உலகப் புகழ்பெற்ற தேவாரப் பாடல் பெற்ற திருமுறை தலங்களில் முதல் தலமான, பஞ்சபூத ரம் தில்லை நடராஜர் கோயில்
சமயக்குரவர் நால்வரால் பாடல் பெற்ற சிவத்தலமாகும். இத்திருத்தலம் சிதம்பரம் வட்டத்தில் அமைந்துள்ளது. சேந்தனார் அருள் பெற்றதும், மாணிக்கவாசகர், வியாக்ரபாதர், பதஞ்சலி, உபமன்யு, வியாசர், திருநீலகண்டர், திருநாளைப்போவார், கணம்புல்லநாயனார் முக்தி பெற்ற தலமாகும். பஞ்சபூத தலங்களுள் இது 'ஆகாயத் ' தலம். பஞ்சசபைகளுள் இது கனகசபை, பொற்சபை, சிற்சபை ஆகும். தேவாரப்பாடல் பெற்ற காவிரி வட கரைத்தலங்களில் இத்தலம் முதலாவது சிவதலமாகும்.
இத்தலம் சிதம்பரம் தில்லை நடராஜர் கோயில் என்றும் சிதம்பரம் தில்லை கூத்தன் கோயில் என்றும் சிதம்பரம் கோயில் என்றும் அழைக்கப்படுகிறது. இத்தலம் சைவ இலக்கியங்களில் கோயில் என்ற பெயராலேயே அழைக்கப்பெறுகிறது. அத்துடன் பூலோக கைலாசம் என்றும் கைலாயம் என்றும் அறியப்பெறுகிறது.
இக்கோயிலில் சிவபெருமான் எழுந்தருளி பஞ்சகிருத்திய பரமானந்தத்தாண்டவம் எனும் ஐந்தொழில்கள் (படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல்) நிகழ்த்தும் தன்மையால் ஸ்ரீ ஆனந்த நடராஜமூர்த்தியாய் அருள்பாலிக்கின்றார். இத்தாண்டவத்தை முழுமையாக அனுபவிப்பவள் அன்னை சிவகாமி ஆவாள். இவ்வன்னை இக்கோயிலின் பிராணமய கோசப் பிரகாரத்தில் (சிவகங்கை தீர்த்தத்திற்கு மேற்கில் கீழ்த்திசை ஸ்ரீவகாமகோட்டம் உறை ஞானசக்தியாய் ஸ்ரீ சிவகாமசுந்தரி அம்பிகையாய் அருள்பாலிக்கின்றாள். இது அம்பிகையின் மூலத்தானமாகவும் விளங்குகின்றது.
#புராண பெயர்(கள்):
தில்லை, பெரும்பற்றப் புலியூர், தில்லைவனம்
#பெயர்: சிதம்பரம் தில்லை நடராஜர் திருக்கோயில்
#ஊர்: சிதம்பரம்
#மாவட்டம்: கடலூர்
#மாநிலம்: தமிழ்நாடு
#நாடு: இந்தியா
#மூலவர்: திருமூலட்டானம் _திருமூலநாதர் (மூலட்டானேஸ்வரா்)
#உற்சவர்: நடராஜா் (கனகசபைநாதா்)
#தாயார்: உமையாம்பிகை (சிவகாமசுந்தாி)
#தல
விருட்சம்: தில்லைமரம்
#தீர்த்தம்: சிவகங்கை, பரமானந்த கூபம், வியாக்கிரபாத தீர்த்தம், அனந்த தீர்த்தம், நாகச்சேரி, பிரம தீர்த்தம், சிவப்பிரியை, புலிமேடு, குய்ய தீர்த்தம், திருப்பாற்கடல்
*வழிபட்டோர் :
நந்தனார்,சம்பந்தர், நாவுக்கரசர், சுந்தரர், மாணிக்கவாசகர்,பதஞ்சலி, வியாக்ரபாத முனிவர்,ஆதிசங்கரர், அருணகிரிநாதர்,
திருமூலர்
பாடல் வகை:
தேவாரம், திருவாசகம், திருப்புகழ், திருவருட்பா
*பாடியவர்கள்:
அப்பர், சுந்தரர், சம்பந்தர், மாணிக்கவாசகர், அருணகிரிநாதர், வள்ளலார்
#தேவாரப் பதிகங்கள்:
"அன்னம் பாலிக்குந் தில்லைச்சிற் றம்பலம்
பொன்னம் பாலிக்கு மேலுமிப் பூமிசை
என்னம் பாலிக்கு மாறுகண் டின்புற
இன்னம் பாலிக்கு மோஇப் பிறவியே.
___திருநாவுக்கரசர் திருக்குறுந்தொகை
#அருணகிரிநாதர் அருளிய சிதம்பரம் திருப்புகழ்:
"இருள்காட்டு செவ்வி ததிகாட்டி வில்லி
னுதல்காட்டி வெல்லு ...... மிருபாண
இயல்காட்டு கொல்கு வளைகாட்டி முல்லை
நகைகாட்டு வல்லி ...... யிடைமாதர்
மருள்காட்டி நல்கு ரவுகாட்டு மில்ல
இடுகாட்டி னெல்லை ...... நடவாத
வழிகாட்டி நல்ல றிவுகாட்டி மெல்ல
வினை வாட்டி யல்லல் ...... செயலாமோ
தெருள்காட்டு தொல்லை மறைகாட்டு மல்லல்
மொழிகாட்டு தில்லை ...... யிளையோனே
தினைகாட்டு கொல்லை வழிகாட்ட வல்ல
குறவாட்டி புல்லு ...... மணிமார்பா
அருள்காட்டு கல்வி நெறிகாட்டு செல்வ
அடல்காட்டு வல்ல ...... சுரர்கோபா
அடிபோற்றி யல்லி முடிசூட்ட வல்ல
அடியார்க்கு நல்ல ...... பெருமாளே.
_அருணகிரிநாதர்
*#சிதம்பரம் என்னும் தில்லை:
'கோயில்' என்று பொதுவாக வழங்கினாலே சைவத்தில் சிதம்பரம் நடராசப் பெருமானின் கோயிலைத்தான் குறிக்கும். ஊர்ப்பெயர் தில்லை; கோயிலின் பெயர் சிதம்பரம், இன்று ஊர்ப்பெயர் வழக்கில் மறைந்து, கோயிலின் பெயரே ஊர்ப் பெயராக வழங்கி வருகிறது.தில்லை மரங்கள் அடர்ந்த காடாக இருந்தமையால் தில்லைவனம் என்று பெயர் பெற்றது. (இம்மரங்கள் தற்போது சிதம்பரத்தில் இல்லை; ஆனால் இதற்கு அண்மையிலுள்ள பிச்சாவரத்திற்குப் பக்கத்தில் உப்பங்கழியின் கரைகளில் காணப்படுகின்றன.
வியாக்கிரபாத முனிவராகிய புலிமுனிவர் எல்லாப் பொருட்கும் சார்பாகிய இறைவனைப் பெரும்பற்றாகக் கொண்டு போற்றியமையால் பெரும்பற்றப்புலியூர் எனப் பெயர்பெற்றது.எல்லாம் வல்ல இறைவன் நுண்ணிய (சிறு) ஞானமயமான அம்பலத்தில் ஆடல் புரிதலால் திருச்சிற்றம்பலம் எனவும் இத்தலம் அமைக்கப் பெறுவதாயிற்று. சிற்றம்பலம் - நுண்ணிய ஞான வெளி.இது தஹராகாச க்ஷேத்திரமாதலால் சிதம்பரம் (சித் + அம்பரம் - சித்தமாகிய பெருவெளி) என்று அழைக்கப்படுகிறது.
முன்னொருகாலத்தில் மத்தியந்தனமுனிவர் என்பவர், தாம் தவஞ்செய்து பெற்ற புதல்வருக்குக் கல்விப்பயிற்சி நிரம்பிய பின்னர் அறிவுநூற்பொருள் முழுவதையும் அறிவுறுத்தினார். தந்தையார்பால் அறிவுநூற்பொருளை உணர்ந்த அப்புதல்வர், சிறப்புடைய திருத்தலம் ஒன்றிலே சென்று இறைவனை வழிபாடு செய்தற்கு விரும்பினார். பிள்ளையின் விருப்பத்தையுணர்ந்த மத்தியந்தன முனிவர் அவரைத் தில்லைப்பதிக்குச் செல்லும்படி அனுப்பிவைத்தார். தந்தை சொல்வழி நடக்கும் அப்புதல்வர், தில்லைவனத்தையடைந்து, அவ்விடத்தே ஓர் அழகிய தடாகமும் அதன் தென்பக்கத்தே ஓர் ஆலமரநீழலில் சிவலிங்கத் திருவுருவமும் இருத்தலைக்கண்டு பெருமகிழ்வு கொண்டார். அங்கே ஒரு தவச்சாலை அமைத்துக்கொண்டு சிவலிங்கப் பெருமானைப் பூசித்து வருவாராயினர், தாம் நாள்தோறும் இறைவனை வழிபாடு செய்தற்கென்று பறிக்கும் பலநறுமணமலர்களை ஒருநாள் ஆராய்ந்து பார்த்தார். அம்மலர்களுள் பழையனவும் பழுதுபட்டனவுமான மலர்கள் கலந்து இருக்கக் கண்டு வருந்தினார். பொழுது விடிந்தபின் மலர்களைக் கொய்தால் அவை வண்டுகள் ஊதியனவாக ஆகிவிடுகின் றன. இரவிலேயே சென்று பறிப்போம் என்றால், மரம்செறிந்த இக்காட்டிலே வழிதெரியவில்லை, மரங்களில் ஏறினாலும் பனியால் கால் வழுக்குகின்றது என அவ்விளைய முனிவர் பெரிதும் வருந்தினார். அந்நிலையில் எல்லாம்வல்ல சிவபெருமான் அம்முனிவர் முன்னே தோன்றினார். முனிவர் இறைவனை வணங்கி வாழ்த்தி, ஐயனே தேவரீரை வழிபடுதல் வேண்டி அடியேன் விடியற் பொழுதில் சென்று மரங்களில் வழுக்காமல் ஏறவேண்டியிருத்தலால் என்னுடைய கைகால்கள் புலியின் வலிய நகங்களையுடையனவாதல் வேண்டும். வழி தெரிந்து செல்லுதற்கும், பழுதற்ற நறுமலர்களைத் தெரிந்து கொய்வதற்கும் கால்களிலும் கைகளிலும் கண்கள் உண்டாதல் வேண்டும்” என வேண்டினார். எல்லாம்வல்ல இறைவனும் அவர் வேண்டியவண்ணம் வரத்தினைத் தந்து மறைந்தருளினார். அன்றுமுதல் அவர் வியாக்கிரபாதர் (புலிக்கால் முனிவர்) என்னும் பெயருடையராய், சிவபெருமானைத் தாம் விரும்பிய வண்ணம் புது மலர்களால் வழிபாடு செய்து மகிழ்ந்திருந்தார். இவ்வாறு புலிக்கால் முனிவர் வழிபட்ட காரணத்தினால், தில்லைவனமாகிய இப்பதி புலியூர் எனவும் வழங்கப் பெறுவதாயிற்று. வியாக்கிரபாத முனிவர் உலகியல் பற்றுக்களை அறவே நீக்கி எல்லாப் பொருட்கும் சார்பாகிய இறைவன் ஒருவனையே பற்றுக் கோடாகக் கொண்டு வாழ்ந்தமையால் இப்பதி பெரும்பற்றப்புலியூர் எனச் சிறப்புடையதாயிற்று.
