Wednesday, September 25, 2024

நந்தsனாருக்காக நந்தி விலகிய சிவன் தலம்....



சிவனடியார்களின் தூயபக்திக்காக 
#சிவபெருமானின் #ஆணைக்கிணங்க,
சைவத் திருமுறைகள் பாடல் பெற்ற 
#தமிழகத்தில் உள்ள 
#நந்தி_விலகிய_தலங்களை காணலாம் வாருங்கள் 🙏🏻🙏🏻🙏🏻 
1.#நந்தனாருக்காக நந்தி விலகிய தலம் #திருப்புன்கூர் (திருப்புங்கூர்)
#சிவலோகநாதசுவாமி திருக்கோயில் 

2.#திருஞானசம்பந்தருக்காக நந்தி விலகிய தலம் 
#திருப்பட்டீஸ்வரம்
#தேனுபுரீஸ்வரர் என்ற #பட்டீஸ்வரர் திருக்கோயில் 

3.#அப்பர் சுவாமிகள் நீண்ட காலம் தங்கி உழவாரம் செய்த தலமானதால்,
#திருஞானசம்பந்தர் அக்கோயில் மண்ணை மிதிக்க அஞ்சி நிற்க,
இறைவனின் ஆணைக்கிணங்க நந்தி விலகிய 
#திருப்பூந்துருத்தி (மேலை)
#புஷ்பவனேஸ்வரர் திருக்கோயில் 

 
*1. #நந்தனார் என்ற திருநாளைப்போவார் நாயனாருக்காக திருப்புன்கூரில் 
விலகிய நந்தி:

மேல ஆதனூர் என்ற கிராமத்தில் பிறந்தவர் நந்தனார். மிகச் சிறந்த சிவபக்தர். இவர் சிதம்பரத்தில் வீற்றிருக்கும் நடராஜப்பெருமானை தரிசிக்க மிகுந்த ஆவல் கொண்டிருந்தார். ஆனாலும் கூலி வேலை செய்து பிழைக்கும் அவரால் உடனடியாக சிதம்பரம் செல்லமுடியவில்லை. அவர் வேலை செய்யும் இடத்திலும் அனுமதி கிடைத்த பாடில்லை. ‘நாளை போகலாம்.., நாளை போகலாம்’ என்றே இருந்தார். அதனால் அவருக்கு ‘திருநாளைப்போவார்’ என்று கூட பெயர் உண்டு.
ஒரு நாள் நந்தனார் சிதம்பரம் செல்வதற்கு, முதலாளியின் அனுமதி கிடைத்தது. இதையடுத்து அவர் சிதம்பரம் புறப்பட்டார். வழியில் திருப்புன்கூர் திருத்தலத்திற்கு வந்தார். அவர் தாழ்த்தப்பட்ட குலத்தவர் என்பதால், அவரை சிலர் கோவிலுக்குள் சென்று வழிபட அனுமதிக்க வில்லை. ஆகையால் கோவில் வாசலில் இருந்தபடியே, எட்டி எட்டி உள்ளே பார்த்தார். இறைவனின் உருவம் தெரியவில்லை. கருவறைக்கு முன்பாக இருந்த பெரிய நந்தி, மூலவரை மறைத்துக் கொண்டிருந்தது.

நந்தனாருக்கு ‘இறைவனை தரிசிக்க முடியவில்லையே’ என்ற மனவருத்தம் ஏற்பட்டது. ‘என்ன செய்வேன் இறைவா?’ என்றபடி மனமுருக வேண்டினார். தன் மனவலியைச் சொல்லி இறைவனைப் பாடினார். நந்தனாருக்காக கருவறை முன்பிருந்த துவார பாலகர்களும் இறைவனிடம் ‘சுவாமி! நந்தனார் வந்திருக்கிறார்’ என்றனர்.
இன்னொருவர் சொல்லித்தான், இறைவனுக்கு தன் பக்தனின் பக்தியைப் பற்றித் தெரிய வேண்டுமா? நந்தனாரின் பக்தியை மெச்சிய சிவபெருமான், தனக்கு முன்பாக இருந்த நந்தியை, சற்றே விலகி இருக்கும்படி பணித்தார். நந்தியும் அதன்படியே விலகிக்கொண்டது. இப்போது இறைவனின் திருக்காட்சி நந்தனாருக்கு நன்றாகத் தெரிந்தது. இப்படி பக்தனுக்காக நந்தியை விலகி இருக்கச் சென்ற இறைவன் வீற்றிருக்கும் சிறப்பு வாய்ந்த தலம் இதுவாகும்.

