Sunday, June 7, 2026

திருவலஞ்சுழி கபர்தீஸ்வரர் (சடைமுடிநாதர்) உலகப் புகழ்பெற்ற வெள்ளை விநாயகர்.

கும்பகோணம் அருகே சுவாமிமலைக்கு மிக அருகில் அமைந்துள்ள திருவலஞ்சுழி கபர்தீஸ்வரர் (சடைமுடிநாதர்) திருக்கோவில் வளாகத்தில் தான் இந்த உலகப் புகழ்பெற்ற வெள்ளை விநாயகர் (ஸ்வேதா விநாயகர்) சன்னதி அமைந்துள்ளது. பாடல் பெற்ற சிவஸ்தலமாக இருந்தாலும், இந்தத் தலம் "வெள்ளை பிள்ளையார் கோவில்" என்றே மக்களால் பரவலாக அழைக்கப்படுகிறது.
இந்தக் கோவிலின் ஆன்மீக வரலாறு, தனித்துவமான சிறப்புகள் மற்றும் தரிசன பலன்கள் பற்றிய முழுமையான விவரங்கள் இதோ:
1. ஆலய வரலாறு (தல புராணம்)
பாற்கடல் கடைந்த வரலாறு: தேவர்களும் அசுரர்களும் அமிர்தம் வேண்டி பாற்கடலைக் கடைந்தபோது, எந்த ஒரு காரியத்தையும் தொடங்கும் முன் முதற்கடவுளான விநாயகரை வழிபட மறந்தனர். இதனால் பாற்கடலில் இருந்து ஆலகால விஷம் வெளிப்பட்டு, காரியம் தடைபட்டது.

நுரை விநாயகர்: தங்களின் தவறை உணர்ந்த தேவேந்திரன் (இந்திரன்), உடனடியாக வழிபட வேறு சிலைகள் இல்லாததால், பாற்கடலில் பொங்கி வந்த கடல் நுரையைச் சேர்த்து ஒரு விநாயகர் வடிவத்தை உருவாக்கி பூஜித்தார். விநாயகர் அருள் செய்ததால் தடை நீங்கி அமிர்தம் கிடைத்தது.

இங்கேயே தங்கிய இறைவன்: பூஜைக்குப் பிறகு இந்திரன் அந்தப் பிள்ளையார் சிலையைத் தன்னுடன் எடுத்துச் செல்ல முயன்றார். ஆனால், அது நகராமல் இத்தலத்திலேயே நிலைபெற்றுவிட்டது. எனவே, இவருக்கு ஸ்வேதா விநாயகர் (ஸ்வேதா என்றால் வெள்ளை) என்றும், நுரை பிள்ளையார் என்றும் பெயர்கள் வந்தன.

திருவலஞ்சுழி பெயர் காரணம்: காவேரி நதி பூமிக்கு அடியில் சென்று மறைந்தபோது, 'ஏரண்ட முனிவர்' என்பவர் காவேரியை மீண்டும் பூமிக்குக் கொண்டு வர தவம் செய்தார். அப்போது காவேரி நதி இத்தலத்து ஈசனை வலப்பக்கமாக சுழித்து (வளையமிட்டு) வழிபட ஓடியதால் இப்பகுதிக்கு "திருவலஞ்சுழி" என்று பெயர் வந்தது.

2. கோவிலின் ஆன்மீக மற்றும் கலைச் சிறப்புகள்
அபிஷேகம் இல்லாத மூர்த்தி: இத்தலத்து விநாயகர் கடல் நுரையால் ஆனவர் என்பதால், இவருக்கு எந்தவித திரவ அபிஷேகமும் (நீர், பால், சந்தனம் போன்றவை) செய்யப்படுவதில்லை. சுவாமிக்கு வஸ்திரம் (ஆடை) கூட சார்த்துவதில்லை.

பச்சைக்கற்பூரப் பொடி: இந்த விநாயகரின் திருமேனி கரையாமல் காக்க, தங்கம் மற்றும் வெள்ளி கவசங்கள் கொண்டு மிகக் கவனமாகப் பாதுகாக்கப்படுகிறது. சுவாமிக்கு ஒரே ஒரு பரிகாரமாக பச்சைக்கற்பூரப் பொடி மட்டுமே லேசாகத் தூவப்படுகிறது.

வலம்புரித் தும்பிக்கை: பொதுவாக விநாயகரின் தும்பிக்கை இடப்பக்கம் சுழித்திருக்கும். ஆனால், இங்குள்ள வெள்ளை விநாயகரின் தும்பிக்கை வலப்பக்கமாக சுழித்து (வலம்புரி விநாயகராக) அருள்பாலிக்கிறார்.

மன்னிப்பு மண்டபம்: ஒருமுறை மன்னர் ஒருவர் விநாயகருக்கு அபிஷேகம் செய்ய வற்புறுத்தியபோது, அசரீரியாக ஒலித்த இறைவன், "நான் நுரையானவன், அபிஷேகம் செய்தால் கரைந்துவிடுவேன்" என்றார். தன் தவறை உணர்ந்த மன்னன், அதற்குப் பிராயச்சித்தமாக அவசர அவசரமாகக் கரடுமுரடான கற்களைக் கொண்டு கட்டிய மண்டபமே "மன்னிப்பு மண்டபம்". இன்றும் மக்கள் தங்கள் தவறுகளுக்கு இங்கு மன்னிப்பு வேண்டுகிறார்கள்.

உலகப் புகழ்பெற்ற கருங்கல் பலகணி (கல் ஜன்னல்)
வெள்ளை விநாயகர் சன்னதிக்கு எதிரே அமைந்துள்ள கருங்கல் பலகணி (Lattice Window) சோழர் காலச் சிற்பக் கலையின் உச்சமாகும். 9 அடி உயரமும் 7 அடி அகலமும் கொண்ட இந்த ஒரே கல்லில் செதுக்கப்பட்ட ஜன்னலில் 111 துளைகளும், நுட்பமான வேலைப்பாடுகளும் உள்ளன.

💡 பழங்கால சிற்பிகளின் நிபந்தனை: அக்காலத்தில் புதிய கோவில்கள் கட்ட ஒப்பந்தம் போடும் சிற்பிகள், "திருவலஞ்சுழி பலகணி போலவும், ஆவுடையார்கோவில் கொடுங்கை போலவும் எங்களால் செதுக்க முடியாது, மற்றபடி எதை வேண்டுமானாலும் செதுக்கித் தருவோம்" என்று முன்கூட்டியே நிபந்தனை விதிப்பார்களாம். அந்த அளவுக்கு இது மனித கரங்களால் செய்ய முடியாத அற்புதம்!

3. தரிசன பலன்கள் (வழிபாட்டு மகிமை)
திருவலஞ்சுழி வெள்ளை விநாயகரை மனமுருகி வேண்டுவோருக்குக் கிடைக்கும்

 ஆன்மீகப் பலன்கள்:
தடைபட்ட காரியங்கள் தடையின்றி முடியும்: பாற்கடல் கடைந்தபோது தேவர்களின் தடையை நீக்கியவர் என்பதால், உங்களின் தொழில், திருமணம், வேலைவாய்ப்பு என எந்தவொரு காரியத்தில் இருக்கும் முடக்கமும், தடைகளும் இவரை வழிபட உடனே நீங்கும்.

புதிய முயற்சிகள் வெற்றி பெறும்: புதிய தொழில் தொடங்குபவர்கள் அல்லது புதிய படிப்பைத் தொடங்குபவர்கள் இங்கு வந்து வழிபட்டுச் சென்றால் அமோக வெற்றி கிட்டும்.
சதுர்த்தி வழிபாட்டின் மகிமை: ஆவணி மாத விநாயகர் சதுர்த்தி அன்று இவரைத் தரிசிப்பது, வருடம் முழுதும் விநாயகரை வழிபட்ட பலனைத் தரும் என்பது ஐதீகம்.
பாவங்கள் நீங்குதல்: இங்கிருக்கும் மன்னிப்பு மண்டபத்தில் அமர்ந்து நாம் தெரிந்தும் தெரியாமலும் செய்த தவறுகளுக்கு மனதார மன்னிப்பு வேண்டினால், நம் பாவ வினைகள் நீங்கி மனம் அமைதி பெறும்.

கோவில் அமைவிடம் & நேரம்:
இடம்: கும்பகோணத்தில் இருந்து தஞ்சாவூர் செல்லும் சாலையில் சுமார் 7 கி.மீ தொலைவிலும், சுவாமிமலையில் இருந்து 2 கி.மீ தொலைவிலும் உள்ளது.
நேரம்: காலை 6:00 மணி முதல் மதியம் 12:00 மணி வரை, மாலை 4:00 மணி முதல் இரவு 8:30 மணி வரை திறந்திருக்கும்.

நெடுங்களநாதர் கோயில் திருநெடுங்குளம் திருச்சி


*நெடுங்களநாதர் கோயில்!*
*மூலவர்:* திருநெடுங்களநாதர், நித்திய சுந்தரேஸ்வரர்.
*அம்மன்:* மங்களாம்பிகை, ஒப்பிலாநாயகி.
ஸ்தல விருட்சம்: வில்வம்,. கஸ்தூரி,அரளி,
தீர்த்தம்: அகஸ்தியர் தீர்த்தம், சுந்தர தீர்த்தம்
புராண பெயர் : திருநெடுங்களம்
ஊர்             :     திருநெடுங்குளம்
மாவட்டம்       :     திருச்சி

*ஸ்தல வரலாறு:*

 இனிய சிவன் தனக்கு இடப்பாகத்தினை சக்திக்கு ஒதுக்கி கொடுத்தவர். இவருக்கு அர்த்தநாரீஸ்வரர் என்று பெயர். மற்ற கோயில்களில் மூலஸ்தானத்தில் நடுநாயகமாக விளங்கும் ஈசன், திருச்சி அருகே திருநெடுங்குளத்தில் மூலஸ்தானத்தில் சக்திக்காக தன் இடப்பாகத்தை ஒதுக்கி கொடுத்து விட்டு சற்று தள்ளி வீற்றிருந்து அருள்பாலிக்கிறார். இங்கு சிவலிங்கம் மட்டுமே இருந்தாலும் இருவருமே இருப்பதாக ஐதீகம். 

திருநெடுங்களம் என்றால் சமவெளியில் அமைந்த பெரிய ஊர்’ என்று பெயர். அன்னை பார்வதி சிவனை நோக்கி இத்தலத்தில் தவம் இருந்தாள். பார்வதியின் தவத்தை மெச்சிய இறைவன் அவள் அறியாது வேறு வடிவில் வந்து தேவியை கைப்பிடிக்கிறார்.

அந்தக் காலத்தில் இந்தப் பகுதி முழுவதும் பசுமை படர்ந்த கழனிகளாய் இருந்தன. அதனாலேயே இது திருநெடுங்களம் என்று அழைக்கப்பட்டது. பிற்பாடு அதுவே மருவிப்போய் திருநெடுங்குளமானது. திருநெடுங்களம் குறித்து ஒரு ஐதீகம் உண்டு. 

முந்தைய காலத்தில் திருநெடுங்களம், வாழவந்தார் கோட்டை ஜமீனின் கட்டுக்குள் இருந்தது. ஜமீனுக்கு சொந்தமான காராம் பசு மாடுகள் திருநெடுங்குளம் காட்டுப் பகுதியில் மேய்ச்சலுக்கு வருவதுண்டு. அதில் ஒரு பசு தினமும் மாலையில் வீடு திரும்பும் போது பால் வற்றிப்போன மடியோடு திரும்பியது. இந்த மாயத்தை அறிவதற்காக ஜமீனின் ஆட்கள் ஒரு நாள் அந்த பசுவை மறைந்திருந்து கண்காணித்தனர். அப்போது அது ஒரு புதருக்கு அருகில் போய் நின்று தானாகவே பாலை அந்தப் புதரில் சுரந்தது. ஆச்சரியப்பட்ட ஜமீன் ஆட்கள், பசு பாலைச் சுரந்த இடத்தில் மண்வெட்டி கொண்டு வெட்டினார்கள். பூமிக்குள் சுயம்புவாய் முளைத்திருந்த சிவலிங்கம் மண்வெட்டியால் வெட்டுப்பட. பூமிக்குள்ளிருந்து பால் பீறிட, விவரம் தெரிந்து ஓடிவந்த ஜமீன்தார், அந்த இடத்திலேயே சிவனுக்குச் சிறியதாய் ஒரு ஆலயம் எழுப்பினார் என்று கூறப்படுகிறது.

சிவபெருமான் மீது காதல் கொண்ட பார்வதி தேவி, அவரைக் கரம்பிடிப்பதற்காக இந்த இடத்தில் கடுந்தவம் புரிந்தார். தவத்தை மெச்சிக் காட்சிகொடுத்த சிவன், பார்வதி தேவியைக் கைப்பிடித்த இடமும் இதுதான் என்கிறது புராணம். உமையொரு பாகனாகிய ஈசன் கருவறைக்குள் தேவிக்கு தனது இடப்பாகத்தை ஒதுக்கிக் கொடுத்து வலது பக்கமாய் சற்றுத்தள்ளி அமர்ந்திருக்கிறார். ஐதீகப்படி இங்கே தேவியும், சிவனுக்குப் பக்கத்தில் ஒப்பில்லாநாயகி அரூபமாய் அமர்ந்திருக்கிறார். அதனால்தான் இருவருக்குமாய் சேர்த்து இரண்டு விமானங்கள் கட்டப்பட்டுள்ளன.

