Wednesday, September 18, 2024

திருவாசி மாற்றுரைவரதீஸ்வரர் (பிரம்மபுரீஸ்வரர்) திருச்சி....

திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் உள்ள புகழ்பெற்ற தேவாரப் பாடல் பெற்ற சோழநாட்டு தலங்களில் ஒன்றான, 
சுந்தரமூர்த்தி நாயனார் 
பொன் பொருள் பெற்ற தலமான, திருஞானசம்பந்தர் பதிகம் பாடி முயலக நோய் தீர்த்த தலமான 
#திருவாசி (#திருப்பாச்சிலாச்சிராமம்) 
#மாற்றுரைவரதீஸ்வரர் (பிரம்மபுரீஸ்வரர்)
#பாலாம்பிகை
திருக்கோயில் வரலாறு:
கொல்லிமலையை ஆண்ட மன்னரின் மகளுக்கு முயலகன் நோயைத் தீர்த்து, இன்றளவும் கொடிய நோய்கள் பலவற்றுக்கு தீர்வு தரும் தலமாக இருப்பது திருவாசி.  நீர்வளம், நில வளம், செல்வ வளம் நிறைந்த சோழவள நாட்டின் காவிரி நதியின் வடகரையில் உள்ளது இந்தத் திருத்தலம். தேவாரப் பாடல் பெற்ற சிவத் தலங்களுள் 62ஆவது தலமாகும். திருப்பாச்சிலாச்சிராமம் என்பதே இதன் இயற்பெயர். தற்போது, திருவாசி என அழைக்கப்படுகிறது.

மாற்றுரைவரதீசுவரர் கோயில் என்பது திருச்சிராப்பள்ளி மாவட்டம் திருவாசி என்ற ஊரில் அமைந்துள்ள சிவாலயமாகும். இத்தலம் தேவாரம் பாடல் பெற்ற தலங்களில் ஒன்றாகவும், காவிரி வடகரைத் தலங்களில் அமைந்துள்ள 62வது சிவதலமாகவும் உள்ளது. இச்சிவாலய மூலவரை உமாதேவி, பிரம்மதேவன், இலக்குமி, அகத்திய முனிவர், கமலன் எனும் வைசியன், கொல்லிமழவன் ஆகியோர் வழிபட்டுள்ளனர்.

திருப்பாச்சிலாச்சிராமம் என்பதில் திரு, பாச்சில், ஆச்சிராமம் என்ற மூன்று சொற்கள் உள்ளன. இவற்றில் திரு என்பது தெய்வத்தன்மை. அழகு, செல்வம் எனவும் குறிப்பிடப்படுகிறது. பாச்சில் என்பது ஊர்ப் பெயர் ஆகும். ஆச்சிராமம் என்பது கோயிலின் பெயர். வசிஷ்டர், அகஸ்தியர், துர்வாசர் ஆகியோர் தவம் செய்த இடம். மூர்த்தி, தலம், தீர்த்தம் என்ற மூன்று பெருமைகளைக் கொண்ட திருத்தலம். திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் வட்டத்தில் உள்ளது. திருச்சியிலிருந்து முசிறி செல்லும் வழியில் 14 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது.

மூலவர்:மாற்றுரைவரதர் (பிரம்மபுரீஸ்வரர், சமீவனேஸ்வரர்)
அம்மன்:பாலாம்பிகை
தல விருட்சம்:வன்னி
தீர்த்தம்:அன்னமாம்பொய்கை, சிலம்பாறு
ஆகமம்:சிவாகமம்
புராண பெயர்:திருப்பாச்சிலாச்சிரமம்
ஊர்:திருவாசி
மாவட்டம்:திருச்சி
மாநிலம்:தமிழ்நாடு

பாடியவர்கள்:

திருஞானசம்பந்தர், சுந்தரர்

தேவாரப்பதிகம்:

"ஒருமையே அல்லேன் எழுமையும் அடியேன் அடியவர்க்கு அடியனும் ஆனேன் உரிமையால் உரியோன் உள்ளமும் உருகும் ஒண்மலர்ச் சேவடி காட்டாய் அருமையாம் புகழார்க்கு அருள்செய்யும் பாச்சி லாச்சிராமத்து எம் அடிகள் பெருமைகள் பேசிச் சிறுமைகள் செய்யில் இவரலாது இல்லையோ பிரானார்.

