Saturday, April 25, 2026

சொர்ணபுரீசுவரர் திருக்கோயில்,ஆண்டாங்கோவில்,

அருள்மிகு சொர்ணபுரீசுவரர் திருக்கோயில்,
ஆண்டாங்கோவில்,
ஆண்டாங்கோவில் அஞ்சல்,
வலங்கைமான் S.O.
திருவாரூர் மாவட்டம் -  612 804. ) 
*இறைவன்: சொர்ணபுரீஸ்வரர் (பொன்வைத்தநாதர்).

*இறைவி: சொர்ணாம்பிகை (பூர்ணாம்பிகை). 

*தல மரம் : வன்னி.

*தீர்த்தம்   : திரிசூல கங்கை.

 *பாடல்பெற்ற தலம். இத்தலத்து இறைவனை திருநாவுக்கரசு சுவாமிகள் பதிகம் பாடியுள்ளார்.        

*இந்த தலம் தேவார காலத்தில் "கடுவாய்க்கரைத் தென்புத்தூர்" என்று திருநாவுக்கரசரால் போற்றப்பட்டுள்ளது.
பெயர்க்காரணம்: 'கடுவாய்' (குடமுருட்டி ஆறு) கரையில் அமைந்துள்ள 'புத்தூர்' என்பதால் கடுவாய்க்கரைப்புத்தூர் என்று பெயர் பெற்றது.            

*இன்று மக்கள் வழக்கில் ஆண்டார் கோயில் /ஆண்டான்கோயில் என்று உள்ளது.
  
*முனிவர் காசிபர் வழிபட்ட தலம்.                  

*மூலவர் சொர்ணபுரீஸ்வரர்    சுயம்புலிங்கமாக கிழக்கு நோக்கி எழுந்தருளியுள்ளார்.  
ஆண்டு தோறும் சித்திரை 11,12,23 தேதிகளில் சூரிய ஒளி மூலஸ்தானத்தில் விழுந்து சூரிய பூஜை நடக்கிறது.   

*அம்பாள் சொர்ணாம்பிகை தெற்கு நோக்கி தரிசனம் தருகிறாள்.      

*இத்தலம் ருது பரிகாரத்தலமாக விளங்குகிறாது. 
ருது தோஷ பரிகாரம் செய்ய வரும் சரியான வயதில் வயதுக்கு வராத பெண் குழந்தைகள் இந்த திருத்தலத்தின் எதிரில் உள்ள திரிசூல கங்கை என்ற திருக்குளத்தில் நீராட வேண்டும். பின்னர் 7 எலுமிச்சைப் பழம், 7 மஞ்சள் கிழங்கு கொண்டு வந்து ஆலயத்தில் கொடுத்து இறைவனுக்கும், இறைவிக்கும் சமர்ப்பிக்க வேண்டும்.

சம்பந்தப்பட்ட பெண்ணின் மடியில் ஒரு மஞ்சள் கிழங்கும், ஒரு எலுமிச்சைப் பழமும் வைக்கப்படும். பின்னர் இறைவனுக்கும், இறைவிக்கும் அர்ச்சனை செய்யப்படும். பின்னர் அந்தப் பெண், 7 நெய் தீபம் ஏற்றி வழிபாடு செய்ய வேண்டும். இவ்வாறு தொடர்ந்து 7 திங்கட்கிழமைகள் செய்து வந்தால் ருது தோஷம் விலகும் என்பது ஐதீகம். 
மாத விலக்கு பிரச்சினை உள்ள பெண்களும் இந்த ஆலயம் வந்து வழிபாடு செய்யலாம். 
இத்தகைய சக்தியை இந்த ஆலயத்திற்கு அளிப்பது, அம்பிகையின் கருவறையினுள் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ள, சக்தி வாய்ந்த சக்கரங்கள் என்று கூறப்படுகிறது. 

*குழந்தை பாக்கியம் வேண்டுபவர்கள் இத்தல இறைவனை வழிபட்டால் சிறந்த பலன் கிடைக்கும் எனபது ஐதீகம்.      

*விசாக நட்சத்திரத்தில் பிறந்து ஜாதகத்தில் தோஷம் இருப்போர் தோஷ நிவர்த்திக்கு வழிபட வேண்டிய திருத்தலமாகக் குறிப்பிடப்படுகின்றது.

*இத்தல வன்னி மரம் முக்திப்பேற்றை வழங்கும் ஒன்றாக போற்றப்படுகிறது. 

*கோயிலின் உட்பிரகாரத்தில் மூலவர் கருவறை மற்றும் அம்மன் சந்நிதி இரண்டையும் சேர்த்து 21 முறை வலம் வந்தால் கேட்ட வரம் கிடைக்கும் என்ற நம்பிக்கை பக்தர்களிடம் உள்ளது.

*தல வரலாறு: முனிகுமாரரான மயந்தன் என்பவர் தாம் செய்த சிறு தவறுக்காக தந்தை அளித்த சாபத்தின் காரணமாக ’கண்டதேவர்’ என்ற பெயரில் பூவுலகில் மறுபிறவி எடுத்தார். முசுகுந்த சக்கரவர்த்தியின் அமைச்சராக இருந்த வந்த கண்டதேவருக்கு சிவபெருமானுக்கு திருக்கோயில் எடுக்கும் ஆவல் எழ, அதற்கு பெரும் பொருள் தேவைப்படும் என்பதையும் உணர்ந்தார். பெரும்பொருள் செலவிட மன்னர் சம்மதிக்க மாட்டார் எனினும் அவரும் சிவபக்தராதலால் திருக்கோயிலைக் கட்டி முடித்த பின்னர் மறுக்கவோ தண்டிக்கவோ மாட்டார் என்ற நம்பிக்கையில் அமைச்சர் பதவியை பயன்படுத்தி அழகிய திருக்கோயிலை சிவபெருமானுக்கு எழுப்பினார். 

கண்டதேவர் தகவலைத் தெரிவித்தபோது, நேர்மையான அமைச்சர் இவ்வாறு தாம் அறியாமல் பதவியை பயன்படுத்தி கோயில் எழுப்பியது கண்டு வெகுண்டார் மன்னர் முசுகுந்த சக்கரவர்த்தி. சட்டத்தை மட்டுமே நினைந்த மன்னர் அமைச்சரை சிரச்சேதம் செய்ய ஆணையிட்டார். 
கலங்காமல், ஐந்தெழுத்து மந்திரம் ஓதி பலிக்கட்டையில் தலை வைத்த அமைச்சரைக் கொல்ல ஓங்கிய வாள் மாலையாக மாறி அமைச்சர் கழுத்தில் விழுந்தது. 

பல கோடி சூரியப்பிரகாசத்தில் இடபவாகனத்தில் தரிசனம் தந்தார் சிவபெருமான். கண்டதேவர் சிவபெருமானுடன் ஐக்கியமானார். தகவல் அறிந்த முசுகுந்த சக்கரவர்த்தி, தாம் செய்த பிழையினைப் பொறுக்க வேண்டி இறைவனிடம் அழுது முறையிட, அசரீரி வாக்கில் இறைவனுக்குத் திருக்கோயில் எழுப்புதல், சீரமைத்தல், தீபம் ஏற்றுதல் ஆகியவற்றின் புண்ணிய பலன்கள் உபதேசிக்கப்பெற்றார்.      

