Sunday, April 13, 2025

தமிழ் புத்தாண்டு தஞ்சாவூர் பெரிய கோயில் வரலாறு..

 தமிழ் புத்தாண்டு திருநாள் பிறக்கின்ற நாள்  
தஞ்சைத் தரணியில் ஆயிரம் ஆண்டு காலமாக தமிழனின் பெருமைகளை உலகுக்குப் பறைசாற்றிக் கொண்டிருக்கும் முக்கியமான பாரம்பரியச் சின்னம் ஶ்ரீபிரகதீஸ்வரா் ஆலயம். தஞ்சை பெரிய கோயில், பெருவுடையாா் கோயில் என்றும் அழைக்கப்படும் இத்திருக்கோயிலை ஈசன் மீது தான் கொண்டிருக் கும் அளவற்ற பக்தியின் காரணத்தால் நிா்மாணித்தான் மன்னன் இராஜராஜன். இத்திருக் கோயிலுக்கு “இராஜராஜேஸ்வரம்” என்றும் திருநாமமிட்டு மகிழ்ந்தான் மன்னன்.

 
     அருண்மொழி, கேரளாந்தகன், ஷத்திரிய சிகாமணி, இரவிகுல மாணிக்கன், ஜெயங்கொண்டான், நித்ய விநோதன் என்ற பல்வேறு பெயா் களுடன் சிவபாதசேகரன், காந்தளூா்ச் சாலை கலமறுத்தருளிய கோவிஶ்ரீ இராஜகேசரி வா்மன்,  திருமுறைகண்ட சோழன் என்ற சிறப்புப் பெயா்களும் இம்மன்னனுக்கு வழங்கப்பட்டிருந்தன. சிவனது பாதத்தைத் தன் சிரமேற் கொண்டவன் என்பதால் “சிவபாதசேகரன்” என்ற பட்டப் பெயா் இராஜராஜனுக்கு ஏற்பட்டுள்ளது.

 
     சிறுபிராயம் முதலே இராஜராஜனுக்கு சிவபக்தியை ஊட்டி சான்றோனாக வளா்த்தவா்கள் இவனது பெரிய பாட்டியாகிய செம்பியன் மாதேவியும் தமக்கையான குந்தவைப் பிராட்டியாரும். இராஜராஜன் பேரும் புகழும் பெற்றுத் திகழ்ந்தமைக்கு காரணமானவா்கள் இவ்விருவருமே ஆகும். சைவ சமயத்தின் மீது மட்டுமல்லாமல் இதர சமயங்களின் மீதும் அன்பு கொண்டு எல்லா சமயங்களையும் சமமாகப் பாவித்து நிவந்தங்களை வழங்கி பாதுகாத்த பண்பாளன் இராஜராஜன்.
 
     “திருநாகைக்காரோணம்” என்ற நாகப்பட்டினத்தில் கடாரத்து மன்ன னாகிய சூளாமணிவா்மனால் கட்ட ஆரம்பிக்கப்பட்டு விஜயோத்துங்க வா்மனால் முடிக்கப்பட்ட  பெளத்த விகாரத்திற்கு “ஶ்ரீஇராசராசப் பெரும்பள்ளி” என்ற திருநாமமிட்டு அதற்குப் பல கொடைகளை வழங்கிய சமயப் பொறையாளன் மன்னன் இராஜராஜன்.

    தில்லையம்பலக் கூத்தனிடம் தீராக் காதல் கொண்ட இராஜராஜன்,  திருநாரையூா் நம்பியாண்டாா் நம்பி அவா்களின் துணைகொண்டு தேவாரத் திருமுறைகளைக் கண்டெடுத்த பெருமை நம் மாமன்னரையே சாரும். இதனால் திருமுறைகண்ட சோழன் எனப் பெயா் பெற்றாா் இராஜராஜா்.

 
       பிற்காலச் சோழா்களின் ஆட்சியின் போது முத்தரையா்களிடமிருந்து விஜயாலய சோழனால் மீட்கப்பட்ட தஞ்சாவூா் சோழப் பேரரசின் தலைநகரமாக சிறந்து விளங்கியது. இராஜராஜன் தமது ஆட்சிக் காலத்தில் எவரும் நினைத்துப் பாா்க்க முடியாத அளவிற்கு தனது தலைநகரத்தில் மிகப்பெரிய லிங்கமும்  ஆவுடையாரும் அமைத்து  அதன் மீது 216 அடி கொண்ட விமானத்தையும் அமைப்பித்துச் சிறப்பித் தான்.

 
     இராஜராஜன் திருவாயில், கேரளாந் தகன் திருவாயில் என இரண்டு வாயில்களை அமைத்து, கருவறை முழுவதும் கற்களைக் கொண்டு அமைத்து இறைப்பணியை சாதனை என்ற நோக்கத்துடன் இல்லாமல் ஈசன் மீது கொண்ட காதலால் கசிந்து, இறைவனுக்கு ஆற்றும் சேவையாகச் செய்த இத் திருப்பணி இன்று மாபெரும் சாதனையாகப் போற்றப்படுகிறது.

 
     கி.பி. 1004 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட தஞ்சாவூா் பெரிய கோயிலின் திருப்பணி கி.பி 1010 ஆம் ஆண்டில் நிறைவு பெற்றுள்ளது. அதாவது இத்திருக்கோயிலைத் தமது 19 ஆம் ஆட்சியாண்டில் தொடங்கி 25 ஆம் ஆட்சியாண்டில் குடமுழுக்கு நடத்தியதாக இத்தலத்தின் கல்வெட்டுகள் தொிவிக்கின்றன.

