Sunday, February 23, 2025

தமிழ்நாட்டில்சிவனுக்குரியஸ்தலங்களின்பெருமைகள்.

தமிழ்நாட்டில்சிவனுக்குரிய
ஸ்தலங்களின்பெருமைகள்.
ராஜ கோபுரத்தை விட மூலவருக்குஉயர்ந்த
விமானம் உள்ள இடங்கள்

1,திருப்புனவாசல் -- ஶ்ரீவிருத்தபுரீஸ்வரர்
2,தஞ்சை – பிரகதீஸ்வரர்
3,கங்கைகொண்டசோழபுரம் – பிரகதீஸ்வரர்
4,தாராசுரம் – ஐராவதேஸ்வரர்
5,திருபுவனம் – கம்பேஸ்வரர்

சிவனுக்குரிய விஷேசஸ்தலங்கள்.

1, திருவேள்விக்குடி – கௌதுகாபந்தன க்ஷேத்ரம்
2, திருமங்கலகுடி – பஞ்சமங்கள க்ஷேத்ரம்
3, திருவையாறு – பஞ்ச நந்தி க்ஷேத்ரம்
4, திருவிடைமருதூர் – பஞ்சலிங்க க்ஷேத்ரம்
5, திருநீலக்குடி – பஞ்சவில்வாரண்ய க்ஷேத்ரம்
6, திருவிற்கோலம் – நைமிசாரண்ய க்ஷேத்ரம்
7, திருநெல்லிக்கா – பஞ்சாட்சரபுரம்
8, காஞ்சி – சத்தியவிரத க்ஷேத்ரம்
9, திருவல்லம் – வில்வாரண்யம்
10, திருகண்டியூர் – ஆதிவில்வாரண்யம்.
11. திருபள்ளுர் -- பரசுராம ஷேத்ரம்

சிவ பூஜைக்கு சிறந்தஸ்தலங்கள்.

1, திருக்குற்றாலம் – திருவனந்தல் பூஜை
2, இராமேஸ்வரம் – காலை சந்தி பூஜை
3, திருவானைக்கா – உச்சிகால பூஜை
4, திருவாரூர் – சாயரக்ஷை பூஜை
5, மதுரை – இராக்கால பூஜை
6, சிதம்பரம் – அர்த்தஜாம பூஜை
7. திருபள்ளுர் --- பிரதோஷ கால பூஜை

காசிக்குமுன் தோன்றிய ஸ்தலங்கள்
1,திருப்புனவாசல் -- ஶ்ரீவிருத்தபுரீஸ்வரர் (வ்ருத்தகாசி)

காசிக்குசமமான ஸ்தலங்கள்
1, திருவெண்காடு. 
2, திருவையாறு. 
3, மயிலாடுதுறை. 
4, திருவிடைமருதூர்.
5, திருச்சாய்காடு. 
6, ஸ்ரீவாஞ்சியம். 
7, விருத்தாசலம். 
8 மதுரை.
9, திருப்புவனம்.

ராமேஸ்வரத்துக்கு முன் தோன்றிய ஸ்தலம் 
பரசுராமேஸ்வரம்  (தற்போது பள்ளுர் என்னும் கிராமம் ), குருதி தர்ப்பணம் விஷேசம் 
மூன்று  யுகங்களுக்கு முன் பரசுராமர் தவம் செய்து பரசுஆயுதம் பெற்று  குருதி தர்ப்பணம் செய்த  இடம் ,, பரசுராமர்  ஆலயம் பள்ளூர் கிராமம் ,திருமால்பூர் ரயில் நிலையம்.

ஓம் நமசிவாய 
படித்து பகிர்ந்தது 
இரா இளங்கோவன் 
நெல்லிக்குப்பம்
 

Saturday, February 22, 2025

கோவிலுக்குள் மணி அடித்துவிட்டு வணங்குவது ஏன் தெரியுமா?

கோவிலுக்குள் மணி அடித்துவிட்டு வணங்குவது ஏன் தெரியுமா?
கோவிலில் மணி அடிப்பதற்கு பின் ஒளிந்துள்ள ரகசியம்..!!

கோவிலுக்கு செல்லும் அனைவரும் ஏன்? எதற்கு? என தெரியாமல் பின்பற்றும் விஷயங்களில் ஒன்று கோவில் மணி அடிப்பது.

கோவிலில் மணி அடித்துவிட்டு வணங்கினால் கடவுள் காது கொடுத்து கேட்பார் என நினைத்துக் கொண்டிருக்கின்றனர்.

கோவிலில் அடிக்கும் மணி ஓசைக்கும், மனிதர்களின் மூளைக்கும் இடையே தொடர்பு உள்ளது என சாஸ்திரத்தில் நமது முன்னோர்கள் கூறியிருக்கின்றனர்.

கோவிலுக்கு செல்லும் அனைவரும் மணி அடிப்பது ஏன்?

பூஜை செய்யும் போது பயன்படுத்தப்படும் ஒரு பொருளாக உள்ள மணி ஓசையின் பின் ஒரு அறிவியல் நுண்ணறிவும் இருக்கிறது. 

கோவில் மணி அடித்துவிட்டு வணங்கினால், தங்களின் வேண்டுதலை கடவுள் காது கொடுத்து கேட்பார் என்று சிலர் நினைப்பார்கள். ஆனால் அது உண்மை அல்ல.

ஆகம சாஸ்திரங்களின் படி, கோவில் மணியில் இருந்து வெளிப்படும் ஓசை எதிர்மறை சக்திகளை விரட்டி, மனதிற்கும், உடலுக்கும் நேர்மறை சக்தியை அதிகரிக்க செய்கிறது.

கோவில் மணியின் ஓசை மனிதனின் மூளை செயல்திறனை மேலோங்க செய்கிறது என்று அறிவியலில் ஒரு பின்னணி இருக்கிறது.

கோவில் மணியின் ஓசை தனித்துவமாக கேட்பது ஏன்?

கோவில் மணியில் இருந்து வெளிவரும் ஒலியில் ஒரு தனித்துவம் இருக்கும். 

அதற்கு கோவில் மணிகளில் உள்ள கேட்மியம், துத்தநாகம், நிக்கல், குரோமியம் மற்றும் மாங்கனீசு போன்ற உலோகங்கள் தான் காரணமாகும்.

கோவில் மணியில் இருந்து வெளிவரும் ஒலியானது, மூளையின் வலது மற்றும் இடது பக்கங்களை ஒரு சமநிலைக்கு கொண்டு வர உதவுகின்றது.

கோவில் மணியில் இருந்து வெளிப்படும் சத்தம் உடலில் நேர்மறை ஆற்றல் மற்றும் மூளையில் செயல்திறனை அதிகரிக்கச் செய்து, விழிப்புணர்வை மேம்படுத்தி, மனதிற்கு நிறைவான அமைதி மற்றும் நிம்மதியை அளிக்கிறது.

மணியடிப்பது என்பது துர்தேவதைகளை விரட்டுவதற்காக என்று பெரியோர்களால் சொல்லப்பட்டுள்ளது.

பூஜையின்போது மணியை உபயோகப்படுத்துவதற்கு முன்பாக ‘ஆகமார்த்தம் து தேவாநாம் கமனார்த்தம் து ரக்ஷஸாம், கண்டாரவம் கரோம்யாதௌ தேவதாஹ்வான லாஞ்ச்சநம்’ என்ற மந்திரத்தைச் சொல்வார்கள்.

தீய சக்திகள் விலகி இறைசாந்நித்யம் இந்த இடத்தில் பெருகட்டும் என்பது இதன் பொருள். 

மணியடிப்பது என்பது அதற்காக மட்டுமல்ல. பூஜையின்போது நமது மனம் அங்குமிங்கும் அலைபாய்ந்து கொண்டிருந்தாலும், முக்கியமான தருணத்திலாவது இறைவனின்பால் நமது மனம் ஒன்றவேண்டும் என்பதற்காகவே மணி ஓசையை எழுப்புகிறார்கள்.

தீபாராதனையின்போது மணி ஓசை எழுவதால் நாம் அநாவசிய பேச்சுகளை நிறுத்தி இறைவனின்பால் நமது சிந்தனையைச் செலுத்துகிறோம். 

மணிஓசை கேட்டதும் நம்மையும் அறியாமல் நமது கரங்கள் இறைவனைத் தொழுகின்றன. 

சிந்தனையை ஒருமுகப்படுத்துவதற்காக மணியடிக்கப்படுகிறது என்பதும் ஏற்றுக்கொள்ளப்பட வேண்டிய கருத்து. 

நைவேத்யம் செய்யும்போது கண்டிப்பாக மணிஓசையை எழுப்ப வேண்டும் என்கிறது சாஸ்திரம். 

மணி ஓசையைக் கேட்டதும் இறைவன் ஓடோடி வந்து நமது நைவேத்யத்தை  ஏற்றுக்கொள்கிறான் என்கிறது ஆகம் சாஸ்திரம்

மணி ஓசையினால் நமது சிந்தனையும் ஒருமுகப்படுகிறது. 

சிரத்தையோடு இறைவனின்பால் நமது கவனமும் செல்கிறது. 

சிரத்தையுடன் கூடிய பக்தியைத்தான் இறைவன் நம்மிடம் இருந்து எதிர்பார்க்கிறான். 

நைவேத்யம், தீபாராதனை நேரங்கள் தவிர வெறுமனே மணியை அடிப்பது தவறு.

ஓம் நமசிவாய
 படித்து பகிர்ந்தது
 இரா இளங்கோவன் நெல்லிக்குப்பம். 

மஹா சிவராத்திரி முழுவதும் விரதம் இருந்து வழிபட்டால் விருப்பங்கள் நிறைவேறும்.

மஹா சிவராத்திரி வழிபாடு பற்றிய பதிவுகள் 
சிவ பெருமானுக்குரிய மிக முக்கியமான வழிபாட்டு நாள் மஹா சிவராத்திரி தினமாகும். ஒவ்வொரு ஆண்டும் மாசி மாதம் வரும் தேய்பிறை சதுர்த்தசி தினத்தில் மஹா சிவராத்திரி விழா கொண்டாப்படுகிறது. 

சிவ பெருமான், பார்வதி தேவியை திருமணம் செய்து கொண்ட நாளையே மஹா சிவராத்திரி தினமாக கொண்டாடுவதாக புராணங்கள் சொல்கின்றன. 

