Friday, April 10, 2026

திருகாமேஸ்வரர் திருச்சி மாவட்டம் வெள்ளூர்.

திருகாமேஸ்வரர் கோவில் - திருச்சி
   
திருச்சி மாவட்டம் வெள்ளூர் என்ற ஊரில் உள்ளது, திருகாமேஸ்வரர் ஆலயம். இங்கு அருள்பாலிக்கும் இறைவன் ‘திருகாமேஸ்வரர்’ என்றும், இறைவி ‘சிவகாமசுந்தரி’ என்றும் அழைக்கப்படுகிறார்கள்.

திருச்சி மாவட்டம் வெள்ளூர் என்ற ஊரில் உள்ளது, திருகாமேஸ்வரர் ஆலயம். இங்கு அருள்பாலிக்கும் இறைவன் ‘திருகாமேஸ்வரர்’ என்றும், இறைவி ‘சிவகாமசுந்தரி’ என்றும் அழைக்கப்படுகிறார்கள்.

மன்மதன் பற்றிய புராணக் கதை ஒன்று இத்தலத்துடன் தொடர்புடையதாக இருக்கிறது.

சிவபெருமானின் சொல்லையும் மீறி, தட்சனின் யாகத்திற்குச் சென்றாள் தாட்சாயிணி. அங்கு அவளுக்கு அவமானமே மிஞ்சியது. 

தன் சொல் கேட்காத அன்னைக்கு, ஈசன் சாபம் அளித்தார். அதன்படி பூலோகத்தில் பர்வதராஜனுக்கு மகளாகப் பிறந்து, உரிய நேரம் வரும்போது கயிலை வந்து சேரும்படி அருளினார். 

இதையடுத்து பார்வதி என்ற பெயருடன், பர்வதராஜனிடம் வளர்ந்து வந்த தேவியானவள், 

கயிலாயமலையில் வீற்றிருக்கும் சிவபெருமானை நோக்கி தவம் புரியத் தொடங்கினாள்.

பார்வதியைப் பிரிந்த சிவபெருமான் கயிலையில் அசைவற்ற நிலையில் இருந்தார். இதனால் பிரபஞ்சத்திலும் ஓர் அணுவும் அசையவில்லை. 
இதே நிலை தொடர்ந்தால் உலகமே அழிந்துவிடும் என்று அஞ்சிய பிரம்மாவும், விஷ்ணுவும் தேவர்கள் சூழ, சிவபெருமானையும் பார்வதியையும் ஒன்றிணைக்க முயன்றனர். மன்மதனை அழைத்து சிவபெருமான் மீது, காமபாணத்தை ஏவுமாறு கேட்டுக் கொண்டனர்.

ஆனால் ஈசனின் மீது பாணம் தொடுக்க மன்மதன் தயங்கினான். உடனே தேவர்கள், “நீ ஈசன் மேல் காம பாணம் தொடுக்காவிட்டால், உனக்கு நாங்கள் சாபம் அளிப்போம்” என்று மிரட்டினர். 

இதனால் பயந்து போன மன்மதன், ஒரு புன்னை மர நிழலில் ஒளிந்து கொண்டு ஈசனின் மீது அம்பு விட்டான்.

அவன் விட்ட அம்பு, வில்லில் இருந்து வெளியேறும் முன்பாகவே, அவனை தன்னுடைய நெற்றிக் கண்ணைத் திறந்து எரித்தார் சிவபெருமான். 

அதோடு மன்மதன் விட்ட பாணமும் திசைமாறி, பார்வதியின் மீது பட்டது. அதில் அவர் பருவம் செய்தி, சிவபெருமானை வந்தடைந்தாள். அன்னைக்கு சிவகாம சுந்தரி என்று பெயர் ஏற்பட்டது. 

இந்த பெயர் கொண்டவரே இத்தல இறைவியாக திகழ்கிறார். இறைவனின் திருநாமமும் அதனாலேயே ‘காமேஸ்வரர்’ என்றானது.

இந்த நிலையில் கணவனை இழந்த ரதிதேவி, தன் கணவரான மன்மதனுக்கு உயிர்ப்பிச்சை கேட்டாள். 

அவளுக்கு மனம் இரங்கிய இறைவன், மன்மதனுக்கு உயிர் கொடுத்து, அவன் ரதியின் கண்களுக்கு மட்டுமே தெரிவான் என்று அருள் புரிந்தார். 

ரதியும், மன்மதனும் இத்தலமான வெள்ளூர் வந்து மன்மதனுக்கு பழைய உடலைத் தர வேண்டுமென சிவபெருமானை வழிபட, ஈசனும் மனம் இரங்கி மன்மதனுக்கு உடலைத் தந்தார் என்று தல புராணம் சொல்கிறது.

இந்த திருத்தலத்தில் உள்ள இறைவனானவர், மகாலட்சுமியால் வழிபடப்பட்டவர் என்பதற்கு ஒரு கதை சொல்லப்படுகிறது. 

அதாவது தேவர்களும் அசுரர்களும் அமிர்தம் வேண்டி பாற்கடலைக் கடைந்தனர். அந்த அமிர்தம் தேவர் களுக்கு மட்டுமே கொடுக்கப்பட வேண்டுமென எண்ணிய மகாவிஷ்ணு, 

மோகினி வடிவம் எடுத்து வந்தார். மோகினியின் அழகில் மயங்கிய சிவபெருமான், அவளை மோகிக்க அவர்களுக்கு ஐயப்பன் பிறந்தார்.

இதை அறிந்த மகாலட்சுமி, தன் கணவரான மகாவிஷ்ணுவின் மீது கோபம் கொண்டாள். 

பின்னர் வைகுண்டத்தை விட்டு வெளியேறி பூலோகம் வந்தாள். இங்கு வில்வாரண்ய சேத்திரம் எனும் வெள்ளூரில் சிவபெருமானை நோக்கி தவம் செய்தாள். 

பல யுகங்களாக தவம் செய்தும் அவளுக்கு, சிவபெருமான் காட்சி தரவில்லை. உடனே, 

மகாலட்சுமி தன்னை வில்வமரமாக மாற்றிக் கொண்டு சிவலிங்கத் திருமேனியில் வில்வ இலையை மழையாக பொழிந்து பூஜித்தாள்.