வியாக்கிரபாத முனிவர் திருமூலட்டானத்துப் பெருமானை வழிபட்டிருக்கும் நாளில், அவர் தந்தையார் மத்தியந்தனமுனிவர் தில்லையையடைந்து வசிட்ட முனிவரின் தங்கையாரைத் தம் மைந்தர்க்கு மணம் செய்து வைத்தார். வியாக்கிர பாதரும் அவர் மனைவியாரும் தில்லையில் தங்கி. இறைவனை வழிபட்டிருக்கும் நாளில், அவ்விருவர் செய்த. தவத்தின் பயனாக உபமன்யு என்னும் குழந்தை பிறந்தது. அக்குழந்தையை, வசிட்ட முனிவரின் மனைவியார் அருந்ததியம்மையார் எடுத்துச்சென்று, தம்பாலுள்ள காமதேனு என்னும் தெய்வப்பசு பொழிந்தபாலை ஊட்டி வளர்த்து வந்தார். பின்னர், புலிக்கால் முனிவரும் அவர் மனைவியாரும் உபமன்யுவைத் தில்லைக்கு அழைத்து வந்தனர். காமதேனுவின் இனிய பாலையருந்தி வளர்ந்த உபமன்யு உணவையுண்ணாது பசிதாங்காது. அழுவதாயிற்று. அதுகண்டு வருந்திய வியாக்கிரபாதரும் அவர் மனைவியாரும் திருமூலட்டானப்பெருமான் முன்பு அக்குழந்தையைக் கொண்டு வந்து வேண்டினர். எல்லாம் வல்ல சிவபெருமான் அக்குழந்தையின் பொருட்டுத் தெய்வத்தன்மை வாய்ந்த பாற்கடலையே வரவழைத்து உணவாக ஊட்டினார், உபமன்யு ஆகிய அக்குழந்தை திருப்பாற்கடலைப் பருகிக்களித்திருந்தது.
வியாக்கிரபாதர் சிவபெருமான் தேவதாரு வனத்தில் வாழ்ந்த முனிவர்களின் பொருட்டு நிகழ்த்திய ஐந்தொழில் இன்பக் கூத்தினை யான் காணுமாறு எங்ஙனம்? என்று, பெரிதும் நெஞ்சம் நெகிழ்த்துருகி வருந்தினார். இத்தில்லையம் பதியே நிலவுலகத்திற்கு நடுநாடியாயிருத்தலால் இதன்கண்ணே தான் சிவபெருமான் ஐந்தொழில் திருக்கூத்து நிகழ்த்தியருளுவான், ஆதலால் அகத்தே காணுவதற்குரிய அத்திருக்கூத்தினை இத் தில்லையம்பலத்தின் கண்ணே புறத்தேயும் காணப்பெறுவேன், என்று தவக்காட்சியால் உணர்ந்த வியாக்கிரபாத முனிவர் தில்லைப்பதியிலேயே திருமூலட்டானப்பெருமானை வழிபாடு செய்து கொண்டு இருப்பாராயினார்.
திருமால், பாற்கடலில் பாம்பணையிற் பள்ளிகொண்டு தேவதாரு வனத்தில் தாம்கண்ட இறைவனது ஆனந்தத் திருக்கூத்தினையே யெண்ணி யெண்ணிப் பெருங்களிப்புடையராய்த் துயிலாதிருந்தார். அந்நிலையில் அவர்க்குப் படுக்கையாயிருந்த ஆதிசேடன் திருமாலைப் பணிந்து அவர் கொண்ட பெருமகழ்ச்சிக்கக் காரணம் யாது என வினவினான். திருமாலும் தேவதாரு வனத்தில் சிவபெருமான் ஆடிய ஆனந்தத் திருக்கூத்தின் இயல்பினை எடுத்துரைத்தார். அதனைக் கேட்ட ஆதிசேடன் அத்திருக்கூத்தினைத் தானும் காணும் பெருவேட்கை அடைந்தான். ஆதிசேடன் தன்மகன் அனந்தன் என்பவனைக் திருமாலுக்குப் பாம்பணையாக்கி விட்டு வடகயிலை மருங்கு சென்று சிவபெருமானை நினைந்து அருந்தவம் புரிந்தனன். அவனது பேரன்பின் திறத்தைப் பலரும் அறியச்செய்யத் திருவுளங் கொண்ட சிவபெருமான், "எமது திருக்கூத்தினைப் பொறுத்தற்கு ஏற்ற இடம் தில்லைவனமே. அத்தகைய தில்லை மன்றத்தின் கண்ணே நமது ஐந்தொழில் இன்பத்திருக்கூத்து எக்காலத்தும் இடையறாது நிகழும். அங்கு வியாக்கிரபாத முனிவன் அவ்விலிங்கத்தைப் பூசித்துக் கோண்டு உள்ளான். உன்னைப்போன்றே எனது திருக்கூத்துனைக்காணும் பெருவேட்கையுடன் என்னை வழிபாடு செய்து கொண்டிருக்கும் அவனுடன் நீயும் இருப்பாயாக; உங்கள் இருவர்க்கும் தைப்பூசம் குருவாரத்தோடு கூடும் சித்தயோக நன்னாளில் உச்சிக்காலத்தில் எமது ஆனந்தத் திருக்கூத்தினை நீங்கள் தரிசிக்கும்படி ஆடியருள்புரிவோம்'' என்று கூறி மறைந்தருளினார். ஆதிசேடன் பதஞ்சலி முனியாகிப் புலிக்கால் முனிவருடன் அளவளாவி அனந்தேசுரம் என்னும். திருக்கோயிலில் இறைவனைப் பூசித்தான்.
சிவபெருமான் தாம் குறித்தருளியவண்ணம் தைப்பூச நன்னாளில் தில்லைத் திருக்கோயிலிலே கூத்தப்பெருமானாகத் தோன்றி, சிவகாமியம்மையார் காண ஐந்தொழில் இன்பத்திருக்கூத்தினை ஆடியருளினார். அன்று முதல் தில்லைச் சிற்றம்பலத்திலே இத்திருக்கூத்து என்றும் இடையீடின்றி நிகழும் அனவரத தாண்டவமாக நிகழ்ந்து வருகின்றது. திருமால்,பிரமன், முதலியோர் இசைக்கருவிகளை ஒலிக்கக் கூத்தபிரான் என்றும் திருநடனம் புரிகிறான்.அம்மை சிவாகம சுந்தரி இத்திரு நடனத்தை இடைவிடாது ரசிக்கிறாள்.
இக்கோவிலுள், இறைவனின் ஐந்து சபைகளாகிய (பஞ்ச சபை)
1. சிற்றம்பலம்,
2. பொன்னம்பலம் (கனகசபை),
3. பேரம்பலம்,
4. நிருத்தசபை,
5. இராசசபை என ஐந்து மன்றங்கள் உள்ளன.
சிதம்பரம் நடராஜர் கோவிலில் எட்டுத் திசைகளிலும் சாஸ்தாவின் எட்டு அவதாரங்கள் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளன. அந்த அவதாரங்கள் மகா சாஸ்தா, ஜகன்மோகன சாஸ்தா, பாலசாஸ்தா, கிராத சாஸ்தா, தர்மசாஸ்தா, விஷ்ணு சாஸ்தா, பிரம்ம சாஸ்தா, ருத்ர சாஸ்தா.
இந்த ஊரின் தேரோடும் வீதிகளில் அப்பர் பெருமான் அங்கப்பிரதட்சணமே செய்தாராம். இலங்கையை சேர்ந்த புத்தமத மன்னனின் ஊமை மகளை மாணிக்கவாசர், நடராஜர் அருளால் பேசச் செய்த தலம். இத்திருக்கோவிலில் சிற்றம்பலம், பொன்னம்பலம், பேரம்பலம், நிருத்தசபை, இராசசபை என்னும் ஐந்து மன்றங்களும் அமைந்திருத்தலும், சிவன், விஷ்ணு இருவர் திருச்சந்நிதிகள் ஒரே இடத்தில் நின்று தரிசிக்கும்படி அமைந்திருத்தலும் தனிச் சிறப்புகளாகும். பிரம்மா, விஷ்ணு, ருத்ரன் ஆகிய மும்மூர்த்திகளும் கோவில் கொண்டுள்ள திருத்தலம் இது. இத்தலத்து முருகப்பெருமான் (சுப்ரமணியர்) குறித்து அருணகிரிநாதர் பத்து திருப்புகழ் பாடல்கள் பாடியுள்ளார்.
“பெரும்பாலான பக்தர்கள், சிதம்பரம் கோவிலின் மூலவர் என்றாலே அது நடராஜர் தான் நினைத்துக் கொண்டிருப்பர். கோவிலுக்குள் நுழைந்ததும், நடராஜர் சன்னதியை தேடியே ஓடுவர். ஆனால், இத்தலத்து மூலவர் லிங்கவடிவில் ஆதிமூலநாதர் என்ற பெயரில் அருள் செய்கிறார்”. பதஞ்சலி, வியாக்ரபாத முனிவர்கள் கயிலையில் தாங்கள் கண்ட சிவனின் நாட்டிய தரிசனத்தை, பூலோக மக்களும் கண்டு மகிழ விரும்பினர். எனவே இத்தலத்துக்கு வந்து ஆதிமூலநாதரை வேண்டி தவம் செய்தனர். இவர்களது வேண்டுதலை ஏற்ற சிவன், திரிசகஸ்ர முனீஸ்வரர்கள் என்போரை கயிலையிலிருந்து, சிதம்பரத்திற்கு அழைத்து வந்து தைமாதம் பூசத்தில் பகல் 12 மணிக்கு நாட்டிய தரிசனம் தந்தார். இந்த திரிசகஸ்ர முனிவர்களே தில்லை மூலவாரயிவர் என்று சொல்வதுண்டு.
இக்கோயிலுள் 'திருமூலட்டானம்' என்னும் தனிக்கோயில் ஒன்றுள்ளது. அர்த்தசாம வழிபாடு முடிந்தபின் எல்லாக் கோயில்களிலும் உள்ள சிவகலைகள் அனைத்தும் இந்த மூலத்தான லிங்கத்தில் ஒடுங்குவதாக ஐதீகம்.
சிற்றம்பலம் உள்ளே செல்வதற்கு ஐந்துபடிகள் - பஞ்சாக்கரப்படிகள் உள்ளன; இப்படிகளின் இரு புறமும் யானை உருவங்கள் உள்ளன. பதினான்கு சாஸ்திரங்களில் ஒன்றை இப்படியில் வைத்தபோது, இப்படிகளிலுள்ள யானைகளில் ஒன்று தன் தும்பிக்கையால் அந்நூலையெடுத்து நடராசப்பெருமான் திருவடியில் வைத்தமையால் அந்நூல் 'திருக்களிற்றுப்டியார்' என்ற பெயர் பெற்றது.
இத்தலத்தில் நடனமாடும் சிவபெருமானை ஆடலரசர், கனகசபைநாதர் போன்ற பெயர்களால் அழைக்கப்பட்டாலும் நந்தனார் நாயனார் தான் நடனமாடும் நிலையை வைத்தே நடராசர் என்ற பெயர் வைத்தார் பின்பு அப்பெயரே அனைவராலும் அழைக்கப்படும் பெயராக மாறியது.
சிதம்பரம் திருமூலராலும், பதஞ்சலி மற்றும் வியாக்கியபாதர் எனும் முனிவர்களாலும் வணங்கப்பட்டுள்ளது. 275 பாடல் பெற்ற சிவத்தலங்களில் முதல் முக்கிய இடம் வகிக்கும் தலம் இதுவே ஆகும். திருவாசகத் திருத்தலங்களில் ஒன்றாகும். அவ்வாறே திருவிசைப்பா திருப்பல்லாண்டு திருத்தலங்களில் ஒன்றாகும்.இத்தலம் பன்னிரண்டு திருமுறைகள் அனைத்திலும் பாடப்பட்டுள்ள தலமெனும் பெருமையைக் கொண்டதாகும்.
#சிவகாம_கோட்டம்:
இறைவனின் நடனத்தை நாதாந்த நாடகம் என்று ஞானிகள் மொழிவர். இதனை நன்கு அனுபவித்து அகிலத்திற்கு உணர்த்துபவள் இந்த அன்னை சிவகாமியே ஆவாள். இச்செயல்,
"பாலுண் குழவி பசுங்குடர் பெறாதென நோயுண் மருந்து தாயுண்டாங்கே' என்று குமரகுருபர சுவாமிகள் தம் சிதம்பர மும்மணிக் கோவையில் மொழிவார். இதில் தாய் என்பது அன்னையையும், குழவி என்பது உலக உயிர்கள் எனவும் குறிக்கப்பெறும். இதன் மூலம் அன்னை சிவகாமியே ஜீவராசிகள் அனைத்திற்கும் தாயாம் தன்மையொடு உலக பேரியக்கச் சக்தியாக விளங்கும் தன்மைப் புலப்படும். உயிர்களெல்லாம் பிறவிப்பயனை எளிதாய்ப் பெற, பேரருள் புரிபவள் இந்த ஞானசக்தியே ஆவாள்.