இந்த நாளில் சிவ பெருமானுக்கும், பார்வதி தேவிக்கும் சிறப்பு பூஜைகள் நடத்தப்படுவது வழக்கம். அன்றைய தினம் மாலை துவங்கி, இரவு முழுவதும் சிவ பெருமானுக்கு நான்கு கால பூஜைகள் நடத்தப்படும்.

மஹா சிவராத்திரி அன்று நாள் முழுவதும் சிவனை வேண்டி விரதம் இருந்து, வழிபட்டால் விருப்பங்கள் அனைத்தும் நிறைவேறும். துன்பங்கள் நீங்கும். முக்தி கிடைக்கும் என்பது நம்பிக்கை. 

சிவ பெருமானின் பரிபூரண அருளை பெறுவதற்கு ஏற்ற நாளாக மஹாசிவராத்திரி விழா கருதப்படுகிறது. அதுவும் மஹா சிவராத்திரி அன்று ஒரு குறிப்பிட்ட நேரத்தில் சிவ பெருமானை வழிபட்டால் நினைத்த காரியங்கள் அனைத்தும் அப்படியே நடக்கும்.

சிவ பெருமானை, காலத்தின் கடவுள் என்றும் குறிப்பிடுவது உண்டு. அதனால் சிவ வழிபாடு செய்வதற்கு நேரம் காலம் பார்க்க வேண்டியது கிடையாது. ராகு காலம், எமகண்டம் உள்ளிட்ட எந்த கெட்ட நேரங்களின் பாதிப்பும் சிவ வழிபாட்டை பாதிக்க முடியாது. 

மஹா சிவராத்திரி பூஜைகள் என்பது மாலை 6 மணிக்கு துவங்கி, மறுநாள் காலை 06.30 வரை நடைபெறும். மொத்தம் நான்கு கால பூஜைகள் நடத்தப்படும். ஒவ்வொரு கால பூஜையும் சுமார் மூன்று மணி நேரம் நடைபெறும்.

மஹா சிவராத்திரியின் நான்கு கால பூஜைகளில் மிகவும் முக்கியமானது மூன்றாம் கால பூஜை தான். இது நள்ளிரவு 12 மணிக்கு துவங்கி, அதிகாலை 3 மணி வரை நடைபெறும். இந்த மூன்றாம் காலத்தின் முதல் 50 நிமிடங்கள் மிக மிக முக்கியமானதாகும். 



இந்த நேரத்தில் செய்யப்படும் பூஜைக்கு நிஷித கால பூஜை என்று பெயர். இது தான் சிவ பெருமானை வழிபடுவதற்கு மிக மிக ஏற்ற நேரமாகும். இந்த ஆண்டு பிப்ரவரி 26ம் தேதி மஹா சிவராத்திரி அமைந்துள்ளது. அன்றைய தினம் இரவு 12.09 முதல் 12.59 வரையிலான நேரத்தில் சிவனிடம் நீங்கள் என்ன வேண்டிக் கொண்டாலும் அது நடைபெறும்.

மஹா சிவராத்திரி பூஜையில் மூன்றாம் கால பூஜை என்பது பார்வதி தேவி, சிவ பெருமானை வழிபட்ட காலமாகும். அந்த சமயத்தில் நாமும் வழிபட்டால் சிவபெருமானின் அருளும், பார்வதி தேவியின் அருளும் கிடைக்கும் என்பது நம்பிக்கை. 

மஹா சிவராத்திரி விரதம் பிப்ரவரி 27ம் தேதி காலையில் தான் நிறைவடையும். அதனால் அன்று காலை 7 மணிக்கு பிறகு விரதத்தை நிறைவு செய்வதால் செல்வ வளமும், சிவ பெருமானின் அருளும் கிடைக்கும்.

ஓம் நமசிவாய 
படித்து பகிர்ந்தது 
இரா இளங்கோவன்
 நெல்லிக்குப்பம். 

Friday, February 21, 2025

திருக்கொள்ளிக்காடு அக்னீஸ்வரர் படித்து முடித்துவிட்டு வேலை கிடைக்க...

 நல்ல வேலை கிடைக்கவில்லை என்று வருந்துகிறீர்களா திருக்கொள்ளிக்காடு அக்னீஸ்வரர்.
இன்று படித்து முடித்துவிட்டு வேலை கிடைக்காமல் படித்த பல பட்டதாரிகளும், அவர்களது பெற்றோர்களும் படும் மனவேதனையையும், துன்பங்களையும் சொல்ல வார்த்தைகள் இல்லை.

 நான் படித்த படிப்பிற்கேற்ற வேலை கிடைக்கவில்லை என்று நினைப்பவர்களும், ஏதாவது ஒரு வேலை கிடைச்சா போதும் என வருத்தப்படுபவர்களும் வழிபடக்கூடிய ஆலயத்தைப் பற்றி பார்ப்போம்.

ஆலயத்தைப் பற்றி ஒரு சிறு குறிப்பு 

 1000 - 2000 வருடங்களுக்கு முன் பழமை வாய்ந்த ஒரு ஸ்தலமாக திகழ்கிறது.

இறைவன் இங்கு சுயம்பு லிங்கமாக காட்சி அளிக்கிறார். 

பொதுவாக அனைத்து கோவில்களிலும் நவகிரகங்கள் ஒன்றையொன்று பார்க்காமல் அமர்ந்திருக்கும். 

ஆனால், இத்தலத்தில் 'ப" வடிவில் அமைந்திருப்பது சிறப்பு.

 உழைப்பின் பெருமையை உணர்த்தும் வகையில் இங்குள்ள சனிபகவான் கையில் கலப்பையை ஏந்தியிருப்பது கூடுதல் சிறப்பு.

 இந்த ஆலயத்தில் முருகன் கையில் வில்லுடன் தனுசு சுப்ரமணியராக காட்சி தருகிறார்.

வேலை கிடைக்கவில்லை என்று நினைப்பவர்கள் திருக்கொள்ளிக்காடு அக்னீஸ்வரர் தலத்திற்கு செல்வது சிறப்பு.

திருவாரூர் திருக்கொள்ளிக்காடு அக்னீஸ்வரர் தலத்திற்கு சென்று அங்குள்ள அக்னீஸ்வரரையும், பொங்கு சனியையும் மனதார வழிபடுங்கள்.

சுவாமிக்கு அபிஷேகம் செய்து புதுவஸ்திரம் சாற்றி வழிபாடு செய்யுங்கள்.

திருவாரூர் செல்ல இயலாதவர்கள் உங்கள் வீட்டிற்கு அருகில் உள்ள கோவிலுக்கு சென்று அங்குள்ள சனிபகவானுக்கு 5 நல்லெண்ணெய் தீபம் ஏற்றி வழிபடுங்கள்.

 ஒவ்வொரு சனிக்கிழமை மற்றும் நீங்கள் பிறந்த கிழமைகளில் சிவன் கோவிலுக்கு சென்று சிவன் காயத்ரி மந்திரத்தை மனதாரக் கூறுங்கள்.

வேலை கிடைத்ததும், வாங்கும் வருவாயில் கொஞ்சம் அன்னதானம் செய்யுங்கள்.

 அத்துடன் மயிலாடுதுறைக்கு வடக்கே 15 கி.மீ. தூரத்திலுள்ள திருப்புன்கூர் சிவலோகநாதருக்கு அபிஷேகம் மற்றும் அர்ச்சனை செய்து வழிபட்டால் உங்கள் தகுதிக்கேற்றபடி வேலை கிடைக்கும் என்பதில் சந்தேகமில்லை.
ஓம் நமசிவாய 
படித்து பகிர்ந்தது 
இரா இளங்கோவன் 
நெல்லிக்குப்பம். 

முருகப்பெருமான் பழனி வரும் போது இளைப்பாறிய மலை...

முருகப்பெருமான் ஆலயங்கள் : முத்துமலை, கிணத்துகடவு  மற்றும் குருந்த மலை ஆலயங்கள்.
முத்துமலை ஆலயம் கோயம்புத்தூர் மாவட்டம் கிணத்துக்கடவு அருகே முத்துகவுண்டனூரில் அமைந்துள்ளது. சிறிய மலையில் அமைந்திருக்கும் இந்த ஆலயம் முருகப்பெருமான் காலத்தில் இருந்தே துவங்குகின்றது.

முருகப்பெருமான் மயில் மேல் அப்பக்கமாக வந்தபோது அவரின் கிரீடத்தில் இருந்து முத்து உதிர்ந்து விழுந்ததால் இந்த மலை முத்துமலை என்றாயிற்று என்பதில் இருந்து இதன் வரலாறு தொடங்குகின்றது.

அந்த ஆலய தோற்றம் முருக பக்தை ஒருத்தியினால் உருவானது.  முருகப்பெருமானே தேடி வந்து அங்கே குடிகொண்ட நிகழ்வு அது.
நெடுங்காலத்துக்கு முன்பு அந்த ஊரைச் சேர்ந்த பெண்மணி கனவில் வந்த முருகப்பெருமான் இந்த மலையில் மூன்று காரை செடிகள் (காட்டு மல்லி)  நடுவில் தான் புதைந்து இருப்பதாகச் சொன்னார். அப்பெண் முதலில் நம்பவில்லை.

அதன்பின் அவள் மக்களிடம் சொன்னாள். அவர்களும் நம்பவில்லை.

மறுபடி மறுபடி அவள் கனவில் சஷ்டி அன்றும், கிருத்திகை அன்றுமாக வர அவளே தன் கனவில் முருகன் சொன்ன இடம் நோக்கிச் சென்றாள், அவளோடு மக்களும் சென்றார்கள்.

சென்றவர்கள் ஒரு இடத்தில் மூன்று காரை செடிகள் வரிசையாக இருப்பதைக் கண்டு ஆச்சரியமடைந்தனர். முருகப்பெருமானுக்கு அங்கே ஒரு வேல் ஊன்றி வழிபாடுகளைச் செய்தனர்.

அதன் பின் பெரும் அதிசயங்கள் நடக்க நடக்க மக்கள் கூட்டம் அலைமோதிற்று, வேல் மட்டும் ஸ்தாபிக்கப்பட்ட இடம் பெரும் ஆலயமாயிற்று.

