Wednesday, March 5, 2025

திருவைகாவூர் வில்வவனநாதர் சிவராத்திரி தலம்..

#மகாசிவராத்திரி பிறந்த தலமான, 
வேடன் ஒருவன் மகாசிவராத்திரி
நாளில் புலிக்கு பயந்து வில்வ மரத்தின் மீது ஏறி உறங்காமல் 
வில்வம் பறித்து அறியாமல்
சிவலிங்கதிருமேனி மீது இட்டு பூசை செய்து வேடனுக்கு சிவபெருமான் காட்சி அளித்து முக்தியளித்த தலமான, 
தேவாரம் மற்றும் திருப்புகழ் பாடல் பெற்ற சோழநாட்டு தலங்களில் ஒன்றான 
கொள்ளிடம் ஆற்றங்கரையில் அமைந்துள்ள குலோத்துங்க சோழனால் கட்டப்பட்ட ,
வேதங்கள் வில்வ விருட்சங்களாக தவம் புரிந்து வரும் இடமான
#தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள பாபநாசம் வட்டம் 
#திருவைகாவூர் 
(#வில்வ_வனம்)
#வில்வவனேஸ்வர்
(வில்வவன நாதர்)
#வளைக்கைநாயகி
(சர்வஜன ரக்ஷகி அம்மன்)
திருக்கோயில் வரலாற்றையும் புகைப்படங்களையும் காணலாம் வாருங்கள் 🙏🏻 🙏🏻 🙏🏻 
 
திருவைகாவூர் வில்வவனநாதர் கோயில் மூவரால் பாடல் பெற்ற சிவாலயமாகும். 
இது தஞ்சை மாவட்டத்தில் அமைந்துள்ளது. சிவராத்திரிக்குச் சிறப்புடைய தலம். சிவராத்திரி நாளில் புலிக்குப் பயந்த வேடன் வில்வ மரத்திலிருந்து தூங்காமல் வில்வத்தைப் பறித்துப்போட இறைவன் காலையில் தோன்றி அருள்புரிந்த தலமென்பது தொன்நம்பிக்கை (ஐதிகம்). 
தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் சோழ நாடு காவிரி வடகரைத் தலங்களில் அமைந்துள்ள 48வது சிவத்தலமாகும்.

*மூலவர் : வில்வவனேசுவரர்
*அம்மன் :வளைக்கைநாயகி, சர்வஜனரக்ஷகி
*தல 
விருட்சம் : வில்வமரம்
*தீர்த்தம் : எமதீர்த்தம்

*வழிபட்டோர் : 

சப்தகன்னிகள், வேதங்கள், தவநிதி என்ற முனிவர், மகா சிவராத்திரி மோட்சம் அடைந்த ஓரு வேடன் , யமன் மற்றும் தேவாரம் பாடிய மூவர், சேக்கிழார், அருணகிரிநாதர் 

*பாடியவர்கள்:

திருஞானசம்பந்தர், அப்பர், சுந்தரர், அருணகிரிநாதர் மற்றும் சேக்கிழார் 

திருக்காளத்தி, திருக்கோகர்ணம், ஸ்ரீசைலம், இராமேஸ்வரம் போல மகாசிவராத்திரி சிறப்பாகக் கொண்டாடப்படும் தலம், திருவைகாவூர் ஆகும். சிவராத்திரி வழிபாடு பிறந்தது இத்தலத்தில்தான் என்பது ஐதீகம். வேதங்கள் வில்வ மரமாக இருந்து வழிபட்டதால் இத்தலத்துக்கு வில்வ ஆரண்யம் என்றும் சுவாமிக்கு 'வில்வவனேசுவரர்' என்றும் பெயர் வந்தது. பெருமாள், பிரம்மா இருவரும், இறைவன் சன்னதியில் துவார பாலகர்களாக உள்ளனர். அதனால் இத்தலம் மும்மூர்த்திகள் தலம் என்று போற்றப்படுகிறது.

