Friday, February 6, 2026

முருகன் கையில் வேலும் சேவற்கொடியும் இருக்கக் காரணம்.

முருகன் கையில் வேலும் சேவற்கொடியும் இருக்கக் காரணம் என்ன?
கையில் வேலைத் தாங்கியிருப்பதாலேயே வேலன்.மிருகங்களை வேட்டையாடுவதற்குப் பயன்படுத்தும் வேலினையே வேலன் தாங்கியுள்ளான். அதே போன்று தடி (தண்டு) போன்ற ஆயுதத்தைத் தாங்கியிருப்பதால் தண்டாயுதபாணி எனவும் அழைக்கப்படுவான்.

சரி, முருகனின் ஊர்தி எது தெரியுமா? முருகனின் ஊர்தி (வாகனம் என்பது வடமொழிச் சொல்) எது என்றால் மயில் என்றே பலரும் கூறுவார்கள்; ஆனால் தமிழிலக்கியங்களின் படி அது உண்மையன்று. பெருமளவான சைவர்கள் கூறுவது முருகன் வாலிபனாக சூரனுடன் போரிட்டு, அவனைக்கொன்று மயில் வாகனமும் (தமிழில் ஊர்தி) சேவலைக் கொடியும் ஆக்கினான் என்ற கந்தபுராண விளக்கமே. இவர்களிடம் அவ்வாறாயின் எவ்வாறு முருகன் குழந்தையாகவிருக்கும்போதே பிள்ளையாருடன் மாம்பழத்திற்குச் சண்டையிடும்போது மயிலேறி உலகம் சுற்றினார்? எனக் கேட்டால் பதிலில்லை { புராணத்தில் முருகன் சூரனுடன் சண்டைக்கு முன்னர் இடம்பெற்றதாக மாம்பழச் சண்டைக்கதை உள்ளது]. இந்துமதத்தை ஒரே மதமாகப் பார்த்தால் மயில் ஊர்தி கதை இரு வேறு வகையாக மகாபாரதத்தில் சொல்லப்படுகின்றது.👇
👉1. மகாபாரதத்தின் சல்ய பருவத்தின்படி அக்கினி கோழியையும், இந்திரன் மயிலையும் கொடுத்ததாகக் கூறப்படுகின்றது.
👉2. மகாபாரதத்தின் இன்னொரு இடத்தில் கருடன் மயிலைக் கொடுத்தாகவும் உள்ளது.

👉இந்து மதத்தின் விட்டுணு புராணத்தில் (Vishnu Purana) விட்டுணுவே முருகனிற்கு மயிலையும் சேவலையும் கொடுத்ததாகவும் உள்ளது.
பார்த்தீர்களா! 🧐ஒரு மயிலிற்கு ஒரே மதத்தில் எத்தனை கதைகள் என்று! இதைத்தான் `ஒரு உண்மையினை மறைக்கப் பொய் சொல்ல வெளிக்கிட்டால் பல பொய்கள் சொல்ல வேண்டிவரும்` என்பார்கள்.
👉👇சரி, புராணங்களை விடுவோம். தமிழிற்கு வருவோம். அதற்கு தமிழில் முருகன் ஒரு எல்லா ஆற்றலுமுடைய கடவுள் (supreme god )அல்ல, மாறாக குறிஞ்சி நிலத் தலைவன் என்பதனையும், சமற்கிரத சுப்பிரமணியன்- தமிழ் முருகன் வேறுபாட்டையும் அறிந்திருக்கவேண்டும்.


இப்போது சங்க இலக்கியங்கள் சிலவற்றினைப் பார்ப்போம்.
👇👇👇
`சூருடை முழு முதல் தடிந்த பேர் இசை,
கடுஞ் சின விறல் வேள் களிறு ஊர்ந்தாங்கு`
(பதிற்றுப்பத்து 11-5-6)
👆👆👆
மேலுள்ள பாடலில் நெடுஞ்சேரலாதன் அரசனை குறிஞ்சி நிலத் தலைவன் முருகனுடன் (வேள்) ஒப்பிடப்படும் பாடலில் முருகனின் ஊர்தியாக யானை (களிறு) குறிப்பிடப்படுகின்றது.

அடுத்து ஒரு புறநானூற்றுப் பாடல் ஒன்றினைப் பார்ப்போம்.
👇👇👇
`பனைக் கொடியோனும், மண்ணுறு திருமணி
புரையும் மேனி விண் உயர் புட்கொடி
விறல்வெய்யோனும், மணிமயில் உயரிய மாறா
வென்றிப் பிணி முக உணர்தி ஒண் செய்யோனும்.’
-புறம் : 56 : 1.8
👆👆👆
இப் பாடலில் மயிலைக் கொடியாகவும், யானை (பிணி முக) ஊர்தியாகவும் முருகன் கொண்டுள்ளார். இப் பாடலிற்கு சிலர் பிணிமுகம் என்பதற்கு மயில் எனச் சிலர் பொருள் கூறியுள்ளபோதும், பிணிமுகம் என்பது யானையினையும் குறிக்கும்.


மேற்கூறிய பாடலில் மயிலே கொடியாகவும், மயிலே ஊர்தியாகவும் வருவது பொருத்தமில்லை என்பதாலும், பிற சங்கப் பாடல்களில் யானையே ஊர்தியாகக் கொள்ளப்படுவதாலும் நான் இப் பாடலில் வரும் `பிணிமுகம்` என்பதனை யானை என்றே துணி கின்ற

👉👆எனவே தமிழிலக்கியங்களில் யானை தான் குறிஞ்சி நிலத் தலைவனின் ஊர்தியாகக் குறிப்பிடப்படுவதனைத் தெளிவாக காணலாம். யானைப் படை என்று ஒன்றே சில நூற்றூண்டுகளிற்கு முன்னர்வரைக் காணப்பட்டமையால் இது அறிவிற்கும் பொருத்தமானது. மறுபுறத்தே மயிலிற்கு மேல் ஏறியிருந்தால் மயிலே சுமையினைத் தாங்குமா?
அவ்வாறாயின் எவ்வாறு மயில் பிற்காலத்தில் ஊர்தியாகியது? என்ற கேள்வி எழலாம். எல்லாம் பார்ப்பனியத் திணிப்பே. இது குப்தர் காலத்தில் தமிழ் இயற்கைசார் முருகனையும் வடமொழி புராண ஸ்கந்தனையும் இணைத்தபோது நடாத்திய திருவிளையாடல்.

#சேவல்_கொடி
சேவல்தானே கொடி என்கின்றீர்களா? கோழியினை கொடியாக திருமுருகாற்றுப்படை கூறுகின்றது.
👇👇👇
கோழியோங்கிய வென்றடு விறற் கொடி
வாழிய பெரிதென் றேத்திப் பலருடன்
சீர்திகழ் சிலம்பகம் சிலம்பப் பாடிச்
சூரரமகளிர் ஆடும் சோலை”
- திருமுருகாற்றுப்படை 38
👆👆👆

பொருள்-{வில்லும் வேலும் ஏந்தி இரவுக் குறியிடத்தில் காதலியைக் காணச் சென்று கொண்டிருந்த வீரனை, மலைச் சாரல்களில் உலவித் திரிந்து அச்சுறுத்திக் கொண்டிருந்த அணங்கும் சூரும் ஆன பெண் தெய்வங்கள், தற்போது திருப்பரங்குன்றத்து மலைச்சாரலில் உள்ள சோலைகளில் தம் அச்சுறுத்தும் ஆற்றலை இழந்து எளிய மானிட மகளிரைப் போல முருகனது சேவற்கொடியை வாழ்த்தியவாறு விளையாடிக் கொண்டிருந் தார்கள்.}

இப் பாடலிலேயே கோழி முருகனின் கொடியாக முதலில் காணக்கிடைக்கின்றது. அத்துடன் முருக வழிபாட்டிற்கு முந்திய பெண் தெய்வ வழிபாட்டினையும், அதனை வெற்றி கொண்டே முருக வழிபாடு தோன்றியது என்பதும் குறிப்பிடப்படுகின்றது. தமிழர்களினதும் முதல் தெய்வங்கள், ஏனைய பழங்குடிகளைப் போன்று பெண் தெய்வங்களே. அது தொல்காப்பிய - சங்க இலக்கியங்களிற்கு முற்பட்டது. {இது பற்றி யாருமே எழுதாமல், மாயன்-சேயோன் என்பதிலிருந்தே தொடங்குவது பெரும்பாலும் ஆண்கள் எழுதுவதாலும், பிற மானிட வரலாற்றாசிரியர்களான கார்ல் மார்க்சு- ஏஙகல்சு போன்றோரின் எழுத்துக்களை உள்வாங்கமையுமே காரணங்கள் என நினைக்கின்றேன்}.

திருமுருகாற்றுப்படைக்கு முன்னரான காலத்தைய புறநானூறு (56), அகநானூறு (149) என்பன மயிலே முருகனின் கொடியாகக் காணப்பட்டது.

👉👆சரி, இந்த மயில் , கோழி எல்லாம் எவ்வாறு முருகனின் கொடியாயிற்று எனப் பார்ப்போம். அறிஞர் வானமலையின் கருத்துப்படி மயில், கோழி என்பன வெவ்வேறு பழங்குடி இனங்களின் குலக்குறிகள். அத்தகைய குடிகளை குறிஞ்சித் தலைவன் வெற்றிகொண்டதன் குறியீடுகளே அந்த மயிலும் கோழியும் என்கின்றார்.
இறுதியாக #வள்ளி கதையினையும் சுருக்கமாகப் பார்த்தால், வள்ளிக்கிழங்கு பயிர்ச்செய்கையில் ஈடுபட்ட வேளாண்மைச் சமூகத்திற்கும், வேட்டுவ குடிகளும் (வேலன்) ஒன்றிணையும் ஒரு நிகழ்வே அதுவாகும்.

ஓம் நமசிவாய 
படித்து பகிர்ந்தது
 இரா இளங்கோவன்
 நெல்லிக்குப்பம். 

Thursday, February 5, 2026

சென்னையில் இருக்கும் ஜீவசமாதிகள்

#சென்னையில்_இருக்கும் #ஜீவசமாதிகளின்_பட்டியல்
திருவொற்றியூர்: பட்டினத்தார்= கடற்கரையை ஒட்டி பட்டினத்தார் கோவில் வீதி.ஆவணி மாதத்தில் வரும் உத்ராடம் நட்சத்திரத்தன்று வருடாந்திர குருபூஜை.

பாடகச்சேரி ராமலிங்கசாமிகள்= பட்டினத்தார் கோவில் வீதியில் இவரது பெயருள்ள மடம்

ஐகோர்ட் சாமி என்ற அப்புடுசாமி= பாடகச்சேரி ராமலிங்க சாமிகள் மடத்துள் இருக்கிறது.

அருள்மிகு யோகீஸ்வரர் சாமி=வடிவுடையம்மன் கோவில் அருகில் தட்சிணாமூர்த்தி ஆலயம் ஸ்தாபித்தவர்.

பரஞ்சோதி மகான்= டோல்கேட் பஸ் ஸ்டாப் அருகில் 4,தங்கம் மாளிகை அருகில்.

ஞானப்பிரகாச சாமிகள்= வடக்கு மாடவீதி 145/30 இல் சிவாமிர்த ஞான ஆசிரமத்தில் பஞ்சலோக சிலை பிரதிஷ்டை.

மவுன குரு சாமிகள்= கடற்கரையோரம் சமாதி கோவில்.

முத்துக்கிருஷ்ண பிரம்மம்=ஆஞ்சநேயர் கோவில் பஸ் ஸ்டாப் அருகில் உள்ள அருணாச்சலேஸ்வரர் கோவில் எதிரே சமாதி; கார்த்திகை மாத சதயம் நட்சத்திரத்தன்று குரு பூஜை;

ஞானசுந்தர பிரம்மம்= முத்துக்கிருஷ்ண பிரம்மம் சமாதி அருகில் ஞான சுந்தர பிரம்மம் சமாதி.சித்திரை மாத உத்திராடம் நட்சத்திரத்தன்று வருடாந்திர குருபூஜை!!

ராயபுரம்:குணங்குடி மஸ்தான் சாயபு= காய்கறி மார்க்கெட் பின்புறம் பிச்சாண்டி தெருவில் உள்ளது.

ஞானமாணிக்கவாசக சிவாச்சாரியார் சித்தர்= மன்னார்சாமி கோவில் தெரு பழைய பாலம் இறக்கத்தில் உள்ள ருத்ர சோமநாதர் கோவிலில் சமாதி .

வியாசர் பாடி:சிவப்பிரகாச சாமி=இரவீஸ்வரர்-மரகதாம்பாள் கோவிலில் சமாதி கோவில்.

கரபாத்திர சிவப்பிரகாச சாமி=1 வது தெரு சாமியார் தோட்டம் அம்பேத்கர் கல்லூரி அருகில்.பங்குனி உத்திராடம் நட்சத்திரத்தன்று வருடாந்திர குருபூஜை!!

பெரம்பூர்:அந்துகுருநாத சுவாமிகள்=மாதவரம் நெடுஞ்சாலை பிரசன்ன விநாயகர் கோவிலில் சமாதி கோவில்-பஞ்சமுக வடிவமும் உள்ளது.

