'துலாபார நோன்பு' செய்யப்படும் சிவாலயம் - தெரியுமா..?!
பொதுவாக 'துலாபாரநேர்த்தி' என்பது வேண்டிக்கொள்பவரின்
எடைக்கு நிகரான திரவியங்களை தராசில் இட்டு நிறுத்தி இறைசந்நிதியில் சமர்ப்பிக்கும் நேர்த்திக்கடன் ஆகும்.
பெரும்பாலும் விஷ்ணு கிரஹங்களில் செய்யப்படும் பிரார்த்தனை இது. ஆயினும்
இத்தகு துலாபார நேர்ச்சையினை வித்தியாசமாக சிவாலயத்திலும் நிகழ்த்துவது ஆச்சரியம் அல்லவா..?!
மிக அரிதான இத்தகு நேர்ச்சை
தஞ்சை மாவட்டம் - திருகோடிகாவில் அமைந்துள்ள
ஸ்ரீ திரிபுரசுந்தரி ஸமேத
ஸ்ரீ திருக்கோடீஸ்வரர் ஆலயத்தில் செய்யப்படுகிறது.
சோழர்குல சிவஞானச் செல்வி செம்பியன்மாதேவியாரின் முதல் கற்றளி (கி.பி. 950 - 957) என்கிற பெருமை உடைய புராதன க்ஷேத்திரம் திருகோடிகா. (பல்லவர் காலத்திய செங்கற்றளி)
கி.பி. 850 - ல் காஞ்சியை ஆண்ட ஸ்ரீ நிருபதுங்கபல்லவர் என்கிற அரசரின் மனைவி வீரமாதேவியார் அவர்கள் இத்திருக்கோயிலில் துலாபார நோன்பும் ; ஹிரண்யகர்ப்ப பூஜையும் செய்து திருக்கோடீஸ்வரருக்கு ஏராளமான தங்கத்தினைத் தானமாக அளித்ததாகக் கல்வெட்டுச் செய்திகள் மூலம் அறிகின்றோம்.
பிற்காலத்தில் வந்த சோழர்குல அரசகுடிகளும் இத்திருக்கோயிலில் துலாபார நேர்த்தி செய்து ஏராளமான நிவந்தங்களை அளித்துள்ளார்கள்.
இடைப்பட்ட காலத்தில் தடைப்பட்டிருந்த இந்த வைபவம் மீண்டும் கோடிகா அன்பர்களின் பெருமுயற்சியால் கடந்த 2001 - ம் வருடம் சித்திரைத் திங்கள் முதல்நாளில் துவங்கப்பெற்றது.
அச்சமயத்தில் திருவாவடுதுறை ஆதீனம்
23- வது குருமஹா சந்நிதானமவர்கள் எடைக்கு எடை வெல்லமும்; திருப்பனந்தாள் ஆதீனத்து குருமஹா சந்நிதானமவர்கள் எடைக்கு எடை எள்ளும் செலுத்தி
திரு கோடீஸ்வரரை வழிபட்டனர் என்பது இங்கு குறிப்பிடத்தக்க விஷயம்.
💐எந்தெந்தத் திரவியத்திற்கு என்னென்ன பலன்..?
🌷நோய்நொடி மற்றும் கடன் நிவாரணத்திற்கு நல்லெண்ணையும்;
🌷பயிர் செழிப்பதற்கு நெல் மற்றும் தானியங்களும்;
🌷செல்வ கடாக்ஷம் பெறுவதற்கு நெய்யும்;
🌷திருமணத்தடை விலகுவதற்கு மஞ்சள் கிழங்கும்;
🌷சத்புத்திர ப்ராப்தி அடைவதற்கு வெல்லமும்;
🌷கல்வி & வேலை வாய்ப்பிற்கு பால்/தயிர்/ அபிஷேக திரவியங்களும்;
🌷தீவினைக் கோளாறுகளிலிருந்து நிவாரணம் பெறுவதற்கு இலுப்ப எண்ணையும்
துலாபார நேர்த்தி செய்வதற்கு உரிய திரவியங்களாக சொல்லப் பெற்று இருக்கின்றன.
கும்பகோணம் - மயிலாடுதுறை வழித்தடத்தில் 17 கி.மீ. தொலைவில் சூரியனார்கோயிலுக்கு அருகில் அமைந்துள்ள தலம்.
ஓம் நமசிவாய
படித்து பகிர்ந்தது
இரா இளங்கோவன்
நெல்லிக்குப்பம்.
No comments:
Post a Comment