Wednesday, December 3, 2025

சென்னையின் நவக்கிரகத் ஒன்பது தலங்கள்:

 சென்னையின் நவக்கிரகத் தலங்கள்: 
சென்னையைச் சுற்றியுள்ள இந்தப் புனிதமான ஒன்பது ஆலயங்கள் ஒரே நாளில் நவக்கிரகங்களின் அருளைப் பெற விரும்பும் பக்தர்களுக்கான ஒரு வரப்பிரசாதமாகும். தமிழ்நாட்டின் பாரம்பரிய நவக்கிரகத் தலங்களுக்குச் செல்ல இயலாதவர்கள், இந்த உள்ளூர் தலங்களைத் தரிசிப்பதன் மூலம், அந்தப் பலன்களை முழுமையாக அடையலாம் என்பது ஐதீகம்.

சூரியன்: இந்த நவக்கிரகச் சங்கிலியில் முதன்மையானது, கொளப்பாக்கம் அகஸ்தீஸ்வரர் கோயில். இங்குள்ள அகஸ்தீஸ்வரரை வழிபடுவதன் மூலம், சூரிய கிரகத்தின் அருளைப் பெற்று, சிறப்பான ஆரோக்கியம், அரசாங்கத் துறையில் முன்னேற்றம் மற்றும் தலைமைப் பண்பில் உயர்வு ஆகியவற்றை அடையலாம். இந்தத் தலம், உத்தியோக உயர்வுக்கு வழி வகுக்கும் நம்பிக்கையைக் கொண்டுள்ளது.
சந்திரன்: அடுத்ததாக, சோமங்கலம் சோமநாதீஸ்வரர் திருக்கோயில் சந்திர பகவானுக்குரிய தலமாக விளங்குகிறது. சந்திரனால் ஏற்படும் தோஷங்கள் நீங்கவும், மன அமைதி, தெளிவான சிந்தனை மற்றும் கல்வி மேம்பாடு ஆகியவற்றுக்காகவும் இத்தலத்தை வழிபடலாம். மனக் குழப்பங்களால் தவிப்பவர்களுக்கும், தாய்வழி உறவுகளில் சிக்கல் உள்ளவர்களுக்கும் இக்கோயில் ஒரு சிறந்த நிவர்த்தி தலமாகும்.

செவ்வாய்: செவ்வாய் கிரகத்தின் ஆதிக்கத்தில் உள்ள தலமாக, பூந்தமல்லி வைத்தீஸ்வரன் கோயில் திகழ்கிறது. தைரியம், வெற்றி, சகோதர உறவுச் சீரமைப்பு மற்றும் நிலம் வாங்கும் யோகம் ஆகியவை செவ்வாயின் அருளால் கிடைக்கின்றன. ரத்த சம்பந்தமான நோய்கள் மற்றும் கடன் தொல்லைகள் நீங்கவும் இத்தலம் உதவுகிறது.

புதன்: அறிவு, கல்வி, வியாபாரம் மற்றும் பேச்சாற்றலுக்கான கிரகமான புதனுக்குரியது, கோவூர் சுந்தரேஸ்வரர் கோயில். இங்குள்ள சுந்தரேஸ்வரரை வழிபடுவதன் மூலம், புதன் தோஷங்கள் நீங்கி, கல்வி மற்றும் வியாபாரத்தில் நல்ல வளர்ச்சி காணலாம். பேச்சுத் திறனை மேம்படுத்த விரும்புவோர் இத்தலத்தைத் தரிசிப்பது அவசியம்.

குரு (வியாழன்): செல்வம், ஞானம் மற்றும் சுப காரியங்களுக்கான அதிபதியான குரு பகவானுக்குரிய தலமாக, போரூர் ராமனாதீஸ்வரர் கோயில் உள்ளது. திருமணத் தடை, புத்திர பாக்கியமின்மை மற்றும் நிதிச் சிக்கல்கள் உள்ளவர்கள் இத்தலத்தை வழிபடுவதன் மூலம், குருவின் அருளைப் பெற்று நன்மைகளைப் பெறலாம்.

சுக்ரன் (வெள்ளி): கலை, காதல், திருமண வாழ்க்கை மற்றும் வசதியான வாழ்க்கையின் அதிபதியான சுக்ரனுக்குரியது, மாங்காடு வெள்ளீஸ்வரர் திருக்கோயில். சுக்ர தோஷம் நீங்கவும், இழந்த செல்வத்தை மீண்டும் பெறவும், திருமண வாழ்க்கையில் இன்பம் நிலைக்கவும் இத்தலத்தை வழிபட வேண்டும்.

சனி: நீண்ட ஆயுள், தொழில் மற்றும் நியாயத்தின் அதிபதியான சனியின் தலமாக, பொழிச்சலூர் அகஸ்தீஸ்வரர் கோயில் விளங்குகிறது. சனியின் ஏழரைச் சனி மற்றும் அஷ்டமச் சனியால் ஏற்படும் பாதிப்புகள் குறையவும், தொழிலில் ஸ்திரத்தன்மை மற்றும் வளர்ச்சி கிடைக்கவும் இக்கோயில் உதவுகிறது.

ராகு: நிழல் கிரகமான ராகுவுக்குரியது, குன்றத்தூர் திருநாகேஸ்வரர் திருக்கோயில். எதிர்பாராத அதிர்ஷ்டம், வெளிநாட்டு வாய்ப்புகள் மற்றும் திடீர் நன்மைகளுக்காக இத்தலத்தை வழிபடுகின்றனர். ராகு காலங்களில் ஏற்படும் தோஷங்கள் நீங்கவும் இக்கோயில் பிரசித்தி பெற்றது.

கேது: மற்றொரு நிழல் கிரகமான கேதுவுக்குரியது, கெருகம்பாக்கம் திருநீலகண்டேஸ்வரர் கோயில். இத்தலத்தை வழிபடுவதன் மூலம், ஆன்மீக அறிவு, ஞானம், மோட்சம் மற்றும் வாழ்க்கையின் தடைகளிலிருந்து விடுபடுதல் ஆகிய பலன்களைப் பெறலாம். தெளிவான இலக்கு தேடுபவர்களுக்கும் இக்கோயில் ஒரு சிறந்த ஆன்மீக வழிகாட்டியாக உள்ளது.

இந்த நவக்கிரகத் தலங்களின் தரிசனம், ஒரே நாளில் நவக்கிரகங்களின் சாந்நித்தியத்தை உணர்ந்து, அவர்களின் அருளை முழுமையாகப் பெற ஒரு சிறந்த வாய்ப்பை வழங்குகிறது.

ஓம் நமசிவாய 
படித்து பகிர்ந்தது 
இரா இளங்கோவன் 
நெல்லிக்குப்பம். 

Tuesday, December 2, 2025

திருவண்ணாமலை கார்த்திகைத் தீபம்



கார்த்திகைத் திங்களில், பெளர்ணமி என்கின்ற முழு மதியுடன் கார்த்திகை விண்மீன்(நட்சத்திரம்) கூடுகின்ற நன்னாளைக் கார்த்திகைத் திருநாள் என்கிறோம். தீபாவளியைப் போன்றே இதுவும் விளக்கு ஏற்றுகின்ற திருநாளே! தீபாவளியன்று விளக்குகளை வரிசை வரிசையாக ஏற்றி இறைவன் திருவருள் ஒளி வீடு எங்கிலும் நிறைவதாக எண்ணி மகிழ்கின்றோம். ஆனால் திருக்கார்த்த்கை அன்று விளக்குகளை ஏற்றிவைத்து அவற்றை இறை ஒளித்தோற்றமாக வழிபடுகின்றோம். இன்னொரு வகையில் கூறப்போனால் திருக்கார்த்திகையன்று இறைவனை ஒளி வடிவமாகக் கண்டு வழிபடுகின்றோம்.

“வானாகி, மண்ணாகி, வளியாகி, ஒளியாகி, ஊனாகி, உயிராகி, உண்மையுமாய் இன்மையுமாய், கோனாகியான் எனதென்று அவரவரைக் கூத்தாட்டு, வானாகி நின்றானை என்சொல்லி வாழ்த்துவேனே” என்பார் மாணிக்கவாசகர். இறைவன் விண், நிலம், காற்று, ஒளி, நீர், உயிர், நிலவு, கதிரவன் ஆகிய எட்டுப் பொருள்களில் கலந்து நின்று உயிர்களுக்கு அருள்கிறான் என்று சைவம் குறிப்பிடும். இவற்றில் இறைவனின் அருவுருவத்திருமேனியாய் சைவர்கள் வைத்துப் போற்றி வழிபடுவது ஒளி அல்லது தீயாகும். எனவேதான், “ஒளிவளர் விளக்கே” எனத் திருவிசைப்பாவில் திருமாளிகைத்தேவரும்,  “நொந்தா ஒண்சுடரே” என சுந்தரர் தமது திருப்பாட்டிலும் , “கற்பனைக் கடந்த சோதி” என சேக்கிழார் பெருமானும் இறைவனைப் போற்றி வழிபட்டு மகிழ்ந்தனர். “அருட்பெரும் சோதி அருட்பெரும் சோதி ” என்று சிதம்பர இராமலிங்க அடிகளும் வழிபட்டார்கள்.

திருக்கார்த்திகையைக் கோவில்களில் விளக்கீடு செய்து கோவில் கார்த்திகை என்றும் வீடுகளில் விளக்கீடு செய்து வீட்டுக் கார்த்திகை என்றும்  வழிபடுகிறோம். கோவில் கார்த்திகையில் ஐம்பூத தலங்கள் என்று அழைக்கப்படும் சிதம்பரம் (ஆகாயம்), திருக்காளத்தி (காற்று), திருவண்ணாமலை (தீ), திருவானைக்காவல் (நீர்) கச்சி ஏகம்பம் (மண்)  ஆகியவற்றில் மிகவும் பேர்போனது திருவண்ணாமலை என்ற தீ தலம். திருவண்ணாமலை கார்த்திகைத் தீபம் உலகப் புகழ் பெற்றதும்  பெறும் சிறப்பு உடையதாகும். திருக்கார்த்திகையன்று திருவண்ணாமலைத் திருக்கோவிலில் பரணி தீபம் ஏற்றப் பெற்று பின்பு திருவண்ணாமலை மலை உச்சியில் கார்த்திகைத் தீபம் ஏற்றப்படும். அதன் பிறகே சைவர்கள் தமது வீடுகளில் விளக்கீடுகள்  செய்து வழிபடுவார்கள்.

திருக்கார்த்திகை அன்று இதர சைவக் கோவில்களிலும் கோபுரங்கள் மீதும் கோவில் முழுவதிலும் தீபங்கள் ஏற்றி வழிபடுவார்கள். திருக்கார்த்திகையன்று திருக்கோவில்களில் சொக்கப்பனை கொளுத்துகின்ற நிகழ்வும் நடைபெறும். பனை ஓலைகளையோ அல்லது தென்னை ஓலைகளையோ ஒரு மரத்தோடு சேர்த்துக்கட்டி எரிப்பதுவே சொக்கப்பனை கொளுத்துதல் எனப்படும். சுடர்விட்டு எரிகின்ற பனை ஓலைகளைத் தீப்பிழம்பாக, சோதியாக, சொக்கனாக ( சிவபெருமானாக) பார்ப்பதே சொக்கப்பனை கொளுத்துவதன் நோக்கம்.

