Showing posts with label #Chandra Choodeswarar #hinduTemple #Hosur #Hindu temple #Tamil Nadu #India. Show all posts
Showing posts with label #Chandra Choodeswarar #hinduTemple #Hosur #Hindu temple #Tamil Nadu #India. Show all posts

Thursday, December 12, 2024

அருள்மிகு சந்திரசூடேசுவரர் திருக்கோயில் ஓசூர்..

*அருள்மிகு சந்திரசூடேசுவரர் திருக்கோயில்
*காலை 6 மணி முதல் 12 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 9 மணி வரை திறந்திருக்கும்.*

*மூலவர் – சந்திர சூடேசுவரர்*

*அம்மன் – மரகதாம்பிகை*

*தல விருட்சம் – வில்வம்*

*தீர்த்தம் – பச்சைக் குளம்*

*பழமை – 500-1000 வருடங்களுக்கு முன்*

*புராணப் பெயர் – பத்ரகாசி*

*ஊர் – ஓசூர்*

*மாவட்டம் – கிருஷ்ணகிரி*

*மாநிலம் – தமிழ்நாடு*
*கயிலாயத்திலிருந்து ஈசனும் அம்பாளும் வரும்போது ஈசன், மரகதம், மாணிக்கம், நவரத்தினம் பதித்த உடும்பு உருவெடுத்து வருகிறார். அந்த உடும்பைப் பிடிக்க அம்பாள் பின் தொடருகிறார். காடு மேடு தாண்டி இப்பகுதிக்கு வருகிறார்.அப்படி வரும்போது முத்கலர், உத்சாயனர் என்ற இரு பெரும் முனிவர்கள் இம்மலையில் தவமிருக்கின்றனர்.*

*தங்களது தவ ஞானத்தால் ஈசன் என்று உணர்ந்து அந்த உடும்பைப் பிடிக்க எண்ணினர். இருவரிடமும் மாட்டிக்கொள்ளாது இருக்க ஈசன் மறைந்து விடுகிறார்.*

*கோபம் கொண்டு முனிவர்களை அம்பாள் சபிக்க முனிவர்கள் இருவரும் முறையே ஊமையன் செவிடன் ஆகி விடுகின்றனர். பின்பு அம்பாள் கோமுகம் வழியாக தவமிருக்கிறார்.*

*அம்பாள் முன்பாக ஸ்ரீ சக்கரம் உண்டு. அந்த ஸ்ரீ சக்கரம் முன்பாகத்தான் நவசண்டி யாகம் ஆடிமாதம் சிறப்பாக நடைபெறுகிறது. அம்மன் சிலை மரகதம் போல் பச்சை நிறமாக இருப்பது அதிசயம். அம்மன் முகத்தில் உள்ள மூக்கில் மூக்குத்தி நுழைய துவாரம் உள்ளது. அம்மனின் பின்னல் தலைமுடி ஜடை குஞ்சத்தோடு இருக்கும்.*

*பஞ்சபாண்டவர்களில், அர்ச்சுனன் சுவாமிக்கு அஷ்டகம் எழுதிப் பூஜை செய்ததாகச் சொல்லுகின்றனர்.*

*இம்மலைக்கு வடக்கு பக்கம் மகா விஷ்ணு (வெங்கட் ரமணர் சுவாமி) மலைக்கோயிலும், தெற்கு பக்கம் பிரம்மா (பாதம் மட்டும்) மலைக்கோயிலும் உள்ளது. மும்மூர்த்திகளும் ஒரு சேர மலையாக ஒரே நேர்கோட்டில் உள்ளது சிறப்பம்சம்.*

*இங்குள்ள விநாயகரின் திருநாமம் ராஜகணபதி .*

*அஷ்டதிக் பாலகர்கள் இந்திரன், அக்னி, யமன், நிருதி, வருணன், வாயு, குபேரன், ஈசான்யம் ஆகிய ஒவ்வொருவரும் ஒவ்வொரு திக்கிலும் உருவத்தோடும் வாகனத்தோடும் இக்கோயிலில் உள்ளனர் என்பது சிறப்பு.*