சிவாலயத்தின் எதிரே அடைக்கலம் காத்தார் கோயிலும் அதில் கருப்பண்ணசாமி சன்னதியும் உள்ளது. அக்கோயிலின் அருகே மதுரை வீரன் சன்னதியும் அமைந்துள்ளது.

இச்சிவாலயம் அமைந்த திருவாசி ஊரானது புராண காலத்தில் திருப்பாச்சிலாச்சிராமம் என்ற பெயரில் அழைக்கப்பட்டு வந்துள்ளது.

முயலகன் நோய் தீர்த்த வரலாறு

கொல்லிமலைத் தொடரை எல்லையாக ஆண்டுவந்த கொல்லிமழவனின் மகளுக்கு முயலகன் (வலிப்பு நோய்) எனும் தீராத நோயிருந்தது. மன்னன் எவ்வளவோ வைத்தியம் செய்து பார்த்தும் மகளைக் குணப்படுத்த முடியவில்லை. எனவே, பெரியவர்களின் ஆலோசனைப்படி, பெருமான் அருள்புரியும் இக்கோயிலில் அவளைக் கிடத்தி, அவளின் பிணியைக் குணப்படுத்தும் பொறுப்பை பெருமானிடமே விட்டுவிட்டுச் சென்றான். 

அச்சமயத்தில் திருஞானசம்பந்தர் பல தலங்களைத் தரிசனம் செய்துகொண்டு மழவ நாட்டைச் சார்ந்த திருப்பாச்சிலாச்சிராமம் என்ற இத்தலத்திற்கு எழுந்தருளினார். 

இதையறிந்த மன்னன் அன்புடன் சம்பந்தரை வரவேற்றுத் தன் மகளின் நோயை நீக்கியருள வேண்டினான். அருள் உள்ளம் கொண்ட சம்பந்தர் சிவனை வேண்டி "துணிவளர் திங்கள் துளங்கி விளங்க" எனும் பதிகம் பாடி இறைவனை வணங்க நோய் நீங்கி மன்னன் மகள் குணமடைந்தாள் என்பது வரலாற்றுத் தகவல். சிவபெருமான் அவளது நோயை ஒரு பாம்பாக மாற்றி, அதன் மீது நின்று ஆடினார். இதன் அடிப்படையில் இங்குள்ள நடராஜர் காலுக்குக் கீழே முயலகன் உருவம் இல்லாமை அறியத்தக்கது. திருவடியின் கீழ் அதற்குப் பதில் உள்ள ஒரு சர்ப்பத்தின் மீது நடனமாடுகின்றார்.

நரம்புத் தளர்ச்சி, வாதநோய், வலிப்பு நோய், சர்ப்ப தோஷம், மாதவிடாய் பிரச்னைகள் முதலியன இத்தல இறைவனை வழிபடக் குணமாகும். இவ்வாலயத்திலுள்ள ஆவுடையாப்பிள்ளை மண்டபத்தில் கொல்லி மழவன் மகளுக்கு சம்பந்தர் நோய் நீக்கிய வரலாற்றை விளக்கும் சிற்பங்கள் உள்ளன.

#தீர்த்தம்:

அன்னமாம் பொய்கை எனும் தீர்த்தம் கோயிலுக்கு முன்னர் உள்ளது. இதனை தாமிரபரணி எனவும் கூறுகின்றனர். பொய்கை என்பதுதானே தோன்றிய நீர்நிலை ஆகும். உமாதேவியார் இங்கு அன்னப்பறவை வடிவுடன் இருந்து நீராடி இறைவனை வழிபட்டதால், இத்தீர்த்தம் அன்னமாம்பொய்கை எனப் பெயர் பெற்றது.

*சிலம்பு நதி:

இந்த நதியானது ஊரின் கிழக்கு நோக்கி ஓடும் பங்குனி நதி ஆகும்.

