Sunday, April 5, 2026

செஞ்சுடேஸ்வரர் குருங்குளம் சிவன்கோயில்

தஞ்சாவூர் மாவட்டம், தஞ்சாவூர் வட்டம், குருங்குளம் சிவன்கோயில் 

தஞ்சை புதுக்கோட்டை சாலையில் உள்ள திருக்கானூர்பட்டி நாலு ரோட்டில் கிழக்கில் திரும்பி ஏழுப்பட்டியில் தெற்கில் திரும்பி 5 கிமி சென்றால் குருங்குளம் அடையலாம். 

குருங்குளம் பகுதியில் புகழ்பெற்ற அறிஞர் அண்ணா சர்க்கரை ஆலை  ஊர்  குருங்குளம் கிழக்கு, குருங்குளம் மேற்கு, எனப் பிரிக்கப்பட்டுள்ளது. நாம் காணவிருக்கும் சிவன் கோயில் கீழ் பாதியில் தான் உள்ளது பெரிய ஒரு குளத்தின் கரையில் தான் இந்த சிவாலயம் அமைந்துள்ளது. 

இது வாகுயர் நாட்டின் தலைமை கிராமமான குருங்குளமாகும். இந்த பெயர் வருவதற்கான ஒரு காரணத்தையும் தெரிந்து கொள்வோம். 

இந்த ஊரில் நவகிரகங்களில் ஒருவரான குரு வழிபட்டதால் குரு குளம் எனப்படுகிறது என்கின்றனர். 
பெரிய குளத்தின் கரையில் சிவாலயம் மற்றும் மாரியம்மன் விநாயகர் கோயில்கள் உள்ளன.  மேற்கு நோக்கிய திருக்கோயில். 

நவக்கிரகங்களும் வழிபட்ட ஸ்தலம்;  சூரியன் ஒவ்வொரு நாளும் அந்திசாயும் நேரத்தில்  சிவபெருமானிடம் தனது ஒளிக்கதிர்களை சிவலிங்கம் மீது படரச் செய்து வணங்கி மறையும்  தலமாக இயல்பாகவே அமைந்துள்ளதாக கூறுகின்றனர். அந்த வகையில் இத்தலம் மிகவும் சிறப்புக்குரியத் தலமாக விளங்குகிறது.

கோயிலும் குளமும் அருகருகே இருக்கும் இடத்தில், பல முனிவர்களும், சித்தர்களும் நித்தம் வந்து சிவபெருமானை வழிபடுவார்கள் என  நம்பப்படுகிறது. குருங்குளம் செஞ்சுடேஸ்வரர் கோயிலில். மேலும் ஒரு பெருமையாக பெருமாள் , ஸ்ரீதேவி, பூதேவியுடன் கிழக்கு நோக்கி கம்பீரமாக காட்சி தருகின்றனர்.  ஒரே இடத்தில் சிவனையும், பெருமாளையும் வழிபட நமக்கு நல்வாய்ப்பு கிடைக்கிறது. 

மேற்கு நோக்கி அமைந்துள்ள சிவலிங்கத்தை காணுவதும், அப்படி ஒரு தல மண்ணில் நம் பாதம் படுவதே ஒரு சிறப்பாகும். 

இறைவன்  செஞ்சுடேஸ்வரர் இறைவி   அகிலாண்டேஸ்வரி 

'வெண்சுடர்' (திங்கள்/சந்திரன்) மற்றும் 'செஞ்சுடர்' (ஞாயிறு/சூரியன்) ஆகியவை சிவபெருமானின் இரு கண்களாகக் கருதப்படுகின்றன. செஞ்சுடர் ஈஸ்வரன் என்பது சிவபெருமானின் ஒளியுள்ள, சிவந்த வடிவம் அல்லது அருட்பெருஞ்ஜோதியைக் குறிக்கும் சொல் தினமும் மாலை கதிரவன் ஒளி வீழ்ந்து செஞ்சுடராக காட்சியளிப்பதால் இப்பெயர் என நினைக்கிறேன். 

இறைவன் மேற்கு நோக்கிய கருவறை கொண்டுள்ளார். வாயிலில் இரண்டு பிரம்மாண்டமான துவாரபாலகர்கள் நிற்கின்றனர். உயர்ந்த விமானம் ஒன்று அவரது கருவறை மீது நிற்கிறது. நீண்ட மண்டபத்தில் எதிரில் நந்தியும் கொடிமரமும் உள்ளது.  அம்பிகை தெற்கு நோக்கிய கருவறையில் உள்ளார்.  அவற்றின் வாயிலிலும் இரு பெரிய துவாரபாலகி சிலைகள்  உள்ளன. 

கருவறை கோஷ்டங்களில் துர்க்கை பிரம்மன் லிங்கோத்பவர் தென்முகன் விநாயகர் என உள்ளனர். சுற்று மதில் சுவர் இல்லாத பிரகாரமாக உள்ளது. முதலில் தெற்கில் வராகி ஒரு சன்னதியில் உள்ளார். அடுத்து அழகிய சிற்றாலயம் ஒன்றில் விநாயகர் அடுத்து ஸ்ரீதேவி பூதேவி சமேத பெருமாள் வாயிலில் இரண்டு ஆழ்வார்கள், ஒருபுறம் ஆஞ்சநேயர்  அடுத்து  முருகன் ஒரு சிற்றாலயத்தில் உள்ளார். இரண்டு  சன்னதிகளின் இடையில்  கஜலட்சுமி சன்னதி. 