இக்கோவிலின் மூன்றாவது பிரகாரத்தில், சிவகாம கோட்டம் என்று அழைக்கப்படும் தனி கோவிலில் அன்னை சிவகாம சுந்தரி அம்மன் அருள் பாலிக்கின்றாள். சிவகாம சுந்தரி அம்மன் என்றால், 'சிவனது அழகிய காதலியானவள்' என்று பொருள்படும்.
சிவகாம சுந்தரி அம்மன், இச்சா சக்தி, கிரியா சக்தி, ஞான சக்தி ஆகிய மூன்று சக்திகளின் மகா சக்தியாகக் காட்சி அளிக்கிறாள். இச்சா சக்தி (விருப்ப சக்தி): இது விருப்பங்களையும், ஆசைகளையும், படைப்பாற்றலையும் குறிக்கும் சக்தி ஆகும். ஞான சக்தி (அறிவு சக்தி): இது அறிவையும், ஞானத்தையும், விவேகத்தையும் குறிக்கும் சக்தி ஆகும். கிரியா சக்தி (செயல் சக்தி): இது செயல்களையும், இயக்கத்தையும், படைத்தலையும், அழித்தலையும் குறிக்கும் சக்தி ஆகும்.
இக்கோவில் கருவறையில், பேரழகுத் தோற்றத்தில், சமபங்கம் எனும் சிற்ப நிலையில், சுமார் ஆறடி உயரத்தில், திருமுடி தாங்கும் கிரீடத்துடன், என்றும் வற்றாத அருட்கடல் போன்ற இமைக்காத ஈடிணையற்ற திருக்கண்களும், எள் பூ போன்ற நாசியில் (மூக்கில்) நத்து, புல்லாக்கு, மூக்குத்தி ஆபரணங்கள் மின்ன, முக மண்டலமே முழு நிறைவு தந்திடும் வகையில் அமைந்திட, வலது மேல் கையில் ஜபமாலை, வலது கீழ் கையில் செங்கழுநீர்ப்பூ, இடது மேல் கையில் கிளி கொஞ்சிட, இடது கீழ்க்கை ஒய்யாரமாக தொடையின் மீது படும்படியாக அமைய, தேவர்களும், முனிவர்களும் தஞ்சமடைய வேண்டுகிற - பாடகமும், கொலுசும் அலங்கரிக்கும் திருப்பாதங்களும் கொண்டு சிவகாம சுந்தரி அம்பிகை, பக்தர்களுக்கு நின்ற கோலத்தில் காட்சி தருகிறாள்.
*இச்சாசக்தி:
ஸ்ரீ நடராஜர் சந்நிதியில் அன்றாடம் நிறைவு பூசையாகிய இரவு அர்த்த சாம பூஜையின் போது இறைவனின் ஸ்ரீ பள்ளியறையில் அம்மனாய் அமர்ந்து உள்ளவள். இவள், சிவபோக சுந்தரி எனவும் அழைக்கப்பெறுபவள் ஆவாள்.
*கிரியாசக்தி: பொற்சபையில் பொற்புறு நடனம் பயிலும் ஸ்ரீ ஆனந்த நடராஜப் பெருமான் உடனுறை தேவியாக இடப்பாகந்தன்னில் உறைபவள் ஸ்ரீ சிவகாமசுந்தரி ஆவாள்.
*ஞானசக்தி:
இச்சக்தியே ஸ்ரீ சிவகாமசுந்தரி அம்பிகை என வழங்கப் பெறுகிறாள்.
இந்த ஞானசக்தி அம்பிகைக்கு ஆண்டு தோறும் ஐப்பசிப் பூரத் தினத்தை ஒட்டி பிரம்மோற்சவம் நடைபெறும். இத்திருவிழாவைப் பாலிவளத் திருநாள் (பூரச்சலங்கை) எனவும் அழைப்பர். இம்மூவகை சக்திகளும் இணைந்த நிலையே அன்னை பராசக்தி, மகாசக்தி என்பர் மகான்கள். இவர்கள் முறையே, ஆன்மாக்களின் மும்மலங்களையும் அகற்றி தனு, கரண, புவன, யோகங்களைத் துய்த்திடச் செய்து பேரருள் பொழிபவள் ஆவாள்.
#ஸ்ரீசிவகாமசுந்தரி உறையும் சிவகாமக் கோட்டம்:
கி.பி.1118 முதல் 1136 வரை சோழ வளநாட்டை ஆட்சி புரிந்த விக்கிரம சோழன் கற்றளியாக்கினான். இவனுடைய சேனாதிபதியாய் விளங்கியவன் மணவிற் கூத்தன் காளிங்கராயன் ஆவான். இவன் இக்கோட்டம் பீடுற இக்கோயில் சூழ்ந்த திருச்சுற்றும் (பிரகாரம்) திருமாளிகைப்பத்தியும் அமைத்தான்.
மேலும் முன்கூறிய விக்கிரமசோழன் மகன் 2-ஆம் குலோத்துங்கன் தம் காலத்தில் இக்கோட்டம் மிகவும் விரிவுடையதாய்ப் புதுக்கி இங்குறை அன்னை தாம் பிறந்த இமய வெற்பையும், மறக்கும் நிலையில் சிறப்பாக அமைத்த நிலை சிறப்பிற்குரியது ஆகும். இதனால் இவன் ஸ்ரீ பீடங்கண்ட பெரிய பெருமாள் என்று போற்றிப் பாராட்டு பெற்ற நிலை "நீடிய வெண்டிசை நீழல் வாய்ப்ப' எனும் வரிகளால் தக்கயாகப் பரணியில் குறிக்கப் பெறுகிறது. இச்சிறப்புகளொடு இரண்டடுக்குள் கொண்ட திருமாளிகைப்பத்தி, கீழ்க்குறடுகளில் பரத நாட்டிய நுட்பங்கள், பண்டைய இசைக்கருவிகள், கற்சிற்பங்கள், முன்மண்டப தென் வட பகுதிகளில் மேலே வரையப் பெற்றுள்ள காவி நிறம் கொண்ட இன்றளவும் மெருகு குறையாத பழங்கால ஓவியங்கள், இக்கால நுண்கலை வினைஞர்களும் கண்டு வியக்கும் தன்மையில் அமைக்கப் பெற்றுள்ளன.
கோயில்களில் நாள்தோறும் நடைபெறும் நித்ய பூஜையில் ஏற்படும் குறைகள், நைமித்தக பூஜை என்னும் பிரம்மோற்சவம் (ஆண்டிற்கு ஒரு முறை அல்லது இருமுறை நடைபெறும் பெருந்திரு விழாக்கள்) மூலம் நிறைவாய் ஆக்குவது. திருக்கோயில்களின் வழக்கமான நிகழ்வாகும்.
சிவகாம கோட்டத்தில் பிராம்ஹி, மாகேஸ்வரி, வைஷ்ணவி, சாமுண்டி, வாராஹி, இந்திராணி, கெüமாரி ஆகிய தேவிகளுக்கு சந்நிதிகள்அமையப்பெற்றுள்ளன. ஸ்ரீ விநாயகரும் ஸ்ரீ சுப்பிரமணியரும் சிவகாமகோட்டத்தில் முறையே அன்னைக்குத் தெற்கே மூத்தவரும் வடக்கில் இளையவரும் எழுந்தருளுகின்றனர்.
ஸ்ரீ சித்ரகுப்தர் இக்கோட்டத்துள் மேற்கு நோக்கி அமர்ந்தருளுகிறார். ஸ்ரீ நடுக்கந்தீர்த்த விநாயகர் ஸ்ரீ சித்ரகுப்தர் சந்நிதிக்கு நேர் எதிரில் கிழக்கு நோக்கி அருளுகிறார். அம்பிக்கைக்கு துணைபுரியும் ஸ்ரீ சண்டிகேஸ்வரி (சண்டிகேசி) அன்னை மூலவராய் வீற்றிருக்கும் சந்நிதிக்கு வடபுறத்தில் எழுந்தருளியுள்ளார்.
சிவகாமி அன்னையின் சந்நிதிக்கு நேர் எதிரே அமைந்துள்ளது துவஜஸ்தம்பம் (கொடிமரம்). திருவிழா தொடங்கியதற்கு அடையாளமாய் இதில் கொடியேற்றம் நிகழும்.
சிவகாம சுந்தரி அம்பிகையை வழிபட்டால் பதினாறு பேறுகள் கிடைக்கப் பெறலாம் என்பதை உணர்த்தும் வகையில் அம்பிகையின் கோவிலில் பதினாறு படிகள் அமைந்துள்ளன. அம்பிகையை மனதிற்குள் நினைத்து, குங்குமம், மஞ்சள், வளையல் அணிவித்து வழிபட்டு வந்தால் திருமணம் கைகூடும் என்பது ஐதீகம்.
#கோவிலின்_வரலாறு:
'கோயில்' என்று பொதுவாக வழங்கினாலே சைவத்தில் சிதம்பரம் நடராசப் பெருமானின் கோயிலைத்தான் குறிக்கும். ஊர்ப்பெயர் தில்லை; கோயிலின் பெயர் சிதம்பரம், இன்று ஊர்ப்பெயர் வழக்கில் மறைந்து, கோயிலின் பெயரே ஊர்ப் பெயராக வழங்கி வருகிறது.
தில்லை மரங்கள் அடர்ந்த காடாக இருந்தமையால் தில்லைவனம் என்று பெயர் பெற்றது. (இம்மரங்கள் தற்போது சிதம்பரத்தில் இல்லை; ஆனால் இதற்கு அண்மையிலுள்ள பிச்சாவரத்திற்குப் பக்கத்தில் உப்பங்கழியின் கரைகளில் காணப்படுகின்றன.)
இக்கோயிலுள் 'திருமூலட்டானம்' என்னும் தனிக்கோயில் ஒன்றுள்ளது. அர்த்தசாம வழிபாடு முடிந்தபின் எல்லாக் கோயில்களிலும் உள்ள சிவகலைகள் அனைத்தும் இந்த மூலத்தான லிங்கத்தில் ஒடுங்குவதாக ஐதீகம்.
சிற்றம்பலம் உள்ளே செல்வதற்கு ஐந்துபடிகள் - பஞ்சாக்கரப்படிகள் உள்ளன; இப்படிகளின் இரு புறமும் யானை உருவங்கள் உள்ளன. பதினான்கு சாஸ்திரங்களில் ஒன்றை இப்படியில் வைத்தபோது, இப்படிகளிலுள்ள யானைகளில் ஒன்று தன் தும்பிக்கையால் அந்நூலையெடுத்து நடராசப்பெருமான் திருவடியில் வைத்தமையால் அந்நூல் 'திருக்களிற்றுப்டியார்' என்ற பெயர் பெற்றது.
இவ்வூரானது தில்லை என்று பழங்காலத்தில் வழங்கப்பட்டுள்ளது. இத்தலம் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பாகவே தோற்றம் பெற்றதாக நம்பப்படுகிறது.
மேலும் இத்தலத்தில் நடனமாடும் சிவபெருமானை ஆடலரசர், கனகசபைநாதர் போன்ற பெயர்களால் அழைக்கப்பட்டாலும் நந்தனார் நாயனார் தான் நடனமாடும் நிலையை வைத்தே நடராசர் என்ற பெயர் வைத்தார் பின்பு அப்பெயரே அனைவராலும் அழைக்கப்படும் பெயராக மாறியது.
இத்தலமானது பஞ்சபூதத் தலங்களில் ஒன்றான ஆகாயத் தலமாகும்.