வீடுகளில் பூசனை அறை, வீட்டின் இதரப் பகுதிகள், தோட்டம், குப்பை மேடுகள் போன்ற இடங்களிலும் கூட விளக்கீடுகள் செய்வதனைக் காணாலாம். இறைவனை ஒளிவடிவில் கண்டு வழிபடுவதோடல்லாமல், கடலை எண்ணெய்யாலும் நெய்யினாலும் ஏற்றப்படும் விளக்கு ஒளி காற்றைத் தூய்மைபடுத்தி வீட்டையும் சுற்றுப்புரத்தையும் தூய்மை ஆக்குகின்றது.

#கார்த்திகையை_ஒட்டிய_புராணம்

இறைவன் இட்ட பணியைச் செய்கின்ற அதிதேவதைகளான பிரமனும் திருமாலும் ஒரு காலத்தில் தங்களுடைய அறியாமையினால், தாங்களே பரம்பொருள் என்று செருக்கினால் வாது செய்தனர். இவர்கள் இருவரில் உயர்ந்தவர் யார் என்று முடிவுக்கு வர முடியாமல் சிவபெருமானை அணுகி உதவுமாறு கேட்டனர். அவர்களுடைய அறியாமையைப் போக்கி அருள்புரிய இறைவனார் பேரொளிப்பிழம்பாகத் தோன்றி தமது அடிமுடியை கண்டு வருமாறு இயம்பினார். பிரமன் அன்னப்பறவை வடிவிலும் திருமால் பன்றி வடிவிலும் அடிமுடித் தேடி காண இயலாது தங்களது அறியாமையாகிய செருக்கு நீங்கித் தோல்வியை ஒப்பினர். இறைவன் சிவராத்தியன்று அவர்களுக்குச் சிவலிங்க வடிவிலே காட்சி தந்தருளினார். இறைவன் ஒளிப்பிழம்பாக நின்றதையே கார்த்திகைத் தீபமாக ஏற்றிக் கொண்டாடுகின்றோம். ஒளிப்பிழம்பு தணிந்ததே திருவண்ணாமலை மலை ஆகியது. இதனாலேயே கார்த்திகைத் தீபம் திருவண்ணாமலையில் சிறப்புற ஏற்றப்படுகிறது. அதை நினைந்தவாறே நாம் வீடுகளிலும் விளக்கு ஏற்றுகிறோம். இறைவன் சோதியாக நின்றதை எண்ணியே சொக்கப்பனை கொளுத்தி வழிபடுகிறோம்.

கந்தப்புராணத்தின்படி சரவணப் பொய்கையில் ஆறு தாமரைப் பூக்களில் ஆறுகுழந்தைகளாக இறைவனால் தோற்றுவிக்கப்பட்ட தமிழ்க் கடவுளான முருகப் பெருமானை ஆறு கார்த்திகைப் பெண்கள் பாலூட்டி வளர்த்தார்கள். கார்த்திகை விண்மீன்களாகிய (ஆறு நட்சத்திரங்கள்) ஆறு விண்மீன்களே ஆறு பெண்களாக முருகனை வளர்த்ததால் இக்கார்த்திகைத் திருநாள் முருகனுக்குரிய விழாவாகவும் அமைகிறது. இதனாலேயே முருகனுக்குக் கார்த்திகேயன் என்ற பெயரும் வழங்கப் பெறுகின்றது.

#திருக்கார்த்திகைச்_சிந்தனை

கல்விச் செருக்கினைக் கொண்டு படைத்தல் தொழிலைச் செய்த பிரமனும் செல்வச் செருக்கினைக் கொண்டு காத்தல் தொழிலைச் செய்த திருமாலும் தங்கள் அறியாமையினால் இறைவனின் திருவருள் என்ற திருவடியையும் இறைவனின் அறிவு என்னும் திருமுடியையும் காண இயலாது தோல்வியுற்றனர். பின்பு ஆணவமின்றி அன்பினால் வழிபட்டால் இறைவனைக் காணலாம் என்று உணர்ந்துக் கொண்டனர்.எனவே ஒளிவடிவாய் இருக்கின்ற இறைவனைக் கல்வியாலும் செல்வத்தினாலும் ஏற்படுகின்ற செருக்கினை விட்டு உண்மை அன்பினால் வழிபட்டால் இறைவனைக் காணலாம், அவன் திருவருளைப் பெறலாம் என்ற தெளிவினைக் கொண்டு விளக்கீடு செய்து இறைவனை ஒளியாக வழிபடுவதே கார்த்திகை விளக்கீட்டின் மெய்ப்பாடு.
ஓம் நமசிவாய 
படித்து பகிர்ந்தது 
இரா இளங்கோவன் 
நெல்லிக்குப்பம். 

Monday, December 1, 2025

அகத்தியருக்கு சிவன் திருமணக் கோலம் காட்டியருளிய தலம்.

திருவேற்காடு வேதபுரீஸ்வரர் கோயில் திருஞானசம்பந்தரால் பாடல் பெற்ற தொண்டை நாட்டுச் சிவாலயமாகும். நான்கு வேதங்களும் வேல மரங்களாய் நின்று சிவபெருமானை வழிபட்டதால் வேற்காடு எனப்பெயர் பெற்றது. 

திருவேற்காடு வேதபுரீஸ்வரர் கோயில் திருஞானசம்பந்தரால் பாடல் பெற்ற தொண்டை நாட்டுச் சிவாலயமாகும். நான்கு வேதங்களும் வேல மரங்களாய் நின்று சிவபெருமானை வழிபட்டதால் வேற்காடு எனப்பெயர் பெற்றது. 
அகத்தியருக்கு, இறைவன் திருமணக் கோலம் காட்டியருளிய தலம் என்பது தொன்நம்பிக்கை. அதாவது ஐதீகம். 

திருவேற்காடு வேதபுரீஸ்வரர் திருக்கோயிலின் மூலவர்:
வேற்காட்டு நாதர், வேதபுரீசுவரர்
தாயார் வேற்கண்ணி, பாலாம்பிகை இந்த ஆலயத்தின் தல விருட்சம்:
வெள் வேல மரம், தீர்த்தம்:
வேலாயுதத் தீர்தம்.

இத்த திருத்தலத்து சிவபெருமான் மனித உருவில் திருமணக் காட்சி தருகிறார்.

இத்த திருத்தலத்து அம்பிகையையும், பாடி திருவலிதாயம் பாலாம்பிகையையும், திருவொற்றியூர் வடிவுடையாம்பிகையையும், ஒரே நாளில் சென்று வழிபடுவோர், இம்மை மறுமை நலன்களைப் பெறுவர் என்று கூறப்படுகிறது.

இத்த திருத்தலத்து வேத தீர்த்தத்தில் ஞாயிறு தோறும் நீராடி, இத்த ஆலயத்து சிவபெருமானை வழிபட, நோய் நீங்கும் என்பது புராணத்தில் கூறப்பட்டுள்ளது.

 கருவறை மேற்குப் பிராகாரத்தில் உள்ள முருகன் சந்நிதியில், முருகனுக்கு முன்னால் ஒரு சிவலிங்கம் இருப்பதைக் காணலாம். இத்தகைய அமைப்பை வேறு எங்கும் காண முடியாது. முருகன் ஏற்படுத்திய தீர்த்தம் வேலாயுத தீர்த்தம் என்ற பெயரில் ஆலயத்தின் உள்ளே இருக்கிறது. இத்தலத்திலுள்ள முருகப்பெருமான், அருணகிரிநாதரால் திருப்புகழில் பாடப் பெற்றுள்ளார்.
திருப்புகழில் இத்தலத்து முருகன் மீது 2 பாடல்கள் உள்ளன. தொன்நம்பிக்கை. அதாவது ஐதீகம். 

திருவேற்காடு வேதபுரீஸ்வரர் திருக்கோயிலின் மூலவர்:
வேற்காட்டு நாதர், வேதபுரீசுவரர்
தாயார் வேற்கண்ணி, பாலாம்பிகை இந்த ஆலயத்தின் தல விருட்சம்:
வெள் வேல மரம், தீர்த்தம்:
வேலாயுதத் தீர்தம்.

இத்த திருத்தலத்து சிவபெருமான் மனித உருவில் திருமணக் காட்சி தருகிறார்.

இத்த திருத்தலத்து அம்பிகையையும், பாடி திருவலிதாயம் பாலாம்பிகையையும், திருவொற்றியூர் வடிவுடையாம்பிகையையும், ஒரே நாளில் சென்று வழிபடுவோர், இம்மை மறுமை நலன்களைப் பெறுவர் என்று கூறப்படுகிறது.

இத்த திருத்தலத்து வேத தீர்த்தத்தில் ஞாயிறு தோறும் நீராடி, இத்த ஆலயத்து சிவபெருமானை வழிபட, நோய் நீங்கும் என்பது புராணத்தில் கூறப்பட்டுள்ளது.

 கருவறை மேற்குப் பிராகாரத்தில் உள்ள முருகன் சந்நிதியில், முருகனுக்கு முன்னால் ஒரு சிவலிங்கம் இருப்பதைக் காணலாம். இத்தகைய அமைப்பை வேறு எங்கும் காண முடியாது. முருகன் ஏற்படுத்திய தீர்த்தம் வேலாயுத தீர்த்தம் என்ற பெயரில் ஆலயத்தின் உள்ளே இருக்கிறது. இத்தலத்திலுள்ள முருகப்பெருமான், அருணகிரிநாதரால் திருப்புகழில் பாடப் பெற்றுள்ளார்.
திருப்புகழில் இத்தலத்து முருகன் மீது 2 பாடல்கள் உள்ளன. அனைவரும் சென்று தரிசித்து வாருங்கள். 

ஓம் நமசிவாய 
படித்து பகிர்ந்தது 
இரா இளங்கோவன்
 நெல்லிக்குப்பம். 

Sunday, November 30, 2025

கைசிக ஏகாதசி மஹாத்மியத்தின் மகிமைகள்.

கைசிக ஏகாதசி மஹாத்மியத்தின் மகிமைகளைப் படிக்கும் அன்பர்கள் அனைவரும் கொடுத்து வைத்தவர்கள்
கைசிக ஏகாதசி.....!!! 

கார்த்திகை மாதம் "சுக்லபக்ஷ ஏகாதசி" மற்றும்  "துவாதசி" அன்று இந்த கைசிக மஹாத்மியத்தை படிப்போர்க்கு வைகுண்ட பிராப்தி  நிச்சயம்.  அப்பேர்ப்பட்ட மகத்துவமான "கைசிக ஏகாதசி".

மாதம் தோறும் இருமுறை ஏகாதசி வந்தாலும், இரண்டு ஏகாதசிகளுக்கு மிக்க ஏற்றம். ஒன்று மார்கழி சுக்லபக்ஷ ஏகாதசியான "வைகுண்ட ஏகாதசி". 

மற்றது கார்த்திகை மாதம் சுக்லபக்ஷ ஏகாதசியான "கைசிக ஏகாதசி".  மேலும், கைசிக ஏகாதசி விரதம் இருந்தால், ஓராண்டில் எல்லா ஏகாதசி விரதங்களும் இருந்த பலன் என்றும் சொல்வர்.

கைசிக ஏகாதசி மஹாத்மியம் :-

கைசிக ஏகாதசி பற்றி வராக புராணத்தில் "ஸ்ரீ வராக மூர்த்தியே" கூறுவதாக உள்ளது. இதற்கு "ஸ்ரீ பராசர பட்டர் வியாக்யானம்" அருளியுள்ளார்.

ஒரு முறை பூமியானது பிரளய ஜலத்தில் மூழ்கி விட, பகவான் வராக உருவம் கொண்டு, பூமிப்பிராட்டியைக் காத்து, அவள் ஆயாசம் தீர தன் மடியில் அமர்த்தினார். 

