Tuesday, December 5, 2023

கார்த்திகை மாததேய்பிறை அஷ்டமி அறிந்து கொள்வோம் பைரவரின் பெருமைகள்


சிவபெருமானின் ஐந்து குமாரர்களாக கணபதி,முருகன்,பைரவர்,
வீரபத்திரர்,சாஸ்தா என்று சொல்லப்படுகிறது.
ஐவரில் மகா பைரவர் பொதுவாக எல்லா ஆலயங்களிலும் ஈசான்ய மூலை எனப்படும் வடகிழக்கு திசையிலே நிர்வாணக் கோலத்தினராய்,நீல மேனியராய் நாய் வாகனத்துடன் காட்சி தருபவர் தான் பைரவர் பெருமாள்.

காலையில் ஆலயம் திறந்தவுடனும்,இரவு அர்த்தஜாமத்தில் பூஜை முடிவுறும் போதும் பைரவருக்கு என்று விசேஷ பூஜைகள் செய்யப்பட வேண்டும் என்று பார்த்த நித்ய பூஜா விதி கூறுகிறது.

அதே போல ஆலயத்தின் மற்ற திருச்சன்னதிகளை பூட்டிச் சாவியை பைரவர் பாதத்தில் வைத்து விட்டு அதன் பின் வெளிக்கதவை பூட்டிச் சாவியை எடுத்துச் செல்லும் வழக்கம் இன்றும் நடைமுறையில் உள்ளது.

சிறப்புகள்

சிவபிரானின் தத்புருஷ முகத்திலிருந்து தோன்றியவர்.
காசியம் பதியில் சிவகணங்களுக்கு தலைவராக விளங்குபவர்.
ஆணவம் கொண்ட பிரம்மனின் சிரம் கொய்தவர்.

மன்மதனின் கர்வம் அடங்கச் செய்தவர்.
முனிவரின் சாபத்திலிருந்து தேவேந்திரன் மகன் ஜெயந்தனைக் காத்தவர்.
சனியை சனீஸ்வரராக்கி நவக் கோள்களில் வலிமை வாய்ந்த கோளாக உயர்த்தி பெருமைச் சேர்த்தவர் என்ற பெருமைமிகு சிறப்புகளைக் கொண்டவர்.

இவரைக் காலபைரவர்,
மார்த்தாண்ட பைரவர்,
க்ஷேத்ரபாலகர்,
சத்ரு சம்ஹார பைரவர்,
வடுக பைரவர்,
சொர்ணகர்சன பைரவர் என்று பல பெயர்களில் அழைத்து வழிபடுகிறோம்.

ஒவ்வொரு மாதமும் வரும் தேய்பிறை அஷ்டமி திதி பைரவருக்கு உகந்த நாள்.அந்த வகையில் ஒவ்வொரு அஷ்டமி திதிக்கும் ஒரு பெயர் உண்டு.இதில் கார்த்திகை மாத தேய்பிறை அஷ்டமி ருத்ராஷ்டமி என்றும் காலபைரவாஷ்டமி என்றும் சொல்லப்படுகிறது. 

ஒவ்வொரு சிவன் கோவிலிலும் வடகிழக்குப் பகுதியில் தனிச்சந்நிதியில் காலபைரவர் எழுந்தருளி இருப்பார்.சில கோவில்களில் சூரியன்,பைரவர்,சனி பகவான் என்ற வரிசையில் காட்சி தருவதும் உண்டு.

சிவபெருமான் வீரச்செயல்களைச் செய்யும் காலங்களில் ஏற்கும் திருவுருவங்களை பைரவர் திருக்கோலம் என்று புராணம் கூறுகிறது.

பைரவரின் திருவுருவத்தில் பன்னிரண்டு ராசிகளும் அடக்கமாகியுள்ளன.

தலையில் மேஷ ராசியும்,
வாய்ப் பகுதியில் ரிஷப ராசியும்,
கைகளில் மிதுனமும்,
மார்பில் கடகமும்,
வயிற்றுப் பகுதியில் சிம்மமும்,
இடையில் கன்னியும்,
புட்டத்தில் துலாமும்,
லிங்கத்தில் விருச்சிகமும், தொடையில் தனுசும்,
முழந்தாளில் மகரமும்,
☆காலின் கீழ்ப்பகுதியில் கும்பமும்,
அடித்தளங்களில் மீன ராசியும் அமைந்துள்ளதாக ஜாதக நூல்கள் விவரிக்கின்றன.