இத்தலம் திருநீலகண்ட நாயனார் அவதாரத் தலம் எனவும் கூறப்படுகின்றது. முன்னைக் காலங்களிலே இத்தலம் சோழர், பல்லவர், விஜய நகர அரசுகளாலே புனரமைக்கப்பட்டு வந்துள்ளதோடு மட்டுமன்றி இவ்வரசுகளிடமிருந்து இத்தலத்திற்கு மானியங்களும் வழங்கப்பட்டுள்ளன.
சிதம்பரம் திருமூலராலும், பதஞ்சலி மற்றும் வியாக்கியபாதர் எனும் முனிவர்களாலும் வணங்கப்பட்டுள்ளது. 275 பாடல் பெற்ற சிவத்தலங்களில் முதல் முக்கிய இடம் வகிக்கும் தலம் இதுவே ஆகும். திருவாசகத் திருத்தலங்களில் ஒன்றாகும். அவ்வாறே திருவிசைப்பா திருப்பல்லாண்டு திருத்தலங்களில் ஒன்றாகும்.
ஆதிசங்கரர் பிரதிஷ்டை செய்த ஸ்ரீசக்ரம் அம்மன் சன்னதியில் உள்ளது. அர்த்தஜாம பூஜை இத்தலத்தின் தனி சிறப்பு. அர்த்தஜாம பூஜையில் உலகில் உள்ள அனைத்து தெய்வங்களும் கலந்து கொள்வதாக ஐதீகம். இதை அப்பர் புலியூர் (சிதம்பரம்) சிற்றம்பலமே புக்கார் தாமே எனப்பாடுகிறார். சேக்கிழார் இங்குள்ள ஆயிரங்கால் மண்டபத்தில் தான் பெரியபுராணம் பாடி அரங்கேற்றினார். அருணகிரிநாதர் இத்தலத்தில் உள்ள முருகப்பெருமானை தனது திருப்புகழில் பாடியுள்ளார்.
சிதம்பரம் நடராஜர் கோவிலில் உள்ள சிவகங்கை தீர்த்தக்கரையில் திருத்தொண்டத் தொகையீச்சரம் என்ற பெயரில் ஒன்பது லிங்கங்கள் உள்ளன. இந்த லிங்கங்களை ஒன்பது தொகையடியார்களாக எண்ணி வழிபடுகின்றனர்.
#மூலவர்_தோற்றம்:
மூலவர் திருமூலனாதர் சுயம்பு மூர்த்தியாக அருள்புரிகிறார்.
பொற் கூரையின் மேல் இருக்கும் 9 கலசங்கள், 9 வகையான சக்தியை குறிக்கின்றது.அர்த்த மண்டபத்தில் உள்ள 6 தூண்கள், 6 சாஸ்திரங்களையும்,அர்த்த மண்டபத்தின் பக்கத்தில் உள்ள மண்டபத்தில் உள்ள 18 தூண்கள், 18 புராணங்களையும் குறிக்கின்றது.
#சிதம்பர ரகசியம்:
சித் + அம்பரம் = சிதம்பரம். சித் = அறிவு, அம்பரம் = வெட்டவெளி. மனிதா! உன்னிடம் ஒன்றுமே இல்லை என்பது தான் அந்த ரகசியத்தின் பொருள். சித்ர சபையில் சபாநாயகரின் வலப்பக்கத்தில் உள்ளது ஒரு சிறு வாயில். இதில் உள்ள திரை அகற்றுப்பெறும். ஆரத்தி காட்டப் பெறும். இதனுள்ளே திருவுருவம் ஏதும் தோன்றாது. தங்கத்தால் ஆன வில்வ தளமாலை ஒன்று தொங்கவிடப்பட்டுக் காட்சியளிக்கும். மூர்த்தி இல்லாமலேயே வில்வதளம் தொங்கும்.
இதன் ரகசியம் இறைவன் இங்கு ஆகாய உருவில் இருக்கின்றார் என்பதுதான். ஆகாயத்துக்கு ஆரம்பமும் கிடையாது, முடிவும் கிடையாது. அவனை உணரத்தான் முடியும் என்பதே இதன் அர்த்தம். பஞ்சபூத தலங்களில் சிதம்பரம் ஆகாயத்தலமாகும். சிதம்பர ரகசிய ஸ்தானத்தில் அம்மனுக்குரிய ஸ்ரீசக்ரத்தையும், சிவனுக்குரிய சிவசக்ரத்தையும் இணைத்து, ஒன்றாக பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளதாக ஒரு தகவல் உண்டு. இந்த சக்ரத்தில் நடராஜப்பெருமான் ஐக்கியமாகி, தன் ஆனந்த நடனத்தினால் உலகை படைத்து, காத்து, மறைத்து, அழித்து, அருளிக் கொண்டிருக்கிறார்.
#திருச்சித்திரக்கூடம் (108 வைணவ திவ்ய தேசங்களில் ஒன்று)
மூலவர்: கோவிந்தராஜப் பெருமாள்
தாயார்:புண்டரீகவல்லி
மங்களாசாசனம் செய்தவர்கள்:
குலசேகராழ்வார், திருமங்கையாழ்வார்
ஒருமுறை கயிலாயத்தில் சிவனும் பார்வதியும் நடனம் புரிந்தனர். அதில் யார் சிறந்தவர் என பார்வதி ஒரு போட்டி வைத்து தெரிந்து கொள்ளலாம் என அனைத்து தேவர்களையும் அழைத்தாள். அனைவரும் சிவன் வென்றார் என்றனர். உடனே பார்வதி திருமாலை வேண்டினாள். மனம் இறங்கி திருமால் இப்போட்டியில் கலந்து கொண்டார். சிவன் ஊர்த்துவ தாண்டவம் ஆடினார். பார்வதி பெண் என்பதால் அவளால் ஆடமுடியாமல் வெட்கி நின்றாள். அதனால் திருமால் சிவனே இப்போட்டியில் வென்றார் என்றார். இதைக்கேட்ட கோபத்தில் பார்வதி காளியாகி ஓட அவளை தடுக்க சிவன் ஊர் எல்லையில் படுக்க, காளி சிவனின் மார்பில் மிதித்து கோபம் தணித்தாள். கோபம் தணிந்த பார்வதியும், சிவனும் திருமாலை சிவனின் சந்நிதிக்கு எதிரில் குடிகொள்ளுமாறு வேண்டிக்கொண்டனர்.
#தேவாரம் கிடைத்த தலம்:
மூவர் பாடிய தேவார திருப்பதிகங்களை கண்டெடுத்த தலம் இது. திருநாரையூரைச் சேர்ந்த நம்பியாண்டார் நம்பி என்பவரும் திருமுறை கண்ட சோழ மன்னனும் திருநாரையூர் தலத்தில் உள்ள பொல்லாப்பிள்ளையாரை வணங்கி அப்பெருமானுடைய திருவருளால் சிதம்பரத்தில் பொன்னம்பலத்தின் அருகே மூவர் திருக்கர முத்திரைகளோடு தேவார ஏடுகள் உள்ளன என்று அறிந்தனர்.பின்பு தில்லையை வந்தடைந்து மூவருக்கும் விழா எடுத்து குறிப்பிட்ட இடத்தில் தேடும்போது கறையான் புற்று மூடிக்கிடக்க ஏடுகள் கிடந்தன. பின்னர் எண்ணெய் விட்டு புற்றினுள்ளே இருந்த சுவடிகளை எடுத்துப் பார்த்தபோது பல பகுதிகள் கறையானுக்கு இறையாகிப் போயிருந்தன. பின்பு உள்ளவற்றை எடுத்து பத்திரப்படுத்தினர். இவ்வாறு கிடைக்கப்பெற்றதே தற்போது நாம் படிக்கும் தேவாரப் பதிகங்கள். அத்தகைய அரிய தேவாரப்பதிகங்கள் கிடைத்த தலம் இது.
திருநாளைப்போவார் என்று அழைக்கப்பட்ட நந்தனார் சிவன்பதம் அடைய அக்னி குண்டத்தில் இறங்கிய அருந்தவத் தலம்.
#தரிசிக்க முக்தி:
திருவாரூரில் பிறந்தால் முக்தி. காஞ்சியில் வாழ்ந்தால் முக்தி. காசியில் இறந்தால் முக்தி. திருவண்ணாமலையை நினைத்தால் முக்தி. உயிர் போகும் நேரத்தில் நினைக்க அருள்புரிவாய் அருணாச்சலா என அப்பர் கூறியுள்ளார். இதுபோல், வாழ்நாளில் ஒரு தடவையேனும் நடராஜரையும், திருமூலநாதரையும் தரிசித்தால் முக்தி கிடைத்து விடும்.
எனவே தான் நந்தனார் தாழ்த்தப்பட்டவர்களை கோவிலுக்குள் வரக்கூடாது என ஒதுக்கிய காலத்திலும், சிவன் மீது கொண்ட நிஜமான பக்தியால், சர்வ மரியாதையுடன் கோவிலுக்குள் சென்று, நடராஜருடன் ஐக்கியமானார்.
#தேரில் நடராஜர்:
மூலவரே வீதிவலம் வருவது இங்கு மட்டுமே. இத்தலத்து நடராஜரைக் காண உலகமே திரண்டு வருகிறது. ஏராளமான வெளிநாட்டவர்கள் கூட, நடராஜரின் சிற்பச் சிறப்பைக் காண வருகின்றனர். அப்படிப்பட்ட அபூர்வ சிலையை, திருவிழா காலத்தில் தேரில் எடுத்து வருகிறார்கள்.
#அர்த்த ஜாம அழகர்:
சிதம்பரம் ஸ்ரீ நடராஜர் ஆலயத்தில், சங்கூதிப் பிள்ளையாருக்கு வலது புறத்தில், அர்த்தஜாம அழகர் கோவில் கொண்டுள்ளார். இரவு பத்து மணி அளவில் நடந்தேறும் அர்த்தஜாம பூஜையில் ஸ்ரீ நடராஜர், பள்ளியறை தீபாராதனைகளைத் தொடர்ந்து, நிறைவாக அர்த்தஜாம அழகர் எனும் இத்திருக்கோலத்திற்கு மஹா தீபாராதனையோடு அன்றைய பூஜைகள் நிறைவுறும். அமர்ந்த வடிவில், தூக்கிய இடது கையும், வலது கையில் கதை ஆயுதமும், பெயருக்கு ஏற்றார் போல் மிக மிக அழகிய வடிவினராக அருள்கிறார்.
#பெரும்பற்றப்புலியூர்
சிதம்பரத்துக்குப் பெரும்பற்றப்புலியூர் என்று பெயர். புலிக்கால் முனிவராகிய வியாக்கிரபாதர் பூஜை செய்ததால் அதற்குப் புலியூர் என்று பெயர். அந்தக் கோயிலுக்குச் சிதம்பரம் என்று பெயர். “சித்தம் - இதயம்”, “அம்பரம் - ஆகாசம்”. சித்தம் + அம்பரம் - சிதம்பரம். என்ற பெயரே காலப்போக்கில் அந்த ஊர் பெயர் மறைந்து கோயில் பெயரே ஊரின் பெயராக சிதம்பரம் என்று மாறிவிட்டது.
#பொன்னம்பலம்
நாற்பது ஏக்கர் பரப்பளவில், நான்கு திசைக்கென ஒரு கோபுரமாக நான்கு கோபுரங்களும், ஐந்து சபைகளும் உடையது இந்த ஆலயம். இவ்வாலயத்தில் உள்ள கிழக்கு கோபுரத்தில் நூற்றியெட்டு பரதநாட்டிய நிலைகளில் உள்ள சிற்பங்களை காணமுடியும். மேலும் இங்கு மூலவர் சிலை இருக்கும், இடம் கனகசபை என்று அழைக்கப்படுகிறது. இந்த சபை, முதலாம் பராந்தகன் சோழ மன்னனால் பொற்கூரை வேயப்பட்டது. அதனால் இந்தச் சபை பொன்னம்பலம் என அழைக்கப்படுகிறது; வடமொழியில் கனகசபை எனக் கூறப்படுகிறது.
சைவ சமயத்தவர்களுக்கு கோயில் என்பது சிதம்பரம் நடராசர் கோயிலையே குறிக்கும். அந்தளவுக்கு சைவமும் சிதம்பரமும் பிணைந்தவை. பெரியகோவில் என்றும் சிலர் அழைக்கின்றார்கள்.
