Tuesday, June 3, 2025

தஞ்சாவூர் பெரிய கோயில் கோபுரத்தில் சங்கு சக்கரம் ஏந்திய நடராஜர்.

சங்கு சக்கரம் ஏந்திய நடராஜர்
சக்ரதாரிக்கே சக்ர தானம் செய்தவர் சிவபெருமான். 

மகேஸ்வரனுக்கு ஐந்து முகங்கள் உண்டு. அவை சத்யோஜாதம், அகோரம், வாமதேவம், தத்புருஷம் மற்றும் ஈசானம்.

ஒவ்வொரு முகத்திலிருந்தும் ஐந்து சிவ வடிவங்கள் தோன்றின. 5 x 5 = 25 மூர்த்திகள் - மகேஸ்வர வடிவங்கள் என்று அழைக்கப்படும்.

அந்த மகேஸ்வர வடிவங்கள் இருபத்து ஐந்தினுள் ஒன்று சக்ரதான மூர்த்தி. மஹாவிஷ்ணுவுக்கு சுதர்சனம் எனும் சக்ரத்தை அருளியவர் சக்ரதான மூர்த்தி.

மகாவிஷ்ணுவின் சக்கராயுதத்தை சலந்தரன் என்ற அரக்கன் பறித்துச் சென்று விட்டான். 

அவர் பரமசிவனிடம், சக்ராயுதத்தை மீட்டுத்தர வேண்டினார். 

பூலோகத்தில் வீழிச்செடிகள் அடர்ந்த இடத்தில் தான் இருப்பதாகவும், அங்கு தினமும் பூஜை செய்தால் சக்ராயுதம் கிடைக்கும் என்றும் அருளினார். 

விஷ்ணுவும் திருவீழிமிழலை தலத்தில் தனது பெயரால் ஒரு தீர்த்தம் உண்டாக்கி, அதிலிருந்து சிவனுக்கு அபிஷேகம் செய்து ஆயிரம் தாமரை மலர்களால் ஈசனை வழிபாடு செய்து வந்தார். 

ஒருநாள் சிவனின் திருவிளையாடலால், சிவபூஜைக்கான ஆயிரம் தாமரையில் ஒன்று குறைந்தது. 

அந்த ஒரு தாமரைக்கு பதில் விஷ்ணு தன் கண்ணையே ஆயிரமாவது மலராக தந்தார். 

இப்பூஜைக்கு மகிழ்ந்த சிவன், சலந்தரனை வதம் செய்து, சக்கராயுதத்தை கொடுத்தருளினார். 

இராஜராஜசோழ‎ன்‎ அமைத்த தஞ்சைப் பெரிய கோயிலில் உள்ள வெற்றிவேல் முருக‌‎ன் சன்னிதியில் உள்ள தூணில், நடராஜர் சிற்பம் - கைகளில் உடுக்கை, தீயகலுக்குப் பதிலாக சங்கு மற்றும் சக்கரத்தை ஏந்தியுள்ளதாக அமைந்துள்ளது. மிக அரிய சிற்பம். 

பாம்பின் மீது தாண்டவம் ஆடுவது போல் அமைந்துள்ளது.

ஓம் நமசிவாய 
படித்து பகிர்ந்தது
 இரா இளங்கோவன் 
நெல்லிக்குப்பம். 

தொழுநோயால் பாதிக்கப்பட்டவர்கள் வழிபாடு செய்யும் சற்குணலிங்கேஸ்வரர்.

*சற்குணலிங்கேஸ்வரர் (கருக்குடிநாதர்)திருக்கோயில்*, கருக்குடி, மருதாநல்லூர் கும்பகோணம் வட்டம். தஞ்சாவூர் மாவட்டம்.
இத்தல இறைவன் மணலால் ஆன சுயம்பு லிங்கமாக அருள்பாலிக்கிறார்.சிவனின் தேவாரப்பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் இது 132 வது தேவாரத்தலம் ஆகும்.   

திருஞானசம்பந்தர் பாடல் பெற்றது.

தேவாரப்பாடல் பெற்ற காவிரி தென்கரைத்தலங்களில் இது 69வது தலம்.
தொழுநோயால் பாதிக்கப்பட்டவர்கள் வழிபாடு செய்தால் பலன் நிச்சயம்.

கிழக்கு நோக்கிய கோயில். கருவறையில் உள்ள சிவலிங்கம் மிகவும் சிறியது. மண்ணால் செய்யப்பட்டது. மண்ணினை கையால் பிடித்து செய்த சுவடுகள் தெரிகிறது. அரையடி உயர சிறிய ஆவுடையார். பீடம் கல்லால் அமைக்கப்பட்டுள்ளது.

பிரகாரத்தில் வலம்புரி விநாயகர், நவகிரகம், சூரியன், சந்திரன், லிங்கோத்பவர், முருகன் உள்ளனர்.

ராமாயண காலத்தில் ராமபிரான் இலங்கைக்கு செல்லும் முன் இத்தலத்திற்கு வந்ததாக கூறப்படுகிறது.

குறித்த நேரத்தில் வழிபாடு செய்ய அனுமன் சிவலிங்கம் கொண்டு வர தாமதமானதால், ராமன் தன் அருகிலிருந்த மணலிலேயே இரண்டு கைகளாலும் லிங்கம் பிடித்து வழிபட்டார் என்றும் அதுவே தற்போதைய பிருதிவி லிங்கமாகும்.

அனுமன் கொண்டு வந்த லிங்கம் கோயிலின் இடப்புறம் உள்ள அனுமந்த லிங்கம் என்ற பெயரில் உள்ளது. இத்தலத்திற்கு மற்றொரு வரலாறும் உண்டு.

தனஞ்சயன் என்ற வணிகன் ஒருவனுக்கு தொழுநோய் ஏற்படுகிறது. மனம் வருந்திய அவன் இத்தல இறைவனை வேண்டி தொழுநோய் நீங்கப்பெற்றான்.

சிவன், அம்மன் இருவரும் கிழக்கு பார்த்து திருமண கோலத்தில் அருள்பாலிக்கின்றனர்.

இவ்வூரின் அருகே ஏனாதிநாயனார் அவதரித்த ஏனநல்லூர் உள்ளது. வீணா தட்சிணாமூர்த்தி உள்ளார்.

பிரம்மா, சற்குணன் என்ற அரசன் ஆகியோர் வழிபாடு செய்துள்ளனர். இதனால் இறைவன் சற்குணலிங்கேஸ்வரர் என அழைக்கப்படுகிறார்.

கும்பகோணத்திலிருந்து (5 கி.மீ.) மன்னார்குடி வழியில் இத்தலம்  உள்ளது. 

ஓம் நமசிவாய 
படித்து பகிர்ந்தது 
இரா இளங்கோவன் 
நெல்லிக்குப்பம். 

சுருட்டபள்ளி பள்ளிகொண்ட சிவன் சித்தூர்.

பள்ளிகொண்ட பெருமாள் தெரியும்; பள்ளிகொண்ட பரமேஸ்வரன் தெரியுமா?*_
ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் நாகலாபுரம் அருகே உள்ளது சுருட்டப்பள்ளி. இங்கு பள்ளிகொண்டீஸ்வரர் திருக்கோவில் இருக்கிறது.

