Sunday, March 1, 2026

மார்பில் மரு… காலில் தழும்பு… விரல்களில் நகங்கள்…உயிரோட்டமாக அதிசய நடராஜர்

மார்பில் மரு… காலில் தழும்பு… விரல்களில் நகங்கள்…
உயிரோட்டமாக நின்று அருளும் அதிசய நடராஜர் – எங்கே?
தமிழகத்தில் எண்ணற்ற சிவாலயங்கள் இருந்தாலும்,
“இங்கே நடராஜர் உயிரோடு நின்றிருக்கிறார்”
என்று பக்தர்கள் சிலிர்ப்புடன் கூறும் ஒரு திருத்தலம் உண்டு.

அது –
கோனேரிராஜபுரம்
கும்பகோணம் அருகே அமைந்துள்ள இந்த ஊர்,
திருநல்லம் என்ற பழம்பெயராலும் அழைக்கப்படுகிறது.

இத்தலத்தில் அருள்பாலிக்கும்
உமா மகேஸ்வரர் திருக்கோயில்
தமிழகத்தின் மிக முக்கியமான சிவத்தலங்களில் ஒன்று.
இங்கே காணப்படும் நடராஜர் –
சாதாரண விக்கிரகம் அல்ல…
சுயம்பு நடராஜர்!

 பூமாதேவி பூஜித்த தலம் – திருநல்லம்

புராண காலத்தில்,
இரண்யாக்ஷன்
என்ற அசுரன்,
பூமாதேவியை பாதாள உலகிற்கு தூக்கிச் சென்றபோது,

வராக அவதாரம்
எடுத்து மகாவிஷ்ணு,
பூமாதேவியை மீட்டு உலகிற்கு கொண்டு வந்தார்.

அப்போது,

“இனி எந்த அசுரத்தாலும் உனக்கு ஆபத்து வராமல் இருக்க,
சிவபெருமானைத் தொடர்ந்து பூஜை செய்”

என்று பூமாதேவிக்கு உபதேசித்தார் மகாவிஷ்ணு.

🌿 காவிரிக் கரையில் கண்டெடுக்கப்பட்ட தெய்வ பூமி

சிவனை வழிபட ஏற்ற இடத்தைத் தேடி வந்த பூமாதேவி,
காவிரி நதி
கரையில்,
திருவீழிமிழலை
வடமேற்கே ஒரு புனிதமான இடத்தை கண்டடைந்தார்.

அங்கே:

பெரிய அரசமரம்

பிரம்மாவால் தோற்றுவிக்கப்பட்ட பிரம்ம தீர்த்தம்

இருந்தன.

இது சிவ வழிபாட்டிற்கு உகந்த தலம் என்று உணர்ந்த பூமாதேவி,
தேவ சிற்பியான
விஸ்வகர்மா
அவர்களிடம் ஆலயம் அமைக்கச் சொன்னார்.

அந்த ஆலயத்தில்,
தேவகுரு
பிரகஸ்பதி
மேற்கு நோக்கி
உமா–மகேஸ்வரரை பிரதிஷ்டை செய்தார்.

பூமாதேவி தொடர்ந்து பூஜை செய்து அருள் பெற்றார்.
உலக உயிர்கள் பயன்பெற,
அவள் உருவாக்கியதே –
பூமி தீர்த்தம்.

🔱 சுயம்பு நடராஜர் – வேறு எங்கும் இல்லாத அதிசயம்

இனி,
இந்தத் தலத்தின் உச்ச அதிசயமான
நடராஜர் பெருமானின் வரலாறு.

இங்கே காணப்படும் நடராஜர்:

மிகவும் உயரமான வடிவம்

சுயம்புவாக தோன்றியவர்

விக்கிரகத்தில் மனித உடல் இலக்கணங்கள்

👉 மார்பில் மரு
👉 மருவில் ரோமம்
👉 விரல்களில் நகங்கள்
👉 காலில் வெட்டுத் தழும்பு

இவை அனைத்தும் இன்றும் தெளிவாக காணப்படுகின்றன.

👑 சோழ மன்னனின் கனவு

ஒரு சோழ மன்னனின் கனவில்
ஈசன் தோன்றி,

“கோனேரிராஜபுரம் ஆலயத்தில்
எனக்கொரு நடராஜர் விக்கிரகம் அமைக்க வேண்டும்”

என்று கட்டளையிட்டார்.

மன்னன் உடனே சிறந்த சிற்பியை அழைத்து,

“மூன்று மாதங்களில்
பஞ்சலோகத்தால்
அற்புதமான நடராஜர் விக்கிரகம் செய்ய வேண்டும்”

என்று உத்தரவிட்டார்.

🔥 சிற்பியின் சோதனை

மிகுந்த சிவபக்தியுள்ள அந்தச் சிற்பி,
ஈசனைத் தியானித்து பணியில் இறங்கினார்.

ஆனால்,
ஒவ்வொரு முறையும் பஞ்சலோக கலவையை உருக்கி வார்க்கும்போது,
ஏதோ ஒரு குறை!

நாட்கள் சென்றன…
விக்கிரகம் முழுமை பெறவில்லை.

அரசர் வந்து பார்த்து,

“இன்னும் இரண்டு நாட்களில் விக்கிரகம் தயாராகவில்லை என்றால்
உன் தலை உருளும்!”

என்று கோபத்துடன் சென்றார்.

🕯️ முதிய சிவனடியாரின் வருகை

மனமுடைந்த சிற்பி,
ஈசனிடம் கதறி அழுது,
மீண்டும் உலையில் கலவையை காய்ச்சி கொண்டிருந்தபோது,

வாசலில் ஒரு முதிய சிவனடியார்:

“ஐயா… மிகவும் தாகமாக இருக்கிறது.
சுடுநீர் கிடைக்குமா?”

என்று கேட்டார்.

மன வேதனையில் இருந்த சிற்பி,
எரிச்சலுடன்:

“உள்ளே உலையில் சுடுநீர் கொதிக்கிறது.
வேண்டுமானால் அதையே குடியுங்கள்”

என்று சொல்லிவிட்டார்.

✨ அந்த நொடியில் நிகழ்ந்த அதிசயம்

முதிய சிவனடியார்,
உலையில் கொதித்துக் கொண்டிருந்த
பஞ்சலோக கலவையை
அப்படியே குடித்தார்!

