காவிரி தென்கரை பாடல் பெற்ற சிவஸ்தலங்கள் வரிசையில் 61-வது தலமாக திருவீழிமிழலை விளங்குகிறது. இத்தலம் ஒரு திருமண பிரார்த்தனைத் தலமாகக் கருதப்படுகிறது.
இத்தலத்துக்கு திருநாவுக்கரசர் பதிகம் எட்டும், திருஞானசம்பந்தர் பதிகம் 14-ம், சுந்தரர் பதிகம் ஒன்றும் ஆக 23 பதிகங்கள் இருக்கின்றன.
எப்படிப் போவது
மயிலாடுதுறை - திருவாரூர் சாலையில் பேரளம் வழியாக பூந்தோட்டம் வந்து, அங்கிருந்து 10 கி.மீ. தொலைவில் அரிசிலாற்றின் வடகரையில் இத்தலம் அமைந்துள்ளது. கும்பகோணத்தில் இருந்து நாச்சியார்கோவில் வழியாக பூந்தோட்டம் செல்லும் சாலையில் சென்று தென்கரை என்ற இடத்தில் இறங்கி 1 கி.மீ. சென்றாலும் இத்தலத்தை அடையலாம். அருகில் உள்ள பெரிய ஊர் பேரளம்.
ஆலய முகவரி
அருள்மிகு நேத்ரார்ப்பணேஸ்வரர் திருக்கோயில்,திருவீழிமிழலை,
திருவீழிமிழலை அஞ்சல்,
குடவாசல் வட்டம்,
திருவாரூர் மாவட்டம் – 609 505.
ஆலயம், தினமும் காலை 8 மணி முதல் பகல் 12 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் திறந்திருக்கும்.
தேவார மூவராலும் பாடல் பெற்ற தலங்கள் பல உண்டு. அவற்றில் திருவீழிமிழலை தலமும் ஒன்றாகும். வீழிச்செடிகள் நிறைந்திருந்ததால் இவ்வூருக்கு திருவீழிமிழலை என்று பெயர் ஏற்பட்டது. இத்தலத்தின் தல விருட்சம் வீழி மரம்.
தல வரலாறு
மஹாவிஷ்ணுவின் கையில் இருந்த சக்ராயுதம் தேய்ந்துபோனபோது, ஆற்றல் பொருந்திய வேறொரு சக்கரத்தைப் பெறுவதற்காக சிவபெருமானை மஹாவிஷ்ணு பூஜித்ததாகப் பல்வேறு புராணத் தகவல்கள் உண்டு. அப்படி சிவபெருமானை விஷ்ணு பூஜித்ததாக திருமாற்பேறு (திருமால்பூர்), திருப்பைஞ்ஞீலி, திருவீழிமிழலை ஆகிய சிவஸ்தலங்களின் தல புராண வரலாறுகள் கூறுகின்றன. இம்மூன்று தலங்களில், திருவீழிமிழலை மிகவும் முக்கியமானதாகக் கருதப்படுகிறது.
சலந்திரனைச் சம்ஹரிக்க திருமாலுக்கு சக்கரம் தேவைப்படுகிறது. அதை சிவபெருமானிடம் இருந்து பெறுவதற்காக திருவீழிமிழலைக்கு வருகிறார். ஆயிரம் தாமரை மலர்களால் சிவனை அர்ச்சித்தால் எண்ணியது கிடைக்கும் என்று அறிகிறார். அதன்படி, ஆயிரம் தாமரை மலர்கள் சேர்த்து அர்ச்சனை செய்ய ஆரம்பித்து 999 மலர்களால் அர்ச்சனை செய்துவிடுகிறார். விஷ்ணுவை சோதிக்க நினைத்த சிவபெருமான், 1000-வது மலரை மறைத்து விடுகிறார். 1000-வது மலரைக் காணாமல் விஷ்ணு தவிக்கிறார். இன்னொரு தாமரை மலரைக் கொண்டு வந்து அர்ச்சனையைத் தொடர நேரமும் இல்லை. குறைந்த ஒரு மலருக்குப் பதிலாக, தாமரை மலருக்கு ஒப்பான தனது இரு கண்களில் ஒன்றையே பிடுங்கி எடுத்து, எந்தக் குறையும் இல்லாமல் பூஜையை முடித்தவுடன், சிவபெருமானும் காட்சி கொடுக்கிறார். அத்துடன், திருமால் விரும்பியபடி அவருக்கு சக்ராயுதத்தையும் கொடுத்து அருள் செய்கிறார். இப்படி மஹாவிஷ்ணு தன் கண்ணையே கொடுத்து சிவனை அர்ச்சித்த தலம்தான் திருவீழிமிழலை.