மகிழ்ந்த பூமித்தாய், இவ்வுலக மக்களின் துயர் தீர, பகவானிடம் ஓர் உபாயம் வேண்டினார். பகவானும் தன் பக்தர்கள் தன் மீது வைத்திருக்கும் பக்தியே உபாயம் எனக் காட்ட, இந்த "கைசிக புராணத்தை பூமித் தாயாருக்கு" உரைத்தார். பகவான் கூறியது.

தென் பாரத தேசத்தில், மகேந்திர பர்வதத்தைக் கொண்ட திவ்யதேசம் "திருக்குறுங்குடி". இங்கு பிறந்த ஒருவன், பூர்வ ஜென்ம பலத்தால் "திருக்குறுங்குடி நம்பியான அழகிய நம்பி" மீது அளவில்லா பக்தியுடன் இருந்தான்.   பத்து ஆண்டுகள், ஒவ்வொரு இரவும் கையில் வீணையுடன், மலை ஏறி, பிரம்ம முகூர்த்தத்தில், பகவான் அழகிய நம்பியை "திருப்பள்ளியெழுச்சி" செய்து வந்தான்.   இந்த புண்ணியவானே "நம்பாடுவான்".

நம்பாடுவான் என்பவன் நல்ல கவிதிறன் கொண்டவன். திருகுறுங்குடி நம்பி பெருமாளை பற்றியே பாடுவான். நம்பி பெருமாளை பாடுவதையே மூச்சாக கொண்டவன். அவன் தாழ்த்த பட்ட குலத்தில் பிறந்ததால் அன்றைய காலக்கட்டத்தில் அவனுக்கு கோயிலுக்கு செல்ல அனுமதியில்லாமல் இருந்தது. ஆனால், அவனுக்கு அதைப் பற்றி துளியும் வருத்தமில்லை. கோயிலின் வாசலில் நின்று அன்றாடம் பெருமாளை போற்றி பாடுவான். வாசல் வரை வந்து நிற்பதற்கு மட்டுமே நம்பாடுவானுக்கு அனுமதி உண்டு.

கோயிலின் வாசலிலிருந்து பகவானைப் பார்க்க முடிய வில்லை. கொடிமரமும் தடுக்கிறது. என்னால் பெருமாளை பார்க்கமுடியவில்லை என்றாலும், அழகிய நம்பியான பெருமாள் என்னைப் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறார். என் பாடல்களை எல்லாம் அவர் கேட்டு கொண்டிருக்கிறார், அதுவே போதும். அதிலே எனக்குப் பரமதிருப்தி! என்ற திருப்தியுடன் வாழ்க்கையை நடத்திவந்தான் நம்பாடுவான்.

"கைசிகம்" என்ற பண்ணில் நம்பியின் புகழைப் பாடி மகிழ்வான். 
நம்பாடுவான் தினமும் விடியற் காலையில் ஸ்நானம் செய்து பிரம்ம முஹுர்த்தத்தில் கோயிலின் வாயிலுக்குச் சென்று பெருமாள் பேரில் பண் இசைத்து அவரது பெருமைகளைப் பாடுவான். 

இவனது பெருமையையும் பிரதிபலன் கருதாத பக்தியையும் "ஸ்ரீ வராஹ பெருமான் பூமிபிராட்டியாரிடம் ஸ்லாகித்து சொல்கிறார் என்றால் அந்த நம்பாடுவான்" எப்பேர்பட்ட பக்தனாக இருந்திருப்பான். இந்த மஹாத்மியம் "கைசிக புராணம்" என்ற நாமம் தாங்கி வராஹ புராணத்தில் உள்ளது. 

ஒரு கார்த்திகை மாதம் சுக்ல பக்ஷ ஏகாதசி துவாதசி இரவில், ஒரு யாமத்திற்கு மேல் வீணையும், கையுமாய் எம்பெருமானைத் துயிலெழுப்ப மலையேறினான்.  அந்த இரவு நேரத்தில் நடு வழியில், பூர்வத்தில் "சோமசர்மா" என்பவன் அந்தணணாய் இருந்து, யாகம் ஒன்றில் செய்த பெரும் பிழையால் பிரம்மராக்ஷஸனாய் திரிந்தான்.  அந்த பிரம்மராக்ஷஸன் நம்பாடுவானை வழி மறித்து அவனை பிடித்துக் கொள்கிறான். தான் பத்து தினங்கள் பட்டினியாய் அலைவதாயும், அவனே தனக்கு தெய்வம் தந்த உணவு என்றான் நம்பாடுவானிடம். பிரம்மராக்ஷஸன் தேகமோ கொழுத்து பெருத்த தேகம். நம்பாடுவானோ மிகவும் இளைத்து மெலிந்த தேகம் உடையவன். அதனால் பிரம்மராக்ஷஸன் பிடியிலிருந்து தப்ப இயலாதவனாக இருந்தான். ஆனால், பயப்படவில்லை. 

பிரம்மராக்ஷஸனை பார்த்து, "நான் ஏகாதசி விரதமிருந்து நம்பெருமாளை பிரம்ம முகூர்த்தத்தில் துயில் எழுப்பித், துதிக்க சென்று கொண்டிருக்கிறேன் என்னை விட்டு விடு என் விரதத்திற்கு பங்கம் செய்து விடாதே என்று கெஞ்சினான். ஆனால், பிரம்மராக்ஷஸன் நம்பாடுவானை நோக்கி நான் பத்து நாட்களாக கொலை பட்டினியாக இருக்கிறேன். ஆகவே ,எனக்கு இப்போது தெய்வாதீனமாக கிடைத்த உன்னை நான் விடுவதாக இல்லை. உன்னை கண்டிப்பாக புசிக்கப் போகிறேன் என்று கூறியது. 

நம்பாடுவானோ தான் இறைவனை திருப்பள்ளியெழுச்சி செய்ய மலையேற வழிவிடுமாறு மன்றாடினான்.  பிரம்மராக்ஷஸனோ காது கொடுத்து கேட்கவே இல்லை.  எவ்வளவு சொல்லியும் கேட்காத பிரம்மராக்ஷஸனிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டான் நம்பாடுவான்.   இதற்கு மேல் என்ன சொன்னாலும், பிரம்மராக்ஷஸன் கேட்கப் போவது இல்லை என்று உண்மைச் சூழ்நிலையான தனது நிலையை உணர்ந்தான். ஆம் தன்னை மரணம் சூழ இருப்பதை புரிந்து கொண்டான் நம்பாடுவான். 

உடனே, பிரம்மராக்ஷஸனைப் பார்த்து நடக்க இருப்பதை தவிர்க்க முடியாது. நான் உனக்கு உணவாகப் போவதை பற்றி எனக்கு கவலை இல்லை. ஆனால் எனது இந்த அற்புதமான விரதத்தை அதாவது கோயிலின் வாசலில் வீணையை மீட்டி எனது நம்பி பெருமாளை பண்ணிசைத்து "திருப்பள்ளியெழுச்சி" பாடி எனது விரதத்தை முடித்து விட்டு வருகிறேன் பிறகு நீ உன் இஷ்டம் போல் என்னை புசித்துக் கொள் என்று வேண்டினான். அதற்கு பிரம்மராக்ஷஸன் பலமாக சிரித்து, "சண்டாளனே!  பிறவிக்கு ஏற்ப அதத்யம் செய்கிறாய். இந்த பிரம்மராக்ஷஸன் கையில் மீண்ட எவன் மறுபடியும் திரும்பி வருவான்.? என்றதோடு மட்டுமல்லாமல், உன்னால் கொடுத்த வார்த்தையை காப்பாற்ற முடியாது. நீ என்னிடமிருந்து தப்ப பொய்சொல்கிறாய்; மேலும் நீ திரும்பி இந்த வழியே வராமல் வேறு வழியில் சென்று தப்பி விடுவாய்"" என்றது.

அதற்கு நம் பாடுவான் பதினெட்டு விதமான பாவங்களைச் சொல்லி, நான் மீண்டும் வராவிடில் இந்தப் பாவங்கள் என்னை வந்தடையும் என்றான் நம்பாடுவான்.   (ஒரு பாவத்தை விட அடுத்த பாவம் கொடியது என்ற வரிசையில் சொல்லி சபதம் இட்டான் நம்பாடுவான்).    17 வது சபதம் வரை சற்றும் மசியாத பிரம்மராக்ஷஸன் 18 வதாக நம்பாடுவான் செய்த சபதம் "மிகக் கொடிய பாவம்" என்று அறிந்து, நம்பாடுவானை மலையேறிச் செல்ல வழிவிட்டது. 

அப்படி என்ன சபதங்கள் செய்தார் நம்பாடுவான்?????

மலையேறி எம்பெருமான் அழகியநம்பியைத் தரிசித்து நான் திரும்ப வரவில்லை என்றால் : 

1. சத்தியம் தவறியவர்களுக்கு என்ன தண்டனையோ அந்த தண்டனை எனக்கு கிடைக்கட்டும். 

2. பிறன் மனைவியை அடைவதால் ஏற்படும் பாவம் என்னை அடையட்டும்.

3. எவன் ஒருவன் சாப்பிடும் போது தன்னுடன் சாப்பிடுகிறவனுக்கு பந்தி வஞ்சனம் செய்கின்றானோ அந்த மாதிரியான பாவம் என்னை அடையட்டும்.

4. எவன் ஒருவன் பிராமணனுக்கு பூமி தானம் செய்துவிட்டு அதை திரும்பவும் அபஹரிக்கிறானோ அவன் அடையும் பாவத்தை நான் அடைவேன். 

5. எவன் ஒரு பெண்ணை யவன காலத்தில்  அனுபவித்து விட்டு பின்பு ஏதாவது ஒரு தோஷத்தை சொல்லிவிட்டு அவளை கைவிடுவானாகில் அவன் அடையும் பாவத்தை நான் அடைய கடவேன். 

6. எவன் அமாவாசை பௌர்ணமி நாட்களில் தன் பத்தினியுடன் சேருகிறானோ அதனால் என்ன பாவம் வருமோ அந்த மாதிரியான பாவம் என்னை வந்தடையட்டும். 

7. எவன் ஒருவன் பிறருடைய அன்னத்தை நன்றாக புசித்துவிட்டு அவனையே தூஷிக்கின்றானோ அவனது பாவம் என்னை அடையட்டும். 

8. எவன் ஒருவன் பெண்ணை திருமணம் செய்து கொடுப்பதாக வாக்களித்துவிட்டு பிறகு ஏதோ சாக்கு போக்கு சொல்லிவிட்டு அவனுக்கு கொடுக்காமல் இருக்கிறானோ அவனது பாவத்தை நான் அடைவேன். 

9. எவன் சஷ்டி, அஷ்டமி, சதுர்த்தசி அமாவாசை திதிகளில் ஸ்நானம் பண்ணாமல் புசிக்கிறானோ அவனது பாவத்தை அடைவேன். 

10.ஒரு பொருளை தானமாக கொடுப்பதாகக் கூறி, பின்பு  மறுக்கிறானோ அந்த பாவத்தை நான் அடையக்கடவேன். 

11. எவன் ஒருவன் நண்பனின் மனைவியை அபஹரிக்கின்றானோ அதனால் வரும் பாவத்தை அடையக்கடவேன். 

12.எவன் ஒருவன் குருவின் பத்தினி அல்லது அரசனின் பத்தினியை அபஹரிக்கின்றானோ அதனால் வரும் பாவத்தை அடையக்கடவேன். 

13. எவன் ஒருவன் இரண்டு பெண்களை மணம் செய்து பின் ஒருத்தியை மட்டும் அலட்சியம் செய்வதால் ஏற்படும் பாவம் என்னை அடையட்டும். 

