Sunday, July 20, 2025

திருமாகறலீஸ்வரர் திருமாகறல் காஞ்சிபுரம்


மூலவர் : #திருமாகறலீஸ்வரர்
 உற்சவர் : #சோமாஸ்கந்தர், நடராஜர்
 அம்மன்/தாயார் : #திரிபுவனநாயகி
 தல விருட்சம் : எலுமிச்சை
 தீர்த்தம் : அக்னி
 புராண பெயர் : திருமாகறல்
 ஊர் : திருமாகறல்
 மாவட்டம் : காஞ்சிபுரம்
 மாநிலம் : தமிழ்நாடு
 
 #பாடியவர்கள்: 
     திருஞானசம்பந்தர் 11 பதிகம் பாடியுள்ளார்.

#தேவாரப்பதிகம்
மன்னுமறை யோர்களொடு பல்படிம மாதவர்கள் கூடியுடனாய் இன்னவகை யால்இனிது இறைஞ்சி இமை யோரிலெழு மாகறலுளான் மின்னை விரி புன்சடையின் மேல்மலர்கள் கங்கையொடு திங்களெனவே உன்னுமவர் தொல்வினைக ளொல்கவுயர் வானுலக மேறலெளிதே.
                     -திருஞானசம்பந்தர்

தேவாரப்பாடல் பெற்ற தொண்டை நாட்டுத்தலங்களில் இது 7வது தலம். 
 
 #திருவிழா: 
    மாசி மாதம் பத்துநாள் பிரம்மோற்ஸவம்.  
     
#தலசிறப்பு: 
     இத்தல இறைவனுக்கு அடைக்கலம் காத்த நாதர், மகம் வாழ்வித்தவர், உடும்பீசர், பாரத்தழும்பர், புற்றிடங்கொண்டார், நிலையிட்ட நாதர், மங்கலங்காத்தவர், பரிந்து காத்தவர், அகத்தீஸ்வரர் ஆகிய பெயர்களும் உண்டு.இத்தலத்தில் சிவபெருமான் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். மூலவரின் விமானம் கஜபிருஷ்ட (யானையின் பின் பகுதி) அமைப்பில் அமைந்துள்ளது. திருப்பரங்குன்றத்தில் முருகனுக்கும் தெய்வானைக்கும் திருமணம் நடந்தது. இந்திரன் முருகனுக்கு திருமணப்பரிசாக வெள்ளை யானையை கொடுத்தான். புதுமணத்தம்பதிகளை வெள்ளையானையில் அமரச்செய்து அக்காட்சியை கண்ணாற கண்டு மகிழ்ந்தான். மகாவிஷ்ணுவும் இக்காட்சியை காண விரும்ப, முருகன் இத்தலத்தில் வெள்ளையானை மீது அமர்ந்து காட்சி தந்தார்.இக்கோயில் சோழர்களால் கட்டப்பட்டது. சிவனின் தேவாரப்பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் இது 241 வது தேவாரத்தலம் ஆகும்.
#பொதுதகவல்: 
      அழகிய சுதை சிற்பங்களோடு 5 நிலை ராஜகோபுரமும், இரண்டு பிரகாரமும் உள்ளது.

பிரகாரத்தில் கணபதி, ஆறுமுகன், அறுபத்து மூவர், நடராஜர், பைரவர், நவக்கிரக சன்னதி உள்ளது. விமானத்தில் வீணை ஏந்திய தெட்சிணாமூர்த்தியைக் காணலாம்.

#தலபெருமை: 
     முருகப்பெருமான் சூரபத்மன் முதலிய அரக்கர்களை அழிக்க போர் செய்த போது, தப்பிப் பிழைத்த மாக்கிரகன் என்ற அசுரன் சிவபூஜை செய்து வந்தான். அவன் இத்தலம் வந்த போது இங்குள்ள இறைவனுக்கு தன் பெயரால் மாக்கிரன் என பெயர் சூட்டினான். இப்பெயர் மருவி "மாகறலீசர்' என்று மாறியது.
 
 #தலவரலாறு: 
     முன்னொரு காலத்தில் பிரம்மா இத்தலத்தில் சிவபூஜை செய்து விட்டு சத்தியலோகம் செல்லும் போது ஆண்டு முழுவதும் காய்க்கும் அதிசயப்பலாமரம் ஒன்றை நட்டார். அப்பலாமரம் நாள்தோறும் கனி கொடுத்து வந்தது. ராஜேந்திர சோழ மன்னன் இந்த அதிசய பலாமரத்தைக் கண்டு வியந்து, அந்த ஊரிலிருந்து தினமும் ஒருவர் தலைச்சுமையாக இந்த பழத்தை எடுத்து சிதம்பரம் நடராஜர் கோயிலில் சேர்க்க வேண்டுமென உத்தரவிட்டான். நடராஜருக்கு இப்பழத்தை மதிய வேளையில் நைவேத்தியம் செய்து அதை மன்னருக்கு கொடுப்பது வழக்கம்.ஒருமுறை அந்தண சிறுவனின் முறை வந்தது. "இந்த மரத்தில் இருந்து தினமும் பழம் பறித்துப் போக மக்களை ஏவும் மன்னன், வேலைக்காரர்களை இதற்கென நியமித்திருக்கலாமே' என எண்ணிய அவன் ஒரு தந்திரம் செய்தான்.  அந்த ஊர் மக்களிடம், ""நான் சிறுவன். பழத்தை சுமக்க சிரமப்படுவேன். நீங்கள் எல்லோரும் போய் இந்த பழத்தை கொடுத்து வாருங்கள். நான் இங்கிருந்து உங்கள் வீடுகளை பார்த்து கொள்கிறேன்,'' என்று கூற, அனைவரும் சிதம்பரம் சென்று விட்டனர். இந்த மரம் இருந்தால் தானே பிரச்னை வரும். இதை அழித்து விட்டால், நம் ஊர் மக்கள் தினமும் பழம் சுமக்கும் தொல்லை இருக்காதே எனக் கருதியவன், அந்த மரத்தை எரித்து விட்டான்.ஊர் திரும்பிய மக்களிடம் பலாமரத்தில் தானாக தீப்பிடித்து சாம்பலாகி விட்டதாக தெரிவித்தான். ஊராரும் நம்பிவிட்டனர்.  மறுநாள் பலாப்பழம் சிதம்பரம் செல்லவில்லை. அந்த சிறுவனை அழைத்து மன்னர் விசாரித்தார். அப்போது அவன்,""பலாப்பழத்தை சிதம்பரம் கொண்டு வருவதற்கு தாங்கள் எங்களுக்கு எந்த வசதியும் செய்து தரவில்லை. எனவே தான் மரத்தை எரித்தேன்,'' என்றான்.அதற்கு மன்னன், ""தகுந்த வசதி வேண்டும் என நீ இதை என்னிடம் தெரிவித்திருக்க வேண்டும். இதை நீ செய்யாததால் உனது கண்களை கட்டி நாடு கடத்த உத்தரவிடுகிறேன்.'' என்றான்.காவலர்கள் சிறுவனை அழைத்துச் சென்ற போது, மன்னனும் உடன் சென்றான். ஊர் எல்லையில் அவனை விட்டு விட்டு திரும்பிய போது, ஓரிடத்தில் பொன்னிற உடும்பு தென்பட்டது. அதை பிடிக்க காவலாளிகள் சென்ற போது அது ஓர் புற்றினுள் சென்று மறைந்தது. காவலாளிகள் அந்த புற்றை ஆயுதங்களால் அந்த புற்றை கலைத்த போது உடும்பின் வாலிலிருந்து ரத்தம் பீறிட்டு வந்தது. அப்போது அசரீரி தோன்றி, சிறுவன் என்றும் பாராமல் நாடு கடத்தியதற்காக கண்டனக்குரல் எழுந்தது. மன்னன் மயங்கி விழுந்தான். மயக்கம் தெளிந்த மன்னனிடம் மீண்டும் அசரீரி தோன்றி, சிவபெருமானே உடும்பாக வந்ததாகவும், அவ்விடத்தில் ஓர் சிவாலயம் கட்டி வழிபாடு செய்யும்படியும் ஆணையிட்டார். மன்னனும் அதன்படியே செய்தான். இன்றும் கூட உடும்பின் வால் அளவிலுள்ள லிங்கம் தான் மூலஸ்தானத்தில் உள்ளது.