இப்படி ஈசனை திருமால் வழிபட்ட செய்தியை திருநாவுக்கரசர் தனது பதிகம் மூலமாகப் பாடுகிறார். நான்காம் திருமுறையில் இடம் பெற்றிருக்கும் "பூதத்தின் படையர் பாம்பின்" என்று தொடங்கும் பதிகத்தின் 8-வது பாடலில், இத்தல வரலாறு குறித்துப் பாடுகிறார்.
நீற்றினை நிறையப் பூசி, நித்தல் ஆயிரம் பூக்கொண்டு
ஏற்றுழி ஒரு நாள் ஒன்று குறையக் கண் நிறைய இட்ட
ஆற்றலுக்கு ஆழி நல்கி, அவன் கொணர்ந்த இழிச்சம் கோயில்
வீற்றிருந்து அளிப்பர் வீழிமிழலையுள் விகிர்தனாரே.
பொழிப்புரை
திருநீற்றை நன்கு அணிந்து நாடோறும் ஆயிரம் தாமரைப் பூக்களைக் கொண்டு அர்ச்சனை செய்த காலத்தில் ஒரு நாள் ஒரு பூக்குறையவே அப்பூவுக்கு மாற்றாக தன் கண்ணைப் பிடுங்கி அர்ச்சித்த முறுகிய பக்தியை உடைய திருமாலுக்குச் சக்கரத்தைக் கொடுத்து அவன் விண்ணிலிருந்து கொண்டுவந்து நிறுவிய கோயிலில் வீற்றிருந்து வீழிமிழலை விகிர்தனார் எல்லோருக்கும் அருள் செய்கிறார்.
*
நான்காம் திருமுறையில் இடம் பெற்றிருக்கும் "ஆதியில் பிரமனார் தாம்" என்று தொடங்கும் திருக்குறுக்கை வீரட்டம் தலத்துக்கான பதிகத்தின் 5-வது பாடலிலும் இத்தல வரலாறு குறித்துப் பாடுகிறார்.
ஏறு உடன் ஏழ் அடர்த்தான் எண்ணி ஆயிரம் பூக்கொண்டு
ஆறு உடைச் சடையினானை அர்ச்சித்தான் அடி இணைக்கீழ்
வேறும் ஓர் பூக் குறைய மெய்ம் மலர்க்கண்ணை யீண்டக்
கூறும் ஓர் ஆழி ஈந்தார் குறுக்கை வீ ரட்டனாரே
பொழிப்புரை
ஏழு இடபங்களையும் ஒரு சேர அழித்த கண்ணனாக அவதரித்த திருமால், கங்கா சடாதரனை அவன் திருவடிகளின் கீழ் ஆயிரம் தாமரைப்பூக்கள் கொண்டு அர்ச்சித்தபோது அப்பூக்களில் ஒரு பூக்குறைய அக்குறைவை நீக்கத் தாமரை போன்ற தன் கண் ஒன்றனைப் பெயர்த்து அருச்சிக்க, அத்திருமாலுக்கு எல்லோராலும் புகழப்படும் சக்கராயுதத்தை வழங்கினார் குறுக்கை வீரட்டனார்.
*
இங்குள்ள மகா மண்டபத்தில், தெற்கு நோக்கி எழுந்தருளியுள்ள கல்யாண சுந்தரேசுவரர் திருவடியில் திருமால் தம் கண்ணைப் பறித்து அர்ச்சித்த அடையாளமும், கீழே சக்கரமும் இருப்பதை இன்றும் பார்க்கலாம்.
