Sunday, September 21, 2025

புரட்டாசி மாத நவராத்திரி பூஜை

புரட்டாசி மாத நவராத்திரி பூஜை பற்றிய பதிவுகள் :*
தமிழ் மக்களின் ஆன்மீக வாழ்வில் புரட்டாசி மாதம் மிகவும் சிறப்புமிக்க மாதமாகக் கருதப்படுகிறது.

அந்த மாதத்தில்தான் நவராத்திரி என்ற ஒன்பது நாட்கள் கொண்ட மகா விழா நடத்தப்படுகிறது. துர்கை, லட்சுமி, சரஸ்வதி தேவிகளின் அருளைப் பெறுவதற்காக நடைபெறும் இவ்விழா ஆவணியும் புரட்டாசியும் மாதங்களில் நடைபெறுகிறது.

இதுகுறித்து மேலும் விரிவாக நமது ஓம் நமசிவாய ஆன்மீக குழுவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

*நவராத்திரி தொடங்கும் காலம்*

மஹாளய அமாவாசைக்கு அடுத்த நாள் முதலே நவராத்திரி பூஜைகள் தொடங்குகின்றன.

அதாவது, பித்ரு தர்ப்பணங்கள் முடிந்து தெய்வ பூஜைக்கான நேரம் ஆரம்பிக்கிறது.

புரட்டாசி மாதத்தில் ஆரம்பிக்கும் இந்த நவராத்திரி சரத்நவராத்திரி என அழைக்கப்படுகிறது.

இந்த நாளில் மக்கள் கோலம் போட்டு, கலசம் வைத்து, கோலு படிகளை அமைத்து வழிபாட்டை தொடங்குகிறார்கள்.

*நவராத்திரி பூஜை முறைகள்*

*1. கலச ஸ்தாபனை (கலசம் வைப்பு)*

ஒரு நல்ல நாள், நல்ல நேரத்தில் கலசத்தை வைத்து, அதனை மங்கள பொருட்களால் அலங்கரிக்கிறார்கள்.

இதில் தேவி அம்மன் சக்தி வரவேற்கப்படுகிறது.

*2. கோலு அமைப்பு*

கோலு படிகளில் பல்வேறு பொம்மைகள் வைக்கப்படுகின்றன.

ஒவ்வொரு படியிலும் தெய்வ, ஆன்மீக, சமூக வாழ்க்கையை குறிக்கும் பொம்மைகள் வைக்கப்படுகின்றன.

இது பரம்பரை வழக்கத்தையும், தெய்வீகத்தையும் இணைக்கும் வழிபாடு.

ஓம் நமசிவாய 
படித்து பகிர்ந்தது 
இரா இளங்கோவன் 
நெல்லிக்குப்பம். 

Saturday, September 20, 2025

பித்ரு கடன் தீர்க்கும் மகாளய அமாவாசை தர்ப்பண

_பித்ரு கடன் தீர்க்கும் மகாளய அமாவாசை தர்ப்பண..._
ஒவ்வொரு அமாவாசையன்றும், நீத்தார் கடனை நிறைவேற்றும்போது...

‘ஏ ஷாம் ந மாதா ந பிதா ந ப்ராதா ந சபாந்தவஹா
தே சர்வே த்ருப்திம் ஆயாந்து மயா
உச்ரிஷ்டைஹி குஸௌதஹைஹி
த்ருப்யத் த்ருப்யத் த்ருப்யத்’

என உச்சரிக்கப்படும் ஸ்லோகத்தின் பொருள் என்ன தெரியுமா? ‘எனக்குத் தாயாகவோ, தந்தையாகவோ, சகோதரராகவோ, பிற உறவினராகவோ இல்லாவிட்டாலும் கூட, இவ்வுலகை விட்டு நீங்கியவர்களின் ஆன்மாக்கள் புண்ணியமடைய, இந்த அமாவாசை தினத்தில், தர்ப்பையோடு கலந்த நீரை அர்ப்பணிக்கிறேன்’ என்பதாகும்.

அமாவாசையன்று செய்யப்படும் தர்ப்பணம் எமதர்மராஜனின் கைகளின் வழியாக, முன்னோர்களிடம் ஒப்படைக்கப்படுவதாகக் கூறப்படுகிறது. வருடந்தோறும் வரும் தை மற்றும் ஆடி என இரு அமாவாசைகள் முக்கியமென்றாலும், நவராத்திரியின் ஆரம்பத்தைக் குறிக்க மூன்றாவதாக வரும் மஹாளய பட்ச அமாவாசையும் முக்கியம் வாய்ந்ததாகும்.

‘மறந்தவனுக்கு மஹாளயத்தில் கொடு’ என்கிற மாதிரி, தை மற்றும் ஆடி மாத அமாவாசைகளில் தர்ப்பணம் செய்யாதவர்கள், மஹாளய பட்ச காலத்தில் நீத்தார் கடனை செய்கையில், முன்னோர்களின் ஆன்மாக்கள் மகிழ்ந்து, ஆசிகளை வழங்குவார்கள்.

புரட்டாசி மாத ஆரம்பத்தில் வரும் அமாவாசை, மஹாளய பட்ச அமாவாசை ஆகும்.  அமாவாசைக்கு 15 நாட்கள் முந்திய பிரதமை திதியில் ஆரம்பித்து 15 நாட்களும், முன்னோர்களை வழிபட, பல வகை பலன்கள் கிடைக்கும். பிரதமையைத் தொடர்ந்து வரும் 15 திதி  நாட்களில், குறிப்பிட்ட திதி நாளில் ஒரு முறையும், மஹாளாய அமாவாசையன்று ஒரு முறையுமாக இரு நாட்கள் மஹாளய பட்ச  சமயம், நீத்தார் கடனைத் தீர்க்க தர்ப்பணம் செய்வது சிறந்ததாகும். ‘காருண்ய பிதாக்கள்’ என அழைக்கப்படும் முன்னோர்களின் ஆசிகளின் மூலம், பித்ரு தோஷம் மற்றும் பிற தோஷங்களில் இருந்து நிவர்த்தி பெறலாம்.