மூர்த்தி, தலம், தீர்த்தம் ஆகிய மூன்றும் ஒருங்கே அமையப்பெற்றது இந்தத் திருத்தலம். பள்ளிகொண்டீஸ்வரர் ஆலயத்தில் உள்ள பெரும்பான்மையான மூர்த்திகள் குடும்ப சமேதராக காட்சி தருவது, இந்தக் கோவிலின் முக்கிய அம்சமாகும்.🍁

இந்த ஆலயத்தில் அருளும் பள்ளிகொண்டீஸ்வரர், சர்வ மங்களாம்பிகையின் மடியில் தலைவைத்து சயன கோலத்தில் காட்சி தருகிறார். பரந்தாமனை போலவே பரமேஸ்வரன் பள்ளிகொண்ட ஒரே கோவில் இது என்பது சிறப்பாகும்.🍁

இந்திரன் அமிர்தம் வேண்டி பாற்கடலை கடைய முற்பட்டான். திருமாலின் உதவியோடு தேவர்கள் ஒரு புறமும், அசுரர்கள் ஒரு புறமும் நின்று, வாசுகி என்ற பாம்பை கயிறாகவும், மந்திர மலையை மத்தாகவும் கொண்டு பாற்கடலை கடைந்தனர். இருபுறமும் பிடித்து இழுத்ததால், வாசுகி பாம்பு வலி தாங்க முடியாமல் விஷத்தை கக்கியது. இதை கண்டு அஞ்சிய தேவர்களும், அசுரர்களும் கயிலை நாதனான சிவனிடம் தஞ்சம் அடைந்து அனைவரையும் காக்க வேண்டினர்.🍁

ஈஸ்வரன் தன் அருகில் இருந்த சுந்தரரை அனுப்பி, விஷத்தை திரட்டி எடுத்து வரச் செய்தார். சுந்தரரும் பாற்கடலில் தோன்றிய மொத்த விஷத்தையும் ஒன்று திரட்டி, ஒரு கரு நாவல்பழம் போல செய்து சிவபெருமானிடம் கொடுத்தார். பரமேஸ்வரன் அந்த கொடிய நஞ்சினை வாயில் போட்டு விழுங்கினார். விஷம் உடலுக்குள் இறங்காமல் இருக்க, ஈசனின் கண்டத்தை (கழுத்தை) பிடித்தாள் உமாதேவி. இதனால் விஷம் கண்டத்திலேயே நின்று விட்டது. அதனால் தான் ஈசனை ‘நீலகண்டன்’ என்று அழைக்கிறோம்.🍁

விஷத்தை அருந்திய பின், உமையவளுடன் சிவபெருமான் கயிலாயம் புறப்பட்டார். வழியில் அவருக்கு களைப்பு ஏற்பட்டது. அதனால் அவர் ஓரிடத்தில் ஓய்வெடுத்தார். பார்வதி தேவியின் மடியில் தலை வைத்து களைப்பு நீங்க சயனித்தார். அந்த இடமே சுருட்டப்பள்ளி என்று சொல்லப்படுகிறது. இந்த ஆலயத்தில் பார்வதி தேவி ‘சர்வமங்களா’ என்ற திருநாமத்துடன் அருள்கிறார்.🍁

இந்த கோவிலில் பள்ளிகொண்டீஸ்வரர் தனி சன்னிதியில் காட்சி தருகிறார். இந்த ஆலயத்தில்தான், முதன் முதலில் பிரதோஷ வழிபாடு நடத்தப்பட்டதாகவும், அதன்பிறகே மற்ற சிவ ஆலயங்களில் பிரதோஷ வழிபாடு தொடங்கியதாகவும் ஒரு நம்பிக்கை உள்ளது. பள்ளிகொண்டீஸ்வரரை சுற்றி பிருகு முனிவர், பிரம்மா, மகாவிஷ்ணு, மார்க்கண்டேயர், நாரதர், சந்திரன், குபேரன், சூரியன், அகத்தியர், புலஸ்தியர், கவுதமர், தும்புரர், வசிஷ்டர், விசுவாமித்திரர், வால்மீகி, தேவேந்திரனோடு விநாயகர், வள்ளி- தெய்வானையுடன் முருகன் ஆகியோரும் அருட்காட்சி புரிகிறார்கள்.🍁

3 நிலை கொண்ட ராஜகோபுரத்தின் எதிரே, சுமார் 5 அடி உயர பீடத்தில் 5 அடி உயர நந்தீஸ்வரர் உள்ளார். இந்த கோவிலில் துவாரபாலகர்கள் கிடையாது. அதற்கு பதிலாக சங்கநிதி வசுந்தராவுடனும், பத்மநிதி வசுமதியுடனும் காட்சி தருகிறார்கள். உள்ளே சென்றால் நின்ற கோலத்தில் அன்னை மரகதாம்பிகை சிம்ம வாகினியாக காட்சி தருகிறார். கருவறைக்கு வெளியே அர்த்த மண்டபத்தில் வலது பக்கத்தில் கற்பக விருட்சம், இடது பக்கத்தில் காமதேனு பசு காணப்படுகிறது.🍁

ஏகபாத திரிமூர்த்தி :

மரகதாம்பிகை சன்னிதி முன்பாக சாளக்கிராம கணபதியும், வள்ளி-தெய்வானையுடன் சுப்பிரமணியரும், இடது புறம் அப்பர், சுந்தரர், திருஞானசம்பந்தர் ஆகிய நாயன்மார்களின் திருவுருவச்சிலைகளும், வால்மீகி மகரிஷியின் சிலையும் உள்ளன. அதற்கு அடுத்து ஏகபாத திரிமூர்த்தி காட்சி அளிப்பது அரிய ஒன்றாகும். தான் ஒருவராய் படைத்தல், காத்தல் தொழில் புரிபவராக பிரம்மா, விஷ்ணுவை தன்னிடத்தே கொண்ட சிவவடிவமே ‘ஏகபாத திரிமூர்த்தி’ ஆவார். பிரம்மா நான்கு முகங்களுடன் அன்ன வாகனத்துடனும், சிவன் நந்தியுடனும், விஷ்ணு கருடாழ்வாருடனும் ஒரே கல்லில் மிக அழகான சிற்பமாக காட்சி அளிக்கிறார்கள்.🍁

வரசித்தி விநாயகர் தனி சன்னிதியில் காட்சி தருகிறார். தேவர்களுக்கு ஏற்பட்ட வெப்ப நோயை தணிப்பதற்காக, சிவன் தனது கையில் அக்னியுடனும், மூன்று தலை, மூன்று கால்கள், மூன்று கைகளுடன் எடுத்த அவதாரமே ஜுரஹரமூர்த்தி. இந்த சிலை ஒரே கல்லில் செதுக்கப்பட்டுள்ளது.

மரகதாம்பிகை சன்னிதி அருகில் ராஜராஜேஸ்வரி, மகாலட்சுமி, சரஸ்வதி, அன்னபூரணி ஆகிய தேவிகளின் சிலைகள் உள்ளன. கையில் கிளியுடன் அழகிய வடிவில் ஞானதுர்க்கை காட்சி தருகிறார். வடக்கு பிரகாரத்தில் சுப்பிரமணியர் தனது இரு தேவியர்களுடன் தென்திசை நோக்கி நின்ற கோலத்தில் அருள்கிறார். ராஜயோகத்தை தரும் ராஜமாதங்கி சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. இதற்கு கீழே ஒரு சுரங்கப்பாதை காணப்படுகிறது.🍁

அதிகார நந்தி :            பிரம்மாவுக்கு கீழே தனி சன்னிதியில் சண்டிகேஸ்வரரை தரிசிக்கலாம். சப்த கன்னிமார்கள் 7 பேரும் தங்களது வாகனங்களுடன் காட்சி தருகின்றனர். இங்கு பிரதோஷ மூர்த்தி வண்ணப்படமாக தனி சன்னிதியில் உள்ளார். இந்த சன்னிதியின் வெளிப்புறத்தில் வேணுகோபாலசுவாமி தனது கரங்களில் புல்லாங்குழலுடன் காட்சி தருகிறார். மற்றொரு பக்கம் வேறெங்கும் காண முடியாத வகையில், நந்தீஸ்வரர் கைகூப்பிய நிலையில் அதிகார நந்தியாக அருள்கிறார்.🍁

கிழக்கு பக்கத்தில் ஒரு சன்னிதியில் சீதாதேவி, ராமர், லட்சுமணன் அருள்கின்றனர். அவர்களுக்கு அருகில் பரதன், சத்ருக்னர், ஆஞ்சநேயர் உள்ளனர். இதை கடந்து சென்றால் ராமலிங்கேஸ்வரர், பர்வத வர்த்தினியுடன் தனி சன்னிதியில் காட்சி தருகிறார். அருகில் வால்மீகிஸ்வரர் சிலை உள்ளது.