*கண்டதேவருக்கு காட்சியளிக்க இறைவன், அம்பிகையுடன் தோன்றிய போது நகரமே தங்கமயமாக ஒளிர்ந்தது. அதனால் சொர்ணபுரி என்ற பெயரை ஊரும், இறைவன் சொர்ணபுரீஸ்வரர் என்றும் அம்பிகை சொர்ணாம்பிகை என்றும் வழிபடப்படுகின்றனர்.                

*அமைவிடம்: திருவாரூர் மாவட்டம், குடவாசல் அருகே,  வலங்கைமானில் இருந்து கிழக்கே சுமார் 3 கி.மீ. தொலைவில் இத்திருத்தலம் இருக்கிறது. கும்பகோணத்தில் இருந்து சுமார் 12 கி.மீ. தொலைவு. கும்பகோணத்தில் இருந்து நரசிங்கமங்கலம் செல்லும் நகரப் பேருந்து இக்கோயில் வழியாகச் செல்கிறது.                  
ஓம் நமசிவாய
 படித்து பகிர்ந்தது 
இரா இளங்கோவன் 
நெல்லிக்குப்பம். 

Friday, April 24, 2026

வடமூலேஸ்வரர் திருக்கோயில். அரியலூர்.

அரியலூர் நகரம் வடமூலேஸ்வரர் திருக்கோயில். 

புராணத்தின் படி, அரியலூர்,  அரி  இல்  ஊர் என்று அழைக்கப்பட்டது, அதாவது மகாவிஷ்ணு குடிஇருக்கும் ஊர் என கூறப்படுகிறது. ஊரின் மையத்தில் இருக்கும் அரியலூர் கோதண்டராமசாமி கோயிலில் ஒன்பது தூண்களில் ஆளுயரத்தில் செதுக்கப்பட்ட  ஒன்பது அவதாரங்கள் காணப்படுகின்றன. 

அரியலூர் பகுதி ஏரிகளால் ஆனது. ஊர்தோறும் கிராமம் தோறும் ஏரிகள் உண்டு. ஏரிகளை அசுத்தப் படுத்தினால் கடும் தண்டனை வழங்கப் பட்டது. ஏரிகளைச் சுற்றி மரம் நட்டு நிழலுக்கும், பறவைகள் வருகைக்கும் ஏற்பாடு செய்திருந்தார்கள் முன்னோர்கள். இதனால் ஏரியின் ஊர் என அழைக்கப்பட்டு அரியலூர் ஆனது என்பர். 

இருப்பதிலேயே சிறிய மாவட்டம் இந்த அரியலூர் தான் கிழக்கு மேற்கில் 50km வடக்கு தெற்கில் 50km தான் பரப்பு.  
குறிஞ்சி எனப்படும் பெரிய ஏரியின் கிழக்கு பகுதியில் அமைந்துள்ளது அரியலூர் நகரம். ஊரின் மையத்தில் பெருமாள் கோயில் அதன் அடுத்தடுத்த தெருக்களில் அமைந்துள்ளது கைலாசநாதர் மற்றும் வடமூலேஸ்வரர் கோயில்கள். சிவன் கோவில் தெருவில் ஸ்ரீ அருந்தவநாயகி உடனுறை ஆலந்துறையார் கோவில் உள்ளது. 

ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் அரியலூர் மிகப்பெரிய சமஸ்தானமாக இருந்து வந்தது.சோழர்காலத்திற்கு பிறகு அரியலூர் ஜமீன்தார்கள்... சுமார் 600ஆண்டுகளுக்கு முன்பு ஸ்ரீவிஜயஒப்பில்லாத மழவராயர் ஆட்சிக்காலத்தில் ஸ்ரீஆலந்துறையார் கோவில்  திருப்பணிகள் செய்யப்பட்டு 1986 ௧௯௮௬ ஆம் ஆண்டு கும்பாபிஷேகம் நடைபெற்றதை கோவில் கல்வெட்டுக்கள் மூலம் அறியமுடிந்தது. அதன் பின்னர் சென்ற ௨௦௨௩ 2023ம் ஆண்டில் குடமுழுக்கு கண்டுள்ளது. இக்கோயிலை ஒட்டி தென்புறத்தில் ஒப்பிலாதம்மன் கோயில் உள்ளது. 

கிழக்கு நோக்கிய திருக்கோயில்  முகப்பில் மூன்று நிலை ராஜகோபுரம் உள்ளது. அதனை கடந்தால் உயர்ந்து நிற்கிறது தங்கத்தை ஒத்த பிரகாசத்துடன் நிற்கிறது கொடிமரம் பலி பீடம் அடுத்து நான்கு கால் கருங்கல் மண்டபத்தில் நந்தியெம்பெருமான் என வரிசையாக உள்ளது. அடுத்து அகன்று உயர்ந்து நிற்கிறது 32 கருங்கல் தூண்களுடன்  மகாமண்டபம்; அதன் மேல் பஞ்சமூர்த்திகளும் அழகு மிளிர அமைக்கப்பட்டு உள்ளனர். இடதுபுறத்தில் படிக்கட்டுகளுடன் கூடிய அக்னி திக்கு குளம்.  அதனை ஒட்டி ஒரு நால்வர் மண்டபம் உள்ளது, இன்னும் நால்வர்கள் பிரதிஷ்டை செய்யப்படவில்லை. மகாமண்டபத்தில் இடதுபுறம் சிறிய கருங்கல் மண்டபத்தில் விநாயகர் உள்ளார் வாயிலின் இருபுறமும் கருங்கல் துவாரபாலகர்கள். 
பெரிய பெயர்பலகை ஒன்று இறைவன் பெயர் வடமூலேஸ்வரர் எனும் ஆலந்துறையார் என எழுதப்பட்டுள்ளது இந்த வாயில் முகப்பில்  பித்தளை விளக்கு சட்டம் அணி செய்கிறது ஒருபுறம் வராகி அம்மனும் ஒரு புறம் லட்சுமியும் மாடங்களில் உள்ளனர்.

அதனை கடந்து அர்த்தமண்டபம் சென்றால் இருபதுக்கும் மேற்ப்பட்ட தூண்கள் உயர்த்தி பிடித்த பெரிய மண்டபமாக உள்ளது அதில் வலதுபுறம் நவகிரகங்கள் உள்ளன. இறைவனது சன்னதிக்கு பெரிய கதவுகள் கொண்டுள்ளன. அதனை கடந்து இடைநாழி பகுதி. அதனை கடந்து சென்றால் இறைவன் ஆலந்துறையார் பெரிய லிங்க மூர்த்தியாக உள்ளார். 
இறைவன் கருவறை சுற்றில் ஒரு பிரகாரம் அமைக்கப்பட்டுள்ளது. அதில் இடதுபுறமாக சென்றால் வரிசையாக அறுபத்துமூவர்களும் உள்ளனர். விநாயகர் வீரபத்திருடன் உள்ளது இந்த தொகுப்பு.  பின்புறம் நீண்ட வரிசையில் விநாயகர் முருகன் மகாலட்சுமி உள்ளனர். சண்டேசர் சன்னதி உள்ளது. இதன் வடபுறம் ஒரு லிங்கமூர்த்தியும் அம்பிகையும் எதிரில் அழகிய நந்திகளும் கொண்டு இருக்கின்றனர். 

