Saturday, August 9, 2025

அருள்மிகு பரிதியப்பர் திருக்கோயில்,மேலஉளூர் அஞ்சல்,தஞ்சாவூர் மாவட்டம் – 614 904.

அருள்மிகு பரிதியப்பர் திருக்கோயில்,
மேலஉளூர் அஞ்சல்,
தஞ்சாவூர் மாவட்டம் – 614 904.                    
*மூலவர்:
பரிதியப்பர், பாஸ்கரேசுவரர்

*தாயார்:
மங்களாம்பிகை, மங்கள நாயகி

*தல விருட்சம்:
அரச மரம்.

*தீர்த்தம்:
சூரிய தீர்த்தம், சந்திர தீர்த்தம், கருங்காளி தீர்த்தம்.                  

*பாடல் பெற்ற தலம். ஞானசம்பந்தர் தேவார பதிகம் அருளியுள்ளார். 
*சூரியன் தனக்கு இருந்த நோய் தீர இத்தலம் வந்து சிவபெருமானை வழிபட்டு நோய் நீங்கப்பெற்றான் என்று தலபுராணம் கூறுகிறது. சூரியனுக்கு பரிதி என்ற பெயரும் உண்டு. பரிதி வழிபட்டதால் இத்தல இறைவன் பரிதியப்பர், பாஸ்கரேஸ்வரர் என்ற பெயர்களால் அழைக்கப்படுகிறார்.

*பங்குனி மாதம் 17, 18, 19, 20 ஆகிய தேதிகளில் சூரியனின் கதிர்கள் சிவலிங்கத் திருமேனியில் படுகின்றன.          

*மூலவர் பரிதியப்பர் சந்நிதிக்கு எதிரே உள்ள நந்தியின் பின்னால் சூரியன் பெரிய வடிவுடன் நின்ற நிலையில் சிவதரிசனம் செய்வதைக் காணலாம். 

*மேலும், இத்தலம் பஞ்ச பாஸ்கர தலங்களில் (சூரியன் வழிபட்ட தலங்கள்) ஒன்றாக விளங்குகிறது.             1. ஞாயிறு, சென்னைக்கு அருகில்.                          2. திருச்சிறுகுடி, நன்னிலம் அருகில். 3. திருமங்களகுடி, ஆடுதுறை அருகில். 
4. திருப்பரிதி நியமம், நீடாமங்கலம் அருகில்.                          
5. தலைஞாயிறு திருவாரூர் அருகில். 

*ஜாதகத்தில் சூரியன் பித்ருகாரகன் என்று அறியப்படுவதால், பித்ருகாரகனான சூரியன் இத்தல இறைவனை வழிபட்டு தனது தோஷம் நீங்கப்பெற்றதால், இத்தலம் ஒரு பித்ருதோஷ பரிகாரத் தலமாகப் போற்றப்படுகிறது. 

*ஜாதக ரீதியாக எந்தக் கிரகத்தினாலும், பிதுர் தோஷம் ஏற்பட்டாலும் இத்தலத்தில் பரிகாரம் செய்யலாம்.      

*காத்திகை, உத்திரம், உத்திராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள், சூரிய திசை நடப்பவர்கள், சிம்ம லக்னம் , சிம்ம ராசியில் பிறந்தவர்கள் , சித்திரை, ஆவணி, ஐப்பசி மாதங்களில் பிறந்தவர்கள், தமிழ் மாதத்தின் முதல் தேதியில் பிறந்தவர்கள் முதலியோர் 
தமிழ் மாத வளர்பிறை மற்றும்  முதல்  ஞாயிற்றுக்கிழமை இத்தலம் வந்து பரிதியப்பரையும், சூரியனையும் வழிபட அனைத்து தோஷங்களும் நீங்கும்.

*நோயினால் நீண்ட நாள் அவதிப்படுபவர்கள், தீராத நோயினால் அவதியுறுபவர்கள் இத்தலத்துக்கு வந்து வழிபாடு செய்தால், நலம் அடைவார்கள்.    

 *அம்பாள் மங்களாம்பிகை மாங்கல்ய பாக்கியம் தருபவள் என்று போற்றப்படுகிறாள். 

*இங்குள்ள முருகப் பெருமான் சிறந்த வரப்பிரசாத மூர்த்தியாக வழிபடப் பெறுகின்றார். 

*சண்டிகேசுவரர் சந்நிதியில் மூன்று திருமேனிகள் உள்ளன. 

*மார்க்கண்டேயர் அருவ வடிவில் இத்தலத்தில் தினமும் சிவபூஜை செய்வதாக ஐதீகம். 

*திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோயிலைப் போலவே , இந்த கோயிலிலும் நீண்ட ஆயுளுக்காக பிரார்த்தனை செய்வது பிரபலமான ஒன்றாகும். 60, 70 மற்றும் 80 வது பிறந்தநாள் விழாக்கள் இங்கு அடிக்கடி கொண்டாடப்படுகின்றன. அதற்கு ஏற்ப  கோயிலின் கிழக்கு பிரகாரம் ஒரு மணமேடையுடன் பெரியதாக உள்ளது.   
*இங்கு மண்ணில் புதையுண்டு இருந்த சிவலிங்கம் சிபிச் சக்கரவர்த்தியால் கண்டுபிடிக்கப்பட்டு அவரால் ஆலயம் கட்டப்பட்டது. 

*அமைவிடம்: 
தஞ்சாவூர் - பட்டுக்கோட்டை பேருந்துச் சாலையில் மேல உளூர் (உழவூர்) சென்று அங்கிருந்து 2-கி. மீ.-ல் உள்ள இத்தலத்தை அடையலாம். தஞ்சையிலிருந்து மாரியம்மன்கோயில் வழியாகவும், மன்னார்குடிச் சாலை சடையார் கோயில் பொன்றாப்பூர் வழியாகவும் நகரப் பேருந்துகள் செல்கின்றன.                   

ஓம் நமசிவாய 
படித்து பகிர்ந்தது 
இரா இளங்கோவன் 
நெல்லிக்குப்பம். 

ஆஞ்சனேயரின் பிரம்மாண்டம் நங்கநல்லூர் கோயிலின் அதிசயம்!

*ஆஞ்சனேயரின் பிரம்மாண்ட தரிசனம்: நங்கநல்லூர் கோயிலின் அதிசயம்!*
விஸ்வரூப அதிவ்யாதிஹார ஸ்ரீ பக்த ஆஞ்சனேய சுவாமி கோயில் சென்னை நகரின் மையப் பகுதியிலிருந்து சுமார் 10 கிலோ மீட்டர் தொலைவில் நங்கநல்லூரில் அமைந்துள்ளது. சுருக்கமாக நங்கநல்லூர் ஆஞ்சனேயர் கோயில் என்று இக்கோயில் அழைக்கப்படுகிறது. அதன் முக்கிய தெய்வமான ஹனுமனிடமிருந்து இப்பெயரை இக்கோயில் பெற்றது.

இளம் வானரத்தின் பெண்ணான அஞ்சனாவின் மகன் என்பதால், இவர் ஆஞ்சனேயர் என்றும் அழைக்கப்படுகிறார். கோயிலின் மூலக்கல் 1989ம் ஆண்டு பக்தியுள்ள ஆஞ்சனேயர்களான ஸ்ரீ மாருதி பக்த சமாஜன் குழுவினரால் நாட்டப்பட்டது. இது இறுதியாக, 1995ல் பொதுமக்களின் வழிபாட்டுக்காக திறக்கப்பட்டது. கோயிலின் மிக முக்கியமான அம்சம் இங்குள்ள திரு உருவச்சிலையின் உயரம் 32 அடி ஆகும். ஹனுமன் சிலை ஒற்றை கிரானைட் கல்லால் வடிவமைக்கப்பட்டுள்ளது இதன் சிறப்பம்சமாகும். ஆஞ்சனேயர் அல்லது அனுமனின் பக்தர்கள் மட்டுமல்லாமல், பிற பக்தர்களும் விரும்பும் திருக்கோயிலாக இது அமைந்துள்ளது.

இந்தத் திருக்கோயில் சில தசாப்தங்களுக்கு சற்று பழைமையானது. கோயில் வளாகத்திற்குள், ஸ்ரீராமர் மற்றும் ஸ்ரீ கிருஷ்ணர் இருவரின் கோயில்களும் உள்ளன. இது இந்து மதத்தின் இரண்டு பெரிய இதிகாசங்களான ராமாயணம் மற்றும் மகாபாரதத்திலும் ஹனுமன் இருப்பதைக் குறிக்கிறது. ராமாயணத்தில் ஹனுமன் தீவிர, 'ராம பக்தர்' ஆவார். மேலும், இலங்கையில் ராவணனுக்கு எதிரான போரில் ஸ்ரீராமர் வெற்றி பெறுவதில் அவர் முக்கியப் பங்கு வகித்தவர்.
அசல்பதிவேற்றியவருக்கு நன்றி.

அனுமனின் தீவிர பக்தர்களும் அவரது வழியைப் பின்பற்றுபவர்களுமான ஒரு சமூகத்தினரின் விருப்பத்தின் பேரில் இந்தக் கோயில் நிறுவப்பட்டது. ‘ஸ்ரீ மாருதி பக்த சமாஜன்’ என்பது இந்தக் குழுவின் பெயர். அவர்கள் 1989ம் ஆண்டு தெய்வத்தின் உயரமான சிலையை நிர்மாணித்தனர். மேலும், கோயில் உருவாக்கப்பட்ட பிறகு, சன்னிதி மற்றும் சிலை 1995ல் பிரதிஷ்டை செய்யப்பட்டன. அன்றிலிருந்து, ஆஞ்சனேய பக்தர்கள் ஒவ்வொரு ஆண்டும் அதிக எண்ணிக்கையில் இக்கோயிலுக்கு வருகை தந்து வருகின்றனர். கோயிலின் பின்னணியில் இருந்த முக்கிய ஆர்வலர்கள் ஸ்ரீ ராகவேந்திர சுவாமிகள் மற்றும் ஸ்ரீ காஞ்சி பரமாச்சாரியார். தங்கள் வழிபாட்டுக் கடவுளுக்குக் கட்டடம் கட்டுவது அவர்களின் ஆன்மிக அழைப்பாகும். இந்தக் கோயில் இப்போது இந்து சமய மற்றும் அறநிலையத் துறையால் நிர்வாகத்தின் கீழ் உள்ளது.

இந்தக் கோயிலில் ஐந்து முக்கிய விழாக்கள் சிறப்பாகக் கொண்டாடப்படுகின்றன. ஒன்று ஸ்ரீ ராமநவமி, இது ஸ்ரீ ராமரின் பிறந்த நாளாகும். இதற்கு அனுமன் ஜயந்திக்கு அடுத்தபடியாக மிக அதிக முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. வாயு பகவானால் அருளப்பட்ட அஞ்சனைக்கு அனுமன் பிறந்த நாள் இது. ஒன்பது நாட்களும் விஜயதசமி அல்லது நவராத்திரி விழாக்களும் இங்கு மிகவும் உற்சாகமாகக் கொண்டாடப்படுகின்றன. மதுராவில் ஸ்ரீ கிருஷ்ணர் பிறந்ததைக் குறிக்கும்
ஸ்ரீ கிருஷ்ண ஜயந்தி மற்றும் பவித்ரோத்ஸவம் ஆகியவை விஸ்வரூப ஆதிவ்யாதிஹாரா ஸ்ரீ பக்த ஆஞ்சனேய சுவாமி கோயிலில் பெரிய நிகழ்வுகளாகும்.