இதனால் மனம் மகிழ்ந்த ஈசன், மகாலட்சுமியின் முன்பாகத் தோன்றி, ஐயப்பனின் அவதார நோக்கத்தை விளக்கி, அவளை சாந்தப்படுத்தினார். 

பின்னர் அவளை, ஸ்ரீவத்ஸ முத்திரையுடன் கூடிய சாளக்கிராமமாக செய்து, மகாவிஷ்ணுவின் இதயத்தில் இருக்கும்படிச் செய்தார். மேலும் மகாலட்சுமியை ஐஸ்வரியத்தின் அதிபதியாகவும் இருக்கும்படி அருள்புரிந்தார்.

இதன் காரணமாக இந்த ஆலயத்தில் இருக்கும் மகாலட்சுமி, ‘ஐஸ்வரிய மகாலட்சுமி’ என்ற திரு நாமத்துடனேயே பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்.

ராவணனுக்கு, இத்தல இறைவன் மீண்டும் உடல் வலிமை கொடுத்து, ஈஸ்வர பட்டம் சூட்டியதாக தல புராணம் சொல்கிறது. 

இத்தலத்தில்தான் சுக்ரன் ஈசனை வழிபட்டு போகத்திற்கு அதிபதியானார். குபேரன் இத்தல இறைவனை வழிபட்டு தனாதிபதியாக மாறினார். 

வெள்ளிக்கிழமையில் வரும் சுக்ர ஓரையில் (காலை 6-7 மணி), ஐஸ்வரிய மகாலட்சுமிக்கு 16 வகையான அபிஷேகம் செய்து, 16 நெய் தீபங்கள் ஏற்றி, 16 முறை வலம் வந்து பிரார்த்தனை செய்தால், 16 வகை பேறு களையும் பெறலாம் என்பது நம்பிக்கை.

சுமார் 1,600 ஆண்டுகள் பழமையான இந்த ஆலயம். கி.பி. 6-ம் நூற்றாண்டில் முதலாம் விஜயாதித்த சோழனால் புனரமைக்கப்பட்டு, கும்பாபிஷேகம் நடைபெற்றிருப்பதாக கல்வெட்டுச் செய்தி கூறுகிறது. 

தற்போது இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் இருக்கும் இந்த ஆலயம், தினமும் காலை 9 மணி முதல் 11 மணி வரையும், மாலை 6 மணி முதல் இரவு 7 மணி வரையும் திறந்திருக்கும்.

சகல ஐஸ்வர்யங்களையும் பெற்று வளமாக வாழ, நாமும் ஒரு முறை ஐஸ்வரிய மகாலட்சுமியை தரிசித்து வரலாமே!

திருச்சியில் இருந்து சேலம் செல்லும் நெடுஞ்சாலையில் முசிறியில் இருந்து 6 கிலோமீட்டர் தொலைவில் வெள்ளூர் திருத்தலம் உள்ளது. 

ஓம் நமசிவாய 
படித்து பகிர்ந்தது 
இரா இளங்கோவன் 
நெல்லிக்குப்பம். 

Thursday, April 9, 2026

கடக ராசிக்காரர்கள் வழிபட வேண்டிய கோவில்

திருந்துதேவன்குடி : தற்போது நண்டாங்கோவில் என்று அறியப்படும் இத்தலம் தேவார காலத்தில் திருந்துதேவன்குடி என்று அழைக்கப்பட்டது. கடக ராசிக்காரர்கள் வழிபட வேண்டிய கோவில் கற்கடேஸ்வரர் ஆலயம் ஆகும். 

இறைவர் : ஸ்ரீ கற்கடேஸ்வரர்

இறைவியார் : ஸ்ரீ அருமருந்துநாயகி

தல புராணப்படி உமாதேவி ஒரு சமயம் கைலாயத்தில் இருந்து இத்தலத்திற்கு வந்து நண்டு உருவத்தில் இறைவனை வழிபட்டாள். கோவிலைச் சுற்றி உள்ள அகழியில் இருந்த நீரில் பூத்துக் குலுங்கிய தாமரை மலர்களால் இறைவனை அர்ச்சித்து வழிபட்டு வந்தாள். தேவேந்திரனும் அதே சமயம் இத்தலத்து இறைவனை வழிபட்டு வந்தான். அகழியில் தன்னால் பயிரடப்பட்ட தாமரை மலர்களை நண்டு கொண்டு வந்து இறைவனுக்கு சாத்தி வழிபடுகிறதே என்று கோபம் கொண்டான். 

நண்டு உருவத்தில் இறைவனை வழிபடுவது பார்வதி தேவியே என்று அறியாத இந்திரன் லிங்கத்தின் மீதேறி தாமரை மலர்களைச் சாத்த முயன்ற நண்டை கத்தியால் வெட்ட முயன்றான். முதல் வெட்டு தாடையில் விழுந்தது. அடுத்த வெட்டு சிவபெருமானின் நெற்றியில் விழுந்தது. நண்டு உருவில் இருந்த உமாதேவியைக் காப்பாற்ற நினைத்த சிவபெருமான் லிங்கத் திருமேனியில் உச்சியில் ஒரு துவாரத்தை ஏற்படுத்தி நண்டு உருவில் இருந்த சக்தியை தன்னுடன் ஐக்கியப்படுத்திக் கொண்டார். உண்மையை உணர்ந்த இந்திரன் தன் தவறுக்கு வருந்தி திருந்தினான். எனவே இக்கோவிலுக்கு திருந்துதேவன்குடி என்ற பெயர் வந்ததாக தலபுராணம் கூறுகிறது. நண்டு சிவனை வழிபடும் சிற்பம் ஒன்று கோவிலில் உள்ள ஒரு கற்தூணில் செதுக்கப்பட்டு உள்ளது.