*கோயில் சிறப்புகள்:*

கோயில் கருவறைக்கு மேலே பெரும்பாலும் ஒரு விமானம் இருப்பதே வழக்கம். ஆனால், திருநெடுங்களநாதரின் கருவறைக்கு தட்சண விமானம், கைலாய விமானம் என இரண்டு விமானங்கள். காசிக்கு அடுத்தபடியாக இங்குதான் இந்தச் சிறப்பு என்கிறார்கள்.

உள்ளே கருவறையில் சக்திக்காக தன் இடப்பாகத்தை ஒதுக்கிக் கொடுத்துவிட்டு, சிவபெருமான் லிங்கத் திருமேனியுடன் சற்றுத் தள்ளி வீற்றிருந்து அருள்பாலிக்கிறார்.

சிவன் தனக்கு இடப்பாகத்தினை சக்திக்கு ஒதுக்கிக் கொடுத்தவர். இவருக்கு அர்த்தநாரீஸ்வரர் என்று பெயர். மற்ற கோயில்களில் நடுநாயகமாக விளங்கும் ஈசன், திருநெடுங்குளத்தில் மூலஸ்தானத்தில் சக்திக்காகத் தன் இடப்பாகத்தை ஒதுக்கிக் கொடுத்த நிலையில் உள்ளார். இங்கு சிவலிங்கம் மட்டுமே இருந்தாலும், சிவன்-சக்தி இருவருமே இருப்பதாக ஐதீகம்.

கோயில் கருவறையில் பார்வதி அரூபமாக உள்ளதாக ஐதீகம். இதனால், மூலஸ்தானத்தின் மேல் இரண்டு விமானங்கள் உள்ளன. காசிக்கு அடுத்தபடியாக இங்கு மட்டும்தான் இப்படி உள்ளது.

சிவனை நோக்கி அன்னை பார்வதி இத்தலத்தில் தவம் இருந்தாள். பார்வதியின் தவத்தை மெச்சிய இறைவன், அவள் அறியாது வேறு வடிவில் வந்து தேவியை கைப்பிடிக்கிறார்.

ஒருமுறை அகத்தியரே இங்கு வந்து வழிபட்டதாகவும் நம்பிக்கை உள்ளது. வடக்குப் பிராகாரத்தில் உள்ள அகத்தியர் சந்நிதிக்கு எதிரே ஒரு கிணறு உள்ளது. இதை அகத்திய தீர்த்தம் என்கிறார்கள். சிவனுக்குப் பூஜை செய்வதற்காக அகத்தியர் தனது கட்டை விரலை பூமியில் அழுத்தியதால் வந்ததாம் இந்தக் கிணறு. இதில், கையால் எட்டித் தொட்டுவிடும் தூரத்தில் எப்போதும் தண்ணீர் நிறைந் திருக்கும்.

இங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். ஆடி மாதம் 7 முதல் 12ம் தேதி வரை காலை 6.05 முதல் 6.15 வரை சூரிய ஒளி மூலவர் மீது விழுகிறது.

இங்குள்ள தட்சிணாமூர்த்தியின் அமைப்பு அற்புதமானது – யோக தட்சிணாமூர்த்தி, சித்தாசனத்தில் அமர்ந்து, மேற்கரங்களில் மான் மழுவும், கீழ்க் கரங்களில் சின் முத்திரையும் திருநீற்றுப் பெட்டகமும் ஏந்தி, இடக்காலைச் சுற்றியவாறு யோக பட்டம் விளங்கக் காட்சி தருகிறார்.

கோபுர வாயிலைக் கடந்து உள்ளே சென்றால் உள்பிரகாரத்தில் தென்கிழக்கில் சோமாஸ்கந்தர், சந்திரசேகர் சன்னதிகள் உள்ளது. தென்பிரகாரத்தில் சப்தகன்னியர்களும், தட்சிணாமூர்த்தியும், ஐயனாரும் அருள்பாலிக்கிறார்கள். கன்னி மூலையில் வலம்புரி விநாயகருக்கு தனி சன்னதி உள்ளது. மேற்கு பிரகாரத்தில் தெய்வானையுடன் முருகன் தனி சன்னதி உள்ளது. தெற்கு பக்கத்தில் உபய நாச்சியார்களுடன் வரதராஜப்பெருமாள் சன்னதியும் உள்ளது.

வந்திய சோழ மன்னனுக்கு ஈசன் பேரழகுடன் காட்சி கொடுத்த காரணத்தால், இத்தல இறைவன் ‘நித்திய சுந்தரேஸ்வரர்’ என்றும் அழைக்கப்படுகிறார்.

நெடுங்களம் ஒரு திருப்புகழ் தலம். இத்தலத்து முருகப்பெருமானை அருணகிரிநாதர் தனது திருப்புகழில் பாடியுள்ளார். திருப்புகழில் இத்தலத்து முருகன் மீது ஒரு பாடல் உள்ளது. இத்தலத்தில் முருகப்பெருமான் ஒரு திருமுகத்துடனும் நானகு திருக்கரங்களுடனும் தனது தேவியர் இருவருடன் நின்ற கோலத்தில் கிழக்கு நோக்கி எழுந்தருளியுள்ளார்.

சம்பந்தர் இத்தலத்து இறைவன் மேல் பாடியுள்ள இப்பதிகம் “இடர் களையும் திருப்பதிகம்” என்று போற்றப்படுகிறது. இப்பதிகத்தில் உள்ள 10 பாடல்களிலும் இடர்களையாய் என்ற குறிப்பைக் காணலாம். இடர்கள் நீங்கி இன்பம் பெற இப்பதிகத்தை படித்து வந்தால் நலம் பெறுவது உறுதி என்று சம்பந்தர் தன் பதிகத்தில் குறிப்பிடுகிறார்.

வள்ளல் பெருமான் தாம் பாடி அருளிய விண்ணப்பக் கலிவெண்பாவில், “துன்று கயல் கண்ணார் நெடும் களத்தைக் கட்டு அழித்த மெய்த்தவர் சூழ் தண்ணார் நெடுங்கள மெய்த் தாரகமே” என்று போற்றி உள்ளார்.

இத்திருத்தலத்தில் சிற்ப உரல் ஒன்று உள்ளது. சிவபெருமான் தவத்தில் இருந்த போது இந்த உரலில் விரலி மஞ்சள் இடித்து அதைக் கொண்டு உடம்பில் பூசிக் குளித்து சிவபெருமானுக்கு பூஜை செய்தாராம் பார்வதி தேவி.

*திருவிழா:*

பிரதோஷ வழிபாடு இங்கு சிறப்பு. நடராஜருக்கு ஆறு கால பூஜை நடக்கிறது. நால்வருக்கும் அவரவர்க்குரிய திருநட்சத்திரத்தில் சிறப்பு வழிபாடு செய்யப்படுகிறது. ஆடி வெள்ளியில் சிறப்பு வழிபாடும், சிறப்பு பூஜையும் செய்யப்படுகிறது.

*நடை திறக்கும் நேரம்:*

காலை 6 மணி முதல் 12 மணி வரை,
மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.

*முகவரி:*

அருள்மிகு திருநெடுங்களநாதர், நித்தியசுந்தரேஸ்வரர் திருக்கோயில்,
திருநெடுங்களம்-620015
திருச்சி மாவட்டம்.
போன்: +91- 431-252 0126.,2510241 9965045666

*அமைவிடம்:*

திருச்சி – தஞ்சாவூர் சாலையில் துவாக்குடி என்ற ஊர் வரை சென்று, அங்கிருந்து பிரியும் சாலையில் 5 கி.மீ. சென்றால் நெடுங்களம் அடையலாம். திருச்சி சத்திரம் பேருந்து நிலையத்திலிருந்து மாங்காவனம் செல்லும் நகரப் பேருந்து இத்தலம் வழியாகச் செல்கிறது. துவாக்குடியில் இருந்து ஆட்டோ மூலமும் இத்தலத்துக்குச் சென்று வரலாம்.

ஓம் நமசிவாய
 படித்து பகிர்ந்தது
 இரா இளங்கோவன்
 நெல்லிக்குப்பம். 

மலையடிப்பட்டி சிவபெருமானுக்கும், விஷ்ணு பெருமானுக்கும் குகைக் கோயில்கள்.



புதுக்கோட்டை மாவட்டத்துக்கு உள்பட்ட மலையடிப்பட்டி இயற்கை எழில் நிறைந்ததொரு கிராமம். இங்குள்ள பெரிய பாறையில், சிவன், அனந்தபத்மநாப சுவாமி என இரண்டு கோயில்கள் ஒன்றாக இணைந்து இரு குடைவரைக் கோயிலாக அமைந்திருக்கின்றன.
நவக்கிரகங்களில் சுக்ரனுக்குரிய பரிகாரத் தலமாக இந்த ஆலயம் திகழ்கிறது.

திருச்சியிலிருந்து 45 கி.மீ. தொலைவில் உள்ள இந்தக் கோயில், நந்திவர்மன் எனும் பல்லவ மன்னரால் உருவாக்கப்பட்டிருக்கலாம் என தல வரலாறு கூறுகிறது.

கி.பி. 730-இல் அவர் இங்குள்ள மலையை குடைந்து வாகீஸ்வரர் என்றழைக்கப்படும் கோயில் எழுப்பினார் என்றும் விஷ்ணு கோயிலானது காலத்தால் பிந்தியது என்றும் தெரிகிறது. இங்கு நரசிம்மமூர்த்தி, திருமால், அனந்த சயனமூர்த்தி, ஆதிசேஷன் ஆகியோரின் சிற்பங்கள் மலையில் செதுக்கப்பட்டுள்ளன.
மலையடிப்பட்டியில் சிவபெருமானுக்கும், விஷ்ணு பெருமானுக்கும் தனித்தனியே இரண்டு குகைக் கோயில்கள் உள்ளன. 

இயற்கைச் சூழலில் இரண்டு கோயில்களும் அருகருகே ஒரே குன்றின் மீது தனித்தனியாக அமைக்கப்பட்டிருப்பது தனிச்சிறப்பு. இங்கு அனந்தசயன மூர்த்தியாகக் காட்சியளிக்கும் விஷ்ணு பெருமான் கோயில் திருப்பதிக்குச் சமமாகப் பார்க்கப்படுகிறது. 
இங்குள்ள சிவன் கோயிலோ, திருமால் கோயிலைவிட சற்று காலத்தால் முற்பட்டதாக இருக்கிறது.

தெளிவாகச் செதுக்கப்பட்ட புடைப்புச் சிற்பங்கள் சுவற்றிலும் தூண்களிலும் நிறைந்திருக்கின்றன. 15 அடி உயரத்தில் மூலவர் சிலை செதுக்கப்பட்டிருக்கிறது, மூலவர் சிலையைச் சுற்றிலும் தேவக் கணங்களும் தெய்வ வடிவங்களும் என்ற வகையில் ஒரு கலைப்பொக்கிஷமாக இந்தச் சுவர் காட்சியளிக்கிறது.
கோயிலில் ஆங்காங்கே கல்வெட்டுக்கள் உள்ளன. கிபி.960-ஆம் ஆண்டில் ராஜ கேசரி சுந்தரச் சோழன் கால கல்வெட்டுகளும் உள்ளன.

இந்தக் குடைவரை கோயிலின் அருகில் இருக்கும் பிரம்மாண்ட வடிவ பாறைகளின் மேல் சமணப் படுகைகள் வரிசை வரிசையாக அமைக்கப்பட்டிருக்கின்றன.

7-ஆம் நூற்றாண்டுக்கு முன்னர் இந்தப் பகுதியில் சமணம் செழித்து இருந்திருக்க வேண்டும் என்பதை இந்த சமணப் படுகைகள் உணர்த்துகின்றன. தமிழகத்தின் வரலாற்றுச் சிறப்பை உணர்த்தும் கலைக்கோயில்கள் பட்டியலில் ஒன்றாக இந்தக் கோயில் இடம்பெறுகிறது.

திருமயம் குடை வரைக் கோவிலைப் போலவே சிவனுக்கும், விஷ்ணுவுக்கும் இயற்கைச் சூழலில் அருகருகே ஒரே குன்றின் மீது எழுப்பப்பட்டுள்ள குகைக் கோவில்தான் மலையடிப்பட்டி கோவில். ஆலயக் கல்வெட்டுகளில் இவ்வூர் 'திருவாலத்தூர் மலை' என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இங்கு அனந்த சயன மூர்த்தியாகக் காட்சியளிக்கும் விஷ்ணு வீற்றிருக்கும் ஆலயம், திருப்பதி ஆலயத்திற்கு நிகராக போற்றப்படுகிறது.

மலையடிப்பட்டி கோவிலில், நந்திவர்ம பல்லவன் காலத்து கல்வெட்டு (கி.பி 775-826) இருக்கிறது. அந்தக் கல்வெட்டில் 16-வது நூற்றாண்டில், குறிப்பாக கி.பி. 730-ல் குவாவன் சாத்தன் என்பவரால் மலையைக் குடைந்து சிவனுக்குக் கோவில் எழுப்பட்டதாகவும், அந்த இறைவனுக்கு 'வாகீஸ்வரர்' எனப் பெயரிட்டதாகவும் செய்தி காணப்படுகிறது.