14. எவன் ஒருவன் கதியற்ற தனது பதிவிரதையான பத்தினியை  வயதான காலத்தில் தனியே விட்டுவிடுகிறானோ அவன் அடையும் பாவம் என்னை சூழட்டும். 

15. தாகத்துடன் தண்ணீர் குடிக்க வரும் பசுவை குடிக்கவிடாமல் செய்வதால் வரும் "மகா பாவம்" என்னை வந்தடையட்டும். 

16. எவன் பிரம்மஹத்தி தோஷம் செய்கிறானோ, கள்ளை குடிக்கிறானோ, விரதத்திற்கு பங்கம் பண்ணுகிறானோ இப்படிப்பட்ட மஹாபாவிகளின் பாவத்தை அடைய கடவேன். 

17. எவன் ஸர்வவ்யாபியாய் (எங்கும் நிறைந்திருக்கும்) எழுந்தருளியிருக்கும் ஸ்ரீ வாசுதேவனை ஆராதனை பண்ணாமல் இதர தேவதைகளை உபாசிக்கிறானோ அவனது பாவத்தை அடைவேன். 

இந்த "17 சபதங்கள்" நம்பாடுவான் சொல்லியும் கூட பிரம்மராக்ஷஸன் அசைந்து கொடுக்கவில்லை. 

18. சர்வ ஜனங்களையும் காப்பவனும், எல்லோர் இதயத்திலும் அந்தர்யாமியாய் இருப்பவனும், எல்லா உயிரினங்களையும் இயக்குபவனும், முப்பத்து முக்கோடி தேவர்களாலும், முனிவர்களாலும் ஆராதிக்கப்படுபவனுமான சர்வேஸ்வரனான அந்த "ஸ்ரீமன் நாராயணனையும்" மற்றவர்களையும் சமமாக பாவிப்பதால் வரும் பாவம் என்னை அடையட்டும். 

இந்த பதினெட்டாவது சபதத்தைக் கேட்டதும் பிரம்மராக்ஷஸன் திகைத்து நின்றது. அது மிகக் கொடிய பாவம் என்று அறிந்து கொண்டது பிரம்மராக்ஷஸன். 

நம்பாடுவான் மேலே சொன்ன சபதங்களைக் கேட்டதும் நம்பாடுவானது அபார ஞானத்தைப் புரிந்து கொண்டது. இவன் சாதாரணமான ஆள் இல்லை என்று உணர்ந்தது. இவனை விடாவிட்டால் இன்னும் துயரமே வரும் என்று நம்பாடுவானை விடுவித்து சீக்கிரமே விரதத்தை முடித்துவிட்டு வா என்று சந்தேகத்துடன் அனுப்பியது.   பிரம்மராக்ஷஸன் வழிவிடவும் நம்பாடுவான் அழகிய நம்பியைக் காணும் ஆவலில் ஓடோடி மலையேறினான்.  நம்பியின் கோயிலுக்கு முன் வந்த நம்பாடுவானின் கண்களிலிருந்து தாரை தாரையாக கண்ணீர் வந்தது. 

பெருமாளே! எங்கே என் ஆயுள் உன்னை பாடாமலேயே முடிந்து விடுமோ என்று பயந்து கொண்டிருந்தேன். நல்ல வேளை உன்னைப் பாட வந்து விட்டேன். இதுவே, எனது இறுதி பாடலாக இருக்கும் என்று மனம் நெகிழ்ந்து பண்ணிசைத்து உருக்கமாகப் பாடினான். ஏனெனில், பிரம்மராக்ஷஸன் நம்பாடுவானை உண்டு விட்டால், அவரது உயிர் பிரிந்து விடும் அல்லவா!  இறைவனை இனிமேல் காண முடியாது என்று மிகவும் உருக்கமாகப் பண் இசைத்து பாடினார் நம்பாடுவான். உள்ளிருந்த "அழகிய நம்பி பெருமாள்" நம்பாடுவானின் குரலிலிருந்த சோகத்தை உணர்ந்தார். எதிரே நோக்கினார்.   தான் ஆட்கொள்ள வேண்டிய தனது பக்தனின் திருமுகத்தைத் தானே பார்க்காவிட்டால், பிறகு அவனுடைய பக்திக்குத், தான் அளிக்கும் மதிப்புதான் என்ன?  என்று யோசித்தார். 

எம்மை நம்பாடுவானான அவன் காண இயலாதிருந்தும், அவனை நாம் பார்த்து அருள்புரிவோம் என்று எதிரே பார்த்தார். கொடி மரம் தடுத்தது. 

"விலகி நில் கொடிமரமே என் பக்தன் என்னைக் காணவேண்டும்!  அதை விட நான் அவனைக் காண வேண்டும் !!!  விலகு" என்று தனது பார்வையைச் சற்றே கொடிமரத்தை நோக்கி பார்வையாலேயே சற்று விலக்கினார்.

எம்பெருமான் அழகியநம்பிக்குத் தான் தன் பக்தர்களின் மேல் எப்பேர்ப்பட்ட அன்பு! கருணை! பாசம் எல்லாம். தன் பக்தன் என்னைக் காணாவிடிலும், நான் அவனைக் கண்டு அவனுக்கு என் தரிசனத்தைக் கொடுப்பேன் என்று பார்வையாலேயே கொடிமரத்தை விலக்குகிறார் எம்பெருமான்.

கொடிமரம் விலகிய அடுத்த நொடியே "பளிச்சென்று ஓர் ஒளி உள்ளே இருந்து வெளியே வந்து நம்பாடுவானை ஆரத் தழுவியது. கொடிமரம் விலகிய கோணத்தில் நேர் எதிரே தன் கண் முன்னே, தான் பார்ப்பது நம்பிதானா" என்று உள்ளம் குதூகலித்தான் நம்பாடுவான்.  ஆஹா! பெருமாளை நேரில் தரிசிக்கும் பேறு பெற்ற பின் வேறு என்ன பாக்கியம் வேண்டும். அர்ச்சாவதார மூர்த்தியை நேரில் தரிசனம் கண்டாயிற்று. இந்த ஜன்மம் சாபல்யம் அடைந்துவிட்டது. இனி பிரம்ம ராட்சசனுக்கு மகிழ்வுடன் உணவாகலாம். 

நம்பாடுவான் என்ற அந்த அற்புத பக்தன் தொடர்ந்து இறைவனைப் பார்த்துக் கொண்டே இருக்க வேண்டும் என்று நினைக்கவில்லை. அந்த சில கண தரிசனத்திலே முழு நிறைவடைந்தான். பேராசையற்ற பக்தி. இறைவனை காண முடியாமல் தன் ஆயுள் முடிந்து விடுமோ என்ற ஏக்கத்தில் இருந்தவனுக்கு இந்த தரிசனமே போதுமானதாக இருந்தது.  அதைவிடத் தான் வாக்கு கொடுத்ததால் பெரும் பசியுடன் இருந்த பிரம்மராட்சசனை நோக்கி விரைந்தான்.  இப்படியாக தனது விரதத்தை முடித்துவிட்டு பிரம்மராக்ஷஸனிடம் செல்ல முற்பட்டான். வந்த வேகத்தை விட செல்லும் வேகம் அதிகமாகக் காணப்பட்டது.  நம்பாடுவான் பிரம்மராக்ஷஸனை நோக்கி வேகமாகச் செல்லும் பொழுது, ஒரு சுந்தர புருஷன் அவன் முன் தோன்றி, "யாரப்பா நீ! எங்கு செல்கிறாய்?.  நீ செல்லும் திசையில் ஒரு பிரம்மராட்க்ஷஸன் இருக்கிறான்! அங்கே போகாதே"" என்று கூறினான். 

நம்பாடுவானும், "சுவாமி அடியேனுக்கு அந்த பிரம்மராட்க்ஷஸனைப் பற்றித் தெரியும்; நான் அவனுக்கு என் விரதத்தை முடித்துவிட்டு வருவதாக வாக்களித்துள்ளேன். ஆகவே அங்கு செல்கிறேன் என்று கூறினான். 

அதற்கு அந்த சுந்தரபுருஷன், நீ நினைப்பது போல் அந்த பிரம்மராக்ஷஸன் நல்லவன் இல்லை. அவன் உன்னை தின்று விடுவான் வேறு வழியில் சென்று விடு என்று சொன்னார்.

நம்பாடுவான் "சுவாமி சத்தியத்தை துறந்து உயிர் வாழ விரும்பவில்லை, ஆகவே என்னைச் செல்ல அனுமதியுங்கள்" என்று வேண்டினான். 

தன் உயிரான பிராணனை விட்டாவது சத்தியத்தைக் காப்பாற்றுவேன் என்று சொன்ன நம்பாடுவானின் வார்த்தைகளை கேட்டுச் சந்தோசம் அடைந்த "சுந்தரபுருஷன்" உனக்கு மங்களம் உண்டாகட்டும் என்று ஆசிர்வதித்துவிட்டு சென்றான். 

அந்த சுந்தர புருஷன் வேறு யாருமில்லை!! எம்பெருமான் பூமிபிராட்டிக்கு உபதேசித்துக் கொண்டிருக்கும் ரூபமான சாக்ஷாத் வராஹ மூர்த்தியே! நம்பாடுவானையும் நம்பாடுவனால் அந்த பிரம்மராட்க்ஷஸனையும் ஒருங்கே கடாஷித்து அருள்புரிய எண்ணினார் வராஹமூர்த்தி.

நம்பாடுவானும் பிரம்மராட்க்ஷஸன் இருப்பிடம் வந்து சேர்ந்தான். இதோ உன் அனுமதியுடன் அழகிய நம்பி பெருமாளை வாயாறப் பாடி நான் புனிதனாகி வந்துள்ளேன். எனது சரீரத்திலுள்ள ரத்த மாமிசங்களை புசித்து உன் பசியைப் போக்கிக் கொள் என்று கூறி நின்றான். பசியுடன் மிக பயங்கரமாய் இருந்த பிரம்மராட்க்ஷஸனுக்கு, நம்பாடுவான் வந்த பின்பு பசியே இல்லாமல் இருந்தது. நம்பாடுவானைப் புசிக்க வேண்டும் என்ற எண்ணம் பிரம்மராக்ஷஸனுக்கு வரவில்லை. அதற்குப் பதிலாக மற்றொன்றை நம்பாடுவானிடம் பிரம்மராக்ஷஸன் கேட்டது.

"ஏ நரனே! நீ நேற்றிரவு சர்வேஸ்வரனான, ஸ்ரீமந்நாராயணரான
அழகியநம்பியை போற்றிப் பாடிய பாட்டின் பலனை எனக்குக் கொடுத்தால் நான்உன்னை விட்டு விடுகிறேன்" என்றது.

அதற்கு நம்பாடுவான் நான் கொடுத்த சத்தியத்தைக் காக்க வேண்டும்... ஆகவே என்னை புசித்துக்கொள்... நான் பாடிய "கைசிகப் பண்" ஆகிய இந்த பாட்டின் பலனைக் கொடுக்க மாட்டேன் என்றான். 

அதற்கு பிரம்மராட்க்ஷஸன் பாட்டின் பாதி பலனையாவது கொடு உன்னை விட்டுவிடுகிறேன் என்று மன்றாடியது. அதற்கும் மசியாத நம்பாடுவான் நான் உனக்கு கொடுத்த வாக்கின் படி வந்து விட்டேன் நீ செய்த ப்ரதிக்ஞை படி என்னைப் புசித்து விடு என்று கூறினான். 