அடிப்படை பூஜை, அர்ச்சனைக்கு 10 ரூபாய் பெறப்படுகிறது. அதைத் தவிர, தங்கம், வெள்ளி மற்றும் புடைவைகள் மற்றும் வேட்டிகள் போன்ற பொருட்களும் ஹோமம், யாகம். தீப யாகம் போன்றவை மூலமும் பக்தர்கள் தங்கள் பிரார்த்தனைகளை செலுத்தலாம். இக்கோயில் திறந்திருக்கும் நேரம் காலை 5 முதல் மதியம் 12 மணி வரையும், மாலை 4.30 முதல் இரவு 9 மணி வரையுமாகும். கோயில் நுழைவுக் கட்டணம் என்று எதுவும் கிடையாது. இந்துக்களாகப் பிறந்த அனைவரும் வாழ்வில் ஒருமுறையாவது இத்திருக்கோயிலுக்குச் சென்று ஹனுமனை வழிபட்டு வாழ்வில் நலத்தை சேர்த்துக் கொள்ளலாம்.

ஓம் நமசிவாய 
படித்து பகிர்ந்தது
 இரா இளங்கோவன் 
நெல்லிக்குப்பம். 

சொக்கநாதருக்கு சந்தனம் அரைத்து கொடுத்த மூர்த்தி நாயனார்..

#மூர்த்தி நாயனார் 
அறுபத்து மூன்று நாயன்மார்களும் சிவபெருமானுக்குத் தன்னலம் இன்றி தொண்டுகள் பல செய்து வந்தனர்.அந்த வரிசையில் மூர்த்தி நாயனார் மதுரை சொக்கநாதருக்கு சந்தன காப்பிடுவதற்கு, தினந்தோறும் அபிஷேக‌, அல‌ங்கார‌த்திற்கான‌ சந்தனத்தை அரைத்துக் கொடுக்கும் திருப்பணியைத் தமது கடமையாகக் கொண்டிருந்தார். இந்த திருப்பணிக்குப் பகை அரசர் இடையூறு செய்தும் மூர்த்தி நாயனார் மனந்தளர்ந்து விடாமல் சிவனாருக்குச் சந்தனக் காப்பிட தன்னுடைய முழங்கைகளை அரைத்தவர்.
மூர்த்தி நாயனாரை “மும்மையால் உலகாண்ட மூர்த்திக்கும் அடியேன்” என்று சுந்தரமூர்த்தி நாயனார் போற்றுகின்றார்.

மூர்த்தி நாயனார் பாண்டிநாட்டில், தமிழ் வளர்த்த மதுரை மாநகரில் வைசியர் (வணிகர்) குலத்தில் அவதரித்தார். இவர் அகப்பற்று புறப்பற்று விடுத்து பற்றற்ற சிவபெருமான் திருவடிகளையே மெய்ப் பற்று என்றெண்ணி அவர்தம் திருவடிகளைச் சரண் அடைந்து, வேறு எதையும் சிந்திக்காதவர். இவர் மதுரையில் வீற்றிருக்கின்ற சொக்க‌நாத‌ர் மேல் பெரும் பக்தி கொண்டிருந்தார். பெரும் வணிகராக இருந்த போதிலும் தினந்தோறும் சொக்க‌நாத‌ருக்கு சந்தனகாப்பிடுவதற்கு, சந்தனத்தை அரைத்துக் கொடுக்கும் திருப்பணியைத் தமது கடமையாகக் கொண்டிருந்தார்.

ஒரு சமயம் க‌ன்ன‌ட‌ தேச‌த்தில் இருந்து வ‌டுக‌ ம‌ன்ன‌ன் ஒருவ‌ன் ம‌துரையை நோக்கிப் படையெடுத்து வந்து பாண்டியனை வீழ்த்தி மதுரையைக் கைப்பற்றி ஆளத் தொடங்கினான். அவன் சமண சமயத்தைச் சார்ந்ததால், சைவ சமயத்தைப் பின்பற்றுபவர்களைச் சமண சமயத்திற்கு மாற்ற முற்பட்டான். அவ்வாறு மாறாத சைவ சமயத்தவர்க்குப் பல வழிகளில் கொடுமைகள் புரிந்தான். மற்றும் சிவாலயங்களுக்குத் திருப்பணிகள் நடைபெறாமல் இருக்கப் பல வழிகளில் துன்பத்தைக் கொடுத்தான். அவனுடைய கொடுமைகள் மூர்த்தி நாய‌னாருக்கும் தொடர்ந்தது. எனினும் அவர் சொக்க‌நாத‌ருக்கு சந்தனம் அரைத்துக் கொடுக்கும் பணியை இடைவிடாது தொடர்ந்து செய்த வண்ணம் இருந்தார்.
அவ‌ர் செய்து வ‌ந்த‌ இறைத் தொண்டுக்குத் த‌ட‌ங்க‌ல் செய்தால் அவ‌ர் ம‌ன‌ம் மாற‌லாம் என்று திட்ட‌ மிட்ட மன்னன் சதி செய்து சந்தனக் கட்டைகள் கிடைக்காதவாறு செய்தான்

மூர்த்தி நாயனார்!!

அறுபத்து மூன்று நாயன்மார்களும் சிவபெருமானுக்குத் தன்னலம் இன்றி தொண்டுகள் பல செய்து வந்தனர்.அந்த வரிசையில் மூர்த்தி நாயனார் மதுரை சொக்கநாதருக்கு சந்தன காப்பிடுவதற்கு, தினந்தோறும் அபிஷேக‌, அல‌ங்கார‌த்திற்கான‌ சந்தனத்தை அரைத்துக் கொடுக்கும் திருப்பணியைத் தமது கடமையாகக் கொண்டிருந்தார். இந்த திருப்பணிக்குப் பகை அரசர் இடையூறு செய்தும் மூர்த்தி நாயனார் மனந்தளர்ந்து விடாமல் சிவனாருக்குச் சந்தனக் காப்பிட தன்னுடைய முழங்கைகளை அரைத்தவர்.
மூர்த்தி நாயனாரை “மும்மையால் உலகாண்ட மூர்த்திக்கும் அடியேன்” என்று சுந்தரமூர்த்தி நாயனார் போற்றுகின்றார்.

மதுரை மாநகரில் அவதரித்த மூர்த்தி நாயனார்:
மூர்த்தி நாயனார் பாண்டிநாட்டில், தமிழ் வளர்த்த மதுரை மாநகரில் வைசியர் (வணிகர்) குலத்தில் அவதரித்தார். இவர் அகப்பற்று புறப்பற்று விடுத்து பற்றற்ற சிவபெருமான் திருவடிகளையே மெய்ப் பற்று என்றெண்ணி அவர்தம் திருவடிகளைச் சரண் அடைந்து, வேறு எதையும் சிந்திக்காதவர். இவர் மதுரையில் வீற்றிருக்கின்ற சொக்க‌நாத‌ர் மேல் பெரும் பக்தி கொண்டிருந்தார். பெரும் வணிகராக இருந்த போதிலும் தினந்தோறும் சொக்க‌நாத‌ருக்கு சந்தனகாப்பிடுவதற்கு, சந்தனத்தை அரைத்துக் கொடுக்கும் திருப்பணியைத் தமது கடமையாகக் கொண்டிருந்தார்.

மூர்த்தி நாயனாருக்குச் சந்தனக் கட்டை கிடைக்க விடாமல் சதி:
ஒரு சமயம் க‌ன்ன‌ட‌ தேச‌த்தில் இருந்து வ‌டுக‌ ம‌ன்ன‌ன் ஒருவ‌ன் ம‌துரையை நோக்கிப் படையெடுத்து வந்து பாண்டியனை வீழ்த்தி மதுரையைக் கைப்பற்றி ஆளத் தொடங்கினான். அவன் சமண சமயத்தைச் சார்ந்ததால், சைவ சமயத்தைப் பின்பற்றுபவர்களைச் சமண சமயத்திற்கு மாற்ற முற்பட்டான். அவ்வாறு மாறாத சைவ சமயத்தவர்க்குப் பல வழிகளில் கொடுமைகள் புரிந்தான். மற்றும் சிவாலயங்களுக்குத் திருப்பணிகள் நடைபெறாமல் இருக்கப் பல வழிகளில் துன்பத்தைக் கொடுத்தான். அவனுடைய கொடுமைகள் மூர்த்தி நாய‌னாருக்கும் தொடர்ந்தது. எனினும் அவர் சொக்க‌நாத‌ருக்கு சந்தனம் அரைத்துக் கொடுக்கும் பணியை இடைவிடாது தொடர்ந்து செய்த வண்ணம் இருந்தார்.
அவ‌ர் செய்து வ‌ந்த‌ இறைத் தொண்டுக்குத் த‌ட‌ங்க‌ல் செய்தால் அவ‌ர் ம‌ன‌ம் மாற‌லாம் என்று திட்ட‌ மிட்ட மன்னன் சதி செய்து சந்தனக் கட்டைகள் கிடைக்காதவாறு செய்தான்.

சந்தனக் காப்பிட தன்னுடைய முழங்கைகளை அரைத்தார்:
அரசனுடைய சதித்திட்டத்தால் ஒருநாள் மூர்த்தி நாயனார் மதுரை முழுவதும் சந்தனக்கட்டை தேடி அலைந்தும் கிடைக்காமல் போயிற்று, மிகவும் சோர்வுடன் கோயிலுக்குத் திரும்பினார். மனம் மிகவும் கவலையுற்று கோயிலில் சந்தனம் அரைக்கும் கல்லில் அருகே நின்று கொண்டிருந்தார். அப்போது ‘சந்தனக் கட்டைதான் கிடைக்கவில்லை, ச‌ந்தனம் அரைக்கும் இந்த கட்டையின் முழங்கைகள் இருக்கின்றனவே. இதனைக் கல்லில் அரைத்து இறைவனுக்குக் காப்பிடுவோம்’ என்று எண்ணினார். தன்னுடைய இரண்டு முழங்கைகளையும் சந்தனம் உரைக்கும் கல்லில் வைத்து உரைக்கத் தொடங்கினார். ஐந்தெழுத்து மந்திரத்தை உச்சரித்தபடி வலியைப் பொருட்படுத்தாது தொடர்ந்து கல்லில் உரைத்துக் கொண்டே இருந்தார். அவருடைய முழங்கைகளில் தோல் கிழிந்து எலும்பு நொறுங்கி உள்ளிருக்கும் சதை வெளியே வந்தது. இத‌ற்குமேல் சொக்க‌நாத‌ரால் பொறுக்க‌ முடிய‌வில்லை.

“மூர்த்தியாரே, உனக்குத் தீங்கு செய்தவன் கைப்பற்றியிருக்கும் இந்நாடு நாளை உன் வசப்படும். அதனை ஏற்று நல்லாட்சி புரிந்து இறுதியில் எமது திருவடி சேர்வாயாக என்று சிவபெருமான் அச‌ரீரியாக‌க் கூறினார். மூர்த்தி நாயனார் அதைக் கேட்டுத் தேய்த்தலை நிறுத்தினார். அவருடைய கைகள் முன்போல் மாறின. சந்தனம் வாசனை சொக்க‌நாத‌ர் கோயில் முழுவதும் மணத்தது. சிவனாரின் ஆணையைக் கேட்டதும் ‘சிவத்தின் விருப்பம் அதுதான் என்றால் அதனை நான் செவ்வனே செய்து முடிப்பேன்.’ என்று மனதிற்குள் எண்ணினார்.

