Friday, May 24, 2024

கரூரில் பெண்கள் நுழையாத அருங்கரை அம்மன் திருக்கோவில்.

_பெண்கள் நுழையாத அருங்கரை அம்மன் திருக்கோவில்..._


கரூர் மாவட்டம் பெரிய திருமங்கலம் என்ற இடத்தில் உள்ளது அருங்கரை அம்மன் திருக்கோவில்.

ஆலயத்தின் அருகில் ஓடும் அமராவதி ஆறு, அம்பாளுக்கு மாலையிட்டதுபோல் இந்த இடத்தில் திரும்பிச் செல்கிறது.

தொடக்கத்தில் ‘நல்லதாய்’ என்று அழைக்கப்பட்ட அம்மன்,ஆற்றங்கரையின் அருகே அமர்ந்த அம்பாள் என்பதால், '‘அருங்கரை அம்மன்’' என்று அழைக்கப்படுகிறாள்.காலப்போக்கில் இந்த பெயரே நிலைத்து விட்டது.

பெட்டிக்குள் அம்மன்

முன்காலத்தில் மீன் பிடிப்பதை தொழிலாக கொண்டவர்கள் இந்தப் பகுதியில் வசித்து வந்தனர். அவர்கள் அமராவதி ஆற்றில் மீன் பிடித்து வாழ்க்கை நடத்தி வந்தனர்.

ஒரு சமயம் மீனவர் ஒருவர் ஆற்றில் வீசிய வலையில் ஒரு பெட்டி சிக்கியது. அதை திறந்து பார்த்த போது,  அதற்குள் ஒரு அம்மன் சிலை இருந்தது.

தனக்கு அருள் புரிவதற்காகவே அம்பாள் ஆற்றில் வந்ததாக கருதிய அந்த மீனவர், ஆற்றங்கரையில் இருந்த ஒரு மரத்தின் அடியில் அந்தப் பெட்டியை வைத்தார்.

அதைத் தொடர்ந்து அந்தப் பகுதியைச் சேர்ந்த அனைவரும் பெட்டியையும்,அதில் இருந்த அம்பாளையும் வழிபட்டு வந்தனர்.

இந்த நிலையில் மீனவர்கள் அவ்விடத்தை விட்டு இடம் பெயர்ந்து சென்று விட்டனர். ஆகவே, பெட்டி இருந்த இடம் மண் மூடி புதைந்து விட்டது.

பெட்டி இருந்த இடத்தில் பெரிய மேடு மட்டும் இருந்தது. பல ஆண்டுகளுக்குப் பிறகு சிலர் அங்கு மாடு மேய்க்கும் தொழிலை செய்து வந்துள்ளனர்.

ஒரு முறை நல்லதாய் என்ற சிறுமி மாடு மேய்த்துக் கொண்டிருந்தபோது, ஒரு பசு, மணல் மேடாக இருந்த இடத்தில் தானாக பாலை சுரந்தது. இதைக் கண்டு வியப்புற்ற அந்த சிறுமி, மணல் மேட்டின் மீது அமர்ந்தாள். அதன் பின் அச்சிறுமி எழவில்லை.

மாலையில் மாடுகள் மட்டும் வீடு திரும்பின. சிறுமியைக் காணாததால் ஊரில் இருந்த ஆண்கள், அவளைத் தேடி குறிப்பிட்ட இடத்திற்கு வந்தனர். அங்கு மணல் மேட்டில் சிறுமி அமர்ந்திருப்பதைக் கண்டு, அவளை வீட்டிற்கு வரும்படி அழைத்தனர்.ஆனால் சிறுமியோ,‘நான் இங்கே தான் இருக்க விரும்புகிறேன். பல ஆண்டு   களாக நான் இங்கு தான் வசித்து வருகிறேன். என்னைக் கண்ட இந்த நாளில் மட்டும் எனக்கு பூஜை செய்து வழிபடுங்கள்’ என்று சொல்லி விட்டு,சிறுமி ஜோதியாக மாறி மறைந்து விட்டாள்.

சிறுமியைத் தேடிய ஆண்கள் 
இப்பகுதியில் வந்தது செவ்வாய்கிழமை நள்ளிரவு வேளை என்பதால், இங்கு செவ்வாய் கிழமை மட்டுமே கோவில் திறக்கப்பட்டு நள்ளிரவில் பூஜை நடக்கிறது.

கோவிலுக்குள் பெண்களுக்கு அனுமதியில்லை. அவர்கள் வாசலில் நின்று வழிபடலாம். கோவிலுக்குள் செல்ல அனுமதி கிடையாது.

அம்பாளுக்குப் பூஜை முடிந்த பின்பு, படைக்கப்பட்ட நேர்த்திக் கடனாகச் செலுத்தும் வாழை, தானியங்கள் போன்றவற்றை கோவில் முன் மண்டபத்தில் இருந்து சூரை
விடுகின்றனர்.

இதனை, பெண்கள் தங்களது சேலையில் பிடித்துக் கொள்கின்றனர்.

அம்பாள் பிரசாத பொருட்களின் வடிவில் பெண்களுக்கு அருள்வதாக
நம்பிக்கை.

பிற்காலத்தில் இங்கு கோவில் எழுப்பப்பட்டது. ஆலயத்தில் கருவறை, விமானம், கோபுரம் என்று எதுவுமே கிடையாது.

பெட்டி இருக்கும் இடத்தையே அம்பாளாக கருதி வழிபடுகின்றனர்.

நாட்ராயர், லாடமுனி, மதுரைவீரன், கருப்பசாமி, மகாமுனி என்ற காவல் தெய்வங்கள், ராகு–கேதுவுடன் விநாயகர் ஆகியோர் உள்ளனர்.

விநாயகருக்கும், காவல் தெய்வங்களுக்கும் அபிஷேகம் கிடையாது.

கோவில் முன்புறத்தில் உள்ள பலி பீடத்தை ஆமை தாங்கியிருப்பதுபோல் அமைத்துள்ளனர்.

குடும்பம் சிறக்கவும், விவசாயம் செழிக்கவும் அம்பாளிடம் வேண்டிக் கொள்ளும் பக்தர்கள், கோரிக்கை நிறைவேறியதும், அம்பாளுக்கும் காவல் தெய்வங்களுக்கும் கிடா வெட்டியும், குதிரை பொம்மைகள் செய்து வைத்தும் நேர்த்திக் கடன் செலுத்துகிறார்கள்.

அம்மனுக்கு சிலை எதுவும் கிடையாது.மணல் மேட்டையே வழிபடுகிறார்கள். 
 ஓம் நமசிவாய 
படித்து பகிர்ந்தது
 இரா இளங்கோவன் 
நெல்லிக்குப்பம். 

No comments:

Post a Comment

Followers

1008 ஆயிரத்து எட்டு லிங்கங்களின் பட்டியல்...

ஆயிரத்து எட்டு லிங்கங்களை கேட்டிருக்கோமே தவிர, அந்த 1,008 லிங்கங்கள் என்னென்ன என்று பலருக்கும் தெரியாது.  இதோ அந்த 1008 லிங்கங்களின் பட்டியல...