#ஆனந்த_தாண்டவம் :
ஆடல் கடவுள் என்று அழைக்கப்படும் நடராஜர் ஒரே இடத்தில் இல்லாமல் ஆடிக்கொண்டே இருக்கிறார். 1) வலது புற மேல் கையில் உடுக்கையை கொண்டிருப்பது இந்த உலகம் ஒலியின் மூலம் துவங்கியது என்பதைக் குறிப்பதாக நம்பப்படுகிறது. இன்றைய அறிவியல் அறிஞர்கள் இதை தான் பெரு வெடிப்புக் கொள்கை (BIG BANG THEORY) என்று அழைக்கின்றனர். 2) இடது புற மேல் கையில் உள்ள நெருப்பு எந்நேரமும் அழித்து விடுவேன் என்ற எச்சரிக்கையை கொடுக்கின்றது. 3) வலது புற கீழ் கையில் காப்பாற்றுவதை குறிப்பதை போன்று, பயப்படாதே நான் இருக்கிறேன் என்று கூறுகின்றது. 4) இடது புற கீழ் கையால், உயர்த்தி இருக்கும் காலைக் காட்டி, தன்னிடம் அடைக்கலம் புகுவோருக்கும், தன்னை வணங்கும் பக்தர்களுக்கான இடம் என்பதை உணர்த்துகிறது. இந்த நடனத்தில் ஆக்கல், அழித்தல், காத்தல் என்ற அணுவின் இயற்பியல் விதியின் அனைத்து செயல்களோடும் ஒத்துப்போகின்றது. உலகின் பெரிய அணு ஆராய்ச்சி அமைப்பான Geneva வில் உள்ள CERN (European Organization for Nuclear Research,the biggest particle physics laboratory in the world) என்ற இடத்தில், இந்த நடராஜர் சிலை வைக்கப்பட்டுள்ளது.
#வடிவமைப்பு :
மனிதரின் உடம்பும் கோயில் என்பதனை விளக்கும் வகையில் சிதம்பரம் நடராசர் கோயில் அமைந்துள்ளது. மனித உடலானது அன்னமயம், பிராணமயம், மனோமயம், விஞ்ஞானமயம், ஆனந்தமயம் என்னும் ஐந்து சுற்றுக்களைக் (கோசங்கள் என்னும் Layers) கொண்டது. அதற்கு ஈடாக சிதம்பரம் நடராசர் கோவிலில் ஐந்து திருச்சுற்றுகள் என்னும் பிரகாரங்கள் உள்ளன. மனிதருக்கு இதயம் இடப்புறம் அமைந்திருக்கிறது. அதேபோல அக்கோயிலில் மூலவர் இருக்கும் கருவறை கோயிலின் நடுப்புள்ளியில் இல்லை. இடதுபுறமாகச் சற்று நகர்ந்து இருக்கிறது. ஒரு மனிதர் ஒரு நாளைக்கு 21,600 முறை நுரையிரல் உதவியால் மூச்சுவிடுகிறார். கோயிலின் இதயம்போல அமைந்திருக்கும் கருவறையின் மீதுள்ள கூரை 21600 ஓடுகளால் வேயப்பட்டு இருக்கிறது. மனிதருக்குள் 72000 நாடிகள் ஓடுகின்றன. அதேபோல அக்கூரையில் 72000 ஆணிகள் அறையப்பட்டு உள்ளன. இதயத்தின் துடிப்பே நடராசரின் நடனமாக உருவகிக்கப்பட்டு இருக்கிறது
#சிதம்பர_ரகசியம் :
இச்சபையில் சபாநாயகரின் வலது பக்கத்தில் உள்ளது ஒரு சிறிய வாயில், அங்குள்ள திரை அகற்றபட்டு தீபாராதனை காட்டபடும். அங்கு திருவுருவம் இல்லாது, தங்கத்தால் ஆன வில்வ தளமாலை ஒன்று தொங்கவிடபட்டிருக்கும்.இதன் ரகசியம் இங்கு இறைவன் ஆகாய உருவில் இருக்கின்றார் என்பதுதான்.ஆகாயத்துக்கு ஆரம்பமும் ,முடிவும் கிடையாது ,அதை உணரத்தான் முடியும் என்பதை உணர்த்துவதேயாகும்.
#வெளிவுலகிற்கு தெரிந்திராத சிதம்பரத்தின் உண்மை வரலாறு இது!
12 ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட சிதம்பரம் கோயிலுக்கு இருக்கும் வரலாற்றைவிட இந்த ஊருக்கு மிகப்பெரிய வரலாறு உள்ளது. தமிழகத்தின் கடலூர் மாவட்டத்தில் அமைந்துள்ள இந்த சிதம்பரம் சோழர்காலத்தின் மிகப்பிரபலமான கோயில் நகரம். நான்கு திசைகளிலுமே நன்கு துல்லியமாக கட்டப்பட்ட அழகியலை விவரிக்க முடியா பேரழகு கொண்ட மிகப்பெரிய கோபுரங்களையும், அதில் அற்புதமான வடிவங்களையும் கொண்ட ஒரு கோயில் இதுவாகும். இந்த கோயிலைச் சுற்றி அமைந்த நகரமே சிதம்பரம் என்று அழைக்கப்படுகிறது.
#பழமையும்_ஆட்சியும்:
உலகின் எந்த நாடுகளிலும் இல்லாத அளவுக்கு அதிக அளவு இன்றளவும் இயங்கும் பழமையான நகரங்களைக் கொண்டது, இந்தியா மட்டும்தான். அதிலும் தமிழகத்தின் புகழ் பாரெங்கும் பரவி நிற்கிறது. மூவேந்தர்கள் ஆட்சி செய்த ஒவ்வொரு இடத்தையும் தற்போது தமிழகம் சுற்றுலாத் தளமாகக் கொண்டுள்ளது. பல்லவர்கள், சோழர்கள், பாண்டியர்கள், விஜயநகர பேரரசர்கள் என அவரவர் ஆட்சிகாலங்களில் இந்த கோயில் மிக அழகாக கட்டுமானப் புனரமைப்புப் பணிகள் செய்யப்பட்டதுடன், நிறைய நன்கொடையும் அளித்தது குறிப்பிடத்தக்கது. சிதம்பரத்தில் இருக்கும் தில்லை நடராசர் கோயில் 12ம் நூற்றாண்டில் கட்டப்பட்டது. இங்கு மூலவராக அமர்ந்திருப்பது தில்லை நடராசர். இவருக்கு கூத்தன் எனும் பெயரும் உண்டு.
#மானிட_உடலில் சிவபெருமான்:
உலகில் எத்தனையோ சிவன் கோயில்கள் இருக்கின்றன. எல்லா கோயில்களிலும் சிவலிங்கமே கோயிலின் மூலவராக இருக்கும். சிவ பெருமான் எந்த கோயிலிலுமே மானிட உருவில் இல்லை. ஆனால் இந்த சிதம்பரம் கோயில் மட்டும் விதிவிலக்கு. சிவபெருமான மனித அவதாரத்தில் வீற்றிருக்கும், அதிலும் நடனமாடிய காட்சியிலேயே இருக்கும் உலகின் ஒரே கோயில் இதுமட்டும்தான். அவருக்கு உமையாளாக பார்வதி தேவியும், அவருடன் விநாயகர், முருகர், பெருமாள் ஆகியோரும் இங்கு இருக்கின்றனர்.
#பரதநாட்டியத்தை தோற்றுவித்த கலைக் கடவுள்:
பொதுவாகவே பரதநாட்டியம் ஆடுபவர்கள் தில்லை நடராசரை வணங்கியே ஆடுவார்கள்,. அவரே இந்த கலையின் கடவுளாக போற்றப்படுகிறார். இவரது நடன அசைவுகளிலிருந்தே பரதநாட்டியம் எனும் கலை பிறந்ததாக நம்பப்படுகிறது. சிதம்பரம் கோயிலுக்கு சென்று பாருங்கள். இந்த கோயிலின் சிற்பங்கள் அனைத்தும் பரத கலையின் முத்திரைகளை வைத்துள்ளதுபோலிருக்கும்.
#மதுரைக்கு அடுத்து சிறப்புடையது:
இந்த கோயில் நூல்கள் இயற்றுவதில் மதுரைக்கு அடுத்து சிறப்புடையதாக போற்றப்படுகிறது. மதுரையில் தமிழின் முதுபெரும் நூல்கள் பல இயற்றப்பட்டுள்ளது. திருக்குறள் கூட மதுரையில் இயற்றப்பட்டதுவே ஆகும். அதுமாதிரி இந்த கோயிலில் திருமூலர் முனிவர் தனது திருமந்திரம் எனும் நூலில் இக்கோயிலைப் புகழ்ந்து நிறைய பாடல்கள் எழுதியுள்ளார். மேலும் இரண்டாம் குலோத்துங்க சோழனின் ஆணைக்கு இணங்க 63 நாயன்மார்களின் வாழ்க்கை வரலாற்றை சேக்கிழார் தில்லை
நடராசர் கோயிலில் இருந்துதான் எழுதியுள்ளார். இங்குள்ள ஆயிரம் கால் மண்டபத்திலேயே இந்த நூல் இயற்றப்பட்டுள்ளது
#பெயர்க்காரணம்:
தில்லை நடராசர் கோயில் அமைந்துள்ள சிதம்பரம் நகருக்கு புராண காலத்தில் நிறைய பெயர்கள் இருந்துள்ளன. அவற்றில் தில்லை, பெரும்பற்ற புலியூர், தில்லை வனம் என்பவை பலரால் அழைக்கப்பட்டு வந்த பெயராகும். தில்லை மரங்கள் நிறைந்து வளர்ந்த இடங்கள் ஆதலால் இதற்கு தில்லை எனும் பெயர் வந்ததாக கூறப்படுகிறது. மேலும் இது திருச்சிற்றம்பலம் என்றும் அழைக்கப்பட்டது. சிற்றம்பலம் என்பது மருவியே சிதம்பரம் ஆகியிருக்கிறது.
#தங்கக்கூரை வேயப்பட்ட முதல் கோயில்:
இந்திய கோயில்களிலேயே தங்கத்தில் கூரை வேயப்பட்ட முதல் கோயில் சிதம்பரம் தில்லை நடராசர் கோயில் என்று நம்பப்படுகிறது. பெரும்பாலும் நிறைய பேருக்கு தெரிந்து பஞ்சாப் பொற்கோயிலிலும், சபரி மலை அய்யப்பன் கோயிலிலும் பொற்கூரை உள்ளது.
சோழர் ஆட்சிகாலத்தில் முதலாம் பராந்தகன் எனும் மன்னர் இந்த அரும்பெரும்காரியத்தைச் செய்து முடித்தார். அவரது முயற்சியினால் தில்லை நடராசர் கோயிலுக்கு தங்க கூரை கிடைத்தது. இதனால் பொன்கூரை வேய்ந்த தேவன் எனும் பெயர் கிடைத்தது
#மாயம்_செய்யும் மரகதக் கல்:
புதுக்கோட்டை பேரரசர் சேதுபதி அவர்களால் இந்த கோயிலுக்கு ஒரு மரகதக் கல் தானமாக அளிக்கப்பட்டது. இந்த மரகதக் கல் செய்யும் மாயம் இங்கு வரும் பக்தர்களை புத்துணர்வு அடையச் செய்கிறது. கோயிலின் வெளிப்புறத்திலிருந்து வரும் பக்தர்கள் கோயிலுக்குள் வருவதற்குள்ளாகவே கலைப்படைந்துவிடுகின்றனர். ஆனால் அவர்கள் சிதம்பரம் நடராசரை பார்த்ததும் புத்துணர்வு பெறுகின்றனர். இதற்கு காரணம் அந்த மரகத கல்தான் என்று நம்பப்படுகிறது.