பிரம்மராட்க்ஷஸனும், "அப்பா! ஒரு யாமத்தின் பலனையாவது கொடுத்து என்னை இந்த பிறவியான பிரம்மராட்க்ஷஸன்  ஜன்மத்திலிருந்து காப்பாற்று" என்று மன்றாடியது. 

"நீ பிரம்மராட்க்ஷஸனாகப் பிறக்கக் காரணம் என்ன?" என்று கேட்டான் நம்பாடுவான். 

அப்பொழுது பிரம்மராட்க்ஷஸனுக்குத் தன்னுடைய பூர்வ ஜென்ம ஞாபகம் வந்தது. பூர்வ ஜென்மத்தில் நான் பிராமண குலத்தில் பிறந்து எந்த அனுஷ்டானங்களும் இன்றி திரிந்தேன்.  பண ஆசையால் யாகம் பண்ண எண்ணினேன். அப்பொழுது எனது பாவத்தின் காரணமாய் யாகத்தின் இடையில் மரணமடைந்தேன். இப்பொழுது பிரம்மராட்க்ஷஸனாக அலைந்துக் கொண்டிருக்கிறேன்.  தயை கூர்ந்து என்னைக் காப்பாற்று என்று நம்பாடுவானைச் சரண் அடைந்தது. 

தன்னை அண்டிய அந்த பிரம்மராட்க்ஷஸனிற்கு உதவ முடிவு செய்தான் நம்பாடுவான். 

அதன்படியே, "நேற்றிரவு கைசிகம் என்ற பண்" பாடினேன். அதனால் வரும் பலனை அப்படியே உனக்குக் கொடுக்கின்றேன் அதன் காரணமாய் நீ ராக்ஷச ஜென்மத்திலிருந்து விடுபட்டு மோட்சத்தை அடைவாய் என்று கூறினான் நம்பாடுவான். 

நம்பாடுவானின் வரத்தை பெற்ற பிரம்மராட்க்ஷஸன் ராட்க்ஷஸ ஜென்மத்திலிருந்து விடுபட்டு நல்ல குலத்தில் பிறந்து பகவத் பக்தனாக இருந்து மோட்சத்தை அடைந்தது. நம்பாடுவானும் நெடுங்காலம் அழகியநம்பி பெருமாளைப் போற்றிப் பாடி, கால முடிவில் திருநாடு (பரமபதம்) அடைந்தான். 

ஸ்ரீரங்கத்தில் அரங்கனை அன்றாடம் ஆராதித்து வந்த "பராசர பட்டர்" என்பவர் இந்த புராணத்தை தெளிவாக விளக்கியதைக் கேட்டு சந்தோசமடைந்த அரங்கன், பராசர பட்டருக்கும் பரமபதத்தைத் தந்து தன்னுடன் சேர்த்துக் கொண்டார். 

ஒவ்வொரு கார்த்திகை மாதம் "சுக்லபக்ஷ ஏகாதசி" அன்று எல்லா வைஷ்ணவ கோயில்களிலும் இந்த மகாத்மியம் இன்றும் வாசிக்கபடுகிறது. 

அப்பேற்பட்ட இந்த "கைசிக மகாத்மியத்தை" கோயிலுக்குச் சென்று பெருமாள் முன்னோ அல்லது வீட்டில் பூஜை அறையில் பெருமாள் முன் சொல்கின்றவனும் அதை கேட்கின்றவர்கள் யாவரும் இந்த லோகத்து ஐஸ்வர்யங்கள் அனைத்தையும் அனுபவித்து பின் வைகுந்தத்தையும் அடைவார்கள் என்று பூமி பிராட்டிக்கு "வராஹ பெருமாளே சொன்ன சத்தியம்" இந்த மஹாத்மியம். 

வராஹமூர்த்தி கூறுவது :-

நம்பாடுவானும் கால முடிவில் "திருநாடு பெற்றான்" என்ற வராஹமூர்த்தி, மேலும் பூமிதேவியிடம் உரைப்பது :-

எவனொருவன் கார்த்திகை சுக்லபட்சத்து துவாதசி அன்று நம் சன்னிதியில் இந்த கைசிக மஹாத்மியத்தை வாசிக்கின்றானோ!!!! அல்லது செவி மடுக்கிறானோ (கேட்கிறானோ)!!! அவன் நமக்குப் பல்லாண்டு பாடிக்கொண்டு ஆத்மானுபாவம் பண்ணிக் கொண்டிருப்பான்!!!!

என்று பூமிதேவி தாயாரிடம் இந்த "கைசிக ஏகாதசி மஹாத்மியம்" பற்றி எடுத்துரைத்தார். பூமிதேவி தாயாரும் பகவான் சொன்னதைக் கேட்டு ஆனந்தமடைந்தார்.   

விசேஷம் :-

பாவங்களை அறிவாளிகள் உணர்ந்து விலக வேண்டும் என்பதே இந்த வராஹ புராணத்தின் உள்ளீடான "கைசிக ஏகாதசி மஹாத்மியம்" என்பதன் சாரமாகும்.

இந்த கைசிக ஏகாதசியன்று எம்பெருமானின் அனைத்து திவ்யதேசங்களிலும், திருக்கோவில்களிலும் விசேஷமாக நடைபெறும். 

 ஸ்ரீரங்கம் கைசிக ஏகாதசி விழா:-

ஸ்ரீரங்கம் கோவிலில்  "கைசிக ஏகாதசி" நடைபெறுகிறது. அதோடு 365 வஸ்திரங்கள் எம்பெருமானுக்கு அன்று இரவு முழுவதும் சாற்றப்படும். 

இரவு 9.30 மணி முதல் 11 மணி வரை வஸ்திரங்கள் சாற்றி, அரையர் சேவையும் நடைபெறும். ஸ்ரீபட்டர் சுவாமிகளால் "கைசிக புராணம்" விடிய விடிய வாசிக்கப்படும்.  மறுநாள் அதிகாலை 5.45 மணிக்கு கற்பூர படியேற்ற சேவை நடைபெறும். இந்த காணக்கிடைக்காத காட்சியை "ஸ்ரீரங்கம்" சென்று தரிசித்திடுங்கள்.

திருக்குறுங்குடி திவ்யதேசத்தில் கைசிக ஏகாதசி சேவிக்கப்படுவதுடன், அன்று இரவு நாடகமாகவும் நடிக்கப்படுகிறது.  திருக்குறுங்குடியில் வருடந்தோறும் இந்த நம்பாடுவானின் "கைசிகப்பண்" மற்றும் வராஹ மூர்த்தி காட்சி கொடுத்தல் போன்றவை மிகச் சிறப்பாக நடைபெறுகிறது.

இந்த கைசிக ஏகாதசி மஹாத்மியத்தின் மகிமைகளைப் படிக்கும் அன்பர்கள் அனைவரும் கொடுத்து வைத்தவர்கள் என்று மட்டுமா சொல்ல வேண்டும்? நாம் அனைவரும் "பாக்கியசாலிகள்" "புண்ணியவான்கள்" என்று கூட சொல்லலாம்!.

அறிவாளிகள் தெரிந்தோ, தெரியாமலோ செய்த பாவங்களில் இருந்து இனிமேலாவது விலகிக் கொள்ள வேண்டும்.  மறுபடியும் பல பாவங்களைச் செய்யாமல் இருக்க வேண்டும் என்பதே இதன் சாரம்சம். 

உங்களுக்கு எம்பெருமானின் பரிபூர்ண அனுக்ரஹம் உண்டாகட்டும்.

இப்பிறவியில் எல்லா கஷ்டங்களும் நீங்கி, மகிழ்ச்சியாகிய சந்தோசத்தை அனுபவித்து, அனைத்து செல்வங்களையும் பெற்று, எம்பெருமானின் கருணையைப் பெற்று ஆனந்த வாழ்வு நம் அனைவரும் வாழ அவர் அருள் நம் அனைவரையும் வழி நடத்தட்டும்.

ஓம் நமசிவாய 
படித்து பகிர்ந்தது 
இரா இளங்கோவன் 
நெல்லிக்குப்பம். 

தீராத வயிற்று வலி நோய்கள் தீர சுந்தரேஸ்வரர்.

அருள்மிகு சுந்தரேஸ்வரர் கோவில்
திருக்கலிகாமூர் 

இந்நாளில் இத்தலம் அன்னப்பன்பேட்டை என்று அழைக்கப்படுகிறது. வயிற்று வலி மற்றும் வயிறு சம்மந்தப்பட்ட நோய்கள் தீர வழிபட வேண்டிய தலமிது.

சீர்காழி வெண்காடு சாலையில் மங்கைமடம் என்ற ஊருக்குச் சென்று அங்கிருந்து திருநகரி செல்லும் சாலையில் சென்றால் இத்தலத்தை அடையலாம்.

இப்பகுதியில் வாழ்ந்து வந்த வணிகன் ஒருவன் தீராத வயிற்று வலியால் அவதிப்பட்டான்.  தென் திருமுல்லை வாயில் சென்று அத்தல இறைவனிடம் வேண்ட, இறைவன் அருளால் வயிற்று வலி நீங்கியது.
பின்பு அவன் கடற்கரை ஓரமாகவே நடந்து சென்று கொண்டிருந்தான்.  அப்போது அவன் மீனவர் வலையில் சிக்கிய ஒரு அழகிய அம்பாள் சிலையைக் கண்டான். அதனை எடுத்து வந்து வழிபட அவனது வயிற்று வலி முற்றிலும் மறைந்தது. இறைவன் அசரிரீயாக இட்ட ஆணைபடி அம்பாளை இத்தலத்தில் பிரதிஷ்டை செய்து வழிபட்டான். 

ஜோதிடத்தைத் தொழிலாகக் கொண்டவர்கள் ஜோதிடம் கற்க விரும்புபவர்கள் பராசர முனிவர் பூஜித்த இத்தல இறைவனை வணங்கினால் நல்ல பலன் கிடைக்கும்.
ஓம் நமசிவாய 
படித்து பகிர்ந்தது
 இரா இளங்கோவன்
 நெல்லிக்குப்பம். 

Saturday, November 29, 2025

லிங்கத்தைப் பிரதிஷ்டை செய்தல்

1. லிங்கத்தைப் பிரதிஷ்டை செய்தல்
லிங்கத்தின் அடிப்பகுதி பிரம்ம பாகம்; மையப்பகுதி விஷ்ணு பாகம், நுனிப்பகுதி சிவபாகம். 
இதில் சிவபாகம் சற்றுப் பெரியதாக இருக்க வேண்டும். லிங்கத்தை அமைத்தல் :

 1) உப்பினாலும், நெய்யினாலும் செய்தல், 

2) துணி, மண் ஆகியவற்றாலும் தற்காலிகமாக அமைத்து வழிபடல். 

3) சுட்ட மண்ணினால் லிங்கம் அமைத்தல். 

4) மரம், பாறை ஆகிய ஒன்றால் செய்யப்படுவது மிகச் சிறந்தது. 

5) பவழம், தங்கம் ஆகியவற்றால் ஆன லிங்க வழிபாடு அதிக பலன்களைத் தரும்.

 6) வெள்ளி, பித்தளை, செம்பு, துத்தநாகம், பாதரசம் ஆகியவற்றால் ஆனவை புனிதமானவை. 

7) உலோக நடுவில் ரத்தினங்கள் இழைக்கப்பட்ட லிங்கங்களை வழிபடுவோர் புகழ், வெற்றி அடைவர். அவர்கள் மனோரதம் நிறைவேறும்.
ஈசன் எங்கும் ஆராதிக்கப்படுவர். 