வடக்கில் சண்டேசர், வடகிழக்கில் பைரவர் சூரியன் உள்ளனர். பழுதடைந்துபோன கோயில் சமீப காலத்தில் புதுப்பிக்கப்பட்டுள்ளது. ஆயினும் இறைவன் இங்கு எழுந்தருளி பல ஆயிரம் ஆண்டுகளாகலாம். 
 குளக்கரையில் அமைந்துள்ள இக்கோயில் செம்பாறாங்கல் கற்கள் எனப்படும் ஒருவித laterite  கற்களை கொண்டு கட்டப்பட்டு  காலப்போக்கில் கோயில் சிதைந்து போனது.

இந்த ஸ்தலத்துக்கு நவக்கிரக நாயகர்கள் சூக்ஷும  வடிவில் வந்து செஞ்சுடேஸ்வரரை தரிசித்து வருவதால் இந்த கோயிலில் நவக்கிரக சன்னதி ஏதும் கிடையாது. இங்குள்ள இறைவன் செஞ்சுடேஸ்வரரை வழிபட்டாலே " நவக்கிரகங்களையும் வழிபட்ட பேறு கிட்டும்" என நம்பப்படுகிறது. 

இத்தலத்தில் இங்கு பவுர்ணமி பூஜையும், பிரதோஷ வழிபாடும் பக்தர்களால் சிறப்பாக நடத்தப்பட்டு வருகிறது.

இக்கோயிலின் அருகே எழுந்தருளியுள்ள வேதமுத்து மாரியம்மன் தான் கிராமத்தின் காவல் தெய்வமாக உள்ளார். 

மேவி எழுகின்ற செஞ்சுடர் ஊடுசென்று
ஆவி எழும்அள வன்றே உடலுற
மேவப் படுவதும் விட்டு நிகழ்வதும்
பாவித்து அடக்கிற் பரகதி தானே.
ஓம் நமசிவாய
 படித்து பகிர்ந்தது 
இரா இளங்கோவன் 
நெல்லிக்குப்பம். 

வல்லம் வஜ்ரகண்டேஸ்வரர் சிவன்கோயில்

தஞ்சாவூர் மாவட்டம், தஞ்சாவூர் வட்டம், வல்லம் வஜ்ரகண்டேஸ்வரர்   சிவன்கோயில் 
வல்லம்; தஞ்சாவூர் -  திருச்சி செல்லும் சாலையில் 12  கி.மீ தொலைவில் உள்ளது. தொல்காப்பிய உரையில் வல்லம் சோழ நாட்டுப் பிவூரும், அழுத்தூரும், நாங்கூரும், கலன்சேரியும் பெருஞ்சிக்கலும், வல்லமும், கிழாரும், முதலிய பதியிற் தோன்றி... என்று குறிப்பிடுவதை நோக்கும்போது வல்லம் என்ற ஊரின் பெருமையும் குறித்து உணர முடிகிறது.

வல்லத்திற்கு அருகே செம்பாறாங்கற்பாறைப் படிவுகளில், தொல்பழங்காலச் சான்றுகள் கிடைக்கின்றன. இங்கு சுரண்டிகள், வெட்டும் கருவிகள் மற்றும் நுண்கற்கருவிகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. சிவப்பு மற்றும் கருப்பு நிறப் பானையோடுகளும், இரும்புக்கருவிகள், எலும்புப் பொருள்கள், கல் மணிகள் மற்றும் பிற பொருள்களும் கிடைத்துள்ளன. தமிழ் பிராமி எழுத்துப்பொறிப்புள்ள ஓடுகள் சிலவும் இங்கு கிடைத்துள்ளன.

வரலாற்றுக்காலத்திலும், வல்லம் ஒரு சிறந்த ஊராகத் திகழ்ந்தது. இங்கு ஒரு கோட்டையும், அதைச் சுற்றிலும் அகழியும் இருந்தது. வான்பார்வையில் இதனை இன்றும் காணலாம், 
இங்குள்ள கோட்டை, இடைக்காலத்தைச் சேர்ந்ததாக கருதப்படுகின்றது. தஞ்சாவூருக்குப் பாதுகாப்பளிக்கும் அரணாக வல்லம் செயல்பட்டுள்ளதாகத் தெரிகின்றது. 

வல்லத்தில் சோழர் காலக் கல்வெட்டுகள் உள்ளன. இங்குள்ள சோழீஸ்வரர் கோயிலில் சோழர், போசளர், பாண்டியர் கல்வெட்டுகள் உள்ளன. இக்கோயில் கரிகால சோழீஸ்வரமுடையார் கோயில் என்று குறிப்பிடப்படுகின்றது. இங்குள்ள கோட்டை பகுதிக்குள் வஜ்ராகண்டேஸ்வரர் சிவாலயம் ஒன்றும் நரசிங்கப் பெருமாள் கோயில் ஒன்றும் உள்ளது. இவை தவிர கோட்டைக்கு வெளியில் சோழீஸ்வரர் கோயில் ஒன்றும் ஏகெளரி அம்மன் கோயிலும் பிரசித்தி பெற்றவை

இறைவன்  வஜ்ஜிரேசுவரர் / வஜ்ரகண்டேஸ்வரர் 
இறைவி மங்களாம்பிகை.