#கோயில்_குறிப்புகள்:

*மூலவர்: ரங்கநாதர் (அனந்தபத்மநாபசாவாமி) என்ற கண்ணிறைந்த பெருமாள் மற்றும் வாகீஸ்வரமுடையார் 

*அம்மன்: கமலவல்லி நாச்சியார் ,பெரியநாயகி அம்மன் 

*தல விருட்சம்: அழிஞ்சல் மற்றும் வில்வம்

*தீர்த்தம்: சுனை நீர் 

*ஊர்: மலையடிப்பட்டி 

*மாவட்டம்: புதுக்கோட்டை 

*#மலையடிப்பட்டி சிவபெருமான் கோயில்:

கி.பி 730-ல் நந்திவர்ம பல்லவன் காலத்தில் இங்குள்ள மலையைக் குடைந்து சிவனுக்குக் கோயிலெடுத்து வாகீஸ்வரர் என்ற பெயரிட்டான் என்ற செய்தியினைச் சிவன் கோயிலில் அமைந்துள்ள கல்வெட்டு ஒன்று குறிக்கிறது. மலையின் கிழக்குப் பகுதியில் மலையைக் குடைந்து முன் மண்டபத்தை அமைத்திருக்கிறார்கள். சற்று உள்ளே சதுர வடிவில் கருவறை உருவாகியிருக்கிறது. பாறையைக் குடைந்து சிவலிங்கத் திருமேனியை வடித்திருக்கும் விதம் பிரமிப்பூட்டுகிறது.

கருவறையை அடுத்து அர்த்த மண்டபம் தென்படுகிறது. அர்த்தமண்டப சுவற்றில் ஏழு தாய்மார்கள், கணேசர், வீரபத்திரர், சிவன், விஷ்ணு சிற்பங்கள் மலையைக் குடைந்து உருவாக்கப்பட்டுள்ளன. எருமையின் முகமும், மனித உடலும் கொண்ட மகிஷாசுரனுடன், அன்னை பராசக்தி சிங்கத்தின்மீது அமர்ந்து அரக்கனை அடித்து வீழ்த்துவது போன்ற காட்சிகள் மிகவும் தத்ரூபமாக சித்தரிக்கப்பட்டிருக்கிறது. மகாபலிபுரத்திலுள்ள மகிஷாசுரமர்த்தினி சிற்பத்தொகுதியை போலவே இதுவும் கலையழகு மிக்கது என்கின்றனர் கலை ஆர்வலர்கள்.

திருமால் குகைக் கோயில், கருவறையையும், முன்னாள் ஒரு மண்டபத்தையும் கொண்டது. இங்குள்ள தூண்கள் சிவன் கோயிலின் தூண்களைவிட மிகவும் அழகாக அமைக்கப்பட்டுள்ளன. தூணின் அடிப்பக்கம் சிங்கம் நிமிர்ந்து உட்கார்ந்திருப்பது போன்றும், அதற்கும் மேல் தூண் உயர்ந்திருப்பதையும் காண்கிறோம். இது பல்லவ மாமல்லன் காலத்துக் கலை பாணியைக் கொண்டது என்கின்றனர்.

மண்டபத்தின் சுவற்றில் நரசிம்மர், வராகமூர்த்தி, தேவியருடன் திருமால் சிற்பங்கள் சுவற்றிலேயே செதுக்கப்பட்டிருக்கின்றன. கருவறையில் திருமால் அனந்த சயன மூர்த்தியாகக் காட்சியளிக்கிறார். நாகராஜன் ஆதிசேஷனின் ஐந்து தலைகளும் குடைபோன்று விரிந்து திருமாலின் தலைக்கு நிழலளித்துக் கொண்டிருக்கினறன. கருவறையின் பின் சுவற்றில் அரக்கர்களும், தேவர்களும் சித்தரிக்கப்பட்டிருக்கின்றனர். இங்குள்ள அம்மன் சன்னதியும் காலத்தால் பிற்பட்டதாகக் கருதப்படுகிறது.

கி.பி 16-ம் நூற்றாண்டில் இப்பகுதி தஞ்சாவூர் நாயக்கர்களின் ஆட்சிக்குட்பட்டிருந்தபோது, அச்சுதப்ப நாயக்கர் இக்கோயிலுக்கு கொடையளித்தச் செய்தியை இங்குள்ள கல்வெட்டு ஒன்று தெளிவாக எடுத்துச் சொல்கிறது. சிறப்பம்சாக இந்த குகைக் கோயிலில் உள்ள ஓவியங்கள் காலத்தால் மிகவும் பிற்பட்டதாகும். இவற்றில், ஆந்திரா மாநிலம் லிபாக்ஷியில் உள்ள ஓவியங்களின் சாயலைக் காணமுடியும் என்கின்றனர். இங்குள்ள கண் நிறைந்த பெருமாள் என்றழைக்கப்படும் பெருமாள் திருவனந்தபுரத்திலுள்ள பத்ம நாபசுவாமிக்கு நிகரானவர். கண்பார்வை தொடர்பான எல்லா நோய்களையும் நீக்கி அருள்கிறார் என்பது இங்குள்ள மக்களின் நம்பிக்கை.

முன் மண்டபத்திலுள்ள 5 குழிகளில் வலது கை ஐந்து விரல்களை வைத்து இடது முழங்கையை தரையில் ஊன்றி மண்டியிட்டு ஹரி நேத்திர தூண்கள் இடையே மூன்று வாயில்கள் வழியாக பள்ளி கொண்ட பெருமாளை தரிசிப்பதன் மூலம் ஏழு பிறவிகளில் ஏற்பட்ட பித்ரு சாபம் உள்ளிட்ட தோஷங்கள் அறவே நீங்குகிறது என்கின்றனர்.

குடைவரைக் கோயில். பெருமாளின் ஐந்து நிலைகளையும் ஒரே இடத்தில் தரிசனம் தரும் மிக முக்கிய திருத்தலமாகவும் விளங்குகிறது. இந்தக் குடைவரைக் கோயிலின் அருகே இருக்கும் இந்தப் பிரமாண்டப் பாறைகளின் மேல் சமணர் படுகைகள் வரிசை, வரிசையாக அமைக்கப்பட்டிருக்கின்றன. கிபி 7-ம் நூற்றாண்டுக்கு முன்னர் சமண சமயம் வேகமாகப் பரவி செழித்திருக்க வேண்டும் என்பதை இங்குள்ள சமணர் படுக்கைகள் நமக்கு உணர்த்துகின்றன.

*கோயில்கள்:

கி. பி. 730 இல் இங்குள்ள மலையைக் குடைந்து வாகீசர் என்று அழைக்கப்படும் சிவனுக்கு கோயில் எழுப்பப்பட்டுள்ளது. இது பல்லவ மன்னன் தந்திவர்மன் காலத்தில் குவாவன் சாத்தன் என்னும் முத்தரையரால் குடையப்பட்டதாகும். தமிழ்நாட்டின் மிகப் பழமையான எழுவர் அன்னையர் சிற்பங்கள் இங்கு உள்ளன. பெருமாள் கோயிலானது காலத்தால் சிவன் கோயிலுக்கு பிந்தையதாக கருதப்படுகிறது. இங்குள்ள பெருமாள் கோயில் மூலவர் அனந்தபத்மசுவாமி, தாயார் கமலவள்ளி நாச்ச்சியார் என்று அழைக்கப்படுகின்றனர். இங்கு நரசிம்மர், திருமாள், அனந்த சயனமூர்த்தி, ஆதிசேசன் ஆகியோரின் சிற்பங்கள் மலையில் செதுக்கபட்டுள்ளன. மூலவர் 15 உயரமாக செதுக்கபட்டுள்ளார். இக்குடைவரைகளுக்கு அருகில் சமணப் படுக்கைகளும் உள்ளன.

*கோயில் பெருமைகள்:

வாகீஸ்வரர் கருவறையை அடுத்து அர்த்தமண்டபம் உள்ளது. அந்த மண்டபச் சுவரில் சப்தமாதர்கள். கணேசர். வீரபத்திரர், சிவன், விஷ்ணு ஆகியோரது சிற்பங்கள். மலையையே குடைந்து அமைக்கப்பட்டுள்ளன. காளிகாம்பாள் மகிஷாசுரமர்த்தினியாகச் செதுக்கப்பட்டுள்ள சிற்பத் தொகுதி மிக அற்புதமாக உள்ளது. குகையையொட்டியுள்ள முன்மண்டபம். விஜயநகர கால கலைப்பணி உடையது. பல்லவர் கால கலைப்பாணியை ஒட்டி. வாயிற்காப்போர் எனும் துவாரபாலகருக்கு இரண்டு கைகள் மட்டும் உள்ளன. வேறு கோயில்களில் நான்கு திருக்கரங்களோடு துவார பாலகர்கள் காட்சியளிப்பார்கள். மலையடிப்பட்டி திருமாலின் (ஸ்ரீ ரங்கநாதர்) கோயில், கருவறையும் முன்னால் ஒரு மண்டபத்தையும் கொண்டது. இங்குள்ள தூணின் அடிப்பக்கம் சிங்கம் நிமிர்ந்து உட்கார்ந்திருப்பது போன்றும், அதற்குமேல் தூண் உயர்ந்திருப்பதையும் காணலாம். இது பல்லவ மாமல்லன் காலத்துக் கலைப்பாணி என்று சொல்லப்படுகிறது. மண்டபச் சுவரில் நரசிம்மர். வராகமூர்த்தி, தேவியருடன் திருமால் ஆகிய சிற்பங்கள் சுவரிலேயே செதுக்கப்பட்டுள்ளன. கருவறையில் திருமால் அனந்த சயன மூர்த்தியாகக் காட்சியளிக்கின்றார். நாகராஜனாகிய ஆதிசேஷனின் ஐந்து தலைகளும் குடை போன்று விரிந்து திருமாலின் தலைக்கு நிழலளித்துக் கொண்டிருக்கின்றன. திருமாலின் நாபியிலிருந்து பிரம்மா தோன்றிக் காட்சியளிக்கிறார். கருவறையின் பின் சுவரில், அரக்கர்களும் தேவர்களும் சித்தரிக்கப்பட்டுள்ளனர். அனந்த சயன மூர்த்தியின் கலையமைப்பு மிகவும் சிறப்புடையது. தாயாரின் சந்நிதி காலத்தால் மிகவும் பிற்பட்டதாகும். கி.பி.16 - ஆம் நூற்றாண்டில், இப்பகுதி தஞ்சை நாயக்க மன்னர்களின் ஆட்சிக்கு உட்பட்டிருந்தபோத, அச்சுதப்ப நாயக்கர் இக்கோயிலுக்குக் கொடையளித்த செய்தியும் ஒரு கல்வெட்டில் காணப்படுகிறது.

மலையடிப்பட்டி குகைக் கோயில்களுக்கு மிக அருகில் களியாப்பட்டி, விசலூர் போன்ற இடங்களில் வேறுசில பழங்கால குகைக்கோயில்களும் உள்ளன. இந்தியத் தொல்பொருள் துறையின் பராமரிப்பின் கீழ் இவை உள்ளன. இந்தக் குடவரைக் கோயிலில் சிவா-விஷ்ணு ஆகிய இருவரும் ஒரே மலையில் இருப்பதால், பிரதோஷ நாட்களில் பக்தர்கள் கிரிவலம் வருகிறார்கள். திருவோண நட்சத்திர காலங்களில் விஷ்ணுவுக்கு விசேஷ பூஜைகள் நடைபெறுகிறது. ஆடிப்பூரம், நவராத்திரி திருவிழா, பிரதோஷம். கார்த்திகை, வைகுண்ட ஏகாதசி, மார்கழி மாத திருவாதிரை நாட்கள் விசேஷ தினங்களாகக் கொண்டாடப்படுகிறது. கண் நோய்களைப் போக்குவதால் இவருக்குக் கண் ஒளி வழங்கும் பெருமாள் என்ற திருநாமமும் உண்டு.

சப்தமாதர்கள், விநாயகர், முருகன், வீரபத்திரர், வாகீஸ்வரர், காளிகாம்பாள், நரசிம்மர், வராகமூர்த்தி, கமலவல்லி தாயார் சன்னதிகள் உள்ளன.

*சிறப்புகள்:

புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள திருமயம் குடைவரைக் கோயிலைப் போலவே சிவனுக்கும் விஷ்ணுவுக்கும் ஒரே குன்றின்மீது தனித்தனியே எழுப்பப்பட்டுள்ள இரு குகைக் கோயில்தான் மலையடிப்பட்டி கோயில். ஆலயக் கல்வெட்டுகளில் இவ்வூர். திருவாலத்தூர் மலை என்று காணப்படுகிறது. சிவபெருமானுக்கும் விஷ்ணுவுக்கும் தனித்தனியே இரண்டு குகைக் கோயில்கள் அருகருகே அமைக்கப்பட்டுள்ளன. அனந்த சயன மூர்த்தியாகக் காட்சியளிக்கும் விஷ்ணு கோயில், திருப்பதிக்கு நிகரானது என்கிறார்கள். இங்குள்ள சிவன் கோயில், திருமால் கோயிலைவிட காலத்தால் முற்பட்டது. இக்கோயிலில் நந்திவர்ம பல்லவன் காலத்துக் கல்வெட்டு (கி.பி 775-826) இருக்கிறது. அந்தக் கல்வெட்டில் இக்கோயில் 16-வது ஆட்சியாண்டில், அதாவது கி.பி. 730-ல் குவாவன் சாத்தன் என்பவரால் மலையைக் குடைந்து சிவனுக்குக் கோயில் எடுத்து, வாகீஸ்வரர் எனப் பெயரிட்டதாகச் செய்தி காணப்படுகிறது.

மலையை குடைந்து அமைக்கப்பட்ட இக்கோயில் ஒரு குடைவரைக்கோயிலாகும். வாயிற்காப்போர் எனும் துவாரபாலகருக்கு இரண்டு கைகள் மட்டும் உள்ளன. வேறு கோயில்களில் நான்கு திருக்கரங்களோடு துவார பாலகர்கள் காட்சியளிப்பார்கள்.

