Monday, February 2, 2026

செந்துறை நாகல்குழி சிவன்கோயில்

அரியலூர் மாவட்டம் செந்துறை  வட்டம் நாகல்குழி சிவன்கோயில்
 

சோழர்கள் தமது தலைநகரை தஞ்சையில் இருந்து  அரியலூர் மாவட்டம் கங்கை கொண்ட சோழபுரத்திற்கு மாற்றினர். 

ராஜேந்திரன் சோழன் ஆட்சி காலம்  ( கி.பி 1012 முதல் 1044 ) ல் இருந்து  கி.பி 1279 இல் ஆட்சி செய்த சோழர் வம்சத்தின் இறுதி வரை, சோழ_சாம்ராஜ்யத்தின் தலைநகராக 256 ஆண்டுகள் இருந்தது. 
அதுமட்டுமல்ல பிற மாவட்டங்களை  விட அதிக வரலாறு கொண்டதும் இந்த அரியலூர்_ மாவட்டம் தான். பல கிராமங்களில் உள்ள கோயில்கள் வரலாறு சொல்கின்றன.  

நாகல்குழி; இது  ஜெயம்கொண்டத்தின் வடமேற்கில் இலையூர் வழி சென்றால் 11 கிமி தூரத்தில் உள்ளது. சுற்றிலும் முந்திரி மரங்கள் அடர்ந்த வனப்பகுதி,  இங்கு அக்கால பாளையக்காரர்களால் நானூறு ஆண்டுகளுக்குள் கட்டப்பட ஒரு பழமையான சிவத்தலம். போக்குவரத்து இரைச்சல் இன்றி இந்த கோயில் இறைவன்  அமைதியான சூழலில் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார் .

 இப்பகுதியில் பெரும்பாலான ஊர்கள் மரங்களின் பெயர்களை தாங்கி நிற்பதால் நாவல் மரங்கள் அடர்ந்த ஊர் எனும் பெயரில் நாவல் குழி என் அழைக்கப்பட்டிருக்கவேண்டும். 

கிழக்கு நோக்கிய திருக்கோயில்,   முகப்பில் பார்த்தால் ஒரு திண்ணை  வைத்த  ஒட்டு வீடு போன்ற அழகுடன் காட்சியளிக்கிறது. அதன் வழி உள்ளே சென்று பார்த்தால் பெரிய வளாகமாக உள்ளது. இப்பகுதியில் பல சிவாலயங்கள் இந்த முறையில் கட்டப்பட்டு உள்ளன.  கிழக்கு நோக்கிய கருவறை முகப்பில் ஒரு மண்டபம் எதிரில் நந்தி பலிபீடமும் உள்ளது. தெற்கு நோக்கிய அம்பிகை கருவறை 

இறைவன் காசி விஸ்வநாதர். இறைவி காசி விசாலாட்சி. 

கருவறை கோட்டங்களில் தென்முகன் சிறிய அளவில் உள்ளார். வடக்கில் துர்கையம்மன் உள்ளார்.  உயர்ந்த மதில் சுவற்றினை ஒட்டி விநாயகர் முருகன் சிற்றாலயங்கள் உள்ளன. சண்டேசர் சன்னதி  உள்ளது.  வடகிழக்கில் நவக்கிரக சன்னதி உள்ளது. சூரியன் சனீஸ்வரன் உள்ளனர். 

எளிய அழகுடன் கோயில் நன்றாக உள்ளது. இப்பகுதியின் வழி செல்லும் போது அனைவரும் இறைவனை தவறாமல் தரிசனம் செய்து செல்ல வேண்டும். 

எல்லோரும் எல்லாமும் பெறவேண்டும் என முன்னோர்கள் கட்டி வைத்த கோயிலை உள்ளூர் மக்கள் நல்ல முறையில் வைத்து பூஜைகள் செய்விக்கின்றனர், நாமும் பல ஆயிரம் மக்கள் கூட்டத்தில் ஒருவராக வந்து செல்லும் கோயிலில் நின்று சலிக்காமல்,  இது போன்ற கிராமங்களுக்கு வந்து தரிசனம் செய்தல் வேண்டும்.   அவர்களுக்கு ஊக்கம் தரும் வண்ணம் பூஜை பொருட்களை வாங்கி அளித்து இறைவன் அருள் பெற வேண்டும். 

ஓம் நமசிவாய 
படித்து பகிர்ந்தது 
இரா இளங்கோவன் 
நெல்லிக்குப்பம். 

பெருங்களத்தூர் ஆலப்பாக்கம் சதானந்த ஸ்வாமிகள்.

பெருங்களத்தூர் ஆலப்பாக்கம் சதானந்த ஸ்வாமிகள்
ஆலப்பாக்கம் ஸ்ரீ சதானந்த ஸ்வாமிகள் யார், அவர் எங்கிருந்து வந்தார் , அவருடைய தாய் தந்தை யார் என்ற விவரம் தெரியவில்லை. ஆனால் அவரை 1909 ஆம் ஆண்டு ஆலப்பாக்கத்திற்கு சாது ஸ்ரீ நாராயண ஸ்வாமி என்பவர் அழைத்து வந்துள்ளார். ஸ்ரீ நாராயண ஸ்வாமி அவர்களும் போலீஸ் உத்யோகத்தில் இருந்தவராம். சாது திரு நாராயண ஸ்வாமியின் தந்தையான திரு சிதம்பரம் என்பவரும், மாமனான ஸ்ரீ முருகானந்த ஸ்வாமியாரும் போலிஸ் வேலையில் இருந்து ஒய்வு பெற்றவர்கள். ஆக ஒரே குடும்பத்தில் இருந்த மூன்று பேர்களில் இருவர் ஒய்வு பெற்று விட்டவுடன் மூன்றாவதான சாது ஸ்ரீ நாராயணஸ்வாமி சில ஆண்டுகளுக்குப் பின்னால் தானும் வேலையை ராஜினமா செய்து விட்டு தனது குருவான ஸ்ரீ சதானந்த ஸ்வாமி அவர்களை அழைத்துக் கொண்டு ஆலப்பாக்கத்திற்கு வந்து விட்டாராம். திரு நாராயணஸ்வாமிக்கு பிறந்த மூன்று குழந்தைகளில் ஒருவரான ஸ்ரீ துளசிங்கம் மூலமாகவே நமக்கு ஆலப்பாக்கம் ஸ்ரீ சதானந்த ஸ்வாமிகளின் வாழ்க்கை பற்றிய செய்தி கிடைத்து உள்ளது. தற்போது ஸ்ரீ துளசிங்கம் அவர்களும் சமாதி அடைந்து விட்டார்.
ஸ்ரீ நாராயணஸ்வாமி எதற்காக போலிஸ் உத்தியோகத்தை ராஜினமா செய்து விட்டு வந்து அவரும் ஒரு சாதுவாக மாறினார் ? அதற்கு ஒரு பின்னணி கதை உண்டு. போலிஸ் உத்தியோகத்தில் இருந்தபோது திரு நாராயணஸ்வாமி திருவிலக்கேணிப் பகுதியில் தங்கி இருந்தார். அவருக்கு திருமணம் ஆகி பத்து வருடங்கள் ஆகியும் குழந்தைகள் எதுவும் இல்லை.

அப்போது சென்னையில் நிறைய இடங்களில் திருட்டுக்கள் நடந்து வந்தன. திருடர்களை கண்டு பிடிப்பது கடினமாக இருந்தது. அந்த திருடர்கள் கோஷ்டியில் ஆறு நபர்கள் இருந்தனராம். அவர்கள் ஒருமுறை ஒரு வீட்டில் துணிமணிகள் மற்றும் சாமான்களை திருடிக் கொண்டு வந்து அவற்றை பின்னர் எடுத்துச் செல்லலாம் என்று எண்ணிக் கொண்டு சைதாப்பேட்டை அருகில் ஆற்றின் பக்கத்தில் இருந்த ஒரு தாழம்பூ புதரில் புதைத்து வைத்து விட்டார்கள்.

அதே நேரத்தில் அந்தத் திருட்டு நடந்ததும் ஸ்ரீ நாராயணஸ்வாமியின் மேல் அதிகாரியாக இருந்தவர் திரு நாராயணஸ்வாமி மற்றும் அவருடன் பணியாற்றி வந்த முஸ்லிம் மதத்தை சேர்ந்த ஒரு போலிஸ்காரரிடம் என இருவரிடமும் ‘நீங்கள் அந்த திருடர்களைப் உடனடியாக கண்டு பிடிக்காவிடில் உங்களை பணியில் இருந்து நீக்கி விடுவேன்’ எனக் கடிந்து கொள்ள இருவரும் மன வருத்தத்துடன் அது பற்றி பேசிக் கொண்டே சென்னையில் எக்மோர் எனும் பகுதியில் உள்ள கண் சிகிச்சை மருத்துவ மனை வழியே நடந்து கொண்டு வருகையில் கன்னிமாரா வாசகசாலை அருகில் உள்ள ஆற்றங்கரை பாலத்தின் மீது அமர்ந்து இருந்த ஒரு சாமியார் அவர்களுக்கு மிகவும் பழக்கமானவரைப் போல ‘நாராயணா….நாராயணா..இங்கே வா’ என திரு நாராயணஸ்வாமியை அழைத்தார். அவரே பிற்காலத்தில் அவருக்கு குருவான ஸ்ரீ சதானந்த ஸ்வாமிகள் ஆவார்.
அதைக் கேட்ட அவருடைய போலிஸ் நண்பரான முஸ்லிம் பாய் ‘யாரோ ஒரு கிழவன் உன்னை பேர் சொல்லி அழைக்கின்றான் பார்’ எனக் கேலியாகக் கூற அடுத்த கணம் ஸ்ரீ சதானந்த ஸ்வாமிகள் அந்த முஸ்லிம் பாயின் பெயரையும் கூறி இருவரையும் தன் அருகில் வருமாறு செய்கை காட்டினார். அவர்களும் அவர் அருகில் சென்று ‘எங்களை உனக்கு எப்படித் தெரியும்?. எங்களை எதற்காக அழைத்தாய்?’ என்று கோபமாகக் கேட்க அவர் தயங்காமல் ‘உடனே நீங்கள் இருவரும் இங்கிருந்து கிளம்பிச் சென்று நீங்கள் தேடும் திருடனை பிடியுங்கள். அவர்கள் இப்போது சைதாப்பேட்டை அருகில் ஆற்றின் பக்கத்தில் ஒரு தாழம்பூ புதரில் திருடிய பொருட்களை புதைத்து வைத்து விட்டு அமர்ந்து கொண்டு இருக்கின்றார்கள் . உடனே சென்றால் அவர்களைப் அங்கு பிடித்து விடலாம்’ என்றார்.
அதைக் கேட்ட அவர்கள் அவர் மீது சந்தேகம் அடைந்து ‘சரி நீங்கள் கூறியது நிஜம் என்றால் உடனே அந்த இடத்துக்கு நாங்கள் கிளம்பிச் சென்று அவர்களைப் பிடித்து வருகிறோம். ஆனால் அதுவரை நீங்கள் இங்கேயே இருப்பீர்களா’ எனக் கேட்க அந்த சாமியார் கூறினார் ‘நான் இங்கே இருந்தாலும் இருப்பேன், இல்லை என்றால் இல்லை. அதற்கு உறுதி தர முடியாது. உங்களுக்கு தேவை என்றால் அவர்களை உடனே சென்று பிடித்துச் செல்லுங்கள். இல்லை என்றால் உங்கள் வழியில் செல்லுங்கள். எனக்கு அதனால் ஒன்றும் ஆகப் போவது இல்லை ‘ என்று கூறி விட்டார்.