⚡ அடுத்த நொடியில்…
அங்கேயே
நடராஜர் விக்கிரகமாக உறைந்து நின்றார்!

😱 உண்மையை உணர்ந்த சிற்பி

உள்ளே சென்று பார்த்த சிற்பி,
ஸ்தம்பித்துப் போனார்.

விக்கிரகத்தின்:

மார்பில் இருந்த மரு

அதில் ரோமம்

கைகளில் நகங்கள்

அனைத்தும்
முதிய சிவனடியாரின் உடலில் அவர் பார்த்த அதே அடையாளங்கள்!

“சிவனடியாராக வந்து
என் மனக்குறையை தீர்த்தது
ஆடல்வல்லானே!”

என்று உணர்ந்து
கண்ணீர் மல்க சரணடைந்தார்.

⚔️ அரசரின் அவசரம் – தெய்வ தண்டனை

அரசர் வந்து விக்கிரகத்தை பார்த்தார்.
உயிரோட்டமான சிற்பத்தைக் கண்டு வியந்தார்.

சிற்பி நடந்ததை சொன்னபோது,
அரசர் நம்பவில்லை.

கோபத்தில் வாளை உருவி,
சிற்பியை வெட்ட முயன்றார்.

⚡ ஆனால் வாள் பட்டது –
நடராஜர் சிலையின் வலது பாதத்தில்!

அந்த இடத்தில் இருந்து
ரத்தம் பீறிட்டது!

அந்தக் கணமே
அரசருக்கு தொழுநோய் பிடித்தது.

🩺 வைத்தியநாத சுவாமியின் அருள்

அரசர் தன் தவறை உணர்ந்து சரணடைந்தார்.
அப்போது ஈசன் அருளினார்:

“இந்த ஆலயத்தில் அருளும்
வைத்தியநாத சுவாமி
அவருக்கு 48 நாட்கள் பூஜை செய்”

அரசர் அவ்வாறே செய்து
முழுமையாக குணமடைந்தார்.

இன்றும்,
இத்தல வைத்தியநாத சுவாமி
தீர்க்க இயலாத நோய்களையும் தீர்க்கிறார்
என்று பக்தர்கள் உறுதியாக நம்புகின்றனர்.

🔥 இன்றும் காணலாம் அந்த சாட்சி

மிகப் பெரிய சுயம்பு நடராஜராக
இத்தலத்தில் அருளும் ஈசனின்
வலது பாதத்தில்,
மன்னனின் வாளால் ஏற்பட்ட
வெட்டுத் தழும்பு
இன்றும் தெளிவாகக் காணப்படுகிறது. 

ஓம் நமசிவாய
 படித்து பகிர்ந்தது
 இரா இளங்கோவன் 
நெல்லிக்குப்பம். 

Friday, February 27, 2026

சிவபெருமானுக்கு அர்ப்பணிக்கப்பட்ட ஜெஜூரி எனும் ஆன்மீகத்தலம்

*சத்ரபதி சிவாஜி வணங்கிய போர் தெய்வம் ஜெஜூரி மலைக்கோயிலின் ஆச்சரியமான வரலாறு!* 
மகாராஷ்டிரா மாநிலம், புனே மாவட்டத்தில் சிவபெருமானுக்கு அர்ப்பணிக்கப்பட்ட ஜெஜூரி எனும் ஆன்மீகத்தலம் உள்ளது. இங்கு சிவபெருமான் அசுரர்களை வதைக்க கண்டோபா என்ற பெயரில் மனிதனாக அவதரித்தார். அவரது அருளைப்பெறும் வகையில் சோனாரி ஜெஜூரி (தங்கக் கோட்டை) என்றழைக்கப்படும் இந்தக் கோயில் கட்டப்பட்டுள்ளது. காண்டோபா கடவுள் மிகவும் உக்கிரமாக இருந்தாலும் பக்தர்களுக்கு கருணைமிக்கவராக இருக்கிறார். இந்த கோயிலின் தல வரலாறு மற்றும் அதன் சிறப்புகளை இங்கு விரிவாக காண்போம்.

கண்டோபா போர் தெய்வம்:

புராணங்களின்படி தாரகாசுரன் என்ற அசுரனின் மகன்களான மணி மற்றும் மல்லா என்ற பெயருடைய அரக்கர்கள், பிரம்ம தேவரை நோக்கி கடுமையாக தவம் இருந்தனர். இவர்களின் தவத்தில் மெச்சிய பிரம்மதேவரும் அவர்கள் விரும்பிய வரத்தினை கொடுத்தார். வரத்தின் சக்தியால் அவர்களின் வலிமை கூடியது, அவர்களை அழிப்பது கடினம் என்பதை உணர்ந்த அசுரர்கள், பூமியில் உள்ள முனிவர்கள் மற்றும் தேவலோகத்தில் உள்ள தேவர்களை கொடுமைப்படுத்த தொடங்கினர்.

தேவர்கள் அசுரனின் கொடுமை தாளாமல் சிவபெருமானிடம் சென்று முறையிட்டனர். அவர்களின் வேண்டுகோளுக்கு இணங்க, இறைவன் கண்டோபாவின் வடிவத்தில் பூமியில் அவதாரம் எடுத்தார். காண்டோபா என்றால் போர் வீரன் என்றும் அர்த்தம் கொள்ளலாம். சிவன் கையில் வாள் ஏந்தி குதிரையின் மீதமர்ந்து போர் வீரனை போன்று காட்சியளித்தார், இரு அசுரர்கள் மீதும் காண்டோபா போரை தொடங்கினார்.

மனித உருவில் வந்தது இறைவன் என்பதை உணர்ந்த மணி அசுரன், அவரது பாதம் பணிந்து மன்னிப்பு கோரினான். அவனது தவறுகளை மன்னித்து இறைவன் அவனுக்கு முக்தியளித்தார். மல்லாசுரன் தொடர்ந்து காண்டோபாவை எதிர்த்து போரிட்டான், இறுதியில் இறைவன் அவனை வதைத்தார். அசுரர்களை காண்டோபா அழித்ததை கொண்டாடும் வகையில் ஜெஜூரி மலைக்கோயில் கட்டப்பட்டு மக்களால் வழிபடப்பட்டு வருகிறது.
-
ஜெஜூரி மலைக்கோயில் அமைவிடம்:

இந்த கோயில் கடல் மட்டத்திலிருந்து சுமார் 2356 அடி உயரத்தில் இயற்கை எழில் கொஞ்சும் ஒரு குன்றின் மீது அமைந்துள்ளது. இந்த கோயிலை அடைய சுமார் 200 படிகள் வரை ஏறிச்செல்ல வேண்டும். இந்த பாதையில் வரிசையாக தீபத்தூண்கள் அமைக்கப்பட்டு கோயில் பாதைக்கு மேலும் அழகூட்டுகின்றன. திருவிழாக் காலங்களில் இந்த பெரிய தீபத்தூண்களில் விளக்கேற்றி ஒளி வெள்ளத்தில் மிதக்க செய்கிறார்கள்.