மஹாளய பட்ச காலத்தில், முன்னோர்கள் மட்டுமல்ல; நாம் அளிக்கும் தர்ப்பணத்தை ஏற்பதற்காக தெரிந்தவர்கள், தெரியாதவர்கள் என அநேகர் காத்திருப்பது உண்டு. எல்லோருக்கும் சேர்த்து பிரார்த்தனை செய்து மஹாளய பட்ச தர்ப்பண வழிபாட்டை மேற்கொள்கையில், அவர்களின் ஆத்மாக்கள் சாந்தியடையும். மஹாளய பட்ச தர்ப்பணத்தை நீர் நிலைகள், கடலோரங்கள் போன்ற இடங்களில் செய்து, முடிந்தவற்றை தானம் செய்வதோடு, வாயில்லா பிராணிகள், பறவைகளுக்கு உணவளிப்பது மிகவும் அவசியமாகும்.

மஹாளய பட்ச காலத்தில் மஹாபரணி, மத்யாஷ்டமி, வைதிருதி, மகாவிய தீபாதம், அமிர்தா நவமி ஆகிய தினங்கள் தர்ப்பணம் செய்ய மிக உகந்ததாகும். இந்நாட்களில் செய்ய இயலாதவர்கள் ஏதாவது ஒரு நாளில் செய்யலாம்.

கொடை வள்ளல் கர்ணன், தன்னுடைய  முன்னோர்களுக்கு சிராத்தம் செய்யாததால், அவர்களுக்கு சரியான உணவு கிடைக்கவில்லை. எனவே, முன்னோர்கள் கர்ணனுக்கு சாபமிட்டதாகக் கூறப்படுகிறது. அதன் பிறகு சொர்க்கத்திற்கு சென்ற கர்ணனுக்கும் சாப்பாடு கிடைக்கவில்லை. பொன்னும், பொருளுமே தட்டில் விழுந்தன. யமதர்ம ராஜனிடம் இதற்குப் பரிகாரம் கேட்கையில், பூலோகம் சென்று, மஹாளய பட்ச சமயம், நீத்தார் கடன் தீர்க்க வழி கூறினார். கர்ணனும் அவ்வாறே செய்ய, பித்ரு கடன் அடைபட்டு சொர்க்கத்திற்கு திரும்பிச் சென்றதாகக் கூறப்படுகிறது. கர்ணன் பூமியில் தங்கி முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்த 15 நாட்களே மஹாளய பட்ச காலமென அழைக்கப்படுகிறது.

எவ்வளவுதான் தான தர்மம் செய்தாலும், பித்ரு கடன் வழிபாடு செய்யாவிட்டால் பலன் கிடைக்காது. மஹாளய பட்ச 15 நாட்களும் உணவில் எளிமையைக் கடைப்பிடிப்பதோடு, அன்னதானம் அளித்து, இறை வழிபாடு செய்வது நன்மையை அளிக்கும்.

ஓம் நமசிவாய
 படித்து பகிர்ந்தது 
இரா இளங்கோவன் 
நெல்லிக்குப்பம். 

பெருமாள் கோவிலில் நவகிரகம் கூடுவாஞ்சேரி லட்சுமி நாராயணர்

திருமண வரம் அருளும் மாடம்பாக்கம் லட்சுமி நாராயணர்


பல்லவ மன்னர்களின் ஆட்சிக் காலத்தில் கட்டப்பட்டது.
வெளியே பழமையான விளக்குத் தூண் காட்சி தருகிறது.
தொண்டை மண்டலம் என்று அழைக்கப்பட்ட காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் லட்சுமி நாராயணப் பெருமாள் கோவில்கள் அதிக அளவில் அமைந்துள்ளன. சூராடிமங்கலம், பள்ளஈகை, நென்மேலி, துஞ்சம், பரனூர், பள்ளிக்கரணை, குன்னத்தூர், அம்மணம்பாக்கம், எச்சூர், அருங்குன்றம், குழிப்பாந்தண்டலம், திருநிலை முதலான ஊர்களில் லட்சுமி நாராயணப் பெருமாள் திருத்தலங்கள் அமைந்துள்ளன. இவை அனைத்துமே மிகப் பழமையான திருத்தலங்களாகும்.

இத்தகைய பழம்பெருமை வாய்ந்த தலங்களில் ஒன்றுதான், செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரி அருகே மாடம்பாக்கத்தில் அமைந்துள்ள லட்சுமி நாராயணப் பெருமாள் திருக்கோவில். இத்தலம் பல்லவ மன்னர்களின் ஆட்சிக் காலத்தில் கட்டப்பட்டதாக கருதப்படுகிறது.


 கோவிலுக்கு வெளியே பழமையான விளக்குத் தூண் காட்சி தருகிறது. கிழக்கு திசை நோக்கி அமைந்த இத்தலம், மூன்று நிலை ராஜகோபுரத்துடன் காட்சி அளிக்கிறது. ராஜகோபுரத்தின் வெளிப்புறத்தில் ஒரு பக்கம் தும்பிக்கையாழ்வாரும், மற்றொரு பக்கம் காளிங்க நர்த்தனரும் வீற்றிருக்கிறார்கள்.

அவர்களை வணங்கி உள்ளே நுழைந்ததும், ராஜகோபுரத்தின் உட்புறத்தில் ஒரு புறம் சுதர்சனப் பெருமாளும், மற்றொருபுறம் நரசிம்மரும் பிரமாண்டமான சுதைச் சிற்ப வடிவத்தில் காட்சி தந்து மெய்சிலிர்க்க வைக்கிறார்கள். சக்கரத்தாழ்வாரை வணங்கி உள்ளே நுழைந்ததும், பலிபீடமும், கருடாழ்வார் சன்னிதியும் இருக்கிறது.

வெளித்திருச்சுற்றில் இடதுபுறத்தில் பக்த ஆஞ்சநேயர் ஒரு சிறிய சன்னிதியில் எழுந்தருளி அருள் பாலிக்கிறார். வலது புறத்தில் விஷேசமான நவக்கிரக சன்னிதி ஒன்று அமைந்துள்ளது. நவக்கிரக நாயகர்கள் தங்கள் வாகனத்தோடு காட்சி தந்து அருள்பாலிப்பது, விசேஷமானதாக கருதப்படுகிறது. மேலும் சூரிய பகவான் ஏழு குதிரைகள் பூட்டிய ஒற்றை சக்கரத் தேரில், தனது மனைவியர்களான உஷாதேவி, சாயாதேவியரோடு காட்சி தருவது கூடுதல் சிறப்பாகும்.