தவநிதி என்ற முனிவர் தவம் செய்து கொண்டிருக்கையில் மான் ஒன்றைத் துரத்திக்கொண்டு வேடன் வந்தான். மானுக்கு முனிவர் அபயமளித்ததால் கோபம் கொண்ட வேடன் முனிவர் மீது அம்பெய்த முற்பட்டான். உடனே சிவபெருமான் புலிவடிவமெடுத்து, வேடனைத் துரத்தினார். வேடன் பயந்தோடி அருகிலிருந்த ஒரு வில்வ மரத்தில் ஏறிக்கொண்டான். புலியும் மரத்தடியிலேயே நின்றது. வேடன் வேறுவழியின்றி மரத்திலேயே இரவு முழுதும் தங்கியிருந்தான். இரவில் தூக்கம் வந்து கீழே விழுந்துவிடுவமோ என்று நினைத்த வேடன் ஒவ்வொரு இலையாக பறித்து கீழே போட்டுக் கொண்டிருக்க அவை புலி வடிவிலிருந்த சிவபெருமான் மீது விழுந்து கொண்டிருந்தன.

அன்று மகா சிவராத்திரி நாள். ஊன் உறக்கம் இன்றி சிவபெருமானை வழிபட்ட புண்ணியம் வேடனுக்கு அவனையறியாமல் கிட்டியதால் இறைவன் காட்சி தந்து மோட்சம் தந்தார். அன்று அதிகாலையில் அவனது ஆயுள் முடிவதாக இருந்ததால் யமன் அங்கு வந்தான். நந்தி தேவன் இதை பொருட்படுத்தவில்லை. சிவபெருமான் தட்சிணாமூர்த்தி வடிவில் கையில் கோல் ஏந்தி விரட்டினார். யமனை உள்ளே விட்ட குற்றத்திற்காக நந்தி மீது கோபம் கொண்டார். அவருக்கு பயந்து நந்தி யமனை தன் சுவாசத்தால் கட்டுப்படுத்தி நிறுத்தி விட்டார். பின் யமன் சிவனை வணங்க அவன் விடுவிக்கப்பட்டான். யமன் மறுபடி உள்ளே வராமல் இருப்பதற்காக, இங்குள்ள நந்தி இறைவனை நோக்கி இல்லாமல், வாசலைப் பார்த்தபடி இருப்பதாக ஐதீகம்.

திருவைகாவூர் மகாசிவராத்திரி என்ற சிறப்பு வாய்ந்த சிவதல விழாவுக்கு மிகவும் பெயர் பெற்ற தலம்.சிவன் பார்வதி இருவரும் மனம் மகிழ்ந்து தங்கிய இடம் திருவைகாவூர். யமபயம் தீர்த்த தலமாக திருவைகாவூர் விளங்குகிறது. இந்த ஊரில்தான் மகா சிவராத்திரி பிறந்தது.

வேடன் ஒருவனுக்கு ஒரு மகாசிவராத்திரி நாளில் இறைவன் காட்சி கொடுத்து அவனுக்கு மோட்சம் அருளிய தலம்.

இத்தலத்திற்கு வில்வவனம் என்றும் பெயருண்டு.

எல்லாம் அறிந்த மார்க்கண்டேயருக்காக ஈசன் எழுந்த தலம் திருக்கடவூர்.
ஏதும் அறியாத வேடனுக்காக ஈசன் எழுந்த தலம் திருவைகாவூர்.

இத்தலத்தில்தான் வேறுஎங்கும் காணமுடியாத வகையில் கையில் கோலேந்திய தட்சிணாமூர்த்தி நின்ற கோலத்தில் காட்சி தருகிறார்.