#திருவிழா:

மாசி மாதம் பத்துநாள் பிரம்மோற்ஸவம்.

#திறக்கும்_நேரம்:

காலை 7 மணி முதல் 12 மணி வரை,
மாலை மணி 6 முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.

#முகவரி:

அருள்மிகு திருமாகறலீஸ்வரர் திருக்கோயில்,
திருமாகறல் -631 603,
காஞ்சிபுரம் மாவட்டம்.

போன்:
+91- 94435 96619.

#அமைவிடம்:

காஞ்சிபுரத்திலிருந்து 16 கி.மீ. தூரத்திலுள்ள இவ்வூருக்கு, கீழ்ரோடு வழியாக உத்திரமேரூர் செல்லும் பஸ்களில் செல்ல வேண்டும்
காஞ்சிபுரம் - உத்திரமேரூர் (வழி) ஓரிக்கை - பேருந்து பாதையில் உள்ள தலம்.

ஓம் நமசிவாய 
படித்து பகிர்ந்தது
 இரா இளங்கோவன் 
நெல்லிக்குப்பம். 

வாலீஸ்வரர், கொய்யாமலர்நாதர் திருவண்ணாமலை..

தேவாரம் பாடல் பெற்ற தொண்டை நாட்டு தளங்களில் ஒன்றான 
#திருக்குரங்கணில்முட்டம்
மூலவர் : #வாலீஸ்வரர், 
புராண பெயர் : திருக்குரங்கணின் முட்டம்
ஊர் : குரங்கணில்முட்டம்
 மாவட்டம் : திருவண்ணாமலை
மாநிலம் : தமிழ்நாடு

#தேவாரபதிகம் 
சூலப்படை யான்விடை யான்சுடு நீற்றான் காலன்றனை ஆருயிர் வவ்விய காலன் கோலப் பொழில் சூழ் குரங்கணில் முட்டத் தேலங்கமழ் புன்சடை யெந்தை பிரானே.
                        -திருஞானசம்பந்தர்

தேவார பாடல் பெற்ற காவிரி தொண்டை நாட்டுத் தலங்களில் இது 6வது தலம்.
🥰திருவிழா: 
    திருக்கார்த்திகையில் லட்சதீபம், சிவராத்திரி, அன்னாபிஷேகம்.  
     
 #தலசிறப்பு: 
     இங்கு வாலீஸ்வரர் சுயம்பு லிங்கமாக மேற்கு நோக்கி காட்சி தருகிறார். சித்திரை மாதத்தில் குறிப்பிட்ட சில நாட்களில் சுவாமி மீது சூரிய ஒளி விழுகிறது. இக்கோயில் பாலாற்றின் தென்கரையில் அமைந்திருக்கிறது. இங்குள்ள விநாயகர் தாமரை மலர் பீடத்தின் மேல் இருக்கிறார். இந்த பீடத்திற்கு கீழே ஆவுடையாரும் இருக்கிறது. இதனை விநாயகரை, சக்தி தாங்கிக் கொண்டிருக்கும் வடிவம் என்கிறார்கள். இங்கு சாந்த முகத்துடன் இருக்கும் விஷ்ணு துர்க்கையின் வலது கையில் பிரயோகச் சக்கரம் இருப்பதுடன் இடக்கையில் சக்கர முத்திரையும் இருக்கிறது. இவள் காலுக்கு கீழே மகிஷாசுரனும் இல்லை. இது விசேஷமான அமைப்பாகும். சிவனின் தேவாரப்பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் இது 240 வது தேவாரத்தலம் ஆகும்.

#பொதுதகவல்: 
     பிரகாரத்தில் காசி விஸ்வநாதர், பைரவர், நவக்கிரகங்கள், சப்தமாதர், நாகதேவதை ஆகியோர் இருக்கின்றனர். கருவறைக்கு பின்புறத்தில் மகாவிஷ்ணு, பிரயோக சக்கரத்துடன் தனிச்சன்னதியில் இருக்கிறார்.

#தலபெருமை: 
     கொய்யாமலர் நாதர்: சுவாமி சுயம்பு லிங்கமாக மேற்கு நோக்கி காட்சி தருகிறார். சித்திரை மாதத்தில் குறிப்பட்ட சில நாட்களில் சுவாமி மீது சூரிய ஒளி விழுகிறது. குரங்கு வடிவில் வந்த வாலி, சிவனை வணங்கியபோது அவருக்கு பூஜை செய்வதற்கு கையால் மலர்களை பறிக்காமல் மரத்தை உலுக்கி பூஜித்தாராம். எனவே, சிவனுக்கு "கொய்யா மலர் நாதர்' (பறிக்காத மலரால் பூஜிக்கப்பட்டவர்) என்ற பெயரும் உண்டு. இவருக்கு விசேஷமாக கரும்புச்சாறு அபிஷேகம் செய்கின்றனர். இவ்வாறு செய்வதால் என்றும் இனிமையான வாழ்க்கை கிடைக்கும் என்பது நம்பிக்கை.

இவரை ஐந்தறிவு கொண்ட பறவை மற்றும் விலங்கு வழிபட்டு மீண்டும் ஆறறிவு கொண்டவர்களாக மாறினர். எனவே, இங்கு வேண்டிக்கொள்ள பாவ விமோசனம், ஞானம் மற்றும் அறிவுத்திறனும் வளரும் என்கின்றனர்.

வளையல் அணிந்த அம்பாள்: இங்குள்ள அம்பாள் பெயர் "இறையார்வளையம்மை'. இவள் தனிச்சன்னதியில் தெற்கு நோக்கியபடி இருக்கிறாள். வாலி, இந்திரன், எமன் ஆகியோர் சிவனை வணங்கும் முன்பு அம்பாளை வணங்கினார்களாம். அவர்களுக்கு அருள் செய்யும்படி சிவனிடம் அம்பாள் பரிந்துரை செய்தாளாம். எனவே, அம்பாளுக்கு இப்பெயர் வந்ததாம். அதாவது, தன்னை வணங்குபவர்களுக்கு வளைந்து கொடுத்துச் செல்பவள் என்ற பொருளில் இப்பெயரால் அழைக்கின்றனர்.

சம்பந்தர் தனது பதிகத்தில் அம்பாளைக் குறித்தும் பாடியிருக்கிறார். இவள் கைகளில் வளையல் அணிந்து, மகிழ்ந்த முகத்துடன் காட்சி தருவது சிறப்பு. திருமணமான பெண்களும், கர்ப்பிணிகளும் இவளுக்கு வளையல்கள் போட்டு, பின்பு அதனை அணிந்து கொள்கின்றனர். இவ்வாறு செய்வதால் விரைவில் புத்திரபாக்கியமும், சுகப்பிரசவமும் ஆகுமென நம்புகின்றனர்.