சாஸ்திர முறைப்படி, குறிப்பிட்ட அளவுகளில் லிங்கங்களை அமைக்க வேண்டும். பரமன் ஆராதனைக்கான இடம் ஆலயமுன் அமைதல் வேண்டும். பஞ்ச கவ்யத்தால் அனைத்தும் தூய்மைப்படுத்தல் படவேண்டும். 

ஆராதிப்பவர்கள் பவித்திரம், மோதிரம், கங்கணம் அணிந்திருக்க வேண்டும். முறையான மரக்கொம்புகளாலேயே பந்தல் அமைக்க வேண்டும். நரசிம்ம மந்திரத்தால் பூ பரிக்கிரகம் செய்த பின் சடங்குகளைச் செய்ய வேண்டும். பந்தலின் வடமேற்கு மூலையில் ஹோம குண்டம் அமைக்கப்பட வேண்டும். எந்தத் தெய்வம் பிரதிஷ்டை ஆனாலும் உடன் அரி, அயன், அஷ்டதிக் பாலகர்களையும் ஆராதனம் செய்து பூஜிக்க வேண்டும். முடிவில் சாந்தி ஹோமம் புரோகிதர்க்கு கோதானம், சுவர்ணதானம் செய்ய வேண்டும். நாள் முழுவதும் பஜனை, தியானத்தில் ஈடுபட வேண்டும். பக்தி, சிரத்தையுடன் பரமனை ஆராதிக்க வேண்டும். திருஉருவை பிரதிஷ்டை செய்பவர்கள் தங்கள் மூதாதையர்களுக்கு வைகுந்தவாசத்தை அணிகிறார்கள்.
12. ஆலயங்களுடன் திருக்குளங்கள்
ஆலயத் தடாகங்கள் வருண சாந்நித்யத்தைப் பெற்றிருக்க வேண்டும். அதற்காக வருணன் திருஉருவைத் தங்கம், வெள்ளி, ரத்தினங்கள் ஆகியவற்றால் அமைக்க வேண்டும். வலதுகரம் அபயஹஸ்தம், இடதுகையில் நாகபாசம்-அன்ன வாகனம்-அவரைத் தொடர்ந்து நதிகள், சர்ப்பங்கள் வருவதாக உருவாக்க வேண்டும். குடத்தில் வருணனை ஆவாகனம் செய்ய வேண்டும். வருண சாந்நித்தியத்தை உண்டாக்க வேண்டும். புரோகிதரைக் கொண்டு ஹோமகுண்டம் அமைத்து ஹோம காரியங்களைச் செய்ய வேண்டும். புனித குடங்களில், புனித நீர்களை ஆவாஹனம் செய்ய வேண்டும். அக்குடங்களில் கிழக்குக் கடல் நீர், தென்கிழக்கு கங்கை நீர், தெற்குக்கு மழைநீர், தென் மேற்குக்கு ஊற்று நீர், மேற்குக்கு ஆற்று நீர், வடமேற்குக்கு நதி நீர், வடக்குக்குக் காய் கனிகள் பிழிந்த நீர், வடகிழக்குப் புனித தீர்த்தநீர் என்று நிரப்பி ஆராதிக்க வேண்டும் (எல்லாக் குடங்களிலும் ஆற்று நீரையும் நிரப்பலாம்.)
விதிப்படி பூஜைகள் முடித்து குடங்களின் நீரை கிழக்கிலிருந்து தொடங்கி உரிய மந்திரங்கள் கூறி விஷ்ணுவின் அம்சமான வருண சிலைக்கு அபிஷேகம் செய்ய வேண்டும். ÷ஷாடசோபசாரங்கள் சமர்ப்பித்து, சிலையைத் தடாகத்தின் நடுவே நீருக்குள் பூமியில் புதைத்து விட வேண்டும். அதனால் நீர் புனிதமாகும், வருணன் சாந்நித்தியமும் ஏற்படும். பஞ்ச கவ்யத்தை எடுத்து மந்திரத்துடன் தடாகத்தில் நீரில் சேர்க்க வேண்டும். குளம் வெட்டி புனித நீரை உண்டாக்குபவர் ஒரு நாளிலேயே பல அசுவமேத யாகங்கள் செய்த புண்ணியத்தை அடைவர். குளம் வெட்டுவது சிறந்த தானம். அத்துடன் நந்தவனத்தையும் அமைக்க வேண்டும். இதனால் சொர்க்க வாசம் ஏற்படும்.
13. நீராடும் விதி முறைகள்
நீரில் மூழ்கி ஸ்நானம் செய்ய வேண்டும். அப்போது புண்ணிய தீர்த்தங்களில் நீராடுவதாகத் தியானம் செய்து கொள்ள வேண்டும். ஸ்நானங்கள் பல வகை. தன் இரு கைகளையும் உயரே தூக்கிக் கொண்டு கிழக்கு நோக்கி சிறிது நேரம் கண் மூடி நிற்க தேகம் சூரியக் கிரணங்களால் புனிதமடைகிறது. மழை நீரிலும் இந்த ஸ்நானம் செய்யலாம். இது அக்னயக ஸ்நானம். உடலை மண்ணைக் கொண்டு தூய்மை செய்து கொள்வது மலஸ்நானம் எனப்படும். அதன் பின்னர் நீராடல் விதிஸ்நானம் கோதூளி கொண்டு தூய்மை பெறுவது மகேந்திர ஸ்நானம் ஆகும். கலசமந்திரம் (அக்கினி (அ) வருணன்) எனப்படும் ஒன்பது மந்திரங்களை உச்சரித்து தலையில் நீர் ஊற்றி கொள்ளும் ஸ்நானம் மந்திர ஸ்நானம் எனப்படும். விஷ்ணுவுக்குப் புனிதமான மந்திரத்தைக் கூறி, தேவைப்படும் போதெல்லாம் மனத்தில் தியானித்தல் மனோஸ்நானம்.
மூன்று காலங்களிலும் சந்தியை வழிபட வேண்டும். பரம சந்தியை எனப்படும் சந்தியா தேவியை ஞானிகள் இரவில் தம் இதயத்தில் இருந்து தியானிப்பர். வலது கை ஆள்காட்டி விரல் நுனியில் பிதுருக்கள் இடம், சுண்டு விரலின் நுனிப்பகுதி பிரஜாபதியின் இடம், கட்டை விரல் நுனிப்பகுதி பிரமன் இடம். இடது உள்ளங்கை அக்கினிக்குப் புனித இடம். வலது உள்ளங்கை சோமனுக்கானது. விரல்கள் சேரும் இடங்கள் மகரிஷிகளுக்குப் புனித இடம். நீராடும் போது அகமர்ஷணம் என்னும் கர்மா செய்வதால் நம் தேகம் பாவம் நீங்கி புனிதமடைகிறது. மேலும், அக்கினிதேவன் வசிஷ்டருக்கு சிவன், சூரியன், கபிலைப் பசு ஆராதனை விவரம் கூறினார். ஆச்சாரியார் சீடனுக்கு தீøக்ஷ அளிக்கும் முறையையும் கூறினார். 
ஓம் நமசிவாய
 படித்து பகிர்ந்தது
 இரா இளங்கோவன்
 நெல்லிக்குப்பம். 

Friday, November 28, 2025

அருணாச்சலேஸ்வரர் திருக்கார்த்திகை மகாதீபம் வரலாறு.

🔥#திருக்கார்த்திகை_மகாதீபம்🪔
நினைத்தாலே முக்தி தரும் பஞ்சபூத அக்னி தலமான, தேவாரம் மற்றும் திருப்புகழ் பாடல் பெற்ற நடுநாட்டு தலங்களில் ஒன்றான, பல யுகங்கள் கடந்து இன்றுவரை நிலைத்திருக்கும்
திருமாலும் பிரம்மனும் அடிமுடி காண முடியா உலகப் புகழ்பெற்ற 
#திருவண்ணாமலை 
#அண்ணாமலையார் (#அருணாச்சலேஸ்வரர்) 
#உண்ணாமுலையம்மை திருக்கோயில்
#திருக்கார்த்திகை_மகாதீபம் வரலாறு:

கார்த்திகை தீபமானது கார்த்திகை மாதத்தில் வரும் கார்த்திகை நட்சத்திரத்தில் கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு கார்த்திகை திருநாளானது 03.12.2025 புதன்கிழமை அன்று கோலாகலமாக கொண்டாடப்பட இருக்கிறது. திருக்கார்த்திகை அன்று வீட்டில் உள்ள சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை வீடுகளை அகல் விளக்குகளால் அலங்கரிப்பார்கள். கார்த்திகை திருநாளில் மாலை 6 மணி அளவில் அகல் விளக்கினால் வீடுகள் தோறும் ஜொலித்து காணப்படும். இந்த தீப திருநாளானது 3 நாட்கள் அனைவராலும் கொண்டாடப்படும். நாம் விளக்கு ஏற்றுவதற்காக ஊற்றப்படும் எண்ணெயும், அதில் இடப்படும் திரியும் தன்னைக் கரைத்துக் கொண்டு நமக்கு பிரகாசமான ஒளியை தருகிறது. இது போல மனிதர்களும் தன்னலம் பார்க்காமல் மற்றவர்களுக்கு உதவி செய்ய வேண்டும் என்பதை இந்த கார்த்திகை தீபம் உணர்த்துகிறது.

படைத்தல் தொழிலைச் செய்யும் பிரம்மனும், காத்தல் தொழிலைச் செய்யும் விட்டுணுவும் நானே பெரியவன் என்று வாதாடிப் பல வருடங்கள் போரிட்டனர். சிவபெருமான் சோதிப்பிழம்பாகத் தோன்றினார். அடியையும் முடியையும் தேடும்படி அசரீரி கூறியது. இருவரும் அடிமுடி தேடிக் காணமுடியாமல் சிவபெருமானே முழுமுதற் கடவுள் என்று ஏற்றுக்கொண்டனர். அவர்கள் இருவரும் தாம் கண்ட சோதியை எல்லோரும் காணும்படி காட்டியருள வேண்டும் என்று விண்ணப்பிக்க அவர் திருக்கார்த்திகை நட்சத்திரத்தன்று காட்டியருளினார். 

ஒருமுறை பிரம்மாவுக்கும், விஷ்ணுவுக்கும் தங்களில் யார் பெரியவர் என்ற சர்ச்சை ஏற்பட்டது. இருவரும் தங்களுக்குள் ஒரு போட்டியை நடத்தினர். உலகாளும் ஈசனான சிவபெருமானின் முடியை பிரம்மா பார்த்து வருவது எனவும், அவரது பாதத்தை விஷ்ணு பார்த்து வருவது எனவும் முடிவு செய்தனர். அன்னப்பறவை உருவமெடுத்து சிவனின் முடியைக் காண உயரே பறந்தார் பிரம்மா. விஷ்ணுவோ, பன்றி உருவமெடுத்து, பூமியைத் தோண்டி சிவனின் பாதத்தை தேடி பாய்ந்தார். பிரம்மா உயரே பறக்க பறக்க சிவன் உயர்ந்து கொண்டே போனார். விஷ்ணு கீழே போசுப்போக சிவனின் கால்கள் நீண்டு கொண்டே போனது. இருவருமே தோல்வியடைந்து சிவபெருமானிடம் செய்வதறியாது நின்றனர். அப்போது சிவன் இருவரிடமும், இந்த உலகில் யாருமே பெரியவர் இல்லை, நமது மனதில் இருக்கும் அகங்காரமே இது போன்ற போட்டிகளுக்கு காரணமாகிறது என்றார். இதைக்கேட்ட பிரம்மா, விஷ்ணுவின் மனதில் ஒளி பிறந்தது. அப்போது சிவனும் ஜோதி வடிவமாய் காட்சி தந்தார். தங்களுக்கு கிடைத்த இந்த ஜோதி வடிவக்காட்சி அனைவருக்கும் கிடைக்க வேண்டுமென இருவரும் வேண்டினர். கார்த்திகை மாதம், திருக்கார்த்திகை தினத்தில் திருவண்ணாமலையில் ஜோதி வடிவமாக காட்சி தருவதாக அருள்பாலிக்கின்றார் சிவபெருமான்.

