Friday, March 28, 2025

திருச்சி உறையூர் பஞ்சவர்ணேஸ்வரர் திருக்கோயில்

ஐவண்ணப்பெருமான்.. திருமூக்கீச்சுரம்..
பிரம்மன் வழிபட்ட தலம்..!!

அருள்மிகு பஞ்சவர்ணேஸ்வரர் திருக்கோயில்...!!
 

 *இந்த கோயில் எங்கு உள்ளது?* 

திருச்சி மாவட்டத்தில் உள்ள உறையூர் என்னும் ஊரில் அருள்மிகு பஞ்சவர்ணேஸ்வரர் திருக்கோயில் அமைந்துள்ளது.

 *இந்த கோயிலுக்கு எப்படி செல்வது?* 

திருச்சியிலிருந்து சுமார் 10 கி.மீ தொலைவில் உறையூர் அமைந்துள்ளது. உறையூர் பேருந்து நிறுத்தத்திலிருந்து நடந்து செல்லும் தொலைவில் இத்திருக்கோயில் அமைந்துள்ளது.

 *இந்த கோயிலின் சிறப்புகள் என்ன?* 

இத்தல இறைவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். தங்கம், வெண்மை, செம்மை, கருமை, புகைமை ஆகிய ஐந்து நிறங்களை இச்சிவலிங்கம் பிரம்மனுக்கு காட்டியதால் இவருக்கு ஐவண்ணப்பெருமான் என்ற திருநாமமும் உண்டு.

ஒவ்வொரு கால பூஜைக்கும் இறைவன் ஒவ்வொரு நிறமாக மாறுவதை இப்போதும் நாம் காணலாம். இந்த உலகில் எந்த இடத்தில் சிவபூஜை செய்தாலும், சிவ தரிசனம் செய்தாலும் அவையனைத்தும் இங்கு வந்து தான் உறையும் என்பதால் இத்தலம் உறையூர் எனப்பட்டது.

சிவனின் தேவாரப்பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் இது 68வது தேவாரத்தலம் ஆகும்.

 *வேறென்ன சிறப்பு?* 

இத்தலத்தில் வழிபடுபவர்களுக்கு மறுபிறப்பில்லை என்பதால் 'திருமூக்கீச்சுரம்" என்று பெயர் ஏற்பட்டது.

பைரவர், சனிபகவான், சூரியன் ஆகியோர் ஒரே சன்னதியில் வீற்றிருப்பதால் கிரக தோஷ நிவர்த்திக்கு ஏற்ற தலமாகும். தேய்பிறை அஷ்டமி திதிகளில் பைரவருக்கு அபிஷேகம் நடக்கிறது.

இங்கு அம்பாள் காந்திமதி மற்றும் பஞ்சமுக விநாயகரும் தரிசனம் தருகின்றனர்.

இக்கோயில் வரலாற்றுடன் சேவலுக்கு தொடர்பு இருப்பதால் இப்பகுதியினர் சேவலுக்கு மிகுந்த மரியாதை அளித்து வருகின்றனர்.

எதிரி, யானை அளவு பலம் பெற்றிருந்தாலும் இந்த இறைவனின் கருணை இருந்தால் அவனை வென்றிடலாம்.

 *என்னென்ன திருவிழாக்கள் கொண்டாடப்படுகிறது?* 

சித்ராபௌர்ணமி, வைகாசி பிரம்மோற்சவம், ஆனி திருமஞ்சனம், ஆடி பௌர்ணமி (இந்நாளில் உதங்க முனிவருக்கு ஐந்து நிறங்களை இறைவன் காட்டியுள்ளார்) ஆவணி மூலத்திருவிழா, நவராத்திரி, ஐப்பசி பௌர்ணமி அன்னாபிஷேகம், மார்கழி திருவாதிரை, தைப்பூசம், மகாசிவராத்திரி, பங்குனி உத்திரம் ஆகிய திருவிழாக்கள் கொண்டாடப்படுகிறது.

 *எதற்கெல்லாம் பிரார்த்தனைகள் செய்யப்படுகிறது?* 

கார்கோடனாகிய பாம்பும், கருடனும் இங்குள்ள ஈசனை வழிபட்டுள்ளதால், நமக்கு ஏற்பட்ட எப்படிப்பட்ட தோஷமாக இருந்தாலும் நிவர்த்தியாகிவிடும். படைப்பின் நாயகன் பிரம்மனே இங்கு வந்து பூஜித்துள்ளதால் நாம் செய்யும் எந்த தொழிலாக இருந்தாலும் வெற்றி நிச்சயம்.

 *இத்தலத்தில் என்னென்ன நேர்த்திக்கடன்கள் செலுத்தப்படுகிறது?* 

சிவனுக்கும், அம்மனுக்கும் அபிஷேகம் செய்தும், பொங்கல் நைவேத்தியம் செய்தும் நேர்த்திக்கடனை செலுத்துகின்றனர்.

ஓம் நமசிவாய 
படித்து பகிர்ந்தது 
இரா இளங்கோவன் 
நெல்லிக்குப்பம். 

Thursday, March 27, 2025

சிவபெருமானுக்கு செய்யப்படும் பூஜைகளில் பிரதோஷ பூஜை மிகவும் முக்கியமானது.

பிரதோஷ மகத்துவம்சிவபெருமானுக்கு செய்யப்படும் பூஜைகளில் பிரதோஷ பூஜை மிகவும் முக்கியமானது.
 சுக்ல பக்ஷத்தில் (அமாவாசை முதல் பௌர்ணமி வரையிலான 15 நாட்கள்) மற்றும் கிருஷ்ண பக்ஷத்தில் (பௌர்ணமி முதல் அமாவாசை வரையிலான 15 நாட்கள்) திரயோதசி மாலை (பதிமூன்றாவது நாள்) மாலை 4.30 மணி முதல் மாலை 6.00 மணி வரை பிரதோஷம் என்று அழைக்கப்படுகிறது. 

பதினைந்து நாட்களுக்கு ஒருமுறை வரும் பிரதோஷ நேரம் என்பது சிவபெருமானை வழிபடும் நேரம். அந்த நேரத்தில் பிரார்த்தனை செய்வது பாவங்களிலிருந்து நம்மை விடுவித்து, இறுதியாக மோட்சத்தைத் தரும் (எனவே பிரதோஷம் என்று பெயர்). பிரதோஷ நேரத்தில் சோம சூத்ர பிரதக்ஷிணம்(1) என்று அழைக்கப்படும் ஒரு விசேஷமான வலம்வருதல் செய்யப்படுகிறது.