#முக்திதலம்: சிவனை வழிபடும் முன்பு காக வடிவில் இருந்த எமதர்மன் தன் அலகால் நிலத்தில் கீறி தீர்த்தம் உண்டாக்கினார். பின் அதில் மூவரும் நீராடி சிவனை வணங்கினர். இந்த தீர்த்தம் பிறைச்சந்திர வடிவில் கோயிலின் மூன்று புறங்களிலும் சூழ்ந்திருக்க, நடுவில் சிறிய பாறையின் மீது சிவன் வீற்றிருக்கிறார். இத்தீர்த்தத்தை, "காக்கைமடு தீர்த்தம்', "வாயசை தீர்த்தம்' என்கின்றனர். எமன், சனீஸ்வரருக்கு அதிபதி. எனவே, சனி தோஷங்கள் நீங்க எமன் வழிபட்ட வாலீஸ்வரரையும், நவக்கிரகத்தில் உள்ள சனீஸ்வரரையும் வழிபடலாம்.

திருஞானசம்பந்தர் தனது பதிகத்தில் இத்தலத்தை, "குரங்கணின்முட்டம்' என்றும், "பறவா வகை வீடு' (முக்தி கிடைக்கும் தலம்) என்றும் சொல்லி பதிகம் பாடியுள்ளார். எனவே, இங்கு வேண்டிக்கொள்ள முக்தி நிச்சயம் என்கிறார்கள்.

#தலவரலாறு: 
     தனது பதினாறாவது வயதில் இறக்கும்படியான வரம் பெற்றிருந்த மார்க்கண்டேயர், சிவதல யாத்திரை மேற்கொண்டார். அவருக்கு பதினாறு வயதாகியபோது, எமதர்மன் அவரைப் பிடிக்க வந்தான். அவனிடம் இருந்து தப்பிச் சென்ற மார்க்கண்டேயர் சிவனைக் கட்டிப்பிடித்துக் கொண்டார்.  அப்போது எமன் மார்க்கண்டேயர் மீது பாசக்கயிறை வீசவே அக்கயிறு தவறுதலாக சிவன் மீது விழுந்தது. தன் பணியை சரியாக செய்யாததால் சிவன் அவரது பதவியை பறித்தார். தன் பதவியை இழந்த எமதர்மன் சிவனை வணங்கி அவரிடம் மன்னிப்பு கேட்டார்.

அவரிடம் சிவன், பூலோகத்தில் குறிப்பிட்ட காலத்தில் தன் தரிசனம் கிடைக்கப்பெற்று இழந்த பதவி மீண்டும் கிடைக்கப்பெறும் என்றார். அதன்படி பூலோகம் வந்த எமன், முட்டம் (காகம்) வடிவில் பல தலங்களுக்கும் யாத்திரை சென்று சிவனை வணங்கி வந்தார். கவுதமரின் மனைவி மீது ஆசை கொண்டதால் தன் உடல் முழுவதும் கண்களாக தெரியும்படி முனிவரிடம் சாபம் பெற்றான் இந்திரன். அவன், தன் தவறை மன்னிக்கும்படி சிவனிடம் வேண்டினான். சிவன் அவனிடம், "தகுந்த காலத்தில் பூலோகத்தில் தான் சாபவிமோசனம் தருவதாகவும், அதுவரையில் பூமியில் சிவதலயாத்திரை மேற்கொள்ளும்படியும்' கூறினார். அவரது சொல்கேட்ட இந்திரன், அணில் வடிவில் பூலோகம் வந்தான்.

இவ்விருவரும் ஒரு குறிப்பிட்ட காலத்தில் ஒன்றாக இத்தலத்திற்கு வந்து சேர்ந்தனர். அப்போது, சிவபக்தனான வாலி குரங்கு வடிவத்தில் இங்கு வந்து சிவனை வழிபட்டார். இதனைக்கண்ட எமன், இந்திரன் இருவரும் வாலியுடன் சேர்ந்து சிவனை வணங்கினர். சிவன் இம்மூவருக்கும் காட்சி தந்ததோடு எமன், இந்திரன் இருவருக்கும் சாபவிமோசனமும் கொடுத்தார். பின் அவர்களது வேண்டுதலுக்காக இவ்விடத்திலேயே, சுயம்புவாக எழுந்தருளினார். தலமும் "குரங்கு அணில் முட்டம்' என்றானது. கோயில் முன்மண்டப சுவர்களில் இம்மூவரும் வழிபட்ட சிற்பங்கள் இருக்கிறது.

#அமைவிடம்

 காஞ்சிபுரம் - வந்தவாசி பேருந்து சாலையில் காஞ்சிபுரத்திலிருந்து சுமார் 11 கி.மி. தொலைவில் இத் திருத்தலம் உள்ளது. காஞ்சீபுரத்திலிருந்து பயணம் செய்யும் போது பாலாற்றைக் கடந்தால் சுமார் 9 கி.மீ. தொலைவில் தூசி என்ற கிராமத்தை அடைந்து, அங்கிருந்து பிரியும் குரங்கணில்முட்டம் பாதையில் 2 கி.மீ. சென்றால் கிராமத்தின் எல்லையில் பாலாற்றின் கரைக்கு அருகில் திருக்கோயில்  அமைந்துள்ளது.

 #திறக்கும்_நேரம்

 காலை 7 மணி முதல் 10 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 7 மணி வரையிலும் திறந்திருக்கும்

ஓம் நமசிவாய
 படித்து பகிர்ந்தது 
இரா இளங்கோவன் 
நெல்லிக்குப்பம். 

விலங்கல்பட்டு சிவசுப்ரமணியர் நெற்றியில் சிவலிங்கம் உள்ள அதிசயம்.

கடலூர் வட்டத்தைச் சேர்ந்த இவ்வூர், கடலூருக்கு மேற்கே 12 கி.மீ. தொலைவிலும், கடலூர்-திருவதிகை (பண்ருட்டி) மாவட்ட நெடும் பாதையை ஒட்டிக் கெடிலம் ஆற்றின் தென்கரையில் இருக்கிறது.