அன்றைய இரவே வ‌டுக‌ மன்னன் திடீர் ம‌ர‌ண‌ம் எய்தினான். அரச வாரிசு இல்லாமையால் யானையின் கையில் மாலை கொடுக்க‌ப்ப‌ட்டு அந்த‌ யானை யாருக்கு மாலை இடுகிற‌தோ அவ‌ரே அர‌ச‌ன் என்று அக்கால‌ முறைப்ப‌டி தீர்மானிக்க‌ப்ப‌ட்ட‌து. அவர்களின் வழக்கப்படி பட்டத்து யானையின் துதிக்கையில் மாலையைக் கொடுத்து அதனுடைய கண்களைக் கட்டிவிட்டு மதுரைக்குள் அனுப்பினர். அப்போது மூர்த்தி நாயனார் சொக்கநாதர் கோயிலிலிருந்து வெளியே வரும்போது, பட்டத்து யானை மூர்த்தி நாயனாரின் கழுத்தில் மாலையை அணிவித்து அவரை தன் மீது ஏற்றிக் கொண்டது. ம‌க்க‌ள் யாவ‌ரும் ம‌கிழ்ந்து ஆர‌வார‌ம் செய்த‌ன‌ர். இதனைக் கண்டதும் அமைச்சர்கள் தங்களுடைய அரசன் தேர்வு செய்யப்பட்டதை எண்ணி மகிழ்ச்சி அடைந்து, மூர்த்தி நாயனாரை அரச பொறுப்பை ஏற்றுக் கொள்ள வேண்டினர். அவரோ சமண சமயத்தை விடுத்து மதுரை மக்கள் எல்லோரும் சைவத்தைப் பின்பற்றினால் தாம் அரச பொறுப்பை ஏற்பதாகத் தெரிவித்தார். அமைச்சர்கள் அவரிடம் “அரசரின் விருப்பம் அதுவானால் அவ்வாறே நடக்கும்.” என்று தெரிவித்தனர். இதனால் மகிழ்ந்த மூர்த்தி நாயனார் அரச பொறுப்பை ஏற்றுக் கொள்ளச் சம்மதித்தார். மறுநாள் அமைச்சர்கள் மணிமுடி சூடி சந்தனம்மிட்டு, அணிகலன்களை அணிந்து முறையாக அரச பொறுப்பை ஏற்றுக் கொள்ள வேண்டினர். அவர்களிடம் மூர்த்தியார் “எனக்கு ஜடாமுடியே திருமுடி. திருநீறே சந்தனம். ருத்திராக்கமே அணிகலன்கள். இவற்றுடனே நான் அரச பொறுப்பை ஏற்பேன்.” என்று கூறி அவர்கள் கொடுத்ததை ஏற்க மறுத்து விட்டார். அறவழியில் சைவ நெறி ஓங்க நெடுநாட்கள் மதுரையை ஆட்சி புரிந்து இறைவனுக்குத் திருப்பணிகள் செய்வித்து, இறுதியில் சிவபெருமானின் திருவடிகளை அடைந்தார்.

அறவழியில் சைவ நெறி ஓங்க நெடுநாட்கள் மதுரையை ஆட்சி புரிந்து சிவபெருமானுக்குத் திருப்பணிகள் செய்வித்த மூர்த்தி நாயனாரின் குருபூஜை ஆடி மாதம் கார்த்திகை நட்சத்திரத்தில்
கொண்டாடப்படுகிறது. அவர் அவதாரம் செய்த ஸ்தலமும், முக்தியடைந்த ஸ்தலமுமான மதுரை அ/மி. ஸ்ரீமீனாட்சியம்மன் கோயிலில் மிகச்சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. 

ஓம் நமசிவாய
 படித்து பகிர்ந்தது
 இரா இளங்கோவன் 
நெல்லிக்குப்பம். 

Friday, August 8, 2025

ஆவணி அவிட்டம் திருநாள் புது பூணூல் போட்டாச்சா?’

*ஆவணி அவிட்டம் திருநாள்* *பூணூலின் உண்மையான மகிமை*
ஆவணி அவிட்டம்*
‘புது பூணூல் போட்டாச்சா?’ என்று கேட்கையிலேயே, அது ஆவணி அவிட்டப் பண்டிகையென்று சிறு குழந்தைகள் கூட சொல்லிவிடும். பூணூல் அணியும் வழக்கமுள்ள இந்துக்களான அந்தணர், வைசியர்கள், சமணரௌகள், விஸ்வகர்மா போன்றவர்கள் ஆவணி அவிட்டப் பண்டிகையன்று, பழைய பூணூலை மாற்றி புதுப் பூணூல் அணிவார்கள். ஆவணி அவிட்ட பண்டிகை கிராமப்புறங்களில் ஆற்றங்கரைப் பக்கத்திலும், நகரங்களில் கோயில்கள், பொது மண்டபங்கள் மற்றும் வீடுகளில் நடைபெறும்.

ஆவணி அவிட்டம் கொண்டாடும் காலம்: ரிக் வேதம் பின்பற்றுவர்கள், ஆவணி மாத திருவோண நட்சத்திரத்திலும், யஜுர் வேதத்தினர் ஆவணி மாத பௌர்ணமியிலும், சாம வேதக்காரர்கள், ஆவணி மாத அஸ்த நட்சத்திரத்திலும் ஆவணி அவிட்டம் கொண்டாடுவார்கள். கேரளாவிலும், குஜராத்திலும் அதர்வண வேதத்தினர் இதனைக் கொண்டாடுகின்றனர்.
சாம வேதத்தைப் பொறுத்தவரை மந்திரங்கள் அதிகம். எருக்க இலையில் அரிசி வைத்து நீரில் தர்ப்பணம் செய்வார்கள். தேவ, ரிஷி, பிதுர் ஆகிய பல்வேறு தர்ப்பணங்கள் செய்து, வேள்வி வளர்த்து, கும்பம் வைத்து பூஜை செய்வார்கள். வடமொழியில் ‘அத்யயனம்’ என்றால் கல்வி. வேதம் பற்றிய கல்வியை உபகர்மா அல்லது ஆவணி அவிட்டம் என்பார்கள். உபகர்மா எனும் வேதத்தைத் தொடர்ந்து சொல்லி வந்தால், மந்திரத்திற்கு பலன் அதிகமாகும்.


தலை ஆவணி அவிட்டம்: சிறு வயதில், முதன் முதலில் பூணூல் அணிவித்து பிரம்மோபதேசம் செய்யப்பட்ட சிறுவர்களுக்கு, அதன் பிறகு வரும் ஆவணி அவிட்டம் ‘தலை ஆவணி அவிட்ட’மாகும். அன்று சிறுவர்களுக்கு பட்டம் கட்டி விசேஷ மந்திரங்களைக் கூறி ஆசீர்வதிப்பது வழக்கம்.

காஞ்சி பெரியவர் பூணூல் மாற்றுவது குறித்து கூறிய சில செய்திகள்:

பூணூலை வருடம் ஒரு முறை ஆவணி அவிட்டம் அன்று மட்டும் மாற்றுவது சரி கிடையாது. மாதந்தோறும் பூணூலை மாற்றுவது அவசியம். அதாவது, அமாவாசை தர்ப்பணம் செய்கையில் மாற்றி விடவேண்டும். தீட்டுப் பட்டால் மாற்ற வேண்டும். அதேபோல், வீட்டில் குழந்தை பிறந்து 11ம் நாள் புண்ணியாஜனமன்று பூணூல் மாற்றுதல் அவசியம். துக்கம் விசாரிக்க சென்று வந்தால் பூணூலை மாற்ற வேண்டும். பூணூல் என்பது காயத்ரி மந்திரம் செய்தது. வெறும் நூல் கிடையாது. உடம்பை ரட்சிக்கும் புனித நூலாகிய பூணூலை,  மறந்தும்கூட  முதுகு சொறியப் பயன்படுத்துவது கூடாது.

ஆவணி அவிட்டம் தர்ப்பண பலன்கள்: ரிஷிகள், தேவர்கள் மற்றும் முன்னோர்களது ஆசிகள் கிடைக்கும். சரஸ்வதி கடாட்சம் ஏற்படும். தீய சக்திகள் அண்டாது. உடல் தேஜஸுடன் விளங்கும். முன்னோர்களின் ஆத்மா சாந்தியடையும்.

காயத்ரி ஜபம் (மந்திரம்) விபரங்கள்:

ஆவணி அவிட்டத்திற்கு மறுநாள் வருவது காயத்ரி ஜபம். வேதங்களின் தாய் காயத்ரி எனக் கூறப்படுகிறது.

‘ஓம் பூர்: புவ: ஸுவ:
தத் ஸவிதுர் வரேண்யம்
பர்கோ தேவஸ்ய தீமஹி
தியோ: யோந: ப்ரசோதயாத்’

என்கிற சக்தி வாய்ந்த மந்திரமாகிய காயத்ரி ஜபத்தை, சங்கல்பம் செய்த பின்னர் 108 அல்லது 1008 முறைகள் உச்சரித்து ஜபம் செய்ய வேண்டும். மேலும், இதை தினமும் சூரிய நமஸ்காரத்திற்குப் பின்னும் செய்யலாம்.
அசல்பதிவேற்றியவருக்கு நன்றி.

காயத்ரி ஜபம் செய்கையில், மோதிர விரலின் இரண்டாவது கணு தொடங்கி கீழ் நோக்கி வந்து சுண்டு விரலின் முதல் கணு வரை மேல் நோக்கி சென்று, ஆள்காட்டி விரலின் அடிக்கணு வரை வந்தால் பத்து எண்ணிக்கை வரும். ஒவ்வொரு பத்தாக எண்ணி 108, 1008 எனச் செய்யலாம். முத்து, பவளம் போன்ற மாலைகளை கைகளால் உருட்டியவாறும் எண்ணலாம்.

காயத்ரி மந்திரத்தில் சக்தி வாய்ந்த பத்து பதங்கள் உள்ளன. அவை: 1. தத், 2. ஸவிது, 3. வரேண்யம், 4. பர்கோ, 5. தேவஸ்ய, 6. தீமஹி, 7. தியோ, 8. யோ, 9. த:, 10. ப்ரசோதயாத் ஆகியவையாகும்.

காயத்ரி ஜபம் செய்வதின் மூலம் முகத்தில் அமைதி தவழும், எடுத்த காரியத்தை தடங்கலின்றி முடிக்க முடியும், நோய்கள் நம்மை அண்டாது, நினைத்தது நடக்கும். ஆவணி அவிட்டமும், காயத்ரி ஜபமும் ஆண்களுக்குரிய பண்டிகைகள் என்றாலும், வீட்டுப் பெண்களும் இதில் ஈடுபாட்டுடன் அமர்க்களமாக ஸத்தி விருந்து தயாரித்து சிறப்பாகக் கொண்டாடுவார்கள்.
ஓம் நமசிவாய 
படித்து பகிர்ந்தது 
இரா இளங்கோவன் 
நெல்லிக்குப்பம். 