ஜெஜூரி கோயில் கட்டிடக்கலை:

புராண காலம் தொட்டே இருக்கும் இந்த கோயிலை, பின்னாளில் வித்தல்தேவ் என்ற உள்ளூர் ஆட்சியாளர் இன்றைக்கு இருக்கும் வடிவில் கோயிலை கட்டினார். இந்த கோயிலை, மராட்டிய வம்சத்தை சேர்ந்த ஹோல்கர் மற்றும் பேஷ்வாக்கள் விரிவுபடுத்தி கட்டியுள்ளனர். மராட்டிய அரசரான சத்ரபதி சிவாஜியின் தந்தை சாஹாஜி ராஜே போஸ்லே கண்டோபாவின் தீவிர பக்தராக இருந்தார். சிவாஜியும் இவரது வழியிலேயே இந்த கோயிலை பராமரித்தார். ராணி அகல்யா பாய் ஹோல்கர் கோயிலுக்கு பல வசதிகளை ஏற்படுத்திக்கொடுத்து கட்டிடங்களை விரிவுபடுத்தினார். மலைக் கோட்டையை போலவே காட்சியளிக்கும் ஜெஜூரி கோயில் ஹேமத்பந்தி கட்டிடக்கலை பாணியில் செதுக்கப்பட்டுள்ளது.

கோயில் கருவறை:

மலைக்கோயில் கருவறையில் மூலவரான கண்டோபா போர் கடவுள், தனது மனைவி மல்சா தேவியுடன் குதிரை மீது அமர்ந்தவாறே பக்தர்களுக்கு காட்சியளிக்கிறார். போர் கடவுள் என்பதால் கையில் வாளுடன் அருள் புரிகிறார்.

பண்டாரா வீசுதல் திருவிழா:

இந்தக் கோயிலின் முக்கிய திருவிழா பண்டாரா என்று அழைக்கப்படுகிறது. பாண்டாரா என்றால் மஞ்சள் பொடி என்று பொருள். காண்டோபா தெய்வத்தினை வேண்டி பலன் பெற்றவர்கள், திருவிழாவின்போது காற்றில் மஞ்சள் பொடியினை விசிறி அடிக்கின்றனர். அந்த நேரத்தில் கோயில் பகுதி முழுக்க மஞ்சள் பொடி பறந்துகொண்டே இருக்கும். கோயிலின் தரைகள், சுவர்கள் மற்றும் பக்தர்களின் ஆடைகள் என அனைத்தும் மஞ்சள் நிறமாக மாறிவிடுகின்றன. இது மங்கலத்தின் குறியீடாகவும், தீமைகளை அழிக்கும் சக்தியாகவும் நம்பப்படுகிறது. ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும், அமாவாசை நாட்களிலும் இங்கு மஞ்சள் பொடித் திருவிழா நடைபெறுகிறது.

கோயிலுக்கு செல்வது எப்படி?

சென்னையில் இருந்து புனே வரை ரயில் அல்லது விமான மார்க்கம் மூலமாக பயணிக்கலாம். புனேயில் இருந்து கோயிலுக்கு செல்ல ரயில், பஸ், கார் வசதிகள் உள்ளன. கோயில் தினசரி காலை 5:00 மணி முதல் இரவு 9:00 மணி வரை திறந்து இருக்கும்.

ஓம் நமசிவாய
 படித்து பகிர்ந்தது
 இரா இளங்கோவன் 
நெல்லிக்குப்பம். 

Monday, February 23, 2026

ஒத்தாண்டேஸ்வரர் திருமழிசை, திருவள்ளூர்

ஒத்தாண்டேஸ்வரர் திருக்கோயில், திருமழிசை, திருவள்ளூர் மாவட்டம்
கரிகாலப்பெருவளத்தான், இத்தலத்திற்கு அருகிலுள்ள மற்றொரு தலத்தில் சிவனை வழிபடுவதற்காக தனது யானையில் சென்றான். அப்போது யானையின் கால் ஒரு கொடியில் சிக்கிக்கொண்டது. கையால் அதனை களைய முயன்று முடியவில்லை. எனவே, தனது உடைவாளைக்கொண்டு அக்கொடிகளை வெட்டினான்.
 அடியிலிருந்து ரத்தம் பீறிட்டது. அதிர்ச்சியடைந்த மன்னன், கொடிகளை விலக்கி பார்த்தபோது உள்ளே ஒரு லிங்கம் இருந்தது. பதறிப் போன மன்னன், லிங்கத்தை வெட்டிய அதே வாளைக்கொண்டு, சிவபாவம் செய்த தனது வலக்கையை வெட்டி வீசினான். 

 அவனது பக்தியில் மெச்சிய சிவன், அம்பாளுடன் ரிஷபவாகனத்தில் காட்சி தந்து, இழந்த கையை மீண்டும் உடலுடன் பொருத்தினார். எனவே இவரை "கைதந்தபிரான்' என்று அழைக்கிறார்கள்.

 மன்னனுக்கு ஆறுதல் மொழி சொல்லியும், சிவனுக்கு அவரது அடியார்களின் கதையைச்சொல்லியும் அவர்களின் மனதை அம்பிகை குளிர்வித்தாள். எனவே இவள் "குளிர்வித்த நாயகி' என்றழைக்கப்படுகிறாள்.