கிழக்கு நோக்கிய இந்த சிவாலய வாயிலில் ராஜகோபுரம் காணப்படுகிறது. முன் மண்டம் ஓட்டு கூரையாக உள்ளது. இதில்  நந்தியும் பலிபீடமும், உள்ளன. மூலவர் சன்னதிக்கு முன்பாக இரு புறமும் துவாரபாலகர்கள் உள்ளனர். வலப்புறம் சன்னதியில்  விநாயகர் உள்ளார். இடப்புறம் சன்னதியில் பாலதண்டாயுதபாணி  முருகன் உள்ளார். இதனை ஒட்டி வடபுறம் சஞ்சீவி ஆஞ்சநேயர் ஒரு மாடத்தில் உள்ளார்.  விநாயகர் சன்னதிக்கு முன்பாக மூஞ்சுறும், பலிபீடமும் உள்ளன. முருகன் சன்னதிக்கு முன்பாக மயிலும், பலிபீடமும் உள்ளன. 
மூலவர் கருவறைக்கு முன்பாகவும்  ஒரு நந்தி உள்ளது. மூலவர் கருவறையின் வலப்புறம் தெற்கு நோக்கிய அம்பிகை சன்னதி உள்ளது. கோஷ்டத்தில் தக்ஷணமூர்த்தி, வடக்கில் துர்க்கை சன்னதி உள்ளன. 

திருச்சுற்றில் சண்டேசர் சன்னதி உள்ளது. வடகிழக்கில் கோபுரத்தினை ஒட்டி கௌதம முனிவர் ஒரு மாடத்தில் உள்ளார் அருகில் நவக்கிரக சன்னதி காணப்படுகிறது.  அதில் சூரியன் மேற்கு நோக்கியுள்ளார். 

இத்தலத்தில் மாசி மாதத்தில் சூரிய ஒளி சுவாமி மீது வீழ்ந்து ஒரு சிறப்பான நிகழ்வாகும். 

கோயிலின் தென் புறத்தில் அகழி போன்ற குளம் போன்ற அமைப்பு காணப்படுகிறது. கோயிலின் பக்கத்திலிருந்து இப்பகுதிக்குச் செல்வதற்கு படிகள் காணப்படுகின்றன. ஐம்பதடிக்கும் மேல் ஆழம் உள்ள இந்த குளம் இந்த குளம் தான் கோட்டையில் இருந்த அனைவருக்கும் குடிநீருக்காக பயன்பட்டு வந்தது. இன்று மிகவும் பாழடைந்து முள்மரங்களால் மூடி கிடக்கிறது. தஞ்சை பகுதியை சேர்ந்த சில  இளைஞர்கள் இதனை சுத்தம் செய்யும் பணியில் 50 வாரங்களாக ஈடுபட்டுள்ளனர் என்பது வியப்புக்குரியது. இக்குளம் 1300 வருட பழமையான இந்த  வல்லம் சுவரன் மாறன் கோட்டை குளம் எனப்படுகிறது. புராண கதையில் இதனை வஜ்ர தீர்த்தம் என கூறப்படுகிறது. 

 இக்கோயிலுக்கு ஒரு புராண கதையும் சொல்லப்படுகிறது.  கௌதம மகரிஷியின் ரிஷிபத்தினியின் மேல்  இந்திரன் ஆசை கொண்டு, கௌதம மகரிஷியின் உருவத்தோடு வந்து இன்பம் அனுபவிக்கிறான்.  அதனை அறிந்த கௌதமர் அகலிகையைக் கல்லாக மாற சாபமிட்டார். இந்திரனையும் சபிக்கிறார், கல்லாக மாறிய அகலியை  ராமனின் கால்பட்டதால் மீண்டும் மனிதவுருவம் பெற்றதாக  புராணம்.  

கருட புராணத்தின்படி, வஜ்ர கண்டம் என்பது மோகத்தால் குரு, மற்றும் பிறரின் மனைவியுடன் தகா உறவு கொள்ளுதல் போன்ற 
செயல்களில் ஈடுபடுபவர்களுக்கு, நரகத்தில் வழங்கப்படும் தண்டனை ஆகும். இது கடுமையான பாவங்களுக்கு அளிக்கப்படும் தண்டனைகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது. 

இந்திரன் தன் வஜ்ர கண்ட தண்டனை நீங்க  வேண்டி இறைவனை இங்கு வந்து வேண்டி தவம் செய்ததால் இங்கு இறைவனுக்கு வஜ்ரகண்டேஸ்வரர் என பெயர் வந்தது. 

இந்திரன் தன் வஜ்ராயுதத்தால் தென்புறத்தில் ஒரு தீர்த்தம் உண்டாக்கி இத்தல இறைவனை வேண்டியதால் வஜ்ரேஸ்வரர் என பெயர் வந்தாதாக கூறுகின்றனர். இந்திரனது வஜ்ரகண்ட சாபத்தினை நீக்க வேண்டி மும்மூர்த்திகளும் கௌதமரை கேட்டுக்கொண்ட தலம் இது என கூறப்படுகிறது.  

திருவையாறு அருகில் உள்ள வீரமாங்குடியில் அமைந்துள்ள சிவாலயத்திலும் வஜ்ரகண்டேஸ்வரராகவும், அம்மன் மங்களாம்பிகையாகவும் அருள்பாலிக்கின்றனர். வஜ்ராசுரன் என்ற அரக்கனை அழித்த தலமாக இது கருதப்படுகிறது.  

ஒரு பழம்பெரும் கோட்டை நகரில் குடியிருக்கும் இறைவனை காண வாருங்கள். 
ஓம் நமசிவாய 
படித்து பகிர்ந்தது 
இரா இளங்கோவன் 
நெல்லிக்குப்பம். 

