Thursday, February 19, 2026

ஆம்பூர் நாகநாதசுவாமி திருக்கோவில்


நாகதோஷங்கள் நீக்கும் தலம், மணப்பேறும் மகப்பேறும் அருளும் கோவில் என பல்வேறு சிறப்புகள் கொண்ட ஆலயமாகத் திகழ்வது, ஆம்பூர் நாகநாதசுவாமி திருக்கோவில்.
தோஷங்களை நீக்கும் ஆம்பூர் நாகநாதசுவாமி திருக்கோவில்

அடிமுடி தேடிய தோஷம் நீங்க பிரம்மன் வழிபட்ட தலங்களில் ஒன்று, வழக்கத்திற்கு மாறாக அக்னி மூலையில் நவக்கிரக சன்னிதி அமைந்த ஆலயம், நாகதோஷங்கள் நீக்கும் தலம், மணப்பேறும் மகப்பேறும் அருளும் கோவில் என பல்வேறு சிறப்புகள் கொண்ட ஆலயமாகத் திகழ்வது, ஆம்பூர் நாகநாதசுவாமி திருக்கோவில்.

அடிமுடி தேடிய தோஷம் நீங்க, பிரம்ம தேவன் வழிபட்ட ஏழு தலங்களில், ஆறாவது தலமாக விளங்குகின்றது இந்த ஆலயம்.

மன்னன் காலத்தில் ஆம்பூர் வனப்பகுதியில் இறைவன் புற்றினால் மூடி மறைந்த நிலையில் வாழ்ந்து வந்தார்.

இப்பகுதியை ஆண்ட மன்னனின் அரண்மனை மந்தையைச் சேர்ந்த பசு ஒன்று, நாள்தோறும் இந்தப் புற்றின் மீது நின்று கொண்டு, பால் பொழிவதை வழக்கமாக கொண்டிருந்தது.

இதைக் கண்காணித்த இடையன், மன்னனிடம் நடந்த விவரத்தைச் சொன்னான். உடனே மன்னன் அந்தப் புற்றை இடிக்க ஆணையிட்டான்.

மன்னனின் உத்தரவை செயல்படுத்தும் விதமாக, காவலர்கள் புற்றை இடித்தபோது, நாகம் காத்து வந்த சிவலிங்கத்தின் மீது அடிபட்டு ரத்தம் பீறிட்டது. இதனால் அனைவரும் பயத்தில் கலைந்து ஓடினர்.

அன்று இரவு மன்னனின் கனவில் தோன்றிய இறைவன், புற்றில் இருந்தது தானே என்றும், தனக்கு தனி ஆலயம் எழுப்பி, நாகம் காத்த என்னை ‘நாகநாதன்’ என்று அழைக்கும்படியும் கூறி மறைந்தார்.

மன்னனும் அதன்படியே அதே இடத்தில் ஒரு ஆலயம் எழுப்பி, குடமுழுக்கு விழாவை நடத்தி முடித்தான். இந்த சம்பவத்தில் ஏற்பட்ட வடுவை, இன்றும் இறைவன் திருமேனியில் காணலாம்.

ஆம்பூர் நகரின் மையப்பகுதியில், சுமார் 1½ ஏக்கர் நிலப்பரப்பில், சற்று பள்ளமாக 9 படிகள் கீழிறங்கி செல்லும் விதமாக ஆலயம் அமைந்துள்ளது.

இவ்வாலயத்தின் அமைப்பு பிற்காலச் சோழர் கலைப்பாணியில் அமைந்துள்ளது என்பது ஆய்வாளர்களின் கருத்து.

தென்கிழக்கு நோக்கிய மூன்று நிலை ராஜகோபுரம் ஐந்து கலசங்களைத் தாங்கி கம்பீரமாக நிற்கின்றது.

ராஜகோபுரம் முழுவதுமே கலை நயமிக்க சுதைச் சிற்பங்கள் கண்ணுக்கும் கருத்துக்கும் விருந்தாகின்றன. பிட்டுக்கு மண் சுமத்தல், அனுமன் சிவலிங்கத்தை ராமருக்குக் கொண்டு வருதல், அஷ்டதிக்குப் பாலகர்கள், கால சம்ஹாரம், திருஞான சம்பந்தரின் அற்புதங்கள் முதலான புராண வரலாறுகள் சுதைச் சிற்பங்களாக வடிக்கப்பட்டுள்ளன.

ராஜகோபுர நுழைவுவாசலில் வல்லப கணபதியின் புடைப்புச் சிற்பமும், அவரின் வாகனமும் காட்சி தருகின்றன. கோபுர வாசலைக் கடந்ததும், அக்னி மூலையில் உள்ள குருவின் பார்வை நம் மீது படுகிறது.

எதிரே கொடிமரம், பலிபீடம், நந்தி, காட்சி தர, மேல் மண்டப விளம்பில் எம்பெருமானின் திருமணக் கோலமும், தெய்வ வடிவங்களும் சுதைச் சிற்பங்களாக அழகுற காட்சி தருகின்றன. நந்திதேவர் நவ துவாரக் கல் ஜன்னல் வழியே நாகநாதசுவாமியை தரிசிக்கின்றார்.

தெற்குப் பிரகாரத்தில் மார்க்கபந்தீசுவரர் சன்னிதி கிழக்கு முகமாய் அமைந்துள்ளது. அன்னை மரகதாம்பிகை, விநாயகர், நந்திதேவர் காட்சிதர, அக்னி மூலையில் நவக்கிரக சன்னிதி இருக்கிறது.

சப்த மாதர் சன்னிதி வடக்கு நோக்கி உள்ளது. தென்மேற்கில் அறுபத்துமூவர் சன்னிதியும், அடுத்ததாக வள்ளி- தெய்வானை சமேத முருகப்பெருமான் சன்னிதியும் அமைந்துள்ளன. அருகே தலமரமான வில்வம் பசுமையாகக் காட்சி தருகிறது.

நாகநாத சுவாமி 

ஆலயத்தில் நடுநாயகமாக நாகநாதசுவாமி வீற்றிருக் கிறார். துவாரபாலகர்கள் காவல் நிற்க, கருவறைச் சுற்றில் விநாயகர், பச்சைக் கல்லினால் ஆன தட்சிணாமூர்த்தி, லிங்கோத்பவர், பிரம்மா, எழிலான துர்க்கை, சண்டிகேஸ்வரர் உள்ளிட்ட சிலா வடிவங்கள் ஒருங்கே அமையப் பெற்றுள்ளன.