பிரதோஷ புராணம்:ஒருமுறை தேவர்களும் அசுரர்களும் வாசுகி என்ற பாம்பைக் கயிறாகவும் மந்தர மலையை மத்தாகவும் பயன்படுத்தி பாற்கடலிலிருந்து அமிர்தத்தைப் பெற முயன்றனர். 
அப்போது அப்போது கடலிலுருந்து விஷமும் (ஆலம்) வாசுகி கக்கிய விஷமும் (ஆலம்) சேர்ந்து பயங்கர விஷம் - ஹாலாஹலம் வந்தது. அனைவரும் அச்சமடைந்து ஓடினர். திருமால் அந்த விடத்தைத் தடுக்க முயன்று அவர் தம் திருமேனி நிலவண்ணமானது.

 அனைவரும் தேவதேவரான சிவபெருமானை அடைக்கலம் அடைந்தனர்.  

கருணையின் சிகரமாக இருந்த சிவபெருமான் அந்த விஷத்தை உண்டார். பிறகு அவருடைய கட்டளைப்படி மீண்டும் அம்ருதம் பெறுவதற்கான முயற்சியை தேவர்களும் அசுரர்களும் தொடர்ந்தனர். துவாதசியில் அம்ருதம் கிடைத்தது. அம்ருதம் கொடுத்த கடவுளுக்கு நன்றி சொல்லாமல், தேவர்கள் கேளிக்கைகளில் தங்கள் வெற்றியைக் கொண்டாடத் தொடங்கினார்.திரயோதசி அன்று அவர்கள் சிவபெருமானை வணங்கி நன்றி சொல்லாத தங்கள் பெரும் தவறை உணர்ந்து பிழைபொறுக்க வேண்டினர்.

 மிக எளிதில் அருள்புரியும் அசுதோஷியான சிவபெருமான் அவர்கள் பிழை பொறுத்தருளி நந்தியின் கொம்புகளுக்கு இடையே நடனமாடினார். அந்த நேரம் பிரதோஷம் என்று அழைக்கப்படுகிறது. 
பிரதோஷம் என்றால் பெரும் குற்றம் என்று பொருள். குற்றங்களில் பெரும் குற்றமான சிவபெருமானை வணங்காத குற்றத்தை நீக்கும் விரதம் ஆகையால் இதற்குப் பிரதோஷ விரதம் என்று பெயர். அந்த நேரத்தில் சிவபெருமானை யார் வேண்டிக்கொள்கிறாரோ, அவர்களின் விருப்பங்களை சிவபெருமான் நிறைவேற்றி அவர்களுக்கு முக்தியும் தருகிறார்.

பிரதோஷ கால அபிஷேகத்தின் போது கீழ்க்கண்டவை பெரும் பலன் தருவதாகக் கருதப்படுகிறது.
பால் நீண்ட ஆயுளைத் தரும்
 நெய் மோட்ச நிலையைத் தரும்
 தயிர் நல்ல குழந்தைகளைத் தரும்
 தேன் இனிமையான குரல் கொடுக்கிறது
 அரிசி பொடி கடன்களில் இருந்து விடுபடுத்தும்
கரும்புச் சாறு நல்ல ஆரோக்கியத்தைத் தரும்
பஞ்சாம்ருதம் செல்வத்தைத் தரும் 
எலுமிச்சை மரண பயத்தை நீக்குகிறது 
சர்க்கரை பகையை நீக்கும் 
இளநீர் மகிழ்ச்சியைத் தருகிறது
 அன்னம் கம்பீரமான வாழ்க்கையை அளிக்கிறது சந்தனம் லட்சுமியின் அருளைத் தரும் சிவபெருமானுக்கு அன்புடன் அபிஷேகம் செய்யுங்கள், அவர் தன்னையே தருபவர் !!
  சிவ பூஜைக்கு வில்வம் மற்றும் பூக்கள் கொடுக்கலாம்.   

ஒவ்வொரு பிரதோஷத்திற்கும் சிவபெருமான் கோவிலுக்குச் சென்று அவர் அருளில் ஆனந்தமாக வாழுங்கள்.

ஓம் நமசிவாய
 படித்து பகிர்ந்தது 
இரா இளங்கோவன் 
நெல்லிக்குப்பம். 

Wednesday, March 26, 2025

மகாலட்சுமி சிவபெருமானிடம் ஐஸ்வர்ய பெற்ற தலம் வெள்ளூர் திருக்காமேஸ்வரர்.

வெள்ளூர் திருக்காமேஸ்வரர் கோவில்
*மகாலட்சுமி  இனிய சிவபெருமானிடம் ஐஸ்வர்ய மகுடம் பெற்ற தலம்*

திருச்சியில் இருந்து நாமக்கல் செல்லும் வழியில், குணசீலம் கோவிலை அடுத்து, ஆனால் முசிறிக்கு  6 கி.மீ. முன்னால் உள்ள தலம்  வெள்ளூர். இத்தலத்து இறைவன் திருநாமம்  திருக்காமேஸ்வரர். இறைவியின் திருநாமம் சிவகாமசுந்தரி. திருக்காமேஸ்வரர் பெருமானை வணங்கினால் வெற்றி நிச்சயம் என்பதை உணர்த்தும் வகையிலேயே இந்த ஊருக்கு வெள்ளூர் என்ற பெயர் ஏற்பட்டது.
வேறு எந்த சிவாலயத்திலும் இல்லாத வகையில், இங்கே மகாலட்சுமி கோவில் கொண்டிருப்பது இத்தலத்தின் தனிச்சிறப்பாகும். கோவிலின் குபேர பாகத்தில் மகாலட்சுமி தவம் செய்யும் கோலத்தில்,  ஐஸ்வர்ய மகாலட்சுமி என்ற திருநாமத்தோடு சிவலிங்கத்துடன் கூடிய ஸ்ரீவத்ஸ முத்திரை பதித்த ஐஸ்வர்ய மகுடத்தை தலையில் சூட்டியவாறு, அமர்ந்த திருக்கோலத்தில்  பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்.