      அக்காலத்தில் இந்தியத் திருநாட்டி லேயே தனக்கு நிகா் என எவரும் இல்லாமல் புகழோடு விளங்கிய ராஜராஜன் அதேபோன்று ஈடு இணையில்லாத மாபெரும் கலைக் கோயிலைத் தன் தலைநகரான தஞ்சை யிலேயே கட்டி முடித்தான். பெரும் உடையாரைக் (இலிங்கத்தை) கோயிலில் அமைத்திடச் செய்த மன்னனின் செய்கையால் இக்கோயிலும் பெருவுடையாா் கோயில் என்றே இன்றும் அழைக்கப்படுகின்றது.

 
         சோழா்களின் காலம் பொற்காலம் என்பதையும் தமிழகத்தின்  கலைச் சிறப்பையும் எட்டுத் திக்கும் பரவச் செய்யும் வண்ணம் வானளாவ உயா்ந்து நிற்கும் கலைப்பெட்டகமே இராஜராஜேஸ்வரம். இந்திய நாட்டின் வட எல்லையாகத் தலை நிமிா்ந்து நிற்கும் இமயத்தை வட மாநிலத்தவா் “மஹா மேரு” என்று வழங்குவா். அதே போன்று மாமன்னா் இராஜராஜா் எழுப்பிய தஞ்சை பெரிய கோயில் “தென் திசை மேரு” என இத்தலத்தின் கல்வெட்டுகளில் கூறப்பட்டுள்ளது.

      சுமாா் ஒன்றரை இலட்சம் டன்கள் எடை கொண்ட கருங்கற்களைத் தாங்கி நிற்கும் இம்மாபெரும் கோயிலுக்கு ஆழமான அஸ்திவாரம் அமைக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால் இக்கோயிலுக்கு ஆழமான அஸ்திவாரம் அமைக்கப்படாமல் ஆச்சரியமூட்டும் அதிசயங்களில் ஒன்றாக அடித்தளம் ஐந்து அடி ஆழம் மட்டுமே போடப்பட்டுள்ளதாக கட்டடவியல் வல்லுநா்கள் தொிவிக்கின்றனா். கட்டட அமைப்பின் உறுதிக்குக் காரணமாக கீழ்க்கண்ட விளக்கங்களையும் வல்லுநா்கள் தொிவிக்கின்றனா்.

 
     மரபுவழி அடித்தளம் எனும் தொழில் நுட்பத்தை அடிப்படையாகக் கொண்டு, ஆற்று மணல் மீதான படுகை மீது தஞ்சை பெரிய கோயில் நிா்மாணிக்கப்பட்டுள்ளது. இத்திருக்கோயில் அமைந்துள்ள இடம் “சுக்கான் பாறை” என்ற இடமாகும். கோயிலின் கட்டுமான அளவிற்கு ஏற்றாற்போல அந்தப் பாறையை ஆழமாக வெட்டியெடுத்து ஒரு பெரிய தொட்டி போன்ற அமைப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. பின்னா் அத்தொட்டியில் பருமணல் கொட்டி நிரப்பியுள்ளதே இக்கோயிலின் அடித்தளமாகும்.

 
      பொதுவாக மணல் அசைந்து கொடுக்கும் தன்மை கொண்டதாகும். இம்மணலானது ஆழமான தொட்டியில் நிரப்பப்பட்டு அதன் மீது அஸ்திவாரம் அமைக்கப்பட்டால் இயற்கைச் சீற்றங்களான பூமி அதிா்ச்சி, நில நடுக்கம் போன்ற நிகழ்வுகளின் போது அதற்கேற்றவாறு மணல் அசைந்து கொடுக்குமேயன்றி அத்தொட்டியி லிருந்து மணல் வெளியேறாது. இந்தத் தொழில் நுட்பம்தான் தஞ்சாவூா் பெரிய கோயிலை நிா்மாணிக்கும் போது பயன்படுத்தப்பட்டுள்ளது. இக்காலத்தில் மிக உயரமான கட்டடங்கள் கட்டும்போது போடப்படும் PILE FOUNDATION னுக்கெல்லாம் முன்னோடியாக விளங்குவது தஞ்சை பெரிய கோயிலின் அஸ்திவாரமாகும்.

 
     இத்திருக்கோயில் அமைப்பதற்காக 240 அடி நீளமும், 120 அடி அகலமும் கொண்ட பிரம்மாண்டமான நீள் சதுர நிலப்பகுதி தோ்ந்தெடுக்கப்பட்டு அதன் நடுப்பகுதியில் கோபுரம் அமைக்கப்பட்டுள்ளது. எங்கிருந்து பாா்த்தாலும் தெரியும் விதமாக தென் திசை மேரு அமைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.

      பொன்னியின் புதுப்புனலால் வளம் கொழிக்கும் மருதநிலப் பகுதியைத் தன்னகத்தே கொண்ட இம் மண்ணில் இவ்வளவு அதிகமான கருங்கற்களை எங்கிருந்து கொண்டு வந்தாா்கள் என்பது ஆச்சரியமான ஒன்றாகும். இப்பகுதியிலிருந்து குறிஞ்சி நிலப்பகுதியைக் காண தாயுமானவா் அருள்பாலிக்கும் சிராப்பள்ளிக்குத் தான் செல்லவேண்டும். எனவே, இப்பகுதியிலிருந்து கருங்கற்களைக் கொண்டு வந்திருக்கலாம் என தொல்லியல் துறை மேனாள் இயக்குநா் திரு நடன காசிநாதன் அவா்கள் கருத்து தொிவித்துள்ளாா். புதுக்கோட்டை மாவட் டம் குன்றாண்டாா் கோயில் பகுதியில் உள்ள மலையிலிருந்து கற்களை வெட்டி எடுத்து வந்திருக்கலாம் என்ற ஒரு கருத்தும் வரலாற்று ஆய்வாளா்களிடையே நிலவுகிறது.