மகாமண்டபத்தில் தெற்கு நோக்கிய சன்னதியில் அம்பிகை தீர்க்க தபஸ்வினி எனும் அருந்தவநாயகி உள்ளார். வடகிழக்கில் பைரவ பெருமான் ஒரு உயர்ந்த மேடை உள்ளார்.  கோபுரத்தின் வலது புறம் நடராஜ தரிசன மண்டபம் உள்ளது. 

திருக்கோயில் ஊழியர்கள் கோயிலை மிக நன்கு பராமரிக்கின்றனர். திருக்கோயில் அர்ச்சகரும் இறை மூர்த்தங்களை நன்கு அலங்காரம் செய்து வைத்து வருவோரை பரவசம் அடைய செய்கிறார். 

ஓம் நமசிவாய 
படித்து பகிர்ந்தது 
இரா இளங்கோவன்
நெல்லிக்குப்பம். 

Wednesday, April 22, 2026

திருமணப்பேற்றை அருளும் திருவேதிக்குடி!

திருமணப்பேற்றை அருளும் திருவேதிக்குடி!
தேவாரப் பாடல்களுள் திருமணமாகாத கன்னியருக்கும் காளையருக்கும் விரைவில் திருமணபாக்கியம் நல்கும் திருத்தலமாகக் கூறப்படுவது காவிரியின் தென்கரைத் தலமான "திருவேதிக்குடி' மட்டுமே! 

இத்திருக்கோயில் கண்டியூருக்குத் தென்கிழக்கில் இரண்டு கி.மீ. தொலைவில் திருவையாறு திருத்தலத்திற்கு அருகிலேயே உள்ளது.

இது சப்த ஸ்தான தலங்களில் ஒன்றாகும். இறைவனின் திருநாமம் வேதபுரீஸ்வரர். இறைவி மங்கையர்க்கரசியம்மை. தலவிருட்சம் வில்வமரம். இங்குள்ள தீர்த்தம் வேத தீர்த்தம் அல்லது சுந்தர தீர்த்தம் எனப்படுகிறது.

இத்தலத்தில் வீற்றிருந்து அருள்பாலிக்கும் இறைவன் மீது திருஞானசம்பந்தர் பெருமான் ஒரு பதிகமும் திருநாவுக்கரசர் பெருமான் ஒரு பதிகமும் பாடிச் சிறப்பித்துள்ளனர்.

இத்தல இறைவன், வாழை மடுவில் தோன்றியதால் "வாழை மடு நாதர்' என்ற சிறப்புப் பெயரும் இவருக்கு உண்டு. வேதம் ஒலித்த வண்ணம் இருக்கும் திருத்தலம் இதுவாகும். அதனால் வேதம் கேட்பதில் விருப்பமுடன் பிள்ளையார் இங்கு ஒருபுறம் சாய்ந்த கோலத்தில் காணப்படுவதால் இவரை, "வேதப்பிள்ளையார்' என்றே அழைக்கிறார்கள்.

இக்கோயிலில் வீற்றிருக்கும் அர்த்தநாரீஸ்வரர் வலப்புறத்தில் உமையம்மையும் இடப்புறத்தில் சிவனுமாக அற்புதக்கோலம் கொண்டுள்ளார்.

"திருமணமாகாத கன்னியர்களும் காளையர்களும் இங்குள்ள வேதிக்குடி இறைவன் அர்த்தநாரீஸ்வரனை தரிசித்து முறைப்படி வழிபாடு மேற்கொண்டால் விரைவில் திருமணம் கைகூடி வரும்' என்கிறார் திருஞானசம்பந்தர். இதையே, திருநாவுக்கரசர் பெருமானும் தமது தோவாரப்பதிகத்தில் "உமையொரு பாகனான அர்த்தநாரீஸ்வரரை வணங்கி வழிபட்டால் நம் விருப்பங்கள் பூர்த்தியாகும்' என்று கூறுகிறார்.

இங்கு வந்து அம்மையப்பனை தரிசனம் செய்யும் அன்பர்கள் வளமான வாழ்க்கையும் நற்பலன்களும் பெறலாம்.. 
ஓம் நமசிவாய
 படித்து பகிர்ந்தது
 இரா இளங்கோவன் 
நெல்லிக்குப்பம். 

Sunday, April 19, 2026

திருவென்பபேறுடைய நாயனார் அரியலூர் தூத்தூர் சிவன் கோயில்

அரியலூர் மாவட்டம் , அரியலூர் வட்டம்,  தூத்தூர் சிவன் கோயில் 
திருமானூரின் கிழக்கில் கொள்ளிடத்தினை ஒட்டி செல்லும் சாலையில் 20கிமி தூரம் சென்றால் தூத்தூர் அடையலாம். பழமையான சிவாலயம், பெருமாள் கோயில், கணபதி கோயில் செல்லியம்மன் கோயில் நாச்சியாரம்மன் கோயில் ஆகியவற்றினை உள்ளடக்கிய பெரிய கிராமம். ஊரின் தெற்கில் பிரம்மாண்ட கொள்ளிடம், ஊரின் கிழக்கில் மருதையாறு அதில் கலக்கிறது. 
இன்றைக்கு 800 ஆண்டுகட்கு மேல் பழமையான சிவாலயம் ஒன்று காலத்தை வென்று நிற்கிறது இவ்வூரில்,  பல ஆண்டு காலமாக பழுதடைந்த நிலையில் இருந்த திருக்கோயில் சில மாதங்களின் முன்னர் குடமுழுக்கு கண்டுள்ளது. 
அக்காலத்தில் இவ்வூர் தூற்றூர் என வழங்கப்பட்டு வந்தது, திருக்கோயில் திருவென்பபேறுடைய நாயனார் கோயில் என வழங்கப்பட்டு வந்துள்ளது. இக்கோயில் மூன்றாம் குலோத்துங்கன் காலத்தில் 1180ம் ஆண்டில் கட்டப்பட்டதாக தெரிகிறது. 
இக்கோயிலில் பல கல்வெட்டுக்கள் காணப்படுகின்றன. 
1.மூன்றாம்‌ இராஜராஜன்‌ காலம், கி.பி. 1237. 

ஸ்ரீ பராந்தகச்‌ சதுர்வேதிமங்கலத்தின்‌ மேற்குப்‌ பிடாகையான 
தூற்றூரில்‌ உள்ள இருவென்பபேறுடையார்‌ கோயில்‌ தேவகன்மிகள்‌ 
இக்கோயிலில்‌ இருக்கும்‌ சைவத்‌ துறவி (ஆண்டார்‌) கூடாகுடையார்‌  அம்மையப்பரான ஈசான தேவர்‌ முதலியாருக்கு மடமாகக்‌ கொடுத்த பரிவத்தனை நிலம்‌ பற்றி குறிப்பிடுகிறது. 
இவர்‌ அமைத்த மடத்தின் பெயர்‌ திருஞானசம்பந்தன்‌ திருமடம்‌ என அழைக்கப்பட்டது. 