பல கோவிலில் பலவிதமான தட்சிணாமூர்த்தியை தரிசிக்கலாம். ஆனால் இங்கு தட்சிணாமூர்த்தி தனது மனைவியுடன் காட்சி தருகிறார். இது வேறு எந்த கோவிலிலும் காணக்கிடைக்காத அற்புதம் ஆகும். இந்த தட்சிணாமூர்த்தியை வணங்கினால் ஞானம், கல்வி, குழந்தைபேறு, திருமண பாக்கியம், மாங்கல்ய பாக்கியம் கைகூடும் என்பது நம்பிக்கை.🍁

பிரதோஷ வழிபாடு :

இந்த கோவிலில் பிரதோஷ கால வழிபாடு பிரசித்தி பெற்றது. மேலும் திருவாதிரை, மகா சிவராத்திரி, ஆங்கிலம், தமிழ், தெலுங்கு வருடப் பிறப்பு நாட்கள், நவராத்திரி தினங்களில் இக்கோவிலில் சிறப்பு பூஜை நடக்கிறது. தினமும் காலை 6 மணி முதல் பகல் 12 மணி வரையும், மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரையும் கோவில் நடை திறந்திருக்கும்.🍁

அமைவிடம் :

சென்னை கோயம்பேடு பஸ் நிலையத்தில் இருந்து புத்தூர் வழியாக செல்லும் அனைத்து பஸ்களும் சுருட்டப்பள்ளியில் நின்று செல்லும். நாம் பஸ்சைவிட்டு இறங்கினாலே, பள்ளிகொண்டீஸ்வரர் கோவிலின் கோபுரம் நம்மை வரவேற்கும்.🍁

1977-ம் ஆண்டு காஞ்சி பெரியவர் விஜயம் செய்தபோது, இக்கோவில், விக்கிரகம் பற்றிய சிறப்புகளை எடுத்துக் கூறி அருளாசி வழங்கினார். பள்ளி கொண்டிருக்கும் பரமேஸ்வரின் திருவுருவம் அபூர்வம் என்றும், தாம் கண்ட கண்கொள்ளாக் காட்சியை அனைவரும் கண்டு தரிசிக்க வேண்டும் என்றும் அனுக்கிரகம் செய்தார். சுருட்டப்பள்ளி கோவிலில் பதினைந்து நாட்கள் தங்கியிருந்தளிறைவனை தியானித்து தவம் இருந்தார். பள்ளி கொண்டீஸ்வர பெருமானை தரிசித்த சுவாமிகள் அப்போதே சுலோகம் ஒன்றை இயற்றி அர்ப்பணம் செய்தார்.🍁

தேவ்யூரு ஸயனம் தேவம்

ஸ்ரீபாணம் ஸ்வார்ந்த விக்ரஹம்

ப்ருக்வாதி வந்திதம் தேவம்

லோகஷேமார்த்த மாஸ்ரயே

அதன் பொருள் வருமாறு: “விஷத்தை உண்ட களைப்பில் அம்பாளின் மடியில் ஈஸ்வரன் பள்ளி கொண்டிருக்கிறார். உலக நன்மைக்காக விஷம் உண்ட சிவனை காண தேவரும், பிருகு முதலிய ரிஷிகளும் வந்திருக்கிறார்கள். சயனத்தில் உள்ள ஈசுவரனை வணங்கி பயன் பெறுவோம்”. காஞ்சி பெரியவரின் பாதங்கள் பட்டவுடன் சுருட்டப்பள்ளி என்னும் இத்திருத்தலம் வெளியுலகிற்குத் தெரியவர ஆரம்பித்தது. 

ஓம் நமசிவாய
 படித்து பகிர்ந்தது 
இரா இளங்கோவன் 
நெல்லிக்குப்பம். 

வேண்டிய மனவலிமையை அருள்வார் கீழப்பாவூர் ஸ்ரீலட்சுமி நரசிம்மர்.

மகாவிஷ்ணுவின் அவதாரங்களுள் தனிச்சிறப்பு மிக்கது நரசிம்ம அவதாரம். இதர அவதாரங்கள் எல்லாம் அதர்மத்தை அழித்து தர்மத்தை காக்க எடுக்கப்பட்டவை. நரசிம்மம் மட்டுமே பக்தனுக்காகவே எடுக்கப்பட்டது.
கன்றுக்குட்டியானது ஓரிடத்தில் இருந்துகொண்டு தன் தாயை காணாமல் ‘அம்மெ’ என்று கத்தினால், அவ்வொலி தன் செவிப்பட்ட மாத்திரத்தில் தாய்ப்பசு வேகமாக ஓடி வந்து கன்று பக்கத்தில் வந்து நிற்பது போலவே ‘நரசிம்மா!’ என்றழைத்தால் அக்கணமே தேடிவந்து அருள்புரிவான் என்று நரசிம்மரின் பெருமையை எடுத்துக் கூறுகிறார் பொய்கை ஆழ்வார்.

நரசிம்மம், மகாவிஷ்ணுவின் நான்காவது அவதாரம் ஆகும். நான்காவது என்பது தர்மம், அர்த்த, காம நிலைகளைக் கடந்து மோட்சநிலையை அடைவதனைக் குறிக்கும். மோட்சத்தையே சுலபமாகத் தரும் நரசிம்மர், பக்தர்களின் எல்லா வேண்டுதல்களையும் உடனே வழங்கிடுவார். சிங்க முகமும், மனித உடம்பும் கலந்த மாறுபட்ட வடிவில், அகோபிலம் என்னும் மிகஉயர்ந்த மலைப்பகுதியில், பவநாசினி நதிக்கரையில் மகாவிஷ்ணு நரசிம்மராக அவதாரம் எடுத்தார். யுகங்களுள் முதலாவதான கிருதயுகத்தில் இந்த அவதாரம் நிகழ்ந்தது. இந்த க்ஷேத்திரம் தற்போதைய ஆந்திர மாநிலத்தில் உள்ளது.

பிரகலாதனைப் போன்று ஆழ்ந்த பக்தியும், மிகுந்த உடலுறுதியும் இருந்தால் மட்டுமே உயர்ந்த மலைப்பகுதியில், காட்டுக்குள் உள்ள இந்த க்ஷேத்திரத்துக்குச் சென்று நரசிம்மரை தரிசனம் செய்யமுடியும். ஆனால் எவ்வித சிரமமும், பயமும், தயக்கமும் இன்றி சுலபமாக தரிசனம் செய்வதற்காக, சமதளமான வேளாண்மைப்பகுதியான கீழப்பாவூரில் நரசிம்மர் நிரந்தரமாகக் குடிகொண்டுள்ளார்.

பிரகலாதன் என்ற பக்தனுக்காகவே நரசிம்மர் அவதாரம் நிகழ்ந்தது. இச்சிறுவனின் தாத்தா காசியப்பர். இவர் சப்த மகரிஷிகளுள் ஒருவர். நரசிம்ம அவதாரம் நிகழ்ந்து, பூமியில் நீடித்திருந்தது வெறும் இரண்டு நாழிகை மட்டுமே. அப்போது காசியப்பரால் நரசிம்மரை தரிசனம் செய்ய இயலாமல் போயிற்று.

ஆகவே தன் பேரன் பிரகலாதனுக்காக மகாவிஷ்ணு எடுத்த நரசிம்ம சொரூபத்தை தரிசனம் செய்ய விரும்பி தவம் இருந்தார். அவருடன் வருண பகவான், சுகோ‌ஷன் என்ற முனிவர் ஆகியோரும் தவமிருந்தனர்.

முனிவர்களின் தவம் ஆயிரக்கணக்கான ஆண்டுகள் நீடித்தது. அதன் பலனாக, மகாவிஷ்ணுவின் அசரீரி ஒலித்தது. “பொதிகைமலையில் மணிமுக்தா தீர்த்தத்தில் நீராடி, அங்கிருந்து 40 கல் தொலைவில் வடக்கே உள்ள சித்ரா நதிக்கரையில் தவத்தைத் தொடருங்கள். நரசிம்மர் தரிசனம் காண்பீர்கள்!” என்பதே அசரீரி வாக்கு.

புனித நீராடியபின், பகவான் குறிப்பிட்ட இடத்திற்குச் சென்று தவத்தில் ஆழ்ந்தார். ரிஷிகளின் தவத்திற்கு மகிழ்ந்து தம் இதயக்கதவைத் திறந்தார் மகாவிஷ்ணு. அக்கணமே, ஸ்ரீதேவி, பூதேவிகளுடன் மகா உக்ரமூர்த்தியாக, 16 திருக்கரங்களுடன் நரசிம்மர் வடிவில் அவதார சொரூபியாகக் காட்சி கொடுத்தார். சிந்தை குளிர நரசிம்மரை தரிசனம் செய்து மகிழ்ந்த ரிஷிகள், “பக்தப் பிரபுவே! தாங்கள் இந்த க்ஷேத்திரத்தில் வீற்றிருந்து பக்தர்களின் விருப்பங்களை நிறைவேற்றி அருள வேண்டும்” என்று வேண்டியதும் “அப்படியே ஆகட்டும்!” என்றபடி நரசிம்மர் அர்ச்சாவதாரத் திருமேனியில் நிரந்தரமாகக் குடிகொண்டுவிட்டார்.