அனைத்து நந்திகளும் எதிர் திசையில் நம்மைப் பார்த்து உள்ள ஒரே தலம், இங்குள்ள நந்திகள் அனைத்தும் இறைவனை நோக்கி இல்லாமல், வாசலைப் பார்த்தபடி உள்ளது. யமன் மறுபடி உள்ளே வராமல் இருப்பதற்காக அவ்வறு இருப்பதாக ஐதீகம்.

பிரம்மாவும் விஷ்ணுவும் இத்தலத்தில் இருப்பதால் மும்மூர்த்திகள் தலம் என்று போற்றப்படும் தலம் இது. அர்த்தமண்டபத்தில் வாயிற்படியின் இருபுறங்களிலும் விஷ்ணுவும், பிரம்மனும் எங்குமே காணப்படாத நிலையில் துவாரபாலகர்களாக நிற்கிறார்கள்.

 பிரளய காலத்தில் தன்னுடைய ஆக்கும் தொழில் அழியாமல் இருக்க பிரம்மா இங்கே ஒரு கேணி உண்டாக்கி சிவபெருமானை வழிபட்டபின் ஆலய துவாரகாலகனாக ஒருபுறம் அமர்ந்து விட்டார். சலந்திரனை அழிப்பதற்காக அவன் மனைவியிடம் ஒரு பொய் கூறினார் திருமால். இதை அறிந்து கொண்ட அவள் மகாவிஷ்ணுவை சபித்தாள். அச்சாபம் தீரவே திருமால் இங்கே துவாரபாலகனாக நின்று தவம் புரிகிறார் என்கிறது தலபுராணம்.  

சிவன் பார்வதி இருவரும் மனம் மகிழ்ந்து தங்கிய இடம் திருவைகாவூர். யமபயம் தீர்த்த தலமாக திருவைகாவூர் விளங்குகிறது.

உத்தால முனிவரிடம் சாபம் பெற்ற சப்தகன்னிகளும், இங்கு சிவனை வேண்டி நிவர்த்தி பெற்றனர். இங்குள்ள சுப்பிரமணியர் சிலை கலையம்சத்துடன் வடிக்கப்பட்டுள்ளது. அருணகிரிநாதர் இவரைப் போற்றி திருப்புகழ் பாடியுள்ளார். கோயில் முகப்பில் வேடனை, புலி விரட்டிய சம்பவம் சுதை சிற்பமாக உள்ளது.

வேதங்கள் வில்வ விருட்சங்களாக இங்கே தவம் புரிவதாக ஐதீகம். ஊழிக் காலத்தில் அனைத்து அழியக்கூடும் என்பதை உணர்ந்த வேதங்கள், சிவபெருமானை வணங்கி தாம் அழியாமலிருக்க உபாயம் கேட்டதாகவும் சிவபெருமானின் ஆலோசனையின்படி இத்தலத்தில் வில்வ மரமாக நின்று தவம் புரிந்து வழிபடுவதாகவும் இதனால் இத்தலத்துக்கு வில்வ ஆரண்யம் என்றும் சுவாமிக்கு வில்வவனேசுவரர் என்றும் பெயர் வந்தது.

கோயில்களின் மாநகரான கும்பகோணத்திலிருந்து கிட்டத்தட்ட 15 கிமீ தொலைவில் உள்ள கிராமம் திருவைகாவூர். இது பாபநாசம் வட்டத்துக்குள் இருக்கும் ஒரு நதியோரத்து கிராமம். பரந்து விரிந்து கிடக்கும் கொள்ளிடம் ஆற்றின் கரையில் அமைந்திருக்கும் இந்த கிராமத்தில் புகழ் வாய்ந்த சிவன் கோயில் அமைந்துள்ளது.

இந்தக் கோயிலில் ஆண்டுக்கு ஒரு முறை கூட்டம் கூடுகிறது. அதாவது மாசி மாதத்து அமாவாசையை ஒட்டி வரும் மகா சிவராத்திரியன்று பல ஊர்களிலிருந்தும் மக்கள் வந்து வழிபடுகிறார்கள். மூன்று நாள்கள் கோயிலில் மகாசிவராத்திரி விழா களை கட்டி விடுகிறது.

