Sunday, April 5, 2026

செஞ்சுடேஸ்வரர் குருங்குளம் சிவன்கோயில்

தஞ்சாவூர் மாவட்டம், தஞ்சாவூர் வட்டம், குருங்குளம் சிவன்கோயில் 

தஞ்சை புதுக்கோட்டை சாலையில் உள்ள திருக்கானூர்பட்டி நாலு ரோட்டில் கிழக்கில் திரும்பி ஏழுப்பட்டியில் தெற்கில் திரும்பி 5 கிமி சென்றால் குருங்குளம் அடையலாம். 

குருங்குளம் பகுதியில் புகழ்பெற்ற அறிஞர் அண்ணா சர்க்கரை ஆலை  ஊர்  குருங்குளம் கிழக்கு, குருங்குளம் மேற்கு, எனப் பிரிக்கப்பட்டுள்ளது. நாம் காணவிருக்கும் சிவன் கோயில் கீழ் பாதியில் தான் உள்ளது பெரிய ஒரு குளத்தின் கரையில் தான் இந்த சிவாலயம் அமைந்துள்ளது. 

இது வாகுயர் நாட்டின் தலைமை கிராமமான குருங்குளமாகும். இந்த பெயர் வருவதற்கான ஒரு காரணத்தையும் தெரிந்து கொள்வோம். 

இந்த ஊரில் நவகிரகங்களில் ஒருவரான குரு வழிபட்டதால் குரு குளம் எனப்படுகிறது என்கின்றனர். 
பெரிய குளத்தின் கரையில் சிவாலயம் மற்றும் மாரியம்மன் விநாயகர் கோயில்கள் உள்ளன.  மேற்கு நோக்கிய திருக்கோயில். 

நவக்கிரகங்களும் வழிபட்ட ஸ்தலம்;  சூரியன் ஒவ்வொரு நாளும் அந்திசாயும் நேரத்தில்  சிவபெருமானிடம் தனது ஒளிக்கதிர்களை சிவலிங்கம் மீது படரச் செய்து வணங்கி மறையும்  தலமாக இயல்பாகவே அமைந்துள்ளதாக கூறுகின்றனர். அந்த வகையில் இத்தலம் மிகவும் சிறப்புக்குரியத் தலமாக விளங்குகிறது.

கோயிலும் குளமும் அருகருகே இருக்கும் இடத்தில், பல முனிவர்களும், சித்தர்களும் நித்தம் வந்து சிவபெருமானை வழிபடுவார்கள் என  நம்பப்படுகிறது. குருங்குளம் செஞ்சுடேஸ்வரர் கோயிலில். மேலும் ஒரு பெருமையாக பெருமாள் , ஸ்ரீதேவி, பூதேவியுடன் கிழக்கு நோக்கி கம்பீரமாக காட்சி தருகின்றனர்.  ஒரே இடத்தில் சிவனையும், பெருமாளையும் வழிபட நமக்கு நல்வாய்ப்பு கிடைக்கிறது. 

மேற்கு நோக்கி அமைந்துள்ள சிவலிங்கத்தை காணுவதும், அப்படி ஒரு தல மண்ணில் நம் பாதம் படுவதே ஒரு சிறப்பாகும். 

இறைவன்  செஞ்சுடேஸ்வரர் இறைவி   அகிலாண்டேஸ்வரி 

'வெண்சுடர்' (திங்கள்/சந்திரன்) மற்றும் 'செஞ்சுடர்' (ஞாயிறு/சூரியன்) ஆகியவை சிவபெருமானின் இரு கண்களாகக் கருதப்படுகின்றன. செஞ்சுடர் ஈஸ்வரன் என்பது சிவபெருமானின் ஒளியுள்ள, சிவந்த வடிவம் அல்லது அருட்பெருஞ்ஜோதியைக் குறிக்கும் சொல் தினமும் மாலை கதிரவன் ஒளி வீழ்ந்து செஞ்சுடராக காட்சியளிப்பதால் இப்பெயர் என நினைக்கிறேன். 