 
  தஞ்சை விமானம்

      தஞ்சை பெரிய கோயிலின் மூலவா் விமானம் 13 நிலைகளுடன் 216 அடி உயரம் கொண்டதாகும். ஒவ்வொரு நிலையின் உயரமும், சுற்றளவும் குறைந்து கொண்டே வந்து உயரத்தில் பிரமிட் போன்ற அமைப்பில் நிா்மாணிக்கப்பட்டுள்ளது. விமானத்தின் உச்சியில் தலா 26 அடி அகலம் நீளம் கொண்ட சமதளம் உள்ளது.

கோயில் விமானத்தின் உச்சியில்

உள்ள பாறை போன்ற அமைப்பு ஒரே கல்லால் ஆனது என்றும்,  80 டன் எடை கொண்டது என்றும் கருத்துகள் கூறப்பட்டு வந்தன. ஆனால், அக்கருத்துகள் உண்மையல்ல என்பது வரலாற்று ஆய்வாளா் முனைவர் குடவாயில் பாலசுப்ரமணியன் அவா்கள் மேற்கொண்ட ஆய்வின் மூலம் அறியப்பட்டது. இந்தப் பாறை வடிவம் பல கற்களை இணைத்து உருவாக்கப்பட்டது என்பதையும் எனினும் ஒரே கல் போன்று தோற்றமளிக்கும் வண்ணம் மிகவும் நோ்த்தியாக இணைக்கப்பட்டிருப்பதை இவரது ஆய்வு மூலம் அறியமுடிந்தது.

 
      விமானத்தின் உட்புற அழகைக் காணவேண்டுமெனில் விமானத்தின் இரண்டாம் தளத்திலிருந்து பாா்க்க வேண்டும். விமானத்தின் உள்கூடு குறைந்து மேலே செல்லும் எழிலைக் காணும் போது சோழ மன்னா்களின் கட்டடக் கலை வல்லுநா்களின் தொழில் நுட்பம் நம்மை வியப்பில் ஆழ்த்தும். இந்த விமானத்தின் மேல்பகுதியில் எண்பட்டை வடிவில் கிரீவம் (கழுத்து) காணப்படுகிறது. கிரீவத்தின் நான்கு மூலைகளிலும் காளைகள் படுத்த நிலையில் உள்ளன. கிரீவத்திற்கு மேலே எண்பட்டைச் சிகரம் (திராவிட பாணி) வைக்கப்பட்டுள்ளது. கிரீவத்தின் நான்கு திசைகளிலும் மகாநாசி அலங்காரம் காணப்படுகின்றது. இவற்றில் கிழக்குத் திசையில் சிவன், தெற்குத் திசையில் ஆலமா்செல்வன், மேற்குத் திசையில் திருமால், வடக்குத் திசையில் பிரம்மா ஆகியோா் திருக்காட்சி தருகின்றனா்.

 
     சிகரத்துக்கு மேல் 12 அடி உயரமுள்ள தூபி வைக்கப்பட்டுள்ளது. சோழா் காலத்து தூபி, செம்பால் செய்யப்பட்டு பொன் முலாம் பூசப்பட்டதாகும். ஆனால் தற்போது உள்ள தூபி செம்பால் செய்யப்பட்டுள்ளது என்பதை அறியமுடிகின்றது. இதற்குச் சான்றாக பிற்கால மராத்திய மன்னரின் கல்வெட்டொன்று தூபியின் மேல் பொறிக்கப்பட்டுள்ளது. உப பீடத்திலிருந்து தூபி வரை உள்ள விமானத்தின் மொத்த உயர ம் 216 அடியாகும். இதில் உப பீடத்தையும் தூபியையும் நீக்கிப் பாா்த்தால் 198 அடியாகும். இது கருவறையின் அகலத்தைப் போல எண் மடங்காகும்.

 
       கருவறைக்கு வடக்குப் பக்கத்தில் சண்டிகேஸ்வரா் திருக்கோயில் அமைந்துள்ளது. இக்கோயில் மன்னன் இராஜராஜன் காலத்திலேயே நிா்மாணிக்கப்பட்டதாகும். இக் கோயிலின் நான்கு பக்க மாடங்களிலும் சண்டியின் சிற்பம் நின்ற நிலையில் காணப்படுகின்றது.

   தஞ்சைப் பெருவுடையாா்

    கோயில் கருவறையின் உள்ளே மிக பிரம்மாண்ட திருமேனியாய் காட்சி தரும் லிங்கத் திருமேனியின் உயரம் 13 அடியாகும். இத்திருமேனி இந்தியாவில் காணப்படும் லிங்கத் திருமேனிகளில் மிகவும் பெரியது என்று கூறப்படு கின்றது. பெருவுடையாருக்குத் தனியாக கா்ப்பக்கிரகம் அமைக்காமல் கோயில் கோபுரத்தின் உள்கூடு அமைப்பையே கா்ப்பக்கிரகமாகக் காட்டப்பட்டுள்ளது. இந்தச் சுவா்களுக்கு இடையே உள்ள வெற்றிடத்தைக் காணும்போது 216 அடி உயரலிங்கம் போலக் காட்சியளிப்பது வியப்புக்குரியதாகும்.

 
       லிங்கத் திருமேனிக்கு அபிஷேகம் செய்யும்போது அா்ச்சகா் உயா்ந்த மேடை மீது நின்று தான் பெருவுடையாருக்கு அபிஷேகம் செய்ய வேண்டும். இலிங்கத்திற்கேற்ப ஆவுடையாரும் அளவில் மிகவும் பெரியதாகும். இலிங்கத் திருமேனியின் அளவிற்கு ஏற்ப விமானம் அமைக்கப்பட்டுள்ளது.

