Wednesday, April 9, 2025

திருக்கழுக்குன்றம் பக்தவச்சலேஸ்வரர் (தாழக்கோயில்) வேதகிரீஸ்வரர் (மலைக்கோயில்..

#திருக்கழுக்குன்றம் 
#தாழக்கோயில் (அடிவாரம்)
#திரிபுரசுந்தரிஅம்மன் 
உலகப் புகழ்பெற்ற 
தேவாரம் மற்றும் திருப்புகழ், திருவாசகம் பாடல் பெற்ற தொண்டை நாட்டுத் தலங்களில் ஒன்றான, 
கழுகுகள் பூஜித்து பேறு பெற்ற,
வேதங்களே மலையாக காட்சி தரும் தலமான, சமயக் குரவர்கள் நால்வரும் வழிபட்ட இடமான செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள புகழ்பெற்ற #திருக்கழுக்குன்றம் 
#பக்தவச்சலேஸ்வரர் (தாழக்கோயில்)
#திரிபுரசுந்தரிஅம்மன் 
#வேதகிரீஸ்வரர் (மலைக்கோயில்)
#சொக்கநாயகி அம்மன் திருக்கோயிலை தரிசிக்கலாம் வாருங்கள் 🙏🏻 🙏🏻 
திருக்கழுக்குன்றம் வேதகிரீஸ்வரர் கோயில், தமிழ்நாட்டின் செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள திருக்கழுக்குன்றம் வட்டத்தின் தலைமையிடமான திருக்கழுக்குன்றத்தில் அமைந்துள்ளது. இக்கோயில் சம்பந்தர், அப்பர், சுந்தரர் ஆகியோரால் பாடல் பெற்ற சிவாலயமாகும். பாடல் பெற்ற தலங்களில் தொண்டை நாட்டுத் தலங்களில் ஒன்றாகும்.
திருவாசகத் திருத்தலங்களில் ஒன்று என்ற பெருமையினையும் கொண்ட தளமாகும்.

*மூலவர்  :வேதகிரீசுவரர் (மலைமேல்), பக்தவசலேசுவரர் (தாழக்கோவில்)
*அம்மன் :சொக்கநாயகி (மலைமேல்), திரிபுரசுந்தரி (தாழக்கோவில்)
*தல மரம் : வாழை மரம் (கதலி)
தீர்த்தம்  :சங்குத் தீர்த்தம்
*புராண பெயர் :கழுகுன்றம், திருக்கழுகுன்றம்
*ஊர் :திருக்கழுக்குன்றம்
மாவட்டம் : செங்கல்பட்டு 

#திருஞானசம்பந்தர் பாடிய #திருக்கழுக்குன்றம் தேவாரம்:
"தோடுடை யானொரு காதில் தூய குழைதாழ
ஏடுடை யான்த லைகல னாக இரந்துண்ணும்
நாடு டையான் நள்ளிருள் ஏம நடமாடும்
காடு டையான் காதல்செய் கோயில் கழுக்குன்றே.  

கேணவல்லான் கேழல்வெண் கொம்பு குறளாமை
பூணவல்லான் புரிசடை மேலொர் புனல்கொன்றை
பேணவல்லான் பெண்மகள் தன்னை யொருபாகம்
காணவல்லான் காதல்செய் கோயில் கழுக்குன்றே.    

தேனகத்தார் வண்டது வுண்ட திகழ்கொன்றை
தானகத்தார் தண்மதி சூடித் தலைமேலோர்
வானகத்தார் வையகத் தார்கள் தொழுதேத்தும்
கானகத்தான் காதல்செய் கோயில் கழுக்குன்றே.  

வேதமே மலையாய் இருப்பதால் இத்திருத்தலம் “வேதகிரி” எனப் பெயர் பெற்றது. வேதாசலம், கதலிவனம், கழுக்குன்றம் என்பன இத்தலத்திற்குரிய வேறு பெயர்கள். மலைமேல் ஒரு கோவிலும், ஊருக்குள் ஒரு கோவிலும் உள்ளது. இவை முறையே திருமலைக் கோவில், தாழக்கோவில் என்றழைக்கப்பபடுகின்றன.