Thursday, August 7, 2025

சின்னமனூர் அரிகேசநல்லூர் பூலாநந்தீஸ்வரர்

 தேனி மாவட்டத்தில் உள்ள புகழ்பெற்ற
சிவ தலமான 
உலகப் புகழ்பெற்ற 
செப்பேடு கண்ட #சின்னமனூர் என்ற #அரிகேசநல்லூர் 
சுரபி நதிக் கரையில் அமைந்துள்ள 
#பூலாநந்தீஸ்வரர் 
#சிவகாமிஅம்மன் திருக்கோயிலை தரிசிக்கலாம் வாருங்கள் 🙏🏻 🙏🏻 🙏🏻 

                 

திருமால்,  பிரம்மா, இந்திரன் வழிபட்டுப்  பேறு  பெற்ற தலம் –  சிவகாமி  சுயம்புவாக  கிடைத்த கோயில்-  காமதேனு,  கற்பக விருட்சம்   சாபம் நீங்கிய தலம் –  கந்தபுராணத்தில் புகழப்படும் தலம் – சிவகங்கை  தீர்த்தம்  கொண்ட  கோயில் –  கங்கைத் துளி சிந்திய பூமி –  பாண்டிய, சோழ மன்னர்கள் திருப்பணி செய்த ஆலயம் – பாண்டிய மன்னனுக்காகத் தன் உருவத்தைக் குறைத்துக் கொண்ட இறைவன் – பகைவர்களை வெல்ல உதவிய சிவபெருமான் –  கேட்ட வரம் அருளும் பூலா மரம் கொண்ட கோயில்  என பல்வேறு சிறப்புக்கள் கெண்ட தலமாக விளங்குவது  தேனி மாவட்டம்  சின்னமனூர் சிவாலயம் ஆகும்.

தலபுராணம்

                சிவபெருமானுக்கு  எதிராக நடந்த   தக்கன் யாகத்தில்  பங்கேற்றதால்,  கற்பக விருட்சமும்,  காமதேனுவும்  சாபம் பெற்று,   முட்பூலா மரமாகவும்,  நாட்டுப் பசுவாகவும்  மாறி, பூமியில் தோன்றின.
                தங்கள் தவறை நினைந்து சாப விமோசனம்  கேட்டபோது,  இடையன் மூலம்  கற்பகத் தருவிற்கும்,  புலி மூலம்   காமதேனுவுக்கும் வழி பிறக்கும் என்ற வாக்கு கிடைத்தது.

                காசியில்  தவமிருந்த  அந்தணனிடம் புலியாக மாறி  அவன் தவத்திற்கு இடையூறு செய்த கந்தர்வன்  சாபம் பெற்றுப் புலியானான்.   சாப விமோசனம் வேண்டி நின்ற போது சிவ நாமம் ஒலிக்கும் போது  இயல்பு நிலை திரும்பும்  என்ற பதில் கிடைத்தது.    சதுரகிரிக்கும் வராக மலைக்கும்  அருகே அமைந்துள்ள  திருமலையில், காமதேனு பசுவாகப் பிறந்து  வாழ்ந்து வந்தது.

                இதே போல,   வராக மலைக்குத் தெற்கே,  சுரபி நதிக்குக் கிழக்கே,  சிவபெருமான் தோன்றியிருந்தார்.   இந்த லிங்கத்தின்  இடதுபுறம் முட்பூலா மரமாக கற்பக விருட்சம்  தோன்றி  லிங்கத்திற்கு நிழல் தந்து வந்தது.

                திருமலையில்   மேய்ந்துகொண்டிருந்த பசு மீது  பாய புலி முயன்றது.  அதைக் கண்ட பசு, “என் கன்று பசியோடு காத்திருக்கிறது.  நான் பால் தந்துவிட்டு உன்னிடம் சரணடைகிறேன். அதன்பின் நீ  என்னைப் புசிக்கலாம், இது சத்தியம்”. என்றது. இதைக் கேட்ட புலி அதிர்ச்சி அடைந்தது.  பிறகு  சம்மதித்தது.  பசு சொன்னபடியே தன்  கன்றுக்குப் பால்  கொடுத்து பசியாற்றி,   மீண்டும் புலியின் முன் வந்து நின்றது.  ஆனால்  அதைக் கொல்ல விரும்பாத புலி தயங்கி நிற்க,  பசு  தன் வாக்குப்படி பாறையில் மோதி  இறந்தது. புலியும் தன் தவறை உணர்ந்து தன்  உயிரை மாய்த்துக்கொண்டது. 

                அப்போது அங்கே  காளை வாகனத்தில் சிவபெருமான் பார்வதியோடு  காட்சி தந்து அவர்களை  உயிர்ப்பித்தான். பசு  காமதேனுவாகவும்,  புலி  கந்தர்வனாகவும் மீண்டும் மாறினர்.

                இதன்பின், காமதேனுவின் வேண்டுதல்படி,  திருமலை, சுரபிமலை என அழைக்கப் பட்டது. சிவனின்  தலையில் உள்ள கங்கையின் நீர்த்துளி அம்மலையில் சிதறியது. அதுமுதல் சுரபி நதியாகத் தோன்றி பாவம் தீர்க்கும்   நதியாக  விளங்குகிறது.

திருமால்  தரிசித்தது

                துவாபர யுகத்தில்  திருமால், நாரதரின் வழிகாட்டுதல்படி பூலாவனம்  வந்து சிவனை  வணங்கிய போது தில்லை நடனத்தின்  காட்சியைக் கண்டு களித்தார். உடனே  திருமாலின் வேண்டுதல்படி சிவகங்கைத்  தடாகம் ஒன்று  உருவாக்கப்பட்டது.

                இதுபோல இந்திரன்,  இந்திராணியோடு வந்து தரிசித்து சென்றார். அது முதல்  இப்பகுதி அரிகேசரி நல்லூர்  என்றும்,  இறைவன் அரிகேசரி நாதன் என்றும் வழங்கலானது.           அரி-திருமால், க- பிரம்மா,  ஈசர் – உருத்திரர், அரி – இந்திரன்  என்பது  இதன் பொருளாகும்.

இராஜேந்திரன் ஆட்சி

                 பாண்டிய நாட்டை குலபூடண பாண்டியன்  ஆட்சி செய்த போது, அவனுக்கு  இராஜேந்திரன்,  இராஜ சிங்கன்,  என்ற  இரு மகன்கள்  தோன்றினர்.   தந்தைக்குப் பின் மூத்தவன்  இராஜேந்திரன்  அரசாளத் தொடங்கினான்.   இதைக் கண்டு பொறாமை கொண்ட  தம்பி  இராஜசிங்கன், சோழ மன்னனை அணுகி, தனக்கு  அதிக  படைபலம் தந்தால் அவனை வீழ்த்தி நீயே அரசாளலாம் என்று கூறினான்.  சூழ்ச்சியை அறியாது  சம்மதித்து,   போரிட சோழன் ஆயத்தமானான்.

                 அண்ணன் இராஜேந்திரன்  சிவபெருமானிடம் அழுது  முறையிடலானான்.  அப்போது உன் குறைவான சேனையே வெல்லும் என அசரீரி கேட்டது. அதன்படி போரிட்ட அவனுக்கு மிகப்பெரிய  வெற்றி கிடைத்தது.  என்றாலும், தன் தம்பியை மன்னித்து,   தன் நாட்டில்  ஒரு பகுதியைத் தந்து  அரசாள அனுமதித்தான்.

                இதே போல,  இராஜசிங்கன்,  வீரபாண்டியைத் தலைநகராகக் கொண்டு ஆட்சி செய்த போது, கொடிய மிருகங்களால் மக்கள் துயர் தீர்க்க  பூலாவனம் வந்து சேர்ந்த போது, அங்கே மதுரையை ஆண்ட விக்கிரம பாண்டியன்  நிறுவிய  சிவாலயத்தைக் கண்டறிந்து அதற்கு அங்கே ஒரு கோயில்  அமைத்து  நகரை உருவாக்கினான்  என  தலபுராணம் கூறுகிறது.

  கற்பக விருட்சம்

பூலாவனப் பகுதியில்  சுவை மிகுந்த  பால் கிடைக்கும் என கேள்விப்பட்ட மன்னன், ஒரு  இடையன் மூலம்  தினமும் பால் கொண்டு வருமாறு ஆணையிட்டான்.  ஒரு சமயம் பால் கொண்டு வரும் போது  பூலாமர வேர் இடறி பால் கீழே கொட்டியது.  மூன்றாம் நாளும்  இவ்வாறே நடக்க,இடையன் அந்த வேரை வெட்டி அப்புறப்படுத்தினான்.  உடனே அங்கு  ரத்த வெள்ளம் ஓடியது. பூலா  மரமாக நின்ற  கற்பகவிருட்சத்தின் சாபம்  இடையன் மூலம் நீங்கியது.  காமதேனு மீண்டும்  தேவலோகம்  சென்றது.

                இதற்கிடையில் இச்சம்பவத்தை அறிந்த மன்னன், அவன் காட்டிய இடம்  வந்த போது,  அங்கே  இரத்த வெள்ளம்  மறைந்தது.  ஜோதி வடிவ மலையாக இறைவன் உருவம் தோன்றியது.

                உடனே  மன்னன் எங்களுக்குத் தெரியும் வகையில் எளிய உருவில் காட்சி தரவேண்டும்  என வேண்டினர். அதன்படியே சிறிய வடிவில் இறைவன்  காட்சி தந்தார். இறைவன் பூலா வனத்தில் தோன்றியதால், பூலாவனேசர் என்றும், பால் உண்டதால் பாலுண்ட நாதர் என்றும், அளவு குறைந்து  காட்சி தந்ததால்,  தழுவக் குழைந்தார் அளவுக்களவானவர்  என்றும்  போற்றப்படலானார்.  மன்னன் தழுவிய போது  அவனது ஆபரணங்களால் ஏற்பட்ட அழுத்தங்கள் இன்றளவும்  லிங்கத் திருமேனியில்   அடையாளங்களாகக் காணப்படுகின்றன.

                அதன்பின்  இராஜசிங்க பாண்டியன் அவருக்குப் பெரிய ஆலயம் எழுப்பி, வழிபாட்டுக்கு வகை செய்தான் என  தலவரலாறு கூறுகிறது.

                மேலும், அம்மனுக்குத் தனி  சிலைவடிக்க முயன்ற போது, அன்று கனவில் தோன்றிய இறைவன், தேவி கூப வடிவில் கிணற்றில் வாழ்ந்து வருகின்றாள். பிரார்த்தனை  செய்யுங்கள்  உங்களுக்குத்  தென்படுவாள்  என்று கூறியது.

                அதன்படியே  கிணற்றில் இருந்து அன்னை வெளிப்பட்டு, அன்னை சிவகாமி என திருப்பெயரும்  பெற்றாள். 

சுர தேவர்

                ஒரு சமயம் நாட்டு மக்களைக்  காய்ச்சல்  வாட்டி வதைத்தது.  இறைவன் அருளியவாறு சிவாலயத்திற்குள் சுர தேவரை நிறுவினான்.  அதனை அனைவரும்  பூஜிக்க  காய்ச்சல்  அந்த நாட்டை விட்டே அகன்றது.         

