Saturday, March 16, 2024

மதுரை மீனாட்சி_சுந்தரேஸ்வரர் திருக்கோயிலின் வடக்கு_இராஜகோபுரம் (மொட்டைகோபுரம் )மகா_முனீஸ்வரர் (மொட்டைமுனி )

உலகப்புகழ் பெற்ற தேவாரப் பாடல் பெற்ற பாண்டிய நாட்டுத் தலங்களில் ஒன்றான, சிவபெருமானின் பல திருவிளையாடல்கள் நடைபெற்ற இடமான #மதுரை 
#மீனாட்சி_சுந்தரேஸ்வரர் திருக்கோயிலின் 
காவல் தெய்வமான
#வடக்கு_இராஜகோபுரம் 
(மொட்டைகோபுரம் )
#மகா_முனீஸ்வரர் (மொட்டைமுனி )
வரலாறு:
மகா முனீஸ்வரர் என்ற 
மொட்ட முனிசுவரன் என்பவர் தமிழ்நாட்டில் மதுரையில் உள்ள மீனாட்சியம்மன் கோயிலின் வடக்கு கோபுரத்தில் உள்ள முனிசுவரனாகும். மீனாட்சியம்மன் கோயிலின் பிற கோபுரங்களில் உள்ளதைப் போல் சிற்பங்களின்றி இக்கோபுரம் கட்டப்பட்டதால், இதனை மொட்டை கோபுரம் என்று அழைக்கப்பட்டு வந்துள்ளது. இம்மொட்டை கோபுரத்தடியில் குடிகொண்ட முனிசுவரனை, மொட்ட முனி , மொட்ட கோபுரத்தான் எனப் பல பெயர்களால் அழைத்துவருகின்றனர்.

முனிசுவரன் மொட்ட கோபுரத்தில் தங்கியமைக்காக சொல்லப்படுகின்ற தொன்மமானது, முனிசுவரன் என்பவர் சிவபெருமானின் கணங்களில் ஒருவர். அவர் சிவபெருமான் மற்றும் மீனாட்சியின் திருமணத்தினைக் காணவந்தார். திருமணம் முடிந்ததும் சிவபெருமானிடம் விடைபெற்று கயிலை திரும்ப வினவிய போது, சிவபெருமான் மீனாட்சி கோயிலின் மொட்டைக் கோபுரத்தில் தங்கும்படி கூறியதாகவும், அதனால் முனிசுவரன் இங்கேயே தங்கிவிட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

குலம் காக்கும் குலதெய்வம் காவல் கொடுக்கும் காவல் தெய்வ வழிபாடு சிறு தெய்வம் பெறுந் தெய்வம் என்று பல்வேறு வழிகளில் உருவ வழிபாடு சிலை வழிபாடு அரூப வழியில் வணங்கப்படுகிறது. அந்த வகையில் உருவ வழிபாடு காணும் மதுரை மஹா முனீஸ்வரன் ஆலயம் தென் மாவட்டங்களில் பிரதான இடம் பெறுகிறது. தென் மாவட்ட மக்களின் பல குடும்பங்கள் தங்கள் குலதெய்வமாக வணங்கும் இந்த மஹா முனீஸ்வரன் ஆலயம் மதுரை மீனாட்சியம்மன் கோயிலின் வடக்கு கோபுரத்தின் அருகே வலது புறத்தில் அமைந்துள்ளது. கடந்த காலங்களில் மொட்டைக் கோபுரத்து மகா முனீஸ்வரர் என்றே பெயர் பலகை இருந்தது. ஆனால் சமீப காலமாக மொட்டை கோபுரம் என்ற வார்த்தை நீக்கப்பட்டு மகா முனீஸ்வரர் என்றே பெயர் பலகை உள்ளது.

அமராவதிபுதூர் வயிநாகரம் நாகப்ப செட்டியார் மொட்டை கோபுரமாக இருந்த வடக்கு கோபுரத்தை, தனது செலவில் 152 அடி உயர பிரம்மாண்ட கோபுரமாக 1878 ஆம் ஆண்டில் கட்டி முடித்தார்.