தேவர்களும் அசுரர்களும் அமிர்தம் வேண்டி பாற்கடலைக் கடைந்தனர். அந்த அமிர்தம் தேவர்களுக்கு மட்டுமே கொடுக்கப்பட வேண்டுமென எண்ணிய மகாவிஷ்ணு, மோகினி அவதாரமெடுத்தார். அசுரர்களை மயக்கி லவண சமுத்திரம் எனும் உப்பு நிறைந்த கடலில் அசுரர்களை மூர்ச்சையாகும்படி செய்துவிட்டு திரும்பும்போது சிவபெருமானின் பார்வையில் மோகினி தென்பட்டாள். மோகினியின் அழகைக்கண்டு சிவபெருமான் மோகிக்க ஹரிஹரபுத்திரர் எனும் ஐயப்பன் அவதரித்தார். இதைக் கேள்விப்பட்ட மகாவிஷ்ணுவின் மனைவியான மகாலட்சுமி கோபம் கொண்டாள். உடனே வைகுண்டத்தை விட்டு வெளியேறி பூலோகம் வந்தாள். இங்கு வில்வாரண்ய க்ஷேத்திரம் எனும் வெள்ளூரில்,மகாலட்சுமி சிவபெருமானை பிரதிஷ்டை செய்து  தவம் செய்யலானாள். பல யுகங்களாக தவம் செய்தும் சிவபெருமான் காட்சி தரவில்லை. உடனே மகாலட்சுமி தன்னை வில்வமரமாக மாற்றிக்கொண்டு சிவலிங்கத் திருமேனியில் வில்வமழையாகப் பொழிந்து சிவபூஜை செய்தாள். பூஜையில் மகிழ்ந்த சிவபெருமான் மகா லட்சுமியின் முன் தோன்றி, ஹரிஹரபுத்திர அவதாரத்தின் நோக்கத்தை விளக்கிக்கூறி மகாலட்சுமியை சாந்தப்படுத்தினார். பின் மகாலட்சுமியை ஸ்ரீவத்ஸ முத்திரையுடன் கூடிய சாளக்ராமமாக மாற்றி, மகாவிஷ்ணுவின் இதயத்தில் அமரச் செய்து, மகாவிஷ்ணுவின் திருமார்பில் நிரந்தரமாக இடம் பெற செய்தார்.
பகிரபடும் பகிர்வுகள் பிறர் அறிந்துக் கொள்வதற்காக தவிர பிறர் ப்ரதி உரிமையை மீறும் எண்ணம் இல்லை..அசல் பதிவேற்றியவருக்கு நன்றி.

வில்வமரமாகத் தோன்றி, வில்வமழை பொழிந்து சிவபூஜை செய்ததின் பலனாக இத்தலத்தில் மகாலட்சுமிக்கு ஸ்ரீவத்ஸ முத்திரை பதித்த சிவலிங்கத்துடன் கூடிய ஐஸ்வர்ய மகுடத்தை அளித்து மகாலட்சுமியை சகல செல்வத்துக்கும் அதிபதி ஆக்கினார். அதனால் இத்தலத்தில் மகாலட்சுமி, ஐஸ்வர்ய மகாலட்சுமி என்ற திருநாமத்துடன், தல விருட்சமான வில்வ மரத்தடியில் தவக்கோலத்தில் இருந்து அருள்பாலிக்கின்றாள். திருவருட்பாலிக்கிறாள். இத்தலத்திலேயே தங்கி இங்கு வரும் பக்தர்களுக்கு அவரவர் பாவ புண்ணியத்திற்கேற்ப செல்வத்தை அருளும்படி கூறினார். இவள் அபய, வரத திருக்கரங்களோடு, மேலிரு கரங்களில் தாமரை மலருடன் காட்சி தருகிறாள். ஐஸ்வர்ய மகாலட்சுமிக்கு அபிஷேகம் செய்யும் முன் வில்வமரத்துக்கே முதலில் பூஜை செய்கிறார்கள்.  மகாலட்சுமிக்கு ஐஸ்வர்ய மகுடத்தை அருளியதால் இத்தல இறைவனுக்கு ஐஸ்வர்யேஸ்வரர், லட்சுமிபுரீஸ்வரர் என்ற பெயர்களும் உண்டு.

இத்தலத்தின் பிற சிறப்புகள்

சுக்கிரன், ஈசனை வழிபட்டு யோகத்திற்கு அதிபதி ஆனதும், குபேரன் தனாதிபதி ஆனதும் இத்தலத்தில்தான் என தலபுராணம் கூறுகிறது. முப்பத்து முக்கோடி தேவர்களும் தினமும் ஆகாய மார்க்கமாக இங்கு வந்து ஈசனை வழிபடுவதாக ஓலைச்சுவடிகளில் காணப்படுகிறது. ராவணன் சிவவழிபாடு செய்து ஈஸ்வரப் பட்டம் பெற்றதும் இத்தலத்தில்தான். ஈசன் காமனை நெற்றிக் கண்ணால் சுட்டெரித்தாலும் அவன் எய்த மன்மத பாணம் அம்பிகை மீதுபட, தேவி சிவகாம சுந்தரியானாள் அவளே இங்கு சிவனுடன் உறையும் நாயகியாய் வீற்றிருக்கிறாள். மகேசன், மன்மதனை மன்னித்து அரூப அழகுடலை அளித்ததால், சிவபிரான் திருக்காமேஸ்வரர் என்றும், மன்மதனுக்கு வைத்தியம் அருளியதால் வைத்தியநாதராகவும் பெயர் பெற்றார்.

பிரார்த்தனை

தங்கம், வெள்ளி நகை செய்பவர்கள் தங்கள் தொழில் அபிவிருத்திக்காக இங்கு வருகிறார்கள். சுக்கிர தோஷம் உடையவர்கள்,வெள்ளிக்கிழமைகளில் 16 வகையான அபிஷேகம் செய்து 16 நெய்தீபம் ஏற்றி, 16 செந்தாமரை மலர்கள் சாத்தி, 16 முறை வலம் வந்தால் அனைத்து தோஷங்களும் நீங்கும். கடன் தொல்லைகள் அனைத்தும் நிவர்த்தியாகும். சகல ஐஸ்வர்யங்களும் கிடைக்கப் பெறலாம் . தாமரை மலர் சாற்றி அட்சய திரிதியை அன்று மஹாலட்சுமியை வழிபட்டால் சகல செல்வங்களும் பெருகும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

ஓம் நமசிவாய
 படித்து பகிர்ந்தது 
இரா இளங்கோவன் 
நெல்லிக்குப்பம். 

பிரமபுரீஸ்வரர் திருக்கோயில் அம்பல்பூந்தோட்டம் நன்னிலம்..

அருள்மிகு. பிரமபுரீஸ்வரர் திருக்கோயில், 
அம்பல்- 609 503
பூந்தோட்டம் வழி,   
நன்னிலம் வட்டம்,
திருவாரூர் மாவட்டம். 
*மூலவர்:
பிரமபுரீஸ்வரர்

*தாயார்:
சுகந்த குந்தளாம்பிகை, பூங்குழலம்மை

*தல விருட்சம்:
புன்னை மரம்

*தீர்த்தம்:
பிரம தீர்த்தம் 

*பாடல் பெற்ற தலம்
பாடியவர் சம்பந்தர்.                     

*அம்பர் இன்று  அம்பல் என்று வழங்கப்படுகிறது.
  
*திருக்கோயிலில் "அன்னமாம் பொய்கை" என்று வழங்கப்படும் சிறப்புவாய்ந்த கிணறு உள்ளது.   