இறைவன் மேற்கு நோக்கிய கருவறை கொண்டுள்ளார். வாயிலில் இரண்டு பிரம்மாண்டமான துவாரபாலகர்கள் நிற்கின்றனர். உயர்ந்த விமானம் ஒன்று அவரது கருவறை மீது நிற்கிறது. நீண்ட மண்டபத்தில் எதிரில் நந்தியும் கொடிமரமும் உள்ளது.  அம்பிகை தெற்கு நோக்கிய கருவறையில் உள்ளார்.  அவற்றின் வாயிலிலும் இரு பெரிய துவாரபாலகி சிலைகள்  உள்ளன. 

கருவறை கோஷ்டங்களில் துர்க்கை பிரம்மன் லிங்கோத்பவர் தென்முகன் விநாயகர் என உள்ளனர். சுற்று மதில் சுவர் இல்லாத பிரகாரமாக உள்ளது. முதலில் தெற்கில் வராகி ஒரு சன்னதியில் உள்ளார். அடுத்து அழகிய சிற்றாலயம் ஒன்றில் விநாயகர் அடுத்து ஸ்ரீதேவி பூதேவி சமேத பெருமாள் வாயிலில் இரண்டு ஆழ்வார்கள், ஒருபுறம் ஆஞ்சநேயர்  அடுத்து  முருகன் ஒரு சிற்றாலயத்தில் உள்ளார். இரண்டு  சன்னதிகளின் இடையில்  கஜலட்சுமி சன்னதி. 

வடக்கில் சண்டேசர், வடகிழக்கில் பைரவர் சூரியன் உள்ளனர். பழுதடைந்துபோன கோயில் சமீப காலத்தில் புதுப்பிக்கப்பட்டுள்ளது. ஆயினும் இறைவன் இங்கு எழுந்தருளி பல ஆயிரம் ஆண்டுகளாகலாம். 
 குளக்கரையில் அமைந்துள்ள இக்கோயில் செம்பாறாங்கல் கற்கள் எனப்படும் ஒருவித laterite  கற்களை கொண்டு கட்டப்பட்டு  காலப்போக்கில் கோயில் சிதைந்து போனது.

இந்த ஸ்தலத்துக்கு நவக்கிரக நாயகர்கள் சூக்ஷும  வடிவில் வந்து செஞ்சுடேஸ்வரரை தரிசித்து வருவதால் இந்த கோயிலில் நவக்கிரக சன்னதி ஏதும் கிடையாது. இங்குள்ள இறைவன் செஞ்சுடேஸ்வரரை வழிபட்டாலே " நவக்கிரகங்களையும் வழிபட்ட பேறு கிட்டும்" என நம்பப்படுகிறது. 

இத்தலத்தில் இங்கு பவுர்ணமி பூஜையும், பிரதோஷ வழிபாடும் பக்தர்களால் சிறப்பாக நடத்தப்பட்டு வருகிறது.

இக்கோயிலின் அருகே எழுந்தருளியுள்ள வேதமுத்து மாரியம்மன் தான் கிராமத்தின் காவல் தெய்வமாக உள்ளார். 

மேவி எழுகின்ற செஞ்சுடர் ஊடுசென்று
ஆவி எழும்அள வன்றே உடலுற
மேவப் படுவதும் விட்டு நிகழ்வதும்
பாவித்து அடக்கிற் பரகதி தானே.
ஓம் நமசிவாய
 படித்து பகிர்ந்தது 
இரா இளங்கோவன் 
நெல்லிக்குப்பம். 

வல்லம் வஜ்ரகண்டேஸ்வரர் சிவன்கோயில்

தஞ்சாவூர் மாவட்டம், தஞ்சாவூர் வட்டம், வல்லம் வஜ்ரகண்டேஸ்வரர்   சிவன்கோயில் 
வல்லம்; தஞ்சாவூர் -  திருச்சி செல்லும் சாலையில் 12  கி.மீ தொலைவில் உள்ளது. தொல்காப்பிய உரையில் வல்லம் சோழ நாட்டுப் பிவூரும், அழுத்தூரும், நாங்கூரும், கலன்சேரியும் பெருஞ்சிக்கலும், வல்லமும், கிழாரும், முதலிய பதியிற் தோன்றி... என்று குறிப்பிடுவதை நோக்கும்போது வல்லம் என்ற ஊரின் பெருமையும் குறித்து உணர முடிகிறது.