*கொள்ளிட நதி:

இந்த நதியானது ஊருக்கு தெற்கு முசிறி செல்லும் சாலையை அடுத்து தென்பால், காவிரியின் பிரிவாக ஓடும் பெரிய நதியாகும்.

*தல விருட்சம்:

இக்கோயிலின் தல விருட்சம் வன்னி மரம். இங்கு வன்னிமரம் மிகுதியாக இருந்ததால் வனஷேத்திரம் எனப் பெயர் பெற்றது. தற்போது, இக்கோயிலில் ஒரு வன்னி மரம் மட்டும், அம்மையார் ஆலயத்தின் முன்னே உள்ளது.

#தல வரலாறு :

சுந்தரர் தன்னுடன் சிவதல யாத்திரைக்கு வருகின்ற சிவனடியார்களுக்கு உணவு படைப்பதை வழக்கமாக கொண்டிருந்தார். அவ்வாறு உணவு படைக்க சிவபெருமானிடம் பொன்னையும் பொருளையும் பெற்றுக் கொள்வார். ஆனால் இத்தலத்தில் சுந்தரர் பொற் பதிகம் பாடியும் சிவபெருமான் பொன்னைத் தரவில்லை. சுந்தரர் கோபம் கொண்டு பாடல்களைப் பாடினார். அதன்பின்பு சிவபெருமான் பொன்னை தந்தார். பிறகு அந்தப் பொன் சுத்தமானதா என்ற சந்தேகம் சுந்தரருக்கு வந்தது. அப்போது அங்கு வந்த இருவர் அந்தப் பொன்னை சோதித்து அதன் தரத்தினை உரைத்தனர். சிவபெருமான் தன்னை இகழ்ந்து பாடினாலும் பொன் தருவார் என்பதை சுந்தரர் அறிந்தார். பொன்னை உரைத்து தரத்தை உரைத்த இருவரும் மறைந்தனர். அவர்கள் சிவபெருமானும் திருமாலும் என சுந்தரர் அறிந்தார்.

மாற்றுரைவரதர் எனும் பெயர் இதன் காரணமாகவே வந்தது.

#தல சிறப்பு:

கருவறையில் சுவாமி ருத்ராட்ச பந்தலின் கீழ் சுயம்பு லிங்கமாக அருளுகிறார். ராஜகோபுரத்தின் கீழே அதிகார நந்தி, மனைவியுடன் நின்ற கோலத்தில் இருக்கிறார். இங்குள்ள நவக்கிரகத்தில் சூரியன் தன் மனைவியர் உஷா, பிரத்யூஷாவுடன் இருக்க மற்ற கிரகங்கள் அனைத்தும் அவரை பார்த்தபடி இருக்கிறது. பிரகாரத்தில் சகஸ்ரலிங்க சன்னதி உள்ளது.சிவனின் தேவாரப்பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் இது 62 வது தேவாரத்தலம் ஆகும். கல்லில் தூண் செய்து,அதன் நடுவே ஒரு உருளை ஏற்படுத்தி அந்த உருளை சுழல ,மூன்று பக்கமும் இடைவெளி விட்டு அதனை சுழலும் விதமாக செய்திருப்பது மிகவும் அதிசயம். 

#பொது தகவல்:

பாலாம்பிகை சன்னதிக்கு எதிரே செல்வ விநாயகர் சன்னதியும், அன்னமாம்பொய்கை தீர்த்தமும் இருக்கிறது. இத்தலத்தின் தலவிநாயகரின் திருநாமம் அனுக்கை விநாயகர்.