*நைமிசாரண்ய முனிவர்கள், எல்லாப் பெருமைகளையும் உடையதும், முக்தி தருவதுமான தலம் ஒன்றின் பெருமையைக் கூறுமாறு சூத முனிவரிடம் கேட்க, மிக்க மகிழ்ச்சியடைந்த சூதர், பிரமபுரி எனப்படும் அம்பர் தலத்தின் பெருமைகளைக் கூறினார். 
"வேண்டுவோர் வேண்டுவன யாவற்றையும் அளிக்கும் இத்தலம், கற்பக விருக்ஷத்தையும் காமதேனுவையும் சிந்தாமணியையும் ஒத்தது. இங்கு சிறிது நேரம் தங்கினாலும் காசியில் தங்கி தருமங்கள் செய்வதற்கு நிகராகும். இங்கு வசிக்கும் எல்லா உயிரினங்களும் சிவலோகப் பதவி பெறுவது நிச்சயம். இதன் அருகில் ஓடும் அரிசிலாறு காவிரியே. அதிலும், கோயிலில் உள்ள அன்னமாம் பொய்கையிலும் நீராடினால் பெறும் பயன் அளவிடற்கரியது. நீராடுவோர் கொடிய பாவங்களில் இருந்து நீங்கப்பெறுவர்."   
*பிரமன் அருள் பெற்றது:    ஒரு சமயம் பிரமனும் திருமாலும் தங்களுக்குள் யார் உயர்ந்தவர் என்று நீண்ட காலம் போரிட்டுக் கொண்டனர். அப்போது அவ்விருவரிடையே முதலும் முடிவும் அறியமாட்டாத சோதி வடிவாகச் சிவபெருமான் தோன்றினார். அச்சோதியின் அடிமுடி கண்டவரே உயர்ந்தவர் என இறைவன் கூறவே, திருமால் வராக வடிவெடுத்து திருவடியைக் காண்பதற்காக   நிலத்தை அகழ்ந்து   பாதாளம் வரை சென்றும் முடியாதுபோகவே இறைவனைத் தொழுது, " நீரே பரம்" எனக் கூற, பிரமன் அன்னப்பறவை வடிவில் முடி காணச் சென்றார். அது முடியாது போகவே, இறைவனது முடியிலிருந்து விழுந்த தாழம்பூவை சாட்சி சொல்லுமாறு கூறி விட்டு, தான் முடியைக் கண்டதாகப் பொய்யுரைத்தார். 

"அன்னப்பறவை வடிவிலேயே இருப்பாயாக" என்று பிரமனைப் பெருமான் சபித்து விட்டு, இனித் தாழம்பூவை சிவபூஜைக்கு உதவாதவாறும் சபித்தார். 

பிரமன், அன்னவடிவம் நீங்குவதற்காக புன்னாக வனத்தை அடைந்து கடும் தவம் மேற்கொண்டார்.
சிவபெருமான், பிரமனுக்கு காட்சி அளித்து, அவர் வேண்டியபடியே, அன்ன உருவம் நீங்கிப் பழைய வடிவு பெறுமாறு
அருளினார். 
பிரமா தவம் செய்த பொய்கை, " அன்னமாம் பொய்கை" எனப்படுமாறும்,  மாசி மகத்தன்று அதில் நீராடுவோர் தேவ பதவி பெறுவர் என்றும் பல வரங்களை அளித்தருளினார்.                      

*சம்கார சீலனை அழித்தது: சம்கார சீலன் என்பவன் பிரமனைக் குறித்து தவம் செய்து யாவரையும் வெல்லும் வரம் பெற்றான். இந்திரனையும் பிற தேவர்களையும் வென்றான். அதனால் கலங்கிய இந்திரனைப் பார்த்துப் பிரமதேவன், "நீ புன்னாக வன ஈசனை நோக்கி தவம் செய்தால் அப்பெருமான் அந்த அசுரனை அழித்தருளுவார்" எனக் கூறினார். அவ்வாறே தவம் செய்து கொண்டிருந்த இந்திரனைத் தேடி அசுரன் அம்பருக்கும் வந்து விடவே, இறைவன் கால பைரவரை அனுப்பி அவ்வசுரனை வீழ்த்தினார்.             

*விமலன் அருள் பெற்றது:    காசியைச் சேர்ந்த விமலன் என்ற அந்தணன் தன் மனைவியோடு பல தலங்களை வணங்கி விட்டு அம்பரை  வந்தடைந்து, பெருமானையும் அம்பிகையையும் பல்லாண்டுகள் வழிபட்டுப் பணி செய்து வந்தார்.
இறைவன் அவருக்கு காட்சி அளித்து 
அன்னமாம் பொய்கையில் கங்கையை வச்சிரத் தூண் போல் எழுமாறு செய்யவே, விமலனும் தன் துணைவியுடன் அதில் நீராடி மகிழ்ந்தார். 

*மன்மதன் வழிபட்டது:   தேவலோக மாதர்களால் தனது தவம் வீணானதால் மன்மதன் மீது சினந்த விசுவாமித்திரர் இனி அவனது பாணங்கள் எவரிடமும் பலிக்காமல் போகக் கடவது என்று சபித்தார். அதனால் வருந்திய மன்மதன், பிரமனது சொற்படி புன்னாக வனத்திற்கு வந்து பிரமபுரீசனை வழிபட்டு சாபம் நீங்கப்பெற்றான். 

*நந்தன் பிரமஹத்தி நீங்கியது:  காம்போஜ தேச அரசனான நந்தன்  ஒருநாள் வேட்டைக்கு வந்தபோது புலித் தோலால் தன் உடலை மறைத்துக் கொண்டு தவம் செய்து கொண்டிருந்த பிங்கலாக்கன் என்ற முனிவரைப் புலி என்று எண்ணி அம்பு எய்தான்.  முனிவன் அக்கணமே மாண்டார். அரசனை பிரமஹத்தி பற்றியது. அப்பழி தீர வேண்டிப் பல தலங்களுக்கும் யாத்திரை செய்தும் அது அவனை நீங்கவில்லை. 
அவன் இந்த அம்பர் எல்லைக்கு வந்தபோது பிரமஹத்தி அவனைப் பின் தொடர அஞ்சி ஊர்ப் புறத்திலேயே நின்றுவிட்டது.
பிரமபுரீசுவரர் கோயிலுக்குச் சென்ற அரசன் பெருமானைத் தரிசித்துத் தனது பழி தீர்த்தருளுமாறு வேண்டினான். பிரமஹத்தி அவனை விட்டு நீங்கியது. இறைவனது திருவருள் பெற்ற அரசன் மீண்டும் தன்னாட்டிற்குச் சென்றான். 

பின்னர் உத்தமன் என்ற தனது மைந்தனுக்கு முடி சூட்டிவிட்டு மீண்டும் அம்பரை வந்தடைந்து தொண்டுகள்கள் பல செய்தான்.

அப்போது அங்கு கடும் பஞ்சம் ஏற்பட்டது.
தன் கையிலுள்ள எல்லாப் பொருட்களையும் அளித்துப் பசிப்பிணி தீர்த்து வந்தான். கைப்பொருட்கள் முற்றும் செலவானதும் பெருமானது சன்னதியை அடைந்து, பெருமானே வழி காட்ட வேண்டும் என்று விண்ணப்பித்தான். அவனுக்கு இரங்கிய பெருமான் விநாயகப் பெருமான் மூலம் நாள்தோறும் படிக்காசு பெறச் செய்து பஞ்சம் தீர்த்தருளினார்.  