*மூலவர் சந்திரசூடேஸ்வரர் சுயம்பு மூர்த்தியாக எழுந்தருளியுள்ளார். பிரகாரத்தில் உள்ள ஜலகண்டேசுவரர் இலிங்கம் சிறப்பு வாய்ந்தது. தண்ணீர் தொட்டி போன்ற அமைப்பின் மத்தியில் இந்த இலிங்கம் உள்ளது. மழை இல்லாத காலங்களில் இந்த இலிங்கத்திற்கு சிறப்பு வழிபாடு நடத்தப்படுகிறது. தண்ணீர் தொட்டி போன்ற அமைப்புக்குள் குடம் குடமாக தண்ணீர் ஊற்றுகின்றனர். 16 நாட்கள் தொடர்ந்து இவ்வாறு தொட்டிக்குள் தண்ணீர் நிரப்பித் தெப்பமாக வைத்து விட்டு கற்பூரம் ஏற்றி வைத்து வணங்கி விட்டு வந்து விடுகிறார்கள். பின்பு சில மணி நேரங்களில் தண்ணீர் வற்றி விட்டால் மழை வராது என்று பொருள். தண்ணீர் வடியாமல் தெப்பம் போல் நின்றிருந்தால் அடுத்த சில நாட்களில் மழை வருமாம். இந்த சில வருடங்களுக்கு முன் இதே போல் தெப்பம் போல் இருந்து அந்த சமயத்தில் மழை வந்த அதிசயம் நடந்திருக்கிறது.*

*திருவிழா:*

*மாசி – பங்குனி – தேர்த்திருவிழா – 13 நாட்கள் திருவிழா – இத்திருவிழாவின் போது தமிழகம் தவிர கர்நாடகா, ஆந்திர மாநிலங்களிலிருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் கோயிலில் கூடுவது மிகவும் சிறப்பு.*

*தெலுங்கு பால்குண மாதம் – பவுர்ணமி ரத உற்சவம் சிவராத்திரி – சோமவாரம் விசேசம் (தெலுங்கு சம்பிரதாயம்) ஆடி – நவசண்டி யாகம், ஆடிபூரம், கார்த்திகை தீபம், ஆருத்ரா தரிசனம், தைப்பொங்கல் ஆகியவை இத்தலத்தின் விசேச நாட்கள். தவிர பிரதோச காலங்களில் கோயிலில் மிக அதிக அளவில் பக்தர்கள் கூடுகிறார்கள். பவுர்ணமி கிரிவலம் இத்தலத்தில் மிகவும் சிறப்பாக நடக்கிறது. ஆங்கில, தமிழ் புத்தாண்டு தினங்களன்று கோயிலில் மிக அதிக அளவு எண்ணிக்கையிலான பக்தர்கள் கூடுகிறார்கள்.*

*இங்குள்ள ஈசனை வழிபடுவோர்க்கு மனநிம்மதி கிடைக்கும். இது உடல் சம்பந்தப்பட்ட எந்த நோயானாலும் தீருகிறது. மேலும் குழந்தை வரம் மற்றும் குடும்ப ஐஸ்வர்யம் ஆகியவற்றுக்காகவும் இத்தலத்தில் பக்தர்கள் ருத்ரா அபிசேகம் செய்வது வழக்கமாக உள்ளது. இந்த அபிசேகம் இத்தலத்தில் மிகவும் சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது.*

*வில்வ மரத்தில் தொட்டில் கட்டி குழந்தை வரம் வேண்டுவோர் வழிபடுகின்றனர். வேலைவாய்ப்பு மற்றும் கடன்தொல்லை ஆகியவற்றுக்காகவும் இத்தலத்துக்கு பக்தர்கள் வந்து வழிபடுகின்றன*

ஓம் நமசிவாய 
படித்து பகிர்ந்தது 
இரா இளங்கோவன் 
நெல்லிக்குப்பம். 

Followers

பிள்ளையார் விரும்பும் 'மோதகம்' நைவேத்தியம் என்றால் என்ன❓

பிள்ளையார் விரும்பும் 'மோதகம்' நைவேத்தியம் மோதக் என்றால் உற்சாகம், மகிழ்ச்சி என்று பொருள். அகம் என்ற சொல்லுக்கு ‘வழங்கக்...