#தலபெருமை:

#சர்ப்ப நடராஜர்: 

முன்னொரு காலத்தில் இப்பகுதி மழநாடு என்ற பெயரில் அழைக்கப்பட்டது. இப்பகுதியை கொல்லிமழவன் எனும் மன்னன் ஆட்சி செய்து வந்தான். மன்னனின் மகள் தீராத கொடிய நோயினால் பாதிக்கப்பட்டிருந்தாள். மன்னன் எவ்வளவோ வைத்தியம் பார்த்தும் அவளைக் குணப்படுத்த முடியவில்லை. எனவே, அவளை இக்கோயிலில் கிடத்திவிட்டு, அவளது பிணியை குணப்படுத்தும் பொறுப்பை சுவாமியிடம் விட்டுவிட்டு சென்று விட்டான். அச்சமயத்தில் திருத்தலயாத்திரையாக திருஞானசம்பந்தர் இத்தலம் வந்தார். அவர் சுவாமியின் முன்பு கிடந்த பெண்ணைக் கண்டார். அந்நேரத்தில் சம்பந்தர் வந்திருப்பதை அறிந்த மன்னன் கோயிலுக்கு வந்தான்.

திருஞானசம்பந்தரிடம் மன்னன், தன் மகளின் நோயைக் கூறி அவள் குணமடைய வழி சொல்லும்படி கேட்டுக்கொண்டான். மன்னனின் நிலையை அறிந்த சம்பந்தர் நடராஜரைக் குறித்து பதிகம் பாடினார். அவரது பாடல் கேட்ட நடராஜர் ஆனந்த நடனம் ஆடினார்.

மன்னன் மகளை பிடித்திருந்த நோயை முயலக உருவாக்கி அவனை அழித்து நாகத்தின் மீது ஆடினார். மன்னன் மகள் குணமாகி எழுந்தாள். இதனை உணர்த்தும் விதமாக இங்குள்ள நடராஜர் தலையில் சேர்த்துக் கட்டிய சடைமுடியுடன், ஒரு காலை நாகத்தின் மீது ஊன்றி ஆடும் கோலத்தில் இருக்கிறார். இவரை “சர்ப்ப நடராஜர்’ என்கின்றனர். நடராஜரின் இந்த தரிசனம் அபூர்வமானதாகும்.

*அம்பாள் சிறப்பு: 

அம்பாள் பாலாம்பிகை, இத்தலத்தில் கமலன் எனும் வணிகனின் மகளாக பிறந்தாள். வன்னிமரத்தின் அடியில் சுவாமியை வேண்டி தவம் இருந்து தகுந்த காலத்தில் அவரை மணந்து கொண்டாள். இவள் பிரகாரத்தில் தனிச்சன்னதியில் தாமரை மலர் மீது நின்ற கோலத்தில், மேற்கு பார்த்தபடி இருக்கிறாள். இவளது சன்னதியில் வித்தியாசமாக துவாரபாலகிகளுக்கு பெண்கள் மஞ்சள் கயிறு, தொட்டில் கட்டி வழிபடுகின்றனர். இவர்கள் மூலமாக அம்பாள் பக்தர்களின் கோரிக்கைகளை ஏற்றுக் கொள்கிறாள் என்பது நம்பிக்கை.

அர்த்தஜாம பூஜையில் மட்டும் முதலில் அம்பாளுக்கு பூஜைகள் செய்யப்பட்டு அதன்பிறகு சுவாமிக்கு பூஜைகள் நடக்கிறது. குழந்தை பிறந்தவர்களும், பாலதோஷம் உள்ள குழந்தைகளின் பெற்றோர்களும் அம்பாளுக்கு பால் அபிஷேகம் செய்து வழிபடுகின்றனர். இவ்வாறு செய்வதால் குழந்தைகள் வாழ்வில் நோய்கள் இன்றி சிறப்பாக வாழ்வர் என்பது நம்பிக்கை.

*அதிசயத்தின் அடிப்படையில்: 

கருவறையில் சுவாமி ருத்ராட்ச பந்தலின் கீழ் சுயம்பு லிங்கமாக அருளுகிறார். கல்லில் தூண் செய்து,அதன் நடுவே ஒரு உருளை ஏற்படுத்தி அந்த உருளை சுழல ,மூன்று பக்கமும் இடைவெளி விட்டு அதனை சுழலும் விதமாக செய்திருப்பது மிகவும் அதிசயம். 