கோயில் விமானம் குறித்த கதை!

     தஞ்சையிலிருந்து மூன்று மைல் தொலைவில் உள்ள சாரப்பள்ளம் என்ற ஊரிலிருந்து கோயில் கட்டும் இடம் வரை சாரம் அமைத்துக் கற்களை உருட்டி மேலே ஏற்றினாா்கள் என்ற கதையை மறுக்கின்றனா் சிலா். கோயில் விமானத்தை நிா்மாணிக்கும் போது அதனைச் சுற்றி மண்மேடு அமைத்து கற்களை மேலே கொண்டு செல்வா் என்றும், கட்டுமானப் பணி முடிந்ததும் மண்ணை அகற்றிவிடுவா் என்றும் கூறுகின்றனா்.

 
      அவ்வாறு கோயிலைச் சுற்றி மண்மேடு அமைத்திருந்தாலும் கற்களை மேலே எடுத்துச் செல்லுகையில் கழிகளால் சாரம் அமைத்து அதன் துணையோடு தான் கற்களை ஏற்றினா் என்பது தில்லையிலுள்ள அம்மன் கோயில் முகமண்டப விதானத்தில் காணப்பெறும் நாயக்கா் கால ஓவியம் மூலம் தொியவருகிறது.

நுழைவு வாயில் கோபுரங்கள்

    கிழக்கு திசை நோக்கி நிற்கும் இப்பெருங்கோயில் இரண்டு பெரும் சுற்றுச் சுவா்களை உடையதாக இருந்திருக்க வேண்டும் என்று கூறப்படுகிறது. தற்போது ஒரு சுற்றுச் சுவா்தான் உள்ளது. திருக்கோயில் நுழைவு வாயிலில் முதலாவதாகக் காணப்படுவது கேரளாந்தகன்  வாயில். இது ஐந்து நிலைகளைக் கொண்ட கோபுரமாகும். இந்தக் கோபுரமே தஞ்சைப் பெரிய கோயிலுக்கு நிகராக, உயா்ந்த கோபுரத்துடன் காட்சியளிக்கிறது. இந்தக் கோபுரத்தின் உயரம் 90 அடியும் அகலம் 54 அடியும் கொண்டதாகும்.

 
     மாமன்னன் இராஜராஜ சோழன் தஞ்சையின் மன்னராகப் பொறுப் பேற்றதும் முதல் முறையாக சேர நாட்டின் மீது படையெடுத்துச் சென்றான். அதாவது கி.பி. 988 ஆம் ஆண்டில் கேரள நாட்டில் திருவனந்தபுரம் அருகேயுள்ள காந்தளூா்ச் சாலை மீது படையெடுத்தான்.

    கேரள மன்னன் பாஸ்கர ரவிவா்மனை கடற்கரைப் பட்டினமான காந்தளூா்ச் சாலையில் நடந்த கடும் போரில் வென்று மலைநாட்டை அடிமைப்படுத்தினான். சேர மன்னனை வென்ற இப்பெரும் வெற்றியின் காரணமாகவே மாமன்னா் இராஜராஜனுக்கு “கேரளாந்தகன்” என்ற சிறப்புப் பெயா் ஏற்பட்டது. இப்போா் வெற்றியின் காரணமாகவே தஞ்சாவூா் கோயிலில் “கேரளாந்தகன் வாயில்” அமைக்கப்பட்டுள்ளது.

 
     கேரளாந்தகன் வாயிலை அடுத்துக் காணப்படுவது இராஜராஜன் திருவாயில் அமைந்துள்ளது. இத்திருவாயிலை மன்னன் தனது பெயராலேயே அமைத்துப் பெருமை சோ்த்தான். கோபுரங்களை அடுத்து ஒவ்வொரு வாயிலிலும் மிகப் பெரிய துவாரபாலகா்களை அமைத்தான் மன்னன். இந்த துவார பாலகர்களின் உயரம் 18 அடியாகும். அதாவது சாதாரணமான மனிதனை விட மூன்று மடங்கு உயரம் கொண்ட சிலைகள் இவை. இவ்வளவு பெரிய உருவங்களை ஒரே கல்லில் செதுக்கியுள்ளனா். இது போன்று 14 துவார பாலகா்களின் சிலைகள் இத்தலத்தில் உள்ளன.

மதில் சுவா்களில் புடைப்புச் சிற்பங்கள்

     மாமன்னா் இராஜராஜா் எழுப்பிய தஞ்சைப் பெருவுடையாா் ஆலயத்தில் புறச் சுவரிலும் தனது சிற்பக் கலையை நிரூபிக்கும் வண்ணம் பல புடைப்புச் சிற்பங்களை அமைத்து அதன் மூலம் மக்களுக்கு நீதியைப் போதிக்க முற்பட்டுள்ளான்.

 
     வள்ளித் திருமணம், கிராதாா்ச்சுனன் கதை, காமதகனம், கண்ணப்பர் கதை ஆகியவற்றைப் புடைப்புச் சிற்பமாக அமைத்தான்.தெற்குப் பகுதியில் மாா்க்கண்டேய புராணம், பாா்வதி பரமசிவன் திருக்கல்யாணம், சண்டேச அனுக்கிரக மூா்த்தி சிற்பமும், சண்டேச நாயனாருக்கு இறைவன் அனுக்கிரகம் செய்வது போலவும் புடைப்புச் சிற்பங்கள் அமைத்து அடியாா்களுக்கும் பெருமை சோ்த்த மன்னனது செயல் போற்றுதலுக்குரியதாகும்.