மதனகோபாலசாமி=மேல்பட்டி பொன்னப்பமுதலி தெரு ஈஸ்வரி கல்யாண மண்டபம் எதிரில் சமாதி கோவில்;

சந்திர யோகி சுவாமி=மங்களபுரம் ஐந்துலைட் அருகில்.

வேர்க்கடலை சுவாமி=அய்யாவு தெரு,திரு.வி.க.நகர்.

மதுரை சாமி=செம்பியம் வீனஸ் தியேட்டர் 2 வது குறுக்குத் தெரு வலது பக்கம் மதுரை சாமி மடத்தில்.

மயிலை நடராஜ சுவாமி=கொளத்தூர்- பெரவள்ளூர் செல்லியம்மன் கோவில் பின்புறம்.

ஓட்டேரி:ஆறுமுகச்சாமி=173/77 டிமலஸ் சாலை,பெரம்பூர் பேரக்ஸ் ரோடு-ஓட்டேரி மயானத்தில் சமாதி கோவில்-உருவப்பட பூஜை.

புரசைவாக்கம்: வீரசுப்பையா சுவாமி= புவனேஸ்வரி தியேட்டர் எதிரில்-52,பெரம்பூர் பேரக்ஸ் ரோடு மடத்தில் சமாதி கோவில்.

ஈசூர் சச்சிதானந்த சாமி=கொசப்பேட்டை சச்சிதானந்தா தெரு(வசந்தி தியேட்டர் அருகில்) சமாதி கோவில்.

எழும்பூர்:மோதி பாபா=422,பாந்தியன் சாலை போலீஸ் கமிஷனர் அலுவலகம் எதிரில் தர்கா.

அனந்த ஆனந்த சுவாமி மற்றும் சபாபதி சுவாமி=பாலியம்மன் கோவில் பின்புறம் சாமியார் தோட்டத்தில் இருவரது சாமதி கோவில்-ஐப்பசி திருவாதிரை நட்சத்திரத்தன்று வருடாந்திர குருபூஜை.

நுங்கம்பாக்கம்:கங்காத சுவாமி=ஹாரிங்டன் ரோடு 5 வது அவென்யூ ஜெயவிநாயகர் கோவிலில் சமாதி.

நாதமுனி சாமி=ஹாரிங்டன் ரோடு,பச்சையப்பன் கல்லூரி பின்வாசல் அருகில் நாதமுனி மடத்தில் சமாதி கோவில்.

பன்றிமலை சாமி=5,வில்லேஜ் ரோட்டில் ‘ஓம்நமச்சிவாய’என்ற பெயரில் ஆஸ்ரமத்தில் சமாதி.

ஆதிசேஷானந்தா=நுங்கம்பாக்கம் காவல் நிலையத்தின் பின்புறம் ஆதிசேஷானந்தா கோவிலில் சமாதி.

வீரமாமுனிவர்=நுங்கம்பாக்கம் புஷ்பா நகர் காவல்நிலையம் எதிரில் அசலத்தம்மன் கோவில்.

கோடம்பாக்கம்: ஸ்ரீபரமஹம்ஸ ஓங்கார சாமி=அசோக் நகர்-சாமியார் மடம் டாக்டர் சுப்பராயன் நமர் சாமியர் மடம் ஞானோதய ஆலயம்-ஸ்ரீபரமஹம்ஸ ஓங்கார சாமிபீடம்.

வடபழனி:அண்ணாசாமி,ரத்தினசாமி,பாக்கியலிங்கசாமிகள்=வடபழனி முருகன் கோவில் உருவாக இந்த மூவரும் காரண கர்த்தாக்கள்.இவர்களது சமாதி கோவில் முருகன் கோவில் பின்புறம் நெற்குன்றம் பாதையில் வள்ளி திருமண மண்டபம் அருகில்.

மைலாப்பூர்:திருவள்ளுவர்-வாசுகி அம்மையார்=லஸ் அருகில் திருவள்ளுவர் கோவிலில்.

அப்பர் சாமிகள்=171,ராயப்பேட்டை ஹைரோடு-சமஸ்க்ருத கல்லூரி எதிரில்,மைலாப்பூர் அப்பர் சாமிகள் சமாதி உள்ளது.

குழந்தைவேல் சுவாமி=சித்திரகுளம் எஸ்.டி.பி.கில்டு பில்டிங்கில் இருக்கிறது.

முத்தையா சாமிகள்=குழந்தைவேல் சாமிகள் சீடர்-அவரது சமாதி அருகில்.

ஆலந்தூர்:தாடிக்கார சுவாமி=ஆலந்தூர் ஈ.பி.அலுவலகம் தாடிக்காரசாமி தெரு-பழைய எண்:23-24 இடையே சந்து.உள்ளே தாடிக்கார சாமியின் சிறிய ஜீவ சமாதி கோவில்.சிவலிங்க பிரதிஷ்டை.

குழந்தைவேல பரதேசி=ஆலந்தூர் ஈ.பி.அலுவலகம் பின்புறம் 53,சவுரித்தெரு,எஸ்.ஆர்.மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி வாயிலுக்குக் கீழ்ப்புறம் சமாதி கோவில்.

கிண்டி:சாங்கு சித்தர் சிவலிங்க நாயனார்=எம்.கே.என்.ரோடு 36 ஆம் எண்-சாங்கு சித்தர் சிவலிங்கநாயனார் சமாதி கோவில்-சிவலிங்க பிரதிஷ்டை.இத்துடன் இவரது சீடர்கள் ஸ்ரீகொல்லாபுரி சாமி,ஸ்ரீஏழுமலை சாமிகளின் சமாதி,ஆனி மாத பவுர்ணமியன்று வருடாந்திர குருபூஜை.
சத்யானந்தா கோழீபீ சித்தர்=பஸ் ஸ்டாப் அருகில் உள்ள சாய்பாபா கோவில் வளாகத்தில்.

திருவான்மியூர்:பாம்பன் சுவாமிகள்-கலா சேத்ரா அருகில் திருமட வளாகத்துள் ஸ்ரீபாம்பன் சுவாமிகள் சமாதி ஆலயம்.ஸ்ரீமுருகக்கடவுள் பிரதிஷ்டை.

வால்மீகி=மருந்தீஸ்வரர் கோவில் எதிரில் சிறிய கோவில்.
சர்க்கரை அம்மாள்=75,கலா சேத்ரா ரோடு,

வேளச்சேரி:சிதம்பரச்சாமி என்ற பெரியசாமி=காந்தி சாலை திருப்பம்-1,வேளச்சேரி மெயின் ரோடு-சிவலிங்க பிரதிஷ்டை.

ராஜகீழ்ப்பாக்கம்:சச்சிதானந்த சற்குரு சாமிகள்=அகண்ட பரிபூரண சச்சிதானந்த சபையின் சமாதி.

பெருங்குடி:நாகமணி அடிகளார்=கந்தன் சாவடி பஸ்ஸ்டாப் – நாகமணி அடிகளார் சாலை அம்மன் கோவிலுகுள்.

நங்கநல்லூர்:மோனாம்பிகை-ஞானாம்பிகை- சாதுராம்
இம்மூவரின் சமாதி பிளாட் 21,பொங்கி மடம்(மாடர்ன் உயர்நிலைப் பள்ளி அருகில்)-ஸ்டேட் பாங்க் காலனி

சிட்லப்பாக்கம்:சாயி விபூதி பாவா= 83,முதல் மெயின் ரோடு,ஹெச்.சி.நகர்-சிட்லப்பாக்கம் பாலம் இறக்கத்தில் சமாதி கோவில்-அருகில் குமரன் குன்றம் மலைக்கோவில்.

தாம்பரம்: எதிராஜ ராஜயோகி-ஊரப்பாகம் அருகில் கரணை புதுச்சேரியில் இவரது சமாதி கோவில் இருக்கிறது.

படப்பை:துர்கை சித்தர்-ஜெயதுர்கா பீடம் கோவில்.
பெருங்களத்தூர்: ஸ்ரீமத் சதானந்தசாமி- ஆலம்பாக்கம் சதானந்தபுரம்- பெருங்களத்தூரில் சமாதி கோவில்.ஓம்சிவசக்திஓம்
தமிழ்நாட்டில் இருக்கும் சித்தர்பீடங்கள்,துறவிகளின் ஜீவமாதிகளின் பட்டியல் பகுதி-2
பூமியில்  சித்தர்களின் ஆட்சி துவங்கப் போகிறது;சித்தர்கள் பூமியை 72,000 ஆண்டுகளுக்கு ஆளப்போகிறார்.முதலில் கொங்கணவர் 150 ஆண்டுகளுக்கு பூமியை ஆளப்போகிறார்;இவரது ஆட்சி துவங்கியதும்,தமிழ்நாடு ஆன்மீக ரீதியாக சுத்தமாகும் என்று தெரிகிறது;சித்தர்களின் ஆட்சி துவங்கியதற்கு அடையாளமாக தமிழ்நாட்டின் பழமையான கோவில்களில் இருக்கும் குளங்களில் நறுமணம் எப்போதும் பரவிக்கொண்டே இருக்கும்;இதுதான் அடையாளம்.கடந்த 30,40,50 ஆண்டுகளாக நீதி,நேர்மை,தர்மம் மற்றும் நியாயத்துக்காகப் போராடுபவர்கள்,நேர்மையாக வாழ்வதாலேயே அனைத்தையும் இழந்தவர்கள் அனைவரும் சித்தர்களின் ஆட்சிக்காலத்தில் சகல சவுபாக்கியமும் பெற்று வளமோடு வாழப் போகிறார்கள்.அதற்குள் சித்த சக்திகளின் அருளாசியைப் பெற்று,நீதி நியாயத்துக்குக் கட்டுப்பட்டு வாழத்துவங்குவோம்;

விருதுநகரில் இருக்கும் ஜீவ சமாதிகள்

திருப்புகழ் முத்தையா சாமிகள்:விருதுநகர் நகராட்சி பின்புறம் நாராயண மடம் தெரு பிரியும் இடத்தில் திருப்புகழ்சாமி சமாதி கோவில் அமைந்திருக்கிறது.

சாத்தூர்

மாவிலிப்பட்டி சங்குசாமி
சாத்தூரிலிருந்து 25 கி.மீ.தூரத்திலுள்ள மாவிலிப்பட்டியில் சமாதி கோவில் இருக்கிறது.

அருப்புக்கோட்டை

அருப்புக்கோட்டை டூ விருதுநகர் சாலை பாவடித் தோப்பு அருகில் சமாதி கற்கோவிலாக விமானத்துடன் உள்ளது.இங்கு வருடாந்திர குருபூஜை விழா மாசி மாதத்து மகம் நட்சத்திரம் நிற்கும் நாளில்( மாசி பவுர்ணமி) நடைபெற்றுக்கொண்டிருக்கிறது.

தட்சிணாமூர்த்தி சுவாமி

அருப்புக்கோட்டை சொக்கலிங்கபுரம் நேரு மைதானத்திற்கு வடக்கே சமாதி கோவில் இருக்கிறது.இங்கு வருடாந்திர குருபூஜை விழா மார்கழி மாதம் வரும் மிருகசீரிடம் நட்சத்திர நாளன்று நடைபெற்றுவருகிறது.

சுப்பன் ஞானியார்
சொக்கலிங்கபுரம் வடக்குரதவீதி காமாட்சியம்மன் கோவில் பின்புறம் சமாதி கோவில்  இருக்கிறது.வருடாந்திர குருபூஜை விழா பங்குனி மாத புனர்பூசம் நட்சத்திரத்தன்று நடைபெற்றுவருகிறது.
ஆத்மானந்த ராமசாமி
சொக்கலிங்கபுரம் சிவன் கோவில் தெப்பக்குளத்தின் மேற்குக் கரைப்பக்கம் சமாதி கோவில் இருக்கிறது.ஐப்பசி மாதம் வரும் மூலம் நட்சத்திரநாளன்று வருடாந்திர குருபூஜை விழா நடைபெற்றுவருகிறது.

பொன்னம்பல சுவாமி

அருப்புக்கோட்டை பாவடித்தோப்பு அருகில் உள்ள ஆயிரங்கண் மாரியம்மன் கோவிலுக்கு மேற்கே சமாதி கோவில் இருக்கிறது.தை மாதம் முதல் நாள் வருடாந்திர குருபூஜை விழா நடைபெற்றுக்கொண்டிருக்கிறது.

புலியூரான்
புலியூரான் சித்தர்
அருப்புக்கோட்டையில் இருந்து 10 கி.மீ.தூரத்தில் உள்ளது புலியூரான் சமாதி.

கட்டங்குடி
ரெட்டிச்சாமி குமரவேல் மவுனகுருசாமி
அருப்புக்கோட்டையிலிருந்து 15 கி.மீ/தூரத்தில் உள்ள கட்டங்குடியில் சமாதி இருக்கிறது.வருடாந்திர குருபூஜை விழா ஆனிமாத சுவாதி நட்சத்திரத்தன்று நடைபெற்றுவருகிறது.

சிவானந்த ஜோதி

மேற்கிலிருந்து ஊருக்குள் நுழையும்போது சாலைக்கு வடபுறம் முதலில் தென்படும் கோவில் வளாகமே சிவானந்த ஜோதி சித்தர் அதிஷ்டானக் கோவில்.வருடாந்திர குருபூஜை விழா புரட்டாசி மாத பவுர்ணமியன்று நடைபெற்றுவருகிறது.

