Saturday, May 31, 2025

வைகாசி வளர்பிறை சஷ்டி சிறப்பு.

வைகாசி வளர்பிறை சஷ்டி
*தமிழ் மாதங்களில் கார்த்திகை மாதத்திற்கு அடுத்தபடியாக முருகப் பெருமானை விரதம் இருந்து வழிபட உகந்த மாதம் வைகாசி மாதமாகும்*. *இந்த மாதத்தில் வரும் சஷ்டி திதியும், விசாகம் நட்சத்திரமும் முருகனின் அருளை பெறுவதற்கு ஏற்ற நாட்களாகும்*. 

*அனைத்து மாதங்களிலும் வரும் சஷ்டி திதி, முருகனை வழிபடுவதற்கு சிறந்த நாள் என்றாலும் முருகப் பெருமானுக்குரிய வைகாசி மாதத்தில் வரும் சஷ்டி திதி, அதிலும் வளர்பிறை சஷ்டி திதி வாழ்க்கையையே மாற்றும் சக்தி படைத்ததாகும்*.

*வைகாசி மாதம் வளர்பிறை சஷ்டியில் முருகப் பெருமானுக்கு சஷ்டி விரதத்துடன், ஆரண்ய கௌரி விரதமும் கடைபிடிப்பார்கள்*. *இதை ஆரண்ய சஷ்டி விரதம் என்றும் சொல்வார்கள். அம்பிகையையும், முருகனையும் ஒரே நாளில் விரதம் இருந்து வழிபடுவதால் வைகாசி மாதத்தில் வரும் வளர்பிறை சஷ்டி மிகவும் விசேஷமான நாளாக கருதப்படுகிறது*.

*அமாவாசை மற்றும் பெளர்ணமிக்கு பிறகு ஆறாவது திதியாக வருவது சஷ்டி திதியாகும். இதனால் இது ஆறுமுகனை வழிபட ஏற்ற திதி ஆயிற்று. *அந்த வகையில் வைகாசி மாத வளர்பிறை சஷ்டியானது நாளை ஜூன் 01, ஞாயிற்றுக்கிழமை அன்று வருகிறது*. *இந்த நன்னாளில் வெற்றிக் குமரனை தவறாமல் வழிபடுங்கள்*.. 

ஆரண்ய கௌரி விரதம்:

அம்பிகையின் தெய்வீக சக்தி அனைத்திலும் நிறைந்திருக்கிறது. காடு, மலை, மரங்கள், நதி என அனைத்து இயற்கை வடிவங்களையும் தெய்வீக சக்தியின் வெளிப்பாடாக எண்ணிப் பூஜிப்பது நம் பண்பாடு.

முருகனது தேவியாகிய தெய்வானையின் அம்சமாக தோன்றியவள் சஷ்டி தேவி. குழந்தைகள் நலம் காக்கும் தாயாக திகழும் சஷ்டி தேவியை இந்நாளில் வழிபடுவது மிகவும் சிறப்பு.

சஷ்டி தேவியை பூஜிப்பதே "ஆரண்ய கெளரி விரதம் அல்லது வன கெளரி விரதம் என்பர்.

இந்த விரதத்தை கடைபிடிப்பவர்களுக்கு விரைவில் திருமணம் நடைபெறும். வாழையடி வாழையாகக் குலம் தழைக்கும். குழந்தை செல்வம்கிட்டும் என்பது ஐதீகம்.

கையில் குழந்தைகளுடன் காட்சி தரும் இந்த தேவியை வழிபட்டால் குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பது நம்பிக்கை. சஷ்டியுடன், ஆரண்ய கெளரி விரதமும் இணைந்து வருவதால் இந்த நாளில் விரதம் இருக்க முடியாவிட்டாலும் மாலையில் வீட்டில் விளக்கேற்றி வழிபடுபவர்களுக்கு நிச்சயம் குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பது நம்பிக்கை.