இப்போதும் இந்த ஆலயம் சென்றால், இறைவனின் கருவறைக்கு நேராக இல்லாமல், சற்று ஒதுங்கி இருக்கும் நந்தியை நாமும் தரிசிக்கலாம். எல்லாக் கோவில்களிலும் நந்திக்கு நாக்கு வெளியே தெரிந்தபடி இருக்கும். ஆனால் இங்கிருக்கும் நந்திக்கு நாக்கு உள்ளமைந்தபடி இருக்கும். துவார பாலகர்கள் எல்லாக் கோவில்களிலும் நேராக இருப்பார்கள். ஆனால் இங்கு தலை சாய்த்து காணப்படுவார்கள். இறைவனிடம், நந்தனார் என்ற பக்தன் வந்துள்ளார் என்று கூறுவது போல் அமைந்த தோற்றம் இது என்று சொல்லப்படுகிறது.
புங்க மரம் நிறைந்த காட்டுப்பகுதியில் இருந்ததால், இந்த கோவிலுக்கு புங்கூர் கோவில் என்று பெயர் வந்தது. புங்க மரக்காட்டுப் பகுதியில் இறைவன் புற்று வடிவமாக உள்ளார். இத்தலத்தில் முதலில் தோன்றியது புற்று வடிவமான லிங்கமே. அதன்பிறகே வந்தது நந்தி. இவை இரண்டும்தான் இந்த ஆலயத்திற்கு பெருமையும் புகழும் சேர்த்தன. இத்தல இறைவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். புற்று வடிவமாக மூலவர் வீற்றிருக்கிறார். இறைவனின் திருநாமம் சிவலோகநாதர் என்பதாகும்.
புற்று வடிவாய் அமைந்துள்ள சிவலோகநாதருக்கு, வாரந்தோறும் திங்கட்கிழமைகளில் இரவு 8.30 மணியளவில் புணுகு சட்டம் சாத்துகிறார்கள். சுவாமி மீது திருக்குவளை சாத்தி பக்தர்கள் பூஜைகள் நடத்துகிறார்கள். நாக தோஷத்தினால் நீண்ட நாள் கல்யாணம் ஆகாமல் இருப்ப வர்கள் தங்கத்தில் நாகத் தகடு செய்து உண்டியலில் போடுகி றார்கள். இவ்வாறு செய்தால் திருமணத்தடை நீங்கி உடனே கல்யாணம் நடக்கிறது. திருமண வரம் வேண்டுவோர் அர்ச்சனை மாலை சாத்துவது என்பது இத்தலத்தில் விசேஷம். மேலும் பரிகார அர்ச்சனை என்பதும் இத்தலத்தில் விசேஷமானது.
இத்தலத்தில் உள்ள மூர்த்திகளான சுவாமி, அம்பாள், பிள்ளையார், முருகன், அகத்தியர் ஆகியோருக்கு செய்யப்படும் பஞ்ச அர்ச்சனைகள், பூர்வ ஜென்ம பாவங்களை விலக்கி அருள்புரியும் என்று கூறுகிறார்கள்.
இங்குள்ள அம்பாளின் திருநாமம் சவுந்திரநாயகி என்பதாகும். இந்த அன்னைக்கு புடவை சாத்துதலும், அபிஷேகம் செய்தலும், சந்தனகாப்பு சாத்து தலும் பக்தர் களின் முக்கிய நேர்த்திகடன் களாக உள்ளது. சுவாமிக்கு வஸ்திரம் சாத்தலாம். மா, மஞ்சள் பொடி, திரவிய பொடி, தைலம், பால், தயிர், விபூதி, பன்னீர், இளநீர், பஞ்சாமிர்தம், எலுமிச்சை, தேன், சந்தனம் ஆகியவற்றால் அபிஷேகம் செய்ய லாம். தவிர வழக்கமான அபிஷேக ஆராதனைகளும் செய்யலாம். வசதி படைத்தோர் கோவில் திருப் பணிக்கு பொருளுதவி செய்ய லாம்.
