அருள்மிகு பரிதியப்பர் திருக்கோயில்,
மேலஉளூர் அஞ்சல்,
தஞ்சாவூர் மாவட்டம் – 614 904.
*மூலவர்:
பரிதியப்பர், பாஸ்கரேசுவரர்
*தாயார்:
மங்களாம்பிகை, மங்கள நாயகி
*தல விருட்சம்:
அரச மரம்.
*தீர்த்தம்:
சூரிய தீர்த்தம், சந்திர தீர்த்தம், கருங்காளி தீர்த்தம்.
*பாடல் பெற்ற தலம். ஞானசம்பந்தர் தேவார பதிகம் அருளியுள்ளார்.
*சூரியன் தனக்கு இருந்த நோய் தீர இத்தலம் வந்து சிவபெருமானை வழிபட்டு நோய் நீங்கப்பெற்றான் என்று தலபுராணம் கூறுகிறது. சூரியனுக்கு பரிதி என்ற பெயரும் உண்டு. பரிதி வழிபட்டதால் இத்தல இறைவன் பரிதியப்பர், பாஸ்கரேஸ்வரர் என்ற பெயர்களால் அழைக்கப்படுகிறார்.
*பங்குனி மாதம் 17, 18, 19, 20 ஆகிய தேதிகளில் சூரியனின் கதிர்கள் சிவலிங்கத் திருமேனியில் படுகின்றன.
*மூலவர் பரிதியப்பர் சந்நிதிக்கு எதிரே உள்ள நந்தியின் பின்னால் சூரியன் பெரிய வடிவுடன் நின்ற நிலையில் சிவதரிசனம் செய்வதைக் காணலாம்.
*மேலும், இத்தலம் பஞ்ச பாஸ்கர தலங்களில் (சூரியன் வழிபட்ட தலங்கள்) ஒன்றாக விளங்குகிறது. 1. ஞாயிறு, சென்னைக்கு அருகில். 2. திருச்சிறுகுடி, நன்னிலம் அருகில். 3. திருமங்களகுடி, ஆடுதுறை அருகில்.
4. திருப்பரிதி நியமம், நீடாமங்கலம் அருகில்.
5. தலைஞாயிறு திருவாரூர் அருகில்.
*ஜாதகத்தில் சூரியன் பித்ருகாரகன் என்று அறியப்படுவதால், பித்ருகாரகனான சூரியன் இத்தல இறைவனை வழிபட்டு தனது தோஷம் நீங்கப்பெற்றதால், இத்தலம் ஒரு பித்ருதோஷ பரிகாரத் தலமாகப் போற்றப்படுகிறது.
*ஜாதக ரீதியாக எந்தக் கிரகத்தினாலும், பிதுர் தோஷம் ஏற்பட்டாலும் இத்தலத்தில் பரிகாரம் செய்யலாம்.
*காத்திகை, உத்திரம், உத்திராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள், சூரிய திசை நடப்பவர்கள், சிம்ம லக்னம் , சிம்ம ராசியில் பிறந்தவர்கள் , சித்திரை, ஆவணி, ஐப்பசி மாதங்களில் பிறந்தவர்கள், தமிழ் மாதத்தின் முதல் தேதியில் பிறந்தவர்கள் முதலியோர்
தமிழ் மாத வளர்பிறை மற்றும் முதல் ஞாயிற்றுக்கிழமை இத்தலம் வந்து பரிதியப்பரையும், சூரியனையும் வழிபட அனைத்து தோஷங்களும் நீங்கும்.
*நோயினால் நீண்ட நாள் அவதிப்படுபவர்கள், தீராத நோயினால் அவதியுறுபவர்கள் இத்தலத்துக்கு வந்து வழிபாடு செய்தால், நலம் அடைவார்கள்.
*அம்பாள் மங்களாம்பிகை மாங்கல்ய பாக்கியம் தருபவள் என்று போற்றப்படுகிறாள்.
*இங்குள்ள முருகப் பெருமான் சிறந்த வரப்பிரசாத மூர்த்தியாக வழிபடப் பெறுகின்றார்.
*சண்டிகேசுவரர் சந்நிதியில் மூன்று திருமேனிகள் உள்ளன.
*மார்க்கண்டேயர் அருவ வடிவில் இத்தலத்தில் தினமும் சிவபூஜை செய்வதாக ஐதீகம்.
*திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோயிலைப் போலவே , இந்த கோயிலிலும் நீண்ட ஆயுளுக்காக பிரார்த்தனை செய்வது பிரபலமான ஒன்றாகும். 60, 70 மற்றும் 80 வது பிறந்தநாள் விழாக்கள் இங்கு அடிக்கடி கொண்டாடப்படுகின்றன. அதற்கு ஏற்ப கோயிலின் கிழக்கு பிரகாரம் ஒரு மணமேடையுடன் பெரியதாக உள்ளது.
*இங்கு மண்ணில் புதையுண்டு இருந்த சிவலிங்கம் சிபிச் சக்கரவர்த்தியால் கண்டுபிடிக்கப்பட்டு அவரால் ஆலயம் கட்டப்பட்டது.
*அமைவிடம்:
தஞ்சாவூர் - பட்டுக்கோட்டை பேருந்துச் சாலையில் மேல உளூர் (உழவூர்) சென்று அங்கிருந்து 2-கி. மீ.-ல் உள்ள இத்தலத்தை அடையலாம். தஞ்சையிலிருந்து மாரியம்மன்கோயில் வழியாகவும், மன்னார்குடிச் சாலை சடையார் கோயில் பொன்றாப்பூர் வழியாகவும் நகரப் பேருந்துகள் செல்கின்றன.
ஓம் நமசிவாய
படித்து பகிர்ந்தது
இரா இளங்கோவன்
நெல்லிக்குப்பம்.
No comments:
Post a Comment