கோட்டூர்

கோட்டூர் குருசாமி
அருப்புக்கோட்டையிலிருந்து அடிக்கடி பஸ் வசதி உள்ள கோட்டூரில் குருசாமி சுவாமிகளின் சமாதி கோயில் இருக்கிறது.ஆடி மாத மகம் நட்சத்திரத்தன்று வருடாந்திர குருபூஜை விழா நடைபெற்றுவருகிறது.இவரது ஜீவசமாதி ராஜபாளையம் அம்பலபுளிபஜாரின் தெற்கு எல்லையில்,சாலியர் சமுதாயத் தெருவை ஒட்டி அமைந்திருக்கிறது.மிகவும் சக்தி வாய்ந்த ஜீவசமாதி கோயில் இந்த ராஜபாளையம் குருசாமி கோவில் ஆகும்.சுமார் 3000 குடும்பங்களுக்கு இவரே குல தெய்வமாகத் திகழ்ந்துவருகிறார்.

வடக்கு நத்தம்

ஆறுமுகச்சாமி

அருப்புக்கோட்டையிலிருந்து  பஸ் வசதியுள்ள வடக்கு நத்தம் கிராமத்தில் சமாதி கோவில் இருக்கிறது.சமாதி மீது முருகன் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.மாதம் தோறும் வரும் கார்த்திகை  நட்சத்திரத்தன்று சிறப்பு வழிபாடு நடந்து வருகிறது.

துத்தி நத்தம்

சிவத்தையா சுவாமி
அருப்புக்கோட்டை சாயல்குடி சாலையில் பரளச்சியை அடுத்து துத்திநத்தம் விலக்கு;இங்கே சிவத்தையா சுவாமிகளின் ஜீவசமாதி இருக்கிறது.

பெருமாள்கோவில்பட்டி
மாசிலானந்த சாமி
அருப்புக்கோட்டை டூ எட்டயபுரம் சாலையில் 18 கி.மீ தூரத்தில் கோடாங்கிபட்டி பஸ் ஸ்டாப்பில் இறங்கவும்.அங்கிருந்து 1 கி.மீ.தூரத்தில் உள்ளது பெருமாள்பட்டி கிராமம்.இந்த கிராமத்தில் மாசிலாந்த சாமியின் ஜீவசமாதி இருக்கிறது.வருடாந்திர குருபூஜை விழா சித்திரை மாதம் வரும் உத்திரம் நட்சத்திரநாளில் நடைபெற்றுவருகிறது.

அழகாபுரி

அருப்புக்கோட்டை டூ எட்டயபுரம் சாலையில் அழகாபுரி கிராமத்தில்(வெம்பூர் அருகில்) சமாதிகோவில் இருக்கிறது.மாசி மாதம் வரும் பவுர்ணமியன்று வருடாந்திர குருபூஜை விழா நடைபெற்றுக்கொண்டிருக்கிறது.
 ரெட்டியபட்டி

ரெட்டியப்பட்டி சுவாமிகள்
அருப்புக்கோட்டை டூ விளாத்திகுளம் சாலையில் 31 கி.மீ.தூரத்தில் நாகலாபுரம் இருக்கிறது.அங்கிருந்து 1 கி.மீ.தூரத்தில் கிழக்கே ரெட்டியபட்டி சுவாமிகளின் சமாதி திருக்கோவில் அமைந்திருக்கிறது.
ரெட்டியப்பட்டி லிங்குசாமி திருக்கோவிலும் இங்கே இருக்கிறது.

ராஜபாளையம்

குருசாமி கோவில்
கோட்டூர் குருசாமிகளே இங்கே வந்து குருசாமியாக அருள்பாலித்து வருகிறார்.இந்த கோவிலுக்கு 3000 பூசாரிகள் இருக்கிறார்கள்.குருசாமியை வழிபடுபவர்களின் வம்சத்தைச் சேர்ந்தவர்கள் அனைவரும் வரிசைக்கிரமப்படி பூஜை வைக்க வேண்டும்.ஒருவர் ஒரு முறை பூஜாரியாக  சில நாட்கள் பணிபுரிந்தால்,அவரது பூஜாரி முறை மீண்டும் வர 3 ஆண்டுகள் ஆகும்.இந்த குருசாமி கோவில் சாலியர் சமுதாயத்துக்குச் சொந்தமான  ஜீவசமாதி கோவில் ஆகும்.ஒவ்வொரு கார்த்திகை தினத்தன்றும் சிறப்பு பூஜைகளும்,அன்னதானமும் நடைபெற்றுவருகிறது.தொடர்ந்து 3 நாட்கள் இங்குவந்து வழிபட்டாலே,நமது கடுமையான பண நெருக்கடி தீர்ந்துவிடுகிறது என்பது அனுபவபூர்வமான உண்மை.பல பக்தர்களிடம் குருசாமி இன்றும் நேரில் காட்சி தந்து பேசி வருகிறார்.
பொன்னப்பஞானியார் மற்றும் கருப்பஞானியார்
குருசாமி கோவிலுக்கு நேராகச் செல்லும் தெருவில் ஒரு பர்லாங்கு தூரத்தில் இந்த ஜீவசமாதிகள் அமைந்திருக்கின்றன.கருப்பஞானியார் 60 ஆண்டுகளுக்கு முன்பு ஒரே நாளில்,ஒரே நேரத்தில் ராஜபாளையத்திலும்,வத்ராப் அருகில் இருக்கும் W.புதுப்பட்டியிலும் நேரடியாகப் பேசியிருப்பதைக் கண்டு பலரும் அதிசயப்பட்டிருக்கின்றனர்.

குமராண்டி சுவாமி

ராஜபாளையம் டூ தென்காசி சாலையில் பி.எஸ்.கே.பூங்காவிற்கு வடக்கில் விவேகானந்தர் தெரு முனையில் குமராண்டி சுவாமிகளின் ஜீவசமாதி இருக்கிறது.

திருச்சிற்றம்பல குருநாத சுவாமி
ராஜபாளையம் வடபுறம் திரவுபதி அம்மன் கோவில் தென்புறம் இந்த ஜீவசமாதி அமைந்திருக்கிறது.

கொம்புச்சாமி

ராஜபாளையத்திலிருந்து சத்திரப்பட்டி செல்லும் சாலையில்,சங்கரன்கோவில் திருப்பத்திலிருந்து ஆலங்குளம் மற்றும் சத்திரப்பட்டி செல்லும் சாலையில் கிழக்கே சாலையை ஒட்டி அமைந்திருக்கிறது கொம்புச்சாமி கோவில்.தோப்புப்பட்டி சாலியர் தெருவின் தென்புறத்தில்  அமைந்திருக்கிறது.சித்ராபவுர்ணமியன்று வருடாந்திர குருபூஜை விழா நடைபெற்றுவருகிறது.

பாலத்தடி சுவாமி

ராஜபாளையம் மலையடிப்பட்டி ரோடு அருகில் பாலமரத்தடி சுவாமிகளின் ஜீவசமாதி திருக்கோவில் அமைந்திருக்கிறது.மாசி மாதம் வரும் பூராடம் நட்சத்திர நாளன்று வருடாந்திர குருபூஜை விழா நடைபெற்றுவருகிறது.
சேஷம குருநாத சுவாமி
ராஜபாளையம் வடமேற்குப் பகுதியில் கீழ ஆவரம்பட்டி பாரதியார் தெருவின் கடைசியில் ஸ்ரீ சேஷம குருநாத சுவாமி சமாதி கோவில் இருக்கிறது.வருடாந்திர குருபூஜை கார்த்திகை மாதம் வரும் உத்திராடம் நட்சத்திரத்தன்று நடைபெற்றுவருகிறது.

அருணாச்சலேஸ்வரர்

ராஜபாளையம் அரசுமருத்துவமனை நேர் எதிரில் சாலையில் சிவலிங்க பிரதிஷ்டை செய்யப்பட்டு,அமைந்திருக்கிறது.
ஸ்ரீசத்தியமூர்த்தி சாமிகள்
ராஜபாளையம் அருள் டெக்ஸ்டைல்ஸ் மில்லுக்கு முன்னால் அருள்ஜோதி இல்லம் என்னும் பெயரில்  சுவாமிகளின் ஆசிரமம்.ஆசிரம வளாகத்திற்குள் சமாதி மேடை! வருடாந்திர குருபூஜை வைகாசி மாதம் வரும் பூரம் நட்சத்திரத்தன்று நடைபெற்றுவருகிறது.

கரிவலம் வந்த நல்லூர்
சித்தகல்ப சிரோன்மணி பொன்னையா சுவாமிகள் ஜீவசமாதி இருக்கிறது.

பொதிச்சாமி: கரிவலவந்த நல்லூரில் பஞ்சமூர்த்தி கோவிலாக இருக்கிறது.

சென்னிகுளம்

அண்ணாமலை ரெட்டியார்:கரிவலம் வந்த நல்லூரிலிருந்து 3 கி.மீ.தூரத்திலுள்ள சென்னிகுளத்தில் ஜீவசமாதி இருக்கிறது.

ராஜபாளையம் சத்திரப்பட்டி

சுப்ரமணிய சாமி
ராஜபாளையம் ஆலங்குளம் சாலையில் 10 கி.மீ.தூரத்தில் உள்ளது சத்திரப்பட்டி.மருந்து துணிகள் எனப்படும் பேண்டேஜ் உற்பத்தியில் உலகச் சந்தையைக் கைப்பற்றிவரும் தொழில் கிராமம் இது.இங்கிருக்கும் விநாயகர் ஆரம்பப் பள்ளி அருகில் வேதாந்த மடம் இருக்கிறது.இந்த மடத்தின் வளாகத்திற்குள் சுப்ரமணிய சாமி ஜீவசமாதி இருக்கிறது.வருடாந்திர குருபூஜை விழா புரட்டாசி மாதம் வரும் மிருகசீரிடம் நட்சத்திர நாளன்று நடைபெற்றுவருகிறது.

அருணாச்சல செம்பட்டை ஞானி
சத்திரப்பட்டி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி முன்புறம் இருக்கிறது.
அயனாவரம்

ஒரு சொல் வாசகன்
ராஜபாளையம் ஆலங்குளம் சாலையில் இருக்கும் சத்திரப்பட்டியை அடுத்து இருக்கும் கிராமம் இது.இங்கு இருக்கும் கண்மாயின் தென்கரையில் ஒரு சொல் வாசகன் சித்தர் பீடம் கிழக்கு பார்த்த சன்னதியில் இருந்து அருள்பாலிக்கிறார்.

ஸ்ரீவில்லிபுத்தூர்

கைலாசசுந்தர சுவாமி
ஸ்ரீவில்லிபுத்தூர் சிவகாசி சாலையில் கனரா வங்கியைக் கடந்ததும் பிரதான சாலையில் இருக்கிறது.சாலியர் சமுதாயத்தின் ஊர் நிர்வாகம் செய்துவருகிறது.

பொன்னாயிரம் சுவாமி
ஊரணிப்பட்டித் தெருவில் இருக்கிறது.வருடாந்திர குருபூஜை விழா மார்கழி மாதத்தில் வரும் சித்திரை நட்சத்திரத்தில் நடைபெற்றுவருகிறது.

ஆறுமுகச்சாமி கோவில்
ஸ்ரீவில்லிபுத்தூர் சிவகாசி சாலையில் கோவிந்தன் நகர் காலனியில் பிரதான சாலையில் வளைவில் அமைந்திருக்கிறது.இங்கு ஆறுமுகச்சாமியும்,பாம்பு தின்னி சாமியும் இருந்து அருள்பாலித்து வருகின்றனர்.இதற்கு எதிரே ஒரு சுடுகாட்டுப்பாதை செல்கிறது.அந்த சுடுகாட்டில் ஒரு ஜீவசமாதி வளாகம் இருக்கிறது.

மூவர் சமாதி என்ற அருள்ஞானிகளின் வளாகம்
மிகவும் சக்திவாய்ந்த இங்கு மதுரை சாமிகள் முதலான 23 மகான்கள் கடந்த ஆயிரம் ஆண்டுகளாக சூட்சுமமாக இருந்து அருள்பாலித்து வருகின்றனர்.

எஸ்.ராமச்சந்திராபுரம்
மதுரை ராஜபாளையம் சாலையில் கலசலிங்கம் பல்கலைக்கழகத்துக்கு அடுத்த 3 வது பஸ் ஸ்டாப் எஸ்.ராமச்சந்திராபுரம் ஆகும்.இங்கே பஸ் நிறுத்தத்திற்கு தெற்கே சதுரகிரியில் 30 ஆண்டுகளாக அன்னதானம் செய்துவரும் காளிமுத்து சுவாமிகளின் ஆசிரமமும்,ஜீவசமாதியும் இருக்கிறது.
இந்த எஸ்.ராமச்சந்திராபுரத்தின் வடக்குத் தெருவுக்கும் ,செங்குளம் கண்மாய்க்கும் நடுவே சடையாண்டி சுவாமிகளின் ஜீவசமாதி அமைந்திருக்கிறது.இவருக்கும்,சதுரகிரிக்கு நெருங்கிய தொடர்பு உண்டு.சுமார் 200 குடும்பங்களுக்கு இவரே குல தெய்வம் ஆவார்.மிகவும் சக்திவாய்ந்த ஜீவசமாதி ஆகும்.

