Sunday, February 8, 2026

அதிசய லிங்கம் - தலையில் குடுமியுடன் காட்சி தரும் ஈசன்!

அதிசய லிங்கம் - தலையில் குடுமியுடன் காட்சி தரும் ஈசன்! 
காஞ்சிபுரம் மாவட்டம் பொன்விளைந்த களத்தூரில் அமைந்துள்ள அருள்மிகு முன்குடுமீஸ்வரர் திருக்கோயிலின் அதிசயம் பற்றி உங்களுக்குத் தெரியுமா? சாதாரண சிவலிங்கங்களைப் போலன்றி, இங்குள்ள லிங்கத் திருமேனியின் உச்சியில் ஒரு 'குடுமி' போன்ற அமைப்பு உள்ளது. இதன் பின்னணியில் உள்ள நெகிழ்ச்சியான வரலாற்றைப் பகிர்கிறோம்.
📍 தல வரலாறு: ஏமாற்றமும் இறைவனின் அருளும்! ஒரு காலத்தில் இங்கு சிவபெருமானுக்குத் தொண்டு செய்த பக்தர் ஒருவர் இருந்தார். அவர் ஒரு நிலக்கிழாரிடம் (அந்தணர்) வேலை செய்து வந்தார். ஒரு குறிப்பிட்ட நிலத்தில் விளையும் நெல் 'பொன்னாக' மாறும் ரகசியம் அந்த நிலக்கிழாருக்குத் தெரியும். அந்தப் பக்தரை ஏமாற்ற எண்ணி, "இந்த விளைச்சலை நீ எடுத்துக்கொள், உன்னுடைய நிலத்தில் உள்ளதை நான் எடுத்துக் கொள்கிறேன்" என்று மாற்றிப் பேசினார்.

ஆனால், இறைவனின் திருவிளையாடலால் அந்தப் பக்தரின் வயலில் விளைந்த நெல் அனைத்தும் 'தங்கமாக' மாறியது! 🌾💰 இதனால் இவ்வூர் 'பொன்விளைந்த களத்தூர்' என்று பெயர் பெற்றது.

💇‍♂️ ஏன் 'முன்குடுமீஸ்வரர்' என்று பெயர்? இந்தக் கோயிலின் லிங்க பாணத்தின் உச்சியில் ஒரு குடுமி போன்ற தோற்றம் இருப்பது தனிச்சிறப்பு. இதனாலேயே இறைவன் 'முன்குடுமீஸ்வரர்' என்று அழைக்கப்படுகிறார். 63 நாயன்மார்களில் ஒருவரான கூற்றுவ நாயனார், தமக்கு மணிமகுடம் சூட்டும்படி தில்லை வாழ் அந்தணர்களிடம் கேட்டபோது அவர்கள் மறுக்க, அவர் இந்தத் தலத்திற்கு வந்து வேண்டினார். அப்போது இறைவன் தன் திருமுடியையே (குடுமி) அவருக்குக் காட்டி அருளியதாகக் கூறப்படுகிறது.
✨ கோயிலின் பிற சிறப்புகள்: ✅ கட்டடக்கலை: சோழர் காலத்தில் கட்டப்பட்ட இக்கோயில், தூண்களில் அற்புதமான சிற்ப வேலைப்பாடுகளைக் கொண்டது. ✅ கஜபிருஷ்ட விமானம்: கருவறையின் மேல் உள்ள விமானம் யானையின் பின்புறம் போன்ற வடிவில் (கஜபிருஷ்டம்) அமைந்துள்ளது. ✅ கூற்றுவ நாயனார் வழிபாடு: பொதுவாகச் சிவன் கோயில்களில் சண்டிகேஸ்வரர் தான் முக்கியத்துவம் பெறுவார். ஆனால் இங்கு பங்குனி உத்திரத் திருவிழாவின் போது கூற்றுவ நாயனார் வீதி உலா வருவது சிறப்பானது.

🙏 பிரார்த்தனை: வாழ்வில் பிறரால் ஏமாற்றப்பட்டவர்கள், நியாயமான செல்வம் சேர வேண்டும் என்று நினைப்பவர்கள் மற்றும் மன அமைதி தேடுபவர்கள் இத்தலத்து ஈசனை வணங்கினால் நிச்சயம் பலன் கிடைக்கும் என்பது நம்பிக்கை.

கோயில் அமைவிடம்: அருள்மிகு முன்குடுமீஸ்வரர் திருக்கோயில், பி.வி.களத்தூர் (பொன்விளைந்த களத்தூர்), காஞ்சிபுரம் மாவட்டம்.

ஆன்மீகத் தகவல் பிடிச்சிருந்தா உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்! 

ஓம் நமச்சிவாய
படித்து பகிர்ந்தது 
இரா இளங்கோவன் 
நெல்லிக்குப்பம். 

 

அபிஷேகம் கிடையாது: சூரிய ஒளி லிங்கத்தின் மீது விழும் அதிசய சிவன்.

தமிழகத்தில் எத்தனையோ பழமையான கோவில்கள் இருந்தாலும், சென்னைக்கு மிக அருகில் திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள  கோயில் பல அரிய பொக்கிஷங்களைத் தன்னுள் கொண்டுள்ளது. இந்தப் பதிவில் அங்குள்ள அதிசயங்களை விரிவாகக் காண்போம்.
1. கிரீடம் இல்லாத 'பல்லவ விநாயகர்' - ஒரு மருத்துவ அதிசயம்! 🐘
பொதுவாக விநாயகர் சிலைகளில் அலங்காரமான கிரீடம் இருக்கும். ஆனால் இங்குள்ள விநாயகர் கிரீடம் இல்லாமல், மண்டை ஓடு போன்ற அமைப்பில் இயற்கையான யானை முகத்துடன் காட்சியளிக்கிறார்.

பல் வலி தீர்க்கும் தலம்: பல் தொடர்பான நோய்களால் அவதிப்படுபவர்கள், இங்குள்ள விநாயகருக்கு நெய் தீபம் ஏற்றி வழிபட்டால் வியக்கத்தக்க பலன் கிடைப்பதாகக் கூறப்படுகிறது.

மன நிம்மதி: பதவி மற்றும் பொருளின் மீதுள்ள அதீத மோகம் நீங்கி, மனத் தெளிவு பெற இந்த 'பல்லவ விநாயகரை' வழிபடுவது சிறப்பு.

2. சூரியன் வழிபட்ட 'ஞாயிறு' தலம் ☀️
இவ்வூரின் பெயரே 'ஞாயிறு' (சூரியன்). ஒருமுறை பிரம்மதேவர் யாகம் செய்தபோது, அதில் ஏற்பட்ட தவறால் சூரியனின் ஒளி மங்கியது. தன் ஒளியை மீண்டும் பெற சூரியன் இத்தலத்து ஈசனை வழிபட்டார்.

சூரிய பூஜை: ஒவ்வோர் ஆண்டும் சித்திரை மாதம் முதல் 7 நாட்களில், சூரிய ஒளி நேரடியாக கருவறை சிவலிங்கத்தின் மீதும், சொர்ணாம்பிகை அம்மன் மீதும் விழுகிறது.

அபிஷேகம் கிடையாது: சூரிய ஒளி லிங்கத்தின் மீது விழும் அந்த 7 நாட்களில், சூரியனே பூஜை செய்வதாக ஐதீகம் என்பதால், உச்சிக்காலத்தில் இறைவனுக்கு அபிஷேகம் செய்யப்படுவதில்லை.

3. கண் நோய்களைத் தீர்க்கும் மருந்தீஸ்வரர் 👀
சூரியன் பார்வைக்கு அதிபதி. எனவே, பார்வை குறைபாடு உள்ளவர்கள், கண் சம்பந்தப்பட்ட அறுவை சிகிச்சை செய்துகொள்பவர்கள் இங்குள்ள ஈசனுக்கும், சூரிய பகவானுக்கும் நெய் விளக்கு ஏற்றி வழிபடுகிறார்கள். இதனால் பார்வைத் திறன் மேம்படும் என்பது நம்பிக்கை.

4. சங்கிலி நாச்சியார் பிறந்த மண் 🌸
சுந்தரமூர்த்தி நாயனாரின் பெரும் அன்பிற்குப் பாத்திரமான சங்கிலி நாச்சியார் அவதரித்த ஊர் இதுவே. இவர் இக்கோயிலில் உள்ள புஷ்பரதேஸ்வரரைத் தொழுது சிவப்பணியில் ஈடுபட்டு வந்தவர். இவருக்கு இக்கோயிலில் தனிச் சன்னதி உள்ளது.

5. தனித்துவமான நவக்கிரக அமைப்பு 🌌
இக்கோயிலில் நவக்கிரக சன்னதி கிடையாது. சூரிய பகவானே இங்கு பிரதானமாக இருப்பதால், அவரை வழிபட்டாலே ஒன்பது கிரகங்களையும் வழிபட்ட பலன் கிடைக்கும். பிரிந்த தம்பதியினர் மீண்டும் இணைய இங்கு கோதுமைப் பொங்கல் படைத்து வழிபடுகின்றனர்.

கோயில் விபரங்கள்:  ஊர்: ஞாயிறு கிராமம் (சோழாவரம் வழி), திருவள்ளூர் மாவட்டம். நேரம்: காலை 7.30 - 11.00; மாலை 4.30 - 7.30. (ஞாயிற்றுக்கிழமைகளில் காலை 6 மணி முதல் மதியம் 1 மணி வரை).

நமது பாரம்பரியத்தையும், அறிவியலும் ஆன்மீகமும் கலந்த இத்தலத்தின் பெருமைகளையும் உலகறியச் செய்வோம்!

ஓம் நமசிவாய 
படித்து பகிர்ந்தது
 இரா இளங்கோவன் 
நெல்லிக்குப்பம். 

வருடத்தில் நான்கு முறை சூரிய பூஜை நடைபெறும் கோயில் எங்குள்ளது

வருடத்தில் நான்கு முறை சூரிய பூஜை நடைபெறும் கோயில் எங்குள்ளது தெரியுமா?
திருச்சியில் இருந்து தென்மேற்கே 4 கி.மீ. தொலைவில் சிறிய மலையின் மீது அமைந்துள்ளது அருள்மிகு உஜ்ஜீவநாதர் திருக்கோயில்.

 மிருகண்டு முனிவர் புத்திரப் பேறு வேண்டி சிவபெருமானை நோக்கித் தவமிருந்தார்.

 அவரது தவத்தில் மகிழ்ந்த சிவபெருமான், “உனக்கு ஞானமற்ற அங்கஹீனமான நூறு வயது வாழும் மகன் வேண்டுமா? அல்லது அழகும் அறிவும் மிக்க பதினாறு வயது வரை மட்டுமே ஜீவித்திருக்கும் மகன் வேண்டுமா?” எனக் கேட்டார்.

குழம்பிப்போன மிருகண்டு முனிவர், ‘தனக்கு ஞான புத்திரனே வேண்டும்’ என வேண்டினார். 
அதன்படியே மகனும் பிறந்தான்.