வல்லத்திற்கு அருகே செம்பாறாங்கற்பாறைப் படிவுகளில், தொல்பழங்காலச் சான்றுகள் கிடைக்கின்றன. இங்கு சுரண்டிகள், வெட்டும் கருவிகள் மற்றும் நுண்கற்கருவிகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. சிவப்பு மற்றும் கருப்பு நிறப் பானையோடுகளும், இரும்புக்கருவிகள், எலும்புப் பொருள்கள், கல் மணிகள் மற்றும் பிற பொருள்களும் கிடைத்துள்ளன. தமிழ் பிராமி எழுத்துப்பொறிப்புள்ள ஓடுகள் சிலவும் இங்கு கிடைத்துள்ளன.

வரலாற்றுக்காலத்திலும், வல்லம் ஒரு சிறந்த ஊராகத் திகழ்ந்தது. இங்கு ஒரு கோட்டையும், அதைச் சுற்றிலும் அகழியும் இருந்தது. வான்பார்வையில் இதனை இன்றும் காணலாம், 
இங்குள்ள கோட்டை, இடைக்காலத்தைச் சேர்ந்ததாக கருதப்படுகின்றது. தஞ்சாவூருக்குப் பாதுகாப்பளிக்கும் அரணாக வல்லம் செயல்பட்டுள்ளதாகத் தெரிகின்றது. 

வல்லத்தில் சோழர் காலக் கல்வெட்டுகள் உள்ளன. இங்குள்ள சோழீஸ்வரர் கோயிலில் சோழர், போசளர், பாண்டியர் கல்வெட்டுகள் உள்ளன. இக்கோயில் கரிகால சோழீஸ்வரமுடையார் கோயில் என்று குறிப்பிடப்படுகின்றது. இங்குள்ள கோட்டை பகுதிக்குள் வஜ்ராகண்டேஸ்வரர் சிவாலயம் ஒன்றும் நரசிங்கப் பெருமாள் கோயில் ஒன்றும் உள்ளது. இவை தவிர கோட்டைக்கு வெளியில் சோழீஸ்வரர் கோயில் ஒன்றும் ஏகெளரி அம்மன் கோயிலும் பிரசித்தி பெற்றவை

இறைவன்  வஜ்ஜிரேசுவரர் / வஜ்ரகண்டேஸ்வரர் 
இறைவி மங்களாம்பிகை.

கிழக்கு நோக்கிய இந்த சிவாலய வாயிலில் ராஜகோபுரம் காணப்படுகிறது. முன் மண்டம் ஓட்டு கூரையாக உள்ளது. இதில்  நந்தியும் பலிபீடமும், உள்ளன. மூலவர் சன்னதிக்கு முன்பாக இரு புறமும் துவாரபாலகர்கள் உள்ளனர். வலப்புறம் சன்னதியில்  விநாயகர் உள்ளார். இடப்புறம் சன்னதியில் பாலதண்டாயுதபாணி  முருகன் உள்ளார். இதனை ஒட்டி வடபுறம் சஞ்சீவி ஆஞ்சநேயர் ஒரு மாடத்தில் உள்ளார்.  விநாயகர் சன்னதிக்கு முன்பாக மூஞ்சுறும், பலிபீடமும் உள்ளன. முருகன் சன்னதிக்கு முன்பாக மயிலும், பலிபீடமும் உள்ளன. 
மூலவர் கருவறைக்கு முன்பாகவும்  ஒரு நந்தி உள்ளது. மூலவர் கருவறையின் வலப்புறம் தெற்கு நோக்கிய அம்பிகை சன்னதி உள்ளது. கோஷ்டத்தில் தக்ஷணமூர்த்தி, வடக்கில் துர்க்கை சன்னதி உள்ளன. 

திருச்சுற்றில் சண்டேசர் சன்னதி உள்ளது. வடகிழக்கில் கோபுரத்தினை ஒட்டி கௌதம முனிவர் ஒரு மாடத்தில் உள்ளார் அருகில் நவக்கிரக சன்னதி காணப்படுகிறது.  அதில் சூரியன் மேற்கு நோக்கியுள்ளார். 

இத்தலத்தில் மாசி மாதத்தில் சூரிய ஒளி சுவாமி மீது வீழ்ந்து ஒரு சிறப்பான நிகழ்வாகும். 