நரசிம்மர் நிரந்தரமாகக் குடிகொண்டுவிட்டதன் எதிரொலியாக தினமும் சாயரட்சை வேளையில் சிங்க கர்ஜனை ஒலித்துக்கொண்டே இருந்துள்ளது. இதனால் நரசிம்மர் ஆவேசமாக இருப்பதாகக் கருதிய பக்தர்கள் அவரது சந்நிதி முன்பு தெப்பக்குளம் ஏற்படுத்தியும், முறையாக பால், இளநீர் அபிஷேகம் செய்து வழிபடத் தொடங்கியதும் சிங்க கர்ஜனை நின்றுவிட்டதாம்.

சுமார் 300 ஆண்டுகளுக்கு முன்புவரை இந்த சிங்க கர்ஜனையை இப்பகுதி வாழ் மக்கள் கேட்டு வந்துள்ளனர். இந்த தகவல் செவிவழிச் செய்தியாக இன்றும் உலாவி வருகிறது.

ரிஷிகளுக்குக் காட்சி கொடுத்த இடத்திலேயே நரசிம்மர் நிரந்தரமாகக் குடிகொண்டிருப்பது வேறெங்கும் காணஇயலாத சிறப்பாகும். ரிஷிகள் தவம்புரிந்த நரசிம்மர் காட்சியளித்த புனித க்ஷேத்திரம்தான் கீழப்பாவூர்.

மன்னர்கள் காலத்தில் இவ்வூர் க்ஷத்திரிய சிகாமணி நல்லூர் என்று அழைக்கப்பட்டுள்ளது. பழுதடைந்ததை செப்பனிட்ட கல்திருப்பணி ரீதியாக 1,100 ஆண்டுகளுக்கு முந்தைய இவ்வாலயம், தலபுராண ரீதியாக, நான்கு யுகங்களுள் முதலாவதான கிருதயுகத்தைச் சார்ந்தது.

அக்காலத்தில், ராணுவத் தலைமை இடமாக விளங்கிய  கீழப்பாவூரில் இருந்த ‘முனைஎதிர் மோகர்’ படைப்பிரிவிலுள்ள 2 ஆயிரம் வீரர்களின் துணைகொண்டு, சிற்றரசுகளை வென்று பேரரசனாக முடிசூட்டியுள்ளான்  முதலாம் மாறவர்மன் திரிபுவன் சக்கரவர்த்தி விக்கிரம பாண்டிய மன்னன். தாம் ஆட்சிக்கு வந்த ஏழாம் ஆண்டில் இத்திருக்கோவிலுக்கு நித்யபூஜைகளுக்கு நிலங்கள் வழங்கியுள்ளான்.

இம்மன்னன் இங்குள்ள பெருமாளுக்கு ‘முனைஎதிர் மோகர் விண்ணகர்’ என்னும் பெயரும் உண்டு. ‘முனைஎதிர் மோகர்’ என்பதற்கு ‘போரில் எதிரிகளை வெல்வதில் விருப்பம் உடையவர்’ என்பது பொருளாகும்.

போரில் வெற்றி பெற்றதன் நினைவாக நரசிம்மர் கோவில் அருகிலேயே 1,700 ஏக்கர் நன்செய் நிலத்தை வளப்படுத்தும் 260 ஏக்கர் பரப்பளவு கொண்ட குளம் ஏற்படுத்தி, அதற்கு ‘முனைஎதிர் மோகப்பேரேரி’ என்று பெயர் சூட்டியுள்ளான்.

அரசு வெளியிடும் பொன், வெள்ளி, செம்பு ஆகிய உலோக நாணயங்கள் வெளியிடும் பகுதி என்பதையும், போருக்குத் தேவையான ஆயுதங்கள் செய்யப்பட்ட பகுதி இவ்வூர் என்பதையும் இங்குள்ள அக்கசாலை விநாயகர் கோவில் நினைவூட்டுகிறது. ஆகவே இங்கு நரசிம்மரை வழிபாடு செய்தால், எதிரிகளின் சூழ்ச்சிகளை முறியடித்து, நியாயமாக கிடைக்க வேண்டிய அரசாளும் யோகம் கிட்டும் என்பது ஐதீகமாக உள்ளது.

இந்த க்ஷேத்திரத்தில் மேற்குத்திக்கில் நரசிம்மர் சந்நிதி முன்பாகவே அவரது சினத்தைத் தணித்த தீர்த்தக்குளம் அமைந்துள்ளது தனிச்சிறப்பு. கங்கா நர்மதா ஸ்ரீநரசிம்மப் புஷ்கரணி என அழைக்கப்படும் இந்த தீர்த்தத்தின்மீது நரசிம்மரின் அருள்பார்வை உள்ளது. இந்த தீர்த்தத்தை தலையில் தெளித்துக்கொண்டால் வேண்டாத கோபம், கவலை, பதற்றம் நீங்கி மனஅமைதி ஏற்படும்.

ஒரு ஆலயத்திலுள்ள சுவாமிக்கு எந்தளவு ஸான்னித்யம் (சக்தி) உண்டோ அதே அளவு ஸான்னித்யம் அங்குள்ள தீர்த்தத்துக்கும் உண்டு என சாஸ்திரங்களில் கூறப்பட்டுள்ளன. எனவே இங்கு சுவாதி, திருவோணம், பிரதோ‌ஷம், வளர்பிறை சதுர்த்தசி, செவ்வாய், சனி ஆகிய நாட்களில் ‘தீர்த்த வல வழிபாடு’ நடக்கிறது.

பழுதடைந்த இந்த திருக்குளம் திருப்பணி செய்யப்பட்டு, புதுப்பிக்கப்பட்டுள்ளது. சுவாதி பூஜை இங்கு சிறப்பானது. ஒவ்வொரு மாதமும் சுவாதி நட்சத்திரத்தன்று 
16 வகை மூலிகை ஹோமம் உள்பட ஐவகை ஹோமமும், தொடர்ந்து பால், இளநீர், திரவியப்பொடிகளால் சிறப்பு அபிஷேக ஆராதனைகளும் நடக்கின்றன.

சுவாதி பூஜையில் தொடர்ந்து கலந்து கொண்டால் கடன் தொல்லை நீங்கி செல்வம் சேரும். வியாபாரம் பெருகும். திருமணத்தடை அகல, நீதிமன்ற வழக்கு முடிவுற, நீண்டகால நோய் தீர, கடன் தொல்லை நீங்க, இங்கு பரிகாரம் செய்து கொள்ளலாம். சுவாதி நட்சத்திரக்காரர்களுக்குரிய தலமாகவும் இது திகழ்கிறது.

நரசிம்மரை வழிபடுவதற்கு செவ்வாய், புதன், சனி ஆகிய நாட்களும் மாலை வேளையும் உகந்தவை. நரசிம்மருக்கு மிகவும் பிரியமான பானகம் படைத்து வணங்கினால் முழு அருளுக்குப் பாத்திரமாகலாம் என்று மங்களகிரி புராணம் கூறுகிறது. இங்கு நரசிம்மர் உக்ரமாக உள்ளார்.

உக்ரம் என்றால் மிகுந்த ஆற்றலுடன் என்று பொருள். ஆகவே இங்கு வழிபட்டால் 1000 மடங்கு பலன் அதிகம் கிட்டும் என்பது ஐதீகம்.

கருங்கல் புடைப்புச்சிற்பத்தில் வீற்றிருக்கும் இந்த நரசிம்மரை வழிபடுவோருக்கு போன, இந்த ஜென்மத்தில் அறிந்தும் அறியாமலும் செய்த பாவங்கள் நீங்கி முக்தி கிட்டும். இப்பிறவியில் உலகியலான எல்லா நன்மைகளும் உண்டாகும்.

தட்சிண அகோபிலம் என அழைக்கப்படும் இந்த க்ஷேத்திரத்தில், நரசிம்மர் திரிபங்க நிலையில், ஹிரண்ய சம்ஹாரம் செய்யும் திருக்கோலத்தில், 16 திருக்கரங்களுடன் எழுந்தருளியுள்ளார். சூரியனும் சந்திரனும் வெண்சாமரம் வீசி சாந்தப்படுத்திக் கொண்டிருக்க, தலையில் கிரீடத்துடன் காட்சிதரும் நரசிம்மரை நாரதர், பிரகலாதன், அவனுடைய தாய், தாத்தா காசியப்ப மகரிஷி ஆகியோர் சரணடைந்து வணங்கி நிற்க, அவர்களை ஆசிர்வதித்துக் கொண்டிருக்கிறார் நரசிம்மர்.