                இதுபோல,  வடபுலத்து  யவன மன்னன்   பெருஞ்சேனையோடு போரிட வந்தபோது,   பாண்டிய மன்னன்  தனக்கு உதவுமாறு இறைவனிடம்  வேண்டி நின்றான்.  அதற்குச் செவிமடுத்த இத்தலத்து  இறைவன்,  கடும் மழை பொழிந்து  எதிரியின் படைகள் அனைத்தும் வெள்ளத்தில் அடித்துச் செல்ல உதவினான். இறைவன் துணையோடு  பாண்டிய மன்னனும்  அப்படைகளைத் தோல்வியுறச் செய்தான். 

கல்வெட்டு, செப்பேடுகள்

                கி.பி.1907ஆம்  ஆண்டு  இந்தியத் தொல்லியல் ஆய்வறிக்கையின்படி,  மொத்தம் 29 கல்வெட்டுகள்  மற்றும்  செப்பேடுகள்  கண்டறியப்பட்டுள்ளன.  இதன்மூலம்  வரகுண பாண்டியன் (கி.பி.768)  சடைய மாறன் ( .கி.பி.913), இரண்டாம் இராஜசிம்மன் (கி.பி.921), முதலாம் குலசேகரன் (கி.பி.1230),  சுந்தர பாண்டியன் ( கி.பி.1226)  என பாண்டிய மன்னர்களும்,  பரகேசரி வர்மன் எனும்  முதலாம் பராந்தக சோழன் (கி.பி.943),  முதலாம் இராசேந்திரன் (கி.பி.1017)  என சோழமன்னர்கள் காலத்தில் கொடைகள் வழங்கப்பட்டதை அறிய முடிகிறது.   இவற்றில்,  பெரும்பாலானவை  லஷ்மி நாராயண பெருமாள் ஆலயத்திலும் மற்றவை ராஜசிம்மேஸ்வரர் (சின்னமனூர் சிவன்) திருக்கோயிலிலும்  கண்டறியப்பட்டவை ஆகும்.

இலக்கியம்

                சின்னமனூர்  எனும் அரிகேச நல்லூர் தலபுராணம், 300 ஆண்டுகளுக்கு முன் பூலா நந்தக் கவிராயர் மூலம் வடமொழியில் இருந்து தமிழில் மொழி பெயர்க்கப்பட்டது.  30 படலம்,  945 பாடல்களில்  கொண்ட  இந்நூல்  ஓலைச்சுவடிகளாக இருந்தது.  இதைக் கண்டமனூர்   செல்லமையா,  சிலையம்பட்டி பொன்னையாப்பிளை, சின்னமனூர்  மருதமுத்துப் பிள்ளை ஆகியோர் கூடி,  காகித ஏட்டில் எழுதினர்.  கி.பி.1954 ஆம் ஆண்டில்  அச்சு வடிவில்  அண்ணாமலைப் பிள்ளை,  இரத்தினம் பிள்ளையும் கொண்டு வந்தனர்.  இதன் மூலம்  தல புராணத்தை இன்று நாம்  அறிய முடிகிறது.

சின்னமனூர்

                இராணி மங்கம்மாள்  ஆட்சியில்  சின்னம நாயக்கர் என்ற  அதிகாரி இவ்வூரை  உருவாக்கியதால்  சின்னமனூர் என இவ்வூர் வழங்கப்படுகிறது.

இறைவன்

                திருமால், பிரம்மா,  வழிபட்டதால், அரிகேசரி நாதர் என்றும்,  பூலா மரத்தில்  தோன்றியதால்,  பூலாநாதீசுவரர், பூலாநந்தீஸ்வரர்  என்றும்,  ஆயன் பாலை உண்டதால் பால் உண்ட நாதர் என்றும்,   பாண்டிய மன்னன்  வேண்டுகோளை ஏற்று குறுகிய அளவிற்கு  ஆனதால், அளவுக்கு அளவானவன் என்றும்,  தன் அளவில் குறுகிக் காட்சியளித்த இறைவனைப் பாண்டியன்  ஆரத் தழுவியதால் தழுவக் குழைந்தீசர் என்றும் இராஜசிம்மன் பூஜித்ததால்  இராஜசிம்மேசுவரர் என்றும்  பலவாறு அழைக்கப்படுகின்றான்.  இறைவனின் தற்காலப் பெயர் பூலாநந்தீஸ்வரர்  என்பதாகும்.

தலமரம் – தீர்த்தம்

                தலமரமாக பூலா மரம்  திகழ்கிறது.   தீர்த்தமாக சுரபி நதி,  அம்மையின் வடபாகம் உள்ள சிவகாமி கூபம், இறைவன் நிறுவிய சிவகங்கைத்   தீர்த்தம் என  மூவகைத் தீர்த்தங்கள் அமைந்துள்ளன.

விழாக்கள்

                சித்திரைத் தீர்த்தவாரிப் பெருவிழா  15 நாட்கள் நடைபெறும்.  வைகாசி விசாகம்,  முருகன் பால்குட விழா, ஆனித் திருமஞ்சனம்,  ஆடி  முளைக்கட்டு  திருநாள்.  ஆவணி புட்டுத் திருவிழா, புரட்டாசி  நவராத்திரி,  ஐப்பசி சஷ்டி,   கார்த்திகை தீபம், மார்கழி ஆருத்திரா,  ஐப்பசியில் தெப்பத் திருவிழா,  மாசி மகா சிவராத்திரி,  பங்குனி உத்திரம், அறுபத்துமூவர் திருநட்சத்திர நன்னாள் சிறப்பு வழிபாடுகள்  போன்றவையும் சிறப்பாக நடைபெறுகின்றன.

நிர்வாகம்

                இந்து சமய அறநிலையத்துறையின் கீழ்  இத்திருக்கோயில்  இயங்கி வருகிறது.

தரிசன நேரம்

                காலை  7.00 மணி முதல்  நண்பகல் 12.00 மணி  வரையிலும்,   மாலை 5.00   மணி முதல்   இரவு 8.00  மணி வரையிலும்   சுவாமி தரிசனம் செய்யலாம்.

அமைவிடம்:

                தேனி மாவட்டம்,  உத்தமபாளையம்  வட்டத்தில், சின்னமனூர் அமைந்துள்ளது.   தேனியிலிருந்து தெற்கே 23 கி.மீ, உத்தமபாளையத்திலிருந்து வடமேற்கே 6 கி.மீ, கம்பத்திலிருந்து  வடமேற்கே 17 கி.மீ, போடிநாயக்கனூரில் இருந்து தெற்கே 27 கி.மீ,  மதுரையிலிருந்து தெற்கே 105 கி.மீ, சென்னையிலிருந்து தெற்கே  450 கி.மீ     தொலைவில்  சின்னமனூர் திருத்தலம்  அமைந்துள்ளது.

ஓம் நமசிவாய 
படித்து பகிர்ந்தது 
இரா இளங்கோவன் 
நெல்லிக்குப்பம். 

வரலட்சுமி விரதத்தின் முக்கியத்துவம் :

 ஆடி வரலட்சுமி விரதம் பற்றிய பதிவுகள் :
ஆடி மாதத்தில் வரும் வெள்ளிக்கிழமைகளில் மிக முக்கியமானதும் புனிதமானதும் ஆன விரதமாகும் ஆடி வரலட்சுமி விரதம். இது மகாலட்சுமி தேவியை போற்றி வழிபடும் சிறப்பான நாள் ஆகும். 

இந்த விரதம், மகாலட்சுமியின் அருளால் செழிப்பும் சுபீட்சமும் கிடைக்கச் செய்வதாக நம்பப்படுகிறது. இதுகுறித்து மேலும் விரிவாக நமது ஓம் நமசிவாய ஆன்மீக குழுவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

*🔹 விரதத்தின் காலம் :*

ஆடி மாதத்தின் இரண்டாவது வெள்ளிக்கிழமை இந்த விரதம் அனுசரிக்கப்படுகிறது. சில இடங்களில் முதல் வெள்ளிக்கிழமையிலிருந்தே தொடங்கியும், நான்கு வெள்ளிக்கிழமைகளிலும் பலரால் வழிபாடு செய்யப்படுகிறது. 

ஆனால் "வரலட்சுமி விரதம்" எனப்படுவது குறிப்பாக ஆடி மாதம் சுக்கிர வாரம் (வெள்ளிக்கிழமை) வளர்பிறை அஷ்டமி, பூரம் நட்சத்திரம் கூடும் நாளில் கொண்டாடப்படுகிறது.

*🔹 வரலட்சுமி விரதத்தின் முக்கியத்துவம் :*

இந்த விரதம் திருமணமான பெண்கள், குடும்ப நலன், பரம்பரை வளம், செயல்களில் வெற்றி ஆகியவற்றிற்காக நோற்பது வழக்கம்.

வரலட்சுமி என்பது அஷ்டலட்சுமிகள் எனப்படும் எட்டு வகையான லட்சுமி தரிசனங்களின் ரூபமாக கருதப்படுகிறது:

1. ஆதி லட்சுமி, 
2. தான்ய லட்சுமி, 
3. தைரிய லட்சுமி, 
4. கஜ லட்சுமி, 
5. சந்தான லட்சுமி, 
6. விஜய லட்சுமி, 
7. வித்யா லட்சுமி, 
8. தன லட்சுமி

இந்த அனைத்து ரூபங்களும் சேர்ந்து வரலட்சுமி வழிபாட்டில் கலந்து இருப்பதாக நம்பப்படுகிறது.

ஓம் நமசிவாய 
படித்து பகிர்ந்தது 
இரா இளங்கோவன்
 நெல்லிக்குப்பம். 

திருப்பட்டூர் பிரம்மபுரீஸ்வரர் சிவனை பிரம்மா வணங்கிய ஆலயம்.



திருப்பட்டூர் பிரம்மபுரீஸ்வரர் சிவனை பிரம்மா வணங்கிய ஆலயம். ஊர் திருப்பட்டூர். புராண பெயர் திருப்பிடவூர். மூலவர் பிரம்மபுரீஸ்வரர் கிழக்கு நோக்கி சுயம்பு மூர்த்தியாக அருள் பாலிக்கிறார்.  


திருப்பட்டூர் அற்புதங்கள் : 30

1. சிவ பக்தியுடன் வாழ்ந்து வந்த வியாக்ரபாதர், சிவனாரை நோக்கி இந்த தலத்தில் தவம் செய்தார்.

2. திருச்சியில் உள்ள புகழ்பெற்ற தலம்

திருப்பட்டூர் திருத்தலம் ஒரு காலத்தில் மிகச் செழிப்பாக இருந்தது. எப்போதும் வேத கோஷங்கள் காற்றில் நிரம்பி புண்ணிய பூமியாக திகழ்ந்தது.

3. இத்தலத்தில் உள்ள தீர்த்தக்குளத்து நீரை, எவர் கையில் எடுத்தாலும் அவர்களுக்கு கங்கையில் நீராடிய பலனும் கிடைக்கும்.
4. இத்தலத்தில் 3001 அந்தணர்கள் வேதங்களை அனுதினமும் பாராயணம் செய்ததால் அதில் உண்டான அதிர்வலைகள் அங்கிங்கெனாதபடி எங்குமாக பரவிக் கிடப்பதால் திருப்பிடவூர் எனப்பெயர்பெற்றது. திருப்பிடவூர் என்பதே காலப்போக்கில் திருப்பட்டூராக மாறியது.