வில்வநாத சுவாமி என்பது இங்கு உறையும் இறைவனின் பெயர். இறைவி மங்களாம்பிகை. வில்வ வனங்களுக்கு நடுவே கோயில் கொண்டிருந்ததால் இறைவனுக்கு இப்பெயர். தல விருட்சமாக வில்வமரம்.

சோழர் காலப் பாணியில் இக் கோயில் கட்டப்பட்டிருக்கிறது. கோயிலின் முகப்பில் வவ்வாலத்தி மண்டபம் உள்ளது. அதனுள் நுழைந்தால் மிகவும் விசாலமான பிரகாரச் சுற்று. உயர்ந்து நீண்ட மதில் சுவர். அதனையடுத்து மிகச் சிறிய ஆனால் கலையழகுடன் கூடிய கோபுரம்.

#வேடனுக்கும் உண்டு மோட்சம்:

இக் கோயிலில் மகாசிவராத்திரி விழா மிகச் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. இரவு முழுதும் கண்விழித்து உபன்யாசங்கள் நிகழ்த்தப்படுகின்றன. சிவராத்திரியின் சிறப்பைக் குறிக்கும் விதமாகவும் மற்றொரு கதையும் வழக்கில் உண்டு.

ஒரு முறை காட்டில் ஒரு வேடன் வேட்டைக்குச் சென்றபோது, புலி ஒன்று அவனை விரட்டிக் கொண்டு வர அதனிடமிருந்து தப்பித்து ஓடி வந்தவன், உயரமான ஒரு மரத்தின் மீது ஏறி அமர்ந்து கொண்டான். மதியம் வந்தது, மாலையும் வந்தது. இருள் சூழ, இரவும் வந்தது. புலியோ மரத்தடியில் படுத்துக் கொண்டு நகர்வதாயில்லை. வேடனுக்கோ பசி, தாகம், உறக்கம். தூங்காமல் விழித்திருப்பதற்காக மரத்திலுள்ள இலைகளை ஒவ்வொன்றாகக் கீழே பறித்துப் போட்டுக் கொண்டிருந்தான். பொழுது புலர்ந்தது. நெடுநேரமாகியது. கீழே படுத்திருந்த புலியின் மீது வேடன் பறித்துப் போட்ட இலைக் குவியல் மூடியிருந்ததால், புலி இருக்கிறதா இல்லையா என்பதே தெரியவில்லை. ஒரு வழியாகத் துணிச்சலை வரவழைத்துக் கொண்டு கீழே இறங்கி வந்து இலைகளை விலக்கிப் பார்த்த வேடனுக்கு ஆச்சர்யம். அங்கு புலிக்கு பதிலாக சிவலிங்கம்.

பிறகுதான் அவனுக்கு விளங்கியது. இரவு முழுதும் அவன் அமர்ந்திருந்தது வில்வ மரம். அன்றைய இரவு சிவராத்திரி. அவனையறியாமலே இரவு முழுதும் கண்விழித்திருந்து வில்வ இலைகளால் சிவலிங்கத்தை அர்ச்சித்ததால் அவனுக்கு மோட்சம் கிடைத்தது எனும் கதை சொல்லப்படுகிறது. ஒவ்வொரு சிவராத்திரியன்றும் வேடனுக்கு மோட்சமளித்த புராணக் கதை சொல்லப்படுகிறது. கோயிலின் கோபுர வாசலில் சிறிய சிற்பமாகவும், பழைய பாணி ஓவியமாகவும் இந்தக் காட்சி சித்திரிக்கப்பட்டுள்ளது.

