Monday, June 23, 2025

வேலை கிடைக்க வேல் பூஜை செய்யலாம்.முருகன் வேலின் மகத்துவம்

_முருகன் வேலின் மகத்துவம்_
முருகனுக்கு வேல் ஆயுதமாக உருவகிக்கப்பட்டிருக்கிறது. வேல் வெற்றிக்கும், அறிவுக்கும் அடையாளமாகத் திகழ்கிறது. வேல் நடுவில் அகன்றும், உருவில் நீண்டும், முனையில் கூர்மையாகவும் இருக்கிறது. இதுபோல் இகபர வாழ்வில் மனிதன் சிறந்தோங்க அகன்ற, ஆழ்ந்த, கூர்மையான அறிவுடையவனாக இருக்கவேண்டும்.

முருகன் கையில் இருக்கின்ற வேல் அவனை நம்பி வணங்குகின்றவர்களுக்கு அறிவையும் ஆற்றலையும் அளித்து அவர்களின் பகைவர்களையும் அழித்து அருள்புரியும். கூவுகின்ற கோழி நாத வடிவானது. கோழிக் கொடி வெற்றியின் சின்னமாக விளங்குகின்றது. 

அழகிய மயிலின்மிசை வீற்றிருக்கின்றான் முருகன். மயில் மனத்தின் சின்னம். பரிசுத்தமான, அழகான உள்ளம் தான். இறைவனின் உண்மையான கோயில் என்பதனை மயில் வாகனம் விளக்குகிறது. பாம்பின் மீது மயில் நிற்பது முருகன் எல்லா சக்திகளையும் ஆட்சி செய்கின்றான் என்பதைக் காட்டுகிறது.

கந்தபுராணத்தில் முருகனின் கையில் இருக்கும் வேல் மகத்துவம் பற்றி கூறப்பட்டுள்ளது. கந்தபுராணம் வேலினைப் புகழ்ந்து கூறியிருப்பதுடன் வேலுக்கும் முருகனுக்கும் இடையிலான தொடர்புகளைத் தெளிவுப்படுத்துகின்றது. 

எனவே வேல் என்னும் குறிப்பு வேட்டையாடல், வேட்டைத் தலைவர், முருகனின் பூசாரி, முருகனின் போர்க்குணம் மற்றும் முருகனை உணர்த்தும் மறைபொருளாக அமைந்துள்ளது. 

வேல் விடுமினையோன், திறல்வேலன், வேல் கொண்டன்று பொருதவீரன்,துங்கவடிவேலன், ப்ரசன்ன வடிவேலன், வேல் தொட்ட மைந்தன், அசுரர் தெறித்திட விடும் வேலன் என பலவாறாக முருகனைப் புகழ்ந்துரைத்தவர் அருணகிரியார்.

வேற்கோட்டம் என்ற சொல்லாட்சியானது, தமிழகத்தில் முருகனைச் சுட்டிக் காட்டக்கூடிய ஒரு அடையாளப் பொருள் என்பதைத் தெளிவுப்படுத்துகின்றது. இன்றும் வட ஆற்காடு மாவட்டத்தில் உள்ள திருப்பத்தூர், கோவை மாவட்டத்தில் உள்ள பூராண்டான் பாளையம், மதுரை மாவட்டத்தில் பசுமலைக்கு அருகில் உள்ள குமரகம் ஆகிய இடங்களில் வேல் ஒன்றே நட்டுவைக்கப்பட்டு வணங்கப்படுகின்றது. 

திருச்செந்தூர், திருப்பரங்குன்றம் போன்ற முருகன் தலங்களில் உள்ள முருகன் ஆலயக் கோபுரங்களில் பெரிய அளவில் வேல்வடிவ சுடர் விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளன. அவை வெகு தொலைவு வரை முருகன் கோவிலின் இருப்பிடத்தைச் சுட்டிக்காட்டுகின்றன. மேலும் தமிழகத்தில் உள்ள முருகன் கோவில்களில் ஒன்றில் கூட வேல் இல்லாமல் இல்லை. இவை வேல் என்னும் குறியீட்டின் முக்கியத்துவத்தைக் குறிப்பிடுவதாக உள்ளன.

வேலின் பெருமை:

வீர வேல், தாரை வேல், விண்ணோர் சிறை மீட்ட

தீர வேல், செவ்வேள் திருக் கை வேல், – வாரி

குளித்த வேல், கொற்ற வேல், சூர் மார்பும் குன்றும்

துளைத்த வேல் உண்டே துணை

இது திருமுருகாற்றுப்படையை ஒட்டி எழுந்த பின்னாளைய வெண்பா !

வேல் வினைகளை வேரறுக்க வல்லது. வேலுண்டு வினையில்லை என்பது அருளாளர் வாக்கு. அச்சம் அகற்றும் அயில் வேல் எனச் சிறப்பிக்கிறார் குமரகுருபரர். வினை ஓட விடும் கதிர்வேல் மறவேன் என்று கந்தரநுபூதியும், வினை எறியும் வேல் என்று திருப்புகழும் போற்றுகின்றன.

சக்திவேல் வழிபாடு என்பது இராஜ அலங்கார முருகன் படத்துக்கு அருகே உருவேற்றப்பட்ட சக்திவேலை வைத்து நாள்தோறும் வணங்குவது. சக்திவேலை உருவேற்றுதல் என்பது சக்திவேலுக்கான சூட்சுமசக்தியை வழிபாட்டின் மூலமாக அதிகரித்துக் கொண்டே செல்வது.

செய்யும் காரியங்களில் தடைகள் விலக, நீண்ட நாட்களாய் குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு குழந்தைப்பேறு கிடைக்க, கல்வியில் மேன்மை பெற, மன பயம் நீங்கி வலிமை உண்டாக, வியாபாரத்தில் லாபம் பன்மடங்காய்ப் பெருக, பில்லி சூனியம் அணுகாதிருக்க, நவகிரகங்களினால் உண்டாகும் தோஷங்கள் நீங்க, பூத பிரேத பிசாசுகளின் தொல்லைகளில் இருந்து விடுபட, சகல சம்பத்துகளும் கிடைக்க, சகல ஐஸ்வர்யங்களும் கிடைக்க, அரசு மற்றும் தனியார் வேலை கிடைக்க வேல் பூஜை செய்யலாம்.

மரண பயம் நீங்கி நீண்ட ஆயுள் பெற, விதியால் வரும் ஆபத்துகள் விலக, தடைபெற்று நிற்கும் திருமணம் நடைபெற, சொந்தமாய் வீடு வாங்க, கெட்ட கனவுகள் வராமல் இருக்க, நினைத்த காரியம் நினைத்தப்டியே நிறைவேற, பொன் வெள்ளி ஆபரணங்கள் சேர்க்கை அதிகரிக்க, தனதான்யங்கள் மேலும் பெருக, கலைகளில் தேர்ச்சி பெறவும் வேல் பூஜை செய்வது சிறப்பு.

எதிரிகளால் ஏற்படும் பயம் நீங்க, தாமதமாகும் திருமணம் விரைவில் நடைபெற, எதிர்மறைச் சக்திகளின் பாதிப்பிலிருந்து விலக, பாவங்கள் தீர்ந்து புண்ணியம் பெருக, உயர்ந்த பதவிகள் பெற, வாக்கு வளம் பெற, விபத்துகள் ஏற்படாமல் இருக்க சக்திவேலை வணங்கலாம்.

ஒவ்வொரு நாள் காலையும் சூரிய உதயத்துக்கு முன்னதாக சக்திவேலை வழிபடுதல் சிறப்பு. சக்திவேலினை வீட்டிலோ, அலுவலகத்திலோ வைத்துக் கொள்ளலாம். அலுவலகத்தில் சக்திவேலை வைப்பதானால், அலுவலகம் சென்றவுடன் சக்திவேலை வணங்கிவிட்டே பணிகளைத் துவக்க வேண்டும். மனம் பாரமாக இருக்கும் நேரங்களில் மனதுக்குள் சக்திவேலை நினைத்துக் கொண்டு ஓம் ஐம் ஹ்ரீம் வேல் காக்க எனச் சொல்லி வர மனம் இலேசாகி விடும்.

சக்திவேலைத் தொடர்ந்து வழிபட்டுக் கொண்டிருப்பதன் வழியாக அதன் சூட்சுமசக்தியை அதிகரித்துக் கொண்டே செல்லும். ஆக, சக்திவேலை வணங்க நாள்தோறும் ஐந்து நிமிடங்களாவது மறவாமல் ஒதுக்கிக்கொள்ளுங்கள். காலை, மாலை அல்லது இருவேளைகளிலும் சக்திவேலை வழிபடலாம்.

ஓம் நமசிவாய 
படித்து பகிர்ந்தது 
இரா இளங்கோவன் 
நெல்லிக்குப்பம். 

சிவபூத கணங்கள் யார்?

_சிவபூத கணங்கள்_
பூத கணங்களை நம் சிவாலயங்களிலும் ,தேர்களிலும் சிலைகளாக பார்த்திருப்போம்....

இவர்கள் யார்? 

இவர்களுடைய பணி என்ன? 

இவர்கள் எங்கே இருப்பார்கள்? 

இவர்கள் என்ன செய்வார்கள்? என்ற கேள்வி எனக்கு தோன்றியது...... 

அதனை சைவ நூல்களின் வழியே காண்போம்.....

கயிலையில் இருக்கும் பதினெண் வகை கணங்களில் ஒன்று தான் இந்த பூதகணங்கள்...

பூத கணங்களில் முப்பத்தி மூன்று வகை உண்டு என பழந்ததிழ் நூல்கள் பதிவு செய்கிறது... இந்த முப்பத்தி மூன்று வகை பூதகணங்களும் நம் ஈசரோடு கயிலையில் வாழும் வரம் பெற்றுள்ளது..

ஈசனார் கூத்தாடும் வேளையில் இசை கருவிகள் வாசிக்கவும், அவரோடு இணைந்து ஓலமிட்டபடி ஆடும் பெரும் பாக்கியத்தையும் இப்பூதங்கள் பெற்றிருக்கின்றன.....

இதனை சுந்தரமூர்த்தி சுவாமிகள்

"தென்னாத் தெனா தெத்தெனா என்று பாடி சில் பூதமும் நீரும் திசை திசையென"

என்று திருபரங்குன்றம் பதிகத்தில் பாடுவதின் மூலம் அறியலாம்......

இது தவிர இறைவரின் அனுக்க சேவர்களாக இப்பூதங்கள் பெரும் பணி செய்வதை நாயன்மார்கள் புராணத்தின் வழி காண்போம்....

ஒரு அரசன் தான் இட்ட கட்டளையை நிறைவேற்றுவதற்கு பல்வேறு நிலையிலுள்ள அரசவை ஊழியர்களை வைத்திருப்பார். அதுபோல இறைவனின் கட்டளையை ஏற்று அதை நிறைவேற்றுவதற்கும் சில  சக்திகள் உண்டு.

இவ்வாறு ஈசனின் கட்டளையை ஏற்று அவற்றை ஈசனின் அருளுடன் நொடிப் பொழுதில் நிறைவேற்றுபவை பூதகணங்களே. 

கயிலையில் இருக்கும் ஒரு பூதகணத்துக்கே  படைத்தல், காத்தல், அழித்தல் ஆகிய முத்தொழில் செய்யும் ஆற்றல் உண்டென படித்துள்ளேன். 

ஒரு பூத கணத்துக்கே இவ்வோள ஆற்றல் உண்டென்றால் இவர்களை அடக்கி ஆளும் முக்கண் முதல்வர்க்கு உரிய ஆற்றலை பற்றி நம்மால் சொல்ல முடியுமா ? சிவசிவ...