ஆகவே எதோ ஒரு உந்துதலில் அவர்கள் ஸ்ரீ சதானந்த ஸ்வாமிகள் கூறிய இடத்துக்கு சென்று பார்க்க முடிவு செய்தார்கள். அந்த காலங்களில் வாகன வசதிகள் அதிகம் கிடையாது. பஸ்களும் இல்லை. ட்ராம் வண்டியே இருந்தது. ஆகவே அந்த இரண்டு போலிஸ்காரர்களும் ஒரு ஜட்கா வண்டியை எடுத்துக் கொண்டு அந்த சாமியார் கூறிய இடத்துக்குப் போய் அங்கிருந்த ஆறு திருடர்களையும் கையும் களவுமாக பிடித்து விட்டார்கள். வேலையில் நல்ல பெயரும் பெற்றார்கள். அடுத்து அவர்கள் எக்மோருக்கு அருகில் இருந்த ஆற்றின் கரைக்கு வந்து அந்த இடத்தில் சாமியாரை தேடினார்கள். ஆனால் அவரைக் காணவில்லை. அது முதல் திரு நாராயணஸ்வாமிக்கு அந்த சாமியாரை எப்படியாவதுக் காண வேண்டும் என்ற ஆவல் ஏற்பட்டது .

அந்த காலத்திலும் மாநிலத்தின் ஆளுநர் (கவர்னர்) சாலையில் செல்லும்போது சாலைக் காவலுக்கு போலிஸ்காரர்கள் ஆங்காங்கே நிற்பார்கள். ஒரு நாள் கவர்னர் செல்ல இருந்த சாலையில் காவல் பணியில் இருந்த ஸ்ரீ நாராயணஸ்வாமி அந்த சாலையில் சென்று கொண்டு இருந்த ட்ராம் வண்டியில் தமக்கு திருடர்களைப் பிடிக்க உதவிய அந்த ஸ்ரீ சதானந்த ஸ்வாமிகள் செல்வதைப் பார்த்தார். ஆவலுடன் ஓடிச் சென்று அந்த ட்ராம் வண்டியில் தானும் ஏறிக் கொள்ள ஸ்ரீ சதானந்த ஸ்வாமிகள் கூவினாராம் ‘நாராயண…என்னைக் காண வேண்டும் என்பதற்காக ஓடி வந்து இந்த ட்ராம் வண்டியில் ஏறிக் கொண்டு விட்டாயே. உனக்கு மாத சம்பளம் கொடுக்கும் அரசாங்கத்தினர் பணியை விட்டு விட்டு இப்படி என்னைத் தொடர்ந்ததைக் குறித்து உன்னை கேள்வி கேட்டால் என்ன பதில் சொல்வாய் ?.

ஸ்ரீ நாராயணஸ்வாமி அதற்கு பதில் கூறவில்லை. மௌனமாக ஸ்ரீ சதானந்த ஸ்வாமிகள் எங்கு செல்கிறார் என்பதைக் கண்டுபிடிக்க ஸ்ரீ சதானந்த ஸ்வாமிகளை பின் தொடர்ந்து சென்றார். அந்த ஸ்ரீ சதானந்த ஸ்வாமிகள் மயிலாப்பூரில் இறங்கி கபாலீஸ்வரர் ஆலயத்து சன்னதியில் சென்று நின்று கொண்டதைக் கண்டு பிடித்தப் பின் அங்கிருந்து மீண்டும் கிளம்பி வந்து தான் காவலுக்கு நிற்க வேண்டிய இடத்தில் வந்து நின்று கொண்டார். ஆனால் அதிசயமாக அவருடைய அதிகாரிகள் அவரிடம் ‘வேலை நேரத்தில் எங்கு சென்றுவிட்டாய்’ என ஒரு கேள்வியும் கேட்காமல் இருந்ததைக் கண்டு அந்த சாமியார் மீது மேலும் அதிக பக்தியும் மரியாதையும் ஏற்பட்டுவிட்டது. தினமும் அந்த ஆலயத்தின் அருகில் உள்ள குளக்கரையில் குளித்துவிட்டு அமர்ந்து இருந்த ஸ்ரீ சதானந்த ஸ்வாமிகளை  ஒரு முறையாகிலும் சென்று சந்திக்காமல் இருந்தது இல்லை. இப்படியாக இருக்கையில் ஒருநாள் அந்த சாமியார் ஸ்ரீ நாராயணஸ்வாமியிடம் ‘இதோ பார்…நீ தொடர்ந்து போலிஸ் வேலையில் இருந்தால் தவறுகளை மீண்டும் மீண்டும் செய்து கொண்டே இருப்பாய். ஆகவே உனக்கு ஊரில் நிலபுலன் இருந்தால் போலிஸ் வேலையை ராஜினமா செய்துவிட்டு அங்கு போய் விவசாயம் செய்து பிழைத்துக் கொள். இல்லை என்றால் இனி என்னைக் காண இங்கு வராதே’ எனக் கடுமையாகக் கூறி விட ஸ்ரீ நாராயணஸ்வாமி மறுநாள் தயங்காமல் தனது போலிஸ் வேலையை ராஜினமா செய்து விட்டு ஸ்ரீ சதானந்த ஸ்வாமிகளை அழைத்துக் கொண்டு ஆதம்பாக்கத்திற்கு வந்து விட்டார். அங்கு வந்ததும் ஸ்ரீ நாராயணஸ்வாமியின் குடும்பத்தினர் 58 சென்ட் நிலத்தை ஆலப்பாக்கம் ஸ்ரீ சதானந்த ஸ்வாமிகளுக்கு எழுதிக் கொடுத்து விட ஸ்ரீ சதானந்த ஸ்வாமிகளும் அதில் ஒரு குடுசை போட்டுக் கொண்டு தங்கிக் கொண்டு திருவிடைமருதூர் அவதூத மௌன சாமியாரிடம் தீட்ஷையாக பெற்றுக் கொண்ட நவகண்ட யோகத்தை செய்து வந்தார்.

ஸ்ரீ சதானந்த ஸ்வாமிகள் ஆலப்பாக்கம் கிராமத்தில் மெல்ல மெல்ல பிரபலமாகத் துவங்கினார். அப்போது ஸ்ரீ சதானந்த ஸ்வாமிகள் வயது சுமார் 90 இருக்கும். அவர் நவகண்ட யோகம் செய்யும்போது யாரும் அவர் அனுமதி பெறாமல் உள்ளே சென்று அவரை தரிசிக்கக் கூடாது. அவரைக் காண வேண்டும் எனில் வெளியில் நின்றவாறு கையைத் தட்டி சப்தம் செய்து ‘ஸ்வாமி….ஸ்வாமி ‘ என அழைத்து விட்டுத்தான் உள்ளே செல்ல வேண்டும். ஆலப்பாக்கத்தின் மக்கள் அவரைக் கேட்காமல் எந்த முக்கியக் காரியத்தையும் செய்ய மாட்டார்கள் எனும் அளவுக்கு ஆலப்பாக்கம் ஸ்ரீ சதானந்த ஸ்வாமிகள் புகழ் பரவியது. ஆகவே நாளாக நாளாக தன்னிடம் வந்து நச்சரிக்கும் மக்களின் தொந்தரவைப் பொறுத்துக் கொள்ள முடியாமல் போன அந்த சாமியார் அந்த கிராமத்தின் வடக்குப் பக்கத்தில் ஒரு இடம் இருந்தால் தொந்தரவு இன்றி தான் அங்கு சென்று தான் தங்கிக் கொள்ள முடியும் என திரு நாராயண ஸ்வாமியிடம் கூற அவர் ஸ்ரீ சதானந்த ஸ்வாமிகள் கேட்ட இடத்தில் இருந்த தன்னுடைய ஒரு ஏக்கர் நிலத்தை தானமாகத் தந்தார். அதைக் கண்ட ஊர் மக்களும் ஸ்ரீ சதானந்த ஸ்வாமிகளுக்கு ஐந்து ஏக்கர் நிலத்தை தம் சார்பாக அவருக்கு தானமாகத் தர அந்த சாமியாரும் அங்கேயே சென்று தங்கி ஒரு ஆஸ்ரமம் அமைத்து அங்கிருந்தபடி தம்மை நாடி வந்த மக்களுக்கும் ஊராருக்கும் தொண்டு செய்து வந்தார். இப்படியாக மக்களுக்கு ஆன்மீக சேவை செய்து வந்த ஆலப்பாக்கம் ஸ்ரீ சதானந்த ஸ்வாமிகள்  1922 ஆம் ஆண்டு ஜீவ சமாதி அடைந்தார்.