நெடும் பாதையிலிருந்து தெற்கு நோக்கிச் செல்லும் மண் பாதையில் ஆற்றைக் கடந்து இவ்வூரை அடைய வேண்டும். கடலூர் துறைமுக நகருக்கு மேற்கேயும், திருவந்திபுரத்திற்குத் தெற்கேயும் அமைந்துள்ளது நீண்ட மலைத் தொடர். இந்த மலை கூடலூர் குன்று என்று குறிப்பிடப்பட்டுள்ளதுஇப்போது நாம் விலங்கல்பட்டு முருகனைப் பார்ப்போமா.. விலங்கல் என்றால் மலை எனப் பொருள் மலைமேல் உள்ள தலம் எனப் பொருள்கொள்ளலாம். நூறடி உயரக் குன்று அதன்மேல் முருகனாலயம் கிழக்கு நோக்கி உள்ளது. மலையின் தென்புறம் மேலே ஏறுவதற்குச் சரிவு படிக்கட்டுகளும், சரிவான ஒரு சாலையும் உள்ளன. சாலை வெறும் ஜல்லியாக உள்ளது, அதனால் நடந்தே மலையேறுவோம்.ஐந்து நிலை கோபுரம் ஒன்று தெற்கு நோக்கி உள்ளது, படிக்கட்டுகள் தென்புறமே உள்ளது. முருகன் கருவறை கிழக்கு நோக்கி உள்ளது முகப்பில் நீண்ட மண்டபம் உள்ளது. அதில் மயிலும் பலிபீடமும் 
உள்ளது. சுற்றிவர அகலமான பிரகாரம் உள்ளது. கிழக்குப் பகுதியில் இடும்பன் சிலை கொண்ட மாடமும், ஆதிவேல் சன்னதி ஒன்றும் உள்ளது. வடபுறத்தில் பக்தர்கள் காவடி வைத்தல், உணவருந்துதல் செய்ய நீண்ட தகர கொட்டகை உள்ளது.
இங்குள்ள மூலவர் சிவசுப்ரமணியர் சிலையின் நெற்றியில் சிவலிங்கம் உள்ளது சிறப்பு, இதனை வேறு எங்கும் காண இயலாத ஒன்றாகும். இக்கோயில் ஒரு தனிமையான மலையில் இருப்பதால் காலை பூஜை செய்துவிட்டு அரைமணியில் பூசகர் கிளம்பிவிடுகிறார், மாலை ஐந்து மணிக்கு வந்து பூஜை செய்துவிட்டு ஒரு மணிநேரம் இருந்து விட்டுக் கிளம்பிவிடுகிறார். கார்த்திகை நாட்கள், முழுநிலவு நாட்களில் போன்ற விசேஷ நாட்களில் மட்டுமே மக்கள் அதிகம் வருகின்றனர்.

பங்குனி உத்திரம், கிருத்திகை இங்குச் சிறப்பானது. காலை,மாலை வேளையில் கெடில நதியின் ஈரக்காற்றும், தென்புற பசுமை வயல்களின் மரகதப்பச்சையும், தென்னையின் உச்சியில் நின்று அகவும் மயிலும், தூரத்து மலையாண்டவர் கோயிலில் ஒளிரும் மின்விளக்கும், இக்கோயிலின் மெல்லிய மணியோசையும் உங்கள் கவலைகளை மறக்கடிக்கச் செய்யும் என்பதில் ஐயமில்லை.

விலங்கல்பட்டு முருகனுக்கு அரோகரா

ஓம் நமசிவாய
 படித்து பகிர்ந்தது 
இரா இளங்கோவன் 
நெல்லிக்குப்பம். 

Saturday, July 19, 2025

ஆலந்துறை நாதர்,திருப்புள்ளமங்கை,பசுபதி கோயில் தஞ்சை.

அருள்மிகு ஆலந்துறை நாதர் திருக்கோயில்,
திருப்புள்ளமங்கை,

பசுபதி கோயில் அஞ்சல்,

தஞ்சை மாவட்டம்

PIN - 614 206. 

*மூலவர்: ஆலந்துறைநாதர், பிரமபுரீஸ்வரர்
*தாயார்:

அல்லியங்கோதை, சௌந்தரநாயகி

*தல விருட்சம்:

ஆல் (ஆலமரம்)

*சிறப்பு திருவிழாக்கள்:

மகா சிவராத்திரி

*இது தேவாரப்பாடல் பெற்ற தலம்.

பாடியவர்:சம்பந்தர். 

*இத்தலத்தின் பெயர் பண்டைநாளில் "புள்ள மங்கை" என்றும், 

கோயிற் பெயர் "ஆலந்துறை" என்றும் வழங்கப்பெற்றது.    தற்போது ஊர்ப்பெயர் வெள்ளாளப்பசுபதி கோயில்.  

*திருப்புள்ளமங்கை கோயில் முதற்பராந்தக சோழன் காலத்து அற்புதமான கலைப்படைப்பு.

(இக்கோயிலுக்கு அருகே உள்ள மற்றொரு சிவன் கோயில்  பசுபதீசுவரர் கோயில் ஆகும்.)  

*குடமுருட்டி ஆற்றின் கரையில் ஆலந்துறையார் திருக்கோயில் உள்ளது. 

*ஆலமரத்தைத் தலமரமாகக் கொண்டு விளங்கிய நீர்த்துறை தலம் ஆதலின் 'ஆலந்துறை' என்று பெயர் பெற்றிருத்தல் வேண்டுமென்பர்.

 

*ஏழாம் நூற்றாண்டில் திருஞானசம்பந்தர் இத்தலத்தில் பாடியுள்ளதால் இக்கோயில் அதற்கு முன்பிருந்தே இருந்திருப்பதை அறியலாம்.

*அமுதத்தைக் கடைந்தபோது தோன்றிய விஷத்தை இறைவன் அமுது செய்த இடம் இஃது என்பது தலபுராணச் செய்தி.

*பிரம்மா பூஜித்து சாபவிமோசனம் பெற்றமையால் சுவாமி இங்கு பிரமபுரீஸ்வரர் என்றும் திருநாமம் கொண்டு விளங்குகின்றார். 

*அகழி அமைப்புடைய கர்ப்பக்கிருகம்; கீழே கருங்கல் கட்டமைப்பும் மேலே சுதை அமைப்பும் உடையது. 

*இக்கோயில் சோழர் காலச் சிற்பக் கலைக்கு எடுத்துக் காட்டாக அமைந்துள்ளது. மூலவரின் கருங்கல் விமானத்தைச் சுற்றிலும் அமைந்துள்ள சிற்பங்கள் நம்மைப் பரவசப்படுத்துபவை. சின்னஞ்சிறிய வடிவில் உள்ள ராமாயண சிற்பங்களும், நாட்டியச் சிற்பங்களும் சிற்பிகளின் கைத்திறனைப் பறைசாற்றுவதாக உள்ளது. சுமார் 65 சிற்றுருவச் சிலைகளைக் கொண்ட அடித்தளத்தில், கஜசம்ஹார மூர்த்தி, காலாரி, அந்தகாசுர சம்ஹார மூர்த்தி, தாண்டவ மூர்த்தி, வராகர் ஆகிய சிற்பங்கள் கலை நுணுக்கம் மிக்கவை.

*கோஷ்டத்தில் உள்ள மிக அழகாக வடிவமைக்கப்பட்டுள்ள விநாயகர் சிற்பம் மிகவும் புகழ்பெற்ற ஒன்றாகும். 

*இங்குள்ள துர்க்கை - மகிஷாசுரமர்த்தினி உருவம் தனிச் சிறப்புடையதாகத் திகழ்கிறது. கருங்கல் குடை நிழலில், எருமைத் தலைமீது நின்று, சங்கு சக்கரம், வாள், வில், கதை, சூலம், கேடயம், அங்குசம் முதலிய ஆயுதங்களை ஏந்தி, இருபுறமும் கலைமானும் சிங்கமும் இருக்க; இரு வீரர்களில் ஒருவர் கத்தியால் தலையை அரிந்து தருவதுபோலவும், மற்றொருவர் தொடையைக் கிழித்து இரத்த பலி தருவது போலவும் காட்சித்தர; திரிபங்கியாய் ஒரு கையில் வில்லேந்தி, மற்றது அபயகரமாக மோதிர விரல் மடக்கிய முத்திரையுடன் பின்புறம் அம்பறாத்தூணி விளங்க, துர்க்காம்பிகை விளங்கும் கோலம் தனிச் சிறப்புடையது. (திருநாகேச்சுரம், பட்டீச்சுரம், திருப்புள்ளமங்கை ஆகிய இம்மூன்று தலங்களிலும் உள்ள துர்க்கை ஒரே சிற்பியால் வடிக்கப்பட்டவை என்றும்; இம்மூன்றுமே மிகவும் சக்தி வாய்ந்தவை என்றும் சொல்லப்படுகிறது.