நாக தோஷம், பூர்வ ஜென்ம பாவ தோஷம் உள்ளவர்கள் இத்தலத் தில் வழிபட்டால், அவர்களின் தோஷம் நிவர்த்தியாகும் என்பது நம்பிக்கை. புற்று வடிவாய் வீற்றிருக்கும் மூலவர் சிவலோக நாதர் சுவாமியை வணங்குவோரு க்கு துயரம் நீங்கி மன அமைதி கிடைக்கும். மேலும் வேலை வாய்ப்பு, தொழில் விருத்தி, உத்தியோக உயர்வு ஆகியவற்றுக் காகவும் இங்கு பிரார்த்தனை செய்கிறார்கள். இத்தல இறைவன், தன்னுடைய பக்தர்களின் அனைத்து வேண்டுதல்களுக்கும் நிச்சயம் செவிசாய்ப்பார்.
இந்த ஆலயத்தில் ‘குளம் வெட்டிய பிள்ளையார்’ மிகவும் பிரசித்தம் பெற்றவர். நந்தனார் இத்தல இறைவனை தரிசிக்கும் முன்பாக நீராடுவதற்காக, ஒரே இரவில் பூதங்களை கொண்டு இங்கு திருக்குளம் அமைந்தார் விநாயகர். இதனால் இத்தல விநாயகர் ‘குளம் வெட்டிய பிள்ளை யார்’ என்று அழைக்கப்படுகிறார்.
இந்த ஆலயத்தின் தல விருட்சம் புங்கமரம். எனவே தான் இந்த ஊருக்கு ‘திருப்புன்கூர்’ என்ற பெயர் வந்தது. மிகவும் பழமையான கோவில் இது. ராஜேந்திர சோழன் காலத்தில் கோவில் திருப்பணிகள் நடந்துள்ளது. சிவனின் தேவாரப்பாடல் பெற்ற 274 சிவாலய ங்களில், இது 20-வது தேவாரத் தலம் ஆகும்.
வைகாசி விசாகம், 10 நாள் பிரம்மோற்சவம் இங்கு விமரிசையாக நடைபெறும் விழாக்களாகும். திருவிழாவில் பத்து நாட்களும் சுவாமி வீதியுலா வரும். மாதாந்திர பிரதோஷ நாட்களின் போது பக்தர்கள் கூட்டம் கோவிலில் பெருமளவில் இருக்கும். வருடத்தின் சிறப்பு நாட்களான தீபாவளி, பொங்கல், தமிழ் மற்றும் ஆங்கில புத்தாண்டு தினங்களின்போதும் கோவிலில் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடக்கும். இந்த ஆலயம் தினமும் காலை 6 மணி முதல் 11 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8.30 மணி வரை திறந்திருக்கும்.
அமைவிடம்
நாகப்பட்டினம் மாவட்டத்தில் வைதீஸ்வரன் கோவிலில் இருந்து 3 கி.மீ. தூரத்தில் அமைந்துள்ளது, திருபுங்கூர் சிவலோகநாதர் சுவாமி திருக்கோவில்.