*சோமாசி மாற நாயனார்: அம்பரில் அவதரித்த,  பெருமானது மலரடிகளை என்றும் மறவாத இவர், திருவாரூர் சென்று  சுந்தரரை அம்பரில் தாம் செய்யவிருக்கும் சோம யாகத்திற்குத் தியாகராஜ மூர்த்தியுடன் வருமாறு வேண்டினார். அதனை ஏற்ற  சுந்தரர், மாறனாறது வேள்விச் சாலைக்கு எழுந்தருளினார். 
யாகம் நடைபெற்றுக் கொண்டிருந்த வேளையில் இறைவனும் இறைவியும், கணபதியும், கந்தனும் 
நீச உருவில்  யாகசாலைக்குள் நுழைந்ததைப் பார்த்த வேதியர்கள் "யாகம் வீணானது" எனக் கூறி அங்கிருந்து அகன்றனர். சுந்தரரும் சோமாசி மாறரும் மட்டும் அங்கிருந்து அகலவில்லை. பெருமான் அம்பிகையோடு அவர்களுக்குக் காட்சி அளித்தருளினார். 

*இந்த மாடக்கோயிலே கோட்செங்கச் சோழ நாயனாரின் கடைசித் திருப்பணியாகச் சொல்லப்படுகிறது. 

*சங்க இலக்கியங்களில்,   அரசர்களும், கொடையாளிகளும், புலவர்களும், கலைஞர்களும் அம்பரில் வாழ்ந்ததாக குறிப்பு உள்ளதாக அறிகிறோம். 

*மகாவித்வான் மீனாட்சி சுந்தரம்பிள்ளை இத்தலத்திற்கு தலபுராணம் பாடியுள்ளார்.  

*இங்கு சோழர் காலக் கல்வெட்டுகள் நான்கு உள்ளன.  

*இக்கோயில் பேரளத்திலிருந்து தென்கிழக்கே சுமார் ஆறு கி.மீ தொலைவில் உள்ளது.  பூந்தோட்டம் இரயில் நிலையத்திற்குக் கிழக்கே 5-கி.மீ. தூரத்திலிருக்கும் அம்பர் மாகாளத் தலத்திற்குக் கிழக்கே 1-கி.மீ. தூரத்தில் உள்ளது. பூந்தோட்டத்திலிருந்து பேருந்து வசதி உள்ளது.      
ஓம் நமசிவாய 
படித்து பகிர்ந்தது 
இரா இளங்கோவன் 
நெல்லிக்குப்பம். 

Tuesday, March 25, 2025

திருப்பம் தரும் திருப்பட்டூர் பிரம்மபுரீஸ்வரர்.

ஸ்ரீபதஞ்சலி ஸ்ரீவியாக்ரபாதர் அதிஷ்டானம். திருப்பட்டூர் வியாக்ரபாதர் பிருந்தாவனம். 
காசிக்கு நிகரான திருப்பட்டூர்!
ஸ்ரீஆதிசேஷனின் அவதாரமாகிய
பதஞ்சலி முனிவருக்கு, அவர் சிந்தனைக்கு ஈடான ஒரு முனிவர் நண்பராகக் கிடைத்தார். அவர்... வியாக்ரபாதர். இருவரும் இணையற்ற நண்பரானார்கள். காட்டிலும் மலையிலுமாக கடும் தவம் மேற்கொண்டார்கள்.

தில்லையம்பதி என்று போற்றப்படுகிற சிதம்பரம் திருத்தலத்தில், இவர்களுக்கு சிவனார் திருக்காட்சி தந்து, தன் திருநடனத்தையும் ஆடிக்காட்டியதைப் புராணம் அழகுறச் சொல்லியிருக்கிறது. ஒருகாலத்தில், மகிழ மரங்களும் வில்வ மரங்களும் சூழ்ந்த திருப்பட்டூர் வனப்பகுதியில், பதஞ்சலியும் வியாக்ரபாதரும் அனுதினமும் சிவபூஜை செய்தார்கள். கண் மூடி தவமிருந்தார்கள். பர்ணசாலை அமைத்து, மௌனம் அனுஷ்டித்தார்கள்.

யோகிகள் தவமிருந்த பூமி எனும் சிறப்பும் கொண்ட திருப்பட்டூர் தலத்தில், அமானுஷ்யங்களும் அதிசயங்களும் பக்தர்களுக்கு சத்விஷயங்களாக இன்றைக்கும் நடந்துகொண்டிருக்கின்றன.

திருப்பட்டூர் பிரம்மபுரீஸ்வரர் கோயிலின் பதஞ்சலி முனிவரின் அதிஷ்டானம் அருகில், ஒரு பத்துநிமிடம் அமைதியாகக் கண்மூடி உட்காருங்கள். தெளியாத மனமும் தெளியும். தீராத பிரச்னையும் தீரும். உணர்ந்து சிலிர்ப்பீர்கள்.

பிரம்மபுரீஸ்வரர் கோயிலில் இருந்து சுமார் ஒரு கி.மீ. பயணித்தால், காசி விஸ்வநாதர் ஆலயத்தை அடையலாம். சிறிய அதேசமயம் அழகான கோயில். உள்ளே நுழைந்ததும், வியாக்ரபாதர் திருச்சமாதியைத் தரிசிக்கலாம். அங்கே பிரம்மா கோயிலில் பதஞ்சலி முனிவர் சமாதி. இங்கே, வியாக்ரபாதரின் திருச்சமாதி. மனித உடலும் புலியும் கால்களும் கொண்ட வியாக்ரபாதர், தன் காலால் உண்டு பண்ணிய திருக்குளம் அருகில் உள்ளது. காசிக்கு நிகரான ஆலயம். கங்கைக்கு நிகரான திருக்குளம் என்று போற்றுகின்றனர் பக்தர்கள்.

திருப்பட்டூர் வருபவர்கள், காசி விஸ்வநாதர் கோயிலுக்கு வந்து, வியாக்ரபாதர் தீர்த்தக்குளத்தில் கால் அலம்பிவிட்டு, சிவனாரைத் தரிசிக்கவேண்டும். முடிந்தால், காசிவிஸ்வநாதருக்கு வஸ்திரமும் ஸ்ரீவிசாலாட்சி அம்பாளுக்குப் புடவையும் சார்த்தி மனதார வேண்டிக் கொண்டால், அதுவரை தெரிந்தோ தெரியாமலோ நாம் செய்த பாவங்கள், நம் பரம்பரையில் உள்ள பித்ருக்கள் சாபம் முதலானவை நீங்கிவிடும் என்பது ஐதீகம்.
அடுத்து, வியாக்ரபாதரின் அதிஷ்டானத்துக்கு வந்து, ஒரு ஐந்து நிமிடம் அமர்ந்து, கண்மூடி பிரார்த்தனை செய்யுங்கள். .. உங்கள் மூதாதையர்கள் அனைவரின் ஆசீர்வாதம் முழுவதும் கிடைக்கப்பெறுவீர்கள்.