சந்திரனால் ஏற்படும் தோஷங்கள் நீங்க வழிபட வேண்டிய தலம் திருந்துதேவன்குடி தலமாகும். அநேகமாக எல்லா சிவாலயங்களிலும் சந்திரனுக்கு தனி சந்நிதி இருக்கும். சந்திரன் நின்ற நிலையில் காணப்படுவார். இத்தலத்தில் மட்டும் சந்திரன் அமர்ந்த நிலையில், யோக நிலயில் இருக்கிறார். எல்லா வகையான யோகங்களும் கிடைக்க வழிபட வேண்டிய தோஷ பரிகார சந்திரன் இவர். குறிப்பாக கடகராசிக்காரர்கள்(புனர்பூசம், பூசம், ஆயில்யம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள்) இக்கோவிலுக்கு வந்து வழிபட்டால் அனைத்து தோஷங்களில் இருந்து நிவாரணம் பெறலாம்.

🍁"மருந்து வேண்டில் இவை மந்திரங்கள் இவை
புரிந்து கேட்கப்படும் புண்ணியங்கள் இவை
திருந்து தேவன்குடித் தேவர் தேவு எய்திய
அருந்தவத்தோர் தொழும் அடிகள் வேடங்களே."

பொருளுரை : திருந்துதேவன்குடியில் வீற்றிருக்கும், தேவர்கட்கெல்லாம் தேவனாக விளங்குபவனும், அருந்தவத்தோர்களால் தொழப்படுபவனுமான சிவபெருமானின் திருவேடங்கள்(திருநீறு, உருத்திராக்கம், சடாமுடி) மருந்து வேண்டுபவர்க்கு மருந்தாகவும், மந்திரங்கள் விரும்புவார்கட்கு மந்திரமாகவும், சிவபுண்ணியச் சரிதை கேட்க விரும்புவார்கட்கு அப்புண்ணியப் பயனாகவும் அமையும்.

ஆளுடைய பிள்ளையார், திருவியலூர் அடிகளைப் போற்றி இன்னிசைப் பதிகத்தொடை சாத்தி அம்முழு முதல்வன் காட்டிய கண்ணார்தரும் உருவாகிய அருள் வேடத்தைத் தொழுது, திருந்துதேவன்குடியிற் சென்று சிவபெருமான் கோயிலை எய்திக், காதலொடு புகுந்து, போற்றி வணங்கிப் புனைந்த அருந்தமிழ் மாலை இது.

ஆலய முகவரி : அருள்மிகு கற்கடேஸ்வரர் திருக்கோவில, நண்டாங்கோவில், திருந்துதேவன்குடி, திருவிசலூர் அஞ்சல், கும்பகோணம் வட்டம், தஞ்சாவூர் மாவட்டம், PIN - 612 105.

எப்படிப் போவது : கும்பகோணத்திற்கு அருகிலுள்ள திருவியலூர் என்ற மற்றொரு பாடல் பெற்ற சிவஸ்தலத்தில் இருந்து 2 கி.மி. தொலைவில் திருந்துதேவன்குடி சிவஸ்தலம் இருக்கிறது. கும்பகோணத்திலிருந்து திருவிசநல்லூர் செல்ல நகரப் பேருந்து வசதி உண்டு. திருவிசநல்லூரில் இருந்து நடந்தோ அல்லது ஆட்டோ மூலமோ கற்கடேஸ்வரர் கோவில் சென்று வரலாம்.

"மேன்மைகொள் சைவநீதி விளங்குக உலகம் எல்லாம்"

ஓம் நமசிவாய
 படித்து பகிர்ந்தது
 இரா இளங்கோவன் 
நெல்லிக்குப்பம். 


Wednesday, April 8, 2026

மூன்றாம் இராசராசன் சிவன் கோவில்.

தஞ்சாவூர் மாவட்டம், தஞ்சாவூர் வட்டம், சக்கர சாமந்தம் சிவன்கோயில் 

சக்கரசாமந்தம்; தஞ்சாவூரின்  மேற்கில் 6 கிமி தொலைவில் உள்ளது. தஞ்சையில் இருந்து பூதலுருக்கு ஒரு சாலை கள்ளப்பெரம்பூர் வழியாக போகிறது. மேற்கே செல்லும் புறவழிச்சாலையை தாண்டி உள்ள ஊர். சக்கரசாமந்தம்.  வெண்ணாற்றில் இருந்து பிரிந்து வரும் வடவாற்றின் கரையோர கிராமம்தான் இந்த ஊர். 

மாறவர்மன் சுந்தரபாண்டியனின் படையெடுப்பில் தோல்வி கண்டான்  மூன்றாம் இராசராசன். தஞ்சையும் உறையூரும் எரியூட்டப்பட்டது,  பல வருடங்களாக பாழ்பட்டுக் கிடந்த தஞ்சைக்கு மீண்டும் புத்துயிர் ஊட்டினான் பாண்டிய மன்னனின்  சேனாதிபதியாய் இருந்த "சாமந்தன்" என்பவன்.

சாமந்த நாராயண தொண்டைமானார் தம் பெயரால், தஞ்சாவூரை ஒட்டி அகரம்  ஒன்றை அமைத்து, அகரம் சாமந்த நாராயண சதுர்வேதி மங்கலம் என்று பெயரிடுகிறார். 

அங்கே சாமந்தனாராயன விண்ணகரம் என்ற விஷ்ணு கோயிலையும் எழுப்புகிறார். 106 பட்டர்களை குடியமர்த்துகிறார். 95 வேலி நிலத்தை இரு நிலக்கிழார்களிடம் இருந்து வாங்கி நிவந்தமாக அளிக்கிறார். நிலம் விற்ற ஒருவர் தென்னகங்கதேவன், இன்னொருவர் பெயர் சீனத்தரையர். 

சக்கர சாமந்தம் ஊருக்கு மேற்கில் தென்னகங்கதேவன் வாழ்ந்திருக்கிறார். அந்த ஊரும் அவர் பெயராலேயே தென்ன கங்க தேவன் குடி எனப்பட்டது. இந்த ஊர் இன்று தென்னங்குடி எனப்படுகிறது. நிலம் வழங்கிய சீனத்தரையன் ஊர். சீனத்தரையனூர் என அழைக்கப்பட்டு, சீனானூர் ஆகி, இன்று சீராளூர் ஆயிற்று. 