கோயிலின் தென் புறத்தில் அகழி போன்ற குளம் போன்ற அமைப்பு காணப்படுகிறது. கோயிலின் பக்கத்திலிருந்து இப்பகுதிக்குச் செல்வதற்கு படிகள் காணப்படுகின்றன. ஐம்பதடிக்கும் மேல் ஆழம் உள்ள இந்த குளம் இந்த குளம் தான் கோட்டையில் இருந்த அனைவருக்கும் குடிநீருக்காக பயன்பட்டு வந்தது. இன்று மிகவும் பாழடைந்து முள்மரங்களால் மூடி கிடக்கிறது. தஞ்சை பகுதியை சேர்ந்த சில  இளைஞர்கள் இதனை சுத்தம் செய்யும் பணியில் 50 வாரங்களாக ஈடுபட்டுள்ளனர் என்பது வியப்புக்குரியது. இக்குளம் 1300 வருட பழமையான இந்த  வல்லம் சுவரன் மாறன் கோட்டை குளம் எனப்படுகிறது. புராண கதையில் இதனை வஜ்ர தீர்த்தம் என கூறப்படுகிறது. 

 இக்கோயிலுக்கு ஒரு புராண கதையும் சொல்லப்படுகிறது.  கௌதம மகரிஷியின் ரிஷிபத்தினியின் மேல்  இந்திரன் ஆசை கொண்டு, கௌதம மகரிஷியின் உருவத்தோடு வந்து இன்பம் அனுபவிக்கிறான்.  அதனை அறிந்த கௌதமர் அகலிகையைக் கல்லாக மாற சாபமிட்டார். இந்திரனையும் சபிக்கிறார், கல்லாக மாறிய அகலியை  ராமனின் கால்பட்டதால் மீண்டும் மனிதவுருவம் பெற்றதாக  புராணம்.  

கருட புராணத்தின்படி, வஜ்ர கண்டம் என்பது மோகத்தால் குரு, மற்றும் பிறரின் மனைவியுடன் தகா உறவு கொள்ளுதல் போன்ற 
செயல்களில் ஈடுபடுபவர்களுக்கு, நரகத்தில் வழங்கப்படும் தண்டனை ஆகும். இது கடுமையான பாவங்களுக்கு அளிக்கப்படும் தண்டனைகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது. 

இந்திரன் தன் வஜ்ர கண்ட தண்டனை நீங்க  வேண்டி இறைவனை இங்கு வந்து வேண்டி தவம் செய்ததால் இங்கு இறைவனுக்கு வஜ்ரகண்டேஸ்வரர் என பெயர் வந்தது. 

இந்திரன் தன் வஜ்ராயுதத்தால் தென்புறத்தில் ஒரு தீர்த்தம் உண்டாக்கி இத்தல இறைவனை வேண்டியதால் வஜ்ரேஸ்வரர் என பெயர் வந்தாதாக கூறுகின்றனர். இந்திரனது வஜ்ரகண்ட சாபத்தினை நீக்க வேண்டி மும்மூர்த்திகளும் கௌதமரை கேட்டுக்கொண்ட தலம் இது என கூறப்படுகிறது.  

திருவையாறு அருகில் உள்ள வீரமாங்குடியில் அமைந்துள்ள சிவாலயத்திலும் வஜ்ரகண்டேஸ்வரராகவும், அம்மன் மங்களாம்பிகையாகவும் அருள்பாலிக்கின்றனர். வஜ்ராசுரன் என்ற அரக்கனை அழித்த தலமாக இது கருதப்படுகிறது.  

ஒரு பழம்பெரும் கோட்டை நகரில் குடியிருக்கும் இறைவனை காண வாருங்கள். 
ஓம் நமசிவாய 
படித்து பகிர்ந்தது 
இரா இளங்கோவன் 
நெல்லிக்குப்பம். 

Followers

செஞ்சுடேஸ்வரர் குருங்குளம் சிவன்கோயில்

தஞ்சாவூர் மாவட்டம், தஞ்சாவூர் வட்டம், குருங்குளம் சிவன்கோயில்  தஞ்சை புதுக்கோட்டை சாலையில் உள்ள திருக்கானூர்பட்டி நாலு ரோட்டில் ...