Tuesday, January 16, 2024

கல் யானைக்கு கரும்பு கொடுத்த சிவபெருமானின் 64 திருவிளையாடல்களில் ஒன்று ஆகும்.

தை மாதப் பிறப்பையொட்டி
சிவபெருமானின் 
64 திருவிளையாடல்களில் ஒன்றான வருடத்தில் 
ஒருமுறை மட்டுமே சொக்கநாதரே 
#எல்லாம்_வல்ல_சித்தராக கருவறை விட்டு வெளியே வந்து 
#கல்_யானைக்கு_கரும்பு_கொடுக்கும்_திருவிளையாடல் இன்று :

ஒவ்வொரு ஆண்டும் தை மாதப் பிறப்பையொட்டி 
பொங்கல் திருநாளன்று மதுரை மீனாட்சியம்மன் 
ஆலயத்தில் சிவபெருமானின் 64 திருவிளையாடல்களில் ஒன்றான 
கல்யானைக்குக் கரும்பு கொடுக்கும் லீலை நடைபெறுகிறது...!

சுந்தரேசுவரர் தனது அவதாரங்களுள் ஒன்றில் அதிசயங்கள் செய்யும் சித்தராக மதுரையில் தோன்றியிருக்கிறார்.  

கல் யானைக்குக் கரும்பு தந்த படலம் என்பது சிவபெருமானது அறுபத்து நான்கு திருவிளையாடல்களை விளக்கும் 
திருவிளையாடல் புராணம் நூலின் 21-ஆவது படலமாகும். 

18 சித்தர்களின் தலைமை சித்தராக சிவனே விளங்குவதால்
 “எல்லாம் வல்ல சித்தர்’ என்று பெயர் பெற்றார். 

“எல்லாம் வல்ல சித்தருக்கு மதுரை மீனாட்சி அம்மன் 
ஆலயத்தில்  தனிசன்னதி உள்ளது. 

சிவனே இங்கு சித்தராக இருப்பதால் சித்தரது சன்னதி எதிரே நந்தி இருக்கிறது. இந்த நந்தி சிவனின் உத்தரவிற்கு காத்திருக்கும்விதமாக, செவி சாய்த்து காட்சியளிப்பது விசேஷம்.
சித்தருக்கு அபிஷேகம் கிடையாது. 
மூலிகை மற்றும் சாம்பிராணி தைலம் மட்டும் சாத்தப்படுகிறது. 
சித்தரது சன்னதியில் மல்லிகை பந்தல் (பூக்கூடாரம்) அமைத்து 
வேண்டிக் கொண்டால் வேண்டியவை நிறைவேறும் என்பது நம்பிக்கை. 

#கல் யானைக்கு கரும்பு கொடுக்கும் திருவிளையாடல்:

இறைவன் அபிசேகப் பாண்டியனுக்கு முக்தி அளிக்க எண்ணி மதுரைக்கு எல்லாம் வல்ல சித்தராக உருமாறி வந்தார். மக்களுக்கு அவர் செய்யும் சித்துகளைக் கேள்வியுற்ற மன்னன் சித்தரை அழைத்துவர மந்திரிமார்களை அனுப்பினார். ஆனால் அரசனே தன்னை வந்து காண வேண்டும் என்று சித்தர் மந்திரிகளைத் திருப்பி அனுப்பிவிட்டார்.

மந்திரிகள் வந்து சித்தர் கூறியதைத் தெரிவித்தும், அரசனே சித்தரைக் காணச் சென்றார். அங்குக் கூடியிருந்த மக்கள் அரசனுக்கு வணக்கத்தினைத் தெரிவித்து விலகி நின்றனர். அரசன் ஏன் சித்துகளை மதுரையில் வாழும் மக்களிடம் செய்து காட்டுகின்றார்கள். தங்களுக்கு என்ன வேண்டும் என்று கேட்டான். அதற்குச் சித்தர், தான் காசியிலிருந்து வருவதாகவும், தனக்கு ஒன்றும் தேவையில்லை என்றும், வேண்டுமானால் அரசன் வேண்டுவதைக் கேட்டுப் பெறலாம் என்றும் கூறினார்.

அரசன் சித்தரைச் சோதிக்க அருகில் கரும்பு வைத்திருந்த ஒருவரிடம் வாங்கி, இக்கரும்பினை இந்திர விமானத்தைத் தாங்கும் கல்யானை உண்ணும்படி செய்ய வேண்டும் என்றார். அதனை ஏற்ற சித்தர் கல்யானையைப் பார்க்க அக்கல்யானைக்கு உயிர்வந்து மன்னன் தந்த கரும்பினைத் தின்றது. அத்துடன் மன்னன் அணிந்திருந்த முத்துமாலையை பிடுங்கி உண்டது. இதனால் அரசன் கோபம் கொள்ள, சித்தரைக் காவலர்கள் தாக்க வந்தார்கள். சித்தர் காவலர்களைப் பார்க்க அனைவரும் சிலையாக நின்றனர்.

