Wednesday, July 8, 2026

உத்தரமேரூர் சுந்தர வரதராஜப் பெருமாள் கோயில்.

உத்தரமேரூர் சுந்தர வரதராஜப் பெருமாள் கோயில்
வேறு பெயர்கள் 

ஸ்ரீவேலி விஷ்ணுக்ரஹம் , கொங்கரையர் நின்ற பெருமாள் கோயில், வெள்ளைமூர்த்தி ஆழ்வார் கோயில், இராஜேந்திர சோழ விண்ணகர், புருஷோத்தமத்துப் பெருமாள் கோயில், பஞ்சவரதர் கோயில்

காலம் / ஆட்சியாளர் 

கி.பி.8-ஆம் நூற்றாண்டு/இரண்டாம் நந்திவர்மப் பல்லவன்

கல்வெட்டு / செப்பேடு 

தாங்குதளத்தின் கருங்கல்லில்தான் கல்வெட்டுகள், எல்லாம் பொறிக்கப்பட்டுள்ளன. அதில் உள்ள பழமையான கல்வெட்டு சம்ஸ்கிருத மொழியில் பல்லவ கிரந்த எழுத்துகளில் உள்ளது. இக்கோயிலை காஞ்சிபுரத்துப் பாடகம் என்னும் ஊரில் வாழ்ந்த பரமேசுவரன் என்ற தச்சன் கட்டினான். அவன் நல்ல அறிவாளி. வாய்மையே தலையாய் நின்றவன். அவனால் இப்பெருங்கோயில் கட்டப்பட்டது. இதன் அளவுகளையும், அங்கங்களையும் அணிகளையும் எவன் ஒருவன் அறிகிறானோ அவனே வாஸ்து வித்தையில் சிறந்தவன். இவ்வாஸ்து மிகவும் மகோன்னதமானது. பெயராலும், வகையாலும் மிகச் சிறந்தது. வாஸ்துக்களில் எல்லாம் சூரியனைப் போன்றது. இவ்வூரில் ஆகம வல்லுநர்கள் பலர் இருக்கின்றனர். அவற்றை எவ்வாறு பயன்படுத்துவது என அனுபவம் மிக்கவர்கள் உள்ளனர். அவர்கள் அறிவுரைப்படி இக்கோயில் கட்டப்பட்டது என அக்கல்வெட்டுக் கூறுகிறது. 
ஏவம் வாஸ்து அபவத் மஹத் ப்ரவிகதம் நாமனாச ஜாத்யாதினா ஏனாஸ்மின் பகுபிஹ் யதாகம விதை: க்ராமே ப்ரயோகான் விதை; ஸ்ரீமத்பாடக வாஸினா க்ருத தியா தக்ஷ்ணா சதா வாக்மினா தேன இதம் பரமேசுவரேன மஹதா ஸ்ரீவாக்மினோ பாஸ்கர: அஸ்ய அலங்காரமானம் ச யதா லக்ஷண சம்யுதம் யஸ்சைனம் வேத்தி சகலம் ஸ வை வாஸ்துவிதாம் வர: 

என அக்கல்வெட்டில் உள்ளது. இதிலிருந்து இக்கோயிலை எட்டாம் நூற்றாண்டில் மிகச் சிறந்த கோயிலாகக் கட்டியிருக்கிறார்கள் என்பதில் ஐயமில்லை . 

இக்கோயிலில் திருமாலின் ஒன்பது மூர்த்தங்கள் உள்ளன என்றும் இது மரீசி ஸம்ஹிதை என்னும் வைணவ நூல்படி கட்டப்பட்டது என்றும் கண்டோம். அந்நூலில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மறையோர்கள் வசிக்கும் ஊர்களில் நவமூர்த்தி பிரதிஷ்டை செய்ய வேண்டும் என்ற விதி உள்ளது. 

இவ்வூர் 1200 மறையோர்களுக்கு நந்திவர்மனால் தானம் அளிக்கப்பட்டது என்று கண்டோம். இவ்வூரில் பலர் ஆயிரத்து இருநூற்றுவர் எனப் பெயர் கொண்டிருந்ததை கல்வெட்டுகள் காட்டுகின்றன. ஆதலின் இக்கோயில் தோற்றுவித்த காலத்திலேயே மரீசி ஸம்ஹிதையைப் பின்பற்றி கட்டியிருக்கிறார்கள் என அறியலாம். இதன் பின்னர் பல்லவன்  நந்திவர்மனின் கல்வெட்டு முழுமையாக எழுதப்படாமல் நின்றுவிட்டது.

 பத்தாம் நூற்றாண்டில் கொங்கரையர் என்பவனால் புதுப்பிக்கப்பட்டுள்ளது. ஆதலின் இக்கோயில் கொங்கரையர் ஸ்ரீ கோயில் என்றும் பெயர் காணப்படுகிறது. கோயில் அதிட்டானத்தில் "கொங்கரையர் நின்ற பெருமாள்'' என்ற பெயர் கல்வெட்டில் பொறிக்கப்பட்டுள்ளது. இத்திருப்பணி செய்யப்பட்டபோது கோயிலின் பண்டைய அமைப்பை எவ்விதத்திலும் மாற்றாமல் பணி செய்துள்ளது போற்றத்தக்க ஒன்றாகும். 

பார்த்திவேந்திர வர்மனின் ஒரு கல்வெட்டில் கொங்கரையர் எடுப்பித்த ஸ்ரீவேலி விஷ்ணுக்ருஹம்" என்ற குறிப்பு காணப்படுகிறது. இது பத்தாம் நூற்றாண்டில் நடைபெற்ற திருப்பணி. இராஜராஜ சோழனின் கல்வெட்டுகள் இக்கோயிலில் பல காணப்படுகின்றன. இவற்றில் கொங்கரையர் கோயில் என்றும், கொங்கரையர் கோயிலான ஸ்ரீவேலி விஷ்ணுக்ருஹம் என்றும் புருஷோத்தமம் என்றும் பெயர்கள் காணப்படுகின்றன. 

1002வது ஆண்டில் இராஜராஜன் காலத்தில் கொங்கரையர் ஸ்ரீ கோயிலில் நின்ற பரமசுவாமிகளுக்கு விளக்கெரிக்க 96 ஆடுகள் தானம் அளிக்கப்பட்டன. ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு புருஷோத்தமத்து பெருமானுக்கு நைவேத்யத்துக்காக ஒரு நிலம் கொடுக்கப்பட்டது. மேலும் நான்கு ஆண்டுகளுக்கு பிறகு திரிவிக்ரமச் சேரியில் வாழ்ந்த ஒரு பெண்மணி ஸ்ரீவேலி விஷ்ணுகிருஹத்து வெள்ளைமூர்த்தி பெருமானுக்கு விளக்கெரிக்க 96 ஆண்டுகள் கொடுத்தாள். 

இதே போல ஹ்ரீஷீகேசச் சேரியைச் சேர்ந்த ஒருவர், ஸ்ரீவேலி விஷ்ணுக்ருஹத்தில் எழுந்தருளி நின்ற ஸ்ரீராகவப் பெருமானுக்கு விளக்கெரிக்க 96 ஆடுகள் கொடுத்தார். இராஜராஜனின் அண்ணன் ஆதித்த கரிகாலனின் தேவி திரு அயோத்தி பெருமானுக்கு கோயில் கட்டினாள் என்று கண்டோம். 

அது வேறு கோயிலோ எனத் தோன்றுகிறது. இக்கோயில் சுந்தர வரதர் கோயிலேயே இருந்த மற்றொரு இராமர் கோயில் எனலாம். இராஜராஜனின் இறுதி ஆண்டில் வெள்ளை மூர்த்தி ஆழ்வார்க்கும், ஸ்ரீராகவ தேவருக்கும் நாள்தோறும் மூன்று சந்திகளிலும் திரு அமுது படைக்க ஊர்ச்சபையார் நிலம் அளித்தனர். இக்கோயிலில் திருப்பதியம் பாடும் ஸ்ரீ வைணவர்களுக்கு இந்த சந்திகளில் படைக்கப்படும் நைவேத்ய ப்ரஸாதத்தை விநியோகிக்க வேண்டும் என்று விதிக்கப்பட்டது. 

இவற்றிலிருந்து இராஜராஜன் காலத்தில் இக்கோயில் மிக உன்னத நிலையில் இருந்தது என்றும், பெரும்பாலும் ஸ்ரீவேலி விஷ்ணுக்ருஹம் என்றே அழைக்கப்பெற்றது என்றும் பெருமாள் வெள்ளைமூர்த்தி ஆழ்வார் என்றே அழைக்கப்பெற்றார் என்றே அறிகிறோம். இங்கிருந்த ஸ்ரீராமரும் சிறப்பாக வழிபடப்பட்டார் என்றும் அறிகிறோம். இவ்வளவு சீரும் சிறப்புமாக இருந்த நிலையில் இராஜேந்திர சோழன் இக்கோயிலுக்கு திருப்பணி செய்திருக்கிறான். இக்கோயில் "இராஜேந்திர சோழ விண்ணகர்'' என்று அழைக்கப்பட்டது. 

பண்டைய பெயரும் சிலகாலம் வழங்கப்பெற்று பின்னர் அது வழக்கற்றுப் போயிற்று. உத்தரமேரூரின் பெயரும் இராஜேந்திர சோழ சதுர்வேதி மங்கலம் என மாறியதைக் கண்டோம். இந்தப் பெயர் மாற்றம் இராஜேந்திர சோழனின் நான்காவது ஆட்சியாண்டில் அதாவது 1016ல் ஏற்பட்டது. இரண்டு ஆண்டுகள் கழித்து இக்கோயில் வழிபாடு செய்வதற்காக நான்கு வைகானஸர்கள் அமர்த்தப்பட்டனர். இவர்கள் அரசாணிமங்கலத்தில் வழிபாடு செய்து கொண்டிருந்தார்கள். அங்கிருந்து இக்கோயிலுக்கு மாற்றப்பட்டு, இங்கு வழிபட பங்குக்கள் கொடுக்கப்பட்டன. இதிலிருந்து இக்கோயிலில் வைகாஸனர்களே பூஜை செய்தனர் என்று அறிகிறோம். இன்றும் வைகானஸப் பிரிவினரே பூஜை செய்கிறார்கள் என்பது குறிக்கத்தக்கது. 

