Sunday, November 2, 2025

வில்வ மரம் பற்றிய தகவல்கள்...

வில்வ மரம் பற்றிய தகவல்கள்...
1)தீட்டுடன் வில்வ மரத்தின் அருகில் செல்லக்கூடாது, தொடக்கூடாது. தீட்டு என்பது, பிறப்பு, இறப்பு, மற்றும் பெண்கள் வீட்டு விலக்காகும் நாட்கள். அந்த நாட்களில் வில்வ மரத்தின் அருகே போகக் கூடாது. 

2)பொதுவாக, வில்வ மரத்தின் வாசனை, அதன் வேர்களில் உள்ள குளிர்ச்சி ஆகியவற்றுக்கு பாம்புகள் வரும். அதனாலேயும் பயப்படுவர்கள். ஆனால், வீட்டில் வில்வ மரத்தை வைத்துக் கொள்வது மிகவும் விசேஷம். தவ விருட்ஷோத பில்வ: என்று சூக்தத்தில், மகாலட்சுமி அந்த மரத்தில் நித்யவாசம் செய்வதாகச் சொல்கிறது. 

எனவே, "யார் வீட்டில் சாஸ்திரங்களில் சொன்னபடி நியமத்துடன் வில்வ மரத்தை வளர்க்கிறார்களோ, அந்த வீட்டில் மகாலட்சுமி நித்ய வாசம் செய்வாள்."

சிவனுக்கு உகந்தது வில்வம் என்பதை அறிவோம்...

வில்வத்தில் மூன்று, ஐந்து மற்றும் ஏழு இதழ்கள் உள்ள வில்வ மரங்கள் உள்ளன. இதில் மூன்று இதழ் கொண்ட வில்வ இதழ்களையே பூஜைக்குப் பயன்படுத்து கிறோம். ஒவ்வொரு வில்வத்திலும் மும்மூர்த்திகள் நித்தியவாசம் செய்வதாக ஐதீகம். 

பூஜைக்குப் பயன்படுத்துகிற வில்வத்தை, சூரியன் உதயமாவதற்கு முன்னதாகவே பறித்து வைத்துக் கொள்வது உத்தமம். 

வில்வத்துக்கு தோஷம் கிடையாது என்பதால், சிறிது தண்ணீரை வில்வத்தின் மீது தெளித்துவிட்டு, பூஜைக்குப் பயன்படுத்தலாம்.

தினமும் சிவனுக்கு வில்வம் சார்த்தி அர்ச்சனை செய்து வழிபடுவது வாழ்வில் சிறப்பினைத் தரும்.

வில்வங்களில் 21 வகைகள் உள்ளதாகவும், அவற்றில் மகா வில்வமும், அகண்ட வில்வமுமே மிக உயர்ந்தாக சொல்லப்படுகிறது.

தேவலோகத்தை சேர்ந்த பஞ்ச தருக்களான ஐந்து மரங்களுள் (பாதிரி, மா, வன்னி, மந்தாரை,

வில்வம்) என்று வில்வம், லட்சுமி தேவியின் திருக்கரங்களிலிருந்து தோன்றியதாக வராக புராணம் கூறுகிறது.

வில்வ மரத்தை வழிபடுவதால் லட்சுமி தேவியின் பரிபூரணமான அருள் கிட்டும்.

வில்வ இலைகள் சிவன் எனவும், முட்கள் சக்தி எனவும் கிளைகளே வேதங்கள் என்றும் வேர்கள் யாவும் முக்கோடி தேவர்கள் என்றும் போற்றப்படுகிறது. 

சிவ பூஜை சமயத்தில் வில்வத்தால் அர்ச்சனை செய்தால் தீய சக்திகள் அகன்று தோஷங்கள் மறைந்து பகவான் ஈசனது அருட்பார்வை கிடைக்கும்.

ஒரு வில்வ தனத்தை சிவனுக்கு அர்ப்பணம் செய்வதால் மூன்று ஜென்ம பாவம் விலகும் என்கிறது.

இருபத்தோரு வில்வ வகைகளுள் மிகவும் சக்தி வாய்ந்த வகை. இதன் காய்கள் சற்றே ஆப்பிள் பழம் போன்று

தோற்றம் அளிக்கும். இலைகளை சிவார்ச்சனைக்கு பயன்படுத்திக் காய்களை மகாலட்சுமி யாகத்திற்கு

பயன்படுத்துவார்கள்.

வடநூலார் இதை ஸ்ரீபலம் (மகாலட்சமி ரூபம்) என்று புகழ்வர்.

இந்த பழத்தால் யாகம் செய்வதால் ஐஸ்வர்யத்தின் வடிவாக விளங்கும். யாகாக்னி தேவன் திருமகளது கருணையை விரைவில் பெற்றுத்தருவார். 

மிகப்பெரிய யாகங்கள் நடக்கும் போது 108 ஓமப் பொருட்களில் வில்வப்பழமும் ஒன்றாகிறது.

வீட்டில் அகண்ட வில்வ மரம் வளர்த்து வந்தால் அது பெரிதாகி கனி கொடுத்த பிறகே பூஜை செய்த அதன் இலைகள் அருகதை உடையது. ஆனால் வளரும் செடியை பூஜை செய்வதால் அதுவரை குடும்பத்தில் துர் சக்திகள் விலகத்தொடங்கும்.

படிப்படியாக பொருட்சேர்க்கை ஏற்படும்.

இதை வளர்த்து வரும் அனைவருமே நலமாக இருப்பதாக கூறி உள்ளனர்.

வில்வம் வளர்த்தால் செல்வம் வளரும்

சமீப காலங்களில் வில்வத்தை வீட்டில் வளர்க்கக்கூடாது. சிவலிங்கம் வீட்டில் பூஜிக்கக்கூடாது என்று விரும்பியபடி

பேசி வருகின்றனர். வில்வ மரம் எங்கு வளர்க்கப்படுகிறதோ அங்கே மகாலட்சுமி நிரந்தரமாக வசிப்பாள்.

பார்ச்சூன் ட்ரீ எனப்படும் அதிர்ஷ்ட வில்வமரத்தை விதையிட்டு வளர்த்து பூஜை செய்வதால் கடன் தொல்லைகள் அகன்று செல்வம்

அதிகமாகும்.

வளர்ப்பு முறையும் வழிபாடும்:

ஒரு பூத்தொட்டியில் பசும் சாணம் மண் கலந்து மூன்று நாட்கள் விதையை உள்ளே வைத்து அமாவாசை தினத்தில் எடுத்து ஈர மண்ணில் புதைக்க வேண்டும். 

45 நாட்கள் காத்திருந்தால் விதை முளைத்து வெளிவரும். விதை எல்லோரும் போடலாம்.சிலருக்கே அது முளைக்கும் யோகம் வரும்.  விதை

முளைத்து வந்ததும் உரமிட்டு வளர்த்து பௌர்ணமி, வெள்ளிக்கிழமைகளில் லட்சுமி துதி கூறி கற்கண்டு,தேங்காய், பழம், தாம்பூலம் வைத்து வழிபடலாம். வில்வ விருட்சம் முன் அமர்ந்து விநாயகரை வணங்கினால் வளமே பெருகும்.

இவைகள் தான் எனக்கு தெரிந்த தகவல்கள். மேலும் பல நன்மைகள் உண்டு..
ஓம் நமசிவாய 
படித்து பகிர்ந்தது 
இரா இளங்கோவன் 
நெல்லிக்குப்பம். 

Saturday, November 1, 2025

நீங்கஅருள் தரும் குலதெய்வம். வழிபாட்டின் பலன்கள்

குலதெய்வ வழிபாடு .
         
தீராத கஷ்டங்கள் நீங்கஅருள் தரும் குலதெய்வம். வழிபடலாம் வாங்க.!

குலதெய்வ வழிபாட்டின் பலன்கள் 

நம் குலத்தைக் காக்கும் குலதெய்வத்திற்கு வழிபாடு செய்ய வேண்டும். அவ்வாறு வழிபட வீட்டில் சுபிட்சம் உண்டாகும்.