கோவில் விவரம்
கிழக்கு நோக்கிய 5 நிலை ராஜகோபுரத்துக்கு முன் பெரிய அழகிய திருக்குளம் உள்ளது. இறைவன் நேத்ரார்ப்பனேஸ்வரர் சந்நிதி கிழக்கு நோக்கி இருக்கிறது. மூலவர் சுயம்பு உருவில் சுமார் 5 அடி உயரத்தில் நற்காட்சி தருகிறார். மூலவர் லிங்கத்துக்குப் பின்புற கர்ப்பக்கிருக சுவரில், பார்வதி - பரமேசுவரர் திருமண கோலத்தைக் காணலாம். இறைவன் உமையை மணந்துகொண்ட தலம் என்னும் நிலைக்கேற்ப, கர்ப்பக்கிருக வாயிலில் அரசாணிக்கால் என்னும் தூணும், வெளியில் மகாமண்டபத்தில் பந்தக்கால் என்னும் தூணும் உள்ளன. மகாமண்டபத்தில், மாப்பிள்ளை சுவாமியாக கல்யாணசுந்தரர் காட்சி தருகிறார். இவரே இத்தலத்தின் உற்சவமூர்த்தி. அவரது வலது பாதத்தின் மேலே திருமால் அர்ச்சித்த கண்மலரும், அதன் கீழே சக்கரமும் இருக்கக் காணலாம்.
கைலாயத்தில் வசிக்கும் சிவபெருமானுக்கும், காத்தியாயணி அம்பிகைக்கும் திருமண வைபவம் நடைபெற்ற தலம் திருவீழிமிழலை. ஆகவே, இத்தலம் ஒரு திருமணத்தலம். திருமணம் ஆகாத பெண்கள் இங்கு வந்து உற்சவர் கல்யாணசுந்தரேஸ்வரருக்கு மாலை சார்த்தி, இறைவனுக்கும் இறைவிக்கும் அபிஷேகம், அர்ச்சனை செய்து, 48 நாட்கள் பக்தியோடு இத்தல இறைவன் கல்யாணசுந்தரேஸ்வரரை தியானித்து வந்தால் திருமணம் கைகூடி வரும் என்று இத்தல புராணம் கூறுகிறது.
பிட்சாடனர், ரதிதேவி, வசிஷ்டர், காமதேனு, மனு முதலியோர் வழிபட்டு பேறுபெற்ற தலம் இது. கோவிலின் பிரதான நுழைவு வாயில் கோபுரத்தைவிட, கர்ப்பக்கிருஹத்தின் மேல் இருக்கிற 16 சிம்மங்கள் தாங்கக்கூடியதாக உள்ள விமானமே சிறப்பானது. இதற்கு விண்ணிழி விமானம் என்று பெயர். சக்கரம் பெற்ற திருமால், வைகுண்டத்தில் இருந்து கொண்டுவந்து இந்த விமானத்தால் இக்கோவிலை அலங்கரித்ததாகப் புராணங்கள் சொல்கின்றன. இறைவி சுந்தர குசாம்பாள் சந்நிதி, மூலவர் சந்நிதிக்கு அருகில் உள்ளது. ஆலயத்தின் முதல் பிராகாரத்தில் இருக்கும் நூற்றுக்கால் மண்டபம், சிற்ப வேலைக்கு ஒரு எடுத்துக்காட்டாக திகழ்கிறது. மூலவரின் வலப்பக்க மண்டப அறையில், கையில் கண்ணோடு அர்ச்சிக்கும் பாவனையில் திருமால் காட்சி தருகிறார்.
இத்தலம் வீழிச்செடி, சந்தனம், சண்பகம், பலா, விளா முதலிய மரங்கள் அடர்ந்த காடாகப் பல காலம் இருந்தது. மிழலைக் குறும்பர் என்னும் வேடுவர் ஒருவர் இத்தலத்தில் வசித்து வந்தார். அவர் தினம் ஒரு விளாங்கனி நிவேதனம் செய்து வீழிநாதரை வழிபட்டு வந்தார். அதன் பலனாக, ஈசன் அவர் முன் தோன்றி அருளாசி வழங்க, அவர் தவக்கோலம் பூண்டு, அருந்தவங்கள் செய்து அட்டமாசித்திகள் கைவரப் பெற்றார். இந்த மிழலைக் குறும்பருக்கு இத்தலத்தில் தனி சந்நிதி உள்ளது.