விரதம் இருக்கும் முறை :

சஷ்டி தினத்தன்று அதிகாலையிலேயே எழுந்து குளித்து விட்டு, பூஜையறையில் வள்ளி, தெய்வானையுடன் இருக்கும் முருகன் படத்திற்கு வாசம் மிக்க மலர்களை சாற்றி, தீபங்கள் ஏற்றி, ஏதேனும் இனிப்புகளை நைவேத்தியம் செய்து முருகனுக்குரிய கந்த சஷ்டி கவசம், சண்முக கவசம் போன்ற மந்திர பாடல்களை துதித்து அவரை வணங்க வேண்டும்.

முருகனுக்கு பூஜை செய்து விரதத்தை தொடங்கி அருகில் உள்ள முருகன் ஆலயத்திற்கு சென்று வரலாம். இவ்விரத்தத்தை முழு நேரமும் இருக்க முடியாதவர்கள் பால் மற்றும் பழம் போன்றவற்றை சாப்பிடலாம்.

வேலைக்கு செல்பவர்கள் காலையில் பூஜையை முடித்து விளக்கை மலை ஏற்றி விட்டு, பின்னர் வேலைக்கு தாராளமாக செல்லலாம். மீண்டும் மாலையில் இதே போல் பூஜை செய்து விரதத்தை முடித்து கொள்ளலாம். வீட்டிலேயே இருப்பவர்கள் விரதம் முடியும் வரை முருகனுக்கு விளக்கு ஏற்றி வைப்பது மிகவும் நல்லது.

சஷ்டி அன்று மாலையில் முருகப்பெருமானுக்கு சர்க்கரைப் பொங்கல் அல்லது எலுமிச்சை சாதம் நைவேத்தியம் செய்து, அக்கம் பக்கத்தாருக்கு வழங்க, வீட்டின் திருஷ்டியெல்லாம் கழிந்துவிடும். கடன் தொல்லைகள் குறையும் என்பது உறுதி.

உண்ணாவிரதத்துடன், மௌனவிரதம் சேர்த்து அனுஷ்டிப்பதால் பல நன்மைகள் ஏற்படும். மாலையில் அருகில் உள்ள கோயிலுக்கு சென்று முருகப்பெருமானை வணங்க வேண்டும். மேலும் நவகிரக சன்னிதியில் இருக்கும் சுக்கிர பகவானுக்கு தீபங்கள் ஏற்றி வணங்க வேண்டும்.

பின்பு வீடு திரும்பியதும் பூஜையறைக்கு சென்று, முருகப்பெருமானை வணங்கி உங்களின் சஷ்டி விரதத்தை முடித்து அவருக்கு வைக்கப்பட்ட நைவேத்திய பிரசாதங்களை சாப்பிட்டு விரதத்தை முடிக்கலாம்.

சஷ்டி விரதத்தின் பலன்கள் :

திருமணம் ஆகாமல் இருப்பவர்களுக்கு விரைவில் திருமணம் நடைபெறும்.

ஈடுபடும் காரியங்கள் அனைத்திலும் சிறப்பான வெற்றிகள் உண்டாகும்.

குழந்தை இல்லாதவர்களுக்கு விரைவில் குழந்தை பேறு கிடைக்கும்.

பொருளாதாரத்தில் இருந்து வந்த தேக்க நிலை நீங்கும்.

தொழில், வியாபாரங்களில் லாபம் பெருகும்.

எந்த ஒரு பிரச்சனையையும் தைரியமாக எதிர்கொள்ளும் மனோ பலம் கிடைக்கும்.

Friday, May 30, 2025

உலகத்திலேயே இரண்டாவது பெரிய சிவன் சிலை முருதேஸ்வர் கோயில்.



 🌹முருதேஸ்வர் கோயில் 
உலகத்திலேயே இரண்டாவது பெரிய சிவன் சிலையை தன்னகத்தே கொண்ட வரலாற்று சிறப்பு வாய்ந்த முருதேஸ்வர் நகரம் கர்நாடகாவின் மேற்கு கடற்கரையோரம் அமைந்துள்ளது. சிறு குன்றின் மீது எழில் கொஞ்சும் பச்சை புற்கள் சூழ அமைந்திருக்கிறது முருதேஸ்வர் ஆலயம். அரபிக்கடல் பிரம்மாண்டமாய் பின்புறத்தில் காட்சியளிக்க, தன் வாகனமாம் நந்தி முன்புறத்தில் நிற்க, ஒட்டுமொத்த முருதேஸ்வர் நகரத்தையே மறைத்துக்கொண்டு கம்பீரமாய் அமர்ந்திருக்கிறார் சிவபெருமான். 