 2.*திருஞானசம்பந்தருக்காக #திருப்பட்டீஸ்வரத்தில்
விலகிய நந்தி:

காவிரியின் தென்கரையில் உள்ள 53 ஆவது தலம், ஞானசம்பந்த பெருமானால் பாடப்பெற்ற தலம் என்ற பெருமைகளை கொண்டது தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள பட்டீஸ்வரம்! காமதேனுவின் புதல்வியான பட்டி பூசித்ததால் பட்டீஸ்வரம் எனப் பெயர் பெற்றதாகக் கூறுவர்.

இத்தலத்தில் ஆளுடையப்பிள்ளையார் வருகின்ற அழகான காட்சியைக் கண்டு ரசிப்பதற்காக இறைவன் நந்தியை சற்று விலகக் கூறியதால் இங்குள்ள நந்திகள் சந்நிதியிலிருந்து சற்றே விலகியிருப்பதைக் காணமுடியும். மேலும், இறைவன் வேண்ட ஞானசம்பந்தருக்காக நந்தி விலகிய மற்றொரு தலம் திருப்பூந்துருத்தியாகும்.

மாறன்பாடிக்கருகே பிள்ளையார் நடந்து சென்றருளியபோது பாதத்தாமரை நொந்ததனைக் கண்ட இறைவன் முத்துச்சிவிகையருளினார். ஆனால் பட்டீஸ்வரத்திலோ அடியாருடன் நடந்துவந்ததைக் கண்ட இறைவன் வெயிலின் வெப்பம் தணிக்க பந்தல் இட்டு அருளினார். இறைவனின் பெருங்கருணைக்கும் அவன் ஞானசம்பந்தப்பெருமான்மீது காட்டிய அன்பு அளப்பரியது.

இத்தகு பெருமையுடைய பட்டீஸ்வரர் கோயில் எனப்படும் தேனுபுரீஸ்வரர் கோயிலில்

இரு கிழக்கு கோபுரங்கள், தெற்கு கோபுரம், வடக்கு கோபுரம் அமைந்துள்ளன. வடக்கு கோபுரம் வழியாக வந்தால் துர்க்கையம்மன் சந்நிதியை காணமுடியும். கிழக்கு கோபுரம் உள்ள ராஜகோபுரத்தைக் கடந்து உள்ளே சென்றால் விலகிய நிலையில் நந்தியைக் காணமுடியும். இடப்புறம் கோயிலின் குளமான "ஞானவாவி' தீர்த்தம் உள்ளது.

தேனுபுரீஸ்வரர் சந்நிதிக்குச் செல்ல, இரண்டாவது கிழக்கு கோபுரத்தினைக் கடக்கவேண்டும். இக்கோபுரத்தின் வாயிலில் இருபுறமும் துவாரபாலகர்கள் உள்ளனர்.

இக்கோபுரத்தைக் கடந்து உள்ளே செல்லும்போது அழகான மண்டபம் காணப்படுகிறது. இம்மண்டபத்திற்கு அருகில் உள்ள திருச்சுற்றில் பைரவருக்கு தனி சந்நிதி உள்ளது. மண்டபத்தில் உள்ள நந்தியும் விலகிய நிலையில் உள்ளது.

சந்நிதியில் மதவாரணப்பிள்ளையார் காணப்படுகிறார். தேனுபுரீஸ்வரராக விளங்கும் மூலவர் கருவறையில் லிங்கத்திருமேனியாகக் காட்சியளிக்கிறார். நடராஜர் சந்நிதி, பள்ளியறை இம்மண்டபத்தில் அமைந்துள்ளன. பராசக்தி ஒற்றைக்காலில் நின்று தவம் செய்யும் காட்சியுடன் கூடிய தபசு அம்மனையும் இங்கு காணலாம். மண்டபத்தில் உள்ள தூண்களில் அழகான சிற்பங்கள் உள்ளன.

இறைவனின் கருவறைக்கு இடப்புறம் அம்மனின் சந்நிதி காணப்படுகிறது. அம்மன் ஞானாம்பிகை என்றும் பல்வளைநாயகி என்றும் அழைக்கப்படுகின்றார். அம்மன் சந்நிதிக்கு முன்பாக உள்ள மண்டபம் அழகான தூண்களைக் கொண்டுள்ளது. அத்தூண்களில் அழகான சிற்ப வேலைப்பாடுகள் அமைந்திருப்பதை காணலாம்.

தனி சந்நிதியில் துர்க்கையம்மன் நின்ற கோலத்தில் புன்னகை சிந்தும் முகத்தோடு அருள் தருகிறார். இவரை, விஷ்ணு துர்க்கை என்றும் துர்க்காலட்சுமி என்றும் அழைக்கின்றனர்.