#பெயர்க்காரணம்:

நீண்ட நெடு நாட்களாக மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலின் வடக்குக் கோபுரம் கட்டப்படவில்லை. செட்டிநாட்டைச் சேர்ந்த வயிநாகரம் நாகப்பச்செட்டியார் அவர்களால் 1878-ஆம் ஆண்டின் இறுதியில் வடக்குக் கோபுரம் கட்டப்பட்டது.
வடக்கு கோபுரம் கட்டப் படுவதற்கு முன்பே முனீஸ்வரன் என்ற நாட்டுப்புற சிறு தெய்வக் கோவில் சிறிய இடத்தில் அமைந்திருந்தது. வடக்குக் கோபுரம் கட்டப்படாத நிலையில் அதன் கீழ் இருந்த முனீஸ்வரன் கோவில் மொட்டைக்கோபுரம் முனீஸ்வரன் கோயில் என்று அழைக்கப்பட்டது.

தனியார் ஒருவருக்குச் சொந்தமான குலதெய்வக் கோவில் இது. யாழ்கீத சுந்தரம் பிள்ளை குடும்பத்தார் இதனை அமைத்தனராம். சைவ பிள்ளை வகுப்பைச சேர்ந்த சுந்தரம் பிள்ளை இன்று உயிருடன் இல்லை. இவர் வாரிசுகளான நான்கு மகன்கள் இக்கோவிலை இன்று பராமரித்து வருகிறார்கள். என்றாலும் முனீஸ்வரன் பல்வேறு சாதியினராலும், பல்வேறு மதத்தவராலும் வழிபடப்படுகிறார்.

இக்கோவிலுக்குரிய இடம் மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலின் வடக்கு வாசலில் மொட்டைக் கோபுரத்தின் அடியில் ஒரு மண்டபமாக இருந்துள்ளது. சிறிய கோவிலாக தொடங்கப் பட்ட முனீஸ்வரன் சன்னிதி மரத்தாலான கதவு இருந்ததாக பக்தர்கள் சொல்கிறார்கள். அந்நாளில் தரையோடு உள்ள வளையத்தில் சங்கிலியினை இணைத்து பூட்டுவது உண்டாம். முனீஸ்வரன் சன்னிதியின் முன்புறம் பெரிய கல்லாலான தூண்கள் உள்ளன.

மஹா முனீஸ்வரர் வழிபாடு முறை:

பொதுவாக வீட்டில் எந்த ஒரு சுபகாரியம் நடந்தாலும்… புது ஜனனம் (குழந்தை பிறப்பு) என்றால் முதலில் நாங்கள் செல்வது அழகர்கோயில். அங்கேதான் முடி காணிக்கை, காது குத்துவது எல்லாமே. அங்கே தீர்த்த தண்ணீரில் குளித்துவிட்டு பெருமாளை தரிசித்து விட்டு பின்னர் அங்கிருந்து நேராக மதுரை மீனாட்சியம்மன் கோயில் வந்து முதலில் வடக்கு கோபுரத்தில் இருக்கும் எங்கள் முனீஸ்வரர் வழிபாடு செய்யும் வழக்கம் இன்றளவும் பல குடும்பங்களில் இருக்கிறது.

அப்போது நிலமாலை தொடுத்து வழிபாடு செய்வது வழக்கம். அதாவது மீனாட்சியம்மனின் வடக்கு கோபுர உச்சியில் இருந்து கீழே எங்கள் குலதெய்வம் முனீஸ்வரர் ஆலய கோபுரம்வரை பூமாலை தொடுப்பார்கள்.பூஜை பொருட்கள் :பூ, பழம், தேங்காய் வெற்றிலை பாக்கு சந்தனம் விபூதி மஞ்சள் குங்குமம் உள்ளிட்ட மங்கல பொருட்களும். வஸ்தி்ரம் வெள்ளை வேஷ்டி. மற்றும் முனீஸ்வரன் பிரியமான சுருட்டு உள்ளிட்ட பொருட்கள்.

இவர் பால முனீஸ்வரன் என்று அறியப்படுவதால் இங்கே எந்த உயிர்பலியும் வழக்கில் கிடையாது. எலுமிச்சை தேங்காய் வெண் பூசணி பலி பூஜை மட்டுமே பிரதானம். ஆடு கோழி உள்ளிட்ட உயிர் பலிகள் எல்லாம் அதற்கு பாண்டி முனீஸ்வரர் கோயிலில் செய்வார்கள். .