#எமனை விரட்டிய நந்தி:

முன்னாலிருக்கும் நந்தி வித்தியாசமாக இருக்கிறது. மற்ற சிவாலயங்களில் பெரும்பாலும் நந்தி கோயிலின் கருவறையை நோக்கியபடி அமைக்கப்பட்டிருக்கும். ஆனால் இங்கோ நுழைவாயிலை நோக்கிக் கொண்டு படுத்திருக்கிறது.

அதற்கொரு கதையும் சொல்லப்படுகிறது. எமன் ஒரு முறை சிவபெருமானோடு மோதி, விரட்டிக் கொண்டு வர, அதனால் கோபமுற்ற நந்தி தேவர் எமனை விரட்டிக் கொண்டு ஓடி வந்து சீறிய வேகத்தில் எமன் பாய்ந்து கோயிலின் எதிரில் உள்ள குளத்தில் விழுந்து மூழ்கியதாகச் சொல்லப்படுகிறது. மீண்டும் எமன் கோயிலுக்குள் நுழையாமல் பாதுகாப்பாக நந்தி இன்னமும் திரும்பிப் படுத்துக் கொண்டிருக்கிறது. எமன் விழுந்த குளம் எம குளம் என்ற பெயரில் இன்றளவும் வழங்கி வருவதாகவும் சொல்லப்படுகிறது.

பட்டீஸ்வரம், திருப்புன்கூர், திருப்பூந்துருத்தி ஆகிய தலங்களில் நந்தி சந்நதிக்கு எதிரே நிற்காமல் சற்று விலகியிருக்கிறாரே தவிர திரும்பியிருக்கவில்லை.

மற்ற சிவாலயங்களைப் போலவே, விநாயகர், முருகன், துர்க்கை, சன்னிதிகளும் உள்ளன. கோயில் திருச்சுவர்களில் கல்வெட்டுகளும் ஆங்காங்கே தென்படுகின்றன.

சிவராத்திரி விழா, சிவனுக்கு சிறப்பு பூஜைகளுடன் இங்கு விமரிசையாக நடக்கும். மறுநாள் அமாவாசையன்று கோபுரத்தின் கீழே வேடனை நிறுத்தி, கருவறையில் சிவனுக்கும், அதன்பின் வேடனுக்கும் தீபாராதனை காட்டுவர். வேடன், மோட்சம் பெற்றதை நினைவுபடுத்தும் வகையில் இவ்வாறு செய்கின்றனர். பின், பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகிய மும்மூர்த்திகளுடன், வேடன், வேடுவச்சியும் புறப்பாடாவர்.

கல்யாண வரம், குழந்தை வரம், தொழில் விருத்தி, உத்தியோக உயர்வு வேண்டுவோர் இங்கு வந்து வழிபடலாம்.

#திருஞானசம்பந்தர் இயற்றியுள்ள இத்தலத்திற்கான இப்பதிகம் மூன்றாம் திருமுறையில் இடம் பெற்றுள்ளது.

"கோழைமிட றாககவி கோளுமில வாகஇசை கூடுவகையால்
ஏழையடி யாரவர்கள் யாவைசொன சொன்மகிழும் ஈசனிடமாந்
தாழையிள நீர்முதிய காய்கமுகின் வீழநிரை தாறுசிதறி
வாழையுதிர் வீழ்கனிகள் ஊறிவயல் சேறுசெயும் வைகாவிலே

.

அண்டமுறு மேருவரை யங்கிகணை நாணரவ தாகஎழிலார்
விண்டவர்த முப்புரமெ ரித்தவிகிர் தன்னவன் விரும்புமிடமாம்
புண்டரிக மாமலர்கள் புக்குவிளை யாடுவயல் சூழ்தடமெலாம்
வண்டினிசை பாடஅழ கார்குயில்மி ழற்றுபொழில் வைகாவிலே.