5. இது காசிக்கு நிகரான தலம் மட்டுமல்ல. திருக்கைலாயத்திற்கு நிகரான தலமும் ஆகும். இத்தலத்தில் ஸ்ரீமந் நாராயணரை வணங்கி தொழுததால் ஆதிசேஷன் அடுத்த கணம் பதஞ்சலி முனிவராக மாறினார்.

6. கர்வத்தை ஒழிப்பவர்கள் மனதில் இறைவன் உறைவதும், அவனே இறைவனாக மாறிப்போவதும் இத்தலத்தில் நிகழும்.

7. திருக்கயிலாய ஞான உலா எனும் நூல் இத்தலத்தில் அரங்கேறியது.

8. சிவ பெருமான், தன் அடியவர்கள் பலரையும் இந்த தலத்திற்கு அழைத்து வந்து திருவிளையாடலை நிகழ்த்தி இருக்கிறார்.

9. சேர மன்னன் நாயானாரும், சுந்தரரும் நெகிழ்ந்து வணங்கிப் பேறு பெற்ற அற்புதமான இடம் இதுவாகும். மாசாத்தனார் ஓலை நறுக்குகளுடன் காட்சி தரும் விக்கிரகத் திருமேனியை கோவிலின் மூலமூர்த்தமாக இன்றைக்கும் இங்கு தரிசிக்கலாம்.

10. சிவபெருமான் பிரம்மனின் ஒரு தலையை கிள்ளி எறிந்த தலம் திருவையாறு அருகில் உள்ள திருக்கண்டியூர் தலத்திலாகும். அந்த பிரம்மன் பரிகாரம் தேடி கொண்டது திருப்பட்டூராகும்.

11. பிரம்மன் உருவாக்கிய பிரம்ம தீர்த்தக் குளம், சிவலிங்கச் சந்நிதிகளும் இங்கு அமைந்துள்ளன. இங்கு வழிபட்டால் 12 சிவாலயங்களுக்கு சென்று வழிபட்ட புண்ணியம் கிடைக்கும்.

12. பிரம்மபுரீஸ்வரர் கோவிலில் மாதாவாக பிரம்ம சம்பத்கவுரி கனிவு ததும்ப கருணை பொங்கக் காட்சி தருகிறாள். இவளுக்கு செவ்வாய், வெள்ளி கிழமைகளில் புடவை சார்த்தி வேண்டிக் கொண்டால் தடைப்பட்ட திருமணம் இனிதே நடைபெறும்.

13. பிரதோஷ நாளில் இங்கு ஒரே நேரத்தில் நந்திக்குச் செய்யப்படுகிற பூஜையையும், நரசிம்ம மூர்த்தியையும் தரிசிக்கலாம்.

14. ஏழேழு ஜென்ம பாவங்களை நீக்கி பஞ்சபூதங்களாக உறைந்து இத்தலத்து ஈசன் நம்மை காக்கிறார்.

15. பிரம்மாவை வணங்கும் போதே குரு தட்சிணாமூர்த்தியை தரிசிக்கலாம்.

16. குரு பகவானுக்கு அதி தேவதை யான பிரம்மா தனி சந்நிதியுடன் திகழும் தலம் இதுவாகும்.

17. இத்தலத்திற்கு திருப்படையூர் என்ற பெயரும் வழக்கத்தில் இருந்தது.

18. சுப்ரமணிய சுவாமிக்கு வஸ்திரம் சார்த்தி, சர்க்கரை பொங்கல் நைவேத்தியம் செய்து பிரார்த்தனை செய்தால் வியாபாரத்தில் வெற்றி கிடைக்கும்.

19. தலை எழுத்தையே மாற்றி அருளும் திருப்பட்டூரில் குடி கொண்டிருக்கும் சுப்ரமணியரை வணங்கினால் மோட்சம் நிச்சயம் கிடைக்கும்.

20. தேய்பிறை அஷ்டமி யில், ராகு கால வேளையில் காலபைரவரைத் தரிசித்து அவரின் வலது காதில் நம் பிரச்சினைகளைச் சொல்லி வணங்கு வதற்காகத்தான் இத்தலத்தில் கால பைரவரின் வலது காது வித்தியாசமாக உள்ளது.

21. இத்தலத்தில் கால பைரவருக்கு நேர் எதிரில் இருக்கும் கஜலட்சுமியை வணங்கினால் ஐஸ்வர்யம் கிடைக்கும்.

22. 20 ஆண்டுகளுக்கு முன்பு வரை திருச்சி, முசிறி மற்றும் துறையூர் என சுற்று வட்டார ஊர்களைச் சேர்ந்தவர்களுக்குக்கூட திருப்பட்டூர் என்கிற ஊரே தெரியாமல் இருந்தது. ஆனால் இன்றைக்கு இத்தலம் தமிழகத்தையும் கடந்த பெங்களூரு, ஆந்திரா முதலான மாநிலங்களையும் தாண்டி பிரபலமாகியுள்ளது.

23. இத்தலத்திற்கு வந்து காசி விஸ்வநாதரையும், பிரம்மபுரீஸ்வரரையும் கண்ணாரத் தரிசித்து

வணங்குபவர்களுக்கு புத்துணர்ச்சி கிடைக்கும். புதிய சக்தியுடன் சிவத்தொண்டு புரிவர்.

24. பூணூல் கல்யாணம் எனும் சடங்கை இத்தலத்தில் செய்வது விசேஷம் ஆகும்.

25. திருபட்டூர் சுற்று வட்டாரத்தில் உள்ள விவசாயிகள் இங்கு வந்து அம்பாளின் திருவடியில் விதை நெல்லை வைத்து வணங்கி விட்டு, பிறகு அதை ஊர்வலமாக எடுத்துச்சென்று தங்களின் வயல்களில் விதைத்தால், தானியங்கள் செழிப்பாக வளர்ந்து லாபம் கொழிக்கும் என்கிறார்கள்.

26. இத்தலத்துக்கு வந்து பிரம்மாவின் திருச்சந்நிதியில் ஜாதகத்தை வைத்து மனதாரப் பிரார்த்திக்கும் பக்தர்கள், பிரார்த்தனை நிறைவேறியதும் வஸ்திரம் சார்த்தி நேர்த்திக் கடன் செலுத்துகின்றனர்.

27. 11 வியாழக்கிழமை தவறாமல் இங்கு வந்து தியானம் செய்தால் மன அமைதி கிடைக்கும் என்கிறார் இங்கு வரும் பக்தர் ஒருவர்.

28. வெள்ளைத் தாமரை சார்த்தி பிரம்மாவை வழிபட்டால் உடனடி பலன் கிடைக்கும் அதே போல் நீங்கள் பிறந்த நட்சத்திர நாளில் இத்தலத்தில் வழிபட்டால் புண்ணியம் நிச்சயம் சேரும்.

29. ஆடி சுவாதி நட்சத்திர நாளில், திருப்பட்டூர் வந்து மூன்று கோவில்களுக்கு சென்று தரிசனம் செய்யுங்கள். அப்படி தரிசித்த பலனை, அடுத்தடுத்த நாளிலேயே உணர்வீர்கள்.

30. ஒரேயரு முறை திருப்பட்டூர் தலத்தில் காலடி எடுத்து வையுங்கள். மனதின் அத்தனை துக்கங்களும் பறந்து, மனம், புத்தி, செயல், சிந்தனை யாவற்றிலும் ஓர் ஒழுங்கை, நேர்த்தியை, தெளிவை உணர்வீர்கள்

திருப்பட்டூர் பிரம்மாவைத் தரிசித்தால், நம் தலையெழுத்தையே திருத்தி அருள்கிறார். இனி, நமக்கு நல்லகாலமாக அமையும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில், திருச்சியில் இருந்து சுமார் 28 கி.மீ. தொலைவில் உள்ளது சிறுகனூர். இங்கிருந்து கிளை பிரிந்து செல்லும் சாலையில், 5 கி.மீ/. தொலைவில் உள்ளது திருப்பட்டூர். சத்திரம் பேருந்து நிலையத்தில் இருந்து பஸ் வசதி உண்டு. சிறுகனூரில் இருந்தும் சிறுகனூரை அடுத்த எம்.ஆர்.பாளையத்தில் இருந்தும் ஆட்டோ வசதி உண்டு. திருச்சியில் இருந்து காரில் ஆலயத்துக்கு வருவதே உத்தமம்.

வாழ்வில் ஒருமுறையேனும் திருப்பட்டூர் வாருங்கள். வாழ்வில் நல்ல நல்ல திருப்பங்கள் நிச்சயம் நம்மைத் தேடி வரும் என்பது உறுதி.

திருப்பட்டூர் தல மகிமையைப் பார்ப்போம்.

கர்வமும் ஆணவமும்தான் முதல் எதிரி. கர்வம் இருக்கும் இடத்தில் அன்பு இருக்காது. ஆணவம் இருந்துவிட்டால், அங்கே மதிப்புமரியாதைக்கு வேலையே இல்லை. தவிர, கர்வத்துடன் எவர் இருந்தாலும், அவருக்கு துயரமும் அழிவும் நிச்சயம். நம்மைப் படைத்த பிரம்மாவுக்கு, அப்படியொரு கர்வம் தலைக்கேறியது. ‘உனக்கு நிகரானவன் நான். உனக்கும் ஐந்து தலை. எனக்கும் ஐந்து தலை’ என்று சிவபெருமானிடம் கொக்கரித்தார் பிரம்மா. அவருக்கும் அகிலத்து மக்களுக்கும் பாடம் நடத்த, தன் விளையாட்டைத் துவக்கினார் சிவபெருமான்.

 

பிரம்மாவின் ஒரு தலையைக் கொய்தார். கொடுத்த படைப்புத் தொழிலையும் பிடுங்கிக் கொண்டார். துடித்துப் போனார் பிரம்மா. அகங்காரம் தந்த அழிவும் அதனால் பொங்கிய அவமானமும் கலங்கடித்தது பிரம்மாவை! சிவனாரிடம் சரணடைந்தார். ‘அப்பா சிவனே. என்னை மன்னித்துவிடுங்கள். தவறை உணர்ந்தேன். பிராயச்சித்தம் தாருங்கள்’ என மன்றாடினார்.

அதையடுத்து சிவனாரின் அறிவுரைப்படி கடும்தவம் புரிந்தார். அனுதினமும் சிவலிங்க பூஜைகள் செய்து வந்தார். அதன் பலனாக, இழந்ததைப் பெற்றார். ஸ்ரீபிரம்மா உருவாக்கிய தீர்த்தக்கிணறு, பிரம்மதீர்த்தம் என்று அழைக்கப்படுகிறது. அவர் பிரதிஷ்டை செய்து வழிபட்ட 12 தலங்களில் உள்ள லிங்கங்கள், இங்கே பிரம்மபுரீஸ்வரர் கோயிலில், 12 சந்நிதிகளாக, 12 சிறிய ஆலயங்களாக இன்றைக்கும் காட்சி தருகின்றன. இங்கு வந்து தரிசித்தால், 12 தலங்கள் மற்றும் திருப்பட்டூர் தலம் என 13 தலங்களுக்கும் சென்று தரிசித்த பலன்கள் கிடைக்கும். நம் வாழ்க்கையில் இழந்ததையும் தொலைத்ததையும், தேடுவதையும் நாடுவதையும் நிச்சயம் பெறலாம் என்பது ஐதீகம்!