கார்த்திகை மாதத்தில் வரும் கார்த்திகை நாள் ஏனைய கார்த்திகை நாட்களினை விடவும் விமர்சையாக தமிழர்களால் கொண்டாடப்பட்டு வருகின்ற ஒரு விழா. கார்த்திகை தீப விழாவினை குமராலாய தீபம், சர்வாலய தீபம், விஷ்ணுவாலய தீபம் என மூன்றாக பிரித்து கோவில் மற்றும் வீடுகளில் கொண்டாடுவர்.

#குமராலய தீபம்: 

கார்த்திகை மாதத்தில் முருகன் கோவிலில் கொண்டாடப்படும் கார்த்திகை நட்சத்திரம் கூடிவரும் நாள்.

#விஷ்ணுவாலய தீபம்: 

கார்த்திகை மாதத்தில் விஷ்ணு கோவில்களில் கொண்டாடப்படும் ரோகினி நட்சத்திரம் கூடிவரும் நாள்.

#சர்வாலய தீபம்: 

ஏனைய இந்து ஆலயங்களிலும் வீடுகளிலும் கொண்டாடப்படும். கார்த்திகை மாதத்து முழுமதி திதி.

#கார்த்திகை மாதம்:

தமிழ்நாட்டில் கார்மேகம் சோணைமழை பொழியும் மாதம் கார்த்திகை மாதம். கார் என்றும், கார்த்திகை என்றும் வழங்கப்படும் காந்தள் பூ மிகுதியாக மலரும் காலம் கார்த்திகை மாதம். கார்த்திகை எனப்படும் விண்மீன் கூட்டம் கீழ்வானில் மாலையில் தோன்றும் மாதம் கார்த்திகை மாதம். தமிழர்கள் தம் இல்லங்களில் 27 தீபம் ஏற்றுவது தான் சிறப்பு: இவை 27 நட்சத்திரங்களைக் குறிக்கும்.

#கார்த்திகை நாள்:

பண்டைய தமிழர்கள் ஒரு மாதத்தில் உள்ள நாட்களை 27 நாள்மீன் பெயர்களால் வழங்கி வந்தனர். அந்த நாள்மீன்களில் ஒரு நாள்மீன் கார்த்திகை-நாள். இவ்வாறு ஒவ்வொரு மாதமும் வருகின்ற கார்த்திகை-நாள் முக்கியமான நாளாகத் தமிழர்களால் வழிபடப்பட்டு வருகின்றது.

#திருவண்ணாமலை கார்த்திகை தீபம்:

திருவண்ணாமலையில் காலையில் பரணி தீபம் ஏற்றிய பிறகு, மாலையில் மலையில் இத்தீபம் ஏற்றப்படும். இந்த தீபம் சிவன் அக்னி பிழம்பாக, நெருப்பு மலையாக நின்றார் என்ற ஐதிகப்படி மலையில் தீபம் ஏற்றப்படுகிறது. இத்தீபம் ஏற்றும் திருவண்ணாமலை மலையானது 2668 அடி உயரத்தை கொண்டுள்ளது.

இந்த மலை மீது தீபம் ஏற்ற செம்பு, இரும்பு கொப்பரை கொண்டு தயாரிக்கப்பட்ட கொப்பரையில் தீபம் ஏற்றுவார்கள். இந்த தீபம் ஏற்ற சுமார் 3000 கிலோ மேற்பட்ட நெய்யும், 10O0 மீட்டர் காட துணியும் கொண்டு ஏற்றப்படுகிறது.

திருவண்ணாமலையில் தான் சக்தியும், சிவனும் அர்த்தநாரிஸ்வர கோலத்தில் கலந்தனர். கார்த்திகை தீபமன்று நாம் வீட்டில் ஏற்றும் தீப விளக்கானது தீப ஒளியானது யார் மீது படுகிறதோ அவர்களுக்கு மறுபிறவியில் எந்த ஒரு துன்பமும் நடக்காது. இறைவன் மகாபலிக்கு முக்தி அளித்தபோது ‘கார்த்திகை தீபம் எல்லா இடங்களிலும் சிறப்பாக கொண்டாடப்பட வேண்டும் என்ற மகாபலியின் விருப்பத்தினை, நிறைவேற்றி இறைவன், மகாபலியை தன்னுடன் ஐக்கியமாக்கிக் கொண்டார். இப்படியாக மகாபலியின் வாழ்க்கையானது இறைவனின் திருவருளை சென்றடைந்தது.

#பரணி தீபம்:

காலை 4 மணியளவில் 5 மடக்குகளில் (அகல்) தீபம் ஏற்றி வைப்பார்கள். இதுவே பரணி தீபம் ஆகும். கார்த்திகை மாதத்தில் பரணி நட்சத்திரத்தில் இத்தீபம் ஏற்றுவதால் "பரணி தீபம்"எனப்படுகிறது. 5 மடக்குகளும் படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல் என்ற ஐந்தொழில் புரியும் இறைவனின் ஐந்து திருமுகங்களைக் குறிக்கும்.

தீபத் திருநாளன்று அதிகாலையில் மலையடிவாரத்தில் ஏற்றப்படுவதைப் பரணி தீபம் என்றும் மாலையில் மலையுச்சியில் ஏற்றப்படுவதை மகாதீபம் என்றும் குறிப்பிடுகிறார்கள். இத்தீபம் சிவன் அக்னி பிழம்பாக, நெருப்பு மலையாகநின்றார் என்ற ஐதீகப்படி மலையில் தீபம் ஏற்றப்படுகிறது. இத்தீபம் ஏற்றும் மலையானது 2668 அடி உயரம் கொண்டது. இம்மலை மீது தீபம் ஏற்ற செம்பு, இரும்பு கொப்பரை கொண்டு தயாரிக்கப்பட்ட கொப்பரையில் தீபம் ஏற்றுவர்.

இக்கொப்பரையை 1668-இல் பிரதானிவேங்கடபதி ஐயர் என்பவர் வெண்கல கொப்பரையாகச் செய்து கொடுத்தார். பின்பு 1991-இல் இரும்பினால் உருவாக்கப்பட்ட கொப்பரை தற்போது உள்ளது. இது பக்தர்களின் உபயம் ஆகும். இக்கொப்பரையை மலை மீது வைக்கும் உரிமை பெற்றவர் பர்வத ராஜகுலத்தினர் (மீனவர்) ஆவர். இத்தீபம் ஏற்ற சுமார் 3௦௦௦ கிலோவுக்கும் மேற்பட்ட நெய்யும், 10O0 மீட்டர் காடா துணியும் பயன்படுத்தி ஏற்றப்படுகிறது.

இம்மகாதீபம் ஏற்றுகின்ற உரிமை பர்வத ராஜகுலத்தினர் பெற்றுள்ளனர். இவர்கள் "செம்படவர்கள்" எனப்படுவர். சிவன் படையினர் செம்படவர்கள். இதன் நினைவாக இவர்களுக்கு இவ்வுரிமை வழங்கபடுகிறது. இவர்கள் தங்களுக்குள் முறை போட்டுகொண்டு ஆண்டுதோறும் மலைமீது தீபம் ஏற்றுகின்றனர்.

கார்த்திகை தீபம் ஏற்றும் முறை:

கார்த்திகை தீப திருநாள் அன்று வீட்டில் கிழக்கு நோக்கி விளக்கு ஏற்றினால் உங்களுக்கு இருக்கும் கஷ்டங்கள் அனைத்தும் விலகிவிடும். மேற்குத் திசை நோக்கி விளக்கு ஏற்றினால் கடன் தொல்லை முற்றிலும் நீங்கும். வடக்குத் திசை நோக்கி ஏற்றினால் திருமணத் தடை நீங்கும். தெற்குத் திசை நோக்கி எப்போதும் வீட்டில் விளக்கு ஏற்றக்கூடாது.

தீபமன்று வீட்டில் 27 விளக்குகள் ஏற்றி வைத்தால் நல்லது. சிலர் தங்களுடைய வீட்டில் கார்த்திகை அன்று குத்து விளக்குகளில் விளக்கு ஏற்றுவதை வழக்கமாக வைத்திருப்பார்கள். இந்த நாளில் நைவேத்தியமாக இறைவனுக்கு அவல், கடலை நெல்பொரி, அப்பம் போன்ற உணவுகளை படைத்தது மகிழ்வார்கள்.

விளக்கில் ஒரு முகம் ஏற்றினால் நீங்கள் மனதில் நினைத்த செயல்கள் அனைத்தும் நடக்கும்.

விளக்கில் இரண்டு முகம் வைத்து ஏற்றினால் வீட்டில் சண்டை சச்சரவு இல்லாமல் சந்தோசம் நிலைக்கும்.

மூன்று முகம் கொண்ட விளக்கை ஏற்றினால் குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும்.

நான்கு முகம் கொண்ட விளக்கை ஏற்றினால் செல்வ செழிப்பு அதிகரிக்கும்.

ஐந்து முகம் கொண்ட விளக்கை ஏற்றி வர அனைத்து விதமான நன்மைகளும் கிடைக்கும்.

கார்த்திகை அன்று வீடு அலங்காரம்:

பௌர்ணமி நிலவு கிழக்கு வானில் தென்படும் வேளையில் வீட்டு வாசலில் வாழைக் குற்றி நாட்டி வைத்து அதன் மேல் தீப பந்தம் ஏற்றியும் வீட்டின் உள் புறம் மற்றும் வெளியிலும் சிறிய விளக்குகளில் தீபமேற்றி அலங்கரித்து வீடுகளை தீபங்களால் அழகுபடுத்தி வழிபடுவர்.

விரதம் இருக்கும் முறை:

கார்த்திகை விளக்கீடு: கார்த்திகையின் முதல் நாளான பரணி நட்சத்திர நாளில் சைவ சமயிகள் பகல் நேரத்தில் மட்டும் ஒரு வேலை உணவு சாப்பிட்டு கார்த்திகையன்று அதிகாலையில் நீராடி இறைவனை வழிபட்டு நீர் மட்டும் அருந்தி இரவு கோயிலுக்குச் சென்று தரிசனம் பெறுவர்.

மறுநாள் காலையில் நீராடி பாரணை அருந்தி விரதத்தை நிறைவு செய்வர். பன்னிரண்டு ஆண்டுகள் இவ்விரதம் இருப்பவர்கள் வேண்டும் வரங்களைப் பெறலாம் என்பது ஐதீகம்.

கார்த்திகை மாத சிறப்பு:

தமிழ்நாட்டில் கார்மேகம் எனும் சோணைமழை பொழியும் மாதத்தை தான் கார்த்திகை மாதம் என்று சொல்கிறோம். கார் என்றும், கார்த்திகை என்றும் வழங்கப்படும் காந்தள் பூ மிகுதியாக மலரும் காலம் கார்த்திகை மாதம். கார்த்திகை எனப்படும் விண்மீன் கூட்டம் கீழ்வானில் மாலை நேரத்தில் தோன்றக்கூடியதை கார்த்திகை மாதம் என்று சொல்லப்படுகிறது.