இன்று அது முருகப்பெருமானின் அருள் தலமாயிற்று.

இங்கு முருகப்பெருமான் வள்ளி தெய்வானையுடன் அருள்புரிகின்றார். வெள்ளையங்கிரி ஆண்டவர், மாணிக்க விநாயகர்,  நாகர் சன்னதிகள் உண்டு.

இந்த மலையில் இருக்கும் நாகப்புற்று மிகச் சூட்சுமமானது. விசேஷ நாட்களின் இரவு நேரங்களில் அந்தப் புற்றிலிருந்து  ஒரு ஒளி தென்படும். எப்படி எதனால் அந்த ஒளிவருகின்றது என்பது தெரியாது.

ஆனால், அந்த ஒளி தென்படும் போது ஒருவித சக்தி அங்கே கூடுவதும், தெய்வீக அருள்நிலை அங்கே சூழ்வதும் சாட்சிகள்.

சக்தி மிக்க நாகர்கள் முருகப்பெருமானை வணங்கும் நேரம் அந்த ஒளி தெரியும் என்பது சில அனுமானங்கள்.

இந்த ஆலயம் புத்திர பாக்கியம் தரும். நாக சம்பந்தமான விக்கினங்களை விலக்கித் தரும்,  இன்னும் வாழ்வின் பல சோதனைகளைத் தீர்த்துத் தரும்.

முத்துமலை முருகன் என்பது வெறும் பெயர் அல்ல, அது ஆழ்ந்த தத்துவத்தை போதிப்பது.

சிப்பிக்குள் புகுந்துவிடும் மணல் துகள் உறுத்த அதை சுற்றி சிப்பி கட்டும் திரவமே முத்தாக மாறும். அப்படி சிறு துன்பம் ஒன்று வாழ்வில் வரும் போது முருகனை அண்டினால் அந்தப் துன்பத்தை முன்னிட்டே நம்மை முத்துபோல் ஒளிரவைப்பார், ஜொலிக்க வைப்பார்.

சிப்பி முத்தினைத் தன்னுள் காப்பது போல் காப்பார். ஆத்மா முத்துபோல் துலங்கும் பின் உரியநேரம் முருகப்பெருமானை அடையும் என்பது இந்த ஆலயத்தின் தாத்பரியம்.

இந்த முருகன் நம் துன்பத்தை இன்பமாக மாற்றித் தருவார். எது நம் பலவீனமோ எது நம் வேதனையோ அதையே முழு பலமாக முழு சக்தியாக மாற்றித் தருவார்.

கோயம்புத்தூர் பக்கம் செல்லும் போது இந்த ஆலயத்தினை வணங்கி வாருங்கள். எது உங்கள் பலவீனமோ கஷ்டமோ அது உங்கள் பலமாகவே மாறும்.

அந்தக் கோவிலில் இருக்கும் நாகப்புற்று சக்தி வாய்ந்தது. அந்த மண் எடுத்து உடலில் பூசினால் தீராத வினை எல்லாம் தீரும். நாக தோஷம் முதல் எல்லா நோயும் தீரும். அதை தவறவிடாமல் வழிபடுங்கள்.

அடுத்த ஆலயம் கிணற்றுக்கடவு பக்கம் அமைதிருக்கும் பொன்மலை வேலாயுதசாமி ஆலயம்.

ஞானபழத்திற்காக சண்டையிட்ட முருகப்பெருமான் பழனி வரும் போது இம்மலையில் இளைப்பாறி தன் பாதங்களைப் பதித்த இடம் இது. அதை முருகப்பெருமானே தன் அடியார்க்கு சொல்லி ஆலயம் அமைத்த இடம் இது.

பொள்ளாச்சியை அடுத்துள்ள புரவிபாளையத்தில் ஒரு ஜமீன் இருந்தார் அவர் முருகபக்தர். அடிக்கடி  விரதமிருந்து பழநி செல்வது அவர் வழக்கம்.

ஒருமுறை  பழநி அருகிலுள்ள ஆயக்குடி ஜமீனில் இவரை விருந்துக்கு அழைத்தனர். அங்கே சென்றவருக்கு உறவுகளிடம் சில சர்ச்சைகள் வந்தன. அந்தக் கோபத்தில் பழனி முருகனை தரிசிக்காமலே திரும்பிவிட்டார்.

அப்படி திரும்பியவருக்கு நிதானம் வந்தபின் பழனி முருகனை தரிசிக்காமல் வந்ததை நினைத்து வருந்தினார். மிக  வருந்தினார். உண்ண மனமில்லாம்ல வாடி கிடந்தார்

அன்றிரவே முருகப்பெருமான் ஜமீன்தாரின் கனிவில் தோன்றி, கிணத்துக்கடவு என்ற ஊரில் உள்ள பொன்மலை மீது தன் பாதம் பதிந்துள்ளதாகவும், அதனை பூஜிக்கும்படியும் கூறி மறைந்தார். இதையடுத்து முருகன் குறிப்பிட்ட மலை மீது சென்று பார்த்த போது ஒரு இடத்தில் முருகனின் பாதம் இருப்பதைக்கண்டு மகிழ்ந்து அதற்குப் பூஜை செய்து வழிபட ஆரம்பித்தார்.

அதன் பின் அவரே அந்தக் கோவிலைக் கட்டி முருகப்பெருமானை கனவில் எப்படிக் கண்டாரோ அப்படியே சிலையாக ஸ்தாபித்தார்.

இன்றும் முருகப்பெருமான் பாதமும், ஜமீன் கட்டிவைத்த கோவிலும் அங்கு உண்டு.

அப்படியே மைசூர் திவான் ஒருவர்க்கும் பெரும் அற்புதம் செய்தது இந்த ஆலயம்.

700 ஆண்டுகள் முன்  மைசூர் அரண்மனை திவானுக்கு காலில் கொடிய புண் ஏற்பட்டது. எந்த மருந்துக்கும் அது அடங்கவில்லை. அவர் ஆங்காங்கே உள்ள ஆலயங்களில் சென்று அழுது மன்றாடினார். அதில் முருகப்பெருமான் கோவில்களும் உண்டு.

ஒருநாள் அந்த‌ திவானின் கனவில் முருகன் தோன்றி, "கிணத்துக்கடவு வேலாயுதசுவாமி கோயிலுக்கு வா, உனக்கோர் வழிபிறக்கும்" எனச் சொன்னார்.

அப்படியே இக்கோவில்  அர்ச்சகர் கனவிலும் முருகன் தோன்றி, "இங்கே வரும் திவானின் கால் புண்ணில் இந்த மூலிகையினைக் கட்டு" என்று கூறி மறைந்தார்.  

மிகுந்த வலியுடன் இங்கு வந்த திவான் அர்ச்சகர் முருகப்பெருமான் உத்தரவுபேரில் இங்கு மூலிகையுடன் காத்திருப்பதை கண்டு ஆனந்த உவகைக் கொண்டார். பின் அந்த மூலிகை வைத்து கட்டப்பட அவரின் புண் ஒரே நாளில் மறைந்தது.

மிகவும் உற்சாகம் கொண்ட திவான் இந்த ஆலயத்துக்குத் திருப்பணிகள் செய்தார். அந்த செப்பேடு சாட்சி இன்றும் உண்டு.

இந்த முருகன்கோவில் அழகையும் முருகப்பெருமான் தீப ஒளியில் ஜொலிப்பதையும் கண்ட அருணகிரிநாதர்
"நாலாயிரம் கண் அந்த நான் முகன் படைத்திலேனே' என்று மனமுருகிப் பாடினார். ஆம். அவர் பாடிய தலம் இது.

அப்பக்கம் செல்லும் போது இந்த ஆலயத்தை மறவாதீர்கள். முருகப்பெருமான் பாதம் பதிந்த அம்மலையினைத் தொட்டு வணங்குங்கள். அந்தப் பாதம் நீங்கள் சரணடையும் நேரம் அந்த ஜமீனுக்கும் அந்த திவானுக்கும் நடந்த பெரும் அதிசயம் உங்களுக்கும் நடக்கும்.

எல்லா மனகுறையும் உடல்பிணியும் அகலும். வாழ்வே பொன்னாகும். பொன்மலை முருகன் உங்கள் வாழ்வினைப் பொன்னாக்கி தருவார்.

அடுத்த ஆலயம் குருந்தமலை முருகன் ஆலயம். இது கோவை அருகே மருதூர் பக்கம் அமைந்திருக்கின்றது.

கொங்கு நாட்டில்  24 உட்பிரிவுகள் உண்டு. அதில் ஒன்று  ஒடுவங்க நாடு. இது தற்போது கோயம்புத்தூர், அவிநாசி, மேட்டுப்பாளையம் முதலான பகுதிகளை உள்ளடக்கிய பிரிவாகும். இதன் வட பகுதியில் அகத்தியமலை (நீலகிரி), கிழக்கில் மாதேஸ்வரன் மலை, தெற்கில் சஞ்சீவி மலை (சதுர்க்காட்டாஞ்சை), மேற்கில் தோகை மலை உள்ளன. 

இவற்றின் நடுநாயகமாக குருந்தமலை அமைந்துள்ளது.

குருந்த மரங்கள் நிறைந்துள்ள இடம் என்பதால் இம்மலைக்கு இந்த பெயர் வந்தது. குருந்தமரம் என்பது இந்துப் புராணத்தில் மகத்துவமானது. இந்த மரத்தின் அடியில் வரம்பெற்றவர்கள் பலர் உண்டு, பல ஆலயங்களில் இந்த மரமே தலவிருட்சமாக உண்டு.

மாணிக்கவாசகரைச் சிவன் ஆட்கொண்டதும் குருந்த மரத்தடி என்பதில் இருந்து நிறைய சாட்சிகள் உண்டு.

அகத்தியபெருமானுக்கு இங்கு குருந்தமர அடியில் முருகப்பெருமானே குருவாக நின்றுபல உபதேசங்களைச் செய்ததால் இது குருவிருந்த மலையாகி குருந்தமலை என்றுமானது.

இந்த ஆலயம் பல சிறப்புக்களைக் கொண்டது.