ஓம்சிவசக்திஓம்

தமிழ்நாட்டில் இருக்கும் சித்தர்பீடங்கள்,துறவிகளின் ஜீவசமாதிகளின் இருப்பிடங்கள் பகுதி 3

அனுபவ ரீதியாகப்பார்த்தால், கோவிலுக்குச் சென்று நாம் ஒரு குறிப்பிட்ட பரிகாரம் செய்தால்,அதற்கான பலன்கள் நமக்குக் கிடைக்க கொஞ்சம் காலம் ஆகும்;ஆனால்,ஜீவசமாதிகள்,சித்தர்களின் பீடங்களுக்குச் சென்று முறையாக வழிபட்டால்(முந்தைய பதிவில் வழிகாட்டியபடி) விரைவாக அதற்குரிய பலன்கள நம்மை வந்து சேருகின்றன;
காரைக்கால் பகுதியில் இருக்கும் ஜீவசமாதிகள்:

ஆலத்தூர்

சித்தர்மலை பெருமாள் சுவாமி
காரைக்காலில் இருந்து 7 கி.மீ.தூரத்திலுள்ள ஆலத்தூரில் ஜீவசமாதியாக இருக்கிறது.இங்கே சிவலிங்கம் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.இங்கு ஆவணி மாதம் வரும் மகம் நட்சத்திரத்திலிருந்து 10 நாட்களுக்கு விழா நடைபெறும்.ஆவணி மாதம் வரும் மூலம் நட்சத்திர நாளில் குருபூஜை விழா வருடந்தோறும் நடைபெற்றுவருகிறது.

காரைக்கால்

சற்குரு சீமான் சாமியார்
காரைக்கால் பேருந்து நிலையம் எதிரிலுள்ள மடத்தில் சமாதிபீடம் இருக்கிறது.இங்கு சிவலிங்க பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.

நாகூர்

நாகூர் ஆண்டவர் தர்கா

நாகப்பட்டிணம்

அழுகண்ணி சித்தர்
நாகப்பட்டிணம் நகரின் மையப்பகுதியில் அமைந்திருக்கும் நீலாய தாட்சியம்மன் கோவிலுக்குள் அழுகண்ணி சித்தரின் ஜீவசமாதி அமைந்திருக்கிறது.

வடக்குப் பொய்கை நல்லூர்=கோரக்கர்
நாகப்பட்டிணத்தில் இருக்கும் சுனாமிப்பாலம் கடந்து 6 கி.மீ.தூரத்தில் இருப்பது கோரக்கரின் ஜீவசமாதி ஆகும்.தினமும் மதியம் அன்னதானமும்,முறையான,திட்டமிட்ட பராமரிப்பும் உள்ள சித்தரின் ஜீவசமாதி ஆகும்.பலவிதமான தெய்வீக சிறப்புகள் இங்கு உண்டு.ஒருமுறை போய் வந்தால்,கோரக்கரின் அற்புதத்தை உணருவீர்கள்.

மேலவாஞ்சூர்

ஸ்ரீரெங்கைய சுவாமிகள்
நாகூருக்கு வடக்கே 2 கி.மீ.தூரத்தில் மேலவாஞ்சூர் சுவாமிகளின் ஜீவசமாதி மடத்துக்குள் சமாதிக்கருவறையாக அமைந்திருக்கிறது.

திருமலை ராயன்பட்டினம்

புண்ணாக்கு சாமிகள்

காரைக்காலில் இருந்து 6 கி.மீ.தூரத்தில் உள்ள திருமலைராயன்பட்டிணம் ஹைஸ்கூல் சாலையில் சிவன் கோவில் உள்முகப்பில் புண்ணாக்கு சாமிகள் மடம் இருக்கிறது.இங்கு கருவறையே ஜீவசமாதியாக இருக்கிறது.வருடாந்திர குருபூஜை விழா மார்கழி மாதம் வரும் உத்திரட்டாதி நட்சத்திரநாளில் நடைபெற்றுவருகிறது
நவகண்டயோகி

திருமலைராயன்பட்டினத்தில் வெங்கடேசப்பெருமாள் கோவில் அருகே எல்லையம்மன் கோவில் மேற்கு கோடியில் குளம் அருகே சவுரியார் மடம் இருக்கிறது.அந்த மடத்தினுள் சுவாமிகளின் ஜீவசமாதி இருக்கிறது.வருடாந்திர குருபூஜை விழா ஆனி மாதம் வரும் அவிட்டம் நட்சத்திரநாளன்று நடைபெற்றுவருகிறது.(தூங்கும் போது மனிதனின் உடல் ஒன்பது துண்டுகளாகப் பிரிந்து தூங்கும் யோகநிலைக்கு நவகண்டம் என்று பெயர்;ஏராளமான தமிழ் ஆன்மீக வாதிகளுக்கு இந்த நவகண்டம் சர்வசாதாரணமாக கைகூடியிருக்கிறது.நிச்சயமாக உங்கள் ஊரில் நவகண்டம் திறனைக் கொண்ட ஆன்மீக முயற்சியாளர்கள் இருப்பார்கள்.)

அக்கரை வட்டம்

சித்தானந்த சாமிகள்

காரைக்கால் டூ நாகூர் சாலையில் அக்கரை வட்டம் பிடாரிக்குளத்தில் சாலையைக் கடந்தால் சமாதிக் கோவில் இருக்கிறது.ஆவணி மாதம் வரும் மூலம் நட்சத்திரத்தன்று வருடாந்திர குருபூஜை விழா நடைபெற்றுவருகிறது.

புதுக்கோட்டை

ஜட்ஜ் சாமிகள்
புதுக்கோட்டையின் கீழ7 ஆம் வீதியில் உள்ள புவனேஸ்வரி கோவில் வளாகத்திற்குள் ஜீவசமாதி கோவில் அமைந்திருக்கிறது.பிரதி வைகாசி மாதம் வரும் அஸ்தம் நட்சத்திர நாளில் வருடாந்திர குருபூஜை விழா நடைபெற்றுவருகிறது.

சாந்தானந்தா சுவாமி
புவனேஸ்வரி அம்மன் கோவிலில் அதிஷ்டானம்

உலகநாத சுவாமி
புதுக்கோட்டை வடக்கு ராஜவீதி வடபுறம் சுவாமிகள் மடாலயம் பெயர் பொறித்த நுழைவு வாயில் இருக்கிறது.உள்ளே மடமும் சமாதிகோவிலும் உள்ளன.வருடாந்திர குருபூஜை விழா பங்குனி மாதம் வரும் உத்திராடம் நட்சத்திரநாளின் போது நடைபெற்றுவருகிறது.

தபசுமலை

தபசுமலை துறவிகள்
புதுக்கோட்டை டூ மதுரை சாலையில் 14 கி.மீ.தூரத்தில் லேனா விலக்கு இருக்கிறது.அங்கிருந்து தெற்கே 4 கி.மீ.தூரத்தில் தபசுமலை அமைந்திருக்கிறது.தபசுமலையில் வடமேற்கே சப்தமுனிவர்கள் அடங்கிய குகைப்பாதை இருக்கிறது.இங்கே சிலாவடிவங்கள் தனித்தனியே உள்ளன.

வடுகபட்டி
சுருளிச்சாமிகள்
புதுக்கோட்டை டூ திருச்சி சாலையில் கீரனூருக்கு அருகே வடுகப்பட்டியில் சுருளிச்சாமிகளின் ஜீவசமாதி அமைந்திருக்கிறது.

செம்பூதி
சிவந்திலிங்கசாமி & ஏகம்மை
புதுக்கோட்டை டூ குழிபிறை டூ பொன்னமராவதி வழித்தடத்தில் செம்பூதியில் சமாதி குருபீடம் இருக்கிறது.தம்பதியர் இருவரும் ஒரே நேரத்தில் ஜீவசமாதி ஆனார்கள்.வருடாந்திர குருபூஜை விழா மாசி மாதம் வரும் பவுர்ணமியன்று நடைபெற்றுவருகிறது.

பனையபட்டி
சாதுபுல்லானி சுவாமி
குழிபிறை அருகே பனையப்பட்டியில் ஆயிரம் பிள்ளையார் கோவில் வளாகத்திற்குத் தெற்கே அதிஷ்டானக் கோவில் அமைந்திருக்கிறது.சுவாமி திரு உருவம் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.வைகாசி மாதம் வரும் சதய நட்சத்திர நாளில் வருடாந்திர குருபூஜை விழா நடைபெற்றுவருகிறது.

தேனிமலை
ஸ்ரீபெருமானந்த சுவாமிகள்
பொன்னமராவதிக்கு வடக்கே 10 கி.மீ.தூரத்தில் தேனிமலை இருக்கிறது.இங்கே முருகன் குன்றுக்குக் கீழே அடிவாரத்தில் ஜீவசமாதி கோவில் அமைந்திருக்கிறது.

உலகம்பட்டி
சித்தர்பெருமான்
பொன்னமராவதியிலிருந்து 9 கி.மீ.தூரத்தில் உலகம்பட்டி ஞானியார் திருமடம் இருக்கிறது.இங்கே இருக்கும் சேவுகான்ந்த சுவாமி ஜீவசமாதி பீடம் அமைந்திருக்கிறது.

அரிமழம்
கோடகநல்லூர் சுந்தரசாமி
புதுக்கோட்டையிலிருந்து 15 கி.மீ.தூரத்திலுள்ள அரிமழம் பேருந்து செல்லும் சாலையை ஒட்டி அதிஷ்டானக்கோவில் அமைந்திருக்கிறது.
 சிவகெங்கை மற்றும் காரைக்குடி
கோட்டையூர்
எச்சில் பொறுக்கி ஆறுமுகசாமி
காரைக்குடியிலிருந்து 3 கி.மீ.தூரத்தில் கோட்டையூர் இருக்கிறது.இங்கு நகரத்தார் சிவன் கோவிலின் கிழக்கே 2 கி.மீ.தொலைவு நகர விரிவாக்கப் பகுதியில் சமாதி கோவில் அமைந்திருக்கிறது.

காரைக்குடி
சிவன்செயல் சித்தர்
காரைக்குடி பழைய பஸ் நிலையம் அருகில் சமாதிகோவில் இருக்கிறது.

கோவிலூர்
கோவிலூர் ஆண்டவர்(எ) முத்துராமலிங்க ஞான தேசிகர்
காரைக்குடி அருகே மேற்கில் கோவிலூர் டூ கொற்றவாளிசூவரர் கோவிலருகே திரு மடத்தில் மகாலிங்கப்பிரதிஷ்டையுடன் கோவிலூர் ஆண்டவரின் அதிஷ்டானக் கோவில் இருக்கிறது.

ஸ்ரீதுறவு அருணாச்சல தேசிக சுவாமிகள்
மேற்படி மடத்தில் கோவிலூர் ஆண்டவர் லிங்க மூர்த்தியாகவும்,துறவு அருணாச்சல சுவாமி நந்தியாகவும் சன்னதி பலி பீடமாக கருணாந்திசாமி  அதிஷ்டானம் உள்ளது.

சிங்கம்புணரி

வாத்தியார் சாமி (எ) முத்துவடுகேச சுவாமி
திருப்பத்தூரிலிருந்து 20 கி.மீ.தூரத்தில் சிங்கம்புணரி டூ பிரான்மலை செல்லும் பாதையில் ஆற்றின் தென்கரையில் சித்தர் முத்துவடுகேசர் ஜீவசமாதி கோவில் இருக்கிறது.பவுர்ணமி தோறும் அன்னதானமும்,சிறப்பு வழிபாடும் நடைபெற்றுவருகிறது.கருவறையில் சமாதி மீது சித்தர் யோகநிலையில் இருக்கும்போது அதே நிலையில் சிலை செய்து தம் அருளை ஏற்றிய சிலை பிரதிஷ்டை செய்திருக்கிறார்.

நாட்டரசன்கோட்டை
கம்பர்
சிவகெங்கையிலிருந்து 7 கி.மீ.தூரத்தில் நாட்டரசன் கோட்டை இருக்கிறது.இங்கிருக்கும் கருப்பசாமி கோவில் அருகே கம்பர் பெருமான் சமாதி இருக்கிறது.

இடையமேலூர்
மாயாண்டி சாமிகள்
சிவகெங்கை மேலூர் சாலையில் 8 கி.மீ.தூரத்தில் இடையமேலூர் பேருந்து நிறுத்தத்திற்கு முன்னதாக சமாதிக்கோவில் அமைந்திருக்கிறாது.வருடாந்திர குருபூஜை விழா மார்கழி மாதம்  வரும் பூரம் மற்றும் உத்திரம் நட்சத்திரநாட்களில் நடைபெற்றுவருகிறது.

திருப்பத்தூர்
வாலைச்சித்தர்(எ)வேலாயுத சாமிகள்
திருப்பத்தூர் டூ சிவகெங்கை சாலையில் 4 கி.மீ.தூரத்தில் காட்டாம்பூர் தண்ணீர்ப்பந்தல் என்னும் சாமியார் மடம் கிழக்கே உள்ள தோப்பினுள் வாலைச் சித்தர்பீடம் அமைந்திருக்கிறது.