 சதானந்த ஸ்வாமியின் 90  வது குரு பூஜை  விழா 
ஸ்ரீ  சதானந்த ஸ்வாமியின் சீடர்கள் சமாதி 

அதுவரை குழந்தையே பிறக்காமல்  இருந்த ஸ்ரீ நாராயணஸ்வாமிக்கு,  ஸ்ரீ சதானந்த ஸ்வாமிகள் அங்கு வந்து தங்கிய  பின்னர்தான்  மூன்று குழந்தைகள் பிறந்தார்கள். பெரியவள் பெண். மற்ற இருவரும் ஆண்கள். அவர்களில் ஒருவரே திரு துளசிங்கம் ஆவார். ஆசிரமம் அமைந்ததும் திரு நாராயணஸ்வாமிக்கு ஸ்ரீ சதானந்த ஸ்வாமிகள் ஒரு கடுமையான உத்தரவு போட்டார். ‘ உன்னுடைய மகள் திருமணம் ஆகும்வரை எனக்கு இங்கு வந்து தொண்டு செய்யக் கூடாது. நடு இரவில் வீட்டை விட்டு வரக் கூடாது’ .

ஸ்ரீ சதானந்த ஸ்வாமிகள் கூறிய கட்டளையை சிரத்தையுடன் மேற்கொண்ட  சாது ஸ்ரீ நாராயணஸ்வாமி தனது மகளை திருமணம் செய்து கொடுத்தப் பின் வீட்டை துறந்து விட்டு அவருடைய நண்பரான சாது ஸ்ரீவேல்சாமி என்பவருடன் சேர்ந்து ஆஸ்ரமத்திற்குச் சென்று அங்கேயே தங்கி பணிவிடைகள் செய்து கொண்டு இருந்தார். அந்த காலங்களில் திருமணங்கள் மிகச் சிறிய வயதிலேயே நடந்து விடும். ஆகவேதான் சாது ஸ்ரீ நாராயணஸ்வாமியின் மகளுக்கும் விவாகம் விரைவில் நடந்தது. அப்போது ஸ்ரீ துளசிங்கத்திற்கு வயது ஒன்பதாகியது. அவருடைய தம்பியின்  வயது ஆறு ஆயிற்று. ஆண்டுகள் கடந்தன. 1935 ஆம் ஆண்டு சாதுவாகி விட்ட ஸ்ரீ நாராயணஸ்வாமியும் ஜீவ சமாதி அடைந்தார்.

அவர் ஜீவ சமாதி ஆவதற்கு இரண்டு நாட்களுக்கு முன்னரே தான்  சமாதி அடையப் போகும் விஷயத்தை தன் வீட்டாரிடம் கூறினார். அப்போது சாது ஸ்ரீ நாராயணஸ்வாமியை சந்தித்த அவரது சகோதரி ‘அண்ணா நீ வீட்டில் வந்து சமாதி அடைய வேண்டும் . உன் உடலை வீட்டிற்கு எடுத்து வந்து பூஜை செய்து கல்வெட்டு லிங்கம் போட வேண்டும்’ என தன் விருப்பத்தைக் கூறினாள். அதற்கு சம்மதித்த சாது ஸ்ரீநாராயணஸ்வாமி அங்கு செல்ல  ஒரு நிபந்தனைப் போட்டார்.   ‘வீட்டிற்கு வந்து சமாதி அடைந்தால் தனக்காக யாரும் ஒரு சொட்டு கண்ணீர் விடக் கூடாது. மேலும் எந்தவிதமான காரியங்களையும் செய்யாமல் கற்பூரம் மட்டுமே ஏற்றி வைத்து சமாதி செய்ய வேண்டும்’  என்பதே நிபந்தனை.

அதைத் தவிர தன்னை எப்படி சமாதி செய்ய வேண்டும் என்பதையும் அவருடைய சகோதரிக்கும் கடைசி மகனுக்கும் எடுத்துக் கூறினார். அவர் விருப்பத்தை ஏற்று சமாதி அடைய இருந்த தினத்தன்று அவரை வீட்டிற்கு அழைத்து வந்தார்கள். அன்று இரவு 12 மணி இருக்கும். வெளிச் சாலையில் இருந்து ‘நாராயணா…நாராயணா’ என மூன்று முறை யாரோ அழைக்கும் சப்தம் கேட்டது. வெளியில் சென்று பார்த்தால் அங்கு யாருமே தென்படவில்லை. அவர்கள் உடனே உள்ளே சென்று சாது ஸ்ரீ நாராயணஸ்வாமியைப் பார்க்க உட்கார்ந்து இருந்தவர் தனது வாயை இரண்டு முறை திறந்து மூடிக் கொள்ள அப்படியே அமர்ந்த நிலையிலேயே 1935 ஆம் வருடம்  ஜீவ சமாதி அடைந்தார். அவர் சமாதி அடைந்ததை நேரிலேயே இருந்து பார்த்தார் அவருடைய இரண்டாம் மகனான ஸ்ரீ துளசிங்கம் அவர்கள் .
சாது ஸ்ரீநாராயண ஸ்வாமி விருப்பபடியே யாருமே ஒரு சொட்டு கண்ணீரும் விடவில்லை. அவர் கூறி இருந்தபடியே கற்பூரம் மட்டுமே ஏற்றி விட்டு அவரை சமாதி செய்தார்கள். ஒரு பண்டாரத்தைக் கொண்டு நாற்பது நாட்கள் பூஜை செய்து கல்வெட்டு லிங்கம் அமைத்தார்கள்.

அவர் சமாதி ஆன இரண்டு ஆண்டுகளில் அவர் நண்பராக இருந்த சாது ஸ்ரீ வேல்முருகனும் சமாதி அடைந்தார். அதன் பின் 19.12.2003 ஆம் ஆண்டு ஸ்ரீ துளசிங்கமும் சமாதி அடைந்தார்.

ஸ்ரீ சதானந்த ஸ்வாமிகளின் சீடர்கள் 
———————————————————-
ஸ்ரீ நாராயண ஸ்வாமிகள்
ஸ்ரீ வேலு ஸ்வாமிகள்
ஸ்ரீ பிச்சை ஸ்வாமிகள்
ஸ்ரீ அகண்டபுரி ஸ்வாமிகள்
ஸ்ரீ மாயா ஸ்வாமிகள்
ஸ்ரீ கோபால் ஸ்வாமிகள். 

ஓம் நமசிவாய 
படித்து பகிர்ந்தது 
இரா இளங்கோவன் 
நெல்லிக்குப்பம். 

Saturday, January 31, 2026

வாழ்க்கை வளம் பெற வள்ளலார் கூறிய போதனைகள்.

வள்ளலார்_கூறிய_அற்புதமான வாழ்க்கை_போதனைகள்......
🪔வள்ளலாரின் மிக முக்கியமான இரண்டு அம்சங்களான 'பசிப்பிணி போக்கும் சேவை' மற்றும் 'அருட்பெருஞ்ஜோதி அகவல்' பற்றி விரிவாகக் காண்போம்:🪔🪔🪔

🔥1. பசிப்பிணி போக்கும் சேவை (சத்திய தருமச்சாலை)
வள்ளலார் "பசி" என்பதை ஒரு பெரும் நோயாகக் கருதினார். பசியோடு இருப்பவனுக்குத் தத்துவம் பேசுவது வீண் என்று அவர் நம்பினார்.
 
🔥அணையாத அடுப்பு: 1867-ஆம் ஆண்டு வடலூரில் சத்திய தருமச்சாலையைத் தொடங்கினார். அன்று அவர் ஏற்றி வைத்த அடுப்பு,150 ஆண்டுகளுக்கும் மேலாக அணையாமல் பல்லாயிரக்கணக்கான மக்களுக்குத் தினமும் பசி போக்கி வருகிறது.
 
🔥* ஜீவகாருண்யம்: "பசியினால் இளைத்து வரும் ஏழைகளுக்கு ஆகாரங் கொடுப்பதே மேலான புண்ணியம்" என்பது அவர் வாக்கு.
 
🔥* மரணமிலாப் பெருவாழ்வு: ஒரு மனிதன் ஆன்மீகத்தில் உயர வேண்டுமென்றால், முதலில் அவன் உடல் பசியின்றி இருக்க வேண்டும் என்பது வள்ளலாரின் அடிப்படை விதி.

🔥2. அருட்பெருஞ்ஜோதி அகவல்
வள்ளலார் பாடிய பாடல்களிலேயே மிகவும் புனிதமானதாகவும், உயர்ந்ததாகவும் கருதப்படுவது இந்த 'அகவல்' ஆகும்.
 
🔥* மிக நீண்ட பாடல்: இது 1596 வரிகளைக் கொண்ட ஒரே பாடலாகும்.

🪔🪔🪔அனுபவப் பதிவு🪔🪔🪔: 
அவர் இறைவனை (அருட்பெருஞ்ஜோதி) எப்படிக் கண்டார், அவருக்குள் ஏற்பட்ட ஆன்மீக மாற்றங்கள் என்ன என்பதை இதில் விவரித்துள்ளார்.🪔🪔

🔥* மந்திர வரி: > "அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி"🪔

🪔என்னும் புகழ்பெற்ற வரிகள் இந்த அகவலில் இருந்தே கிடைத்தன.🪔
🔥3. வள்ளலாரின் முக்கியமான புரட்சிகரமான கருத்துக்கள்:
 
🔥சாதி மறுப்பு: "சாதியும் மதமும் சமயமும் பொய்" என்று துணிச்சலாகக் கூறினார்.
 
🔥உயிர்க்கொலை எதிர்ப்பு: இறைவனுக்கு உயிர்களைப் பலியிடுவதைக் கடுமையாக எதிர்த்தார். 