காசி விஸ்வநாதர் ஆலயம், காசியம்பதிக்கு நிகரான திருத்தலம்!
ஓம் நமசிவாய 
படித்து பகிர்ந்தது 
இரா இளங்கோவன் 
நெல்லிக்குப்பம். 

குழந்தைகள் நோயின்றி வாழ கரவீரநாதர் திருக்கோயில் கரையபுரம்.



சிவஸ்தலம் பெயர் திருகரவீரம் (தற்போது வடகண்டம் கரையபுரம் என்று வழங்கப்படுகிறது)
இறைவன் பெயர் கரவீரநாதர், பிரம்மபுரீஸ்வரர்
இறைவி பெயர் பிரத்தியட்சமின்னம்மை, பிரத்யக்ஷ நாயகி
பதிகம் திருஞானசம்பந்தர் - 1
எப்படிப் போவது திருவாரூரில் இருந்து மேற்கே 10 கி.மீ. தொலைவில் இத்தலம் இருக்கிறது. திருவாரூரில் இருந்து கும்பகோணம் செல்லும் சாலையில் வடகண்டம் என்ற ஊரின் பேருந்து நிறுத்தத்தில் இறங்கி கரையபுரம் செல்லும் வழி என்று கேட்டு அவ்வழியில் சென்றால் கோவிலை அடையலாம். கோவில் வரை வாகனங்கள் செல்லும். கோவில் வெட்டாற்றங்கரையில் அமைந்துள்ளது. அருகில் திருக்கண்ணமங்கையில் (திவ்ய தேசம்) ஸ்ரீ பக்தவத்சல பெருமாள் கோவில் உள்ளது.
ஆலய முகவரி அருள்மிகு கரவீரநாதர் திருக்கோயில்
கரையபுரம்.
மணக்கால் ஐயம்பேட்டை அஞ்சல்
திருவாரூர் வட்டம்
திருவாரூர் மாவட்டம்
PIN - 610104

இவ்வாலயம் தினந்தோறும் காலை 9 மணி முதல் 11 மணி வரையிலும், மாலை 6 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் திறந்திருக்கும்.
 
கரவீரம் என்பது பொன்னிறப் பூக்களைத் தருகின்ற ஒருவகை மரத்தின் பெயர். பொன்னலரி என்றும் அதனைக் குறிப்பதுண்டு. ஒரு காலத்தில் பொன்னலரிக் காடாக இத்தலம் இருந்தது. பொன்னலரியைத் தலமரமாகக் கொண்டதால் இத்தலம் கரவீரம் என்று பெயர் பெற்றது. இங்குள்ள இறைவன் கரவீரநாதர் என்றும் பெயர் பெற்றார். இத்தல இறைவன பிரம்ம தேவனால் பூஜிக்கப் பட்டவர் ஆதலால் இறைவனுக்கு பிரம்மபுரீஸ்வரர் என்ற் பெயரும் உண்டு.

கௌதமர் பூசித்த இத்தலம் திருக்கண்ணமங்கை பெருமாள் கோயிலோடு இணைந்த கோயிலாகும். நான்கு புறமும் மதிற்சுவருடன் ஒரு முகப்பு வாயிலுடன் ஆலயம் அமைந்துள்ளது. கோவிலுக்கு வெளியில் ஆலயத்தின் தீர்த்தம் அனவரத தீர்த்தம் காணலாம். முகப்பு வாயில் கடந்தால் விசாலமான முற்றவெளியுடன் வெளிப் பிரகாரம் உள்ளது. நேரே பலிபீடம், அடுத்து நந்தி மண்டபம் ஆகியவை உள்ளன. சுவாமி, அம்பாள் கோயில்களைச் சேர்த்த பெரிய வெளிப் பிராகாரத்தில் விநாயகர், முருகன், சூரியன், சந்திரன், சனீஸ்வரன், பைரவர் ஆகியோரின் சந்நிதிகள் உள்ளன. நந்தி மண்டபத்தை அடுத்து ஒரு சிறிய கோபுரம். கோபுர வாயில் வழியே உள்ளே சென்றால் நேரே கருவறையில் கிழக்கு நோக்கி இறைவன் சுயம்பு லிங்கமாக எழுந்தருளியுள்ளார். அம்பாள் சந்நிதி இறைவன் சந்நிதிக்கு வலதுபுறம் உள்ளது. இத்தகைய அமைப்புள்ள கோவில்கள் திருமணக் கோலம் என்று கூறுவார்கள். அம்பாள் சந்நிதிக்கு எதிரில் சூரிய பகவானின் சந்நிதியும் உள்ளது. மூலவர் கருவறை கோஷ்டத்தில் தட்சிணாமூர்த்தி, மகாவிஷ்ணு, பிரம்மா, துர்க்கை ஆகியோர் உள்ளனர்.
இக்கோவிலில் கெளதம முனிவருக்கு தனி சந்நிதி உள்ளது. அமாவாசை நாட்களில் பெண்கள் கெளதம முனிவர் ஜீவசமாதியில் உள்ள தலவிருட்சத்திற்கு தண்ணீர் ஊற்றிவிட்டு, பின் பிரம்மபுரீஸ்வரரை வழிபாடு செய்கிறார்கள். இதனால் அடுத்த அமாவாசைக்குள் திருமணம் நிச்சயமாகும் என்பது நம்பிக்கை. ஆலயத்தின் தல விருட்சமான செவ்வரளி மரம் மேற்கு வெளிப் பிரகாரத்தில் இறைவன் சந்நிதி விமானத்திற்குப் பின்புறம் உள்ளது. இத்தலத்திற்கு வந்து தலவிருட்சமான செவ்வரளிக்கு 3 குடம் தண்ணீர் ஊற்றி, அம்பாளின் திருப்பாதத்தில் 3 மஞ்சள் கிழங்கு வைத்து வழிபட வேண்டும். பிறகு இந்த மஞ்சளை தண்ணீரில் கரைத்து அந்த நீரில் நேய்வாய்ப்பட்ட குழந்தைகளை குளிப்பாட்டினால் நோய் குணமாகும். குழந்தைகள் நோயின்றி வாழ்வார்கள என்பது ஐதீகம்.

திருஞானசம்பந்தர் இத்தலத்து இறைவன் மேல் பாடியுள்ள இப்பதிகம் முதல் திருமுறையில் இடம் பெற்றுள்ளது. திருஞான சம்பந்தர் இத்தலம் வந்த போது இருட்டிவிட்டதால், இரவு தங்கி மறு நாள் இறைவனை பாடியுள்ளார். சம்பந்தர் தான் பாடிய ஒவ்வொரு பாடலிலும் இப்பெருமானை வழிபட்டால் வினைகள் யாவும் நீங்கும் என பாடியுள்ளார். எனவே பக்தர்கள் ஏதேனும் ஒரு இரவில் இங்கு தங்கி மறுநாள் இறைவனை வழிபாடு செய்தால் எப்படிப்பட்ட கஷ்டமாக இருந்தாலும் நீங்கி விடும் என்பது ஐதீகம்.