இராஜேந்திரன் காலத்தில் 1017ல், இக்கோயிலில் இருந்த கிருஷ்ணப் பெருமானுக்கு பூஜைக்கும், நைவேத்யத்துக்கும், திருவிழாக்களுக்கும், நிலம் தானம் அளிக்கப்பட்டது. இவற்றை ஸ்ரீ கிருஷ்ணகணப் பெருமக்களே மேற்பார்வையிட வேண்டும் என விதிக்கப்பட்டது. இக்கோயிலில் இராமபிரானுக்கு சிறப்பாக வழிபாடு நடந்ததைப் போலவே கண்ணபிரானுக்கும் சிறப்பாக பூஜை திருவிழாக்கள் நடைபெற்றன. 

இதே சோழ மன்னன் காலத்தில் கி.பி.1031ல் இவ்வூரில் 2240 குழி நிலம் தரிசாக இருந்தது. இவற்றிலிருந்து எவ்வித வரியும் வரவில்லை. ஆதலின் ஊர்ச்சபையார் இந்நிலங்களை தாங்களே மேற்கொண்டனர். இவற்றை வரி ஏதுமில்லாமல் கோயிலுக்கே கொடுத்து விட்டனர். இந்நிலங்களைத் திருத்தி இவற்றின் வருவாயைக் கொண்டு கோயிலின் மூன்று சந்நிதிகளில் பூஜைக்கும், நான்கு அயனங்களில் சிறப்பு வழிபாட்டுக்கும், கிரஹண காலங்களில் சிறப்பு வழிபாடுகளுக்கும் பயன்படுத்த வேண்டும். மேலும் இக்கோயிலில் மேல் தளத்தில் உள்ள அனந்தசயனப் பெருமாளுக்கு பூஜைக்கும் விளக்குக்கும் பயன்படுத்த வேண்டும். மேலும் இக்கோயிலில் காலையிலும் மாலையிலும் நம்மாழ்வாரின் திருவாய்மொழியைப் பாட மூவர் நியமிக்கப்பட்டனர். அவர்களுக்கு ஊதியங்களுக்கும் இதைப் பயன்படுத்த வேண்டும். இதிலேயே மற்றொரு தானம் இக்கோயிலில் இருந்த ஸ்ரீ ராகவதேவருக்கு சிறப்பு பூஜைக்கும் பயன்படுத்த வேண்டும் என ஊர்ச்சபையார் விதித்தனர்.

 இராஜேந்திர சோழனின் ஆட்சியில் 1042ல், இக்கோயிலுக்கு ஒரு நந்தவனம் அமைக்கவும் குந்தவை ஆழ்வார் பெயரில் ஒரு மடம் ஏற்படுத்தவும் அம்மடத்தில் ஸ்ரீ வைணவர்களுக்கு உணவு அளிக்கவும் நிலம் கொடுக்கப்பட்டது. கோயில்களை ஒட்டி மடம் அமைத்து அதில் வைணவர்களுைக்கு உணவளிப்பது தொன்று தொட்டு வரும் ஒரு மரபாகும். 

1038ல் இராஜேந்திரனின் ஆட்சியில் ஊர்ச்சபையார் இக்கோயிலுக்கு நிலமளித்தார். அந்நிலத்தின் வருவாய் கொண்டு இரண்டு பணிகள் செய்ய பணித்தனர். ஒன்று நாள்தோறும் இக்கோயிலில் மூவர் திருவாய் மொழி விண்ணப்பம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டது. அதே போல நாள்தோறும் வாஜஸனேய வேதம் ஓதவும் ஏற்பாடாயிற்று. இதிலிருந்து திருவாய்மொழி ஓதவும், வேதம் ஓதவும் இரண்டு மகா நிலம் அளித்துள்ளது. வேதத்தையும் திருவாய்மொழியையும் சமமாக பாவித்தனர் என அறிய முடிகிறது. இராஜேந்திர சோழன் ஆட்சியிலேயே இரண்டு முறை திருவாய்மொழி விண்ணப்பிக்க ஏற்பாடு செய்யப்பட்டது குறித்துக் கொள்ளத்தக்கது. 

இக்கோயிலில் உள்ள முதலாம் குலோத்துங்க சோழனின் காலச் சான்றும் சிறப்பு மிக்கதே. சோழவிச்சாதர பல்லவரையன் என்பவன் இவ்வூரில் 30 பாடகம் நிலம் வாங்கினான். இந்நிலம் 60-70 ஆண்டுகளாக விளைச்சலின்றி தரிசாகக் கிடந்தது. கோயிலை ஒட்டி ஒரு மடம் அமைத்து அதன் செலவுகளுக்காக கொடுத்தான். அத்துடன் திருமழிசை வள்ளல் என்பவரும் வீற்றிருந்தான் தாசன் என்பவரும் பணம் கொடுத்தனர். அவர்களது பணம் கொண்டு ஒரு மனை வாங்கப்பட்டது. இதில் அருளாளாசன் மடம் என்று ஒரு மடம் வைக்கப்பட்டது. அந்நிலத்தின் வருவாயைக் கொண்டு இம்மடத்தை நடத்த ஏற்பாடாயிற்று. அந்நிலத்துக்கு வாங்கி அளித்தவர் பெயரால் சோழ விச்சாதர விளாகம் எனப் பெயர் வைக்கப்பட்டது. அந்நிலத்துக்கு நிலம் வாங்கிய ஆண்டு வரி விலக்கும் கொடுக்கப்பட்டது. அடுத்த ஆண்டு முதல் ஆண்டுதோறும் ஐந்து காசு வரிகட்ட வேண்டும். நிலத்தைப் பண்படுத்த முதலாண்டு வரி விலக்களித்து ஊக்கமளித்து அடுத்த ஆண்டு முதல் வரிவிதிக்கும் முறை, அக்காலத்து வேளாண் - வரலாற்றை அறிய முடிகிறது. மூன்றாம் குலோத்துங்க சோழன் ஆட்சியில் இரண்டு செய்திகள் இங்கு இடம் பெற்றுள்ளன. 38வது வருடம் இக்கோயிலில் நாட்டியமாடும் ஒரு பெண் ஆயிரத்து இருநூற்றுவ மாணிக்கம் என்பது அவளது பெயர். அவள் இக்கோயிலின் பிரகாரத்தையும் முன் மண்டபத்தையும் பிற சில கட்டிடங்களையும் கட்டினான். அவளது பணியையும் பக்தியையும் பாராட்டி, ஊரார் கோயில் தானத்தாரின் அனுமதியுடன் தினந்தோறும் பெருமாளுக்கு படைக்கப்படும் நைவேத்யத்திலிருந்து ஒரு குறுணி, திருவமுதை, இவளுக்கும் இவள் வம்சத்தாருக்கும் அளிக்க ஏற்பாடு செய்தனர். நாட்டியப் பெண்கள் கோயில்களுக்கு எவ்வளவு திருப்பணி செய்திருக்கிறார்கள் என்பதற்கு இது ஒரு எடுத்துக்காட்டு 

 அடுத்து வந்த மூன்றாம் இராஜராஜனது காலத்தில் இப்பெண் இக்கோயிலுக்கு மேலும் சில திருப்பணிகள் செய்தாள். அதையும் மெச்சி ஊரார் இவளுக்கு சில சலுகைகளை அளித்தனர். விக்ரம் சோழனின் 11ம் ஆண்டில், ஆடி மாதம் தோறும் வெள்ளைமூர்த்தி ஆழ்வாரின் திருவிழாவில் சொக்கப் பெருமாள் உலா வரும்போது அபிஷேகத்துக்கும் அமுதுபடி சாத்து படிகளுக்கும், அழகிய தேவன் என்பவன் நிலம் அளித்தான். இக்கல்வெட்டில், வெள்ளைமூர்த்தி ஆழ்வார் கோயிலில் திருவிழா எழுந்தருளும் சொக்கப்பெருமாள் என்பதால் வெள்ளைமூர்த்தி ஆழ்வார் என்பது மூலவர் பெயராகவும், சொக்கர் என்பது உத்ஸவர் பெயராகவும் காணப்பெறுகின்றன. மதுரையில் சொக்கநாதர் என்பது சுந்தரேசுரர் என அழைக்கப்படுவது நாம் அறிந்ததே அது போல. சொக்கப் பெருமாள் என்பதே சுந்தரவரதர் எனும் பெயரின் பிரதிபலிப்பு எனலாம். பின்னர் வந்த பிற்கால பாண்டியன் வீரபாண்டியன் காலத்தில், இக்கோயில் சொக்கப் பெருமாள் கோயில் என் அழைக்கப்பட்டது. சொக்கப்பெருமாள் கோயிலைச் சுற்றி வசிக்கும் வணிகர்கள், கேதாரீசுரர் , கோயிலைச் சுற்றி வசிக்கும் வணிகர்களைப் போல செக்குகளுக்கும், எண்ணைக்கும் இனி வரி செலுத்த வேண்டியதில்லை என உத்தரவு இடப்பட்டது. 12ம் நூற்றாண்டிலிருந்து கோயில் சொக்கப் பெருமாள் கோயில் என மக்கள் வழக்கில் வந்துள்ளமை காணலாம். தெலுங்கு சோழ மன்னன் விஜயகண்ட கோபாலன் என்பவன் காலத்திலும் இங்கு உத்ஸவர் சிறப்பிடம் பெற்றிருக்கிறார். 

ஆதலின் சொக்கப் பெருமாளுக்கு ஓர் ஊர் அளிக்கப்பட்டது. விஜயநகரப் பேரரசன் கிருஷண் தேவராயன் இக்கோயிலுக்குத் திருப்பணி செய்தான் என்று கண்டோம். அவனது கல்வெட்டும் இக்கோயிலில் உள்ளது. அது பாதியிலேயே நின்று போய் காணப்படுகிறது. முற்றிலும் எழுதப்படவில்லை .

சிற்பங்கள் நடுத்தளத்தில் கிழக்கு நோக்கி பெருமிதமாக அமர்ந்திருக்கும் பெருமான் - வைகுந்த வரதர் என அழைக்கப்படுகிறார். 