2.கோயில்‌ மகாமண்டப தெற்குச்‌ சுவர்‌ குமுதப்படை. 
மூன்றாம்‌ இராஜேந்திரன்‌ கி.பி. 1254. 

பராந்தகச்‌ சதுர்வேதிமங்கலத்து கிராம காரியம்‌ செய்கின்ற கூட்டப்‌ பெருமக்கள்‌ மற்றும்‌ இவ்வூர்‌ குடிமைக்‌ கணக்கு எழுதுகின்ற நாலாயிரப்பிரியன்‌ ஆகியோர்‌ வழங்கிய வரிச்சலுகை பற்றி இக்கல்வெட்டு குறிப்பிடுகிறது. 
இச்சதுர்வேதிமங்கலத்தின்‌ பிடாகையான தூத்தூர்‌ கட்டளை, அழகிய மணவாளநல்லூர்‌ கட்டளை ஆகிய ஊர்களில்‌ ஆண்டார்‌ ஈசான தேவர்‌ திருஞானசம்பந்தர்‌ என்பவர்‌ தூற்றூரில்‌ இருந்த மடத்திற்கு நிலங்கள்‌ வாங்கி மடப்புறமாக கொடுத்துள்ளார்‌. அந்நிலத்திற்கு 
சபா விநியோகமாக வசூலிக்கப்படும்‌ வரியை விதிப்பதில்லை என பராந்தக சதுர்வேதிமங்கலத்து சபையார்‌ முடிவு செய்தனர்‌. 

3.கோயில்‌ மகாமண்டப தெற்குச்‌ சுவர்‌ ஜகதிப்பீடம்‌. 
மூன்றாம்‌ இராஜேந்திரன்‌, 1279. 

குலோத்துங்க சோழ வளநாட்டு திருநறையூர்‌ நாட்டு அகரம்‌ 
ஸ்ரீஇராஜராஜ சதுர்வேதிமங்கலத்து சபையாரும்‌, மகா சபையாரும்‌ தூற்றூர்‌ திருவென்பபேறுடையார்‌ திருக்கோயிலில்‌ உள்ள எதிரிலி சோழன்‌ மண்டபத்தில்‌ கூட்டம்‌ கூடி கிராமத்துக்கு நன்றாக வேண்டுமென்று அச்சதுர்வேதிமங்கலத்துப்‌ பிடாகை கருப்பூரில்‌ 
நிலம்‌ தானமாக வழங்கியுள்ளனர்‌. திருவென்பபேறுடையார்‌ 
கோயிலில்‌ திருப்பள்ளி எழுச்சியின்‌ போது ஐந்நூற்றுவன்‌ சந்தி என்ற பெயரில்‌ பூஜை நடத்தி இறைவனுக்கு திருவமுது படைக்க அந்நிலம்‌ கொடுக்கப்பட்டது என அறிகிறோம்‌. 
4.கோயில்‌ கிழக்கு வாயிலில்‌ நடப்பட்டுள்ள கற்பலகை, 
ஸ்ரீகருஷ்ணதேவராயர்‌ காலத்தியது, கிபி 1514, 

கிருஷ்ணதேவராயரின்‌ பிரதிநிதியான வீரநரசிங்கராய நாயக்கர்‌ திக்கு விஜயம்‌ செய்து வெற்றி பெற லேண்டும்‌ என வேண்டிக்‌ கொண்டு வீரநரசிங்கராய நாயக்க முதலியாரும்‌ ஸ்ரீ பராந்தக நாட்டு பிரதிநிதிகள்‌ தூற்றூர்‌ திருவென்பபேறுடைய நாயனார்‌ கோயிலில்‌ பூஜை திருப்பணிக்காக கொற்றிலக்கை கூலவரி ஆகிய வரிகளின்‌ வருமானத்தைச்‌ சர்வமானியமாக வழங்கியுள்ளனர்‌. 
கிழக்கு நோக்கிய திருக்கோயில் கிழக்கில் சிறிய வாயில் மட்டுமே உள்ளது. தற்போது தெற்கு பக்கமே பிரதான வாயில் உள்ளது. கருவறை இடைநாழி அர்த்தமண்டபம் முகப்பு மண்டபம் என உள்ளது. அக்காலத்தில் இரண்டு பிரகாரங்களுடன் திருக்கோயில் விளங்கி உள்ளது. பிரகார மூர்த்திகள் மற்றும் அதில் இருந்த பிற சிலைகள் முகப்பு மண்டபத்தில் உள்ளன. 
 தற்போது இறைவன் வராகமுக்தீஸ்வரர் எனவும் இறைவி வாலாம்பிகை எனவும் அழைக்கப்பட்டு வருகின்றனர். 
இறைவன் பெரிய லிங்கமூர்த்தியாக உள்ளார். அம்பிகை மிகப்பெரிய சிலாரூபத்தில் பார்க்க பிரமிப்பை ஊட்டும் வண்ணம் ஆளுயர அம்பிகையாக உள்ளார். இவர் தெற்கு நோக்கிய தனி திருக்கோயில் ஒன்றில் உள்ளார். இந்த சன்னதி முகப்பு மண்டபத்தில் சேர்க்கிறது.  திருக்கோயில் முற்றிலும் கருங்கல் பணியாக உள்ளது சிறப்பு. கருவறை வாயிலில் அழகிய பெரிய துவாரபாலகர்கள் இருவரும் இருபுறமும் விநாயகர் மற்றும் தண்டாயுதபாணி முருகனும் உள்ளனர். முன்பு பிரகாரத்தில் இருந்த இரு லிங்கமூர்த்திகள் இதே இடத்தில் உள்ளனர். முகப்பு மண்டபம் அழகிய சிற்பங்கள் கொண்ட தூண்களுடன் உள்ளது. அதில் மிருகங்கள் பட்சிகள் முனிவர்கள் என பலர் இறைவனை வணங்கும் காட்சிகள் சிற்பமாக ஆக்கப்பட்டுள்ளன. 
கருவறை கோட்டத்தில் விநாயகர் தக்ஷணமூர்த்தி லிங்கோத்பவர் பிரம்மன் துர்க்கை உள்ளனர். அர்த்தமண்டபத்தில் ஒரு மாடத்தில் இன்னொரு துர்க்கையும் உள்ளார். இதே போல் இரு சண்டேசர்கள் சன்னதியில் உள்ளனர். ஒன்று சண்டேஸ்வரியாக இருக்கலாம். 
 பிரகார சிற்றாலயங்களில் விநாயகர் மற்றும் முருகன் லட்சுமி உள்ளனர். இதில் முருகன் பார்க்க கம்பீரமான காலத்தில் வள்ளி தெய்வானையுடன் உள்ளது அழகு. வடக்கில் நவக்கிரக மண்டபம் புதியதாக கட்டப்பட்டுள்ளது. வடகிழக்கில் பைரவர் சூரியன் சனி உள்ளனர். சில பழுதுற்ற சிலைகளும் ஒரு மூலையில் வைக்கப்பட்டு உள்ளன.   
வராக அவதாரம் எடுத்த மகாவிஷ்ணு வழிபட்டு முக்தி பெற்றதால் இங்கு இறைவனுக்கு வராக முக்தி ஈஸ்வரர் என பெயராகியதாம். 