🔥புலால் (இறைச்சி) உண்பதைத் தவிர்க்கச் சொன்னார்.

🔥 ஒளி வழிபாடு: சிலைகளை வணங்குவதை விட, அறிவாகிய ஒளியை (ஜோதி) வணங்குவதே சிறந்தது என்றார்.

🔥"வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன்" 🔥

என்ற அந்த ஒற்றை வரி, அனைத்து உயிர்கள் மீதும் அவர் கொண்டிருந்த எல்லையற்ற கருணையை உணர்த்துகிறது.🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔
#வாழ்க்கை_நிகழ்வு
#வடலூர்_சத்திய_ஞானசபையில் #நேரடியாக_எடுத்த_பட #தொகுப்புக்கள்...

வாழ்வென்பது உயிர் உள்ளவரை.........!!!
*தேவைக்கு செலவிடு........
*அனுபவிக்க தகுந்தன அனுபவி......
*இயன்ற வரை பிறருக்கு பொருளுதவி செய் மற்றும் ஜீவகாருண்யத்தை கடைபிடி.....

இனி அநேக ஆண்டுகள் வாழப்போவதில்லை......
*போகும்போது எதுவும் கொண்டு செல்லப்போவதுமில்லை......
*ஆகவே.......அதிகமான சிக்கனம் அவசியமில்லை. .

மடிந்த பின் என்ன நடக்கும் என்று குழம்பாதே...
*உயிர் பிரிய தான் வாழ்வு...... ஒரு நாள் பிரியும்.....
*சுற்றம், நட்பு, செல்வம் எல்லாமே பிரிந்து விடும்.

உயிர் உள்ளவரை, ஆரோக்கியமாக இரு......
*உடல்நலம் இழந்து பணம் சேர்க்காதே.....

உன் குழந்தைகளை பேணு......
*அவர்களிடம் அன்பாய் இரு.......
*அவ்வப்போது பரிசுகள் அளி......
*அவர்களிடம் அதிகம் எதிர்பாராதே........
*அடிமையாகவும் ஆகாதே.........
*பெற்றோர்களை மதிக்கும் குழந்தைகள் கூட பாசமாய் இருந்தாலும், பணி காரணமாகவோ,சூழ்நிலை கட்டாயத்தாலோ உன்னை கவனிக்க இயலாமல் தவிக்கலாம், புரிந்து கொள்.......!!!
*அதைப்போல
*பெற்றோரை மதிக்காத குழந்தைகள்,உன் சொத்து பங்கீட்டுக்கு-சண்டை போடலாம்......
உன் சொத்தை தான் அனுபவிக்க,
நீ சீக்கிரம் சாக வேண்டுமென வேண்டிக் கொள்ளலாம்.. 
பொறுத்து கொள்.
அவர்கள் உரிமையை மட்டும் அறிவர்,கடமை ,அன்பை அறியார்.

அவரவர் வாழ்வு, அவரவர் விதிப்படி என அறிந்துகொள்.
*இருக்கும்போதே குழந்தைகளுக்கு கொடு ஆனால்......நிலைமையை அறிந்து அளவோடு கொடு எல்லாவற்றையும் தந்துவிட்டு, பின் கை ஏந்தாதே 

*எல்லாமே இறந்த பிறகு என,உயில் எழுதி வைத்திராதே....நீ எப்போது இறப்பாய் என-எதிர்பார்த்து காத்திருப்பர்.....எனவே கொடுப்பதை கொடுத்து விடு,தரவேண்டியதை பிறகு கொடு.

*மாற்ற முடியாததை மாற்ற முனையாதே,

*மற்றவர் குடும்ப நிலை கண்டு, பொறாமையால் வதங்காதே.....!!!*

அமைதியாக மகிழ்ச்சியோடு இரு....
*பிறரிடம் உள்ள நற்குணங்களை கண்டு பாராட்டு..நண்பர்களிடம் அளவளாவு.

*நல்ல உணவு உண்டு....நடை பயிற்சி செய்து.....உடல் நலம் பேணி......இறை பக்தி கொண்டு......குடும்பத்தினர்-நண்பர்களோடு கலந்து உறவாடி மனநிறைவோடு வாழ்- இன்னும்......இருபது, முப்பது, நாற்பது ஆண்டுகள். சுலபமாக ஓடிவிடும்...!!

*வாழ்வை கண்டு களி...ரசனையோடு வாழ்.....வாழ்க்கை வாழ்வதற்கே,

நான்கு நபர்களை புறக்கணி....
மடையன்
சுயநலக்காரன்
முட்டாள்
ஓய்வாக இருப்பவன்

நான்கு நபர்களுடன் தோழமை கொள்ளாதே.....
பொய்யன்
துரோகி
பொறாமைக்கைரன்
மமதை பிடித்தவன்

நான்கு நபர்களுடன் கடினமாக நடக்காதே.... 
அனாதை
ஏழை
முதியவர்
நோயாளி

நான்கு நபர்களுக்கு உனது கொடையை தடுக்காதே.....
மனைவி
பிள்ளைகள்
குடும்பம்
 சேவகன்

நான்கு விசயங்களை ஆபரணமாக அணி....
பொறுமை
சாந்த குணம்
அறிவு
அன்பு

நான்கு நபர்களை வெறுக்காதே.....
தந்தை
தாய்
சகோதரன்
சகோதரி

நான்கு விசயங்களை குறை.....
உணவு
தூக்கம்
சோம்பல்
பேச்சு

நான்கு விசயங்களை தூக்கிப்போடு....
துக்கம்
கவலை
இயலாமை
கஞ்சத்தனம்

நான்கு நபர்களுடன் சேர்ந்து இரு......
மனத்தூய்மை உள்ளவன்
வாக்கை நிறைவேற்றுபவன்
கண்ணியமானவன்
உண்மையாளன்

நான்கு விசயங்கள் செய்.....
தியானம் , யோகா
நூல் வாசிப்பு
உடற்பயிற்சி
சேவை செய்தல்

வாழ்க்கை வளம் பெற இத்தகைய செயல்களை நாமும் கடைபிடிப்போம்.....

-ஓம் நமசிவாய
 படித்து பகிர்ந்தது 
இரா இளங்கோவன் 
நெல்லிக்குப்பம். 

வடலூரில் 158 ஆண்டுகளாக அணையாத அதிசய அடுப்பு

*158 ஆண்டுகளாக அணையாத அடுப்பு*
 தினமும் 1,000 பேருக்கு வயிறார அன்னதானம்!
அருட் பெரும் ஜோதி வள்ளலாரை பற்றி அறியாதவர்கள் கூட அவரின் 'வாடிய பயிரை கண்ட போதெல்லாம் வாடினேன்' எனும் இந்த பிரபல வாக்கியத்தை நிச்சயம் கேட்டு இருப்பார்கள். கடலூர் மாவட்டம் வடலூரில் 1867-ம் ஆண்டு, மே மாதம் 23-ம் தேதி வள்ளலார் ஏற்றி வைத்த அடுப்பு சாமானியர்களின் பசியைப் போக்குவதற்காக இன்னமும் எரிந்துகொண்டேதான் இருக்கிறது. இன்றைய தேதிக்கு தினமும் 1,300 முதல் 1,500 பேரின் பசியைப் போக்கி வருகிறது வள்ளலார் மூட்டிய இந்த அணையா அடுப்பு. இது நிச்சயம் தமிழகத்தில் பிறந்த ஒவ்வொருவரும் கட்டாயம் பார்க்க வேண்டிய அற்புத இடமாகும்!
தமிழக ஆன்மீக தலைவர்களில் மிகவும் பிரதானமானவர் - வள்ளலார்
தமிழ்ச் சங்கத்தில் வாழ்ந்த பல ஆன்மிக தலைவர்களுள் இராமலிங்கம் எனும் வள்ளலாரும் ஒருவர். உண்மையாகவும், நேர்மையாகவும் வாழ வேண்டும் என்பதற்கு உதாரணமாக இருந்தவர். இந்த உலகத்தில் நல்ல எண்ணங்களும், சிந்தனைகளும் பரவ வேண்டும் என்று கடவுளால் அனுப்பி வைக்கப்பட்டவர் திருவருட்பிரகாச வள்ளலார் என்று போற்றப்படும் சிதம்பரம் இராமலிங்க அடிகள். இறைபணியில் ஆழ்ந்து பயணிக்க தொடங்கிய வள்ளலார்கடவுளின் பெயரில் செய்யப்படும் உயிர்ப்பலியை தடுத்து நிறுத்தினார். மக்களின் பசியை போக்குவதற்காக தருமசாலையை தொடங்கினார். சமய சமரச சுத்த சன்மார்க்கம், சத்திய ஞானசபை போன்றவற்றை நிறுவியுள்ளார்.

இன்று வரை எரியும் 1867 ஆம் ஆண்டு மூட்டப்பட்ட அடுப்பு
ஜாதி, மதம், ஏழை, பணக்காரன் என்ற வித்தியாசம் இல்லாமல், அனைவரையும் தாக்கும் பிணி பசி என்று நம்பியவர் திரு. வள்ளலார் அவர்கள். அதைப் போக்குவதே மாபெரும் தருமம் என்று போதனை செய்தார். அதற்குத் தானே முன்னுதாரணமாகுமாறு, 1867-ம் ஆண்டு வைகாசி மாதம் 11-ம் நாள் வடலூரில் சத்திய தருமச்சாலையை நிறுவினார். அப்போது, அவர் கையால் மூட்டப்பட்டதுதான் இங்கு உள்ள அணையா அடுப்பு'.