*3.அப்பர் உழவாரத் தொண்டு செய்த தலம் என்று எண்ணி காலால் மிதிக்க அஞ்சி வெளியில் நின்ற திருஞானசம்பந்தருக்கு
#திருப்பூந்துருத்தியில் 
விலகிய நந்தி :

 அமாவாசை நாளில், திருப்பூந்துருத்தி தலத்துக்கு வந்து சிவனாரையும் உமையவளையும் தரிசித்துப் பிரார்த்தித்தால், பித்ருக்களின் ஆசி நமக்குக் கிடைக்கும் என்பது உறுதி என்கிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள்.

தஞ்சாவூரில் இருந்து திருவையாறு செல்லும் வழியில் உள்ளது கண்டியூர். இங்கிருந்து கிளை பிரிந்து செல்லும் சாலையில் சுமார் 3 கி.மீ. பயணித்தால் திருப்பூந்துருத்தி எனும் அற்புதமான தலத்தை அடையலாம். மிக அழகான ஆலயத்தில் அற்புதாமாக சந்நிதி கொண்டிருக்கிறார் சிவபெருமான்.

இந்தத் தலத்து இறைவனின் திருநாமம் புஷ்பவனேஸ்வரர். அம்பாளின் திருநாமம் அழகார்ந்த நாயகி. அதாவது செளந்தர்ய நாயகி. பேருக்கேற்றாற் போல், அழகுடனும் கனிவுடனும் கருணைப்பார்வையுமாக ஜொலிக்கிறாள் அம்பிகை. பிரம்மாண்டமான ஆலயத்தில், ஏகப்பட்ட சிற்ப வேலைப்பாடுகள் பிரமிக்க வைக்கின்றன.

நாவுக்கரசர் தேவாரம் பாடிய திருத்தலம் இது. இரண்டு ஆறுகளுக்கு நடுவே துருத்திக் கொண்டிருக்கிற ஊர் என்பதால் ‘துருத்தி’ எனப் பெயர் அமைந்ததாகவும் இறைவனின் திருநாமம் புஷ்பவனேஸ்வரர் என்பதால் திருப்பூந்துருத்தி என்றானதாகவும் ஸ்தல புராணம் சொல்கிறது.

திருவையாறு தலத்தை சப்த ஸ்தான தலங்களின் மூலக்கோயில் என்பார்கள். திருவையாறு, திருப்பழனம், திருச்சோற்றுத்துறை, திருவேதிக்குடி, திருக்கண்டியூர், திருநெய்த்தானம், திருப்பூந்துருத்தி என சப்த ஸ்தான ஸ்தலங்களில் இந்தத் தலமும் ஒன்று. ஒவ்வொரு வருடமும் சித்திரை மாதத்தில், சித்ரா பெளர்ணமியின் போது, சப்த ஸ்தானத் திருவிழா வெகு விமரிசையாக நடைபெறும். இதை ஏழூர்த்திருவிழா என்றும் சொல்லுவார்கள்.

திருநாவுக்கரசர் பெருமான் இந்தத் தலத்தில் தங்கி இறைவனை வழிபட்டு வந்தார். இதையறிந்த ஞானசம்பந்தர், மதுரையில் இருந்து நேரடியாக சோழ தேசத்துக்கு வந்தார். பல்லக்கில் திருப்பூந்துருத்தி கோயிலுக்கு வந்தவர், “நான் நாவுக்கரசப் பெருமானை தரிசிக்க வந்தேன். அவர் எங்கே இருக்கிறார்?” என்று கேட்டார். “இதோ... நான் இங்குதான் இருக்கிறேன்” என்றார் நாவுக்கரசர். பார்த்தால், ஞானசம்பந்தரின் பல்லக்கைத் தூக்கியபடி நின்றவர்களில் ஒருவராக நின்றிருந்தாராம். அதிர்ந்து போய் பல்லக்கில் இருந்து இறங்கினார் ஞானசம்பந்தர். அப்பர் பெருமான் மடமொன்று தொடங்கி, இங்கே தொண்டுகள் பலவும் செய்தார். அந்த மடம் இன்றைக்கும் இருக்கிறது.