கருவறை, அர்த்தமண்டபம், முன்மண்டபத்தோடு இத்தலம் அமைக்கப்பட்டிருக்கிறது. முன்மண்டபத்தில் ஒரு சிறிய மாடத்தில் உடையவரும், அவருக்கு அருகில் காளிங்க நர்த்தனரும் காட்சி தந்து பக்தர்களுக்கு அருள்புரிகிறார்கள். கருவறையில் மூலவர் லட்சுமி நாராயணப் பெருமாள், கிழக்கு திசை நோக்கி அமர்ந்த கோலத்தில் அருள்பாலிக்கிறார்.


 லட்சுமிதேவியை தனது இடது தொடையில் அமர்த்தி இடது கரத்தால் அணைத்தவாறும், வலது திருக்கரத்தினை பக்தர்களைக் காக்கும் அபயஹஸ்த நிலையில் வைத்தபடியும், திருமுகத்தில் புன்னகை தவழ மிக அழகிய திருக்கோலத்தில் இந்த பெருமாள் காட்சி தருகிறார்.

மேலும் மூலவர் சன்னிதியில் நவநீதகிருஷ்ணனும் இருக்கிறார். அர்த்த மண்டபத்தில் ஸ்ரீதேவி - பூதேவி சமேத பெருமாளின் உற்சவ மூர்த்தியை தரிசிக்கலாம்.

லட்சுமிதேவியோடு இணைந்து காட்சி தரும் லட்சுமி நாராயணப் பெருமாளை தரிசிப்பதன் மூலம், குடும்ப ஒற்றுமை நிலைக்கும் என்பதும், கணவன்- மனைவி ஒற்றுமை பலப்படும் என்பதும் ஐதீகம்.

மேலும் பலவிதமான காரணங்களால் ஏற்படும் திருமணத் தடைகளும், இந்த ஆலயத்திற்கு வந்து மூலவரை தரிசிப்பதன் மூலமாக நீங்கும் என்பது பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கை. வைகானச ஆகம முறை பின்பற்றப்படும் இத்தலத்தில், தினமும் ஒரு கால பூஜை மட்டுமே நடைபெறுகிறது. இந்த ஆலயத்தில் தல விருட்சமாக, வில்வ மரம் உள்ளது.
இந்த ஆலயத்தில் ஒவ்வொரு வருடமும் திரு பவித்ர உற்சவம், திருப்பாவாடை மஹோத்சவம், தீபாவளிக்கு மறுநாள் கேதார கவுரி விரதம், கிருஷ்ண ஜெயந்தி உற்சவம், உறியடித் திருவிழா, திருக்கார்த்திகை தீப விழா, புரட்டாசி மாத சனிக்கிழமைகளில் விசேஷ வழிபாடுகள், திருக்கல்யாண உற்சவம், ஒய்யாளி சேவை மற்றும் பல வைணவ விழாக்கள் சிறப்பான முறையில் கொண்டாடப்படுகின்றன.

ஜனவரி முதல் வாரம் மற்றும் புரட்டாசி மாதம் 4-வது வாரத்தில் பெருமாள் உள்புறப்பாடு நிகழ்ச்சி நடைபெறுகிறது. திருக்கார்த்திகை தீப விழாவில் 1008 திருவிளக்குகள் ஏற்றப்படுகின்றன.

இந்த கோவில் தினமும் காலை 7.30 மணி முதல் பகல் 11 மணி வரையிலும், மாலை 5.30 மணி முதல் இரவு 8 மணி வரையிலும், பக்தர்கள் தரிசனம் செய்வதற்காக திறந்துவைக்கப்பட்டிருக்கும்.

அமைவிடம்

கூடுவாஞ்சேரியில் இருந்து மேற்கு திசை நோக்கி சுமார் 2 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது, மாடம்பாக்கம் திருத்தலம்.
ஓம் நமசிவாய 
படித்து பகிர்ந்தது 
இரா இளங்கோவன் 
நெல்லிக்குப்பம். 

Friday, September 19, 2025

கைலாசநாதர் திருக்கோயில், திங்களூர், திருப்பழனம்.

அருள்மிகு கைலாசநாதர் திருக்கோயில், 
திங்களூர், 
திருப்பழனம் அஞ்சல்,  
திருவையாறு வட்டம், 
தஞ்சாவூர் மாவட்டம் – 613 204.         
*இறைவன் : கைலாசநாதர் 

*இறைவி : பெரியநாயகி  

*தீர்த்தம் : சந்திர தீர்த்தம்           

*இத்தலம் ஒரு தேவார வைப்புத் தலமுமாகும். திருநாவுக்கரசரும், சுந்தரரும் தங்கள் பதிகங்களில் திங்களூர் தலத்தைக் குறிப்பிட்டுள்ளனர்.   

*திருப்பாற்கடலை கடைந்தபோது வெளிப்பட்ட ஆலகால விஷத்தை சிவபெருமான் அருந்தி உலக உயிர்களைக் காத்தார். இருந்தாலும் அப்பகுதியில் பரவிய நஞ்சின் தாக்கத்தினால் தேவர்கள் மயக்கம் அடைந்து விழுந்தனர். அப்போது அமிர்தத்துடன் எழுந்து வந்த சந்திரன், தேவர்களின் மயக்கத்தைத் தெளிவித்தான். அத்தகைய சந்திரனை, சிவபெருமான் தன் தலையில் சூடிக்கொண்டார்.   

*தட்சன் தனது 27 புத்திரிகளையும் சந்திரனுக்கு மணமுடித்து வைத்தான். 27 மனைவிகளிடமும் ஒரே மாதிரி அன்பு செலுத்த வேண்டிய சந்திரன், அவர்களில் ரோகிணியிடம் மட்டும் தனி பிரியம் செலுத்தினான். மற்ற 26 மனைவிகளும் தட்சனிடம் முறையிட்டனர். மாமனார் தட்சன், 27 மனைவிகளிடமும் அன்பு செலுத்தும்படி கூற, சந்திரன் அதை ஏற்க மறுத்தான். கோபம் கண்ட தட்சன், சந்திரனின் அழகு குறையவும், அவனது கலைகள் மங்கும்படியும் சாபம் இட்டான். 

இட்ட சாபம் நீங்க சந்திரன் இந்த தலத்தில் நீண்ட காலம் தவம் செய்தான். தன் பெயரில் ஒரு தீர்த்தம் உண்டாக்கி இறைவனை பூஜித்தான்.              
ஒரு பங்குனி மாதப் பௌர்ணமியில், இறைவன் காட்சி கொடுத்து அருளினார். தட்சனின் சாபத்தால் நாள்தோறும் சிறிது சிறிதாக தேய்ந்து ஒருநாள் முழுமையாக மறையவேண்டிய (அமாவாசை) சாபத்திற்கு ஆளான சந்திரன், சிவனின் அனுக்கிரகத்தால் மீண்டும் வளர்ந்து ஒருநாள் பிரகாசிக்கும் (பவுர்ணமி) விமோசனத்தைப் பெற்ற தலமே திங்களூர் திருத்தலம்.      