இது தவிர, இத்தளத்திலும் தெற்கு, மேற்கு, வடக்கு என திக்குக்கு ஒன்றாக கருவறைகள் உள்ளன. தெற்கு நோக்கிய கருவறையில் கிருஷ்ணனும் அர்ச்சுணனும் நரநாராயணர்களாக அமர்ந்து விளங்குகின்றனர். 

மேற்கு நோக்கி நரசிம்ம பெருமானும், வடக்கு நோக்கி பூவராக மூர்த்தியும் அமர்ந்து விளங்குகின்றனர். மேல் தளத்தில் அனந்தசயனம் கொண்டாராக திருமால் படுத்த திருக்கோலம். ஆக கீழ்தளத்தில் நான்கு , நடுத்தளத்தில் நான்கு , மேல் தளத்தில் ஒன்று என மொத்தம் திருமாலின் ஒன்பது மூர்த்தங்கள் உள்ளன. 

ஒன்பது மூர்த்தங்கள் உள்ளத்தை நவமூர்த்தி பிரதிஷ்டை என அழைப்பர். இக்கோயிலில் வைணவ மரபில் வைகானஸப் பிரிவில் மரீசி சம்ஹிதை என்ற நூலைப் பின்பற்றி வழிபாடு நடைபெறுகிறது. 

இந்த அமைப்புத் தவிர கீழ்தளத்தில் தெற்கு மேற்கு வடக்கு திக்குகளில் உள்ள கருவறைக்கு ஏறிச் செல்லப் படிகள் உள்ளன. அவற்றின் கைப்பிடிச் சுவர்கள் உள்ளன. தெற்கு கைப்பிடிச் சுவரில் சரஸ்வதியின் உருவம் உள்ளது. இவ்வுருவம் ஒரு சிறப்புடையது. 

இதைப் பார்த்தால் கஜலக்ஷ்மி போல் இருக்கும். இரண்டு புறங்களில் யானைகள் நின்று இத்தேவியின் மீது கலசங்களால் அபிஷேகம் செய்வது போல் இருக்கிறது. இது மேலெழுந்த வாரியாக பார்த்தால் கஜலக்ஷ்மி என்று கூறி விடுவோம். ஆனால் இத்தேவியின் மேலிரு கரங்களில் கலசமும் அக்கமாலையும் உள்ளன. இடது கரத்தில் புத்தகம் இருக்கிறது. வலது கரம் அபய ஹஸ்தமாகக் காணப்படுகிறது. இது சரஸ்வதியின் சிலை என்பதில் ஐயமில்லை . 

மரீசி சம்ஹிதை இந்த இடத்தில் சரஸ்வதி இருக்க வேண்டும் என்று கூறுகிறது. சரஸ்வதியை வாக்தேவி என்று அந்நூல் குறிக்கிறது. மேற்குப்புறப் படிச் சுவற்றில் இரதியும் மன்மதனும் நிற்கின்றனர். மன்மதன் எனக் காட்ட அவனுக்கருகில் மகரக் கொடி உள்ளது. மறுபுறம் கரும்பு வில்லும் மலர்களால் ஆன ஐங்கணைகளும் உள்ளன. வடபுறப் படிக்கட்டின் கைச்சுவற்றில் பிருகு மகரிஷி அமர்ந்த நிலையில் காணப்படுகிறார். இக்கோயிலில் உள்ள ஒவ்வொரு அமைப்பும் மரீசி சம்ஹிதையில் கூறியுள்ளபடியே உள்ளன. இதன் விமானத்தில் தென்புறம், தக்ஷிணாமூர்த்தி, சந்திரசேகரர், உமா மகேசுரர், துர்க்கை , கணபதி ஆகிய சைவ உருவங்கள் உள்ளன. பிற திசைகளில் திருமால் கோலங்கள் உள்ளன.

தலத்தின் சிறப்பு 1100 ஆண்டுகள் பழமையானது. 

செல்லும் வழி 

போளூர் - சேத்துப்பட்டு - வந்தவாசி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது. உத்திரமேரூருக்கு வடக்கே காஞ்சிபுரம் 28 கிமீ தொலைவில் உள்ளது. இதன் கிழக்கில் அமைந்த தொடருந்து நிலையம் 26 கிமீ தொலைவில் உள்ள செங்கல்பட்டு ஆகும். இதன் மேற்கில் வந்தவாசி25 கிமீ மற்றும் ஆரணி 69 கிமீ தொலைவிலும், செய்யார் 32கி.மீ தொலைவிலும், தெற்கில் மதுராந்தகம் 26 கிமீ தொலைவில் உள்ளது.

                           ஓம் நமசிவாய
 படித்து பகிர்ந்தது 
இரா இளங்கோவன் 
நெல்லிக்குப்பம். 

Tuesday, July 7, 2026

அருள்மிகு வீழிநாதேஸ்வரர் திருக்கோயில்*

*அருள்மிகு வீழிநாதேஸ்வரர் திருக்கோயில்*
*மூலவர் :* நேத்திரார்ப்பணேசுவரர், விழியழகீசர், விழியழகர்.
*உற்சவர் :* கல்யாணசுந்தரர்
*அம்மன் :* சுந்தரகுஜாம்பிகை, அழகுமுலையம்மை.

ஸ்தல விருட்சம் : வீழிச்செடி
தீர்த்தம் : வீஷ்ணுதீர்த்தம், 25 தீர்த்தங்கள்
புராண பெயர் : திருவீழிமிழலை
ஊர் : திருவீழிமிழலை
மாவட்டம் : திருவாரூர்

*ஸ்தல வரலாறு :*
------------------------------------------------------
மஹாவிஷ்ணுவின் கையில் இருந்த சக்ராயுதம் தேய்ந்துபோனபோது, ஆற்றல் பொருந்திய வேறொரு சக்கரத்தைப் பெறுவதற்காக சிவபெருமானை மஹாவிஷ்ணு பூஜித்ததாகப் பல்வேறு புராணத் தகவல்கள் உண்டு. அப்படி சிவபெருமானை விஷ்ணு பூஜித்ததாக திருமாற்பேறு (திருமால்பூர்), திருப்பைஞ்ஞீலி, திருவீழிமிழலை ஆகிய சிவஸ்தலங்களின் தல புராண வரலாறுகள் கூறுகின்றன. இம்மூன்று தலங்களில், திருவீழிமிழலை மிகவும் முக்கியமானதாகக் கருதப்படுகிறது.

சலந்திரனைச் சம்ஹரிக்க திருமாலுக்கு சக்கரம் தேவைப்படுகிறது. அதை சிவபெருமானிடம் இருந்து பெறுவதற்காக திருவீழிமிழலைக்கு வருகிறார். ஆயிரம் தாமரை மலர்களால் சிவனை அர்ச்சித்தால் எண்ணியது கிடைக்கும் என்று அறிகிறார். அதன்படி, ஆயிரம் தாமரை மலர்கள் சேர்த்து அர்ச்சனை செய்ய ஆரம்பித்து 999 மலர்களால் அர்ச்சனை செய்துவிடுகிறார். விஷ்ணுவை சோதிக்க நினைத்த சிவபெருமான், 1000-வது மலரை மறைத்து விடுகிறார். 1000-வது மலரைக் காணாமல் விஷ்ணு தவிக்கிறார். இன்னொரு தாமரை மலரைக் கொண்டு வந்து அர்ச்சனையைத் தொடர நேரமும் இல்லை. குறைந்த ஒரு மலருக்குப் பதிலாக, தாமரை மலருக்கு ஒப்பான தனது இரு கண்களில் ஒன்றையே பிடுங்கி எடுத்து, எந்தக் குறையும் இல்லாமல் பூஜையை முடித்தவுடன், சிவபெருமானும் காட்சி கொடுக்கிறார். அத்துடன், திருமால் விரும்பியபடி அவருக்கு சக்ராயுதத்தையும் கொடுத்து அருள் செய்கிறார். இப்படி மஹாவிஷ்ணு தன் கண்ணையே கொடுத்து சிவனை அர்ச்சித்த தலம்தான் திருவீழிமிழலை. இப்படி ஈசனை திருமால் வழிபட்ட செய்தியை திருநாவுக்கரசர் தனது பதிகம் மூலமாகப் பாடுகிறார். நான்காம் திருமுறையில் இடம் பெற்றிருக்கும் “பூதத்தின் படையர் பாம்பின்” என்று தொடங்கும் பதிகத்தின் 8-வது பாடலில், இத்தல வரலாறு குறித்துப் பாடுகிறார்.

கிழக்கு நோக்கிய 5 நிலை ராஜகோபுரத்துக்கு முன் பெரிய அழகிய திருக்குளம் உள்ளது. இறைவன் நேத்ரார்ப்பனேஸ்வரர் சந்நிதி கிழக்கு நோக்கி இருக்கிறது. மூலவர் சுயம்பு உருவில் சுமார் 5 அடி உயரத்தில் நற்காட்சி தருகிறார். மூலவர் லிங்கத்துக்குப் பின்புற கர்ப்பக்கிருக சுவரில், பார்வதி – பரமேசுவரர் திருமண கோலத்தைக் காணலாம். இறைவன் உமையை மணந்துகொண்ட தலம் என்னும் நிலைக்கேற்ப, கர்ப்பக்கிருக வாயிலில் அரசாணிக்கால் என்னும் தூணும், வெளியில் மகாமண்டபத்தில் பந்தக்கால் என்னும் தூணும் உள்ளன. மகாமண்டபத்தில், மாப்பிள்ளை சுவாமியாக கல்யாணசுந்தரர் காட்சி தருகிறார். இவரே இத்தலத்தின் உற்சவமூர்த்தி. அவரது வலது பாதத்தின் மேலே திருமால் அர்ச்சித்த கண்மலரும், அதன் கீழே சக்கரமும் இருக்கக் காணலாம்.