வழிபடும் முறை : நரசிம்மர் தீர்த்தத்தைத் தலையில் தெளித்துக்கொண்ட பிறகு, கன்னிமூல கணபதியை வணங்கி, வேங்கடாஜலபதி நரசிம்மரை 16 முறை பிரதட்சணமாக வலம்வந்து வழிபாடு செய்து, அருகிலுள்ள வாலி பூஜை செய்து வழிபட்ட சிவகாமி அம்மாள் சமேத திருவாலீஸ்வரரை வணங்கினால்தான் க்ஷேத்திர வழிபாடு நிறைவு பெற்று, முழுப்பலனும் கிட்டும்.

சுவாதி நட்சத்திர நாளில் இங்கு வந்து வழிட்டால், இழுபறியான வழக்குகள், திருமணதடை,  தம்பதிகளின் கருத்துவேறுபாடு, கடன் பிரச்சனைகள், தீராத நோய்கள், பில்லி, சூன்யம் போன்ற தீவினைகள் ஆகிய அனைத்தும் விலகும் என்பது நம்பிக்கை. ஆலயத்தின் அருகிலேயே உள்ள நரசிம்ம தீர்த்தம் மிகவும் மகத்துவம் வாய்ந்தது.

இத்தலத்தில், ஸ்ரீ நரசிம்மரின் மார்பில் வீற்றிருக்கும் ஸ்ரீலட்சுமிதேவியை வணங்கினால், வீட்டில் செல்வ செழிப்பு உண்டாகும். பணக்கஷ்டம் நீங்கும் என்பது ஐதீகம். நரசிம்மருக்கு பால், பானகம், இளநீர்  ஆகியவை நைவேத்யம் செய்து வழிபட , நாம் செய்த பிரார்த்தனைகள் அனைத்தும் நிச்சயம் நிறைவேறும்.

இத்தலம் தென்காசி-திருநெல்வேலி நெடுஞ்சாலையிலுள்ள பாவூர் சத்திரத்திலிருந்து 2 கி.மீ. அருகில் உள்ளது.

"ஸ்ரீலட்சுமி நரசிம்மரே போற்றி" என்று சொல்லி ஒரு மலரை சமர்பித்தாலே, நாம் வேண்டும் பலன் கிட்டும். வேண்டிய மனவலிமையை அருள்வார் கீழப்பாவூர் ஸ்ரீலட்சுமி நரசிம்மர்.

ஓம் நமசிவாய
 படித்து பகிர்ந்தது 
இரா இளங்கோவன்
 நெல்லிக்குப்பம். 

Monday, June 2, 2025

சென்னை மாங்காடு காமாட்சி அம்மன்

*மாங்காடு காமாட்சி அம்மன்*  
பூந்தமல்லியிலிருந்து சுமார் 5 கி.மீ. தொலைவில் உள்ளது, இத்தலம். கருவறையில் ஆதிசங்கரரால் அஷ்டகந்தங்கள் எனும் எட்டுவகை மூலிகைகளால் ஆன அர்த்தமேரு பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. 

ஒரு கையில் கிளியை ஏந்தி, ஒரு கையை தொங்கவிட்ட நிலையில் திரிபங்கமாக, அதாவது ஒயிலாக, மூன்றாக வளைந்த நிலையில் காட்சி தரும் அம்பிகையின் எழிலுருவம் மனதை கொள்ளை கொள்கிறது. 

*‘நிம்மதி தரும் சந்நதி, நீயே எனது நவ நிதி’* என பக்தர்கள் இந்த அன்னையை சரணடைகின்றனர். 

ஐந்தணலில் நின்று அருந்தவம் புரிந்து சங்கரனை மணந்த சங்கரியை ஆலய பிராகாரத்தில் தரிசிக்கலாம். ஆறு வாரம் தொடர்ந்து அன்னையைத் தொழ சங்கடங்கள் மறைகின்றன.
ஆதிசங்கரர், தன் திக்விஜயத்தின்போது தொண்டைமண்டலத்திலுள்ள அந்த மாமரக் காட்டுக்குள் புகுந்தார். அந்தக் காட்டின் மையப்பகுதி தகித்துக்கொண்டிருந்தது. 

அது வெறும் அக்னிச் சூடாக இல்லாமல் ஒரு சக்தியின் உக்கிரமாய், வெப்பம் கமழ்ந்திருந்தது. ஈசன் உமையோடு கயிலையில் வீற்றிருந்தார். சக்தியான பார்வதி ஈசனின் கண்களை விளையாட்டாய் பொத்தினாள். 

ஈசன் கோபமானார். தன் கண்கள் மூடப்பட்டதால் பிரபஞ்சமே இருளில் மூழ்கிய வினை உணர்ந்து கோபம் கொண்டார் ஈசன். ‘என் பணியை விளையாட்டாக நினைத்த நீ பூலோகத்திற்குப் போய் தவம் செய். 

என் உண்மையான சொரூபம் புரிந்து கொள். அலட்சியம் அறுத்து, அகங்காரம் அழித்து வா,’ என்றார்.  
   
பார்வதிதேவி தன் தவறு புரிந்து பரிதவித்தாள். ஈசனோடு மீண்டும் இணைய வேண்டுமே என்று பெருங்கவலை கொண்டாள். பூலோகத்தில் அடர்ந்த மாமரங்கள் சூழ்ந்த காட்டினுள் மெல்லிய பூவாய் மென்மையாய் வந்திறங்கினாள். 

அங்கிருந்த ஒரு மாமரத்தடியில் நின்றாள். மண் குவித்தாள். அதை ஐந்து பாகமாக்கினாள். அதில் குழிவாய் பள்ளம் செய்து சுற்றிலும் கரை அமைத்து யாக குண்டமாக மாற்றினாள். மாமரத்தைச் சுற்றிலும் நிறுவினாள். ஈசனை நெஞ்சத்தில் நிறுத்தினாள். 

ஐந்து குண்டங்களையும் உற்றுப் பார்க்க குண்டத்தினுள் விழி ஜோதியினின்று தெறித்த சுடர் சட்டென்று வளர்ந்து அந்த மாமரத்தையே வளைத்துக் கொண்டது. புறத்தில் ஒளிர்ந்த தீ அவள் அகத்தினுள்ளும் வைராக்கியம் எனும் பெருந்தீயாய் வளர்ந்தது. 

நடுக்குண்டத்தில் தனது இடதுகால் கட்டை விரலை ஊன்றி  நின்றாள். வலதுகாலை இடது தொடையின்மேல் பதித்து மடித்து  தூக்கினாள். இடதுகை நாபிக்கமலத்திற்கு அருகேயும், வலது கை ஜபமாலையோடு தன் சிரசிற்குமேல் முத்திரைகாட்டி நின்றாள். 

அம்மை ஈசனின் சொரூபத்தை அகத்தில் நிறுத்தினாள். அந்த தவத்தின் உக்கிரம் காட்டையே வெம்மையாக்கியது; கயிலைநாதனையும் அசைத்தது. கயிலைநாதன் கருணை கொண்டான். 

அம்மைமுன் தோன்றி, அவளை மணம் புரிய காஞ்சிக்கு வரச்சொன்னான். அதேபோல் மணம் புரிந்து தன் அகம் சேர்த்துக் கொண்டார். 

ஆனால், மாங்காட்டில் அந்த பஞ்சாக்னியின் உக்கிரம் தணிக்கப்படாமல் சென்றதால், அம்பாளின் இருப்பு கனன்ற வெப்பமாகவே இருக்கிறது. அதை குளிர்வித்து காமாட்சி அம்மனின் அருளை பருகச்செய்ய முன்வந்தார் ஆதிசங்கரர். 

அஷ்டகந்தம் எனும் எட்டு மூலிகைகளால் ஆன ஸ்ரீஅர்த்தமேரு ஸ்ரீசக்ரத்தை அங்கே பிரதிஷ்டை செய்தார். பிழம்பாய் இருந்த அம்மனின் சாந்நித்யத்தை அமுதமாய் பொழியச்செய்தார்.  

இன்றும் இத்தலம் மாங்காடு என்றே அழைக்கப்படுகிறது. காமாட்சி அம்மன் நிரந்தரமாய் அவ்விடத்தில் அமர்ந்தாள். 