ஒரு ஜீவன் கயிலைக்கு செல்லும்போது கூட உடன் வந்து  அழைத்துச் செல்பவை சிவகணங்களே.

அப்பர் பெருமான் சமண சமயத்தை விட்டு நீங்கி திருவதிகை பெருமானால் ஆட்கொள்ளப்பட்டு சூளை நோய் நீங்கி
தற்போதைய திருபெண்ணாகடம் வந்து பொன்னார் திருவடிக்கு ஒன்றுண்டு விண்ணப்பம்னு பதிகம் பாட தூங்கானைமாடம் சுடர்கொழுந்துநாதரின் ஆணையின் படி சிவபூதகணம் ஒன்று கயிலையை விட்டு பூலோகம் இறங்கி வந்து பெண்ணாகடத்தில் அப்பர் சுவாமிக்கு இடபம் சூலம் முத்திரை பதித்ததும் இச் சிவபூதகணமே.

ஈசனின் கட்டளைப்படி சம்பந்தருக்கு திருவாவடுதுறை தலத்தில் உலவாப் பொற்கிழியையும், பட்டீஸ்வரம் எனும் தலத்தில் முத்துச் சிவிகையையும் கொண்டு  வந்து கொடுத்தவை பூத வேதாள கணங்களேயாம்.

 திருமுருகன்பூண்டியில் சிவபெருமானின் கட்டளைப்படி செல்வத்தை வேடர்களாக வந்து சுந்தரமூர்த்தி நாயனார் சுவாமிகளிடம் திருவிளையாடல் நடத்தியதும், திருக்கோளிலியில் மலையென நிறைந்த நெல்லினை   ஓர் இரவில் திருவாரூர் சேர்த்ததும் இந்த பூத  வேதாளங்களே ஆகும். 

இதை சிவனார் 

"நம் கணங்கள் இவ்விரவே ஆரூர் சேர்க்கும் கவலையற்க"

என்று சுந்தரரிடம் சொன்ன அழகினை காண்க.

அப்படிப்பட்ட பூத வேதாள கணங்கள் வணங்கும் தலங்கள் மண்ணில் வந்து வழிபட்ட தலங்களும் உண்டு.

அதனில் ஒன்றுதான்  செய்யூர் எனும் முருகன் தலம் ஆகும்.

இதை கந்தர் அனுபூதியில்..

ஆதாளியை ஒன்று அறியேனை அறத்
தீதாளியை ஆண்டது செப்பும் அதோ?
கூதாள! கிராதகுலிக்கு இறைவா!
வேதாள கணம் புகழ் வேலவனே’

இப்பாடல் வழியே பூத வேதாளங்ள் வழிபட்டமையை காணலாம்...

பூதகணங்கள் சிவலிங்கம் தாபித்து வழிப்பட்ட ஊர் கன்னியாகுமரி அருகில் உள்ள பூதப்பாண்டி எனும் ஊர் ஆகும்.

பூதங்கள் வழிப்பட்ட காரணத்தால் இறைவர் திருநாமம்  பூதலிங்கசுவாமி என்பதாகும்...

இதுதவிர இறைவரின் ஏவலால் திருவையாறு கோயில் மகா மண்டபத்தை கட்டியதும் சிவகணங்களை எனும் ஐதீகம் உள்ளது.. இதை உணர்த்தும் ஏரளாமான சிற்பங்கள் இருப்பதையும் காணலாம்..

ஆவுடையார் கோயிலையும் இறைவன் ஏவலால் சிவபூத கணங்கள் தான் கட்டியதாக அப்பகுதி மக்கள் தீவிர நம்பிக்கையோடு பேசுகின்றனர்.

இந்த சிவனாரின் அனுக்க சேவர்களான பூதகணங்களை  எங்கே கண்டாளும் ஒரு வணக்கத்தை போட்டு வையுங்க.... 

எதுக்கு வம்பு நம் இறக்கும் தருவாயில் நம்மை கயிலைக்கு அழைத்து செல்ல ஈசனார் இவர்களை தான் அனுப்பி வைப்பார்...... என்பதை மறக்காதீங்க....

நால்வர் பொற்றாள் எம் உயிர்த் துணையே.

பூழியர்கோன் வெப்பொழித்த புகலியர்கோன் கழல்போற்றி! 
ஆழிமிசைக் கண்மிதப்பில்! அணைந்த பிரான் அடிபோற்றி!! 
வாழி திருநாவலூர் வன்தொண்டர் பதம் போற்றி!!! 
ஊழிமலி திருவாதவூரர் திருத்தாள் போற்றி!!!!
ஓம் நமசிவாய 
படித்து பகிர்ந்தது 
இரா இளங்கோவன் 
நெல்லிக்குப்பம். 

Sunday, June 22, 2025

அருள்மிகு ஏகாம்பரநாதர் (ஏகாம்பரேஸ்வரர்) காஞ்சிபுரம்.


அம்பாள் கட்டியணைத்த அடையாளம்.. 5008 ருத்ராட்சங்களால் பந்தல்..!!
                

அருள்மிகு ஏகாம்பரநாதர் (ஏகாம்பரேஸ்வரர்) திருக்கோயில்...!!

 *இந்த கோயில் எங்கு உள்ளது?* 

காஞ்சிபுரம் மாவட்டத்தின் மையப்பகுதியில் அருள்மிகு ஏகாம்பரநாதர் (ஏகாம்பரேஸ்வரர்) திருக்கோயில் அமைந்துள்ளது.

 *இந்த கோயிலுக்கு எப்படி செல்வது?* 

காஞ்சிபுரம் பேருந்து நிலையத்தில் இருந்து நடந்து செல்லும் தொலைவில் இத்திருக்கோயில் அமைந்துள்ளது.

 *இந்த கோயிலின் சிறப்புகள் என்ன?* 

இங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். காமாட்சி அம்பாள் பூஜித்த மணல் சிவலிங்கமே மூலவர் ஆவார். இந்த லிங்கத்தில் அம்பாள் கட்டியணைத்ததற்கான அடையாளம் உள்ளது சிறப்பம்சமாகும்.

உற்சவர் ஏகாம்பரேஸ்வரர் தனிச்சன்னதியில், கண்ணாடி அறையில் 5008 ருத்ராட்சங்களால் வேயப்பட்ட பந்தலில் காட்சியளிக்கிறார். இக்கண்ணாடியில் ருத்திராட்சத்துடன், எல்லையற்ற சிவனது உருவத்தையும் தரிசிக்கலாம்.

 இத்தரிசனம் பிறப்பில்லா நிலையை அருளக்கூடியது என்பது நம்பிக்கைஹ.

ஏகாம்பரேஸ்வரர் கருவறைக்கு எதிரே உள்ள பிரகாரத்தில் ஸ்படிக லிங்கமும், அதற்கு எதிரே ஸ்படிகத்திலேயே நந்தியும் உள்ளது.

இக்கோயிலில் உள்ள ராஜகோபுரம் 9 நிலைகளைக் கொண்டது.

இத்தலத்து சிவபெருமானை வணங்கினால் முக்தி கிடைக்கும் என்பது நம்பிக்கை.

 *வேறென்ன சிறப்பு?* 

பஞ்சபூத தலங்களில் இது (நிலம்) முதல் தலம் ஆகும்.

ராமர் பிரம்மஹத்தி தோஷம் நீங்க வழிபட்ட சகஸ்ர லிங்கம் மற்றும் அஷ்டோத்திர (108) லிங்கங்களும் இங்கு இருக்கிறது.

இத்தலமானது அப்பர், சுந்தரர், சம்பந்தர், மாணிக்கவாசகர் ஆகிய நால்வராலும் தேவாரப்பாடல் பெற்ற திருத்தலம் ஆகும்.

கோயில் முன் மண்டபத்தில் திவ்ய தேசங்களில் ஒன்றான நிலாத்திங்கள் துண்ட பெருமாள் சன்னதி உள்ளது.

இத்தல விநாயகர் விகடசக்ர விநாயகர் என்ற திருநாமத்துடனும், முருகர் மாவடி கந்தர் என்ற திருநாமத்துடனும் அருள்பாலிக்கின்றனர்.

 *என்னென்ன திருவிழாக்கள் கொண்டாடப்படுகிறது?* 

பங்குனி உத்திரம் பெருவிழா 13 நாட்கள் சிறப்பாக கொண்டாடப்படுகிறது.

தமிழ் மற்றும் ஆங்கில வருடபிறப்பு, தீபாவளி, பொங்கல், பௌர்ணமி, அமாவாசை, பிரதோசம் ஆகிய விஷேச நாட்களில் இத்தலத்தில் சிறப்பு பூஜை நடைபெறுகிறது.

 *எதற்கெல்லாம் பிரார்த்தனைகள் செய்யப்படுகிறது?* 

திருமண வரம், குழந்தை வரம் வேண்டுவோர் இக்கோயிலில் பிரார்த்தனை செய்கின்றனர்.

இது திருமணத்தலம் என்பதால் இங்கு திருமணம் செய்து கொள்ள ஏராளமான பக்தர்கள் வருகின்றனர்.

 *இத்தலத்தில் என்னென்ன நேர்த்திக்கடன்கள் செலுத்தப்படுகிறது?* 

பக்தர்கள் தங்களது வேண்டுதல்கள் நிறைவேறியவுடன் சுவாமி மற்றும் அம்பாளுக்கு அபிஷேகம் செய்தும், வஸ்திரம் சாற்றியும், அன்னதானம் வழங்கியும் நேர்த்திக்கடனை செலுத்துகின்றனர்.

ஓம் நமசிவாய
 படித்து பகிர்ந்தது 
இரா இளங்கோவன் 
நெல்லிக்குப்பம். 

Friday, June 20, 2025

குபேர சனீஸ்வரர் தலம் பற்றி தெரியுமா? நடுசத்திரம் ஸ்ரீகாசிவிஸ்வநாதர்.

தெற்கு நோக்கி அருள்பாலிக்கும் அருள்மிகு குபேர சனீஸ்வரர்  தலம் பற்றி தெரியுமா?
 *இன்னல்கள் நீக்கும் இரண்டாம் காசி!*

நடுசத்திரம் அருள்மிகு ஸ்ரீஅன்னபூரணி சமேத ஸ்ரீகாசிவிஸ்வநாதர் 
திருக் கோயில்.

விருதுநகர் மாவட்டம், சாத்தூரில் இருந்து சங்கரன்கோவிலுக்கு ஏழாயிரம்பண்ணை 
வழியாகச் செல்லும் சாலையில், சுமார் 22 கி.மீ தொலைவில் அமைந்துள்ள சிற்றூர் நடுசத்திரம். 

இந்த ஊரில் கோயில்கொண்டிருக்கும் அருள்மிகு ஸ்ரீகாசிவிஸ்வநாதர்- ஸ்ரீஅன்னபூரணி திருக் கோயிலை, ‘இந்தியாவின் இரண்டாவது காசி’ என்றே கொண்டாடுகிறார்கள் இங்குள்ள சிவ பக்தர்கள்.

சுமார் 1,200 ஆண்டுகளுக்கு முன், பாண்டிய மன்னர்களால் கட்டப்பட்ட கோயில் இது. 

தற்போது கோயில் அமைந்துள்ள இடம்,  
அப்போது வனமாக இருந்திருக்கிறது. 

இந்த வனப்பகுதியின் வழியாகத்தான் கன்னியாகுமரியில் இருந்து காசிக்குச் செல்லும் பக்தர்கள் பயணம் மேற்கொள்வார்கள். 