உங்களுடைய வீட்டில் சுபகாரிய நிகழ்ச்சிகளுக்கு தடை ஏற்படுகிறதா? எந்த ஒரு நல்ல காரியத்தையும் நடத்த முடியவில்லையா? பிள்ளைகளுக்கு திருமணம் நடந்து குழந்தை பாக்கியம் இல்லையா? குழந்தை பிறந்தால் அந்த குழந்தைக்கு ஏதாவது ஒரு பிரச்சனை வருகிறதா?  இது போன்று தொடர்ந்து வீட்டில் கஷ்டங்கள் வந்து கொண்டே இருக்கிறதா? அதை சரிசெய்யலாம் வாங்க.

சுப நிகழ்ச்சி நடைபெற கொடுக்க வேண்டிய தானம்:

பொங்கல் வைக்க பயன்படுத்தப்படும் பொருள் வெல்லம்.  மலிவான விலையில் நம்மால் வாங்க முடிகின்ற பொருளில் ஒன்று. அதை உங்களால் முடிந்த அளவு வாங்கி குலதெய்வ கோவிலுக்கு, உங்கள் கையால் தானம் கொடுங்கள்.  குலதெய்வ கோவிலில் நிர்வாகம் இருந்தால் அங்கும் தானம் கொடுக்கலாம். 

பின் இனிப்பான வெல்லத்தில் குலதெய்வத்திற்காக பிரசாதம் செய்து வழிபட வேண்டும். குறைந்த அளவு 1 கிலோ வெல்லம் வாங்கலாம்.  அதிகபட்சம் உங்களுடைய விருப்பம்.

எப்போதெல்லாம் குலதெய்வ கோவிலுக்கு செல்கிறீர்களோ, அப்போதெல்லாம் வாங்கி வைத்த வெல்லத்தை வீட்டிலிருந்து எடுத்து செல்ல வேண்டும்.

குறிப்பாக, குலதெய்வ கோவில் இருக்கும் இடத்தில் இருந்து வெல்லம் வாங்க கூடாது. நாம் வீட்டில் இருந்து தான் எடுத்து செல்ல வேண்டும்.

முடிந்தால் மாதந்தோறும் வீட்டில் இருக்கும் ஒருவர் மட்டும் குலதெய்வ கோவிலுக்கு சென்று இந்த வெல்லத்தை தானம் செய்து வர,  உங்களுடைய வீட்டு சுப நிகழ்ச்சிகளில் எந்த தடையும் ஏற்படாது.

வீட்டில் நடக்கும் எல்லா விஷயங்களுமே இனிப்பான வெல்லத்தை போல் இனிமையாக நடக்கும்.

தீராத சுமை நீங்க எளிய பரிகாரம்: 

வீட்டில் இருப்பவர்களுக்கு ஏதாவது தீராத கடன் சுமை இருந்தாலும், தீராத உடல் உபாதைகள் இருந்தாலும்,  கரைக்க முடியாத கட்டியிருந்தாலும் சில நாட்களிலேயே பிரச்சனைகள் அனைத்தும் தீர்ந்து போக எளிய முறை ஒன்றை வாங்க பார்க்கலாம். 

குலதெய்வ கோவிலில் குளம் இருந்தால் அந்த குளத்தில் உங்கள் கையாலேயே ஒரு கட்டி வெல்லத்தை போட்டு கரைத்து விடுங்கள்.

உங்களுக்கு இருக்கும் கஷ்டங்கள் எல்லாம் தண்ணீரில் கரைந்த வெல்லம் போல கரைந்து போக வேண்டும் என்று குலதெய்வத்தை வேண்டிக் கொள்ளுங்கள்.

கஷ்டங்கள் இருந்தாலும், உடல் உபாதைகளாக இருந்தாலும் ஒரு சில நாட்களில் உங்களை விட்டு கரைந்து போய்விடும்.


Friday, October 31, 2025

தஞ்சையில் உள்ள முருகனின் ஆறு படை வீடுகள்.



தஞ்சையில் முருகப்பெருமானுக்கு ஆறு படைவீடு

1 மேலஅலங்கம் முருகன் கோயில் (திருப்பரங்குன்றம்),
2 வடக்கு அலங்கம் முருகன் கோயில் (பழமுதிர்சோலை),

3 குறிச்சித் தெரு முருகன் கோயில் (திருத்தணி),

4 ஆட்டுமந்தை அஞ்சல்காரத்தெரு முருகன் கோயில் (சுவாமிமலை),
5 சின்ன அரிசிக்காரத் தெரு முருகன் கோயில் (பழனி),

6 பூக்காரத்தெரு சுப்பிரமணியசுவாமி கோவில்(திருச்செந்தூர்)

ஆகியவற்றைக் கூறுகின்றனர். சுமார் 40 வருடங்களாக இப்பகுதியிலுள்ள முருக பக்தர்கள் ஒரே நாளில் இந்த அனைத்து முருகன் கோயில்களுக்கும் பாத யாத்திரையாகச் சென்று வருவதாகக் கூறினர்.

முருகப்பெருமானின் ஆறு படைவீடுகளான திருப்பரங்குன்றம், திருச்செந்தூர், பழனி, சுவாமிமலை, திருத்தணி, பழமுதிர்ச்சோலை ஆகியவற்றைப் பற்றி நமக்குத் தெரியும். ஆனால் தஞ்சாவூர் மாநகரிலும் முருகப்பெருமானுக்கு ஆறு படைவீடுகள் இருப்பது தெரியுமா? இந்த ஆறு கோவில்களும் தஞ்சாவூருக்குள்ளேயே அமைந்துள்ளன. ஒவ்வொரு ஆண்டும் ஆடி மாதம் தஞ்சை பகுதியைச் சேர்ந்த பக்தர்கள், இந்த ஆறு படைவீடுகளுக்கும் பாதயாத்திரையாக சென்று வழிபடுவது வழக்கம். முதலாம் படைவீடு தஞ்சை மேல அலங்கம் பகுதியில் உள்ளது, சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில். இந்த ஆலய மூலவர், குன்றின் மேல் இருப்பது போல் உயரமான இடத்தில் இருப்பதால், இத்தலம் ‘திருப்பரங்குன்றம்’ என்று அழைக்கப்படுகிறது. இங்கு வள்ளி - தெய்வானையுடன் திருமணக்கோலத்தில் முருகப்பெருமான் காட்சி அளிக்கிறார். இதுதவிர விநாயகர், இடும்பன், சிவன், பார்வதி, சிவலிங்கம் திருமேனிகளும் காணப்படுகின்றன. இக்கோவில் தஞ்சை அரண்மனை தேவஸ்தான கட்டுப்பாட்டில் உள்ளது.

நாயக்க மன்னர்கள் காலத்தில் கட்டப்பட்ட இந்தக் கோவில், 250 ஆண்டுகள் பழமையானது. சூரசம்ஹாரம், பங்குனி உத்திரம், தைப்பூசம் போன்ற விழாக்கள் இங்கு வெகு விமரிசையாக நடைபெறும். நாயக்க மன்னர்கள் போருக்கு செல்வதற்கு முன்பாக இங்கு ஆயுதங்களை வைத்து வழிபட்டு எடுத்துச் செல்வதை வழக்கமாக வைத்திருந்ததாக சொல்லப்படுகிறது. இரண்டாம் படைவீடு தஞ்சை பூக்கார தெருவில் உள்ளது, சுப்பிர மணியசாமி கோவில். இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இந்த ஆலயத்தில் முருகப்பெருமான் மனைவிகள் இன்றி தனித்து காணப்படுகிறார். இங்கு கந்தசஷ்டி விழாவையொட்டி சூரசம்ஹாரம் வெகு விமரிசையாக நடைபெறும்.

திருச்செந்தூரில் வாழ்ந்த ஞானி ஒருவர், ஐம்பொன்னால் ஆன முருகன் சிலை வைத்திருந்தார். அவர் தினமும் கடலிலும், நாழிக்கிணற்றிலும் நீராடும்போது, முருகன் சிலையையும் நீராட்டி பூஜைகள் செய்வார். வயோதிகம் காரணமாக அந்த சிலையை வேறுயாரிடமாவது ஒப்படைத்து தினசரி பூஜைக்கு ஏற்பாடு செய்ய வேண்டும் என்று ஞானி எண்ணினார். ஒரு நாள் ஞானியின் கனவில் தோன்றிய முருகப்பெருமான், அவரை ஒரு ரெயில் நிலையத்திற்கு அழைத்துச் சென்றார். அங்கிருந்த ரெயில்வே ஊழியரிடம் ஐம்பொன் சிலையை கொடுக்கும்படி கூறிவிட்டு மறைந்தார். கனவும் கலைந்தது. கனவில் வந்ததுபோலவே, குறிப்பிட்ட ரெயில்நிலையம் சென்ற ஞானி, ரெயில்வே ஊழியரை சந்தித்து சிலையைக் கொடுத்தார். அந்த ஊழியருக்கும், அந்தக் கனவு முன்தினம் வந்ததை அவர் கூறினார். இருவரும் முருகனின் அருளை எண்ணி நெகிழ்ந்தனர். பின்னர் தஞ்சை வந்த ரெயில்வே ஊழியர், இங்கு ஒரு குடில் அமைத்து முருகனை வழிபட்டார்.