மலைக்கோவிலில் இறைவன் வேதபுரீசுவரர் என்ற பெயரிலும், தாழக்கோவிலில் இறைவன் பக்தவத்சலேசுவரர் என்ற பெயரிலும் குடி கொண்டுள்ளனர். ரிக், யஜுர், சாமம், அதர்வணம் என்ற நான்கு வேதங்களும் 4 பெரிய பாறைகளாக இருப்பதாகவும், அவற்றுள் “அதர்வணவேத பாறை உச்சியில் சிவபெருமான் கோவில் கொண்டுள்ளார் என்று தலபுராணம் விவரிக்கிறது”.

மலை சுமார் 4 கி.மி. சுற்றளவு கொண்டது. 500 அடி உயரம் கொண்டு மலைமேல் இராஜகோபுரம், ஒரு பிராகாரத்துடன் அமைந்துள்ளது. மலைமீது ஏறிச்செல்ல நல்ல முறையில் அமைக்கப்பட்ட படிகள் உள்ளன. மூலவர் வாழைப் பூக்குருத்துப் போன்று சுயம்புலிங்க மூர்த்தியாக வேதகிரீசுவரர் என்ற பெயருடனும், அம்மன் சொக்கநாயகி என்கிற பெண்ணினல்லாளம்மை என்ற பெயரிலும் எழுந்தருளி இருக்கின்றனர்.

கழுகுகள் பூசித்துப் பேறு பெற்ற காரணத்தால் கழுக்குன்றம் என்று பெயர் ஏற்பட்டது. முதல் யுகத்த்தில் சாபம் பெற்ற சண்டன், பிரசண்டன் என்னும் கழுகுகளும், இரண்டாம் யுகத்தில் சம்பாதி, ஜடாயு என்னும் கழுகுகளும், மூன்றாம் யுகத்தில் சம்புகுத்தன், மாகுத்தன் என்னும் கழுகுகளும், நான்காம் யுகத்தில் சம்பு, ஆதி என்னும் கழுகுகளும் முறையே வழிபட்டுப் பேறு பெற்றன. மலையில் நாள்தோறும் உச்சிப் பொழுதில் இரண்டு கழுகுகள் வந்து உணவு பெற்றுச் செல்கின்றன.

திருக்கழுக்குன்றம் அருள்மிகு வேதகிரிஸ்வரர் திருக்கோவில் கன்னி ராசிக்கான பரிகார ஸ்தலமாகவும் விளங்குகிறது.

சிறப்புகள்:

இத்தலத்திற்கு வரும் வடநாட்டு யாத்ரிகர்களுக்குப் 'பட்சி தீர்த்தம் ' என்று சொன்னால்தான் புரியும். மலைமீது ஏறிச் செல்ல நன்கமைக்கப்பட்ட மலைப்பாதை - செம்மையான படிகளுடன் உள்ளது. இம்மலையை வலம் வருதல் சிறப்புடையது.

தாழக்கோயில், கல்மண்டபத்தின் மீது செங்கல்லால் அமைக்கப்பட்ட மிகப் பழமையான கோயில். கருவறை கஜப்பிரஷ்ட அமைப்புடையது. கோயிலுக்கு வெளியே ஐந்து தேர்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. சந்நிதிக்கு எதிரில் உள்ள மிக்க புகழுடைய 'சங்கு தீர்த்த'த்தில்
பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை 'சங்கு' பிறக்கின்றது. இதில் கிடைத்த சங்குகள் ஆலயத்தில் வைக்கப்பட்டுள்ளன. இங்குள்ள சங்கு தீர்த்தத்தில் விடியற்காலையில் நீராடி, இம்மலையை வலம் வரின் உடற்பிணி நீங்கும். (இதைச்சில மருத்துவர்களே மேற்கொண்டு அனுபவத்தும் உணர்ந்துள்ளனர்.)

அம்பாளுக்கு (திரிபுரசுந்தரி) மார்பில் ஸ்ரீ சக்கரப் பதக்கம் சார்த்தப்பட்டுள்ளது. ஆண்டில் ஆடிப்பூரம், பங்குனி உத்திரம், நவராத்தியில் வரும் நவமி ஆகிய மூன்று நாட்களில் மட்டுமே அம்பாளுக்கு முழு அபிஷேகம் செய்யப்படுகின்றது. நாடொறும் பாத பூஜை மட்டுமே நடக்கின்றது.