கோயிலின் அருகிலேயே 
ஓர் அருமையான நீர்நிலை உள்ளது. 

இப்பகுதியை ஆண்ட பாண்டிய மன்னர்கள் இவற்றை எல்லாம் கருத்தில்கொண்டு, காசிக்குச் செல்லும் மக்களுக்கு ஏதுவாக இந்த ஆலயத்தை காசியில் உள்ளது போன்றே வடிவமைத்திருக்கின்றனர். 

இந்த வழியாகக்  காசிக்குச் செல்பவர்கள் இந்த 
ஆலயத்தில் தங்கி, 
இங்குள்ள சிவபெருமானை தரிசித்துவிட்டுச் செல்வது வழக்கம். 

பாண்டிய மன்னர்கள், அப்போதிருந்த குறுநில மன்னர்களான எட்டையபுரம் ஜமீன்தார்களிடம்  ஆலய நிர்வாகத்தை ஒப்படைத்தனர். 

அவர்களது காலத்துக்குப் பின், ஏழாயிரம்பண்ணை ஜமீனிடம் பராமரிக்கும் பொறுப்பு வந்து சேர்ந்தது. 

இவர்கள் சில தலைமுறைகளாக இந்தக் கோயிலைப் பாதுகாத்து வந்துள்ளனர்.

அதன்பின், இந்த ஆலயம் செவல்பட்டி ஜமீன் வசம் ஒப்படைக்கப் பட்டது. 

கடைசியாக, ஹரிச்சந்திர நாயுடு என்பவர் இந்தக் கோயிலின்  திருப்பணிகளைக் கவனித்து வந்ததாகச் சொல்கிறார்கள், இந்த ஊர்ப் பெரியவர்கள். 

தற்போது இந்த ஆலயம் இந்து அறநிலையத்துறையின் மேற்பார்வையில் உள்ளது.

இந்தத் திருத்தலத்தின் சந்நிதியில் மட்டுமே காசிக்கு அடுத்தபடியாக அன்னபூரணி அம்பிகை தெற்கு நோக்கி காட்சி தருகிறார். 

இத்தலம் பாண்டியர்களால் கட்டப்பட்டது என்பதற்குச் சான்றாக, இங்குள்ள தூண்களில் மீன் சின்னம் பொறிக்கப்பட்டுள்ளது. 

இந்தக் கோயிலின் தலவிருட்சம் வில்வ மரம்.

இத்தலத்தின் மற்றொரு சிறப்பு... சிவனுக்கு எதிரே உள்ள நந்தீஸ்வரரின் 
ஒரு கண் சிவனைப் பார்த்தவாறும், மற்றொரு 
கண் அன்னபூரணியைப் பார்த்தவாறும் தலைசாய்த்து அமைந்திருக்கிறது. 

மேலும், இத்திருத்தலத்தின் கன்னி மூலையில் பிள்ளையாரும், வாயு மூலையில் வள்ளி- தெய்வானை சமேதராக முருகனும் அமைந்து உள்ளனர். 

மேலும், ஈசான்ய மூலையில் பைரவர் உள்ளார். 

அக்னி மூலையில் மடப்பள்ளி அமைந்திருக்கிறது. 

இந்தத் தலத்தில் அமைந்துள்ள கொடி மரத்தின் அடிப்பாகம் தாமரைப் பூ போன்ற வடிவமைப்புடன் உள்ளது.

எங்கும் இல்லாத வகையில் இத்திருத்தலத்தில்,குபேர சனீஸ்வரர் என்ற பெயரில் 
சனி பகவான்தனித்து அருள்பாலிக்கிறார்.

நந்திதேவரைப் போன்று இவரும்,  தன் தலையைச் 
சற்றே சாய்த்தவாறு அருட்கோலம் கொண்டிருக்கிறார். 

இவர் சந்நிதியின் அருகில், வற்றாத நூபுரகங்கை தீர்த்தக் கிணறும் உள்ளது. 

மேலும், சண்டிகேஸ்வரர் தெற்கு பார்த்து, காளை வாகனத்தில் அமர்ந் திருப்பது, வேறு சிவாலயங்களில் காண்பதற்கரிய சிறப்பம்சம்! 

ஆலயத்தைச் சுற்றியுள்ள கல்தூண்களில் பெருமாள், ஹனுமான், நாகம்மாள் 
எனப் பல தெய்வங்கள் வடிவமைக்கப்பட்டிருக்கின்றன. 

இங்கு தென் திசை நோக்கிய குருபகவானும், சிவனுக்கு நேர் எதிராக வலதுபுறம் சூரியனும், இடதுபுறம் சந்திரனும் அமைந்துள்ளார்கள்.

இத்திருத்தலத்தில் அன்னபூரணி அம்பிகை, காலபைரவர், சண்டிகேஸ்வரர், நடராஜர் மற்றும் குபேர சனீஸ்வர பகவான் அனைவரும் தென் திசை நோக்கி அமைந்திருப்பது மற்றொரு தனிச் சிறப்பாகும்.

தொழிலில் நஷ்டம் அடைந்தவர்கள், 
தேய்பிறை அஷ்டமி அன்று காலபைரவருக்கு வெள்ளைப் பூசணிக்காய் ஒன்றை (தடியங்காய்) இரண்டாகப் பிளந்து, வெள்ளை மிளகு 108 எடுத்து பாதியாகப் பிரித்து பூசணிக்காயில் வைத்து, இலுப்பை எண்ணெய் ஊற்றித் தீபம் ஏற்றினால், தொழில் விருத்தியாகும் என்பது நம்பிக்கை.

இதுதவிர, திருமண வரம் வேண்டிவரும் பெண்கள், பிரதோஷ நாளில் 
எலுமிச்சை மாலையை அன்னபூரணியம்மாளுக்குச் சூடி, சுவாமியை தரிசித்துவிட்டுச் சென்றால், நல்ல வரன் அமையும். 

அதேபோன்று, ஆண்கள் தொடர்ந்து 
3பிரதோஷங்களுக்கு 
இங்கு வந்து, அன்னபூரணி அம்மைக்கு பூமாலை சமர்ப்பித்து வழிபட்டுச் சென்றால், விரைவில் திருமண மாலை தோள்சேரும். 

குழந்தை வரம் இல்லாதவர்கள் இளநீர் வாங்கி வந்து, அபிஷேகம் செய்தால் 
குழந்தை பாக்கியம் அமையும் என்பது நம்பிக்கை.

சனிப்பெயர்ச்சி, குருப்பெயர்ச்சி மற்றும் பௌர்ணமி பூஜை ஆகியவை இங்கு 
வெகு சிறப் பாகக் கொண்டாடப்படுகின்றன. 

இத்தலத்தில் ஒவ்வொரு நாளும் ஒருகால பூஜை நடைபெறுகிறது.

ஒவ்வொரு மாதமும் விசேஷ தினங்களில் சிறப்பு அலங்கார பூஜைகள் நடைபெறுகின்றன. 

ஸ்வாமி :ஸ்ரீகாசிவிஸ்வநாதர்

அம்பாள் :ஸ்ரீஅன்னபூரணி 
        
தலவிருட்சம் : வில்வமரம்

தலச் சிறப்பு: இரண்டாவது காசி எனச் சிறப்பிக்கப்படும் திருத்தலம்.

ஒரு கண்ணால் ஸ்வாமியையும், மற்றொரு  கண்ணால் அம்பாளையும் தரிசிக்கும் பாவனையில் நந்தி தலைசாய்த்து அமைந்த க்ஷேத்திரம். 

காளை மீது அமர்ந்த சண்டிகேஸ்வரரும், குபேர சனீஸ்வரரும் அருளும் திருக்கோயில் இது.

பிரார்த்தனைச் சிறப்பு: தொழில் நஷ்டம் நீங்க தேய்பிறை அஷ்டமி வழிபாடு, கல்யாண வரம் பெற அன்னபூரணிக்கு எலுமிச்சை மாலை சமர்ப்பித்து செய்யும் பிரார்த்தனை, பிரதோஷ தரிசனம், குழந்தை வரம் தரும் இளநீர் அபிஷேகம் ஆகியவை இந்தத் தலத்தில் நிகழும் சிறப்புப் பிரார்த்தனைகள். 

வழித்தடம்: சாத்தூரிலிருந்து சங்கரன்கோவிலுக்கு ஏழாயிரம் பண்ணை வழியாகச் செல்லும் சாலையில் சுமார் 22 கி.மீ தொலைவில் உள்ளது இத்தலம். 

சிவகாசியிலிருந்து சங்கரன்கோவிலுக்குச் செல்லும் சாலையில் 
20 கி.மீ தொலைவில் 
உள்ளது குகன்பாறை. 

அங்கிருந்து கிழக்குப்புறமாக 
3 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது.

கோயில் திறந்திருக்கும் நேரம்:காலை  6 மணியிலிருந்து 12 மணி வரை; மாலை 4 மணியிலிருந்து 7.30 மணி வரை. விசேஷ நாட்களில் கூடுதலான நேரம் திறந்திருக்கும்.

ஓம் நமசிவாய 
படித்து பகிர்ந்தது 
இரா இளங்கோவன் 
நெல்லிக்குப்பம். 

தம்பதி ஒற்றுமைக்கு...கும்பகோணம் திருப்பனந்தாள் திருலோக்கி சிவன்



குரு பார்க்க கோடி நன்மை என்பார்கள். வேலை கிடைக்க, திருமணம் நடக்க, குழந்தைப் பேறுக்கு, புகழ் கிடைக்க குரு பகவானின் அருள் வேண்டும். வாசகர்கள் அவரது அருளைப் பெறும் வகையில் இங்கு குரு கோயில்கள் இடம் பெற்றுள்ளன.

தம்பதி ஒற்றுமைக்கு...


கும்பகோணம் திருப்பனந்தாள் அருகிலுள்ள திருலோக்கி (ஏமநல்லுார்) சிவனை வழிபட்டால் தம்பதி ஒற்றுமை சிறக்கும். சிவலோகம், வைகுண்டம், சத்திய லோகம் என மூவுலகமும் வழிபட்டதால் இத்தலம் 'திருலோக்கி' எனப்பட்டது. குருபகவான்

தனக்கு ஏற்பட்ட சாபத்தால் பலத்தை இழந்தார். அதற்கு பரிகாரமாக இங்கு வழிபட்டு சிவனருளால் சாபம் நீங்கியது. குரு நன்மை அடைந்த தலம் என்பதால் 'ஏமநல்லுார்' எனப்பட்டது. 'ஏமம்' என்பது குருவின் பெயர்களில் ஒன்று.
இங்குள்ள சுவாமியின் பெயர் சுந்தரேஸ்வரர். அம்மனின் பெயர் அகிலாண்டேஸ்வரி. குடும்பத்தில் கருத்து வேறுபாடு உள்ளவர்கள் வியாழன் அன்று குருபகவானுக்கு தேனால் அபிேஷகம் செய்ய பிரச்னை மறையும். இங்கு வாழ்ந்த தர்மன் என்பவரின் மகன் பேசும் சக்தியற்று இருந்தான்.

குருபகவானுக்கு தேன் அபிஷேகம் செய்து பேசும் ஆற்றல் பெற்றான். பிருகு முனிவர் இங்கு வழிபட்டே நற்கதி அடைந்தார். ராஜேந்திரசோழனின் மனைவி திரிலோக்கியமாதா திருப்பணி செய்த தலம் இது.