Monday, March 30, 2026

பங்குனி உத்திர விரத பலன்கள்

_பங்குனி உத்திரம்_

பங்குனி உத்திரம் என்பது பங்குனி மாதத்தில் பௌர்ணமி மற்றும் உத்திர நட்சத்திரம் இணைந்து வரும் ஒரு புனிதமான நாளாகும். இது சிவனும் பார்வதியும், முருகன் - தெய்வானை, ராமன் - சீதை போன்ற தெய்வத் திருமணங்கள் நடந்த சிறப்பான நாளாகக் கருதப்படுகிறது. இந்த நாளில் விரதம் இருந்து இறைவனை வழிபட்டால், திருமணத் தடைகள் நீங்கி, நீண்ட ஆயுள் மற்றும் மகிழ்ச்சியான இல்லற வாழ்க்கை கிடைக்கும் என்பது நம்பிக்கை. 

பங்குனி உத்திர விரத பலன்கள்:
• திருமண யோகம்: திருமணத் தடைகள் நீங்கி, விருப்பமான வாழ்க்கைத் துணை அமையவும், மகிழ்ச்சியான திருமண வாழ்வுக்கும் இந்த நாளில் விரதம் இருப்பது சிறந்தது.
• குடும்ப ஒற்றுமை: தம்பதிகளுக்கு இடையே ஒற்றுமை மற்றும் அன்பு பெருகும், குடும்பப் பிரச்சினைகள் தீரும்.
• பதவி உயர்வு: அரசு தொடர்பான காரியங்களில் வெற்றி கிடைக்கும் மற்றும் வேலை, பதவி உயர்வு கிடைக்கும்.
• மன நிம்மதி: களங்கமில்லாத சந்திர ஒளியின் கீழ் வழிபாடு செய்வதால், மன அமைதியும், உடல் ஆரோக்கியமும் கிடைக்கும்.
• புண்ணியம்: இறைவனின் அருளால் பாவங்கள் நீங்கி, புண்ணிய பலன்கள் சேரும். 

முக்கிய வழிபாட்டு முறைகள்:
• முருகன் மற்றும் சிவன் ஆலயங்களுக்குச் சென்று வழிபாடு செய்தல்.
• விரதம் இருந்து மாலையில் முருகனுக்குத் திருக்கல்யாண உற்சவம் கண்டு உணவருந்துதல்.
• தேவாரம், திருவாசகம், கந்த சஷ்டி கவசம் பாடுதல்.
• தேவைப்படுபவர்களுக்கு அன்னதானம் அல்லது நீர் மோர் தானம் வழங்குதல்.

ஓம் நமசிவாய
 படித்து பகிர்ந்தது 
இரா இளங்கோவன் 
நெல்லிக்குப்பம். 

Tuesday, March 24, 2026

ஹோமங்களில் சமித்துக்களை அக்னியில் போடும் சாஸ்திரம் சொல்லும் பலன்கள்.

_ஹோமங்களில் பலவித சமித்துக் களை அக்னியில் போடுகிறோம். சாஸ்திரம் சொல்லும் அதன் பலன்கள்_

ஹோமங்களில் பலவித சமித்துக் களை அக்னியில் போடுவதை
 ஆகுதி என்பார்கள். இப்படிச் செய்யப்படுகிற ஒவ்வொரு சமித்துகளுக்கும் ஒவ்வொரு விதமான பலன்கள் உண்டு என்கிறது சாஸ்திரம்! 

சமித்து என்பது ஹோமகுண்டத்தில் சேர்க்கப்படும் குச்சிகள்.ஒவ்வொரு சமித்து குச்சிக்கும் ஒவ்வொரு வேண்டுதல்களும் பலன்களும் உள்ளன என்கிறார் சென்னை நங்கநல்லூர் பாலாஜி சாஸ்திரிகள்.
 
வில்வம் : சிவனுக்கும் மஹாலட்சுமிக்கும் பிடித்தமானது 

துளசி சமித்து : நாராயணனுக்குப் பிடித்தது 

அத்தி சமித்து : சுக்கிரனுக்குப் பிடித்தது 

நாயுருவி சமித்து : புதனுக்குப் பிடித்தது 

பலாமர சமித்து : சந்திரனுக்குப் பிடித்தது 

அரசரமர சமித்து : குருவிற்குப் பிடித்தது 

வன்னிமர சமித்து : சனீஸ்வரனுக்குப் பிடித்தது 

அருகம் புல் : விநாயகருக்கும் ராகுவுக்கும் பிடித்தது 

மாமர சமித்து :
 சர்வமங்களங்களையும் சித்திக்கும் 

பாலுள்ள மரத்தின் சமித்துக்கள் : வியாதி நாசினி என்பார்கள். 

தாமரை புஷ்பம் : லக்ஷ்மிக்கும் சரஸ்வதிக்கும் பிடித்தமானது 

மாதுளை மரம் : வசீகரம் கிடைக்கும். தேஜஸ் பெறலாம். 

அத்திக் குச்சி : மக்கட்பேறு. 

நாயுருவி குச்சி : மகாலக்ஷ்மி கடாட்சம் 

எருக்கன் குச்சி : எதிரிகள் இல்லாத நிலை 

அரசங் குச்சி : அரசாங்க நன்மை 

கருங்காலிக் கட்டை: ஏவல், பில்லி சூனியம் அகலும். 

வன்னிக் குச்சி : கிரகக் கோளாறுகள் நீங்கிவிடும். 

புரசங் குச்சி : குழந்தைகள் கல்வியும் ஞானமும் பெறுவர். 

வில்வக் குச்சி : செல்வம் சேரும் 

அருகம்புல் : விஷபயம் நீங்கும். 

ஆலங் குச்சி : புகழைச் சேர்க்கும். 