இங்குள்ள நடராஜர் அம்பாளைப் பார்த்த படியும், அம்பாள் அவரைப் பார்த்தபடியும் உள்ளனர். நடுவில் நந்தி: மன்னன் தனது கையை வெட்டியபோது அவனைக்காத்து, தர்மத்தை நிலைநாட்ட சிவன் வேகமாக வந்து மன்னனுக்கு காட்சி தந்தார். அப்போது, சிவனின் வாகனமான நந்தி அவருக்கு மிகவும் உறுதுணையாக இருந்ததாம். எனவே, இங்கு சுவாமிக்கும், அம்பாளுக்கும் நடுவில் நந்தி இருக்கிறது. சுவாமிக்கு முன்புறம் அதிகாரநந்தி, பிரதோஷ நந்தி இருப்பதுடன் அவருக்கு பின்புறத்தில் கோஷ்டத்தையடுத்து கிழக்கு நோக்கியபடி தர்மநந்தியும் உள்ளது.
   இங்குள்ள லிங்கம் தலையில் வெட்டுப்பட்ட தடத்துடன் உள்ளது. கருவறையில் லிங்கத்திற்கு பின்புறம் அம்பாளுடன் அமர்ந்த கோலத்தில் சுவாமி காட்சி தருகிறார். கிழக்கு நோக்கியிருக்கும் இவ்விருவரையும் ஒரே நேரத்தில் தரிசனம் செய்தால் பாவங்கள் நீங்கி, முக்தி கிடைக்கும் என்பது நம்பிக்கை. ஒத்தாண்டேஸ்வரரை வணங்கினால், மனோபலம் ஏற்படும் என்பதால் இவருக்கு "மன அனுகூலேஸ்வரர்' என்றொரு பெயரும் உள்ளது.

இங்குள்ள விநாயகர் பிரசன்ன விநாயகர்.
குடும்பத்தில் பிரச்னை உள்ள தம்பதியர்கள் இங்கு ஒருவரை ஒருவர் பார்த்த நிலையில் உள்ள நடராஜர் - அம்பாளை வணங்கினால், மனசஞ்சலம் நீங்கி ஒற்றுமை பிறக்கும், இல்வாழ்வு சிறக்கும் என்பது நம்பிக்கை. இத்தலத்து விமானம் கஜபிருஷ்ட அமைப்பில் உள்ளது.
ஓம் நமசிவாய 
படித்து பகிர்ந்தது 
இரா இளங்கோவன் 
நெல்லிக்குப்பம். 

மின்னல் தாக்கி வெடிக்கும் அதிசய லிங்கம்

அமானுஷ்யம்- 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை மின்னல் தாக்கி துண்டுகளாக வெடிக்கும் லிங்கம்* 
இந்தியாவில் அதிசயம் நடக்கும் பல கோவில்கள் உண்டு. கோவில்களுக்கு பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை கும்பாபிஷேகம் நடைபெறும் என்பதை கேள்விப் பட்டிருக்கிறோம். ஆனால், 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை மின்னல் தாக்கி துண்டுகளாக வெடிக்கும் லிங்கம் பற்றி கேள்விப் பட்டிருக்கிறீர்களா?

இப்படிப்பட்ட அதிசய நிகழ்வு நடக்கும் கோவில் ஹிமாச்சல் பிரதேசத்தில் உள்ள பிஜிலி என்ற மலைமீது மகாதேவ் ஆலயம் ஒன்றில் நடக்கிறது. இது மிகவும் பழமை வாய்ந்த ஆலயமாகும்.  இக்கோவில் கருவறையில் உள்ள லிங்கத்திற்கு 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை மின்னல் தாக்கும். இந்த நவீன யுகத்தில் இது மிகவும் ஆச்சர்யமான விஷயம் தான்.
இக்கோவிலைப் பற்றி ஒரு புராணக் கதையும் சொல்லப் படுகிறது. குலந்த் எனும் அரக்கன் மலைப் பாம்பு வடிவம் எடுத்து பூமியில் உள்ள அனைவரையும் துன்புறுத்தி வந்தான். இவன் மத்தனா என்ற கிராமத்திற்கு வந்து அங்கு பாயும் வ்யாஸ் நதியைத் தடுத்து நிறுத்தி விட்டான். இதனால் பல உயிர்கள் நீரில் மூழ்கி மாண்டன.  இதனால் கோபமடைந்த சிவபெருமான் அரக்கனை வதம் செய்கிறார். உடனே அரக்கன் பிஜிலி மலையாக மாறியதாகவும், அதன் மீது மகாதேவ் கோவில் கட்டப்பட்டது என்றும் தெரிகிறது.

பிறகு சிவபெருமான்  இந்திரனை அழைத்து பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை இக்கோவில் லிங்கத்தை மின்னல் காக்குமாறு கட்டளையிட்டார். மின்னலின் தாக்குதலால் லிங்கம் மட்டும் தான் உடையும் கோவிலுக்கு எந்த சேதமும் ஏற்படாது!


இக்கோவில் புரோகிதர்கள் உடைந்த லிங்கத் துண்டுகளை சேகரித்து அதோடு கடலைமாவு, பருப்பு மற்றும் உப்பு சேர்க்காத வெண்ணை  இவற்றை  பசை மாதிரி ஆக்கி உடைந்த லிங்கத்தை ஒன்று சேர்த்து பூசுகின்றார்கள். இது காய்ந்ததும் பழைய லிங்கமாக மாறிவிடும். மின்னல் தாக்கியதும் கோவிலை கொஞ்ச நாட்கள் திறக்க மாட்டார்கள். 

லிங்கம் நன்றாகக் காய்ந்ததும் பழையபடி அபிஷேகம், ஆராதனை செய்கிறார்கள். இதில் ஆச்சர்யம் என்னவென்றால் லிங்கம் உடைந்த சுவடே தெரியாது. 

ஓம் நமசிவாய 
படித்து பகிர்ந்தது 
இரா இளங்கோவன் 
நெல்லிக்குப்பம். 

Friday, February 20, 2026

மீனாட்சி சொக்கநாதசுவாமி திருக்கோயில் , மன்னார்குடி

அருள்மிகு மீனாட்சி  சொக்கநாதசுவாமி திருக்கோயில், மீனாட்சி அம்மன் கோவில் தெரு, மன்னார்குடி - 614001  
*மூலவர்: அருள்மிகு சொக்கநாத சுவாமி

*அம்பாள்:  அருள்மிகு மீனாட்சி அம்மன்

*ஸ்தல விருட்சம்: பலாமரம். 

*கருவறையில்  அருள்மிகு சொக்கநாத சுவாமி முதன்மைத் தெய்வமாக எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். 