நீங்கதான் நம்பர் 1


சிவனுக்கு முன் நந்தி இருக்கும். ஆனால் தட்சிணாமூர்த்திக்கு முன் நந்தி இருக்கும் தலம் மயிலாடுதுறை வள்ளலார் கோயில். இங்கு வழிபட்டால் நீங்கள் ஈடுபடும் துறையில் நம்பர் ஒன்னாக திகழ்வீர்கள். சகல பாக்கியங்களையும் வாரி வழங்குபவராக இங்கு சிவன் இருப்பதால் 'வள்ளலார்' என அழைக்கப்படுகிறார். அம்மனின் பெயர் ஞானாம்பிகை.

முன்பு சிவனை சுமக்கும் பேறு பெற்றதால் தானே உயர்ந்தவர் என கர்வம் கொண்டது நந்தி. பாடம் புகட்ட அதன் முதுகில் தன் சடை முடியை வைத்தார் சிவன். பாரம் தாங்க முடியாமல் தவித்த நந்தி தவறை உணர்ந்து இங்குள்ள மேதாகுருவை வழிபட்டு பலன் பெற்றது. தேவகுரு பிரகஸ்பதி, சாமுண்டீஸ்வரி, பிரம்மா, மகாவிஷ்ணு இங்கு வழிபாடு செய்துள்ளனர். தன் வளர்ப்பு மகளான சகுந்தலைக்கு ஏற்பட்ட குருதோஷம் தீர கண்வ முனிவர் வழிபட்டார். வியாழன், குரு ஓரைகளில் வழிபடுவது நல்லது.


அரசியலில் ஜொலிக்க...


காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் அருகிலுள்ள தலம் புலிவனம். இங்குள்ள தட்சிணாமூர்த்தியை வழிபடுவோர் மக்களுக்கு சேவை செய்வதோடு அரசியல் வாழ்வில் ஜொலிப்பார்கள். மத்யந்த முனிவரின் மகனான மழன், தன் தந்தையின் ஆலோசனையால் சிவனை வேண்டி தவமிருந்தார். தினமும் அதிகாலையிலேயே பூக்களை பறிப்பதற்காக புலியின் கால்களை வேண்டிப் பெற்றார்.

அதனால் புலிக்கால்முனிவர் (வியாக்ரபாதர்) எனப் பெயர் பெற்றார். இவர் வழிபட்டதால் இத்தலம் 'புலிவனம்' என்றும், சுவாமி 'வியாக்ரபுரீஸ்வரர்' என்றும் பெயர் பெற்றனர். அம்மனின் பெயர் அமிர்த குஜலாம்பாள். இங்கு தட்சிணாமூர்த்தியின் அருகில் வியாக்ரபாதர், பதஞ்சலி முனிவர் உள்ளனர். முயலகன், புலியின் மீதும் சுவாமியின் திருவடி உள்ளது. தட்சிணாமூர்த்தி, சிவன், அம்மனுக்கு அபிேஷகம் செய்யும் அரசியல்வாதிகள் மக்கள் செல்வாக்குடன் பதவியை அடைவர். அரசு வகையில் நன்மை காண்பர்.


இழந்ததை பெற...

நாகப்பட்டினம் - திருத்துறை பூண்டி செல்லும் வழியில் உள்ள தேவூர் சிவனை தரிசித்தால் இழந்த பணம், பதவி, உபதேசம் திரும்ப கிடைக்கும். ராவணனிடம் செல்வத்தை இழந்த குபேரனும், விருத்தாசுரனால் பதவியை இழந்த இந்திரனும் இங்கு வழிபட்டே இழந்ததை பெற்றனர். இங்குள்ள சிவனிடம் உபதேசம் பெற வந்ததால் தட்சிணாமூர்த்தியின் திருவடியின் கீழ் முயலகன் இல்லை.

தேவர்களுக்கு அருள்புரிந்தவர் என்பதால் சுவாமிக்கு தேவபுரீஸ்வரர் என்று பெயர். அம்மனின் பெயர் மதுரபாஷினி. இக்கோயிலை தரிசிக்க வந்த தேவலோக வாழைமரம் (வெள்வாழை) இங்கேயே தங்கியது. தலவிருட்சமான இதற்கு தண்ணீர் ஊற்றுவதில்லை. தானாகவே வளர்கிறது. மூவரால் பாடல் பெற்ற இத்தலத்தில் சூரியன், கவுதம முனிவர், சேக்கிழார் வழிபாடு செய்துள்ளனர். பிற்கால பாண்டியர்கள், விஜயநகர மன்னர்கள் திருப்பணி செய்துள்ளனர். கோட்செங்கச் சோழன் கட்டிய 72 மாடக்கோயில்களில் இதுவும் ஒன்று எனலாம். 
ஓம் நமசிவாய
 படித்து பகிர்ந்தது 
இரா இளங்கோவன் 
நெல்லிக்குப்பம். 

Wednesday, June 18, 2025

திருச்செங்கோடு அர்த்தநாரீசுவரர் செங்கோட்டு வேலவர் ஆதிகேசவப்பெருமாள்.

தேவாரப் பாடல் பெற்ற கொங்கு நாட்டுத் தலங்களில் ஒன்றான #திருச்செங்கோடு எனப்படும் #திருக்கொடி #மாடச்செங்குன்றூர்
#அர்த்தநாரீசுவரர் #பாகம்பிரியாள்
#செங்கோட்டு_வேலவர்
#ஆதிகேசவப்பெருமாள் திருக்கோயில்[209]

திருச்செங்கோடு அர்த்தநாரீசுவரர் கோயில் திருஞானசம்பந்தரால் தேவாரம் தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் கொங்கு நாட்டுத் தலங்களில் ஒன்றாகும். மூலவர் அர்த்தநாரீஸ்வரர், தாயார் பாகம்பிரியாள். செங்கோட்டு வேலவர் என முருகனுக்கு தனி சந்நிதி அமைந்துள்ளது. இத்தலம் அமைந்துள்ள மலையானது ஒரு புறம் பார்க்கும் பொழுது ஆணாக தோற்றமளிக்கிறது. வேறு இடத்தில் பெண் போல தோற்றம் அளிக்கிறது. இத்தலத்தின் தீர்த்தம்- தேவதீர்த்தம் தலமரமாக இலுப்பை மரம் உள்ளது.

கோயில் அமைந்திருக்கும் மலை சிவந்த நிறமாக இருப்பதால் செங்கோடு என்று பெயர் பெற்றது. இந்த மலைக்கு நாகமலை, உரசகிரி, தெய்வத்திருமலை போன்ற மற்ற பெயர்களும் உள்ளன.
#மூலவர்: அர்த்தநாரீஸ்வரர்
#அம்மன்/தாயார்: பாகம்பிரியாள்
#தல விருட்சம் :இலுப்பை
#தீர்த்தம்: தேவதீர்த்தம்
#புராண பெயர்: திருக்கொடிமாடச் செங்குன்றூர்
#ஊர் :திருச்செங்கோடு
#மாவட்டம் :நாமக்கல்

அறுபத்திமூன்று நாயன்மார்களில் ஒருவரான விரல்மிண்ட நாயனார் பிறந்த பெருமை பெற்றது இத்தலம். சுமார் 1370 ஆண்டுகளுக்கு முன்னரே மரம், செடி, கொடிகள், மாடமாளிகைகள் நிறைந்ததாக இருந்ததால் கொடிமாடசெங்குன்றுர் என்றும், ரிஷிகள், தேவர்களின் இருப்பிடமாக இருந்ததால் திரு என்ற அடைமொழியையும் சேர்த்து திருக்கொடிமாடச்செங்குன்று}ர் என்று அழைக்கபட்டது. மேலும், ஆதிசேஷ பாம்பானது மேருமலையை பிடித்த போது காயம் ஏற்பட்டு சிந்திய ரத்தத்தில் மலை செந்நிறம் ஆனதால் இப்பெயர் வந்ததாகவும் கூறுவர். இந்த திருக்கொடிமாடச்செங்குன்றுர் காலப்போக்கில் இது மறுவி திருச்செங்கோடு என்று அழைக்கபடுகிறது.

தல வரலாறு :
  
முன்னொரு காலத்தில் பிருங்கி என்ற முனிவர் வாழ்ந்து வந்தார். அவர் ஒரு சிவ பக்தர். அவர் எப்பொழுது கைலாயம் வந்தாலும் சிவபெருமானை மட்டும் வலம் வந்து வழிபடுவார். பார்வதி தேவியை வழிபடமாட்டார். சிவனும் பார்வதியும் ஒன்றாக இருந்தாலும் அவர் வண்டு வடிவம் எடுத்து சிவனை மட்டும் சுற்றி வந்து வழிபடுவார். இதனால் கோபம் கொண்ட பார்வதி, சக்தியாகிய என்னை அவமதித்ததால் நீர் சக்தி இழந்து போவீர் என சாபமிட்டார். இதையறிந்த சிவன் பார்வதி தேவிக்கு தன் உடலின் இட பாகத்தை கொடுத்து சரி பாதியாக தேவியை தன்னுடன் இணைத்து சக்தி இல்லையேல் சிவம் இல்லை, சிவம் இல்லையேல் சக்தி இல்லை என்று அவருக்கு கூறினார். இதன் மூலமாக சிவனும் சக்தியும் ஒன்று தான் என்று உலகிற்கும் உணர்த்தினார். இவ்வாறு சிவனும் சக்தியும் இணைந்து உருவான வடிவம் தான் அர்த்தநாரீஸ்வரர் என்று அழைக்கபட்டது.

புராண வரலாறு:

ஆதி காலத்திலே ஆதி சேஷனுக்கும், வாயு பகவானுக்கும் இடையே உண்டான சண்டையில் யார் பெரியவன், வலியவன் என்ற வாக்குவாதத்தில், இருவரும் போர் புரிந்து கொண்டனர். இப்போரினால் உலகமெங்கும் பேரழிவுகள் உண்டாயின. இது போதாதென்று மேரு மலையின் உச்சியை பலம் கொண்ட மட்டும் ஆதிசேஷன் அழுத்திப் பிடிக்க, வாயுதேவன் அந்தப் பிடியினை தளர்த்திட வேண்டும் என்பற்கு இருவருக்கும் ஏற்படத் ஒப்பந்தம். அவ்வாறு நடந்த வேளையில், இவர்களது சண்டையால் உலகம் அழிந்து விடப்போகிறது எனும் பயத்தில் தேவர்கள் அனைவரும் திரண்டு வந்து நாகரை வணங்கி இந்தப் போரை நிறுத்துமாறு வேண்டிக் கொண்டனர். அவர்களது பேச்சிற்கிணங்க ஆதிசேஷனும் தன பிடியினை சற்று தளர்த்த, இதுதான் சமயம் என்று வாயு அடித்த வேகத்தில் மேரு மலையின் ஒரு சிகரப் பகுதியும், ஆதிசேஷனின் ஒரு தலையும் பெயர்ந்து ஒன்றோடு ஒன்று மோதிக் கொண்டு தென்திசைப் பக்கமாக வந்து விழுந்தன.

இவ்வாறு ஆதிசேஷனின் தலையுடன் மோதிய வேகத்தில் அதன் இரத்தம் தோய்ந்து செந்நிற மலையாக மாறியது. இதுவே திருச்செங்கோடு மலையாக உள்ளது. இவ்வாறு பறந்து வந்து தென் திசையில் விழுந்த மேரு மலையானது, மூன்று பாகங்களாக சிதறி ஒன்று திருவண்ணாமலையாகவும், மற்றொன்று இலங்கையாகவும், இன்னொன்று திருசெங்கோடாகவும் உருமாறியது.