*கல்வெட்டுகள்:

பூச்சிக்குடியைச் சேர்ந்தவர் ஆவுடையப்ப தேவன் என்பவராவார். இவருக்கு தற்போதைய திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் உள்ள திருநெடுங்களத்து விலைமாதுவுடன் உறவு இருந்தது. தேவன் அம்மாதுவின் வீட்டில் இருந்தபோது, அவள்பிராமணர் ஒருவரை வரச்செய்து உறவில் இருந்துள்ளார். இதனால் சினமுற்ற ஆவுடையப்பதேவன் அந்த இருவரையும் வெட்டிக் கொன்றார். பின்னர் அங்கிருந்து மலையப்பட்டிக்குப் புறப்பட்டார். அப்போது அவருக்கு இரு கண்களிலும் பார்வை இழப்பு ஏற்பட்டது. தான் செய்த தவறால் தன் பார்வை பறிபோனதாக கருதி வருந்தினார். தனக்கு பார்வை மீண்டும் வந்தால் தன் வயலை வாகீசருக்கு எழுதிவைப்பதாக வேண்டிக் கொண்டார். அதன் பிறகு பார்வை திரும்பக் கிடைத்தது. அதனால் மகிழ்ந்த ஆவுடையப்ப தேவன் தம் காணியான குடிகாட்டை வாகீசருக்கு எழுதி அதைக் கல்வெட்டாக கோயிலில் பொறித்தார்.

மலையின் கிழக்குப் பகுதியில் மலையைக் குடைந்து முன் மண்டபத்தை அமைத்திருக்கிறார்கள். சற்று உள்ளே சதுர வடிவில் கருவறை உருவாகி இருக்கிறது. பாறையைக் குடைந்து சிவலிங்கத் திருமேனியை வடித்திருக்கும் விதம் பிரமிப்பூட்டுகிறது. சிவலிங்கத்தின் முன் நந்தி சிலை செதுக்கப்பட்டுள்ளது.

வாகீஸ்வரர் கருவறையை அடுத்து அர்த்தமண்டபம் உள்ளது. அந்த மண்டபச் சுவரில் சப்தமாதர்கள், விநாயகர், வீரபத்திரர், சிவன், விஷ்ணு ஆகியோரது சிற்பங்கள் மலையை குடைந்து உருவாக்கப்பட்டுள்ளன.

எருமையின் முகமும், மனித உடலும் கொண்ட மகிஷாசுரனுடன் அன்னை பராசக்தி சிங்கத்தின் மீது அமர்ந்து போரிட்டு வீழ்த்தும் காட்சியும் தத்ரூபமாக சித்தரிக்கப்பட்டுள்ளது. குகையை ஒட்டியுள்ள முன்மண்டபம், விஜயநகர கால கலைப்பணியை சார்ந்தது.

சிவன் குகையின் மேற்குப் பகுதியில் விஷ்ணு குகை காணப்படுகிறது. இந்தக் குகைக் கோவிலில், பள்ளிகொண்ட பெருமாள் அருள்கிறார். சயன கோலத்தில் இருக்கும் இறைவன் 'பள்ளிகொண்ட பெருமாள்' என்றும், 'கண்ணிறைந்த பெருமாள்' என்றும், தாயார் 'கமலவல்லி' என்ற பெயரிலும் அழைக்கப்படுகிறார்கள்.

விஷ்ணு குகைக் கோவிலானது கருவறையையும், அதற்கு முன்பாக ஒரு மண்டபத்தையும் கொண்டது. இங்குள்ள தூண்கள் சிவன் கோவிலின் தூண்களைவிட மிகவும் அழகாக அமைக்கப்பட்டுள்ளன. தூணின் அடிப்பக்கம் சிங்கம் நிமிர்ந்து உட்கார்ந்திருப்பது போன்றும், அதற்கும் மேல் தூண் உயர்ந்திருப்பதையும் காணலாம். இது பல்லவ மாமல்லன் காலத்துக் கலை பாணியைக் கொண்டது என்கின்றனர்.

மண்டபத்தின் சுவற்றில் வலதுபுறம் மகாலட்சுமியுடன் நரசிம்மரும், அமர்ந்த கோலத்தில் வைகுண்டப் பெருமாளும் உள்ளனர். இடதுபுறம் ஹயக்ரீவர் மற்றும் பெருமாள், விஷ்ணுவின் நிற்கும் தோரணையும் சித்தரிக்கப்பட்டுள்ளது.

எனவே, ஒரே இடத்தில், ஒரே அறையில் விஷ்ணுவின் நின்ற, இருந்த, கிடந்த (நின்று, உட்கார்ந்து, உறங்கும்) கோலங்களைக் கொண்ட மிகச் சில கோவில்களில் இதுவும் ஒன்றாகும்.

சயன பெருமாளை சுற்றிலும் 5 தலை கொண்ட ஆதிசேஷன், நாரதர், தும்புரு, பிரம்மா, ஜாம்பவான், தேவர்கள் உள்ளனர். துவாரபாலகர்கள் கையில் தாமரையை வைத்திருக்கிறார்கள். தாயாரின் சன்னிதி காலத்தால் மிகவும் பிற்பட்டதாகும்.

மேலும் இந்தக் குகைக் கோவிலில், ஆந்திரா மாநிலம் லேபாட்சியில் உள்ள ஓவியங்களின் சாயலைக் காணமுடியும். முன் மண்டபத்திலுள்ள 5 குழிகளில் வலது கையின் ஐந்து விரல்களை வைத்து, இடது முழங்கையை தரையில் ஊன்றி மண்டியிட்டு, ஹரி நேத்திர தூண்கள் இடையே மூன்று வாசல்கள் வழியாக பள்ளி கொண்ட பெருமாளை தரிசிப்பதன் மூலம், ஏழு பிறவிகளில் ஏற்பட்ட பித்ரு சாபம் உள்ளிட்ட தோஷங்கள் அறவே நீங்கும் என்கின்றனர்.

கண்பார்வை தொடர்பான எல்லா நோய்களையும் நீக்கி அருள்கிறார் இத்தல பெருமாள் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

இந்தக் குடைவரைக் கோவிலின் அருகே இருக்கும் இந்தப் பிரமாண்டப் பாறைகளின் மேல் சமணர் படுகைகள் வரிசையாக அமைக்கப்பட்டிருக்கின்றன.

கி.பி. 7-ம் நூற்றாண்டுக்கு முன்னர் சமண சமயம் வேகமாகப் பரவி செழித்திருக்க வேண்டும் என்பதை இங்குள்ள சமணர் படுகைகள் நமக்கு உணர்த்துகின்றன. அவற்றை சுற்றி சில கல்வெட்டுகளும் உள்ளன.

கண்ணிறைந்த பெருமாள் கோவில் ஓவியங்கள், சிற்பங்கள் மற்றும் கூரை ஓவியங்கள் அனைத்தும் நாயக்கர் காலத்தில் வரையப்பட்டவை.

கோவிலுக்கு எதிரில் சக்தி வாய்ந்த தீர்த்தக்குளம் உள்ளது. இங்கே பக்தர்கள் கால்கள் படாமல் நீரை எடுத்துத் தலையில் தெளித்துக்கொண்டு, பிறகு கோவிலுக்குள் செல்ல வேண்டும்.

இங்குள்ள அழிஞ்சில் மற்றும் வில்வத்துக்கு, அருகில் உள்ள சக்தி தீர்த்தத்தில் இருந்து கால்படாமல் நீர் எடுத்து வந்து ஊற்றி, நம் கைகளால் அரைத்த மஞ்சள் பூசி, குங்குமத்தில் பொட்டிட்டு வணங்கினால் லட்சுமி கடாட்சம் பெருகும். திருமணத் தடை நீங்கும் என்றும் சொல்கிறார்கள்.

பொதுவாக கண் மற்றும் இதயம் தொடர்பான நோய்களுக்காக வேண்டிக்கொண்டு தரிசனம் செய்வதும், வேண்டுதல் நிறை வேறியதும் நேர்த்திக்கடன் செலுத்துவதும் இங்கு மரபாக உள்ளது. முன்னோர்களின் சாபம் நீங்க இப்பெருமாளுக்கு நெய் விளக்கேற்றி வழிபட வேண்டும்.

செவ்வாய், வெள்ளி, சனி, ஞாயிறு கிழமைகளிலும், ஏகாதசி மாதப்பிறப்பு நாட்கள், சிரவணம் ஆகிய நாட்களிலும் தரிசனம் செய்தால் அல்லல் நீங்கி, குபேர சம்பத்து கிடைக்கும் என்பது நம்பிக்கை.

இவ்வாலயத்தில் வழிபட தீபாவளி, கார்த்திகை, ஆடி மற்றும் தை மாத வெள்ளிக்கிழமைகள், புரட்டாசி சனிக்கிழமைகள் மிகச்சிறந்த நாட்களாகக் கருதப்படுகின்றன.

காலசந்தி, உச்சிக்காலம், சாயரட்சை, அர்த்தஜாமம் என்று தினமும் நான்கு கால பூஜைகள் நடைபெறும் இந்த ஆலயமானது, காலை 6 மணி முதல் பகல் 12 மணி வரையும், மாலை 5 மணி முதல் இரவு 8.30 மணி வரையும், பக்தர்கள் தரிசனம் செய்வதற்காக திறந்துவைக்கப்பட்டிருக்கும்.

*விசேஷ பிரார்த்தனை: 

பெருமாளிடம் வேண்டிக் 'கண்மலர்' சாற்றி பிரார்த்தனை செய்தால், கண் சம்பந்தப்பட்ட குறைபாடுகள் அனைத்தும் நீங்கும் என்பது பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கையாகும்.

*குடைவரைக் கோயில்: 

திருமயம் குடைவரைக் கோயிலைப் போலவே, ஒரே மலையில் சிவன் (வஹீஸ்வரமுடையார்) மற்றும் பெருமாள் என இரு கோயில்களும் அருகருகே அமைந்துள்ளன.

*எப்படிச் செல்வது:

திருச்சியிலிருந்து 30 கி.மீ தொலைவிலும் புதுக்கோட்டையிலிருந்து 33 கி.மீ தொலைவிலும் இருக்கிறது மலையடிப்பட்டி கிராமம். 
திருச்சி-தஞ்சாவூர் நெடுஞ்சாலையில் செங்கிப்பட்டியை அடுத்த கிள்ளுக் கோட்டை பிரிவு சாலையிலிருந்து 15 கி.மீ தூரத்தில் அமைந்திருக்கிறது மலையடிப்பட்டி குடைவரைக் கோயில்கள். 

இரண்டு கோயில்களும் காலை 6 மணி முதல் பகல் 12 மணி வரையிலும், மீண்டும் மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் திறந்திருக்கிறது. புதுக்கோட்டையிலிருந்து கிராமப் பேருந்து வசதிகளும் உண்டு. குடைவரைக் கோயில் செல்பவர்கள் இங்குள்ள ஓவியங்களின் அழகையும், சிவபெருமான், விஷ்ணு பெருமானின் அருளையும் பெற்றுச் செல்லலாம்.

ஓம் நமசிவாய
 படித்து பகிர்ந்தது 
இரா இளங்கோவன் 
நெல்லிக்குப்பம். 

Wednesday, June 3, 2026

அவளிவணல்லூர் சாட்சிநாதர் கோயில்

உலகப் புகழ்பெற்ற 
தேவாரப் பாடல் பெற்ற சோழநாட்டு தலங்களில் ஒன்றானதும்,
திருமால் வராக வடிவில் ஈசனை வழிபட்ட தலமாகவும்,
சிவபெருமானே நேரில் வந்து "அவள் இவள்" என்ற சாட்சி சொன்ன இடமான, பஞ்ச ஆரண்ய தலங்களில் ஒன்றான 
திருவாரூர் மாவட்டத்தில் உள்ள புகழ்பெற்ற
#திருஅவளிவநல்லூர் என்ற #அவளிவணல்லூர் 
(புல்லாரண்யம், சாட்சிநாதபுரம், பாதிரிவனம்,
#அவளிவள்நல்லூர்)
#சாட்சிநாதர் என்ற ஸ்ரீகம்பரிஷியுடையார்
#சௌந்தர_நாயகி என்ற 
சௌந்தர வல்லி
திருக்கோயில் வரலாற்றையும் புகைப்படங்களையும் காணலாம் வாருங்கள் 

அவளிவணல்லூர் சாட்சிநாதர் கோயில் தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் சோழ நாடு காவிரி தென்கரைத் தலங்களில் ஒன்றாகும்.சம்பந்தர், அப்பர் பாடல் பெற்ற இத்தலம் தஞ்சாவூர் மாவட்டத்தில்அம்மாப்பேட்டை அருகே அமைந்துள்ளது.
காவிரி தென்கரைத்தலங்களில் 100ஆவது சிவத்தலமாகும்.
திருஅரதைப் பெரும்பாழி என்ற மற்றொரு பாடல் பெற்ற திருத்தலம் இங்கிருந்து 2 கி.மீ. தொலைவில் இருக்கிறது.

வராகமூர்த்தியும் (திருமால்) காசியப்பமுனிவரும் வழிபட்டுப் பேறு பெற்ற தலம். தன்மனைவியை விடுத்து அவள் தங்கையைத் தம் மனைவியென வாதிட்ட கணவனுக்கு, அவன் மனைவியாகிய அவள் தான் சுட்டும் இவள் என்று காட்டியதால், நல்லூர், அவள் இவள் நல்லூர் என்று பெயர் பெற்றதாம். இக்கதை கர்ப்பகிருகத்தின் பின் பக்கத்தில் செதுக்கப்பட்டிருக்கின்றது என்பர்.
#கோயில்_குறிப்புகள்:

*மூலவர் : சாட்சிநாதர், தம்பரிசுடையார்.

*அம்மன்: சௌந்தரநாயகி, சௌந்தரியவல்லி.

