சர்க்கரை நோய் தீர சித்தர்கள் காட்டிய கரும்பேஸ்வரர் வழிபாடு
கரிகால் சோழருக்கும் பாண்டியருக்கும் நடைபெற்ற வெண்ணிப் போர் சரித்திரப் பிரசித்திபெற்றது. இந்தப் போர் நடைபெற்ற இடம்தான் கோயில்வெண்ணி.
தஞ்சாவூரில் இருந்து 25 கி.மீ தொலைவில் உள்ளது. இதன் முற்காலப் பெயர் திருவெண்ணியூர். புலவர் வெண்ணிக் குயத்தியார் பிறந்த ஊரும் இதுதான் என்பார்கள்.
இங்குள்ள மிகத் தொன்மையான அருள்மிகு கரும்பேஸ்வரர் ஆலயம்தான் சர்க்கரை நோய்க்கான பரிகாரத் தலமாகத் திகழ்கிறது.
கரும்பு வடிவில் சிவலிங்கம்!
மூலவர் கருவறையில் கரும்பே உருவாய்க் காட்சி தருகிறது சிவலிங்கத் திருமேனி. கரும்புக் கட்டுகளைச் சேர்த்து வைத்தாற்போன்ற பாண அமைப்பைக் கொண்டவர் இந்த மூலவர். அவருக்கு அபிஷேகம் செய்யும்போது, அந்த வடிவம் நமக்கு நன்றாகப் புலப்படுமாம்.
கரும்பேஸ்வரர் சிவலிங்கத்தின் பாணம் அமைந்திருக்கும் ஆவுடை, நான்கு மூலைகளை உடைய சதுர வடிவமுடையது (சதுர் அஸ்த்ர வடிவம்) இதுபோன்ற திருவடிவம் அபூர்வமானது.
இங்கே மூலவரையும் அம்பாளையும் ஒரே இடத்தில் நின்றபடி தரிசிக்கலாம்.
சர்க்கரை நோய்க்கான பரிகாரம்
சர்க்கரை நோயால் பாதிப்புறும் அன்பர்கள் இங்கு வந்து இந்த ஈசனை வழிபட்டால், அவர்களுடைய அதிகப்படியான சர்க்கரையை ஈசன் எடுத்துக்கொள்கிறார் என்பது பக்தர்களின் நம்பிக்கை! பாம்பாட்டி சித்தர் கோயில்வெண்ணி இறைவன் சர்க்கரை நோய் தீர்ப்பது குறித்துப் பாடியுள்ளார்.
‘ரசமணியோடு வெல்லம் கலந்து, கோயிலை வலம் வந்து, சுவாமிக்கு நிவேதனம் செய்து பிரார்த்தித்தால், குருதியில் சர்க்கரை குறையும்’ என்று காகபுஜண்டர் பாடியுள்ளார்.
ஆனால், இன்றைய சூழலில் ரசமணியை வாங்கிப் படைப்பது என்பது சாத்தியமல்ல.
எனவே, மக்கள் தங்களால் இயன்றளவு ரவையை வாங்கி, வெல்லம் கலந்து, படைத்து வழிபடுகின்றனர். எறும்புகளுக்கு அது உணவாகிறது. இறைவன் அதை ஏற்று, சர்க்கரை நோய்க்கு நிவாரணம் அளிப்பதாக நம்பிக்கை.
அதேபோல், அன்னதானத்துக்கு அரிசியும் வெல்லமும் வாங்கிக் கொடுத்தும், சுவாமியை வழிபடலாம் என்கிறார்கள்.
குழந்தைக்காகப் பிரார்த்திக்கும் பக்தர்கள், வளையல்களை வாங்கி வந்து அம்பாள் சந்நிதியில் கட்டிவிடுகின்றனர். பெண்கள் வளையல் சாத்தி வேண்டிக் கொண்டால் கண்டிப்பாகக் கருத்தரிப்பர் என்பது நம்பிக்கை.
ஓம் நமசிவாய
படித்து பகிர்ந்தது
இரா இளங்கோவன்
நெல்லிக்குப்பம்.
No comments:
Post a Comment