தினமும் 1000 பேருக்கு அன்னதானம்
இன்றுவரை, தருமச்சாலையின் தனிச்சிறப்பு அந்த அணையா நெருப்பு. பலரின் பசியைப் போக்குவதே அதன் பொறுப்பு. கடலூர் மாவட்டத்தைப் பொறுத்தமட்டில் சுனாமி, புயல், வெள்ளம் என எந்தப் பேரிடர் வந்தபோதும் தடையின்றி மக்களுக்கு உணவு வழங்கி ஆதரித்துள்ளது இந்த தருமசாலை. எந்தச் சூழலிலும் இந்த நெருப்பு அணைந்தது இல்லை. இங்கு தினமும் மூன்று வேளை சமைக்கப்பட்டு, ஒவ்வொரு வேளைக்கும் ஆயிரக்கணக்கானோருக்கு அன்னதானம் வழங்கபடுகிறது. 
கொரோனா காலகட்டத்திலும் பசியை போக்கிய அணையாத நெருப்பு
"உலகத்தில் தர்மம் உள்ளவரை இந்த அடுப்பு அணையாது, இந்த அடுப்பு உள்ளவரை தர்மம் அணையாது" என்று வள்ளலார் சொன்னது போலவே தர்மத்தின் துணையால் அணையாமல் தொடர்ந்து எரிந்து கொண்டிருக்கிறது ஏழைகளுக்குச் சோறு படைக்கும் அடுப்பு. இந்தியாவில் உள்ள பெரும்பாலான கோயில்களில், தினந்தோறும் வழங்கப்பட்ட அன்னதானம் பொதுமுடக்கத்தால் நிறுத்தப்பட்டது. ஆனால், வடலூர் தர்மசாலை மட்டும் எந்த ஒரு தடங்கலுமின்றி ஆதரவற்றவர்களின் பசிப்பிணியை அனுதினமும் போக்கிக் கொண்டிருக்கிறது. அனைவரையும் முடக்கி வைத்திருந்த கொரோனா கால கட்டத்திலும் கூட தினமும் 1500 பேருக்கு அன்னதானம் வழங்கி பசியை போக்கியது இந்த அணையாத நெருப்பு.

அள்ள அள்ள குறையாத தானியங்கள்
158 ஆண்டுகளாக அந்த நம்பிக்கையைக் காப்பாற்ற எரிந்துகொண்டே இருக்கிறது வள்ளலார் ஏற்றி வைத்த அடுப்பு. அதை அணையாமல் காப்பாற்ற ஆயிரக்கணக்கான தர்ம சிந்தனையுள்ள நெஞ்சங்கள் அங்குள்ள தானியக் களஞ்சியங்களை நிரப்பிக்கொண்டே இருக்கின்றன.எந்த நேரத்திலும் சுமார் ஆறு மாதங்களுக்குத் தேவையான அரிசி மற்றும் பருப்பு போன்றவற்றைச் சேமிப்பில் வைத்திருப்பதால், தொடர்ந்து உணவு வழங்க முடிகிறது என்கின்றனர் ஆலய நிர்வாகிகள்.
அனைவரும் கட்டாயம் தரிசிக்க வேண்டிய ஆலயம்
யோகா' தியானம் போன்றவற்றில் அக்கறை கொண்டு ஞான நிலை அடைந்த வள்ளலார், அவர் உலக மக்கள் அனைவருக்கும் தக்க பல உயரிய கொள்கைகளை உலகத்திற்கு வலியுறுத்து சென்றுள்ளார். வள்ளலார் அவர்கள் அவரின் ஆன்மிக கொள்கை இன்றளவும் அவர்கள் பரப்பப்பட்டு பின்பற்று வருகின்றன. இந்த ஆலயத்திற்கு வாழ்வில் ஒருமுறையேனும் நாம் சென்று வர வேண்டும்.
ஓம் நமசிவாய
 படித்து பகிர்ந்தது 
இரா இளங்கோவன் 
நெல்லிக்குப்பம். 

Friday, January 30, 2026

உஜ்ஜீவநாத சுவாமி திருக்கோயில்,திருகற்குடி,உய்யக்கொண்டான் மலை,

அருள்மிகு உஜ்ஜீவநாத சுவாமி திருக்கோயில்,
திருகற்குடி,
உய்யக்கொண்டான் மலை,
PIN-620 102.  
திருச்சி மாவட்டம்.      
*இறைவர்:   உஜ்ஜீவநாதஸ்வாமி,  முக்தீசர்.  

*இறைவியார்:  அஞ்சனாக்ஷி (மைவிழியம்மை), பாலாம்பிகை.         

*தல மரம்:  வில்வமரம்.   

*தீர்த்தம் :  பொன்னொளி ஓடை, குடமுருட்டி (தஞ்சை மாவட்டத்தில்     ஓடும் ஆறு அல்ல), ஞானவாவி, எண்கோண தீர்த்தம், நாற்கோணதீர்த்தம் என்பன.  

*வழிபட்டோர்: கரன், நாரதர், உபமன்யு முனிவர், மார்க்கண்டேயர்.  

*இத்தலத்துக்கு, திருநாவுக்கரசர்  திருஞானசம்பந்தர் , சுந்தரர் பாடிய  மூன்று பதிகங்கள் உள்ளன.   
*இறைவன் கல்லில் - மலையில் குடியிருப்பதால் கற்குடி என்னும் பெயர் பெற்றது.  தற்போது மக்கள் வழக்கில் உய்யக்கொண்டான்மலை என்று வழங்குகிறது.    

 *மூலவர் சுயம்பு மூர்த்தி; சதுர ஆவுடையாரில் அழகாக காட்சித் தருகிறார்.        

*மிருகண்டு முனிவர் தனக்கு சந்தான பாக்கியம் இல்லாத குறையை நீக்கும்படி சிவபெருமானை நோக்கி தவமிருந்தார்.  சிவபெருமான் அவர் முன் தோன்றி, உனக்கு உபயோகமில்லாத அறிவற்ற 100 குழந்தைகள் வேண்டுமா அல்லது 16 வயது மட்டுமே வாழக்கூடிய அறிவும், படிப்பும், இறை வழிபாட்டில் சிறந்தும் விளங்கும் ஒரு மகன் வேண்டுமா என்று கேட்டபோது, அறிவில் சிறந்த ஒரு மகன் போதும் என்று வரம் பெற்றார். அதன்படி பிறந்த குழந்தைக்கு மார்க்கண்டேயன் என்று பெயர் சூட்டினார். மார்க்கண்டேயனுக்கு 16 வயது நெருங்கும்போது, மிருகண்டுமுனிவர் அவனுடைய ஆயுள் விவரத்தைக் கூறி, இறைவன் சிவபெருமானைத் தஞ்சம் அடைந்து பூஜிக்கும்படி கூறினார்.

 மார்க்கண்டேயன் பல சிவஸ்தலங்களுக்குச் சென்று ஈசனை வழிபட்டு பின்பு கற்குடி சிவஸ்தலம் வந்து சேர்ந்தார்.  மார்க்கண்டேயரின் பக்தியை மெச்சி, ஆடி பவுர்ணமி நாளில் ஈசன் இத்தல கருவறையை விட்டு வெளியே வந்து மார்க்கண்டேயருக்கு காட்சி கொடுத்து அவரது உயிரைக் காப்பதாகவும் வரம் கொடுத்தார். 

*மார்க்கண்டேயருக்காக ஈசன் கருவறையை விட்டு வெளியே வந்ததற்கு அடையாளமாக, சுவாமியின் திருப்பாதம்  கருவறைக்கு இடது புறம் உள்ள கொடிக்கம்பத்தின் கீழே அமைந்திருக்கிறது.  

*மார்க்கண்டேயருக்கு, ஆடி பவுர்ணமி இரவில் சிவபெருமான் காட்சி கொடுத்ததால், அந்த நாளில் இங்கு சிவனுக்கு சிறப்பு அபிஷேகங்களும், விசேஷ பூஜைகளும் நடைபெறும். பின்பு மார்க்கண்டேயருக்கு, ஈசன் காட்சி கொடுக்கும் நிகழ்வு நடத்தப்படும். மேலும் ஒவ்வொரு மாத பவுர்ணமி அன்றும், இத்தல ஈசனுக்கு சிறப்பு அபிஷேகங்கள் நடைபெறுகிறது.  

* இத்தல இறைவனை  வழிபடுவோருக்கு எமபயம் இல்லை.   

*உஜ்ஜீவ நாதருக்கு பாலாபிஷேகமும், அவரது திருப்பாதத்திற்கு பானகமும் படைத்து வேண்டிக்கொண்டால் நீண்ட ஆயுள் கிடைக்கும் என்பது நம்பிக்கை.    
ஈசனுக்கு நெய், மிளகு, சீரகம் சேர்க்கப்பட்ட அன்னம் படைத்து வழிபட்டால், தீராத நோய்களும் குணமாவதுடன், தீர்க்காயுள் கிடைக்கும். 
 *பிள்ளைகளை நல்வழியில் கட்டுப்படுத்தவும், குறைந்த அறிவுத்திறன், மெதுவாக புரிந்து கொள்ளும் திறன் போன்ற பாதிப்பு உள்ள குழந்தைகளை இத்தலம் அழைத்து வந்து, பவுர்ணமி நாளில் அன்னைக்கும், சுவாமிக்கும் அபிஷேகம் செய்து வழிபட்டால் குறைகள் அகலும் என்பது ஐதீகம்.  

*குன்றின் படிகள் ஏறி உட்சென்றால், முதலில் மேற்கு நோக்கிய அஞ்சனாட்சி அம்பாள் சந்நிதி உள்ளது.  இவள் பழைய அம்பாள். இத்திருமேனியின் திருக்கரத்திலுள்ள பூவின் இதழ் உடைந்துபோய் உள்ளது. எனினும், அம்பாள் கனவில் வந்து உணர்த்தியவாறு, இப்பழைய அம்பாளை அப்புறப்படுத்தாது அப்படியே வைத்துள்ளனர். இதனால், புதிய அம்பாள் பாலாம்பிகை பிரதிஷ்டை செய்துள்ளனர். புதிய அம்பாள் பாலாம்பிகை சந்நிதி கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. 
இரு அம்பாளுக்கும் நித்திய பூஜை நடைபெற்று வருகிறது.     