*தல மரம்: பாதிரி

*தீர்த்தம் : சந்திர புஷ்கரணி.

*புராண பெயர்கள்: புல்லாரண்யம், சாட்சிநாதபுரம், பாதிரிவனம்,அவளிவள் நல்லூர்,அவளிவநல்லூர்

ஊர்: அவளிவநல்லூர்

மாவட்டம்: திருவாரூர் 

*பாடியவர்கள்: அப்பர், சம்பந்தர் மற்றும் சேக்கிழார் , வள்ளலார் 

#அவளிவள்நல்லூர் தேவாரப் பாடல்கள்:

1."கொம்பிரிய வண்டுலவு கொன்றைபுரி நூலொடுகு லாவித்
தம்பரிசி நோடுசுடு நீறுதட வந்திடபம் ஏறிக்
கம்பரிய செம்பொனொடு மாடமதில் கல்வரைவி லாக
அம்புஎரிய வெய்தபெரு மான்உறைவது அவளிவள் நல் லூரே
          ...... திருஞானசம்பந்தர்

2."தோற்றினான் எயிறு கவ்வித் தொழிலுடை யரக்கன் தன்னைத்
தேற்றுவான் சென்று சொல்லச் சிக்கெனத் தவிருமென்று
வீற்றினை யுடையவனாகி வெடுவெடுத்து எழுந்த வன்றன்
ஆற்றலை அழிக்க வல்லார் அவள் இவள் நல்லூரே.
     ...... திருநாவுக்கரசு சுவாமிகள்
                                                            

3.-“ சரதத்தால்
ஏதும் அவள் இவள் என்று எண்ணாதவர் இறைஞ்சி
ஓதும் அவளிவணல் லூருடை யோய்”
                ___வள்ளலார்

#பஞ்ச_ஆரண்ய தலங்கள்:

தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் பஞ்ச ஆரண்யத் தலங்கள் என்று ஐந்து திருத்தலங்கள் உண்டு. இவ்வைந்துமே காவிரியின் தென்கரையிலே அமைந்து இருப்பதுடன் ஒரே நாளில் விடியற்காலையில் புறப்பட்டு ஐந்தாவது கோயிலை அர்த்தஜாம பூஜையின் போது வந்து வணங்கி முடித்துக் கொள்ளும் படியாக அருகருகே அமைந்தவையாகும். இந்த ஐந்து திருத்தலங்களை வரிசையாகச் சொல்வதானால்

1. திருக்கருகாவூர் (முல்லைவனம்) - விடியற்காலம்
2. அவளிவணல்லூர் (பாதிரி வனம்) -  காலை.
3. அரதைப் பெரும்பாழி (ஹரித்துவாரமங்கலம்) - வன்னிவனம் -  உச்சிக்காலம்.
4. ஆலங்குடி (திரு இரும்பூளை) - பூளை வனம் - மாலை.
5. திருக்கொள்ளம்புதூர் (வில்வவனம்) - அர்த்தஜாமம்

#தல வரலாறு:

இத்தலம் "புல்லாரண்யம்", "சட்சிநாதபுரம்", "பத்திரிவனம்" என்று அழைக்கப்பட்டது. மகாவிஷ்ணு, பிரம்மா, காஷ்யப  மகரிஷி, முருகன், சூரியன், அகஸ்தியர், கண்வ மகரிஷி ஆகியோர் இக்கோயிலின் சிவனை வழிபட்டதாக நம்பப்படுகிறது .

மகா விஷ்ணு, வராக அவதாரத்தின் போது , அவருடைய கொம்பு உடைந்துவிட்டது . அதனால் அவர் இந்தக் கோவிலுக்கு வந்து சிவபெருமானை வழிபட்டார். சிவபெருமான் அவருக்கு முன்பைப் போலவே கொம்புகளை அருளினார். காஷ்யப மகரிஷியும் இந்தக் கோவிலின் சிவபெருமானை வழிபட்டார். 

பஞ்சாரண்யத் தலங்களுள் இரண்டாவது.

சாட்சிநாதபுரம், புல்லாரண்யம், பாதிரிவனம் ஆகிய பெயர்கள்  இத்தலத்திற்கு உண்டு.

பிரமனும் சூரியனும்,அகத்திய முனிவரும்  வழிபட்ட தலம் இது.

வராக வடிவம் கொண்ட திருமால் இப்பெருமானை வழிபட்டுப்பேறு பெற்றார்.

*தல வரலாறு: 

பண்டைநாளில் இத்தலத்தில் இறைவனைப் பூசித்து வந்த ஆதி சைவ அந்தணர் ஒருவருக்கு இரு பெண்கள் இருந்தனர். மூத்த பெண்ணை ஒருவருக்கு மணம் முடித்தார். மணந்து கொண்டவர் சிறிது காலங்கழித்து, காசி யாத்திரை சென்றார். அவர் காசி சென்றிருந்த காலத்தில் மூத்த பெண்ணுக்கு அம்மை வார்க்கப்பெற்று, உருவம் மாறியதோடு கண்களையும் இழந்தாள். இரண்டாவது பெண்ணுக்கும் திருமணம் நடைபெற்றது. சில ஆண்டுகள் கழித்து, காசி யாத்திரை சென்றிருந்த மூத்த மருமகன் வீடு திரும்பினார்.

தன் மனைவியின் உருவ வேறுபாட்டைக்கண்டு, "இவள் என் மனைவியல்ல என்றும் உருவத்தில் ஒத்திருந்த இளையவளே என் மனைவி" என்று வாதிட்டார். இதனால் இரு பெண்களையும் பெற்ற ஆதிசைவர் மனங்கலங்கி இத்தல இறைவனைப் பிரார்த்திக்க, இறைவன் காட்சி தந்து மனந்தடுமாறிய மருமகனைப் பார்த்து, மூத்தவளே அவர் மனைவி என்னும் பொருளில் "அவள் இவள்" என்று சுட்டிக் காட்டி மறைந்தார். மேலும் இறைவன் அருளியவாறு மூத்தவளும் இத்தலத்துத் தீர்த்தத்தில் மூழ்கிப் பண்டைய உடலும் கண்களும் பெற்றாள்; கணவனுடனும் சேர்ந்து இன்புற்று வாழ்ந்தாள். அவள் இவள் என்று சாட்சி கூறியதால் இத்தல இறைவன் சாட்சிநாதர் என்ற பெயர் பெற்றார். தலத்தின் பெயரும் நல்லூர் என்பது மாறி அவளிவநல்லூர் என்றாயிற்று.

இவ்வாயத்திற்கு இராஜகோபுரமில்லை. ஒரு கிழக்கு நோக்கிய முகப்பு வாயில உள்ளது. உள்ளே நுழைந்தவுடன் வெளிச்சுற்றில் அம்பாள் சந்நிதி தெற்கு நோக்கியுள்ளது. அம்பாள் நின்ற திருக்கோலத்தில் காட்சி தருகிறாள். வழிபட்டுச் சென்றால் முகப்பில் விநாயகர் காட்சி தருகிறார். . உள்ளே நுழைந்தால் நேரே மூலவர் சுயம்பு லிங்க உருவில் கிழக்கு நோக்கி காட்சி தருகிறார். கருவறை வாயிலின் இருபுறமும் துவாரபாலகர்கள் உள்ளனர். மூலவருக்குப் பின்னால் தலவரலாற்றின்படி சாட்சி சொன்ன நிலையில் சாட்சிநாதராக சிவன் பார்வதி காட்சி தருகின்றனர்.

உள்சுற்றில் விநாயகர், நால்வர் சந்நிதிகள், கண்வ முனிவர், வீரபத்திரர், சப்தகன்னியர், அறுபத்துமூவர் மூலத்திருமேனிகள் ஆகிய சந்நிதிகள் உள்ளன. சோமாஸ்கந்தர், விநாயகர், சிவகாமி, நால்வர், ஆறுமுகர், மகாலட்சுமி ஆகிய உற்சவத் திருமேனிகள் பாதுகாத்து வைக்கப்பட்டுள்ளன. நடராசர் சந்நிதி உள்ளது. பக்கத்தில் குமாரலிங்கம், காசிவிசுவநாதர், விசாலாட்சி, தபஸ் அம்பாள் திருமேனிகள் உள்ளன. எதிரில் நவக்கிரக சந்நிதிகள் உள்ளது. கால பைரவர், சூரியன் சந்நிதிகள் உள்ளன. கோஷ்டமூர்த்தங்களாக அகத்தியர், தட்சிணாமூர்த்தி, லிங்கோத்பவர், பிரமன், துர்க்கை ஆகியோர் உள்ளனர். எதிரில் சண்டேஸ்வரர் சந்நிதி உள்ளது.

இக்கோவிலில், நான்கு கல்வெட்டுகள் உள்ளன. இரண்டு சோழர் காலத்தவை. மற்றவை மிகச் சிதைந்துள்ளன.

முல்லைவனமாகிய 
திருக்கருகாவூரில்   
உஷக் காலத்திலும், 
பாதிரி வனமாகிய 
அவளிவ நல்லூரில்   
கால சந்தி காலத்திலும், வன்னி வனமாகிய ஹரித்துவார மங்கலத்தில் (அரதைப்பெரும் பாழியில்  )   உச்சிக்காலத்திலும், பூளைவனமாகிய ஆலங்குடியில் (திரு இரும்பூளையில்  ) சாயரக்ஷையிலும் , திருக்கொள்ளம்பூதூரில் அர்த்த ஜாம தரிசனமும் செய்வது மிகவும் சிறந்த பலன்களை அளிக்க வல்லது என்பார்கள். இவை ஐந்தையும் ஒரே நாளிலும் தரிசிப்பர்.

இங்குள்ள தெய்வத்திற்கு சூரியன், குரு, சுக்ரன், சந்திரன் ஆகிய கிரகங்கள் நாமகரணம் செய்துள்ளது.

*அனுஷம் நட்சத்திர நாளில் இங்குள்ள சந்திர தீர்த்தத்தில் நீராடி சுவாமி தரிசனம் செய்தால் தீராத சருமப் பிணிகள் தீரும் என்பது ஐதீகம்.

*பரணி நட்சத்திரம் அல்லது பூராடம் நட்சத்திர நாளில் சந்திர தீர்த்தத்தில் நீராடி சுவாமிக்கு செந்தாமரை மலர் மாலை சூட்டி தினையை நைவேத்தியம் கொடுத்தால் எப்பேர்பட்ட கண் பிரச்னைகளும் ஒரு கண் பார்வை பிரச்னையாக இருந்தாலும் விரைவாக குணமடையும்.

*புனர்பூசம் நட்சத்திர நாளில் இக்கோயிலின் தலவிருட்சமான பாதிரி மரத்திற்கு மாமரத்தில் செய்யப்பட்ட சிறிய தொட்டில் செய்து வெண்பட்டு அல்லது மஞ்சள் பட்டுநூலால் இம்மரத்தில் கட்டி பின்பு பார்லி அரிசியில் சுவாமிக்கு நைவேத்தியம் தொடர்ந்து மூன்று மாதம் செய்தால் புத்திரப்பேறு உண்டாகும்.

*கர்ப்பிணி பெண்களும் சுவாமிக்கு பார்லி அரிசி நைவேத்தியம் பிரசாதத்தை சாப்பிட்டுவந்தால் சுகப்பிரசவம் உண்டாகி நல்ல படியாக குழந்தை பிறக்கும்.

*இத்திருத்தலத்தில் பள்ளியறை பூஜையில் கலந்து கொண்டால் கணவன் - மனைவி பிரச்னை தீரும். கணவன் - மனைவி ஒன்றுபட்டு வாழ்வர்.

பௌர்ணமி நாளில் மஹா வில்வச் செடியை இக்கோயிலில் நட்டு அதனைப் பாதுகாப்பாக வளர்த்தால் வில்வம் வளர வளர உங்களின் கர்மா குறைந்து வாழ்வில் சுபகாரியங்கள் உண்டாகும்

 
*கல்வெட்டுகள்:

திருஞானசம்பந்தரும், திருநாவுக்கரசுவின் சுவாமிகளும் இக்கோயிலின் சிவபெருமானைப் போற்றிப் பாடியிருப்பதால், மூலக்கோயில் 7 ஆம் நூற்றாண்டுக்கு முன்பே இருந்திருக்கலாம். இக்கோயில் சோழர் காலத்தில் கற்கருவியாகப் புனரமைக்கப்பட்டு, நாயக்கர் / மராட்டியர் காலத்தில் மேலும் விரிவுபடுத்தப்பட்டது.

இக்கோயிலில் இருந்து பதிவு செய்யப்பட்டுள்ள கல்வெட்டுகள் குலோத்துங்க சோழ-III ( கி.பி. 1246 – 1279) க்கு சொந்தமானது. நித்தவோணத்தவளநாட்டு ஆவூர் கூற்றத்து அவளிவநல்லூரில் உள்ள சிவபெருமான் இருந்த இத்தலம் “தம்பரிசுடையார்” என அழைக்கப்பட்டதாக கல்வெட்டு கூறுகிறது  .

இக்கோயிலில் கண்டெடுக்கப்பட்ட கல்வெட்டுகள், மூன்றாம் ராஜராஜ சோழனின் மகனான மூன்றாம் ராஜேந்திர சோழனின் (கி.பி. 1246 – 1279) 7 -வது மற்றும் 22 -வது ஆட்சிக் காலங்களைச் சேர்ந்தவை. மேலும், மன்னரின் பெயரும் காலமும் குறிப்பிடப்படாத சில சிதைந்த, சேதமடைந்த கல்வெட்டுகளும் கிடைத்துள்ளன.  கல்வெட்டின்படி, சிவபெருமான் “தாம்பரீசுதய நாயனார்” என்று அழைக்கப்பட்டார்.