நாட்டார் வழிபாடு:

அந்நாளில் தினசரி வழிபாடு நாட்டார் இன பூசாரிகளால் நடத்தப்பட்டது. மந்திரங்கள் கால பூசைகள் மற்றும் வைதீகச சடங்குகள் எல்லாம் செய்யப்படவில்லையாம். அருச்சனை கட்டணங்கள் கூட வசூலிக்கப் படவில்லை என்கிறார்கள். துணைக்கோயில் வழிபாடு ஏதும் இல்லை வழிபடுவோர் தரும் தேங்காய் பழத்தைப் பூசாரி உடைத்துத் தீபம் காட்டுவார். அவற்றில் பாதி கொண்டு வருவோருக்கும் மறுபாதி பூசாரிக்கும் உரியதாகும். அர்ச்சனையின் போது வேத மந்திரங்கள் கூறப்படுவதில்லை. கட்டணமும் இல்லை கால பூசைகள் ஏதுமில்லை.

நிலை மாலைகள்:

இன்று கூட செவ்வாய் வெள்ளிக்கிழமைகளில் மீனாட்சி அம்மன் கோவில் வடக்குக் கோபுரத்தின் உச்சியிலிருந்து கதம்ப சரங்கள் தொங்கவிடப்படுகின்றன. இவை ஒவ்வொன்றும் நூறு அடி நீளத்துக்கும் மேற்பட்டவை. ஒரே நாளில் ஒரே நேரத்தில் பத்து இருபது சரங்கள் கூட ஒரே நேரத்தில் தொங்கவிடப்படுகின்றன. பூசசரங்கள் மொட்டைக்கோபுர முனியின் சன்னிதியின் தூணில் கட்டப்பட்டிருக்கும்.

பழங்காலத்தில் உயிர்ப்பலி நடத்தப் பட்டதாகவும், தற்போது இந்த வழக்கம் நடைமுறையில் இல்லை என்று தெரிகிறது. என்றாலும் பக்தர்கள் ஆடு, கோழி, கன்றுக்குட்டி போன்ற உயிரினங்களை நேர்த்திக் கடனாக செலுத்துவது இன்றும் நடைபெறுகிறதாம்.

திருவிழாக்கள்:

மாசி மாதம் வரும் வருஷ சிவராத்திரி மிகவும் விமரிசையாக கொண்டாடப் படுகிறது. கோவில் பங்காளிகள் மற்றும் உரிமைக்காரர் மூலம் சக்தி கரகம் வைகை ஆற்றிலிருந்து அழைத்து வரப்படுகிறது. வழி நெடுக பூசாரி கரகம் பக்தர் வீடுகளின் எதிரே நிற்கும்போது கற்பூரம் காட்டுகிறார்கள். பூசாரி சாமியாடுகிறார். சிவராத்திரி அன்று படையல் போடுகிறார்கள். ஆடிப் பௌர்ணமி ஆடிப்பௌர்ணமி அன்று அழகர் கோயில் பதினெட்டாம் படிக் கருப்பணசாமியின் சந்தனக்குடம் இத்திருக்கோயிலில் இருந்து எடுத்துச் செல்லப்படுகிறது.

மொட்ட முனியை மதுரையில் உள்ள மக்கள் வழிபட்டு வருகிறார்கள். அவர்களின் குழந்தைகள் எந்தக் காரணமும் இல்லாமல் அழுதால், அக்குழந்தையை முனிசுவரன் கோயிலுக்கு அழைத்துவந்து விபூதி கொடுக்கின்றார்கள்.
ஓம் நமசிவாய படித்து பகிர்ந்தது இரா இளங்கோவன் நெல்லிக்குப்பம். 

No comments:

Post a Comment

Followers

திருவாரூர் சூட்சுமபுரீஸ்வரர் சிறுகுடி...

அருள்மிகு சூட்சுமபுரீஸ்வரர் திருக்கோயில், சிறுகுடி,  சரபோஜிராஜபுரம் அஞ்சல், வழி பூந்தோட்டம், குடவாசல் வட்டம், திருவாரூர் மாவட்டம் –  609 503...