*முதலாம் பராந்தகன் காலத்தில் (கி. பி. 907 - 955) கருவறையும், அர்த்த மண்டபமும் திருப்பணி செய்யப்பெற்றுள்ளன. 

*இக்கோயில் கல்வெட்டுக்களில் "ஆலந்துறை மகாதேவர் கோயில்" என்று குறிக்கப்படுகிறது.

*சப்தமாதர்கள் வழிபட்ட  சக்கராப்பள்ளி சப்தஸ்தானக் கோயில்களில், இதுவும் ஒன்றாகும். 

"சப்தமங்கைத் தலங்கள்" என்று அழைக்கப்படுகின்ற இவை கீழ்க்கண்ட இடங்களில் அமைந்துள்ளன.

1)சக்கரப்பள்ளியில் உள்ள சக்கரவாகேசுவரர் கோயில்

2)அரியமங்கையில் உள்ள ஹரிமுக்தீஸ்வரர் கோயில்

3)சூலமங்கையில் (சூலமங்கலம்) உள்ள கிருத்திவாகேசுவரர் கோயில்

4)நந்திமங்கையில் உள்ள ஜம்புகேஸ்வரர் கோயில்

5)பசுமங்கையில் (பசுபதிகோயில்) உள்ள பசுபதீசுவரர் கோயில்

6)தாழமங்கையில் (தாழமங்கலம்) உள்ள சந்திரமௌலீசுவரர் கோயில்

7)புள்ளமங்கை என்றழைக்கப்படுகிற ஆலந்துறைநாதர் கோயில்.             

*இது சப்த மாதர்களில் சாமுண்டி வழிபட்ட ஆலயம். அஷ்ட நாகங்களோடு வந்து சாமுண்டி தேவி சிவபூஜை செய்தபடியால் இங்கு வந்து வழிபடுவோர் 

நாக தோஷங்கள் நீங்கப்பெறுவதாகக் கூறப்படுகிறது. 

*தஞ்சாவூரி லிருந்து கும்பகோணம் செல்லும் நெடுஞ்சாலையில் அய்யம்பேட்டையைத் தாண்டி, மாதாகோயில் அருகே வலப்புறமாகப் பிரியும் கண்டியூர் செல்லும் பேருந்துச் சாலையில் சென்றால் பசுபதி கோயிலை அடையலாம்.  தஞ்சாவூரில் இருந்தும் பசுபதி கோயிலுக்குப் பேருந்து வசதியுண்டு. திருவையாறு - கும்பகோணம் பேருந்து இவ்வூர் வழியாகச் செல்கின்றது.     

 ஓம்சிவாயநம
 படித்து பகிர்ந்தது
 இரா இளங்கோவன் 
நெல்லிக்குப்பம். 

Friday, July 18, 2025

காலபைரவர் ராகு காலம், யம கண்டம் நேரங்களில் சக்தி மிகுந்தவர்.

_மஹா பைரவ கவசமம் அழிக்க இயலாத பாதுகாப்பின் பரம பரிகாரம்!_

பைரவர்

பக்தி வழியில் பயணிக்கும் ஒவ்வொருவருக்கும் ஒரு கட்டத்தில் பைரவர் என்ற நாமம் எதிர்படும். அந்த நாமம் கூடவே கொண்டு வரும் பயம், வணக்கம், வீரியம், வினைத்திறன் போன்ற சக்திகளால் நம்மை ஈர்க்கும். பைரவர் என்பது வெறும் ஒரு உருவமல்ல, அது வெகு ஆழமான பாதுகாப்பு சக்தியின் திருவடிவம்.

பைரவர், திரிமூர்த்திகளில் ஒருவரான திரு பரமசிவனின் ஒரு உக்கிரமான வடிவம். அந்த வடிவம், தனக்கே உரிய தாக்கத்துடன், தன்னை அறியாதவர்களையும் தனது கருணையால் காப்பவர். பைரவர் காத்தல் மட்டுமல்ல, கன்ம வினைகள், பாபங்கள், மற்றும் தீய சக்திகள், சூனியம், பேய் பிசாசுகள், பில்லி சூன்யம் போன்ற அனைத்தையும் அழிக்கும் சக்தியையும் கொண்டவர்.

கவசம் ?

"கவசம்" என்பது பன்னாட்டு போராளிகளுக்கு ஆர்மர் போல, ஆன்மிகர்களுக்கு உருவான மன, உடல், ஆன்மா பாதுகாப்பு ஆகும். கவசங்கள் வேத, ஆகம, தந்திர சாரமாக பலவிதங்களாக எழுதப்பட்டுள்ளன.

மஹா பைரவ கவசம் என்பது, அத்தகைய கவசங்களில் மிகவும் சக்திவாய்ந்தது. இதில் உள்ள ஒவ்வொரு வரியும், பைரவரின் தனித்தன்மைகளை அழகாக விவரிக்கின்றன. இதை தினமும் பாராயணம் செய்வதன் மூலம் பல வகையான உள்ளார்ந்த சிக்கல்களில் இருந்து விடுபட முடியும்.

மஹா பைரவ கவசத்தின் ஆதிகதிகள்:

அக்கினி புராணம், காளிகா புராணம், தந்திர சாஸ்திரங்கள் ஆகியவற்றில் பைரவரின் விபரங்கள் காணப்படுகின்றன.

வாரணாசி, திருவண்ணாமலை, காசி, திருச்சிராப்பள்ளி, கும்பகோணம், சிதம்பரம் போன்ற புண்ணியத் தலங்களில் பைரவர் சிறப்பு வழிபாடு கொண்டவர்.

குருபெயர்ச்சி, ராகு-கேது பெயர்ச்சி, அஷ்டம சனி, கால சர்ப்ப தோஷம் போன்ற சக்தி குறைந்த காலங்களில் பைரவரின் அருள் மிக்க பயனளிக்கும்.

மஹா பைரவ கவசத்தின் உள்ளடக்கம்:

மஹா பைரவ கவசத்தில் பைரவரின் பல முகங்கள், பல ஆயுதங்கள், மற்றும் அவரால் வழங்கப்படும் பாதுகாப்புகள் குறித்து விரிவாக கூறப்பட்டுள்ளது. இதில் பைரவர் காத்தல் செய்வது எப்படி, எந்த உடல் பாகங்களை எந்த வடிவ பைரவர் காக்கிறார் என்பது போல அமைந்துள்ளது.

உதாரணமாக:

"ஓம் பைரவாய நமஹ" – பிரதான பீஜ மந்திரம்

"ஓம் பீம் பைரவாய பத்" – ரகசிய அஷ்டாட்சர மந்திரம்

"ஓம் ஹ்ரீம் வஜ்ர க்ரோத பைரவாய நமஹ" – உக்கிர பைரவரின் தீவிர அருள்

பைரவ கவசம் பாராயணத்தின் பலன்கள்:

1. தீய சக்திகளிலிருந்து பாதுகாப்பு: சூனியம், பில்லி, பிசாசு, பீதி போன்ற அனைத்தும் விலகும்.

2. தொழில் / வாழ்க்கை மேன்மை: வருமானம், வர்த்தக வளர்ச்சி, தர்மம் ஆகியவற்றில் முன்னேற்றம்.