*இத்தலத்தின் ஷேத்திர பாலகராக சந்திரன், மேற்கு திசை நோக்கி இறைவனைப் பார்த்தபடி தனி சந்நிதியில் காட்சி தருகிறார்.  

*ஒவ்வொரு வருடமும் பங்குனி உத்திரத்தன்று காலை உதயத்தில் 6 மணிக்கு லிங்கத்தின் மீது சூரிய ஒளி படுவதால், அன்று சூரிய பூஜையும், மறுநாள் பெளர்ணமி பிரதமையில் மாலை 6 மணிக்கு சந்திர ஒளி லிங்கத்தின் மீது படுவதால் அன்று சந்திர பூஜையும் நடைபெறும்.                 
 கைலாசநாதர் மற்றும் பெரியநாயகி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெறும். இதை தொடர்ந்து தனி சன்னதியில் அமைந்துள்ள சந்திர பகவானுக்கு லட்சார்ச்சனை நடக்கும்.         

*ஏதேனும் ஒரு வளர்பிறை திங்கட்கிழமை தினத்தில் காலை 9 மணிக்குள் இத்தலத்தில் உள்ள சந்திர தீர்த்தத்தில் நீராடி, இங்குள்ள சந்திர பகவானுக்கு அபிஷேகம் மற்றும் அர்ச்சனை செய்து, வெள்ளை நிற வஸ்திரம் சாற்றி வழிபட்டால், ஜாதகத்தில் சந்திர பகவானால் ஏற்படும் தோஷங்கள் நீங்கி நன்மைகள் உண்டாகும்.        

"மனக்குழப்பம், தேவையற்ற பயம், தெளிவற்ற நிலை போன்றவற்றால் அவதிப்படுபவர்கள்,  ஜாதகத்தில் சந்திர திசை, சந்திர புத்தி நடப்பவர்கள், மனநிலை கோளாறுகள், தாயுடன் கருத்து வேறுபாடு, நீரில் கண்டம், வெளிநாட்டு பயணத் தடை போன்ற பிரச்சனைகளில் இருந்து நிவர்த்தி பெற இங்கு வழிபடுவது சிறப்பு.  

*இது 63 நாயன்மார்களில் ஒருவரான அப்பூதி அடிகள் அவதாரத் தலம். திங்களூர் தலத்தில் அப்பூதி அடிகள்  திருநாவுக்கரசரிடம் கொண்டிருந்த அன்பின் மிகுதியால், அவர் பெயரில் பல நற்பணிகளைச் செய்துவந்தார். ஒருமுறை, திங்களூருக்கு எழுந்தருளிய திருநாவுக்கரசர், தமது பெயரில் பாடசாலை, கோசாலை, தர்மசாலை, தண்ணீர்ப்பந்தல், அன்னசாலை எனப் பலவும் இருப்பது கண்டு வியப்புற்றார். இவற்றை அமைத்தவர் அப்பூதி அடிகள் என்பதை அறிந்து அவர் வீட்டுக்குச் சென்றார். திருநாவுக்கரசர் தமது இல்லத்தில் உணவருந்த வேண்டும் என்ற அப்பூதி அடிகளின் வேண்டுகோளை திருநாவுக்கரசர் ஏற்றுக்கொண்டார். அதற்காக, வாழை இலை கொண்டுவரச் சென்ற, சிறுவனான அப்பூதி அடிகளின் மகன்  வாழைத்தோப்பில் பாம்பு கடித்து  இறந்துவிட்டான். மகன் இறந்தது தெரிந்தால், அப்பருக்கு அமுது படைப்பது தடைபடும் என்று கருதிய அப்பூதி அடிகள், மகன் இறந்ததை மறைத்து அப்பரை உணவு உண்ண அழைக்கிறார்.
அப்பர் தம்முடன் அப்பூதி அடிகளின் மகனையும் உணவு அருந்த அழைக்க, அப்பூதி அடிகள் மகன் இறந்துவிட்ட தகவலைச் சொல்கிறார். மகன் இறந்ததைக் கேட்ட அப்பர் பெருமான், “ஒன்று கொலாம்” என்று தொடங்கும் பதிகம் பாடி, இறந்த சிறுவனை உறக்கத்தில் இருந்து விழித்தவனைப்போல் எழச்செய்து உயிர்ப்பிக்கிறார். 

*திருநாவுக்கரசர் பாடிய பாடல்கள் பத்தும் “விடம் தீரத்த திருப்பதிகம்” என்று போற்றப்படுகிறது.  

*சண்டிகேஸ்வரர்  இங்கு தனது மனைவியுடன் எழுந்தருளி இருப்பது அரிய காட்சியாகும்.      

*குழந்தைகளுக்கு முதன்முதலாக அன்னம் ஊட்டுவதற்கு (அன்னப்பிரசன்னம்) தமிழ்நாட்டில் மிகச்சிறந்த தலம் திங்களூர் கைலாசநாதர் கோயிலாகும். 

*திருவையாற்றில் இருந்து கும்பகோணம் செல்லும் சாலையில், திருப்பழனம் (பாடல் பெற்ற தலம்) ஊரை அடுத்து சிறிது தூரம் சென்றால், திங்களூர் செல்லும் சாலை பிரிகிறது. அதில் சென்று ஆலயத்தை அடையலாம். திருவையாற்றில் இருந்து சுமார் 4 கி.மீ. தொலைவில் உள்ளது. திருவையாற்றில் இருந்து நகரப் பேருந்து வசதி உண்டு.                            

ஓம் நமசிவாய 
படித்து பகிர்ந்தது 
இரா இளங்கோவன் 
நெல்லிக்குப்பம். 

பிரம்மஹத்தி தோஷம் நீக்கும் திருத்தியமலை ஏகபுஷ்ப பிரியநாதர்

பிரம்மஹத்தி தோஷம் நீக்கும் திருத்தியமலை ஏகபுஷ்ப பிரியநாதர்* .....