காமாட்சி மோனநிலையில் தவக்கோலத்தில் இருப்பதால் மூலஸ்தானத்தில் சாந்தமே உருவான ஆதிகாமாட்சியை சுக்ராச்சாரியார் பிரதிஷ்டை செய்தார். தபஸ் காமாட்சி, சிலை உருவில் அருள் பாலிக்கிறாள்.      - (வேலாயுதம் செ)

மூலத்தான அம்பாள் முகத்தில் கருணை ததும்பி வழிகிறது. நாம் கேட்காமலேயே நம் வேண்டுதல் நிறைவேறும் மகத்தான சந்நதி அது. அம்பாள் முன்பு வெறுமே கைகூப்பி நின்றால் போதும், நம் வாழ்வுதனை அவள் தன் கையில் ஏந்தி பக்குவமாகப் பாதுகாக்கிறாள். 

காமாட்சி முதலில் மாங்காட்டில் தவம் இருந்த பிறகே காஞ்சீபுரத்துக்கு எழுந்தருளினாள். மாங்காடு காமாட்சி அம்மன் பற்றிய 25 சிறப்பான, அரிய தகவல்களை கீழே பார்க்கலாம்.

*மாங்காடு காமாட்சி அம்மன் 25 சிறப்பு தகவல்கள்*

1. காமாட்சி என்றதும் அனைவருக்கும் காஞ்சீபுரம்தான் நினைவுக்கு வரும். ஆனால் காமாட்சி முதலில் மாங்காட்டில் தவம் இருந்த பிறகே காஞ்சீபுரத்துக்கு எழுந்தருளினாள் என்று காஞ்சிப்புராணத்தில் கூறப்பட்டுள்ளது.

2. மாங்காட்டில் காமாட்சி அம்மன் சிவனை நோக்கி தவம் இருக்கும் கோலத்தில் காட்சித் தருகிறாள்.

3. அன்னை பார்வதி தேவி எத்தனையோ தவம் இருந்துள்ளாள். அதில் மிகக் கடுமையான தவமாக மாங்காட்டில் இருந்த தவம் கருதப்படுகிறது.

4. மாங்காடுக்கு வடமொழியில் “ஆம்ராரண்யம்” என்று பெயர். அம்ரம் என்றால் மாமரம். அரண்யம் என்றால் காடு. எனவே ஆம்ராரண்யம் என்று அழைக்கப்பட்டது.

5. காமாட்சி வருவதற்கு முன்பே மாங்காடு புண்ணிய பூமியாக இருந்ததாக புராணங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.

6. மாங்காடு தலத்தில் பார்கவர், மார்க்கண்டேயர் ஆகிய மகரிஷிகள் தவம் இருந்து பலன் பெற்றுள்ளனர்.

7. மாங்காட்டில் சுமார் 1500 ஆண்டுகளுக்கு காமாட்சியம்மன் ஆலயத்தை சோழ மன்னர்கள் கட்டினார்கள். அவர்களால் கருவறை, அர்த்த மண்டபம் கட்டப்பட்டது.

8. விஜயநகர பேரரசு மன்னர்கள் இத்தலத்தில் பல்வேறு திருப்பணிகள் செய்துள்ளனர். மகா மண்டபம், சபா மண்டபம் அவர்கள் கட்டியதுதான்.

9. இவ்வாலயத்தில் ஆதிசங்கரர் நிறுவிய அர்த்தமேரு ஸ்ரீசக்கரமே மூலஸ்தானமாக உள்ளது.

10. இவ்வாலயத்தில் காமிக ஆகம முறைப்படி பூஜைகள் நடைபெற்று வருகின்றன.

11. மாங்காடு தலம் மிகச் சிறந்த பிரார்த்தனை தலங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது.  - (வேலாயுதம் செ)

12. இத்திருக்கோவிலில் “எலுமிச்சம்பழம் கொண்ட ஆறு வார வழிபாடு” பக்தர்களால் பெரிதும் கடைப்பிடிக்கப்படுகிறது.

13. செவ்வாய், வெள்ளி, ஞாயிற்றுக்கிழமைகளில் இத்தலத்தில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருக்கும்.

14. பூந்தமல்லிக்கும், குன்றத்தூருக்கும் நடுவில் மாங்காடு உள்ளது. சென்னையில் அனைத்துப் பகுதிகளில் இருந்தும் இங்கு வர மாநகர பஸ் வசதி உள்ளது.

15. மாங்காடுக்கு சூதவதனம், மாலை என்ற பெயர்களும் உண்டு.

16. மாங்காடு காமாட்சிக்கு ஆதிகாமாட்சி, தபஸ் காமாட்சி என்றும் பெயர்கள் உண்டு.

17. இத்தலத்தில் ஆதிசங்கரர் நிறுவிய அர்த்தமேரு சக்கரம், சந்தனம், அகில், பச்சைக்கற்பூரம், குங்குமப்பூ, கோரோசனம், சிலாஜித், ஜடாமாஞ்சீ, கச்சோலம் ஆகிய 8 வகையான கந்தங்களைக் கொண்டது.

18. மாங்காடு காமாட்சிக்கும் ஒற்றை மாமரத்துக்கும் தொடர்பு உண்டு. ஆனால் ஏனோ இத்தலத்தில் ஒற்றை மாமரம் இல்லை.

19. மாங்காடு கோவிலில் அரசர்கள் காலத்தில் செதுக்கி வைக்கப்பட்டுள்ள ஏராளமான கல்வெட்டுகள் உள்ளன. அந்த கல்வெட்டுகளில் 8 கல்வெட்டுகள் படி எடுக்கப்பட்டு ஆய்வு செய்யப்பட்டுள்ளன.

20. கல்வெட்டுகளில் மாங்காட்டின் பெயர் “அழகிய சோழ நல்லூர்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

21. சிவபெருமானின் உத்தரவை ஏற்று பார்வதி தேவி, கன்னிப் பெண்ணாக மாங்காட்டில் எழுந்தருளியதால் இத்தலத்தில் கன்னிப்பெண்கள் மனம் உருகி அம்பாளை வழிபட்டு என்ன வரம் கேட்டாலும் கிடைக்கும் என்பது ஐதீகமாகும்.

22. அன்னை காமாட்சியை வழிபட்டால் கிரக தோஷங்கள் அனைத்தும் விலகி ஓடி விடும்.

23. இத்தலத்து தங்கரதம் 17.5 கிலோ எடை அளவு தங்கத்தால் செய்யப்பட்டதாகும். இது தமிழகத்தில் உயரமான தங்க ரதங்களில் ஒன்றாகும்.  - (வேலாயுதம் செ)

24. மாங்காடு காமாட்சியை முன்பு பூஜை வைத்த ஏகாம்பரம் குருக்கள் பார்த்து இருப்பதாக செவி வழி செய்தி ஒன்றுள்ளது.

25. கோவில் உள் பிரகாரத்தில் ஆதிசங்கரரின் உருவச்சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.

ஓம் நமசிவாய
 படித்து பகிர்ந்தது 
இரா இளங்கோவன் 
நெல்லிக்குப்பம். 

பல்லவனேஸ்வரர் கோயில், பல்லவனீச்சுரம் காவிரிப்பூம்பட்டினம் பூம்புகார்.

அருள்மிகு பல்லவனேஸ்வரர் கோயில், 
(பல்லவனீச்சுரம் – காவிரிப்பூம்பட்டினம்) பூம்புகார், 

சீர்காழி தாலுகா, நாகப்பட்டினம் மாவட்டம்.

