🍁"திருவாஞ்சியம் | படையும் பூதமும் பாம்பும் | திருநாவுக்கரசர் தேவாரம்"
காவிரிக் கரையில் உள்ள ஆறு சிவஸ்தலங்கள் காசிக்கு சமானமாக கருதப்படுகின்றன. அவற்றில் திருவாஞ்சியம் தலமும் ஒன்றாகும். மற்றவை திருவையாறு, திருவெண்காடு, திருவிடைமருதூர், திருசாய்க்காடு மற்றும் மயிலாடுதுறை ஆகும். இவற்றில் திருவாஞ்சியம் காசியை விட 1/16 பங்கு மேலானதாக கருதப்படுகிறது. பிரளய காலத்தில் உலகம் அழிந்தபோது சிவபெருமானும் பார்வதியும் கைலாயத்திலிருந்து புறப்பட்டுப் பிரளயத்தில் அழியாது தப்பிப் பிழைத்த காசியைப் பார்த்து வியந்தனர். அது போலவே தப்பிய இடங்கள் வேறு எங்கெங்கே உள்ளன என்று தேடித் தென்திசைக்கு வந்தனர். அப்போது தான் காவிரிக் கரையில் திருவாஞ்சியம் என்னும் ஊரைக் கண்டு அதன் அழகில் மயங்கி லிங்க வடிவில் சுயம்புவாகச் சிவபெருமானும் ஞானசக்தியாகப் பார்வதி தேவியும் அவ்வூரிலேயே கோயில் கொண்டுவிட்டனர். இந்த தலத்தை தான் மிகவும் நேசிப்பதாக சிவன் பார்வதியிடம் கூறியதாக புராணங்கள் சொல்கின்றன. இத்தலத்தின் மூலவர் ஒரு சுயம்பு லிங்கத் திருமேனியுடன் காட்சியளிக்கிறார். உலகிலுள்ள 64 சுயம்பு லிங்கத் திருமேனிகளுள் இதுவே மிகவும் பழமையானதாகும்.
இறைவர் : ஸ்ரீ வாஞ்சியநாதர்
இறைவியார் : ஸ்ரீ மங்கள நாய
திருச்சேறை, குடவாயில், நறையூர் முதலிய பல பதிகளை வணங்கித் திருவாஞ்சியம் அணைந்துதொழுது பாடி அருளியது இத்திருப்பதிகம்.
🍁"படையும் பூதமும் பாம்பும் புல்வாய் அதள்
உடையும் தாங்கிய உத்தமனார்க்கு இடம்
புடை நிலாவிய பூம்பொழில் வாஞ்சியம்
அடைய வல்லவர்க்கு அல்லல் ஒன்று இல்லையே."🍁
——(திருநாவுக்கரசர் தேவாரம் : 05.067.01)
பொருளுரை : படைக்கலங்களும், பூதமும், பாம்பும், மான் தோல் உடையும் தாங்கிய உத்தமராகிய பெருமானுக்கு இடமாகிய, பக்கமெலாம் பொருந்திய பூம்பொழில் சூழ்ந்த திருவாஞ்சியத்தை அடையவல்லவர்களுக்கு ஒரு துன்பமும் இல்லை.
ஆலய முகவரி : அருள்மிகு வாஞ்சிநாதசுவாமி திருக்கோவில், திருவாஞ்சியம், நன்னிலம் வட்டம், திருவாரூர் மாவட்டம், PIN - 610 110.
🍁"மேன்மைகொள் சைவநீதி விளங்குக உலகம் எல்லாம்"🍁
No comments:
Post a Comment