தஞ்சாவூர் மாநகரிலும் முருகப்பெருமானுக்கு ஆறு படைவீடுகள் இருப்பது தெரியுமா? இந்த ஆறு கோவில்களும் தஞ்சாவூருக்குள்ளேயே அமைந்துள்ளன. அந்த கோவில்களை பற்றி அறிந்து கொள்ளலாம்.
முருகப்பெருமானின் ஆறு படைவீடுகளான திருப்பரங்குன்றம், திருச்செந்தூர், பழனி, சுவாமிமலை, திருத்தணி, பழமுதிர்ச்சோலை ஆகியவற்றைப் பற்றி நமக்குத் தெரியும். ஆனால் தஞ்சாவூர் மாநகரிலும் முருகப்பெருமானுக்கு ஆறு படைவீடுகள் இருப்பது தெரியுமா? இந்த ஆறு கோவில்களும் தஞ்சாவூருக்குள்ளேயே அமைந்துள்ளன. ஒவ்வொரு ஆண்டும் ஆடி மாதம் தஞ்சை பகுதியைச் சேர்ந்த பக்தர்கள், இந்த ஆறு படைவீடுகளுக்கும் பாதயாத்திரையாக சென்று வழிபடுவது வழக்கம். முதலாம் படைவீடு தஞ்சை மேல அலங்கம் பகுதியில் உள்ளது, சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில். இந்த ஆலய மூலவர், குன்றின் மேல் இருப்பது போல் உயரமான இடத்தில் இருப்பதால், இத்தலம் ‘திருப்பரங்குன்றம்’ என்று அழைக்கப்படுகிறது. இங்கு வள்ளி - தெய்வானையுடன் திருமணக்கோலத்தில் முருகப்பெருமான் காட்சி அளிக்கிறார். இதுதவிர விநாயகர், இடும்பன், சிவன், பார்வதி, சிவலிங்கம் திருமேனிகளும் காணப்படுகின்றன. இக்கோவில் தஞ்சை அரண்மனை தேவஸ்தான கட்டுப்பாட்டில் உள்ளது.

நாயக்க மன்னர்கள் காலத்தில் கட்டப்பட்ட இந்தக் கோவில், 250 ஆண்டுகள் பழமையானது. சூரசம்ஹாரம், பங்குனி உத்திரம், தைப்பூசம் போன்ற விழாக்கள் இங்கு வெகு விமரிசையாக நடைபெறும். நாயக்க மன்னர்கள் போருக்கு செல்வதற்கு முன்பாக இங்கு ஆயுதங்களை வைத்து வழிபட்டு எடுத்துச் செல்வதை வழக்கமாக வைத்திருந்ததாக சொல்லப்படுகிறது. இரண்டாம் படைவீடு தஞ்சை பூக்கார தெருவில் உள்ளது, சுப்பிர மணியசாமி கோவில். இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இந்த ஆலயத்தில் முருகப்பெருமான் மனைவிகள் இன்றி தனித்து காணப்படுகிறார். இங்கு கந்தசஷ்டி விழாவையொட்டி சூரசம்ஹாரம் வெகு விமரிசையாக நடைபெறும்.

திருச்செந்தூரில் வாழ்ந்த ஞானி ஒருவர், ஐம்பொன்னால் ஆன முருகன் சிலை வைத்திருந்தார். அவர் தினமும் கடலிலும், நாழிக்கிணற்றிலும் நீராடும்போது, முருகன் சிலையையும் நீராட்டி பூஜைகள் செய்வார். வயோதிகம் காரணமாக அந்த சிலையை வேறுயாரிடமாவது ஒப்படைத்து தினசரி பூஜைக்கு ஏற்பாடு செய்ய வேண்டும் என்று ஞானி எண்ணினார். ஒரு நாள் ஞானியின் கனவில் தோன்றிய முருகப்பெருமான், அவரை ஒரு ரெயில் நிலையத்திற்கு அழைத்துச் சென்றார். அங்கிருந்த ரெயில்வே ஊழியரிடம் ஐம்பொன் சிலையை கொடுக்கும்படி கூறிவிட்டு மறைந்தார். கனவும் கலைந்தது. கனவில் வந்ததுபோலவே, குறிப்பிட்ட ரெயில்நிலையம் சென்ற ஞானி, ரெயில்வே ஊழியரை சந்தித்து சிலையைக் கொடுத்தார். அந்த ஊழியருக்கும், அந்தக் கனவு முன்தினம் வந்ததை அவர் கூறினார். இருவரும் முருகனின் அருளை எண்ணி நெகிழ்ந்தனர். பின்னர் தஞ்சை வந்த ரெயில்வே ஊழியர், இங்கு ஒரு குடில் அமைத்து முருகனை வழிபட்டார்.