#அறிவியலுக்கு ஈடு கொடுக்கும் அற்புத கணக்குகள்:
தில்லை நடராசர் கோயில் ஆன்மீகத்துக்கு மட்டுமல்ல அறிவியல் பார்வையில் பார்க்கும்போதும் பல கேள்விகளை நமக்கு உதிர்த்திவிட்டு செல்கிறது,. காளகஸ்தி, காஞ்சிபுரம், தில்லை நடராசர் கோயில் ஆகிய மூன்று கோயில்களும் ஒரே நேர்க்கோட்டில் அமைந்துள்ளன. வடக்கிலிருந்து தெற்கு நோக்கும்போது மிகத் துல்லியமாக இந்த அமைவு உள்ளது. அப்படியானால் அந்த காலத்தில் இதை எப்படி கணித்து கட்டியிருப்பார்கள் என்பது மிகப் பெரிய கேள்வி. இது இன்றைய அறிவியலுக்கு கொடுக்கப்படும் சவாலாக இருக்கிறது.
மனித இனத்தின் அருமை சொல்லும் கணக்குகள்:
இந்த கோயிலில் மொத்தம் ஒன்பது நுழைவு வாயில்கள் இருக்கின்றன. அவற்றில் இந்த 9 எனும் எண் குறிப்பது நம் உடலில் இருக்கும் ஒன்பது நவத் துவாரங்களையும் ஆகும். மேலும் கருவறையில் 21 ஆயிரத்து 600 தங்கத் தகடுகள் இருக்கின்றன. 72 ஆயிரத்து ஆணிகளைக் கொண்டு பதிக்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. இது ஒரு நாளைக்கு சராசரியாக ஒரு மனிதன் சுவாசிக்கும் கணக்கு. எழுபத்தி இரண்டாயிரம் என்பது மனித உடலில் இருக்கும் நரம்புகள் என்பது நிச்சயம் அறிவியலை ஆச்சர்யம் கொள்ளச் செய்யும் கணக்குதானே.
மேலும் இங்கு சித்ர சபை, கனக சபை, நாட்டிய சபை, ராஜ சபை, தேவ சபை என்று அழைக்கப்படும் ஐந்து சபைகள் இருந்துள்ளது. இக்கோயிலில் இருக்கும் புனித குளம் சிவ கங்கை என்று அழைக்கப்படுகிறது
பிக் பாங்க் தியரி சொல்லும் வரலாறு:
பலர் பிக் பாங்க் தியரி உருவாவதற்கு முன்னரே உலகம் எப்படி தோன்றியது என்ற தத்துவத்தை தில்லை நடராசர் கூறியுள்ளதாக நம்புகின்றனர். அதாவது இந்த உலகம் ஒலியின் மூலம் தொடங்கியது. ஒரு பெரிய வெடிப்புதான் இந்த உலகம் தோன்றியதற்கு காரணம். அதன்படி, இந்த கோயிலின் மூலவரான ஒரே இடத்தில் நில்லாமல், ஆடிக்கொண்டே இருக்கிறார். வலது புறத்தில் ஒரு கையில் உடுக்கையும், இடது புறத்தின் ஒரு கையில் தீயையும் வைத்துள்ளார் நடராசர்.
ஆற்றலை ஆக்கவோ அழிக்கவோ முடியாது, அதன்படித்தான் சிவனை அழிக்கவோ ஆக்கவோ முடியாது. சிவன் என்பது வேறு யாரும் இல்லை ஆற்றல்தான் என்பதற்கு சான்றாகத் தான் இந்த கோயில் கட்டப்பட்டதாக நம்பப்படுகிறது
உலக அறிவியலை தனது கால் பெருவிரலில் கட்டி வைத்த நடராஜர்- சிதம்பரம் கோயில் ரகசியம் அறிவோம்
வரலாற்றில் அதிக ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட முக்கால் சதவிகித கோயில்கள் எல்லாமே சிவன் கோயில்கள் தான்.அதிலும் கோயில்கள் என்றாலே அது தில்லைதான் என்று பல பாடல்களில் பார்க்க முடிகிறது
சைவ திருத்தலங்களில் முதல் தலம் தில்லை நடராஜர் தலம் தான். இறைவனே மாணிக்கவாசகர் பாடல்களை எழுதிய வரலாறு கொண்டது இந்த திருத்தலம்.
மாணிக்கவாசகர் எனும் சிவபக்தனின் பாடல்களை மாணிக்க வாசகர் பாடப்பாட இறைவனே வந்து எழுதிக் கொடுத்த மிக முக்கியமான தலம் சிதம்பரம். மாணிக்கவாசகரின் இடைவிடாத பக்தி இறைவனை அசைக்க அவரே வேதியர் வடிவில் வந்து மாணிக்கவாசகரின் திருவாசகத்தை தனது இறைவிரல்களால் எழுதிக் கொடுத்து திருவாதவூரார் கூற திருச்சிற்றம்பலமுடையான் எழுதியது என்று கையெழுத்திட்டு விட்டு மறைந்து விட்டார். அதன் பின்னர்தான் வந்து எழுதியவர் இறைவன் என்பதையே மாணிக்கவாசகர் உணர்ந்தார்.
மாணிக்கவாசகரின் வரிகள் இறைவன் இதயத்தை தொட்டதாலோ என்னவோ அவர் கைப்பட எழுதிய திருவாசகம் நம் அத்தனை நெஞ்சங்களையும் அவரைப் போலவே அன்பிற்கு உருக செய்கிறது .
அறிவியலின் படி இந்த கோயில் 1000 முதல் 2000 வருடங்கள் பழமையானது என்று கூறப்படுகிறது. ஆனால் ஐயாயிரம் வருடங்களுக்கு முந்தைய திருமூலரின் பாடல்களில் இந்த தில்லை கோயில் இருக்கிறது என்றால் அது ஆய்வுகளை பற்றிய நமது பார்வைகளை கேள்விக்குறியாக்குகிறது என்றால் மிகையில்லை.
பொதுவாக சிதம்பரம் கோயில் (chidambaram temple) அதிசயமாக அறியப்படுவது.. மனித உடலை குறிப்பிடும்படி இந்த கோயில் கட்டமைக்கப்பட்டிருக்கும் விதம்தான். ஒன்பது வாயில்கள் ஒன்பது துவாரங்களை குறிப்பிடுகின்றன. ஒரு மனிதனின் சராசரி சுவாசக் கணக்கு 21600முறை. இதனை குறிப்பிடும் வகையில் சிதம்பரம் பொற்கூரையில் 21600 ஓடுகள் பொருத்தப்பட்டுள்ளன. மனித உடலின் மொத்த நாடிகள் 72000. இவை ஆணிகளாக அந்தக் கூரையில் அடிக்கப்பட்டிருக்கின்றன.
நம் உடலில் இதயம் இடப்பக்கம் இருக்கிறது. இறைவிக்கு தனது இடபாகம் தந்த இறைவனின் கருவறையும் கோயிலின் இடப்புறம் இருக்கிறது. நமசிவய எனும் ஐந்து படிகள் ஏறினால் பொன்னம்பலம் கொண்ட சிதம்பரத்தாரை தரிசிக்கலாம். இதயத்தின் நான்கு சுவர்களை போலவே அங்கே நான்கு தூண்கள் அமைக்கப்பட்டிருக்கிறது.
இப்போது இரண்டு விதமாக நாம் இங்கே யோசிக்கலாம். வரலாற்று படியே பார்த்தாலும் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் எந்த தொழில்நுட்பங்களும் செயல்படாத ஒரு காலத்தில் ஒரு மனிதனின் உடல் இப்படித்தான் இருக்கிறது என்பதை எப்படி கண்டறிந்தார்கள்.. இதயத்தின் நான்கு சுவர்கள் வரை detailing செய்து எப்படி இந்த கோயிலை வடிவமைத்தார்கள்.. இது எப்படி சாத்தியமானது? இப்படி யோசித்தால் இந்த கோயிலே உலக அதிசயங்களில் முதலாவதான கோயிலாக இருக்க முடியும்.
இரண்டாவது முறையாக இந்த கோயிலின் அமைப்பிலேயே நமக்கு வழிகாட்டி இருக்கிறார்கள். நமது உடலை கோயிலுடன் ஒப்பிடுங்கள் .. கோயிலை போலவே சற்று இடது புறம் இருக்கும் இதயமும் அதன் சுவர்களையும் கவனியுங்கள். நமசிவய எனும் ஐந்தெழுத்து படி ஏறினால் பொன்னம்பலத்தானை தரிசிக்கலாம் என்பது போல.. நமது ஐம்புலன்களின் உணர்வுகளை கட்டுக்குள் கொண்டு வந்து காலடியில் படிகளாக மாற்றிக் கொண்டால் சதாஷிவம் எனும் அந்த இறைவன் நம் இதயத்துக்குள்ளே ஆனந்த நடனம் ஆடியபடி இருப்பதை அவரது தாளங்களே இதயத்தின் துடிப்பாக மாறி இருப்பதை நம்மால் உணர்ந்து கொள்ள முடியும் என்றால்.. இனி நம் வாழ்வை அந்த சதாஷிவன் சந்தோஷமாக பார்த்துக் கொள்வார் என்பதுதான் உண்மை.
சரி. கோயிலின் வரலாற்றிற்கு வருவோம்.. உலகெங்கும் ஒரு சாதாரண வழக்கு சொல் ஒன்று உண்டு.. அப்படி என்ன சிதம்பர ரகசியம் (secrets of chidambaram) பேசுகிறாய் என்று யாரையாவது யாராவது கேட்பதை நாம் கவனித்திருப்போம். அப்படி அந்த சிதம்பரத்தில் என்ன ரகசியம் இருக்கிறது...
பெரியவர்கள் சித்தர்கள் முனிவர்கள் இறைவன் எல்லோரும் சில விஷயங்களை ரகசியமாகவே வைத்திருக்க விரும்புவார்கள். ரகசியமாக இருக்கும்வரைதான் அதிசயமாக இருக்கும் என்பதாலும் ரகசியம் அறிந்தவர்கள் அதனை தவறாக பயன்படுத்தி ஆன்மிகத்தை வியாபாரம் செய்வார்கள் என்பதாலும் அவர்கள் அதற்கு தகுதியான ஆட்கள் அறிந்து கொள்ளும் வகையில் இதனை மறைபொருளாகவே வைத்திருப்பார்கள்.
அந்த ரகசியங்கள் எல்லாம் தகுதியான யுகத்தில் தகுதியான காலத்தில் அதனை அறிய வேண்டியவர்கள் அறியும் வண்ணம் தாமாகவே வெளிப்படும் ஒருவிதமான டைமர் (timer) செட் செய்யப்பட்டவை என்பது நிச்சயமான உண்மை. இந்த காலம் இந்த நேரம் இவை வெளிப்பட வேண்டும் என்பது இறை சித்தமாக இருப்பதால் இப்போது இதனை வெளிப்படுத்துவதில் மனம் நிறைகிறது.
பொதுவான ரகசியம் என்பது திருச்சிற்றம்பலம் எனும் கருவறையில் நடராஜர் சிவகாமி அம்மனுக்கு ஆரத்தி காட்டியபின்னர் எந்த உருவமும் இல்லாத இடத்தில் தங்க ஆபரணங்கள் சாற்றப்பட்டிருக்கும். அங்கும் ஆரத்தி காட்டுவார்கள். இதன் தாத்பர்யம் இறைவன் வெட்டவெளியான ஆகாயவடிவிலும் இருக்கிறான் என்பதுதான்.
ஆனால் மிக ரகசியமாக பாதுகாக்கப்பட்ட விஷயம் என்பது இறைவன் நடராஜர் இடது காலை தூக்கி ஆடுகிறார். அவரது வலது கால் முயலகன் எனும் அசுரனை எழும்ப விடாமல் அழுத்தி இருக்கிறது. வலது கால் கட்டை விரல் முயலகனை அழுத்தும் அதே இடத்தில்தான் பூமியின் மிக சரியான மையம் அமைந்திருக்கிறது. ஒட்டுமொத்த உலகின் மிக சரியான மையப்புள்ளி சிதம்பரத்தில் ஆடிக் கொண்டிருக்கும் நடராஜரின் வலது பெருவிரலுக்கு நேர் கீழே அமைந்திருக்கிறது.