அதேபோல், சம்பந்தர் பெருமான் கோயிலுக்குள் வரும்போது உள்ளே நுழையும்போதே சிவ தரிசனம் கிடைக்கவேண்டும் என்பதற்காக, நந்திதேவர் சற்றே விலகி நின்றுகொண்டாராம். இன்றைக்கும் சந்நிதிக்கு எதிரே சற்று தள்ளியே இருக்கின்ற நந்தியைத் தரிசிக்கலாம்.

இந்தத் தலத்து முருகப்பெருமானும் விசேஷமானவர். அருணகிரிநாதர், இந்தத் தலத்துக்கு வந்து, முருகப்பெருமானின் பேரழகையும் பேரருளையும் திருப்புகழில் பாடியுள்ளார்.

அதேபோல், இந்தத் தலத்தில் திருக்கரத்தில் வீணையுடன் அற்புதமாகக் காட்சி தருகிறார் வீணாதர தட்சிணாமூர்த்தி. கலைத்துறையில் சிறந்து விளங்கவேண்டும் எனும் ஆர்வமும் லட்சியமும் கொண்டிருப்பவர்கள், திருவையாறு தலத்துக்கு வரும் போது அப்படியே திருப்பூந்துருத்தி தலத்துக்கும் வந்து தரிசித்துச் செல்வதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். தேவேந்திரனும் காசிப முனிவரும் இந்தத் தலத்துக்கு வந்து தவமிருந்து வரம் பெற்றனர் என விவரிக்கிறது ஸ்தல புராணம்.

திருப்பூந்துருத்தி திருத்தலத்துக்கு, மாத சிவராத்திரியில் அல்லது மகா சிவராத்திரியில், பிரதோஷ நன்னாளில், சோமவாரம் எனப்படும் திங்கட்கிழமையில் வந்து தரிசிக்க வேண்டும் என்கிறார்கள் சிவனடியார்கள். வாழ்வில் ஒருமுறையேனும் திருப்பூந்துருத்தி புஷ்பவனேஸ்வரரை கண்ணாரத் தரிசித்துவிட்டால், இந்த ஜென்மத்தின் எல்லாப் பாவங்களும் நீங்கிவிடும் என்பது ஐதீகம். அதேபோல், அமாவாசை நாளில், திருப்பூந்துருத்தி தலத்துக்கு வந்து சிவனாரையும் உமையவளையும் தரிசித்துப் பிரார்த்தித்தால், பித்ருக்களின் ஆசி நமக்குக் கிடைக்கும் என்பது உறுதி என்கிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள்.

*அப்பர் சுவாமிகள் பாடிய திருப்பூந்துருத்தி தேவாரப் பதிகம்:

"மாலினை மாலுற நின்றான் 
  மலைமகள் தன்னுடைய
பாலனைப் பான்மதி சூடியைப் 
  பண்புண ரார்மதின்மேற்
போலனைப் போர்விடை யேறியைப் 
  பூந்துருத் திமகிழும்
ஆலனை ஆதிபு ராணனை 
  நானடி போற்றுவதே.  

மறியுடை யான்மழு வாளினன் 
  மாமலை மங்கையோர்பால்
குறியுடை யான்குண மொன்றறிந் 
  தாரில்லை கூறிலவன்
பொறியுடை வாளர வத்தவன் 
  பூந்துருத் தியுறையும்
அறிவுடை ஆதி புராணனை 
  நானடி போற்றுவதே.  
      __அப்பர் சுவாமிகள் 
ஓம் நமசிவாய 
படித்து பகிர்ந்தது 
இரா இளங்கோவன் 
நெல்லிக்குப்பம்... 

No comments:

Post a Comment

Followers

நந்தsனாருக்காக நந்தி விலகிய சிவன் தலம்....

சிவனடியார்களின் தூயபக்திக்காக  #சிவபெருமானின் #ஆணைக்கிணங்க, சைவத் திருமுறைகள் பாடல் பெற்ற  #தமிழகத்தில் உள்ள  #நந்தி_விலகிய_தலங்களை காணலாம் ...