திருச்செந்தூர் செல்ல முடியாதவர்கள் இங்கு பிரார்த்தனை செய்தால் எல்லா காரியங்களும் நிறைவேறும் என்பது நம்பிக்கை. மூன்றாம் படைவீடு தஞ்சை சின்ன அரிசிக்கார தெருவில் உள்ளது, பாலதண்டாயுதபாணி கோவில். இந்த ஆலயத்தில் இந்திரன் வழிபாடு செய்ததாக சொல்லப்படுகிறது. வழக்கமாக முருகப்பெருமானின் அருகில் மயில் வாகனம் காணப்படும். ஆனால் இந்த ஆலயத்தில் முருகப்பெருமான் சன்னிதியில் யானை இருப்பது அரிய காட்சியாக இருக்கிறது. இங்குள்ள உற்சவர் சிலை ஐம்பொன்னால் ஆனது. இங்கே விநாயகர், முருகன், இடும்பன், நவக்கிரக சன்னிதிகள், சிவன், தட்சிணாமூர்த்தி, ஆஞ்சநேயர், துர்க்கை அம்மன், பைரவர், நாகநாதர் உள்ளிட்ட சன்னிதிகள் உள்ளன. பொதுவாக நவக்கிரக சன்னிதிகள் வடகிழக்கு ஈசானிய மூலையில் அமைந்திருக்கும். ஆனால் இங்கு தென்மேற்கு மூலையில் அமைந்துள்ளது. அதுவும் ராகுவும், கேதுவும் இடம் மாறி இடம் பெற்றுள்ளன. இந்தக் கோவிலில் கார்த்திகை விரதம், பங்குனி உத்திர விழா, முத்து பல்லக்கு, சஷ்டி போன்ற விழாக்கள் வெகு விமரிசையாக கொண்டாடப்படுகிறது.
நான்காம் படைவீடு தஞ்சை ஆட்டுமந்தை தெருவில் சுவாமிநாத சுவாமி கோவில் உள்ளது. சுவாமி மலையில் முருகன் சன்னிதி இருப்பது போலவே, இங்கும் சன்னிதி அமைக்கப்பட்டுள்ளது. இந்தக் கோவிலில் அரசு, வேம்பு மரம் சேர்ந்து ஈசான மூலையில் உள்ளது. இங்கு தஞ்சை பெரிய கோவிலில் இருப்பதை போல பிரகதீஸ்வரர், பெரியநாயகி அம்மன், நவக்கிரக தலங்கள், தட்சிணாமூர்த்தி, பைரவர், சண்டிகேஸ்வரர், பிரம்மா, ஆஞ்சநேயர் கணபதி, விஷ்ணு துர்க்கை, இடும்பன் என முருகனைத் தவிர 12 சன்னிதிகள் இடம்பெற்றுள்ளன. இந்தக் கோவிலில் உள்ள ஒவ்வொரு சன்னிதிகளும் அதற்குண்டான வாஸ்து முறையில் இடம் பெற்றிருப்பது தனிச்சிறப்பு ஆகும். இந்தக் கோவிலுக்கு வந்து வழிபட்டால் அவர்களுடைய கஷ்டம் தீரும் என்பது ஐதீகம். இங்கு சூரசம்ஹாரம், முருகன் திருக்கல்யாணம், முத்துப்பல்லக்கு, பங்குனி உத்திரம், கார்த்திகை விரதம், கந்த சஷ்டி போன்ற விழாக்கள் விமரிசையாக நடந்து வருகிறது.
ஐந்தாம் படைவீடு தஞ்சை கீழவாசல் குறிச்சி தெருவில் உள்ளது, பாலதண்டாயுதபாணி கோவில். இங்கு வள்ளி- தெய்வானையுடன் பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். கருவறைக்கு முன்பாக விநாயகரும், எதிரில் மயிலும், பலிபீடமும் காணப்படுகிறது. இந்த கோவில் கட்டப்பட்டு 150 ஆண்டுகளுக்கு மேல் ஆகிறது. இங்கு முதலில் வேல் மட்டும் வைத்து வழிபட்டு வந்துள்ளனர். பிற்காலத்தில்தான் வள்ளி - தெய்வானையுடன் கூடிய சிலை பிரதிஷ்டை செய்துள்ளனர். முருகப்பெருமானின் கலியுக அவதாரமான திருஞானசம்பந்தருக்கும் இங்கு தனி சன்னிதி உள்ளது. தவிர விநாயகர், விசாலாட்சி, பைரவர், பஞ்சமுக ஆஞ்சநேயர், துர்க்கை, நவக்கிரக தலங்கள் உள்ளிட்ட சன்னிதிகள் உள்ளன. இங்கு முருகனுக்கு நடைபெறும் கந்தசஷ்டி உள்பட அனைத்து விழாக்களும் விமரிசையாக நடைபெறும். இந்தக் கோவிலில் தரிசனம் செய்தால் நிலம், வீடு உள்ளிட்ட சொத்து பிரச்சினைகள் தீரும். குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிட்டும். திருத்தணியில் முருகன் இருப்பதை போல இங்கும் காணப் படுவதால் இத்தலம் திருத்தணி என்று அழைக்கப்படுகிறது. தஞ்சை மாநகரில் ஈசானிய மூலையில் இத்தலம் அமைந்துள்ளது.
ஆறாம் படைவீடு தஞ்சை வடக்கு அலங்கம் பகுதி யில் உள்ளது, பால தண்டாயுதபாணி சுவாமி கோவில். இந்தக் கோவில் மன்னர் சரபோஜி காலத்தில் கட்டப்பட்டுள்ளது. இந்தப் பகுதியை ஆட்சி செய்த மன்னர்கள் அடிக்கடி பழனி முருகன் கோவிலுக்குச் சென்று வருவதுண்டு. அப்படி சென்று வர பல நாட்கள் ஆகிவிடும். இதனால் அங்கிருப்பது போலவே இங்கும் ஒரு ஆலயம் அமைக்க முடிவு செய்தனர். முருகப்பெருமான் கனவில் வந்து சொன்னதை அடுத்து, பழனி மலை அடிவாரத்தில் இருந்து ஒரு முருகன் சிலையை இங்கு கொண்டு வந்து நிறுவியிருக்கிறார்கள். பழனி முருகன் கோவில் இருப்பதைப் போல இது அமைந்திருந்தாலும், இதனை ஆறாம் படைவீடான பழமுதிர்ச்சோலை என்றுதான் பக்தர்கள் வழிபடுகின்றனர். கோவில் இருக்கும் பகுதி, மன்னர்கள் காலத்தில் முதலைகளுக்கு தீவனம் வைக்கும் கொட்டகையாக இருந்துள்ளது. எதிரிகள் தஞ்சை நகருக்குள் நுழையாமல் இருக்க அகழிகளை உருவாக்கியிருந்தனர். அதற்குள் பல முதலைகளை வளர்த்து வந்தனர். அந்த முதலைகளுக்காக ஒரு மண்டபத்தில் தீவனம் வைத்துள்ளனர். அந்த மண்டபத்தில்தான் இந்தக் கோவில் அமைந்திருக்கிறது.

ஓம் நமசிவாய 
படித்து பகிர்ந்தது 
இரா இளங்கோவன் 
நெல்லிக்குப்பம். 

Wednesday, October 29, 2025

சிவபெருமான் காமனை எரித்த தலம் வீரட்டானேசுவரர் திருக்குறுக்கை.

துயரம் நீக்கி மனஅமைதி தரும் அருள்மிகு வீரட்டேஸ்வரர் கோயில்...!
இறைவன் :-  வீரட்டேஸ்வரர்
உற்சவர் :- யோகேஸ்வரர்

இறைவி :- ஞானம்பிகை தாயார்

தல விருட்சம் :- கடுக்காய் மரம், அரிதகிவனம்

தீர்த்தம் :- திரிசூல் கங்கை , பசுபதி தீர்த்தம்

புராண பெயர் :- திருக்குறுக்கை

தேவாரபதிகம் பாடியவர்கள் :-

திருநாவுக்கரசர்

நீற்றினை நிறையப் பூசி நித்தலும் நியமஞ் செய்து ஆற்றுநீர் பூரித்தாட்டும் அந்தணனாரைக் கொல்வான் சாற்றுநாள் அற்றதென்று தருமரா சற்காய்வந்த கூற்றினைக் குமைப்பர் போலுங் குறுக்கை வீரட்டனாரே.

தேவாரப்பாடல் பெற்ற காவிரி வடகரைத்தலங்களில் இது 26வது தலம்.

தல சிறப்பு :-

     

  ஆவுடையாரில் தாமரை மலர் இருப்பது குறிப்பிடத்தக்க சிறப்பம்சம். 

அட்டவீரட்ட தலம் என்ற சிறப்பும் பெருமையும் பெற்ற கோயில் இது. சிவபெருமான் வீரச்செயல்கள் புரிந்த அட்ட வீரட்டத்தலங்களில் ஒன்றான இங்கு காமனை எரித்துள்ளார். 

ரதி, மன்மதன் உற்சவத் திருமேனிகள் இத்தலத்தில் உள்ளன. தீர்த்தவாகு முனிவர் என்ற முனிவர் இறைவனுக்கு திருமுழுக்காட்ட கங்கையை கொண்டு வந்த சிறப்பு பெற்ற தலம். சிவனின் தேவாரப்பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் இது 26 வது தேவாரத்தலம் ஆகும்.  

     

     

இத்தலவிநாயகர் குறுங்கை கணபதி என்ற திருநாமத்துடன் அருள்பாலிக்கிறார்.

காம சம்கார மூர்த்தி :-

அட்டவீரட்டத்தலங்களில் இங்கு சிவபெருமான் காமனை எரித்தார் என்பது வரலாறு.

 காம தகன மூர்த்தி என்று அழைக்கப்படுகிறார். காம தகன மூர்த்தி இடக்காலை மடித்து, வலக்காலைத் தொங்கவிட்டு வலக்கை அபய முத்திரையுடன், இடக்கையை மடக்கிய கால் மீது வைத்து அமர்ந்த நிலையில் தரிசனம் அளிக்கிறார்.

சம்காரத்தினால் பெயர் பெற்ற ஊர்கள் :-

இந்த திருக்குறுக்கை என்ற ஊரைச் சுற்றியுள்ள ஊர்கள் பெயர்கள் இத்தலத்து வரலாற்றோடு சம்பந்தப்பட்டவை.

 சிவபெருமானின் தவத்தை கலைக்க மன்மதன் அதற்காக தன் கையில் கங்கணம் கட்டிக் கொண்ட இடம் கங்கணம் புத்தூர். பால் சாப்பிட்ட இடம் பாலாக்குடி. வில் எடுத்த இடம் வில்லினூர். குறி பார்த்த இடம் காவளமேடு. தன்னோடு வந்தவர்களோடு ஐவநல்லூரில் கூடி இங்கிருந்து வில் விடு என்று கூறினார்களாம்.

அந்த இடம் சரியாக இல்லை என்று கூறி மேட்டுக் கொற்கை என்ற இடத்துக்கு வந்து நின்று குறி பார்க்கையில் பின்பக்கமிருந்தும் இல்லாது முன்பக்கமிருந்தும் இல்லாது ஒரு ஓரமாக நின்று மன்மதன் கணை விட்டாராம்.