*இத்தல அஞ்சனாட்சி அம்மனை வழிபட சகல விதமான கண் சம்பந்தப்பட்ட நோய்களும் குணமாகும் என்பது நம்பிக்கை.  

*அருணகிரிநாதர் அருளிய     திருப்புகழில் இத்தலத்து முருகன் மீது இரு பாடல்கள் உள்ளன.  முருகப்பெருமானுக்கு அபிஷேக, அர்ச்சனைகள் செய்து வழிபட்டால், தந்தை- மகன் உறவு பலப்படும்.       

*கோவிலில் சோழ மன்னர்கள் உத்தம சோழன், ராஜராஜ சோழன் ஆகியோர் அளித்த தானங்கள் பற்றிய கல்வெட்டுகள் உள்ளன.        

*பல்லவ மன்னன் நந்திவர்ம பல்லவன் இக்கோவிலுக்குப் பல தானங்களும், திருப்பணிகளும் செய்திருக்கிறான்.  

*நந்திவர்ம பல்லவனுக்கு இத்தலத்திலுள்ள ஜ்யேஷ்டாதேவியே குலதெய்வம். இந்த ஜ்யேஷ்டாதேவியை தரிசித்தால், விபத்துகளிலிருந்து நம்மை காப்பாற்றுவாள். எப்போதும் விழிப்புடன் இருக்கச் செய்வாள். 

*ராவணனுடைய சகோதரர்களில் ஒருவனான கரன், இத்தல இறைவனை வழிபட்டு அருள்பெற்றான். இங்கே கரன் வழிபட்ட சிவலிங்கம் 'இடர்காத்தார் ' என்னும் பெயருடன் திகழ்கிறது.  

*தருமபுரம் ஆதீனத்தின் கீழ் இந்தக் கோயில் இருக்கிறது.               

*கி. பி. 18ஆம் நூற்றாண்டில் நடைபெற்ற கர்நாடகப் போரின்போது  பிரெஞ்சுக்காரரும் ஆங்கிலேயரும் மைசூர்க்காரரும் மாறிமாறித் தங்கியிருந்த யுத்த அரணாக இக்கோயில் விளங்கியது.  

*திருச்சியில் இருந்து தென்மேற்கே 5 கி.மீ. தொலைவில்  இத்தலம் அமைந்திருக்கிறது.     
ஓம் நமசிவாய 
படித்து பகிர்ந்தது 
இரா இளங்கோவன்
 நெல்லிக்குப்பம். 

மன்மதனை எரித்தத் தலம் திருவேள்விக்குடி கல்யாணசுந்தரேஸ்வரர்

மன்மதனை எரித்தத் தலம்.
 
காமனைத் தகனம் செய்த இடம் 'விபூதிக்குட்டை ' என்ற பெயரில் 1 கி.மீ. தொலைவில் உள்ளது. இக்குட்டையில் எங்கெடுத்தாலும் மண்ணானது விபூதியாவேயுள்ளது.

மூலவர் சுயம்பு மூர்த்தி; சதுர ஆவுடையார் - உயர்ந்த பாணம். மன்மதன் எறிந்த பஞ்ச பாணங்களுள் ஒன்றான தாமரை பதிந்துள்ள அடையாளம் சுவாமி பீடத்தின் முன்புறத்தில் நடுவில் உள்ளது.

திருநாவுக்கரசரால் தேவாரப்பாடல் பெற்ற ஸ்தலம். 
அருணகிரிநாதரின் திருப்புகழில் இத்தல முருகப்பெருமான் மீது ஒரு பாடல் உள்ளது.

அமைவிடம்:- மயிலாடுதுறையிலிருந்து 11 கி.மீ தொலைவில் உள்ளது.
 திருவேள்விக்குடி - கல்யாணசுந்தரேஸ்வரர் திருக்கோயில் 
இக்கோயிலுக்கு அருகில் உள்ள 32 கோயில்கள்:- 

I. மயிலாடுதுறை to திருஆப்பாடி

1. குத்தாலம் (திருத்துருத்தி) – உக்தவேதீஸ்வரர் திருக்கோயில் 
தேவாரப்பாடல் பெற்ற திருத்தலம்)
மயிலாடுதுறையிலிருந்து 10 கி.மீ தொலைவில் உள்ளது.

2. திருவேள்விக்குடி - கல்யாணசுந்தரேஸ்வரர் திருக்கோயில் (NCN023)
(தேவாரப்பாடல் பெற்ற திருத்தலம்)    
குத்தாலத்திலிருந்து 2 கி.மீ தொலைவில் உள்ளது. 

3. திருஎதிர்கொள்பாடி - ஐராவதேஸ்வரர் திருக்கோயில் (NCN024)
(தேவாரப்பாடல் பெற்ற திருத்தலம்)
திருவேள்விக்குடியிலிருந்து 4 கி.மீ தொலைவில் உள்ளது. 

4. திருமணஞ்சேரி - உத்வாக நாதர் திருக்கோயில் (NCN025)
    (தேவாரப்பாடல் பெற்ற திருத்தலம்)
    திருஎதிர்கொள்பாடியிலிருந்து  500 மீ தொலைவில் உள்ளது. 

5. பந்தனைநல்லூர் – பசுபதிநாதர் திருக்கோயில் (NCN035)
    (தேவாரப்பாடல் பெற்ற திருத்தலம்)
    திருமணஞ்சேரியிலிருந்து 9 கி.மீ தொலைவில் உள்ளது. 

6. திருப்பனந்தாள் - செஞ்சடையப்பர் திருக்கோயில் (NCN039)
(தேவாரப்பாடல் பெற்ற திருத்தலம்)
பந்தனைநல்லூரிலிருந்து 12 கி.மீ தொலைவில் உள்ளது.

7. திருஆப்பாடி - பாலுகந்த ஈஸ்வரர் திருக்கோயில் (NCN040)
(தேவாரப்பாடல் பெற்ற திருத்தலம்)
திருப்பனந்தாளலிருந்து 3 கி.மீ தொலைவில் உள்ளது.

II. மயிலாடுதுறை to திருக்கடையூர் மயானம்

1. திருவிளநகர் - துறைகாட்டும் வள்ளலார் திருக்கோயில் (SCN040)
(தேவாரப்பாடல் பெற்ற திருத்தலம்)
மயிலாடுதுறையிலிருந்து 10 கி.மீ தொலைவில் உள்ளது.

2. திருப்பறியலூர் (பரசலூர்) - வீரட்டேஸ்வரர் திருக்கோயில் (SCN041)
(தேவாரப்பாடல் பெற்ற திருத்தலம்)    
திருவிளநகரிலிருந்து 6 கி.மீ தொலைவில் உள்ளது. 

3. செம்பொனார்கோவில் - சுவர்ணபுரீஸ்வரர் திருக்கோயில் (SCN042)
(தேவாரப்பாடல் பெற்ற திருத்தலம்)
திருப்பறியலூரியிலிருந்து 3 கி.மீ தொலைவில் உள்ளது. 

4. திருக்கடைமுடி (கீழையூர்) - கடைமுடிநாதர் திருக்கோயில் (NCN018)
(தேவாரப்பாடல் பெற்ற திருத்தலம்)
செம்பொனார்கோயிலிருந்து 4 கி.மீ தொலைவில் உள்ளது.

5. திருநனிபள்ளி (புஞ்சை) - நற்றுணையப்பர் திருக்கோயில் (SCN043)
(தேவாரப்பாடல் பெற்ற திருத்தலம்)
திருக்கடைமுடியிலிருந்து 5 கி.மீ தொலைவில் உள்ளது.

6. திருதலைச்சங்காடு - நான்மதிய பெருமாள் திருக்கோயில் (திவ்யதேசம்)
திருநனிபள்ளியிலிருந்து 7 கி.மீ தொலைவில் உள்ளது.

7. திருதலைச்சங்காடு - சங்காரண்யேஸ்வரர் திருக்கோயில் (SCN045)
(தேவாரப்பாடல் பெற்ற திருத்தலம்)
நான்மதிய பெருமாள் கோயிலிருந்து 1 கி.மீ தொலைவில் உள்ளது.

8. மேலப்பெரும்பள்ளம் (திருவலம்புரம்) - வலம்புரிநாதர் திருக்கோயில் (SCN044)
(தேவாரப்பாடல் பெற்ற திருத்தலம்)
திருதலைச்சங்காட்டிலிருந்து 4 கி.மீ தொலைவில் உள்ளது.

9. கீழப்பெரும்பள்ளம் - நாகநாதஸ்வாமி திருக்கோயில்
(கேது பரிகார தலம்)
மேலப்பெரும்பள்ளத்திலிருந்து 4 கி.மீ தொலைவில் உள்ளது.

10. திருஆக்கூர் - தான்தோன்றியப்பர் திருக்கோயில் (SCN046)
(தேவாரப்பாடல் பெற்ற திருத்தலம்)
கீழப்பெரும்பள்ளத்திலிருந்து 9 கி.மீ தொலைவில் உள்ளது. 

11. திருக்கடையூர் – அமிர்தகடேஸ்வரர் திருக்கோயில் (SCN047)
(தேவாரப்பாடல் பெற்ற திருத்தலம்)
திருஆக்கூரிலிருந்து 6 கி.மீ தொலைவில் உள்ளது. 

12. திருக்கடையூர் மயானம் - பிரம்மபுரீஸ்வரர் திருக்கோயில் (SCN048)
(தேவாரப்பாடல் பெற்ற திருத்தலம்)
திருக்கடையூரிலிருந்து 2 கி.மீ தொலைவில் உள்ளது.

III. மயிலாடுதுறை to அம்பர் பெருந்திருக்கோவில்

1. திருமீயச்சூர் - மேகநாதசுவாமி திருக்கோயில் (SCN056)
(தேவாரப்பாடல் பெற்ற திருத்தலம்)
மயிலாடுதுறையிலிருந்து  18 கி.மீ தொலைவிலும், பேரளம் ரயில் நிலையத்திலிருந்து 2 கி.மீ தொலைவிலும் உள்ளது.