ஊனமில ராகியுயர் நற்றவமெய் கற்றவையு ணர்ந்தஅடியார்
ஞானமிக நின்றுதொழ நாளுமருள் செய்யவல நாதனிடமாம்
ஆனவயல் சூழ்தருமல் சூழியரு கேபொழில்கள் தோறுமழகார்
வானமதி யோடுமழை நீள்முகில்கள் வந்தணவும் வைகாவிலே.

இன்னவுரு இன்னநிறம் என்றறிவ தேலரிது நீதிபலவுந்
தன்னவுரு வாமெனமி குத்ததவன் நீதியொடு தானமர்விடம்
முன்னைவினை போம்வகையி னால்முழு துணர்ந்துமுயல் கின்றமுனிவர்
மன்னஇரு போதுமரு வித்தொழுது சேரும்வயல் வைகாவிலே.

வேதமொடு வேள்விபல வாயினமி குத்துவிதி யாறுசமயம்
ஓதியுமு ணர்ந்துமுள தேவர்தொழ நின்றருள்செ யொருவனிடமாம்
மேதகைய கேதகைகள் புன்னையொடு ஞாழலவை மிக்கஅழகான்
மாதவிம ணங்கமழ வண்டுபல பாடுபொழில் வைகாவிலே.

நஞ்சமுது செய்தமணி கண்டன்நமை யாளுடைய ஞானமுதல்வன்
செஞ்சடையி டைப்புனல் கரந்தசிவ லோகனமர் கின்றஇடமாம்
அஞ்சுடரொ டாறுபத மேழின்இசை யெண்ணரிய வண்ணமுளதாய்
மைஞ்சரொடு மாதர்பல ருந்தொழுது சேரும்வயல் வைகாவிலே.

நாளுமிகு பாடலொடு ஞானமிகு நல்லமலர் வல்லவகையாற்
தோளினொடு கைகுளிர வேதொழும வர்க்கருள்செய் சோதியிடமாம்
நீளவளர் சோலைதொறும் நாளிபல துன்றுகனி நின்றதுதிர
வாளைகுதி கொள்ளமது நாறமலர் விரியும்வயல் வைகாவிலே.

கையிருப தோடுமெய்க லங்கிடவி லங்கலையெ டுத்தகடியோன்
ஐயிருசி ரங்களையொ ருங்குடன் நெரித்தஅழ கன்றனிடமாங்
கையின்மலர் கொண்டுநல காலையொடு மாலைகரு திப்பலவிதம்
வையகமெ லாமருவி நின்றுதொழு தேத்துமெழில் வைகாவிலே.

அந்தமுதல் ஆதிபெரு மானமரர் கோனையயன் மாலுமிவர்கள்
எந்தைபெரு மான்இறைவன் என்றுதொழ நின்றருள்செ யீசனிடமாஞ்
சிந்தைசெய்து பாடும்அடி யார்பொடிமெய் பூசியெழு தொண்டரவர்கள்
வந்துபல சந்தமலர் முந்தியணை யும்பதிநல் வைகாவிலே.

ஈசனெமை யாளுடைய எந்தைபெரு மானிறைவ னென்றுதனையே
பேசுதல்செ யாவமணர் புத்தரவர் சித்தமணை யாவவனிடந்
தேசமதெ லாமருவி நின்றுபர வித்திகழ நின்றபுகழோன்
வாசமல ரானபல தூவியணை யும்பதிநல் வைகாவிலே.

முற்றுநமை யாளுடைய முக்கண்முதல் வன்திருவை காவிலதனைச்
செற்றமலி னார்சிரபு ரத்தலைவன் ஞானசம் பந்தனுரைசெய்
உற்றதமிழ் மாலையீ ரைந்துமிவை வல்லவர் உருத்திரரெனப்
பெற்றமர லோகமிக வாழ்வர்பிரி யாரவர்பெ ரும்புகழொடே.