கீழப்பூங்குடி
மிளகாய்சாமி
திருப்பத்தூர் டூ சிவகெங்கை வழியில் 25 கி.மீ.தூரத்தில் இருக்கிறது.ஒக்கூர் மேற்கே 4 கி.மீ.கீழப்பூங்குடியில் மிளகாய் சாமிகளின் சமாதிக்கோவில் அமைந்திருக்கிறது.
மதுரையாண்டவர்(எ)பரஞ்சோதி சாமிகள்
கீழப்பூங்குடி மிளகாய் சாமிகள் சமாதிக்கோவிலுக்குப் பின்புறம் உள்ள தெருவில் மதுரையாண்டவர் என்னும் பரஞ்சோதி சுவாமிகளின் மடமும்,சமாதிக்கோவிலும் அமைந்திருக்கிறது.

சிவகெங்கை
மவுனகுரு சாமி
மதுரைமுக்கு ரோடு அருகில் சமாதி இருக்கிறது.

ஒழுகமங்கலம்
ஆரிய சித்தர்
சிங்கம்புணரியிலிருந்து 16 கி.மீ.தூரத்தில் ஒழுகமங்கலம் இருக்கிறது.அங்கிருக்கும் திருமேனிநாதம் திருக்கோவிலில் கன்னி மூலையில் ஆரிய சித்தர் ஜீவசமாதி நிலவறையில் இருக்கிறது.அந்த நிலவறையின் மேல் சிவலிங்கத் திருமேனி நிறுவப்பட்டுள்ளது.

சொக்கலிங்கபுரம்
சிவகுருநாத சித்தர்
சிங்கம்புணரியிலிருந்து 1 கி.மீ.தூரத்தில் சோளீஸ்வரர் கோவில் குளக்கரையில் சிவகுருநாத சித்தர் மற்றும் சீடர்கள் இருவரின் ஜீவசமாதிகள் அமைக்கப்பட்டுள்ளன.
மானாமதுரை
சதாசிவ பிரமேந்திரர்
நெரூரில் சமாதி ஆன அதே நேரத்தில் மானாமதுரை சோமநாதர் ஜோதியாக காட்சி தந்த இடத்தில் பிரகாரத்தில் சந்நிதி உள்ளது.ஆண்டு குருபூஜை விழா சித்திரை மாதம் வரும் சுத்த தசமியில் !!!

சிவப்பிரகாசம் சித்தர்சாமி மற்றும் வேலாயுதசாமி
மானாமதுரையில் இருவரது சமாதிகளும் இருக்கின்றன.

முனீஸ்வரர் சித்தர்
வேதியனேந்தல் விலக்கு அருகில் பேரில்லா மரம் உள்ள இடத்தில் ஜீவசமாதி இருக்கிறது.
தமிழ்நாட்டில் இருக்கும் சித்தர்பீடங்கள்,துறவிகளின் ஜீவசமாதிகள் இருக்கும் இடங்கள் பகுதி 4
புழல்
கண்ணப்ப சாமி
புழல் சிறைச்சாலையை அடுத்து காவாங்கரையில் கண்ணப்பசாமிகள் ஆசிரமம்;ஜீவசமாதி மேடை மீது சாமிகள் அமர்ந்த கோலத்துடன் காட்சியளிக்கிறார்.இவருக்கு அருகில் இவரது சீடர் கோவிந்த சாமியின் ஜீவசமாதி.

காரனோடை
மல்லையா சாமிகள்

காரனோடை தாண்ட குசஸ்தல ஆற்றுப்பாலத்தின் கீழ் வடகரையில் சமாதிகோவில் அமைந்திருக்கிறது.இங்கு சாமிகளின் சிலை கருங்கல்லால் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.

அந்தணர் அண்ணல் ஞானாச்சாரியார்
காரனோடை கோபிகிருஷ்ணா தியேட்டர் எதிரில் ஆத்தூர் சாலையில் இவரது சமாதி கோவில் இருக்கிறது.பிரதி ஆவணி மாதம் வரும் முதல் நாள் வருடாந்திர குருபூஜை விழா நடைபெற்றுக்கொண்டிருக்கிறது.

அலமாதி
மார்க்கண்டேய மகரிஷி
அலமாதீஸ்வரர் கோவிலுக்குள் சமாதி அமைந்திருக்கிறது.

கோவணச்சாமி
அலமாதீஸ்வரர் கோவில் அருகில் சமாதி இருக்கிறது.

பூதூர்
ஷா இன்ஷா பாபா
செங்குன்றம் வடக்கே சோழவரம் டூ ஓரக்காடு ரோட்டில் 6 கி.மீ.பூதூர் கிராமம் இருக்கிறது.இந்த கிராமத்தின் மேற்குப்பகுதியில் தர்கா உள்ளது.

பஞ்சேஷ்டி
புலேந்திரர்(சித்தர்களின் தலைவர் அகத்தியரின் சீடர்)
ரெட் ஹில்ஸ்  டூ பொன்னேரி நெடுஞ்சாலையில் ஜனப்பன் சத்திரம் கூட்டுரோடு

ஓம் நமசிவாய
 படித்து பகிர்ந்தது 
இரா இளங்கோவன் 
நெல்லிக்குப்பம். 

Wednesday, February 4, 2026

திருவள்ளூரில் உள்ள "ஞாயிறு" புஷ்பரதேஸ்வரர்

தமிழகத்தில் எத்தனையோ பழமையான கோவில்கள் இருந்தாலும், சென்னைக்கு மிக அருகில் திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள "ஞாயிறு" புஷ்பரதேஸ்வரர் கோயில் பல அரிய பொக்கிஷங்களைத் தன்னுள் கொண்டுள்ளது. இந்தப் பதிவில் அங்குள்ள அதிசயங்களை விரிவாகக் காண்போம்.

1. கிரீடம் இல்லாத 'பல்லவ விநாயகர்' - ஒரு மருத்துவ அதிசயம்! 🐘
பொதுவாக விநாயகர் சிலைகளில் அலங்காரமான கிரீடம் இருக்கும். ஆனால் இங்குள்ள விநாயகர் கிரீடம் இல்லாமல், மண்டை ஓடு போன்ற அமைப்பில் இயற்கையான யானை முகத்துடன் காட்சியளிக்கிறார்.

பல் வலி தீர்க்கும் தலம்: பல் தொடர்பான நோய்களால் அவதிப்படுபவர்கள், இங்குள்ள விநாயகருக்கு நெய் தீபம் ஏற்றி வழிபட்டால் வியக்கத்தக்க பலன் கிடைப்பதாகக் கூறப்படுகிறது.

மன நிம்மதி: பதவி மற்றும் பொருளின் மீதுள்ள அதீத மோகம் நீங்கி, மனத் தெளிவு பெற இந்த 'பல்லவ விநாயகரை' வழிபடுவது சிறப்பு.

2. சூரியன் வழிபட்ட 'ஞாயிறு' தலம் 
இவ்வூரின் பெயரே 'ஞாயிறு' (சூரியன்). ஒருமுறை பிரம்மதேவர் யாகம் செய்தபோது, அதில் ஏற்பட்ட தவறால் சூரியனின் ஒளி மங்கியது. தன் ஒளியை மீண்டும் பெற சூரியன் இத்தலத்து ஈசனை வழிபட்டார்.
சூரிய பூஜை: ஒவ்வோர் ஆண்டும் சித்திரை மாதம் முதல் 7 நாட்களில், சூரிய ஒளி நேரடியாக கருவறை சிவலிங்கத்தின் மீதும், சொர்ணாம்பிகை அம்மன் மீதும் விழுகிறது.

அபிஷேகம் கிடையாது: சூரிய ஒளி லிங்கத்தின் மீது விழும் அந்த 7 நாட்களில், சூரியனே பூஜை செய்வதாக ஐதீகம் என்பதால், உச்சிக்காலத்தில் இறைவனுக்கு அபிஷேகம் செய்யப்படுவதில்லை.

3. கண் நோய்களைத் தீர்க்கும் மருந்தீஸ்வரர் 👀
சூரியன் பார்வைக்கு அதிபதி. எனவே, பார்வை குறைபாடு உள்ளவர்கள், கண் சம்பந்தப்பட்ட அறுவை சிகிச்சை செய்துகொள்பவர்கள் இங்குள்ள ஈசனுக்கும், சூரிய பகவானுக்கும் நெய் விளக்கு ஏற்றி வழிபடுகிறார்கள். இதனால் பார்வைத் திறன் மேம்படும் என்பது நம்பிக்கை.

4. சங்கிலி நாச்சியார் பிறந்த மண் 
சுந்தரமூர்த்தி நாயனாரின் பெரும் அன்பிற்குப் பாத்திரமான சங்கிலி நாச்சியார் அவதரித்த ஊர் இதுவே. இவர் இக்கோயிலில் உள்ள புஷ்பரதேஸ்வரரைத் தொழுது சிவப்பணியில் ஈடுபட்டு வந்தவர். இவருக்கு இக்கோயிலில் தனிச் சன்னதி உள்ளது.

5. தனித்துவமான நவக்கிரக அமைப்பு 
இக்கோயிலில் நவக்கிரக சன்னதி கிடையாது. சூரிய பகவானே இங்கு பிரதானமாக இருப்பதால், அவரை வழிபட்டாலே ஒன்பது கிரகங்களையும் வழிபட்ட பலன் கிடைக்கும். பிரிந்த தம்பதியினர் மீண்டும் இணைய இங்கு கோதுமைப் பொங்கல் படைத்து வழிபடுகின்றனர்.

கோயில் விபரங்கள்:  ஊர்: ஞாயிறு கிராமம் (சோழாவரம் வழி), திருவள்ளூர் மாவட்டம். நேரம்: காலை 7.30 - 11.00; மாலை 4.30 - 7.30. (ஞாயிற்றுக்கிழமைகளில் காலை 6 மணி முதல் மதியம் 1 மணி வரை).

நமது பாரம்பரியத்தையும், அறிவியலும் ஆன்மீகமும் கலந்த இத்தலத்தின் பெருமைகளையும் உலகறியச் செய்வோம்! 
ஓம் நமசிவாய 
படித்து பகிர்ந்தது
 இரா இளங்கோவன்
 நெல்லிக்குப்பம். 

Monday, February 2, 2026

செந்துறை நாகல்குழி சிவன்கோயில்

அரியலூர் மாவட்டம் செந்துறை  வட்டம் நாகல்குழி சிவன்கோயில்
 

சோழர்கள் தமது தலைநகரை தஞ்சையில் இருந்து  அரியலூர் மாவட்டம் கங்கை கொண்ட சோழபுரத்திற்கு மாற்றினர். 

ராஜேந்திரன் சோழன் ஆட்சி காலம்  ( கி.பி 1012 முதல் 1044 ) ல் இருந்து  கி.பி 1279 இல் ஆட்சி செய்த சோழர் வம்சத்தின் இறுதி வரை, சோழ_சாம்ராஜ்யத்தின் தலைநகராக 256 ஆண்டுகள் இருந்தது. 
அதுமட்டுமல்ல பிற மாவட்டங்களை  விட அதிக வரலாறு கொண்டதும் இந்த அரியலூர்_ மாவட்டம் தான். பல கிராமங்களில் உள்ள கோயில்கள் வரலாறு சொல்கின்றன.  

நாகல்குழி; இது  ஜெயம்கொண்டத்தின் வடமேற்கில் இலையூர் வழி சென்றால் 11 கிமி தூரத்தில் உள்ளது. சுற்றிலும் முந்திரி மரங்கள் அடர்ந்த வனப்பகுதி,  இங்கு அக்கால பாளையக்காரர்களால் நானூறு ஆண்டுகளுக்குள் கட்டப்பட ஒரு பழமையான சிவத்தலம். போக்குவரத்து இரைச்சல் இன்றி இந்த கோயில் இறைவன்  அமைதியான சூழலில் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார் .

 இப்பகுதியில் பெரும்பாலான ஊர்கள் மரங்களின் பெயர்களை தாங்கி நிற்பதால் நாவல் மரங்கள் அடர்ந்த ஊர் எனும் பெயரில் நாவல் குழி என் அழைக்கப்பட்டிருக்கவேண்டும். 

கிழக்கு நோக்கிய திருக்கோயில்,   முகப்பில் பார்த்தால் ஒரு திண்ணை  வைத்த  ஒட்டு வீடு போன்ற அழகுடன் காட்சியளிக்கிறது. அதன் வழி உள்ளே சென்று பார்த்தால் பெரிய வளாகமாக உள்ளது. இப்பகுதியில் பல சிவாலயங்கள் இந்த முறையில் கட்டப்பட்டு உள்ளன.  கிழக்கு நோக்கிய கருவறை முகப்பில் ஒரு மண்டபம் எதிரில் நந்தி பலிபீடமும் உள்ளது. தெற்கு நோக்கிய அம்பிகை கருவறை 

இறைவன் காசி விஸ்வநாதர். இறைவி காசி விசாலாட்சி. 

கருவறை கோட்டங்களில் தென்முகன் சிறிய அளவில் உள்ளார். வடக்கில் துர்கையம்மன் உள்ளார்.  உயர்ந்த மதில் சுவற்றினை ஒட்டி விநாயகர் முருகன் சிற்றாலயங்கள் உள்ளன. சண்டேசர் சன்னதி  உள்ளது.  வடகிழக்கில் நவக்கிரக சன்னதி உள்ளது. சூரியன் சனீஸ்வரன் உள்ளனர். 

எளிய அழகுடன் கோயில் நன்றாக உள்ளது. இப்பகுதியின் வழி செல்லும் போது அனைவரும் இறைவனை தவறாமல் தரிசனம் செய்து செல்ல வேண்டும். 