இக்கோயிலில் உள்ள வெளவால் நெத்தி மண்டபம், மிகச் சிறப்பான வேலைப்பாடுகள் கொண்டதாகும். அக்காலத்தில், கோயில் திருப்பணிகள் செய்யும் ஸ்தபதிகள், திருவீழிமிழலை வெளவால் நெத்தி மண்டபம் மற்றும் திருவலஞ்சுழி கல் பலகணி போன்ற அரிய திருப்பணிகள் நீங்கலாக மற்றவை செய்து தருகிறோம் என்று ஒப்புக்கொள்வார்கள். அத்தகைய சிறப்புபெற்ற இந்த வெளவால் நெத்தி மண்படம், இன்று கல்யாண மண்டபமாக விளங்குகிறது.
ராஜகோபுரம் கடந்து நுழைந்தவுடன், வலதுபுறம் உள்ள இந்த வெளவால் நெத்தி மண்டபம் அகலமான அமைப்புடன் நடுவில் தூண் இல்லாமல், சுண்ணாம்பு கொண்டு ஒட்டப்பட்டுள்ள வளைவான கூரை அமைப்புடன் உள்ள இந்த மண்டபம், கட்டட வேலைப்பாட்டில் மிகமிக அபூர்வமானது. வெளவால்கள் வந்து வசிக்க முடியாதவாறு கூரை அமைக்கப்பட்டுள்ளது இதன் சிறப்பம்சமாகும். சித்திரை மாதத்தில், இறைவன் - இறைவி திருக்கல்யாணம் நடைபெறுகிறது.
படிக்காசு அருளியது
திருநாவுக்கரசரும் திருஞானசம்பந்தரும் சேர்ந்தே இத்தலத்துக்கு வருகிறார்கள். அவர்கள் வரும்போது, நாட்டில் கடும் பஞ்சம். மக்கள் உணவின்றித் தவிக்கின்றனர். இந்த நிலையில் அப்பர், சம்பந்தர் இவர்களுடன் வந்த அடியார்களுக்கு உணவு அளிப்பது சிரமமாக இருக்கிறது. இருவரும் கோவிலுக்குச் சென்று இறைவனை வணங்கி பதிகங்கள் பாடுகிறார்கள். மறுநாள் காலையில், கிழக்கு பலிபீடத்தில் ஒரு படிக்காசும், மேற்கு பலிபீடத்தில் ஒரு படிக்காசும் இருப்பதை இருவரும் காண்கிறார்கள். அவற்றைக் கொண்டு அடியவர்களுக்கு உணவு அளிக்கின்றனர். நாட்டில் பஞ்சம் தீரும் வரையில் இவ்வாறு தினமும் படிக்காசு பெற்று தொண்டு செய்திருக்கின்றனர்.
படிக்காசு அளிப்பதிலும், அப்பருக்கு நல்ல காசும், சம்பந்தருக்கு மாற்றுக் குறைந்த காசும் இறைவன் கொடுத்தார். சம்பந்தர் அதைப் பார்த்து "வாசி தீரவே காசு நல்குவீர்" என்னும் பதிகம் பாடிய பிறகு அவருக்கும் நல்ல காசு கொடுத்து அருள் செய்தார். அவ்வாறு வைத்தருளிய பலிபீடங்கள், கோயிலின் கிழக்கிலும் மேற்கிலும் உள்ளன. படிக்காசுப் பிள்ளையார், மேற்கு பலிபீடத்தின் அருகில் உள்ளார். அருகில் சம்பந்தர், அப்பரின் உருவங்கள் உள்ளன. இவ்விருவரும் தங்கியிருந்த திருமடங்கள், வடக்கு வீதியில் கீழ்க்கோடியிலும் (சம்பந்தர்) மேற்குக் கோடியிலும் (அப்பர்) உள்ளன.
ஒரு சிறந்த திருமணத் தலமாக விளங்கும் இத்தலத்துக்குச் சென்று இறைவன், இறைவி இருவரையும் வழிபட்டு வேண்டிக்கொண்டால், விரைவில் திருமணம் கூடிவரும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.