மூன்றாம் ராஜேந்திர சோழனின் 7 ஆம் ஆண்டு கல்வெட்டு, யாசித்த பிறகு விளக்கேற்றியதையும் (..?), சேவையின் போது அதன்  பல பகுதிகள் சேதமடைந்ததையும் பதிவு செய்கிறது. மற்றொரு 22 ஆம் ஆட்சியாண்டு கல்வெட்டு, நிலம் தானமாக வழங்கப்பட்டு விளக்கேற்றப்பட்ட கொடையைப் பதிவு செய்கிறது (அந்தக் கல்வெட்டு முழுமையடையாமலும் சேதமடைந்தும் உள்ளது).

மூன்றாம் இராஜராஜ சோழனின் 10 ஆம் ஆட்சியாண்டு கல்வெட்டில் நித்தவோணத்தவளநாட்டு ஆவூர் கூற்றத்துஅவளிவநல்லூர் தம்பிசுதய நாயனார் கோயில்,  விநாயகர், அம்பேரிந்தப் பெருமான் (திருப்புராந்தகர் என சிவபெருமான் இருக்கலாம்), நாச்சியார், ஆட்கொண்டநாயக்கர் மற்றும் நாச்சியார், பள்ளியாருடைய நாச்சியார், ஆலியாருடைய நாச்சியார் ஆகியோரால் நிறுவப்பட்டது. அமரகோன் என்கிற தம்பிசுடையான் ஆதிச்ச தேவன்.

மார்கழி மற்றும் சித்திரைத் திருநாளைக் கொண்டாட ஏமலூருடையான் திருப்பங்குடையான் திருவந்தானின் தந்தையான கிளியுடையான் அனுக்கன் (கல்வெட்டு பல பகுதிகளிலும் சேதம் அடைந்துள்ளது) என்பவரால் வாங்கிய நிலத்தை தானமாக அளித்தார்.

இவ்வாலயம் தினந்தோறும் காலை 7 மணி முதல் பகல் 12 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 8-30 மணி வரையிலும் திறந்திருக்கும்.

*செல்லும் வழி:

கும்பகோணந்நில் இருந்து அம்மாபேட்டை செல்லும் நகரப் பேருந்துகளும், தஞ்சாவூரில் இருந்து அரித்துவாரமங்கலம் செல்லும் நகரப் பேருந்துகளும் அவளிவநல்லூர் வழியாகச் செல்கின்றன. கும்பகோணத்தில் இருந்து சுமார் 21 கி.மீ. தொலைவில் உள்ளது. திருஅரதைப் பெரும்பாழி என்ற மற்றொரு பாடல் பெற்ற சிவஸ்தலம் இங்கிருந்து 3.5 கி.மீ. தொலைவில் இருக்கிறது. நீடாமங்கலத்தில் இருந்தும் அம்மாபேட்டை வழியாக அவளிவநல்லூர் செல்லலாம்.
ஓம் நமசிவாய
 படித்து பகிர்ந்தது 
இரா இளங்கோவன் 
நெல்லிக்குப்பம். 

Monday, May 25, 2026

குரு பெயர்ச்சி குருபகவானின் விசேஷப் பார்வைகள்.

12 ஆண்டுகளுக்கு பிறகு நிகழும் அதிசயம்.. உச்சத்திற்கு செல்லும் 5 ராசிகள்..!
ஆண்டுக்கு ஒருமுறை பெயர்ச்சி அடையக் கூடிய குருபகவான், பன்னிரண்டு வருடங்களுக்கு ஒருமுறை தனது உச்ச ராசியான கடகத்துக்கு வருவார். அந்த சமயத்தில் பொதுவாக எல்லா ராசியினருக்குமே நன்மைகள் அதிகமாகவே நடக்கும். அதேசமயம், மற்ற கிரஹங்களின் சேர்க்கை, குருபகவானின் விசேஷப் பார்வைகள் பதியும் இடம் போன்றவற்றின் அடிப்படையில் பலாபலன்களின் அளவு கூடும் அல்லது குறையும். இந்தப் பராபவ வருடத்தில், வாக்கியப் பஞ்சாங்கத்தின்படி 26.5.2026 அன்று பகல் 11 மணிக்கு குருபகவான், மிதுனம் ராசியில் இருந்து தனது உச்ச ராசியான கடகத்துக்குப் பெயர்ச்சி ஆகிறார்.
 12 ஆண்டுகளுக்கு பிறகு நிகழும் அதிசயம்.. உச்சத்திற்கு செல்லும் 5 ராசிகள்..!
திருக் கணிதப்படி 2.6.2026 அன்று பெயர்ச்சி ஆகிறார்.  அவரது விசேஷ பார்வைகளான 5,7,9 ஆம் பார்வைகள் முறையே விருச்சிகம்,மகரம், மீனம் ராசிகளில் பதிகின்றன. இந்த அமைப்பின் காரணமாக எந்தெந்த ராசியினருக்கு என்ன மாதிரியான பலன்கள் ஏற்படும் என ஜோதிடர் கணித்துள்ளார். அதை விரிவாக பார்க்கலாம்.
 12 ஆண்டுகளுக்கு பிறகு நிகழும் அதிசயம்.. உச்சத்திற்கு செல்லும் 5 ராசிகள்..!
மேஷம்: எண்ணங்கள் ஈடேறக் கூடிய காலகட்டம். அலுவலகத்தில் மேலதிகாரிகளால் பாராட்டப்படுவீர்கள். உடனிருப்போர் ஆதரவு கிட்டும். எதிர்பாரா பயணங்களால் ஆதாயம் உண்டாகும். எதிர்பார்த்த மேன்மைகள் கைகூடி மகிழ்வு தரும். இல்லத்தில் சீரான போக்கு நிலவும். சுபகாரியத் தடைகள் நீங்கும். பணவரவை சேமிக்கப் பழகுவது நல்லது. வரவுக்கு ஏற்ப செலவும் வரும். ஆடை, ஆபரணச் சேர்க்கை உண்டு. வாரிசுகளால் பெருமை சேரும். செய்யும் தொழில் எதுவானாலும் அதில் நேரடி கவனம் முக்கியம். 12 ஆண்டுகளுக்கு பிறகு நிகழும் அதிசயம்.. உச்சத்திற்கு செல்லும் 5 ராசிகள்..!
முதலீட்டில் அவசரம் வேண்டாம். அரசுப்பணியில் இருப்போர் அடக்கத்தைக் கையாளவது நல்லது. அரசியல் துறையினருக்கு மேலிடத்தின் ஆதரவால் பெருமை சேரும். கலைஞர்கள், படைப்புத் துறையினர் முயற்சிக்கு ஏற்ப வாய்ப்புகளைப் பெறுவீர்கள். மாணவர்கள் சோம்பலை விரட்டுவது நல்லது. வாகனப் பழுதினை உடனுக்குடன் சீர் செய்வது நல்லது. தூக்கமின்மை, அஜீரணம், அல்சர் உபாதைகள் வரலாம். ராகவேந்திரர் வழிபாடு, வாழ்வை ரம்யமாக்கும்.12 ஆண்டுகளுக்கு பிறகு நிகழும் அதிசயம்.. உச்சத்திற்கு செல்லும் 5 ராசிகள்..!
ரிஷபம்:திட்டமிட்டு செயல்பட்டால், ஏற்றமும் மாற்றமும் ஏற்படக்கூடிய காலகட்டம். அலுவலகத்தில் திட்டமிடலும் நேரம் தவறாமையும் முக்கியம். உடனிருப்போர் குறைகளை பெரிதுபடுத்த வேண்டாம்.சிலருக்கு பணி சார்ந்த பயணங்கள் தடைபடலாம். அது நன்மைக்கே என்பதை உணருங்கள். பதவி, ஊதிய உயர்வுகள் தாமதமானாலும் கைகூடும். வீட்டில் விட்டுக்கொடுத்தல் முக்கியம். புதிய உறவுகளிடம் வீண் கடுமை வேண்டாம். வாரிசுகள் வாழ்வில் சுபகாரியங்கள் கைகூடும். பூர்வீக சொத்து லாபம் தரும். செய்யும் தொழிலில் நிதானமே ஏற்றம் தரும்.

பங்குவர்த்தகத்தில் பெரும் முதலீடு வேண்டாம். அரசுத்துறையினருக்கு ஏற்றமும் மாற்றமும் உண்டாகும். எதிர்பார்த்த நற்செய்திகள் வரும். அரசியலில் இருப்போர்க்கு ஆதரவு நிலைக்கும். அனுபவம் மிக்கவர்களிடம் சர்ச்சைகள் வேண்டாம். கலைஞர்கள், படைப்புது துறையினருக்கு திறமை பளிச்சிடும். மாணவர்கள் மறதிக்கு இடம்தர வேண்டாம். வாகனத்தில் வேகம் கூடவே கூடாது. அடிவயிறு, கழிவு உறுப்பு, ரத்த நாள உபாதைகள் வரலாம். நரசிம்மர் வழிபாடு, நன்மைகள் சேர்க்கும்.

மிதுனம்: உழைப்பினால் உயர்வுகள் பெறவேண்டிய காலகட்டம். அலுவலகத்தில் தளராத உழைப்பினால் தலை நிமிர்ந்து நடப்பீர்கள். உடனிருக்கும் யாருடனும் வீண் உரசல் வேண்டாம். பணத்தைக் கையாளும் பொறுப்பில் கவனச் சிதறல் கூடவே கூடாது. இல்லத்தில் நிம்மதி இடம்பிடிக்கும். கடினமான வார்த்தைகளால் அதை விரட்டிவிட வேண்டாம். ஆடை, ஆபரணம், பொருள் சேரும். வீடு, மனை சார்ந்த பத்திரங்களை பத்திரமாக வைத்துக்கொள்ளுங்காள். பழைய கடன்களை நேரடியாகச் சென்று பைசல் செய்யுங்கள். செய்யும் வர்த்தகத்தில் வளர்ச்சி ஏற்படும். புதிய ஒப்பந்தங்களில் நிதானம் தேவை. அரசுத்துறையில் இருப்போர்க்கு எதிர்பார்த்த இடமாற்றம், பதவி, ஊதிய உயர்வுகள் கிட்டும் அறிகுறிகள் தெரியத்தொடங்கும்.

அரசியலில் இருப்போர் நாவடக்கத்தால் நல்ல பெயர் வாங்கலாம். பொது இடத்தில் நிதானம் முக்கியம். கலைஞர்கள், படைப்பாளிகள் படைப்பு சார்ந்த ரகசியங்களைப் பிறரிடம் பகிராமல் இருப்பது நல்லது. மாணவர்கள் அதிகாலைப் படிப்பை வழக்கமாக்குவது நல்லது. இரவுப் பயணத்தை இயன்றவரை தவிருங்கள். கண்கள், முதுகு, அலர்ஜி உபாதைகள் வரலாம். மகாலக்ஷ்மி வழிபாடு, மகிழ்ச்சி சேர்க்கும்.

கடகம்: உயர்வுகளுக்கு உத்தரவாதம் கிட்டக் கூடிய காலகட்டம்.. அலுவலகத்தில் திறமைக்கு ஏற்ப உயர்வுகள் வரும். பொறுப்புகளை திட்டமிட்டு நேரடி கவனத்துடன் செய்வது நல்லது. மேலிடத்தால் பாராட்டப்படுவீர்கள். புதிய பணி தேடுவோர்க்கு வாய்ப்புகள் தேடி வரும்.  குடும்பத்தில் குழப்ப சூழல் மறையும். வாழ்க்கைத் துணையுடன் அன்யோன்யம் உருவாகும். வாரிசுகள் விஷயத்தில் வீண் கண்டிப்பு வேண்டாம். உறவுகளிடையே உங்கள் செல்வாக்கு உயரும். செய்யும் தொழிலில் சீரான வளர்ச்சி ஏற்படும். அதில் நேரான கவனமும் நேர்மையும் இருந்தால் நன்மைகள் தொடர்ச்சியாகும்.
அரசுத் துறையில் இருப்பவர்கள் கையெழுத்து இடும் சமயங்களில் கவனமாக இருப்பது முக்கியம். கோப்புகளை பத்திரமாக வைத்துக்கொள்ளுங்கள். அரசியல் சார்ந்தவர்கள் யாருக்கும் வாக்குறுதிகள் தரவேண்டாம். மேலிடத்திடம் வீண் ரோஷமும் கூடாது. கலைஞர்கள், படைப்பாளிகள் முயற்சிக்கு ஏற்ப வாய்ப்புகளைப் பெறுவீர்கள். மாணவர்கள் சகவாச தோஷத்தை உடனே உதறுங்கள். இரவில் அதிக நேரம் விழித்திருக்க வேண்டாம்.கழுத்து, மூட்டு, பல் உபாதைகள் வரலாம். அனுமன் வழிபாடு, ஆனந்தம் சேர்க்கும்.