மலையடிவாரத்தில் கோயிலுக்கு எதிரில் மலைச்சரிவில் கஜபுஷ்கரணி, அனுமந்தசுனை என்ற இரண்டு நீர்நிலைகள் உள்ளன. அவற்றில் ஒன்று, குடிப்பதற்கும், மற்றொன்று குளிப்பதற்கும் பயன்படுத்தப்படுகிறது.
 
அனுமந்த சுனையின் எதிரே உள்ள ஆஞ்சநேயர் கோயிலில் அனுமனின் பாதம் பதிந்துள்ளது. மூன்றடி உயரம் கொண்ட ஆஞ்சநேய மூர்த்தி ஓங்கிய வலது கை, இடது கயில் தாமரை மொட்டு, கையில் கட்கம், விரலில் மோதிரம் கொண்டு அருள்பாலிக்கிறார்.

இடையில் சதங்கை, வாலில் மணியுடன் அருள்பாலிக்கும் ஆஞ்சநேயருக்கு ஹனுமத் ஜெயந்தி நாளில் சிறப்பு திருமஞ்சனம் நடைபெறும். பக்தர்கள் வெண்ணெய் சாற்றி, வெற்றிலை மாலை அணிவித்து வழிபடுவது வழக்கம்.
 
குருந்தமலை அடிவாரத்தில் இராஜகோபுரத்துடன் கூடிய நுழைவாயிலைத் தொடர்ந்து மலையேறிச் செல்ல வேண்டும். படிக்கட்டுகளில் இரண்டு புறமும் இராஜகம்பீர விநாயகர், சப்த மாதாக்கள், நாகர், பதினெட்டாம்படி கருப்பர், இடும்பன், கடம்பன், வீரபாகு சந்நிதிகள் அமைந்துள்ளன.
 
ஐந்தடி உயரம் கொண்ட கம்பீர விநாயகர், வலதுகரம் ஒன்றில் தந்தம், பின்கரங்களில் பாசம், அங்குசம் ஆகியவற்றை ஏந்தி அருள்பாலிக்கிறார். மலைப்படி ஏறும் வழியில் இருபுறமும் வேல்கள் நடப்பட்டுள்ளன. 

காசி விஸ்வநாதர் மற்றும் காசி விசாலாட்சி அம்மனுக்கு தனித்தனி சந்நிதிகள் உள்ளன.

கருவறையில் மூலவர் குழந்தை வேலாயுத சுவாமி நான்கரை அடி உயரத்தில் வலது கையில் தண்டம் ஏந்தி, மேற்கு நோக்கி அருள்பாலிக்கிறார்.

குருந்தமலை குழந்தை வேலவனுக்கு இருவகை அலங்காரம் செய்யப்படுகிறது. ஒன்று, இராஜ அலங்காரம், மற்றொன்று, வேட அலங்காரம்.
 
மூலவர் சந்நிதியில் அகத்தீஸ்வரர், ஆனந்த வல்லி அம்பாள் அருள்பாலிக்கின்றனர்.

இந்த ஆலயம் பெரும் வல்லமையானது, பெரும் சக்தி கொண்ட இந்தத் தலம் அகத்தியர் காலத்தில் இருந்தே சாட்சிகளை உருவாக்கி வந்தது.

800 வருடங்களுக்கு முன் மன்னர்கள் கட்டி வைத்த பல சாட்சிகள் உண்டு.

பீளமேடு பி.எஸ்.ஜி மங்கு தாயம்மாள் எனும் பக்தை நன்றிக்கடனாக கட்டிவைத்த இராஜகோபுரம் இப்போது பக்தர்களை வரவேற்கின்றது.

நஞ்சப்பா என்பவருக்கு முருகப்பெருமான் காட்சி கொடுத்த வரலாறு உண்டு.

இப்ராஹிம் காசிப் எனும் இஸ்லாமிய தனவானுக்குப் புத்திரபாக்கியத்தை கொடுத்த தலம் இது, அந்த நன்றியின் சாட்சியாக அந்த இப்ராஹிம் கட்டிய மதில்சுவர் இன்றும் உண்டு.

இன்னும் செட்டியார்கள், கோயமுத்தூரின் பெரும் தொழிலதிபர்கள் செய்த திருப்பணிகள் ஏராளம் உண்டு.

பாலசுப்பிரமணியன் எனும் பக்தர்க்கு இந்த குருந்தமலை முருகன் தன்னை வெளிப்படுத்தியவிதம் சிலிர்ப்பினைக் கொடுப்பது.

அவர் மகராஷ்ட்ராவில் வசித்தவர், பின் நெய்வேலிக்கு வந்தார். ஆனால், தீவிர முருகபக்தர். அடிக்கடி குடும்பத்தோடு பழனி சென்று பாலமுருகனை தரிசிப்பது அவரின் வழமை.

அப்படி அவர் முருகப்பெருமானை தீவிரமாக வழிபட்டார். முருகன் அருளாலே அவருக்கு ஆண்மகனும் பிறந்தான். அதன் பின் முருகன் சேவா சங்கமெல்லாம் நெய்வேலி பக்கம் நடத்தினார், அவரின் மனைவிக்கு முருகப்பெருமான் நேரடியாகக் காட்சி தந்து பல ஆபத்துக்களைத் தடுத்து காத்த சம்பவமெல்லாம் உண்டு.

ஆனால், அவர்களுக்கு குருந்தமலை தெரியாது. அறிந்திருக்கவில்லை.

ஒருநாள் அவர் மனைவி தன்னை அறியாமலே குருந்தமலை கோவிலின் அடையாளமெல்லாம் சொல்லி, அங்கிருக்கும் அனுமன் ஆலயம் இன்னும் பலவற்றை சொல்லி அருள் நிலையில் பேசி அந்த ஆலயத்துக்குச் செல்ல பணித்திருக்கின்றார்.

அதன் பின்பே தேடிப்பார்த்து தன் மனைவி மூலம் முருகன் சொன்ன அத்தனை அடையாளமும் கண்டு பணிந்து குருந்தமலை முருகன் கோவிலுக்கு அக்குடும்பமே சாட்சியானது.

குருந்தமலை முருகனுக்கு சூட்டியிருக்கும் வெள்ளி கவசமும் வெள்ளி வேலும் அக்குடும்பம் கொடுத்தது. முருகப்பெருமான் அருளால் பிறந்த அவர்கள் மகன் முத்துகுமரன் இன்றும் அந்த ஆலயத்தின் சாட்சி.

போகரின் சப்த காண்டத்தில் குருந்தமலை பற்றிய குறிப்பு உள்ளது. இதுதவிர குருந்தமலை மாலை, குருந்தமலை பதிற்றுப்பத்து அந்தாதி, குருந்தமலை பிள்ளைத் தமிழ், கம்பீர விநாயகர் பதிகம், குருந்தமலை திருப்புகழ் உள்பட பல நூல்களும் குருந்தமலையின் புகழைப் பறைசாற்றுகின்றன.

 குருந்தமலை ஸ்ரீ கம்பீர விநாயகப் பதிகம், குருந்தமலை ஸ்ரீ குழந்தை வேலாயுத மாலை, குழந்தை வேலாயுத சுவாமி பிள்ளைத் தமிழ், குருந்தமலை திருப்புகழ், குருந்தமலை பதிற்றுப் பத்தந்தாதி, குருந்தமலை ஸ்ரீ ஆஞ்சநேயர் பதிகம் ஆகியன குருந்தமலை என இம்மலை முருகனை பற்றிய பாடல்கள் நிரம்ப உண்டு

இன்னும் உடுமலை சரபகவி, அரன்கசாமி தாஸ், சொர்ணமணி நாராயண சாமி என எத்தனையோ கவிஞர்கள் இந்த குருந்தமலை முருகனைப் பற்றி பாடியுள்ளார்கள்.

முன்பு சேர நாட்டில் மிளகு, இலவங்கம், கிராம்பு ஆகியவற்றை வாங்கி மூட்டைகளாகக் கட்டி பொதி மாடுகளில் ஏற்றிக்கொண்டு வந்த வணிகர் சிலர் இந்த  குருந்தமலை அடிவாரத்தில் ஒரு நாள் இரவு தங்கினர். அப்போது அவர்களிடம் வந்த சிறுவன் ஒருவன், இவை என்ன மூட்டைகள்? என்று கேட்க, சிறுவன்தானே என்ற அலட்சியத்தில் “தவிட்டு மூட்டைகள்’ என்றனர் வியாபாரிகள்.

மறுநாள் அவர்கள் மூட்டைகளைப் பிரித்துப் பார்க்க, அனைத்தும் தவிட்டு மூட்டைகளாகவே மாறியிருந்தன. 

அதிர்ச்சியடைந்த வியாபாரிகள் முருகனே சிறுவன் வடிவில் வந்தான் என்பதை உணர்ந்து குருந்தமலை மீது வீற்றிருந்த குமரனை வேண்டினர். உடனே அந்த மூட்டைகள் அனைத்தும் பழையபடி மாறின‌.

இப்படியான அதிசயங்களைச் செய்த ஆலயம் அது.

துரை மத்துவராயர் பாலயத்தார் என்பவர் கோயில் மானியமாக 100 ஏக்கர் நிலத்தை அளித்துள்ளனர். அதன் ஆவணங்கள் இன்றும் உண்டு.
 
இந்த ஆலயத்தின் சிறப்பாக  மார்ச் 21, 22, 23 ஆகிய தேதிகளில் சூரியனுடைய பொற்கிரணங்கள் முருகனுடைய திருமேனி மீது விழும் அதிசயம் உண்டு.
 
கோவை பக்கம் செல்லும் போது இந்த ஆலயங்களைத் தரிசித்து வாருங்கள். முத்துமலை முருகன் உங்களை எல்லா ஆபத்திலும் காத்து வேதனையினை மகிழ்ச்சியாக்குவார். கிணத்துக்கடவு முருகன் உங்கள் நோயெல்லாம் தீர்ப்பார். இந்த குருந்தமலை முருகன் குருவாக நின்று உங்களுக்கு பெரும் ஞானம் தந்து ஆட்கொண்டு உங்களை தன் சாட்சியாக காலத்துக்கும் நிறுத்துவார்.

ஓம் நமசிவாய
 படித்து பகிர்ந்தது 
இரா இளங்கோவன் 
நெல்லிக்குப்பம். 