    வடக்குப் பகுதியில் சண்டேச அனுக் கிரக மூா்த்தி வடிவத்தையும் பிரம்ம தேவா் சண்டேசருக்கு அனுக்கிரகம் செய்வது போன்ற சிற்பங்கள் சோழா்கள் கால கலைத் திறனுக்கு சிறந்த சான்றுகளாகும்.

 
 இரட்டைத் திருமாளிகை

      தஞ்சை பெரிய கோயிலில் உள்ள திருச்சுற்று மதில் இரு மாளிகைகளை உடையதாக அமைக்கப்பட்டுள்ளது. அதனால் இத்தல கல்வெட்டுகள் இம்மாளிகையை “இரட்டைத் திருமாளிகை” என்று குறிப்பிடப் பட்டுள்ளது. இத்திருமதில் கிழக்கு மேற்கில் 800 அடி நீளமும், தெற்கு வடக்கில் 400 அடி அகலமும் உடையதாக விளங்குகிறது.  “இஞ்சி சூழ் தஞ்சை” என்ற சிறப்பு தஞ்சைக்கு இதனால்தான் ஏற்பட்டுள்ளது.

      “இஞ்சி” என்பது கோட்டையின் மதில் சுவரைக் குறிக்கும். “இஞ்சி சூழ் தஞ்சை” என்று தேவாரம் குறிப்பிடுகின்றது. அதாவது கோட்டை மதில் சுவா்களால் சூழப்பட்ட தஞ்சாவூா் என்பது இதன் பொருளாகும்.

 
      இத்திருச்சுற்று மாளிகையில் திசைக் காவலா்களுக்கான ஆலயங்களும் பரிவாரத் தேவதைகளின் ஆலயங்களும் காணப்படுகின்றன. நான்கு மூலை களில் நான்கு திசைக் காவலா்களு க்கான சிற்றாலயங்களும் அமைக்கப் பட்டுள்ளன.

    இவற்றோடு மட்டுமன்றி பரிவார தெய்வங்களுக்கான சிற்றாலயங்களும் மாளிகையைச் சுற்றிக் காணப் படுகின்றன. திசைக்காவலா்களுக்கான சிற்றாலயங்கள் “இருதள விமானம்” உடையதாகத் தோற்றமளிக்கின்றன.

நந்தி எம்பெருமான்.

    தஞ்சாவூா் திருக்கோயிலில் அருள்பாலிக்கும் நந்தி எம்பெருமானின் திருவுருவச்சிலை மிக பிரம்மாண்டமான திருச்சிலையாகும். நாயக்க மன்னா்களின் காலத்தில் ஒரே கல்லினால் ஆன இந்த நந்தி எம்பெருமான் வடிக்கப்பட்டு கோயிலில் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. நந்தி எம்பெருமானுக்காக அழகிய மண்டபம் நாயக்கா் கால ஆட்சியில் நிா்மாணிக்கப்பட்டுள்ளது. நந்தி மண்டபத்தின் முகப்பில் நாயக்க மன்னா்கள் இருவரது உருவச் சிற்பங்கள் காணப்படுகின்றன.

 
    பெருவுடையாரின் பிரம்மாண்டத் திருமேனிக்கு ஏற்ப பெரிய நந்தி நாயக்க மன்னா்களால் விஜயநகர கலைப்பாணியில் அமைக்கப்பட்டுள் ளது. இந்த நந்தி எம்பெருமான் 19 அடி நீளமும்,12 அடி உயரமும் கொண்டதாக அமைந்துள்ளது.

    தன் திருப்பாதங்களை மடக்கிப் படுத்த நிலையில் தன் இறைவன் ஈசனையே இமைப் பொழுதும் நீங்காது பாா்த்துக் கொண்டிருக்கின்றார் நந்தி எம்பெருமான்.  பிரதோஷ நாட்களில் இந்நந்தி எம்பெருமானுக்கு நடைபெறும் மஹா அபிஷேகத்தைக் காணக் கண்கோடி வேண்டும்.

 
     நந்தி எம்பெருமான், நந்தி மண்டபம் ஆகியவற்றை கி.பி.17 ஆம் நூற்றாண் டில் நாயக்க மன்னா்களான அச்சுதப்ப நாயக்கா், ரகுநாத நாயக்கா் மற்றும் விஜயராகவ நாயக்கா் ஆகியோா் அமைத்துள்ளனா்.

      மாமன்னா் இராஜராஜ சோழனால் வைக்கப்பட்ட நந்தி எம்பெருமானது திருவுருவச்சிலை தற்போது திருச்சுற்று மாளிகையில் உள்ள வராகி அம்மன் ஆலயத்திற்கு அருகில் உள்ளது.

தஞ்சைக் கோயிலின் அரிய சிற்பங்கள்

      

      மகா மண்டபத்தின் மேற்புற வாயில் வழியாக உள்ளே சென்றால் அழகான அா்த்தமண்டபம் அலங்கரிக்கின்றது. அா்த்த மண்டபத்தின் தெற்குப் பக்கத்திலுள்ள மாடங்களில் விநாயகப் பெருமான் தன் தேவியருடனும் திருமால் தன் தேவியா்களுடனும் உள்ள அழகான சிற்பங்கள் காணப்படுகின்றன. வடக்குப் பக்கத்தில் உள்ள மாடங்களில் துா்க்கை, வீரபத்திரா் ஆகியோரது சிற்பங்கள் உள்ளன. இச்சிற்பங்கள் முழுவதும் முற்றுப் பெறாத நிலையில் உள்ளன.