3. வாத-பித்த-கபம் சமநிலை: பலர் கவசம் ஜெபிப்பதன் பின்னர் உடல் வாத நோய்கள் குறையும்.

4. உளவியல் சமநிலை: மனஅழுத்தம், பயம், நோய், தொல்லைகள் குறையும்.

5. அழிவினை நிவாரணம்: திடீரென ஏற்படும் விபத்துகள், சிக்கல்கள் விலகும்.

எப்போது பாராயணம் செய்யலாம்?

அஷ்டமி, பூசம், க்ருத்திகை, பைரவர்அஷ்டமி, பிரதோஷம், அமாவாசை போன்ற நாட்களில் அதிக பலன்.

ராகு காலம், யம கண்டம் போன்ற நேரங்களில் சக்தி மிகுந்தது.

காலை 4:30 முதல் 6:00 வரை (பிரகட டைம்) பைரவர் உஷத்தமான நேரம்.

கவசம் பாராயணம் செய்யும் முறைகள்:

1. காலை நேரத்தில் தூய நீரால் குளித்து, பைரவரின் முன் விளக்கேற்றி அமரவும்.

2. சிவப்பு அல்லது கருப்பு வஸ்திரம் அணிந்து கொள்ளவும்.

3. மனதின் ஒற்றுமையுடன், கவசம் முழுவதையும் ஓதும் போது ஓம் பைரவாய நமஹ என்ற மந்திரத்தை இடையே இடையே உச்சரிக்கவும்.

4. இறுதியில் 9 அல்லது 108 முறை பைரவ மந்திரம் ஓதவும்.

மஹா பைரவருக்கு சமர்ப்பிக்க வேண்டிய பொருட்கள்:

சிவப்பு அரளி, வேம்பு இலை, எள், வெள்ளைப் பூ

பருப்பு, சுண்டல், வெள்ளரிக்காய் நிவேதனம்

சர்க்கரைப்பொங்கல், வடைமாலை

நைவேத்யம் முடிந்ததும் தீப ஆராதனை, நமஸ்காரம்

பைரவரின் வாகனமான நாய் – ஒரு ரகசியம்

பைரவரின் உடன் காணப்படும் நாய், நம்மை அடிக்கடி கூப்பிடும் ஒரு ஆன்மீக குறியீடு. நாய் என்பது பைத்தியக்கோளாறு, ஆவி தாக்கங்கள், மரணச்சிந்தனை போன்றவை நம்மை நெருங்கும்போது அந்த எச்சரிக்கையை உணரச் செய்பவன். அதனால் பைரவரின் நாய்க்கு உணவளித்து வணங்கும் போது, அந்த அதிர்ஷ்ட சூட்சும சக்தி நம்மை காக்கும்.

மனத்தில் பதிந்து கொள்ள வேண்டிய முக்கிய பைரவரின் கூறுகள்:

பைரவர் வடிவம் பாதுகாப்பு

ஸ்வர்ண அகர்ஷண பைரவர் பொன் போன்ற ஒளிவிழிப்புடன் செல்வ வளம்
க்ரோத பைரவர் உக்கிர காட்சி பகைவர் விலக்கம்
யோக பைரவர் தியான நிலையுடன் உளஅமைதி
உன்மத்த பைரவர் அகந்தையை அழிக்க எகோ கட்டுப்பாடு
சம்பத் பைரவர் வியாபாரத்தை உயர்த்த தொழில் வெற்றி
ருத்ர பைரவர் சிவத்தின் நிகர் தைரியம்

கவசத்தை மனதுடன் ஒத்திகையாக்குங்கள்:

மற்ற சாத்திரங்களைப் போல, கவசங்களை படித்துவிட்டுவிடுவது போதாது. அதில் உள்ள ஒவ்வொரு வரியையும் உங்கள் உடல், மனம், உயிர் மூன்றிலும் ஒத்திசைக்க வேண்டியது அவசியம்.
கவசம் என்பது உங்களுக்குள் "அழிக்க இயலாத பரிசோதனைக் கவசம்" உருவாக்கும் திவ்ய வழி.

பைரவரை நினைத்தாலே பயம் குறையும். அவரை அனுபவித்தாலே வாழ்வில் பகைவர் குறையும்.
பைரவர் உங்களை காக்கட்டும். உங்கள் வீட்டிற்கு அவர் ஒரு கண். உங்கள் உடலுக்கு அவர் ஒரு கவசம். உங்கள் மனதிற்கு அவர் ஒரு அஞ்சாமை.

"ஓம் பைரவாய நமஹ" – இந்த ஒரு மந்திரத்தை தினமும் 108 முறை சொல்லுங்கள்.

Wednesday, July 16, 2025

ஓணகாந்தேஸ்வரர், சலந்தரேஸ்வரர் ஓணகாந்தன்தளி காஞ்சிபுரம்.

தேவாரம் பாடல் பெற்ற தொண்டை நாட்டு தலங்களில் ஒன்றான
#திருஓணகாந்தன்தளி[237] வரலாறு
மூலவர் : #ஓணகாந்தேஸ்வரர், சலந்தரேஸ்வரர்
உற்சவர் : #சலந்தரேஸ்வரர்
அம்மன்/தாயார் : #காமாட்சி
தல விருட்சம் : வன்னியும், புளியமரமும்
தீர்த்தம் : ஓணகாந்த தீர்த்தம் , தான் தோன்றி தீர்த்தம்
புராண பெயர் : திருவோணகாந்தன் தளி
ஊர் : ஓணகாந்தன்தளி
மாவட்டம் : காஞ்சிபுரம்
மாநிலம் : தமிழ்நாடு
 
 #பாடியவர்கள்: சுந்தரர்
     
 #தேவாரப்பதிகம்
நெய்யும்பாலும் தயிரும் கொண்டு நித்தல் பூசனை செய்ய லுற்றார் கையில் ஒன்றும் காணம் இல்லைக் கழலடி தொழுது உய்யின் அல்லால் ஐவர் கொண்டிங்கு ஆட்டஆடி ஆழ்குழிப்பட்ட அழுத்து வேனுக்கு உய்யு மாறொன்று அருளிச் செய்வீர் ஓண காந்தன் தளியுளீரே.
                             -சுந்தரர்

தேவாரப்பாடல் பெற்ற தொண்டை நாட்டுத்தலங்களில் இது 3வது தலம். 
 
     
  #திருவிழா:   மகா சிவராத்திரி, ஐப்பசி பவுர்ணமி  
     
#தலசிறப்பு: 
    தமிழகத்தின் ஆன்மிகநகரான காஞ்சிபுரத்தில் தேவாரப்பாடல் பெற்ற ஐந்து சிவாலயங்களுள் முக்கியமானது ஓணகாந்தன் தளி கோயிலாகும். “இங்குள்ள இறைவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். சிவனின் தேவாரப்பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் இது 237 வது தேவாரத்தலம் ஆகும்.

#பொதுதகவல்: 
     காஞ்சிபுரத்தில் அன்னை காமாட்சிக்கு தனிக்கோயில் இருக்கிறது. அவளே சர்வவியாபி என்பதால், இந்நகரிலுள்ள எந்த சிவாலயத்திலும் அம்மன் சன்னதி கிடையாது.

ஓணகாந்தேஸ்வரர் கோயிலிலும், இக்கோயிலை ஒட்டி அமைந்துள்ள ஓணகாந்தன் தளி கோயிலிலும் அம்மன் இல்லை.