#கோவில் அமைப்பு:

ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட ஆலயம். 11-ஆவது நூற்றாண்டில் ஆட்சி செய்த முதலாம் குலோத்துங்க சோழன் இவ்வாலயத்தில் திருப்பணி செய்திருப்பதாகக் கல்வெட்டுகள் கூறுகின்றன. சம்புவராய மன்னர்களில் சகலபுவனசக்கரவர்த்தி இராச நாராயணசம்புவராயர் காலத்திலும் பொறிக்கப்பெற்ற கல்வெட்டுக்கள் இருக்கின்றன.

இத்தலத்தில் ராஜகோபுரம் இல்லை. முகப்பில் விநாயகர் காட்சி தருகின்றார். முகப்பு வாயில் மட்டுமே ஐந்து கலசங்களுடன் கிழக்கு நோக்கி காட்சி தருகிறது. முகப்பு வாயிலின் மேற்புறம் அழகிய சுதைச் சிற்பங்கள் காணப்படுகின்றன. முகப்பு வாயிலுக்கு எதிரே யம தீர்த்தம் உள்ளது. வாயில் வழியே உள்ளே சென்றால் பலிபீடத்தையும், நந்தி நம்மைநோக்கி திரும்பி (கிழக்குநோக்கி) இருப்பதைக் காணலாம். இவற்றையடுத்து சுற்றிலும் மதிற்சுவருடனுள்ள ஒரு சிறிய 3 நிலை கோபுரம் உள்ளது. கோபுர வாயில் வழியே உள்ளே சென்றால் வாயிலில் இடப்பால் வேடன் நிகழ்ச்சி கதையால் சித்தரிக்கப்பட்டிருப்பதைக் கண்டு மகிழலாம்.

இத்தல மூலவர் வில்வவனநாதர் சுயம்புமூர்த்தியாக கிழக்கு நோக்கிய சந்நிதியில் காட்சி தருகிறார். இடதுபுறம் அம்பாள் சந்நிதி தனியே உள்ளது. நேர்கோட்டில் சுவாமி ,அம்பாள் சந்நிதிகள் உள்ளன. கிழக்கு நோக்கிய நின்ற திருக்கோலம். மிகவும் பிரசித்திபெற்ற அம்பாள்.

அம்பாள் வளைக்கை நாயகி (சர்வஜன ரட்சகி) மிகவும் அருள் வாய்ந்தவர். கிழக்கு முகமாக ஐயனின் இடப்புறம் அம்பிகையின் சந்நிதி.இதனை மணக்கோலம் என - அகத்திய மாமுனிவர் தரிசனம் கண்டார்.அருணகிரி நாதரும் வழிபட்டிருக்கின்றனர். குறைகள் எதுவென்றாலும் கூறலாம். அவ்வாறு கூறும்போது அம்பாளுக்கு எதிரில் உள்ள ஸ்ரீ சக்கரம் அருகில் நின்று பிரார்த்தனை செய்ய வேண்டும். அம்பாளே பேசுவது நம்மால் உணர முடியும்.சுவாமி சந்நிதியில் தீபாராதனை காட்டி முடித்து விட்டு அம்பாள் சந்நிதிக்கு வந்து நம் பிரார்த்தனை இன்னது என்றும் அது இத்தனை நாளில் கை கூடும் என்று கூறிவிடுவார். இவர் கூறியதுபோலவே எல்லா விசயங்கள் நிகழ்ந்திருப்பதாக பக்தர்கள் கூறுகின்றனர்.

வெளிப் பிராகாரத்தில் சப்தகன்னியர் சன்னதியும், சுந்தரமூர்த்திவிநாயகர் சன்னதியும், ஒரே கல்லில் மயில், திருவாட்சி ஆகியன ஒன்றாக அமைந்த வள்ளி தெய்வானையுடன் கூடிய ஆறுமுகப்பெருமான் சன்னதியும் உள்ளன.கை ரேகை, நகம் எல்லாமே அந்த சிற்பத்தில் தெளிவாக தெரியும்.இதில் இச் சந்நிதியில் மயிலின் முகம் திசை மாறியுள்ளது மற்றோர் சிறப்பு. மகாமண்டபத்தில் விநாயகர், பிரம்மா, விஷ்ணு, வீணா தட்சிணாமூர்த்தி மூலத் திருவுருவங்கள் உள்ளன.