*கட்டடக்கலை மற்றும் வரலாற்று ஆய்வுகளின்படி, இந்த ஆலயம் 18ஆம் நூற்றாண்டை சார்ந்தது என அறியப்படுகிறது. மேலும், இது தமிழக அரசின் வரலாற்றுப் பதிவேடுகளில் இடம்பெற்றுள்ள ஒரு பாரம்பரியத் திருக்கோயிலாகும். ஆன்மீக அமைதியும், பழமையான கட்டிடக்கலையும் ஒருங்கே அமைந்த இத்தலம், தி௫வாரூர் மற்றும் மன்னார்குடி சுற்றுவட்டாரப் பகுதி மக்களின் முக்கிய வழிபாட்டுத் தலமாக விளங்குகிறது. 
*இந்த மீனாட்சி சொக்கநாதர் கோயில் திருமண பிரார்த்தனைத் தலமாக திகழ்கிறது. அன்னை மீனாட்சி தெற்கு நோக்கிய சந்நிதியில் அருள்புரிகிறார்.

*மேலும் இக்கோயில், கார்த்திகை மாத வெள்ளிக்கிழமை திருவிளக்கு பூஜை மற்றும் வைகாசி விசாகப் பெருவிழாக்களுக்குப் பெயர் பெற்றது.  

*திருவாரூர் மாவட்டம்
மன்னார்குடி நகராட்சிக்குட்பட்ட பகுதியில் உள்ள ஜயங்கொண்டநாதர் கோயில், காசிவிஸ்வநாதர் கோயில், நீலகண்டேசுவரர் கோயில், கைலாசநாதர் கோயில், இந்த
"மீனாட்சி சொக்கநாதர் கோயில்", காமாட்சி அம்மன் சமேத ஏகாம்பரேசுவரர் கோயில், காசிவிஸ்வநாதர் கோயில், அண்ணாமலை நாதர் கோயில் ஆகிய எட்டு கோயில்களின் நடராஜ மூர்த்திகளுக்கு ஆருத்ரா அன்று காலை சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடைபெறும்.
இதையடுத்து, வண்ண மின் விளக்குகள், பூ வேலைப்பாடுகளுடன் செய்யப்பட்ட தனித்தனி ரதத்தில் எட்டு நடராஜ மூர்த்திகளும் எழுந்தருளி முக்கிய வீதிகளின் வழியாகச் சென்று ராஜகோபாலசுவாமி கோயில் முன்பு உள்ள கருடக்கம்பம் அருகே ஒரே வரிசையில் காட்சி அளிப்பார்கள்.
பின்னர், இந்த மூர்த்திகளுக்கு ஒரே நேரத்தில் தீபாராதனை,  சிறப்பு பூஜைகள் நடைபெறும். 

*இக்கோயில் நாயக்க மன்னர்கள் காலத்தில் கட்டப்பட்டதாக கூறப்படுகிறது. 

*கிழக்கு நோக்கிய இக்கோயில் மூன்று நிலை ராஜகோபுரத்துடன் திகழ்கிறது. விநாயகர், நால்வர், தன்வந்திரி, தலவிநாயகர், சித்திவிநாயகர், காசிவிஸ்வநாதர், விசாலாட்சி, ஏகாம்பரேஸ்வரர், முருகன், விஷ்ணு, மகாலட்சுமி, சரஸ்வதி, ஐயப்பன், நவகிரகங்கள், பைரவர் மற்றும் சனீஸ்வரர் ஆகியோருக்கு தனித்தனி சந்நிதிகள் உள்ளன.  

 ஓம் நமசிவாய
 படித்து பகிர்ந்தது 
இரா இளங்கோவன் 
நெல்லிக்குப்பம். 

Thursday, February 19, 2026

ஆம்பூர் நாகநாதசுவாமி திருக்கோவில்


நாகதோஷங்கள் நீக்கும் தலம், மணப்பேறும் மகப்பேறும் அருளும் கோவில் என பல்வேறு சிறப்புகள் கொண்ட ஆலயமாகத் திகழ்வது, ஆம்பூர் நாகநாதசுவாமி திருக்கோவில்.
தோஷங்களை நீக்கும் ஆம்பூர் நாகநாதசுவாமி திருக்கோவில்

அடிமுடி தேடிய தோஷம் நீங்க பிரம்மன் வழிபட்ட தலங்களில் ஒன்று, வழக்கத்திற்கு மாறாக அக்னி மூலையில் நவக்கிரக சன்னிதி அமைந்த ஆலயம், நாகதோஷங்கள் நீக்கும் தலம், மணப்பேறும் மகப்பேறும் அருளும் கோவில் என பல்வேறு சிறப்புகள் கொண்ட ஆலயமாகத் திகழ்வது, ஆம்பூர் நாகநாதசுவாமி திருக்கோவில்.

அடிமுடி தேடிய தோஷம் நீங்க, பிரம்ம தேவன் வழிபட்ட ஏழு தலங்களில், ஆறாவது தலமாக விளங்குகின்றது இந்த ஆலயம்.

மன்னன் காலத்தில் ஆம்பூர் வனப்பகுதியில் இறைவன் புற்றினால் மூடி மறைந்த நிலையில் வாழ்ந்து வந்தார்.

இப்பகுதியை ஆண்ட மன்னனின் அரண்மனை மந்தையைச் சேர்ந்த பசு ஒன்று, நாள்தோறும் இந்தப் புற்றின் மீது நின்று கொண்டு, பால் பொழிவதை வழக்கமாக கொண்டிருந்தது.

இதைக் கண்காணித்த இடையன், மன்னனிடம் நடந்த விவரத்தைச் சொன்னான். உடனே மன்னன் அந்தப் புற்றை இடிக்க ஆணையிட்டான்.

மன்னனின் உத்தரவை செயல்படுத்தும் விதமாக, காவலர்கள் புற்றை இடித்தபோது, நாகம் காத்து வந்த சிவலிங்கத்தின் மீது அடிபட்டு ரத்தம் பீறிட்டது. இதனால் அனைவரும் பயத்தில் கலைந்து ஓடினர்.

அன்று இரவு மன்னனின் கனவில் தோன்றிய இறைவன், புற்றில் இருந்தது தானே என்றும், தனக்கு தனி ஆலயம் எழுப்பி, நாகம் காத்த என்னை ‘நாகநாதன்’ என்று அழைக்கும்படியும் கூறி மறைந்தார்.