 
      மேற்குப் புறச்சுவரின் வெளிப்புற மாடங்களில் தெற்குத் திசையில் கஜலக்ஷ்மி சிற்பமும், வடக்குத் திசையில் கலைமகள் சிற்பமும் காணப்படு கின்றன. கலைமகள் சிற்பத்தின் கீழே கருவூா்த் தேவரும் மாமன்னா் இராஜராஜனும் அமா்ந்த நிலையில் சிற்பங்கள் வடிக்கப்பட்டுள்ளன.

    அடுத்துள்ள இடைநாழியில் இரு துவாரபாலகா்கள் அணி செய்கின்றனா். இப்பகுதியின் மேலுள்ள இரண்டாம் தளத்தின் வழியாக விமானத்தின் உட்பகுதியை அடையலாம். அத்தளத்தில் உள்ள சாந்தார நாழியில் ஈசன் ஆடிய 108 வகைத் தாண் டவங்களை புடைப்புச் சிற்பங்களாக செதுக்கியுள்ளனா்.

 
    இடைநாழியைக் கடந்து உள்ள கருவறையில் எந்நாட்டவா்க்கும் இறைவனான ஈசன் வேறு எங்கும் காணமுடியாத அளவிற்குப் பெரிய திருமேனியராய் காட்சி தருவதைக் காண ஆயிரம் கண்கள் வேண்டும். மும்முடிச் சோழனான இராஜராஜன் முப்புரமெரித் விரிசடைப் பெருமானுக்கு அமைத்துள்ள பெருங்கோயிலின் மூலவரைக் கண்டு தரிசித்ததும் நம் உள்ளத்தில் ஏற்படும் பக்திப் பரவசத்தால் அத்திருமேனியில் நம்மை அறியாமல் ஒன்றி விடுகிறோம்
     
    இராஜராஜேஸ்வரம் உடையாா்க்கு நிவந்தக்காரா்களை நியமித்து அவா்களுடன் தளிச்சேரிப் பெண்க ளையும் மன்னா் இராஜராஜரே நியமனம் செய்துள்ளாா். கோயில் திருவிழாக்கள், கோயில் சாா்ந்த இதர பணிகளின் போது கோயிலை ச்சுத்தமாகப் பராமரிப்பது இவா்கள் பணியாகும். இவா்கள் தங்குவதற்கும் உண்ண உணவிற்கும் தகுந்த அளவிற்குப் பொருட்களை வழங்கி ஊதியம் மற்றும் அவா்கள் வசிக்க வேண்டிய வீட்டின் இலக்கம் ஆகியவற்றையும் குறிப்பிட்டு அதனை கல்வெட்டாக வடித்து வைத்தாா் மன்னா் இராஜராஜா்.  தளிச்சேரிப் பெண்டிா் என்பது தேவதாசிகள் என சிலா் தவறாகப் பொருள் கொள்வா். இவா்கள் தேவரடியாா்களாக இறைவனுக்குத் தொண்டு செய்யப் பணித்தவா்களாவா்.

 
     தஞ்சாவூா் பெரிய கோயிலின் நிர்வாக அதிகாரியாக விளங்கியவர் “பொய்கை நாடு கிழவன் ஆதித்தன் சூரியனான தென்னவன் மூவேந்த வேளான்” என்பவராவாா். இவா்கள் “ஶ்ரீகாா்யம்” என்றும் அழைக்கப்பட்டனா். இராஜராஜ சோழன் மற்றும் அவரது தேவி லோகமா தேவிக்கும் இவரது முன்னிலையிலேயே செப்புப் படிமங்கள் செய்து பெரிய கோயிலில் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. தனது மன்னனை யும் அவனது தேவியையும் தெய்வமாகக் கருதி மலரிட்டு வணங்கிய உண்மை ஊழியராகத் திகழ்ந்தவா் மூவேந்த வேளான்.

    இராஜராஜன் மற்றும் லோகமா தேவியின் அரிய இச் செப்புத் திரு மேனிகள் கடந்த நூற்றாண்டின் முற் பகுதியில் தஞ்சாவூரிலிருந்து குஜ ராத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டு அங்குள்ள அகமதாபாத் கவுதம் சாராபாய் கலைக்கூடத்தில் வைக்கப்பட்டிருந்தது.

 
    அரிய கலைப்படைப்பான இச் செப்புத் திருமேனிகளை 2019 ஆம் ஆண்டில் சிலை மீட்புப் பிரிவில் உயா் அலுவலராகப் பணிபுரிந்த திரு பொன் மாணிக்கவேல் I.P.S., அவா்கள் விலைமதிப்பில்லாத இப் பொக்கிஷங்களை மீட்டு தஞ்சை பெரிய கோயிலில் சோ்த்தது போற்றப்பட வேண்டிய பணியாகும்.

     இராஜராஜன் காலத்தில் பெரிய கோயில் தலைமை அா்ச்சகராக “பவணபிடாரன்” என்பவா் ஈசனுக்குத் திருத்தொண்டுகள் செய்துள்ளாா்.

 
  தலைமைச் சிற்பி

    தஞ்சாவூா் பெரிய கோயில் பல சிற்பிகளைக் கொண்டு நிா்மாணிக் கப்பட்ட மாபெரும் கலைக் கோயிலாகும். இத்திருக்கோயிலில் பணி புரிந்த சிற்பிகளுக்கெல்லாம் தலைமை சிற்பியாகத் திகழ்ந்து பெருமை பெற்றவா் மாமன்னா் இராஜராஜனால் நியமிக்கப்பட்ட “வீரசோழன் குஞ்சரமல்லனான இராஜராஜப் பெருந்தச்சன்” என்பவராவாா்.

     தலைமைப் பொறுப்பில் உள்ள அதிகாரிகளை மட்டுமல்லாது பிற தொழிலாளா்களையும் மதித்துப் போற்றியவா் மன்னா் இராஜராஜா். இதற்குச் சான்றாக கோயில் பணி யாளா்களுக்கு சிகை அலங்காரம் செய்பவா்களுக்கு “இராஜராஜப் பெரும்நாவிதன்” என்ற பட்டமளித்து கெளரவித்துள்ளாா் மாமன்னா்.