தட்சிணாமூர்த்தியின் பின்புறம் ஆஞ்சநேயர் சிவலிங்கத் திருமேனியை வழி படும் புடைப்புச் சிற்பம் காணப்படுகிறது.

ஈசான்ய பகுதியில் காளத்தீசுவரர், ஞான பிரசன்னாம்பிகை, பலிபீடம், நந்தி ஆகியவை சிவப்பு கருங்கல் மேனியராக அமர்ந்து திருமண வரம் தருவது குறிப்பிடத்தக்கது. 

இறைவன் நாகநாதசுவாமி சதுர வடிவ ஆவுடையாரில் சுயம்பு மூர்த்தியாக எளிய வடிவில், ஒளி வீசும் தோற்றத்துடன் அருள்காட்சி வழங்குகின்றார்.

இவரைக் கண்டறிய புற்றை அகற்றியபோது ஏற்பட்ட வடுவை, இன்றும் இவரின் திருமேனியின் பின்பகுதியில் கண்டு மெய் சிலிர்க்கலாம்.

வடமேற்குப் பிரகாரத்தில் அன்னை சமயவல்லி சன்னிதி அமைந்துள்ளது. இதற்குள் சுக்ர வார அம்மன், பள்ளியறை அமைந்திருக்க, அன்னையை தரிசித்தபடி சிம்ம வாகனம் காணப்படுகிறது.

அன்னை சமயவல்லி எளியவளாக கலைநயம் கொண்டு, கீழ் இரு கரங்களில் அபய வரத முத்திரையோடு, மேல் இரு கரங்களில் பாச அங்குசம் தாங்கி, கிழக்கு முகமாய்க் காட்சி தருகிறாள்.

அன்னை, சுவாமியின் உயரத்தை விட, ஒரு படி மேலாக காட்சியளிப்பது, வழக்கத்திற்கு மாறான அமைப்பாக உள்ளது.

கன்னி மூலையில் நவக்கிரகங்கள் 

பொதுவாக, நவக்கிரக சன்னிதி வடகிழக்குப் பகுதியான ஈசான்ய மூலையில் அமைந்திருப்பது இயல்பான ஒன்று.

ஆனால் இங்கு தென்கிழக்குப் பகுதியான கன்னி மூலையில் நவக்கிரக சன்னிதி அமைந்துள்ளது. இதன் மூலம் ராஜகோபுரத்தை கடந்து ஆலயத்திற்குள் நுழையும் போதே குருவின் பார்வை கிடைப்பது குறிப்பிடத்தக்கது.

அதேபோல, சனி பகவானின் இடதுபுறம் காக வாகனம் இருப்பது தனிச் சிறப்பாகும்.

இவ்வாலயத்தில், இரண்டு பைரவர்கள் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்க அம்சம்.

இவ்வாலயம் நாக தோஷங்கள் அனைத்திற்கும், ஏற்ற தலமாக அமைந்துள்ளது. இது தவிர திருமணப்பேறு, குழந்தைப்பேறு இவற்றிற்கு உகந்த தலமாகவும் இது அமைந்துள்ளது.
திங்கட்கிழமைகளில் உண்ணா நோன்பிருந்து வழிபடுவது குழந்தைப்பேறு தரும். குடும்ப பிரச்சினைகள், நோய்கள் தீரவும், சிறந்த வேண்டுதல் தலமாக இது திகழ்கின்றது.

இந்தக் கோவிலில் பங்குனி கிருத்திகையில் தொடங்கி பங்குனி உத்திரம் வரை பத்து நாட்கள் பிரம்மோற்சவம் வெகு விமரிசையாக நடைபெறுகிறது.

இது தவிர, தமிழ்ப்புத்தாண்டு லட்ச தீபம், சித்திராப் பவுர்ணமி, சித்திரை விஷு, கிருத்திகை, நவராத்திரி, ஐப்பசி அன்னாபிஷேகம், கார்த்திகை தீபம், கார்த்திகை கடைசி சோமவாரம் சங்காபிஷேகம், மார்கழி ஆருத்ரா, தைப் பொங்கல், கிருத்திகை, மகா சிவராத்திரி, பிரதோஷம் உள்ளிட்ட அனைத்து சிவாலய வழிபாடுகளும், கிருஷ்ணன், ஐயப்பனுக்கும் விழாக்கள் விமரிசையாக நடத்தப்படுகின்றன.

இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இந்த ஆலயத்தில் தினமும் காலை 6 மணி முதல் நண்பகல் 12 மணி வரையிலும், மாலை 5.30 மணி முதல் இரவு 9 மணி வரையிலும் ஆலய தரிசனம் செய்யலாம்.

இவ்வூர் பல்லவர், சோழர், விஜயநகர மன்னர், ஒய்சாலர் என பல்வேறு மன்னர்கள் காலங்களிலும், முக்கியத்துவம் பெற்ற ஊராக விளங்கியதை, இவ்வூரில் கிடைத்த நான்கு கல்வெட்டுகள் சான்றாக அமைந்துள்ளன.

கி.பி. 1896-ம் ஆண்டு தொல்லியல் ஆய்வறிக்கையின்படி, இவ்வூரில் மூன்று கல்வெட்டுகள் கண்டறியப்பட்டுள்ளன.

இரண்டு கல்வெட்டுகள் ஆம்பூரின் கங்கா ரெட்டிக்காரத் தெருவில் கண்டறியப்பட்டன. அவை இரண்டுமே கி.பி. 895-ம் ஆண்டைச் சார்ந்தவையாகும்.

இவை நிருபதுங்க வர்ம பல்லவன் கால, வீரக்கல் எனும் நடுகற்களாகும். இன்றைய ஆம்பூர், பழங்காலத்தில் ‘ஆமையூர்’ என அழைக்கப்பட்டதாக அறிய முடிகிறது. இவ்வூரில் ஆண்மை மிக்க வீரர்கள் இருந்ததால் இது ‘ஆண்மை ஊர்’ என்பதே பிற்காலத்தில் ‘ஆமையூராக’ மாறி, தற்போது ஆம்பூர் என்று சொல்வழக்கில் உள்ளது.

மூன்றாவது கல்வெட்டு, நாகநாத சுவாமி திருக்கோவில் சுவற்றில் உள்ள கி.பி. 1193-ம் ஆண்டு மூன்றாம் குலோத்துங்க சோழனின் 15-ம் ஆட்சியாண்டு கல்வெட்டாகும்.