அகரம் சாமந்த நாராயண சதுர்வேதி மங்கலம், என்ற பெயர் சிறிது சிறிதாக  சுருங்கி அகர சாமந்தம் ஆகி, இப்பொழுது சக்கரசாமந்தம் ஆயிற்று. 
அகரம் சாமந்த நாராயண விண்ணகர் பெருமாள் கோயில் இன்று தஞ்சை கொண்டிராஜாபாளையத்தில் யோக  நரசிங்க பெருமாள் எனும் கீழ நரசிம்மர் கோயில் என  உள்ளது. தஞ்சை மன்னர் சரபோஜி காலத்தில் புது ஆலயத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்டது. 

அந்த கோயிலுக்காக சாமந்த நாராயண குளம்  என்ற குளம் ஒன்றை வெட்டினார். பின்னர், அங்கு ஒரு புதுக்குடியிருப்பையும் தோற்றுவித்தார் சாமந்தன். 
சரி வாங்க நாம சக்கர சாமந்தம் சிவன்கோயிலை  பார்ப்போம். 

இந்த  ஊரின் வடகிழக்கு பகுதியில் ஒரு சிவாலயம் இருந்து அழிந்து போனது. இப்பகுதி லிங்கத்தடி என வழங்கப்பட்டு வந்துள்ளது. அதன் லிங்க பாணன் மட்டும் கிடைத்தது,  அதற்க்கு இவ்வூரை சேர்ந்த திரு. இளங்கோவன் அவர்கள் ஒரு சிமென்ட் சீட்  கொட்டகை ஒன்றை அமைத்து  எதிரில் ஒரு சிறிய நந்தியையும் வைத்து பிரதிஷ்டை செய்து உள்ளார். விரைவில் இதற்க்கு ஒரு அழகிய கோயில் ஒன்றையும் உருவாக்க  வேண்டும் என எண்ணியுள்ளார். 

“உள்ளுவதெல்லாம் உயர்வுள்ளல் மற்றது
தள்ளினினும் தள்ளாமை நீர்த்து"
என்ற வள்ளுவரின் வாக்குப்படி, எண்ணுவ தெல்லாம் உயர்வானதாகவே இருக்கும் போது அவை விரைவிலே  ஈடேறும். 
ஓம் நமசிவாய
 படித்து பகிர்ந்தது
 இரா இளங்கோவன் 
நெல்லிக்குப்பம். 

Sunday, April 5, 2026

செஞ்சுடேஸ்வரர் குருங்குளம் சிவன்கோயில்

தஞ்சாவூர் மாவட்டம், தஞ்சாவூர் வட்டம், குருங்குளம் சிவன்கோயில் 

தஞ்சை புதுக்கோட்டை சாலையில் உள்ள திருக்கானூர்பட்டி நாலு ரோட்டில் கிழக்கில் திரும்பி ஏழுப்பட்டியில் தெற்கில் திரும்பி 5 கிமி சென்றால் குருங்குளம் அடையலாம். 

குருங்குளம் பகுதியில் புகழ்பெற்ற அறிஞர் அண்ணா சர்க்கரை ஆலை  ஊர்  குருங்குளம் கிழக்கு, குருங்குளம் மேற்கு, எனப் பிரிக்கப்பட்டுள்ளது. நாம் காணவிருக்கும் சிவன் கோயில் கீழ் பாதியில் தான் உள்ளது பெரிய ஒரு குளத்தின் கரையில் தான் இந்த சிவாலயம் அமைந்துள்ளது. 

இது வாகுயர் நாட்டின் தலைமை கிராமமான குருங்குளமாகும். இந்த பெயர் வருவதற்கான ஒரு காரணத்தையும் தெரிந்து கொள்வோம். 

இந்த ஊரில் நவகிரகங்களில் ஒருவரான குரு வழிபட்டதால் குரு குளம் எனப்படுகிறது என்கின்றனர். 
பெரிய குளத்தின் கரையில் சிவாலயம் மற்றும் மாரியம்மன் விநாயகர் கோயில்கள் உள்ளன.  மேற்கு நோக்கிய திருக்கோயில். 

நவக்கிரகங்களும் வழிபட்ட ஸ்தலம்;  சூரியன் ஒவ்வொரு நாளும் அந்திசாயும் நேரத்தில்  சிவபெருமானிடம் தனது ஒளிக்கதிர்களை சிவலிங்கம் மீது படரச் செய்து வணங்கி மறையும்  தலமாக இயல்பாகவே அமைந்துள்ளதாக கூறுகின்றனர். அந்த வகையில் இத்தலம் மிகவும் சிறப்புக்குரியத் தலமாக விளங்குகிறது.

கோயிலும் குளமும் அருகருகே இருக்கும் இடத்தில், பல முனிவர்களும், சித்தர்களும் நித்தம் வந்து சிவபெருமானை வழிபடுவார்கள் என  நம்பப்படுகிறது. குருங்குளம் செஞ்சுடேஸ்வரர் கோயிலில். மேலும் ஒரு பெருமையாக பெருமாள் , ஸ்ரீதேவி, பூதேவியுடன் கிழக்கு நோக்கி கம்பீரமாக காட்சி தருகின்றனர்.  ஒரே இடத்தில் சிவனையும், பெருமாளையும் வழிபட நமக்கு நல்வாய்ப்பு கிடைக்கிறது. 

மேற்கு நோக்கி அமைந்துள்ள சிவலிங்கத்தை காணுவதும், அப்படி ஒரு தல மண்ணில் நம் பாதம் படுவதே ஒரு சிறப்பாகும். 