எல்லோரும் எல்லாமும் பெறவேண்டும் என முன்னோர்கள் கட்டி வைத்த கோயிலை உள்ளூர் மக்கள் நல்ல முறையில் வைத்து பூஜைகள் செய்விக்கின்றனர், நாமும் பல ஆயிரம் மக்கள் கூட்டத்தில் ஒருவராக வந்து செல்லும் கோயிலில் நின்று சலிக்காமல்,  இது போன்ற கிராமங்களுக்கு வந்து தரிசனம் செய்தல் வேண்டும்.   அவர்களுக்கு ஊக்கம் தரும் வண்ணம் பூஜை பொருட்களை வாங்கி அளித்து இறைவன் அருள் பெற வேண்டும். 

ஓம் நமசிவாய 
படித்து பகிர்ந்தது 
இரா இளங்கோவன் 
நெல்லிக்குப்பம். 

பெருங்களத்தூர் ஆலப்பாக்கம் சதானந்த ஸ்வாமிகள்.

பெருங்களத்தூர் ஆலப்பாக்கம் சதானந்த ஸ்வாமிகள்
ஆலப்பாக்கம் ஸ்ரீ சதானந்த ஸ்வாமிகள் யார், அவர் எங்கிருந்து வந்தார் , அவருடைய தாய் தந்தை யார் என்ற விவரம் தெரியவில்லை. ஆனால் அவரை 1909 ஆம் ஆண்டு ஆலப்பாக்கத்திற்கு சாது ஸ்ரீ நாராயண ஸ்வாமி என்பவர் அழைத்து வந்துள்ளார். ஸ்ரீ நாராயண ஸ்வாமி அவர்களும் போலீஸ் உத்யோகத்தில் இருந்தவராம். சாது திரு நாராயண ஸ்வாமியின் தந்தையான திரு சிதம்பரம் என்பவரும், மாமனான ஸ்ரீ முருகானந்த ஸ்வாமியாரும் போலிஸ் வேலையில் இருந்து ஒய்வு பெற்றவர்கள். ஆக ஒரே குடும்பத்தில் இருந்த மூன்று பேர்களில் இருவர் ஒய்வு பெற்று விட்டவுடன் மூன்றாவதான சாது ஸ்ரீ நாராயணஸ்வாமி சில ஆண்டுகளுக்குப் பின்னால் தானும் வேலையை ராஜினமா செய்து விட்டு தனது குருவான ஸ்ரீ சதானந்த ஸ்வாமி அவர்களை அழைத்துக் கொண்டு ஆலப்பாக்கத்திற்கு வந்து விட்டாராம். திரு நாராயணஸ்வாமிக்கு பிறந்த மூன்று குழந்தைகளில் ஒருவரான ஸ்ரீ துளசிங்கம் மூலமாகவே நமக்கு ஆலப்பாக்கம் ஸ்ரீ சதானந்த ஸ்வாமிகளின் வாழ்க்கை பற்றிய செய்தி கிடைத்து உள்ளது. தற்போது ஸ்ரீ துளசிங்கம் அவர்களும் சமாதி அடைந்து விட்டார்.
ஸ்ரீ நாராயணஸ்வாமி எதற்காக போலிஸ் உத்தியோகத்தை ராஜினமா செய்து விட்டு வந்து அவரும் ஒரு சாதுவாக மாறினார் ? அதற்கு ஒரு பின்னணி கதை உண்டு. போலிஸ் உத்தியோகத்தில் இருந்தபோது திரு நாராயணஸ்வாமி திருவிலக்கேணிப் பகுதியில் தங்கி இருந்தார். அவருக்கு திருமணம் ஆகி பத்து வருடங்கள் ஆகியும் குழந்தைகள் எதுவும் இல்லை.

அப்போது சென்னையில் நிறைய இடங்களில் திருட்டுக்கள் நடந்து வந்தன. திருடர்களை கண்டு பிடிப்பது கடினமாக இருந்தது. அந்த திருடர்கள் கோஷ்டியில் ஆறு நபர்கள் இருந்தனராம். அவர்கள் ஒருமுறை ஒரு வீட்டில் துணிமணிகள் மற்றும் சாமான்களை திருடிக் கொண்டு வந்து அவற்றை பின்னர் எடுத்துச் செல்லலாம் என்று எண்ணிக் கொண்டு சைதாப்பேட்டை அருகில் ஆற்றின் பக்கத்தில் இருந்த ஒரு தாழம்பூ புதரில் புதைத்து வைத்து விட்டார்கள்.

அதே நேரத்தில் அந்தத் திருட்டு நடந்ததும் ஸ்ரீ நாராயணஸ்வாமியின் மேல் அதிகாரியாக இருந்தவர் திரு நாராயணஸ்வாமி மற்றும் அவருடன் பணியாற்றி வந்த முஸ்லிம் மதத்தை சேர்ந்த ஒரு போலிஸ்காரரிடம் என இருவரிடமும் ‘நீங்கள் அந்த திருடர்களைப் உடனடியாக கண்டு பிடிக்காவிடில் உங்களை பணியில் இருந்து நீக்கி விடுவேன்’ எனக் கடிந்து கொள்ள இருவரும் மன வருத்தத்துடன் அது பற்றி பேசிக் கொண்டே சென்னையில் எக்மோர் எனும் பகுதியில் உள்ள கண் சிகிச்சை மருத்துவ மனை வழியே நடந்து கொண்டு வருகையில் கன்னிமாரா வாசகசாலை அருகில் உள்ள ஆற்றங்கரை பாலத்தின் மீது அமர்ந்து இருந்த ஒரு சாமியார் அவர்களுக்கு மிகவும் பழக்கமானவரைப் போல ‘நாராயணா….நாராயணா..இங்கே வா’ என திரு நாராயணஸ்வாமியை அழைத்தார். அவரே பிற்காலத்தில் அவருக்கு குருவான ஸ்ரீ சதானந்த ஸ்வாமிகள் ஆவார்.
அதைக் கேட்ட அவருடைய போலிஸ் நண்பரான முஸ்லிம் பாய் ‘யாரோ ஒரு கிழவன் உன்னை பேர் சொல்லி அழைக்கின்றான் பார்’ எனக் கேலியாகக் கூற அடுத்த கணம் ஸ்ரீ சதானந்த ஸ்வாமிகள் அந்த முஸ்லிம் பாயின் பெயரையும் கூறி இருவரையும் தன் அருகில் வருமாறு செய்கை காட்டினார். அவர்களும் அவர் அருகில் சென்று ‘எங்களை உனக்கு எப்படித் தெரியும்?. எங்களை எதற்காக அழைத்தாய்?’ என்று கோபமாகக் கேட்க அவர் தயங்காமல் ‘உடனே நீங்கள் இருவரும் இங்கிருந்து கிளம்பிச் சென்று நீங்கள் தேடும் திருடனை பிடியுங்கள். அவர்கள் இப்போது சைதாப்பேட்டை அருகில் ஆற்றின் பக்கத்தில் ஒரு தாழம்பூ புதரில் திருடிய பொருட்களை புதைத்து வைத்து விட்டு அமர்ந்து கொண்டு இருக்கின்றார்கள் . உடனே சென்றால் அவர்களைப் அங்கு பிடித்து விடலாம்’ என்றார்.
அதைக் கேட்ட அவர்கள் அவர் மீது சந்தேகம் அடைந்து ‘சரி நீங்கள் கூறியது நிஜம் என்றால் உடனே அந்த இடத்துக்கு நாங்கள் கிளம்பிச் சென்று அவர்களைப் பிடித்து வருகிறோம். ஆனால் அதுவரை நீங்கள் இங்கேயே இருப்பீர்களா’ எனக் கேட்க அந்த சாமியார் கூறினார் ‘நான் இங்கே இருந்தாலும் இருப்பேன், இல்லை என்றால் இல்லை. அதற்கு உறுதி தர முடியாது. உங்களுக்கு தேவை என்றால் அவர்களை உடனே சென்று பிடித்துச் செல்லுங்கள். இல்லை என்றால் உங்கள் வழியில் செல்லுங்கள். எனக்கு அதனால் ஒன்றும் ஆகப் போவது இல்லை ‘ என்று கூறி விட்டார்.

ஆகவே எதோ ஒரு உந்துதலில் அவர்கள் ஸ்ரீ சதானந்த ஸ்வாமிகள் கூறிய இடத்துக்கு சென்று பார்க்க முடிவு செய்தார்கள். அந்த காலங்களில் வாகன வசதிகள் அதிகம் கிடையாது. பஸ்களும் இல்லை. ட்ராம் வண்டியே இருந்தது. ஆகவே அந்த இரண்டு போலிஸ்காரர்களும் ஒரு ஜட்கா வண்டியை எடுத்துக் கொண்டு அந்த சாமியார் கூறிய இடத்துக்குப் போய் அங்கிருந்த ஆறு திருடர்களையும் கையும் களவுமாக பிடித்து விட்டார்கள். வேலையில் நல்ல பெயரும் பெற்றார்கள். அடுத்து அவர்கள் எக்மோருக்கு அருகில் இருந்த ஆற்றின் கரைக்கு வந்து அந்த இடத்தில் சாமியாரை தேடினார்கள். ஆனால் அவரைக் காணவில்லை. அது முதல் திரு நாராயணஸ்வாமிக்கு அந்த சாமியாரை எப்படியாவதுக் காண வேண்டும் என்ற ஆவல் ஏற்பட்டது .

அந்த காலத்திலும் மாநிலத்தின் ஆளுநர் (கவர்னர்) சாலையில் செல்லும்போது சாலைக் காவலுக்கு போலிஸ்காரர்கள் ஆங்காங்கே நிற்பார்கள். ஒரு நாள் கவர்னர் செல்ல இருந்த சாலையில் காவல் பணியில் இருந்த ஸ்ரீ நாராயணஸ்வாமி அந்த சாலையில் சென்று கொண்டு இருந்த ட்ராம் வண்டியில் தமக்கு திருடர்களைப் பிடிக்க உதவிய அந்த ஸ்ரீ சதானந்த ஸ்வாமிகள் செல்வதைப் பார்த்தார். ஆவலுடன் ஓடிச் சென்று அந்த ட்ராம் வண்டியில் தானும் ஏறிக் கொள்ள ஸ்ரீ சதானந்த ஸ்வாமிகள் கூவினாராம் ‘நாராயண…என்னைக் காண வேண்டும் என்பதற்காக ஓடி வந்து இந்த ட்ராம் வண்டியில் ஏறிக் கொண்டு விட்டாயே. உனக்கு மாத சம்பளம் கொடுக்கும் அரசாங்கத்தினர் பணியை விட்டு விட்டு இப்படி என்னைத் தொடர்ந்ததைக் குறித்து உன்னை கேள்வி கேட்டால் என்ன பதில் சொல்வாய் ?.

ஸ்ரீ நாராயணஸ்வாமி அதற்கு பதில் கூறவில்லை. மௌனமாக ஸ்ரீ சதானந்த ஸ்வாமிகள் எங்கு செல்கிறார் என்பதைக் கண்டுபிடிக்க ஸ்ரீ சதானந்த ஸ்வாமிகளை பின் தொடர்ந்து சென்றார். அந்த ஸ்ரீ சதானந்த ஸ்வாமிகள் மயிலாப்பூரில் இறங்கி கபாலீஸ்வரர் ஆலயத்து சன்னதியில் சென்று நின்று கொண்டதைக் கண்டு பிடித்தப் பின் அங்கிருந்து மீண்டும் கிளம்பி வந்து தான் காவலுக்கு நிற்க வேண்டிய இடத்தில் வந்து நின்று கொண்டார். ஆனால் அதிசயமாக அவருடைய அதிகாரிகள் அவரிடம் ‘வேலை நேரத்தில் எங்கு சென்றுவிட்டாய்’ என ஒரு கேள்வியும் கேட்காமல் இருந்ததைக் கண்டு அந்த சாமியார் மீது மேலும் அதிக பக்தியும் மரியாதையும் ஏற்பட்டுவிட்டது. தினமும் அந்த ஆலயத்தின் அருகில் உள்ள குளக்கரையில் குளித்துவிட்டு அமர்ந்து இருந்த ஸ்ரீ சதானந்த ஸ்வாமிகளை  ஒரு முறையாகிலும் சென்று சந்திக்காமல் இருந்தது இல்லை. இப்படியாக இருக்கையில் ஒருநாள் அந்த சாமியார் ஸ்ரீ நாராயணஸ்வாமியிடம் ‘இதோ பார்…நீ தொடர்ந்து போலிஸ் வேலையில் இருந்தால் தவறுகளை மீண்டும் மீண்டும் செய்து கொண்டே இருப்பாய். ஆகவே உனக்கு ஊரில் நிலபுலன் இருந்தால் போலிஸ் வேலையை ராஜினமா செய்துவிட்டு அங்கு போய் விவசாயம் செய்து பிழைத்துக் கொள். இல்லை என்றால் இனி என்னைக் காண இங்கு வராதே’ எனக் கடுமையாகக் கூறி விட ஸ்ரீ நாராயணஸ்வாமி மறுநாள் தயங்காமல் தனது போலிஸ் வேலையை ராஜினமா செய்து விட்டு ஸ்ரீ சதானந்த ஸ்வாமிகளை அழைத்துக் கொண்டு ஆதம்பாக்கத்திற்கு வந்து விட்டார். அங்கு வந்ததும் ஸ்ரீ நாராயணஸ்வாமியின் குடும்பத்தினர் 58 சென்ட் நிலத்தை ஆலப்பாக்கம் ஸ்ரீ சதானந்த ஸ்வாமிகளுக்கு எழுதிக் கொடுத்து விட ஸ்ரீ சதானந்த ஸ்வாமிகளும் அதில் ஒரு குடுசை போட்டுக் கொண்டு தங்கிக் கொண்டு திருவிடைமருதூர் அவதூத மௌன சாமியாரிடம் தீட்ஷையாக பெற்றுக் கொண்ட நவகண்ட யோகத்தை செய்து வந்தார்.