வாலாம்பிகை (வாலை) ; சித்தர்களால் வழிபடப்படும் மூல சக்தியும், ஞானத்தின் வடிவுமான தேவி ஆவாள். இவர், 64 கலைகளையும் அருளும் 'பாலா திரிபுரசுந்தரி' என்றும், சித்தர்களின் தாயென்றும் போற்றப்படுகிறார். வாலாம்பிகை என்ற வாலை, நம்முள் இருக்கும் ஞானத்தைத் தூண்டி, யோக நிலையை அடைய அருளும் பேராற்றல் மிக்க தேவி. 

இன்பப்பேறு என்பது "serendipity" என்ற ஆங்கில வார்த்தையின் தமிழாக்கம் ஆகும். இது எதிர்பாராமல் கிடைக்கும், அதிர்ஷ்டத்தை குறிக்கிறது. 
தேடாத ஒன்று நம்மை தேடி வரும்போது ஏற்படும் மகிழ்ச்சி தான் இந்த இன்பபேறு. தரிசனம் செய்ய வரும் ஒவ்வொருவருக்கும் கிடைக்காத ஒன்றை கிடைக்க செய்து வாழ்வில் மகிழ்ச்சியை அளிக்கும் இறைவன் தான் இந்த தூத்தூர் இறைவன்  திரு இன்ப பேறு உடையார். என அக்காலத்தில் அழைக்கப்பட்டார். 

ஓம் நமசிவாய
 படித்து பகிர்ந்தது
 இரா இளங்கோவன் 
நெல்லிக்குப்பம். 

Tuesday, April 14, 2026

கபிஸ்தலம் கஜேந்திர வரதப் பெருமாள்.

 கபிஸ்தலம் கஜேந்திர வரதப் பெருமாள்.
108 வைணவ திவ்ய தேசத் தலங்களுள், தஞ்சை மாவட்டம், கபிஸ்தலம் கஜேந்திர வரதப் பெருமாள் கோயில், 9-வது திவ்ய தேசமாகப் போற்றப்படுகிறது. 108 திவ்ய தேசங்களில் இத்தலத்தில் மட்டும் திருமால் முதலை, யானை ஆகிய இரண்டு விலங்கினங்களுக்கு அருட்காட்சி அளித்துள்ளார்.

பஞ்ச கிருஷ்ண திருத்தலங்களில் (திருக்கண்ணமங்கை பக்தவச்சல பெருமாள் கோயில், திருக்கண்ணபுரம் நீலமேகப் பெருமாள், கபிஸ்தலம் கஜேந்திர வரதப் பெருமாள், திருக்கோவிலூர் உலகளந்த பெருமாள் கோயில், திருக்கண்ணங்குடி லோகநாதப் பெருமாள்) இத்தலமும் ஒன்று. கும்பகோணம் - திருவையாறு சாலையில் கும்பகோணத்தில் இருந்து 15 கிமீ தொலைவில் அமைந்துள்ள இத்தலம் திருமழிசையாழ்வாரால் மங்களாசாசனம் செய்யப்பட்டுள்ளது.



திருமழிசையாழ்வார் பாசுரம்

கூற்றமும் சாரா கொடுவினையும் சாரா தீ
மாற்றமும் சாரா வைகயறிந்தேன்-
ஆற்றங்கரை கிடக்கும் கண்ணன் கடல் கிடக்கும்
மாயன் உரைக் கிடக்கும் உள்ளத் தெனக்கு

மூலவர்: கஜேந்திர வரதர் (ஆதிமூலப் பெருமாள், கண்ணன்)
உற்சவர்: செண்பகவல்லி
தாயார்: ரமாமணி வல்லி (பொற்றாமரையாள்)
தல விருட்சம்: மகிழம்பூ
தீர்த்தம்: கஜேந்திர புஷ்கரிணி, கபில தீர்த்தம்
ஆகமம்/பூஜை: வைகானஸ ஆகமம்
விமானம்: ககனாக்ருத விமானம்

தல வரலாறு

இந்திராஜும்னன் என்ற அரசர், சிறந்த திருமால் பக்தராக விளங்கினார். பல மணி நேரம் திருமாலுக்கு பூஜை செய்தவண்ணம் இருப்பார். அப்படி ஒருநாள் பூஜை செய்த சமயத்தில் அவரை சந்திக்க துர்வாச முனிவர் வந்திருந்தார். முனிவர் வந்திருப்பதை உணராமல், அரசர் வழிபாட்டில் ஈடுபட்டு வந்தார். வெகு நேரமாகியும் தனது பக்திக் குடிலைவிட்டு அரசர் வெளியே வராமல் இருப்பதால், மிகுந்த கோபத்தில் இருந்த முனிவர், “மிகுந்த கர்வம் கொண்டவனாகவும், பக்தியில் சிறந்தவன் என்ற மமதையில் உள்ளவனாகவும் நீ இருப்பதால், மதம் பிடித்த யானையாகப் போவாய்” என்று மன்னனை சபித்தார். முனிவரின் குரல் கேட்ட மன்னர், அதிர்ச்சியில் உறைந்து போனார். தனது தவறுக்கு மன்னிப்பு கோரினார். மேலும், சாப விமோசனமும் அருளும்படி முனிவரை வேண்டினார்.

மன்னர் மீது இரக்கம் கொண்ட முனிவர், “திருமால் மீது பக்தி கொண்ட கஜேந்திரனாகத் திகழ்வாய். ஒரு சமயம், முதலை உன் காலைப் பிடிக்கும் போது, ஆதிமூலமே என்று திருமாலை அழைத்தால், அவர் உன்னைக் காப்பாற்றி, மோட்சமும், சாப விமோசனமும் அளிப்பார்” என்று அருளினார்.

கூஹு என்ற அரக்கன் குளத்தில் வாழ்ந்து வந்தான். குளத்தில் நீராட வருபவர்களின் காலைப் பிடித்து இழுத்து துன்புறுத்துவதை வழக்கமாகக் கொண்டிருந்தான். ஒருசமயம் அகத்திய முனிவர், குளத்தில் நீராட இறங்கிய போது, அவரது காலைப் பிடித்து இழுத்து துன்புறுத்தினான். கோபம் கொண்ட அகத்தியர், அவனை முதலையாக மாறும்படி சபித்தார். தன் தவறை உணர்ந்த அரக்கன், முனிவரிடம் சாப விமோசனம் அளிக்குமாறு வேண்டினான்.