நொச்சி : காரியத்தடை விலகும். 

வில்வம் : வில்வ சமித்தினைக் கொண்டு ஹோமம் செய்தால் ராஜ யோகம் கிட்டும். 

வில்வப்பழ ஹோமத்தால் சகல செல்வங்களையும் பெறலாம். 
சிவசக்தி சம்பந்தமான சண்டி ஹோமம் போன்ற யாகங்களில் வில்வம் சமித்தாகப் பயன்படுத்தினால் பலன்கள் நிறைய உண்டு. 

துளசி : துளசி சமித்தினால் ஹோமம் செய்தால் நீண்ட காலமாக திருமணம் ஆகாதவர்களுக்கு திருமணம் கைகூடி நடைபெறும். எண்ணிய காரியம் கைகூடும். 

சோமவல்லிக் கொடி : கொடிக்கள்ளி எனப்படும் இதன் ரசத்தைப் பிழிந்து 'சோமாம்ருதம்' ம்ருத்யுஜய மந்திரத்தினால் ஹோமம் செய்தால் சகல நோய்களும் நீங்கி, தேகத்தில் அமிர்தம் உண்டாகி பிரம்மதேஜஸ் பெறலாம். கொடியை கணுக்கள் தோறும் ஒடித்து பாலில் தோய்த்து சூர்ய மந்திரம் கூறி அக்னியிடம் இட வேண்டும். இதனால் காச நோய் அகலும். 

பலாசு சமித்து : இது சந்திர கிரக சமித்தாகும். இதனால் சந்திரகிரக பிரீதியாகும். பலாசு புஷ்பத்தால் எல்லா இஷ்ட காரியங்களும், பலாசு ரஸத்தால் ஞான விருத்தியும், சிறந்த புத்தியும் பெறலாம். பலாசு குச்சிகளை அக்னி ஹோத்திரம் செய்து அதனால் ஸ்நாபானம் செய்யின் பிரம்ம ஞானம் அடைந்து பரப்பிரம்ம சொரூபம் அடையலாம். 

அரசு சமித்து : அரசு சமித்து குரு கிரகத்தின் சமித்தாகும். அரச மரத்தின் சமித்தால் தலைமைப் பதவி வரும். போரில் ஜெயம் அடைந்து அரச தன்மை கிடைக்கும். 

வெள்ளை எருக்கு : இது சூரிய கிரகத்தின் சமித்தாகும். இம்மூலிகை சர்வசக்தி பொருந்தியது. வசியம், மோகனம் ஆகிய அஷ்டாமித்துகளையும் அடையலாம். 

இச்சமித்து களால் ராஜ வசியம், ஸ்திரீ வசியம், மிருக வசியம், சர்ப்ப வசியம், லோக வசியம், சத்ரு வசியம், தேவ வசியம் ஆக சர்வ வசியங்களையும் அடையலாம். எடுத்த வேலை இனிதே முடியும். 

செம்மர சமித்து : இது அங்காரக கிரக சமித்தாகும். இதனால் ரண ரோகங்கள் நீங்கும். தைரியம் பெருகும். 

நாயுருவி சமித்து : இது புது கிரக சமித்தாகும். இதனால் லட்சுமி கடாட்சம் ஏற்படும். சுதர்சன ஹோமத்திற்கு இதுவே சிறந்தது. 

அத்தி சமித்து : இது சுக்கிர கிரகத்தின் சமித்தாகும். பித்ரு ப்ரீதி பெற்று விரும்பிய பொருள் கைகூடும். 

பில்லி, சூனியம், பிசாசு பயங்களிலிருந்து விடுவித்து சத்ருக்களை வெல்லும். பைத்தியமும் மேக ரோகங்களும் அகலும். வாக்கு சித்தியும் ஏற்படும். பசு, யானை, குதிரை நோய் நீங்கும். 

வன்னி சமித்து : 

வன்னி சமித்து சனிக் கிரகத்தின் சமித்தாகும். இதில் அக்னிப் பகவான் இருப்பதாகப் புராணங்கள் கூறுகின்றன. வன்னி சமித்து யாக பஸ்மாவைத் தரித்தால் அது நெற்றியில் எழுதியிருக்கும் யம சம்பந்தமான எழுத்தைத் தொலைத்து விடும். 

இந்த சமித்து பஸ்பம் பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகிய மூவரையும் மூவுலகினையும் மூன்று அக்னிகளையும் முக்குணங்களையும் குறிப்பதாக இருக்கிறது. சகல தெய்வ, தேவாதி களும் இச்சமித்தால் மகிழ்ச்சி அடைகிறார்கள். பூகம்பங்களால் உண்டாகிற பயங்கள் நீங்கும். சகல தோஷங் களும் நிவர்த்தியாகும். 

தர்ப்பை சமித்து : கேது பகவானுக்கு தர்ப்பை சமித்து மிகவும் பிடித்தமானதாகும். இது ஞான விருத்தியைத் தரும். 

அருகம்புல் : இது ராகு பகவானுக்குப் பிடித்தமானது. இதனால் பூர்வ ஜென்ம வினைகளும் சர்வ இடையூறுகளும் நீங்கி காரியம் சித்தியடையும். 

நற்றுணையாவது நமசிவாயவே.....

படித்து பகிர்ந்தது 
இரா இளங்கோவன் 
நெல்லிக்குப்பம். 

Friday, March 20, 2026

கும்பகோணம் நாகேஸ்வரர், நாகநாதர்.