Thursday, February 20, 2025

திருக்குவளை திருக்கோளிலி கோளிலிநாதர் பிரம்மபுரீஸ்வரர்....

உலகப் புகழ்பெற்ற சப்தவிடங்க தலங்களில் 
அவனி விடங்க தலமாகவும், 
தேவாரப் பாடல் பெற்ற சோழநாட்டு தலங்களில் ஒன்றான, 
பிரம்மன் சிவனை பூஜித்த தலமாகவும், சுந்தரமூர்த்தி நாயனார்க்கு இறைவன் நெல்குவியலை வழங்கி திருவிளையாடல் புரிந்த இடமாகவும், நவகிரகங்களின் குற்றம் நீக்கிய தலமாகவும் 
உள்ள 
#நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள 
#திருக்குவளை என்ற 
#திருக்கோளிலி
#கோளிலிநாதர் 
(#பிரம்மபுரீஸ்வரர்)
#வண்டமரும்_பூங்குழலாள் 
திருக்கோயில் பற்றிய வரலாறு:

பிரம்மபுரீஸ்வரர் கோயில் அப்பர், சம்பந்தர், சுந்தரர் ஆகியோரால் தேவாரம் பாடல் பெற்ற சிவத்தலமாகும். தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் காவிரி தென்கரைத் தலங்களில்அமைந்துள்ள 123ஆவது சிவத்தலமாகும். இத்தலம் நாகப்பட்டினம் மாவட்டம் திருக்குவளையில் அமைந்துள்ளது. இத்தலத்தின் மூலவர் பிரம்மபுரீஸ்வரர், தாயார் வண்டமர் பூங்குழலம்மை. இத்தலத்தின் தலவிருட்சமாக தேத்தா மரமும், தீர்த்தமாக பிரம்ம தீர்த்தமும் உள்ளன. இத்தல இறைவனார் சுயம்பு மூர்த்தி.

*மூலவர்:  பிரம்மபுரீசுவரர், கோளிலிநாதர், கோளிலிநாதேஸ்வரர்.  
*அம்மன்:வண்டமர் பூங்குழலி  

*புராண பெயர்:தென்கயிலை,
பிரம தபோவனம், கதகாரண்யம் (தேற்றாமரவனம்), புஷ்பவனம்,
திருக்கோளிலி

*தல மரம்: தேற்றா மரம்   

*தீர்த்தம் :  பிரம தீர்த்தம். முத்தி நதியாகிய சந்திர நதி  

ஊர்: திருக்குவளை

மாவட்டம்: நாகப்பட்டினம் 

*வழிபட்டோர்:சம்பந்தர், அப்பர், சுந்தரர், பரணதேவ நாயனார், சேக்கிழார், பிரமன், திருமால், இந்திரன், அகத்தியர், முசுகுந்தன், பஞ்சபாண்டவர்கள், நவக்கிரகங்கள், ஹேமகாந்த மன்னன் முதலியோர்.

*பாடியவர்கள்: அப்பர், சுந்தரர்,சம்பந்தர், வள்ளலார் 

*திருத்தல பாடல்கள்:

"நாளாய போகாமே நஞ்சணியுங் கண்டானுக்கே
ஆளாய அன்புசெய்வோம் அடல்நெஞ்சே அரநாமம்
கேளாய்நம் கிளைகிளைக்கும் கேடுபடாத் திறம் அருளிக்
கோளாய நீக்கும் அவன்கோளிலிஎம் பெருமானே
    ..... திருஞானசம்பந்தர்

மைகொள் கண்ணுமை பங்கின் மான்மழுத்
தொக்க கையினன் செய்யதோர் சோதியன்
கொக்க மர்பொழில் சூழ்தரு கோளிலி
நக்க னைத் தொழ நம்வினை நாசமே
  ....... திருநாவுக்கரசு சுவாமிகள்

கொல்லை வளம்புறவில் திருக் கோளிலி மேயவனை
நல்லவர் தாம்பரவும் திருநாவல வூரன்அவன்
நெல்லிட ஆட்கள்வேண்டி நினைந்து ஏத்திய பத்தும்வல்லார்
அல்லல் களைந்துலகில் அண்டர் வானுலகு ஆள்பவரே
            ..... சுந்தரர்

கோளிலியப்பர் குணமூன்று டையார் தம்
தோளிலுலாமாலை சூட்டுதற்கு – வாளவுணன்
கற்பக வேல் தொட்ட கடவுட்கு முன்வந்த
கற்பகத்தின் பொற்கழல்கள் காப்பு
.... திருக்குவளை தியாகரஜசுவாமி உலா- விநாயகவணக்கம்
                                                                            -“நெற்சுமக்க
ஆளிலை என்று ஆரூரனார் துதிக்கத் தந்தருளுங்
கோளிலியின் அன்பர் குலங்கொள் உவப்பே”
..... திரு அருட்பா

*கோயில் குறிப்பு:

இத்தலம் மக்கள் வழக்கில் "திருக்குவளை" என்று வழங்கப்படுகிறது.

  நவக்கிரகங்கள் முதலியோர்க்கு உண்டாய குற்றங்களை நீக்கி அருள் புரிந்தமையால் "கோளிலி" என்று பெயர் பெற்றது. "கோளாய நீக்குமவன் கோளிலி எம்பெருமான்" என்பது ஞானசம்பந்தர் வாக்கு.

  
 பகாசூரனைக் கொன்றதனால் உண்டான பாவத்தை (பிரமகத்தித் தோஷம்) வீமன் இங்குப் போக்கிக் கொண்டான் என்பது வரலாறு.

இத்தலத்து தியாகராஜர் அவனி விடங்கத் தியாகர்,ஊழிப்பரன் என்றும் இவரது நடனம் வண்டு நடனம் என்றும் அறியப்படுகிறது.

*புராண வரலாறு:

ஆதியும் அந்தமும் இல்லாத அருள்பெரும் ஜோதியாகவும், திருவடியும் திருமுடியும் நின்ற சூழல் அறிய அரியவனுமான இறைவன் சிவபெருமான், பிரம்மனுக்குப் படைப்புத் தொழிலை அருளிய தலமாக, நவகோள்களின் தோஷம் போக்கிய தலமாக, சுந்தரர் பெற்ற நெல் மலையைத் திருவாரூருக்குக் கொண்டு சேர்க்கப் பூதகணங்களை அனுப்பி அருளிய தலமாக, சப்த விடங்கர் தலங்களுள் ஒன்றாக விளங்குகிறது திருக்குவளை அருள்மிகு கோளிலிநாதர் திருக்கோயில்.

படைப்புத் தொழில் வேண்டி பிரம்மன், சந்திர நதியின் வெண்மணலை எடுத்து சிவலிங்கத் திருமேனியை உருவாக்கி, பக்தி நெறியுடன் பல நாள்கள் வழிபட்டு, சிவபெருமானின் திருக்காட்சியைக் கண்டு, படைப்புத் தொழில் கைவரப் பெற்ற தலம் இந்தத் தலம். இதனால், இத்தலத்து இறைவனுக்கு அருள்மிகு பிரமபுரீசுவரர் என்ற திருநாமமும், கோள்களின் குற்றம் நீக்கியருளியதால் அருள்மிகு கோளிலிநாதர் என்ற திருநாமமும் விளங்குகின்றன.

இத்தலத்தின் மூல மூர்த்தி அருள்மிகு பிரமபுரீசுவரர், பிரம்மனால் வெண்மணலால் அமைக்கப்பட்டவர் என்பதால், மூலவருக்குக் குவளை  சாற்றியே வழிபடப்படுகிறது. மாதந்தோறும் அமாவாசையன்று இரவு 8 மணிக்கு மட்டுமே குவளை நீக்கப்பட்டு, வெண்மணலால் ஆன சிவலிங்கத் திருமேனிக்குத் தைலக்காப்பு சாற்றப்படுகிறது.

மூலவருக்குக் குவளை சாற்றப்பட்டிருப்பதால், இத்தலத்துக்குத் திருக்குவளை எனப் பெயர் ஏற்பட்டதாகக் குறிப்பிடப்படுகிறது. பண்டைக்கால கல்வெட்டுகளில் இத்தலம் திருக்கோளிலி என்றே குறிக்கப்பட்டுள்ளது. மேலும், பிரமதபோவனம் என்ற பெயரும் இத்தலத்துக்குக் குறிப்பிடப்படுகிறது. இக்கோயிலின் எதிரே உள்ள தீர்த்தம், பிரம்மனால் உருவாக்கப்பட்டது என்பதால் அவரது பெயராலேயே பிரம்மதீர்த்தம் எனப்படுகிறது. 
தேற்றா மரம் தல விருட்சமாக உள்ளது.

தேவாரம் பாடிய மூவராலும் பாடல் பெற்றது இத்தலம். சமயாசாரியர்கள் திருஞானசம்பந்தர், சுந்தரர் ஆகியோர் தலா ஒரு திருப்பதிகமும், அப்பர் சுவாமிகள் 2 திருப்பதிகங்களும் பாடியருளியுள்ளனர்.

#பூதகணங்களை அருளிய தலம்:

திருவாரூரில் சுந்தரரும் பரவை நாச்சியாரும் அடியார்களுக்கு நாள்தோறும் அன்னம்பாலித்து வந்த காலத்தில், திருக்குவளை அருகே உள்ள குண்டையூரைச் சேர்ந்த வேளாளரான குண்டையூர் கிழார் என்பவர், சுந்தரருக்கு நியமமாக உணவுப் பண்டங்கள் அனுப்பி வந்தார். அப்போது, திடீரென பஞ்சம் ஏற்பட்டுள்ளது.

நால்வர்
அதனால், சுந்தரருக்கு நெல் அனுப்ப முடியாமல் குண்டையூர் கிழார் கவலையுற்று, இறைவனை வேண்டியுள்ளார். அவரது வேண்டுதலை ஏற்ற சிவபெருமான், குண்டையூர் கிழாரின் கனவில் தோன்றி, ஆருரானுக்காக உமக்கு நெல் தந்தோம் என்றருளி மறைந்துள்ளார். குண்டையூர் கிழார் கண்விழித்துப் பார்க்கையில் நெல் மலை ஒன்றை இறைவன் அருளியிருப்பதை அறிந்தார். உள்ளம் மகிழ்ந்த அவர், உடனடியாக சுந்தரரிடம் தெரிவித்தார்.