உமையவள் இடப்பாகம் பெற்ற வரலாறு: 

கைலாசபுரியில் இருந்து தங்களை பிரிந்து சென்ற முருகப் பெருமானை நினைத்து உள்ளம் வருந்திய நிலையில் இருந்த சிவபிரான், தன் மனைவி பார்வதி தேவியை அழைத்துக் கொண்டு இயற்கையைக் கண் குளிரக் கண்டு, தன் மனதை ஆறுதல் படுத்திக் கொள்ள எண்ணினார். அவ்வாறு சென்று கொண்டிருக்கையில், தன் கணவருடன் உடன் செல்லும் களிப்பின் மிகுதியால், தன் திருக்கரங்களால், பெருமானது இரு கண்களையும் விளையாட்டுத் தனமாய் மூடி விட்டார். இதனால் சூரியன் ஒரு கண்ணும், சந்திரன் மறு கண்ணுமாய் விளங்கும் சிவபெருமானது கண்களை மூடியதன் பலனாய் உலகமே இருளில் மூழ்கியது. இதனைக் கண்ட தேவர்கள், முக்கண்ணனை சந்தித்து இவ்வாறு பார்வதி தேவி தங்களது கண்களை மூடிய காரணத்தால் உலகில் பல்வேறு உயிரினங்கள் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகிய காரணத்தால், உனக்கு பாவம் சேர்ந்தது. அந்த பாவத்தை பூவுலகில் பிறந்து, கேதாரம், காசி, காஞ்சிபுரம் போன்ற க்ஷேத்திரங்களில் தவம் மேற்கொள்ள நான் உன்னை வந்து சந்தித்து என்னுடன் அழைத்துச் செல்வேன் என கூறியருளினார். இதனால் வருத்தமுற்ற பார்வதி தேவி தனித்தனி உருவாய் உள்ளதாலேயே இத்தனை கஷ்டங்களும், ஆகையால் இறைவன் சொல்லுக்கிணங்க கேதாரம், காசி, காஞ்சி சென்று எல்லா இடங்களிலும் தவம் புரிந்தார்.

இவ்வாறாக காஞ்சியில் மணலைக் கூட்டி சிவலிங்கள் செய்து அதையே சிவபிரானாக எண்ணி தவமியற்றும் வேளையில் பெரு வெள்ளம் வந்தது. எங்கே தன் மணல் லிங்கமும் தண்ணீரோடு சென்று விடுமோ என பயந்து அதனைக் கட்டி அணைத்துக் கொண்டார். இக்காட்சியைக் கண்ட சிவபிரான் மனமிரங்கி கருணையுடன் வேண்டும் வரம் கேள் என்றார் உமையிடம். உலக நாயகி, சிவபெருமானிடம் தங்களது திருமேனியில் இடப் பாகம் தந்தருள வேண்டும் என்று கேட்டார். அதற்கு, நீ எனது கண்களை மூடிய பாவத்தினை இந்த காஞ்சியில் தவம் புரிந்ததால் நீங்கப் பெற்றாய். திருவண்ணாமலைக்குச் சென்று அங்கு தவம் மேற்கொள்வாயாக எனக் கூறினார்.

அங்கு தவமிருந்த தேவியிடம், உனது எண்ணம் அறிந்தேன், ஆனாலும், நிறைவாக நீ செந்நிற மலையான திருச்செங்கோடு சென்று தவமியற்ற எனது இட பாகத்தை வழங்கி அருளுவேன் என்று கூறிச் சென்றார்.

🛕 இதனை நிறைவேற்ற திருச்செங்கோடு சென்று பல காய் கனிகளுடனும், பல்வேறு பூஜை பொருட்களுடனும் புரட்டாசி மாதம், வளர்பிறை, அஷ்டமி திதியில் கேதார கௌரி விரதம் தொடங்கினார் அன்னை. புரட்டாசி மாதம், தேய்பிறை சதுர்த்தியன்று தேவியின் முன்னே தோன்றி, அன்னையின் தவத்தை மெச்சி, தனது இடபாகத்தை பார்வதி தேவிக்கு கொடுத்தருளினார். இத்திருத்தலத்தில் கேதார கௌரி விரதம் 21 நாட்கள்கொண்டாடப்பட்டு, புரட்டாசி அமாவாசையன்று எழுந்திருத்தும் விழா வெகு சிறப்பாக நடைபெறும்.

பிருங்கி முனிவர் வழிபட்ட வரலாறு:

ஒரு சமயம் திருக் கைலாயத்தில் பிரம்மன், விஷ்ணு, தேவர்கள் என அனைவரும் புடை சூழ, பரமசிவன் பார்வதி ஒன்றாய் வீற்றிருந்தனர். அனைவரும் சக்தி சிவன் என இருவரையும் வணங்கிய வேளையில் பிருங்கி முனிவர் மட்டும் சக்தியை விடுத்து சிவனை மட்டும் வணங்கிச் சென்றார். இதனைக் கண்டு மனம் வருந்திய உமையவள், தன் பதியிடம் தன் மன வருத்தத்தைக் கூறினார். பார்வதி தேவியின் மன வேதனையை புரிந்து கொண்ட சிவபெருமான், பிருங்கி முனிவரிடம் சக்தி இல்லையேல் சிவமில்லை, சிவமில்லையேல் சக்தி இல்லை என்ற உண்மையை பிருங்கி மகரிஷிக்கு எடுத்துரைத்தார். தன் தவறை உணர்ந்த மகரிஷி, அங்கேயே தங்கி அம்மையப்பனுக்கு சேவை செய்து கொண்டுள்ளார்.

தேர்க்கால் இடர் தவிர்த்து ஊமை பேசிய வரலாறு:
 
பல காலங்கள் முன்பு கொங்கு நாட்டில் காடம்பாடி எனும் ஊரில் பாததூளி, சுந்தரம்தம்பதியர் சிவ பக்தகளாய் வாழ்ந்து வந்தனர். இவர்களிடத்தில் எல்லா செல்வங்களும் நிறைந்து காணப்பட்டாலும், பிள்ளைச் செல்வம் இல்லாத காரணத்தால் மிகவும் மன வருத்தத்துடன் இருந்தனர்.

 பெரியவர்களின் ஆலோசனைப் படி இந்த திருச்செங்கோடு திருத்தலம் வந்து இத்தல இறைவனை வேண்டி வணங்கிட, இத்தம்பதியினருக்கு சந்தான பாக்கியம் உண்டானது. அந்தக் குழந்தைக்கு மூன்று வயது ஆகியும் பேசும் திறனற்று இருந்தது. இதனைக் கண்டு மனம் வெதும்பிய பெற்றோர், ஈசன் அருளால் கிடைத்த பிள்ளையை ஈசனிடமே விட்டு விடுவோம் என்றெண்ணி திருச்செங்கோடு திருத்தலம் வந்தடைந்தனர். 

இதனிடையே ஏமப்பள்ளி என்னும் ஊரில், எல்லா நற்குணங்களுடன் கூடிய துறவின் மேல் விருப்பமுள்ள, சிவ பக்தன் வேலப்பன் என்பவர் வாழ்ந்து வந்தார். வேலப்பனது கனவில் வந்த நமசிவாயம், தம்முடனே வந்திருந்து தமக்குப் பணிசெய்து வாழப் பணித்தார் சிவபிரான். அதனை ஏற்று சிவனடியாராகவே வாழ்ந்து கொண்டிருந்தார் வேலப்பன். இவர் பல தொண்டுகள் புரிந்தும், இறைவனுக்கு சாமரம் வீசி திருத்தொண்டு புரிந்து வந்தபடியால் அவருக்கு சாமர வேலைப்ப பூபதி என்ற பெயரும் உண்டானது.

இந்நிலையில், இத்திருத்தலம் வந்தடைந்த காடம்பாடி தம்பதியினர், தம் குழந்தையை இறைவனிடமே ஒப்படைக்க எண்ணியபடி, வைகாசி விசாகத்தன்று தேரோட்டம் நடக்கும் போது தேர் காலில் குழந்தையை வைத்து விட்டனர். தேரை இழுத்து வந்து கொண்டிருந்த வேலப்பன், இந்த தம்பதியினரின் செயலைக் கண்டு அதிர்ச்சியுற்று இக்குழந்தை மாய்ந்தால் என் உயிரும் சேர்ந்து போகட்டும் என்று வேண்ட, அதிசயிக்கத் தக்க வகையில் ஓடி வந்து கொண்டிருந்த தேர் சக்கரம் பாலகனின் தலையைத் தாண்டிச் சென்றது. பேசாத குழந்தையும் இதழ் விரித்து பேசத் தொடங்கியது.

திருஞானசம்பந்தர் அருளிய திருநீலகண்டப் பதிகம்: ஞானசம்பந்தர் பெருமான் திருச்செங்கோடு வந்து சில காலம் தங்கியிருந்து சிவதொண்டு புரிந்து கொண்டிருந்தார். அப்போது ஏற்பட்ட பருவ மாற்றத்தால், மக்களை குளிர் சுரம் பீடித்துக் கொண்டது. இதனைக் கண்டு மனம் வாடிய ஞான சம்பந்தர், இந்த சுரமென்னும் உடல் உபாதை நீங்கிட இத்தலத்திலேயே பெருமான் முன்பு பதிகம் பாடினார். இத்தலத்தில் ஞானசம்பந்தரால் பாடப்பட்ட இப்பதிகத்தை இறையன்புடன் ஓதி வந்தால் தீவினையால் வரும் நோய்கள் நம்மை பாதிக்காது என்பது தெய்வீக நம்பிக்கை.

"அவ்வினைக் கிவ்வினையாம் என்று சொல்லும் அஃதறிவீர்
உய்வினை நாடாதிருப்பதும் உந்தமக்கு ஊனமன்றே
கைவினை செய்து எம்பிரான் கழல் போற்றுதும் நாமடியோம்
செய்வினை வந்தெனைத் தீண்டப்பெறா திருநீலகண்டம்!!
                 __திருஞானசம்பந்தர்

மலை அமைப்பு :
  

திருச்செங்கோட்டில் அமைந்துள்ள மலை சிவலிங்க தோற்றத்துடனும், வடமேற்கில் இருந்து பார்க்கும்போது பசுவின் தோற்றத்துடனும், மேற்கு பகுதியில் இருந்து பார்க்கும் போது ஆண் உருவம் படுத்து இருப்பதுபோலவும், தென்மேற்கு பகுதியில் இருந்து பார்க்கும்போது பெண் படுத்திருக்கும் தோற்றமும் அமைந்துள்ளது. அருள்மிகு அர்த்தநாரீஸ்வரர் ஆலயம், அருள்மிகு ஆதிகேசவபெருமாள் ஆலயம், அருள்மிகு செங்கோட்டுவேலவர் ஆலயம் ஆகிய மும்மூர்த்திகளின் சன்னதிகளையும் தனிதனியாய் இந்த மலையின் மீது ஆலயமாக அமைந்துள்ளது. தென்பகுதியில் கஜமுக பிள்ளையாரும், வடபகுதியில் ஆறுமுக சுவாமி ஆலயமும் அமைந்துள்ள இடத்திலிருந்து மலையின் முதல் படியானது தொடங்குகிறது.