கைலாயத்தில் வசிக்கும் சிவபெருமானுக்கும், காத்தியாயணி அம்பிகைக்கும் திருமண வைபவம் நடைபெற்ற தலம் திருவீழிமிழலை. ஆகவே, இத்தலம் ஒரு திருமணத்தலம். கோவிலின் பிரதான நுழைவு வாயில் கோபுரத்தைவிட, கர்ப்பக்கிருஹத்தின் மேல் இருக்கிற 16 சிம்மங்கள் தாங்கக்கூடியதாக உள்ள விமானமே சிறப்பானது. இதற்கு விண்ணிழி விமானம் என்று பெயர். சக்கரம் பெற்ற திருமால், வைகுண்டத்தில் இருந்து கொண்டுவந்து இந்த விமானத்தால் இக்கோவிலை அலங்கரித்ததாகப் புராணங்கள் சொல்கின்றன. இறைவி சுந்தர குசாம்பாள் சந்நிதி, மூலவர் சந்நிதிக்கு அருகில் உள்ளது. ஆலயத்தின் முதல் பிராகாரத்தில் இருக்கும் நூற்றுக்கால் மண்டபம், சிற்ப வேலைக்கு ஒரு எடுத்துக்காட்டாக திகழ்கிறது. மூலவரின் வலப்பக்க மண்டப அறையில், கையில் கண்ணோடு அர்ச்சிக்கும் பாவனையில் திருமால் காட்சி தருகிறார்.

இத்தலம் வீழிச்செடி, சந்தனம், சண்பகம், பலா, விளா முதலிய மரங்கள் அடர்ந்த காடாகப் பல காலம் இருந்தது. மிழலைக் குறும்பர் என்னும் வேடுவர் ஒருவர் இத்தலத்தில் வசித்து வந்தார். அவர் தினம் ஒரு விளாங்கனி நிவேதனம் செய்து வீழிநாதரை வழிபட்டு வந்தார். அதன் பலனாக, ஈசன் அவர் முன் தோன்றி அருளாசி வழங்க, அவர் தவக்கோலம் பூண்டு, அருந்தவங்கள் செய்து அட்டமாசித்திகள் கைவரப் பெற்றார். இந்த மிழலைக் குறும்பருக்கு இத்தலத்தில் தனி சந்நிதி உள்ளது.

இக்கோயிலில் உள்ள வெளவால் நெத்தி மண்டபம், மிகச் சிறப்பான வேலைப்பாடுகள் கொண்டதாகும். அக்காலத்தில், கோயில் திருப்பணிகள் செய்யும் ஸ்தபதிகள், திருவீழிமிழலை வெளவால் நெத்தி மண்டபம் மற்றும் திருவலஞ்சுழி கல் பலகணி போன்ற அரிய திருப்பணிகள் நீங்கலாக மற்றவை செய்து தருகிறோம் என்று ஒப்புக்கொள்வார்கள். அத்தகைய சிறப்புபெற்ற இந்த வெளவால் நெத்தி மண்படம், இன்று கல்யாண மண்டபமாக விளங்குகிறது.

ராஜகோபுரம் கடந்து நுழைந்தவுடன், வலதுபுறம் உள்ள இந்த வெளவால் நெத்தி மண்டபம் அகலமான அமைப்புடன் நடுவில் தூண் இல்லாமல், சுண்ணாம்பு கொண்டு ஒட்டப்பட்டுள்ள வளைவான கூரை அமைப்புடன் உள்ள இந்த மண்டபம், கட்டட வேலைப்பாட்டில் மிகமிக அபூர்வமானது. வெளவால்கள் வந்து வசிக்க முடியாதவாறு கூரை அமைக்கப்பட்டுள்ளது இதன் சிறப்பம்சமாகும். சித்திரை மாதத்தில், இறைவன் – இறைவி திருக்கல்யாணம் நடைபெறுகிறது.

*கோயில் சிறப்புகள் :*

இங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார்.
 
இங்கு பாதாள நந்தி உள்ளது. முழு கோயிலே நந்திக்கு மேல் அமைந்திருப்பது போல் உள்ளது.
 
இங்கு இறைவன் காசியாத்திரைக்கு கிளம்பும் மாப்பிள்ளை கோலத்தில் அருள்பாலிப்பதால், மாப்பிள்ளை சுவாமி எனப்படுகிறார்.
 
கொடிமரம் அருகே சிவலிங்கம் அமைந்திருப்பது இன்னொரு சிறப்பம்சம்.
 
தேவார மூவராலும் பாடல் பெற்ற தலங்கள் பல உண்டு. அவற்றில் திருவீழிமிழலை தலமும் ஒன்றாகும். இத்தலம் 23 திருப்பதிகங்களையுடையது. வீழிச்செடிகள் நிறைந்திருந்ததால் இவ்வூருக்கு திருவீழிமிழலை என்று பெயர் ஏற்பட்டது.
 
திருமாலின் உற்சவத் திருமேனி ஒன்று ஒரு கையில் தாமரை மலரும், மறுகையில் கண்ணும் கொண்டு, நின்ற கோலத்திலிருப்பதை இக்கோயிலில் காணலாம். இங்கு இறைவனுக்கு முன்னே நந்தி தேவருக்குப் பதிலாக, திருமால் கூப்பிய கரத்தோடு நின்றிருக்கிறார் !
 
திருநாவுக்கரசரும் திருஞானசம்பந்தரும் சேர்ந்தே இத்தலத்துக்கு வருகிறார்கள். அவர்கள் வரும்போது, நாட்டில் கடும் பஞ்சம். மக்கள் உணவின்றித் தவிக்கின்றனர். இந்த நிலையில் அப்பர், சம்பந்தர் இவர்களுடன் வந்த அடியார்களுக்கு உணவு அளிப்பது சிரமமாக இருக்கிறது. இருவரும் கோவிலுக்குச் சென்று இறைவனை வணங்கி பதிகங்கள் பாடுகிறார்கள். மறுநாள் காலையில், கிழக்கு பலிபீடத்தில் ஒரு படிக்காசும், மேற்கு பலிபீடத்தில் ஒரு படிக்காசும் இருப்பதை இருவரும் காண்கிறார்கள். அவற்றைக் கொண்டு அடியவர்களுக்கு உணவு அளிக்கின்றனர். நாட்டில் பஞ்சம் தீரும் வரையில் இவ்வாறு தினமும் படிக்காசு பெற்று தொண்டு செய்திருக்கின்றனர். படிக்காசு அளிப்பதிலும், அப்பருக்கு நல்ல காசும், சம்பந்தருக்கு மாற்றுக் குறைந்த காசும் இறைவன் கொடுத்தார். சம்பந்தர் அதைப் பார்த்து “வாசி தீரவே காசு நல்குவீர்” என்னும் பதிகம் பாடிய பிறகு அவருக்கும் நல்ல காசு கொடுத்து அருள் செய்தார். அவ்வாறு வைத்தருளிய பலிபீடங்கள், கோயிலின் கிழக்கிலும் மேற்கிலும் உள்ளன. படிக்காசுப் பிள்ளையார், மேற்கு பலிபீடத்தின் அருகில் உள்ளார். அருகில் சம்பந்தர், அப்பரின் உருவங்கள் உள்ளன. இவ்விருவரும் தங்கியிருந்த திருமடங்கள், வடக்கு வீதியில் கீழ்க்கோடியிலும் (சம்பந்தர்) மேற்குக் கோடியிலும் (அப்பர்) உள்ளன.

படிக்காசு விநாயகர் கோயிலில் சம்பந்தர், நாவுக்கரசர் திருஉருவச்சிலைகள் உள்ளன. இருவரும் தாம் பெற்ற படிக்காசுகளைக் கொண்டு பொருட்களை வாங்கிய கடைத்தெரு, இப்போது ஐயன்பேட்டை என்றழைக்கப்படுகிறது. அங்கே உள்ள சுவாமி பெயர், செட்டியப்பர். அம்பாள், படியளந்த நாயகி. ஐயன் தராசு பிடித்த கையோடும், அம்பிகை படியைப் பிடித்தபடியும், உற்சவ மூர்த்தியாகக் காட்சி அளிக்கின்றனர்.
 
கோயிலின் எதிரில் பெரிய குளம் உள்ளது. மிகப் பெரிய கோயில். கோயில் கிழக்கு நோக்கியுள்ளது. இக்கோயில் மாடக்கோயில் அமைப்புடையது.
 
இத்திருக்கோயிலைச் சுற்றி; பத்ம தீர்த்தம், புஷ்கரணி, விஷ்ணு தீர்த்தம், திரிவேணி சங்கமம், குபேரதீர்த்தம், இந்திர தீர்த்தம், வருண தீர்த்தம், இலக்குமி தீர்த்தம், வசிட்ட தீர்த்தம் முதலாக 25 தீர்த்தங்கள் உள்ளன.

ஸ்தலவிருட்சம் ஒவ்வொரு யுகத்திற்கும் ஒன்றாக மாறுபடுகிறது என்பர். இப்போது பலா, தலமரமாக விளங்குகிறது.
 சோலை சூழும் திருவீழிமிழலையில் வாழும் பெருமாளே! (முருகா, குமரா, உயிர்கா என ஓத அருள்தாராய்!) சூரனுக்கு அஞ்சி, முனிவர்களும் தேவர்களும் ஓலமிட்டதை இங்கு அருணகிரியார் பாடியுள்ளார். கந்தபுராணத்திலும் இக்கருத்தை உடைய பாடல் வருகிறது.
 
*திருவிழா:*

மகா சிவராத்திரி, மார்கழி திருவாதிரை

*நடை திறக்கும் நேரம்:*

காலை 6 மணி முதல் 12 மணி வரை,
மாலை 4 மணி முதல் இரவு 8மணி வரை திறந்திருக்கும்.

*முகவரி*

அருள்மிகு நேத்ரார்ப்பணேஸ்வரர் திருக்கோயில், திருவீழிமிழலை,
திருவீழிமிழலை அஞ்சல்,
குடவாசல் வட்டம்,
திருவாரூர் மாவட்டம் – 609 505.
போன்:  +91-4366-273 050, 94439 24825

*அமைவிடம் :*

மயிலாடுதுறை – திருவாரூர் சாலையில் பேரளம் வழியாக பூந்தோட்டம் வந்து, அங்கிருந்து 10 கி.மீ. தொலைவில் அரிசிலாற்றின் வடகரையில் இத்தலம் அமைந்துள்ளது. கும்பகோணத்தில் இருந்து நாச்சியார்கோவில் வழியாக பூந்தோட்டம் செல்லும் சாலையில் சென்று தென்கரை என்ற இடத்தில் இறங்கி 1 கி.மீ. சென்றாலும் இத்தலத்தை அடையலாம். 
ஓம் நமசிவாய
 படித்து பகிர்ந்தது 
இரா இளங்கோவன் 
நெல்லிக்குப்பம். 

