Saturday, April 20, 2024

அருள்மிகு நடுத்தறிநாதர் திருக்கோயில், திருகன்றாப்பூர்,

அருள்மிகு நடுத்தறிநாதர் திருக்கோயில், திருகன்றாப்பூர்,            கோயில் கண்ணாப்பூர் அஞ்சல்,          
PIN - 610202
திருவாரூர் வட்டம்,
திருவாரூர் மாவட்டம். 
*திருகன்றாப்பூர் இப்போது "கோயில் கண்ணாப்பூர்" என்று அழைக்கப்படுகிறது. 

*இறைவன் பெயர்:  நடுத்தறிநாதர்,

*இறைவி பெயர்: மாதுமை நாயகி.           

*தல விருட்சம்: பனை  (கல்பனை). இப்போது இல்லை. கல்பனை நாதர் சந்நிதி உள்ளது.

*தேவாரப்பதிகம் பாடியோர்: திருநாவுக்கரசர்.                         
*தல வரலாறு: தன்னுடைய கோபத்திற்கு ஆளான சுதாவல்லி எனும் வித்யாதரப் பெண்ணை, "மண்ணுலகத்தில் பிறந்து சிவனைப் பூஜித்து எம்மை அடைவாய்" என்று சபித்தார், உமாதேவி. 

அதன்படி அந்தப் பெண்,  இத்திருத்தலத்தில், சைவ வேளாளர் மரபில் பிறந்து, கமலவல்லி என்ற பெயருடன்   சிவபெருமானையே நினைத்து, பூஜை செய்து வந்தாள். 

திருமண வயது வந்தவுடன் அவளுக்கு பெற்றோர் திருமணம் செய்து வைத்தனர். திருமணத்திற்குப் பிறகும், சிவபெருமானிடம் பேரன்பு கொண்டதால், உரிய பூஜைகள் செய்து வாழ்ந்து வந்தாள். 

ஆனால் கணவரும், மாமியாரும் சிவனை வழிபடுவதை விரும்பவில்லை.         எனவே அவர்கள் இருவருக்கும் தெரியாதவறு சிவலிங்க வழிபாடு செய்து வந்தாள். 

ஒருநாள் சிவலிங்க வழிபாட்டைக் கண்ட கணவன், அந்த சிவலிங்கத்தை கிணற்றில் எறிந்து விட்டான். 

கணவனின் செயலைக் கண்டு வருந்திய கமலவல்லி, வீட்டின் பின்புறம் கன்றுக் குட்டிகள் கட்டப்பட்டு இருந்த, ஒரு தறியையே (ஆப்பு) சிவபெருமானாக பாவனை செய்து வழிபட்டு வந்தாள். அதையும் கண்டுபிடித்த அவளது கணவன், கடுமையாகக் கோபம் கொண்டு அத்தறியைக் கோடரியால் வெட்டினான். இரண்டாக பிளவுபட்ட தறியில் இருந்து ரத்தம் வழிந்தது. 

கமலவல்லியின் பக்தியை உலகில் உள்ளவர்களும், அவளது கணவனும் அறிய வேண்டுமென்பதற்காக அக்கட்டுத் தறியில் லிங்க வடிவத்தில் இறைவன் காட்சி தந்தார்.  

சிவபெருமான் தறி என்ற ஆப்பிலிருந்து வெளிப்பட்டு சைவப் பெண்ணிற்கு அருள்புரிந்த இடம் என்பதாலும், கன்று கட்டும் தறி லிங்கமாக மாறியதாலும் இத்தலம் திருக்கன்றாப்பூர் (கன்று+ஆப்பு+ஊர்) என்று அழைக்கப்படுகிறது. 

*இன்றும் மூலவரது உச்சியில் கோடரி வெட்டு உள்ளதைக் காணலாம். 
           
*இக்கோயிலின் வழியே நடந்துசென்றால், இக்கோவிலில் தங்கி வாழ்ந்த புண்ணியத்தைப் பெறலாம். இக்கோவிலில் தங்கி உதவி செய்தால், நல்ல மனைவி - நல்ல மகள் கிடைக்கப் பெற்று, எல்லா வளங்களையும் செல்வங்களையும் பெறலாம். 

‘கன்றாப்பூர்’ என்று ஒருமுறை சொன்னாலேயே பாவம் கெடும். நோய் நீங்கும். நல்வாழ்வு கிட்டும். 

இத் தலத்தில் வாழ்வோர் இம்மையில் சிவயோகத்தில் அமர்ந்து மறுமையில் சிவபோகம் துய்ப்பர்.       

*கண் சம்பந்தப்பட்ட நோய் இருப்பவர்கள், இந்தக் கோவிலுக்கு அருகில் உள்ள சிவகங்கை தீர்த்தத்தில் குளித்தால் கண் நோயில் இருந்து விடுபடலாம் என்ற நம்பிக்கை பக்தர்களிடையே நிலவுகிறது.

*இங்கு இருமுறை வருபவர்கள் உலகில் உள்ள அனைத்து சிவாலயங்களிலும் வழிபாடு செய்த பலன் பெறுவதாக கூறப்படுகிறது.      

*கர்ப்பகிரஹம் எழுப்பப்பட்டிருக்கும் அடித்தளத்தை சுற்றியுள்ள உப-பீடம் முழுவதும்  63 நாயன்மார்களின் திரு உருவங்கள் சிறு சிறு சிற்பங்களாக வடிக்கப்பட்டுள்ளன . 

*இந்த கிராமத்தில் உள்ள அனைத்து நிலங்களும் நடுத்தறியப்பர் ஆண்டவருக்கு சொந்தமானது என கூறப்படுகிறது.

*திருவாரூரில் இருந்து 18 கி.மீ. தொலைவில் இத்தலம் உள்ளது. 

ஓம் நமசிவாய 
படித்து பகிர்ந்தது 
இரா இளங்கோவன் 
நெல்லிக்குப்பம். 

No comments:

Post a Comment

Followers

அஷ்டதிக் பாலகர்கள் எட்டு திசைகளுக்கு உரிய காவலர்கள்..

அஷ்டதிக் பாலகர்கள் எட்டு திசைகளுக்கு உரிய காவலர்கள் ஆவர். இவர்கள் எண்திசை நாயகர்கள் என்றும் அழைக்கப்படுகின்றனர். அஷ்டதிக் பாலகர்...