இதில் இக்கோவில் நிர்வாகம் செய்த சித்திரமேழி பெரியநாட்டார் என்ற குழுவினர் இக்கோவிலின் ஸ்ரீபலி எனும் வழிபாடு மேற்கொள்ள அரங்கம் அமைத்த செய்தியைக் குறிப்பிடுகிறது. இதில் இறைவன் திருப்பெயர் நாகேசுவரர் என்றும், ஊரின் பெயர் ஆமையூர் என்றும் குறிப்பிட்டுள்ளது. 

வேலூர் மாவட்டம், ஆம்பூர் நகரின் மையப்பகுதியில் இத் திருக்கோவில் அமைந்துள்ளது.

ஓம் நமசிவாய
 படித்து பகிர்ந்தது 
இரா இளங்கோவன் 
நெல்லிக்குப்பம். 

கரூர் வேலாயுதம்பாளையம் புகழிமலை முருகன்.

*கரூர் வேலாயுதம்பாளையம் புகழிமலை பாலசுப்பிரமண்யர்: இங்கே வேல் செலுத்தினால் வேண்டுதல் நிறைவேறும்* ....


கரூர் பேருந்து நிலையத்திலிருந்து 16 கி.மீ தொலைவில் உள்ள வேலாயுதம்பாளையம் என்னும் ஊரில் இயற்கை எழில் கொஞ்சும் சிறு குன்றின் மீது அமைந்திருக்கும் அருள்மிகு புகழிமலை பாலசுப்ரமணிய சுவாமி திருக்கோயில் சுமார் இரண்டாயிரம் ஆண்டுகள் பழைமை வாய்ந்தது என்கிறார்கள். 

முருகப்பெருமான் அருளும் தலங்கள் ஒவ்வொன்றாகத் தேடித் தேடிச் சென்று திருப்புகழ்பாடி நமக்கெல்லாம் அந்த முருகனின் அருட்கடாட்சம் கிடைக்கும்படி வழி செய்தார் அருணகிரிப் பெருமான். அப்படி அவர் பாடிய தலங்களில் ஒன்று வேலாயுதம்பாளையம்.

கடையேழு வள்ளல்களில் ஒருவரான வல்வில் ஓரி ஆட்சி செய்த பகுதியில் அமைந்திருக்கும் தலம். இங்கு மலைமீது அருளும் பாலசுப்பிரமண்யர் திருக்கோயிலைக் கட்டி, இந்தப் பகுதிக்கு வேலாயுதம்பாளையம் என்று பெயரிட்டவரும் அவர்தான் என்கிறார்கள்.

அருணகிரிநாதர் இத்தலத்தைப் பாடியபோது, 'புகழிமலை மேவு பெருமாளே' எனப் பாடிப் பரவினார். சமணப் படுகைகள் கொண்ட இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க மலைத் தலத்தின் சிறப்புகளைக் காண்போம்.

பராந்தக நெடுஞ்சடையன் என்னும் பாண்டிய மன்னனும், அதியன் என்ற மன்னனும் போர்க் காலங்களில் இம்மலையில் உள்ள குகைகளை, போர்த் தந்திர வேலைகளுக்குப் பயன்படுத்தியதாக திருக்கோயில் கல்வெட்டுகள் குறிப்பிடுகின்றன.

புகழூர் என்று அழைக்கப்படும் இக்குன்று அமைந்துள்ள இடத்தில் சமண முனிவர்கள் அடைக்கலம் புகுந்து வாழ்ந்து வந்ததாகவும், சங்க காலத்தில் இப்படி அடைக்கலம் புகும் இடங்களை புகழூர் என்று அழைக்கும் வழக்கம் இருந்ததாகவும் கூறப்படுகிறது.

மேலும், 8 - ம் நூற்றாண்டில் அரியணையில் அமர்ந்த நெடுஞ்செழியன் எனும் பாண்டிய மன்னனின் மெய்க்கீர்த்தியில் இவ்வூர் `புகழியூர்' என அழைக்கப்பட்டதாகவும் இங்குள்ள கல்வெட்டுக் குறிப்புகள் உரைக்கின்றன.

சுமாா் 400 அடி உயரமுள்ள இந்த மலையின் அடிவாரத்தில் விநாயகா் சந்நிதி உள்ளது. நுழைவாயில் மண்டபத்தில் மலையை நோக்கி மேற்குத் திசையில் மயில்வாகன சந்நிதியும் அமைந்துள்ளது.

மேலும் அந்த மலையைக் காவல் காக்கும் அய்யனாருக்கும் தனிச் சந்நிதி உள்ளது. இதிலிருந்து 48 படிகள் ஏறியவுடன் தென் திசையில் உள்ள சிறிய குகையில் சிவன்-பாா்வதி, ஒளவையாா் சுதை சிற்பங்கள் அமா்ந்த நிலையில் உள்ளன.

இவற்றின் அருகில் கிழக்குத் திசை நோக்கி ஏழு கன்னிமாா்கள் சந்நிதி உள்ளது. கடும் தவத்தில் இருக்கும் சுதையாலான அகத்தியரின் சிலையைத் தரிசிக்கலாம். மேலும் 14 படிகள் ஏறினால் வட திசை பாா்த்த இடும்பன் சந்நிதி உள்ளது.

தொடா்ந்து ஏறினால் கிழக்குத் திசையில் அமைந்துள்ள மூலஸ்தானத்திற்குள் நுழையலாம். முருகப்பெருமான் கருவறையில் பாலசுப்பிரமண்யராக கையில் வேலேந்திக் காட்சி அருள்கிறார். ஒரு கையில் வேலும் மற்றொரு கையில் சேவல் கொடியும் கொண்டு, நின்ற கோலத்தில் வஜ்ஜிரம், சக்தி ஆகியவற்றோடு அபயம், வரதம் ஆகிய நான்கு கரங்களுடனும் பாலசுப்பிரமணியராக கடவுள் காட்சி அருள்கிறாா்.

இந்தக் கோயிலின் மயில் வாகனத்தின் தலை இடப்புறமாகவும், தோகை வலப்புறமாகவும் திகழ்கிறது. இத்தகைய அமைப்பு சூரசம்ஹாரத்துக்கு முற்பட்ட முருகனின் திருக்கோலத்தைக் குறிக்குமாம். இதிலிருந்து இந்தக் கோயிலின் புராதனத்தை அறியமுடிகிறது.