2. திருமீயச்சூர் இளங்கோயில் - சகலபுவனேஸ்வரர் திருக்கோயில் (SCN057)
(தேவாரப்பாடல் பெற்ற திருத்தலம்)    
(திருமீய்ச்சூர் மேகநாதசுவாமி கோயிலின் உள்ளே திருமீய்ச்சூர் இளங்கோயில் தலம் உள்ளது).

3. செதலபதி (திருதிலதைப்பதி) - மதிமுக்தீஸ்வரர் திருக்கோயில் (SCN058)
(தேவாரப்பாடல் பெற்ற திருத்தலம்)
திருமீயச்சூரிலிருந்து 7 கி.மீ தொலைவில் உள்ளது.

4. கூத்தனூர் - சரஸ்வதி திருக்கோயில் 
செதலபதியிலிருந்து 2 கி.மீ தொலைவில் உள்ளது. 

5. கொத்தவாசல் – ஆபத்சகாயஸ்வரர் திருக்கோயில்
(63 நாயன்மார்களுள் ஒருவரான கோச்செங்கட்சோழர் கட்டிய மாடக்கோயில்)
கூத்தனூரிலிருந்து 2 கி.மீ தொலைவில் உள்ளது. 

6. அம்பர் மாகாளம் - மாகாளநாதர் திருக்கோயில் (SCN055)
(தேவாரப்பாடல் பெற்ற திருத்தலம்)
கொத்தவாசலில் இருந்து 2 கி.மீ தொலைவில் உள்ளது. 

7. அம்பர் பெருந்திருக்கோவில் - பிரம்மபுரீஸ்வரர் திருக்கோயில் (SCN054)
(தேவாரப்பாடல் பெற்ற திருத்தலம்)
அம்பர் மாகாளத்திலிருந்து 2 கி.மீ தொலைவில் உள்ளது.

IV. மயிலாடுதுறை to திருக்கோழம்பம்

1. தேரழுந்தூர் (திருவழுந்தூர்) - தேவாதிராஜன் திருக்கோயில் 
(திவ்ய தேசம்)
மயிலாடுதுறையிலிருந்து 11 கி.மீ தொலைவில் உள்ளது. 

2. தேரழுந்தூர் (திருவழுந்தூர்) -  வேதபுரீஸ்வரர் திருக்கோயில் (SCN038)
(தேவாரப்பாடல் பெற்ற திருத்தலம்)    
தேவாதிராஜன் கோயிலில் இருந்து 1 கி.மீ தொலைவில் உள்ளது.

3. திருக்கோழம்பம் - கோகிலேஸ்வரர் திருக்கோயில் (SCN035) 
(தேவாரப்பாடல் பெற்ற திருத்தலம்)
தேரழுந்தூரிலிருந்து 11 கி.மீ தொலைவில் உள்ளது. 

V. மயிலாடுதுறை to நீடூர்

1. கோழிக்குத்தி - வானமுட்டி பெருமாள் திருக்கோயில் 
மயிலாடுதுறையிலிருந்து 7 கி.மீ தொலைவில் உள்ளது.  

2. அன்னியூர் (பொன்னூர்) - ஆபத்சகாயேஸ்வரர் திருக்கோயில் (NCN022)
(தேவாரப்பாடல் பெற்ற திருத்தலம்)    
கோழிக்குத்தியிலிருந்து 4 கி.மீ தொலைவில் உள்ளது.

3. குறுக்கை - வீரட்டேஸ்வரர் திருக்கோயில் (NCN026) * * * * * (பதிவில் காணும் கோயில்)
(தேவாரப்பாடல் பெற்ற திருத்தலம்)
அன்னியூரிலிருந்து 4 கி.மீ தொலைவில் உள்ளது.

4. நீடூர் - அருட்சோமநாதேஸ்வரர் திருக்கோயில் (NCN021)  
குறுக்கையிலிருந்து 6 கி.மீ தொலைவில் உள்ளது.
ஓம் நமசிவாய 
படித்து பகிர்ந்தது 
இரா இளங்கோவன் 
நெல்லிக்குப்பம். 

Thursday, January 29, 2026

ஸ்ரீ பெருமாள் கோவிலில் உள்ள ஸ்ரீ ஜெயனும் ஸ்ரீ விஜயனும் யார்?

முனிவர்கள் வைகுண்டத்துக்கு வந்தனர். வாசலில் ஜெயனும், விஜயனும் காவல் காத்துக் கொண்டிருந்தனர். வாயில் காப்பவர்களே! ஸ்ரீமன் நாராயணனே எங்கள் குல தெய்வம். நாங்கள் அவரைக் காண நீண்டகாலம் தவமிருந்தோம். இன்று வைகுண்டத்தின் வாசலுக்கு வந்து விட்டோம். இது நாங்கள் பெற்ற பெரிய பேறு. நாராயணனை பார்த்து விட்டால் வைகுந்த பதவியும் பெற்று விடுவோம். பிறப்பற்ற இன்ப வாழ்க்கை பெற நாராயணனின் தரிசனமும், கரிசனமும் அவசியமல்லவா? வைகுண்டக்கதவை திறவுங்கள், என்றனர். வாயில் காப்பவர்கள் அவ்வளவு எளிதாக யாரையும் அனுமதிப்பார்களா? அவர்களிடம், நாராயணன் நீங்கள் வருவது பற்றி எங்களிடம் எதுவும் சொல்லவில்லை. அவரைப் பார்க்க நீங்கள் முன் அனுமதி பெற்றது பற்றிய தகவலும் இல்லை. உஹூம்...உங்களை அனுமதிக்க முடியாது. நீங்கள் போகலாம், என்றனர். முனிவர்கள் கெஞ்சிப் பார்த்தனர். தம்பிகளே! நீங்கள் இப்படி செய்வது முறையா? பூலோகத்தில் இருந்து கால் கடுக்க நடந்தே வந்தோமப்பா! நீ திரும்பச் சொல்கிறாயே! நாங்கள் தபஸ்விகள்...ஒன்றுமறியாதவர்கள் இல்லையப்பா!. ஜெய, விஜயர்கள் அசைந்து கொடுக்கவில்லை. நீங்கள் யாராயிருந்தால் எங்களுக்கென்ன? நாராயணன் சொல்லியுள்ளவர்களைத் தவிர மற்றவர்களுக்கு அனுமதி இல்லை. நீங்கள் போகலாம், என்றதோடு கழுத்தை பிடித்து வெளியே தள்ளினர். முனிவர்களுக்கு ஆத்திரம் வந்து விட்டது. கத்த ஆரம்பித்து விட்டனர். ஏ! நாராயணா! நீ பாற்கடலில் பள்ளி கொண்டு அப்படியே உறங்கிப் போய் விட்டாயா? உன் காவலர்கள் செய்யும் அட்டூழியம் கண்ணுக்கு புலப்படவில்லையா? இதுதான் நீ பக்தர்ளை வரவேற்கும் லட்சணமா? நீ எழுந்து வா! இல்லாவிட்டால் நாங்கள் இங்கேயே உயிர் துறப்போம், என்று சத்தம் போட்டனர். நாராயணன் இதெல்லாம் தெரியாதவரா? தெரிந்து தானே நாடகமாடுகிறார்....அவர் பதறிப் போய் ஓடி வருவது போல நடித்தார். முனிவர்களே! என்ன நடந்தது? என்று அப்பாவித்தனமாகக் கேட்டார். முனிவர்கள் நாராயணனைக் கண்டதும் நடந்ததை மறந்து விட்டனர்.

அவரது கால்களில் சாஷ்டாங்கமாய் விழுந்து வணங்கினர். ஐயனே! தங்கள் தரிசனம் காண கொடுத்து வைத்திருக்க வேண்டும். இந்த ஏழைகளின் அபயக்குரல் கேட்டு, ஓடோடி வந்த எம்பிரானே! தங்களைக் கண்டோம். ஆனால் எம்பிராட்டி லட்சுமி தாயாரை பார்க்க முடியவில்லை. வைகுண்டத்தின் வாசலே இப்படி அழகு பொங்க இருக்கிறது என்றால், உள்ளே இருக்கும் பாற்கடலின் அழகு, ஆதிசேஷன் தங்களுக்கு குடை பிடித்திருக்கும் அழகு இவற்றையெல்லாம் பார்த்திருக்கலாம். தாங்கள் எங்களை வைகுண்டத்துக்குள் அழைத்துச் செல்லுங்கள், என்றனர். முனிவர்கள் சொன்னதை நாராயணன் கவனமாகக் கேட்டுக் கொண்டார். ஜெய, விஜயர்களை அழைத்தார். முட்டாள்களே! என்னைக் காண வருபவர்களின் தராதரத்தை அறிந்து அவர்களை அனுமதிக்க வேண்டாமா? வைகுண்டத்திற்கு முதன் முதலாக வந்த அவர்களைத் தடுத்து, நிறுத்திய நீங்கள் மனிதர்களாக பிறப்பீர்களாக, என்றார். ஜெய, விஜயர்கள் நாராயணனின் காலில் விழுந்து மன்னிப்பு கேட்டனர். நாராயணன் மசியவில்லை. தவறு செய்தவர்கள் தண்டனை அனுபவித்தே தீர வேண்டும். நீங்கள் பூலோகத்தில் கொடியவர்களாக பிறந்து, என்னையே எதிர்த்து போரிட்டு மடிந்தால் மூன்று பிறவி எடுக்க வேண்டும். நல்லவர்களாகப் பிறந்தால், ஏழுபிறவி எடுக்க வேண்டும். இதில் எது வேண்டும் என்பதை நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள், என்றார். அப்படியே முனிவர்கள் பக்கம் திரும்பி, முனிவர்களே! தாங்கள் தபஸ்விகள். எனவே கோபம் உங்களை விட்டு ஒழிந்திருக்க வேண்டும். உங்களை வாயில் காப்பவர்கள் தடுத்தனர் என்பதற்காக, ஆத்திரத்தில் சத்தம் எழுப்பி, வைகுண்டத்தின் அமைதி குலைய காரணமாக இருந்தீர்கள். நீங்கள் பூலோகத்தில் எனது பக்தர்களாக பிறந்து, கோபத்தை ஒழித்து வைகுண்டம் திரும்ப வேண்டும், எனச் சொல்லி விட்டு மறைந்தார். அவர்களில் ஒருவர் தான் பிரகலாதன் என்ற பெயரில் பூமியில் அவதரித்தார். ஜெயன் இரண்யகசிபு என்ற பெயரிலும், விஜயன் இரண்யன் என்ற பெயரிலும் சகோதரர்களாக பூமியில் தோன்றினர். இரண்யகசிபுவை திருமால் வராக அவதாரம் எடுத்துக் கொன்றார். இரண்யன் கடும் தவத்தால், பிரம்மனிடம் ஒரு வரம் பெற்றான். தன்னை எப்பேர்ப்பட்ட பலசாலியும் எந்த ஆயுதத்தாலும் கொல்ல முடியாது என்ற வரம் பெற்றான். இதனால் இவன் உலகையே ஆளும் மன்னன் ஆனான்.