முனிவரும் அரக்கன் மீது இரக்கம் கொண்டு, “கஜேந்திரன் என்ற யானை இக்குளத்துக்கு வரும்போது, நீ அதன் காலைப் பிடிக்கும் சமயத்தில் திருமால் வந்து அதைக் காப்பாற்றுவார். அவரது சக்ராயுதம் உன் மீது பட்டவுடன் உனக்கு சாப விமோசனம் கிடைக்கும்” என்று அருளினார்.

ஒருநாள் கஜேந்திரன், கபிஸ்தலத்தின் கோயில் முன்பு உள்ள கபில தீர்த்தத்தில் நீர் அருந்த இறங்கியது. உடனே முதலை, யானையின் காலைக் கவ்வியது. “ஆதிமூலமே” என்று யானை தனக்கு உதவுமாறு திருமாலை அழைத்ததும், திருமால் திருமகளுடன் காட்சியளித்து, சக்ராயுதத்தால் முதலையை (அரக்கன்) அழித்து, யானைக்கு (கஜேந்திரன்) மோட்சம் அருளினார்.

இவ்வாறு யானைக்கு திருமால் அருளிய தலமே கபிஸ்தலமாகும். ஆஞ்சநேயருக்கு திருமால் அருள்பாலித்த தலம் என்பதால் இத்தலத்துக்கு கபிஸ்தலம் (கபி - தலம்) என்ற பெயர் கிட்டியது.




கோயில் அமைப்பு

5 அடுக்கு ராஜ கோபுரத்தைக் கொண்டு இக்கோயில் அமைந்துள்ளது. கிழக்கு பார்த்த புஜங்க சயன கோலத்தில் கஜேந்திர வரதப் பெருமாள் அருள்பாலிக்கிறார்.

ராகு - கேது தோஷ நிவர்த்தி

விப்ரசித்தி அரசருக்கும், சிம்ஹிகை என்ற அரசிக்கும் பிறந்த ராகுவுக்கு அமுதத்தை பருக வேண்டும் என்ற எண்ணம் இருந்தது. இதனால் அசுர குலத்தைச் சேர்ந்த ராகுவுக்கும் தேவர்களுக்கும் போர் நடந்து கொண்டிருந்தது. பாற்கடலைக் கடைந்தபோது அமுதமும், விஷமும் சேர்ந்தே வந்தன. மோகினி அவதாரம் எடுத்த திருமால், அமுதம் கொடுப்பதற்காக தேவர்களை ஒரு வரிசையில் அமரச் சொன்னார். சூரிய சந்திரர்களுடன் ராகு அமர்ந்து அமுதம் உண்டுவிட்டதை உணர்ந்த திருமால், ராகுவின் தலையைக் கொய்துவிட்டார். அமுதம் உண்டதால், தலை துண்டிக்கப்பட்ட பின்பும் உயிர் இருந்தது. தலைப்பாகம் ராகு என்றும் உடற்பாகம் கேது என்றும் பெயர் பெற்றன.

ராகுவும் கேதுவும், தங்களை மீண்டும் இணைக்குமாறு பிரம்மதேவரிடம் வேண்டினர். ஆனால் அவர் சூரிய சந்திரர்களுடன் இணைந்து நவக்கிரகங்களாக மாறி எதிர்திசையில் சுழல்வதற்கு ஆலோசனை கூறினார். அப்போது திருமால் தோன்றி, அவர்கள் இருவரும் சாஸ்திர சம்பிரதாயங்களைக் கற்க வேண்டும் என்று கூறுகிறார். மேலும் கடக ராசியில் கேது தங்கி ரிக், யஜூர், சாம வேதங்களைக் கற்று ஞானகாரகனாகவும், மகர ராசியில் ராகு தங்கி அதர்வண வேதத்தையும் கற்று போக யோககாரகனாகவும் விளங்க அருள்புரிந்தார். அதன்படி அவர்களும் கல்வியில் சிறந்து, நவக்கிரகங்களுள் இணைந்தனர். தாங்கள் அழிவதற்கு காரணமாக இருந்த சூரிய, சந்திரர்களை விழுங்கிவிட வேண்டும் என்ற நோக்கத்தில் அவர்கள் இடப்புறம் சுற்றிக் கொண்டு வருவதாகவும், அவர்களால் தான் சூரிய சந்திர கிரகணங்கள் நடைபெறுவதாகவும் இதிகாசங்கள் கூறுகின்றன.

ராகு, கேது தோஷங்கள் நீங்க பாபநாசம் கஜேந்திர வரதரை வழிபட வேண்டும் என்பது ஐதீகம். இத்தலத்தில் கோயில் கொண்டுள்ள பெருமாள் வானர இனத்தில் பிறந்த ஆஞ்சநேயருக்கு அனைத்து வல்லமைகளையும் அளித்து, அவருக்கு ஞானத்தில் தலைசிறந்த சிரஞ்சீவி பட்டம் அருளியுள்ளார்,




திருவிழாக்கள்

வைகாசி விசாகம் (தேர்த் திருவிழா), வைகாசி பிரம்மோற்சவம், ஆடி பௌர்ணமி (கஜேந்திர மோட்ச லீலை) தினங்களில் சிறப்பு திருமஞ்சனம், ஆராதனைகள் நடைபெறும்.
ஓம் நமசிவாய 
படித்து பகிர்ந்தது 
இரா இளங்கோவன் 
நெல்லிக்குப்பம். 

Friday, April 10, 2026

திருகாமேஸ்வரர் திருச்சி மாவட்டம் வெள்ளூர்.

திருகாமேஸ்வரர் கோவில் - திருச்சி
   
திருச்சி மாவட்டம் வெள்ளூர் என்ற ஊரில் உள்ளது, திருகாமேஸ்வரர் ஆலயம். இங்கு அருள்பாலிக்கும் இறைவன் ‘திருகாமேஸ்வரர்’ என்றும், இறைவி ‘சிவகாமசுந்தரி’ என்றும் அழைக்கப்படுகிறார்கள்.

திருச்சி மாவட்டம் வெள்ளூர் என்ற ஊரில் உள்ளது, திருகாமேஸ்வரர் ஆலயம். இங்கு அருள்பாலிக்கும் இறைவன் ‘திருகாமேஸ்வரர்’ என்றும், இறைவி ‘சிவகாமசுந்தரி’ என்றும் அழைக்கப்படுகிறார்கள்.

மன்மதன் பற்றிய புராணக் கதை ஒன்று இத்தலத்துடன் தொடர்புடையதாக இருக்கிறது.

சிவபெருமானின் சொல்லையும் மீறி, தட்சனின் யாகத்திற்குச் சென்றாள் தாட்சாயிணி. அங்கு அவளுக்கு அவமானமே மிஞ்சியது. 

தன் சொல் கேட்காத அன்னைக்கு, ஈசன் சாபம் அளித்தார். அதன்படி பூலோகத்தில் பர்வதராஜனுக்கு மகளாகப் பிறந்து, உரிய நேரம் வரும்போது கயிலை வந்து சேரும்படி அருளினார். 

இதையடுத்து பார்வதி என்ற பெயருடன், பர்வதராஜனிடம் வளர்ந்து வந்த தேவியானவள், 

கயிலாயமலையில் வீற்றிருக்கும் சிவபெருமானை நோக்கி தவம் புரியத் தொடங்கினாள்.