 *திருக்கோயில்* 
 *அமைவிடம்* :

 *திருச்சி  மத்திய மற்றும் சத்திரம்* பேருந்து நிலையத்தில், நெ.1. டோல்கேட், நொச்சியம், மண்ணச்சநல்லூர், திருப்பைஞ்ஞீலி, மூவானூர், வேங்கைமண்டலம் வழியாக திருத்தியமலைக்கு செல்லலாம்.கோயில் திறந்திருக்கும் நேரம்: காலை 9-12, மாலை 5-7 வரை.

 *மூலவர்* : ஏகபுஷ்ப பிரியநாதர் *அம்பாள்* :
தாயினும் நல்லாள்.

 *தல வரலாறு:* பூலோகத்தில் ஒரே ஒருமுறை பூக்கும் ‘தேவ அர்க்கவல்லி’ என்ற மலரைக் கொண்டு சிவனை பூஜித்தால், உலகிலுள்ள அனைத்து மலர்களையும் கொண்டு பூஜித்த பலன் கிடைக்கும் என்பதை நாரதரும், தேவலோக ரிஷிகளும் அறிந்தனர். அதனால் சிவ பூஜையில் சிறந்தவரான பிருகு மகரிஷியைத் தேர்வு செய்து, அம்மலரைத் தேடச் செய்தனர். பிருகு மகரிஷியும் பூவுலகில் தவம் செய்து நிறைவாக திருத்தியமலை வந்தார். அந்த நேரத்தில் அங்கு அகத்தியரும், அவரது துணைவியார் லோபமாதாவும் மலையைச் சுற்றி வலம் வந்து கொண்டிருந்தனர். பிருகு மகரிஷி, அகத்தியரிடம் தேவ அர்க்கவல்லி மலரின் ரகசியத்தைக் கேட்டறிந்தார். அப்போது மலையின் மீது இருந்த மரத்தருகே ஆயிரக்கணக்கான பறவைகள் காணப்பட்டன.

மகா சிவராத்திரி தினத்தில் பறவைகள் ‘ஓம் நமசிவாய’ என்று கூக்குரலிட்டபடி பறந்தன. பறவைகள் மட்டும் அம்மலரைக் கண்டுகொண்டதால், பிருகு முனிவர் சிறிது வருத்தப்பட்டார். அகத்தியர் முதல் முறையாக பிருகு முனிவரையும், லோபமாதாவையும் குன்றின் மீது அழைத்துச் சென்றார். அங்குள்ள சுனைநீரில் தேவ அர்க்கவல்லி பூவின் பிம்பத்தை மூவரும் கண்டனர். இதையடுத்து சிவபெருமான், தேவ அர்க்கவல்லி என்ற பூவை சூடிக்கொண்டு சுயம்புவாக அவர்களுக்கு காட்சியளித்ததாக கூறப்படுகிறது.

 *கோயிலின் சிறப்பு* : 
ஈசன், தேவ அர்க்கவல்லி என்ற ஒற்றை புஷ்பத்தைச் சூடிக்கொண்டதால் ஏகபுஷ்ப பிரியநாதர் (பாத தட்சிணாமூர்த்தி) என்று அழைக்கப்படுகிறார். இவர் பிரம்மஹத்தி தோஷத்தைக் களைந்து ஆனந்த வாழ்வு அளிப்பார்.

 திருத்தியமலையை பௌர்ணமி நாளன்று வலம் வந்தால் 100 அரசமரம், 1,000 வில்வமரம், 10,000 வன்னி மரம், 1 லட்சம் வேப்பமரம் சுற்றியதன் பலன் கிடைக்கும்.

ஓம் நமசிவாய
 படித்து பகிர்ந்தது 
இரா இளங்கோவன்
 நெல்லிக்குப்பம். 

Thursday, September 18, 2025

நந்தியின் குறுக்கே ஏன் செல்லக்கூடாது?

சிவபெருமானின் அதிசயம் 
நந்தியின் குறுக்கே ஏன் செல்லக்கூடாது? தெரிஞ்சிக்கலாம் வாங்க.!

                  சிவனுக்கு அபிஷேகம் பலன்கள் 

சிவனுக்கு அபிஷேகம் செய்வதால் ஏற்படும் பலன்கள் 

 நமசிவாய எனும் ஐந்தெழுத்து மந்திரத்திற்குரிய சிவன் ஒரு அபிஷேகப் பிரியர் ஆவார். அதனால் ஒவ்வொரு சிவ ஆலயங்களிலும் சிவனுக்கு திரவியங்களால் அபிஷேகம் செய்வதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். அவ்வாறு சிவனுக்கு திரவியங்களைக் கொண்டு செய்யப்படும் ஒவ்வொரு திரவியங்களுக்கும் ஒவ்வொரு பலன் உள்ளது.

 இளநீரால் சிவனுக்கு அபிஷேகம் செய்தால் பேரானந்தம் கிடைக்கும்.

 சர்க்கரையினால் சிவபெருமானுக்கு அபிஷேகம் செய்தால் மனநிறைவு உண்டாகும்.

 தீர்க்க ஆயுள் கிடைக்க, பசுவின் கறந்த பாலைக் கொண்டு சிவனுக்கு அபிஷேகம் செய்ய வேண்டும்.

 இனிய குரல் கிடைக்க, சுத்தமான தேனை கொண்டு அபிஷேகம் செய்ய வேண்டும்.

 தயிரால் சிவனுக்கு அபிஷேகம் செய்ய சகல சம்பத்தும் கிடைக்கும்.

 தூய நல்லெண்ணையில் வாசனை திரவியங்கள் கலந்து சிவனுக்கு அபிஷேகம் செய்தால் நோயற்ற வாழ்வு கிடைக்கும்.

கரும்புச்சாற்றால் சிவனுக்கு அபிஷேகம் செய்தால் உடல் வலிமை பெறும்.

சிவனுக்கு பஞ்சாமிர்தத்தால் அபிஷேகம் செய்தால் சகல காரியங்களிலும் வெற்றி கிடைக்கும்.

சிவனுக்கு திரவியங்களைக் கொண்டு செய்யும் ஒவ்வொரு அபிஷேகத்தின் போதும் வகை வகையான மலர்களை சிவன் தலையில் வைத்து வணங்குவது சிறப்பான பலன்களை தரும்.

சிவன் கோயிலில் வழிபடும் முறை

முதலில் சிவன் கோயிலை அடைந்தவுடன் "சிவாய நம" என கூறி ராஜகோபுரத்தை முதலில் தரிசிக்க வேண்டும். அதன்பிறகு கோயிலில் உள்ளே சென்றதும் விநாயக பெருமானை வழிபட்டு தோப்புக்கரணம் போட வேண்டும்.