இங்கே முருகனுக்கு நேர்த்திக்கடனாக வேல் செலுத்தி வழிபடும் வழக்கம் பிரசித்தம். செய்த பாவங்கள் யாவும் தீர்ந்து நல்வாழ்வு அமையவேண்டி, பக்தர்கள் தங்கள் கையில் வேலோடு இந்தக் கோயிலுக்கு வருகிறார்கள். தொடர்ந்து 12 வாரம் செவ்வாய்க்கிழமைகளில் செவ்வரளிப் பூ மற்றும் செவ்வாழைப் பழம் படைத்து வழிபட்டால், திருமணத் தடை விலகி, இல்லற வாழ்க்கை விரைவில் கைகூடும்.

சஷ்டி விரதமிருந்து முருகப் பெருமானைத் தரிசித்தால், குழந்தை பாக்கியம் கிட்டும். ஐப்பசி சஷ்டி தினத்தில் தினை மாவு வைத்து வழிபடுவது கூடுதல் விசேஷம்.

மழை பெய்ய வேண்டியும், ஊர் ஒற்றுமைக் காகவும் இக்கோயிலின் 315 படிகளுக்கும் நெய் தீபம் அல்லது சூடமேற்றி படி பூஜை செய்வது வழக்கம்.

தைப்பூச தேர்த் திருவிழாவில் ஆயிரக்கணக்காண பக்தர்கள் இளநீர்க் காவடி எடுத்து வந்து, முருகப்பெருமானைத் தரிசித்துச் செல்கின்றனர். சூரசம்ஹாரமும் இங்கு வெகு விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது.

கிருத்திகை தினத்தில் மூன்று வேளையும் சிறப்பு அலங்காரம் நடைபெறுகிறது. அன்றைய தினம் இக்கோயிலில் அன்னதானம் செய்து வழிபட்டால், குடும்பம் செழித்தோங்கும். வாய்ப்பிருக்கும் அன்பர்கள் ஒருமுறை வேலாயுதம்பாளையம் சென்று பாலசுப்பிரமண்யரை தரிசனம் செய்து வாருங்கள். வாழ்க்கையில் வளமும் நலமும் கூடும்.

ஓம் நமசிவாய
 படித்து பகிர்ந்தது 
இரா இளங்கோவன்
 நெல்லிக்குப்பம். 

Tuesday, February 17, 2026

மகிமை மிகுந்த மாசி மாதம்‌

மகிமை மிகுந்த மாசி மாதம்‌ 
பற்றி தெரியுமா?
சூரியமான முறையில் கணிக்கப்படும் தமிழ் நாட்காட்டியின்படி ஆண்டின் பதினோராவது மாதம் மாசி ஆகும். 

சூரியன் கும்ப இராசியுட் புகுந்து அதைவிட்டு வெளியேறும் வரையிலா ன 29 நாள், 48 நாடி, 24 விநாடி கொண்ட கால அளவே இம் மாதமாகும். வசதிக்காக இந்த மாதம் 29 அல்லது 30 நாட்களை உடையதாகக் கொள்ளப்படும்.

மாசி மாத சிறப்புகள்

அம்பிகை மாசி மக நட்சத்திரத்தில் அவதரித் ததால் மாசிமகம் பெருமை பெறுகின்றது.

மாசி மாதத்தில் சிறுவர்களுக்கு உபநயனம் செய்வது, மந்திர உபதேசம் செய்வது போற்றப் படுகிறது.

சிவபெருமான் குழந்தை வடிவில் வந்து தமது திருவிளையாடல்கள் மூலம் அருள்புரிந்தது மாசி மாதத்தில் தான் என்பதும் புராண கூற்று. 

பிரகலாதனைக் கொல்வதற்காக நயவஞ்சக மாக வந்த அரக்கி, தீயில் வெந்து சாம்பலான நிகழ்ச்சி மாசி மாதத்தில்தான் நடந்தது.

மாசி மாதத்தில் கிரகப்பிரவேசம் அல்லது வீடு மாறிக் குடியேறினால் வாழ்வில் வசந்தம் வீசும் என்பதும் ஐதீகம். 

மாசி மாத சங்கடஹர சதுர்த்தி மிகவும் சிறப் பிக்கப்படுகிறது. அன்று விரதம் கடைப்பிடித்து விநாயகரை வழிபட்டால் எல்லாவிதமான தோஷங்களும் விலகும் என்பர்.

மாசி மகத்தன்றுதான் மகாவிஷ்ணு வராக அவதாரம் எடுத்து, பூமியை பாதாளத்தில் ஒளித்து வைத்திருந்த அசுரனை வதம் செய்து பூமியை மீட்டுக் கொண்டு வந்தார்.

மாசி மாதத்திற்கு அதிதேவதை மகாவிஷ்ணு அதனால் மகா விஷ்ணுவை இம்மாதம் முழுவ தும் துளசி தளத்தால் அர்ச்சித்து வழி பட்டால், இல்லத்தில் சுபகரியங்கள் தடையின்றி நிறைவேறும்.

மாசி மகத்தன்று சிவபெருமான், பள்ளி கொண்டாப்பட்டு என்னும் ஊருக்கு எழுந்தருளி, வல்லாள மகாராஜனுக்கு மகனாகக் காட்சி கொடுத்து, நீத்தார் கடனுக்குரிய வழி பாட்டினை நடத்தினார். 

வல்லாள மகராஜனுக்கு வாரிசு இல்லாததால் சிவபக்தனான மகாராஜனுக்கு சிவன் நீத்தார் கடன் அளித்ததாக புராணங்கள் சொல்கிறது.

மாசி வளர்பிறை சதுர்த்தி திதியில் நடை பெறும் முழுக்கு, தேவர்கள் செய்யும் பூஜை என்பது ஐதீகம்.

மாசிமகத் திருநாள் அன்றுதான் அன்னை பார்வதியானவள் தாட்சாயிணி என்ற பெயரில் வலம்புரிச் சங்கில் குழந்தையாக அவதரித்தாள்.

மன்மதன் சிவபெருமானால் எரிக்கப்பட்டதும் மாசி பெளர்ணமியில்தான்.

இத்தகைய சிறப்புகளைக் கொண்டது தான் மாசி மாதம்.

காரைக்கால் அம்மையார் 

வைணவத்துக்கு ஆண்டாள்போல, சைவ சமயத்துக்கு காரைக்கால் அம்மையார் திகழ்கிறார். 

கணவனால் புறக்கணிக்கப்பட்ட  புனிதவதி என்ற காரைக்கால் அம்மையார், "இறை வா! இனி எனக்கிந்த மேனியழகு வேண்டாம்; பேய் உருவம் கொடு!' என்று வேண்டிப் பெற்றவர்.