ஆலயத்தை வலம் வரும்போது நந்தி தீர்த்தத்தையடுத்து, அலுவலகச் சுவரில் அழகான அஷ்டபுஜ துர்க்கையின் சிற்பம் உள்ளது; இதன் கலையழகு கண்டுணரத்தக்கது. இங்கு பைரவர் வாகனமின்றி உள்ளார். பிரகாரத்தில் ஆத்மநாதத் சந்நிதி - பீடம் மட்டுமே உள்ளது; பாணம் இல்லை. எதிரில் மாணிக்கவாசகர் சந்நிதி உள்ளது.

மாணிக்கவாசகருக்கு இறைவன் குருவடிவாய்க் காட்சி தந்தருளிய தலம்; அப்பெருமான் வாக்கிலும், திருவாசகத்திலும் இத்தலம் இடம் பெற்றுள்ளது. இத்தலத்திற்கு அந்தகக்கவி வீரராகவப் புலவர் பாடியுள்ள தலபுராணம் உள்ளது.

மார்க்கண்டேயர் வழிபட்ட தலம் எனப்படுகிறது.

திருக்கழுக்குன்றம் வேதகிரீஸ்வரர் திருக்கோயில் 1400 ஆண்டுகால தொன்மை வாய்ந்தது. திருக்கழுக்குன்றம் திருமலைக் கோயிலின் ஒரு கல் மண்டபம் முதலாம் மகேந்திரவர்ம பல்லவன் (பொ.ஊ. 610-640) காலத்தில் கட்டப்பட்ட சிவனுக்குரிய குடைக்கூளி என்று தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர். 7-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த பல்லவர், சோழர், பாண்டியர், ராஷ்டிரகூடர் காலத்திய கல்வெட்டுக்கள் கிடைத்துள்ளன.

*கோவில் அமைப்பு:

தாழக்கோவில் சுமார் 12 ஏக்கர் நிலப்பரளவில் நான்கு புறமும் கோபுரங்களுடன் அமைந்துள்ளது. இவற்றில் ஏழு நிலையுள்ள கிழக்கிலுள்ள கோபுரமே இராஜகோபுரம். ஆலயம் மூன்று பிராகாரங்களுடன் அமைந்துள்ளது. இக்கோபுர வாயில் வழியே உள்ளே நுழைந்தால் நேர் எதிரே ஒரு நான்கு கால் மண்டபம் உள்ளது, வலதுபுறம் உள்ள மண்டபத்தில் கோவில் அலுவலகம் உள்ளது. அலுவலக மண்டபக் கற்சுவரில் அழகான அஷ்டபுஜ துர்க்கையின் சிற்பம் உள்ளது. இடதுபுறம் 16 கால் மண்டபம். இதிலுள்ள தூண்களில் அழகிய சிற்பங்கள் உள்ளன. நான்கு கால் மண்டபத்தையடுத்து இரண்டாவது கோபுரம். கோபுரத்தின் இருபுறமும் விநாயகரும் சுப்பிரமணியரும் உள்ளனர். வெளிப் பிராகாரம் வலம் வரும்போது வடக்குச் சுற்றில் நந்தி தீர்த்தமும், கரையில் நந்தியும் உள்ளது.

இரண்டாவது கோபுர வாயிலில் நுழைந்து பிராகாரம் வலம் வரும்போது சோமாஸ்கந்தர் சந்நிதி உள்ளது. இப்பிராகாரத்தில் பீடம் மட்டுமே கொண்ட ஆத்மநாதர் சந்நிதி உள்ளது; பாணப்பகுதி இல்லை. இதன் எதிரில் மாணிக்கவாசகர் சந்நிதி, ஏகாம்பரநாதர், தல விநாயகரான வண்டுவன விநாயகர், ஜம்புகேசுவரர், அருணாசலேசுவரர் முதலிய சந்நிதிகள் தனித்தனிக் கோவில்களாக அமைந்துள்ளன. ஆறுமுகப் பெருமான் சந்நிதியும் இப்பிராகாரத்தில் உள்ளது.