குடந்தைக் கீழ்க்கோட்டம்  (நாகேசுவரசுவாமி திருக்கோயில்)இறைவர் திருப்பெயர்:   நாகேஸ்வரர், நாகநாதர்.  இறைவியார் திருப்பெயர்: பிருகந்நாயகி, பெரியநாயகி.  தல மரம்:  வில்வமரம் - (Vilvam or Bael Tree)  தீர்த்தம் : சிங்கமுக தீர்த்தம். மகாமகத்தீர்த்தம்  வழிபட்டோர்:சம்பந்தர், அப்பர்,  சேக்கிழார், சிங்கமுக தீர்த்தம். Sthala Puranamஅமுதகலசத்தின் (குடத்தின்) வில்வம் சிவலிங்கமான தலம். தேவாரப் பாடல்கள் : பதிகங்கள்    :    அப்பர்   -    1. சொன்மலிந்த மறைநான்கா (6.75); பாடல்கள்     : சேக்கிழார்  -       நல்லூரில் நம்பர் அருள் (12.21.215,216 & 217) திருநாவுக்கரசு சுவாமிகள் புராணம்,                                      வந்து அணைந்து திருக்கீழ்க் கோட்டத்து (12.28.408) திருஞானசம்பந்தர் நாயனார் புராணம்.  "கோயிற் பெருத்தது கும்பகோணம்" என்னும் மொழிக்கேற்ப இத்தலத்தில் ஏராளமான கோயில்கள் உள்ளன. தீர்த்தக் கிணற்றில் படிகள் இறங்கிச் செல்ல வேண்டும்; இறங்கு வாயிலில் கல்லில் இரு சிங்கங்கள் சுதையில் உள்ளன. இங்குள்ள நடராச மண்டபம், "பேரம்பலம்" எனப்படுகிறது. ரத அமைப்பில் உள்ளது; இருபுறங்களிலும் உள்ள கல் (தேர்¢ச்) சக்கரம் கண்டு மகிழத் தக்கது, இச்சக்கரங்களின் ஆரங்களாக 12 ராசிகளும் இடம் பெற இரண்டு குதிரைகளும் நான்கு யானைகளும் இழுக்கும் நிலையில் இத்தேர் மண்டபம் அமைந்துள்ளது மனதைக் கவர்வதாக உள்ளது; பெயரே ஆனந்தத் தாண்டவ நடராசசபை அல்லவா? நடனத்திற்குச் சிவகாமி தாளம் போடும் பாவனையும், மகாவிஷ்ணு குழலூதும் காட்சியும் பேரழகுடையன. மூலவர் - அழகான திருமேனி; உயரமான ஆவுடையார் - மிகவும் குட்டையான பாணம். 'பாடகச்சேரி ஸ்ரீ இராமலிங்கசுவாமிகள்' என்னும் மகான்; புதர் மண்டிக்கிடந்த இத் திருக்கோயிலைச் சீர்த்திருத்தித் திருப்பணிகள் செய்வித்து 1923-ஆம் ஆண்டில் கும்பாபிஷேகம் செய்வித்துள்ளார். ராஜகோபுரம், மேற்குக் கோபுரம், நடராசசபை, சுற்றுச்சுவர்கள், சங்கமுகதீர்த்தக்கிணறு முதலிய திருப்பணிகள் அவரால் செய்யப்பட்டவை. இதற்காக இம் மகான், தம் கழுத்தில் பித்தளைச் செம்பு ஒன்றை உண்டிக் கலயமாகக் கட்டிக் கொண்டு தெருக்கள்தோறும் சென்று பிச்சையெடுப்பது போல நிதி திரட்டிய அருஞ்செயலை இன்று கேட்டாலும், நினைத்தாலும் நம் மனம் நெகிழ்கின்றது. சித்திரை மாதம் 3வது  நாள் சூரிய கிரணங்கள் காலையில் மூலஸ்தானத்தில் உள்ள மூர்த்தியின் மேல் படுகின்றது.
ஓம் நமசிவாய
 படித்து பகிர்ந்தது
 இரா இளங்கோவன்
 நெல்லிக்குப்பம். 

Friday, March 6, 2026

ஒரே ஆவுடையில் இரண்டு லிங்கங்கள்.

ஆரண்யேச்வரம் (கீழைத் திருக்காட்டுப் பள்ளி)
 ஒரே ஆவுடையில் இரண்டு லிங்கங்கள்! - கீழைத்திருக்காட்டுப்பள்ளி அதிசயமும் வரலாறும் 
தமிழகத்தின் ஆன்மீகப் பொக்கிஷங்களில் ஒன்றான, மயிலாடுதுறை மாவட்டம் திருவெண்காடு அருகிலுள்ள அருள்மிகு ஆரண்யேஸ்வரர் திருக்கோயில் பற்றிய  தகவல் இதோ!

 அபூர்வ இரட்டை லிங்கம் (தசலிங்கம்): இக்கோயிலின் கருவறையில் மற்ற கோயில்களில் இல்லாத ஒரு அதிசயம் அரங்கேறியுள்ளது. பொதுவாக ஒரு ஆவுடையில் ஒரு பாணம் (லிங்கம்) மட்டுமே இருக்கும். ஆனால், இங்கு ஒரே ஆவுடையில் இரண்டு லிங்கத் திருமேனிகள் அமையப் பெற்றுள்ளன. இது 'தசலிங்கம்' என்று போற்றப்படுகிறது. அக்னி பகவான் சிவபெருமானை இரண்டு திருமேனிகளாக ஆராதித்ததன் அடையாளமே இது என்று கூறப்படுகிறது. இந்த தரிசனம் 
 காணப்படுவது தனிச்சிறப்பு.