Monday, June 29, 2026

படியேறி தரிசித்தால் நைனாமலை வரதராஜப்பெருமாள்.

படியேறி தரிசித்தால் வளம்தரும் நைனாமலை வரதராஜப்பெருமாள்


சேலத்தில் இருந்து திருச்சி செல்லும் பிரதான சாலையில் இருக்கும் புதன்சந்தை, நாமக்கல் மாவட்டத்தின் பிரசித்தி பெற்ற பகுதி. இங்கிருந்து 3 கிலோ மீட்டர் தூரத்தில் இருக்கிறது நைனாமலை வரதராஜப்பெருமாள் கோயில். திரும்பிய திசையெல்லாம் பசுமை மிளிர, இயற்கை எழில் கொஞ்சும் மலையின் உச்சியில்2,600 அடி உயரத்தில் அமர்ந்து அருள்பாலிக்கிறார் வரதராஜப்பெருமாள். குவலயவல்லித் தாயார் சமேத வரதராஜப்பெருமாள் நின்ற கோலத்தில் காட்சியளிப்பது தனிச்சிறப்பு. ‘‘நைனாமலை இதிகாச காலத்திற்கு முன்பிருந்தே இருந்துள்ளது. எம்பெருமாள் தங்கியிருந்து அருள்பாலித்து வரும் திருத்தலங்களுள்  முதன்மையானது என்றும் புராணக்குறிப்புகள் கூறுகிறது. 

பிரம்மாவால் பாடப்பெற்ற பிரமாண்ட புராணத்தில் பதினாறாவது அத்தியாயத்தில் இந்த மலையின்  சிறப்பு தெளிவாக விளக்கப்படுகிறது. பிரசித்தி பெற்ற இந்த கோயில் பல்லவர் காலத்தில் கட்டப்பட்டது. பின்னர் திருமலை நாயக்கமன்னரின் தம்பியான கோவிந்தப்ப நாயக்கரால் சில பகுதிகள் கட்டப்பட்டது’’ என்கிறது தலவரலாறு. மலையடிவாரத்தில் பாதமண்டபத்திலிருந்து மலையின் படிகள் தொடங்குகின்றன. 

உச்சிக்கு சென்று வரதராஜரை வழிபட 3360 படிகளை கடந்து செல்ல வேண்டும். பாத மண்டபத்தில் கூப்பிய கரங்களுடன் பக்தர்களின் நலனுக்காக இறைவனை வேண்டி வணங்கி நிற்கிறார் ஆஞ்சநேயர். அவரை வணங்கிய பின்னரே பக்தர்கள் படியேற துவங்குகின்றனர். மலைஉச்சியின் முகப்பில் கோயிலின் பெரிய மண்டபமும், திருமடைப் பள்ளியும் கட்டப்பட்டுள்ளது. விழாக்காலங்களில் பக்தர்கள் தங்கி ஓய்வெடுத்துச் செல்லும் வகையில், மண்டபம்  விசாலமாக பரந்து கிடக்கிறது. 

திருமடைப்பள்ளியை தாண்டியதும் கோயில் படிகள் தொடங்குகின்றன. உபய வரதராஜ பெருமாளின் கோயிலுக்கு வலப்புறம், பாறையில்  வாலி சுக்ரீவர் திருவுருவங்கள் செதுக்கப் பட்டுள்ளன. அதை தாண்டி சென்றதும், கோயிலின் தல விருட்சமான நெல்லி மரம் உள்ளது. அதனையடுத்து கம்பீரமான எம்பெருமாள் வரதராஜ பெருமாள் சன்னதியை மலையின் உச்சியில் காணலாம். 

மூலவராக வரதராஜப்பெருமாள் ஸ்ரீதேவி, பூதேவி சமேதராக எழில்கோலம் தாங்கி அருள்பாலித்து வருகிறார். கோயிலில் கர்ப்பக் கிரகம், அர்த்த மண்டபம், மகா  மண்டபம் என மூன்று மண்டபங்கள் உள்ளன. மகா மண்டபத்தில் ராம லட்சுமணர், சீதாதேவி, நவநீத கிருஷ்ணர், ராதா ருக்மணி வேணுகோபால், துவார  பாலகர்கள் ஆகியோரின் விக்கிரகங்கள் உள்ளன. கருடாழ்வார் கோயிலின் எதிரில் உள்ளார். கல்லால் செய்யப்பட்ட தீபஸ்தம்பமும் உள்ளது. 

தீபஸ்தம்பத்தில் பெருமாளுக்கு  திருமஞ்சனம் செய்யும் போதெல்லாம் திருக்கோடி தீபம் ஏற்றப்படுகிறது. பெருமாளின் வலது புறத்தில் குவலய வல்லி தாயாரின் தனி சன்னதி அமைந்துள்ளது. தமிழ் வருடம் ஆனி முதல் தேதியிலிருந்து, ஆடி மாதம் 30ம் தேதி முடிய  இரண்டு மாதங்களும் கதிரவன் உதிக்கும் போது கதிரவனின் கதிர்கள் சுவாமியின் மீது நேரே விழுந்து பிரகாசிப்பது கண்கொள்ளாக் காட்சியாகும். மலை மீது 108 தீர்த்தங்கள் இருந்ததாக கூறப்படுகிறது. 

தற்போது அரிவாள் பாழி, பெரியபாழி, இடுக்கு பாழி, அம்மம்பாழி, பாண்டவ தீர்த்தம் அல்லது ஐந்தாம் பாழி என்று 5 தீர்த்தங்கள் உள்ளன. திருப்பதியை போன்றே பெருமாளுக்கு வாய்ப்பூட்டு பாதுகையுடன், கோமாளி வேஷம் ஆகியவை செலுத்துவது நடைமுறையில் இருந்து வருகிறது. புரட்டாசி மாதம் சனிக்கிழமைகளில் ஒரு லட்சத்திற்கும் அதிகமானோர்  பெருமாளை தரிசனம் செய்கின்றனர். திருப்பதிக்கு இணையான வரதராஜப் பெருமாளை படியேறி வழிபட்டால் வளமும், நலமும் பெருகும்.
ஓம் நமசிவாய 
படித்து பகிர்ந்தது 
இரா இளங்கோவன்
நெல்லிக்குப்பம். 

Saturday, June 27, 2026

மச்சபுரீசுவரர் கோயில்ஊர் தேவராயன்பேட்டை

மச்சபுரீசுவரர் கோயில்
ஊர் தேவராயன்பேட்டை
வட்டம் கும்பகோணம்
மாவட்டம் தஞ்சாவூர்
கும்பகோணம் அருகேயுள்ள கோயில் தேவராயன்பேட்டையில் உள்ள திருக்கோயில் மச்சபுரீசுவரர் கோயில் என அழைக்கப்படுகிறது. பெரிய புராணத்தில் இத்தலம் திருச்சேலூர் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இத்தல இறைவனை மீன் ஒன்று வழிபட்டதால் இறைவனுக்கு மச்சபுரீசுவரர் என்று பெயர் ஏற்பட்டது. இப்புராண நிகழ்வை எடுத்துக்காட்டும் வகையில் கோயிலின் முன்மண்டபத்தில் சிவலிங்க வடிவிலான இறைவனை மீன் வழிபடுவது போன்ற சிற்பம் காணப்படுகிறது. இத்திருத்தலம் தேவார வைப்புத்தலமாகும். இங்குள்ள இறைவன் மச்சபுரீசுவரர் ஆவார். இறைவி சுகந்த குந்தளாம்பிகை ஆவார்

காலம் : கி.பி.9-ஆம் நூற்றாண்டு

ஆட்சியாளர் : முதலாம் ஆதித்த சோழன்

கல்வெட்டு:  இக்கோயிலில் 55 கல்வெட்டுகள் காணப்படுகின்றன. இங்கு இக்கோயிலைச் சார்ந்து ஒரு ஆதுலர் சாலை (மருத்துவமனை) இயங்கியதாகக் கல்வெட்டுகள் கூறுகின்றன. மகாவிஷ்ணு மச்ச அவதாரம் கொண்டு சிவனை வழிபட்ட சின்னம் கோவில் முகப்பில் கருங்கல்லால் புடைப்பு சிற்பமாக செதுக்கப்பட்டுள்ளது.

சிற்பங்கள் : மச்சபுரீஸ்வரர் கோவிலில் முருகனுக்கு தனி சன்னிதி உள்ளது. முருகன் ஆறுமுகத்தினராய், 12 கரங்களுடன் விளங்குகிறார். வலது கையில் சங்கும், இடது கையில் சக்கரமும் ஏந்தியுள்ளார். திருமாலுக்கு உள்ளதைப்போல இங்கு முருகனுக்கும் சங்கு, சக்கரம் இருப்பது குறிப்பிடத்தக்கது. ஆறுமுகனுடன், வள்ளி தெய்வானையும் உடன் உள்ளனர். கருவறை விமானத்தின் தென்புறக் கோட்டத்தில் தென்முகக் கடவுள், மேற்கில் விஷ்ணு, வடக்கில் நான்முகன் காட்டப்பட்டுள்ளனர். அர்த்தமண்டப வடபுறக் கோட்டத்தில் துர்க்கை, தெற்கில் கணபதி உள்ளனர்.

தலத்தின் சிறப்பு 1200 ஆண்டுகள் பழமையானது. 
கோயிலின் அமைப்பு : இக்கோயில் முதலாம் ஆதித்த சோழன் காலத்தில் கட்டப்பட்ட, முற்காலச்சோழர் கலைப்பாணியைச் சேர்ந்தது. கருவறை தொடங்கி, அந்தராளம், அர்த்தமண்டபம், மகாமண்டபம், முகமண்டபம், எனவும், நந்தி, பலிபீடம், கொடி மரம் என ஒரே நேர்கோட்டில் அமைந்துள்ளன. இரு நுழைவாயிலைக் கொண்ட இக்கோயிலின் உள், வெளித் திருச்சுற்றுகள் உயர்ந்த செங்கற்சுவற்றினால் அமைக்கப்பட்டுள்ளது. வெளித்திருச்சுற்றில் இறைவி சன்னதியான திருகாமக்கோட்டம் அமைந்துள்ளது. மேலும் நிலைவாயிலுக்கு எதிரில் நந்தியுடன் சிறு மண்டபம் உள்ளது. முன் மண்டபத்தில் இடது புறத்தில் தர்ம விநாயகர், நவக்கிரகம், சனீசுவரர் சன்னதிகள் உள்ளன.