#தலபெருமை: 
     இங்கே சிவன் மூன்று லிங்கங்களாக காட்சி தருகிறார்.சுந்தரர் இந்த தலத்தில் அருளிய பக்திப் பாடல்கள் இத்தலத்திலேயே கிடைக்கிறது.

இதைப் பாடினால் பொன், பொருள் சேர்க்கை ஏற்படும் என்பது நம்பிக்கை. மூன்று நிலை ராஜகோபுரத்தைக் கடந்து உள்ளே சென்றால், தனித்தனி சன்னதிகளில் மூன்று லிங்கங்களும் மூன்று பிரதான சன்னதிகளில் உள்ளது. ஓணேஸ்வரர், காந்தேஸ்வரர், ஜலந்தரேஸ்வரர் ஆகியோர் இவர்கள்.

இது காணக்கிடைக்காத தரிசனம். அர்த்த மண்டபத்தில் சுந்தரரும், இறைவனின் திருப்பாத தரிசனமும் கிடைக்கிறது. இங்குள்ள வயிறுதாரி விநாயகர் கேட்ட வரம் அருளுபவர்.

இதுதவிர மற்றொரு விநாயகரான ஓங்கார கணபதியின் சிலையில் பக்தியுடன் காது வைத்து கேட்டால் "ஓம்' என்ற ஒலி மெல்லிய அளவில் கேட்பதாகச் சொல்லப்படுவதுண்டு. 
 
  #தலவரலாறு: 
     ஒரு காலத்தில் அசுர வேந்தனான வாணாசுரன் என்பவனின் சேனாதிபதிகளான ஓணன், காந்தன் என்பவர்கள் புழல் என்ற பகுதியில் உள்ள கோட்டையின் பாதுகாவலர்களாக இருந்தனர். இவர்களில் ஓணன் என்பவன் அப்பகுதியில் சுயம்புவாய் எழுந்த லிங்கம் ஒன்றிற்கு, தன்ரத்தத்தால் அபிஷேகம் செய்து, கடும் விரதமிருந்து பல வரங்களைப் பெற்றான்.

இதே போல் காந்தனும் மற்றொரு லிங்கத்தைப் பூஜித்து சிறந்த வரங்களைப்பெற்றான். இப்பகுதியில் வசித்த ஜலந்தராசுரன் என்பவனும் ஒரு லிங்கத்தை ஸ்தாபித்து வழிபட்டான். பிற்காலத்தில் சிவனின் தோழரான சுந்தரர் இப்பகுதிக்கு வந்தார்.

மூன்று லிங்கங்கள் வெட்ட வெளியில் பூமிக்குள் பதிந்து இருந்தன. அசுரர்களுக்கும் கூட பக்தி இருந்துள்ளது என்பதை வெளிக்காட்டவும், லிங்கங்களுக்கு பாதுகாப்பு தரவும் கோயில் எழுப்ப விருப்பம் கொண்டார். அதற்குரிய பொன்,பொருள் வேண்டி சிவனைப் பாடினார். அவரது பாட்டில் மயங்கிய சிவன், இன்னும் சில பாடல்கள் பாடட்டுமே என தாமதம் செய்து, பின்னர் அருகில் இருந்த புளியமரம் ஒன்றைக் காட்டி மறைந்தார்.

அம்மரத்திலுள்ள காய்களெல்லாம் சுந்தரர் பதிகம் கேட்டு, பொன் காய்களாக மாறின. பின்னர் லிங்கங்களை வெளியே எடுத்து, கிடைத்த பணத்தில் கோயில் எழுப்பினார்.

#அமைவிடம்

காஞ்சீபுரம் ஏகாம்பரநாதர் கோயிலுக்கு மேற்கேயுள்ள சர்வதீர்த்தத்துக்கு வடமேற்கே சுமார் 1. கி.மீ. தொலைவில் பஞ்சுப்பேட்டை என்ற பகுதியில் உள்ள துணை மினநிலையம் அருகில் உள்ளது.

#திறக்கும்_நேரம்

 இக்கோயில் காலை 7 மணி முதல் மதியம் 12 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் 8.30 மணி வரையிலும் நடை திறந்திருக்கும்.

#திருஓணகாந்தன்தளி அருகில் உள்ள தேவாரப் பாடல் பெற்ற தலங்கள்:

1. கச்சி ஏகம்பம் (காஞ்சிபுரம்) எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 0.66 கிலோமீட்டர் தொலைவில் தென் கிழக்கு திசையில் அமைத்துள்ளது.

2. கச்சி அநேகதங்காபதம் எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 1.63 கிலோமீட்டர் தொலைவில் தெற்கு திசையில் அமைத்துள்ளது.

3. திருக்கச்சி மேற்றளி, காஞ்சீபுரம் எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 1.72 கிலோமீட்டர் தொலைவில் தெற்கு திசையில் அமைத்துள்ளது.

4. கச்சிநெறிக் காரைக்காடு எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 3.44 கிலோமீட்டர் தொலைவில் தென் கிழக்கு திசையில் அமைத்துள்ளது.

5. திருகுரங்கனின் முட்டம் எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 9.26 கிலோமீட்டர் தொலைவில் தெற்கு திசையில் அமைத்துள்ளது.

6. திருவன்பார்த்தான் பனங்காட்டுர் ( திருப்பனங்காடு ) எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 10.35 கிலோமீட்டர் தொலைவில் தென் மேற்கு திசையில் அமைத்துள்ளது.

7. திருமாற்பேறு (திருமால்பூர்) எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 11.30 கிலோமீட்டர் தொலைவில் வட மேற்கு திசையில் அமைத்துள்ளது.

8. திருமாகறல் எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 16.09 கிலோமீட்டர் தொலைவில் தென் கிழக்கு திசையில் அமைத்துள்ளது.

9. திருஊறல் (தக்கோலம்) எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 18.99 கிலோமீட்டர் தொலைவில் வடக்கு திசையில் அமைத்துள்ளது.

10. இலம்பையங்கோட்டூர் (எலுமியன்கோட்டூர்) எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 21.57 கிலோமீட்டர் தொலைவில் வடகிழக்கு திசையில் அமைத்துள்ளது.

ஓம் நமசிவாய 
படித்து பகிர்ந்தது 
இரா இளங்கோவன் 
நெல்லிக்குப்பம். 

அழகிய அன்பில் ஆலந்துறை சத்தியவாகீஸ்வரர் கோயில்

*அன்பில் சத்தியவாகீசர் கோயில்*
ஐந்து நிலை ராஜகோபுரம் கொண்ட இக்கோயிலில் மூலவர் சத்தியவாகீஸ்வரர் கிழக்கு நோக்கி சுயம்புவாக அமர்ந்துள்ளார். விசேஷமான சதுரபீட ஆவுடையார் இவர்.

ராவணன் குபேரனை தந்திரத்தால் வென்று அவனது புஷ்பக விமானதைக் கவர்ந்தான். மிதமிஞ்சிய ஆணவத்தால் கயிலையை அடைந்த ராவணன், ஈசன் வாழ்ந்த மலையைப் பெயர்த்தெடுக்கத் தொடங்கினான். அவன் கொட்டத்தை அடக்க ஈசன் தனது வலது பெருவிரல் நுனியை அழுத்த ராவணனின் கைகள் சிக்கிக்கொண்டன.