அழகான முன் மண்டபத்துடன் உள்ள அம்பாள் சந்நிதியும் இப்பிராகாரத்தில் அமைந்துள்ளது. அம்பாள் சந்நிதி சுற்றி வலம்வர வசதி உள்ளது. உள்ளே கருவறையில் நின்ற திருக்கோலத்தில் கிழக்கு நோக்கி அம்மன் திரிபுரசுந்தரி அருட்காட்சி தருகிறாள். அம்பிகைக்கு தினமும் பாதத்தில் தான் அபிஷேகம் நடைபெறுகிறது. ஓராண்டில் மூன்று நாட்கள் மட்டுமே (ஆடிப்பூரம் 11ம் நாள், நவராத்திரி 9ம் நாள், பங்குனி உத்திரம் இரவு) திருவுருவம் முழுவதும் அபிஷேகம் செய்யப்படுகிறது.

அம்பாளுக்கு எதிரில் பிரத்யட்ச வேதகிரீசுவரர் சந்நிதி. அதையடுத்து நடராச சபை. பிராகாரம் வலம் வந்து மரத்தாலான கொடிமரத்தின் முன்பு நின்று வலதுபுறம் உள்ள அகோர வீரபத்திரரைத் தொழுது, துவார பாலகர்களை வணங்கி உள் சென்று, உள் சுற்றில் வலம் வரும்போது சூரியன் சந்நிதியும் அதையடுத்து விநாயகர், 63 மூவர் மூலத் திருமேனிகளும், அடுத்து ஏழு சிவலிங்கங்களும், அதனையடுத்து நாயன்மார்களின் உற்சவத் திருமேனிகளும் உள்ளன. பைரவர் வாகனமின்றி உள்ளார். மூலவர் சதுரபீட ஆவுடையாரில் பக்தவத்சலேசுவரர் என்ற பெயருடன் கிழக்கு நோக்கி எழுந்தரிளியுள்ளார். கருவறை கஜப்பிரஷ்ட அமைப்புடையது. கோஷ்ட மூர்த்தங்களாக விநாயகர், தட்சிணாமூர்த்தி, இலிங்கோத்பவர், பிரம்மா, துர்க்கை ஆகியோர் உள்ளனர். சண்டேஸ்வரர் தனி சந்நிதியில் உள்ளார். உட்பிராகாரத்திலுள்ள சுமார் 7 அடி உயரமுள்ள அகோரவீரபத்திரர் திருவுருவம் பார்த்து மகிழ வேண்டியதாகும்.

சங்கு தீர்த்தம்
கிழக்கிலுள்ள இராஜகோபுரத்திற்கு நேரே உள்ள தெருவின் மறு கோடியில் மிக்க புகழுடைய “சங்கு தீர்த்தம்” உள்ளது. பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை இக்குளத்தில் சங்கு பிறக்கின்றது. இவ்வாறு கிடைத்த சங்குகள் தாழக் கோவிலில் வைக்கப்பட்டுள்ளன. “மார்க்கண்டேயர் இறைவனை வழிபடப் பாத்திரமின்றித் தவித்த போது இறைவன் சங்கை உற்பத்தி செய்து தந்ததாகவும், அதுமுதற்கொண்டு 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை இக்குளத்தில் சங்கு பிறப்பதாகவும்” சொல்லப்படுகிறது. இரண்டு நீராழி மண்டபங்களும், நீராடுவதற்குரிய படித்துறை மண்டபமும் உள்ளன. சங்கு தீர்த்தத்தில் விடியற்காலையில் நீராடி, மலையை கிரிவலம் வருபவர்களின் நோய்கள் யாவும் நீங்கும் என்பது நம்பிக்கை.

