Tuesday, September 19, 2023

புரட்டாசி மாதத்தை புண்ணியம் நிறைந்த மாதமாக கொண்டாட்டத்துடன் வரவேற்போம்.

புரட்டாசி மாதம்.

புரட்டாசி மாதத்தை புண்ணியம் நிறைந்த மாதமாக கொண்டாட்டத்துடன் வரவேற்போம். புரட்டாசி மாதம் பெருமாளுக்கு உரிய மாதம்.
இந்த மாதம் முழுக்க, பெருமாள் கோயிலுக்குச் சென்று வழிபடுவதும், பெருமாளை பிரார்த்தனை செய்வதால், எல்லா வளமும் தந்தருளும் என்பது ஐதீகம். மாதங்களில் நான் மார்கழியாக இருக்கிறேன் என அருளியுள்ளார் மகாவிஷ்ணு. ஆனால், புரட்டாசி மாதத்தை 'பெருமாள் மாதம்' என்றே போற்றி வணங்குகிறோம்.

ஆடி மாதம் எப்படி அம்பிகைக்கு உரிய மாதமோ அதேபோல் புரட்டாசி என்பது மகாவிஷ்ணுவுக்கு உரிய மாதம். புரட்டாசி வந்துவிட்டாலோ அசைவ உணவுகளை ஒதுக்கி வைத்து விடுகிறார்கள் பக்தர்கள். 

புரட்டாசி மாதத்தில் திருமாலின் திவ்ய திருநாமங்களைச் சொல்வதே புண்ணியம் என்கிறது விஷ்ணு புராணம். 'கேசவா' என்றோ 'மதுசூதனா' என்றோ 'நாராயணா' என்றோ எப்படிச் சொல்லி அழைத்தாலும் அவை நமக்கு பெரும்புண்ணியத்தைக் கொடுக்கவல்லது.

புரட்டாசி மாதத்தில் தான் 'வெங்கட்ராமா… கோவிந்தா' என்று உச்சரிப்பது பெரும்பாலானோரின் வழக்கம். 

அந்தக் காலத்தில், கையில் செம்புடன் நெற்றியில் திருமண் வைத்துக்கொண்டு 'வெங்கட்ராமா… கோவிந்தா…' என்று சொல்லிக்கொண்டே வீட்டுக்கு வீடு போய் அரிசியைப் பெறுவார்கள். ஒரு உஞ்சவிருத்தி போல், இப்படி யாசகமாகப் பெற்ற அரிசியை அருகில் உள்ள பெருமாள் கோயிலுக்கு வழங்குவார்கள்.

இப்படி உஞ்சவிருத்தி போல், 'வெங்கட்ராமா… கோவிந்தா…' என்று சொல்லிக்கொண்டே ஒவ்வொருவரின் வீட்டு வாசலிலும் நிற்கும் போது, நமக்குள் இருக்கிற கர்வம், ஆணவம் எல்லாம் காணாமல் போய் விடும். கடவுளுக்கு முன்னே எல்லோரும் சமம் என்ற நிலை உருவாகும். 

புரட்டாசி மாதம் முழுவதும் தினமும் காலையில் அல்லது மாலையில் விஷ்ணு சகஸ்ரநாமம் பாராயணம் செய்தாலோ அல்லது ஒலிக்க விட்டுக் கேட்டாலே நம் பாவங்கள் அனைத்தும் பறந்தோடிவிடும். 

அதேபோல், புரட்டாசி முழுவதுமே தினமும் துளசி தீர்த்தம் பருகி வந்தால், நம் ஆன்மாவும் மனமும் சுத்தமாகும். தீய சக்திகள் நம்மை அண்டாது என்பது ஐதீகம்.

சூரியனுக்கு உரிய நாளில் தமிழ் மாதமான புரட்டாசி மாதம் பிறப்பது ரொம்பவே சக்தி வாய்ந்தது. வீட்டில் உள்ள பெருமாள் படத்துக்கு, தினமும் கையளவு துளசியைச் சார்த்தி, இரண்டு கற்கண்டை நைவேத்தியம் செய்து ஆத்மார்த்தமாக வேண்டிக்கொள்ளுங்கள். வேண்டியதை எல்லாம் தந்தருளுவார் வேங்கடவன். கவலைகளில் இருந்தும் துக்கத்தில் இருந்தும் போக்கியருளுவார் மகாவிஷ்ணு. 

எல்லா வளமும் நலமும் தந்து இனிதே வாழச்செய்வார் ஏழுமலையான்.

வாழ்க வளமுடன். ..

No comments:

Post a Comment

Followers

அஷ்டதிக் பாலகர்கள் எட்டு திசைகளுக்கு உரிய காவலர்கள்..

அஷ்டதிக் பாலகர்கள் எட்டு திசைகளுக்கு உரிய காவலர்கள் ஆவர். இவர்கள் எண்திசை நாயகர்கள் என்றும் அழைக்கப்படுகின்றனர். அஷ்டதிக் பாலகர்...