 அவனுக்கு மார்கண்டேயன் என பெயரிட்டனர்.

 16 வயது வந்தது. 

எமன் மார்கண்டேயனை துரத்தினான்.

 மார்கண்டேயன் பல க்ஷேத்ரங்களுக்கும் சென்று ஓடி ஒளிந்தான். 

இறுதியாக, உய்யங்கொண்டான் திருமலைக்கு வந்து, தன்னை எமன் துரத்துவதை ஈசனிடம் முறையிட்டு வேண்டினார்.

 இறைவன் அந்தச் சிறுவனை பாதுகாத்தார்.

மார்கண்டேயருக்கு ஜீவன் அளித்ததால் இத்தல ஈசன் உஜ்ஜீவநாதர் எனப்படுகிறார்.

 எண்ணிய விருப்பங்களை ஈடேற்றுவதால் இவருக்கு ‘கற்பகநாதன்’ என்றும் பெயர் உண்டு.

 இத்தலத்தில் ஈசன் சுயம்பு லிங்கமாகக் காட்சி அளிக்கிறார்.

இக்கோயிலில் ஜேஷ்டா தேவியின் சிலை வித்தியாசமான வடிவமைப்பில் உள்ளது.

 இவரை மூதேவி என்றும் அழைப்பர்.

 மகாலக்ஷ்மியின் சகோதரியான இவளை பார்த்தாலே எந்த காரியமும் நடக்காது என்பர். 

இது தவறான கருத்தாகும்.

இந்த தேவியை தரிசித்தால் விபத்துகளில் இருந்து நம்மை காப்பாற்றுவாள்.

எப்போதும் நம்மை விழிப்புடன் இருக்கவும் செய்வாள்.

இந்த தேவி ஒரு குழந்தையை வலது கையில் ஏந்தி காட்சி தருகிறாள்.

அந்தக் குழந்தைக்கு மாட்டின் முகம் இருப்பதால் இவரை, ‘மாடன்’ என்று சொல்கிறார்கள்.

மறுபுறத்தில் அழகிய பெண்ணை ஏந்தி இருக்கிறாள் இவளை வாக்தேவதை என்கிறார்கள்.

இந்த மலைக்கோயில் ஓம் வடிவில் அமைந்துள்ளது.

 உஜ்ஜீவநாதர் மற்றும் அஞ்சனாட்சி அம்பிகை இருவரும் மேற்கு நோக்கி காட்சி தருகின்றனர்.

 குழந்தைகளுக்கு ஏற்படும் பாலாரிஷ்ட தோஷம் நீங்க இக்கோயிலில் வேண்டிக்கொள்கிறார்கள்.

தை மாதத்தில் ஒரு நாள் மாலை வேளையில் சிவலிங்கம் மற்றும் அஞ்சனாட்சி அம்பிகையின் மீது சூரிய ஒளி விழும். 

அந்நாளில் இருந்து 90 நாட்களுக்கு ஒரு முறை என வருடத்தில் நான்கு முறை இங்கு சூரிய பூஜை நடைபெறுகிறது.

இந்த மலைக்கோயிலில் தீராத பிரச்னை உள்ளவர்கள் மாலையில் சூரியன் அஸ்தமிக்கும் வேளையில் அமர்ந்து சிந்தித்தால் தீராத பிரச்னைக்கும் தீர்வு கிடைத்துவிடும் என்பது நம்பிக்கை.

. ஓம் நமசிவாய
 படித்து பகிர்ந்தது 
இரா இளங்கோவன் 
நெல்லிக்குப்பம். 

Friday, February 6, 2026

பஞ்சவர்ணேஸ்வரர் உறையூர் திருச்சிராப்பள்ளி.

அருள்மிகு பஞ்சவர்ணேஸ்வரர்திருக்கோயில், உறையூர்- 620003.  திருச்சிராப்பள்ளி. 
*மூலவர்        :     பஞ்சவர்ணேஸ்வரர், திரு மூக்கிச்சுரத்தடிகள்,

*அம்மன்            :     காந்திமதியம்மை.

தல விருட்சம்   :     வில்வம்.

தீர்த்தம்         :     சிவதீர்த்தம், நாக தீர்த்தம்.

புராண பெயர்    :     முக்கீச்சுரம்

பாடல்பெற்ற தலம்: ஞானசம்பந்தர் பாடியுள்ளார்

*இறைவன் பஞ்சவர்னேஸ்வரர்  இங்கு சுயம்பு மூர்த்தியாக எழுந்தருளியுள்ளார்".      

*சோழ மன்னன் கரிகால் பெருவளத்தான் தன் பட்டத்து யானை மேல் ஏறி உறையூரை வலம் வந்து கொண்டிருந்த போது யானைக்கு மதம் பிடித்தது. யானையை அடக்க முடியாமல் மன்னனின் படை வீரர்கள் கலங்கினர். சிவபெருமான் மீது தீராத பக்தியுள்ள மன்னன் இறைவனை நினைத்து பிரார்த்தனை செய்தான். சிவபெருமானும் கருணை கூர்ந்து உறையூர் தெருவிலுள்ள ஒரு கோழியை தன் கடைக்கண்ணால் நோக்க, அக்கோழியும் அசுர பலம் பெற்று பறந்து சென்று யானையின் மத்தகத்தின் மீதமர்ந்து அதை குத்தித் தாக்கியது. கோழியின் தாக்குதலை சமாளிக்க முடியாமல் யானை மிரண்டு ஓடி ஒரு வில்வ மரத்தடியின் கீழ் நின்றது. கோழியும் அங்கே வந்தமர்ந்தது. கோழியின் வீரச் செயலைக் கண்ட மன்னன் உறையூர் தலத்தின் மகிமையை உணர்ந்து தான் வணங்கும் சிவபெருமானுக்கு இத்தலத்தில் ஆலயம் ஒன்று எழுப்பினான். இத்தலமும் கோழியூர் என்ற பெயரில் சிறப்புடன் விளங்கியது.

*உதங்க முனிவர் தன்னுடைய மனைவியுடன் கங்கையில் நீராடிய போது, அவர் மனைவி முதலையால் இழுத்துச் செல்லப்பட்டார். உதங்க முனிவர் வேதம், ஆகமம், புராணங்களில் வல்லவராக இருந்தமையால், அவருக்கு மனைவியின் இறப்பு பற்றி தெரிந்தது. ஞானியாக இருந்தாலும் மனைவியை இழந்தமையால் பித்துபிடித்தவரானார். பல இடங்களில் சுற்றித் திரிந்து பின்பு உறையூர் சிவலாயத்திற்கு வந்தார். இங்கு இறைவன் அவருக்கு காலை வழிபாட்டில் ரத்தினலிங்கமாகவும், உச்சிகால வழிபாட்டில் ஸ்படிக லிங்கமாகவும், மாலை வழிபாட்டில் பொன் லிங்கமாகவும், முதல் ஜாம வழிபாட்டில் வைர லிங்கமாகவும் மற்றும் அர்த்த ஜாம வழிபாட்டில் சித்திர லிங்கமாகவும் காட்சியளித்தார். இதனால் இத்தல மூலவருக்கு பஞ்சவர்ணேசுவரர் என்ற பெயர் ஏற்பட்டது.

*உதங்க முனிவருக்கு இறைவன் ஆடிப்பவுர்ணமியில் இந்த ஐந்த வண்ணம் காட்டியதால் இறைவனை ஆடிப்பவுர்ணமியில் தரிசிப்பது சிறப்பாகும்.     

*பஞ்சபூத தலங்களாகிய சிதம்பரம், திருவானைக்காவல், திருவண்ணாமலை, காஞ்சீபுரம், காளஹஸ்தி ஆகிய தலங்களில் காட்சியளித்து அருள்புரியும் சிவபெருமான் ஐந்து பூதங்களையும் ஒன்றாக்கி உறையும் தலமே திருமூக்கீச்சரம் என்ற உறையூர் திருத்தலம். எனவே பஞ்சபூத தலங்களை தரிசிக்கும் புண்ணியம் இத்தல இறைவனை வழிபட்டாலே கிடைக்கும் என்பது  உண்மை.

*உலகில் எந்த இடத்தில் சிவபூஜை செய்தாலும், சிவ தரிசனம் செய்தாலும் அவையனைத்தும் இங்கு வந்து உறையும் என்பதால் இத்தலம் உறையூர் எனப்பட்டது.        

*சோழ மன்னர்களால் இக்கோவில் கட்டப்பட்டது.     

*இறைவி காந்திமதி அம்மை தெற்கு நோக்கி தனி சந்நிதியில் கைகளில் அங்குசமும், தாமரை மலரும் வைத்துக் கொண்டு அருள் புரிகிறாள்.  இந்த அம்மன் நாகலோகத்தில் நாககன்னியரால் பூஜிக்கப்பட்டு சோழமன்னரால் பிரதிஷ்டை செய்யப்பட்டதாக வரலாறு கூறுகிறது. 

*யானை ஏற முடியாதபடி  மாடக்கோவில்களைக் கட்டிய கோச்செங்கட் சோழன், 
மற்றும் 63 நாயன்மார்களில் ஒருவரான புகழ்ச் சோழன் ஆகியோர் பிறந்த தலம் இதுவே.              

*புகழ்ச் சோழன் என்ற சோழ மன்னன் உறையூரில் ஆட்சி புரிந்து வந்தான். சிற்றரசன் ஒருவனுடன் போரிட்டு வெற்றி கண்ட புகழ்ச் சோழன் மடிந்து கிடந்த படை வீரர்களுள் ஜடாமுடியுடன் திருநீறு பூசிய ஒரு தலையைக் கண்டு மிகவும் மனம் நொந்தான். சிவனடியார்க்கு அநீதி இழைத்தோமே என்று கலங்கினான். தன்னுடைய மகனுக்குப் பட்டம் சூட்டிவிட்டு தீமூட்டி அதனுள் அந்த சிவனடியார் தலையுடன் தானும் வீழ்ந்து முக்தி பெற்றான். அவர் 63 நாயன்மார்களில் ஒருவராகவும் ஆனார்.      

*உறையூரைத் தலைநகராகக் கொண்டு அரசாண்டு வந்த சோழ மன்னனின் மனைவி காந்திமதி ஒரு சிறந்த சிவபக்தை. தினந்தோறும் திருச்சிராப்பள்ளி மலைக்குச் சென்று தாயுமானவரை வழிபட்டு வந்தாள். அவள் பிள்ளைப்பேறு அடைந்த போதும் தவறாமல் வழிபாடு செய்து வந்தாள். ஒருநாள் உறையூரில் இருந்து திருச்சிராப்பள்ளி சென்று கொண்டிருந்தபோது வெய்யில் கொடுமை தாளாமல் வழியில் மயங்கி விழுந்தாள். தனது இறை வழிபாடு தடைபட்டுவிட்டதே என்று மிகவும் மனம் வருந்தினாள். காந்திமதியின் மனவருத்தத்தைப் போக்க விரும்பிய இறைவன் அந்த இடத்திலேயே காந்திமதிக்குக் காட்சி தந்தார். இறைவன் சுயம்புவாகத் தோன்றியதால் தான்தோன்றீஸ்வரர் என்ற பெயர் பெற்றார். 