     

  அன்பு, பிரியம், நேசம், விருப்பம், மற்றும் பாசத்தால் ஏங்குபவர்கள் இத்தல மூர்த்தியான காமதகன மூர்த்தியை வழிபட்டால் தாங்கள் விருப்பப்படும் நபரிடம் அன்பு, பிரியம், நேசம், விருப்பம், மற்றும் பாசம் கிடைக்கும்.  

இத்தலத்தில் வீற்றிருக்கும் மூலவர் வீரட்டேசுவரரை வணங்குவோர்களுக்கு துயரம் நீங்கி மனஅமைதி கிடைக்கும்  அத்துடன் உடல் பலம் பெறும். 

நோய் நொடி விலகும். தியான பலமும், மனோபலமும் கிடைக்கும் . மேலும் வேலை வாய்ப்பு , தொழில் விருத்தி , உத்தியோக உயர்வு ஆகியவற்றுக்காகவும் இங்கு பிரார்த்தனை செய்தால் சுவாமி பக்தர்களது வேண்டுதல்களை நிச்சயம் நிறைவேற்றி கொடுப்பார். திருமண வரம், குழந்தை வரம் ஆகியவற்றுக்காகவும் இத்தலத்தில் வழிபடலாம்.  

     

நேர்த்திக்கடன் :-

     

  கல்யாணவரம் வேண்டுவோர் கல்யாண மாலை சாத்துகிறார்கள். அம்மனுக்கு புடவை சாத்துதலும், அபிசேகம் செய்தலும், சந்தனகாப்பு சாத்துதலும் பக்தர்களின் முக்கிய நேர்த்திகடன்களாக உள்ளது.

 சுவாமிக்கு வஸ்திரம் சாத்தலாம். மா மஞ்சள் பொடி, திரவிய பொடி, தைலம், பால், தயிர், இளநீர், பஞ்சாமிர்தம், எலுமிச்சை, தேன், சந்தனம் ஆகியவற்றால் அபிசேகம் செய்யலாம். 

மேலும் கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு அன்னதானம் படைத்தல் ஆகியவற்றை செய்யலாம். சுவாமிக்கு நைவேத்தியம் செய்து பக்தர்களுக்கு விநியோகிக்கலாம். தவிர வழக்கமான அபிசேக ஆராதனைகளும் செய்யலாம். வசதி படைத்தோர் கோயில் திருப்பணிக்கு பொருளுதவி செய்யலாம்.  

     

தலபெருமை :-

     

  பெருமாளின் புத்திர சோகத்தை போக்கியதால் இத்தலத்தில் புத்திர காமேஷ்டி யாகம் நடத்தப்படுகிறது. இறைவன் யோகேஸ்வரர் என்றும், அம்பாள் ஞானாம்பிகை என்றும் அழைக்கப்படுகின்றனர். 

இங்கு சிவன் யோக மூர்த்தியாக இருப்பதால் நினைத்தவுடன் சென்று எளிதாக பார்க்க இயலாது. எப்படியாவது தடங்கல் வந்து விடும். 

அதையும் மீறி நாம் சுவாமியை தரிசித்து விட்டால் நமக்கு யோக நிலை கைகூடும் என்கிறார்கள். சுவாமி அனுக்கிரக மூர்த்தியாக இருப்பதால், தெரியாமல் தவறு செய்பவர்கள் இவரை வணங்கினால் நமது தவறை மன்னித்து அனுக்கிரகம் புரிகிறார்.

இங்குள்ள குறுங்கை கணபதிக்கு மட்டும் இங்கு கஜபுஷ்ட விமானம் இருக்கும். 

பூர்வ ஜென்ம தோஷ பரிகாரம், புத்திர காமேஷ்டி யாகம், 70 வயதில் செய்யக்கூடிய பீமரதசாந்தி கல்யாணம் ஆகியன இத்தலத்தில் முக்கியமானவை. யோகேஸ்வரரை வணங்கினால் இழந்த சொத்துக்கள் மீண்டும் கிடைக்கும், காம குரோதங்கள் விலகும்.

 

இறைவனின் நெற்றிக்கண் மகரக் கொடியோனை சுட்டு எரித்தது(அனங்கன்) பின் வணங்கி மறுபிறவி எடுத்த தலம்.  

     

தல வரலாறு :-

     

  சிவபெருமான் தியானம் செய்து கொண்டிருந்தார். அவரது தியானத்தால் உலகம் வெப்பத்தால் தகித்தது. 

இதை உணர்ந்த தேவர்கள் முருகப்பெருமானிடம் சென்று முறையிட்டனர். ஆனால் முருகனோ தன்னால் தந்தையின் தவத்தை கலைக்க முடியாது என்று ஒதுங்க கடைசியில் மன்மதனிடம் சென்று எப்படியாவது அவரது தியானத்தை கலைக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டனர்.

அதன்படி மன்மதன் நடக்கப்போவது தெரியாமல் தனது அறியாமை மேலிட தன்னிடம் உள்ள வில்லை எடுத்து சர்வேசுவரன் மீது தன் கணைகளைத் தொடுத்தார். ஆனால் கணையோ புஷ்பமாக மாறி வந்து விழுகிறது.

உடனே ஈசுவரன் மன்மதன் இருக்கும் இடம் நோக்கி ஒரு பார்வை பார்த்தார். 

அவ்வளவுதான். எம்பெருமானின் நெற்றிக்கண் மன்மதனை சுட்டு எரித்து விட்டது. பஸ்பமாகிப் போய்விட்டார். 

அதன்பின் ரதி ஈசனிடம் என் கணவரை மீட்டுத்தர வேண்டும் என்று கேட்க, உனது வேண்டுகோளுக்காக ஒருநாள் மட்டும் மன்மதனை உண்டுபண்ணி தேய்பிறையில் தெய்வலோகத்திற்கு அனுப்பிவிடுவதாக கூறினார்.அதுபடி மன்மதன் உயிர்பெற்றதாக வரலாறு கூறுகிறது.  

திருவிழா :-

     

  மாசி மகம் - காமதகன விழா - 10 நாட்கள் திருவிழா - பிரம்மோற்சவம் - இத்தலத்தில் சிறப்பாக நடைபெறும் திருவிழா -பஞ்ச மூர்த்திகள் புறப்பாடு - வீதியுலா. மார்கழி மாதம் - திருவாதிரை உற்சவம்- சுவாமி புறப்பாடு- இதுவும் சிறப்பான விழா ஆகும்..

 நவராத்திரி மற்றும் மாதாந்திர பிரதோசம் ஆகியவை சிறப்பாக நடைபெறுகிறது. வருடத்தின் சிறப்பு நாட்களான தீபாவளி பொங்கல், தமிழ் ஆங்கில புத்தாண்டு தினங்களின் போதும் கோயிலில் சிறப்பு அபிசேக ஆராதனைகளும் நடக்கும். 

நடைதிறக்கும் நேரம் :-

     

  காலை 7 மணி முதல் 12 மணி வரை, மாலை 3.30 மணி முதல் இரவு 9 மணி வரை திறந்திருக்கும்.

ஓம் நமசிவாய
 படித்து பகிர்ந்தது 
இரா இளங்கோவன்
 நெல்லிக்குப்பம். 

சிறுதாவூா் ஸ்ரீ பூதகிரீஸ்வரா் பழைய மாகபாலிபுரம் திருப்போரூர்

*பூத கணங்களால் பிரதிஷ்டை செய்யப்பட்ட பூதகிரீஸ்வரப் பெருமான்*
இந்தக் கோயில், சென்னை பழைய மகாபலிபுரம் சாலையில் திருப்போரூருக்கு அருகிலுள்ள `சிறுதாவூா்’ என்னும் தலத்தில் அமைந்துள்ளது. இத்தலத்தின் ஈசன் `ஸ்ரீபூதீஸ்வரா்’ என்றும் இப்பகுதி மக்களால் பக்தியோடு பூஜிக்கப் படுகிறார்.