கடுமையான வலியால் துடித்த ராவணனின் அழுகுரல் அங்கு தவம் செய்து கொண்டிருந்த வாகீச முனிவரின் காதில் விழுந்தது. இதனால் மனம் இளகி, 'ஈசனின் மனம் கனிய உனது இசையால் அவரைப் போற்றி பாடு' என்று உபாயம் கூறினார். அவனும் அவ்வாறே செய்ய ஈசனின் கருணையால் உயிர் தப்பினான். தன்னால் தண்டிக்கப்பட்ட ராவணனுக்கு உதவிய வாகீசரின் செயல் பரம்பொருளுக்கு கோபத்தை உண்டு பண்ணியது. இதனால் 'நீ பூலோகத்தில் பிறக்கக் கடவுவது' என்று சாபம் இட்டார்.
இதனால் கலங்கிய வாகீசர் பூமியில் அன்பிலாலந்துறை எனும் திருத்தலத்தில் சுயம்புவாய் எழுந்தருளிய ஈசனைப் பணிந்து வழிபட்டார். ஈசனின் கருணையால் திருஆமூரில் மருள் நீக்கியாராகப் பிறந்தார். மேற்கண்ட இந்த நிகழ்வை அடிக்கடி தனது பதிகத்திலும் குறிப்பிட்டுள்ளார் அப்பர் சுவாமிகள். வாகீசர் பணிந்த ஈசன் சத்திய வாகீசர் என்று திருநாமம் கொண்டார். அது மட்டுமல்ல, வாகீசர் என்ற திருப்பெயர் பிரகஸ்பதிக்கும் நான்முகனுக்கும் கூட உண்டு. அவர்களும் இங்கு வந்து ஈசனை வழிபட்டார்கள் என தலவரலாறு கூறுகிறது.
அழகிய அன்பில் ஆலந்துறை சத்தியவாகீஸ்வரர் கோயில் திருஞான சம்பந்தர், திருநாவுக்கரசர் என இருவராலும் பாடப்பெற்ற அற்புதத் தலம். காவிரி வடகரைத் தலங்களில் இது 57-வது தலம். அன்பில் என்பது ஊர் பெயர், ஆலந்துறை என்பது கோயிலின் பெயர், இரண்டும் இணைந்து அன்பிலாலந்துறை என்றானது. அருணகிரிநாதரால் பாடப்பெற்று இது திருப்புகழ் தலமாகவும் விளங்குகிறது. பராந்தகச் சோழன் காலத்தில் இந்த ஆலயத்துக்கு பல திருப்பணிகள் செய்ததாகவும், 108 அக்னிஹோத்ரி அந்தணர்களைக் குடி அமர்த்தி இந்த வட்டாரத்தில் வேள்விகளை நடத்த ஏற்பாடு செய்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஐந்து நிலை ராஜகோபுரம் கொண்ட இக்கோயிலில் மூலவர் சத்தியவாகீஸ்வரர் கிழக்கு நோக்கி சுயம்புவாக அமர்ந்துள்ளார். விசேஷமான சதுரபீட ஆவுடையார் இவர். பிரம்மன் வழிபட்டதால் பிரம்மபுரீஸ்வரர் என்றும், ஆலமரங்கள் சூழ்ந்த வனத்தில் எழுந்ததால் ஆலந்துறையார் என்றும் போற்றப்படுகிறார். இந்த ஈசனை வணங்கினால் ஏழேழு ஜன்மங்களிலும் செய்த தீவினைகள் விலகி நல்வாழ்வை அடையலாம் காணப்படுகிறது. ஒவ்வொரு பிறவியும் அடைந்திருக்கும் மூன்று விதமான கடன்களில் இருந்தும் மீளலாம் என்றும் சொல்லப்படுகிறது.

அம்பாளின் திருநாமம் சௌந்தரநாயகி என்பது. பெயருக்கேற்ற வடிவழகு கொண்டவள் இந்த அன்னை. இந்த அன்னை மகப்பேறு அளிக்கும் தாயாக விளங்கி வருகிறாள். விளக்கேற்றி இந்த அன்னையை வழிபட்டால் நல்ல வரனும் கிடைக்கும் என்கிறார்கள் திருச்சி நகர மக்கள். இங்கு சந்திர தீர்த்தம் வினை தீர்க்கும் தீர்த்தமாக உள்ளது.

ஆலயத்தின் திருச்சுற்றில் விசுவநாதர், விசாலாட்சி, சப்த கன்னியர், பிட்சாடனர், பைரவர், முருகப்பெருமான், சுயம்பு கணபதி, நவக்கிரக சந்நிதிகள் உள்ளன. இங்குள்ள செவி சாய்த்த கணபதி விசேஷமானவர். ஒருமுறை இங்கு திருஞான சம்பந்தர் வருகை தந்தபோது நதியில் வெள்ளம் பெருகி ஓட, எதிர்க்கரையில் நின்றவாறே ஈசனைப் பாடினார் காழிப்பிள்ளையார். அவரது குரல் காற்றில் மெலிதாகக் கேட்கவே இங்கிருந்த கணபதி காதைத் திருப்பி ஒளி வந்த திக்கு நோக்கி ஒரு காலை மடக்கி, இன்னொரு காலை குத்துக்காலிட்டு அமர்ந்து கேட்டாராம். அந்த அழகிய வடிவம் இன்றும் சிற்பமாகக் காணக் கிடைக்கிறது.

இவரை வணங்கினால் காது சம்பந்தமான குறைகள் நீங்கும் என்கிறார்கள். ஜைமினி முனிவர் இங்கு வந்து சாமகானம் பாடியதாகவும், அதை ரசித்த கணபதி பெருமான், தனது செவியைச் சாய்த்து மகிழ்ந்தார் என்றும் இந்த திருக்கோலத்துக்கு மற்றொரு புராணமும் சொல்லப்படுகிறது. சம்பந்த பெருமான் தரிசிக்கவென்று நந்தி இங்கு சுவாமியை விட்டு சற்றே விலகி இருக்கிறார்.

சம்பந்தரும் நாவுக்கரசரும் உருகி உருகிப் பாடிய இந்த பெருமான் மிக விசேஷமானவர் என்கிறார்கள். அதிலும் சத்தியவாகீசப் பெருமானை வணங்கி வலம் வருவோரை அந்த வானுலக தேவர்கள் வலம் வந்து தொழுவர். அவர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்ய இறைவனை இறைஞ்சுவார்கள் என்று அப்பர் சுவாமிகள் தன்னுடைய பதிகத்தில் குறிப்பிட்டுள்ளார்.

'இலங்கை வேந்தன் இருபது தோள்இற்று

மலங்க மாமலை மேல்விரல் வைத்தவன்

அலங்கல் எம்பிரான் அன்பில் ஆலந்துறை

வலங்கொள் வாரை, வானோர்வலம் கொள்வரே'

- அப்பர் சுவாமிகள்

திருச்சியிலிருந்து 20 கி.மீ. தொலைவிலுள்ள லால்குடி சென்று அங்கிருந்து 8 கி.மீ. தொலைவில் அன்பில் கிராமம் உள்ளது. 



ஓம் நமசிவாய 
படித்து பகிர்ந்தது 
இரா இளங்கோவன் 
நெல்லிக்குப்பம். 

Followers

திருமாகறலீஸ்வரர் திருமாகறல் காஞ்சிபுரம்

மூலவர் : #திருமாகறலீஸ்வரர்  உற்சவர் : #சோமாஸ்கந்தர், நடராஜர்  அம்மன்/தாயார் : #திரிபுவனநாயகி  தல விருட்சம் : எலுமிச்சை  தீர்த்தம் : அக்னி  ப...