*ஒருமுறை நாத்திகன் ஒருவன் கோவிலில் கொடுத்த திருநீறை அணியாமல் அலட்சியம் செய்ததால் மறுபிறவியில் அவன் பன்றியாகப் பிறந்து சேற்றில் உழன்றானாம். தன் முந்தைய பிறவித் தவறை நினைத்து வருந்தி சிவனை வணங்கி, இங்குள்ள சிவதீர்த்தத்தில் நீராடிப் பாவ விமோசனம் பெற்றான் என்கிறது புராணம்.

*இது தமிழ்நாட்டு மூவேந்தரும் சேர்ந்து வழிபட்ட கோயில்.

*இக்கோயிலில் சிற்பங்களுக்குக் குறைவில்லை. உள் மண்டபத்தில் இடப்பக்கம் “யானைமீது அம்பாரியில் சோழ மன்னன் வரும் போது, அவானையைக் கோழி குத்தித் தாக்கும் சிற்பம்” உள்ளது.
*திருமாலுக்கு எதிரில் உள்ள தூணில் பிட்சாடனர் உருவம் உள்ளது. இதற்கு எதிர்க் கம்பத்தில் தாருகாவனத்து ரிஷிபத்தினிகளின் உருவங்கள் உள்ளன.   கருவறை வெளிச் சுவரில் மேற்புறத்தில் நான்கு பக்கங்களிலும், வரிசையாக இறைவனின் பல்வகையான தாண்டவங்களின் சிற்பங்கள் மிக்க கலையழகுடன் காணப்படுகின்றன.  

*திருச்சி ஜங்ஷன் மற்றும் சத்திரம் பஸ் ஸ்டாண்டிலிருந்து உறையூர் செல்ல பஸ்கள் உள்ளன. கடைவீதி பஸ் ஸ்டாப்பில் இறங்கி கோயிலுக்கு நடந்து சென்று விடலாம்.            

ஓம் நமசிவாய
 படித்து பகிர்ந்தது 
இரா இளங்கோவன் 
நெல்லிக்குப்பம். 

முருகன் கையில் வேலும் சேவற்கொடியும் இருக்கக் காரணம்.

முருகன் கையில் வேலும் சேவற்கொடியும் இருக்கக் காரணம் என்ன?
கையில் வேலைத் தாங்கியிருப்பதாலேயே வேலன்.மிருகங்களை வேட்டையாடுவதற்குப் பயன்படுத்தும் வேலினையே வேலன் தாங்கியுள்ளான். அதே போன்று தடி (தண்டு) போன்ற ஆயுதத்தைத் தாங்கியிருப்பதால் தண்டாயுதபாணி எனவும் அழைக்கப்படுவான்.

சரி, முருகனின் ஊர்தி எது தெரியுமா? முருகனின் ஊர்தி (வாகனம் என்பது வடமொழிச் சொல்) எது என்றால் மயில் என்றே பலரும் கூறுவார்கள்; ஆனால் தமிழிலக்கியங்களின் படி அது உண்மையன்று. பெருமளவான சைவர்கள் கூறுவது முருகன் வாலிபனாக சூரனுடன் போரிட்டு, அவனைக்கொன்று மயில் வாகனமும் (தமிழில் ஊர்தி) சேவலைக் கொடியும் ஆக்கினான் என்ற கந்தபுராண விளக்கமே. இவர்களிடம் அவ்வாறாயின் எவ்வாறு முருகன் குழந்தையாகவிருக்கும்போதே பிள்ளையாருடன் மாம்பழத்திற்குச் சண்டையிடும்போது மயிலேறி உலகம் சுற்றினார்? எனக் கேட்டால் பதிலில்லை { புராணத்தில் முருகன் சூரனுடன் சண்டைக்கு முன்னர் இடம்பெற்றதாக மாம்பழச் சண்டைக்கதை உள்ளது]. இந்துமதத்தை ஒரே மதமாகப் பார்த்தால் மயில் ஊர்தி கதை இரு வேறு வகையாக மகாபாரதத்தில் சொல்லப்படுகின்றது.👇
👉1. மகாபாரதத்தின் சல்ய பருவத்தின்படி அக்கினி கோழியையும், இந்திரன் மயிலையும் கொடுத்ததாகக் கூறப்படுகின்றது.
👉2. மகாபாரதத்தின் இன்னொரு இடத்தில் கருடன் மயிலைக் கொடுத்தாகவும் உள்ளது.

👉இந்து மதத்தின் விட்டுணு புராணத்தில் (Vishnu Purana) விட்டுணுவே முருகனிற்கு மயிலையும் சேவலையும் கொடுத்ததாகவும் உள்ளது.
பார்த்தீர்களா! 🧐ஒரு மயிலிற்கு ஒரே மதத்தில் எத்தனை கதைகள் என்று! இதைத்தான் `ஒரு உண்மையினை மறைக்கப் பொய் சொல்ல வெளிக்கிட்டால் பல பொய்கள் சொல்ல வேண்டிவரும்` என்பார்கள்.
👉👇சரி, புராணங்களை விடுவோம். தமிழிற்கு வருவோம். அதற்கு தமிழில் முருகன் ஒரு எல்லா ஆற்றலுமுடைய கடவுள் (supreme god )அல்ல, மாறாக குறிஞ்சி நிலத் தலைவன் என்பதனையும், சமற்கிரத சுப்பிரமணியன்- தமிழ் முருகன் வேறுபாட்டையும் அறிந்திருக்கவேண்டும்.


இப்போது சங்க இலக்கியங்கள் சிலவற்றினைப் பார்ப்போம்.
👇👇👇
`சூருடை முழு முதல் தடிந்த பேர் இசை,
கடுஞ் சின விறல் வேள் களிறு ஊர்ந்தாங்கு`
(பதிற்றுப்பத்து 11-5-6)
👆👆👆
மேலுள்ள பாடலில் நெடுஞ்சேரலாதன் அரசனை குறிஞ்சி நிலத் தலைவன் முருகனுடன் (வேள்) ஒப்பிடப்படும் பாடலில் முருகனின் ஊர்தியாக யானை (களிறு) குறிப்பிடப்படுகின்றது.

அடுத்து ஒரு புறநானூற்றுப் பாடல் ஒன்றினைப் பார்ப்போம்.
👇👇👇
`பனைக் கொடியோனும், மண்ணுறு திருமணி
புரையும் மேனி விண் உயர் புட்கொடி
விறல்வெய்யோனும், மணிமயில் உயரிய மாறா
வென்றிப் பிணி முக உணர்தி ஒண் செய்யோனும்.’
-புறம் : 56 : 1.8
👆👆👆
இப் பாடலில் மயிலைக் கொடியாகவும், யானை (பிணி முக) ஊர்தியாகவும் முருகன் கொண்டுள்ளார். இப் பாடலிற்கு சிலர் பிணிமுகம் என்பதற்கு மயில் எனச் சிலர் பொருள் கூறியுள்ளபோதும், பிணிமுகம் என்பது யானையினையும் குறிக்கும்.


மேற்கூறிய பாடலில் மயிலே கொடியாகவும், மயிலே ஊர்தியாகவும் வருவது பொருத்தமில்லை என்பதாலும், பிற சங்கப் பாடல்களில் யானையே ஊர்தியாகக் கொள்ளப்படுவதாலும் நான் இப் பாடலில் வரும் `பிணிமுகம்` என்பதனை யானை என்றே துணி கின்ற

👉👆எனவே தமிழிலக்கியங்களில் யானை தான் குறிஞ்சி நிலத் தலைவனின் ஊர்தியாகக் குறிப்பிடப்படுவதனைத் தெளிவாக காணலாம். யானைப் படை என்று ஒன்றே சில நூற்றூண்டுகளிற்கு முன்னர்வரைக் காணப்பட்டமையால் இது அறிவிற்கும் பொருத்தமானது. மறுபுறத்தே மயிலிற்கு மேல் ஏறியிருந்தால் மயிலே சுமையினைத் தாங்குமா?
அவ்வாறாயின் எவ்வாறு மயில் பிற்காலத்தில் ஊர்தியாகியது? என்ற கேள்வி எழலாம். எல்லாம் பார்ப்பனியத் திணிப்பே. இது குப்தர் காலத்தில் தமிழ் இயற்கைசார் முருகனையும் வடமொழி புராண ஸ்கந்தனையும் இணைத்தபோது நடாத்திய திருவிளையாடல்.

#சேவல்_கொடி
சேவல்தானே கொடி என்கின்றீர்களா? கோழியினை கொடியாக திருமுருகாற்றுப்படை கூறுகின்றது.
👇👇👇
கோழியோங்கிய வென்றடு விறற் கொடி
வாழிய பெரிதென் றேத்திப் பலருடன்
சீர்திகழ் சிலம்பகம் சிலம்பப் பாடிச்
சூரரமகளிர் ஆடும் சோலை”
- திருமுருகாற்றுப்படை 38
👆👆👆

பொருள்-{வில்லும் வேலும் ஏந்தி இரவுக் குறியிடத்தில் காதலியைக் காணச் சென்று கொண்டிருந்த வீரனை, மலைச் சாரல்களில் உலவித் திரிந்து அச்சுறுத்திக் கொண்டிருந்த அணங்கும் சூரும் ஆன பெண் தெய்வங்கள், தற்போது திருப்பரங்குன்றத்து மலைச்சாரலில் உள்ள சோலைகளில் தம் அச்சுறுத்தும் ஆற்றலை இழந்து எளிய மானிட மகளிரைப் போல முருகனது சேவற்கொடியை வாழ்த்தியவாறு விளையாடிக் கொண்டிருந் தார்கள்.}

இப் பாடலிலேயே கோழி முருகனின் கொடியாக முதலில் காணக்கிடைக்கின்றது. அத்துடன் முருக வழிபாட்டிற்கு முந்திய பெண் தெய்வ வழிபாட்டினையும், அதனை வெற்றி கொண்டே முருக வழிபாடு தோன்றியது என்பதும் குறிப்பிடப்படுகின்றது. தமிழர்களினதும் முதல் தெய்வங்கள், ஏனைய பழங்குடிகளைப் போன்று பெண் தெய்வங்களே. அது தொல்காப்பிய - சங்க இலக்கியங்களிற்கு முற்பட்டது. {இது பற்றி யாருமே எழுதாமல், மாயன்-சேயோன் என்பதிலிருந்தே தொடங்குவது பெரும்பாலும் ஆண்கள் எழுதுவதாலும், பிற மானிட வரலாற்றாசிரியர்களான கார்ல் மார்க்சு- ஏஙகல்சு போன்றோரின் எழுத்துக்களை உள்வாங்கமையுமே காரணங்கள் என நினைக்கின்றேன்}.

திருமுருகாற்றுப்படைக்கு முன்னரான காலத்தைய புறநானூறு (56), அகநானூறு (149) என்பன மயிலே முருகனின் கொடியாகக் காணப்பட்டது.