பார்வதியைப் பிரிந்த சிவபெருமான் கயிலையில் அசைவற்ற நிலையில் இருந்தார். இதனால் பிரபஞ்சத்திலும் ஓர் அணுவும் அசையவில்லை. 
இதே நிலை தொடர்ந்தால் உலகமே அழிந்துவிடும் என்று அஞ்சிய பிரம்மாவும், விஷ்ணுவும் தேவர்கள் சூழ, சிவபெருமானையும் பார்வதியையும் ஒன்றிணைக்க முயன்றனர். மன்மதனை அழைத்து சிவபெருமான் மீது, காமபாணத்தை ஏவுமாறு கேட்டுக் கொண்டனர்.

ஆனால் ஈசனின் மீது பாணம் தொடுக்க மன்மதன் தயங்கினான். உடனே தேவர்கள், “நீ ஈசன் மேல் காம பாணம் தொடுக்காவிட்டால், உனக்கு நாங்கள் சாபம் அளிப்போம்” என்று மிரட்டினர். 

இதனால் பயந்து போன மன்மதன், ஒரு புன்னை மர நிழலில் ஒளிந்து கொண்டு ஈசனின் மீது அம்பு விட்டான்.

அவன் விட்ட அம்பு, வில்லில் இருந்து வெளியேறும் முன்பாகவே, அவனை தன்னுடைய நெற்றிக் கண்ணைத் திறந்து எரித்தார் சிவபெருமான். 

அதோடு மன்மதன் விட்ட பாணமும் திசைமாறி, பார்வதியின் மீது பட்டது. அதில் அவர் பருவம் செய்தி, சிவபெருமானை வந்தடைந்தாள். அன்னைக்கு சிவகாம சுந்தரி என்று பெயர் ஏற்பட்டது. 

இந்த பெயர் கொண்டவரே இத்தல இறைவியாக திகழ்கிறார். இறைவனின் திருநாமமும் அதனாலேயே ‘காமேஸ்வரர்’ என்றானது.

இந்த நிலையில் கணவனை இழந்த ரதிதேவி, தன் கணவரான மன்மதனுக்கு உயிர்ப்பிச்சை கேட்டாள். 

அவளுக்கு மனம் இரங்கிய இறைவன், மன்மதனுக்கு உயிர் கொடுத்து, அவன் ரதியின் கண்களுக்கு மட்டுமே தெரிவான் என்று அருள் புரிந்தார். 

ரதியும், மன்மதனும் இத்தலமான வெள்ளூர் வந்து மன்மதனுக்கு பழைய உடலைத் தர வேண்டுமென சிவபெருமானை வழிபட, ஈசனும் மனம் இரங்கி மன்மதனுக்கு உடலைத் தந்தார் என்று தல புராணம் சொல்கிறது.

இந்த திருத்தலத்தில் உள்ள இறைவனானவர், மகாலட்சுமியால் வழிபடப்பட்டவர் என்பதற்கு ஒரு கதை சொல்லப்படுகிறது. 

அதாவது தேவர்களும் அசுரர்களும் அமிர்தம் வேண்டி பாற்கடலைக் கடைந்தனர். அந்த அமிர்தம் தேவர் களுக்கு மட்டுமே கொடுக்கப்பட வேண்டுமென எண்ணிய மகாவிஷ்ணு, 

மோகினி வடிவம் எடுத்து வந்தார். மோகினியின் அழகில் மயங்கிய சிவபெருமான், அவளை மோகிக்க அவர்களுக்கு ஐயப்பன் பிறந்தார்.

இதை அறிந்த மகாலட்சுமி, தன் கணவரான மகாவிஷ்ணுவின் மீது கோபம் கொண்டாள். 

பின்னர் வைகுண்டத்தை விட்டு வெளியேறி பூலோகம் வந்தாள். இங்கு வில்வாரண்ய சேத்திரம் எனும் வெள்ளூரில் சிவபெருமானை நோக்கி தவம் செய்தாள். 

பல யுகங்களாக தவம் செய்தும் அவளுக்கு, சிவபெருமான் காட்சி தரவில்லை. உடனே, 

மகாலட்சுமி தன்னை வில்வமரமாக மாற்றிக் கொண்டு சிவலிங்கத் திருமேனியில் வில்வ இலையை மழையாக பொழிந்து பூஜித்தாள்.

இதனால் மனம் மகிழ்ந்த ஈசன், மகாலட்சுமியின் முன்பாகத் தோன்றி, ஐயப்பனின் அவதார நோக்கத்தை விளக்கி, அவளை சாந்தப்படுத்தினார். 

பின்னர் அவளை, ஸ்ரீவத்ஸ முத்திரையுடன் கூடிய சாளக்கிராமமாக செய்து, மகாவிஷ்ணுவின் இதயத்தில் இருக்கும்படிச் செய்தார். மேலும் மகாலட்சுமியை ஐஸ்வரியத்தின் அதிபதியாகவும் இருக்கும்படி அருள்புரிந்தார்.

இதன் காரணமாக இந்த ஆலயத்தில் இருக்கும் மகாலட்சுமி, ‘ஐஸ்வரிய மகாலட்சுமி’ என்ற திரு நாமத்துடனேயே பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்.

ராவணனுக்கு, இத்தல இறைவன் மீண்டும் உடல் வலிமை கொடுத்து, ஈஸ்வர பட்டம் சூட்டியதாக தல புராணம் சொல்கிறது. 

இத்தலத்தில்தான் சுக்ரன் ஈசனை வழிபட்டு போகத்திற்கு அதிபதியானார். குபேரன் இத்தல இறைவனை வழிபட்டு தனாதிபதியாக மாறினார். 

வெள்ளிக்கிழமையில் வரும் சுக்ர ஓரையில் (காலை 6-7 மணி), ஐஸ்வரிய மகாலட்சுமிக்கு 16 வகையான அபிஷேகம் செய்து, 16 நெய் தீபங்கள் ஏற்றி, 16 முறை வலம் வந்து பிரார்த்தனை செய்தால், 16 வகை பேறு களையும் பெறலாம் என்பது நம்பிக்கை.

சுமார் 1,600 ஆண்டுகள் பழமையான இந்த ஆலயம். கி.பி. 6-ம் நூற்றாண்டில் முதலாம் விஜயாதித்த சோழனால் புனரமைக்கப்பட்டு, கும்பாபிஷேகம் நடைபெற்றிருப்பதாக கல்வெட்டுச் செய்தி கூறுகிறது. 

தற்போது இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் இருக்கும் இந்த ஆலயம், தினமும் காலை 9 மணி முதல் 11 மணி வரையும், மாலை 6 மணி முதல் இரவு 7 மணி வரையும் திறந்திருக்கும்.

சகல ஐஸ்வர்யங்களையும் பெற்று வளமாக வாழ, நாமும் ஒரு முறை ஐஸ்வரிய மகாலட்சுமியை தரிசித்து வரலாமே!