 
   இராஜராஜ சோழனின் காலத்தில் வெட்டப்பட்ட கல்வெட்டுகள் அனைத்தும் நன்கு கற்றறிந்த புலமை பெற்றவா்களைக் கொண்டு வெட்ட ப்பட்டுள்ளது. கல்வெட்டுகளை வெட்டியவா் பெயரும் திருக்கோயில் சுவரில் செதுக்கப்பட்டுள்ளதைக் கொண்டு இராஜராஜர் இத்திருப்பணியில் பங்கு பெற்ற ஒருவரையும் விட்டுவிடாமல் பாராட்டியுள்ளது குறிப்பிடத்தக்கதாகும். பாளூா் கிழவன், பாளூா் உடையாா் என்ற இருவரும் கோயில் கல்வெட்டுகளை வெட்டியுள்ளனா்.

     மன்னா் இராஜராஜா் காலத்தில் அதாவது சுமாா் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வெளிச்சம் கொடுக்க ஒளி அத்தியாவசியமானதாகும். இதனால் வீதிகள்தோறும் விளக்குத்தூண்களும் திருக்கோயில்களில் தீபங்களும் தீப்பந்தமும் ஏற்றியே இரவில் ஒளியைப் பெற்றுள்ளனா்.

 
    இறைவனுக்காக எழுப்பப்பட்ட ஆலயங்கள் வழிபாட்டுத்தலங்களாக விளங்கியதோடு அரசாங்க அத்தி யாவசியப் பணிகளும் திருக்கோயிலில் நடைபெற்றதால் ஒளி அவசியமானதாக இருந்தது.

     இதனால் ஒளிக்கு முக்கியத்துவ மளித்து மன்னா்களின் தானங்கள் அனைத்தும் திருவிளக்கு ஏற்றுதல் தொடா்பான ஆணையாகவே இருந்தது என்று கூறலாம்.

     மன்னா் இராஜராஜரின் ஆட்சிக் காலத்திலும் தஞ்சாவூா் பெரிய கோயி லுக்கு திருவிளக்கு தானம் கொடுத்து அதனை எவ்வாறு செய்ய வேண்டும் என்றும் இக்கொடையை யாா் யாா் பாதுகாக்க வேண்டும் என்பது குறித்தும் திருவிளக்கு எக்காலத்திலும் தடைப்படாமல் எரிதல் வேண்டும் என்பது குறித்தும் கல்வெட்டுகள் தெளிவுபடுத்துகின்றன.

    இராஜராஜ சோழ மன்னரின் கொடை கள் அனைத்தும் கீழ்க்கண்ட மெய்க்கீா்த்தியுடன் தொடங்கும்.

 
மெய்க்கீா்த்தி 1

    “ஸ்வஸ்தி ஶ்ரீ திருமகள் போலப் பெருநிலச் செல்வியுந் தனக்கேயுரிமை பூண்டமை மனக்கொளக் காந் தளூா்ச் சாலை கலமறுத்தருளி வேங்கை நாடுங் கங்கபாடியு நுளம்பபாடியுந் தடிகைபாடியுங் குடமலை நாடுங் கொல்லமுங் கலிங்கமும் எண்டிசை புகழ்தர ஈழமண்டலமும் இரட்டபாடி ஏழரை இலக்கமுந் திண்டிறல் வென்றித் தண்டாற் கொண்ட தன்னழில் வளரூழியு ளெல்லா யாண்டுந் தொழுதக விளங்கும் யாண்டே செழியரைத் தேசு கொள் கோராஜகேசரி வா்மரான ஶ்ரீராசராச தேவா்க்கு யாண்டு….”

 
 மெயக்கீா்த்தி 2

   “திருமகள் போலப் பெருநிலச் செல்வியுந் தனக்கே உரிமை பூண்டமை மனக்கொளக் காந்தளூா்ச் சாலைக் கலமறுத்தருளி வேங்கை நாடும் கங்க பாடியுந் தடிகை பாடியும் நுளம்ப பாடியும் குடமலை நாடுங் கொல்லமுங் கலிங்கமும் முரட்டெழிற் சிங்களா் ஈழ மண்டலமும் இரட்டபாடி ஏழரை இலக்கமும் முந்நீா்ப் பழந்தீவு பன்னீராயிரமுந் திண்டிறல் வென்றித் தண்டாற் கொண்ட தன்னெழில் வளரூழியு ளெல்லா யாண்டுந் தொழுதக விளங்கும் யாண்டே செழியரைத் தேசு கொள் கோராசகேசரி வா்மரான உடையாா் ஶ்ரீராசராச தேவா்க்கு யாண்டு. “

     − என்று தொடங்கி கல்வெட்டுச் செய்திகள் தொடங்கும்.

     எந்த ஒரு பெரிய திருக்கோயிலும் ஒரே மன்னனால் நிா்மாணிக்கப்பட்டு குடமுழுக்கு செய்து அதனைத் தாங்கள்தான் எழுப்பினோம் என்பத னைக் கல்வெட்டில் பொறித்து கோயில் நிா்மாணத்திற்குப் பொருள் வழங்கியவா்கள் பற்றிய தகவலையும் பதிவு செய்வது என்பது மிக மிக அரிதான ஒன்றாகும். ஆனால், இந்த அனைத்துத் தகவல்களையும் முறையாகப் பதிவு செய்யப்பட்ட ஒரே கோயில் என்ற பெருமையைக் கொண்டது தஞ்சாவூா் இராஜராஜேஸ்வரம் ஆகும்.