அம்மையாருக்காக சிவபெருமான் நடனம் ஆடி யருளினார். அது ஊர்த்துவ நடனம் எனப்படும். 

அப்போது இசைக்கப்பட்ட சச்சரி, கொக்கரை, தககை, தகுணச்சம், துந்துபி, தாளம், வீணை, மத்தளம், கரடிகை, தமருகம், குடமுழா, மொந்தை எனப்படும் 12 இசைக்கருவிகளைப் பற்றி தனது பாடலில் குறிப்பிட்டுள்ளார்.

திருவாலங்காட்டில்- நடராஜர் சந்நிதியின் பின் பிறம் ஒரு சுவர் தடுக்கப்பட்டிருக்கும். அதனுள் காரைக்கால் அம்மையார் இருப்பதாக ஐதீகம். 

இதைத்தான் ஆலங்காட்டு இரகசியம் என்பார்க ள். அம்மையார் இறைவனுடன் ஒன்றியது இம்மாசி மாதத்தில்தான்.

குபேரன் பேறு பெற்ற தலம்!

திருநள்ளாறிலிருந்து காரைக்கால் செல்லும் சாலையில், 20 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது திருத்தண்டிகை என்னும் தலம். இங்கு சௌந்தரநாயகி உடனுறை சனத்குமாரேஸ்வர் அருள்புரிகிறார்.

ஒருசமயம் வடதிசை அதிபதியான குபேரன் தர்மம் தவறியதால் சாபம் பெற்றான். 

சப்தரிஷிகளின் ஆலோசனைப்படி திருத் தண்டிகை வந்து வழிபட்டு சாப விமோசனமும் இழந்த செல்வங்களையும் பெற்றான். 

தான் வரம் பெற்ற நாளில் இங்கு வந்து வழிப டும் பக்தர்களுக்கும் இழந்த செல்வத்தை அடையும் வரம் அருள வேண்டும் என்று இறைவனிடம் வேண்டினான்; 

இறைவனும் அவ்வாறே அருளினார். குபேரன் பேறு பெற்ற நாள் மாசி மாதப் பௌர்ணமி.

மாசி மாதம் முழுவதுமே மகாஸ்நானம் என்று தினமும் நதியில் நீராடி  கம்பளி, சந்தனக்கட்டை, பசு முதலான தானங் கள் செய்வது மிகுந்த புண்ணியமாகக் கருதப் படுகிறது.

மாசி மாதம் பௌர்ணமி அன்றுதான் பன்னிரெண்டு வருஷத்துக்கொரு முறை நிகழும் 

மகாமகம் கும்பகோணத்திலும், ப்ரயாகை, ஹரித்வார் முதலான இடங்களில் கும்பமேளாவும் பிரஸித்தமானது. அன்று நீராடுதல், தானம் விசேஷமானது.

மாசி மாதம் வரும் சிவராத்திரி விரதம் சிவனு க்கு மிகவும் சிறப்பு வாய்ந்தது. 

மாசி மாதத்தில் அமாவாசைக்கு முதல் நாள் வருவது சிவராத்திரி. 

அன்றைய தினம் விரதமிருந்து இரவு முழுவதும் கண்விழித்து சிவபுராணம் பாராயணம் செய்வது நல்லது. 

மாசிமாதம் வரும் மாசிமக விரதம் சிறப்பானது.  அது மாசி மாதத்தில் பவுர்ணமியும் மக நட்சத்திரமும் கூடிய நாள். 

இந்நாளில் கடற்கரைக்கும் நதிகளுக்கும் ஆலயங்களிலிருந்து உற்சவ மூர்த்திகள் புறப்பட்டு சென்மக ஸ்தானம் ஆகும். 

இச்சமயத்தில் நாமும் புனித நீராடினால் புண்ணியம் எனக்கூறுவர்.

மாசி சரடு பாசி படரும் 

பெண்கள் தீர்க்க சுமங்கலியாக வாழ மாசி மாதம் நல்ல யோகம், திதி கூடிய ஒரு வெள்ளி க்கிழமை அன்று காலையில் கிழக்கு முகமாக அமர்ந்து மாங்கல்ய சரடை சுமங்கலி பெண்க ள் அணிந்து கொண்டால் தீர்க்க சுமங்கலியா கவே அவர்கள் வாழ்வார்கள். இதற்கு மாசி சரடு பாசி படரும் என்ற பழமொழியும் உண்டு. 

மாசி வெள்ளிக்கிழமையில் கட்டப்படும் மஞ்சள் சரடு பாசி படரும் வரை நிலைத்திருக்கும். அதாவது நீண்ட காலம் நிலைத்து நிற்கும் என்பதே இந்த பழமொழியின் பொருள்
ஓம் நமசிவாய
 படித்து பகிர்ந்தது 
இரா இளங்கோவன் 
நெல்லிக்குப்பம். 

முள் இல்லாத வில்வமரம் உள்ள ஸ்ரீ அப்பிரதட்சிணேஸ்வரர் சிவாலயம்,


திருச்சி லால்குடி அருகே உள்ள நகர் கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீஅப்பிரதட்சிணேஸ்வரர் சிவாலயம், உலகில் முள் இல்லாத வில்வமரம் முதன்முதலில் தோன்றிய அற்புதத் தலமாகப் போற்றப்படுகிறது. இத்தலத்தில் வைகாசி, ஆவணி, கார்த்திகை, மாசி மாதப் பிறப்புகளில் முள் இல்லாத வில்வ மரத்திற்கு மஞ்சள் பூசி வழிபாடு செய்வது சிறப்பு. இது பில்லி, சூனியம் போன்ற தோஷங்களைப் போக்கும் தலமாகவும் கருதப்படுகிறது. 
முக்கிய சிறப்புகள்:
தல பெயர்: ஸ்ரீஅப்பிரதட்சிணேஸ்வரர் கோயில், நகர்.
அமைவிடம்: லால்குடி, திருச்சி.
முள் இல்லாத வில்வம்: இங்குள்ள வில்வ மரத்தில் முட்கள் இருப்பதில்லை, இதுவே இக்கோயிலின் தனிச்சிறப்பு.
வழிபாடு: மாதப் பிறப்பு தினங்களில் (குறிப்பாக வைகாசி, ஆவணி, கார்த்திகை, மாசி) வில்வ மரத்திற்கு அரைத்த மஞ்சள் பூசி, வலம் வந்து வணங்கினால் பில்லி சூனியம் போன்ற பிரச்சனைகள் நீங்கும் என நம்பப்படுகிறது. 
இத்தலம் சிவபெருமானுக்கு 'அப்பிரதட்சிணேஸ்வரர்' (வலஞ்சுழி வராதவர் - முள் இல்லாத வில்வம் காரணமாக) என்ற பெயருடன் வணங்கப்படும் முக்கிய இடமாகும்.
ஓம் நமசிவாய 
படித்து பகிர்ந்தது 
இரா இளங்கோவன் 
நெல்லிக்குப்பம். 