இறைவன்  செஞ்சுடேஸ்வரர் இறைவி   அகிலாண்டேஸ்வரி 

'வெண்சுடர்' (திங்கள்/சந்திரன்) மற்றும் 'செஞ்சுடர்' (ஞாயிறு/சூரியன்) ஆகியவை சிவபெருமானின் இரு கண்களாகக் கருதப்படுகின்றன. செஞ்சுடர் ஈஸ்வரன் என்பது சிவபெருமானின் ஒளியுள்ள, சிவந்த வடிவம் அல்லது அருட்பெருஞ்ஜோதியைக் குறிக்கும் சொல் தினமும் மாலை கதிரவன் ஒளி வீழ்ந்து செஞ்சுடராக காட்சியளிப்பதால் இப்பெயர் என நினைக்கிறேன். 

இறைவன் மேற்கு நோக்கிய கருவறை கொண்டுள்ளார். வாயிலில் இரண்டு பிரம்மாண்டமான துவாரபாலகர்கள் நிற்கின்றனர். உயர்ந்த விமானம் ஒன்று அவரது கருவறை மீது நிற்கிறது. நீண்ட மண்டபத்தில் எதிரில் நந்தியும் கொடிமரமும் உள்ளது.  அம்பிகை தெற்கு நோக்கிய கருவறையில் உள்ளார்.  அவற்றின் வாயிலிலும் இரு பெரிய துவாரபாலகி சிலைகள்  உள்ளன. 

கருவறை கோஷ்டங்களில் துர்க்கை பிரம்மன் லிங்கோத்பவர் தென்முகன் விநாயகர் என உள்ளனர். சுற்று மதில் சுவர் இல்லாத பிரகாரமாக உள்ளது. முதலில் தெற்கில் வராகி ஒரு சன்னதியில் உள்ளார். அடுத்து அழகிய சிற்றாலயம் ஒன்றில் விநாயகர் அடுத்து ஸ்ரீதேவி பூதேவி சமேத பெருமாள் வாயிலில் இரண்டு ஆழ்வார்கள், ஒருபுறம் ஆஞ்சநேயர்  அடுத்து  முருகன் ஒரு சிற்றாலயத்தில் உள்ளார். இரண்டு  சன்னதிகளின் இடையில்  கஜலட்சுமி சன்னதி. 

வடக்கில் சண்டேசர், வடகிழக்கில் பைரவர் சூரியன் உள்ளனர். பழுதடைந்துபோன கோயில் சமீப காலத்தில் புதுப்பிக்கப்பட்டுள்ளது. ஆயினும் இறைவன் இங்கு எழுந்தருளி பல ஆயிரம் ஆண்டுகளாகலாம். 
 குளக்கரையில் அமைந்துள்ள இக்கோயில் செம்பாறாங்கல் கற்கள் எனப்படும் ஒருவித laterite  கற்களை கொண்டு கட்டப்பட்டு  காலப்போக்கில் கோயில் சிதைந்து போனது.

இந்த ஸ்தலத்துக்கு நவக்கிரக நாயகர்கள் சூக்ஷும  வடிவில் வந்து செஞ்சுடேஸ்வரரை தரிசித்து வருவதால் இந்த கோயிலில் நவக்கிரக சன்னதி ஏதும் கிடையாது. இங்குள்ள இறைவன் செஞ்சுடேஸ்வரரை வழிபட்டாலே " நவக்கிரகங்களையும் வழிபட்ட பேறு கிட்டும்" என நம்பப்படுகிறது. 

இத்தலத்தில் இங்கு பவுர்ணமி பூஜையும், பிரதோஷ வழிபாடும் பக்தர்களால் சிறப்பாக நடத்தப்பட்டு வருகிறது.

இக்கோயிலின் அருகே எழுந்தருளியுள்ள வேதமுத்து மாரியம்மன் தான் கிராமத்தின் காவல் தெய்வமாக உள்ளார். 

மேவி எழுகின்ற செஞ்சுடர் ஊடுசென்று
ஆவி எழும்அள வன்றே உடலுற
மேவப் படுவதும் விட்டு நிகழ்வதும்
பாவித்து அடக்கிற் பரகதி தானே.
ஓம் நமசிவாய
 படித்து பகிர்ந்தது 
இரா இளங்கோவன் 
நெல்லிக்குப்பம். 

வல்லம் வஜ்ரகண்டேஸ்வரர் சிவன்கோயில்

தஞ்சாவூர் மாவட்டம், தஞ்சாவூர் வட்டம், வல்லம் வஜ்ரகண்டேஸ்வரர்   சிவன்கோயில் 
வல்லம்; தஞ்சாவூர் -  திருச்சி செல்லும் சாலையில் 12  கி.மீ தொலைவில் உள்ளது. தொல்காப்பிய உரையில் வல்லம் சோழ நாட்டுப் பிவூரும், அழுத்தூரும், நாங்கூரும், கலன்சேரியும் பெருஞ்சிக்கலும், வல்லமும், கிழாரும், முதலிய பதியிற் தோன்றி... என்று குறிப்பிடுவதை நோக்கும்போது வல்லம் என்ற ஊரின் பெருமையும் குறித்து உணர முடிகிறது.

வல்லத்திற்கு அருகே செம்பாறாங்கற்பாறைப் படிவுகளில், தொல்பழங்காலச் சான்றுகள் கிடைக்கின்றன. இங்கு சுரண்டிகள், வெட்டும் கருவிகள் மற்றும் நுண்கற்கருவிகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. சிவப்பு மற்றும் கருப்பு நிறப் பானையோடுகளும், இரும்புக்கருவிகள், எலும்புப் பொருள்கள், கல் மணிகள் மற்றும் பிற பொருள்களும் கிடைத்துள்ளன. தமிழ் பிராமி எழுத்துப்பொறிப்புள்ள ஓடுகள் சிலவும் இங்கு கிடைத்துள்ளன.

வரலாற்றுக்காலத்திலும், வல்லம் ஒரு சிறந்த ஊராகத் திகழ்ந்தது. இங்கு ஒரு கோட்டையும், அதைச் சுற்றிலும் அகழியும் இருந்தது. வான்பார்வையில் இதனை இன்றும் காணலாம், 
இங்குள்ள கோட்டை, இடைக்காலத்தைச் சேர்ந்ததாக கருதப்படுகின்றது. தஞ்சாவூருக்குப் பாதுகாப்பளிக்கும் அரணாக வல்லம் செயல்பட்டுள்ளதாகத் தெரிகின்றது. 