எல்லாரும் இரண்யாய நமஹ என்று சொல்லும்படி கட்டளையிட்டான். இவனது வயிற்றில் பிறந்தான் பிரகலாதன். திருமாலின் பக்தனாக வளர்ந்தான். இரண்யாய நமஹ என்பதை சொல்ல மறுத்து விட்டான். உலகைக் காக்க ஒரு மனிதனால் முடியாது. காக்கும் கடவுளான விஷ்ணுவால் மட்டுமே முடியும், என்று அவன் தந்தையிடம் வாதிட்டான். குருகுலத்திற்கு சென்று மற்ற பிள்ளைகளுக்கும் ஓம் நாராயணாய நமஹ, என்றே சொல்லிக் கொடுத்தான். இதனால் தந்தைக்கும், மகனுக்கும் தினமும் சண்டை தான். மகனை கொன்றுவிடும்படி ஏவலர்களுக்கு கட்டளையிட்டான். ஆனால் விஷம் கொடுத்தும், கடலில் தூக்கி வீசியும் கூட பிரகலாதன் அழியவில்லை. கலங்கிப் போன இரண்யன், ஒருமுறை,இந்தத் தூணில் நாராயணன் இருக்கிறானா? எனக் கேட்டான். தூணில் என்ன? உங்கள் உடம்பில் ஒட்டியிருக்கும் சிறு தூசியில் கூட அவன் தான் இருக்கிறான், என்றான் மகன். ஆத்திரத்தில் தூணை எட்டி உதைத்தான் இரண்யன். தூண் உடைந்தது. உள்ளிருந்து நரசிம்மராக வெளிப்பட்டார் பகவான். பாதியளவு சிங்கத்தின் உருவம், பாதியளவு மனித உருவத்துடன் உருவெடுத்து வந்தார் அவர். இரண்யனுடன் போரிட்டுக் கொன்றார். ஆயுதம் ஏதும் அவர் கொண்டு வரவில்லை. அவரது நகமே ஆயுதமாயிற்று. நகத்தால் வயிற்றைக் கிழித்து குடலை மாலையாகப் போட்டார். பெற்ற தந்தை தன்னால் தானே அழிந்தார் என கதறி அழுதான் பிரகலாதன். தாயை அமங்கலி ஆக்கி விட்டோமே...அவள் முகத்தில் எப்படி விழிப்பது? கதறி அழுத பிரகலாதனை அள்ளி அணைத்துக் கொண்டார் நரசிம்மர். பிரகலாதனிடம் முற்பிறவி கதையை எடுத்துச் சொன்னார். இருந்தாலும் அவன் மனம் தாங்கவில்லை. அன்னையோ தீக்குளிக்க தயாரானாள். பிரகலாதனை பார்க்கக் கூட அவள் விரும்பவில்லை. இறைவா! உன்னை நம்பிய என் நிலையை பார்த்தாயா? என் தந்தைக்கு உயிர்கொடு. இனியும் மானிடனாய் பிறக்கச் செய்யாதே! என பிரார்த்தித்தான். அவர்களை குடும்பத்துடன் வைகுண்டம் அழைத்துச் சென்றார் பெருமாள். பிரகலாதன் இன்றும் சரித்திரத்தில் வாழ்கிறான்.

பிரகலாதனின் முற்பிறவி!

துவாரகையில் வசித்த சிவசர்மா, வேத சாஸ்திரங்களை கற்று புலமை பெற்றவராக திகழ்ந்தார். அவருக்கு ஐந்து மகன்கள். அவர்களுக்கு குருவாக இருந்து வேதத்தை கற்றுக் கொடுத்தார் சிவசர்மா. வேதம் பயில்பவர்கள் குருவுக்கும் பெற்றோருக்கும் மரியாதை செய்ய வேண்டும். தன் மகன்கள் அவ்வாறு இருக்கின்றனரா என சோதிக்க நினைத்தார் சிவசர்மா. அதற்காக ஒரு தந்திரம் செய்தார். தன் மனைவி, இறந்து கிடப்பதைப் போல ஒரு மாயத்தோற்றத்தை ஏற்படுத்தி, மூத்த மகன் யஜ்ஞசர்மாவை அழைத்தார். அவனிடம், உன் தாய் இறந்துவிட்டாள். அவளது உடலை வாளால் வெட்டி வீசி விடு! என்றார். அவனும் அப்படியே செய்தான். பின் ஒரு அழகிய பெண்ணை படைத்து, இரண்டாவது மகன் வேதசர்மாவை அழைத்தார். அவனிடம் அப்பெண்ணை, தனக்கு மணம் செய்து தரும்படி கேட்டார். வேதசர்மா அவளிடம், தன் தந்தையை மணந்து கொள்ளும்படி கேட்டான். அவளோ மறுத்தாள். அவள் மனதை மாற்றுவதற்காக, எதைக் கேட்டாலும் தருவதாகச் உறுதியளித்தான் வேதசர்மா. அவள் அவனது தலையைக் கேட்டாள். அவனும் தன் தலையை வெட்டிக் கொடுத்து விட்டான்.

அடுத்து மூன்றாவது மகன்  தர்மசர்மாவை அழைத்தார். அவனிடம் வெட்டபட்ட வேதசர்மாவின் தலையை கொடுத்து, பத்திரமாக வைத்திரு என்றார். அவன் அதை வாங்கி தர்மதேவதையை வணங்கி, அண்ணனை உயிர்ப்பித்தான். நான்காவது மகன் விஷ்ணுசர்மாவை சோதிக்க வேண்டியநிலை. சிவசர்மா அவனிடம், நான் ஒரு அழகியை மணக்க விரும்புகிறேன். ஆனால், வயதாகிவிட்டது. மீண்டும் இளமையைப் பெற அமிர்தம் உண்டால் மட்டுமே முடியும். எனவே, தேவலோகம் சென்று அமிர்தம் பெற்று வா என்றார். அவனும் தேவலோகம் சென்றான். இந்திரன் மேனகை எனும் தேவலோக பெண்ணை அனுப்பி அவனது கவனத்தை திசைதிருப்ப முயன்றான். அவனோ தன் வேலையில் மட்டும் கவனமாக இருந்து, இந்திரனிடம் அமுதம் பெற்று. தந்தையிடம் கொடுத்தான். மகிழ்ந்த சிவசர்மா நான்கு மகன்களையும் அழைத்தார். தன் மனைவியை உயிர்ப்பித்து, தான் அவர்களை பரிசோதித்ததை கூறினார். மகன்களும் மகிழ்ந்தனர். அவர்களை விஷ்ணுலோகத்திற்கு அனுப்பி விட்டார் சிவசர்மா. ஐந்தாவது மகன் சோமசர்மா விஷ்ணுவின் மீது அதீத பக்தியுடையவன்.

ஒருசமயம் சிவசர்மா அவனிடம், நானும், உன் தாயாரும் தல யாத்திரை செல்கிறோம். நாங்கள் திரும்பும் வரையில் இந்த அமுதத்தை பத்திரமாக வைத்திரு! என்று சொல்லி சென்றார். சிலநாட்கள் கழித்து திரும்பிய சிவசர்மா, கலசத்தில் இருந்த அமுதத்தை மறையச் செய்துவிட்டு, மகனிடம் அமுதம் தரும்படி கேட்டார். அமுத கலசத்தை பார்த்த அதில் அமுதம் இல்லாததைக் கண்டு திடுக்கிட்டான். விஷ்ணுவை பிரார்த்தித்தான். அமுதகலசம் நிரம்பியது. அதனை தன் பெற்றோரிடம் கொடுத்தான். அமுதம் உண்ட இருவரும் சோமசர்மாவை வாழ்த்திவிட்டு, விஷ்ணுலோகம் சென்றனர். பின் பூலோகத்தில் தனித்து வாழ்ந்த சோமசர்மா, தவ வாழ்க்கையில் ஈடுபட்டான். ஒருசமயம் அவனது தவத்தை கெடுக்க வந்த அசுரர்களைக் கண்டு பயத்திலேயே உயிர் விட்டான். அந்த அசுரகுலத்தை வேரறுக்க மறுபிறவியில் அதே குலத்தில், இரண்யகசிபுவின் மகன் பிரகலாதனாக பிறந்தான். நரசிம்ம அவதாரம் தோன்றவும் காரணமாக இருந்தான். மகாவிஷ்ணுவின் அருளையும் பெற்றான்.
ஓம் நமசிவாய 
படித்து பகிர்ந்தது 
இரா இளங்கோவன் 
நெல்லிக்குப்பம். 

Followers

செந்துறை நாகல்குழி சிவன்கோயில்

அரியலூர் மாவட்டம் செந்துறை  வட்டம் நாகல்குழி சிவன்கோயில்   சோழர்கள் தமது தலைநகரை தஞ்சையில் இருந்து  அரியலூர் மாவட்டம் கங்கை கொண்...