ஸ்ரீ சதானந்த ஸ்வாமிகள் ஆலப்பாக்கம் கிராமத்தில் மெல்ல மெல்ல பிரபலமாகத் துவங்கினார். அப்போது ஸ்ரீ சதானந்த ஸ்வாமிகள் வயது சுமார் 90 இருக்கும். அவர் நவகண்ட யோகம் செய்யும்போது யாரும் அவர் அனுமதி பெறாமல் உள்ளே சென்று அவரை தரிசிக்கக் கூடாது. அவரைக் காண வேண்டும் எனில் வெளியில் நின்றவாறு கையைத் தட்டி சப்தம் செய்து ‘ஸ்வாமி….ஸ்வாமி ‘ என அழைத்து விட்டுத்தான் உள்ளே செல்ல வேண்டும். ஆலப்பாக்கத்தின் மக்கள் அவரைக் கேட்காமல் எந்த முக்கியக் காரியத்தையும் செய்ய மாட்டார்கள் எனும் அளவுக்கு ஆலப்பாக்கம் ஸ்ரீ சதானந்த ஸ்வாமிகள் புகழ் பரவியது. ஆகவே நாளாக நாளாக தன்னிடம் வந்து நச்சரிக்கும் மக்களின் தொந்தரவைப் பொறுத்துக் கொள்ள முடியாமல் போன அந்த சாமியார் அந்த கிராமத்தின் வடக்குப் பக்கத்தில் ஒரு இடம் இருந்தால் தொந்தரவு இன்றி தான் அங்கு சென்று தான் தங்கிக் கொள்ள முடியும் என திரு நாராயண ஸ்வாமியிடம் கூற அவர் ஸ்ரீ சதானந்த ஸ்வாமிகள் கேட்ட இடத்தில் இருந்த தன்னுடைய ஒரு ஏக்கர் நிலத்தை தானமாகத் தந்தார். அதைக் கண்ட ஊர் மக்களும் ஸ்ரீ சதானந்த ஸ்வாமிகளுக்கு ஐந்து ஏக்கர் நிலத்தை தம் சார்பாக அவருக்கு தானமாகத் தர அந்த சாமியாரும் அங்கேயே சென்று தங்கி ஒரு ஆஸ்ரமம் அமைத்து அங்கிருந்தபடி தம்மை நாடி வந்த மக்களுக்கும் ஊராருக்கும் தொண்டு செய்து வந்தார். இப்படியாக மக்களுக்கு ஆன்மீக சேவை செய்து வந்த ஆலப்பாக்கம் ஸ்ரீ சதானந்த ஸ்வாமிகள்  1922 ஆம் ஆண்டு ஜீவ சமாதி அடைந்தார்.


 சதானந்த ஸ்வாமியின் 90  வது குரு பூஜை  விழா 
ஸ்ரீ  சதானந்த ஸ்வாமியின் சீடர்கள் சமாதி 

அதுவரை குழந்தையே பிறக்காமல்  இருந்த ஸ்ரீ நாராயணஸ்வாமிக்கு,  ஸ்ரீ சதானந்த ஸ்வாமிகள் அங்கு வந்து தங்கிய  பின்னர்தான்  மூன்று குழந்தைகள் பிறந்தார்கள். பெரியவள் பெண். மற்ற இருவரும் ஆண்கள். அவர்களில் ஒருவரே திரு துளசிங்கம் ஆவார். ஆசிரமம் அமைந்ததும் திரு நாராயணஸ்வாமிக்கு ஸ்ரீ சதானந்த ஸ்வாமிகள் ஒரு கடுமையான உத்தரவு போட்டார். ‘ உன்னுடைய மகள் திருமணம் ஆகும்வரை எனக்கு இங்கு வந்து தொண்டு செய்யக் கூடாது. நடு இரவில் வீட்டை விட்டு வரக் கூடாது’ .

ஸ்ரீ சதானந்த ஸ்வாமிகள் கூறிய கட்டளையை சிரத்தையுடன் மேற்கொண்ட  சாது ஸ்ரீ நாராயணஸ்வாமி தனது மகளை திருமணம் செய்து கொடுத்தப் பின் வீட்டை துறந்து விட்டு அவருடைய நண்பரான சாது ஸ்ரீவேல்சாமி என்பவருடன் சேர்ந்து ஆஸ்ரமத்திற்குச் சென்று அங்கேயே தங்கி பணிவிடைகள் செய்து கொண்டு இருந்தார். அந்த காலங்களில் திருமணங்கள் மிகச் சிறிய வயதிலேயே நடந்து விடும். ஆகவேதான் சாது ஸ்ரீ நாராயணஸ்வாமியின் மகளுக்கும் விவாகம் விரைவில் நடந்தது. அப்போது ஸ்ரீ துளசிங்கத்திற்கு வயது ஒன்பதாகியது. அவருடைய தம்பியின்  வயது ஆறு ஆயிற்று. ஆண்டுகள் கடந்தன. 1935 ஆம் ஆண்டு சாதுவாகி விட்ட ஸ்ரீ நாராயணஸ்வாமியும் ஜீவ சமாதி அடைந்தார்.

அவர் ஜீவ சமாதி ஆவதற்கு இரண்டு நாட்களுக்கு முன்னரே தான்  சமாதி அடையப் போகும் விஷயத்தை தன் வீட்டாரிடம் கூறினார். அப்போது சாது ஸ்ரீ நாராயணஸ்வாமியை சந்தித்த அவரது சகோதரி ‘அண்ணா நீ வீட்டில் வந்து சமாதி அடைய வேண்டும் . உன் உடலை வீட்டிற்கு எடுத்து வந்து பூஜை செய்து கல்வெட்டு லிங்கம் போட வேண்டும்’ என தன் விருப்பத்தைக் கூறினாள். அதற்கு சம்மதித்த சாது ஸ்ரீநாராயணஸ்வாமி அங்கு செல்ல  ஒரு நிபந்தனைப் போட்டார்.   ‘வீட்டிற்கு வந்து சமாதி அடைந்தால் தனக்காக யாரும் ஒரு சொட்டு கண்ணீர் விடக் கூடாது. மேலும் எந்தவிதமான காரியங்களையும் செய்யாமல் கற்பூரம் மட்டுமே ஏற்றி வைத்து சமாதி செய்ய வேண்டும்’  என்பதே நிபந்தனை.

அதைத் தவிர தன்னை எப்படி சமாதி செய்ய வேண்டும் என்பதையும் அவருடைய சகோதரிக்கும் கடைசி மகனுக்கும் எடுத்துக் கூறினார். அவர் விருப்பத்தை ஏற்று சமாதி அடைய இருந்த தினத்தன்று அவரை வீட்டிற்கு அழைத்து வந்தார்கள். அன்று இரவு 12 மணி இருக்கும். வெளிச் சாலையில் இருந்து ‘நாராயணா…நாராயணா’ என மூன்று முறை யாரோ அழைக்கும் சப்தம் கேட்டது. வெளியில் சென்று பார்த்தால் அங்கு யாருமே தென்படவில்லை. அவர்கள் உடனே உள்ளே சென்று சாது ஸ்ரீ நாராயணஸ்வாமியைப் பார்க்க உட்கார்ந்து இருந்தவர் தனது வாயை இரண்டு முறை திறந்து மூடிக் கொள்ள அப்படியே அமர்ந்த நிலையிலேயே 1935 ஆம் வருடம்  ஜீவ சமாதி அடைந்தார். அவர் சமாதி அடைந்ததை நேரிலேயே இருந்து பார்த்தார் அவருடைய இரண்டாம் மகனான ஸ்ரீ துளசிங்கம் அவர்கள் .
சாது ஸ்ரீநாராயண ஸ்வாமி விருப்பபடியே யாருமே ஒரு சொட்டு கண்ணீரும் விடவில்லை. அவர் கூறி இருந்தபடியே கற்பூரம் மட்டுமே ஏற்றி விட்டு அவரை சமாதி செய்தார்கள். ஒரு பண்டாரத்தைக் கொண்டு நாற்பது நாட்கள் பூஜை செய்து கல்வெட்டு லிங்கம் அமைத்தார்கள்.

அவர் சமாதி ஆன இரண்டு ஆண்டுகளில் அவர் நண்பராக இருந்த சாது ஸ்ரீ வேல்முருகனும் சமாதி அடைந்தார். அதன் பின் 19.12.2003 ஆம் ஆண்டு ஸ்ரீ துளசிங்கமும் சமாதி அடைந்தார்.

ஸ்ரீ சதானந்த ஸ்வாமிகளின் சீடர்கள் 
———————————————————-
ஸ்ரீ நாராயண ஸ்வாமிகள்
ஸ்ரீ வேலு ஸ்வாமிகள்
ஸ்ரீ பிச்சை ஸ்வாமிகள்
ஸ்ரீ அகண்டபுரி ஸ்வாமிகள்
ஸ்ரீ மாயா ஸ்வாமிகள்
ஸ்ரீ கோபால் ஸ்வாமிகள். 

ஓம் நமசிவாய 
படித்து பகிர்ந்தது 
இரா இளங்கோவன் 
நெல்லிக்குப்பம். 

Saturday, January 31, 2026

வாழ்க்கை வளம் பெற வள்ளலார் கூறிய போதனைகள்.

வள்ளலார்_கூறிய_அற்புதமான வாழ்க்கை_போதனைகள்......
🪔வள்ளலாரின் மிக முக்கியமான இரண்டு அம்சங்களான 'பசிப்பிணி போக்கும் சேவை' மற்றும் 'அருட்பெருஞ்ஜோதி அகவல்' பற்றி விரிவாகக் காண்போம்:🪔🪔🪔

🔥1. பசிப்பிணி போக்கும் சேவை (சத்திய தருமச்சாலை)
வள்ளலார் "பசி" என்பதை ஒரு பெரும் நோயாகக் கருதினார். பசியோடு இருப்பவனுக்குத் தத்துவம் பேசுவது வீண் என்று அவர் நம்பினார்.
 
🔥அணையாத அடுப்பு: 1867-ஆம் ஆண்டு வடலூரில் சத்திய தருமச்சாலையைத் தொடங்கினார். அன்று அவர் ஏற்றி வைத்த அடுப்பு,150 ஆண்டுகளுக்கும் மேலாக அணையாமல் பல்லாயிரக்கணக்கான மக்களுக்குத் தினமும் பசி போக்கி வருகிறது.
 
🔥* ஜீவகாருண்யம்: "பசியினால் இளைத்து வரும் ஏழைகளுக்கு ஆகாரங் கொடுப்பதே மேலான புண்ணியம்" என்பது அவர் வாக்கு.
 
🔥* மரணமிலாப் பெருவாழ்வு: ஒரு மனிதன் ஆன்மீகத்தில் உயர வேண்டுமென்றால், முதலில் அவன் உடல் பசியின்றி இருக்க வேண்டும் என்பது வள்ளலாரின் அடிப்படை விதி.

🔥2. அருட்பெருஞ்ஜோதி அகவல்
வள்ளலார் பாடிய பாடல்களிலேயே மிகவும் புனிதமானதாகவும், உயர்ந்ததாகவும் கருதப்படுவது இந்த 'அகவல்' ஆகும்.
 
🔥* மிக நீண்ட பாடல்: இது 1596 வரிகளைக் கொண்ட ஒரே பாடலாகும்.

🪔🪔🪔அனுபவப் பதிவு🪔🪔🪔: 
அவர் இறைவனை (அருட்பெருஞ்ஜோதி) எப்படிக் கண்டார், அவருக்குள் ஏற்பட்ட ஆன்மீக மாற்றங்கள் என்ன என்பதை இதில் விவரித்துள்ளார்.🪔🪔

🔥* மந்திர வரி: > "அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி"🪔

🪔என்னும் புகழ்பெற்ற வரிகள் இந்த அகவலில் இருந்தே கிடைத்தன.🪔
🔥3. வள்ளலாரின் முக்கியமான புரட்சிகரமான கருத்துக்கள்:
 
🔥சாதி மறுப்பு: "சாதியும் மதமும் சமயமும் பொய்" என்று துணிச்சலாகக் கூறினார்.
 
🔥உயிர்க்கொலை எதிர்ப்பு: இறைவனுக்கு உயிர்களைப் பலியிடுவதைக் கடுமையாக எதிர்த்தார். 

🔥புலால் (இறைச்சி) உண்பதைத் தவிர்க்கச் சொன்னார்.

🔥 ஒளி வழிபாடு: சிலைகளை வணங்குவதை விட, அறிவாகிய ஒளியை (ஜோதி) வணங்குவதே சிறந்தது என்றார்.