வல்லத்தில் சோழர் காலக் கல்வெட்டுகள் உள்ளன. இங்குள்ள சோழீஸ்வரர் கோயிலில் சோழர், போசளர், பாண்டியர் கல்வெட்டுகள் உள்ளன. இக்கோயில் கரிகால சோழீஸ்வரமுடையார் கோயில் என்று குறிப்பிடப்படுகின்றது. இங்குள்ள கோட்டை பகுதிக்குள் வஜ்ராகண்டேஸ்வரர் சிவாலயம் ஒன்றும் நரசிங்கப் பெருமாள் கோயில் ஒன்றும் உள்ளது. இவை தவிர கோட்டைக்கு வெளியில் சோழீஸ்வரர் கோயில் ஒன்றும் ஏகெளரி அம்மன் கோயிலும் பிரசித்தி பெற்றவை

இறைவன்  வஜ்ஜிரேசுவரர் / வஜ்ரகண்டேஸ்வரர் 
இறைவி மங்களாம்பிகை.

கிழக்கு நோக்கிய இந்த சிவாலய வாயிலில் ராஜகோபுரம் காணப்படுகிறது. முன் மண்டம் ஓட்டு கூரையாக உள்ளது. இதில்  நந்தியும் பலிபீடமும், உள்ளன. மூலவர் சன்னதிக்கு முன்பாக இரு புறமும் துவாரபாலகர்கள் உள்ளனர். வலப்புறம் சன்னதியில்  விநாயகர் உள்ளார். இடப்புறம் சன்னதியில் பாலதண்டாயுதபாணி  முருகன் உள்ளார். இதனை ஒட்டி வடபுறம் சஞ்சீவி ஆஞ்சநேயர் ஒரு மாடத்தில் உள்ளார்.  விநாயகர் சன்னதிக்கு முன்பாக மூஞ்சுறும், பலிபீடமும் உள்ளன. முருகன் சன்னதிக்கு முன்பாக மயிலும், பலிபீடமும் உள்ளன. 
மூலவர் கருவறைக்கு முன்பாகவும்  ஒரு நந்தி உள்ளது. மூலவர் கருவறையின் வலப்புறம் தெற்கு நோக்கிய அம்பிகை சன்னதி உள்ளது. கோஷ்டத்தில் தக்ஷணமூர்த்தி, வடக்கில் துர்க்கை சன்னதி உள்ளன. 

திருச்சுற்றில் சண்டேசர் சன்னதி உள்ளது. வடகிழக்கில் கோபுரத்தினை ஒட்டி கௌதம முனிவர் ஒரு மாடத்தில் உள்ளார் அருகில் நவக்கிரக சன்னதி காணப்படுகிறது.  அதில் சூரியன் மேற்கு நோக்கியுள்ளார். 

இத்தலத்தில் மாசி மாதத்தில் சூரிய ஒளி சுவாமி மீது வீழ்ந்து ஒரு சிறப்பான நிகழ்வாகும். 

கோயிலின் தென் புறத்தில் அகழி போன்ற குளம் போன்ற அமைப்பு காணப்படுகிறது. கோயிலின் பக்கத்திலிருந்து இப்பகுதிக்குச் செல்வதற்கு படிகள் காணப்படுகின்றன. ஐம்பதடிக்கும் மேல் ஆழம் உள்ள இந்த குளம் இந்த குளம் தான் கோட்டையில் இருந்த அனைவருக்கும் குடிநீருக்காக பயன்பட்டு வந்தது. இன்று மிகவும் பாழடைந்து முள்மரங்களால் மூடி கிடக்கிறது. தஞ்சை பகுதியை சேர்ந்த சில  இளைஞர்கள் இதனை சுத்தம் செய்யும் பணியில் 50 வாரங்களாக ஈடுபட்டுள்ளனர் என்பது வியப்புக்குரியது. இக்குளம் 1300 வருட பழமையான இந்த  வல்லம் சுவரன் மாறன் கோட்டை குளம் எனப்படுகிறது. புராண கதையில் இதனை வஜ்ர தீர்த்தம் என கூறப்படுகிறது. 

 இக்கோயிலுக்கு ஒரு புராண கதையும் சொல்லப்படுகிறது.  கௌதம மகரிஷியின் ரிஷிபத்தினியின் மேல்  இந்திரன் ஆசை கொண்டு, கௌதம மகரிஷியின் உருவத்தோடு வந்து இன்பம் அனுபவிக்கிறான்.  அதனை அறிந்த கௌதமர் அகலிகையைக் கல்லாக மாற சாபமிட்டார். இந்திரனையும் சபிக்கிறார், கல்லாக மாறிய அகலியை  ராமனின் கால்பட்டதால் மீண்டும் மனிதவுருவம் பெற்றதாக  புராணம்.  

கருட புராணத்தின்படி, வஜ்ர கண்டம் என்பது மோகத்தால் குரு, மற்றும் பிறரின் மனைவியுடன் தகா உறவு கொள்ளுதல் போன்ற 
செயல்களில் ஈடுபடுபவர்களுக்கு, நரகத்தில் வழங்கப்படும் தண்டனை ஆகும். இது கடுமையான பாவங்களுக்கு அளிக்கப்படும் தண்டனைகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது. 

இந்திரன் தன் வஜ்ர கண்ட தண்டனை நீங்க  வேண்டி இறைவனை இங்கு வந்து வேண்டி தவம் செய்ததால் இங்கு இறைவனுக்கு வஜ்ரகண்டேஸ்வரர் என பெயர் வந்தது. 

இந்திரன் தன் வஜ்ராயுதத்தால் தென்புறத்தில் ஒரு தீர்த்தம் உண்டாக்கி இத்தல இறைவனை வேண்டியதால் வஜ்ரேஸ்வரர் என பெயர் வந்தாதாக கூறுகின்றனர். இந்திரனது வஜ்ரகண்ட சாபத்தினை நீக்க வேண்டி மும்மூர்த்திகளும் கௌதமரை கேட்டுக்கொண்ட தலம் இது என கூறப்படுகிறது.  