அருகில் உள்ள கோவில்கள்:  திருப்பாலைவனம்

செல்லும் வழி : பாபநாசம்-தஞ்சாவூர் சாலையில் பாபநாசத்திலிருந்து 3 கிமீ தொலைவில் பண்டாரவாடையை அடுத்து கோயில் தேவராயன்பேட்டை உள்ளது. 

                         ஓம் நமசிவாய 
படித்து பகிர்ந்தது
 இரா இளங்கோவன் 
நெல்லிக்குப்பம். 

Friday, June 26, 2026

சிவபெருமான் நரசிம்மருக்கு விமோசனம் அளித்த தலம்.


சிவபெருமான் நரசிம்மருக்கு விமோசனம் அளித்து ஆட்கொண்ட தலமான,
அஷ்ட பைரவர் தலங்களில் ஒன்றானதும்,
#நகரத்தார்_கோயில் ("சிற்பக்கோயில்")
என்று அழைக்கப்படும் 
#இரணியூர் என்ற #ஹிரண்யனூர்
#ஆட்கொண்டநாதர் (இரணிஸ்வரன்)
என்ற #நரசிம்மேஸ்வரர்
 #சிவபுரந்ததேவி திருக்கோயில் வரலாற்றையும் புகைப்படங்களையும் காணலாம் வாருங்கள் 

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே ஆயிரம் ஆண்டுகளுக்கு மேல் பழமையான இரணியூர் கோயில். நகரத்தாரின் 9 கோயில்களில் ஒன்றாக இரணியூர் ஆட்கொண்டநாதர் கோயில் உள்ளது. இக்கோயில் சிற்பக்கோயில் என்று அழைக்கப்படுகிறது.
ஆயிரம் ஆண்டுகளுக்கு மேல் பழமையான இக்கோயில் சிதிலமடைந்த நிலையில் 1941 முதல் 1944-ம் ஆண்டு வரையிலான காலக்கட்டத்தில் அழகிய சிற்ப வேலைபாடுகளுடன் நகரத்தார் புதுப்பித்து கட்டினர்.

நகரத்தார் கோவில்களில் ஒன்றான இரணியூர் கோவில் மிக சிறப்பான கலை நயத்துடன் அமைந்துள்ள மிக பழமையான கோவிலாகும். இரணியனை சம்ஹாரம் தோஷம் நீங்க அருளை பெற்ற தளம் என்பதால் இவ்வூர் இரணியூர் என்று அழைக்கப்படுவதாக கூறுகின்றனர்.

அதிகமான சிற்பங்கள் அமைந்திருப்பதால் இச்சிவாலயத்தினை சிற்பக் கோயில் என்றும் அழைக்கின்றார்கள். ஆலையத் தூண்களில் அஷ்டலட்சுமி, வல்லப கணபதி, வீரபத்திரர், முப்புரம் எரித்தவர், நவதுர்க்கை, இரணிய சம்ஹாரம் போன்ற சிற்பங்கள் இடம்பெற்றுள்ளன.

இச்சிவாலயத்தின் மூலவர் ஆட்கொண்ட நாதர் எனவும், அம்பிகை சிவபுரந்த தேவி எனவும் அழைக்கப்படுகிறார். இச்சிவாலயத்திற்கு சிவாகமப் படி பூசைகள் செய்யப்படுகின்றன. தலவிருட்சமாக வில்வ மரம் அமைந்துள்ளது.

கார்த்திகை மாதத்தில் சம்பகசஷ்டி, திருவாதிரை, கார்த்திகை மற்றும் சிவராத்திரி போன்ற விழாக்கள் இக்கோயிலில் நடைபெறுகின்றன.

இரணியூர் தலத்தில் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கும் ஆட்கொண்டநாதர், தொழிலில் வெற்றி அருளும் ஈசனாக போற்றப்படுகிறார். பிரகாரத்தில் முருகன், வள்ளி, தெய்வானை அனைவரும் மயில் வாகனத்தில் அருள்பாலிப்பது தனிச்சிறப்பு.

இப்பகுதியில் உள்ள 9 நகரத்தார் கோயில்களில் இதுவும் ஒன்றாகும், இது நகரத்தார் சமூகத்தின் தனி குலங்களுடன் (பிரிவு) தொடர்புடையது.

கி.பி 713-ம் ஆண்டில் காருண்யா பாண்டிய மன்னர்களால் இக்கற்சிற்பக் கோவில்கள் கட்டப்பட்டது.பின்னர் மகுட தனவைசியர் என்னும் நாட்டுக்கோட்டை நகரத்தார்களில் ஒரு பிரிவினரான திருவேட்பூருடையார் என்பவர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

இக்கோவிலைஸ் சுற்றிலும் பாண்டிய மன்னர் கால சிற்ப கல்வெட்டுகள் காணப்படுகின்றன. இரணியனை சம்ஹாரம் செய்த நரசிம்மர் இரணியன் மார்பை கீறி வழுந்தோர் வேகம் மாற இரணியூர் ஈசனை வணங்கினான்.

ஈசனும் சிங்க முகமும், மானிட உடலும், மிருகத்தின் காலும், வாலும், பறவையின் இறக்கையும், இணைந்த வீரசபேஸ்வராய் உருவெடுத்து நரசிம்மரை ஆட்கொண்டு சாந்தப்படுத்தினார் என்பது வரலாறு

இதனால் இத்திருத்தலத்தில் அமைந்துள்ள ஈசனை ஆட்கொண்ட நாதர் என்றும் இரணிஸ்வரன் என்றும் அழைக்கப்படுகிறார். ஆட்கொண்ட நாதரால் இத்திருத்தலத்தில் நரசிம்மர் குளிச்சி பொருந்திய நீலமேக பெருமாளாக இத்திருத்தலத்தில் கோவில் கொண்டுள்ளார். இக்கோவில் உள்ள தூண்களில் கலை நயமிக்க சிற்பங்கள் காண்பவரை வியக்க வைக்கிறது. மேலும் இச்சிற்பங்கள் விலைமதிப்பற்ற பொக்கிஷங்களாக கருதப்படுகிறது.

ஆட்கொண்ட நாதர் சுயம்பு மூர்த்தியாக காட்சியகிக்கிறார். இக்கோவிலில் அமைக்கப்பட்டு இருக்கும் விமானம் சுவாமி அம்சம் என்பது ஐதீகம். நடை அடைக்கப்பட்டிருக்கும் வேளையில் விமானத்தையே சுவாமியாக கருதி வழிபடுவது வழக்கமாக இருக்கிறது. கோவில் முன் மண்டபத்தில் இருந்து ஒரே சமயத்தில் சாமியையும் விமானத்தையும் தரிசிக்கும் விதத்தில் அமைக்கப்பட்டு இருக்கிறது.

இவற்றுள் அம்பாள் முன் உள்ள தூர்க்கை மண்டபத்தில் உள்ள தூணில் செதுக்கப்பட்டுள்ள நவதூர்க்கை சிற்ப வல்லுனர்களால் போற்றும் பொக்கிஷமாய் திகழ்கிறது.

#கோயில்_குறிப்புகள்:

*மூலவர்: ஆட்கொண்ட நாதர்

*அம்மன்: சிவபுரந்ததேவி 

*தல விருட்சம்: வில்வம் 

*ஆகமம்: சிவாகமம் 

*ஊர்: இரணியூர்

*மாவட்டம்: சிவகங்கை 

#தல_வரலாறு: 

திருமால், நரசிம்ம அவதாரம் எடுத்து அசுரனான இரண்யனை சம்ஹாரம் செய்தார். இதனால் அவருக்கு தோஷம் ஏற்பட்டது. தோஷம் நீங்க சிவனை வழிபட்டார். சிவன், திருமாலுக்கு காட்சி அருளி தோஷம் நீக்கினார். திருமாலின் வேண்டுதலுக்காக சிவன், இத்தலத்தில் ‘ஆட்கொண்ட நாதர்’ என்ற பெயரில் எழுந்தருளினார். நரசிம்மருக்கு விமோசனம் தந்தவர் என்பதால் இவருக்கு, ‘நரசிம்மேஸ் வரர்’ என்றும் பெயருண்டு.

திருமாலின் உக்கிரம் கண்டு அம்பிகையும் உக்கிரமடைந்தார். அதனால் நவகாளியாக வெளிபட்டு சிவனை வணங்கினார்.சிவனை வழிபட்டு சாந்தம் அடைந்தமையால் சிவபுரந்த தேவி என்று அழைக்கப்படுகிறார்.

அஷ்ட பைரவர் எழுந்தருளிய எட்டுத் தலங்களில் இதுவும் ஒன்றாகக் கருதப்படுகிறது. இதனாலேயே இங்கு கால பைரவர் சிறப்புடன் வழிபடப்படுகிறார். இங்குள்ள மற்ற புராணங்களின்படி, குபேரனும் வாயுவும் இக்கோயிலிலும் வழிபட்டுள்ளனர்.

*கோயில் சிறப்பு: 

சுயம்பு மூர்த்தியாக ஆட்கொண்ட நாதர் அருள்பாலிக்கிறார். கோயில்களில் அமைக்கப்பட்டிருக்கும் கோபுரம், விமானம் சுவாமியின் அம்சமாக இருப்பதாக ஐதீகம். நடை அடைக்கப்பட்டிருக்கும் வேளையில் விமானத்தையே சுவாமியாக கருதி வழிபடும் வழக்கம் உள்ளது. இக்கோயில் முன்மண்டபத்தில் இருந்து ஒரே சமயத்தில் சுவாமியையும், விமானத்தையும் தரிசிக்கும் விதமாக அமைக்கப்பட்டுள்ளது. இங்கு அதிக எண்ணிக்கையில் சஷ்டியப்தபூர்த்தி, சதாபிஷேகம் நடைபெறுகிறது.