திருச்சியில் இருந்து சேலம் செல்லும் நெடுஞ்சாலையில் முசிறியில் இருந்து 6 கிலோமீட்டர் தொலைவில் வெள்ளூர் திருத்தலம் உள்ளது. 

ஓம் நமசிவாய 
படித்து பகிர்ந்தது 
இரா இளங்கோவன் 
நெல்லிக்குப்பம். 

Thursday, April 9, 2026

கடக ராசிக்காரர்கள் வழிபட வேண்டிய கோவில்

திருந்துதேவன்குடி : தற்போது நண்டாங்கோவில் என்று அறியப்படும் இத்தலம் தேவார காலத்தில் திருந்துதேவன்குடி என்று அழைக்கப்பட்டது. கடக ராசிக்காரர்கள் வழிபட வேண்டிய கோவில் கற்கடேஸ்வரர் ஆலயம் ஆகும். 

இறைவர் : ஸ்ரீ கற்கடேஸ்வரர்

இறைவியார் : ஸ்ரீ அருமருந்துநாயகி

தல புராணப்படி உமாதேவி ஒரு சமயம் கைலாயத்தில் இருந்து இத்தலத்திற்கு வந்து நண்டு உருவத்தில் இறைவனை வழிபட்டாள். கோவிலைச் சுற்றி உள்ள அகழியில் இருந்த நீரில் பூத்துக் குலுங்கிய தாமரை மலர்களால் இறைவனை அர்ச்சித்து வழிபட்டு வந்தாள். தேவேந்திரனும் அதே சமயம் இத்தலத்து இறைவனை வழிபட்டு வந்தான். அகழியில் தன்னால் பயிரடப்பட்ட தாமரை மலர்களை நண்டு கொண்டு வந்து இறைவனுக்கு சாத்தி வழிபடுகிறதே என்று கோபம் கொண்டான். 

நண்டு உருவத்தில் இறைவனை வழிபடுவது பார்வதி தேவியே என்று அறியாத இந்திரன் லிங்கத்தின் மீதேறி தாமரை மலர்களைச் சாத்த முயன்ற நண்டை கத்தியால் வெட்ட முயன்றான். முதல் வெட்டு தாடையில் விழுந்தது. அடுத்த வெட்டு சிவபெருமானின் நெற்றியில் விழுந்தது. நண்டு உருவில் இருந்த உமாதேவியைக் காப்பாற்ற நினைத்த சிவபெருமான் லிங்கத் திருமேனியில் உச்சியில் ஒரு துவாரத்தை ஏற்படுத்தி நண்டு உருவில் இருந்த சக்தியை தன்னுடன் ஐக்கியப்படுத்திக் கொண்டார். உண்மையை உணர்ந்த இந்திரன் தன் தவறுக்கு வருந்தி திருந்தினான். எனவே இக்கோவிலுக்கு திருந்துதேவன்குடி என்ற பெயர் வந்ததாக தலபுராணம் கூறுகிறது. நண்டு சிவனை வழிபடும் சிற்பம் ஒன்று கோவிலில் உள்ள ஒரு கற்தூணில் செதுக்கப்பட்டு உள்ளது.

சந்திரனால் ஏற்படும் தோஷங்கள் நீங்க வழிபட வேண்டிய தலம் திருந்துதேவன்குடி தலமாகும். அநேகமாக எல்லா சிவாலயங்களிலும் சந்திரனுக்கு தனி சந்நிதி இருக்கும். சந்திரன் நின்ற நிலையில் காணப்படுவார். இத்தலத்தில் மட்டும் சந்திரன் அமர்ந்த நிலையில், யோக நிலயில் இருக்கிறார். எல்லா வகையான யோகங்களும் கிடைக்க வழிபட வேண்டிய தோஷ பரிகார சந்திரன் இவர். குறிப்பாக கடகராசிக்காரர்கள்(புனர்பூசம், பூசம், ஆயில்யம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள்) இக்கோவிலுக்கு வந்து வழிபட்டால் அனைத்து தோஷங்களில் இருந்து நிவாரணம் பெறலாம்.

🍁"மருந்து வேண்டில் இவை மந்திரங்கள் இவை
புரிந்து கேட்கப்படும் புண்ணியங்கள் இவை
திருந்து தேவன்குடித் தேவர் தேவு எய்திய
அருந்தவத்தோர் தொழும் அடிகள் வேடங்களே."

பொருளுரை : திருந்துதேவன்குடியில் வீற்றிருக்கும், தேவர்கட்கெல்லாம் தேவனாக விளங்குபவனும், அருந்தவத்தோர்களால் தொழப்படுபவனுமான சிவபெருமானின் திருவேடங்கள்(திருநீறு, உருத்திராக்கம், சடாமுடி) மருந்து வேண்டுபவர்க்கு மருந்தாகவும், மந்திரங்கள் விரும்புவார்கட்கு மந்திரமாகவும், சிவபுண்ணியச் சரிதை கேட்க விரும்புவார்கட்கு அப்புண்ணியப் பயனாகவும் அமையும்.

ஆளுடைய பிள்ளையார், திருவியலூர் அடிகளைப் போற்றி இன்னிசைப் பதிகத்தொடை சாத்தி அம்முழு முதல்வன் காட்டிய கண்ணார்தரும் உருவாகிய அருள் வேடத்தைத் தொழுது, திருந்துதேவன்குடியிற் சென்று சிவபெருமான் கோயிலை எய்திக், காதலொடு புகுந்து, போற்றி வணங்கிப் புனைந்த அருந்தமிழ் மாலை இது.

ஆலய முகவரி : அருள்மிகு கற்கடேஸ்வரர் திருக்கோவில, நண்டாங்கோவில், திருந்துதேவன்குடி, திருவிசலூர் அஞ்சல், கும்பகோணம் வட்டம், தஞ்சாவூர் மாவட்டம், PIN - 612 105.

எப்படிப் போவது : கும்பகோணத்திற்கு அருகிலுள்ள திருவியலூர் என்ற மற்றொரு பாடல் பெற்ற சிவஸ்தலத்தில் இருந்து 2 கி.மி. தொலைவில் திருந்துதேவன்குடி சிவஸ்தலம் இருக்கிறது. கும்பகோணத்திலிருந்து திருவிசநல்லூர் செல்ல நகரப் பேருந்து வசதி உண்டு. திருவிசநல்லூரில் இருந்து நடந்தோ அல்லது ஆட்டோ மூலமோ கற்கடேஸ்வரர் கோவில் சென்று வரலாம்.

"மேன்மைகொள் சைவநீதி விளங்குக உலகம் எல்லாம்"

ஓம் நமசிவாய
 படித்து பகிர்ந்தது
 இரா இளங்கோவன் 
நெல்லிக்குப்பம். 


Followers

சொர்ணபுரீசுவரர் திருக்கோயில்,ஆண்டாங்கோவில்,

அருள்மிகு சொர்ணபுரீசுவரர் திருக்கோயில், ஆண்டாங்கோவில், ஆண்டாங்கோவில் அஞ்சல், வலங்கைமான் S.O. திருவாரூர் மாவட்டம் -  612 804. )  ...