மலையைச் சுற்றி அமைந்த 14 தீர்த்தங்கள்:

1. இந்திர தீர்த்தம்.
2. சம்பு தீர்த்தம்.
3. உத்திர தீர்த்தம்.
4. வசிட்ட தீர்த்தம்.
5. சங்கு தீர்த்தம்.
6. மெய்ஞான தீர்த்தம்.
7. அகத்திய தீர்த்தம்.
8. மார்க்கண்ட தீர்த்தம்.
9. கோசிக தீர்த்தம்.
10. நந்தி தீர்த்தம்.
11. வருண தீர்த்தம்.
12. அகலிகை தீர்த்தம்.
13. பட்சி தீர்த்தம்.
14. இலட்சுமி தீர்த்தம்.

*இந்திரன் வணங்கும் தலம்:

மலைமேல் உள்ள வேதகிரீஸ்வரர் கருவறையில் அனைத்து தெய்வங்களும் உள்ளனர். ஈசனை இந்திரன் பூஜிக்கும் தலம் இது. இந்திரன் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை சன்னதியில் நுழைந்து இறைவனை வலம் வந்து, பூஜித்து விட்டுச் செல்வார். இதற்கு ஏற்றாற்போல் கோவில் விமானத்தில் ஒரு துவாரம் உள்ளது. அதன் வழியேதான் இந்திரன் இடி உருவில் வந்து செல்வார். இடி இறங்குவதால் இவ்வாலயத்திற்கு எந்த சேதமும் ஏற்பட்டதில்லை.

பௌர்ணமி கிரிவலம்: 

வேதமே மலையாக காட்சியளிப்பதால் கிரிவலம் வந்து இறைவன் அருளை பெற வேண்டும் என்று நால்வரால் தொடங்கப்பட்டது கிரிவலம். எனவே இத்தலத்தில் பௌர்ணமி கிரிவலம் மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும். திருவண்ணாமலைக்கு முன்பே இங்கு கிரிவலம் இருந்திருக்கிறது. இப்போதும் மாதந்தோறும் பௌர்ணமி அன்று கிரிவலத்தின்போது லட்சக்கணக்கானவர்கள் கலந்து கொள்கின்றனர். வலம்வரும் வழியில் மருந்து மலைச்சாரல் “சஞ்சீவி” காற்று வீசும் இடம் உள்ளது. இங்கு அமர்ந்து மூலிகை காற்றைச் சுவாசித்து பலனடைந்தோர் ஏராளம். நான்கு மலைத்தொடர்களில முலிகைகள் நிறைந்துள்ளதால் அன்றாடம் காலை சங்கு தீர்த்தத்தில் நீராடி இம்மலைத் தொடரை பிரதட்சணமாக வந்தால் மூலிகைக் காற்றுப்பட்டு தீராத வியாதிகள் கூட போய்விடும். முக்கியமாக செவ்வாய்கிழமை திருமலை வலம் வந்து வேதகிரீஸ்வரரை வழிபடுவது சிறப்பு மிக்கதாக கருதப்படுகிறது.

*பாடல் பெற்ற திருத்தலம்:

சிவனின் தேவாரப்பாடல் பெற்ற 274 சிவாலயங்களில், அருள்மிகு திரிபுரசுந்தரி அம்மன் உடனுரை அருள்மிகு வேதகிரிஸ்வரர் திருக்கோவிலும் ஒன்றாகும். ஒரு நாவால் உலகை ஆண்ட திருநாவுக்கரசரும், சீர்காழிப் பிள்ளையார் திருஞானசம்பந்தரும், தம்பிரான் தோழர் சுந்தர மூர்த்தி சுவாமிகளும், தெய்வத்திருவாசகம் தந்த மாணிக்கவாசகரும், அருந்தவ புதல்வர் அருணகிரிநாதரும், பைந்தமிழ்ப் பாவேந்தர் பட்டினத்தாரும் காதலால் கசிந்து உருகிக் கண்ணிர் மல்கப் பாடியுள்ள திருத்தலம்.

பிரார்த்தனை: 

இத்தலத்து சிவபெருமானை வணங்கினால் முக்தி கிடைக்கும். தவிர மனநிம்மதி வேண்டுவோர் இத்தலத்துக்கு பெருமளவில் வருகின்றனர்.