அதன்பிறகு நந்திதேவரிடம் சென்று அவர் சிரசின் வழியாக சுவாமியை தரிசிக்க வேண்டும். நந்திதேவரை வழிபடும் சமயத்தில் நந்தி காயத்ரி மந்திரம் ஜெபிப்பது சிறந்தது.




 அதன்பிறகு கருவறையில் இருக்கும் சிவபெருமானுக்கு அர்ச்சனை செய்து வழிபட வேண்டும். சிவனை வழிபடும் சமயத்தில் "ஓம் நம சிவாய" என்னும் மந்திரத்தை கூறி வழிபடுவது நல்லது. சிவபெருமான் அபிஷேகப் பிரியர் என்பதால் சிவனுக்கு ஏதேனும் அபிஷேகம் செய்வது மேலும் சிறந்தது.

சிவபெருமானை வழிபட்ட பிறகு அன்னை பரமேஸ்வரியை வழிபட வேண்டும்.

அம்பாளை வணங்கிய பின்னர் தென்முக கடவுளான தட்சிணாமூர்த்தியை வழிபட வேண்டும். அந்த சமயத்தில் தட்சிணாமூர்த்திக்குரிய மந்திரத்தை கூறுவது நல்லது.

 அதன்பிறகு கோயிலை வலம் வந்து நவகிரகங்களை வழிபடலாம். பொதுவாக சிவன் கோயிலை வலம் வருகையில் மூன்று, ஐந்து, ஏழு என்ற எண்ணிக்கையில் வலம் வருவது நல்லது. வலம் வருகையில் "ஓம் நம சிவாய" என்று மந்திரத்தை ஜெபித்தவாறே வலம் வர வேண்டும்.

நந்தியின் குறுக்கே செல்லக்கூடாது ஏன்? 

சிவன் கோயில் வாசலில் கொடி மரத்தை அடுத்து நந்தி மண்டபம் காணப்படும். பிரதோஷ காலத்தில் இவருக்கே முக்கியத்துவம் தருவர். நந்தியின் குறுக்கே செல்லக் கூடாது எனவும் தடை விதிப்பர்.

இதற்கு காரணம் உண்டு. இது சிவனின் வாகனம். வாகனம் எதுவாயினும் அது ஜீவா ஆத்மாவைக் குறிக்கும். ஜீவாத்மா கருவறையிலுள்ள பரமாத்மாவைக் பார்த்த வண்ணம் உள்ளது. ஜீவாத்மாவின் குறிக்கோள் இறைவனை சென்றடைய வேண்டும் என்பது தான். அந்த கோட்பாட்டை விளக்கும் பொருளாக நந்திதேவர் சிவனை நோக்கி இருக்கிறார்.

⚡ ஆகவே பக்தர்கள் நந்தியின் குறுக்கே செல்லக்கூடாது என்றும் இது கடவுளை அடைய நினைப்பவர்களை தடுக்கும் செயலுக்கு ஒப்பாகும் என்று சொல்வார்கள். மேலும் நந்தீஸ்வரரை வணங்கி அவரது அனுமதி பெற்றே நாம் கோயிலுக்குள் நுழைய வேண்டும். அது மட்டுமல்லாது, இறைவனின் முதல்வன் விநாயகர். சிவன் கோயிலில் முதல்வன் நந்தீஸ்வரர் ஆவார்.

ஓம் நமசிவாய 
படித்து பகிர்ந்தது 
இரா இளங்கோவன் 
நெல்லிக்குப்பம். 

Wednesday, September 17, 2025

ஆதி_அண்ணாமலையார் கோவில்

உலகப் புகழ்பெற்ற நினைத்தாலே முக்தி தரும் பஞ்சபூத தலங்களில் 
"அக்னி" தலமாக விளங்கும் 
திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் உள்ள 
அப்பர் வாக்கில் உள்ள 
தேவார வைப்புத் தலமாக உள்ள, முதன்முதலில் பிரம்மனால் பிரதிஷ்டை செய்யப்பட்ட 
ஆதி_அண்ணாமலை என்ற 
அடி_அண்ணாமலை (அணி அண்ணாமலை)
ஆதி_அண்ணாமலையார் (அருணாச்சலேஸ்வரர்)
ஆதி_உண்ணாமுலைஅம்மன் (அபிதகுஜாம்பாள்)
திருக்கோயிலை தரிசிக்கலாம் வாருங்கள் 🙏🏻 🙏🏻 

திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோவில் பஞ்சபூதத் தலங்களில் ஒன்றாகத் திகழ்கிறது. இந்த ஆலயத்திற்கு முன்பாக அமைந்த, அதாவது ஆதியில் அண்ணாமலையார் திருக்கோயில், 
திருவண்ணாமலை கிரிவலப் பாதை 14 கிலோமீட்டர் கொண்டது. இதில் ஏழுவது கிலோமீட்டரில் மைய பகுதியான அடி அண்ணாமலை கிராமத்தில்  அமைந்துள்ளது இந்தத் திருத்தலம். பழமை வாய்ந்த மிகவும் பிரசித்தி பெற்ற ஆதி அருணாசலேஸ்வரர் திருத்தலம் ஆகும்.

இக்கோயில் திருவண்ணாமலையின் கிரிவலப் பாதையில் அமைந்துள்து.  இத்தலம் தேவார வைப்புத் தலமாகப் போற்றப்படுகிறது. இச்சிவாலயம் அண்ணாமலையார் கோயிலின் கட்டுப்பாட்டில் உள்ளது.  இக்கோயிலை அடி அண்ணாமலையார் கோயில் என்றும் அழைப்பர். 

படைப்புக் கடவுளான பிரம்ம தேவர் தனது புதல்வரும், சனகாதி முனிவர்களில் ஒருவருமான சனகரிடம், “வேறெங்கும் களைய முடியாத பாவங்கள், அணி அண்ணாமலையார் திருக்கோவிலில் களையப்படும்” என்று கூறியதாக, புராணத் தகவல் சொல்கிறது. ‘அணி’ என்ற சொல் ‘அழகை’ குறிக்கின்றது.

