Tuesday, May 25, 2021

Tiruchenampundi


https://youtube.com/channel/UCzyuoCjvB15KPJjIL9HGNHA
திருச்சென்னம்பூண்டி சடையார் கோயில்-சோழர் காலக் கற்றளிகள்😍
🌺 தஞ்சாவூரில் இருந்து சுமார் 32 கி.மீ. தொலைவில் திருச்சென்னம்பூண்டி அமைந்துள்ளது. இக்கோயில் தஞ்சாவூர் மாவட்டம் பூதலூர் வட்டம், திருக்காட்டுப்பள்ளி வழி கல்லணை செல்லும் வழியில் கோவிலடி பஸ் நிறுத்தம் அருகே 12 கி.மீ.தொலைவில் உள்ள   திருச்சென்னம்பூண்டி என்ற இடத்தில்  உள்ளது. இத்தலம் தற்போது சடையார்கோவில் என்றுஅழைக்கப்படுகின்றது.
🌺 இக்கோயிலை பற்றி வரலாற்றுப் பேராசிரியர் திரு. இல. தியாகராஜன் அவர்கள் விளக்கும் காணொளியை கீழுள்ள இணைப்பில் காணலாம்.

🌺பல்லவர் காலத்தில் இக்கோயில் மண் தளியாக இருந்திருக்க வேண்டும்.  திருஞானசம்பந்தர் இத்தலத்தை திருக்கடைமுடி என்று பாடியுள்ளார். காவிரியின் வடகரைத் தலமாகவும், கொள்ளிடத்திற்கு தென்கரைத் தலமாகவும் சடையார் கோயில் அமைந்துள்ளது. இவ்வூருக்கு திருச்சடைமுடி என்றும், இவ்வூரிலுள்ள சிவன் கோயிலுக்கு திருச்சடைமுடியுடைய மஹாதேவர் என்றும் இக்கோயிலிலுள்ள கல்வெட்டுகள் கூறுகின்றன.
🌺 இக்கோயில் நுழைவாயில் முன்புறமுள்ள தூண்களில் பல்லவ மன்னர்களான மூன்றாம் நந்திவர்மன் மற்றும் நிருபதுங்கனின் கல்வெட்டுகள் வெட்டப்பட்டுள்ளன. மூன்றாம் நந்திவர்மனின் கல்வெட்டே இங்கு காலத்தால் முந்தியது.  மூன்றாம் நந்திவர்மனின் பட்டத்தரசியாகிய ‘அடிகள் கண்டன் மாறம்பாவை’ கொடுத்த கொடைகளைப் பற்றி கூறுகின்றது
🌺 மதுரை கொண்ட கோபரகேசரி என்று அழைக்கப்படுகின்ற முதலாம் பராந்தகனின் பல கல்வெட்டுகள் இக்கோயிலில் காணப்படுகின்றன.இவனுடைய 14 ஆம் ஆட்சியாண்டு கல்வெட்டு இக்கோயிலின் இறைவனை தென்கரை இடையாற்று நாட்டில் இருந்த திருச்சடைமுடி மஹாதேவர் என்று பெயர் இருந்தது என்பதை கூறுகின்றது.பராந்தக மன்னனின் அரசியும், பழுவேட்டரையரின் மகளுமான அருமொழி நங்கையின் பரிவாரத்தில் இருந்த பெண் ஒருத்தி கொடுத்த தானம் பற்றி ஒரு கல்வெட்டு கூறுகின்றன. இக்கோயிலில் மாசிமகம் விழா எடுக்கப்படுவதைப் பற்றியும் பல கல்வெட்டுகள் பிற கொடைகளைப் பற்றியும் கூறுகின்றன.

#கோயிலமைப்பு 
🌺 இக்கோயிலானது கருவறை, அர்த்த மண்டபம், முகமண்டபம் என அமைந்துள்ளது, முகமண்டபத்தில் தாங்கு தளம் மட்டுமே உள்ளது. இக்கோயிலின் வீணாதரமூர்த்தி, பிரம்மா மற்றும் இராமாயணம், சிவ தொடர்புடைய குறுந்சிற்பங்கள் மிக அழகானவை.

#அதிட்டானம் 
🌺 இக்கோயிலின் அதிட்டானம் உபானம், ஜகதி,குமுதம், கண்டம்,கபோதம், யாளி வரி ஆகியவை பெற்று உரக பந்தம் என்றொரு வகையை சார்ந்துள்ளது. இதில் கண்ட பாதத்திலும், வேதிகை பாதத்திலும் அழகிய குறுந் சிற்பங்கள் உள்ளன. கபோதத்தில் மையபாளைய, கொடிபாளைய கருக்குகள் காணப்படுகிறது.

#பாதவர்க்கம் 
🌺 பாதவர்க்கத்தில், தேவ கோட்டங்கள் அமைக்கப்பட்டு சிலவற்றில் சிற்பங்கள் உள்ளன, அஹாரையில்  கோட்டம் இருந்தாலும் சிற்பங்கள் ஏதும் இல்லை.கர்ணபத்தியில் உள்ள தூண்கள் விஷ்ணு காந்தமாகவும், சாலைப்பத்தியில் உள்ள தூண்கள் இந்திரகாந்தமாகவும் அமைக்கப்பட்டு உள்ளன. சாலைப்பத்தி மட்டும் வெளியே இழுக்கப்பட்டது உள்ளது.மகர தோரணங்களும்,அதில் உள்ள சிற்பங்களும் சிதைந்த   நிலையில் உள்ளன. அர்த்த மண்டப தூண்கள் பிரம்ம காந்தமாக உள்ளது. தூணில் உள்ள மாலைத்தொங்கல்கள் நுண்ணிய வேலைப்பாடு மிக்கவை    

#பிரஸ்தரம் 
🌺 வலபியில் பூத வரிக்கு பதிலாக மதலைகள் அமைக்கப்பட்டு அதிலும் யாளி, சிம்ம உருவங்கள் அமைக்கப்பட்டுள்ளது.கபோதத்தில் சந்திரமண்டலமும்,கோணப்பட்டமும்,மையப்பட்டமும் உள்ளது. கர்ணப்பத்தி கபோதத்தில் நேத்ர நாசிகள் அமைக்கப்பட்டு உள்ளது . மேலே யாளி வரி செதுக்கப்பட்டுள்ளது.

#விமானம் 
🌺 விமானம் முதல் தளம் மட்டுமே உள்ளது, அதன் கர்ணகூட்டின் நடுவே சிற்பங்கள் இல்லை, அகாரையில் இரண்டு நாசிகளும், மைய சாலையும் அதன் நடுவேயும் சிற்பங்கள் ஏதும் இல்லை.  

🌺 இக்கோயிலை பற்றி வரலாற்றுப் பேராசிரியர் திரு. இல. தியாகராஜன் அவர்கள் விளக்கும் காணொளியை கீழுள்ள இணைப்பில் காணலாம்.



No comments:

Post a Comment

Followers

திருவாசி மாற்றுரைவரதீஸ்வரர் (பிரம்மபுரீஸ்வரர்) திருச்சி....

திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் உள்ள புகழ்பெற்ற தேவாரப் பாடல் பெற்ற சோழநாட்டு தலங்களில் ஒன்றான,  சுந்தரமூர்த்தி நாயனார்  பொன் பொர...