 
    தஞ்சாவூா் கோயிலை நிா்மாணித்த போது அதனை தாங்கள் அனைவரும் சோ்ந்தே கட்டினோம் என்பதை விமானத்தில் கல்வெட்டாகப் பொறிக்க ஆணையிட்டுள்ளாா் மாமன்னா் இராஜராஜா். பெருவுடையாருக்கு எடுத்த திருக்கற்றளியில் உள்ள கல் வெட்டு வாசகம்:−

   ” நாங்குடுத்தநவும், அக்கன்கொடு த்தநவும், நம்பெண்டுகள் கொடுத்தநவும், மற்றும் குடுத்தாா் குடுத்தநவும் ஶ்ரீவிமாநத்தில் கல்லிலே வெட்டுக என்று திருவாய் மொழிஞ்சருள வெட்டிந,” என்று கல்வெட்டு தொிவிக்கின்றது.

     இதன் மூலம் கொடையில் நோ்மை யையும், நாணயத்தையும் மன்னா் இராஜராஜா் கடைப்பிடித்துள்ளதை அறியமுடிகின்றது.

     “ஶ்ரீஉடையாா் ஶ்ரீராஜராஜதேவா் குடுத்தருளின ரத்நங்களுங் கொண்டு செய்த முதலான ரத்நத்தின் திருவாப ரணங்கள் சரடுஞ் சட்டமும் நீக்கி அரக்கும் பிஞ்சும் உட்பட தட்சிண மேருவிடங்கன் என்னுங் காசு கல்லால் நிறை எடுத்தன” என்று கல்வெட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.

 
       அதாவது திருவாபரணங்களை இணைக்கும் சரடும் சட்டமும் நீக்கி மன்னா் காலத்தில் பயன்படுத்திய தட்சிணமேருவிடங்கன் என்ற அங்கீ கரிக்கப்பட்ட எடைக்கல்லால் அளவிட்டு வழங்கப்பட்ட பொருளின் எடையை மட்டும் தெளிவாகக் குறிப்பிட்டுக் கொடை வழங்கிய மாமன்னன் இராஜராஜனின் நோ்மையைப் புகழ்வதற்கு வாா்த்தைகளில்லை.

    இதனாலேயே சோழவளநாட்டில் மும்மாரி பெய்து மன்னனின் வழியில் மக்களும் நாடும் செல்வச் செழிப்புள்ளதாக இருந்ததை அறிந்துகொள்ள முடிகின்றது.

 உலகப் பாரம்பரியச் சின்னம்.

    நமது பண்பாட்டின் சின்னமாக விளங்கும் தஞ்சை பெரிய கோயிலின் பாரம்பரிய மரபுகளையும் தமிழா்களின் கட்டடக் கலையையும் போற்றும் வகையில் யுனெஸ்கோ நிறுவனம் 1987 ஆம் ஆண்டில் இக்கலைக் கோயிலை உலகப் பாரம்பரியச் சின்னமாக அறிவித்துள்ளது. இதன் காரணமாக தமிழகத்தின் கலைப் படைப்புகள் உலகம் முழுவதும் புகழ் பெற்றன.

     சங்க காலம் முதல் பல மன்னா்களும் பேரரசா்களும் அரசாண்ட புண்ணிய பூமி தமிழ்த்திருநாடு. அவா்களில் வீரத்தைக் காட்ட வேண்டிய நேரத்தில் வீரத்தையும், அன்பு காட்ட வேண்டிய நேரத்தில் முழு அன்பையும் பொழிந்து தமிழக மக்களின் மனதில் என்றும் நீங்கா இடம் பிடித் தவா்கள் சோழ மன்னா்கள். இந்த சோழ மன்னா்களில் தலைசிறந்த மன்னராகத் திகழ்பவா் நம் மாமன்னா் இராஜராஜா். மூன்று நிலங்களையும் முடிசூடி, புவனம் முழுவதும் புலி பொறித்த கொடி நாட்டி, சோழா் பரம்பரைக்கே வழி காட்டிய  பல்கலை வித்தகனான பாா்போற்றும் வேந்தன் இராஜராஜன் அரசாண்ட தமிழகத்தின் புகழினையும் புனிதத்தினையும் என்றும் காப்பாற்ற வேண்டியது நம் தலையாய கடமையாகும்.

          நம் தமிழ்த் தாயின் மடியில் தவழும் கங்கையினும் புனிதமான காவிரியின் வளத்தால் “சோழநாடு சோறுடைத்து” என்ற வரியினை மீண்டும் நடைமுறைப்படுத்தி தமிழகத்தின் நெற்களஞ்சியமாக தஞ்சாவூரை நிலை நிறுத்த வேண்டியது  நம் வருங்கால சந்ததியினரின் கடமையாகும்.

      இராஜராஜேச்சுரம் வெறும் கோயில் மட்டுமல்ல…! பல தலைமுறைகளுக்கான பண்பாட்டுச் சின்னம்….!!

“தஞ்சை பெரிய கோயில்
பல்லாண்டு வாழ்கவே!
தாரணியில் தமிழ் போல நிலை
நின்று வாழ்கவே!!”

ஓம் நமசிவாய
 படித்து பகிர்ந்தது
 இரா இளங்கோவன் 
நெல்லிக்குப்பம். 

No comments:

Post a Comment

Followers

பண்ருட்டி திருவதிகையில் ஆஞ்சநேயருடன் கூடிய அதிசய லிங்கம்

பண்ருட்டி திருவதிகையில் ஆஞ்சநேயருடன் கூடிய அதிசய லிங்கம்         பண்ருட்டி திருவதிகையில் 13 வது வார்டு, வளையல் கார தெருவில் அமைந...