பைரவ க்ஷேத்திரம் என்று பக்தியோடு பூஜிக்கப்படும் காசி நகரில் `அந்தா்வேதி’ என்னும் இடத்தில் மிகப்பெரிய யாகம் ஒன்றை நடத்த முடிவு செய்தார் பிரம்மதேவன். இந்த யாகத்திற்காக நான்மறைகளிலும் கரைகண்ட வேதியா்கள் வேண்டுமெனத் திருக்கயிலை நாதனிடம் முறையிட்டார். திருக்கயிலையில் தம் சேவகா்களான பூத கணங்களை யாகத்திற்கு அனுப்பிவைக்கத் திருவுளம் கனிந்தார் ஈசன். பிரம்மதேவனின் யாக வேள்வியில் வேதங்களை முழங்கிக் கொண்டிருந்த அந்தணா்களாக மாறிய பூத கணங்களுக்கு, தில்லையம்பதியில் ஈசன் புரிந்த ஆனந்தத் திருநடனத்தைக் கண்டுகளிக்க வேண்டும் என்ற ஆவல் ஏற்பட்டது.
      
பூதகணங்களின் முடிவால் யாகம் தடைப் பட்டு வேள்வியின் பலன் கிடைக்காமல் போகுமோ என்று கலக்கமுற்ற பிரம்மதேவன், செய்வதறியாது திகைத்து ஈசனிடம் சென்று முறையிட்டார். பிரம்மனின் வேண்டுதலுக்குச் செவிசாய்த்தார் ஈசன். அக்கணமே, கொழுந்துவிட்டு எரிந்து கொண்டிருந்த யாகத் தீயில் ஒளி வெள்ளமாக. குனித்த புருவமும் கொவ்வைச் செவ்வாயுமாக, நடராஜப் பெருமானாகத் தோன்றி பூத கணங்களுக்குத் திருக்காட்சியளித்து அருளினார். ஈசனின் தரிசனத்தால் மகிழ்ந்த பூதகணங்கள், வேள்வியைத் தடையின்றி முறையாக நடத்தி முடித்தன. அதனால் அகம் மகிழ்ந்த பிரம்மதேவன் ,`வைஸ்வதேவம்’ எனும் விருந்து உபசாரத்தை விமர்சையாக நடத்தி, பூதகணங்களை வழியனுப்பிவைத்தார்.

பிரம்மதேவன் நடத்திய இந்த யாகத்தில் அந்தணா்களாகக் கலந்துகொண்ட திருக்கயிலை பூதகணங்களே தில்லைச் சிற்றம்பலத்தில் ஈசனுக்கு நித்ய பூஜைகள் செய்ய பிரம்மதேவனால் அனுப்பிவைக்கப்பட்டனா். இவா்களே தில்லைத் திருத்தலத்தில் ஆடல்வல்லானுக்கு அன்புப் பணிவிடைகள் செய்யும் `தீட்சிதா்கள்’ எனப் புராணங்கள் தெரிவிக்கின்றன.

பிரம்ம தேவனின் யாகத்தை முடித்த பூத கணங்கள் தில்லைக்குத் திரும்பும் வழியில் சிவபூஜை மேற்கொள்ள உகந்ததாய் ஓரிடத்தைத் தேர்வு செய்து, அங்கே சிவலிங்கத்தைப் பிரதிஷ்டை செய்து வழிபாடு செய்தன. இங்ஙனம் பூதகணங்களால் பிரதிஷ்டை செய்யப்பட்டவர் என்பதால் அந்த ஈசனுக்கு `ஸ்ரீபூதகிரீஸ்வரா்’ என்ற திருநாமம் ஏற்பட்டது. பூத கணங்கள்       சிவனாரைப் போற்றி வழிபட்ட இந்தக் கோயில், சென்னை பழைய மகாபலிபுரம் சாலையில் திருப்போரூருக்கு அருகிலுள்ள `சிறுதாவூா்’ என்னும் தலத்தில் அமைந்துள்ளது. இத்தலத்தின் ஈசன் `ஸ்ரீபூதீஸ்வரா்’ என்றும் இப்பகுதி மக்களால் பக்தியோடு பூஜிக்கப் படுகிறார்.

`க்ரோதா’ என்பவா் தனது மகளான `பூதி’ என்பவரை `புலஹா்’ என்ற மகரிஷிக்கு மணமுடித்துக் கொடுத்தார். இவருக்குப் பிறந்த குழந்தைகளே ஈசனுக்குச் சேவை செய்யும் பெறற்கரிய பேறு பெற்ற பூத கணங்களாகும். பிரம்மத்தை அறிந்த இந்தப் பூதகணங்கள் தாங்கள் விரும்பும் வடிவினை எடுக்கக்கூடிய ஆற்றல் பெற்றவை. புனிதமும் மங்களமும் நிறைந்த பூதகணங்கள் `ஆத்ம யோகிகள்’ என்பதனால் யாக வேள்விகளில் பெரும் பங்கு வகிப்பவை. வாயுபுராணமும் மகா பாரதத்தின் சல்ய பா்வமும் இந்தப் பூத கணங்களின் சிறப்புகளை எடுத்துக் கூறுகின்றன.

பூதியின் புதல்வா்களில் முக்கியமானவா்களான கூஷ்மாண்டன், கும்போதரன் மற்றும் கும்பாஸ்யன் ஆகிய மூவரும் சிவ பக்தியில் திளைத்தவா்கள். பூதியின் புதல்வா்களான இவா்களால் பிரதிஷ்டை செய்யப்பட்டதாலும் சிறுதாவூா் திருத்தல ஈசனுக்கு `ஸ்ரீபூதீஸ்வரா்’ என்ற திருநாமம் ஏற்பட்டுள்ளது என்றும் கூறுவர். `பூதி’ என்ற சொல்லுக்கு செல்வம், ஐஸ்வா்யம், ஒளி பெறச் செய்தல், பொன் ஆகிய பொருள் விளக்கங்களும் உண்டு. மேலும் `பூதீசுவரம்’ என்று கல்வெட்டுகளில் குறிப்பிடப்படும் சிறுதாவூா், அக்காலத்தில் `பொன்புரம்’ என்றும் வழங்கப்பட்டுள்ளது. இதனால் சிறுதாவூா் தலத்தில் அருள்பாலிக்கும் ஈசனை வழிபாடு செய்யும் அன்பா்களுக்குச் சகல ஐஸ்வா்யங்களும் பெருகி, பொன் – பொருள் யாவும் கிடைக்கும்; ஒளி மயமான எதிர்காலம் அமையும் என்பது பக்தா்களின் நம்பிக்கை!
      
பஞ்சபூதங்களில் எல்லாம் ஈசன் நீக்கமற நிறைந்திருப்பதாலும் ஈசன் `பூதகிரீஸ்வரா்’ என்று வணங்கப்படுகிறார். ஆகவே, ஈசன் அருள்பாலிக்கும் பஞ்சபூதத் தலங்களில் வழிபாடு செய்யும் அன்பா்களுக்கு என்ன பலன் கிடைக்குமோ, அத்தகைய அரிய பலன்களை சிறுதாவூா் ஸ்ரீபூதகிரீஸ்வரா் திருத்தலத்தில் வழிபாடு செய்வதால் பெறமுடியும். சிறுதாவூா் தலத்தில், தூவெண் மதிசூடி வெள்ளை விடையேறும் பெருமானின் லிங்கத் திருமேனியின் ருத்ரபாகம் முழுவதும் வெண்மை நிறமாக காணப்படுவது, மிகவும் அரிதான திருக் காட்சியாகும். பால்வண்ண நாதராகக் கிழக்கு நோக்கிய திருமுகமண்டலத்தில் திருக்காட்சி தரும் எம்பெருமானின் தரிசனம் மெய் சிலிர்க்கச் செய்கிறது. `கஜபிருஷ்டம்’ எனப்படும் தூங்கானை மாட வடிவில் ஈசனின் கருவறை அமைந்துள்ளது. இத்தலத்தின் அம்பிகை `ஸ்ரீஆரணவல்லி’ என்ற திருநாமத்துடன் பூஜிக்கப்படுகிறாள். `ஆரணம்’ என்றால் `வேதம்’ என்று பொருள். வேத நாயகனும் வேதியா் நாயகனும் ஆன ஈசனின் தேவி என்பதால் அம்பிகைக்கு `ஆரணவல்லி’ (வேதவல்லி) என்ற திருநாமம் ஏற்பட்டுள்ளது.