இத்தலத்துக்கான 23 பதிகங்களில், சுந்தரர் பாடிய பதிகம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
நம்பினாரக்ககு அருள் செய்யும் அந்தணர்
நான்மறைக்கு இடமாய வேள்வியுள்
செம்பொன் ஏர் மடவார் அணி பெற்ற திருமிழலை
உ உபரார் தொழுது ஏத்த மாமலையாளொடும்
உடனே உறைவிடம்
அம்பொன் வீழிகொண்டீர் அடி யேற்கும் அருளுதிரே.
விடங்கொள் மாமிடற்றீர் வெள்ளைச்சுருள்
ஒன்று இட்டு விட்ட காதினீர் என்று
திடங்கொள் சிந்தையினார் கலி காக்கும் திருமிழலை
மடங்கல் பூண்ட விமானம் மண்மிசை
வந்து இழிச்சிய வான நாட்டையும்
அடங்கல் வீழிகொண்டீர் அடியேற்கும் அருளுதிரே.
ஊனை உற்று உயிர் ஆயினீர் ஒளி
மூன்றுமாய்த் தெளி நீரோடு ஆன் அஞ்சின்
தேனை ஆட்டுஉகந்தீர் செழு மாடத் திருமிழலை
மானை மேவிய கையினீர் மழு
வேந்தினீர் மங்கை பாகத்தீர் விண்ணில்
ஆன வீழிகொண்டீர் அடியேற்கும் அருளுதிரே.
பந்தம் வீடு இவை பண்ணினீர் படிறீர்
மதிப்பிதிர்க் கண்ணியீர் என்று
சிந்தை செய்து இருக்கும் செங்கையாளர் திருமிழலை
வந்து நாடகம் வானநாடியர்
ஆட மால் அயன் ஏத்த நாள்தொறும்
அந்தண் வீழிகொண்டீர் அடியேற்கும் அருளுதிரே.
புரிசை மூன்றையும் பொன்றக் குன்றவில்
ஏந்தி வேதப் புரவித் தேர்மிசைத்
திரிசெய் நான்மறையோர் சிறந் தேத்துந் திருமிழலைப்
பரிசினால் அடி போற்றும் பத்தர்கள்
பாடியாடப் பரிந்து நல்கினீர்
அரிய வீழிகொண்டீர் அடியேற்கும் அருளுதிரே.
எறிந்த சண்டி இடந்த கண்ணப்பன்
ஏத்து பத்தர்கட்கு ஏற்றம் நல்கினீர்
செறிந்த பூம்பொழில் தேன் துளி வீசும் திருமிழலை
நிறைந்த அந்தணர் நித்த நாள்தொறும்
நேசத்தால் உமைப் பூசிக்கும் இடம்
அறிந்து வீழிகொண்டீர் அடியேற்கும் அருளுதிரே.
பணிந்த பார்த்தன் பகீரதன் பல
பத்தர் சித்தர்க்குப் பண்டு நல்கினீர்
திணிந்த மாடந்தொறும் செல்வம் மல்கு திருமிழலைத்
தணிந்த அந்தணர் சந்தி நாடொறும்
அந்தி வான் இடு பூச்சிறப்பு அவை
அணிந்து வீழிகொண்டீர் அடியேற்கும் அருளுதிரே.
பரந்த பாரிடம் ஊர் இடைப்பலி
பற்றிப் பாத்து ஊணும் சுற்றம் ஆயினீர்
தெரிந்த நான்மறையோர்க்மு இடமாய திருமிழலை
இருந்து நீர் தமிழோடு இசை கேட்கும்
இச்சையால் காசு நித்தல் நல்கினீர்
அருந்தண் வீழிகொண்டீர் அடியேற்கும் அருளுதிரே.
தூய நீர் அமுதாயவாறு அது
சொல்லுக என்று உ கேட்கச் சொல்லினீர்
தீ அறாக் குலையார் செழு மாடத் திருமிழலை
மேய நீர் பலி ஏற்றது ஏன் என்று
விண்ணப்பம் செய்பவர்க்கு மெய்ப்பொருள்
ஆய வீழிகொண்டீர் அடியேற்கும் அடியாரே!
ஓம் நமசிவாய
படித்து பகிர்ந்தது
இரா இளங்கோவன்
நெல்லிக்குப்பம்.
No comments:
Post a Comment