 தல வரலாறு: 'ஆரண்யம்' என்றால் காடு. முற்காலத்தில் முல்லைக் காடாக இருந்த இப்பகுதியில், ஒரு பசு பால் சொரிந்த இடத்தைத் தோண்டிப் பார்த்தபோது இந்த சுயம்பு லிங்கம் கண்டெடுக்கப்பட்டது. முல்லை வனத்தில் தோன்றியதால் ஈசன் 'ஆரண்யேஸ்வரர்' என்றும், அன்னை 'அகிலாண்டேஸ்வரி' என்றும் அழைக்கப்படுகின்றனர்.

 நண்டு பூஜித்த விநாயகர்: இத்தலத்தின் மற்றுமொரு சிறப்பு 'நண்டு விநாயகர்'. பூர்வ ஜென்ம சாபத்தால் நண்டாகப் பிறந்த ஒரு கந்தர்வன், இங்குள்ள விநாயகரை வழிபட்டு சாப விமோசனம் பெற்றதாக வரலாறு. எனவே, இங்கு விநாயகரை வழிபட்டால் தீராத வினைகளும் தீரும் என்பது நம்பிக்கை.

 பரிகாரச் சிறப்புகள்:

பதவி உயர்வு: பதவியை இழந்தவர்கள் அல்லது வேலையில் தடை இருப்பவர்கள் இத்தல இறைவனை தரிசித்தால் மீண்டும் நல்வாய்ப்புகள் கிடைக்கும்.

மேற்கு நோக்கிய குரு: இங்குள்ள தட்சிணாமூர்த்தி ஆறு சீடர்களுடன் மேற்கு நோக்கி அமர்ந்து அருள்வது கல்வி மற்றும் ஞானத்திற்கு மிகச் சிறந்தது.
பாவ விமோசனம்: தெரிந்தோ தெரியாமலோ செய்த பாவங்களுக்காக இத்தல தீர்த்தமான 'அமிர்த தீர்த்தத்தில்' நீராடி இறைவனை வேண்டினால் மன அமைதி கிடைக்கும்.

 தேவாரம் பாடல் பெற்ற தலம்: திருஞானசம்பந்தர் மற்றும் திருநாவுக்கரசர் ஆகியோரால் பாடல் பெற்ற காவேரி வடகரைத் தலங்களில் இது 12-வது சிவத்தலமாகும்.

 கோயில் அமைந்துள்ள இடம்: மயிலாடுதுறையிலிருந்து பூம்புகார் செல்லும் சாலையில் திருவெண்காட்டிற்கு மிக அருகில் (1 கி.மீ) கீழைத்திருக்காட்டுப்பள்ளி அமைந்துள்ளது.

அர்ஜுனனுக்கு பாசுபத அஸ்திரம் சிவபெருமான் வழங்கிய இடம் இதுதான் விழாக்கள்: சிவராத்திரி, கந்தசஷ்டி, ஆருத்ரா தரிசனம், விநாயகர் சதுர்த்தி போன்றவை சிறப்பாகக் கொண்டாடப்படுகின்றன.
சிறப்பு: இழந்ததை திருப்பித் தரும் தலம், மற்றும் இங்குள்ள சன்னதியில் ஏழு லிங்கங்கள் உள்ளதாகவும் அறியப்படுகிறது
. ஓம் நமசிவாய 
படித்து பகிர்ந்தது 
இரா இளங்கோவன் 
நெல்லிக்குப்பம். 

Wednesday, March 4, 2026

வியாக்ரபாதர் பயணித்த "நவ புலியூர்க் கோயில்கள்..

சிவன் காட்டிய மோட்சப் பாதை: வியாக்ரபாதர் பயணித்த "நவ புலியூர்க் கோயில்கள்" - ஒரு விரிவான ஆன்மீகத் தொகுப்பு! 
தமிழகத்தில் எண்ணற்ற சிவத்தலங்கள் இருந்தாலும், 'புலியூர்' என்ற பெயரோடு தொடர்புடைய ஒன்பது தலங்களுக்கு ஒரு தனிச்சிறப்பு உண்டு. இந்த ஒன்பது ஊர்களுக்கும் வியாக்ரபாத முனிவர் (புலிக்கால் முனிவர்) நேரில் சென்று சிவனை வழிபட்டதால் இவை "நவ புலியூர்க் கோயில்கள்" என்று போற்றப்படுகின்றன.

யார் இந்த வியாக்ரபாதர்? ஏன் இந்தப் பயணம்?
மகாபாரதக் காலத்தில் உபமன்யு முனிவரின் தந்தையான மத்யந்தினர், இறைவனுக்கு மலர் தூவி வழிபட விரும்பினார். வண்டுகள் தீண்டாத, அதிகாலையில் மலரும் தூய்மையான மலர்களைப் பறிக்க ஏதுவாக, மரங்களில் ஏறுவதற்கு ஏதுவாக 'புலியின் கால்களையும்', மலர்களைப் பறிக்க 'புலியின் நகங்களையும்' இறைவனிடம் வேண்டிப் பெற்றார். அதனால் அவர் வியாக்ரபாதர் (வியாக்ர - புலி, பாத - கால்) என்று அழைக்கப்பட்டார்.