சிம்மம்:பொறுமையுடன் செயல்பட்டால், பெருமைகள் கூடும் காலகட்டம். பணியிடத்தில் உங்கள் திறமை உரியவர்களால் உணரப்படும். உடனிருப்போர் ஆதரவு கிடைக்கும். பலகாலக் கனவுகள் கைகூடி வரும் அறிகுறிகள் தெரியும். தேவையற்ற படபடப்பு தவிர்ப்பது நல்லது. வீட்டில் சுபகாரியங்கள் கைகூடிவரும். பெற்றோர் பெரியோர் உடல்நலம் சீராகும். உறவுகள் வருகையும் அதனால் ஆதாயமும் ஏற்படும். யாரிடமும் வீண் கடுமை வேண்டாம். வாழ்க்கைத் துணையிடம் விட்டுக்கொடுத்துச் செல்லுங்கள். செய்யும் தொழிலில் வளர்ச்சிப்பாதை தெரியத்தொடங்கும்.
கூட்டுத் தொழிலில் வீண் சந்தேகம் தவிருங்கள். அரசுத்துறையில் இருப்பவர்கள்  அவசரம் அலட்சியம் தவிர்ப்பது அவசியம். அரசியலில் இருப்பவர்கள் யாருக்கும் ஜவாப், ஜாமீன் தரவேண்டாம். அனுபவம் மிக்கவர்களிடம் சர்ச்சை தவிருங்கள். கலைஞர்கள், படைப்பாளிகளுக்கு வாய்ப்புகள் தொடர்ச்சியாக வரும். மாணவர்கள்  பெற்றோர் ஆசிரியர் வழிகாட்டலை அவசியம் கேளுங்கள். வாகனத்தில் வேகம் வேண்டவே வேண்டாம். இடுப்பு, காது, மூக்கு, தொண்டை உபாதைகள் வரலாம். சிவன் வழிபாடு சிறப்பான நன்மை தரும்.
கன்னி: சிந்தித்து செயல்பட்டால், சீரான நன்மைகள் ஏற்படக் கூடிய காலகட்டம். அலுவலகத்தில் எதிர்பார்த்த பதவி, ஊதிய உயர்வுகள் வந்துசேரும். அனுபவம் மிக்கவர்கள் ஆலோசனைகளை அவசியம் கேளுங்கள். கையெழுத்திடும் சமயங்களில் கவனமாக இருங்கள். வீட்டில் விசேஷங்கள் வரத்தொடங்கும். விட்டுக்கொடுத்துப் போனால் நிம்மதி நிரந்தரமாகும். வாரிசுகள் வாழ்வில் சுபகாரியங்கள் கைகூடி வரும். பெற்றோர், பெரியோர் உடல்நலத்தில் கவனம் செலுத்துவது நல்லது. செய்யும் தொழிலில் நேரடி கவனமும் முயற்சிகளும் முக்கியம். பிறரை நம்பி பெரும் முதலீடுகள் செய்ய வேண்டாம். அரசுத்துறையில் இருப்பவர்கள் சீரான வளர்ச்சியைப் பெறுவீர்கள்.
எதிர்பாலரிடம் எச்சரிக்கையாகப் பழகுங்கள். அரசியலில் இருப்பவர்களுக்கு ஆதரவு நிலைக்கும். புறம்பேசும் நபர்களைப் புறம் தள்ளுங்கள். கலைஞர்கள், படைப்பாளிகள் அரசு வழிப் பாராட்டு பரிசுகள் பெற வாய்ப்பு உண்டு. செல்லும் இடத்தின் சட்டதிட்டங்களை கவனமாகக் கடைபிடியுங்கள். மாணவர்கள் இரவில் நெடுநேரம் விழித்திருக்க வேண்டாம். வாகனப் பழுதை உடனுக்குடன் சீர் செய்யுங்கள். மன அழுத்தம், நரம்பு, தலைவலி உபாதைகள் வரலாம். விநாயகர் வழிபாடு, விசேஷ நன்மை தரும்.

துலாம்: திட்டமிட்டு செயல்பட்டால் தித்திக்கும் காலகட்டம். பணியிடத்தில் திறமைக்கு உரிய உயர்வுகள் நிச்சயம் வரும்.  அதேசமயம், யாருடைய தனிப்பட்ட விஷயத்திலும் நீங்கள் தலையிட வேண்டாம். இப்போதைய உழைப்பே எதிர்கால ஏற்றமாகும். குடும்பத்தில் நிம்மதி நிலைக்கும். வாழ்க்கைத்துணையுடன் மனம்விட்டுப் பேசுங்கள். பெரியோர் ஆலோசனைகளை அவசியம் கேளுங்கள். வாரிசுகள் விஷயத்தில் வீண் கண்டிப்பு வேண்டாம். ஆடை, ஆபரணம் சேரும்.அநாவசிய செலவுகளைத் தவிருங்கள். சகோதர உறவுகளால் ஆதாயம் உண்டு. செய்யும் தொழிலில் வளர்ச்சி தொடர்ச்சியாகும். புதிய அறிமுகங்களை நம்பி பெரிய முதலீடுகள் வேண்டாம்.

அரசுத்துறையில் உள்ளவர்களுக்கு ஏற்றங்கள் தொடர்ச்சியாகும். தேவையற்ற சகவாசத்தை உடனடியாக உதறுவது நல்லது. அரசியலில் உள்ளவர்கள் மேலிடத்திடம் வீண் ரோஷப்பட வேண்டாம். வாக்குறுதி எதுவும் தரும் முன் ஒரு முறைக்கு இருமுறை யோசியுங்கள். கலைஞர்கள், படைப்பாளிகளுக்கு அமோகமான காலகட்டம். சிறிய வாய்ப்பானாலும் சின்சியராகச் செய்யுங்கள். மாணவர்கள் சோம்பலுக்கு இடம்தரவேண்டாம். இரவு நேரப் பயணத்தில் இடைவழியில் இறங்குவதைத் தவிருங்கள். ஒற்றைத் தலைவலி, நரம்பு, மூட்டு உபாதைகள் வரலாம். துர்க்கை வழிபாடு வாழ்வைத் துளிர்க்கச் செய்யும்.

விருச்சிகம்: ஏற்றமும் மாற்றமும் வரக்கூடிய காலகட்டம். பணியிடத்தில் உங்கள் செல்வாக்கு உயரும். மேலதிகாரிகள் பாராட்டு கிட்டும். உடனிருப்போருடன் உரசல் தவிருங்கள். சிலருக்கு எதிர்பாரா இடமாற்றம் வரலாம். இல்லத்தில் இனிமை இடம்பிடிக்கும். உங்கள் வாக்கில் இனிமை இருந்தால், அது நிலைக்கும். உறவுகள் மத்தியில் செல்வாக்கு உயரும். சுப நிகழ்ச்சிகளில் முன் நின்று நடத்துவீர்கள். அசையும் அசையா சொத்து சேரும். செய்யும் தொழிலில் சேதாரம் குறைந்து ஆதாயம் அதிகரிக்கும். அயல்நாட்டு வர்த்தகத்தில் நேரடி கவனம் முக்கியம். அரசுத்துறையில் இருப்போர்க்கு ஆதாயங்கள் அதிகரிக்கும்.

மேலிடத்தின் ஆதரவால் உயர்வுகளுக்கு உத்தரவாதம் கிடைக்கும். அரசியலில் இருப்போர் திட்டமிட்டுச் செயல்படுவது நல்லது. சிலருக்கு பதவி, பொறுப்பு மாற்றங்கள் வரலாம். கலைஞர்கள், படைப்பாளிகள் உழைப்புக்கு ஏற்ற உயர்வினைப் பெறுவீர்கள். புதிய நட்புகளிடம் அதிக நெருக்கம் வேண்டாம். மாணவர்களுக்கு மதிப்பு மதிப்பெண் உயரும். பயணத்தில் உடைமைகள் பத்திரம். வயிறு, பல், சளித்தொந்தரவு உபாதைகள் வரலாம். பிள்ளையார் வழிபாடு வாழ்வை பிரகாசிக்கச் செய்யும்.

தனுசு: தன்னம்பிக்கை அதிகரிக்கும் காலகட்டம். அதைத் தலைகனம் ஆக்காதவரை உயர்வுகள் தொடரும். அலுவலகத்தில் உங்கள் திறமை உரியவர்களால் உணரப்படும். வீண்  தர்க்கமும் வேண்டாத வாக்குறுதியும் யாரிடமும் வேண்டாம். மேலதிகாரிகள் தரும் பொறுப்பை நேரடி கவனத்துடன் செய்யுங்கள். எதிர்பாராத மாற்றம் வந்தால் தவிர்க்க வேண்டாம். குடும்பத்தில் ஒற்றுமை உருவாகும். வாழ்க்கைத் துணையுடன் வசந்தம் வீசும். சிலருக்கு புதிய வாழ்க்கை அமைவதற்கான அறிகுறிகள் தெரியும். குடும்பத்துப் பெரியவர்கள் உடல்நலனில் முன்னேற்றம் உருவாகும். குழந்தைகளால் பெருமை உண்டு. வரவு அதிகரித்தாலும் செலவுகளும் சேர்ந்து வரும். செய்யும் தொழிலில் முன்னேற்றம் உண்டாகும். அயல்நாட்டு வர்த்தகத்தில் சட்ட நடைமுறைகளில் கவனம் தேவை.

அரசுத்துறையில் உள்ளோர் நிதானத்தைக் கடைபிடிப்பது நல்லது. சிலருக்கு வெளியூர், வெளிநாட்டுப் பயண வாய்ப்பு தடைபடலாம். அது நன்மைக்கே. அரசியலில் உள்ளோர் மேலிடத்தின் ஆதரவைப் பெறுவீர்கள். முகமூடி நட்புகளிடம் இருந்து விலகி இருப்பது நல்லது. கலைஞர்கள், படைப்பாளிகளுக்கு வாய்ப்புகள் தொடர்ச்சியாக வரும். எதிர்பாலரிடம் எல்லை வகுத்துப் பழகுங்கள். மாணவர்கள் மறதியைத் தொலைப்பது முக்கியம்.  வாகனத்தில் வேகம் கூடாது. ரத்த அழுத்த மாற்றம், பரம்பரை நோய் உபாதைகள், ஒற்றைத் தலைவலி வரலாம்.  பழநி முருகன் வழிபாடு பலவிதத்திலும் நன்மை தரும்.
மகரம்: மேன்மைகள் அதிகரிக்கக் கூடிய காலகட்டம். பணியிடத்தில் எதிர்பார்த்த மாற்றமும் ஏற்றமும் கைகூடி வரும். அனுபவம் மிக்கவர்கள் ஆதரவு உயர்வுகளுக்கு உத்தரவாதமாகும். மேலதிகாரிகளால் உங்கள் திறமை உணரப்படும். சிலருக்கு அயல்நாடு செல்லும் வாய்ப்பு வரலாம். வீட்டில் நிம்மதி நிலவத்தொடங்கும். உங்கள் வாக்கில் நிதானம் இருந்தால், அது நிலைக்கும். வாரிசுகளால் பெருமை பெறுவீர்கள். வாழ்க்கைத் துணையுடன் அன்யோன்யம் அதிகரிக்கும். வாரிசுகளால் பெருமை சேரும். உறவுகளிடையே உங்கள் செல்வாக்கு உயரும்.தரல் பெறலை நேரடியாகச் செய்யுங்கள். செய்யும் தொழிலில் வளர்ச்சி நிலையாகும்.
அயல்நாட்டு வர்த்தகம் லாபம் தரும். அரசியல் துறையில் உள்ளோர் திடீர் பதவி, பாராட்டுகளைப் பெற வாய்ப்பு உண்டு. மேலிடத்துக்கு எதிரான வார்த்தைகளை கனவிலும் பேச வேண்டாம். அரசியல் துறையினருக்கு செல்வாக்கு அதிகரிக்கும். உடனிருப்போர் தனிப்பட்ட விஷயங்களில் நீங்கள் தலையிட வேண்டாம். கலைஞர்கள், படைப்பாளிகளுக்கு வாய்ப்புகள் தேடி வரும். மாணவர்கள் எதிர்கால ஏற்றத்திற்கான அஸ்திவாரம் இட இப்போது வாய்ப்பு அமையலாம். வாகனத்தில் கவனச் சிதறல் கூடாது. அடிவயிறு, முதுகு, கழிவு உறுப்பு உபாதைகள் வரலாம். மாருதி வழிபாடு, மங்களங்கள் 
கும்பம்:பொறுப்புடன் செயல்பட்டால் பெருமைகள் நிலைக்கும் காலகட்டம். அலுவலகத்தில் உங்கள் திறமைக்கு ஏற்ற உயர்வுகள் நிச்சயம் வரும். உயரதிகாரிகளிடம் வீண் உரசல் வேண்டாம். உடனிருப்போர் ஆதரவு மகிழ்ச்சி தரும். இடமாற்றம், பதவி மாற்றத்தில் பொறுமை முக்கியம். பொறுப்புகள் எதையும் தட்டிக்கழிக்க வேண்டாம். வீட்டில் விட்டுக்கொடுத்தல் முக்கியம். வாழ்க்கைத் துணை உடல்நலத்தில் கவனம் செலுத்துங்கள். சுபகாரியங்கள் கைகூடி வரும். வாரிகள் விஷயத்தில் வீண் கண்டிப்பு வேண்டாம். ஆடை, ஆபரணம் சேரும். பூர்வீக சொத்துகளில் பிடிவாதம் வேண்டாம். செய்யும் தொழிலில் உயர்வுகளுக்கு உத்தரவாதம் கிட்டும்.

பங்குவர்த்தகம், ரியல் எஸ்டேட்டில் பெரும் முதலீடுகள் வேண்டாம். அரசியல் துறையில் இருப்போர் சிலருக்கு பதவி, பொறுப்புகள் மாறலாம். வீண் ரோஷத்தால் அதைத் தவிர்க்க வேண்டாம். எதிர்காலம் நிச்சயம் ஏற்றமாகும். அரசுத்துறையினர் கவனமாகச் செயல்படுவது நல்லது. கோப்புகளில் கையெழுத்திடும் முன் கவனமாகப் படியுங்கள். கலைஞர்கள், படைப்பாளிகள் முயற்சிகளால் முன்னேறலாம். அயல்நாட்டு வாய்ப்பில் உடன் வருவோரிடம் கவனமாகப் பழகுங்கள். மாணவர்கள் மனம்போல உயர்வுகள் வரும். வாகனத்தை ஓட்டுவதில் வித்தைகாட்டல் கூடாது. கழுத்து, முதுகு, அடிவயிறு, தோல் உபாதைகள் வரலாம். ஏழுமலையான் வழிபாடு, ஏற்றம் தரும்.