Monday, February 16, 2026

மாசி மாத அமாவாசை விரதம்

மாசி_மாத_அமாவாசை எப்படி_விரதம்_இருந்தால்_முழுப்பலன்_கிடைக்கும்.*
அமாவாசை முன்னோர் தர்ப்பணம், வழிபாட்டிற்கு ஏற்ற நாள்.
யாரேனும் ஒருவருக்காவது அன்னதானம் செய்யவேண்டும்.
இந்து சாஸ்திரங்களின்படி, மாதம்தோறும் வருகிற அமாவாசை சிறப்பானது என்றாலும், மாசி மாத அமாவாசைக்கு தனி சிறப்பு உள்ளது. மாசி மாதமே சிறப்பானது தான். இந்த மாதத்தில் செய்யப்படும் வழிபாடுகளும், தானங்களும் இரண்டு மடங்கு நன்மைகளை கொடுக்கக் கூடியது என புராணங்கள் கூறுகின்றன. குறிப்பிட்டு சொல்லவேண்டுமெனில் பிற மாதங்களில் அமாவாசை அன்று மட்டும்தான் முன்னோர் தர்ப்பணம் செய்வார்கள். ஆனால் மாசியில் பெளர்ணமி அன்று கூட முன்னோர்களுக்கு தர்ப்பணம் வழங்குவது புண்ணியம் தரும்.
🌑
மாசி அமாவாசை அன்று அதிகாலையில் எழுந்து தூய்மையான நீரில் நீராடி, விரதத்தை தொடங்கவேண்டும். வீட்டில் இல்லாமல் கோயில் ஆறு, குளங்களில் புனித நீராடினால் நற்பலன்கள் கிடைக்கும். முன்னோருக்கு கோயில் குளம், ஆற்றங்கரை, கடற்கரையில் தர்ப்பணம் கொடுத்து வழிபடவேண்டும். அனைத்து சடங்குகளையும் நிறைவு செய்த பின்னர் அந்தணர்களுக்கு அரிசி, காய்கறி, வஸ்திரம் தானமாக கொடுக்க வேண்டும்.
🌑
பித்ருகளாக கருதப்படும் காகத்திற்கு உணவு கொடுத்த பின் தான் நாம் உணவு சாப்பிட வேண்டும். யாரேனும் ஒருவருக்காவது அன்னதானம் செய்யவேண்டும். வீட்டில் மாலை வேளையில் விளக்கேற்றி முன்னோரை நினைந்து வழிபடவேண்டும். தொழில் செய்யும் நபர்கள் மாசி அமாவாசை நாளில் கண் திருஷ்டி பூசணிக்காய் வாங்கி, உரிய நேரத்தில் பொல்லாத கண் திருஷ்டி கழித்து உடைத்தால் நல்லது.
🌑
*#விரத_பலன்கள்*
🌑
பித்ரு வழிபாட்டிற்கு ஏற்ற மாசி அமாவாசையில், விரதம் இருந்து முன்னோரை வழிபட்டால், அவர்களுடைய ஆன்மா நற்கதி அடையும். நமக்கு ஆசி வழங்கி வாழ்த்தும். குடும்ப உறுப்பினர்களுக்கு உள்ள கிரக தோஷங்கள், திருமண தடை, உடல் நலக்கோளாறு விலகிவிடும். குழந்தை பாக்கியம் கிடைக்கும். தொழில், வியாபாரம் விருத்தி அடையும்.
🌑
மாசி அமாவாசை அன்னம் தானமாக கொடுப்பதால் ஆயிரமாயிராம் ஆண்டுகள் பித்ருக்களை திருப்தி செய்த பலன்களை பெறலாம் என்பது விஷ்ணு புராணத்தில் உள்ளது.

Saturday, February 14, 2026

சித்தர்கள்‌ போற்றும் சிவராத்திரி.

*சித்தர்கள்‌ போற்றும் சிவராத்திரி...*
சிவராத்திரி என்பது ஒரு நாள் அல்ல. அது சிவத்தை உணரும் இரவு,

அகந்தை கரையும் தருணம், உள்ளே இருக்கும் பரம்பொருள் வெளிப்படும் நேரம்.

அகத்தியர், போகர், கருவூரர், திருமூலர் போன்ற சித்தர்கள் சிவராத்திரியை ஒரு ஆன்மீக மாற்றத்தின் இரவு என்று விளக்குகின்றனர்.

அகத்தியர் சிவராத்திரியை ஒரு தத்துவமாக விளக்குகிறார்:

• சிவம் = சுத்த சித்தம்
• ராத்திரி = அகந்தை மறையும் இருள்
• சிவராத்திரி = அகந்தை கரையும் இரவு

சித்தர்கள் சிவராத்திரியை ஐந்து வகைகளாக வகைப்படுத்துகின்றனர்:

1. நித்திய சிவராத்திரி – தினசரி தியானம்

2. மாச சிவராத்திரி – மாதந்தோறும் தேய்பிறை சதுர்த்தசி

3. மகா சிவராத்திரி – மாசி மாத சதுர்த்தசி

4. பிரதோஷ சிவராத்திரி – திரயோதசி + சதுர்த்தசி

5. குபேர யோக சிவராத்திரி – ஞாயிறு திரயோதசி + அடுத்த நாள் மகா சிவராத்திரி

6. குபேர யோக சிவராத்திரி

ஞாயிற்றுக்கிழமை திரயோதசி (பிரதோஷம்) +அடுத்த நாள் சதுர்த்தசி (மகா சிவராத்திரி)

இவை இணைந்து வந்தால் அது குபேர யோக சிவராத்திரி.

இந்த நாளில் பூஜை செய்தால்:

செல்வ யோகம்

தொழில் உயர்வு, சூரிய பதவி, குபேர அனுகிரகம் என பல அரிய பலன்கள் கிடைக்கும்.