குறிப்பாக மனநிலை பாதிக்கப்பட்டவர்கள், சித்தபிரமை பிடித்தவர்கள் 48 நாட்கள்(ஒரு மண்டலம்)சங்குதீர்த்தத்தில் மூழ்கி விட்டுஇத்தலத்தில் வழிபடும் பட்சத்தில் அவர்கள் முழுமையாக குணமடையும் அதிசயம் நடந்து கொண்டிருக்கிறது. தீராத வியாதிகள் தீருகிறது.

குழந்தை பாக்கியம் வேண்டுவோரும் வழிபட்டு பலனடைகின்றனர். இத்தலத்தில் பக்தர்களின் எல்லாவித வேண்டுதல்களும், திருமண வரம், குழந்தை வரம் ஆகியவை இத்தலத்து பக்தர்களின் முக்கிய பிரார்த்தனை ஆகும்.

ஆஸ்துமா ரத்தகொதிப்பு இருதய நோய் உள்ளவர்கள் காலையும் மாலையும் சஞ்சீவிக் காற்று வீசும் இம்மலை ஏறி வந்து ஈசனை வழிபட்டால் அத்தகைய நோய்களிலிருந்து குணமடைகின்றனர் என்பது கண் கண்ட உண்மை.

நேர்த்திக்கடன்: 

சுவாமி அம்பாள் ஆகியோருக்கு வேஷ்டி சேலை படைத்தல், அன்னதானம் செய்தல், தவிர வழக்கமான அபிஷேக ஆராதனைகள் ஆகியவற்றை இத்தலத்துக்கு வரும் பக்தர்கள் முக்கிய நேர்த்திகடன்களாக செய்கின்றனர். இறைவனுக்கு நைவேத்தியம் செய்து பக்தர்களுக்கு பிரசாதம் தரலாம். வசதி படைத்தவர்கள் கோவில் திருப்பணிக்காக பொருள் தருவதும் வழக்கமாக உள்ளது.

திருவிழாக்கள்: 

லட்சதீப திருவிழா, சித்திரை திருவிழா, விடயாற்றி உற்சவம், திரிபுரசுந்தரி அம்மன் திருவிழா, திருக்கல்யான திருவிழா, நவராத்திரி திருவிழா, கார்த்திகை தீப திருவிழா, தெப்ப திருவிழா, சங்காபிஷேகம், ஆருத்ரா தரிசனம், சுந்தரர் திருவிழா, மாசி மகம், சேரமானுடன் கைலாயம் செல்லும் விழா, புட்டுக்கு மண் சுமந்த சிவபெருமான், பவித்ரோற்சவம், மானிக்கவாசகர் திருவிழா.

*திருக்கழுக்குன்றம் கோவில் பூஜை நேரம்:

08.00 AM – கால சாந்தி பூஜை
11.00 AM – உச்சி கால பூஜை
05.30 PM – சாயராட்ச்சை பூஜை
08.00 PM – அர்தசாம பூஜை

*திருக்கழுக்குன்றம் கோவில் திறக்கும் நேரம்:

தாழக்கோவில் :

தினந்தோறும் காலை 06:00 மணி முதல் பகல் 12:00 மணி வரையிலும் மாலையில் 04:00 மணி முதல் இரவு 08:30 மணி வரையிலும் திறந்திருக்கும்.

மலைக்கோவில் :

தினந்தோறும் காலை 09:00 மணி முதல் பகல் 12:00 மணி வரையிலும் மாலையில் 04:30 மணி முதல் 07:00 மணி வரையிலும் திறந்திருக்கும்.

அருள்மிகு வேதகிரிஸ்வரர் திருக்கோவில்,
திருக்கழுக்குன்றம்,
திருக்கழுக்குன்றம் – 603109,
செங்கல்பட்டு மாவட்டம்.

 ஓம் நமசிவாய 
படித்து பகிர்ந்தது 
இரா இளங்கோவன்
 நெல்லிக்குப்பம். 

No comments:

Post a Comment

Followers

பைரவர் சூலத்துக்குப் பதிலாக கதாயுதத்துடன் காட்சி தருகிறார்.

மூலவர் : #தேசிகநாதர்.  தாயார் : #ஆவுடைநாயகி  தல விருட்சம் :  மாமரம்  தீர்த்தம்: பைரவதீர்த்தம்  பழமை : 500 வருடங்களுக்குள்  புராண...