மீனம்: முயற்சிகள் பலன் தரக்கூடிய காலகட்டம். பணியிடத்தில்  திட்டமிடலும் நேரம் தவறாமையும் முக்கியம். எந்த சமயத்திலும் வீண் ரோஷம் வேண்டாம்.  மேலதிகாரிகளிடம்  தர்க்கம்  தவிருங்கள். யாருடைய குறையையும் விமர்சிப்பது கூடவே கூடாது. பொறுப்புகள் அதிகரித்தாலும் புலம்பாமல் ஏற்பது நல்லது. குடும்பத்தில் சீரான போக்கு நிலவும். வாழ்க்கைத் துணை உடல்நலத்தில் கவனம் செலுத்துங்கள். பெற்றோர் பெரியோர் வார்த்தைகளைக் கேட்டால் சுபகாரியத் தடைகள் நீங்கும். கர்ப்பிணிகள் கவனமாக இருப்பது நல்லது. பணவரவை சேமிக்கப் பழகுங்கள். யாருக்கும் வாக்குறுதி தரும் முன் யோசியுங்கள். செய்யும் தொழிலில் வளர்ச்சி தொடர்ச்சியாகும். தேவையற்ற வர்த்தகக் கடன்களைத் தவிருங்கள். அரசுத்துறையில் உள்ளோர் அடக்கமான செயல்களால் முன்னேறலாம்.
ஓம் நமசிவாய
 படித்து பகிர்ந்தது 
இரா இளங்கோவன்
 நெல்லிக்குப்பம். 

காலுக்குக் கொலுசு கேட்ட திலலிதாம்பிகை திருமீயச்சூர்

*காலுக்குக் கொலுசு கேட்ட லலிதாம்பிகை*
                                      
லலிதாம்பிகை தனது காலுக்குக் கொலுசு அணிவிக்கப்பட வேண்டும் என அன்னை விரும்பினாள்.  

திருமீயச்சூர் தலத்தில் அமர்ந்து அருளாட்சி நடத்தி வரும் அன்னை லலிதாம்பிகைக்கு இங்குள்ள அர்ச்சகர்கள் கால் கொலுசு தவிர அனைத்து வகை ஆபரணங்களையும் அணிவித்து வந்தார்கள். 

தனது காலுக்குக் கொலுசு அணிவிக்கப்பட வேண்டும் என அன்னை விரும்பினாள்.

பெங்களூரில் மைதிலி ராஜகோபாலாச்சாரி என்பவர் தினமும் காலையில் எழுந்து ஸ்நானம் செய்து, லலிதா சகஸ்ரநாமத்தை பாராயணம் செய்த பிறகுதான் தனது மற்ற அன்றாடப் பணிகளைத் தொடங்குவார். 

அவர் இதனைத் தனது அன்றாடக் கடமையாக மிகுந்த பக்தி சிரத்தையுடன் செய்து வந்தார்.

1999-ம் வருடம் நவம்பர் மாதத்தில் ஒரு நாள் இரவில் அவருடைய கனவில் அம்பிகை வடிவில் ஓர் உருவம் தோன்றி, எல்லா ஆபரணங்களும் எனக்கு உள்ளது. 
ஆனால் காலுக்கு அணிந்து கொள்ள கொலுசு இல்லை. அதனை நீதான் எனக்கு செய்து போட வேண்டும் எனக் கட்டளையிட்டு மறைந்தது.

திடீரென விழித்தெழுந்த அவ்வம்மையார், தனது கனவில் வந்து காட்சியளித்து கட்டளையிட்டுச் சென்ற அம்பாய் யார், ஏன் என்னிடம் வந்து கேட்க வேண்டும் எனக் குழப்பமடைந்தார்.

மிகுந்த ஆசாரமுள்ள வைணவக் குடும்பத்தைச் சேர்ந்த அப்பெண்மணி தனது கனவில் வந்து காட்சியளித்துத் தனக்கு ஆணையிட்டுச் சென்ற அம்பாளைப் பற்றி பலரிடமும் விசாரித்தார். 

யாரும் தெளிவாகச் சொல்லவில்லை.

பின்னர் வைணவத் தலங்களான திருப்பதி, ஸ்ரீரங்கம் முதலிய இடங்களுக்குச் சென்று அங்குள்ள சன்னதியில் வீற்றிருக்கும் பத்மாவதி தாயார். ரங்கநாயகி தாயார் ஆகியோரைக் கண்டார். 

ஆனால் தனது கனவில் வந்த அம்பிகையின் உருவத்திற்கு ஒத்த உருவமாக அவருக்கு ஏதும் புலப்படவில்லை.

இந்த நிலையில் யதேச்சையாக ஆன்மீக மாத இதழ் ஒன்றை அவர் பார்க்க நேரிட்டது. அப்புத்தகத்தின் அட்டைப் படமாக லலிதாம்பிகையின் உருவம் அச்சிடப்பட்டிருந்தது.

அதைக் கண்ட மாத்திரத்தில் அப்பெண்மணி மிக்க ஆச்சரியம் அடைந்து தனது கனவில் வந்து, கட்டளையிட்ட அம்பிகை திருமீயச்சூரில் குடி கொண்டிருக்கும் லலிதாம்பிகை என அறிந்தார்.

தினமும் லலிதா சகஸ்ரநாமத்தைப் பாராயணம் செய்ததன் பயன் இது என உணர்ந்து மிக்க பரவசம் அடைந்தார்.

திருமீயச்சூருக்கு வந்து லலிதாம்பிகைக்கு கொலுசு அணிவிக்க விரும்பிய அப்பெண்மணி உடனடியாக அக்கோவிலின் அர்ச்சகர்களைத் தொடர்பு கொண்டார். 

தனது கனவில் அம்பாள் வந்து கொலுசு கேட்ட விவரத்தையும் அதை அணிவிக்க தான் திருமீயச்சூருக்கு வருவதாகவும் கடிதம் எழுதினார்.

ஆனால் ஆலய அர்ச்சகர்களோ, நாங்கள் பரம்பரை பரம்பரையாக இந்த அம்பிகையைத் தொட்டு அபிஷேகம் செய்து பூஜை நடத்துகிறவர்கள். 

கொலுசு அணிவிக்கும் வசதி அம்பிகையின் கால்களில் இல்லை என மறுத்துவிட்டனர்.

ஆனால் அந்தப் பெண்ணோ கொலுசு, அணிவிக்கும் வசதி இல்லையென்றால் எனது கனவில் வந்து கொலுசு அணிவிக்கச் சொல்லி ஆணையிட வேண்டிய அவசியம் என்ன? என்று தனது முடிவில் உறுதியுடன் மீண்டும் அர்ச்சகர்களை வற்புறுத்தினார்.

அதன்பிறகு அர்ச்சகர்கள் லலிதாம்பிகையின் கால்களில் மிகுந்த கவனத்துடன் தேடுகையில்தான் அந்த அதிசயத்தை உணர்ந்தனர். 

அம்பிகையின் கணுக்காலின் அருகே அழுத்தம் ஏற்பட்டிருந்தது. அந்த இடத்தை நன்கு அழுத்திப் பார்த்தால் முக்கால் அங்குலத்தில் துவாரம் இருப்பதைக் கண்டனர்.

ஆண்டுக் கணக்கில் அம்பாளுக்கு அபிஷேகம் செய்ததில் அபிஷேகப் பொருட்கள் அத்துவாரத்தை அடைத்து விட்டிருந்தனர். 

பின்னர் மைதிலி தான் கொண்டு வந்த கொலுசினை லலிதாம்பிகைக்கு அணிவித்துப் பேரானந்தம் அடைந்து அம்பாள் தனக்கு இட்ட கட்டளையை நிறைவேற்றினார். 
                                  -  வேலாயுதம் செ 
அன்றைய தினத்திலிருந்து அனுதினமும் பக்தர்கள் லலதாம்பிகைக்குக் கொலுசு அணிவித்துத் தங்களுடைய பிரார்த்தனையைச் செலுத்தி வருகிறார்கள்.

ஆதிபராசக்தியான லலிதாம்பிகை இங்கு ஸ்ரீசக்ர பீடத்தில் ராஜ சிம்மாசனத்தில் அமர்ந்து அபய, வரத ஹஸ்த முத்திரையுடன் அருளாட்சி நடத்தி வருகிறாள்.
ஓம் நமசிவாய
 படித்து பகிர்ந்தது 
இரா இளங்கோவன் 
நெல்லிக்குப்பம். 

Thursday, May 21, 2026

இழந்த செல்வத்தை மீட்டுத் தரும் திருமுருகன்பூண்டி

இழந்த செல்வத்தை மீட்டுத் தரும் திருமுருகன்பூண்டி திருமுருகநாதர்!
பக்திக்கும் இறைவனுக்கும் உள்ள அழகான பிணைப்பை விளக்கும் ஒரு தலம் உண்டென்றால், அது திருப்பூர் அருகே உள்ள திருமுருகன்பூண்டி திருமுருகநாதர் திருக்கோயில். தேவாரப் பாடல் பெற்ற கொங்கு நாட்டுத் தலங்களில் இது மிக முக்கியமான தளம்.

வரலாறும் சிறப்பும்: 

சிவபெருமானின் 'வேடுபறி' திருவிளையாடல்
இந்தக் கோயிலின் வரலாறு மிகவும் சுவாரஸ்யமானது. நாயன்மார்களில் ஒருவரான சுந்தரர், சேரமான் பெருமாளிடம் பொன்னும் பொருளும் பெற்றுக்கொண்டு இவ்வழியே சென்றார். சுந்தரரின் பாடலில் மகிழ்ந்த சிவபெருமான், அவரோடு ஒரு திருவிளையாடல் புரிய எண்ணினார்.

தன் பூதகணங்களை வேடுவர் வடிவில் அனுப்பி, சுந்தரரிடம் இருந்த செல்வங்களை அபகரிக்கச் செய்தார். மனம் நொந்த சுந்தரர், இக்கோயில் இறைவனிடம், "எத்துக்கு இங்கிருந்தீர் எம்பெருமானீரே!" (பொருளைப் பறி கொடுக்கவிட்டு இங்கு ஏன் இருக்கிறீர்கள்?) என்று கோபமாகவும் உருக்கமாகவும் பாடினார். அவர் பக்தியில் மகிழ்ந்த இறைவன், பறிபோன பொருட்கள் அனைத்தையும் மீண்டும் அவரிடமே ஒப்படைத்தார்.

பலன்: 

இழந்த சொத்துக்கள், செல்வம் மற்றும் பதவிகளை மீண்டும் பெற விரும்புவோர் வழிபட வேண்டிய மிகச்சிறந்த தலம் இது.
கோயிலின் முக்கிய சிறப்பம்சங்கள்:
முருகன் வழிபட்ட தலம்: சூரபத்மனை வதம் செய்த தோஷம் நீங்க, முருகப்பெருமான் இங்கு சிவலிங்கத்தை பிரதிஷ்டை செய்து வழிபட்டார். அதனாலேயே இத்தலம் 'திருமுருகன்பூண்டி' என அழைக்கப்படுகிறது.

மேற்கு நோக்கிய சன்னதி: பொதுவாகக் கோயில்கள் கிழக்கு நோக்கி இருக்கும், ஆனால் இங்கு சுவாமியும் அம்பாளும் மேற்கு நோக்கி எழுந்தருளி அருள் பாலிக்கின்றனர்.

மன நிம்மதி தரும் தீர்த்தம்: 

இங்குள்ள 'பிரம்ம தீர்த்தம்' மிகவும் விசேஷமானது. மனக்குழப்பம், சித்த பிரம்மை மற்றும் தீராத மனக்கவலைகளால் அவதிப்படுபவர்கள் இந்த தீர்த்தத்தில் நீராடி இறைவனை வேண்டினால் உடனடி பலன் கிடைக்கும் என்பது ஐதீகம்.
சிற்பக்கலை அதிசயம்: சோழர் மற்றும் பாண்டியர் காலத்துக் கட்டிடக்கலைக்குச் சான்றாக இக்கோயில் திகழ்கிறது. குறிப்பாக 16 கால் மண்டபமும், நந்தி தேவர் சிலையும் காண்போரை வியக்க வைக்கும்.

வழிபட வேண்டிய நேரம்:
காலை 5:30 மணி முதல் 12:45 மணி வரை.

மாலை 3:30 மணி முதல் இரவு 8:15 மணி வரை.

அமைவிடம்:


திருப்பூர் - அவினாசி சாலையில், திருப்பூரில் இருந்து சுமார் 7 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது.

உங்கள் வாழ்வில் இழந்த சந்தோஷமும், செல்வமும் மீண்டும் கிடைக்க ஒருமுறை இந்தத் திருத்தலத்திற்குச் சென்று வாருங்கள்!

 ஓம் நமச்சிவாய!
படித்து பகிர்ந்தது 
இரா இளங்கோவன் 
நெல்லிக்குப்பம். 

Followers

திருவலஞ்சுழி கபர்தீஸ்வரர் (சடைமுடிநாதர்) உலகப் புகழ்பெற்ற வெள்ளை விநாயகர்.

கும்பகோணம் அருகே சுவாமிமலைக்கு மிக அருகில் அமைந்துள்ள திருவலஞ்சுழி கபர்தீஸ்வரர் (சடைமுடிநாதர்) திருக்கோவில் வளாகத்தில் தான் இந்...