Wednesday, May 19, 2021

பெரிய பாளையம் பவானி அம்மன்..

ஆலய தரிசனம்...!!

பெரிய பாளையம் பவானி அம்மன்..!!

திருவள்ளூர் மாவட்டம் அடுத்துள்ள பெரியபாளையத்தில் 500 ஆண்டுகள் பழமை வாய்ந்த பவாணி அம்மன் கோவில் உள்ளது.

இந்த அம்மனுக்கு எலுமிச்சை பழம் விளக்கு ஏற்றினால் வாழ்வில் வளம் பெறலாம் என்பது பக்தர்களின் தீராத நம்பிக்கை.

கம்சன் என்னும் அசுரனின் தங்கை தேவகிக்கும், வசுதேவருக்கும் திருமணம் நடைபெற்றது.

தங்கையையும், மைத்துனரையும் தேரில் வைத்து ஊர்வலமாக அழைத்துச் சென்றான் கம்சன். அப்போது ஒரு அசரீரி ஒலித்தது உன்னுடைய தங்கைக்கு பிறக்கப்போகும் 8-வது ஆண் குழந்தையால் உனக்கு மரணம் நிகழும் என்றது அந்தக் குரல்.

அதைக் கேட்டு ஆத்திரமடைந்த கம்சன், தங்கையென்றும் பாராமல் தேவகியை கொல்ல முயன்றான். அவனைத் தடுத்து நிறுத்திய வசுதேவர், தங்களுக்கு பிறக்கும் அனைத்துக் குழந்தைகளையும், பிறந்த மறு கணமே கொடுத்துவிடுவதாக கம்சனிடம் வாக்குறுதிகொடுத்தார்.

கம்சனும் இதற்கு ஒப்புக்கொண்டான். இருப்பினும், தங்கை தேவகியையும், வசுதேவரையும் தன் கண்காணிப்பிலேயே இருக்க வேண்டும் என்று சிறையில் அடைத்தான். சிறையிலேயே வாழ்க்கை நடத்திய தேவகிக்கும், வசு தேவருக்கும் பிறந்த 7 குழந்தைகளை கம்சன் அழித்து விட்டான்.

8-வதாக கண்ணன் பிறந்தார். அது ஒரு நள்ளிரவு நேரம். கண்ணன் பிறந்ததும் ஒரு அசரீரி ஒலித்தது வசுதேவரே உங்கள் மகனை கோகுலத்தில் உள்ள நந்தகோபரின் மனைவி யசோதையிடம் சேர்த்து விட்டு, அங்கு யசோதையிடம் இருக்கும் பெண் குழந்தையை இங்கே தூக்கி வந்து விடுங்கள்’ என்றது.

மந்திரத்திற்கு கட்டுப்பட்டது போல் வசுதேவர், தன்னுடைய மகன் கண்ணனை கூடையில் வைத்து தலையில் சுமந்தபடி சென்று, யசோதையிடம் வைத்து விட்டு, அங்கிருந்த பெண் குழந்தையை எடுத்து வந்து தேவகியின் அருகில் வைத்தார். அதிகாலையில் தேவகிக்கு 8-வது குழந்தைப் பிறந்தது பற்றி கம்சனுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

*விரைந்து வந்த கம்சன்*

விரைந்து வந்த கம்சன், ஆண் வாரிசுக்கு பதிலாக பெண் குழந்தை இருப்பது கண்டு அதிர்ச்சியடைந்தான். இருப்பினும் 8-வது குழந்தையால் ஆபத்து ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காக அந்தக் குழந்தையை கையில் எடுத்து, அந்தரத்தில் சுவரில் வீசி கொல்ல முயன்றான்.

அந்தரத்தில் பறந்த குழந்தை, சக்தியின் உருவம் எடுத்து காட்சியளித்தது. கம்சனே  உன்னைக் கொல்லப்போகிறவன், ஏற்கனவே பிறந்துவிட்டான். அவன் கோகுலத்தில் வளர்ந்து வருகிறான்.

உரிய நேரத்தில் உன்னைக் கொல்வான்’ என்று கூறி மறைந்தது. அந்த சக்தியே அங்கிருந்து இங்குள்ள பெரியபாளையம் தலத்தில் பவானியாக வந்து அமர்ந்ததாக தல வரலாறு கூறுகிறது.

*500 ஆண்டுகள் பழமை வாய்ந்த பெரியபாளையம் பவானி அம்மன்*

பாளையம் என்பதற்கு படைவீடு என்று பெயர். அம்மன் வீற்றிருக்கும் பெரிய படைவீடு என்பதால், பெரிய பாளையம் என்று பெயர் பெற்றதாக கூறப்படுகிறது.

*ஓங்கார வடிவமாக*

ஆலயத்தின் சுற்று பிரகாரத்தில் பவானி அம்மனின் உற்சவர் சன்னிதி அமைந்திருக்கிறது. பிரகார வீதியில் வள்ளி- தெய்வானை சமேத முருகப் பெருமான், தாயாருடன் பெருமாள், ஆஞ்சநேயர், பரசுராமர் ஆகியோரது சன்னிதிகள் உள்ளன.

கருவறையில் பவானி அம்மன் வீற்றிருந்து அருள்பாலிக்கிறார். ஓங்கார வடிவமாக, சங்கு சங்கரதாரிணியாக, பாதி திருவுருவத்துடன் அமர்ந்த கோலத்தில் அன்னை வீற்றிருக்கிறார்.

நான்கு கரங்களுடன் காட்சியளிக்கும் அன்னையின் மேல் இரு கரங்களில் சங்கு, சக்கரமும், கீழ் இரு கரங்களில் வாள், அமுத கலசமும் தாங்கியிருக்கிறார். அன்னையின் அருகில் கண்ணன், நாகதேவன் ஆகியோரது திருவுருவங்கள் உள்ளன.

இத்தல அன்னையிடம் மாங்கல்ய பலம் வேண்டி வரும் பெண்களின் எண்ணிக்கை அதிகமானது. வாழ்வில் வளம் பெருகவும், குழந்தை வரம் கிடைக்கவும் வழிபடுபவர்களும் ஏராளம்.

வேப்பிலை ஆடை உடுத்தி பிரார்த்தனை செய்தால், அனைத்து வேண்டுதல்களும் நிறைவேறும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது. அன்னைக்கு எலுமிச்சைப் பழ விளக்கேற்றி வழிபட்டாலும் கோரிக்கைகள் நிறைவேறும்.

சென்னை திருவள்ளூரில் இருந்து பஸ் வசதி உள்ளது.

No comments:

Post a Comment

Followers

சிவனுக்காக எட்டு விதமான விரதங்கள்....

சிவ பெருமானுக்குரிய முக்கியமான எட்டு விரதங்கள் பற்றிய பதிவுகள் :* அபிஷேகப் பிரியனான சிவனுக்காக எட்டு விதமான விரதங்கள் கடைப்பிடிக...