👉👆சரி, இந்த மயில் , கோழி எல்லாம் எவ்வாறு முருகனின் கொடியாயிற்று எனப் பார்ப்போம். அறிஞர் வானமலையின் கருத்துப்படி மயில், கோழி என்பன வெவ்வேறு பழங்குடி இனங்களின் குலக்குறிகள். அத்தகைய குடிகளை குறிஞ்சித் தலைவன் வெற்றிகொண்டதன் குறியீடுகளே அந்த மயிலும் கோழியும் என்கின்றார்.
இறுதியாக #வள்ளி கதையினையும் சுருக்கமாகப் பார்த்தால், வள்ளிக்கிழங்கு பயிர்ச்செய்கையில் ஈடுபட்ட வேளாண்மைச் சமூகத்திற்கும், வேட்டுவ குடிகளும் (வேலன்) ஒன்றிணையும் ஒரு நிகழ்வே அதுவாகும்.

ஓம் நமசிவாய 
படித்து பகிர்ந்தது
 இரா இளங்கோவன்
 நெல்லிக்குப்பம். 

Thursday, February 5, 2026

சென்னையில் இருக்கும் ஜீவசமாதிகள்

#சென்னையில்_இருக்கும் #ஜீவசமாதிகளின்_பட்டியல்
திருவொற்றியூர்: பட்டினத்தார்= கடற்கரையை ஒட்டி பட்டினத்தார் கோவில் வீதி.ஆவணி மாதத்தில் வரும் உத்ராடம் நட்சத்திரத்தன்று வருடாந்திர குருபூஜை.

பாடகச்சேரி ராமலிங்கசாமிகள்= பட்டினத்தார் கோவில் வீதியில் இவரது பெயருள்ள மடம்

ஐகோர்ட் சாமி என்ற அப்புடுசாமி= பாடகச்சேரி ராமலிங்க சாமிகள் மடத்துள் இருக்கிறது.

அருள்மிகு யோகீஸ்வரர் சாமி=வடிவுடையம்மன் கோவில் அருகில் தட்சிணாமூர்த்தி ஆலயம் ஸ்தாபித்தவர்.

பரஞ்சோதி மகான்= டோல்கேட் பஸ் ஸ்டாப் அருகில் 4,தங்கம் மாளிகை அருகில்.

ஞானப்பிரகாச சாமிகள்= வடக்கு மாடவீதி 145/30 இல் சிவாமிர்த ஞான ஆசிரமத்தில் பஞ்சலோக சிலை பிரதிஷ்டை.

மவுன குரு சாமிகள்= கடற்கரையோரம் சமாதி கோவில்.

முத்துக்கிருஷ்ண பிரம்மம்=ஆஞ்சநேயர் கோவில் பஸ் ஸ்டாப் அருகில் உள்ள அருணாச்சலேஸ்வரர் கோவில் எதிரே சமாதி; கார்த்திகை மாத சதயம் நட்சத்திரத்தன்று குரு பூஜை;

ஞானசுந்தர பிரம்மம்= முத்துக்கிருஷ்ண பிரம்மம் சமாதி அருகில் ஞான சுந்தர பிரம்மம் சமாதி.சித்திரை மாத உத்திராடம் நட்சத்திரத்தன்று வருடாந்திர குருபூஜை!!

ராயபுரம்:குணங்குடி மஸ்தான் சாயபு= காய்கறி மார்க்கெட் பின்புறம் பிச்சாண்டி தெருவில் உள்ளது.

ஞானமாணிக்கவாசக சிவாச்சாரியார் சித்தர்= மன்னார்சாமி கோவில் தெரு பழைய பாலம் இறக்கத்தில் உள்ள ருத்ர சோமநாதர் கோவிலில் சமாதி .

வியாசர் பாடி:சிவப்பிரகாச சாமி=இரவீஸ்வரர்-மரகதாம்பாள் கோவிலில் சமாதி கோவில்.

கரபாத்திர சிவப்பிரகாச சாமி=1 வது தெரு சாமியார் தோட்டம் அம்பேத்கர் கல்லூரி அருகில்.பங்குனி உத்திராடம் நட்சத்திரத்தன்று வருடாந்திர குருபூஜை!!

பெரம்பூர்:அந்துகுருநாத சுவாமிகள்=மாதவரம் நெடுஞ்சாலை பிரசன்ன விநாயகர் கோவிலில் சமாதி கோவில்-பஞ்சமுக வடிவமும் உள்ளது.

மதனகோபாலசாமி=மேல்பட்டி பொன்னப்பமுதலி தெரு ஈஸ்வரி கல்யாண மண்டபம் எதிரில் சமாதி கோவில்;

சந்திர யோகி சுவாமி=மங்களபுரம் ஐந்துலைட் அருகில்.

வேர்க்கடலை சுவாமி=அய்யாவு தெரு,திரு.வி.க.நகர்.

மதுரை சாமி=செம்பியம் வீனஸ் தியேட்டர் 2 வது குறுக்குத் தெரு வலது பக்கம் மதுரை சாமி மடத்தில்.

மயிலை நடராஜ சுவாமி=கொளத்தூர்- பெரவள்ளூர் செல்லியம்மன் கோவில் பின்புறம்.

ஓட்டேரி:ஆறுமுகச்சாமி=173/77 டிமலஸ் சாலை,பெரம்பூர் பேரக்ஸ் ரோடு-ஓட்டேரி மயானத்தில் சமாதி கோவில்-உருவப்பட பூஜை.

புரசைவாக்கம்: வீரசுப்பையா சுவாமி= புவனேஸ்வரி தியேட்டர் எதிரில்-52,பெரம்பூர் பேரக்ஸ் ரோடு மடத்தில் சமாதி கோவில்.

ஈசூர் சச்சிதானந்த சாமி=கொசப்பேட்டை சச்சிதானந்தா தெரு(வசந்தி தியேட்டர் அருகில்) சமாதி கோவில்.

எழும்பூர்:மோதி பாபா=422,பாந்தியன் சாலை போலீஸ் கமிஷனர் அலுவலகம் எதிரில் தர்கா.

அனந்த ஆனந்த சுவாமி மற்றும் சபாபதி சுவாமி=பாலியம்மன் கோவில் பின்புறம் சாமியார் தோட்டத்தில் இருவரது சாமதி கோவில்-ஐப்பசி திருவாதிரை நட்சத்திரத்தன்று வருடாந்திர குருபூஜை.

நுங்கம்பாக்கம்:கங்காத சுவாமி=ஹாரிங்டன் ரோடு 5 வது அவென்யூ ஜெயவிநாயகர் கோவிலில் சமாதி.

நாதமுனி சாமி=ஹாரிங்டன் ரோடு,பச்சையப்பன் கல்லூரி பின்வாசல் அருகில் நாதமுனி மடத்தில் சமாதி கோவில்.

பன்றிமலை சாமி=5,வில்லேஜ் ரோட்டில் ‘ஓம்நமச்சிவாய’என்ற பெயரில் ஆஸ்ரமத்தில் சமாதி.

ஆதிசேஷானந்தா=நுங்கம்பாக்கம் காவல் நிலையத்தின் பின்புறம் ஆதிசேஷானந்தா கோவிலில் சமாதி.

வீரமாமுனிவர்=நுங்கம்பாக்கம் புஷ்பா நகர் காவல்நிலையம் எதிரில் அசலத்தம்மன் கோவில்.

கோடம்பாக்கம்: ஸ்ரீபரமஹம்ஸ ஓங்கார சாமி=அசோக் நகர்-சாமியார் மடம் டாக்டர் சுப்பராயன் நமர் சாமியர் மடம் ஞானோதய ஆலயம்-ஸ்ரீபரமஹம்ஸ ஓங்கார சாமிபீடம்.

வடபழனி:அண்ணாசாமி,ரத்தினசாமி,பாக்கியலிங்கசாமிகள்=வடபழனி முருகன் கோவில் உருவாக இந்த மூவரும் காரண கர்த்தாக்கள்.இவர்களது சமாதி கோவில் முருகன் கோவில் பின்புறம் நெற்குன்றம் பாதையில் வள்ளி திருமண மண்டபம் அருகில்.

மைலாப்பூர்:திருவள்ளுவர்-வாசுகி அம்மையார்=லஸ் அருகில் திருவள்ளுவர் கோவிலில்.

அப்பர் சாமிகள்=171,ராயப்பேட்டை ஹைரோடு-சமஸ்க்ருத கல்லூரி எதிரில்,மைலாப்பூர் அப்பர் சாமிகள் சமாதி உள்ளது.

குழந்தைவேல் சுவாமி=சித்திரகுளம் எஸ்.டி.பி.கில்டு பில்டிங்கில் இருக்கிறது.

முத்தையா சாமிகள்=குழந்தைவேல் சாமிகள் சீடர்-அவரது சமாதி அருகில்.

ஆலந்தூர்:தாடிக்கார சுவாமி=ஆலந்தூர் ஈ.பி.அலுவலகம் தாடிக்காரசாமி தெரு-பழைய எண்:23-24 இடையே சந்து.உள்ளே தாடிக்கார சாமியின் சிறிய ஜீவ சமாதி கோவில்.சிவலிங்க பிரதிஷ்டை.

குழந்தைவேல பரதேசி=ஆலந்தூர் ஈ.பி.அலுவலகம் பின்புறம் 53,சவுரித்தெரு,எஸ்.ஆர்.மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி வாயிலுக்குக் கீழ்ப்புறம் சமாதி கோவில்.

கிண்டி:சாங்கு சித்தர் சிவலிங்க நாயனார்=எம்.கே.என்.ரோடு 36 ஆம் எண்-சாங்கு சித்தர் சிவலிங்கநாயனார் சமாதி கோவில்-சிவலிங்க பிரதிஷ்டை.இத்துடன் இவரது சீடர்கள் ஸ்ரீகொல்லாபுரி சாமி,ஸ்ரீஏழுமலை சாமிகளின் சமாதி,ஆனி மாத பவுர்ணமியன்று வருடாந்திர குருபூஜை.
சத்யானந்தா கோழீபீ சித்தர்=பஸ் ஸ்டாப் அருகில் உள்ள சாய்பாபா கோவில் வளாகத்தில்.

திருவான்மியூர்:பாம்பன் சுவாமிகள்-கலா சேத்ரா அருகில் திருமட வளாகத்துள் ஸ்ரீபாம்பன் சுவாமிகள் சமாதி ஆலயம்.ஸ்ரீமுருகக்கடவுள் பிரதிஷ்டை.

வால்மீகி=மருந்தீஸ்வரர் கோவில் எதிரில் சிறிய கோவில்.
சர்க்கரை அம்மாள்=75,கலா சேத்ரா ரோடு,

வேளச்சேரி:சிதம்பரச்சாமி என்ற பெரியசாமி=காந்தி சாலை திருப்பம்-1,வேளச்சேரி மெயின் ரோடு-சிவலிங்க பிரதிஷ்டை.