துல்லியமான தொழில்நுட்பங்கள் இல்லாத ஒரு காலத்தில் இப்படி இடத்தை எப்படி கோயிலாக்க முடிந்தது.. எப்படி மிக சரியாக இறைவனின் வலது பெருவிரல் பாதம் பூமியின் மையத்தில் இருக்கிறது என்பதை அறிந்தவர்கள் பாக்கியவான்கள். இதனை பல கோடி டாலர்கள் செலவழித்த பின்னர் உலக ஆன்மிக மையம் இந்த அதிசயத்தை கண்டுபிடித்து அதைப்பற்றி ஆராய்ந்து கொண்டிருக்கிறது!
அறிவியல் என்பதே ஏற்கனவே இருக்கும் ஒன்றில் இருந்து எதையாவது கண்டுபிடிக்கும் வரையில்தான் அதன் வேலை நடந்து கொண்டிருக்கிறது எனும்போது உலக அறிவியலாளர்கள் வியக்கும் வண்ணம் அமையப்பெற்ற சதாஷிவம் தனது ஆனந்த நடனத்தை எப்போதும் ஆட்டியபடியே இருக்கிறது. இதனை உலக அறிவியலாளர்கள் காஸ்மிக் நடனம் பிரபஞ்ச நடனம் என்கின்றனர்.
முகலாயர் படையெடுப்பின் போது தில்லைவாழ் அந்தணர்கள் எனப்படும் தீட்சிதர்கள் கி.பி. 1648-ல் தில்லை ஸ்ரீநடராஜரையும் ஸ்ரீசிவகாமி அம்மையையும் தென்னாட்டுக்கு எடுத்துச் சென்று பாதுகாக்க எண்ணினராம்.
இரண்டு மரப் பேழைகளில் ஸ்ரீநடராஜரையும், ஸ்ரீசிவகாமி அம்மையையும் அமரச் செய்து இரவு நேரங்களில் மட்டுமே பயணம் மேற்கொண்டு, தில்லைக்கு தென்பகுதியாக விளங்கும் மதுரையை நோக்கிச் சென்று குடுமியான்மலையை அடைந்தனர்.
பின்னர் அங்கிருந்து கேரள மாநிலம் புளியங்குடி என்ற இடத்தை அடைந்தனர். அங்கு ஒரிடத்தில் பூமியிலே குழி தோண்டி பேழைகளை மறைத்து வைத்து அந்த இடத்தில் ஒரு புளிய மரத்தையும் நட்டனர். பின்னர் தில்லை திரும்பினர்.
தில்லையில் அமைதி திரும்பிய சுமார் 35 ஆண்டுகளுக்குப் பிறகு, தில்லை வாழ் அந்தணர்களின் இளம் தலைமுறையினர் குழுக்களாகப் பிரிந்து சென்று தேடும் பணியில் ஈடுபட்டனர்.
அவ்வாறு பிரிந்து சென்றவர்களில் ஒரு குழுவினர் புளியங்குடியை அடைந்தனர். அங்கே பல பேர்களிடமும் விசாரித்தனர். யாருக்கும் தெரியவில்லை.
இந்நிலையில், ஒரு வயதான குடியானவன் தன்னுடைய வேலையாளிடம், இந்த மாட்டைக் கொண்டு போய் அம்பலப் புளியில் கட்டு என்றாராம். இதைக் கேட்டதும் இவர்களுக்கு அது குறித்த விளக்கத்தைக் கேட்க வேண்டும் என்ற ஆவல் தோன்றியுள்ளது. அந்த வேலையாளிடம் கேட்ட போது அவன், எனக்கு எதுவும் தெரியாது, எங்கள் முதலாளியிடம் கேட்டு தெரிந்துகொள்ளுங்கள் என்று சொல்லியிருக்கிறான்.
முதலாளியிடம் சென்று கேட்ட போது அவரோ, இங்கே ஆசான் ஒருவர் இருந்தார். அவர் பல காலங்களாக இந்த பகுதியில் வாழ்ந்து வந்தார். தினமும் இந்த அம்பலப் புளி அடியில் வழிபட்டு வந்தார். அவர் தான் அந்த சிறிய பொந்தில் திருவுருவங்களைக் கண்டாராம்.
இந்த இடத்தில் விலைமதிப்பில்லாத ஒரு சுவாமி இருக்கிறார் என்றும், அதனை அறிந்தவர்கள் ஒரு நாள் இங்கே வருவார்கள். அதுவரை இதைப் பாதுகாக்க வேண்டும் என்றும், அவர்கள் உண்மையானவர்களா என்று சோதித்து அவர்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்றும் சொன்னார் என்றார்.
இவர்களோ, நாங்கள் தான் அந்த மூலமூர்த்தியின் உரிமைதாரர்கள் என்று விளக்கி அவரிடம் ஒப்புதல் பெற்றுக்கொண்டு தில்லையை அடைந்தார்கள்.
பின்னர் பல நூறு தில்லைவாழ் அந்தணர்கள் அந்த இடத்தை அடைந்து, தக்க ஆதாரங்களை விளக்கிச் சொல்லி, அவர் சம்மதத்துடன் அந்த இடத்தைத் தோண்டி தில்லை நடராஜரையும், சிவகாமி அம்மையையும் வெளியே எடுத்தனர்.
பின்னர் தக்க பாதுகாப்புடன் அதே போன்ற பேழைகளில் வைத்து தில்லை நோக்கி எடுத்து வந்தனர்.
வரும் வழியில் திருவாரூர் ஸ்ரீதியாகராஜர் கோயிலின் சபாபதி மண்டபத்தில் சிலகாலம் வைத்திருந்துவிட்டு அங்கிருந்து புறப்பட்டு வைத்தீஸ்வரன் கோயில் வழியாக தில்லைக்கு வந்தார்கள்.
1686-ல் மறுபடியும் தில்லையில் பொன்னம்பலத்தில் ஸ்ரீநடராஜரையும், ஸ்ரீசிவகாமி அம்மையையும் பிரதிஷ்டை செய்து, பல திருப்பணிகள் செய்து, மஹா கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது என்று தல வரலாறு கூறுகிறது.
முற்காலத்தில் இத்தலத்தில் சிவபெருமான் வணங்கி தவமியற்றி வந்தார் மாத்யந்தினர் எனும் முனிவர். தினந்தோறும் இந்த தலத்திற்கு அருகிலுள்ள வனங்களில் உள்ள பூக்களை பறித்து சிவபெருமானுக்கு அர்ச்சித்து வழிபட்டு வந்தார். ஒவ்வொரு முறை பூக்களை பறிக்கும் போதும் அதில் பெரும்பாலானவை தேனீக்களால் அம்மலரில் உள்ள தேன் உறிஞ்சப்படுவதால், அத்தகைய பூக்கள் சிவபூஜைக்கு பயன்படாமல் போவதை எண்ணி வருந்தினார். தேனீக்கள் மலர்களை மொய்ப்பதற்கு முன்பாக இருட்டில் சென்று பூக்களை பறிக்கவும் தன்னால் இயலிவில்லை என்று சிவபெருமானிடம் வருந்தினார்.
அப்போது அவர் முன்பாக தோன்றிய சிவபெருமான் மரங்களில் ஏறி பூக்களை பறிப்பதற்கு வசதியாக சிறுத்தை புலியின் கால்களையும், இருட்டில் நன்கு பார்க்கும் சக்தி கொண்ட அந்த சிறுத்தையின் கண்பார்வை திறனையும் மத்யந்தினருக்கு அருளினார் ஈஸ்வரன். இதன் காரணமாக மத்யந்தினர் வேங்கை என பொருள் கொண்ட வியாக்கிரம் என பெயர் கொண்டு அன்று முதல் “வியாக்கிரபாதர்” முனிவர் என அழைக்கப்பட்டார். இத்தலத்தில் வியாக்கிர பாத முனிவருக்கும், “யோகக்கலையின்” பிதாமகரான “பதஞ்சலி” முனிவருக்கும் ஒரே நேரத்தில் தனது திருநாட்டிய நடன தரிசனத்தை தந்து அருள் புரிந்தார் சிவபெருமான்.
கல்வெட்டுகள்:
பக்தி இலக்கியத்திலும், சங்க இலக்கியத்திலும் தில்லை சிவனைப் பற்றி பாடப்பெற்றுள்ளது. சோழ மன்னர்கள் பலர், இந்த ஆலயத்திற்கு பணி புரிந்துள்ளனர், இங்குள்ள ஆலயத்தில் உள்ள கல்வெட்டுகளிலிருந்தும், பொற்கூரையினாலும் நாம் அறிந்துகொள்ள முடியும். சோழர்களுக்குப்பின் பாண்டிய மன்னர்களும், விஜயநகர பேரரசின் கிருஷ்ண தேவராயரும் மற்றும் நாயக்க மன்னர்களும் கோயிலின் பிரகாரங்கள் சபை மண்டபங்கள் கட்டியதாகவும் பல்வேறு திருப்பணிகள் பலபுரிந்ததாகவும் கல்வெட்டுகளின் மூலம் அறியப்படுகிறது.
#நூல்கள்:
தமிழகத்திலுள்ள கோவில்களில் அதிகமான நூல்களினாலும், பாடல்களினாலும் போற்றப்படுகின்ற கோவிலாக சிதம்பரம் நடராசர் கோயில் உள்ளது. இத்தலத்தினைப் பற்றி நாற்பத்தி நான்கு நூல்களில் குறிப்பிடப்பட்டுள்ளன. அவை பின்வருமாறு.
1.தேவாரம் - 11 திருப்பதிகங்கள்
2.திருவாசகம் - 25 திருப்பதிகங்கள்
3.திருக்கோவையார்
திருமுறைக் கண்ட புராணம்
4.திருவிசைப்பா
5.திருபல்லாண்டு
6.திருமந்திரம்
7.கோயில் நான்மணிமாலை
8.கோயில் திருப்பண்ணியர் விருத்தம்
9.பெரியபுராணம்
10.சிதம்பரம் மணிக்கோவை
11.சிதம்பரச் செய்யுட் கோவை
12.சிவகாமி அம்மை இரட்டை மணிமாலை
13.தில்லைக்கலம்பகம்
14.தில்லையுலா
15.மூவரு லா
16.தில்லை யமகவந்தாரி
17.சிதம்பரவெண்பா
18.சிதம்பர சபாநாத புராணம்
19.பாண்டிய நாயக முருகன் பிள்ளைத் தமிழ்
20.புலியூர் வெண்பா
21.நடேசர் திருவருட்பா
22.நடராச திருவருட்பா
23.நடராசர் சதகம்
24.நடராசர் திருப்புகழ்
25.சிவகாமியம்மை பிள்ளைத் தமிழ்
26.சேக்கிழார் புராணம்
27.சிவகாமியம்மைப் பதிகம்
28.தில்லை கற்பக விநாயகர் வெண்பா அந்தாதி
29.தில்லை நவமணி மாலை
30.சிதம்பர விலாசம்
31.பரமரகசிய மாலை
32.திருவருட்பா
33.தில்லைத் திருவாயிரம்
34.புலியூர் புராணம்
35.சிதம்பரப் புராணம்
36.நடராஜர் காவடிச்சிந்து
37.நடராசர் பத்து
38.நந்தனார் சரித்திரக் கீர்த்தனைகள்
39.சிதம்பரம் பட்டியல்
40.முத்துத்தாண்டவர் கீர்த்தனைகள்
41.சிதம்பரம் சிவகாமியம்மை பஞ்சரத்தினம்
42.தில்லை பாதி நெல்லை பாதி
43.சிதம்பரம் சேஷத்திர மகிமை
கோயில் நிர்வாகம்:
தில்லை நடராசர் கோவில் சோழர்களால் நிர்வகிக்கபட்டு வந்தது. பின்னர் விஜயநகர மன்னர்களாலும் நாயக்க மன்னர்களின் கீழ் நிர்வகிக்கப்பட்டு வந்த நிலையில் தமிழக அரசு பெரும்பாலான கோவில்களை இந்து அறநிலையத்துறையின்கீழ் கொண்டு வந்துள்ளது. தற்போது ஆலயத்தை இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவர உத்தரவு பிறப்பிக்கப்பட்டது என்றாலும், அதற்கு முன்பே எம். ஜி. ராமச்சந்திரன் முதல்வராக இருந்தபோதே சிதம்பரம் கோவிலுக்கு நிர்வாக அதிகாரியை நியமிக்க 5–8–1987 அன்று அரசாணை பிறப்பிக்கப்பட்டது. தொடர்ந்து பல ஆண்டுகளாக தீட்சிதர்கள் கட்டுப்பாட்டில் இருந்துவரும் இந்தக் கோயிலில் பல்வேறு முறைகேடுகள் நடப்பதாக எழுந்த புகார்களின் பின்னணியில் ,2008 பிப்ரவரியில் சிதம்பரம் நடராசர் கோவிலை தமிழக அரசு கையகப்படுத்தியது. இதை எதிர்த்து தீட்சிதர்கள் தொடுத்த வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. உச்சநீதிமன்றத்தில் தீட்சிதர்கள் மேல்முறையீடு செய்தனர். இந்த வழக்கில் தீர்ப்பளித்த நீதிபதிகள், நடராசர் கோவிலை தமிழக அரசு ஏற்றது செல்லாது என்றும், தீட்சிதர்கள் நிர்வாகத்தில்தான் கோயில் இருக்க வேண்டும் என்று கூறினர். முறைகேடு குறித்து புகார் வந்தால் அதை சரிசெய்ய கோவில் நிர்வாகத்துக்கு தமிழக அறநிலையத் துறை பரிந்துரைகள் வழங்கலாம் அல்லது புகார்கள் குறித்து விசாரிக்க நடவடிக்கை எடுத்து அதை மேற்பார்வையிடலாம் என்று கூறியுள்ளனர். மேலும் , சிதம்பரம் நடராசர் கோவிலை பொது தீட்சிதர்கள் தான் கட்டினார்கள் என்பதற்கான ஆதாரமும் நீதிமன்றத்தில் நிரூபிக்கப்படவில்லை.