மன்னனும் அதன்படியே அதே இடத்தில் ஒரு ஆலயம் எழுப்பி, குடமுழுக்கு விழாவை நடத்தி முடித்தான். இந்த சம்பவத்தில் ஏற்பட்ட வடுவை, இன்றும் இறைவன் திருமேனியில் காணலாம்.

ஆம்பூர் நகரின் மையப்பகுதியில், சுமார் 1½ ஏக்கர் நிலப்பரப்பில், சற்று பள்ளமாக 9 படிகள் கீழிறங்கி செல்லும் விதமாக ஆலயம் அமைந்துள்ளது.

இவ்வாலயத்தின் அமைப்பு பிற்காலச் சோழர் கலைப்பாணியில் அமைந்துள்ளது என்பது ஆய்வாளர்களின் கருத்து.

தென்கிழக்கு நோக்கிய மூன்று நிலை ராஜகோபுரம் ஐந்து கலசங்களைத் தாங்கி கம்பீரமாக நிற்கின்றது.

ராஜகோபுரம் முழுவதுமே கலை நயமிக்க சுதைச் சிற்பங்கள் கண்ணுக்கும் கருத்துக்கும் விருந்தாகின்றன. பிட்டுக்கு மண் சுமத்தல், அனுமன் சிவலிங்கத்தை ராமருக்குக் கொண்டு வருதல், அஷ்டதிக்குப் பாலகர்கள், கால சம்ஹாரம், திருஞான சம்பந்தரின் அற்புதங்கள் முதலான புராண வரலாறுகள் சுதைச் சிற்பங்களாக வடிக்கப்பட்டுள்ளன.

ராஜகோபுர நுழைவுவாசலில் வல்லப கணபதியின் புடைப்புச் சிற்பமும், அவரின் வாகனமும் காட்சி தருகின்றன. கோபுர வாசலைக் கடந்ததும், அக்னி மூலையில் உள்ள குருவின் பார்வை நம் மீது படுகிறது.

எதிரே கொடிமரம், பலிபீடம், நந்தி, காட்சி தர, மேல் மண்டப விளம்பில் எம்பெருமானின் திருமணக் கோலமும், தெய்வ வடிவங்களும் சுதைச் சிற்பங்களாக அழகுற காட்சி தருகின்றன. நந்திதேவர் நவ துவாரக் கல் ஜன்னல் வழியே நாகநாதசுவாமியை தரிசிக்கின்றார்.

தெற்குப் பிரகாரத்தில் மார்க்கபந்தீசுவரர் சன்னிதி கிழக்கு முகமாய் அமைந்துள்ளது. அன்னை மரகதாம்பிகை, விநாயகர், நந்திதேவர் காட்சிதர, அக்னி மூலையில் நவக்கிரக சன்னிதி இருக்கிறது.

சப்த மாதர் சன்னிதி வடக்கு நோக்கி உள்ளது. தென்மேற்கில் அறுபத்துமூவர் சன்னிதியும், அடுத்ததாக வள்ளி- தெய்வானை சமேத முருகப்பெருமான் சன்னிதியும் அமைந்துள்ளன. அருகே தலமரமான வில்வம் பசுமையாகக் காட்சி தருகிறது.

நாகநாத சுவாமி 

ஆலயத்தில் நடுநாயகமாக நாகநாதசுவாமி வீற்றிருக் கிறார். துவாரபாலகர்கள் காவல் நிற்க, கருவறைச் சுற்றில் விநாயகர், பச்சைக் கல்லினால் ஆன தட்சிணாமூர்த்தி, லிங்கோத்பவர், பிரம்மா, எழிலான துர்க்கை, சண்டிகேஸ்வரர் உள்ளிட்ட சிலா வடிவங்கள் ஒருங்கே அமையப் பெற்றுள்ளன.

தட்சிணாமூர்த்தியின் பின்புறம் ஆஞ்சநேயர் சிவலிங்கத் திருமேனியை வழி படும் புடைப்புச் சிற்பம் காணப்படுகிறது.

ஈசான்ய பகுதியில் காளத்தீசுவரர், ஞான பிரசன்னாம்பிகை, பலிபீடம், நந்தி ஆகியவை சிவப்பு கருங்கல் மேனியராக அமர்ந்து திருமண வரம் தருவது குறிப்பிடத்தக்கது. 

இறைவன் நாகநாதசுவாமி சதுர வடிவ ஆவுடையாரில் சுயம்பு மூர்த்தியாக எளிய வடிவில், ஒளி வீசும் தோற்றத்துடன் அருள்காட்சி வழங்குகின்றார்.

இவரைக் கண்டறிய புற்றை அகற்றியபோது ஏற்பட்ட வடுவை, இன்றும் இவரின் திருமேனியின் பின்பகுதியில் கண்டு மெய் சிலிர்க்கலாம்.

வடமேற்குப் பிரகாரத்தில் அன்னை சமயவல்லி சன்னிதி அமைந்துள்ளது. இதற்குள் சுக்ர வார அம்மன், பள்ளியறை அமைந்திருக்க, அன்னையை தரிசித்தபடி சிம்ம வாகனம் காணப்படுகிறது.

அன்னை சமயவல்லி எளியவளாக கலைநயம் கொண்டு, கீழ் இரு கரங்களில் அபய வரத முத்திரையோடு, மேல் இரு கரங்களில் பாச அங்குசம் தாங்கி, கிழக்கு முகமாய்க் காட்சி தருகிறாள்.

அன்னை, சுவாமியின் உயரத்தை விட, ஒரு படி மேலாக காட்சியளிப்பது, வழக்கத்திற்கு மாறான அமைப்பாக உள்ளது.

கன்னி மூலையில் நவக்கிரகங்கள் 

பொதுவாக, நவக்கிரக சன்னிதி வடகிழக்குப் பகுதியான ஈசான்ய மூலையில் அமைந்திருப்பது இயல்பான ஒன்று.

ஆனால் இங்கு தென்கிழக்குப் பகுதியான கன்னி மூலையில் நவக்கிரக சன்னிதி அமைந்துள்ளது. இதன் மூலம் ராஜகோபுரத்தை கடந்து ஆலயத்திற்குள் நுழையும் போதே குருவின் பார்வை கிடைப்பது குறிப்பிடத்தக்கது.

அதேபோல, சனி பகவானின் இடதுபுறம் காக வாகனம் இருப்பது தனிச் சிறப்பாகும்.

இவ்வாலயத்தில், இரண்டு பைரவர்கள் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்க அம்சம்.