*கல்வெட்டுகள்:

கோயில் இணையதளத்தின்படி, இந்த இரணியூர் கோயில் கி.பி. 714 ஆம் ஆண்டில் நாட்டுக்கோட்டை நகரத்தார்களிடம் ஒப்படைக்கப்பட்டது. எனவே, மூலக் கோயில் 8 ஆம்  நூற்றாண்டைச் சேர்ந்தது.

இந்தக் கோயில் சிவகங்கை மாவட்டத்தின் 34 கிராமங்களில் வசிக்கும் 3800 குடும்பங்களுக்குச் சொந்தமானது. நாட்டுக்கோட்டை நகரத்தரின் வரலாற்றின்படி, கவிரிபூம்பட்டினம் கிழக்கு வீதியில் வசித்து வந்த 502 குடும்பங்கள், பாண்டிய மன்னரின் வேண்டுகோளை ஏற்று இளையதாங்குடியில் குடியேறினர். 7 ஆம்  நூற்றாண்டில், அந்த 502 குடும்பங்களில் இருந்த இரண்டு சகோதரர்கள் இவ்விடத்திற்கு வந்து ஸ்ரீ அட்கொண்டநாதர் கோயிலைப் புதுப்பித்து விரிவுபடுத்தினர். 

இக்கோயில் தொடர்பான பதிவேடுகளின்படி, இந்த இடம் நகரத்தார் சமூகத்திற்கு கிபி 714 இல் வழங்கப்பட்டது (கலியுகம் ஆண்டு 3815 என பதிவு செய்யப்பட்டுள்ளது). முக்கிய கோவில் அந்த தேதிக்கு முன்பே இருந்ததாக நம்பப்படுகிறது. பாண்டிய மன்னன் சுந்தர பாண்டியனின் ஆட்சியின் கீழ் நகரத்தார் சமூகத்திற்கு பல்வேறு நிலங்களும், கோயில்களை (9 நகரத்தார் கோயில்கள் உட்பட) பராமரிக்கவும் நிர்வகிக்கவும் அனுமதிகள் வழங்கப்பட்டன.

அசல் கோவில் 2000 ஆண்டுகளுக்கு மேல் பழமையானதாக கருதப்படுகிறது; இருப்பினும், இந்த கோவில் சுமார் 500 ஆண்டுகளுக்கு முன்பு முழுமையாக புதுப்பிக்கப்பட்டது, அன்றிலிருந்து வழக்கமான புதுப்பிப்புகள் மற்றும் பராமரிப்புகள் உள்ளன. இப்பகுதிக்குள், சிற்ப கோயில் அல்லது சிற்பங்களின் கோயில் என்று பிரபலமாகக் அழைக்கப்படுகிறது – காரணம் இல்லாமல் அல்ல. இங்குள்ள சுவர்கள் மற்றும் தூண்களில் உள்ள சிற்பங்களின் எண்ணிக்கையும், அந்த சிற்பங்களில் உள்ள விவரங்களும் கிட்டத்தட்ட ஒப்பிடமுடியாது.

பிற சிவாலயங்களை விட மிக முக்கியமான ஒன்று இத்திருத்தலத்தில் நவக்கிரக சன்னதியின் அருகில் மேலே குபேரர் கல்லில் செதுக்கப்பட்டுள்ள சிற்பத்தில் காட்சியாளிக்கிறார். இரணியூர் கோவிலில் உள்ள குபேரர் தன் வாகனமான குதிரையில் உள்ளபடி கட்சியாளிக்கிறார்.

மேலும் இங்கு தமிழ் வருடப் பிறப்பன்றும், அட்சய திருத்தி அன்றும் குபேர பூஜையானது நடைபெறும்.

வரலாற்று சிறப்பு மிக்க கலைநய மிக்க கற்சிற்பங்கள் நிறைந்த இக்கோவிலினை அதிகமான பக்தர்களும், சுற்றுலாப் பயணிகளும் கோடை விடுமுறை நாட்களில் காண வருகின்றனர்.

ஆட்கொண்ட நாதரை தரிசித்து விட்டு அங்கு ஒவ்வொரு தூணிலும் செதுக்கப்பட்டுள்ள சிற்பங்களை அருகில் சென்று கண்டு வியக்கின்றனர். சிற்ப கலையில் முன்னோர்களின் செயல்மிகு திறனை ரசிக்கின்றனர்.

இத்தகைய சிறப்புக்கு சொந்தமான கோவிலானது சிவகேங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே உள்ள இரணியூர் இந்த ஊரானது திருப்பத்தூர் இருந்து சுமார் 13 கீ.மீ தொலையில் உள்ளது.சென்று ஆட்கொண்ட நாதரையும், அழகிய சிற்பங்களையும் தரிசித்து விட்டு வாருங்கள்.

*கோவில் நேரங்கள்:

கோயில் காலை 06.00 மணி முதல் 12.00 மணி வரையிலும், மாலை 16.30 மணி முதல் 19.30 மணி வரையிலும் திறந்திருக்கும்.

*சென்றடைவது எப்படி?

இரணியூரில் உள்ள கோயில், திருப்பத்தூரிலிருந்து சுமார் 14 கி.மீ., திருமயத்திலிருந்து 18 கி.மீ., காரைக்குடியிலிருந்து 26 கி.மீ., திருச்சிராப்பள்ளியிலிருந்து 86 கி.மீ. மற்றும் சென்னையிலிருந்து 412 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது.      

ஓம் நமசிவாய 
படித்து பகிர்ந்தது
 இரா இளங்கோவன் 
நெல்லிக்குப்பம். 

Wednesday, June 24, 2026

கிருஷ்ணாபுரம் வெங்கடாஜலபதி கோயில்.

கிருஷ்ணாபுரம் வெங்கடாஜலபதி கோயில்
கிருஷ்ணாபுரம் வட்டம்
பாளையங்கோட்டை
திருநெல்வேலி மாவட்டம் 

மூலவர் பெயர் வெங்கடாஜலபதி

தாயார் / அம்மன் பெயர் 
அலர்மேல் மங்கை, ஸ்ரீதேவி, பூதேவி

தலமரம் துளசி

அருகில் உள்ள கோவில்கள்:

தென்காசி ஸ்ரீகாசி விஸ்வநாதர் கோயில், 
குற்றாலநாதர் கோயில், 
ஆழ்வார்குறிச்சி பெருமாள் கோயில்

செல்லும் வழி : திருநெல்வேலியில் இருந்து திருச்செந்தூர் சாலையில் 10 கி.மீ. தொலைவில் கிருஷ்ணாபுரம் அமைந்துள்ளது. ஊரின் மத்தியில் வேங்கடாசலபதி திருக்கோயில் உள்ளது.

சிற்பங்கள் கருவறையில் மூலவர் வெங்கடாசலபதி உருவம் கருங்கல்லால் நான்கு அடி உயரத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது. நான்கு கரங்களுடன் நின்ற கோலத்தில் ஸ்ரீதேவி, பூதேவி புடைசூழ அமைந்துள்ள பெருமாளின் மேலிரண்டு கைகள் சங்கு மற்றும் சக்கரம் பற்றியுள்ளன; கீழிரண்டு கைகள் அபய மற்றும் கடிஹஸ்த முத்திரைகள் காட்டுகின்றன. 

உற்சவர் பெயர் ஸ்ரீனிவாசன், மூலவரைப் போலவே நான்கு கரங்களுடன் நின்றகோலத்தில் ஸ்ரீதேவி பூதேவி புடைசூழ காட்சியளிக்கிறார். 

கோயிலின் வடக்குத் திருச்சுற்றில் உள்ள வீரப்ப நாயக்கர் மண்டபத்தின் நுழைவாயிலில் இரண்டு யானைச் சிற்பங்கள் காணப்படுகின்றன. 
இக்கோயிலில் மொத்தம் 42 அழகு மிளிரும் சிற்பங்களைக் காணமுடிகின்றது. இவை உலகப்புகழ் பெற்றவை. மண்டபத்தின் தூண்களில் ஆளுயர உருவம் கொண்ட எழில் கொஞ்சும் சிற்பங்கள் புராணங்களின் அடிப்படையில் செதுக்கப்பட்டுள்ளன. ஆறு தூண்கள் மிக நேர்த்தியான வடிவமைப்பு கொண்ட சிற்பங்களை உள்ளடக்கியுள்ளன. 

இக்கோயிலிலுள்ள வீரப்பர் மண்டபமும், அரங்க மண்டபமும் உன்னத சிற்பங்களைக் கொண்டுள்ளன. வீரப்பர் மண்டபத்தின் முன்னுள்ள அர்ஜுனன், குறத்தி ராஜகுமாரனைத் தூக்கிச் செல்லுதல், நாடோடிப் பெண்ணின் நடனம், கர்ணன், குறவன் அரசகுமாரியைத் தூக்கிச் செல்லுதல், தேவகன்னியின் நடனம், மன்மதன், அரங்க மண்டபத்திலுள்ள வீரபத்திரன், மன்மதன், பீமன், புருஷாமிருகம், தருமர் ஆகிய சிற்பங்கள் உள்ள கற்றூண்கள், நடனமாது, ரதிதேவியும் தோழிகளும், வீரபத்திரன் ஏவலாளர் ஆகிய சிற்பங்கள் நாயக்கர் காலச் சிற்பியின் கைவண்ணத்தைக் காட்டுகின்றன.

தலத்தின் சிறப்பு 

500 ஆண்டுகள் பழமையானது. நாயக்கர் கலைப்பாணி

கி.பி.16-ஆம் நூற்றாண்டில் விசயநகரப் பேரரசின் கீழ் தமிழகத்தை ஆண்ட மன்னருள் ஒருவரான கிருஷ்ணப்ப நாயக்கர் இந்த கோவிலைக் கட்டி சிற்பங்களை நிறுவியுள்ளார். 110 அடி உயரத்தில் ஐந்து நிலை இராஜகோபுரமும், கருங்கல்லிலான திருச்சுற்று மதில்களும் சூழப்பெற்று விசாலமாக 1.8 ஏக்கர் (0.73 ஹெக்டேர்) பரப்பில் நாயக்கர் கலைப்பாணியில் எழிலுடன் விளங்கும் அளவில் பெரிய வாழ்வியல் மற்றும் புராண சிற்பங்களைக் கொண்டு இக்கோயில் அமைந்துள்ளது. கிருஷ்ணாபுரம் கோவில் ஒரு வைணவ வழிபாட்டுத் தலம் ஆகும். கிருஷ்ணப்பரின் மகன் வீரப்பரின் திருப்பணிகளும் இங்கு உள்ளன. கிருஷ்ணப்பர் நினைவாக இங்குள்ள கோவிலை அடுத்த ஊர் கிருஷ்ணாபுரம் என அழைக்கப்படுகிறது.