சுந்தரர் பெருமானுக்கு ஊன்றுகோல் வழங்கிய பூண்டி ஊன்றீஸ்வரர்.

சுந்தரர் பெருமானுக்கு ஊன்றுகோல்_வழங்கிய_பூண்டி_ஊன்றீஸ்வரர்.
கோவில் பூண்டி சத்தியமூர்த்தி அணைக்கு மிக அருகில் அமைந்துள்ளது.
அம்பாளின் திருநாமம் மின்னொளி அம்மை.
திருவள்ளூரில் இருந்சேல்லும் சாலையில் சுமார் 12 கிலோமீட்டர் தொலைவில் திருவெண்பாக்கம் (பூண்டி) கிராமத்தில் அமைந்துள்ளது, மின்னொளி அம்மாள் சமேத ஊன்றீஸ்வரர் திருக்கோவில். இந்த கோவில் பூண்டி சத்தியமூர்த்தி அணைக்கு மிக அருகில் அமைந்துள்ளது. இவ்வாலய இறைவன் ஊன்றீஸ்வரர், வெண்பாக்கநாதர், ஆதாரதண்டேஸ்வரர் ஆகிய பெயர்களில் அழைக்கப்படுகிறார்.

அம்பாளின் திருநாமம் மின்னொளி அம்மை என்பதாகும். கனிவாய்மொழி நாயகி என்ற பெயரும் உண்டு. தேவாரப் பாடல்கள் பெற்ற 276 சிவாலயங்களில், இது 250-வது தேவாரப்பாடல் பெற்ற தலமாகும். அதேநேரம் தொண்டை நாட்டில் உள்ள தலங்களில் 17-வது தேவாரத் தலம் இது.
இந்த ஆலயத்துதின் தீர்த்தம் கயிலாய தீர்த்தம் கொசஸ்தலை ஆறு, தல விருட்சம் இலந்தை மரமாகும். கண் பார்வை இழந்த சுந்தரமூர்த்தி நாயனாருக்கு, சிவபெருமான் ஊன்று கோல் கொடுத்து உதவியதால். இங்குள்ள இறைவனுக்கு 'ஊன்றீஸ்வரர்' என்று பெயர் வந்தது.

கோவிலின் வெளிப்புற தோற்றம்
இதற்கு முன்பு இந்த சிவன் கோவில் கொசஸ்தலை ஆற்றின் கரையில் திருவுளம்புதூர் என்ற ஊரில் இருந்தது. 1942-ம் ஆண்டு பூண்டி நீர் அணை கட்டுவதற்காக திருவுளம்புதூர் உள்ளிட்ட பல கிராமங்களை தமிழக அரசு கையகப்படுத்தியது.

திருவுளம்புதூரில் உள்ள பழைய கோவிலுக்கு பதிலாக. புதிய கோவில் கட்டுவதற்காக திருவெண்பாக்கத்தில் (பூண்டி) மாற்று நிலத்தை அரசு வழங்கியது.

திருவுளம்புதூர் பழைய கோவிலில் இருந்து மூலவர், தூண்கள். சிற்பங்கள் தவிர மற்ற தெய்வ சிலைகள் அகற்றப்பட்டு, புதிய இடத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்டது. இந்த புதிய கோவிலுக்கு 1968-ம் ஆண்டு ஜூன் 5-ந் தேதி கும்பாபிஷேகம் நடைபெற்றது.

மேலும் பழைய கோவிலில் பிரதான கோபுரத்தின் சில பகுதிகள் பூண்டி ஏரியின் கரையில் இருந்து இன்னும் காணப்படுவதாக கூறப்படுகிறது.

*#தலவரலாறு#*

சைவ குரவர்களில் ஒருவர் சுந்தரமூர்த்தி நாயனார். இவர் திருவாரூரில் பரவை நாச்சி யாரை மணந்து வாழ்ந்து வந்தார். சிறிது காலங்கள் உருண்டோடிய பின்னர் சுந்தரமூர்த்தி நாயனார், திருவொற்றியூரில் சிவ சேவை செய்து வந்த சங்கிலி நாச்சியாரை மணக்க முடிவு செய்தார். இது குறித்து அவர் சிவபெருமானிடம் கூற சிவபெருமானோ இரண்டா வது திருமணம் செய்யக்கூடாது என்று மறுப்பு தெரிவித்தார்.

சுந்தரர் தன்னுடைய நிலையில் மாறாமல் இருந்ததால் சிவபெருமானே அவருக்கு சங்கிலி நாச்சி யாரை தன் தலைமையில் இரண்டாவது திருமணம் செய்து வைத்தார். அப்போது 'இனிமேல் முதல் மனைவியான பரவை நாச்சியாரை பார்க்கச்செல்லக்கூடாது' என்று சிவபெருமான் கூறினார். அதற்கு செல்ல மாட்டேன்' என்று கூறினார் சுந்தரர். சங்கிலி நாச்சியாரும் சுந்தரரிடம், நீங்கள் என்னை விட்டு பிரிந்து போகக்கூடாது எனக் கூறினார். மேலும் சத்தியமும் செய்து கேட்டார்.

உடனே சுந்தரர், அந்த இடத்தில் இருந்த மகிழம்பூ மரத்தின் அடியில் நின்று, 'உன்னை விட்டு பிரிந்து, மீண்டும் முதல் மனைவியிடம் செல்ல மாட்டேன்' என்று சத்தியம் செய்து கொடுத்தார். சில காலங்கள் சங்கிலி நாச்சியாருடன் வாழ்ந்து வந்த சுந்தரமூர்த்தி நாயனாருக்கு திடீரென முதல் மனைவி பரவை நாச்சியாரின் நினைப்பு வந்து மனதை வருத்தியது. அவரை ஒரு முறையாவது பார்க்க வேண்டும் என ஆசைப்பட்டார்.

அதனால் சிவபெருமானுக்கும், சங்கிலி நாச்சியாருக்கும் தான் செய்து கொடுத்த சத்தியத்தை மீறி திருவொற்றியூரில் இருந்து திருவாரூருக்கு கிளம்பினார் சுந்தரர், திருவொற்றியூர் எல்லையை விட்டு அவர் வெளியேறிய போது சிவன் அவரது இரண்டு கண்களிலும் பார்வை பறிபோகும்படி செய்து விட்டார்.

சத்தியத்தை மீறியதால் தன் கண் பார்வை போனதை உணர்ந்த சுந்தரர், சிவபெருமானிடம் தனக்கு கண்களை தரும்படி வேண்டினார். அவரோ கண்கள் தர வில்லை. இரண்டு கண்களும் தெரியாமல் தட்டு தடுமாறியபடியே திருவாரூர் செல்லும் வழியில் இத்தலம் வந்து சேர்ந்தார் சுந்தரமூர்த்தி நாயனார்.