திருவையாறு அருகில் உள்ள வீரமாங்குடியில் அமைந்துள்ள சிவாலயத்திலும் வஜ்ரகண்டேஸ்வரராகவும், அம்மன் மங்களாம்பிகையாகவும் அருள்பாலிக்கின்றனர். வஜ்ராசுரன் என்ற அரக்கனை அழித்த தலமாக இது கருதப்படுகிறது.  

ஒரு பழம்பெரும் கோட்டை நகரில் குடியிருக்கும் இறைவனை காண வாருங்கள். 
ஓம் நமசிவாய 
படித்து பகிர்ந்தது 
இரா இளங்கோவன் 
நெல்லிக்குப்பம். 

Monday, March 30, 2026

பங்குனி உத்திர விரத பலன்கள்

_பங்குனி உத்திரம்_

பங்குனி உத்திரம் என்பது பங்குனி மாதத்தில் பௌர்ணமி மற்றும் உத்திர நட்சத்திரம் இணைந்து வரும் ஒரு புனிதமான நாளாகும். இது சிவனும் பார்வதியும், முருகன் - தெய்வானை, ராமன் - சீதை போன்ற தெய்வத் திருமணங்கள் நடந்த சிறப்பான நாளாகக் கருதப்படுகிறது. இந்த நாளில் விரதம் இருந்து இறைவனை வழிபட்டால், திருமணத் தடைகள் நீங்கி, நீண்ட ஆயுள் மற்றும் மகிழ்ச்சியான இல்லற வாழ்க்கை கிடைக்கும் என்பது நம்பிக்கை. 

பங்குனி உத்திர விரத பலன்கள்:
• திருமண யோகம்: திருமணத் தடைகள் நீங்கி, விருப்பமான வாழ்க்கைத் துணை அமையவும், மகிழ்ச்சியான திருமண வாழ்வுக்கும் இந்த நாளில் விரதம் இருப்பது சிறந்தது.
• குடும்ப ஒற்றுமை: தம்பதிகளுக்கு இடையே ஒற்றுமை மற்றும் அன்பு பெருகும், குடும்பப் பிரச்சினைகள் தீரும்.
• பதவி உயர்வு: அரசு தொடர்பான காரியங்களில் வெற்றி கிடைக்கும் மற்றும் வேலை, பதவி உயர்வு கிடைக்கும்.
• மன நிம்மதி: களங்கமில்லாத சந்திர ஒளியின் கீழ் வழிபாடு செய்வதால், மன அமைதியும், உடல் ஆரோக்கியமும் கிடைக்கும்.
• புண்ணியம்: இறைவனின் அருளால் பாவங்கள் நீங்கி, புண்ணிய பலன்கள் சேரும். 

முக்கிய வழிபாட்டு முறைகள்:
• முருகன் மற்றும் சிவன் ஆலயங்களுக்குச் சென்று வழிபாடு செய்தல்.
• விரதம் இருந்து மாலையில் முருகனுக்குத் திருக்கல்யாண உற்சவம் கண்டு உணவருந்துதல்.
• தேவாரம், திருவாசகம், கந்த சஷ்டி கவசம் பாடுதல்.
• தேவைப்படுபவர்களுக்கு அன்னதானம் அல்லது நீர் மோர் தானம் வழங்குதல்.

ஓம் நமசிவாய
 படித்து பகிர்ந்தது 
இரா இளங்கோவன் 
நெல்லிக்குப்பம். 

Tuesday, March 24, 2026

ஹோமங்களில் சமித்துக்களை அக்னியில் போடும் சாஸ்திரம் சொல்லும் பலன்கள்.

_ஹோமங்களில் பலவித சமித்துக் களை அக்னியில் போடுகிறோம். சாஸ்திரம் சொல்லும் அதன் பலன்கள்_

ஹோமங்களில் பலவித சமித்துக் களை அக்னியில் போடுவதை
 ஆகுதி என்பார்கள். இப்படிச் செய்யப்படுகிற ஒவ்வொரு சமித்துகளுக்கும் ஒவ்வொரு விதமான பலன்கள் உண்டு என்கிறது சாஸ்திரம்! 

சமித்து என்பது ஹோமகுண்டத்தில் சேர்க்கப்படும் குச்சிகள்.ஒவ்வொரு சமித்து குச்சிக்கும் ஒவ்வொரு வேண்டுதல்களும் பலன்களும் உள்ளன என்கிறார் சென்னை நங்கநல்லூர் பாலாஜி சாஸ்திரிகள்.
 
வில்வம் : சிவனுக்கும் மஹாலட்சுமிக்கும் பிடித்தமானது 

துளசி சமித்து : நாராயணனுக்குப் பிடித்தது 

அத்தி சமித்து : சுக்கிரனுக்குப் பிடித்தது 

நாயுருவி சமித்து : புதனுக்குப் பிடித்தது 

பலாமர சமித்து : சந்திரனுக்குப் பிடித்தது 

அரசரமர சமித்து : குருவிற்குப் பிடித்தது 

வன்னிமர சமித்து : சனீஸ்வரனுக்குப் பிடித்தது 

அருகம் புல் : விநாயகருக்கும் ராகுவுக்கும் பிடித்தது 

மாமர சமித்து :
 சர்வமங்களங்களையும் சித்திக்கும் 

பாலுள்ள மரத்தின் சமித்துக்கள் : வியாதி நாசினி என்பார்கள். 

தாமரை புஷ்பம் : லக்ஷ்மிக்கும் சரஸ்வதிக்கும் பிடித்தமானது 

மாதுளை மரம் : வசீகரம் கிடைக்கும். தேஜஸ் பெறலாம். 

அத்திக் குச்சி : மக்கட்பேறு. 

நாயுருவி குச்சி : மகாலக்ஷ்மி கடாட்சம் 

எருக்கன் குச்சி : எதிரிகள் இல்லாத நிலை 

அரசங் குச்சி : அரசாங்க நன்மை 

கருங்காலிக் கட்டை: ஏவல், பில்லி சூனியம் அகலும். 