முருதேஸ்வர் ஆலயமும், அதன் ராஜகோபுரமும் கண்டுக கிரி குன்றில் அமைந்திருக்கிறது. மூன்று புறங்களிலும் அரபிக் கடல் சூழ்ந்திருக்க அழகிய தீபகற்பமாய் திகழ்கிறது முருதேஸ்வர் ஆலயம். இந்தக் கோயில் இருக்கும் இடத்தில்தான் முன்பொரு முறை பிராமண சிறுவன் வடிவில் இருந்த விநாயகர், ராவணனுக்காக வைத்திருந்த ஆத்ம லிங்கத்தை கீழே தவறவிட்டுவிட்டதாக புராணம் கூறுகிறது. இங்கு வரும் பயணிகள் 123 அடி உயர பிரம்மாண்ட சிவன் சிலையுடன், சிவலிங்கத்தையும் காணலாம். இந்தக் கோயிலை சுற்றிலும் நிறைய கான்க்ரீட் கல்வெட்டுக்கள் இடம்பெற்றிருக்கின்றன. அதுமட்டுமல்லாமல் இந்தக் கோயிலின் ராஜகோபுரம் உலகிலேயே உயரமான கோபுரங்களில் ஒன்றாக கருதப்படுகிறது. இச்சிறப்புகளை காட்டிலும் கருங்கற்களால் கட்டப்பட்ட இந்த கோயில் தென்னிந்திய கட்டிடக் கலையின் உன்னத சாட்சியாக இன்றும் காட்சியளித்துக் கொண்டிருக்கிறது.

ஓம் நமசிவாய 
படித்து பகிர்ந்தது
 இரா இளங்கோவன்
 நெல்லிக்குப்பம். 

குளத்து நீரில் விளக்கு ஏற்றிய சிவனடியார் நமிநந்தியடிகள்.

*63 நாயன்மார்களில் ஒருவரான , சிவபெருமானுக்கு விளக்கு ஏற்ற நெய் கிடைக்காமல் போக,
குளத்து நீரில் விளக்கு ஏற்றி சிவத்தொண்டுகள் பல புரிந்த நாயனாரான
#நமிநந்தியடிகள்_நாயனார் குருபூஜை: (#வைகாசி_பூசம்)
* 63 நாயன்மார்களின் வரலாற்றை ஆராய்ந்து தொகுத்து பெரியபுராணம் என்ற திருத்தொண்டர் புராணத்தை சைவர்களுக்கு வழங்கிய #தெய்வச்சேக்கிழார்_பெருமான் குருபூஜை:
(#வைகாசி_பூசம்)

1.#நமிநந்தியடிகள்_நாயனார்:

அறுபத்து மூன்று நாயன்மார்களும் சிவபெருமானுக்கு ஒவ்வொரு வகையில் ஒப்பற்ற தொண்டு செய்து வந்தனர். நமிநந்தியடிகள் நாயனார் என்பவர் சைவ சமயத்தவர்களால் பெரிதும் மதிக்கப்படும் அறுபத்து மூன்று நாயன்மார்களில் ஒருவர் ஆவார். இவர் வேத வேள்விகளால் சிவபெருமானை ஆராதித்து, இரவும் பகலும் சிவ சிந்தனையோடு திகழ்ந்தவர். தூய திருநீறு அணிவதே மெய்ப்பொருள் என்ற எண்ணத்துடன் வாழ்ந்தவர். நமிநந்தியடிகள் நாயனார் இறைவனுக்கு விளக்கேற்ற பெரும் போராட்டமே நடத்தினார். நமிநந்தியடிகள் நாயனார் நெய்க்குப் பதிலாகக் குளத்துத் தண்ணீரைக் கொண்டு கோவில் முழுவதும் விளக்கு ஏற்றி, அதில் அற்புதம் செய்து இறைவன் அருள் பெற்றார்.
சிவபெருமானால் ‘உலக மக்கள் அனைவரும் சமமே’ என்று அறிவுறுத்தப்பட்டவர் நமிநத்தியடிகள்.
சிவனடியார்களுக்கு நியதியாக வேண்டுவன எல்லாவற்றையும் செய்து கொண்டிருந்தமையால், 'தொண்டர்களுக்கு ஆணிப்பொன்' என்று, திருநாவுக்கரசு நாயனாரால் தேவாரப்பதிகத்திலே சிறப்பித்துப் பாடப்பட்டார்.
“அருநம்பி நமிநந்தி அடியார்க்கும் அடியேன்” என்கிறது திருத்தொண்டத் தொகை.