கார்த்திகை மாத பண்டிகைகளில் முக்கியமானதாக விளங்குவது கார்த்திகை தீபம் என்பது எல்லோருக்கும் தெரிந்த விஷயம்தான். கார்த்திகை தீபத்தைப் பற்றி பல்வேறு விதமானச் செய்திகளைக் நம்மால் காணமுடியும். அதில் இட்டுக் கட்டுக் கதைகளுக்குப் பின்னால் இருக்கும் புராணக் கதைகளையும் உண்டு.

#முதல் கதை: 

கச்சியப்ப சிவாச்சாரியார் எழுதிய கந்த புராணத்தில் உள்ள சான்றினைத்தான் முக்கியச் சான்றாக இந்த புராண கர்த்தாக்கள் காட்டுகிறார்கள். அதன்படி, தமக்குள் யார் பெரியவர் என்ற போட்டி விஷ்ணுவுக்கும் பிரம்மனுக்கும் உண்டானபோது அந்த போட்டிக்கு நடுவராக வந்து சிவன் ஒரு பெரும் சோதியாக எழுந்து நின்று சோதியின் அடியை விஷ்ணுவும், உச்சியை பிரம்மனும் காண வேண்டும், அப்படி யார் முதலில் பார்க்கிறீர்களோ அவர்களை பெரியவர் என்று மாயக் குரல் ஒன்று கூற அதை ஏற்றுக் கொண்ட இருவரும் தமது பயணத்தை தொடங்கினர். அன்னப்பறவையாக உருமாறிய பிரம்மன் பறந்து உச்சியைத் தேடினார், பன்றியாக உருமாறிய விஷ்ணு நிலத்தைத் துளைத்துக் கொண்டு அடியைத் தேடினார்.

இருவரும் பல ஆண்டுகள் பயணித்தும் தங்கள் இலக்கை அடைய முடியவில்லை. கடைசியில் தமது தோல்வியை இருவரும் ஒப்புக் கொண்டனர். அப்படி சோதிப் பிழம்பாக சிவன் தோன்றிதை அனைவருக்கும் காட்ட வேண்டும் என இருவரும் கோர அதை சிவன் ஏற்றுக் கொள்கிறார், அதன்படி ஒவ்வோர் ஆண்டும் கார்த்திகை நாளில் சோதியாய் வெளிப்பட்ட நாள்தான் கார்த்திகை தீபம் நாள். அதை நினைவுப்படுத்தத்தான் அக்னி மையமான திருவண்ணாமலையில் தீபத்தை மலைமீது ஏற்றி வைக்கிறார்கள் என்பது கதை.

#இரண்டாம் கதை: 

சூரனை கொல்ல வேண்டும் என்ற தேவர்கள் சிவனிடம் கோரிக்கை வைக்கிறார்கள். அதை ஏற்ற அவர் அதற்கான காலம் விரைவில் வரும், சூரனை அழிக்க தமது படைப்பில் ஒருவன் வருவான் என வாக்குறுதி அளிக்கிறார். அதன்படி தமது படைப்பை உருவாக்க தமது மனைவி சக்தியுடன் புணரத் தொடங்குகிறார். புணர்ச்சி நிற்கவில்லை. யுகம் யுகமாகத் தொடர்கிறது. அப்படி தொடரும் போது மானாகவு, யானையாகவும் இன்னும் பல மிருகங்களாவும் உருவெடுத்து புணர்ச்சியில் ஈடுபடுகின்றனர் சக்தியும் சிவனும். இவர்களின் செய்கையினால் தேவலோகம் தடுமாறுகிறது. இவர்களின் புணர்ச்சியை எப்படி நிறுத்துவது என்றுத் தெரியாமல் தேவர்கள் கவலைப்படுகிறார்கள்.

இருவரின் புணர்ச்சியினால் உருவான வியர்வை துளிகள் லட்சக்கணக்கில் பெருகி வழிகின்றன, அதிலிருந்து தேவ கணங்கள் உருவாகின்றன, முன்னணி படையணிகள் தோன்றுகின்றன, இறுதியில் சிவன் தனது சுக்கிலத்தை தனது மூன்றாவது கண்ணான நெற்றிக் கண் மூலம் தெறிக்க வைக்கிறார். அவை ஆகாய கங்கையில் ஆறு சுடர்களாக மிதந்து சரவணப் பொய்கை அடைகின்றன. அங்கே சக்தியானவள் தமது சக்தியின் மூலம் ஆறு பெண்களை உருவாக்கி ஆளுக்கொரு சுடரை வளர்க்க வைக்கிறாள். அந்த ஆறு சுடர்களும் ஆறு குழந்தைகளாக வளர்கின்றன. அந்தக் குழந்தைகளை வளர்த்தவர்கள் கார்த்திகைப் பெண்கள். அவர்கள் வளர்த்த குழந்தைகள் கார்த்திகேயன். குழந்தை வளர்ந்ததும் சிவனும் சக்தியும் அங்கே வருகின்றனர். அப்போது சக்தி ஆறு குழந்தைகளையும் சேர்த்து ஒரு குழந்தையாக மாற்றுகிறாள்.

அதனால் அக்குழந்தைக்கு ஆறுமுகன் என்று பெயர் உண்டாகிறது. சிவன் கார்த்திகைப் பெண்களை வானத்தில் நட்சத்திரங்களாக மாற்றியமைக்கிறார். அது கார்த்திகை நட்சத்திரக் கூட்டம் என்று அழைக்கப்படுகிறது. சுடராகப் பிறந்து ஒருங்கிணைந்த கார்த்திகேயனின் நாள்தான் கார்த்திகை நாள். அதாவது கார்த்திகேயன் பிறந்தநாள்.

#மூன்றாவது கதை: 

சப்த ரிஷிகளின் மனைவிகளின் அழகில் மயங்கிய அக்னிபகவானுக்கு அந்த பெண்கள் மீது அடக்க முடியாத மோகம் உண்டானது. அதைப் பற்றி தெரிந்துக் கொண்ட அவனது மனைவி சுவாகாதேவி தனது கணவன் முறைத் தவறி நடந்துக் கொண்டால் சப்த ரிஷிகள் சபித்துவிடுவார்கள் என்று எண்ணிப் பயந்து போனாள். அதனால் தானே ஆறு ரிஷிகளின் மனைவிமார்களைப் போல் உருவத்தை மாற்றிக் கொண்டு, தன் கணவன் ஆசையை நிறைவேற்றிளாள். ஆனால் வசிட்டரின் மனைவி அருந்ததியைப் போல அவளால் உருமாற முடியவில்லை. எனினும் சுவாகாதேவி கொண்ட ஆறு உருவத்திற்கும் கார்த்திகை பெண்கள் என்று பெயர். இப்பெண்கள்தான் கார்த்திகேயனை வளர்த்தார்கள் என்பது ஒரு கதை.

கார்த்திகை விழா:

கார்த்திகை மாதத்தில் வருகின்ற கார்த்திகை நாள் ஏனைய கார்த்திகை நாட்களினை விடவும் விமர்சையாகத் தமிழர்களால் கொண்டாடப்பட்டு வருகின்ற ஒரு விழா. மாலை வேளையில் வீடுகளின் வெளிப்புறங்களிலும், வீட்டு முற்றத்திலும் விளக்கேற்றிக் கொண்டாடுவார்கள். திருக்கார்த்திகை தினத்தன்று ஆலயங்களில் தீபத் திருவிழா நடைபெறும். பக்தர்கள் தீப விளக்குகள் ஏற்றிவைத்து வழிபடுவர். ஆலயத்தின் முன்புறத்தே வாழை மரம் நட்டு பனையோலைகளால் அதனைச் சுற்றி அடைத்து "சொக்கப்பனை"க்கு அக்கினியிட்டு சோதி வடிவாகக் காட்சியளிக்கச் செய்து சிவபெருமான் சோதிப் பிழம்பாகத் தோன்றிய காட்சியை நினைவு கூர்ந்து வழிபடுவர். இல்லங்களை விளக்குகளால் அலங்கரித்து ஒளி வெள்ளத்தில் இல்லங்களை மிதக்கவைத்து வழிபடுவர்.

கோவிலில் தீபம் ஏற்றுதல்:

மலையில் தீபம் ஏற்றுவதற்கு முன்பு கோயிலில் பஞ்சமூர்த்திகளுக்குத் தீபதரிசனம் காண்பிக்கப்படும். இந்நேரத்தில் பக்தர்கள் கூட்டம் கோவிலில் இத்தீபத்தைக் காண அலைமோதும். தீபம் ஏற்றும் நேரம் நெருங்கியவுடன் அர்த்தநாரீஸ்வரர் தோன்றுவார். இறைவன் தேவிக்கு தன்னுடைய இடப்பக்கம் அளித்து இன்று காட்சி அளித்தார். அதன் நினைவாக 3 நிமிடத்தில் அர்த்தநாரீஸ்வரர் வந்து தரிசனம் தருவார். பின்பு உடனே மலையில் 6 மணிக்குத் தீபம் ஏற்றுவர். அப்பொழுது "அண்ணாமலையாருக்கு அரோகரா" என்று முழக்கம் இடுவர்.

கார்த்திகை தீபத்தன்று மலைவலம் வருதல் மிகவும் சிறப்பானது. அந்நாளில் வலம் வருதல் அவர்களுக்குப் பாவவிமோசனம் நிச்சயம் கிடைக்கும். கர்ம வினைகளைப் போக்கும். என்பது அந்நகர மக்களின் நம்பிக்கை.

#கார்த்திகை தீப சொக்கபனை:

அனைத்து ஆலயங்களிலும் சிறப்பு பூஜை தடைபெற்று, சொக்கபனை கொளுத்தும் நிகழ்ச்சி நடைபெறும். சுட்டகப்பனை எனும் சொல்லே சொக்கபனையாக மருவியுள்ளது. சுட்டகம் என்பது வறட்சி, உலர்ந்த தென்னை பனை, கமுகு, வாழை இவற்றின் தண்டினை தீபதண்டமாக ஆலயங்களில் பனை மற்றும் தென்னை ஓலைகளால் சுட்டகப்பனை எனும் சொக்கப்பனையில் அக்னி மூட்டி, எரியும் ஜுவாலையில் ஜோதி சொரூபமாக இறைவனை வழிபடுவதாக வரலாறு இருந்து வருகிறது.

திருக்கார்த்திகை திருவிழா கொண்டாடப் படுவதின் நோக்கம் “நான்” அகந்தையுடன்தான் மனிதர்கள் வாழ்கின்றனர். நமக்கும் மேலாக ஒருவன் இருக்கிறான். ஆணவத்துடன் இருந்தால், நமக்கு அவன் புத்தி புகட்டுவான் என்ற அரிய தத்துவத்தை விளக்க இந்த விழா எடுக்கப்படுகிறது.

இப்படியாக நாம் கார்த்திகை தீப விழாவன்று விளக்கேற்றி நாம் மட்டும் நன்றாக வாழ வேண்டும் என்று இறைவனிடம் வேண்டிக் கொள்ளாமல், இந்த உலகத்தில் உள்ள அனைத்து ஜீவராசிகளும் எந்த கஷ்டமும் இன்றி வாழ இறைவனை வேண்டி இந்த கார்த்திகை தீபத்தை சந்தோஷமாக கொண்டாடி மகிழ்வோம்.

ஓம் நமசிவாய 
படித்து பகிர்ந்தது 
இரா இளங்கோவன் 
நெல்லிக்குப்பம். 

Followers

சென்னையின் நவக்கிரகத் ஒன்பது தலங்கள்:

 சென்னையின் நவக்கிரகத் தலங்கள்:  சென்னையைச் சுற்றியுள்ள இந்தப் புனிதமான ஒன்பது ஆலயங்கள் ஒரே நாளில் நவக்கிரகங்களின் அருளைப் பெற ...