இவ்வாலயம் நாக தோஷங்கள் அனைத்திற்கும், ஏற்ற தலமாக அமைந்துள்ளது. இது தவிர திருமணப்பேறு, குழந்தைப்பேறு இவற்றிற்கு உகந்த தலமாகவும் இது அமைந்துள்ளது.
திங்கட்கிழமைகளில் உண்ணா நோன்பிருந்து வழிபடுவது குழந்தைப்பேறு தரும். குடும்ப பிரச்சினைகள், நோய்கள் தீரவும், சிறந்த வேண்டுதல் தலமாக இது திகழ்கின்றது.

இந்தக் கோவிலில் பங்குனி கிருத்திகையில் தொடங்கி பங்குனி உத்திரம் வரை பத்து நாட்கள் பிரம்மோற்சவம் வெகு விமரிசையாக நடைபெறுகிறது.

இது தவிர, தமிழ்ப்புத்தாண்டு லட்ச தீபம், சித்திராப் பவுர்ணமி, சித்திரை விஷு, கிருத்திகை, நவராத்திரி, ஐப்பசி அன்னாபிஷேகம், கார்த்திகை தீபம், கார்த்திகை கடைசி சோமவாரம் சங்காபிஷேகம், மார்கழி ஆருத்ரா, தைப் பொங்கல், கிருத்திகை, மகா சிவராத்திரி, பிரதோஷம் உள்ளிட்ட அனைத்து சிவாலய வழிபாடுகளும், கிருஷ்ணன், ஐயப்பனுக்கும் விழாக்கள் விமரிசையாக நடத்தப்படுகின்றன.

இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இந்த ஆலயத்தில் தினமும் காலை 6 மணி முதல் நண்பகல் 12 மணி வரையிலும், மாலை 5.30 மணி முதல் இரவு 9 மணி வரையிலும் ஆலய தரிசனம் செய்யலாம்.

இவ்வூர் பல்லவர், சோழர், விஜயநகர மன்னர், ஒய்சாலர் என பல்வேறு மன்னர்கள் காலங்களிலும், முக்கியத்துவம் பெற்ற ஊராக விளங்கியதை, இவ்வூரில் கிடைத்த நான்கு கல்வெட்டுகள் சான்றாக அமைந்துள்ளன.

கி.பி. 1896-ம் ஆண்டு தொல்லியல் ஆய்வறிக்கையின்படி, இவ்வூரில் மூன்று கல்வெட்டுகள் கண்டறியப்பட்டுள்ளன.

இரண்டு கல்வெட்டுகள் ஆம்பூரின் கங்கா ரெட்டிக்காரத் தெருவில் கண்டறியப்பட்டன. அவை இரண்டுமே கி.பி. 895-ம் ஆண்டைச் சார்ந்தவையாகும்.

இவை நிருபதுங்க வர்ம பல்லவன் கால, வீரக்கல் எனும் நடுகற்களாகும். இன்றைய ஆம்பூர், பழங்காலத்தில் ‘ஆமையூர்’ என அழைக்கப்பட்டதாக அறிய முடிகிறது. இவ்வூரில் ஆண்மை மிக்க வீரர்கள் இருந்ததால் இது ‘ஆண்மை ஊர்’ என்பதே பிற்காலத்தில் ‘ஆமையூராக’ மாறி, தற்போது ஆம்பூர் என்று சொல்வழக்கில் உள்ளது.

மூன்றாவது கல்வெட்டு, நாகநாத சுவாமி திருக்கோவில் சுவற்றில் உள்ள கி.பி. 1193-ம் ஆண்டு மூன்றாம் குலோத்துங்க சோழனின் 15-ம் ஆட்சியாண்டு கல்வெட்டாகும்.

இதில் இக்கோவில் நிர்வாகம் செய்த சித்திரமேழி பெரியநாட்டார் என்ற குழுவினர் இக்கோவிலின் ஸ்ரீபலி எனும் வழிபாடு மேற்கொள்ள அரங்கம் அமைத்த செய்தியைக் குறிப்பிடுகிறது. இதில் இறைவன் திருப்பெயர் நாகேசுவரர் என்றும், ஊரின் பெயர் ஆமையூர் என்றும் குறிப்பிட்டுள்ளது. 

வேலூர் மாவட்டம், ஆம்பூர் நகரின் மையப்பகுதியில் இத் திருக்கோவில் அமைந்துள்ளது.

ஓம் நமசிவாய
 படித்து பகிர்ந்தது 
இரா இளங்கோவன் 
நெல்லிக்குப்பம். 

கரூர் வேலாயுதம்பாளையம் புகழிமலை முருகன்.

*கரூர் வேலாயுதம்பாளையம் புகழிமலை பாலசுப்பிரமண்யர்: இங்கே வேல் செலுத்தினால் வேண்டுதல் நிறைவேறும்* ....


கரூர் பேருந்து நிலையத்திலிருந்து 16 கி.மீ தொலைவில் உள்ள வேலாயுதம்பாளையம் என்னும் ஊரில் இயற்கை எழில் கொஞ்சும் சிறு குன்றின் மீது அமைந்திருக்கும் அருள்மிகு புகழிமலை பாலசுப்ரமணிய சுவாமி திருக்கோயில் சுமார் இரண்டாயிரம் ஆண்டுகள் பழைமை வாய்ந்தது என்கிறார்கள். 

முருகப்பெருமான் அருளும் தலங்கள் ஒவ்வொன்றாகத் தேடித் தேடிச் சென்று திருப்புகழ்பாடி நமக்கெல்லாம் அந்த முருகனின் அருட்கடாட்சம் கிடைக்கும்படி வழி செய்தார் அருணகிரிப் பெருமான். அப்படி அவர் பாடிய தலங்களில் ஒன்று வேலாயுதம்பாளையம்.

கடையேழு வள்ளல்களில் ஒருவரான வல்வில் ஓரி ஆட்சி செய்த பகுதியில் அமைந்திருக்கும் தலம். இங்கு மலைமீது அருளும் பாலசுப்பிரமண்யர் திருக்கோயிலைக் கட்டி, இந்தப் பகுதிக்கு வேலாயுதம்பாளையம் என்று பெயரிட்டவரும் அவர்தான் என்கிறார்கள்.

அருணகிரிநாதர் இத்தலத்தைப் பாடியபோது, 'புகழிமலை மேவு பெருமாளே' எனப் பாடிப் பரவினார். சமணப் படுகைகள் கொண்ட இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க மலைத் தலத்தின் சிறப்புகளைக் காண்போம்.