#ஏமப்பேரூர் என்ற ஸ்தலத்தில் அவதரித்த நமிநந்தியடிகள் நாயனார்:

சோழ வளநாட்டில் திருவாரூருக்கு அண்மையில் உள்ள ஏமப்பேரூர்(தற்போது திருநெய்ப்பேர் என்று அழைக்கப்படுகிறது)
என்ற ஸ்தலத்தில் அந்தணர் குலத்திலே, அவதரித்தவர் நமிநந்தியடிகள் நாயனார். அந்தணர் குலம் தழைத்தோங்க அவதரித்த இந்த நாயனார், சிவபெருமானிடம் மாறாத பக்தியும் சிவகைங்கரியத்தில் இடைவிடாத ஈடுபாடும் உடையவராக விளங்கினார். வேத வேள்விகளால் சிவபெருமானை ஆராதித்து, இரவும் பகலும் சிவ சிந்தனையோடு திகழ்ந்தவர். இவர் சிறுவயதிலிருந்து திருவாரூர் பெரிய கோயிலில் உள்ள ஆரூர் சிவபெருமானை வழிபட்டு வந்தார். (இங்கு மூலவர் வான்மீகநாதர், புற்றிடங்கொண்டார், தியாகராஜன் ஆகிய திருப்பெயர்களைக் கொண்டுள்ளார்)

#குளத்து நீரால் விளக்கு ஏற்றுதல்:

நமிநந்தியடிகள் நாயனார் தினமும் தன்னுடைய வீட்டில் சிவ வழிபாட்டினை முடித்து விட்டு, அருகிலிருந்த திருவாரூருக்குப் போய் வன்மீகநாதரை வணங்கி, பகலில் சிவாலயத்தில் தொண்டுகள் செய்து, இரவு வீடு திரும்பி சிவவழிபாடு மேற்கொண்டு உறங்குவதை வழக்கமாகக் கொண்டிருந்தார்.
இக்கோயிலுக்குள்ளேயே அரநெறி என்ற தனிக்கோயில் உண்டு. இங்குள்ள சிவன் அரநெறியப்பர் என அழைக்கப்படுகிறார். இக்கோயில் திருவாரூர்க் கோயிலுக்குள்ளேயே தெற்குச் சுற்றில் உள்ளது; இக்கோயில் அசலேச்சரம் என்று வழங்கப்படுகிறது. இவரையும் நமிநந்தியடிகள் வழிபாடு செய்து வந்தார். அங்கு அழகாக விளக்குகள் ஏற்றி, அனைவரும் வந்து வழிபட வகை செய்ய வேண்டும் என்று விரும்பினார்.
ஒருமுறை அரநெறியப்பர் கோயிலுக்கு மாலை வேளையில் வழிபாடு செய்ய வந்தார். அப்போது நமிநந்தியடிகள் நாயனார் அரநெறியப்பருக்கு திருவிளக்குகள் ஏற்ற எண்ணி விருப்பம் கொண்டார். அவர் கையில் நெய் இல்லை. அவரின் இருப்பிடமோ தொலைவில் இருந்தது. ஆதலால் திருக்கோவிலின் அருகே உள்ள வீட்டில் நெய்யைப் பெற்று அறநெறியப்பருக்கு திருவிளக்கு ஏற்ற எண்ணம் கொண்டார். அச்சமயத்தில் சமணர்கள் பலர் திருவாரூரில் வாழ்ந்து வந்தனர். நமிநந்தியடிகள் திருவாரூர் திருக்கோவிலின் அருகில் இருந்த ஒரு வீட்டிற்குச் சென்று அறநெறியப்பருக்கு விளக்கு ஏற்ற நெய் கொடுத்துதவுமாறு வேண்டினார். அவர்கள் நெய் கொடுக்க மறுத்ததோடு “உங்கள் இறைவன்தான் கையில் தீயை வைத்துள்ளாரே. அவருக்கு ஏன் விளக்கேற்ற வேண்டும்? அவ்வாறு விளக்கு ஏற்ற வேண்டுமாயின் நெய்க்குப் பதிலாகத் தண்ணீரைக் கொண்டு விளக்கு ஏற்றுங்கள்.” என்று ஏளனம் செய்தனர். இதனால் வருத்தமடைந்த நாயனார், அறநெறியப்பரின் சந்நிதியை அடைந்து, “இறைவா, சமணர்கள் கூறிய வார்த்தைகளால் என்னுடைய மனம் மிகவும் வருத்த முற்றுள்ளது. இம்மொழிகளைக் கேட்பதற்கு என்ன பாவம் செய்தேனோ?” என்று மனதிற்குள் வேண்டினார். அப்போது சிவனார் அசரீரியாக, நமிநந்தி! கவலை வேண்டாம். உன்னைக் கேலி செய்தவர்களின் விருப்பத்தை நிறைவேற்றி வை. அவர்கள் சொன்னது போலவே, கோயில் அருகிலுள்ள குளத்தில் இருந்து தண்ணீர் கொண்டு வந்து விளக்கில் ஊற்று. விளக்கு பிரகாசமாய் எரியும், என்று அருளினார்.