பிரம்மாவுக்கு சாப விமோசனம் தரும் போது, தன் அடியவர்களுக்காக, பக்தர்களுக்காக சிவனார், பிரம்மாவிடம் என்ன சொல்லி அருளினார் தெரியுமா? ‘உன் சாபம் போக்கிய இந்தத் திருவிடத்துக்கு, என்னை நாடி வரும் அன்பர்கள் அனைவருக்கும் விதி கூட்டி அருள்வாயாக!’ என்றார் சிவபெருமான். அதாவது, இங்கே, இந்தத் தலத்துக்கு வரும் பக்தர்களின் தலைவிதியை நல்லவிதமாக, திருத்தி எழுதி, நல்வாழ்வு மலரச் செய்வாயாக என அருளினார் ஈசன். அதன்படி, எவரொருவர் பக்தி சிரத்தையுடன், ஆத்மார்த்தமாக, திருப்பட்டூருக்கு வந்து சிவ தரிசனம் செய்து, பிரம்மா சந்நிதியில் மனமுருகி வேண்டி நிற்கிறார்களோ, அவர்களின் தலையெழுத்தை திருத்தி அருள்கிறார் பிரம்மா.

அதனால்தான் திருப்பட்டூர் வந்தால், நல்லதொரு திருப்பம் நிச்சயம். தேக நலம் கூடும். ஆயுள் அதிகரிக்கும் என உறுதிபடச் சொல்கிறார்கள் பக்தர்கள். நடப்பவற்றுக்கெல்லாம் தானே ஓர் சாட்சியாக இருந்து, தன்னை நாடி வருவோருக்கெல்லாம் அருளையும் பொருளையும் அள்ளித் தந்து வாழவைக்கிறார் ஸ்ரீபிரம்மபுரீஸ்வரர் என்கிறார் கோயிலின் பாஸ்கர குருக்கள்.

பிரம்மபுரீஸ்வரரை வணங்கிவிட்டு, பிராகாரத்துக்குள் அடியெடுத்து வைத்ததுமே, விமானத்துடன் கூடிய தனிச்சந்நிதியில் உள்ள பிரமாண்டமான பிரம்மாவை கண்ணாரத் தரிசிக்கலாம்.நான்கு முகங்கள். நான்கு தலைகளிலும் அழகிய கிரீடம். நான்கு திருக்கரங்கள். அதில் இரண்டு திருக்கரங்களை மடியில் வைத்துக் கொண்டிருக்கும் அழகே அழகு! மற்றபடி வலது கரத்தில் ஜப மாலை, இடது கரத்தில் கமண்டலம். பத்ம பீடம் என்று சொல்லப்படுகிற, தாமரை மலரில் அமர்ந்து, தவ நிலையில் இருந்தபடி அருள்பாலிக்கிறார்.

பொதுவாக பிரம்மாவுக்கு மஞ்சள்காப்பு செய்து வழிபடுவது சிறப்பு. பிரம்மா குரு அல்லவா. எனவே வியாழக்கிழமையிலும் சிவனாருக்கு உகந்த திங்கட்கிழமையிலும் ஞாயிற்றுக்கிழமையிலும் வந்து வணங்கிச் செல்வது, மிகுந்த பலன்களைத் தரும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

இங்கே, குரு பிரம்மாவையும் குரு ஸ்ரீதட்சிணாமூர்த்தியையும் பிரம்மாவின் சந்நிதியில் நின்று கொண்டே தரிசிக்கிற பாக்கியமும், இந்த ஆலயத்தின் சிறப்புகளில் ஒன்று.

அதுமட்டுமா? ஸ்ரீபிரம்மாவுக்கு எதிரில் உள்ள தூண்களில் ஒன்றில், ஸ்ரீசனீஸ்வர பகவானின் திருவுருவம், சிற்ப வடிவில் வடிக்கப்பட்டுள்ளது. எனவே இங்கு வந்து தரிசித்தால், சனி தோமும் விலகும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

திருப்பட்டூர் வாருங்கள்; பிரம்மாவை தரிசியுங்கள்; வாழ்வில் இனி உங்களுக்கு நல்ல காலமே! நல்ல நல்ல திருப்பங்கள் நிச்சயம்!

 மேலும், பூணூல் கல்யாணம் போன்ற சடங்குகளை இங்கு செய்வது விசேஷமாகக் கருதப்படுகிறது,  

திருப்பட்டூர் கோயிலின் அற்புதங்கள்:

வியாக்ரபாதரின் தவம்:

சிவபக்தரான வியாக்ரபாதர், இந்த தலத்தில் சிவபெருமானை நோக்கி தவம் செய்தார் என்று சொல்லப்படுகிறது. 

தீர்த்தக்குளத்தின் மகிமை:

இங்குள்ள தீர்த்தக்குளத்தின் நீரை அருந்துவது அல்லது பயன்படுத்துவது பல்வேறு நன்மைகளைத் தரும் என்று நம்பப்படுகிறது,  

பூணூல் கல்யாணம்:

இந்த கோயிலில் பூணூல் கல்யாணம் செய்வது விசேஷமாக கருதப்படுகிறது. 

பிரம்மனின் வழிபாடு:

பிரம்மன் இங்கு வந்து வழிபட்டதாக ஐதீகம் உள்ளது, மேலும் இங்குள்ள பிரம்மபுரீஸ்வரர் சிலை, பிரம்மனால் பிரதிஷ்டை செய்யப்பட்டது என்றும் சொல்லப்படுகிறது. 

இதுபோன்ற பல்வேறு காரணங்களால், திருப்பட்டூர் கோயில் ஒரு புனித தலமாக கருதப்படுகிறது. 

முகவரி

திருப்பட்டூர் பிரம்மபுரீஸ்வரர் திருக்கோயில், திருப்பட்டூர், வழி சிறுகானூர், திருச்சி மாவட்டம் – 621105

இறைவன்

இறைவன்: பிரம்மபுரீஸ்வரர் இறைவி: பிரம்மநாயகி

அறிமுகம்

திருப்பட்டூர் பிரம்மபுரீஸ்வரர் கோயில் திருப்பட்டூரில் அமைந்துள்ள பெருமாள் சிவன் கோயிலாகும். திருச்சி – சென்னை தேசீய நெடுஞ்சாலையில் சமயபுரம் தாண்டி மேலும் 4 கி.மீ. சென்றால் சிறுகனூர் என்று ஊர் வரும். அங்கிருந்து திருப்பட்டூர் செல்லும் சாலை இடதுபுறம் பிரிகிறது. அதில் சுமார் 4 கி.மீ. சென்றால் திருப்பட்டூர் பிரம்மபுரீஸ்வரர் ஆலயத்தை அடையலாம். இவ்வூர் திருப்பிடவூர், திருப்படையூர் என்றும் அழைக்கப்பட்டது. இது ஒரு தேவார வைப்புத்தலமாகும். அப்பர், சுந்தரர் திருவாக்கில் இடம்பெற்றுள்ள வைப்புத்தலமாகும். இங்குள்ள இறைவன் பிரம்மபுரீஸ்வரர். இறைவி பிரம்மநாயகி. இத்தலம் மிக பழமையானது. பதஞ்சலி,வியாகிரபாதர் மற்றும் காசியபர் ஆகியோர் சிவனை தரிசித்து முக்தி அடைந்த தலம்.

புராண முக்கியத்துவம்

பிரம்மன் இவ்வுலகத்தை படைக்கும் ஆற்றலை சிவனிடமிருந்து பெற்றிருந்தார். தன்னைப் போலவே, பிரம்மனுக்கும் சம அந்தஸ்து கொடுக்கும் வகையில் ஐந்து தலைகளை அவருக்கு கொடுத்தார். படைப்புத் தொழிலில் அனுபவம் பெற்ற பிரம்மன், தன்னையும், சிவனையும் ஒன்றாகக் கருதி ஆணவம் கொண்டார். அவருக்கு பாடம் புகட்ட விரும்பிய சிவன், “”ஐந்து தலை இருப்பதால் தானே அஞ்சுதல் இல்லாமல் இருக்கிறாய்,” எனக்கூறி, ஒரு தலையைக் கொய்து விட்டார். படைப்புத்தொழிலும் பறி போனது. நான்முகனான பிரம்மா, இறைவனிடம் தனது தவறுக்காக சாப விமோசனம் கேட்டார். பூலோகத்தில் திருப்பட்டூர் என்ற தலத்தில் குடிகொண்டிருக்கும் தன்னை 12 லிங்க வடிவில் (துவாதசலிங்கம்) வணங்கி, சாப விமோசனம் பெற சிவன் அருள் செய்தார். மேலும், பிரம்மனின் தலையெழுத்தை மாற்றி, மீண்டும் படைப்புத்தொழிலை அருள்வதாகக் கூறினார். பிரம்மனும், இங்கு வந்து துவாதச லிங்க வழிபாடு செய்து சாபம் நீங்கப் பெற்றார். என்னை மகிழ்வித்த உன்னை வழிபடுகிறவர்களின் தீய தலையெழுத்தை மங்களகரமாக மாற்றுவாயாக,” என வரமும் கொடுத்தார். அன்று முதல் இந்த பிரம்மன், தன்னை வழிபடும் பக்தர்களின் தலையெழுத்தை மாற்றி அருள் செய்கிறார். பிரம்மன் இத்தலத்தில் சிவனை வழிபட்டதால் பிரம்மபுரீஸ்வரர் என சிவனுக்கு பெயர் ஏற்பட்டது. அம்பாள் பிரம்மநயாகி அல்லது பிரம்ம சம்பத்கவுரி எனப்படுகிறாள்.