வன்னிக் குச்சி : கிரகக் கோளாறுகள் நீங்கிவிடும். 

புரசங் குச்சி : குழந்தைகள் கல்வியும் ஞானமும் பெறுவர். 

வில்வக் குச்சி : செல்வம் சேரும் 

அருகம்புல் : விஷபயம் நீங்கும். 

ஆலங் குச்சி : புகழைச் சேர்க்கும். 

நொச்சி : காரியத்தடை விலகும். 

வில்வம் : வில்வ சமித்தினைக் கொண்டு ஹோமம் செய்தால் ராஜ யோகம் கிட்டும். 

வில்வப்பழ ஹோமத்தால் சகல செல்வங்களையும் பெறலாம். 
சிவசக்தி சம்பந்தமான சண்டி ஹோமம் போன்ற யாகங்களில் வில்வம் சமித்தாகப் பயன்படுத்தினால் பலன்கள் நிறைய உண்டு. 

துளசி : துளசி சமித்தினால் ஹோமம் செய்தால் நீண்ட காலமாக திருமணம் ஆகாதவர்களுக்கு திருமணம் கைகூடி நடைபெறும். எண்ணிய காரியம் கைகூடும். 

சோமவல்லிக் கொடி : கொடிக்கள்ளி எனப்படும் இதன் ரசத்தைப் பிழிந்து 'சோமாம்ருதம்' ம்ருத்யுஜய மந்திரத்தினால் ஹோமம் செய்தால் சகல நோய்களும் நீங்கி, தேகத்தில் அமிர்தம் உண்டாகி பிரம்மதேஜஸ் பெறலாம். கொடியை கணுக்கள் தோறும் ஒடித்து பாலில் தோய்த்து சூர்ய மந்திரம் கூறி அக்னியிடம் இட வேண்டும். இதனால் காச நோய் அகலும். 

பலாசு சமித்து : இது சந்திர கிரக சமித்தாகும். இதனால் சந்திரகிரக பிரீதியாகும். பலாசு புஷ்பத்தால் எல்லா இஷ்ட காரியங்களும், பலாசு ரஸத்தால் ஞான விருத்தியும், சிறந்த புத்தியும் பெறலாம். பலாசு குச்சிகளை அக்னி ஹோத்திரம் செய்து அதனால் ஸ்நாபானம் செய்யின் பிரம்ம ஞானம் அடைந்து பரப்பிரம்ம சொரூபம் அடையலாம். 

அரசு சமித்து : அரசு சமித்து குரு கிரகத்தின் சமித்தாகும். அரச மரத்தின் சமித்தால் தலைமைப் பதவி வரும். போரில் ஜெயம் அடைந்து அரச தன்மை கிடைக்கும். 

வெள்ளை எருக்கு : இது சூரிய கிரகத்தின் சமித்தாகும். இம்மூலிகை சர்வசக்தி பொருந்தியது. வசியம், மோகனம் ஆகிய அஷ்டாமித்துகளையும் அடையலாம். 

இச்சமித்து களால் ராஜ வசியம், ஸ்திரீ வசியம், மிருக வசியம், சர்ப்ப வசியம், லோக வசியம், சத்ரு வசியம், தேவ வசியம் ஆக சர்வ வசியங்களையும் அடையலாம். எடுத்த வேலை இனிதே முடியும். 

செம்மர சமித்து : இது அங்காரக கிரக சமித்தாகும். இதனால் ரண ரோகங்கள் நீங்கும். தைரியம் பெருகும். 

நாயுருவி சமித்து : இது புது கிரக சமித்தாகும். இதனால் லட்சுமி கடாட்சம் ஏற்படும். சுதர்சன ஹோமத்திற்கு இதுவே சிறந்தது. 

அத்தி சமித்து : இது சுக்கிர கிரகத்தின் சமித்தாகும். பித்ரு ப்ரீதி பெற்று விரும்பிய பொருள் கைகூடும். 

பில்லி, சூனியம், பிசாசு பயங்களிலிருந்து விடுவித்து சத்ருக்களை வெல்லும். பைத்தியமும் மேக ரோகங்களும் அகலும். வாக்கு சித்தியும் ஏற்படும். பசு, யானை, குதிரை நோய் நீங்கும். 

வன்னி சமித்து : 

வன்னி சமித்து சனிக் கிரகத்தின் சமித்தாகும். இதில் அக்னிப் பகவான் இருப்பதாகப் புராணங்கள் கூறுகின்றன. வன்னி சமித்து யாக பஸ்மாவைத் தரித்தால் அது நெற்றியில் எழுதியிருக்கும் யம சம்பந்தமான எழுத்தைத் தொலைத்து விடும். 

இந்த சமித்து பஸ்பம் பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகிய மூவரையும் மூவுலகினையும் மூன்று அக்னிகளையும் முக்குணங்களையும் குறிப்பதாக இருக்கிறது. சகல தெய்வ, தேவாதி களும் இச்சமித்தால் மகிழ்ச்சி அடைகிறார்கள். பூகம்பங்களால் உண்டாகிற பயங்கள் நீங்கும். சகல தோஷங் களும் நிவர்த்தியாகும். 

தர்ப்பை சமித்து : கேது பகவானுக்கு தர்ப்பை சமித்து மிகவும் பிடித்தமானதாகும். இது ஞான விருத்தியைத் தரும். 

அருகம்புல் : இது ராகு பகவானுக்குப் பிடித்தமானது. இதனால் பூர்வ ஜென்ம வினைகளும் சர்வ இடையூறுகளும் நீங்கி காரியம் சித்தியடையும். 

நற்றுணையாவது நமசிவாயவே.....

படித்து பகிர்ந்தது 
இரா இளங்கோவன் 
நெல்லிக்குப்பம். 

Followers

திருகாமேஸ்வரர் திருச்சி மாவட்டம் வெள்ளூர்.

திருகாமேஸ்வரர் கோவில் - திருச்சி     திருச்சி மாவட்டம் வெள்ளூர் என்ற ஊரில் உள்ளது, திருகாமேஸ்வரர் ஆலயம். இங்கு அருள்பாலிக்கும் இ...