Monday, November 21, 2022

சங்காபிஷேகம் என்றால் என்ன

நமசிவாய வாழ்க

கார்த்திகை சோம வாரம் சங்காபிஷேகம் 
==================================

சங்காபிஷேகம் என்றால் என்ன
கார்த்திகை சோம வாரம்! 

கார்த்திகை மாதத்தில் வரும் நான்கு அல்லது ஐந்து திங்கட்கிழமைகளுமே சிவாலயங்களில் விசேஷம்!

 அனைத்து சிவாலயங்களிலும் சங்காபிஷேகம் செய்யப்படுவது வழக்கம். 

கார்த்திகை திங்கட்கிழமைகளில், சிவபெருமானுக்கு அபிஷேக, ஆராதனைகள், அர்ச்சனைகள் செய்து வழிபாடு செய்திட உடல் பலமும், ஆரோக்கியம்,மனத்தெளிவையும் பெறலாம் என்பது ஆன்மீக அன்பர்கள் கருத்து.

சிவபெருமானுக்கு ஸ்ரீசோமநாதர் என்ற திருநாமமும் உண்டு. திங்கள் என்றால் சந்திரன். சந்திரனே நம் மனதை ஆள்பவன். சந்திரனுக்கு சாப விமோசனம் அளிப்பதற்காக , சந்திரனை தன் தலையில் சூடிக் கொண்டுள்ளார் சிவபெருமான்.

நம் வாழ்வு சந்திர பலம் பெற்று வளமுடன் அமைய கார்த்திகை சோமவார வழிபாடு அவசியம்.
இன்று கார்த்திகை கடைசி சோமவாரம் . சிவாலயங்களில் 1008 சங்காபிஷேகம் வெகு விமரிசையாக நடைபெற்று வருகிறது. வாருங்கள் சிவ வழிபாடு செய்வோம். வாழ்வில் வளம் பெறுவோம்.

சங்காபிஷேகம் செய்யும் முறை

கார்த்திகை சோமவாரத்தில் சிவாலயங்களில் சங்கில் புனித நீர் நிரப்பி, அந்தத் தீர்த்தத்தைக் கங்கையாகப் பாவித்து சங்காபிஷேகம் செய்வது வழக்கம். சங்கு, செல்வத்தின் சின்னம். வற்றாத பொருள் செல்வம் வேண்டும் இல்லறத்தாரும், இறைவனின் அருட்செல்வம் வேண்டும் துறவிகளும், இந்தப் பூஜையை மேற்கொள்கிறார்கள்.

சென்னை திருமயிலை #கபாலீஸ்வரர், #வெள்ளீஸ்வரர், #ஏகாம்பரேஸ்வரர், #காரணீஸ்வரர், #விருபாக்‌ஷிஸ்வரர், #மல்லீஸ்வரர், #வாலீஸ்வரர் மற்றும் தீர்த்தபாலீஸ்வரர் ஆகிய ஸப்த சிவஸ்தலங்களில் மட்டுமல்லாது அனைத்து சிவாலயங்களிலும் சங்காபிஷேகம் நடைபெறுகிறது.

ஜோதிடத்தில் கடல் சார்ந்த பொருட்களுக்கு காரகர் சந்திர பகவான். காலபுருஷனுக்கு நான்காம் வீடான கடகம் சந்திரனின் ஆட்சி வீடாகும். சந்திர சகோதரியான மகாலக்ஷ்மியின் அம்சமே சங்கு. சங்குகளில் இரண்டு வகைகள் உண்டு. இடப்பக்கம் சுழிந்து செல்லும் சங்கு உலகில் எளிதாகக் கிடைக்கும். வலது பக்கம் சுழியுடைய வலம்புரிச் சங்குகள் அபூர்வமாகவே கிடைக்கும். வலம்புரி சங்கு மிக உயர்வானதாகக் கருதப்படுகிறது.

தேவர்கள் மற்றும் அசுரர்களால் பாற்கடல் கடையப்பட்டபோது வெளிப்பட்ட, பதினாறு வகையான தெய்வீகப் பொருட்களில் வலம்புரி சங்கும் ஒன்று. அந்த சங்குதான் மகாவிஷ்ணுவின் இடக்கையில் இருக்கிறது. அதுமட்டுமல்லாமல், ஒவ்வொரு தெய்வமும் தங்களுக்கென்று தனித்தனியாக சங்குகளை வைத்திருப்பதாக ஆகமங்களும், புராணங்களும் விளக்குகின்றன. 

மணி சங்கு,
 துவரி சங்கு,
 பாருத சங்கு,
 வைபவ சங்கு, 
பார் சங்கு, 
துயிலா சங்கு, 
வெண் சங்கு,
 பூமா சங்கு, 
திரி சங்கு என்ற எட்டு வகை சங்குகள் கடலில் உற்பத்தி ஆவதாகக் கூறப்படுகிறது. 

அதில் வலம்புரி சங்குக்கு மட்டும் விசேஷ சக்தி இருப்பதாகச் சாஸ்திரங்கள் சொல்கின்றன.

எந்த வீட்டின் பூஜை அறையில் வலம்புரி சங்கு இருந்தாலும் அங்கு திருமகள் வாசம் செய்வதாக நம்பிக்கையாகும். அந்த இல்லம் லட்சுமி கடாட்சம் பெற்றுச் சிறந்த இல்லமாக விளங்கும்.

சங்காபிஷேகம் பலன் 
*******************************

எனவே, சங்கின் மகத்துவத்தை அனைவரும் அறிந்துகொண்டு, சோமவார திங்கட்கிழமைகளில் விரதமிருந்து சிவாலயங்களில் நடைபெறும் சங்காபிஷேகத்தில் கலந்துகொண்டு எண்ணிலடங்கா பலன்களைப் பெறுவோம்…

பெண்கள் சௌபாக்கியத்துடன் திகழவும், கணவனுக்கு மேன்மைகள் உண்டாகவும், நோய்நொடிகள் தாக்காதிருக்கவும், கடன் தொல்லையில் இருந்து மீளவும் இந்த விரதம் கடைப்பிடிக்கப்படுகிறது!

#திருச்சிற்றம்பலம்

No comments:

Post a Comment

Followers

திருவாசி மாற்றுரைவரதீஸ்வரர் (பிரம்மபுரீஸ்வரர்) திருச்சி....

திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் உள்ள புகழ்பெற்ற தேவாரப் பாடல் பெற்ற சோழநாட்டு தலங்களில் ஒன்றான,  சுந்தரமூர்த்தி நாயனார்  பொன் பொர...