ராஜகீழ்ப்பாக்கம்:சச்சிதானந்த சற்குரு சாமிகள்=அகண்ட பரிபூரண சச்சிதானந்த சபையின் சமாதி.

பெருங்குடி:நாகமணி அடிகளார்=கந்தன் சாவடி பஸ்ஸ்டாப் – நாகமணி அடிகளார் சாலை அம்மன் கோவிலுகுள்.

நங்கநல்லூர்:மோனாம்பிகை-ஞானாம்பிகை- சாதுராம்
இம்மூவரின் சமாதி பிளாட் 21,பொங்கி மடம்(மாடர்ன் உயர்நிலைப் பள்ளி அருகில்)-ஸ்டேட் பாங்க் காலனி

சிட்லப்பாக்கம்:சாயி விபூதி பாவா= 83,முதல் மெயின் ரோடு,ஹெச்.சி.நகர்-சிட்லப்பாக்கம் பாலம் இறக்கத்தில் சமாதி கோவில்-அருகில் குமரன் குன்றம் மலைக்கோவில்.

தாம்பரம்: எதிராஜ ராஜயோகி-ஊரப்பாகம் அருகில் கரணை புதுச்சேரியில் இவரது சமாதி கோவில் இருக்கிறது.

படப்பை:துர்கை சித்தர்-ஜெயதுர்கா பீடம் கோவில்.
பெருங்களத்தூர்: ஸ்ரீமத் சதானந்தசாமி- ஆலம்பாக்கம் சதானந்தபுரம்- பெருங்களத்தூரில் சமாதி கோவில்.ஓம்சிவசக்திஓம்
தமிழ்நாட்டில் இருக்கும் சித்தர்பீடங்கள்,துறவிகளின் ஜீவமாதிகளின் பட்டியல் பகுதி-2
பூமியில்  சித்தர்களின் ஆட்சி துவங்கப் போகிறது;சித்தர்கள் பூமியை 72,000 ஆண்டுகளுக்கு ஆளப்போகிறார்.முதலில் கொங்கணவர் 150 ஆண்டுகளுக்கு பூமியை ஆளப்போகிறார்;இவரது ஆட்சி துவங்கியதும்,தமிழ்நாடு ஆன்மீக ரீதியாக சுத்தமாகும் என்று தெரிகிறது;சித்தர்களின் ஆட்சி துவங்கியதற்கு அடையாளமாக தமிழ்நாட்டின் பழமையான கோவில்களில் இருக்கும் குளங்களில் நறுமணம் எப்போதும் பரவிக்கொண்டே இருக்கும்;இதுதான் அடையாளம்.கடந்த 30,40,50 ஆண்டுகளாக நீதி,நேர்மை,தர்மம் மற்றும் நியாயத்துக்காகப் போராடுபவர்கள்,நேர்மையாக வாழ்வதாலேயே அனைத்தையும் இழந்தவர்கள் அனைவரும் சித்தர்களின் ஆட்சிக்காலத்தில் சகல சவுபாக்கியமும் பெற்று வளமோடு வாழப் போகிறார்கள்.அதற்குள் சித்த சக்திகளின் அருளாசியைப் பெற்று,நீதி நியாயத்துக்குக் கட்டுப்பட்டு வாழத்துவங்குவோம்;

விருதுநகரில் இருக்கும் ஜீவ சமாதிகள்

திருப்புகழ் முத்தையா சாமிகள்:விருதுநகர் நகராட்சி பின்புறம் நாராயண மடம் தெரு பிரியும் இடத்தில் திருப்புகழ்சாமி சமாதி கோவில் அமைந்திருக்கிறது.

சாத்தூர்

மாவிலிப்பட்டி சங்குசாமி
சாத்தூரிலிருந்து 25 கி.மீ.தூரத்திலுள்ள மாவிலிப்பட்டியில் சமாதி கோவில் இருக்கிறது.

அருப்புக்கோட்டை

அருப்புக்கோட்டை டூ விருதுநகர் சாலை பாவடித் தோப்பு அருகில் சமாதி கற்கோவிலாக விமானத்துடன் உள்ளது.இங்கு வருடாந்திர குருபூஜை விழா மாசி மாதத்து மகம் நட்சத்திரம் நிற்கும் நாளில்( மாசி பவுர்ணமி) நடைபெற்றுக்கொண்டிருக்கிறது.

தட்சிணாமூர்த்தி சுவாமி

அருப்புக்கோட்டை சொக்கலிங்கபுரம் நேரு மைதானத்திற்கு வடக்கே சமாதி கோவில் இருக்கிறது.இங்கு வருடாந்திர குருபூஜை விழா மார்கழி மாதம் வரும் மிருகசீரிடம் நட்சத்திர நாளன்று நடைபெற்றுவருகிறது.

சுப்பன் ஞானியார்
சொக்கலிங்கபுரம் வடக்குரதவீதி காமாட்சியம்மன் கோவில் பின்புறம் சமாதி கோவில்  இருக்கிறது.வருடாந்திர குருபூஜை விழா பங்குனி மாத புனர்பூசம் நட்சத்திரத்தன்று நடைபெற்றுவருகிறது.
ஆத்மானந்த ராமசாமி
சொக்கலிங்கபுரம் சிவன் கோவில் தெப்பக்குளத்தின் மேற்குக் கரைப்பக்கம் சமாதி கோவில் இருக்கிறது.ஐப்பசி மாதம் வரும் மூலம் நட்சத்திரநாளன்று வருடாந்திர குருபூஜை விழா நடைபெற்றுவருகிறது.

பொன்னம்பல சுவாமி

அருப்புக்கோட்டை பாவடித்தோப்பு அருகில் உள்ள ஆயிரங்கண் மாரியம்மன் கோவிலுக்கு மேற்கே சமாதி கோவில் இருக்கிறது.தை மாதம் முதல் நாள் வருடாந்திர குருபூஜை விழா நடைபெற்றுக்கொண்டிருக்கிறது.

புலியூரான்
புலியூரான் சித்தர்
அருப்புக்கோட்டையில் இருந்து 10 கி.மீ.தூரத்தில் உள்ளது புலியூரான் சமாதி.

கட்டங்குடி
ரெட்டிச்சாமி குமரவேல் மவுனகுருசாமி
அருப்புக்கோட்டையிலிருந்து 15 கி.மீ/தூரத்தில் உள்ள கட்டங்குடியில் சமாதி இருக்கிறது.வருடாந்திர குருபூஜை விழா ஆனிமாத சுவாதி நட்சத்திரத்தன்று நடைபெற்றுவருகிறது.

சிவானந்த ஜோதி

மேற்கிலிருந்து ஊருக்குள் நுழையும்போது சாலைக்கு வடபுறம் முதலில் தென்படும் கோவில் வளாகமே சிவானந்த ஜோதி சித்தர் அதிஷ்டானக் கோவில்.வருடாந்திர குருபூஜை விழா புரட்டாசி மாத பவுர்ணமியன்று நடைபெற்றுவருகிறது.

கோட்டூர்

கோட்டூர் குருசாமி
அருப்புக்கோட்டையிலிருந்து அடிக்கடி பஸ் வசதி உள்ள கோட்டூரில் குருசாமி சுவாமிகளின் சமாதி கோயில் இருக்கிறது.ஆடி மாத மகம் நட்சத்திரத்தன்று வருடாந்திர குருபூஜை விழா நடைபெற்றுவருகிறது.இவரது ஜீவசமாதி ராஜபாளையம் அம்பலபுளிபஜாரின் தெற்கு எல்லையில்,சாலியர் சமுதாயத் தெருவை ஒட்டி அமைந்திருக்கிறது.மிகவும் சக்தி வாய்ந்த ஜீவசமாதி கோயில் இந்த ராஜபாளையம் குருசாமி கோவில் ஆகும்.சுமார் 3000 குடும்பங்களுக்கு இவரே குல தெய்வமாகத் திகழ்ந்துவருகிறார்.

வடக்கு நத்தம்

ஆறுமுகச்சாமி

அருப்புக்கோட்டையிலிருந்து  பஸ் வசதியுள்ள வடக்கு நத்தம் கிராமத்தில் சமாதி கோவில் இருக்கிறது.சமாதி மீது முருகன் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.மாதம் தோறும் வரும் கார்த்திகை  நட்சத்திரத்தன்று சிறப்பு வழிபாடு நடந்து வருகிறது.

துத்தி நத்தம்

சிவத்தையா சுவாமி
அருப்புக்கோட்டை சாயல்குடி சாலையில் பரளச்சியை அடுத்து துத்திநத்தம் விலக்கு;இங்கே சிவத்தையா சுவாமிகளின் ஜீவசமாதி இருக்கிறது.

பெருமாள்கோவில்பட்டி
மாசிலானந்த சாமி
அருப்புக்கோட்டை டூ எட்டயபுரம் சாலையில் 18 கி.மீ தூரத்தில் கோடாங்கிபட்டி பஸ் ஸ்டாப்பில் இறங்கவும்.அங்கிருந்து 1 கி.மீ.தூரத்தில் உள்ளது பெருமாள்பட்டி கிராமம்.இந்த கிராமத்தில் மாசிலாந்த சாமியின் ஜீவசமாதி இருக்கிறது.வருடாந்திர குருபூஜை விழா சித்திரை மாதம் வரும் உத்திரம் நட்சத்திரநாளில் நடைபெற்றுவருகிறது.

அழகாபுரி

அருப்புக்கோட்டை டூ எட்டயபுரம் சாலையில் அழகாபுரி கிராமத்தில்(வெம்பூர் அருகில்) சமாதிகோவில் இருக்கிறது.மாசி மாதம் வரும் பவுர்ணமியன்று வருடாந்திர குருபூஜை விழா நடைபெற்றுக்கொண்டிருக்கிறது.
 ரெட்டியபட்டி

ரெட்டியப்பட்டி சுவாமிகள்
அருப்புக்கோட்டை டூ விளாத்திகுளம் சாலையில் 31 கி.மீ.தூரத்தில் நாகலாபுரம் இருக்கிறது.அங்கிருந்து 1 கி.மீ.தூரத்தில் கிழக்கே ரெட்டியபட்டி சுவாமிகளின் சமாதி திருக்கோவில் அமைந்திருக்கிறது.
ரெட்டியப்பட்டி லிங்குசாமி திருக்கோவிலும் இங்கே இருக்கிறது.