இவரும், ஆதிசேஷனின் அம்சமான பதஞ்சலி முனிவரும் சிவபெருமானின் ஆனந்தத் தாண்டவத்தைக் காண தவம் இருந்தனர். அவர்களுக்குத் தரிசனம் தந்த ஈசன், இந்த ஒன்பது புலியூர் தலங்களையும் தரிசித்துவிட்டு, திருவரங்கத்தில் யாத்திரையை முடிக்குமாறு ஆணையிட்டார்.
9 திருத்தலங்களின் சிறப்புகள்:
📍 1. பெரும்பற்றப்புலியூர் (சிதம்பரம்): இதுவே முதன்மையான தலம். பஞ்ச பூதங்களில் 'ஆகாயம்'. இங்கு நடராஜப் பெருமான் ஆடும் ஆனந்தத் தாண்டவத்தைக் காணவே வியாக்ரபாதர் தவம் இருந்தார். இன்றும் சிதம்பரத்தில் நடக்கும் பூஜைகளில் வியாக்ரபாதர் வகுத்த "புஷ்பார்ச்சனை" முறை பின்பற்றப்படுகிறது.

📍 2. திருப்பாதிரிப்புலியூர் (கடலூர்): கடலூர் மாநகரின் இதயப்பகுதியில் அமைந்துள்ள நடுநாட்டுத் தலம். அன்னை பார்வதி தேவி ஒற்றைக்காலில் நின்று தவம் புரிந்தபோது, இறைவன் பாதிரி மரத்தடியில் காட்சியளித்தார். வியாக்ரபாதர் வழிபட்டதால் இப்பெயர் பெற்றது.

📍 3. எருக்கத்தம்புலியூர் (ராஜேந்திரபட்டினம்): கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் அருகே உள்ளது. இங்கு இறைவனுக்கு 'நீலகண்டேஸ்வரர்' என்று பெயர். தேவாரப் பாடல் பெற்ற தலம். யாழ் மீட்டிப் பாடிய திருநீலகண்ட யாழ்ப்பாண நாயனார் அவதரித்த பெருமைக்குரிய ஊர் இது.

📍 4. ஓமாம்புலியூர்: சிதம்பரத்தில் இருந்து 30 கி.மீ தொலைவில் உள்ளது. ஈசன் குருவாக அமர்ந்து உமாதேவிக்கு 'ஓங்கார'ப் பொருளை (பிரணவ மந்திரம்) உபதேசித்த தலம். இங்கு தட்சிணாமூர்த்திக்கு மிக விசேஷமான சன்னதி உண்டு.

📍 5. சிறுபுலியூர் (மயிலாடுதுறை): முனிவர்கள் இருவருக்கும் இருட்டிவிட்டதால் வழி தெரியாமல் தவித்தபோது, இறைவன் ஒளியாக வந்து வழிகாட்டிய தலம். இங்கு சிவபெருமானும் அரங்கநாதப் பெருமாளும் ஒரே இடத்தில் காட்சியளிப்பது சிறப்பு.

📍 6. அத்திப்புலியூர் (கீழ்வேளூர்): நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ளது. 'அத்தி' என்றால் யானை. யானையும் புலியும் (வியாக்ரபாதர்) சேர்ந்து வழிபட்ட தலம். இங்கு பதஞ்சலி மற்றும் வியாக்ரபாதருக்குத் திருமணக் கோலக் காட்சி கிடைத்தது.

📍 7. தப்பளாம்புலியூர் (திருவாரூர்): திருவாரூர் அருகே அமைந்துள்ளது. வியாக்ரபாத முனிவர் தனது புலிக்கால்கள் மாறி, மீண்டும் மனித உருவம் பெற்ற தலம் இது என்பார்கள். 'தப்பு' (பிழை) நீங்கிய இடம் என்பதால் தப்பளாம்புலியூர் எனப்படுகிறது.

📍 8. பெரும்புலியூர் (திருவையாறு): தஞ்சை மாவட்டம் திருவையாறு அருகே உள்ளது. வியாக்ரபாதர் நீண்ட காலம் தங்கி பூஜித்த தலம். இங்குள்ள இறைவன் 'வியாக்ரபுரீஸ்வரர்' என்று அழைக்கப்படுகிறார்.

📍 9. கானாட்டம்புலியூர்: காட்டுப் பகுதியில் அமைந்த தலம் என்பதால் 'கானாட்டம்புலியூர்' எனப்படுகிறது. பதஞ்சலி முனிவர் இங்கு தங்கி வழிபட்டதால், இத்தல இறைவன் 'பதஞ்சலிநாதேஸ்வரர்' என்று அழைக்கப்படுகிறார்.

யாத்திரையின் நிறைவு:
ஒன்பது தலங்களையும் தரிசித்த முனிவர்கள், இறுதியில் ஸ்ரீரங்கம் சென்று அரங்கநாதரைத் தரிசித்தனர். ஹரியும் ஹரனும் ஒன்று என்பதை உலகிற்கு உணர்த்திய பிறகு, திருச்சி அருகே உள்ள திருப்பட்டூர் (பிரம்மபுரீஸ்வரர் கோயில்) சென்று அங்கு ஜீவ சமாதி அடைந்தனர்.

இந்த நவ புலியூர் தலங்களை ஒரே பயணமாகவோ அல்லது ஒவ்வொன்றாகவோ தரிசிப்பது மன அமைதியையும், மோட்சத்தையும் தரும் என்பது ஐதீகம்.

 

Followers

செஞ்சுடேஸ்வரர் குருங்குளம் சிவன்கோயில்

தஞ்சாவூர் மாவட்டம், தஞ்சாவூர் வட்டம், குருங்குளம் சிவன்கோயில்  தஞ்சை புதுக்கோட்டை சாலையில் உள்ள திருக்கானூர்பட்டி நாலு ரோட்டில் ...