அதன்பேரில், நெல்லைப் பெற்றுச் செல்ல சுந்தரர் குண்டையூர் வந்தார். அங்கு குவிந்திருந்த நெல் மலையைக் கண்டு வியந்த சுந்தரர், அந்த நெல் அனைத்தையும் தன்னால் கொண்டு செல்ல இயலாது என்பதை உணர்ந்து, நெல் மலையைத் திருவாரூருக்குக் கொண்டு செல்ல ஆள் வேண்டி, திருக்குவளைக்கு வந்து அருள்மிகு திருக்கோளிலி இறைவனை வேண்டி,

''நீள நினைந்தடி யேனுமை

  நித்தலுங் கைதொழுவேன்

வாளன கண்மட வாளவள்

  வாடி வருந்தாமே

கோளிலி எம்பெரு மான்குண்டை

  யூர்ச்சில நெல்லுப்பெற்றேன்

ஆளிலை எம்பெரு மானவை

  அட்டித் தரப்பணியே''

என்று தொடங்கும் திருப்பதிகம் பாடினார். அன்றிரவே, கோளிலியம்பெருமானின் அருளால் பூதகணங்கள், குண்டையூர் நெல் மலையைத் திருவாரூருக்குக் கொண்டுசென்று ஊர் முழுவதும் நிரப்பின என்பது இத்தல வரலாறு.

#பீமனுக்கு தோஷ நிவர்த்தி:

பாண்டவர்கள் தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருந்தபோது, வேத்திகிரகீயம் என்ற ஊரில் ஓர் அந்தணர் வீட்டில் விருந்தினராகத் தங்கியிருந்துள்ளனர். அப்போது, அந்த ஊரின் அருகே அமைந்த காட்டில் இருந்த பகாசுரன் என்ற அரக்கன், தினமும் வீட்டுக்கு ஒருவரைத் தனது உணவாகக் கொன்று, தின்று வாழ்ந்து வந்தான்.

குண்டையூர் கிழார்
ஒரு நாள், பாண்டவர்கள் தங்கியிருந்த அந்தணர் வீட்டுமுறை வந்தது. அப்போது, பீமன் ஒரு வண்டி நிறைய உணவுப் பண்டங்களுடன் பகாசுரனைச் சந்திக்கச் சென்றான். பகாசுரனுக்காகக் கொண்டு சென்ற உணவுப் பண்டங்கள் அனைத்தையும் பீமன் உண்டுவிட்டதை அறிந்து ஆத்திரமடைந்த பகாசுரன், பீமனுடன் சண்டையிட்டான். இந்தச் சண்டையில் பகாசுரனை பீமன் கொன்றான்.  

பகாசுரனைக் கொன்ற கொலைப் பழி பீமனை தோஷமாக பற்றியது. இதையடுத்து, பீமன் திருக்கோளிலி வந்திருந்து, அருள்மிகு கோளிலியம்பெருமானை வழிபட்டு, தோஷ நிவர்த்தி பெற்றான் என்பது ஐதீகம். இதன்படி, பஞ்ச பாண்டவர்கள் வழிபட்ட தலங்களுள் ஒன்றாக இத்தலம் குறிப்பிடப்படுகிறது. பாண்டவர்களின் சிலை புடைப்புச் சிற்பமாக இக்கோயிலில் உள்ளது.

#விடங்கர் தலம்:

வலாசுரனுக்கும், இந்திரனுக்கும் போர் ஏற்பட்டபோது, இந்திரனின் வெற்றிக்குத் துணையாக நின்றவன் திருவாரூரைத் தலைமையிடமாகக் கொண்டு ஆட்சி செய்த முசுகுந்த சக்ரவர்த்தி. இந்த வெற்றிக்காக முசுகுந்தனுக்குப் பரிசளிக்க விரும்பினான் இந்திரன். அப்போது, இந்திரன் வழிபட்டு வந்த சோமாஸ்கந்த மூர்த்தியான தியாகராஜப் பெருமானைப் பரிசாக தருமாறு முசுகுந்தன் கேட்டான்.

சுந்தரமூர்த்தி நாயனார்
தனது ஆத்மார்த்த மூர்த்தியைப் பிரிய மனம் இல்லாத இந்திரன், அதே ஒத்த உருவத்தில் மேலும் 6 திருவுருவங்களைப் படைத்து, 7 மூர்த்திகளையும் முசுகுந்த சக்ரவர்த்தியிடம் காண்பித்து, இவற்றிலிருந்து ஒன்றைப் பெற்றுக் கொள் என்றான். தியாகேசப் பெருமானின் திருவருளால், இந்திரன் ஆத்மார்த்த மூர்த்தியாக வழிபட்டு வந்த தியாகராஜ மூர்த்தியை முசுகுந்தன் எடுத்தான். இதையடுத்து, 7 தியாகராஜப் பெருமான் திருவுருவங்களையும் முசுகுந்தனிடமே அளித்து அனுப்பிவைத்தான் இந்திரன்.

திருவாரூர் திரும்பிய முசுகுந்தன், இந்திரன் வழிபட்ட தியாகேசப் பெருமானை திருவாரூரிலும், மற்ற 6 தியாகேசப் பெருமான் திருவுருவங்களை திருக்கோளிலி, திருநள்ளாறு, திருநாகை, திருக்காரவாயில், திருவாய்மூர், திருமறைக்காடு (வேதாரண்யம்) ஆகிய இடங்களிலும் நிர்மாணித்தான் என்பது புராணம்.

நவக்கிரகங்கள்
இதன்படி, முசுகுந்த சக்ரவர்த்தியால் தியாகேசப் பெருமான் மூர்த்தம் நிர்மாணிக்கப்பட்ட சப்த விடங்கர் தலங்களில், அவனி விடங்கர் தலமாக விளங்குகிறது இத்தலம். இங்கு, மூலவருக்குத் தென்பால் தனி சன்னிதி கொண்டு காட்சியளிக்கும் அருள்மிகு தியாகராஜருக்கு அவனி விடங்க தியாகேசர் என்ற திருப்பெயர் விளங்குகிறது. இத்தலத்தில் தியாகராஜர் புறப்பாடு பிரம நடனத்துடன் நடைபெறுகிறது.

#நவக்கிரக தோஷ நிவர்த்தி:

நவக்கிரகங்களின் தோஷம் போக்கும் ஆன்மிகச் சிறப்புப் பெற்ற திருத்தலங்கள் பல தமிழகத்தில் உண்டு. ஆனால், நவ கோள்களும் (நவக்கிரகங்கள்) தங்களின் தோஷம் நீங்க வழிபாடாற்றிய தலமாக விளங்கும் சிறப்புப் பெற்றது இத்தலம். தன்னை வழிபட்ட நவ கோள்களின் தோஷத்தைப் போக்கியருளியதால் இத்தலத்து இறைவனுக்கு அருள்மிகு கோளிலிநாதர் என்ற திருப்பெயர் விளங்குகிறது.

நெல் மகோற்சவத்தில் பூதகணங்களாக வேடமணிந்து வந்தவர்கள்
இங்கு, நவக்கிரகங்கள் 9-ம் வக்கிரமின்றி, தென்திசை நோக்கி உள்ளன. இதனால், அருள்மிகு கோளிலிநாதரை வழிபடுவோருக்கு நவக்கிரகங்களின் தோஷம் நீங்கும் என்பது இத்தலத்தின் ஆன்மிகச் சிறப்பு.  இதனையே, ''கோளாய நீக்குமவன் கோளிலி எம்பெருமான்'' என்று தேவாரப்பதிகத்தில் குறிப்பிட்டுள்ளார் திருஞானசம்பந்தர்.

#பூரட்டாதி நட்சத்திர தலம்:

இத்தலத்தில் பிரம்மன், சிவபெருமானின் திருக்காட்சியைக் கண்ட நாள், வெண்மணலால் அமைத்து பூஜித்து வந்த சிவலிங்கத் திருமேனிக்கு (பிரமபுரீசுவரருக்கு) குவளை சாற்றி வழிபாடாற்றிய நாள் பூரட்டாதி நட்சத்திர தினம் என்பதால், இத்தலம் பூரட்டாதி நட்சத்திரத்துக்குரிய பரிகாரத் தலமாகக் குறிப்பிடுகிறது.

சுவாமிக்கு வெள்ளை வஸ்திரம் சாற்றி,  வெண்மலர் மாலைகளால் அலங்கரித்து, தயிர் சாத நிவேதனத்துடன் வழிபாடு செய்தால் தோஷம் நிவர்த்தியாகும் எனப்படுகிறது.
 
*ஆலய அமைப்பு:

பிரம்மன், அகத்தியர், பஞ்சபாண்டவர்கள், சுந்தரர், முசுகுந்தன் எனப் பலரும் பூஜித்து அருள்பெற்ற இக்கோயில், இயற்கை எழில் சூழ்ந்த பகுதியான திருக்குவளையின் மையப்பகுதியில், கிழக்கு நோக்கிய ராஜகோபுரத்துடன், இரண்டு பிரகாரங்களைக் கொண்டதாக அழகுற அமைந்துள்ளது. ராஜகோபுரத்துக்கு அருகிலேயே, கோயிலின் பிரம்ம தீர்த்தக் குளம் அமைந்துள்ளது.

ராஜகோபுரத்தைக் கடந்ததும் வெளிப் பிரகாரத்தில் வசந்த மண்டபமும், கொடிமரமும் உள்ளன. இரண்டாவது கோபுர வாசலைக் கடந்து உள்பிரகாரத்துக்குச் சென்றதும் நேர் எதிரே மூலவர் சன்னதி உள்ளது. மூலவர் சன்னதியின் தென்புறம் அருள்மிகு அவனிவிடங்க தியாகராஜர் சன்னதி அமைந்துள்ளது. மூலவர் சன்னதியின் வடபுறம்,  அம்பாள் அருள்மிகு வண்டமர்பூங்குழலாள் என்ற திருப்பெயருடன் தனிச் சன்னதி கொண்டு காட்சியளிக்கிறார்.

