Sunday, December 21, 2025

அருள்மிகு எழுத்தறிநாதர் திருக்கோயில், இன்னாம்பர், இன்னாம்பர் அஞ்சல், கும்பகோணம் வட்டம், தஞ்சாவூர்

திருஇன்னம்பர் : காவிரியின் வடகரையிலுள்ள இத்தலம் ஒரு பாஸ்கர ஷேத்திரமாக விளங்குகிறது. அம்பர் என்றால் ஆகாயத்தைக் குறிக்கும். ஆகாயத்தில் வலம் வரும் சூரியன் இழந்த தன் ஆற்றலைப் பெற வேண்டி இத்தல இறைவனை பூஜித்துள்ளான். சூரியன் பூஜித்ததால் இத்தலம் இன்னம்பர் என்று பெயர் பெற்றது. பங்குனி மாதம் 13, 14, 15 தேதிகளில் சூரிய ஒளி காலையில் சிவலிங்கத் திருமேனி மீது படுகின்றது. இதனை சூரியபூஜை என்று கொண்டாடுகின்றனர்.

இறைவர் : ஸ்ரீ எழுத்தறிநாதர்

இறைவியார் : ஸ்ரீ கொந்தார் பூங்குழலி
அகஸ்திய முனிவர் இத்தல இறைவனிடம் தமிழ் இலக்கணம் பயின்றதாக தல புராணம் கூறுகிறது. மேலும் இப்பகுதியை ஆண்டு வந்த மன்னனிடம் கணக்கராக பணியாற்றி வந்தார் சுதஸ்மன் என்ற ஆதிசைவர். கோவில் கட்டுமானப் பணிகளை மேற்பார்வை செய்து வந்த இவரிடம் ஒரு முறை அரசன் வரவு செலவு கணக்குகளைப் பற்றி விசாரித்தான். அரசரிடம் கணக்கை ஒப்படைத்தார் சுதஸ்மன். கணக்கில் அரசருக்கு ஐயம் ஏற்பட்டது. தன் மீது வீண் பழி வருமோ என்று கவலைப்பட்ட சுதஸ்மன் இத்தல இறைவனிடம் வேண்டினார். ஈசன் சுதஸ்மன் உருவில் மன்னரிடம் சென்று மன்னருக்கு கணக்கில் ஏற்பட்ட ஐயத்தைப் போக்கினார். அதனாலேயே இத்தல இறைவனுக்கு எழுத்தறிநாதர் என்ற பெய்ரும் ஏற்பட்டது. 
🌺"தொழுது தூமலர் தூவித் துதித்து நின்று

அழுது காமுற்று அரற்றுகின்றாரையும்

பொழுது போக்கிப் புறக்கணிப்பாரையும்

எழுதும் கீழ்க்கணக்கு இன்னம்பர் ஈசனே."🌺

——(திருநாவுக்கரசர் தேவாரம் : 05.021.08)


பொருளுரை : தூமலர்களைத் தூவித் தொழுது, துதித்து, நின்று அழுது விருப்புற்று அரற்றுகின்ற மெய்யன்பர்களையும், வாளா பொழுதுபோக்கிப் புறக்கணிப்பார்களையும் கீழ்க்கணக்கெழுதும் இறைவன் இன்னம்பரில் உறையும் ஈசனேயாவன்.


ஆலய முகவரி : அருள்மிகு எழுத்தறிநாதர் திருக்கோயில், இன்னாம்பர், இன்னாம்பர் அஞ்சல், கும்பகோணம் வட்டம், தஞ்சாவூர் மாவட்டம், PIN - 612 303.


எப்படிப் போவது : கும்பகோணத்தில் இருந்து சுவாமிமலைக்குச் செல்லும் சாலை வழியில் இருக்கும் புளியஞ்சேரி என்னும் ஊருக்கு வடக்கே திருப்புறம்பயம் போகும் வழியில் சுமார் 3 கி.மீ. தூரத்தில் இந்த சிவஸ்தலம் இருக்கிறது. இங்கிருந்து 3 கி.மி. தொலைவில் திருப்புறம்பியம் என்ற பாடல் பெற்ற ஸ்தலம் உள்ளது. கும்பகோணத்தில் இருந்து திருப்புறம்பியம் செல்லும் நகரப் பேருந்துகள் இத்தலம் வழியாக செல்லும்

குறிப்பு : இப்பதிகத்திற்கான சொற்பிரிவு எங்களது முயற்சியில் உருவாக்கப்பட்டுள்ளது. பிழை இருப்பின் எங்களுக்கு தெரியப்படுத்தலாம்.

மேன்மைகொள் சைவநீதி விளங்குக உலகம் எல்லாம்"

ஓம் நமசிவாய
 படித்து பகிர்ந்தது 
இரா இளங்கோவன் 
நெல்லிக்குப்பம். 

No comments:

Post a Comment

Followers

திருவள்ளூரில் உள்ள "ஞாயிறு" புஷ்பரதேஸ்வரர்

தமிழகத்தில் எத்தனையோ பழமையான கோவில்கள் இருந்தாலும், சென்னைக்கு மிக அருகில் திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள "ஞாயிறு" புஷ்பரதேஸ்வரர் ...