சிறுதாவூா் ஸ்ரீபூதகிரீஸ்வரா் திருக்கோயிலில் அருள்பாலிக்கும் நந்தி எம்பெருமான், தன் திருமுகத்தை மட்டும் தெற்கு முகமாகத் திருப்பி தரிசனம் தருவது, வேறு எங்கும் காண்பதற்கரிய திருக்காட்சி ஆகும். இது தொடா்பாக இத்தல வரலாறு ஒரு நிகழ்வினை தெரிவிக்கிறது. உடல் நலிவால் பாதிக்கப்பட்ட சிவபக்தா் ஒருவா், தன் ஆயுள் காலம் முடியும் தறுவாயில் இத்தல ஈசனை தரிசிக்க வந்துள்ளார். தரிசனம் முடிந்து வெளியே வரும் நேரத்தில் அந்த பக்தரின் உயிரைப் பறிக்கலாம் என எமதா்மன் தன் தூதா்களுடன் சந்நிதிக்கு வெளியில்       காத்திருந்தார். அப்போது எமதர்மனின் பக்கம் திரும்பிய நந்தி அவரிடம்,“தா்ம ராஜனே! உயிர் பிரியும் தறுவாயில் ஒரு ஜீவன் சிவநாமத்தை உச்சரித்து விட்டால், அந்த ஜீவன் எமபுரம் வருவது தவிர்க்கப்பட்டு சிவபுரம் சென்று விடும் என்பது உமக்குத் தெரியாதா?” என்று கோபமுடன் கேட்டார். அவ்வளவுதான், எமதா்மராஜன் வந்த வழியே திரும்பிச் சென்றதாக இத்தலத்தின் வரலாறு தெரிவிக்கிறது. இக்கதையை ஒட்டியே இக்கோயிலில் தெற்கு நோக்கி திருமுகத்தைத் திருப்பிய நிலையில் காட்சி தருகிறாராம் நந்தி.

தீராத நோய்களினால் அவதிப்படும் அன்பா்களும் ஜாதகத்தில் ஆயுள் ஸ்தானத்துக்கு தோஷம் ஏற்பட்டுள்ள அன்பா்களும், இங்கு பிரதோஷ பூஜையில்       கலந்துகொண்டு ஈசனையும் நந்தி எம்பெருமானையும் மனமுருகி வழிபட, அவா்கள் நோய் நீங்கி நிவாரணம் பெறுவார்கள் என்பதை இத்தலத்தின் அன்பா்கள் பக்தியோடு தெரிவிக்கின்றனா்.

ஓம் நமசிவாய 
படித்து பகிர்ந்தது 
இரா இளங்கோவன்
 நெல்லிக்குப்பம். 

Tuesday, October 28, 2025

உத்தரகோசமங்கை மங்களநாதர்


உத்தரகோசமங்கை_மங்களநாதர் ஆலயம்
        உலகிலேயே சிவபெருமானுக்கு என்று முதலில் உருவாக்கப்பட்ட ஆலயம் #உத்தரகோசமங்கை ஆலயம்.  நவக்கிரகங்கள் தோன்றுவதற்கு முன்பாகவே உருவான  கோயிலும் இதுதான்.  
        நான்கு யுகங்கள் தோன்றுவதற்கு முன்பாகவே உருவாக்கப்பட்ட கோயிலும் இதுதான்.  ஆயிரம் சிவனடியார்கள் ஒரே சமயத்தில் மோட்சம் பெற்ற ஆலயமும் இதுவேதான்.  சிவபெருமான் பார்வதி தேவிக்கு வேத ஆகமங்களின் இரகசியங்களைப் போதித்தது இந்தத் தலத்திலேயே.
        மூவாயிரம் ஆண்டுகளாக பூத்துக்குலுங்கும் இலந்தை மரம் உள்ள ஆலயமும் இதுதான்.  
"தென்னாடுடைய சிவனே போற்றி! எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி!" என்ற வாக்கியம் உருவாவதற்கு காரணமான  இருந்த  இடமும் இதுதான்.
         உலகிலேயே முதல் #மரகத_நடராஜர் சிலை நிறுவப்பட்ட ஆலயமும் இதுதான்.  இப்படி பல பல அதிசயங்களையும், ஆச்சரியங்களையும் தன்னகத்தே கொண்டு சாந்தமாக இருக்கும் ஆலயம்  இராமநாதபுரம் மாவட்டத்தில் அமைந்துள்ள 
திரு உத்தரகோசமங்கை மங்களநாதர்,  மங்களநாயகி திருக்கோயில். 
        உத்தரகோச மங்கையில் உள்ள மூலவர் சிலை "சுயம்பு லிங்கம்" மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு தோன்றியதாக கணிக்கப்படுகிறது.  
       இக்கோயில் மொத்தம் 20 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது.
இக்கோயிலில் உமாமகேஸ்வரர் சன்னதி முன்பு  தம்பதியர் இணைந்து வழிபாடு செய்தால் தம்பதியர் ஒற்றுமை பலப்படும்.  
           திருவிளையாடல் புராணத்தில் வரும் "வழியில் மீன் பிடித்த படலம்" என்னும் வரியில் இத்தலத்தை தான் குறிப்பிட்டுள்ளனர்.  
 இந்நகரம் சிறிதுகாலம் பாண்டிய மன்னரின் காலத்தில் அவர்களது தலைநகரமாக விளங்கியது.
        ஆரம்ப காலகட்டத்தில் சிவபுரம், தெட்சிண கயிலாயம் , சதுர்வேதி, மங்கலம் , இலந்திகைப்பள்ளி,  பத்திரிகா ஷேத்திரம், பிரம்மபுரம், வியாக்கிரபுரம் , மங்களபுரி ஆதிசிதம்பரம்  என்றெல்லாம்  இத்தலம்  அழைக்கப்பட்டதாம்.
         இக்கோயிலில் மங்களநாதர், மங்களநாயகி இதுவரையும் வழிபடும் முன்பு அங்குள்ள பாணலிங்கத்தை தரிசனம் செய்தால் அதற்கான முழுமையான பலன் கிடைக்கும் என்பது மக்களின்  நம்பிக்கை.  
        இங்குள்ள மூலவருக்கு மங்களநாதர் , மங்களேஸ்வரர் , காட்சி கொடுத்த நாயகர்,  பிரளயாகேசுவர் என்னும் பெயர்களும் உள்ளன.
இறைவிக்கு மங்களேசுவரி, மங்களாம்பிகை , சுந்தரநாயகி போன்ற பல பெயர்களும் உள்ளன. 
        இத்தலத்தில் உள்ள கல்வெட்டுக்களில்இராட்சதன்  இராவணனின் மனைவி மண்டோதரியின்  பெயர் இடம் பெற்றுள்ளது. மண்டோதரி பிறந்த இடமும் இந்த உத்தரகோசமங்கை  என்று குறிப்பிடுகின்றனர்.  இந்தக்  குறிப்பின் மூலம் இத்தலம் இராமாயணத்திற்கு முன்பே உருவாக்கப்பட்ட ஆலயம் என்று வரலாற்று ஆசிரியர்கள் கூறுகின்றனர்.
           மண்டோதரி சிறந்த சிவபக்தையாவாள். இராட்சதன் இராவணனுக்கும், மண்டோதரிக்கும் இத்தலத்திலேயே திருமணம் நடைபெற்றதாகக் கூறுவர். இத்தலத்தில் சுவாமியை,  அம்பாள் பூஜிப்பதாக ஐதீகம். 
         இக்கோயிலில் ஆதிகாலத்து வராகிக்கு தனி சந்நிதி அமைந்துள்ளது.  பிரதோஷ நாளன்று இங்கு தாழம்பூ வைத்து வழிபடுகிறார்கள். காரணம் இக்கோவில் சிவபெருமானுக்கும், அம்பாளுக்கும் தாழம்பூ மாலை கட்டி வழிபட்டால் அனைத்து விதமான தோஷங்களில் இருந்தும் விடுபடலாம் என்பது ஐதீகம் . 
          இத்தலத்தில் உள்ள கோயில் குளத்தில் உள்ள மீன்கள் கடல் வாழ் மீன்களாகும்.  சிவபெருமானால் பரதநாட்டியக் கலையை முதல்முதலாக உலக மக்களுக்கு அறிமுகப்படுத்தப்பட்ட இடம் இத்தலம் ஆகும். 
       உத்தரகோச மங்கை_ மங்களநாதரைத்  தரிசித்தால் நமக்கு அனைத்து விதமான நற்பலன்களும் கிடைக்கும்; இறுதியில் முக்தியும் கிடைக்கும்.  ஆண்டு முழுவதும் சந்தன காப்பால் மூடப்பட்டிருக்கும் மங்கநாதரை   ஆருத்ரா தரிசனம் அன்று மட்டுமே, மரகத நடராஜரின் பச்சை திருமேனியை நாம்  தரிசிக்க முடியும்.  எண்ணற்ற  அதிசயங்களைக் கொண்ட 
இக் கோயிலின்  மங்களநாதரையும், மங்கள நாயகியையும்  தரிசிக்கவே நாம்  பிறவிகளில்  புண்ணியங்கள் பலவும்  செய்திருக்க வேண்டும். 