கோயில் உள்பிரகாரத்தின் தென்புறத்தில் விநாயகர், அருள்மிகு தியாக விநாயகர் என்ற திருப்பெயருடன் காட்சியளிக்கிறார். இதனையடுத்து, விசுவநாதர், விசாலாட்சி,  இந்திரபுரீசுவரர், சந்திரலிங்கம் சன்னதிகள் உள்ளன. இதைத் தொடர்ந்து,  முருகப்பெருமான் வள்ளி, தேவசேனா சமேதராக அருள்மிகு சுந்தரவடிவேலன் என்ற திருப்பெயருடன் காட்சியளிக்கிறார்.

அடுத்ததாக, சொக்கலிங்கம், அண்ணாமலையார், சமயக்குரவர்கள் நால்வர் சன்னதிகளும் உள்ளன. இதையடுத்து, சுந்தரருக்கு நெல் மலை அளித்ததாகக் குறிப்பிடப்படும் குண்டையூர் கிழாருக்குத் சன்னதி அமையப் பெற்றுள்ளது. அடுத்தாக, ஶ்ரீ மகாலட்சுமி சன்னதி அமைந்துள்ளது.

பகாசுரன்
இவை தவிர, அகத்தியர் பூஜித்த சிவலிங்கத் திருமேனி, அவரின் பெயராலேயே அகத்தியலிங்கம் என்ற திருப்பெயருடன் தனிச் சன்னதியாக உள்ளது. கிழக்குப் பிரகாரத்தின் ஈசான்ய திசையில் நவகிரகங்கள் தனிமண்டபத்தில் தெற்கு நோக்கி, வக்கிரமின்றி வரிசையாகக் காட்சியளிக்கின்றன.

அடுத்ததாக, ஶ்ரீ நடராஜர் சன்னதியும், பைரவர், சந்திரன், சூரியர் சன்னிதிகளும் உள்ளன. இவை தவிர, சுந்தரர் - பரவைநாச்சியார், தட்சிணாமூர்த்தி, அர்த்தநாரீஸ்வரர், துர்க்கை, பிரம்மன், உமாமகேசுவரர், பஞ்சபாண்டவர் உள்ளிட்ட மூர்த்தங்களும் இங்கு இடம்பெற்றுள்ளன.

*திருவிழாக்கள்:

இக்கோயிலில் வைகாசி பிரமோற்சவம் 21 நாள்கள் விழாவாக நடைபெறுகிறது. குண்டையூர் கிழார், சுந்தரருக்கு அளித்த நெல்லைத் திருவாரூருக்குக் கொண்டு செல்ல சிவபெருமான் பூதகணங்களை அனுப்பிய ஐதீக விழா, மாசி மாதத்தில் நெல் மகோற்சவமாக 5 நாள்கள் விழாவாக நடைபெறுகிறது.

மாசி மக நட்சத்திர நாளில், திருக்குவளையிலிருந்து சுமார் ஒரு கிலோ மீட்டர் தொலைவில் உள்ள குண்டையூருக்கு அருள்மிகு கோளிலிநாதர் மற்றும் சுந்தரமூர்த்தி நாயனார் சுவாமிகள் புறப்பாடு நடைபெறுகிறது. அப்போது, பூதகணங்களைப் போல வேடமணிந்தவர்கள் உடன் சென்று, குண்டையூரில் நெல் அள்ளும் நிகழ்ச்சியும், அங்கிருந்து திருவாரூருக்குக் கொண்டுசெல்லும் நிகழ்ச்சியும் ஐதீகத்தை நினைவுகூரும் வகையில் நடைபெறுகின்றன.

காலப் பழமையான இக்கோயில் குறித்த குறிப்புகள் 19 கல்வெட்டுகளில் கண்டறியப்பட்டுள்ளன. அந்தக் கல்வெட்டுகள், சடாவர்மன், சுந்தரபாண்டியன், குலசேகரபாண்டியன், ராஜராஜன், ராஜாதிராஜன், மூன்றாம் குலோத்துங்கன், மூன்றாம் ராஜேந்திரன் முதலானோர் காலத்தவை எனக் குறிப்பிடப்படுகிறது. இக்கோயிலுக்கு மேற்கொள்ளப்பட்ட திருப்பணிகள், நிலம் வழங்கிய குறிப்புகள் அதில் இடம்பெற்றுள்ளன. இந்த ஊரில் திருஞானசம்பந்தருக்குத் திருமடம் இருந்ததாகவும் குறிப்பிடப்படுகிறது.

*கல்வெட்டுகள்:

இது கோச்செங்கட் சோழனால் கட்டப்பட்ட மாடக் கோயில்களில் ஒன்றாகும். திருஞானசம்பந்தர் இந்தக் கோயிலின் சிவபெருமானைப் புகழ்ந்து பாடல்களைப் பாடியுள்ளதால், 
மூலக் கோயில் 7 ஆம் நூற்றாண்டுக்கு முன்பே இருந்திருக்கலாம்  , மேலும் சோழர்களால் கல் கோயிலாக புனரமைக்கப்பட்டு, பாண்டியர்கள் மற்றும் விஜயநகர நாயக்கர்களால் மேலும் விரிவுபடுத்தப்பட்டது.  

இக்கோயிலில் பதியப்பட்டுள்ள கல்வெட்டுகள் சோழர்கள் மற்றும் பாண்டியர்களுக்கு சொந்தமானது. கல்வெட்டுகளின்படி, சிவபெருமான் "திருக்கோளிலி உதய நாயனார்" என்றும், தியாகராஜர் "ஆவணி விடங்க தியாகர்" என்றும் அழைக்கப்பட்டார். கோயிலின் வடக்குத் தெரு “திருமறைக்காடன் தெரு” என்று அழைக்கப்பட்டது. இத்தலம் இராஜேந்திர சோழ வளநாட்டில் இடையலநாட்டு வெண்டலை வேளூர் கூட்டம்.

ஜடாவர்மன் சுந்தர பாண்டியன் காலத்தில் வடவல்லத்துஇருகுடியான் இந்திரபத்திநல்லூர் உய்யவந்தான் சீயாலைப்பிள்ளை என்ற ஜெயதுங்கவர்மன் என்பவரால் மகா மண்டபம் கட்டப்பட்டது.

பாண்டிய மன்னன் சடையவர்மன் சுந்தர பாண்டியனின் 8 ஆம்  ஆட்சி ஆண்டு கல்வெட்டு, சந்திரமௌலி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கின் காரணமாக, தென்கரை உடைந்து, வடக்கு திருவீதியில் உள்ள கோயிலுக்குள் தண்ணீர் புகுந்ததாக பதிவு செய்கிறது. வெள்ள நீரை வெளியேற்ற, பாலைக்குறிச்சி உடையார் திருமறைக்கடுடையான், குண்டையூர் கிராமத்தின் எல்லையில் தென்கரையாக எந்தக் கரையையும் அமைத்து ஆற்றின் நீரைத் திருப்பிவிட்டார். இதன் காரணமாக, கோயிலுக்குச் சொந்தமான திருநாமத்துக்கணி நிலம் திருப்பி விடப்பட்டது. அதற்கு ஈடுசெய்ய, அவர் பரமேஸ்வர சதுர்வேதி மங்கலத்தில் இருந்த தனக்குச் சொந்தமான 2 வேலி நிலத்தை பரிசாக வழங்கினார். திருவீதி மற்றும் வாய்க்கால் / வாய்க்கால் அவரது நினைவாக "பாலைக்குறிச்சி உடையார் திருமறைக்கடுடையான்" என்று பெயரிடப்பட்டது.  

மூன்றாம் ராஜராஜ சோழனின் 4 ஆம்  ஆண்டு ஆட்சிக் கல்வெட்டு, அதிபத்தநாயனார் உருவம்/சிலையை "சிவன்படவர்" (செம்படவர் சமூகம்) சேர்ந்த ஆலன் நிறுவியதாகக் கூறுகிறது. அதே 2100 காசுகள் அவரது சமூகத்தினரிடமிருந்து (பிச்சை) வசூலிக்கப்பட்டு, அந்தப் பணம் அய்யனாயப்ப பட்டனின் மகன் தாமோதர பட்டனிடம் ஒப்படைக்கப்பட்டது. வட்டியில் இருந்து கிடைத்த 2 நாழி நெல், அதிபத்த நாயனாரின் உருவ வழிபாடு மற்றும் நைவேத்யத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டது. 

" ஸ்வஸ்திஸ்ரீ திரிபுவனச்சக்கரவத்திகள் 
ஸ்ரீராஜராஜ தேவர்க்கு யாண்டு  4  ஆவது  
மார்கழி மாதத்தொருநாள் உடையார்  
திருக்கோளிலி உடையார் கோயிலில்  
முன்னாளில் சிவன்படவரில் ஆலன்  
எழுந்தருளிவிட்ட அதிபத்த நாயனார்க்கு "  

மூன்றாம் இராஜேந்திர சோழனின் 35 வது  ஆட்சியாண்டு கல்வெட்டு, பாண்டிய நாட்டு சோழ பாண்டிய மண்டலத்து மதுரோதயவளநாட்டு, பாலைக்குறுச்சி உடையான் ஆகயன் திருமறைக்காவுடையான், அவரது பிறந்த நட்சத்திரக் கேட்டை நாளில் திருவீதியுழா / ஊர்வலம் நடத்தியதை பதிவு செய்கிறது. ஊர்வலத்திற்குப் பிறகு உற்சவர் வைக்கப்பட்டு, "திருமறைக்கடுடையான் மண்டபத்தில்" பூஜை நடத்தப்படும். அன்றைய நாட்களில் நைவேத்தியம், சாத்துபடி, தீபம், திருப்பலித்தாமம்/மாலை, நன்கொடைகள் வழங்கப்பட்டு, அந்த பகுதியில் கல்வெட்டு சேதமடைந்துள்ளதால் விவரம் தெரியவில்லை.  