சிவராத்திரி இரவின் நான்கு ஜாமங்கள்

ஒரு ஜாமம் = 3 மணி நேரம்
ஜாமம்–படி பூஜை முறை

முதல் ஜாமம் (6–9 PM)

அபிஷேகம் – பஞ்சகவ்யம்
பசும்பால்
தயிர்
நெய்
பசு சாணம்
கோஜலம்

செய்யவேண்டியது

ரிக் வேத பாராயணம்
வில்வ அர்ச்சனை

இரண்டாம் ஜாமம் (9–12 PM)

அபிஷேகம் – பஞ்சாமிர்தம்
பால்
தயிர்
நெய்
தேன்
சர்க்கரை

செய்யவேண்டியது

யஜூர் வேதம்
வில்வ அர்ச்சனை

மூன்றாம் ஜாமம் (12–3 AM)

அபிஷேகம்

கொம்புத் தேன்
பச்சைக் கற்பூரம் பூசுதல்

நைவேத்தியம்

• எள் சாதம்

செய்யவேண்டியது

சாம வேதம்
ஆழ்ந்த தியானம்

நான்காம் ஜாமம் (3–6 AM)

அபிஷேகம்

கரும்புச் சாறு
குங்குமப்பூ பூசுதல்

நைவேத்தியம்

• சுத்த அன்னம் + பசுநெய்

செய்யவேண்டியது

அதர்வண வேதம்

வில்வம் + நீலோற்பவ மலர்

சிவராத்திரி ஏன் சக்திவாய்ந்தது?

போகர் கூறுகிறார்:

“சிவராத்திரி என்பது உடல்–மனம்–ஆத்மா ஒன்றாகும் தருணம்”

சிவராத்திரியில் செய்யவேண்டியவை / தவிர்க்கவேண்டியவை

செய்யவேண்டியவை

மௌனம்
தியானம்
தீபம்
வில்வ அர்ச்சனை
மந்திர ஜபம்
தானம்

தவிர்க்கவேண்டியவை

கோபம்
பொய்
மது / மாமிசம்
தூக்கம்
அதிக பேச்சு

சிவராத்திரி மறுநாள்

பகல் முழுவதும் விழித்திருப்பது விரதத்தின் முழுப் பலனைத் தரும்

எம்பெருமான் 💕 திருக்கருணை இருந்தவாறே 🙏

நற்றுணையாவது அண்ணாமலையாரே 🙏

 எங்கும்   நீக்கமற நிறைந்திருக்கும் அகிலம் காக்கும் அண்ணாமலையாரே போற்றி போற்றி .   உன் ஆழ்ந்த கருணையை பெற என்ன தவம் செய்தேனோ🌹

சிவாய நம🙇 சிவமே ஜெயம் ‌ சிவமே தவம். சிவமே என் வரமே . எங்கும் சிவ நாமம் ஒலிக்கட்டும்.

Friday, February 13, 2026

சிவராத்திரி பற்றிய 40 அரிய தகவல்கள்

சிவராத்திரி பற்றிய 40 அரிய தகவல்கள் 
சிவராத்திரி ஒளிமயமான இரவு இன்பம் தருகின்ற இரவு என்று அழைக்கப்படுகிறது. சிவராத்திரியின் சிறப்பு பற்றிய 40 அரிய தகவல்களை பார்க்கலாம்.
1. சிவன் என்ற சொல்லுக்கு மங்கலம், இன்பம் என்று பொருள். எனவே சிவராத்திரி ஒளிமயமான இரவு இன்பம் தருகின்ற இரவு என்று அழைக்கப்படுகிறது.

2. சிவராத்திரி அன்று விரதம் இருந்து, கண் விழித்து சிவபூஜை செய்ய வேண்டும். தூய ஆடைகளை அணிந்து கொண்டு, திருநீறு பூசிக்கொண்டு சிவனை தியானம் செய்ய வேண்டும் சிவனுக்குரிய மந்திரங்களைக் கூறி வழிபட வேண்டும்.

3. சிவராத்திரி விரதம் இருந்து, நமசிவாய என்ற மந்திரத்தை இரவு முழுவதும் உச்சரித்தால் மகத்தான பலன்கள் கிடைக்கும்.

4. வாழ்வில் செல்வம், வெற்றி ஆகியவற்றை பெற விரும்புவோர் அவசியம் சிவராத்திரி விரதம் இருக்க வேண்டும்.

5. சிவாலயத்தில் பலி பீடத்துக்கு அருகில்தான் நமஸ்கரிக்க வேண்டும்.

6. 3,4,7,9 என்ற எண்ணிக்கைகளில் ஏதாவது ஒரு எண்ணிக்கையில் நமஸ்காரம் மேற்கொள்ளலாம்.

7. கோவிலில் வடதுபுறம், கிழக்குப்புறம் கால் நீட்டக் கூடாது.

8. ஆண்கள் அஷ்டாங்க நமஸ்காரமும், பெண்கள் பஞ்சாங்க நமஸ்காரமும் செய்ய வேண்டும்.

9.கிழக்கு நோக்கிய சந்நிதியானால் பலிபீடத்திற்குத் தென்கிழக்கு மூலையில் தலை வைத்து வணங்க வேண்டும்.

10. தெற்கு, மேற்கு நோக்கிய சந்நிதிகளில் பலிபீடத்திற்கு தென்மேற்கு மூலையில் தலை வைத்து வணங்க வேண்டும்.

11. வடக்கு நோக்கிய சந்நிதியானால் பலிபீடத்திற்கு வடமேற்கு மூலையில் தலை வைத்து வணங்க வேண்டும்.

12. சூரிய கிரகணத்தின் போதும், பொங்கல் தினத்தன்றும் மேற்கே கால் நீட்டி வணங்கக் கூடாது.

13. சிவாலயத்துக்குள் எப்போதும் திரியாங்க நமஸ்காரம் (இருகரங்களையும் சிரம் மேல் குவித்து) செய்ய வேண்டும்.

14. பிராகாரத்தில் பிரதட்சணம் செய்யும் பொழுது மிகவும் நிதானமாகச் செய்ய வேண்டும்.

15. உட்பிராகார பிரதட்சணத்தைவிட வெளிப்பிராகார பிரதட்சணமே மிகவும் சிறந்தது.

16. ஆலயத்தில் குறைந்தது மும்முறை கொடிமரத்துக்கு அருகே வணங்க வேண்டும். மும்முறை வலம் வரவேண்டும்.

17. அபிஷேக காலத்தில் பிரதட்சணம் செய்யக்கூடாது. கொடிமரத்தையும் சேர்த்து பிரதட்சணம் செய்ய வேண்டும்.