ஓம் நமசிவாய 
படித்து பகிர்ந்தது 
இரா இளங்கோவன் 
நெல்லிக்குப்பம். 

Monday, October 27, 2025

சூரசம்ஹாரம் ஏன் கொண்டாடுகிறோம்

சூரசம்ஹாரம்...
சூரசம்ஹாரம் ஏன் கொண்டாடுகிறோம் தெரியுமா?..

🌟காசியப்ப முனிவர், மாயா என்ற தம்பதியருக்கு பிறந்தவன் சூரபத்மன். இவன் வளர்ந்த பிறகு சிவபெருமானை நோக்கி தவமிருந்து இந்திர ஞாலம் என்னும் தேரையும், பெண்ணால் பிறக்காத குழந்தையால் மட்டுமே தனக்கு மரணம் நிகழ வேண்டும் என்ற வரத்தையும் பெற்றான்.
🌟இந்த வரத்தால் தேவர்களையும், நல்லுயிர்களையும் துன்புறுத்தினான். இதை தடுக்க சிவபெருமானால் அவதரித்தவர் தான் முருகப்பெருமான்.

🌟முருகப்பெருமான் பார்வதிதேவியிடம் வேலை பெற்று, சூரபத்மனை வெற்றி கொண்டு தேவர்களை காத்தது ஐப்பசி சஷ்டி திதியில் தான்.

🌟அதனால்தான் முருகப்பெருமானுடைய கோயில்களில், கந்தசஷ்டி விழாவின் 6ஆம் நாள் சூரசம்ஹாரம் நடத்துகின்றனர்.

சூரசம்ஹாரம் நடக்காத ஒரே ஒரு முருகப்பெருமானின் படைவீடு எது தெரியுமா?

🌟கந்தசஷ்டி விரதமும், சூரசம்ஹார நிகழ்வும் முருகப்பெருமானின் படைவீடுகளில் மிக கோலாகலமாக கடைபிடிப்பது வழக்கம். ஆனால் முருகப்பெருமானின் ஒரு படைவீட்டில் மட்டும் இந்த கந்தசஷ்டி விழா நடக்காமல் மிக அமைதியாக இருக்கும்.

🌟அப்படிப்பட்ட முருகப்பெருமானின் படைவீடு தான் திருத்தணி. இக்கோயில் முருகப்பெருமானின் 5ஆம் படைவீடு ஆகும்.

🌟முருகப்பெருமான் சினம் தணிந்து, வள்ளியை மணம் புரிந்து மிக அமைதியாக அமர்ந்து காட்சி தரக்கூடிய தலம் தான் திருத்தணி கோயில்.

🌟தணிகை என்பதன் பொருள் சினம் தணிதல் ஆகும். திருத்தணி முருகப்பெருமான் கோயிலில் முருகப்பெருமான் சினம் தணிந்து பக்தர்களுக்கு அருளுகின்றார்.

🌟இதன் காரணமாக தான் இந்த கோயிலில் மட்டும் சூரசம்ஹாரம் நடைபெறுவது இல்லை. இருப்பினும் முருகப்பெருமானின் அருளை பெறக்கூடிய கந்தசஷ்டி விழா மட்டும் கொண்டாடப்படுகிறது.

முருகப்பெருமான் திருக்கல்யாண விழா

🌟சூரசம்ஹாரம் முடிந்த மறுநாள் (ஏழாவது நாள்) அனைத்து முருகப்பெருமான் ஆலயங்களிலும் முருகப்பெருமான்தெய்வானை திருமண வைபவம் நடைபெறும்.

🌟கந்தசஷ்டி விழா சூரசம்ஹாரத்தோடு முடிந்து விடுவதில்லை. அசுரனை எதிர்த்து வெற்றி பெற்றதற்காக இந்திரன் தனது மகளான தெய்வானையை முருகனுக்கு திருமணம் செய்து தந்ததோடு தேவ மயிலாகவும் மாறி சேவை செய்தார். இவர்களது திருமணம் முதல் படைவீடான திருப்பரங்குன்றத்தில் நடைபெற்றது.

🌟சூரனை ஆட்கொண்ட தலம் என்பதால் இன்றளவும் திருச்செந்தூரில் கந்தசஷ்டிக்கு மறுநாள் முருகப்பெருமான்-தெய்வானை திருக்கல்யாணம் நடைபெறுகிறது.

அன்று காலையில் தெய்வானை தபசு மண்டபம் சென்று, முருகப்பெருமானை மணந்து கொள்ள வேண்டி தவமிருப்பாள். மாலையில் குமரவிடங்கர் (முருகப்பெருமானின் ஒரு உற்சவர் வடிவம்), முருகப்பெருமானின் பிரதிநிதியாக மயில் வாகனத்தில் தபசு மண்டபம் சென்று தெய்வானைக்கு மாலை சூட்டி நிச்சயதார்த்தம் செய்து கொள்வார்.

🌟நள்ளிரவில் இருவரும் திருக்கல்யாண மண்டபத்திற்கு எழுந்தருள, அங்கு திருக்கல்யாண மண்டபத்தில் குமரவிடங்க பெருமான், தெய்வானை திருக்கல்யாணம் ஐதீக முறைப்படி நடைபெறும்.

🌟மறுநாள் சுவாமி, தெய்வானையுடன் வீதியுலா செல்வார். அடுத்த மூன்று நாட்களும் சுவாமி திருக்கல்யாண மண்டபத்தில் உள்ள ஊஞ்சலில் காட்சி தருவார்.

மஞ்சள் நீராட்டும் வைபவம்

🌟கிராமங்களில் திருவிழாவின் போது கன்னி பெண்கள் தங்களது முறைப்பையனுக்கு மஞ்சள் நீர் ஊற்றி மகிழ்வர். அதுபோல தான் திருச்செந்தூர் தலத்தில் முருகப்பெருமானுக்கு மஞ்சள் நீராட்டும் வைபவம் நடைபெறும்.

🌟கந்தசஷ்டி விழாவின் கடைசி நாள் முருகப்பெருமான், தெய்வானையுடன் வீதியுலா செல்வார். அப்பொழுது, பக்தர்கள் தங்கள் ஊரில் திருமணம் செய்து கொண்ட முருகப்பெருமானை வரவேற்கும் விதமாகவும், போரில் வென்றதன் உக்கிரத்தை குறைக்கும் விதமாகவும் அவர் மீது மஞ்சள் நீர் ஊற்றி மகிழ்வர்.

தெய்வீக திருமணங்கள்

🌟திருமணம் ஆகாதவர்கள், தெய்வ திருமணங்களை கண்டு வழிபட்டால் அவர்களுக்கு விரைவில் திருமணம் கைகூடும்.

🌟குறிப்பாக தெய்வ திருமணங்களை பார்த்தால் நமது திருமண வாழ்க்கையில் உள்ள தடைகள் விலகும் என்பது ஐதீகமாக கருதப்படுகிறது. இதன் காரணமாகவே கோயில்களில் நடைபெறும் தெய்வீக திருமணங்களை பக்தர்கள் கண் குளிர தரிசனம் செய்கின்றனர்.

ஓம் நமசிவாய 
படித்து பகிர்ந்தது 
இரா இளங்கோவன் 
நெல்லிக்குப்பம். 

Followers

வில்வ மரம் பற்றிய தகவல்கள்...

வில்வ மரம் பற்றிய தகவல்கள்... 1)தீட்டுடன் வில்வ மரத்தின் அருகில் செல்லக்கூடாது, தொடக்கூடாது. தீட்டு என்பது, பிறப்பு, இறப்பு, மற்...