சோழர் கால கல்வெட்டுகளில் பெரும்பாலானவை, உலகுக்கு எண்ணெய், வருடத்திற்கு 91 நாழி எண்ணெய், நைவேத்யம், புனித நீராடல்  போன்றவற்றால் எரியும் தீபங்களை தானமாக வழங்கியதாக பதிவு செய்கின்றன. அதே பணத்திற்கு, 1000 காசு, 800 காசு, 140 காசு, 260 பணம், 100 பணம், நெல், தங்கம் மற்றும் நிலங்கள் இந்தக் கோயிலுக்கு தானமாக வழங்கப்பட்டன. அவற்றில் சில கோயிலின் பட்டர்களால் பெறப்படுகின்றன, மேலும் ஒரு கல்வெட்டில் "கணிஉடைய முப்பத்து வட்டத்து கணிஉடைய சிவபிராமினர்கள்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தக் கல்வெட்டுகள் சிவபிராமணர்களால் இறையிலி அதாவது வரி இல்லாத நிலங்கள் வைத்திருப்பதாக பதிவு செய்கின்றன. மேலும் கிராமத்தில் "திருஞானசம்பந்தர் மடம்" என்ற ஒரு மடம் இருந்தது. 

மரகத லிங்கம், சப்த விடங்க லிங்கங்களில் ஒன்றாகும் (இது கிழக்கு ஆசிய நாட்டிலிருந்து ராஜேந்திர சோழனால் கொண்டு வரப்பட்டதாக நம்பப்படுகிறது. மரகத லிங்கம் திருடப்பட்டு, தமிழ்நாடு காவல்துறையினரால் மீட்கப்பட்டது.    

*திருக்கோளிலி அருகில் அமைந்துள்ள மற்ற சிவத்தலங்கள்:

*குண்டையூர்:

குண்டையூர் திருத்தல இறைவன் சுந்தரேசுவரர், அம்பிகை மீனாட்சியம்மை. சுந்தரருக்கு நெல் அளித்த குண்டையூர் கிழார் வாழ்ந்த தலம் மற்றும் இவ்வடியாருக்காக இறைவனார் நெல் மலை அருளிய திருத்தலம்.

எட்டுக்குடி:

எட்டுக்குடி திருத்தல இறைவன் சௌந்தரேசுவரர், அம்பிகை ஆனந்தவல்லி. தலமரம் வன்னி, தீர்த்தம் சரவணப்பொய்கை;இத்திருத்தலம் முருகப்பெருமானுக்கு சிறப்பான திருத்தலம்.

*நிர்வாகம்:

இத்திருக்கோயில் தருமையாதீன அருளாட்சிக்குள்பட்டது. தருமையாதீன 25-ஆவது குருமகா சந்நிதானம் ஶ்ரீலஶ்ரீ சுப்பிரமணிய தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகளின் திருவுளப்பாங்கின்படி, 1964 ஆம் ஆண்டு ஜூன் 29-ஆம் தேதியன்றும், 26-ஆவது குருமகா சந்நிதானம் ஶ்ரீலஶ்ரீ சண்முகதேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகளின் திருவுளப்பாங்கின்படி, 1999-ஆம் ஆண்டு பிப்ரவரி 2-ஆம் தேதியன்றும் குடமுழுக்கு நடைபெற்றது.  

தருமையாதீன 27-ஆவது குருமகா சந்நிதானம் ஶ்ரீலஶ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகளின் திருவுளப்பாங்கின்படி, இக்கோயிலில் நாள்தோறும் ஆறு கால வழிபாடு நடைபெறுகிறது. 

காலை 7 மணி முதல் 12.30 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் இரவு 8.30 மணி வரையிலும் கோவில் திறந்திருக்கும்.

நாகை மாவட்டத்துக்குள்பட்ட திருக்குவளைக்கு, நாகை, திருவாரூர், திருத்துறைப்பூண்டி பகுதிகளிலிருந்து பேருந்து வசதிகள் உள்ளன. ரயிலில் பயணிப்பவர்கள் திருவாரூரில் இறங்கி அங்கிருந்து 26 கி.மீ. தொலைவு சாலை வழி பயணித்து திருக்குவளையை அடையலாம்.

ஓம் நமசிவாய 
படித்து பகிர்ந்தது
 இரா இளங்கோவன் 
நெல்லிக்குப்பம். 

Wednesday, February 19, 2025

பூ பூக்கும்; ஆனால் காய் காய்க்காத மரம் உள்ள கொடுமுடி சிவன் கோயில்..

பூ பூக்கும்; ஆனால் காய் காய்க்காத அதிசய மரம் உள்ள  இனிய சிவன் கோயில்!*_

 

தமிழ்நாட்டிலேயே மும்மூர்த்திகளைக் கொண்ட ஒரே கோயில் என்ற பெருமையைப் பெற்றது.ஈரோடு மாவட்டத்தில் உள்ள ஸ்ரீ மகுடேஸ்வரர் ஆலயம். ஈரோடு மாவட்டத்தில் இருந்து 40 கிலோ மீட்டர் தொலைவிலுள்ள கொடுமுடி என்னும் பகுதியில் இது அமைந்திருக்கிறது. இந்த ஆலயத்தில் மும்மூர்த்திகளான பிரம்மா, விஷ்ணு மற்றும் சிவன் ஆகியோர் ஒரே ஆலயத்தில் வீற்றிருக்கின்றனர்.

திருவண்ணாமலையில் சிவனே மலையாக இருக்கிறார் என்று சொல்லப்படுவது போலவே, இங்கு மலையின் முடியாக சிவன் இருக்கிறார் என்று கருதப்படுவதாலேயே இது ‘கொடுமுடி’ என்ற பெயரைப் பெற்றதாம். இங்கு காட்சி தரும் சிவன் மகுடேஸ்வரராகவும், அம்பிகை வடிவுடைய நாயகியாகவும் காட்சி தருகின்றனர். இத்தலத்தின் லிங்கம் மிகவும் சிறியது. அகத்திய மாமுனிவர் இந்த லிங்கத்தை தழுவியதால் உண்டான கைவிரல்களை இன்றும் தரிசிக்கலாம்.

இக்கோயில் காவிரி ஆற்றின் மேற்கரையில் கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. 640 அடி நீளமும் 484 அடி அகலமும் கொண்டுள்ளது. மும்மூர்த்திகளுக்கும் தனித்தனியாக மூன்று கோபுரங்களும், தனித்தனியாக மூன்று சன்னிதிகளும், மூன்று வாயில்களும் அமைக்கப்பட்டிருக்கிறது.

இந்த ஆலயத்துக்கு வந்து வழிபட்டால் மூன்று மடங்கான ஆசிர்வாத பலன்கள் கிடைக்கும். பாவங்கள் விலகும் என்பது ஐதீகம். மகுடேஸ்வரரான சிவபெருமானின் திருக்கல்யாணத்தைக் காண்பதற்காக படைப்புக் கடவுளான பிரம்மனும், காக்கும் கடவுளான மகாவிஷ்ணுவும் இந்தத் தலத்திற்கு வந்ததாகப் புராணங்கள் கூறுகின்றன.

இக்கோயிலில் 3 ஆயிரம் ஆண்டுகளுக்கும் பழைமை வாய்ந்த வன்னி மரம் அமைந்திருப்பது மற்றொரு சிறப்பம்சமாகும். இந்த மரத்தில் பூ பூக்கும். ஆனால், காய் காய்க்காது. ஒரு பக்கம் முள் இருக்கும். மறு பக்கம் முள் இருக்காது. இந்த மரத்தின் இலையை தண்ணீரில் போட்டால் எவ்வளவு நாள் ஆனாலும் தண்ணீர் கெட்டுப்போகாது. மூன்று முகம் கொண்ட பிரம்ம தேவன் இந்த வன்னி மரத்தின் அடியில் காட்சி தருகிறார். மேலும், இந்த வன்னி மர இலையை பழநி பங்குனி உத்திரம் திருவிழாவிற்கு தீர்த்தக் காவடி எடுக்கும் பக்தர்கள் காவிரி நீரில் போட்டுதான் காவடி சுமந்து இன்றும் பாத யாத்திரை செல்கிறார்கள்.

இக்கோயிலில் வேப்ப மரமும், அரச மரமும் இணைந்திருக்கும் இடத்தில் முழுமுதற் கடவுள் விநாயகர் அமர்ந்துள்ளார். இந்த விநாயகரை காவிரி நீர் கொண்டு அபிஷேகம் செய்து வழிபட்டால் திருமணத்தடை விலகும். குழந்தைப் பேறு இல்லாதவர்களுக்கு விரைவில் அப்பேறு வாய்க்கப்பெறும் என்று நம்பப்படுகிறது.

வடக்கிலிருந்து தெற்காக ஓடிவரும் காவிரி நதி கொடுமுடி சிவஸ்தலத்தில் கிழக்கு நோக்கி திரும்பி ஓடுகிறது. காவிரி நதியின் மேற்குக் கரையில் கொடுமுடிநாதர் கோயில் அமைந்துள்ளது. கொடுமுடியில் இருந்துதான் காவிரி கிழக்கு நோக்கி திரும்பிப் பாய்ந்து செல்கிறது. இந்த ஆற்றில் பக்தர்கள் புனித நீராடிய பின் கோயிலுக்குச் செல்வது வழக்கமாக உள்ளது. தோஷங்கள் நீக்கும் தலமாகவும் இது விளங்குகிறது.

இங்கு மூலவர் வீரநாராயணப் பெருமாளை பார்த்தபடி கருடாழ்வார் காட்சி தருகிறார். மூலவர் பெருமாள் படுத்த கோலத்தில் காட்சியளிக்கிறார். மேலும் 12 ஆழ்வார்கள், பரமபதநாதர், ராமானுஜர், நாகர், வேங்கடாசலபதி, ஆஞ்சனேயர் ஆகியோரும் உள்ளனர். இக்கோயிலின் ஆஞ்சனேயர் சற்று வித்தியாசமாக கோர பல்லோடு காட்சியளிக்கிறார். இங்கு மஹாலக்ஷ்மி தாயாருக்கு தனிச் சன்னதியும் உள்ளது. இந்த கோயிலின் மேற்கூரையில் ராசி சக்கரங்கள் கல்லில் பொறிக்கப்பட்டுள்ளது.

ஓம் நமசிவாய 
படித்து பகிர்ந்தது 
இரா இளங்கோவன் 
நெல்லிக்குப்பம். 

Followers

தமிழ்நாட்டில்சிவனுக்குரியஸ்தலங்களின்பெருமைகள்.

தமிழ்நாட்டில்சிவனுக்குரிய ஸ்தலங்களின்பெருமைகள். ராஜ கோபுரத்தை விட மூலவருக்குஉயர்ந்த விமானம் உள்ள இடங்கள் 1,திருப்புனவாசல் -- ஶ்ர...