கோவில் அமைப்பு :
  
1200 திருபடிகள் வழியாக சென்றால் முதலில் செங்குந்தர் மண்டபத்தையும், அதனை அடுத்து காளத்திசுவாமிகள் மண்டபம், திருமுடியார் மண்டபம் மற்றும் தைலி மண்டபத்தையையும் அடையலாம். தைலி மண்டபத்தில் மேற்குபுறத்தில் 7 அடி அகலமும் 4 அடி உயரமும் கொண்ட நந்தி ஒன்று ராஜகோபுரத்தை பார்த்தவண்ணம் உள்ளது. இவ்விடத்தில் 60 அடி நீளத்தில் ஆதிசேடன் ஐந்து தலைகளுடன் மிக பிரமாண்டமாய் அமைந்துள்ளது.

  மலையின் உச்சிக்குக் சென்றவுடன் வடதிசையில் 5 நிலை ராஜ கோபுரம் நம்மை வரவேற்கிறது. கோவிலின் மதில் சுவர் கிழக்கு மேற்காக 260 அடி நீளமும், வடக்கு தெற்காக 170 அடி நீளமும் கொண்டதாக அமைந்துள்ளது. மேற்கு கோபுரம் 3 நிலைகளுடன் காட்சி அளிக்கிறது. வடக்கு கோபுர வாயில் வழியாக நுழைந்து 20 படிகள் கீழிறங்கி வெளிப் பிரகாரத்தை அடையலாம்.

  அர்த்தநாரீஸ்வரர் என்று அழைக்கப்படும் மூலவர் சுமார் 6 அடி உயரம் உள்ள உளி படாத சுயம்புத் திருமேனியாக பாதி ஆணாகவும் பாதி பெண்ணாகவும் மேற்கு நோக்கி காட்சி அளிக்கிறார். கோவிலில் வடக்குப் பிரகாரத்திலுள்ள கிழக்கு நோக்கி அமைந்த செங்கோட்டு வேலவர் சந்நிதி உள்ளது. படிக்கட்டுகள் வழியே மலைக்குச் செல்லும் வழியில், பாறையில் செதுக்கப்பட்டுள்ள நாகர் சன்னதி மிகவும் பிரசித்தி பெற்றது.

நாகர் சிலை :
  
மலை அடிவாரத்திலிருந்து மலைக்கு மேலே படி வழியாக செல்லும் போது நாம் 60 அடி நீளத்தில் மிக பிரம்மாண்டமாய் ஐந்து தலைகளுடன் அமைந்துள்ள ஆதிசேஷன் உருவத்தை காணலாம். பாறையிலேயே செதுக்கப்பட்டுள்ள இந்த நாகர் உருவமே நாகர்மலையின் முதலிடம் ஆகும். இந்த நாகருக்கு மக்கள் குங்குமம் தூவி, தீப ஆராதணை செய்து வழிபடுகின்றனர். ராகுதோஷம், நாகதோஷம், காலசர்பதோஷம், களத்திரதோஷத்தால் பாதிக்கப்பட்டவர்கள் இங்கு வந்து வழிபாடு செய்கின்றனர். முன்னர் மக்கள் படி வழியாக சென்று நாகதெய்வத்தை வழிபட்டனர்.

செங்கோட்டுவேலவர் சன்னதி :
  
முருகன் திருக்கைலையில் பழத்தினால் ஏற்பட்ட குழப்பத்தினால் கோபம் கொண்டு பழனிக்கு வந்தார். அதன்பின் அங்கிருந்து இத்தலத்திற்கு வந்து செங்கோட்டுவேலவர் என்ற பெயருடன் காட்சி தருகிறார். முருகன் இத்தலத்தில் உலகில் வேறு எங்கும் இல்லாதவண்ணம் வலது கரத்தில் சக்தி வேலாயுதத்தையும் இடது கரத்தில் சேவலையும் எடுத்து இடுப்பில் அனைத்த வண்ணம் கம்பீரமாக காட்சி தருகிறார். இங்கு செங்கோட்டுவேலவருக்கு தனி சன்னதியும் உள்ளது. இந்தக் கோவிலில் வடக்குப் பிரகாரத்திலுள்ள கிழக்கு நோக்கி அமைந்த செங்கோட்டு வேலவர் சந்நிதி மிகவும் புகழ் பெற்றது. தினமும் உச்சிக்காலத்தில் மட்டும் இவருக்கு அபிஷேகத்துடன் முதல் பூஜை நடக்கிறது.

அர்த்தநாரீஸ்வரர் சன்னதி :
  

மூலவர் அர்த்தநாரீஸ்வரர் சுமார் 6 அடி உயரம் உள்ள உளி படாத சுயம்புத் திருமேனியாக பாதி ஆணாகவும் பாதி பெண்ணாகவும் மேற்கு நோக்கி காட்சி அளிக்கிறார். தலையில் ஜடாமகுடம் தரித்து, பூர்ண சந்திரன் சூடி, கழுத்தில் ருத்ராட்சம், தாலி அணிந்து, கையில் தண்டாயுதம் வைத்திருக்கிறார். அம்பிகையின் அம்சமாக உள்ள இடது பாக காலில் கொலுசு உள்ளது. சிவன், சக்தி சேர்ந்த வடிவம் என்பதால் வலதுபுறம் வேட்டியும், இடப்புறம் சேலையும் அணிவிப்பர். மூலவரின் காலடியில் இருக்கும் தேவதீர்த்தம் எக்காலத்திலும் வற்றாமல் சுரந்து கொண்டே இருக்கும். மூலவரை தரிசிக்க வருபவர்களுக்கு இந்த தீர்த்தம் வழங்கப்படுகிறது.

கோவில் சிற்ப கலைகள் :
 
 அர்த்தனாரீஸ்வரர் திருக்கோயில் சிறந்த சிற்ப்பகலைக்கு ஒரு உதாரணமாக திகழ்கிறது. இங்குள்ள கற்சிலைகளும், சிற்ப்பங்களும், பெரும்பாலும் சேர, சோழ, பாண்டியர்களின் காலத்தில் அமைக்கப்பட்டதாக கல்வெட்டுகளின் மூலம் அறியப்படுகிறது. இக்கோயிலில் அமைந்துள்ள மண்டபங்களிலும், தூண்களிலும் வடிக்கப்பட்டுள்ள அழகிய சிற்ப்ப வேலைபாடுகளும் மற்றும் கோயிலை சுற்றி அமைந்துள்ள அற்ப்புதமான கற்சிலைகளும் காண்பவர் மனதை கொள்ளை கொள்ளும்வண்ணம் அமைந்துள்ளன.

  விமானத்தில் (மேற்கூறையில்) எட்டு கிளிகள் எட்டு திக்கும் தலைகீழாக இருப்பது போல் ஒரே கல்லினால் கண்கொள்ளா காட்சியாக அமைக்கப்பட்டுள்ளது. இதன் நடுவே அமைந்துள்ள கல்லினால் ஆன தேங்காயை சுற்றினால் அது சுற்றும் வகையில் மிகவும் அழகிய கலைநுட்பத்துடனும், மிகுந்த அறிவுதிறனுடனும் அமைக்கப்பட்டுள்ளது.

  வேலவனை பாதுகாக்கும் இரு துவாரபாலகர்கள் சிலைகளை உற்று நோக்கினால் அதில் உள்ள கற்சிலை மணிகள் கண்கொள்ளா காட்சியாகும். குறவர் நடனகலையும், சிலந்தியை தேள் கவ்வுவது போல் அமைந்துள்ள சிலை வடிவத்தையும் கலைக்கண்ணோட்டத்தோடு நோக்கின் அதன் பெருமையை அறியலாம். அர்த்தநாரீஸ்வரர் நேரெதிர் உள்ள நிறுத்த மண்டபத்தில் அமைந்த தூண்களில் காளி, ரதிமன்மதன், போன்ற சிற்ப்பங்கள் மிகவும் கலை நுணுக்கத்துடன் அமைந்துள்ளன.

  திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் கோவில், தமிழக சிற்பக் கலைத்திறனுக்கு ஒரு சிறந்த உறைவிடமாகும். கோவிலின் வெளிப்பிரகாரத்தில் குதிரை அல்லது யாளி மீது உள்ள வீரர்களைத் தாங்கிய சுமார் 30 ஒற்றைக் கற்று}ண்கள் சிற்ப வேலைப்பாடுமிக்கவை.

சிறப்பம்சங்கள் :
★ இங்கு சிவனும் பார்வதியும் சேர்ந்து அர்த்தநாரீஸ்வரராக நவபாஷனா சிலையாக உள்ளார்.
× மரகத லிங்கம் இங்கு மற்றொறு சிறப்பு...

அர்த்தநாரீஸ்வரர், மாதொருபாகர் என்று அழைக்கப்படும் இத்தல மூலவர், சுமார் 6 அடி உயரம் உள்ள உளி படாத சுயம்புத் திருமேனியாக பாதி ஆணாகவும், பாதி பெண்ணாகவும் மேற்கு நோக்கி காட்சி அளிக்கிறார். தலையில் ஜடாமகுடம் தரித்து, பூர்ண சந்திரன் சூடி, கழுத்தில் ருத்ராட்சம், தாலி அணிந்து, கையில் தண்டாயுதம் வைத்திருக்கிறார். அம்பிகையின் அம்சமாக உள்ள இடது பாக காலில் கொலுசு உள்ளது. சிவன், சக்தி சேர்ந்த வடிவம் என்பதால் வலதுபுறம் வேட்டியும், இடப்புறம் சேலையும் அணிவிக்கிறார்கள்.

மூலவரின் காலடியில் இருக்கும் தேவதீர்த்தம், எக்காலத்திலும் வற்றாமல் சுரந்து கொண்டே இருக்கும். மூலவரை தரிசிக்க வருபவர்களுக்கு இந்த தீர்த்தம் வழங்கப்படுகிறது. வைகாசி விசாகத்தன்று இவருக்கு திருக்கல்யாண வைபவம் நடக்கும். அப்போது அர்த்தநாரீஸ்வரருக்கு அர்ச்சகர்கள் தாலி அணிவிப்பார்கள். அம்பிகை தனியே இல்லாததால் இவ்வாறு செய்கிறார்கள்.

அடிவாரத்திலிருந்து சுமார் 650 அடி உயரத்திலுள்ள இந்த மலைக் கோவிலுக்குச் செல்லும் பாதை, 1200 படிகளைக் கொண்டுள்ளது. கிழக்கு மேற்கில் 262 அடி நீளமும், தெற்கு வடக்காக 201 அடி நீளமும் கொண்டது இந்தக் கோவில். இதன் வடக்கு வாசல் ராஜகோபுரம் கிட்டத்தட்ட 84.5 அடி உயரத்துடன் ஐந்து நிலைகளுடன் அமைக்கப்பட்டுள்ளது. கிழக்கு, மேற்கு, தென் திசைகளிலும் இக்கோவிலுக்கு வாசல்கள் உண்டு. அவற்றுள் தென் திசை வாசலுக்கு மட்டும் சிறுகோபுரம் உள்ளது.

செங்கோட்டு வேலவர், அர்த்தநாரீஸ்வரர், ஆதிகேசவப் பெருமாள் என மூன்று தெய்வங்களின் சன்னிதிகள் கொண்டது இந்த ஆலயம். மூலவர் அர்த்தநாரீஸ்வரர் சன்னிதி மேற்கு நோக்கியுள்ளது. ஆனால் சன்னிதிக்கு முன் வாசல் இல்லை. மாறாக ஒன்பது துவாரங்கள் கொண்ட கல்லாலான பலகணி இருக்கிறது.