கோஷ்ட மூர்த்தமாக உள்ள தட்சிணாமூர்த்தி அழகான திருவுருவம். லிங்கோத்பவரும், அர்த்தநாரீஸ்வரரும், பிரம்மாவும் கோஷ்டத்தில் உள்ளனர். துர்க்கைக்கு எதிரில் இரு சண்டேஸ்வரர் திருமேனிகள் உள்ளன. திருமால், நாராயணி, பைரவர், சூரியன், சந்திரன், சனிபகவான் முதலிய மூலத் திருமேனிகள் உள்ளனர்.

இத்தலத்தில் மகா சிவராத்திரியன்று நான்காம் யாமத்தில் வேடன், வேடுவச்சி, இறைவன் காட்சி தரும் ஐதீகம் புறப்பாடு நடைபெறுகின்றன.

*சிறப்புக்கள் :

வில்வவனேசுவரரை வழிபட்டால் மனத்துயரம் நீங்கும்.

கல்யாண வரம், குழந்தை வரம் வேண்டுவோர் இங்கு வந்து வழிபடலாம்.
இத்தலத்து ஈசனை வணங்குவோர்களுக்கு மனஅமைதி கிடைக்கும். மேலும் வேலை வாய்ப்பு , தொழில் விருத்தி ,உத்தியோக உயர்வு, ஆகியவற்றுக்காகவும் இங்கு பிரார்த்தனை செய்தால் சுவாமி பக்தர்களது வேண்டுதல்களை நிச்சயம் நிறைவேற்றி கொடுப்பார்

*திருவிழா:

மாசி மாதம் மகா சிவராத்திரி 2 நாட்கள் திருவிழா

அம்மாவாசை அன்று தீர்த்தவாரி பஞ்சமுக மூர்த்திகள் வீதியுலா இரவு ஓலை சப்பரத்தில் வீதியுலா(ஓலையாலேயே ரிஷபம், சுவாமி, அம்பாள், அனைத்துமே ஓலையால் கட்டி வீதியுலா நடைபெறுவது மிகவும் சிறப்பான ஒன்றாகும்.

ஆருத்ரா புறப்பாடு திருவாதிரை, விஜயதசமி, திருக்கார்த்திகை ஆகியவை இத்தலத்தில் மிகவும் விசேசம்..

*அமைவிடம்:

அருகில் உள்ள தொடருந்து நிலையம் கும்பகோணம். கும்பகோணத்திலிருந்து எண் 30, 12, 57, 69 குறிப்பிட்ட பேருந்துகளில் செல்லலாம். 18 கிமீ தொலைவில் உள்ளது. கும்பகோணத்திலிருந்து சுவாமிமலை சென்று அங்கிருந்தும் செல்லலாம் (8 கிமீ).

அல்லது கும்பகோணம்-தஞ்சாவூர் சாலை வழியே திருவலஞ்சுழி என்ற இடத்தில் இறங்கி, அங்கிருந்து சுவாமிமலை வழியாகவும் செல்லலாம்.

ஓம் நமசிவாய 
படித்து பகிர்ந்தது
 இரா இளங்கோவன்
 நெல்லிக்குப்பம். 

No comments:

Post a Comment

Followers

திருவைகாவூர் வில்வவனநாதர் சிவராத்திரி தலம்..

#மகாசிவராத்திரி பிறந்த தலமான,  வேடன் ஒருவன் மகாசிவராத்திரி நாளில் புலிக்கு பயந்து வில்வ மரத்தின் மீது ஏறி உறங்காமல்  வில்வம் பறித்து அறியாமல...