நம்பிக்கைகள்

இது தஞ்சாவூர் கோயிலுக்கும் முற்பட்டதாக தெரிய வருகிறது. இங்குள்ள நந்தியை தடவிக் கொடுத்தால், நிஜ காளையை தடவிக் கொடுத்த உணர்வு ஏற்படுகிறது. குரு பரிகார தலம்: அட்சமாலை மற்றும் கமண்டலத்துடன் பிரம்மா இங்கு இருக்கிறார். குருபகவானுக்குரிய அதிதேவதை பிரம்மா என்பதால், குரு தோஷ நிவர்த்திக்காக வியாழக்கிழமைகளில் விசேஷ பூஜை நடக்கிறது. மேலும், திங்கள் கிழமை, திருவாதிரை, புனர்பூசம், சதயம் மற்றும் ஜென்மநட்சத்திர நாட்களில் பக்தர்கள் இவரை வணங்குவது விசேஷ பலன் தரும். குருபெயர்ச்சியன்று பிரம்மாவிற்கு பரிகார யாகபூஜை நடக்கும். குழந்தைகளுக்காக பைரவர் வழிபாடு: சில குழந்தைகள் இரவு வேளையில் தூங்காமல், தொடர்ந்து அழுது கொண்டிருக்கும். இவ்வாறு குழந்தைகள் அழாமல் இருக்கவும், அவர்கள் நிம்மதியாக தூங்கவும் இங்குள்ள கால பைரவரை வழிபடுகின்றனர். அர்த்தஜாமத்தில் இவரது சன்னதியில் சாவி வைத்து பூஜை நடக்கும். இவ்வேளையில் தரப்படும் விபூதியைப் பெற்றுச்சென்று குழந்தைக்கு கொடுக்கின்றனர். இவ்வாறு செய்வதால் குழந்தைக்கு பைரவர் காவலாக இருப்பார் என்பது நம்பிக்கை. ஞானஉலா அரங்கேற்றம்: சுந்தரருடன், சேரமான் கயிலாயம் சென்றபோது, சிவனை பெண்ணாக உருவகப்படுத்தி சிற்றிலக்கியம் இயற்றினார். அதை ஐயனார் இத்தலத்தில் அரங்கேற்றம் செய்தார். இவர், இக்கோயிலில் இருந்து சற்று தூரத்தில் “ஞானஉலா அரங்கேற்றிய ஐயனார்’ என்ற பெயரில் அருளுகிறார். ஆடி சுவாதியில் “திருக்கயிலை ஞானஉலா’ விழாவன்று சுந்தரருக்கும், சேரமானுக்கும் பூஜை நடக்கும். அன்று, சேரமான் கையில் ஞானஉலா சுவடி வைத்து, கயிலாயத்தில் அரங்கேற்றம் செய்யும் நிகழ்ச்சி நடக்கும். ஏழாம் தேதி பிறந்தவரா? ராஜகோபுரத்தில் இருந்து 7 நிலைகளைக் கடந்து, 300 அடி தூரத்தில் பிரம்மபுரீஸ்வரர் இருக்கிறார். ஆனாலும், சுவாமி சன்னதிக்குள் சூரிய வெளிச்சம் இருக்கும்படியாக, கோயில் கட்டப்பட்டுள்ளது. சூரியனுக்குரிய ரதம் ஏழு குதிரைகள் பூட்டியது. இதன் மீது வரும் சூரியன், ஏழு நிலைகளையும் கடந்து, தினமும் பிரம்மபுரீஸ்வரரை தரிசிப்பதாக ஐதீகம். பங்குனியில் மூன்று நாட்கள் காலையில் சிவலிங்கம் மீது சூரிய ஒளி விழும். ஏழு நிமிடங்கள் இந்த ஒளி இருக்கும். ஜாதகத்தில் ஒருவரது ஏழாம் இடத்தைப் பொறுத்தே மனைவி, நண்பர்கள் அமைவர். இது தொடர்பான தோஷ நிவர்த்திக்கு இங்கு வழிபடுகின்றனர். ஏழாம் எண் ஆதிக்கத்தில் பிறந்தோருக்கான பரிகார தலமாகவும் இக்கோயில் உள்ளது.

சிறப்பு அம்சங்கள்

வித்தியாசமான அமைப்பு: குருர் பிரஹ்மா; குருர் விஷ்ணு; குருர் தேவோ மகேச்வர; குரு ஸாட்ஷாத் பர ப்ரஹ்மை தஸ்மை ஸ்ரீ குரவே நமஹ”என்ற குருமந்திரப்படி அமைந்த கோயில் இது. கோயிலை வலம்வரும் போது, சிவன் சன்னதி கோஷ்டத்திலுள்ள தெட்சிணாமூர்த்தி (குரு), அடுத்து அருகில் தனிசன்னதியிலுள்ள பிரம்மா, அடுத்து சிவன் சன்னதி கோஷ்டத்திலுள்ள விஷ்ணு, அதன்பின் மூலவர் பிரம்மபுரீஸ்வரர் (மகேஸ்வரர்) என வரிசையாகத் தரிசிக்கலாம். இந்த அமைப்பு மிக விசேஷமானது. முருகன் வணங்கிய சிவன்: முருகப்பெருமான், அசுரர்களை அழிக்கச் செல்லும்முன் இத்தலத்தில் லிங்க பிரதிஷ்டை செய்து வணங்கி, அதன்பின் படை திரட்டிச் சென்றாராம். இதனால் “திருப்படையூர்’ எனப்பட்ட தலம் “திருப்பட்டூர்’ என மருவியதாகச் சொல்வர். முருகன் வழிபட்ட சிவன் கந்தபுரீஸ்வரர் என்ற பெயரில் இங்கிருக்கிறார். எல்லாமே மஞ்சள் நிறம்: பிரம்மா மங்கலம் தந்து வாழ்க்கையை சிறக்கச்செய்பவர் என்பதால், பூஜையின்போது இவருக்கு மஞ்சள் காப்பிட்டு, புளியோதரை படைத்து, மஞ்சள் பிரசாதம் தருகின்றனர். மற்ற சன்னதிகளிலும் மங்கல சின்னமாகிய மஞ்சள் நிற வஸ்திரங்களையே பயன்படுத்துகின்றனர். பிரம்மன் வழிபட்ட பழமலைநாதர், கந்தபுரீஸ்வரர், பாதாள ஈஸ்வரர், தாயுமானவர், மண்டூகநாதர், ஏகாம்பரேஸ்வரர், அருணாசலேஸ்வரர், கைலாசநாதர், ஜம்புகேஸ்வரர், காளத்தீஸ்வரர், சப்தரிஷீஸ்வரர், தூயமாமணீஸ்ணீ வரர் ஆகிய லிங்கங்கள், சிவன் சன்னதி எதிரிலுள்ள நந்தி உட்பட பெரும்பாலான பரிவார மூர்த்திகளுக்கும் மஞ்சள் வஸ்திரமே அணிவித்து பூஜிக்கின்றனர். பிரம்மன் மஞ்சள் காப்பு அலங்காரத்தில் வியாழக்கிழமைகளில் காணப்படுகிறார். குருவுக்கு அதிதேவதை பிரம்மா. எனவே, வியாழன் இங்கு விசேஷம். யாருக்கு தலையெழுத்து மாற வேண்டும் என்ற விதி உள்ளதோ, அவர்களே இக்கோயிலில் பிரம்மனின் பார்வையில் படுவார்கள் என்பது ஐதீகம். அதுபோல், தலையெழுத்து மாற தகுதியுள்ளவர்கள், குறைந்த பாவக் கணக்கில் இருப்பவர்கள், பக்திமான்களின் தலைவிதி மாற்றப்பட்டு விடுகிறது. உதாரணமாக நோய் தாக்க வேண்டும் என்ற விதி இருந்தால் அது மாறிப் போகிறது. ஆபரேஷன் செய்ய வேண்டும் என்ற விதியுள்ள கர்ப்பிணிகளுக்கு சுகப்பிரசவம் ஆகும். விரயச் செலவுகள் தடுக்கப்படும். பெயிலாகிக் கொண்டிருக்கும் மாணவன் நன்றாக படிக்க ஆரம்பித்து உயர்நிலைக்குச் செல்வான். நியாயமற்ற கோரிக்கைகளை பிரம்மன் கவனிப்பதில்லை என்பதுடன், மேலும் நமது நிலையை மோசமாக்கி விடுவார். நரசிம்மர் மண்டபம்: நரசிம்மரின் லீலைகளை விளக்கும் வகையில் ஒரு மண்டபத்தில் சிருஷ்டி, ஸ்திதி, சம்ஹாரம், துரோபாவம் என்ற வகையில் நரசிம்மர் அவதாரமானது, இரண்யனுக்கு நல்லொழுக்கம் போதித்தது, அவன் கேட்காததால் சம்ஹாரம் செய்தது, பிரகலாதனுக்கு அருள் செய்தது ஆகிய காட்சிகள் சிற்பங்களாக எழிலுற வடிக்கப்பட்டுள்ளன. நாத மண்டபத்தில் ராவணன், அகந்தையினால் மேருமலையை சிவ, பார்வதியுடன் சேர்ந்து தூக்குவது போலவும், அது முடியாமல் போகவே சாமகானம் இசைத்து சிவனை வசப்படுத்தும் முயற்சியில் இம்மண்டபத்தில் இசைத்தூண்கள் அமைந்ததாகவும் கூறப்படுகிறது. பிரம்மன் வழிபட்ட சோடசலிங்கம் (பதினாறு பட்டை உடையது) தனி மண்டபத்தில் உள்ளது. இந்த மண்டபத்தின் உச்சி மரத்தால் ஆனது. எலும்பு நோய்க்கு பூஜை: பதஞ்சலி மகரிஷி ராமேஸ்வரம் உட்பட 10 தலங்களில் ஐக்கியமானதாக சொல்லப்படுகிறது. அதில் இத்தலமும் ஒன்று. இவர் ஐக்கியமான இடத்தில் ஒரு லிங்கமும், ஓவியமும் உள்ளது. அமாவாசையன்று இந்த லிங்கத்திற்கு, தயிர் சாதம் படைத்து பூஜை நடக்கும். வைகாசி சதயத்தன்று இவரது குருபூஜை நடக்கிறது. சித்தர்பாடலில் இத்தலம் “பதஞ்சலி பிடவூர்’ எனக் கூறப்பட்டுள்ளது. மனஅமைதி கிடைக்க, எலும்பு தொடர்பான நோய் நீங்க, கல்வி, கலைகளில் சிறப்பிடம் பெற, குருவருள் கிடைக்க திங்கள், வியாழக்கிழமைகளில் இவரை வழிபடுகின்றனர். பதஞ்சலியின் ஜீவச மாதி: ஜோதிடக்கலையின் தந்தையும், பாம்பு உடலைக் கொண்டவருமான பதஞ்சலி முனிவர் பத்து இடங்களில் ஜீவச மாதி அடைந்ததாக ஒரு தகவல் உண்டு. அதில் இத்தலமும் ஒன்று. பதஞ்சலி முனிவரின் சமாதி இக்கோயிலுக்குள் இருக்கிறது. அவர் யோகசூத்ரம் என்ற நூலை எழுதியவர். முக்தியடைந்தாலும் கூட இன்றும் உயிருடன் இருந்து அவர் அருள்பாலிக்கிறார். வேதங்களை ஈசன் அம்பிகையிடமும், அம்பிகை பிரம்மாவிடமும், பிரம்மா நந்தியிடமும், நந்தி தேவர் ரிஷிகளிடமும் சொன்னதாக காஞ்சிப்பெரியவர் சொல்வார். அது இங்கு தான் நிகழ்ந்திருக்குமோ என எண்ண வேண்டியுள்ளது. ஏனெனில் இங்கு பிரம்மபுரீஸ்வரர், பிரம்மநாயகி, பிரம்மா, பிரம்மாண்ட நந்தி, பதஞ்சலி ரிஷி ஆகியோர் உள்ளனர். இவ்வகையில் இது மிக விசேஷமான கோயில். பிரம்மன் வழிபட்ட 12 லிங்கங்களும் இங்கு உள்ளன. எனவே ஜோதிர்லிங்கங்களை தரிசித்த பலன் இங்கு சென்றாலே கிடைத்து விடுகிறது. தெற்கு நோக்கி இருக்க வேண்டிய காலபைரவர் இங்கு மேற்கு நோக்கி உள்ளார். பிரம்மனுக்கு 36 தீபம் (27 நட்சத்திரம், 9 கிரகம்) ஏற்றி, 108 புளியோதரை உருண்டைகளை படைத்து வழிபடுவது சிறந்தது. ஒன்பது முறை பிரம்மனை வலம் வர வேண்டும்.

ஓம் நமசிவாய 
படித்து பகிர்ந்தது 
இரா இளங்கோவன் 
நெல்லிக்குப்பம். 

Followers

அருள்மிகு பரிதியப்பர் திருக்கோயில்,மேலஉளூர் அஞ்சல்,தஞ்சாவூர் மாவட்டம் – 614 904.

அருள்மிகு பரிதியப்பர் திருக்கோயில், மேலஉளூர் அஞ்சல், தஞ்சாவூர் மாவட்டம் – 614 904.                     *மூலவர்: பரிதியப்பர், பாஸ...