்தபடியே இருந்தன. அடுத்தடுத்த யுகங்களில் அவை அனைத்தும் பிறவிகளை எடுக்கத் துவங்க, பிறவிகளின் எண்ணிக்கை இரு மடங்கு, மூன்று மடங்கு என பெருகிக் கொண்டே சென்ற நிலையில், தூய்மை அழித்தவாறு இருக்க, அவற்றை ஒழுங்கீனப்படுத்த அதிக தெய்வங்கள் தேவைப்பட்டன.
முதல் யுகத்தில் இருந்த பிறவிகளின் எண்ணிக்கை அதிகரிக்க அதிகரிக்க அவை வாழ்ந்த இடங்களும் விரிவடைந்து கொண்டே செல்ல, அத்தனை இடங்களிலும் இருந்தவர்களை பாதுகாத்து, வழிநடத்த அதிக தெய்வப் பிறவிகள் தேவைப்பட்டன.
புராண இதிகாசங்களை படித்தோம் எனில் வேத கால துவக்கத்தில் குல தெய்வ வழிபாடு துவங்கி உள்ளது என்பதும், அப்போது ஜாதி பேதம் இன்றி அனைவருமே ஒரே தெய்வத்தை வணங்கி வந்துள்ளார்கள் என்பதும் தெரிகின்றது. இராமாயண மஹாபாரத காலங்களிலும் ஜாதி பேதம் இருந்திடவில்லை, ஆனால் படைப்பு ரகசியத்தின்படி பிரும்மாவின் மூலமே நான்கு தொழில்களை செய்யும் நான்கு பிரிவு மனிதப் பிறவிகள் தோன்றியதாகவும், அதுவே பிற்காலகட்டங்களில் பல பிரிவுகளைக் கொண்ட ஜாதிகளாக படர்ந்து விரிந்துள்ளன என்றும் அதனாலும் அந்தந்த பிரிவினர் வழிபடும் வகையில் அவரவர் பிரிவுக்கு ஏற்ப அதிக அவதாரங்கள் வெளிவந்துள்ளன. இதுவும் அதிக எண்ணிக்கையிலான தெய்வங்கள் வெளிப்பாடாக காரணமாக இருந்துள்ளன. 
வேத காலம் என்பது முதல் யுகமா இல்லை, எந்த யுகத்தில் அது தோன்றியது என்பது தெரியவில்லை. ரிக் வேத கால மனிதர்கள் இயற்கையை உருவமற்ற தெய்வங்களாக வழிபட்டு வந்துள்ளார்கள். இயற்கையின் சீற்றத்தைத் தணிக்க அங்கங்கே இருந்த மக்கள் ஒன்று கூடி தம்மைக் காப்பாற்றுமாறு வேண்டிக் கொண்டு வெற்று இடங்களில் நின்று பிரார்த்தனை செய்துள்ளார்களாம். அந்த இடங்களே பின்னர் ஆலயம் எனும் வழிபாட்டுத் தலங்கள் என ஆயின. ரிக் வேத காலத்தில் சிவன், பார்வதி, விஷ்ணு, கிருஷ்ணர் போன்றவர்கள் அந்தந்த உருவங்களில் வழிபடப்பட்டதாக தெரியவில்லை என ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றார்கள்.

ஓம் நமசிவாய 
படித்து பகிர்ந்தது 
இரா இளங்கோவன் 
நெல்லிக்குப்பம்

Followers

கிருஷ்ணாபுரம் வெங்கடாஜலபதி கோயில்.

கிருஷ்ணாபுரம் வெங்கடாஜலபதி கோயில் கிருஷ்ணாபுரம் வட்டம் பாளையங்கோட்டை திருநெல்வேலி மாவட்டம்  மூலவர் பெயர் வெங்கடாஜலபதி தாயார் / அ...