ராஜபாளையம்

குருசாமி கோவில்
கோட்டூர் குருசாமிகளே இங்கே வந்து குருசாமியாக அருள்பாலித்து வருகிறார்.இந்த கோவிலுக்கு 3000 பூசாரிகள் இருக்கிறார்கள்.குருசாமியை வழிபடுபவர்களின் வம்சத்தைச் சேர்ந்தவர்கள் அனைவரும் வரிசைக்கிரமப்படி பூஜை வைக்க வேண்டும்.ஒருவர் ஒரு முறை பூஜாரியாக  சில நாட்கள் பணிபுரிந்தால்,அவரது பூஜாரி முறை மீண்டும் வர 3 ஆண்டுகள் ஆகும்.இந்த குருசாமி கோவில் சாலியர் சமுதாயத்துக்குச் சொந்தமான  ஜீவசமாதி கோவில் ஆகும்.ஒவ்வொரு கார்த்திகை தினத்தன்றும் சிறப்பு பூஜைகளும்,அன்னதானமும் நடைபெற்றுவருகிறது.தொடர்ந்து 3 நாட்கள் இங்குவந்து வழிபட்டாலே,நமது கடுமையான பண நெருக்கடி தீர்ந்துவிடுகிறது என்பது அனுபவபூர்வமான உண்மை.பல பக்தர்களிடம் குருசாமி இன்றும் நேரில் காட்சி தந்து பேசி வருகிறார்.
பொன்னப்பஞானியார் மற்றும் கருப்பஞானியார்
குருசாமி கோவிலுக்கு நேராகச் செல்லும் தெருவில் ஒரு பர்லாங்கு தூரத்தில் இந்த ஜீவசமாதிகள் அமைந்திருக்கின்றன.கருப்பஞானியார் 60 ஆண்டுகளுக்கு முன்பு ஒரே நாளில்,ஒரே நேரத்தில் ராஜபாளையத்திலும்,வத்ராப் அருகில் இருக்கும் W.புதுப்பட்டியிலும் நேரடியாகப் பேசியிருப்பதைக் கண்டு பலரும் அதிசயப்பட்டிருக்கின்றனர்.

குமராண்டி சுவாமி

ராஜபாளையம் டூ தென்காசி சாலையில் பி.எஸ்.கே.பூங்காவிற்கு வடக்கில் விவேகானந்தர் தெரு முனையில் குமராண்டி சுவாமிகளின் ஜீவசமாதி இருக்கிறது.

திருச்சிற்றம்பல குருநாத சுவாமி
ராஜபாளையம் வடபுறம் திரவுபதி அம்மன் கோவில் தென்புறம் இந்த ஜீவசமாதி அமைந்திருக்கிறது.

கொம்புச்சாமி

ராஜபாளையத்திலிருந்து சத்திரப்பட்டி செல்லும் சாலையில்,சங்கரன்கோவில் திருப்பத்திலிருந்து ஆலங்குளம் மற்றும் சத்திரப்பட்டி செல்லும் சாலையில் கிழக்கே சாலையை ஒட்டி அமைந்திருக்கிறது கொம்புச்சாமி கோவில்.தோப்புப்பட்டி சாலியர் தெருவின் தென்புறத்தில்  அமைந்திருக்கிறது.சித்ராபவுர்ணமியன்று வருடாந்திர குருபூஜை விழா நடைபெற்றுவருகிறது.

பாலத்தடி சுவாமி

ராஜபாளையம் மலையடிப்பட்டி ரோடு அருகில் பாலமரத்தடி சுவாமிகளின் ஜீவசமாதி திருக்கோவில் அமைந்திருக்கிறது.மாசி மாதம் வரும் பூராடம் நட்சத்திர நாளன்று வருடாந்திர குருபூஜை விழா நடைபெற்றுவருகிறது.
சேஷம குருநாத சுவாமி
ராஜபாளையம் வடமேற்குப் பகுதியில் கீழ ஆவரம்பட்டி பாரதியார் தெருவின் கடைசியில் ஸ்ரீ சேஷம குருநாத சுவாமி சமாதி கோவில் இருக்கிறது.வருடாந்திர குருபூஜை கார்த்திகை மாதம் வரும் உத்திராடம் நட்சத்திரத்தன்று நடைபெற்றுவருகிறது.

அருணாச்சலேஸ்வரர்

ராஜபாளையம் அரசுமருத்துவமனை நேர் எதிரில் சாலையில் சிவலிங்க பிரதிஷ்டை செய்யப்பட்டு,அமைந்திருக்கிறது.
ஸ்ரீசத்தியமூர்த்தி சாமிகள்
ராஜபாளையம் அருள் டெக்ஸ்டைல்ஸ் மில்லுக்கு முன்னால் அருள்ஜோதி இல்லம் என்னும் பெயரில்  சுவாமிகளின் ஆசிரமம்.ஆசிரம வளாகத்திற்குள் சமாதி மேடை! வருடாந்திர குருபூஜை வைகாசி மாதம் வரும் பூரம் நட்சத்திரத்தன்று நடைபெற்றுவருகிறது.

கரிவலம் வந்த நல்லூர்
சித்தகல்ப சிரோன்மணி பொன்னையா சுவாமிகள் ஜீவசமாதி இருக்கிறது.

பொதிச்சாமி: கரிவலவந்த நல்லூரில் பஞ்சமூர்த்தி கோவிலாக இருக்கிறது.

சென்னிகுளம்

அண்ணாமலை ரெட்டியார்:கரிவலம் வந்த நல்லூரிலிருந்து 3 கி.மீ.தூரத்திலுள்ள சென்னிகுளத்தில் ஜீவசமாதி இருக்கிறது.

ராஜபாளையம் சத்திரப்பட்டி

சுப்ரமணிய சாமி
ராஜபாளையம் ஆலங்குளம் சாலையில் 10 கி.மீ.தூரத்தில் உள்ளது சத்திரப்பட்டி.மருந்து துணிகள் எனப்படும் பேண்டேஜ் உற்பத்தியில் உலகச் சந்தையைக் கைப்பற்றிவரும் தொழில் கிராமம் இது.இங்கிருக்கும் விநாயகர் ஆரம்பப் பள்ளி அருகில் வேதாந்த மடம் இருக்கிறது.இந்த மடத்தின் வளாகத்திற்குள் சுப்ரமணிய சாமி ஜீவசமாதி இருக்கிறது.வருடாந்திர குருபூஜை விழா புரட்டாசி மாதம் வரும் மிருகசீரிடம் நட்சத்திர நாளன்று நடைபெற்றுவருகிறது.

அருணாச்சல செம்பட்டை ஞானி
சத்திரப்பட்டி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி முன்புறம் இருக்கிறது.
அயனாவரம்

ஒரு சொல் வாசகன்
ராஜபாளையம் ஆலங்குளம் சாலையில் இருக்கும் சத்திரப்பட்டியை அடுத்து இருக்கும் கிராமம் இது.இங்கு இருக்கும் கண்மாயின் தென்கரையில் ஒரு சொல் வாசகன் சித்தர் பீடம் கிழக்கு பார்த்த சன்னதியில் இருந்து அருள்பாலிக்கிறார்.

ஸ்ரீவில்லிபுத்தூர்

கைலாசசுந்தர சுவாமி
ஸ்ரீவில்லிபுத்தூர் சிவகாசி சாலையில் கனரா வங்கியைக் கடந்ததும் பிரதான சாலையில் இருக்கிறது.சாலியர் சமுதாயத்தின் ஊர் நிர்வாகம் செய்துவருகிறது.

பொன்னாயிரம் சுவாமி
ஊரணிப்பட்டித் தெருவில் இருக்கிறது.வருடாந்திர குருபூஜை விழா மார்கழி மாதத்தில் வரும் சித்திரை நட்சத்திரத்தில் நடைபெற்றுவருகிறது.

ஆறுமுகச்சாமி கோவில்
ஸ்ரீவில்லிபுத்தூர் சிவகாசி சாலையில் கோவிந்தன் நகர் காலனியில் பிரதான சாலையில் வளைவில் அமைந்திருக்கிறது.இங்கு ஆறுமுகச்சாமியும்,பாம்பு தின்னி சாமியும் இருந்து அருள்பாலித்து வருகின்றனர்.இதற்கு எதிரே ஒரு சுடுகாட்டுப்பாதை செல்கிறது.அந்த சுடுகாட்டில் ஒரு ஜீவசமாதி வளாகம் இருக்கிறது.

மூவர் சமாதி என்ற அருள்ஞானிகளின் வளாகம்
மிகவும் சக்திவாய்ந்த இங்கு மதுரை சாமிகள் முதலான 23 மகான்கள் கடந்த ஆயிரம் ஆண்டுகளாக சூட்சுமமாக இருந்து அருள்பாலித்து வருகின்றனர்.

எஸ்.ராமச்சந்திராபுரம்
மதுரை ராஜபாளையம் சாலையில் கலசலிங்கம் பல்கலைக்கழகத்துக்கு அடுத்த 3 வது பஸ் ஸ்டாப் எஸ்.ராமச்சந்திராபுரம் ஆகும்.இங்கே பஸ் நிறுத்தத்திற்கு தெற்கே சதுரகிரியில் 30 ஆண்டுகளாக அன்னதானம் செய்துவரும் காளிமுத்து சுவாமிகளின் ஆசிரமமும்,ஜீவசமாதியும் இருக்கிறது.
இந்த எஸ்.ராமச்சந்திராபுரத்தின் வடக்குத் தெருவுக்கும் ,செங்குளம் கண்மாய்க்கும் நடுவே சடையாண்டி சுவாமிகளின் ஜீவசமாதி அமைந்திருக்கிறது.இவருக்கும்,சதுரகிரிக்கு நெருங்கிய தொடர்பு உண்டு.சுமார் 200 குடும்பங்களுக்கு இவரே குல தெய்வம் ஆவார்.மிகவும் சக்திவாய்ந்த ஜீவசமாதி ஆகும்.

ஓம்சிவசக்திஓம்

தமிழ்நாட்டில் இருக்கும் சித்தர்பீடங்கள்,துறவிகளின் ஜீவசமாதிகளின் இருப்பிடங்கள் பகுதி 3

அனுபவ ரீதியாகப்பார்த்தால், கோவிலுக்குச் சென்று நாம் ஒரு குறிப்பிட்ட பரிகாரம் செய்தால்,அதற்கான பலன்கள் நமக்குக் கிடைக்க கொஞ்சம் காலம் ஆகும்;ஆனால்,ஜீவசமாதிகள்,சித்தர்களின் பீடங்களுக்குச் சென்று முறையாக வழிபட்டால்(முந்தைய பதிவில் வழிகாட்டியபடி) விரைவாக அதற்குரிய பலன்கள நம்மை வந்து சேருகின்றன;
காரைக்கால் பகுதியில் இருக்கும் ஜீவசமாதிகள்:

ஆலத்தூர்

சித்தர்மலை பெருமாள் சுவாமி
காரைக்காலில் இருந்து 7 கி.மீ.தூரத்திலுள்ள ஆலத்தூரில் ஜீவசமாதியாக இருக்கிறது.இங்கே சிவலிங்கம் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.இங்கு ஆவணி மாதம் வரும் மகம் நட்சத்திரத்திலிருந்து 10 நாட்களுக்கு விழா நடைபெறும்.ஆவணி மாதம் வரும் மூலம் நட்சத்திர நாளில் குருபூஜை விழா வருடந்தோறும் நடைபெற்றுவருகிறது.

காரைக்கால்

சற்குரு சீமான் சாமியார்
காரைக்கால் பேருந்து நிலையம் எதிரிலுள்ள மடத்தில் சமாதிபீடம் இருக்கிறது.இங்கு சிவலிங்க பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.