18. ஆலயத்தை விட்டு வெளிவரும்போது கொடிமரத்துக்கு அருகில் வணங்க வேண்டும். ஆலயத்துக்குள் எந்த சந்நிதியிலும் வணங்கக்கூடாது.

19. பிரதட்சணத்தின் போது தலை பூமியை நோக்கி குனிந்திருக்க வேண்டும். நிலம் அதிர நடக்கக் கூடாது. பிறருடன் பேசிக் கொண்டு பிரதட்சணம் செய்யகூடாது.

20. இறைவன், இறைவிக்கு அபிஷேகம் நடக்கும் பொழுது பிரதட்சண நமஸ்காரங்களைத் தவிர்க்க வேண்டும். ஆலயத்தில் ஆண்டவனைத் தவிர வேறு எவரையும் வணங்கக்கூடாது.

21. ஆலயத்தில் நெய்விளக்கு ஏற்றினால் நினைத்தது நடக்கும். நல்லெண்ணைய் ஆரோக்கியத்தை அளிக்கும்.

22. தேங்காய் எண்ணை வசீகரத்தை அளிக்கும். இலுப்ப எண்ணை சகல காரியங்களிலும் வெற்றியைத் தரும். மறு ஜென்மத்திலும் நன்மை அளிக்கும்.

23. திருமணமாகி 5 ஆண்டுகளுக்கு மேல் ஆகியும் குழந்தை இல்லாமல் இருப்பவர்கள் ஸ்ரீதட்சணாமூர்த்தி அஷ்டகத்தை வியாழக்கிழமைகளில் மாலை 5 மணி முதல் 7 மணி வரை ஒன்பது தடவை பாராயணம் செய் தால் பலன் கிடைக்கும்.

24. பூவும், நீரும் சிறந்த சிவபுண்ணியம். செல்வமும், அமைதியும் பெற மகேசனை பூவும், நீரும் கொண்டு வழிபட வேண்டும்.

25. சிவனின் திருமேனியில் சந்தனக்காப்புப் பொருத்திக் குளிர்வித்தால் உலகில் உள்ள எல்லா உயிர்களையும் குளிர்விப்பது போல் ஆகும்.

26. கஸ்தூரி, கோரோசனை, குங்குமப்பூ, பச்சைக் கற்பூரம் முதலான நறுமணப் பொருள்கள் கலந்து இறைவனுக்கு ஒரு முறை சந்தனக் காப்பு செய்தவர்கள் தேவ வருடத்தில் கோடி வருடம் சிவலோகத்தில் இன் புற்றிருப்பார்கள்.

27. உமா தேவியுடன் இணைந்த சிவபிரானை பூஜிக்கின்றவர்கள் பிறவிப்பயனை அடைந்தவர்கள். அவர்கள் பேரின்பத்தை அடைகிறார்கள் என்று சிவானந்தலஹரி கூறுகிறது.

28. சிவாலய வழிபாடு செய்யும் போது லிங்கத்திற்கு வலப்புறம் இருந்து பணிய வேண்டும். 

29. பங்குனி உத்திரம் சிவனுக்கு மிகவும் சிறந்த தினமாகும்.

30. சிவபெருமானுக்குரிய திருப்பணிகள் எதுவாக இருந்தாலும் அவை அனைத்தும் குற்றமற்ற நல்ல அறமே ஆகும்.

31. சிவன் விரும்பி அணிபவை வெள்ளை எருக்கம் பூ, அருகம்புல், ஊமத்தை, வெண்ணீறு ஆகியவையாகும்.

32. சிவன் கையில் ஏந்தி இருப்பவை சூலம், மான், மழு, துடி, அக்னி.

33. சிவனுக்கு ஆடை தோல்.

34. சிவனுக்கு வாகனம் காளை. ஆபரணம் பாம்பும், எலும்பும். மாலை மண்டை ஓடுகள், பன்றிக் கொம்பு, பிட்சை பாத்திரம்.

35. சிவனுக்குப் புஷ்பாஞ்சலி செய்யும்பொழுது எல்லாப் புஷ்பமும் கலந்து செய்யலாம்.

36. முதல்நாள் சாத்திய வில்வத்தை எடுத்து நீரில் கழுவி மீண்டும் சிவ பூஜை செய்யலாம். ஒரு மாத காலத்திற்கு இவ்வாறு செய்யலாம்.

37. தாமரை, வில்வம், சதபத்ரம் ஆகியவற்றால் சிவனை அர்ச்சிப்பவன் பெரும் செல்வத்தை அடைவான். நீலோத் பலம், ஜாதி மல்லிகை, பாடலம், அரளி, ஆத்தி, கோங்கு, முல்லை, பலாசம் ஆகியவற்றாலும் அர்ச்சிக்கலாம்.

38. புஷ்பபலன் என்னும் நூல் ஒரு கொன்றை மலரை சிவனுக்கு சாத்துபவர் சாலோக பதவியையும், இருமலர்கள் சாத்துபவர் சாமீப பதவியையும், மூன்று மலர்கள் சாத்துபவர் சாரூப பதவியையும், நான்கு மலர் களைச் சாத்துபவர் சாயுஜ்ய பதவியையும் அடைவர் என்று கூறுகிறது.

39. வில்வமரத்தில் மகாலட்சுமி வாசம் செய்வதால், ஒரு வில்வம் லட்சம் சொர்ண புஷ்பங்களுக்குச் சமம். இதில் ஒன்றினை ஈசனுக்கு அர்ப்பணித்தால் மகாதோஷங்களும் நீங்கி, சகல நன்மைகளும் உண்டாகும்.

40. சிவனுக்கு வில்வ அர்ச்சனை செய்யும்போது, அதன் பின்பக்க நரம்பு மூர்த்தியின் மேல் படும்படி போட வேண்டும். அந்தப் பக்கம் தான் லட்சுமி வாசம் செய்கிறார். ஒற்றைப்படை இதழ்களைக் கொண்ட வில்வம் அர்ச்சனைக்கு மிகவும் நல்லது.

ஓம் நமசிவாய 
படித்து பகிர்ந்தது
 இரா இளங்கோவன் 
நெல்லிக்குப்பம். 

Followers

ஆம்பூர் நாகநாதசுவாமி திருக்கோவில்

நாகதோஷங்கள் நீக்கும் தலம், மணப்பேறும் மகப்பேறும் அருளும் கோவில் என பல்வேறு சிறப்புகள் கொண்ட ஆலயமாகத் திகழ்வது, ஆம்பூர் நாகநாதசுவாமி திருக்கோ...