🔥"வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன்" 🔥

என்ற அந்த ஒற்றை வரி, அனைத்து உயிர்கள் மீதும் அவர் கொண்டிருந்த எல்லையற்ற கருணையை உணர்த்துகிறது.🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔
#வாழ்க்கை_நிகழ்வு
#வடலூர்_சத்திய_ஞானசபையில் #நேரடியாக_எடுத்த_பட #தொகுப்புக்கள்...

வாழ்வென்பது உயிர் உள்ளவரை.........!!!
*தேவைக்கு செலவிடு........
*அனுபவிக்க தகுந்தன அனுபவி......
*இயன்ற வரை பிறருக்கு பொருளுதவி செய் மற்றும் ஜீவகாருண்யத்தை கடைபிடி.....

இனி அநேக ஆண்டுகள் வாழப்போவதில்லை......
*போகும்போது எதுவும் கொண்டு செல்லப்போவதுமில்லை......
*ஆகவே.......அதிகமான சிக்கனம் அவசியமில்லை. .

மடிந்த பின் என்ன நடக்கும் என்று குழம்பாதே...
*உயிர் பிரிய தான் வாழ்வு...... ஒரு நாள் பிரியும்.....
*சுற்றம், நட்பு, செல்வம் எல்லாமே பிரிந்து விடும்.

உயிர் உள்ளவரை, ஆரோக்கியமாக இரு......
*உடல்நலம் இழந்து பணம் சேர்க்காதே.....

உன் குழந்தைகளை பேணு......
*அவர்களிடம் அன்பாய் இரு.......
*அவ்வப்போது பரிசுகள் அளி......
*அவர்களிடம் அதிகம் எதிர்பாராதே........
*அடிமையாகவும் ஆகாதே.........
*பெற்றோர்களை மதிக்கும் குழந்தைகள் கூட பாசமாய் இருந்தாலும், பணி காரணமாகவோ,சூழ்நிலை கட்டாயத்தாலோ உன்னை கவனிக்க இயலாமல் தவிக்கலாம், புரிந்து கொள்.......!!!
*அதைப்போல
*பெற்றோரை மதிக்காத குழந்தைகள்,உன் சொத்து பங்கீட்டுக்கு-சண்டை போடலாம்......
உன் சொத்தை தான் அனுபவிக்க,
நீ சீக்கிரம் சாக வேண்டுமென வேண்டிக் கொள்ளலாம்.. 
பொறுத்து கொள்.
அவர்கள் உரிமையை மட்டும் அறிவர்,கடமை ,அன்பை அறியார்.

அவரவர் வாழ்வு, அவரவர் விதிப்படி என அறிந்துகொள்.
*இருக்கும்போதே குழந்தைகளுக்கு கொடு ஆனால்......நிலைமையை அறிந்து அளவோடு கொடு எல்லாவற்றையும் தந்துவிட்டு, பின் கை ஏந்தாதே 

*எல்லாமே இறந்த பிறகு என,உயில் எழுதி வைத்திராதே....நீ எப்போது இறப்பாய் என-எதிர்பார்த்து காத்திருப்பர்.....எனவே கொடுப்பதை கொடுத்து விடு,தரவேண்டியதை பிறகு கொடு.

*மாற்ற முடியாததை மாற்ற முனையாதே,

*மற்றவர் குடும்ப நிலை கண்டு, பொறாமையால் வதங்காதே.....!!!*

அமைதியாக மகிழ்ச்சியோடு இரு....
*பிறரிடம் உள்ள நற்குணங்களை கண்டு பாராட்டு..நண்பர்களிடம் அளவளாவு.

*நல்ல உணவு உண்டு....நடை பயிற்சி செய்து.....உடல் நலம் பேணி......இறை பக்தி கொண்டு......குடும்பத்தினர்-நண்பர்களோடு கலந்து உறவாடி மனநிறைவோடு வாழ்- இன்னும்......இருபது, முப்பது, நாற்பது ஆண்டுகள். சுலபமாக ஓடிவிடும்...!!

*வாழ்வை கண்டு களி...ரசனையோடு வாழ்.....வாழ்க்கை வாழ்வதற்கே,

நான்கு நபர்களை புறக்கணி....
மடையன்
சுயநலக்காரன்
முட்டாள்
ஓய்வாக இருப்பவன்

நான்கு நபர்களுடன் தோழமை கொள்ளாதே.....
பொய்யன்
துரோகி
பொறாமைக்கைரன்
மமதை பிடித்தவன்

நான்கு நபர்களுடன் கடினமாக நடக்காதே.... 
அனாதை
ஏழை
முதியவர்
நோயாளி

நான்கு நபர்களுக்கு உனது கொடையை தடுக்காதே.....
மனைவி
பிள்ளைகள்
குடும்பம்
 சேவகன்

நான்கு விசயங்களை ஆபரணமாக அணி....
பொறுமை
சாந்த குணம்
அறிவு
அன்பு

நான்கு நபர்களை வெறுக்காதே.....
தந்தை
தாய்
சகோதரன்
சகோதரி

நான்கு விசயங்களை குறை.....
உணவு
தூக்கம்
சோம்பல்
பேச்சு

நான்கு விசயங்களை தூக்கிப்போடு....
துக்கம்
கவலை
இயலாமை
கஞ்சத்தனம்

நான்கு நபர்களுடன் சேர்ந்து இரு......
மனத்தூய்மை உள்ளவன்
வாக்கை நிறைவேற்றுபவன்
கண்ணியமானவன்
உண்மையாளன்

நான்கு விசயங்கள் செய்.....
தியானம் , யோகா
நூல் வாசிப்பு
உடற்பயிற்சி
சேவை செய்தல்

வாழ்க்கை வளம் பெற இத்தகைய செயல்களை நாமும் கடைபிடிப்போம்.....

-ஓம் நமசிவாய
 படித்து பகிர்ந்தது 
இரா இளங்கோவன் 
நெல்லிக்குப்பம். 

வடலூரில் 158 ஆண்டுகளாக அணையாத அதிசய அடுப்பு

*158 ஆண்டுகளாக அணையாத அடுப்பு*
 தினமும் 1,000 பேருக்கு வயிறார அன்னதானம்!
அருட் பெரும் ஜோதி வள்ளலாரை பற்றி அறியாதவர்கள் கூட அவரின் 'வாடிய பயிரை கண்ட போதெல்லாம் வாடினேன்' எனும் இந்த பிரபல வாக்கியத்தை நிச்சயம் கேட்டு இருப்பார்கள். கடலூர் மாவட்டம் வடலூரில் 1867-ம் ஆண்டு, மே மாதம் 23-ம் தேதி வள்ளலார் ஏற்றி வைத்த அடுப்பு சாமானியர்களின் பசியைப் போக்குவதற்காக இன்னமும் எரிந்துகொண்டேதான் இருக்கிறது. இன்றைய தேதிக்கு தினமும் 1,300 முதல் 1,500 பேரின் பசியைப் போக்கி வருகிறது வள்ளலார் மூட்டிய இந்த அணையா அடுப்பு. இது நிச்சயம் தமிழகத்தில் பிறந்த ஒவ்வொருவரும் கட்டாயம் பார்க்க வேண்டிய அற்புத இடமாகும்!
தமிழக ஆன்மீக தலைவர்களில் மிகவும் பிரதானமானவர் - வள்ளலார்
தமிழ்ச் சங்கத்தில் வாழ்ந்த பல ஆன்மிக தலைவர்களுள் இராமலிங்கம் எனும் வள்ளலாரும் ஒருவர். உண்மையாகவும், நேர்மையாகவும் வாழ வேண்டும் என்பதற்கு உதாரணமாக இருந்தவர். இந்த உலகத்தில் நல்ல எண்ணங்களும், சிந்தனைகளும் பரவ வேண்டும் என்று கடவுளால் அனுப்பி வைக்கப்பட்டவர் திருவருட்பிரகாச வள்ளலார் என்று போற்றப்படும் சிதம்பரம் இராமலிங்க அடிகள். இறைபணியில் ஆழ்ந்து பயணிக்க தொடங்கிய வள்ளலார்கடவுளின் பெயரில் செய்யப்படும் உயிர்ப்பலியை தடுத்து நிறுத்தினார். மக்களின் பசியை போக்குவதற்காக தருமசாலையை தொடங்கினார். சமய சமரச சுத்த சன்மார்க்கம், சத்திய ஞானசபை போன்றவற்றை நிறுவியுள்ளார்.

இன்று வரை எரியும் 1867 ஆம் ஆண்டு மூட்டப்பட்ட அடுப்பு
ஜாதி, மதம், ஏழை, பணக்காரன் என்ற வித்தியாசம் இல்லாமல், அனைவரையும் தாக்கும் பிணி பசி என்று நம்பியவர் திரு. வள்ளலார் அவர்கள். அதைப் போக்குவதே மாபெரும் தருமம் என்று போதனை செய்தார். அதற்குத் தானே முன்னுதாரணமாகுமாறு, 1867-ம் ஆண்டு வைகாசி மாதம் 11-ம் நாள் வடலூரில் சத்திய தருமச்சாலையை நிறுவினார். அப்போது, அவர் கையால் மூட்டப்பட்டதுதான் இங்கு உள்ள அணையா அடுப்பு'.


தினமும் 1000 பேருக்கு அன்னதானம்
இன்றுவரை, தருமச்சாலையின் தனிச்சிறப்பு அந்த அணையா நெருப்பு. பலரின் பசியைப் போக்குவதே அதன் பொறுப்பு. கடலூர் மாவட்டத்தைப் பொறுத்தமட்டில் சுனாமி, புயல், வெள்ளம் என எந்தப் பேரிடர் வந்தபோதும் தடையின்றி மக்களுக்கு உணவு வழங்கி ஆதரித்துள்ளது இந்த தருமசாலை. எந்தச் சூழலிலும் இந்த நெருப்பு அணைந்தது இல்லை. இங்கு தினமும் மூன்று வேளை சமைக்கப்பட்டு, ஒவ்வொரு வேளைக்கும் ஆயிரக்கணக்கானோருக்கு அன்னதானம் வழங்கபடுகிறது. 
கொரோனா காலகட்டத்திலும் பசியை போக்கிய அணையாத நெருப்பு
"உலகத்தில் தர்மம் உள்ளவரை இந்த அடுப்பு அணையாது, இந்த அடுப்பு உள்ளவரை தர்மம் அணையாது" என்று வள்ளலார் சொன்னது போலவே தர்மத்தின் துணையால் அணையாமல் தொடர்ந்து எரிந்து கொண்டிருக்கிறது ஏழைகளுக்குச் சோறு படைக்கும் அடுப்பு. இந்தியாவில் உள்ள பெரும்பாலான கோயில்களில், தினந்தோறும் வழங்கப்பட்ட அன்னதானம் பொதுமுடக்கத்தால் நிறுத்தப்பட்டது. ஆனால், வடலூர் தர்மசாலை மட்டும் எந்த ஒரு தடங்கலுமின்றி ஆதரவற்றவர்களின் பசிப்பிணியை அனுதினமும் போக்கிக் கொண்டிருக்கிறது. அனைவரையும் முடக்கி வைத்திருந்த கொரோனா கால கட்டத்திலும் கூட தினமும் 1500 பேருக்கு அன்னதானம் வழங்கி பசியை போக்கியது இந்த அணையாத நெருப்பு.

அள்ள அள்ள குறையாத தானியங்கள்
158 ஆண்டுகளாக அந்த நம்பிக்கையைக் காப்பாற்ற எரிந்துகொண்டே இருக்கிறது வள்ளலார் ஏற்றி வைத்த அடுப்பு. அதை அணையாமல் காப்பாற்ற ஆயிரக்கணக்கான தர்ம சிந்தனையுள்ள நெஞ்சங்கள் அங்குள்ள தானியக் களஞ்சியங்களை நிரப்பிக்கொண்டே இருக்கின்றன.எந்த நேரத்திலும் சுமார் ஆறு மாதங்களுக்குத் தேவையான அரிசி மற்றும் பருப்பு போன்றவற்றைச் சேமிப்பில் வைத்திருப்பதால், தொடர்ந்து உணவு வழங்க முடிகிறது என்கின்றனர் ஆலய நிர்வாகிகள்.
அனைவரும் கட்டாயம் தரிசிக்க வேண்டிய ஆலயம்
யோகா' தியானம் போன்றவற்றில் அக்கறை கொண்டு ஞான நிலை அடைந்த வள்ளலார், அவர் உலக மக்கள் அனைவருக்கும் தக்க பல உயரிய கொள்கைகளை உலகத்திற்கு வலியுறுத்து சென்றுள்ளார். வள்ளலார் அவர்கள் அவரின் ஆன்மிக கொள்கை இன்றளவும் அவர்கள் பரப்பப்பட்டு பின்பற்று வருகின்றன. இந்த ஆலயத்திற்கு வாழ்வில் ஒருமுறையேனும் நாம் சென்று வர வேண்டும்.
ஓம் நமசிவாய
 படித்து பகிர்ந்தது 
இரா இளங்கோவன் 
நெல்லிக்குப்பம். 

Followers

முருகன் கையில் வேலும் சேவற்கொடியும் இருக்கக் காரணம்.

முருகன் கையில் வேலும் சேவற்கொடியும் இருக்கக் காரணம் என்ன? கையில் வேலைத் தாங்கியிருப்பதாலேயே வேலன்.மிருகங்களை வேட்டையாடுவதற்குப் ...