பெருமகிழ்ச்சி அடைந்த நமிநந்தியடிகள் நாயனார், உடனே திருக்குளத்திற்கு ஓடிச்சென்று, ‘நமச்சிவாய’ என்னும் திருவைந்தெழுத்தை உச்சரித்தபடி திருக்குளத்து நீரை எடுத்துக் கொண்டு வந்து விளக்கில் ஊற்றி, திரியை முறுக்கிவிட்டு விளக்கை ஏற்றினார். அதிசயத்திலும் அதிசயம்! விளக்கு பிரகாசத்துடன் எரிந்தது. இதனைக் கண்டு பரவசம் அடைந்த நமிநந்தியார், குளத்து நீரினைக் கொண்டு திருக்கோவில் முழுவதும் விளக்குகளை ஏற்றினார். இரவு முழுவதும் விளக்குகள் எரியும் வண்ணம் எல்லா விளக்குகளிலும் நிரம்ப நீரினை ஊற்றி வைத்தார். இதனைக் கண்ட அனைவரும் வியப்பில் ஆழ்ந்தனர். நீரால் நமிநந்தியடிகள் விளக்கு ஏற்றியதைக் கேள்விப்பட்ட சமணர்கள் வியந்தார்கள். இரவு நெடுநேரம் அறநெறியப்பரின் சந்நிதியில் இருந்துவிட்டு நமிநந்தியார் தமது இருப்பிடம் திரும்பி சிவவழிபாட்டினை முடித்துவிட்டு நித்திரை கொண்டார்.

#தியாகராஜர் கோயிலுக்குப் பொறுப்பாளரானார் :

இறையருளால் பல நாட்களாக நமிநந்தியடிகள் நாயனார் நீரால் விளக்கு ஏற்றி, திருவாரூர் கோயிலை ஒளியூட்டினார்.
இதனைக் கேள்வியுற்ற சோழ மன்னன், அகமகிழ்ந்து அவரைத் திருவாரூர் தியாகராஜர் கோயிலுக்குப் பொறுப்பாளராக நியமித்தார். அத்தோடு கோயில் திருப்பணி நடைபெறுவதற்காக வேண்டி பொன்னும் பொருளும் கொடுத்து உதவினார். அடிகளார் எம்பெருமானுக்குப் பெருவிழாக்கள் பல நடத்தி பெருமிதம் கொண்டார்.