                                       . ஓம் நமசிவாய படித்து பகிர்ந்தது
 இரா இளங்கோவன்
 நெல்லிக்குப்பம். 

கும்பகோணத்தை சுற்றியுள்ள 6 சிவாலயங்கள்.

*கும்பகோணத்தை சுற்றியுள்ள 6 சிவாலயங்கள்*
                             
*நாகேஸ்வரர்*

கும்பகோணத்தில் கிழக்குப் பகுதியில் அமைந்துள்ளது, நாகேஸ்வரர் திருக்கோவில். பூமியைத் தாங்கிக்கொண்டிருந்த ஆதிசேஷனுக்கு, அதன் பாரத்தை தாங்கும் சக்தி இல்லாமல் போனது. 

இதனால் மகாவிஷ்ணுவை வணங்கிய ஆதிசேஷன், தனது இயலாமையை எடுத்துரைத்து, தொடர்ந்து பூமியைத் தாங்கும் சக்தியைத் தருமாறு வேண்டினார். 

அதற்கு மகாவிஷ்ணு, “நீ.. கும்பகோணம் சென்று அங்கு ஒரு தீர்த்தத்தை உருவாக்கி, அந்த நீரைக்கொண்டு அபிஷேகித்து நாகேஸ்வரரை வணங்கு. அதன் மூலம் பூமியைத் தாங்கும் வல்லமை உனக்குக் கிடைக்கும்” என்று அருளினார். 

அதன்படியே கும்பகோணம் வந்து நாகேஸ்வரரை வணங்கிய ஆதிசேஷன், பூமியைத் தாங்கும் முழு சக்தியையும் பெற்றார். இந்த ஆலயம் பிரமாண்டமாக அமைந்துள்ளது. இங்கு வடக்கு திசையில் சிவகாமி அம்மை சன்னிதியும், தென் திசையில் சிங்கமுக தீர்த்தமும் இருக்கின்றன.

*கோடீஸ்வரர்*

கும்பகோணத்தில் அமுத கலசத்தின் மீது அம்பு எய்தார், சிவபெருமான். அந்த கலசத்தில் இருந்து தெறித்த ஒரு துளி அமிர்தம், கும்பகோணம் அடுத்துள்ள கொட்டையூர் கோடீஸ்வரர் ஆலயத்தின் குளத்திற்குள் விழுந்தது. 

இதையடுத்து அந்த குளம், அமிர்தக் கிணறாக மாறியது. எங்கும் ஒளி ரூபமாக வீற்றிக்கும் சிவபெருமான், இங்கு கோடீஸ்வரர் என்ற திருநாமத்தைத் தாங்கி நிற்கிறார். இங்குள்ள சிவலிங்கம், தன்னகத்தே, கோடி லிங்கங்களை அடக்கியதாக காட்சி தருகிறது. 

ஒரு முறை மத்ரயோகி என்ற முனிவர், தான் இழந்த தவ பலத்தை திரும்பப் பெறுவதற்காக, கோடி சிவலிங்க தரிசனத்தைக் காண விரும்பினார். அதன்படி இந்த ஆலயத்தில் உள்ள இறைவனையும் தரிசிக்க வந்தார். 

அப்போது இத்தல இறைவன், தன்னுள் இருந்த கோடி சிவலிங்கத்தை முனிவருக்கு காட்டி அவருக்கு அருள்புரிந்தார். இங்குள்ள பரிவார தெய்வங்கள் அனைத்தும் ‘கோடி’ என்ற அடைமொழியோடே அழைக்கப்படுகின்றன.

*அபிமுகேஸ்வரர்*

சிவபெருமான் வேடனின் உருவம் தாங்கி வந்து, அமுத குடத்தை அம்பு எய்து சிதைத்தபோது, அந்த குடத்தின் மேல் இருந்த தேங்காய் ஓரிடத்தில் போய் விழுந்தது. 

விழுந்த இடத்தில் ஒரு தென்னை மரமும், அதன் அடியில் ஒரு சிவலிங்கமும் தோன்றின. தேங்காய்க்கு, ‘நாளிகேரம்’ என்ற பெயர் உண்டு. தென்னை மரத்தின் அடியில் தோன்றியதால், இத்தல இறைவன் ‘நாளிகேசர்’ என்று அழைக்கப்பட்டார். 

இத்தல அம்பாளின் திருநாமம், ‘அமுதவல்லி’ என்பதாகும். ஒரு முறை மகாமக குளத்தில் நீராடுவதற்காக நவ கன்னியர்கள் வருகை தந்தனர். 

அவர்கள் தரிசிப்பதற்கு ஏதுவாக, கிழக்கு நோக்கி அமர்ந்திருந்த நாளிகேசர், மேற்கு நோக்கி திரும்பினார். இதனால் இத்தல இறைவனுக்கு ‘அபிமுகேஸ்வரர்’ என்ற பெயர் வந்தது. அபிமுகம் என்றால் நேர்முகம் என்று பொருள்.

*காளகஸ்தீஸ்வரர்*

இந்தப் பெயரைக் கேட்டதுமே நம் நினைவுக்கு வருவது, திருப்பதி அருகே உள்ள காளகஸ்தீஸ்வரர் திருக்கோவில்தான். 

ஆனால் நாம் பார்க்கப்போவது அதேபோன்று, கும்பகோணம் உப்பிலியப்பன் ஆலயம் அருகே அமைந்துள்ள காளகஸ்தீஸ்வரர் திருக்கோவில் ஆகும். திருப்பதி அருகே உள்ள காளகஸ்தியில் செய்ய வேண்டிய பரிகார பூஜைகளை, 

அங்கே செல்ல முடியா தவர்கள், இந்த ஆலயத்தில் செய்யலாம் என்று சொல்லப்படுகிறது. நீண்ட காலமாக திருமணம் ஆகாத ஆண்களும், பெண்களும் இந்த ஆலயம் வந்து, இத்தல இறைவனை வேண்டினால் விரைவில் திருமணம் கைகூடும் என்கிறார்கள். 

இங்குள்ள துர்க்கை அம்மனை வேண்டினால், வேண்டிய வரம் உடனே கிடைக்கும் என்பது ஐதீகம். ஓம்கார வடிவில் அமைந்துள்ள அம்மனின் பிரகாரத்தில் உள்ள மணியை அடித்தால், ‘ஓம்’ என்ற நாதம் ஒலிப்பது சிறப்புக்குரிய அம்சமாகும்.

*அமிர்தகலசநாதர்*

கும்பகோணத்தில் இருந்து சுமார் 4 கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது, சாக்கோட்டை பகுதி. இங்குதான் அமிர்தவல்லி உடனாய அமிர்தகலசநாதர் கோவில் இருக்கிறது. 

இந்த ஆலயத்தைச் சுற்றிலும் கோட்டை ஒன்று இருந்த காரணத்தால் ‘கோட்டைக்கோவில்’ என்றும் இது அழைக்கப்படுகிறது. சிவபெருமான் வேடனாக வந்து அம்பெய்தி கும்பத்தை உடைத்தபோது, கலசம் மட்டும் போய் விழுந்த இடம் இதுவாகும். 

சோழர் கால சிற்பக்கலையின் மிகச் சிறந்த வேலைப்பாடாக விளங்கும் இத்தல மூலவர், சிவலிங்க ரூபமாக காட்சி தருகிறார். எனவே தான் இத்தல இறைவன் ‘அமிர்தகலசநாதர்’ என்று பெயர் பெற்றார். 

மூலவர் சன்னிதிக்கு வடக்குப் பகுதியில் தென் திசை நோக்கிய சன்னிதியில் அமிர்தவல்லி அம்மன் வீற்றிருக்கிறார். அம்மனுக்கு தவத்தின் பயனை இறைவன் உணர்த்திய தலம் இதுவாகும்.

*ஏகாம்பரேஸ்வரர்*

கும்பகோணம் மத்திய பேருந்து நிலையத்தில் இருந்து சுமார் 2 கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது ஏகாம்பரேஸ்வரர் ஆலயம். இந்த ஆலயத்தில் மூலவருடன், காமாட்சி அம்மன் வீற்றிருந்து அருள்பாலிக்கிறார். அம்மன் சன்னிதியின் இருபுறமும் தீட்டப்பட்டுள்ள காயத்ரி தேவியின் திருவுருவமும், காமாட்சி அம்மனின் ஒவியமும் காண்போரை கொள்ளைகொள்வதாக அமைந்துள்ளன. 
                           -  வேலாயுதம் செ 
ஏகாம்பரேஸ்வரர், காளியம்மன் மற்றும் நவக்கிரகங் களுக்கு தனித்தனியாக சன்னிதிகள் காணப்படுகின்றன. இங்குள்ள காளிகாபரமேஸ்வரி என்னும் ராகுகால அம்மன், அசுரனை சம்ஹாரம் செய்யும் திருக்கோலத்துடன் காட்சி தருகிறாள். 

பொதுவாக துர்க்கை அம்மனுக்குத்தான் ராகுகால வழிபாடு நடத்தப்படும். ஆனால் இங்கு, காளிகாபரமேஸ்வரி அம்மனுக்கு ராகுகால வழிபாடுகள் செய்யப்படுகின்றன.
ஓம் நமசிவாய 
படித்து பகிர்ந்தது 
இரா இளங்கோவன் 
நெல்லிக்குப்பம். 

Followers

உத்தரமேரூர் சுந்தர வரதராஜப் பெருமாள் கோயில்.

உத்தரமேரூர் சுந்தர வரதராஜப் பெருமாள் கோயில் வேறு பெயர்கள்  ஸ்ரீவேலி விஷ்ணுக்ரஹம் , கொங்கரையர் நின்ற பெருமாள் கோயில், வெள்ளைமூர்த...