Wednesday, February 21, 2024

அருள்மிகு ராமநாத சுவாமி திருக்கோயில்,திருக்கண்ணபுரம்,

அருள்மிகு ராமநாத சுவாமி திருக்கோயில்,
திருக்கண்ணபுரம்,
திருக்கண்ணபுரம் அஞ்சல்,
PIN - 609 704
நன்னிலம் வட்டம்,
திருவாரூர் மாவட்டம்.
*இறைவன்:* ராமநாதசுவாமி. இராமனதீசுவரர்.

*இறைவி:* சரிவார் குழலி, சூளிகாம்பாள்.

*தல விருட்சம்:* 
மகிழம். 

*தீர்த்தம்:* இராம தீர்த்தம்.

*தேவார பதிகம் பாடியவர்கள்:
சம்பந்தர்.

 *இது சகல தோஷமும் நீங்கும் தலமாகும். 

*இந்த தலம் ராஜராஜ சோழன் ஆட்சிக்கு முற்பட்டதாக கருதப்படுகிறது. 

*இக்கோயில் விமானம் தஞ்சை பெருவுடையார் கோவில் விமானத்தைப்போன்ற அமைப்புடையது. 

*ராமனதீச்சரம் ராமனால் பூஜை செய்யப் பெற்றது. 

*இங்குள்ள சிவலிங்கத் திருமேனியில் ஜோதி பிரதிபலிப்பதால், ராமன தீச்சரமும் பன்னிரு ஜோதிர்லிங்க தலங்களுக்கு ஒப்பானதாக போற்றப்படுகிறது.      

*சீதையை கடத்திச் சென்று சிறை வைத்தான் ராவணன். அவன் மீது போர் தொடுத்து, அவனை அழித்தார் ராமன். ராவணனைக் கொன்றதால், ராமனுக்கு பிரம்மஹத்தி தோஷம் ஏற்பட்டது.
அந்த பாவம் நீங்குவதற்காக பல தலங்களுக்குச் சென்ற ராமன், அதன் ஒரு பகுதியாக இந்த தலத்திற்கும் வந்தார். அவர் இத்தலத்தில் உள்ள புஷ் கரணி தீர்த்தத்தில் நீராடி, பின் அய்யனை தரிசிக்க வரும் போது   ‘ராவணனை கொன்ற பாவம் உங்களுக்கு நீங்கவில்லை. எனவே தாங்கள் உள்ளே செல்லக்கூடாது' என்று கூறி நந்தி தேவன் அவரை அனுமதிக்க மறுத்தார். அந்த சம்பவத்தைப் பார்த்த அம்பிகை  உடனே அங்கு வந்து நந்தியை தனது திருக்கரத்தால் பிடித்து இழுத்து, ராமனை உள்ளே செல்ல அனுமதித்தார்.  ராமபிரானும் உள்ளே சென்று லிங்கத்தை வழிபட்டார்.  
*ராமனுக்கு சாப விமோசனம் கொடுத்த ஈசன், ‘ராமநாதேஸ்வரர், ராமலிங்கேஸ்வரர்’ என பெயர் பெற்றார். 
*நந்தி வழி மறித்தும், அம்மன் அருளால் ராமன் உள்ளே வந்து சிவனை வணங்கியதால் இந்த திருத்தலம் ‘ராமநந்தீஸ்வரம்’ என்று பெயர் பெற்றது. நாளடைவில் மருவி தற்போது ‘ராமனதீச்சரம்’ என்று அழைக்கப்படுகிறது.   

*திருக்கயிலாய பரம்பரை வேளாக்குறிச்சி ஆதீனத்தின் மூலமாக இந்தக் கோவில் பராமரிக்கப்பட்டு, அனைத்து பூஜைகளும் மிகச் சிறப்பாக நடைபெற்று வருகிறது. 

*இவ்வாலயத்தில் ராஜகோபுரம் கிடையாது. முகப்பு வாயில் வழியே உள்ளே நுழைந்ததும், நேராக பலீபீடத்தத்தைத்தான் முதலில் காணலாம்.  அடுத்து நந்தி, தமது மண்டபத்தில்வீற்றிருக்கிறார். இங்கு கொடி மரமில்லை.  

*விசாலமான முற்றவெளி இருக்கிறது. வலதுபுறம் தெற்கு நோக்கிய சந்நிதியில்  சரிவார்குழலி அம்பாள்நின்ற திருக்கோலத்தில்  காட்சியருள்கிறார். அம்மனை வழிபட்டு சுமங்கலி பூஜை செய்தால், அவர்கள் குடும்பம் செழிப்படையும். கணவர்கள் நோய் பிடியில் இருந்து விடுபடுவார்கள். பெண்கள் தீர்க்க சுமங்கலியாக இருப்பார்கள். பெண்களுக்கு சுக பிரசவம் நடை பெறும். திருமணத் தடை நீங்கி, குழந்தை பேறு கிடைக்கும்.
*அம்மன் சன்னிதியில் கோவில் தல புராணத்தை விளக்கும் வண்ணம், ஓவியங்கள் தீட்டப்பட்டுள்ளன. 

*மேற்கு வெளிச்சுற்றில்,  விநாயகர், வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணியர், கஜலட்சுமி சன்னிதிகள் உள்ளன. *கிழக்கில் கோயிலை நோக்கிய நிலையில் நவகிரகங்கள், காலபைரவர், துர்வாசர் பூஜித்த லிங்கம், அகத்தியர், அப்பர், சம்பந்தர், காமதேனு, சூரியன், ஆகியோரின் சன்னிதிகள் உள்ளன. 

*கோஷ்ட மூர்த்தங்களாக தட்சிணாமூர்த்தி, இலிங்கோத்பவர், பிரம்மா, துர்க்கை உள்ளனர். 
*மூலவர் கருவறை உள்ள மண்டபத்தின் நுழைவாயிலின் மேல் ரிஷபத்தின் மீதமர்ந்த சிவன், பார்வதி சுதைச் சிற்பம் உள்ளது. 

*கருவறையிலுள்ள  சிவலிங்கத் திருமேனி சுயம்புவானவர். பெரிய நெடிய உயரத்துடன் உள்ள பாணத்துடனும் பெரிய சுற்றுடைய ஆவுடையாருடனும் கூடிய உயர்ந்த  சுயம்பு லிங்கமாக அருள்பாலிக்கிறார். 

*இத்தலத்திலிருந்து சற்று தூரத்தில் திருக்கண்ணபுரம் சவுரிராஜப்பெருமாள் கோயில் உள்ளது. 108 திவ்யதேசங்களில் இத்தலமும் ஒன்று. 

*திருக்கண்ணபுரத்திலிருந்து கிழக்கே அரை கிலோமீட்டர் தொலைவில் ராமநந்தீஸ்வரம் உள்ளது. நாகப்பட்டினம் - கும்பகோணம் சாலையில் திருப்புகழுரில் இருந்தும், திருமருகல் என்ற இடத்தில் இருந்தும் ஆட்டோ வசதி உள்ளது.
ஓம் நமசிவாய 
படித்து பகிர்ந்தது 
இரா இளங்கோவன்
 நெல்லிக்குப்பம். 

No comments:

Post a Comment

Followers

முனீஸ்வரர் இவர் சைவ கடவுளான சிவபெருமானின் வடிவமாவார்

ஏழு முனீஸ்வரர் முனீசுவரர் என்பவர் இந்து சமய சிறு தெய்வங்களில் ஒருவராவார். இவர் சைவ கடவுளான சிவபெருமானின் வடிவமாவார். வீரமும், ஆவ...