நாகூர்

நாகூர் ஆண்டவர் தர்கா

நாகப்பட்டிணம்

அழுகண்ணி சித்தர்
நாகப்பட்டிணம் நகரின் மையப்பகுதியில் அமைந்திருக்கும் நீலாய தாட்சியம்மன் கோவிலுக்குள் அழுகண்ணி சித்தரின் ஜீவசமாதி அமைந்திருக்கிறது.

வடக்குப் பொய்கை நல்லூர்=கோரக்கர்
நாகப்பட்டிணத்தில் இருக்கும் சுனாமிப்பாலம் கடந்து 6 கி.மீ.தூரத்தில் இருப்பது கோரக்கரின் ஜீவசமாதி ஆகும்.தினமும் மதியம் அன்னதானமும்,முறையான,திட்டமிட்ட பராமரிப்பும் உள்ள சித்தரின் ஜீவசமாதி ஆகும்.பலவிதமான தெய்வீக சிறப்புகள் இங்கு உண்டு.ஒருமுறை போய் வந்தால்,கோரக்கரின் அற்புதத்தை உணருவீர்கள்.

மேலவாஞ்சூர்

ஸ்ரீரெங்கைய சுவாமிகள்
நாகூருக்கு வடக்கே 2 கி.மீ.தூரத்தில் மேலவாஞ்சூர் சுவாமிகளின் ஜீவசமாதி மடத்துக்குள் சமாதிக்கருவறையாக அமைந்திருக்கிறது.

திருமலை ராயன்பட்டினம்

புண்ணாக்கு சாமிகள்

காரைக்காலில் இருந்து 6 கி.மீ.தூரத்தில் உள்ள திருமலைராயன்பட்டிணம் ஹைஸ்கூல் சாலையில் சிவன் கோவில் உள்முகப்பில் புண்ணாக்கு சாமிகள் மடம் இருக்கிறது.இங்கு கருவறையே ஜீவசமாதியாக இருக்கிறது.வருடாந்திர குருபூஜை விழா மார்கழி மாதம் வரும் உத்திரட்டாதி நட்சத்திரநாளில் நடைபெற்றுவருகிறது
நவகண்டயோகி

திருமலைராயன்பட்டினத்தில் வெங்கடேசப்பெருமாள் கோவில் அருகே எல்லையம்மன் கோவில் மேற்கு கோடியில் குளம் அருகே சவுரியார் மடம் இருக்கிறது.அந்த மடத்தினுள் சுவாமிகளின் ஜீவசமாதி இருக்கிறது.வருடாந்திர குருபூஜை விழா ஆனி மாதம் வரும் அவிட்டம் நட்சத்திரநாளன்று நடைபெற்றுவருகிறது.(தூங்கும் போது மனிதனின் உடல் ஒன்பது துண்டுகளாகப் பிரிந்து தூங்கும் யோகநிலைக்கு நவகண்டம் என்று பெயர்;ஏராளமான தமிழ் ஆன்மீக வாதிகளுக்கு இந்த நவகண்டம் சர்வசாதாரணமாக கைகூடியிருக்கிறது.நிச்சயமாக உங்கள் ஊரில் நவகண்டம் திறனைக் கொண்ட ஆன்மீக முயற்சியாளர்கள் இருப்பார்கள்.)

அக்கரை வட்டம்

சித்தானந்த சாமிகள்

காரைக்கால் டூ நாகூர் சாலையில் அக்கரை வட்டம் பிடாரிக்குளத்தில் சாலையைக் கடந்தால் சமாதிக் கோவில் இருக்கிறது.ஆவணி மாதம் வரும் மூலம் நட்சத்திரத்தன்று வருடாந்திர குருபூஜை விழா நடைபெற்றுவருகிறது.

புதுக்கோட்டை

ஜட்ஜ் சாமிகள்
புதுக்கோட்டையின் கீழ7 ஆம் வீதியில் உள்ள புவனேஸ்வரி கோவில் வளாகத்திற்குள் ஜீவசமாதி கோவில் அமைந்திருக்கிறது.பிரதி வைகாசி மாதம் வரும் அஸ்தம் நட்சத்திர நாளில் வருடாந்திர குருபூஜை விழா நடைபெற்றுவருகிறது.

சாந்தானந்தா சுவாமி
புவனேஸ்வரி அம்மன் கோவிலில் அதிஷ்டானம்

உலகநாத சுவாமி
புதுக்கோட்டை வடக்கு ராஜவீதி வடபுறம் சுவாமிகள் மடாலயம் பெயர் பொறித்த நுழைவு வாயில் இருக்கிறது.உள்ளே மடமும் சமாதிகோவிலும் உள்ளன.வருடாந்திர குருபூஜை விழா பங்குனி மாதம் வரும் உத்திராடம் நட்சத்திரநாளின் போது நடைபெற்றுவருகிறது.

தபசுமலை

தபசுமலை துறவிகள்
புதுக்கோட்டை டூ மதுரை சாலையில் 14 கி.மீ.தூரத்தில் லேனா விலக்கு இருக்கிறது.அங்கிருந்து தெற்கே 4 கி.மீ.தூரத்தில் தபசுமலை அமைந்திருக்கிறது.தபசுமலையில் வடமேற்கே சப்தமுனிவர்கள் அடங்கிய குகைப்பாதை இருக்கிறது.இங்கே சிலாவடிவங்கள் தனித்தனியே உள்ளன.

வடுகபட்டி
சுருளிச்சாமிகள்
புதுக்கோட்டை டூ திருச்சி சாலையில் கீரனூருக்கு அருகே வடுகப்பட்டியில் சுருளிச்சாமிகளின் ஜீவசமாதி அமைந்திருக்கிறது.

செம்பூதி
சிவந்திலிங்கசாமி & ஏகம்மை
புதுக்கோட்டை டூ குழிபிறை டூ பொன்னமராவதி வழித்தடத்தில் செம்பூதியில் சமாதி குருபீடம் இருக்கிறது.தம்பதியர் இருவரும் ஒரே நேரத்தில் ஜீவசமாதி ஆனார்கள்.வருடாந்திர குருபூஜை விழா மாசி மாதம் வரும் பவுர்ணமியன்று நடைபெற்றுவருகிறது.

பனையபட்டி
சாதுபுல்லானி சுவாமி
குழிபிறை அருகே பனையப்பட்டியில் ஆயிரம் பிள்ளையார் கோவில் வளாகத்திற்குத் தெற்கே அதிஷ்டானக் கோவில் அமைந்திருக்கிறது.சுவாமி திரு உருவம் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.வைகாசி மாதம் வரும் சதய நட்சத்திர நாளில் வருடாந்திர குருபூஜை விழா நடைபெற்றுவருகிறது.

தேனிமலை
ஸ்ரீபெருமானந்த சுவாமிகள்
பொன்னமராவதிக்கு வடக்கே 10 கி.மீ.தூரத்தில் தேனிமலை இருக்கிறது.இங்கே முருகன் குன்றுக்குக் கீழே அடிவாரத்தில் ஜீவசமாதி கோவில் அமைந்திருக்கிறது.

உலகம்பட்டி
சித்தர்பெருமான்
பொன்னமராவதியிலிருந்து 9 கி.மீ.தூரத்தில் உலகம்பட்டி ஞானியார் திருமடம் இருக்கிறது.இங்கே இருக்கும் சேவுகான்ந்த சுவாமி ஜீவசமாதி பீடம் அமைந்திருக்கிறது.

அரிமழம்
கோடகநல்லூர் சுந்தரசாமி
புதுக்கோட்டையிலிருந்து 15 கி.மீ.தூரத்திலுள்ள அரிமழம் பேருந்து செல்லும் சாலையை ஒட்டி அதிஷ்டானக்கோவில் அமைந்திருக்கிறது.
 சிவகெங்கை மற்றும் காரைக்குடி
கோட்டையூர்
எச்சில் பொறுக்கி ஆறுமுகசாமி
காரைக்குடியிலிருந்து 3 கி.மீ.தூரத்தில் கோட்டையூர் இருக்கிறது.இங்கு நகரத்தார் சிவன் கோவிலின் கிழக்கே 2 கி.மீ.தொலைவு நகர விரிவாக்கப் பகுதியில் சமாதி கோவில் அமைந்திருக்கிறது.

காரைக்குடி
சிவன்செயல் சித்தர்
காரைக்குடி பழைய பஸ் நிலையம் அருகில் சமாதிகோவில் இருக்கிறது.

கோவிலூர்
கோவிலூர் ஆண்டவர்(எ) முத்துராமலிங்க ஞான தேசிகர்
காரைக்குடி அருகே மேற்கில் கோவிலூர் டூ கொற்றவாளிசூவரர் கோவிலருகே திரு மடத்தில் மகாலிங்கப்பிரதிஷ்டையுடன் கோவிலூர் ஆண்டவரின் அதிஷ்டானக் கோவில் இருக்கிறது.

ஸ்ரீதுறவு அருணாச்சல தேசிக சுவாமிகள்
மேற்படி மடத்தில் கோவிலூர் ஆண்டவர் லிங்க மூர்த்தியாகவும்,துறவு அருணாச்சல சுவாமி நந்தியாகவும் சன்னதி பலி பீடமாக கருணாந்திசாமி  அதிஷ்டானம் உள்ளது.

சிங்கம்புணரி

வாத்தியார் சாமி (எ) முத்துவடுகேச சுவாமி
திருப்பத்தூரிலிருந்து 20 கி.மீ.தூரத்தில் சிங்கம்புணரி டூ பிரான்மலை செல்லும் பாதையில் ஆற்றின் தென்கரையில் சித்தர் முத்துவடுகேசர் ஜீவசமாதி கோவில் இருக்கிறது.பவுர்ணமி தோறும் அன்னதானமும்,சிறப்பு வழிபாடும் நடைபெற்றுவருகிறது.கருவறையில் சமாதி மீது சித்தர் யோகநிலையில் இருக்கும்போது அதே நிலையில் சிலை செய்து தம் அருளை ஏற்றிய சிலை பிரதிஷ்டை செய்திருக்கிறார்.

நாட்டரசன்கோட்டை
கம்பர்
சிவகெங்கையிலிருந்து 7 கி.மீ.தூரத்தில் நாட்டரசன் கோட்டை இருக்கிறது.இங்கிருக்கும் கருப்பசாமி கோவில் அருகே கம்பர் பெருமான் சமாதி இருக்கிறது.

இடையமேலூர்
மாயாண்டி சாமிகள்
சிவகெங்கை மேலூர் சாலையில் 8 கி.மீ.தூரத்தில் இடையமேலூர் பேருந்து நிறுத்தத்திற்கு முன்னதாக சமாதிக்கோவில் அமைந்திருக்கிறாது.வருடாந்திர குருபூஜை விழா மார்கழி மாதம்  வரும் பூரம் மற்றும் உத்திரம் நட்சத்திரநாட்களில் நடைபெற்றுவருகிறது.