மூலவர் :ஆதி அண்ணாமலையார்

அம்மன்: ஆதி உண்ணாமுலையம்மை

ஊர் : அடி அண்ணாமலை

மாவட்டம் : திருவண்ணாமலை

மாநிலம் : தமிழ்நாடு

திருவண்ணாமலை கிரி வலம் வரும்போது இக்கோயில் உள்ளது; மக்கள் அடி அண்ணாமலை கோயில் என்றழைக்கின்றனர்.இத்தலம் அப்பர் வாக்கில் இடம்பெற்றுள்ள - வைப்புத் தலமாகும்.இத்தலத்திற்கு அப்பர் பெருமான் அருளியுள்ள நேரிசைப் பதிகம் திருவண்ணமாலை எனப் பெயரிட்டு நான்காம் திருமுறையுள் உள்ளது.

*அப்பர் பெருமான் பாடிய அணி அண்ணாமலை என்ற அடி அண்ணாமலை தேவாரப் பாடல்:

"ஓதிமா மலர்கள் தூவி 
  உமையவள் பங்கா மிக்க
சோதியே துளங்கும் எண்டோ ள் 
  சுடர்மழுப் படையி னானே
ஆதியே அமரர் கோவே 
  அணியணா மலையு ளானே
நீதியால் நின்னை யல்லால் 
  நினையுமா நினைவி லேனே
__அப்பர் சுவாமிகள் 

திருச்சுற்றில் விநாயகர், வள்ளி தெய்வானை உடனுறை ஆறுகப் பெருமான் மற்றும் எண்ணற்ற இலிங்கங்கள் உள்ளன. இக்கோயிலில் அங்க மண்டபம் உள்ளது. அத்துடன் உண்ணாமலை எனும் தீர்த்தமும் அமைந்துள்ளது. 

 பிற சிறப்புகள் :

இத்தலத்திலிருந்து அருணாசலேஸ்வரரை பார்ப்பதை சிவயோக முக தர்ஷன் என்று அழைக்கின்றனர். திருமூலர் இந்த தலத்திருந்து அவ்வாறு தரிசித்துள்ளாக கூறப்படுகிறது.  மாணிக்கவாசகர் திருவெம்பாவை இத்தலத்தில் இயற்றியுள்ளார்.
நால்வர்களில் ஒருவரான மாணிக்கவாசகர்  திருவெம்பாவை பாடிய திருத்தலமாகவும் இது திகழ்கிறது. அண்ணாமலையாரின் முதல் திருத்தலம் இதுவாகும். அதாவது ஆதி திருத்தலம் அதனால் ஆதி அண்ணாமலையார் திருக்கோவில் என போற்றப்படுகிறது .
 
இத்தலத்திற்கு வருகின்ற வழியில் மாணிக்கவாசருக்கான கோயிலும் அமைந்துள்ளது.

இந்த திருத்தலத்தில் தினம்தோறும் மூன்று கால பூஜை நடைபெறுகிறது.

அணி அண்ணாமலை என்றும் சொல்வார்கள். படைப்புக் கடவுளான பிரம்ம தேவர் தனது புதல்வரும் சனகாதி முனிவர்களில் ஒருவருமான சனகரிடம், வேறெங்கும் களைய முடியாத பாவங்கள் அணி அண்ணாமலையார் திருக்கோவிலில் களையப்படும் என்று கூறியதாக புராணத் தகவல் சொல்கிறது.

  🌹தல🌹 வரலாறு:

சிவபெருமாளின் அடி முடி காணாத விஷ்ணு,பிரம்மா :

 ஒருமுறை படைப்புக் கடவுளான பிரம்மனும், காக்கும் கடவுளான பெருமாளும் தங்களுள் யார் பெரியவர் என்ற  போட்டி நிலவியது. இருவருக்கும் உண்மையை உணர்த்த சிவபெருமான் அவர்கள் முன்பாகத் தோன்றினார். என்னுடைய அடி அல்லது முடிகளில் ஏதாவது ஒன்றை யார் முதலில் கண்டு திரும்புகிறார்களோ அவரே பெரியவர் என்று கூறினார் சிவபெருமாள்; இருவரும் ஒப்புக்கொண்டனர். 

மகாவிஷ்ணு, சிவபெருமானின் அடியைக் காண  வராக  உருவம் எடுத்து  பூமியைக் குடைந்து கொண்டு சென்றார். பின்னர் பிரம்மதேவன் சிவபெருமானின் முடியைக் காண அன்னப் பறவை வடிவம் எடுத்து மேல்நோக்கி பறந்து சென்றார். வெகு உயரம் சென்ற பிறகும் சிவபெருமானின் முடியைக் காண முடியவில்லை. அப்போது சிவபெருமானின்  முடியில் இருந்து விழுந்த தாழம்பூ கீழ் நோக்கி வந்து  கொண்டிருந்தபோது தாழம்பூவைக் கண்ட பிரம்மன் அதனிடம் தான்  சிவபெருமானின் திருமுடியைக் கண்டதாக சொல்லும்படி கூறினார். அதே சமயம்  அடியைக் காண சென்ற பெருமாள்  காண முடியாமல்  திரும்பி தன்னுடைய  தோல்வியை சிவபெருமானிடம்  ஒப்புக்கொண்டார். பிரம்மனோ தான் முடியைக் கண்டு திரும்பியதாக பொய்  தெரிவித்தார்  அவருக்கு தாழம்பூ  பொய்சாட்சி கூறியது.

அனைத்தும் அறிந்த சிவபெருமான் செய்த தவறுக்கு தண்டனையாக பிரம்மதேவருக்கும், தாழம்பூவுக்கும் சாபம் வழங்கியதாக புராணம் கூறுகிறது. பிரம்மனுக்கு பூவுலகில் திருக்கோவில் எதுவும் இருக்காது  எனவும்  மற்றும் பொய் சாட்சி உரைத்த தாழம்பூவை சிவபூஜையில் இருந்து நீக்கியதாகவும் கூறப்படுகிறது. இந்த தாழம்பூ ஆனது ஆண்டுக்கு ஒரு முறை அதாவது சிவ ராத்திரி தினத்தன்று சிவபெருமானின் பூஜையில் வைக்கப்படுகிறது. சிவபெருமானிடம் முறையிடுவதற்கு முன், சிவ பூஜையில் ஈடுபட எண்ணிய பிரம்மதேவர், தன் திருக்கரங்களால் சிவலிங்கத்தை நிறுவினார். அந்த லிங்கத் திருமேனியை இன்றும் நாம், ஆதி அண்ணாமலையார் திருக்கோவிலில் மூலவராக தரிசிக்கலாம்.