*ஆலயத்தின் சிறப்புகள்:

இந்த ஆலயமானது 5 நிலை ராஜகோபுரத்துடனும், இரண்டு பிராகாரங்களுடனும் விளங்குகிறது. இத்தலத்தில் சுவாமி ருத்ராட்ச பந்தலின் கீழ் சுயம்பு லிங்கமாக அருளுகிறார். ராஜகோபுரத்தின் கீழே அதிகார நந்தி, மனைவியுடன் இருக்கிறார். இங்குள்ள நவக்கிரக சன்னதியில் சூரியன் தன் மனைவியர் உஷா, பிரத்யுஷாவுடன் இருக்க மற்ற கிரகங்கள் அனைத்தும் அவரை பார்த்தபடி உள்ளன. திருவாசியில் வசித்த கமலன் என்னும் வணிகனுக்கு மகளாகப் பிறந்த அம்பிகை, சிவனை வேண்டி தவமிருந்து, அவரை மணந்தாள். அம்மன், இத்தலத்தில் பாலாம்பிகை என்ற பெயரில் எழுந்தருளியுள்ளாள். அர்த்தஜாமத்தில் அம்மனுக்கே முதல் பூஜை நடக்கும். அம்பாள் சன்னதி எதிரே செல்வ விநாயகர் இருக்கிறார். அம்பாள் சன்னதி முகப்பில் இரண்டு துவாரபாலகியர் உள்ளனர். 

திருமணமாகாத பெண்கள் நல்ல வரன் அமையவும், திருமணத் தடை உள்ளவர்கள் தடை நீங்கவும் இவர்களுக்கு மஞ்சள் கயிறு கட்டி பிரார்த்திக்கின்றனர். குழந்தையில்லாத பெண்களும் இங்கு தொட்டில் கட்டுகின்றனர். துவாரபாலகியர் மூலமாக பக்தர்களின் கோரிக்கைகளை அம்பாள் ஏற்றுக் கொள்வதாக ஐதீகம். குழந்தைகளுக்கு ஏற்படும் பாலாரிஷ்ட தோஷம் நீங்க அம்பிகைக்குப் பால் அபிஷேகம் செய்து வழிபடுகின்றனர்.

*நான்கு கால பூஜைகள்:

இக்கோயிலில் தினமும் 4 கால பூஜைகள் நடைபெறும். காலை 8 மணிக்கு மேல் 9 மணி வரை காலசந்தி பூஜை நடைபெறும். பகல் 11 மணிக்கு மேல் 12 மணி வரை உச்சிக்கால பூஜை நடைபெறும். மாலை 5 மணிக்கு மேல் 6 மணி வரை சாயரட்சை பூஜை நடைபெறும். இரவு 7.30 மணிக்கு மேல் 8 மணி வரை அர்த்தசாம பூஜை நடைபெறும்.

*பெருவிழா:

இக்கோயிலில் ஆண்டுதோறும் பிரமோற்சவத்திற்கு வைகாசி மாதம் பௌர்ணமியை முடிவாகக் கொண்டு பெருவிழா நடைபெறும். புனர்பூச நாளில் கொடியேற்றி, பத்தாம் நாளாகிய விசாக நாளில் தீர்த்தவாரியும், சுவாதி நாளில் திருத்தேரும் சிறப்பாக நடைபெறும். ஐந்தாம் நாள் இடப வாகனக் காட்சியும், ஏழாம் நாள் திருக்கல்யாண காட்சியும் நிகழும். 11ஆம் நாள் முத்துப்பல்லக்கில் சுவாமி வீதி உலா வரும். 

ஓம் நமசிவாய 
படித்து பகிர்ந்தது 
இரா இளங்கோவன்
 நெல்லிக்குப்பம்.. 

No comments:

Post a Comment

Followers

திருவாசி மாற்றுரைவரதீஸ்வரர் (பிரம்மபுரீஸ்வரர்) திருச்சி....

திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் உள்ள புகழ்பெற்ற தேவாரப் பாடல் பெற்ற சோழநாட்டு தலங்களில் ஒன்றான,  சுந்தரமூர்த்தி நாயனார்  பொன் பொர...