அர்த்தநாரீஸ்வரர் சன்னிதியின் முன் மண்டபத்தில் ஆமை மண்டபம் ஒன்று உள்ளது. இக்கோவிலின் தூண்கள், மண்டபச் சுவர்கள்என அனைத்துப் பகுதிகளும் அழகிய சிற்ப வேலைப்பாடுகளைக் கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது. படிக்கட்டுகள் வழியே மலைக்குச் செல்லும் வழியில், பாறையில் செதுக்கப்பட்டுள்ள நாகர் சன்னிதி மிகவும் பிரசித்தி பெற்றது. நாக தோஷங்கள் நீங்குவதற்காக இங்கு பக்தர்கள் அதிக அளவில் வருகிறார்கள்.

ஓம் நமசிவாய 
படித்து பகிர்ந்தது
 இரா இளங்கோவன்
 நெல்லிக்குப்பம். 

பஞ்ச சபைகளில் இரண்டாம் சபை தாமிர சபை

பஞ்ச சபைகளில் இரண்டாம் சபை தாமிர சபை
"ஏனைவெண் கொம்பொடு மெழில் திகழ் மத்தமு
கூனல்வெண் பிறைதவழ் சடையினர் கொல்புலித் தோலுடையார்
ஆனினில் ஐந்துசந் தாடுவார் பாடுவா ரருமறைகள்
தேனில் வண்டமர்பொழிற் திருநெல்வேலி யுறை செல்வர்தாமே"

என திருஞானசம்பந்த பெருமானால் பாடபட்ட தாமிர சபை

இந்த சபை நெல்லையப்பர் கோவிலுனுள் இருப்பதாக சொல்லபட்டாலும் அது உண்மையில் அமைந்திருக்குமிடம் அங்கிருந்து சற்று தொலைவில் அமைந்திருக்கும் செப்பறை எனும் ஆலயத்தில்
ஆம் குற்றாலத்தில் சித்திரசபை தனித்தே இருப்பது போல் தாமிர சபையும் தனியே செப்பறை எனும் தலத்தில் தனித்து நிற்கின்றது

அந்த ஆலயம் உருவான வரலாறு சிவனருள் ஒன்றாலே நடந்தது சிவனே தான் நடராஜ கோலத்தில் தன்னை நிறுத்திய தலம் அது

அந்த வரலாற்றினை அறிதல் அவசியம்

நெடுங்காலத்துக்கு முன் சோழநாட்டு பக்கம் ஆண்ட சிங்கவர்மன் எனும் மன்னனுக்கு சிதம்பரம் உள்ளிட்ட பகுதிகளை ஆண்ட மன்னனுக்கு சிதம்பரம் நடராஜருக்கு  விக்ரஹம் செய்யும் ஆவல் எழுந்தது, உடனே தன் பிரதான சிற்பியிடம் பொறுப்பை கொடுத்தான்

அவன் மாபெரும் பக்தனாய் இருந்ததாலும் அந்நாளில் இந்த காரியங்கள் அவசியம் என்பதாலும் அதை செய்விக்க முனைந்தான்

நடராஜ தத்துவம் என்பது அகத்தியர், காரைக்கால் அம்மையார், பதஞ்சலி முனிவர், புலிக்கால் முனிவர் என எல்லோருக்கும் தென்னகத்தில் தமிழகத்தில் காட்டபட்ட பெரும் அதிசயம், அவர்கள் நடராஜ கோலம் எனும் ஆடல் கோலத்தை கண்டதே இந்த மண்ணில் என்பதால் எப்போதுமே இங்கு அந்த அதிசயத்தினை சிலையாக்கி வைப்பதில் எல்லா பக்தர்களுக்கும் ஆர்வம் அதிகம்

மன்னன் என்பதால் வாய்ப்பு அதிகமாயிற்று, செலவுகளை அவனே செய்வான் மேலாக எல்லாவற்றுக்கும் உத்தரவிடும் அதிகாரம் அவனிடமே இருந்தது

இதனால் ஒரு நடராஜ சிலை செய்ய உத்தரவிட்டான், ஐம்பொன்னால்  சிற்பி அப்படி  ஒரு சிலை செய்ய அது தாமிர சிலைபோலே காட்சியளித்தது

மன்னன் திருப்தி கொள்ளமால் இன்னொரு சிலை சுத்த தங்கத்தால் செய்ய மறுபடி உத்தரவிட்டான், பொன்னம்பலத்தில் பொன்னால் ஆன சிலை இருக்க வெண்டும் என கருதினான், சிற்பி அவ்வாறே செய்தும் கொடுத்தான்

அனால் மன்னன் கண்ணுக்கு அதுவும் தாமிர சிலைபோலானது,  தங்கமாக மின்னாமல் தாமிரமாக மின்னிய சிலையினை கண்டவன் ஆத்திரமடைந்து சிற்பி தன்னை ஏமாற்றியதாக  அவனை சிறையிலிட்டான்

மன்னன் கனவில் வந்த எம்பெருமான், இரண்டாம் சிலை சிதம்பரத்தில் இருக்கும்படியும் முதல் சிலையினை சிற்பியிடம் கொடுத்துவிடும்படியும், அது இருக்கவேண்டிய இடத்தை நாமே முடிவு செய்வோம் என சொல்லி மறைந்தார்

மன்னன் மனம் தெளிந்து இரண்டாம் சிலையினை சிதம்பரத்தில் வைத்தான், முதல் சிலையினை சிற்பியிடமே கொடுத்தான்

சிற்பி அதை என்ன செய்வது என தெரியாமல் திகைத்தபோது சிவனே கனவில் வந்து அந்த சிலையினை சுமந்து தெற்கு நோக்கி செல்லும்படியும், எங்கே அது மிக கனமாக இருக்குமோ அங்கே ஸ்தாபிக்கும் படியும் உத்தரவிட்டார்

அச்சிலை ஒருவர் எளிதில் சுமக்குமளவு பஞ்சு மூட்டை போலிருந்தது, சிற்பி சிவன் உத்தரவின் படி தெற்கு நோக்கி வந்து தாமிரபரணி கரையோரம் அமர்ந்தபோது அது கனத்தது, பின் அங்கே ஸ்தாபிக்கபட்டது

அதனை ஸ்தாபித்தவர் ராமவர்ம பாண்டியன் எனும் பாண்டிய சிற்றரசன், இவன் அரசவல்லிபுரம் அல்லது ராஜவல்லிபுரத்தில் தங்கி சிற்றரசனாக ராஜபரிபாலனம் செய்து கொண்டிருந்தான், பாண்டியன் என்பதால் மாபெரும் சிவபக்தன்

எந்த அளவுக்கு சிவபக்தன் என்றால் நெல்லையப்பரை தரிசிக்கமால் உணவு தொடாத அளவு மகா உன்னதமான சிவபக்தன்

அந்த மன்னனுக்கு சிவன் இட்ட உத்தரவில் இந்த ஆலயம் அமைக்கபட்டது, மன்னன் அந்த சிலையினை கண்டபோது சிவன் சிலம்பொலி எழுப்பி அங்கீகரித்தார் என்பது மெய்சிலிர்க்கும் செய்தி

இப்படி மிக மிக பழங்காலத்திலே அது தாமிர சிலையாக அது சிவனருளால் ஸ்தாபிக்கபட்டு தாமிர சபையாகவே நிலைத்தது

இந்த காலம் யுகங்களுக்கு முன்பானது மிக மிக பழங்காலத்தில் நடந்த திருவிளையாடல் அது

1221ம் ஆண்டு ஏற்பட்ட பெரும் வெள்ளத்தில் இந்த சிலை அடித்து செல்லபட்டது, ஆனால் சிவபெருமான் ஆரைஅழகப்ப முதலியார் எனும் அடியார் மூலம் அதை மீட்டெடுக்க செய்தார்

பின் சிதம்பரத்தில் தங்க தகடுகள் போல இங்கு செப்பு தகட்டு கூரை அமைக்கபட்டது, இன்று அது தாமிர சபையாக வீற்றிருக்கின்றது , பாண்டிய மன்னன் வீரபாண்டியன் இங்கு பல திருப்பணிகளை செய்துள்ளார்கள்

இன்னும் ஜடாவர்ம சுந்தரபாண்டியன் முதல் எல்லா பாண்டியர்களும் அங்கு வணங்கியிருக்கின்றார்கள்

இந்த ஆலயம் அகத்திய முனி, திருமால், அத்திரி மகரிஷி என ஏகபட்டோர் வந்து வணங்கிய தலம் தாமிர சிலை நடராஜர் ஆடும் காட்சிமிக்க தலம் என்பதால் தாமிர சபையாயிற்று

பின் வந்த ஞானியரும் ரிஷிகளும் நாயன்மார்களும் அதை இன்னும் இன்னும் தங்கள் ஞானவழிபாட்டால் சக்திமிக்கதாக்கினார்கள்

உலகின் மிக மிக அழகான உருக்கமான நடராஜர் திருமேனி இங்குதான் உண்டு, அப்படி ஒரு வசீகரமான உருவம் அது, சிவனை மனதில் காட்டி உருக்கும் மாய திருமேனி அது

இந்த தலமேதான் தாமிர சபை, நெல்லையப்பர் கோவிலில் இருப்பது பஞ்ச சபைகளில் ஒரு வடிவமே அன்றி தாமிர சபை என்பது இதுதான், இந்த செப்பறை ஆலயம்தான்

சரி ஏன் தாமிர சபை என ஒன்றை சிவனருளால் ஏற்படுத்தினார்கள்? ஏன் சிவனே அப்படி ஒரு சபை அருள திருவுளமானார்? ஏன் தாமிரசிலையினை கொடுத்து இங்கே தாமிர சபையினை உருவாக்கினார் சிவன்

இந்த ஞானதாத்பரியம் கொஞ்ச்ம ஆழமாக் பார்க்கவேண்டியது

சித்திர சபை என முதலில் சொல்லபட்ட குற்றால தலத்தின் தத்துவம் ஞான தேடலின் தொடக்கம், அது சித்திரம் எனும் எளிதில் கலைய கூடிய அழிய கூடிய தன்மையினை சொன்னது

திரையோ , சுவரோ அங்கே எழுதபடும் சித்திரம் விரைவில் கலையும் ஆனால் தாமிர தகட்டில் எழுதபடும் எழுத்தோ சித்திரமோ பாதுகாக்கபடும்

செப்பேடு என்பது அதுதான்

இந்த இடத்தில் இருந்துதான் இந்த தாமிர சபையின் தாத்பரியத்தை அதன் ஞானத்துவ போதனையினை அறிந்து கொள்ளல் அவசியம்

தாமிரம் என்பது பாதுகாப்பை கொடுப்பது, தாமிரத்தின் தாத்பரியமே பாதுகாப்பு என்பது. அது உறுதியானது தன்னோடு சேர்வதையும் உறுதியாக்கும் தன்மை கொண்டது, வெண்கலம் அப்படித்தான் உருவாகும்

அக்காலத்தில் நீரை தாமிர பாத்திரத்தில்தான் பருகினார்கள், உணவுகள் கூட தாமிரம் கலந்த உருக்கு பாத்திரத்திலே சமைக்கபட்டது, அதுதான் உணவுக்கு நீருக்கு பாதுகாப்பு என அன்றே சொன்னார்கள் முன்னோர்கள்

எந்த அதிர்வையும் கடத்திவிடும் இயல்பு கொண்டது தாமிரம், எல்லா அதிர்வையும் தாக்கத்தையும் அது கடத்திவிட்டு அந்த சூழலை காப்பாற்றும் , இடிதாங்கியில் இருப்பதும் இந்த தத்துவமே

அப்படியான தாமிரம் என்பது உறுதியினை கொடுப்பது , உறுதி கொடுக்கும், காவல்  கொடுக்கும் விஷயமாக அறியபடுவது