பராந்தக நெடுஞ்சடையன் என்னும் பாண்டிய மன்னனும், அதியன் என்ற மன்னனும் போர்க் காலங்களில் இம்மலையில் உள்ள குகைகளை, போர்த் தந்திர வேலைகளுக்குப் பயன்படுத்தியதாக திருக்கோயில் கல்வெட்டுகள் குறிப்பிடுகின்றன.

புகழூர் என்று அழைக்கப்படும் இக்குன்று அமைந்துள்ள இடத்தில் சமண முனிவர்கள் அடைக்கலம் புகுந்து வாழ்ந்து வந்ததாகவும், சங்க காலத்தில் இப்படி அடைக்கலம் புகும் இடங்களை புகழூர் என்று அழைக்கும் வழக்கம் இருந்ததாகவும் கூறப்படுகிறது.

மேலும், 8 - ம் நூற்றாண்டில் அரியணையில் அமர்ந்த நெடுஞ்செழியன் எனும் பாண்டிய மன்னனின் மெய்க்கீர்த்தியில் இவ்வூர் `புகழியூர்' என அழைக்கப்பட்டதாகவும் இங்குள்ள கல்வெட்டுக் குறிப்புகள் உரைக்கின்றன.

சுமாா் 400 அடி உயரமுள்ள இந்த மலையின் அடிவாரத்தில் விநாயகா் சந்நிதி உள்ளது. நுழைவாயில் மண்டபத்தில் மலையை நோக்கி மேற்குத் திசையில் மயில்வாகன சந்நிதியும் அமைந்துள்ளது.

மேலும் அந்த மலையைக் காவல் காக்கும் அய்யனாருக்கும் தனிச் சந்நிதி உள்ளது. இதிலிருந்து 48 படிகள் ஏறியவுடன் தென் திசையில் உள்ள சிறிய குகையில் சிவன்-பாா்வதி, ஒளவையாா் சுதை சிற்பங்கள் அமா்ந்த நிலையில் உள்ளன.

இவற்றின் அருகில் கிழக்குத் திசை நோக்கி ஏழு கன்னிமாா்கள் சந்நிதி உள்ளது. கடும் தவத்தில் இருக்கும் சுதையாலான அகத்தியரின் சிலையைத் தரிசிக்கலாம். மேலும் 14 படிகள் ஏறினால் வட திசை பாா்த்த இடும்பன் சந்நிதி உள்ளது.

தொடா்ந்து ஏறினால் கிழக்குத் திசையில் அமைந்துள்ள மூலஸ்தானத்திற்குள் நுழையலாம். முருகப்பெருமான் கருவறையில் பாலசுப்பிரமண்யராக கையில் வேலேந்திக் காட்சி அருள்கிறார். ஒரு கையில் வேலும் மற்றொரு கையில் சேவல் கொடியும் கொண்டு, நின்ற கோலத்தில் வஜ்ஜிரம், சக்தி ஆகியவற்றோடு அபயம், வரதம் ஆகிய நான்கு கரங்களுடனும் பாலசுப்பிரமணியராக கடவுள் காட்சி அருள்கிறாா்.

இந்தக் கோயிலின் மயில் வாகனத்தின் தலை இடப்புறமாகவும், தோகை வலப்புறமாகவும் திகழ்கிறது. இத்தகைய அமைப்பு சூரசம்ஹாரத்துக்கு முற்பட்ட முருகனின் திருக்கோலத்தைக் குறிக்குமாம். இதிலிருந்து இந்தக் கோயிலின் புராதனத்தை அறியமுடிகிறது.

இங்கே முருகனுக்கு நேர்த்திக்கடனாக வேல் செலுத்தி வழிபடும் வழக்கம் பிரசித்தம். செய்த பாவங்கள் யாவும் தீர்ந்து நல்வாழ்வு அமையவேண்டி, பக்தர்கள் தங்கள் கையில் வேலோடு இந்தக் கோயிலுக்கு வருகிறார்கள். தொடர்ந்து 12 வாரம் செவ்வாய்க்கிழமைகளில் செவ்வரளிப் பூ மற்றும் செவ்வாழைப் பழம் படைத்து வழிபட்டால், திருமணத் தடை விலகி, இல்லற வாழ்க்கை விரைவில் கைகூடும்.

சஷ்டி விரதமிருந்து முருகப் பெருமானைத் தரிசித்தால், குழந்தை பாக்கியம் கிட்டும். ஐப்பசி சஷ்டி தினத்தில் தினை மாவு வைத்து வழிபடுவது கூடுதல் விசேஷம்.

மழை பெய்ய வேண்டியும், ஊர் ஒற்றுமைக் காகவும் இக்கோயிலின் 315 படிகளுக்கும் நெய் தீபம் அல்லது சூடமேற்றி படி பூஜை செய்வது வழக்கம்.

தைப்பூச தேர்த் திருவிழாவில் ஆயிரக்கணக்காண பக்தர்கள் இளநீர்க் காவடி எடுத்து வந்து, முருகப்பெருமானைத் தரிசித்துச் செல்கின்றனர். சூரசம்ஹாரமும் இங்கு வெகு விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது.

கிருத்திகை தினத்தில் மூன்று வேளையும் சிறப்பு அலங்காரம் நடைபெறுகிறது. அன்றைய தினம் இக்கோயிலில் அன்னதானம் செய்து வழிபட்டால், குடும்பம் செழித்தோங்கும். வாய்ப்பிருக்கும் அன்பர்கள் ஒருமுறை வேலாயுதம்பாளையம் சென்று பாலசுப்பிரமண்யரை தரிசனம் செய்து வாருங்கள். வாழ்க்கையில் வளமும் நலமும் கூடும்.

ஓம் நமசிவாய
 படித்து பகிர்ந்தது 
இரா இளங்கோவன்
 நெல்லிக்குப்பம். 

Followers

மார்பில் மரு… காலில் தழும்பு… விரல்களில் நகங்கள்…உயிரோட்டமாக அதிசய நடராஜர்

மார்பில் மரு… காலில் தழும்பு… விரல்களில் நகங்கள்… உயிரோட்டமாக நின்று அருளும் அதிசய நடராஜர் – எங்கே? தமிழகத்தில் எண்ணற்ற சிவாலயங்...