அரசன் சித்தரிடம் மன்னிப்புக் கேட்டு, தனக்குப் பிள்ளை வரம் வேண்டினான். அதைத் தந்த சித்தர் மறைந்தார். அபிஷேகப் பாண்டியனுக்கு விக்ரமன் என்ற ஆண்குழந்தை பிறந்து பல கலை கற்றுச் சிறந்து விளங்கினான். அபிசேகப் பாண்டியன் மகனுக்குப் பட்டாபிசேகம் செய்து முக்தி அடைந்தார்.

சிவபெருமானின் இந்தத் திருவிளையாடலை நினைவூட்டும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் கோயிலில் சித்தர் சந்நதிக்கு அருகிலுள்ள கல்யானைக்கு உற்சவர் சுந்தரேசர் முன்பு கரும்பு கொடுக்கும் நிகழ்ச்சி பொங்கல் திருநாளன்று நடத்தப்படுகிறது. 

ஒரு சங்கேதமான இந்த நிகழ்ச்சியைக் காண ஏராளமான 
பக்தர்கள் ஆலயத்தில் கூடுகின்றனர்.

இந்நிகழ்வு முடிந்ததும் ஆலயத்திலுள்ள நிஜ யானைக்கும் 
நிஜ கரும்பு தரும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.

மதுரையில் ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் மதுரைக்கும் தேனிக்கும் இடையே சாலை அமைக்கும் பணி நடந்தது. 

அந்த சாலை கருமாத்தூர் ஒச்சாண்டம்மன் கோயில் வழியாக செல்லும்படி திட்டமிடப்பட்டதற்கு கருமாத்தூர் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்து கோயில் முன்பு குவிந்தனர். 

அங்கு வந்த ஆங்கிலேய அதிகாரி கோயிலை 
அகற்றி விட்டு சாலை பணியை தொடங்க உத்தரவிட்டார். 

பணியாட்களும் கோயில் முன்பிருந்த கல் யானையை 
அகற்ற முயன்றனர். ஆனால், முடியவில்லை. 

அப்போது ஊர் மக்கள், ‘இந்த யானையை அகற்ற முடியாது.

எங்கள் கோயில் கல் யானை கரும்பு தின்னும்; 
வெள்ளை யானை வேதம் ஓதும்’ என்றனர்.

வாய்விட்டு சிரித்த ஆங்கிலேய அதிகாரி,
‘இதெல்லாம் நடக்காது’ என சவால் விட்டார்.

உடனே கல் யானையின் சிலையை சுற்றி திரையிடப்பட்டு,
 கட்டுக்கட்டாக கரும்பு போடப்பட்டது. 

சிறிது நேரம் கழித்து திரையை விலக்கியபோது 
கரும்பு வெறும் சக்கையாக கிடந்துள்ளது. 

அத்துடன் அந்த ஆங்கிலேய அதிகாரியும் 
அந்த இடத்திலேயே சுருண்டு விழுந்துள்ளார். 

நோய்வாய்ப்பட்ட அவர், ஒச்சாண்டம்மனை மனமுருக வேண்டினார். 

இதனை தொடர்ந்து வெள்ளை யானை வேதம் ஓதியதையடுத்து 
அந்த ஆங்கிலேய அதிகாரி குணமடைந்ததாக சொல்கிறார்கள். 

இதன் பின்னரே அமைக்கப்படவிருந்த சாலை, 
கோயிலுக்கு பாதிப்பு இல்லாமல் மாற்றுப்பாதையில் போடப்பட்டது. 

இன்றும் மதுரை - தேனி சாலையில் கருமாத்தூர் நுழையும் இடத்தில், மிகப்பெரிய வளைவை காணலாம்.
    ஓம் நமசிவாய 

படித்து பகிர்ந்தது 
இரா இளங்கோவன் 
நெல்லிக்குப்பம்

No comments:

Post a Comment

Followers

திருவாசி மாற்றுரைவரதீஸ்வரர் (பிரம்மபுரீஸ்வரர்) திருச்சி....

திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் உள்ள புகழ்பெற்ற தேவாரப் பாடல் பெற்ற சோழநாட்டு தலங்களில் ஒன்றான,  சுந்தரமூர்த்தி நாயனார்  பொன் பொர...