இங்கும் சிவனிடம் தனக்கு கண்கள் தரும்படி கேட்டார். ஆனால் சிவனோ அமைதியாகவே இருந்தார். சுந்தரர் விடவில்லை. பரம்பொருளாகிய நீங்கள் இங்கு தான் இருக்கிறீர்களா? இருந்தால் எனக்கு கண் தருவீர்களே' என்று சொல்லி வேண்டினார். சுந்தரரின் நிலையைக் கண்டு சிவபெருமான் இரங்கினாலும், அவருக்கு கண்களை தருவதற்குப் பதிலாக ஊன்றுகோல் ஒன்றை மட்டும் கொடுத்தார்.

தன் நண்பனான சிவன் தனக்கு அருள் செய்யாமல் விளையாடுகிறாரே என்று எண்ணிய சுந்தாருக்கு கோபம் வந்துவிட்டது. அவர் தனக்கு கண் தரும்படி சிவனிடம் வாக்குவாதம் செய்தார். சிவனோ இறுதிவரையில் அவருக்கு கண் தரவில்லை. இதனால் கோபம் அதிகரித்த சுந்தரர், சிவன் கொடுத்த ஊன்று கோலைத் தூக்கி வீசினார். அப்போது ஊன்றுகோல் அங்கிருந்த நந்தி மீது பட்டு விட்டது. இதனால் நந்தியின் வலது கொம்பு ஒடிந்து விட்டது. 
வேதசத்சங்கம்

*#கொம்பு_உடைக்கப்பட்ட_நந்தி_சிலை#*

இதைக்கண்டு சிவபெருமான் ஆத்திரம் அடைந்தார். ஆனால் அவரது மனைவியான மின்னொளி அம்மனோ, 'தவறு செய்வது மனித இயல்பு எனக்கூறி சிவபெருமானை சமாதானம் செய்தார். சுந்தரர் கண் தெரியாமல் ஊன்றுகோலை வைத்துக் கொண்டு தடுமாறிய போது, அம்பாள் அவருக்கு வழிகாட்டி கூட்டி செல்வதற்காக கிளம்பினாள். ஆனால் சிவன், அம்பாளைத் தடுத்து விட்டாராம்.

இதனை உணர்த்தும் விதமாக இவ்வாலயத்தில் அருளும் அம்மனின் இடது கால் சற்றே முன்புறம் நகர்ந்து இருக்கிறது. பின்னர் அம்பாள் சுந்தரரிடம், 'மனிதர்கள் தவறு செய்வது இயற்கை. ஒவ்வொருவர் செய்யும் தவறுகளும் அவர்களுடைய ஊழ்வினைகளுக்கேற்ப நிகழ்கிறது.

தற்போது உன்னுடைய கண்கள் பறிக்கப்பட்டிருப்பதும் ஒரு ஊழ்வினையே. எனவே கலங்காது செல். தகுந்த காலத்தில் ஈசனின் அருளால் உன் பார்வை திரும்பும்' என்று தாய்மை உணர்வுடன் இனிய சொற்களால் சுந்தரரை சாந்தப்படுத்தினார். மேலும் சுந்தரர் தடுமாறாமல் நடந்து செல்ல வழியில் மின்னல் போன்ற ஒளியை காட்டி வழி காட்டினாராம்.

இதனால் இத்தல அம்மன் 'மின்னொளி அம்பாள்' என்றும், கண் பார்வை இழந்த சுந்தரமூர்த்தி நாயனாருக்கு கனிவாக பேசி அருளியதால் `கனிவாய் மொழி நாயகி' என்றும் அழைக்கப்படுகிறார்.

பகிரபடும் பகிர்வுகள் பிறர் அறிந்துக் கொள்வதற்காக தவிர பிறர் ப்ரதி உரிமையை மீறும் எண்ணம் இல்லை..அசல் பதிவேற்றியவருக்கு நன்றி.

பின்னர் இத்தலத்தில் இருந்து தன்னுடைய யாத்திரையை தொடங்கிய சுந்தரர், காஞ்சிபுரம் சென்றார். அங்கு ஏகாம்பரநா ரை பாடிப்பரவி இடது கண்ணும், திருவாரூருக்கு சென்று தியாகேசனைப் பாடி வலது கண்ணும் பெற்று, பின்னர் பல தலங்களை வழிபட்டு வெள்ளை யானையில் கயிலாய மலையை சென்றடைந்தார் என்பது வரலாறு.

இவ்வாலயத்தில் வீற்றிருக்கும் சிவபெருமான் கிழக்கு நோக்கி சுயம்பு லிங்கமாக அருள்பாலிக்கிறார். அமாவாசை, பவுர்ணமி நாட்களில் இத்தல மூலவருக்கு வடை மாலை சாத்தி வழிபடுகின்றனர். கருவறைக்கு முன்புறம் உள்ள நந்தியின் வலது கொம்பு உடைந்து இருக்கிறது. அருகில் சுந்தரர் இடது கையில் ஊன்றுகோல் வைத்தபடி காட்சி தருகிறார். கண் பார்வை இழந்த கோலத்தில் இருக்கும்படியாக இவரது சிலை சிறப்பாக வடிவ மைக்கப்பட்டுள்ளது.

இது தவிர ஆலயத்தில் வழித்துணை விநாயகர், கணபதி, பாலகணபதி, தட்சிணாமூர்த்தி, ஆறுமுகவேலவர், வள்ளி, தெய்வானை, லிங்கோத்பவர், மகாலட்சுமி, பிரம்மா, சண்டிகேஸ்வரர், துர்க்கை, பைரவர் போன்ற திருமேனிகளும் உள்ளன.

இவ்வாலய இறைவனுக்கு வஸ்திரம் சாத்தி, அபிஷேகம் செய்து வழிபட்டால், திருமணத்தடை விலகும். கண் பார்வை குறைபாடு உள்ளவர்கள். இத்தல சுவாமிக்கும், அம்பாளுக்கும் தேன் அபிஷேகம் செய்து வழிபடுகின்றனர். இதனால் படிப்படியாக பார்வை குறைபாடு நீங்குவதாக பக்தர்கள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.

இந்த ஆலயம் தினமும் காலை காலை 6 மணி முதல் பகல் 12 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரையும், பக்தர்கள் தரிசனம் செய்வதற்காக திறந்து இருக்கும். 

ஓம் நமசிவாய
 படித்து பகிர்ந்தது 
இரா இளங்கோவன் 
நெல்லிக்குப்பம். 

Followers

திருச்சி உறையூர் பஞ்சவர்ணேஸ்வரர் திருக்கோயில்

ஐவண்ணப்பெருமான்.. திருமூக்கீச்சுரம்.. பிரம்மன் வழிபட்ட தலம்..!! அருள்மிகு பஞ்சவர்ணேஸ்வரர் திருக்கோயில்...!!    *இந்த கோயில் எங்க...