 *முதன் முதலில் பிரம்மதேவனால் பிரதிஷ்டை செய்யப்பட்ட அடி அண்ணாமலை ஆதி அருணாசலேஸ்வரர் கோவிலின் சிறப்புகள்:

 அனைத்தும் அறிந்த சிவபெருமான் செய்த தவறுக்கு தண்டனையாக பிரம்மதேவருக்கும், தாழம்பூவுக்கும் சாபம் வழங்கியதாக புராணம் கூறுகிறது. பிரம்மனுக்கு பூவுலகில் திருக்கோவில் எதுவும் இருக்காது  எனவும்  மற்றும் பொய் சாட்சி உரைத்த தாழம்பூவை சிவபூஜையில் இருந்து நீக்கியதாகவும் கூறப்படுகிறது. இந்த தாழம்பூ ஆனது ஆண்டுக்கு ஒரு முறை அதாவது சிவ ராத்திரி தினத்தன்று சிவபெருமானின் பூஜையில் வைக்கப்படுகிறது. சிவபெருமானிடம் முறையிடுவதற்கு முன், சிவ பூஜையில் ஈடுபட எண்ணிய பிரம்மதேவர், தன் திருக்கரங்களால் சிவலிங்கத்தை நிறுவினார். அந்த லிங்கத் திருமேனியை இன்றும் நாம், ஆதி அண்ணாமலையார் திருக்கோவிலில் மூலவராக தரிசிக்கலாம்.

 நால்வரான மாணிக்க வாசகரின் தனி கோவில் அமைந்த சிறப்பு  :

 அப்பர் , சமந்தர் , சுந்தரர் , மாணிக்கவாசகர் இதில் ஒருவரான மாணிக்க வாசகர் சிவபெருமானுக்கு அடி அண்ணாமலை என்றும் இப்பெரிய கோவிலும் மாணிக்க வாசகப் பெருமானுக்கு ஒரு கோவிலும் ஒரு குளம் உள்ளன. திருநாவுக்கரசின் தேவாரத்தில் 7 பாடல்கள் அடி பாடல்,

"ஆதியும் அந்தமும் இல்லாத அருட்பெரும் 

ஜோதியை யாம்பாட கேட்டேயும் 

வாள்தடங்காண்

 மாதே வருதியோ வன் செவலியோ நின் செவிதான் 

மாதேவன்  வார்கழல்கள் வாழ்திய வாழ்தொலி போய் 

வீதிவாய் கேட்டாலுமே விம்மி விம்மி மெய்ம்மறந்து 

போதார் அமலியின் மேல் நின்றுங் புரண்டிங்ஙன் 

ஏதேனும் ஆகாள் கிடந்தால் என்னே என்னே 

ஈதே எம் தோழி பரிசேலோ ரெம்பவாய் "

மாணிக்க வாசகப்பெருமான் ஆதி அண்ணாமலையார் திருக்கோவிலில் திருவெண்பாவை இயற்றி பாடியதால் அவ்விடத்திலேயே அவருக்கு கோவில் கட்டியுள்ளனர். மாணிக்க வாசகருக்கு எந்த திருத்தலத்திலும் தனியாக கோவில் கட்டபடவில்லை திருவண்ணாமலை அடி அண்ணாமலையில் மட்டுமே கட்ட பட்டுள்ளது என்பது சிறப்புகுறியது. 

பிரம்ம தேவருக்கும் பெருமாளுக்கும் அக்னி சொரூபமாக சிவபெருமான் காட்சி கொடுத்த தலத்தில் மலையாக குளிர்ந்து இன்றளவும் அருள்பாலிக்கின்றார். அடி முடி காணா அண்ணாமலையார் என போற்றப்படுகிறார். இதுமட்டுமின்றி இந்த ஆதி அண்ணாமலையார் திருத்தலத்திற்கு யாராலும் அவ்வளவு சுலபமாக வரமுடியாது. அய்யனாக நினைத்து அழைத்தால் மட்டுமே உங்களால் வரயியலும் எனவும் புராணங்களிள் குறிப்பிட்டுள்ளது. 

 👏 அண்ணாமலையார் கோவிலின் சிறப்பு :

 அடி அண்ணாமலை சிவலிங்க பிரதிஷ்டை செய்து வழிபட்டு வந்தால் விமோசனம் கிடைக்கும். பாவ நிவர்த்திக்காக பிரம்மாவின்னால் சபிக்கப்பட்டு மற்றும் பூஜிக்கப்பட்ட லிங்கம் ஆதி அண்ணாமலையார் ஆதி  அருணாச்சலேஷ்வரர் அடி அண்ணாமலையார் என்னும் திருத்தலம்மாகும் . நினைத்தலே முக்தி தரும் இத்தளத்தினை தரிசித்தால் முன் ஜென்ம வினைகள் பிரம்மஹத்தி தோஷங்கள் நீங்கும் விவாக பிராப்தி கைகூடும் மற்றும் சகல சௌபாக்கியங்களும் கைகூடும் இத் திருத்தலத்தில் தரிசித்தால் என்கிறது ஐதீகம்.

திருநாவுக்கரசின் தேவாரத்தில் 7 பாடல்கள் அடி அண்ணாமலையை குறிப்பிடுகின்றன. மாணிக்க வாசகப்பெருமான், திருவெண்பாவை பாடிய இடத்திலேயே அவருக்கு கோவில் அமைத்து இருக்கிறது என்பர்.

இக்கோவில் அருகே உள்ள குளம் திருவெம்பாவையில் “பைங்குவளை” எனத் தொடங்கும் பாடலில் பொங்குமடு (மடுகுளம்) என்று குறிப்பிட்டு இருக்கிறது. அடி அண்ணாமலையில் புதையுண்ட நகரத்தின் சின்னங்கள் கிடைக்கின்றன.கார்த்திகை தீப நாளில் அண்ணாமலையார் கோவிலில் நிகழ்வது போன்ற சிறப்புகள் அடி அண்ணாமலை கோவிலிலும் நடைபெறுகின்றன. அண்ணாமலையார் கோவிலில் இருந்து இந்த கோவிலுக்கு சுரங்கப்பாதை இருப்பதாக செல்வார்கள். 
ஓம் நமசிவாய 
படித்து பகிர்ந்தது 
இரா இளங்கோவன்
 நெல்லிக்குப்பம். 

Followers

புரட்டாசி மாத நவராத்திரி பூஜை

புரட்டாசி மாத நவராத்திரி பூஜை பற்றிய பதிவுகள் :* தமிழ் மக்களின் ஆன்மீக வாழ்வில் புரட்டாசி மாதம் மிகவும் சிறப்புமிக்க மாதமாகக் கர...