திருப்பத்தூர்
வாலைச்சித்தர்(எ)வேலாயுத சாமிகள்
திருப்பத்தூர் டூ சிவகெங்கை சாலையில் 4 கி.மீ.தூரத்தில் காட்டாம்பூர் தண்ணீர்ப்பந்தல் என்னும் சாமியார் மடம் கிழக்கே உள்ள தோப்பினுள் வாலைச் சித்தர்பீடம் அமைந்திருக்கிறது.

கீழப்பூங்குடி
மிளகாய்சாமி
திருப்பத்தூர் டூ சிவகெங்கை வழியில் 25 கி.மீ.தூரத்தில் இருக்கிறது.ஒக்கூர் மேற்கே 4 கி.மீ.கீழப்பூங்குடியில் மிளகாய் சாமிகளின் சமாதிக்கோவில் அமைந்திருக்கிறது.
மதுரையாண்டவர்(எ)பரஞ்சோதி சாமிகள்
கீழப்பூங்குடி மிளகாய் சாமிகள் சமாதிக்கோவிலுக்குப் பின்புறம் உள்ள தெருவில் மதுரையாண்டவர் என்னும் பரஞ்சோதி சுவாமிகளின் மடமும்,சமாதிக்கோவிலும் அமைந்திருக்கிறது.

சிவகெங்கை
மவுனகுரு சாமி
மதுரைமுக்கு ரோடு அருகில் சமாதி இருக்கிறது.

ஒழுகமங்கலம்
ஆரிய சித்தர்
சிங்கம்புணரியிலிருந்து 16 கி.மீ.தூரத்தில் ஒழுகமங்கலம் இருக்கிறது.அங்கிருக்கும் திருமேனிநாதம் திருக்கோவிலில் கன்னி மூலையில் ஆரிய சித்தர் ஜீவசமாதி நிலவறையில் இருக்கிறது.அந்த நிலவறையின் மேல் சிவலிங்கத் திருமேனி நிறுவப்பட்டுள்ளது.

சொக்கலிங்கபுரம்
சிவகுருநாத சித்தர்
சிங்கம்புணரியிலிருந்து 1 கி.மீ.தூரத்தில் சோளீஸ்வரர் கோவில் குளக்கரையில் சிவகுருநாத சித்தர் மற்றும் சீடர்கள் இருவரின் ஜீவசமாதிகள் அமைக்கப்பட்டுள்ளன.
மானாமதுரை
சதாசிவ பிரமேந்திரர்
நெரூரில் சமாதி ஆன அதே நேரத்தில் மானாமதுரை சோமநாதர் ஜோதியாக காட்சி தந்த இடத்தில் பிரகாரத்தில் சந்நிதி உள்ளது.ஆண்டு குருபூஜை விழா சித்திரை மாதம் வரும் சுத்த தசமியில் !!!

சிவப்பிரகாசம் சித்தர்சாமி மற்றும் வேலாயுதசாமி
மானாமதுரையில் இருவரது சமாதிகளும் இருக்கின்றன.

முனீஸ்வரர் சித்தர்
வேதியனேந்தல் விலக்கு அருகில் பேரில்லா மரம் உள்ள இடத்தில் ஜீவசமாதி இருக்கிறது.
தமிழ்நாட்டில் இருக்கும் சித்தர்பீடங்கள்,துறவிகளின் ஜீவசமாதிகள் இருக்கும் இடங்கள் பகுதி 4
புழல்
கண்ணப்ப சாமி
புழல் சிறைச்சாலையை அடுத்து காவாங்கரையில் கண்ணப்பசாமிகள் ஆசிரமம்;ஜீவசமாதி மேடை மீது சாமிகள் அமர்ந்த கோலத்துடன் காட்சியளிக்கிறார்.இவருக்கு அருகில் இவரது சீடர் கோவிந்த சாமியின் ஜீவசமாதி.

காரனோடை
மல்லையா சாமிகள்

காரனோடை தாண்ட குசஸ்தல ஆற்றுப்பாலத்தின் கீழ் வடகரையில் சமாதிகோவில் அமைந்திருக்கிறது.இங்கு சாமிகளின் சிலை கருங்கல்லால் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.

அந்தணர் அண்ணல் ஞானாச்சாரியார்
காரனோடை கோபிகிருஷ்ணா தியேட்டர் எதிரில் ஆத்தூர் சாலையில் இவரது சமாதி கோவில் இருக்கிறது.பிரதி ஆவணி மாதம் வரும் முதல் நாள் வருடாந்திர குருபூஜை விழா நடைபெற்றுக்கொண்டிருக்கிறது.

அலமாதி
மார்க்கண்டேய மகரிஷி
அலமாதீஸ்வரர் கோவிலுக்குள் சமாதி அமைந்திருக்கிறது.

கோவணச்சாமி
அலமாதீஸ்வரர் கோவில் அருகில் சமாதி இருக்கிறது.

பூதூர்
ஷா இன்ஷா பாபா
செங்குன்றம் வடக்கே சோழவரம் டூ ஓரக்காடு ரோட்டில் 6 கி.மீ.பூதூர் கிராமம் இருக்கிறது.இந்த கிராமத்தின் மேற்குப்பகுதியில் தர்கா உள்ளது.

பஞ்சேஷ்டி
புலேந்திரர்(சித்தர்களின் தலைவர் அகத்தியரின் சீடர்)
ரெட் ஹில்ஸ்  டூ பொன்னேரி நெடுஞ்சாலையில் ஜனப்பன் சத்திரம் கூட்டுரோடு

ஓம் நமசிவாய
 படித்து பகிர்ந்தது 
இரா இளங்கோவன் 
நெல்லிக்குப்பம். 

Wednesday, February 4, 2026

திருவள்ளூரில் உள்ள "ஞாயிறு" புஷ்பரதேஸ்வரர்

தமிழகத்தில் எத்தனையோ பழமையான கோவில்கள் இருந்தாலும், சென்னைக்கு மிக அருகில் திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள "ஞாயிறு" புஷ்பரதேஸ்வரர் கோயில் பல அரிய பொக்கிஷங்களைத் தன்னுள் கொண்டுள்ளது. இந்தப் பதிவில் அங்குள்ள அதிசயங்களை விரிவாகக் காண்போம்.

1. கிரீடம் இல்லாத 'பல்லவ விநாயகர்' - ஒரு மருத்துவ அதிசயம்! 🐘
பொதுவாக விநாயகர் சிலைகளில் அலங்காரமான கிரீடம் இருக்கும். ஆனால் இங்குள்ள விநாயகர் கிரீடம் இல்லாமல், மண்டை ஓடு போன்ற அமைப்பில் இயற்கையான யானை முகத்துடன் காட்சியளிக்கிறார்.

பல் வலி தீர்க்கும் தலம்: பல் தொடர்பான நோய்களால் அவதிப்படுபவர்கள், இங்குள்ள விநாயகருக்கு நெய் தீபம் ஏற்றி வழிபட்டால் வியக்கத்தக்க பலன் கிடைப்பதாகக் கூறப்படுகிறது.

மன நிம்மதி: பதவி மற்றும் பொருளின் மீதுள்ள அதீத மோகம் நீங்கி, மனத் தெளிவு பெற இந்த 'பல்லவ விநாயகரை' வழிபடுவது சிறப்பு.

2. சூரியன் வழிபட்ட 'ஞாயிறு' தலம் 
இவ்வூரின் பெயரே 'ஞாயிறு' (சூரியன்). ஒருமுறை பிரம்மதேவர் யாகம் செய்தபோது, அதில் ஏற்பட்ட தவறால் சூரியனின் ஒளி மங்கியது. தன் ஒளியை மீண்டும் பெற சூரியன் இத்தலத்து ஈசனை வழிபட்டார்.
சூரிய பூஜை: ஒவ்வோர் ஆண்டும் சித்திரை மாதம் முதல் 7 நாட்களில், சூரிய ஒளி நேரடியாக கருவறை சிவலிங்கத்தின் மீதும், சொர்ணாம்பிகை அம்மன் மீதும் விழுகிறது.

அபிஷேகம் கிடையாது: சூரிய ஒளி லிங்கத்தின் மீது விழும் அந்த 7 நாட்களில், சூரியனே பூஜை செய்வதாக ஐதீகம் என்பதால், உச்சிக்காலத்தில் இறைவனுக்கு அபிஷேகம் செய்யப்படுவதில்லை.

3. கண் நோய்களைத் தீர்க்கும் மருந்தீஸ்வரர் 👀
சூரியன் பார்வைக்கு அதிபதி. எனவே, பார்வை குறைபாடு உள்ளவர்கள், கண் சம்பந்தப்பட்ட அறுவை சிகிச்சை செய்துகொள்பவர்கள் இங்குள்ள ஈசனுக்கும், சூரிய பகவானுக்கும் நெய் விளக்கு ஏற்றி வழிபடுகிறார்கள். இதனால் பார்வைத் திறன் மேம்படும் என்பது நம்பிக்கை.

4. சங்கிலி நாச்சியார் பிறந்த மண் 
சுந்தரமூர்த்தி நாயனாரின் பெரும் அன்பிற்குப் பாத்திரமான சங்கிலி நாச்சியார் அவதரித்த ஊர் இதுவே. இவர் இக்கோயிலில் உள்ள புஷ்பரதேஸ்வரரைத் தொழுது சிவப்பணியில் ஈடுபட்டு வந்தவர். இவருக்கு இக்கோயிலில் தனிச் சன்னதி உள்ளது.

5. தனித்துவமான நவக்கிரக அமைப்பு 
இக்கோயிலில் நவக்கிரக சன்னதி கிடையாது. சூரிய பகவானே இங்கு பிரதானமாக இருப்பதால், அவரை வழிபட்டாலே ஒன்பது கிரகங்களையும் வழிபட்ட பலன் கிடைக்கும். பிரிந்த தம்பதியினர் மீண்டும் இணைய இங்கு கோதுமைப் பொங்கல் படைத்து வழிபடுகின்றனர்.

கோயில் விபரங்கள்:  ஊர்: ஞாயிறு கிராமம் (சோழாவரம் வழி), திருவள்ளூர் மாவட்டம். நேரம்: காலை 7.30 - 11.00; மாலை 4.30 - 7.30. (ஞாயிற்றுக்கிழமைகளில் காலை 6 மணி முதல் மதியம் 1 மணி வரை).

நமது பாரம்பரியத்தையும், அறிவியலும் ஆன்மீகமும் கலந்த இத்தலத்தின் பெருமைகளையும் உலகறியச் செய்வோம்! 
ஓம் நமசிவாய 
படித்து பகிர்ந்தது
 இரா இளங்கோவன்
 நெல்லிக்குப்பம். 

Followers

அதிசய லிங்கம் - தலையில் குடுமியுடன் காட்சி தரும் ஈசன்!

அதிசய லிங்கம் - தலையில் குடுமியுடன் காட்சி தரும் ஈசன்!  காஞ்சிபுரம் மாவட்டம் பொன்விளைந்த களத்தூரில் அமைந்துள்ள அருள்மிகு முன்குட...