#திருவிளையாடலைக் காட்டிய பங்குனி உத்திரத் திருவிழா:

ஆண்டுதோறும் நடைபெறும் பங்குனி உத்திரத் திருவிழாவை நமிநந்தியடிகள் நாயனார் முன் நின்று மிக்கச் சிறப்பாக நடத்தி வந்தார். திருவிழாவின் போது, தியாகராஜர் 'மணலி' என்ற ஊருக்கு எழுந்தருளுவது வழக்கம். அப்போது அவரை வழிபடத் தொண்டர்களும், அன்பர்களும் ஜாதி, மத பேதமின்றி கலந்து கொண்டனர். அவர்களுடன் நமிநந்தியடிகள் நாயனாரும் இவ்விழாவில் கலந்து கொண்டு தியாகராஜரை வழிபட்டார். பின்பு மாலையில் தியாகராஜர் முன்போல திருவாரூர் கோயிலில் எழுந்தருளினார். நமிநந்தியடிகள் நாயனார் நள்ளிருளில், தமது ஊரை அடைந்து, வீட்டிற்குள் நுழையாமல் வெளியிலேயே அமர்ந்தார். மனைவியை அழைத்து, "தண்ணீர் எடுத்து வா. பல தரப் பட்ட மக்கள் கூட்டத்தின் நடுவில் இருந்ததால் குளித்துவிட்டுத் தான் பூஜை செய்ய வேண்டும்" என்றார். மனைவி உள்ளே சென்று தண்ணீர் எடுத்து வருவதற்குள் நமிநந்தியடிகள் நாயனார் சோர்வின் காரணமாகத் திண்ணையில் சற்றுக் கண் அயர்ந்து உறங்கிவிட்டார். அப்போது கனவில் பேரொளி பொங்கத் தோன்றிய சிவபெருமான், "நமிநந்தியாரே! திருவாரூரில் பிறந்த அனைவருமே சிவகணங்கள் ஆவர். நீங்கள் நினைப்பது போல் அவர்கள் தீண்டத்தகாதவர்கள் அல்லர். நீங்களே உங்கள் கண்களால் காண்பீர்!" என்று கூறி மறைந்தார். கண் விழித்து எழுந்த நமிநந்தியடிகள் நாயனார் நடந்தவற்றை மனைவியிடம் கூறி, தன் தவறான எண்ணத்தை நினைத்து வருந்தினார். உடனே வீட்டில் பூஜை செய்யலானர். மறுநாள் பொழுது புலர்ந்தும், எழுந்து வீட்டில் வழிபாடு மேற்கொண்டுவிட்டு திருவாரூர் சென்றார். அப்போது அங்கியிருந்தோர் எல்லோரும் சிவகணங்களாகத் தெரிந்தனர். உடனே நமிநந்தியடிகள் நாயனார் அவர்களை நமஸ்கரித்தார். சில நிமிடங்களில், அவர்கள் சுய உருவம் பெற்றனர். சிவபெருமானின் திருவிளையாடலை நினைந்து மனமுருகினார். சிவபெருமான் என்னுடைய அறியாமையைப் போக்கும் பொருட்டு எனக்கு இவ்வாறு காட்சியளிக்கச் செய்தான்’ என்று எண்ணியபடி திருக்கோவிலுக்குச் சென்று வழிபாடு மேற்கொண்டார்.

"தொண்டர்களுக்கு ஆணிப்பொன்":
இந்நிகழ்ச்சிக்குப் பிறகு நமிநந்தியடிகள் நாயனாருக்குத் திருவாரூரை விட்டுச் செல்ல மனம் வரவில்லை. தியாகேசர் பெருமானின் திருவடி கமலங்களிலேயே காலத்தைக் கடத்த எண்ணினார். நாயனார் மனைவியாருடன் ஏமப்பேரூரை விடுத்துத் திருவாரூரிலே குடிபுகுந்து, தம்முடைய திருத்தொண்டுகளைச் செய்துகொண்டிருந்தார். நெடுங்காலம் சிவனடியார்களுக்கு நியதியாக வேண்டுவன எல்லாவற்றையும் செய்து கொண்டிருந்தமையால், "தொண்டர்களுக்கு ஆணிப்பொன்" என்று, திருநாவுக்கரச நாயனாராலே, தேவாரப்பதிகத்திலே சிறப்பித்துப் பாடப்பட்டார். இவ்வாறு திருவாரூரிலே வாழ்ந்து வந்த நமிநந்தியடிகள் நாயனார் திருப்பணிகள் பல செய்து திருவாரூர் தியாகேசர் திருவடி நிழலையடைந்தார்.