ஒரு சமயம் அந்தகாசுரன் என்னும் அரக்கனின் அட்டூழியங்களை ஒழிக்க தேவர்கள் சிவனாரை வேண்ட ஈசன் தன் இதய அக்னியிலிருந்து பைரவரை உருவாக்க,அது விஸ்வரூபமெடுத்து ஒன்றாகி,ஒன்றிலிருந்து எட்டாகி,எட்டிலிருந்து அறுபத்து நான்காகி அசுரர்களை முழுவதுமாக அழித்து தேவர்களுக்கு அமைதியை வழங்கியதாகவும்,இதனால் மகிழ்வடைந்து தேவர்கள் அறுபத்து நான்கு யோகினிகளை அவர்களுக்கு திருமணம் முடித்து வைத்ததாகவும் புராணங்கள் கூறுகின்றன.

தாட்சாயிணி தேவி தன் தந்தை தட்சன் செய்த யாகத்தில் தனது மருமகனான சிவனாருக்கு யாகத்தில் தரவேண்டிய அவிர்பாகத்தை தராது அவமதித்ததால்,தச்சனின் மகளான பார்வதி யாக குண்டத்தில் தனது உயிரைத் தியாகம் செய்த போது,அதனால் உக்கிரநிலை அடைந்த சிவனார் தாட்சாயணியின் உடலைத் தாங்கி உலகமெல்லாம் சுற்றி அலைந்த போது திருமால் தன் சக்கரத்தால் தேவியின் உடலை பல கூறுகளாக்கி,இப்பூலோகத்தில் பல இடங்களில் விழச் செய்தார்.

தேவியின் உடலுறுப்புகள் விழுந்த ஒவ்வொரு இடமும் ஒவ்வொரு சக்தி பீடங்களாயின என்றும்,அவ்வாறு ஏற்பட்ட சக்தி பீடங்களுக்குப் பாதுகாவலராக பைரவ வேடம் தாங்கி சிவப்பிரானே காவல் காத்து வருவதாகவும் புராணங்கள் கூறுகின்றன.
 நெல்லிக்குப்பம் திருக்கண்டேஸ்வரம் நடனபாதேஸ்வரர் கோவிலில் உள்ளது ஆனந்த காலபைரவர். 

பைரவர்,எட்டு மற்றும் அறுபத்து நான்கு என்ற வகையில் அருள்புரிகிறார்.

பைரவர் பாம்பைப் பூணுலாகக் கொண்டு,சந்திரனை சிரசில் வைத்து,சூலம்,மழு,பாசம்,தண்டம் ஏந்தி காட்சி தருவார். 

பைரவரை வழிபட்டால் பிரம்மஹத்தி தோஷம் நீங்கும்.

சனி பகவானின் ஆசிரியர் பைரவர் என்று சொல்லப்படுவதால் சனியின் தொந்தரவு இருக்காது.எதிரிகள் அழிவர்.பில்லி,சூன்யம்,திருஷ்டி அகலும்.அக்கம் பக்கத்தவர்களின் தொந்தரவு இருக்காது.யமபயம் தவிர்க்கப்படும்.

பொதுவாக சிவாலயங்களில் காணப்படும் கால பைரவரை எந்த நேரத்தில் வழிபட்டாலும் அவர் அருள் நிச்சயம் கிட்டும்.சிறப்புப் பூஜைகள் செய்வதால் தோஷ நிவர்த்திகளுக்கு நல்ல பலன்கள் கிடைக்கும்.

No comments:

Post a Comment

Followers

நட்சத்திரப் பிரதோஷம் என்றால் என்ன❓

1. தினசரி பிரதோஷம் : தினமும் பகலும், இரவும் சந்திக்கின்ற சந்தியா காலமாகிய மாலை 4.30 மணி முதல் 6.30 மணி வரை உள்ள காலமாகும். இந்த...