அந்த தாமிரம் ஜோதிட ரீதியாக செவ்வாயோடு தொடர்புடையது , அதாவது நில தத்துவம் அல்லது எதையும் தாங்கி நிற்கும் தன்மை

உறுதியளிக்கும் தன்மை அதாவது காவல்

இப்பொது இந்த தலத்தின் தாத்பரியம் எளிதில் விளங்கும் அது சிவபெருமான் இங்கு காத்தல் தொழிலை செய்கின்றார் என்பது

ஆம் சிவனுக்குரிய ஐந்து தொழில்களில் காத்தல் என்பது முக்கியமானது, எல்லா உயிர்களையும் காப்பது அவர் தொழிலகளில் ஒன்று

"கல்லுக்குள் இருக்கும் தேரைக்கும் படியளப்பான் ஈசன்" என்பது அதுதான்

அப்படியான ஈசன் இங்கே காத்தல் தொழிலை செய்கின்றார், பஞ்ச சபைகளில் தாமிர சபை என சொல்லபடும் இந்த சபையின் தத்துவம் அதுதான்

சித்திர சபையில் ஆத்மா ஞானத்தை தேட துவங்க்கின்றது, அந்த தேடலை இந்த தாமிர சபை அடுத்த நிலைக்கு உயர்த்தி ஒரு உறுதியினை காவலை கொடுக்கின்றது

சித்திர நிலை என்பது மனதில் இருந்து மானுடன் ஞானம் தேடும் தொடக்க நிலை, இறைவனை உணர தொடங்கும் தொடக்க நிலை

தாமிர சபை என்பது அடுத்தகட்டத்துக்கு அந்த தேடலை நகர்ததும் வரத்தை அருள்வது, காவலை தருவது. ஞானத்தேடலோ ஆத்ம ஈடேற்றமோ எளிதில் நடக்காது

புளியம்பழ ஓடு இலகுவாக பிரிவது போல் எளிதாக ஞானம் கிடைக்காது , அங்கே கடும் போராட்டம் உண்டு, பெரிய பெரிய சறுக்கல் உண்டு, நம்பிக்கையின்மை முதல் பல இழப்புகள் வரை நிறைய உண்டு

அங்கே ஒரு வைராக்கிய தன்மை, உறுதி தன்மை அவசியம், காவல் அவசியம், உறுதிபாடு அவசியம் அதைத்தான் இந்த தாமிரசபை வழங்குகின்றது

சிவன் இங்கே திருதாண்டவம் ஆடுகின்றார் என்பது நம்பிக்கை, திருதாண்டவம் என்பது சீரான இயக்கத்துக்கான ஒரு அசைவு

எல்லாம் சரியாக இயங்குகின்றது என்பதற்கான ஒரு குறியீடு, அப்படி சரியாக இறைசக்தி ஞான தேடலையும் காவலாக அழைத்து செல்கின்றது என்பதற்கான ஒரு அடையாள சொல்

பிரபஞ்ச இயக்கத்தை சொல்லும் காட்சி அது

(திருதாண்டவ நடனம் என்பது உலோகங்களில் உள்ள அணுக்களின் இயக்கம், பிரபஞ்ச கோள்களின் சீரான இயக்கம்

இந்த இயக்கத்தை ஒரு சக்தி சீராக செய்யும், அணுக்கள் உள்ளே இயக்கம் குழம்பினால் உலோகமே குழம்பி சிதையும், பிரபஞ்சத்தில் கோள்கள் இயக்கத்தில் சிக்கல் என்றால் எல்லாம் மொத்தமாக சிதறும்

அந்த பிரபஞ்ச இயக்கமே திருதாண்டவம்

இதனை முனிதாண்டவம் என்றும் சொல்வார்கள், முனி என்றால் தனித்து நின்று காப்பவர்கள் என பொருள், சிவன் தவகோலத்தில் நின்று காவல் செய்யும் நடனமிடுவதால் இந்த நடனம் முனிதாண்டவமாயிற்று

உடலின் செல்கள் சீராக பிரியும் வரை இயக்கம் சரி, எப்போது செல்களின் இயக்கம் கோளாறுகின்றதோ அப்போதுதான் உடல் சிக்கலாகின்றது

சீரான இயக்கத்துக்கு ஒரு சக்தி உதவுமல்லவா அதுதான் காத்தல் தொழில்)

இந்த உலகை சிவன் காக்கின்றார், இந்த உலக அசைவை உலக உயிர்களை எல்லா படைப்புக்களையும் அவரே இயக்கி காக்கின்றார் என்பது அந்த தாமிர சபையின் போதனை

தன்னை தேடும் ஆன்மாவினை அந்த இறைசக்தி காக்கின்றது, அந்த ஆத்மாவின் தேடலுக்கு சறுக்கல் வராமல் சிக்கல் வராமல் அது காக்கின்றது என்பது அங்கே கிடைக்கும் வரம்

ஆம் தாமிரசபை என்பது காவல் தரும் இடம்,அந்த சபைக்கு சென்று வணங்கும் ஒவ்வொருவருக்கும் சிவனின் காவல் கிடைக்கும்

ஆத்ம தேடல் அடுத்த கட்டத்துக்கு செல்லும், அந்த ஞானதேடல் முக்திக்கான தேடல் உறுதியாகும், வலுக்கும்

இந்த ஆலயம் சிவனின் ஐந்து முகங்களில் ஒன்றான‌ வாமதேவா முகத்தை குறிப்பது, அது பாதுகாவலை கொடுக்கும் முகம்

இந்த செப்பறை ஆலயம் அந்த வாமதேவ முகத்தை பிரதிபலிப்பது, அது உலகின் நல்லன எல்லாம் பாதுகாக்கும் காவல் முகம்

நெல்லையப்பர் ஆலயம் செல்வோர் மறக்காமல் இந்த செப்பறை (செம்பு அறை) ஆலயம்செல்லுங்கள், அழகிய கூத்தர் ஆலயம் என அதற்கு பெயர்

நீர் தத்துவம் அந்த ஆலய பஞ்ச பூத தத்துவம், அதனாலே நீர்வளம் கொண்டதும்,  வற்றாத நதியுமான தாமிரபரணி கரையோரம் அமைந்துள்ளது.

உலகின் அதி அற்புதமான தாமிர நடராஜபெருமான் சிலையினை, மிக மிக அழகான சிலையினை அங்கேதான் காண்பீர்கள்

உலகின் மகா தொன்மையான நடராஜர் சிலை அதுதான்

காத்தல் தொழிலை செய்யும் சிவன் அங்கே சகல சக்தியோடு வீற்ற்ருக்கின்றார், உலகை காத்து இயக்கும் அந்த பரம்பொருள் அங்கே காக்கும் கடவுளாக தாமிர சபையில் காவல் இருக்கின்றார்

வாமதேவர் உலகில் உள்ள நன்மைகளை நலல் விஷயங்களை காப்பவர், அப்படியே நல்லவற்றை  காக்கும் கடப்பாட்டை போதிக்கவும் செய்பவர்

அங்கு சென்று அவரை கைகூப்பி தொழுது அடைக்கலம் தேடுங்கள், அந்த வல்ல பரம்பொருள் எல்லா காவலையும் உங்களுக்கு தந்து காவல் செய்வார்

ஞானம் தேடும் ஆத்மா என்றால் அது வழுவாமல் தன் தேடலை தொடர, தவறிவிடாமல் சறுக்கி விடாமல் நிலைக்க எல்லா காவலையும் சிவன் அருள்வார்

அந்த சபையில் சென்று வணங்கி "ஓம் நம சிவாய" எனும் மந்திரத்தை ஓதி பிரார்த்தியுங்கள், 

நெல்லையப்பர் ஆலயம் இதே தத்துவம் கொண்டது, 

நெல்லை  மழைவெள்ளத்தில் வேலியிட்டு
சிவன் காத்தார் என்பது காவல் தொழிலை மிக அழகான தத்துவமாக சொல்வது

நெல் என்றால் ஆதாரம் என பொருள் , வாழ்வின் முக்கிய ஆதாரம் என பொருள. சிவன் நெல்லை காத்தார் என்பது ஒவ்வொருவர் வாழ்வையும் சிவன் காத்து தருவார் என்பது

ஆம், அது காவலை வழங்கும் ஆலயம், அந்த நெல்லையப்பரை வணங்கிவிட்டு செப்பறை ஆலயம் செல்லுங்கள்

நெல்லையில் இருந்து 10 மைல் தொலைவில் உள்ள் அந்த ஆலயம்தான், செப்பறை அழகிய கூத்தர் ஆலயம்தான் தாமிர சபை , அங்கு செல்ல மறவாதீர்கள், செப்பறை ஆலயத்தை வணங்காமல் முழுபலன் நெல்லையில் கிடைக்காது

செப்பறை தாமிர சபை எனப்து காத்தல் வரம் அருள கூடியது, சிவனே தன் அடியார் மூலம் நடராஜ பெருமானாக அதுவும் சூட்சும அடையாளமான தாமிர அடையாளத்துடன் வந்தமர்ந்த தலம்

காத்தல் தொழில் நானே, உறுதியும் ஆரோக்கியமும் தருவது நானே வலுவான காவல் எல்லோருக்கும் தருவது நானே, ஆத்ம ஞான பயணத்தில் வைராக்கியம் தருவது நானே, ஆபத்தை களைவதும் நானே என வந்தமர்ந்த தலம்

அங்கு எக்காலமும் சிவன் உண்டு , திருதாண்டவம் எனும் முறையான சீரான காவலை ஒழுங்கை செய்யும் நாதனாக அவன் உண்டு

அங்கே சரணடையுங்கள், நீர் தத்துவம் கொண்ட ஆலயத்தில் பணிந்து பாவமெல்லாம் கர்மாவெல்லாம் களைந்து, முழு காவலை அடைவீர்க்ள் இது சத்தியம்

இந்துக்கள் என்பவர்கள் மாபெரும் ஞானசமூத்தின் வாரிசுகள், அந்த முந்தைய மகா ஞான சமூகம் ஒவ்வொரு விஷயத்தையும் குறிப்புகளால் கொடுத்துவிட்டு சென்றது, அதை ஆழ தோண்டினால் மிக அணுக்கமாக ஆராய்ந்தால் மாபெரும் ஞானமும் தத்துவமும் சூட்சும ரகசியங்களும் கொட்டும்

அப்படி கொட்டிகிடப்பதுதான் தாமிரம் எனும் உலோகத்தை கொண்டு பெரும் தத்துவமும் மாபெரும் சிவனருளும் கொட்டிகொண்டிருக்கும் செப்பறை அழகிய கூத்தர் ஆலயம்

"காண்தகு மலைமகள் கதிர்நிலா
முறுவல் செய்து அருளவேயும்
பூண்டநா கம்புறங் காடு அரங்
காநட மாடல்பேணி
ஈண்டுமா மாடங்கண் மாளிகை
மீது எழ கொடி மதியம்
தீண்டி வந்து உலவிய திருநெல்வேலி
யுறை செல்வர் தாமே.

ஓம் நமசிவாய 
படித்து பகிர்ந்தது 
இரா இளங்கோவன் 
நெல்லிக்குப்பம். 

Followers

வேலை கிடைக்க வேல் பூஜை செய்யலாம்.முருகன் வேலின் மகத்துவம்

_முருகன் வேலின் மகத்துவம்_ முருகனுக்கு வேல் ஆயுதமாக உருவகிக்கப்பட்டிருக்கிறது. வேல் வெற்றிக்கும், அறிவுக்கும் அடையாளமாகத் திகழ்க...