#குருபூஜை நாள்:

சிவபெருமானுக்குத் திருவிளக்குத் தொண்டு உள்ளிட்ட பல தொண்டுகளைச் செய்த நமிநந்தியடிகள் நாயனாரின் குருபூஜை வைகாசி மாதம் பூசம் நட்சத்திரத்தன்று அவர் அவதாரம் செய்த ஸ்தலமான திருவாரூர் மாவட்டம் திருநெய்ப்பேர் (திருவாரூர் - திருத்துறைப்பூண்டி சாலையில் சுமார் 15-கி.மீ.தூரம் சென்றால் இத்தலத்தையடையலாம்)அ/மி வன்மீகநாதர் திருக்கோயிலிலும், முக்தியடைந்த ஸ்தலமும் ஆன ஆரூர் அரநெறி அசலேஸ்வரர் கோயிலும் (இக்கோயில் திருவாரூர்க் கோயிலுக்குள்ளேயே தெற்குச் சுற்றில் உள்ளது; இக்கோயில் அசலேச்சரம் என்று வழங்கப்படுகிறது. திருவாரூர் தியாகராஜ சுவாமி கோயிலின் இரண்டாம் (தெற்கு) பிரகாரத்தில் இக்கோயில் உள்ளது) சிறப்பான முறையில் கொண்டாடப்படுகிறது. திருநெய்ப்பேர் வன்மீகநாதர் திருக்கோயிலில் நுழைந்த உடன் இடப்பக்கம் நமிநந்தியடிகள் நாயனாரின் உருவச் சிலை உள்ளது. இவரது குருபூஜை தினத்தன்று அனைத்து சிவாலயங்களிலும் சிறப்பு வழிபாடுகள் நடைபெறும்.

2.#தெய்வச்சேக்கிழார்:

*அவதார தலம்-குன்றத்தூர் 
*முக்தி தலம்    -தில்லை     
*குருபூசை திருநட்சத்திரம்- வைகாசி பூசம்

தில்லைவாழ் அந்தணரே முதலாகச் சீர்படைத்த
தொல்லையதாம் திருத்தொண்டத் தொகையடியார் பதம்போற்றி
ஒல்லையவர் புராணகதை உலகறிய விரித்துரைத்த
செல்வம்மலி குன்றத்தூர்ச் சேக்கிழார் அடிபோற்றி.

பெரியபுராணம் தந்த சேக்கிழார் அரசபதவியை விட்டெறிந்து தெய்வத் திருப்பணியில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டவர். திருத்தொண்டர் புராணம் எனப்படும் பெரியபுராணம் இன்றளவும் நிலைபெற்று விளங்குவதற்கு இவரது அயராத உழைப்பே காரணம். 

தொண்டை நாடு புலியூரில் குன்றத்தூர் கிராமத்தில் அவதரித்தவர் சேக்கிழார்பெருமான் . அவர் பிறந்ததும் அருண்மொழி ராம தேவர் என்ற பெயர் இடப்பட்டது. இவரது இளைய சகோதரர் பாலறாவாயர். சேக்கிழாரின் தந்தை இரண்டாம் குலோத்துங்கன் எனப்பட்ட அநபாய சோழனிடம் அமைச்சராகப் பணியாற்றினார். 1133ம் ஆண்டு முதல் 1150ம் ஆண்டு வரை இவனது ஆட்சிக்காலம் இருந்தது. சேக்கிழாரின் தந்தை அரசவைக்கு வரும் போதெல்லாம் சேக்கிழாரையும் உடன் அழைத்து வருவார். இதனால் சேக்கிழாருக்கு அரசியல் நடவடிக்கைகள் அத்துப்படி ஆயின. தந்தையைத் தொடர்ந்து சேக்கிழாருக்கு அந்தப்பதவி கிடைத்தது. அநபாயச்சோழன் சேக்கிழாரை தனது முதல் அமைச்சராகவே நியமித்தான். சேக்கிழார் தனது பொறுப்பை நல்லமுறையில் கவனித்து நாட்டை நல்வழியில் நடத்திச் சென்றார். ஒருமுறை திருநாகேஸ்வரத்தில் எழுந்தருளியுள்ள சிவபெருமானை தரிசிக்க சேக்கிழார் சென்றார். இறைவனைக் கண்டதும் அவரது கண்கள் பனித்தன. அவர் உடலே இறைசக்தியால் ஆட்டுவிக்கப்பட்டது போன்ற உணர்வு ஏற்பட்டது. அரசபதவியை விட்டுவிட்டு தெய்வப் பணிக்கு சென்று விடலாமா என எண்ணினார். இந்த நேரத்தில் மன்னனின் போக்கு திடீரென மாறியது. மன்னன் அநபாயச்சோழன் சீவகசிந்தாமனி என்னும் சமண சிற்றிலக்கிய காப்பியத்தை படித்துவிட்டு சிற்றின்பத்தில் மூழ்கி காலத்தை கழித்தான். எனவே சிவ நூல்களை படித்து நல்லவழியில் செல்ல மன்னனை சேக்கிழார் கேட்டுக்கொண்டார்.