கல்வெட்டு:
இக்கோயிலில் பிற்காலச் சோழமன்னர்களில் முதலாம் இராஜராஜசோழன், முதலாம் இராஜேந்திரசோழன், முதற்குலோத்துங்க சோழன், விக்கிரமசோழன், இரண்டாம் இராஜாதிராஜ தேவன், மூன்றாங் குலோத்துங்கசோழதேவன், மூன்றாம் இராஜராஜ சோழன் இவர்கள் காலங்களிலும்; பாண்டியமன்னர்களில் திரிபுவனச்சக்கர வர்த்தி வீரபாண்டியதேவன், சடாவர்மன் திரிபுவனச்சக்கரவர்த்தி சுந்தரபாண்டியதேவன், மாறவர்மன் திரிபுவனச்சக்கரவர்த்தி வீரகேரளனாகிய குலசேகரதேவன் இவர்கள் காலங்களிலும், பல்லவரில் அவனி ஆளப்பிறந்தான் கோப்பெருஞ்சிங்கதேவன் காலங்களிலும், விசய நகர வேந்தர்களில் வீரப்பிரதாபகிருட்டிணதேவமகாராயர், வீரப் பிரதாப வேங்கடதேவமகாராயர், ஸ்ரீ ரெங்கதேவமகாராயர், அச்சுத தேவமகாராயர், வீரபூபதிராயர் இவர்கள் காலங்களிலும், கொச்சி பரம்பரையில் சேரமான் பெருமாள் நாயனாரின் வழித் தோன்றிய இராமவர்ம மகாராசா காலத்திலும்; சாளுவ பரம்பரையில் வீரப் பிரதாபதம்முராயர் I காலத்திலும் செதுக்கப்பெற்ற கல்வெட்டுக்கள் இருக்கின்றன. இவைகளையன்றி இக்கோயிலைப் பற்றி வேற்றூர்களில் கல்வெட்டுக்களும் செப்பேடுகளும் இருக்கின்றன. இவைகளை எல்லாம் தழுவிய வரலாறே ஈண்டுக் கொடுக்கப்பெற்றுள்ளது.
இவ்வூரைத் தன்னகத்துக் கொண்டுள்ள நாடு: இவ்வூர் முதலாம் இராஜராஜசோழன் காலத்தில் இராஜேந்திர சிங்கவளநாட்டுத் தனியூர் பெரும்பற்றப்புலியூர் என்றும், முதற் குலோத்துங்க சோழன் காலத்தில் இராஜாதிராஜவளநாட்டுத் தனியூர்ப் பெரும்பற்றப்புலியூர் என்றும் கல்வெட்டுக்களில் கூறப்பெற்றுள்ளது.
நேர்த்திக்கடன்:
பால், பழம், பொரி முதலியவற்றை நைவேத்தியம் செய்து, தீபாராதனை செய்து, சுவாமியின் பாதுகையை வெள்ளி தங்கப்பல்லக்கில் எழுந்தருளப் பண்ணி கொண்டு வந்து நடராஜரின் அருகில் வைத்து நடராஜருக்கும் சிவகாமசுந்தரியம்பாளுக்கும் பால், பொரி, பழம் முதலியவை நைவேத்தியம் செய்து, தீபாராதனை செய்வதை திருவனந்தல் என்றும் பால் நைவேத்தியம் என்றும் அழைக்கின்றனர். இதை பக்தர்கள் தங்களின் கட்டளையாக ஏற்று செய்யலாம். சுவாமிக்கு நல்லெண்ணெய், திரவிய பொடி, பால், தயிர், பழச்சாறு, இளநீர், பஞ்சாமிர்தம், சந்தனம், பன்னீர், திருநீர் ஆகியவற்றால் அபிசேகம் செய்யலாம். தவிர உலர்ந்த தூய வஸ்திரம் சாத்தலாம். இது தவிர சுவாமிக்கு சங்காபிசேகம், கலசாபிசேகம் ஆகியவையும் செய்யப்படுகிறது. அம்பாளுக்கு மஞ்சள் பொடி அபிசேகம், புடவை சாத்துதல் ஆகியவற்றையும் செய்யலாம். உண்டியல் காணிக்ககை செலுத்தலாம். கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு அன்னதானம் செய்யலாம். வசதி படைத்தோர் கோவில் திருப்பணிக்கு பொருளுதவி செய்யலாம்.
.
பிரார்த்தனை:
இங்குள்ள ஈசனை வழிபடுவோர்க்கு மனநிம்மதி கிடைக்கும். இது உடல் சம்பந்தப்பட்ட எந்த நோயானாலும் தீருகிறது. கலைகளில் தேர்ச்சி பெற விரும்புவோர் இத்தலத்தின் மேல் அதீத ஆர்வம் கொண்டு பிரார்த்தனை செய்தால் அவர் விரும்பிய வண்ணம் சிறப்பான எதிர் காலம் அமையும் என்பது நம்பிக்கை. மேலும் குழந்தை வரம் மற்றும் குடும்ப ஐஸ்வர்யம் ஆகியவற்றுக்காகவும் இத்தலத்தில் பக்தர்கள் பிரார்த்தனை செய்து கொள்வது வழக்கமாக உள்ளது.
மார்கழி திருவிழா :
10 நாள் திருவிழா – திருவாதிரை உற்சவம் இத்தலத்தில் மிக விசேசமாக நடக்கும். திருவாதிரை நட்சத்திரத்திற்கு முன் கொடி ஏற்றி பத்து நாள் விழா நடைபெறும். இத்திருவிழாவில் ஒரு தனி விசேசம் உண்டு. இவ்விசேசம் மாணிக்கவாசகருக்கு அமைவது. பத்து நாட்களிலும் சாயுங்கால தீபாராதனையின் போது மாணிக்கவாசகரை சுவாமியின் சன்னதிக்கு எழுந்தருளச் செய்து திருவெம்பாவை பாட்டுகள் பாடிச் சுவாமிக்குத் தீபாராதனை நடைபெறும். நாள்தோறும் காலை விழாவில் மாணிக்கவாசகரையும் எழுந்தருளச் செய்வதுடன் 10 ஆம் நாள் தரிசனம் முடிந்தவுடன் மாணிக்கவாசகருக்கும் தீபாரதனை நடைபெறும். சுவாமிக்கு விடையாத்தித் திருவிழா முடிந்த மறுநாள் மாணிக்கவாசகருக்கும் விடையாத்தித் திருவிழா நடைபெறும்.
ஆனித் திருமஞ்சனம் :
10 நாள் திருவிழா – ஆனி உத்திர நட்சத்திரத்திற்குப் பத்துநாள் முன் கொடிஏற்றி முதல்நாள் திருவிழா முதலாக எட்டாந்திருவிழா வரையில் உற்சவ மூர்த்திகளான சோமாஸ்கந்தர், சிவானந்த நாயகி, விநாயகர் , சுப்பிரமணியர், சண்டேசுவரர் முதலிய பஞ்சமூர்த்திகளும் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வெள்ளி, தங்க வாகனங்களில் வீதியுலா வருவார்கள். சித்திரை வருடப்பிறப்பு, திருவாதிரை நட்சத்திரம், அமாவாசை முதலிய விசேச நாள்களில் நடராஜமூர்த்தி சிவகங்கையில் தீர்த்தம் கொடுத்தருள்வார். மற்ற மாதங்களிலும் இவ்வாறு தீர்த்தம் கொடுத்தருள்வார். சித்திரை முதல் பங்குனி முடிய பன்னிரு மாதங்களில் மாதப்பிறப்பு, பிரதோசம், வெள்ளிக்கிழமை, திருவாதிரை, கார்த்திகை, அமாவாசை, பௌர்ணமி ஆகிய நாட்களில் இரவு விழா நடைபெறும்.
திருப்பாவாடை உற்சவம்:
சிதம்பரம் திருத்தலத்தில் நடைபெறுகின்ற பல உற்சவங்களுள் தைப்பூசத்திருநாளில் நடைபெறும் திருப்பாவாடை உற்சவமும் ஒன்று. இதற்கென்று ஒரு சாசனமும் எழுதப்பட்டுள்ளது. இந்த சாசனத்தில் திருப்பாவாடை உற்சவத்தை தைப்பூசத்தன்று விமரிசையாக நிகழ்த்துவதற்காக பல நூற்றாண்டுகளுக்கு முன்பாகவே நிலம் தானம் செய்யப்பட்டதாக பல குறிப்புகள் இருக்கின்றன. அரிசி, பருப்பு, சர்க்கரை, தேங்காய், பலா முதலியவற்றைக் கொண்டு இனிப்புச் சுவை கொண்ட பொங்கல் திருவமுது செய்து தைப்பூசத் திருப்பாவாடை வைபவத்தின்போது இறைவனுக்குப் படைக்க வேண்டும் என்பதற்காக நிலம் தானம் செய்யப்பட்டது. இவை யாவும் தைப்பூசத்திருநாளில் சிதம்பரம் திருத்தலத்தில் தொன்மைக் காலம் தொட்டு நடைபெற்று வரும் சிறப்பினையும் மகிமையையும் எடுத்துக் காட்டுகிறது.
காலை 06:00 மணி முதல் 12:30 மணி வரை, மாலை 04:30 மணி முதல் இரவு 10:00 மணி வரை திறந்திருக்கும்.
அமைவிடம் :
மாநிலம் :தமிழ் நாடு
சென்னையில் இருந்து ரயில் மற்றும் சாலை மார்க்கமாக சிதம்பரம் சென்று அடையலாம். சென்னையில் இருந்து சுமார் 240 கி.மி. தொலைவில் சிதம்பரம் இருக்கிறது. காவிரியின் வடகரை சிவஸ்தலங்களை தரிசிக்க சிதம்பரத்தை ஒரு நுழைவாயில் என்று கூட சொல்லலாம்.
"குனித்த புருவமுங் கொவ்வைச்செவ் வாயிற் குமிண்சிரிப்பும்
பனித்த சடையும் பவளம்போன் மேனியிற் பால்வெண்ணீறும்
இனித்த முடைய வெடுத்தபொற் பாதமுங் காணப்பெற்றால்
மனித்தப் பிறவியும் வேண்டுவ தேயிந்த மாநிலத்தே.
ஓம் நமசிவாய
படித்து பகிர்ந்தது
இரா இளங்கோவன்
நெல்லிக்குப்பம்.