+91 – 94437 19193 (மாற்றங்களுக்குட்பட்டது)

காலை 6.30 மணி முதல் 12 மணி வரை, மாலை 4.30 மணி முதல் இரவு 7.30 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர்   –     பல்லவனேஸ்வரர்

உற்சவர்   –     சோமாஸ்கந்தர்

அம்மன்   –     சவுந்தர்யநாயகி

தல விருட்சம்   –     மல்லிகை

தீர்த்தம்   –     ஜானவி, சங்கம தீர்த்தம்

ஆகமம்   –     சிவாகமம்

பழமை   –     1000 வருடங்களுக்கு முன்

புராணப் பெயர்   –     பல்லவனேஸ்வரம், காவிரிப்பூம்பட்டினம்

ஊர்   –     பூம்புகார்

மாவட்டம்   –     நாகப்பட்டினம்

மாநிலம்   –     தமிழ்நாடு

பாடியவர்கள்   –     திருஞானசம்பந்தர்

முன்னொருகாலத்தில் இப்பகுதியில் சிவநேசர், ஞானகமலாம்பிகை என்னும் சிவபக்த தம்பதியர் வசித்து வந்தனர். இவர்களுக்கு சிவன் அருளால் ஒரு மகன் பிறந்தார். திருவெண்காடர் என்று அழைக்கப்பட்ட இவர், கடல் கடந்து வாணிபம் செய்து வந்தார். 16ம் வயதில் சிவகலை என்பவரை மணந்து கொண்டார். திருமணமாகி பல்லாண்டுகளாக இத்தம்பதியருக்கு குழந்தை பாக்கியம் இல்லை. எனவே, திருவெண்காவசதி் சிவனை வழிபட்டார். இவருக்கு அருள் செய்ய விரும்பிய சிவன், வறுமையில் வாடிய சிவபக்த தம்பதியரான சிவசருமர், சுசீலை என்பவர்களின் மகனாக பிறந்தார். மருதவாணர் என்று அழைக்கப்பட்டார்.
    

ஒருசமயம் சிவசருமரின் கனவில் தோன்றிய சிவன், மருதவாணரை திருவெண்காடருக்கு தத்து கொடுக்கும்படி கூறினார். அதன்படி திருவெண்காடர், மருதவாணரை தத்தெடுத்து வளர்த்தார். மருதவாணரும் தந்தையின் தொழிலை செய்தார்.
  
ஒருசமயம் வாணிபம் செய்து விட்டு திரும்பிய மருதவாணர், தாயாரிடம் ஒரு பெட்டியைக் கொடுத்துவிட்டுச் சென்றுவிட்டார். வீட்டிற்கு வந்த திருவெண்காடர், மகன் சம்பாதித்து வந்திருப்பதை காண பெட்டியைத் திறந்தார். திறந்தவருக்கோ அதிர்ச்சி. அதில் தவிட்டு உமிகளைக் கொண்டு செய்யப்பட்ட எரு மட்டும் இருந்தது. மகனை சம்பாதிக்க அனுப்ப அவன், தவிட்டு எருவைக்கொண்டு வந்ததைக் கண்டவர், கோபத்தில் அதை வீசியெறிந்தார். அதில்,”காதற்ற ஊசியும் வாராது காண் கடைவழிக்கே” என்று எழுதப்பட்டிருந்தது. அதைக்கண்ட திருவெண்காடருக்கு ஒரு உண்மை உரைத்தது. “மனிதன் எவ்வளவுதான் சம்பாதித்தாலும் கடைசியில் பயனில்லாத காதற்ற ஊசியைக்கூட கையில் கொண்டு செல்ல முடியாது” என்ற உண்மையை உணர்ந்தார். உடன் இல்லற வாழ்க்கையை துறந்த அவர், இங்கு சிவனை வணங்கி அவரையே குருவாக ஏற்றார். தனது இல்லற வாழ்க்கையை முடித்து, முக்தி கொடுக்கும்படி வேண்டினார். அவருக்கு காட்சி தந்த சிவன், தகுந்த காலத்தில் முக்தி கிடைக்கும் என்றார். அதன்பின் பட்டினத்தார் இங்கிருந்து திருத்தல யாத்திரை மேற்கொண்டு, சென்னை திருவொற்றியூரில் முக்தி பெற்றார். காவிரிப்பூம்பட்டினத்தில் பிறந்தவர் என்பதால் இவர், “பட்டினத்தார்” என்றழைக்கப்பட்டார். இவருக்கு அருள் செய்த சிவன் இத்தலத்தில் காட்சி தருகிறார். இக்கோயிலுக்கு எதிரே வங்காளவிரிகுடா கடல் உள்ளது. சுவாமி, கடலை பார்த்தபடி காட்சி தருகிறார். இங்குள்ள நவக்கிரக மண்டபத்தில் அனைத்து கிரகங்களும், சுவாமியை நோக்கி, மேற்கு பார்த்தபடி இருப்பது சிறப்பான அமைப்பு. பிரகாரத்தில் முருகன் வள்ளி, தெய்வானையுடன் நின்ற கோலத்தில் காட்சி தருகிறார். மயில் வாகனம் கிடையாது. கோஷ்டத்தில் இரண்டு துர்க்கை இருக்கின்றனர். ஒருவரின் காலுக்கு கீழே மகிஷன் இல்லை. சண்டிகேஸ்வரர் சன்னதியில் இரண்டு பேர் இருக்கின்றனர். இத்தலத்திற்கு அருகில்தான் காவிரி, வங்காள விரிகுடா கடலுடன் சங்கமிக்கிறது. இந்த சங்கமமே இத்தலத்தின் தீர்த்தமாகும்.

காவிரி, கடலுக்குள் புகும் இடம் என்பதால் “காவிரிபுகும்பட்டினம்” என்றழைக்கப்பட்ட இவ்வூர் தற்போது “பூம்புகார்” என்றழைக்கப்படுகிறது.

இங்கு தலவிநாயகராக அனுக்கை விநாயகர் அருள்புரிகிறார். மூலஸ்தானத்தில் சிவன், பெரிய இலிங்கமாக காட்சி தருகிறார். காலவ மகரிஷி இத்தலத்தில் சிவனை வழிபட்டுள்ளார்.

பட்டினத்தார் தனிச்சன்னதியில் வடக்கு நோக்கியபடி காட்சி தருகிறார். இவரது சன்னதி விமானத்தில் பட்டினத்தார், மனைவி, அவரது தாய் மற்றும் மகனாக வளர்ந்த சிவன் ஆகியோரது சிற்பங்களும் இருக்கிறது. இங்கு சிவனுக்கு பிரம்மோற்ஸவம் கிடையாது. பட்டினத்தாருக்காகே விழா எடுக்கப்படுகிறது. இதை “அடியார் உற்சவம்” என்கிறார்கள். கொடிமரம் கிடையாது. ஆடி மாதத்தில் பட்டினத்தார் திருவிழா 12 நாட்கள் நடக்கிறது. விழாவின் 10ம் நாளில் பட்டினத்தாருக்கு, சிவன் மோட்சம் தரும் நிகழ்ச்சி பெரியளவில் நடக்கும்.

மருதவாணராக பிறந்த சிவன், அவரை வளர்த்த சிவசர்மா சுசீலை தம்பதியர், பட்டினத்தார், அவரது மனைவி சிவகலை, பட்டினத்தாரின் தாய் ஞானகலாம்பிகை, பட்டினத்தாரின் சீடர் பத்ரகிரியார், நாயடியார் மற்றும் முருகனை மடியில் அமர்த்தியபடி குகாம்பிகை ஆகியோர் இங்கு உற்சவமூர்த்திகளாக இருக்கின்றனர்.

தேவாரப்பதிகம்:

அங்கமாறும் வேதநான்கும் ஓதும்அயன் நெடுமால் தங்கணாலும் நேடநின்ற சங்கரன் தங்குமிடம் வங்கமாரு முத்தமிப்பி வார்கடலூட லைப்பர் பங்கமில்லார் பயில்புகாரிற் பல்லவனீச்சரமே.

–திருஞானசம்பந்தர்

தேவாரப்பாடல் பெற்ற காவிரி வடகரைத்தலங்களில் இது 10வது தலம்.

திருவிழா:

வைகாசி விசாகம். ஆடியில் பட்டினத்தார் விழா.

பிரார்த்தனை:

அறிவான குழந்தைகள் பிறக்கவும், பொருட்கள் மீதான ஆசை குறையவும் இங்குள்ள பல்லவனநாதரிடம் வேண்டிக்கொள்கின்றனர்.

நேர்த்திக்கடன்:

பிரார்த்தனை நிறைவேறியதும் சுவாமி, அம்பாள் மற்றும் பட்டினத்தாருக்கு விசேஷ பூஜை செய்து வழிப்பட்டதாக வரலாறு. 


ஓம் நமசிவாய
 படித்து பகிர்ந்தது
 இரா இளங்கோவன் 
நெல்லிக்குப்பம்

Sunday, June 1, 2025

மூகாம்பிகை அம்மன் உருவானது எப்படி?

மூகாம்பிகை அம்மன் உருவானது எப்படி 

கேரளாவில் காலடியில் பிறந்த ஆதிசங்கரருக்கு எத்தனையோ பகவதி கோவில்கள் இருந்தும் கலைவாணிக்கு ஒரு கோவில் இல்லையே என்ற ஏக்கம் இருந்தது. அவர் மைசூர் சமுண்டீஸ்வரி தாயை நோக்கி தவம் இருந்தார். மகனின் தெய்வீக தாகத்தைத் தீர்க்க அன்னை ஆதிசங்கரருக்கு காட்சியளித்தாள். தேவியின் திவ்ய ரூபம் கண்டு ஆதிசங்கரருக்கு மகிழ்ச்சி தாங்கவில்லை. ஆனந்தக் கூத்தாடினார்.

தேவியோ, ''நீ எங்கு என்னை குடி வைக்க விரும்புகிறாயோ அங்கு கொண்டுபோ. ஆனால் ஒரு நிபந்தனை. நான் உன்னைப் பின் தொடர்வேன். நீ என்னை திரும்பி பார்க்கக் கூடாது. அப்படி திரும்பிப் பார்த்தால் அந்த இடத்திலேயே நின்றுவிடுவேன்'' என்றாள்.
ஆதிசங்கரர் தேவியின் நிபந்தனையை ஒத்துக் கொண்டு தேவியின் கொலுசு ஒலியைக் கேட்டபடி நிம்மதியாக நடந்து சென்றார். எப்பொழுதுமே தேவி சித்தாடல் புரிவது தானே இயற்கை. போகும் வழியில் கோல மகரிஷி வழிபட்டு வந்த சுயம்பு லிங்கத்தைப் பார்த்து நின்றுவிட்டாள். கொலுசு ஒலி கேட்டுக் கொண்டே முன்னே நடந்து சென்று கொண்டிருந்த ஆதிசங்கரர் கொலுசு ஒலி நின்றுவிட்டதே எனத் திரும்பிப் பார்க்கிறார்.

அன்னை அருள்வாக்குபடி நீ திரும்பி பார்த்தால் நான் அங்கேயே நின்றுவிடுவேன் என்ற வரிகள் நினைவுக்கு வந்தன. எனவே அங்கு ஜோதிர் லிங்கத்தில் தேவி அந்த இடத்திலேயே ஐக்கியமாகிவிட்டாள். 

அவள் குடியேறிய இடம்தான் கொல்லூர் என்ற சக்தியின் புண்ணியத்தலம் ஆகும். அடர்ந்த காடு, மலை, ஆறுகள் அமைந்த இடத்தில் சுயம்புவான ஜோதிர்லிங்கம் மட்டும் தான் இருந்தது. அதிலே அரூபமான முப்பெரும் தேவியரும் உடனுறைகிறார்கள்.

ஆதிசங்கரர் வந்தபோது கோல மகரிஷி பூஜித்து வந்த தங்க ரேகை மின்னும் சுயம்புலிங்கம் மட்டுமே இருந்தது. அம்பாள் சிலை ஏதும் இல்லை. எனினும் அரூபரூபமாய் அந்த லிங்கத்தில் இருப்பதாக எத்தனையோ காலமாய் நம்பப்பட்டு வந்த ஸ்ரீமூகாம்பிகை தேவி என்ற அம்பாளின் முகம் அப்போது எப்படி இருக்கும் என்று யாரும் கற்பனை செய்து கூட அறியமுடியவில்லை. 

மூகாம்பிகை தேவியின் புகழினையும், பெருமைகளையும், மகிமைகளையும் கூறும் பல நிகழ்ச்சிகளையும், கதைகளையும் பக்தியுடன் பேசிவந்த ஊர் மக்கள் மன்தில் இது ஒரு பெருங்குறையாக இருந்தது. 

இந்நிலையில் ஆதிசங்கரர் கொல்லூர் வந்திருப்பது ஒரு வரப்பிரசாதமாக அமைந்தது. சக்தியை வழிபடும் சாக்தமார்க்கத்தை வழிபட அருளிய மகான் ஆதிசங்கரர் அரூபரூபமாய் உள்ள ஸ்ரீமூகாம்பிகையின் திரு உருவத்தைக் காட்டுவார் என ஊர்மக்கள் பரவசமடைந்தார். 

கொல்லூரில் ஆதிசங்கரர் தங்கியிருந்து தினமும் தியானம் செய்தது மூலவரின் சன்னதிக்கு நேர் பின்புறம் அமைந்துள்ள ஒரு மேடை ஆகும். ஏகாந்த வெளியில் ஜோதிர் லிங்கம் முன்னாள் அமர்ந்து ஆதிசங்கரர் தியானம் செய்து கொண்டிருந்தபோது ஒருநாள் அவர் முன் ஜெகஜோதியாக அம்பிகையின் உருவம் ஒளிர்ந்து காட்சி அளித்தது. 

ஆதிசங்கரர் தரிசித்த அம்பிகையின் உருவத்தை மனதில் கண்டார். அவ்வுருவம் சங்கு சக்கரம் அபயக்கரம் ஏந்திய சாந்த சொரூபியாக பத்மாசனத்தில் அமர்ந்து அருட்கடாச்சம் தந்ததைக் கண்டார். 

அன்னை தானே இத்தனை காலமாக இந்த சொர்ணரேகை மின்னும் சுயம்பு லிங்கத்தில் அரூபரூபமாய் முப்பெருந்தேவி மூகாம்பிகா என அடையாளம் காட்டிக் கொண்டாள். ஆதிசங்கரர் மனம் மகிழ்ந்து அம்பாளை துதித்தார். அக்காட்சி அவர் இதயத்தில் தத்ரூபமாக பதிந்தது. உடனே இச்செய்தியை உரியவர்களிடம் கூறினார். விக்கிரகக் கலையில் விஸ்வகர்மா பரம்பரையில் கைதேர்ந்த ஸ்தபதி ஒருவரை அழைத்து விக்கிரகம் செய்ய ஏற்பாடு செய்தார்கள்.

மூலவரின் சிலையும் பஞ்சலோகத்தில் உருவானது. அம்மாளை பிரதிஷ்டை செய்வதற்காக தொடர்ந்து ஒருவருடம் உட்கார்ந்த நிலையிலேயே பூஜை செய்ததால் ஆதிசங்கரரால் எழ முடியவில்லை. 

தவிக்கும் தன் பக்தனைப் பார்த்த அன்னை தன் கையாலேயே கஷாயம் செய்து சங்கரருக்குக் கொடுத்தாள். இன்றும் இந்த தலத்தில் இரவு நேரத்தில் கஷாயம் காய்ச்சி பக்தர்களுக்கு பிரசாதமாகக் கொடுக்கிறார்கள்.

தியானத்திலே கண்ட திவ்ய சொரூபம் ஆதிசங்கரர் கண் முன் நின்று காட்சியளித்துக் கொண்டிருந்தது. விக்கிரகத்தை பார்த்தார். மெய்சிலிர்த்தது! பத்மாசன தோற்றம்-நான்கு கைகள், சங்கு சக்கரம், ஒரு கை அருளையும் ஒரு கை தன் மலர் பாதத்தை சரணடையத் தூண்டும் வகையிலும் இருந்தன. சாந்த சொரூபியாக சகல கலைகளையும் ஐஸ்வர்யங்களையும் வாரி வழங்குபவளாக காட்சி தந்தார். 

சுயம்பு லிங்கத்தின் பின்னால் சிறிது இடைவெளிவிட்டு மூகாம்பிகா சிலையை பிரதிஷ்டை செய்தார். அதனடியில் சக்தி மிகுந்த ஸ்ரீ சக்கரத்தை ஆதிசங்கரர் பிரதிஷ்டை செய்தார். அச்சக்கரத்தில் ஒன்பது சக்கரம் அடக்கம் அறுபத்து நான்கு கோடி தேவதைகளை ஆவாஹனம் செய்தார். ஸ்ரீ சக்கரத்தின் மீது அன்னையின் விக்கிரக ரூபத்தை நிறுவினார்.

ஓம் நமசிவாய 
படித்து பகிர்ந்தது
 இரா இளங்கோவன் 
நெல்லிக்குப்பம். 

Followers

தஞ்சாவூர் பெரிய கோயில் கோபுரத்தில் சங்கு சக்கரம் ஏந்திய நடராஜர்.

சங்கு சக்கரம் ஏந்திய நடராஜர் சக்ரதாரிக்கே சக்ர தானம் செய்தவர் சிவபெருமான்.  மகேஸ்வரனுக்கு ஐந்து முகங்கள் உண்டு. அவை சத்யோஜாதம், ...