அவன் சேக்கிழாரிடம், சமயநூல்களை உருவாக்கியவர்கள் யார் என கேள்வி கேட்டான். மன்னன் இப்படி கேட்டதே சேக்கிழாருக்கு பெருமையாக இருந்தது. சேக்கிழார் அதற்குரிய விளக்கங்களை மன்னனிடம் எடுத்துக்கூறினார்.சுந்தரமூர்த்தி நாயனார் அருளிய திருத்தொண்டத் தொகை, நம்பியாண்டார் நம்பி எழுதிய திருவந்தாதி ஆகியவற்றை விளக்கினார்.பொள்ளாப் பிள்ளையார் அருள் பெற்ற நம்பியாண்டார் நம்பி அருளிய திருத்தொண்டத்  திருவந்தாதியை செப்பேடு செய்து ராஜராஜசோழன் சைவ சமயத்தின் உண்மை நெறியை மக்களுக்கு எடுத்துக்காட்டினான். அப்படிப்பட்ட மன்னனின் வழியில் வந்த தாங்களும் சைவ சமயத்தை காக்க ஏற்பாடுசெய்ய வேண்டும் என சேக்கிழார் எடுத்துக்கூறினார். இதையடுத்து மன்னன் திருந்தினான். சிவபெருமானின் தொண்டர்களின் வரலாற்றை காவியமாக்கி தரவேண்டும் என சேக்கிழாரை கேட்டுக்கொண்டான். அதற்காக பொன்னும் பொருளும் கொடுத்து வேண்டிய ஏற்பாடுகளை செய்தான். சேக்கிழார் சிதம்பரம் நகருக்கு சென்றார். அங்கு நடராஜ பெருமானை வணங்கி, சிவனின் திருத்தொண்டர்களின் வரலாற்றை எழுத அடியெடுத்துக் கொடுக்க வேண்டும் என வேண்டினார். தில்லையம்பல நடராஜர் உலகெலாம் என அடியெடுத்துக் கொடுத்தார். அதை முதற்சொல்லாக வைத்து சேக்கிழார் பெரியபுராணத்தை எழுதத் தொடங்கினார்.அடிக்கடி திருத்தொண்டர் புராணம் எந்த அளவு முடிந்துள்ளது என்று ஆவல் மேலிட விசாரித்து கொண்டேயிருந்தான் சோழன் .ஒரு சித்திரை திருவாதிரை நாளில் தொடங்கி அடுத்த ஆண்டு சித்திரை திருவாதிரை நாளில் முடித்தார்   எழுத்துப்பணி முடிந்து காவியத்தை நடராஜரின் பாதத்தில் சேக்கிழார் சமர்ப்பித்தார். இதைக் கேள்விப்பட்ட மன்னன் தனது பரிவாரங்களுடன் சிதம்பரத்திற்கு புறப்பட்டு வந்தான். மன்னன் வருவதை அறிந்த சேக்கிழார் சிதம்பரத்தில் உள்ள மூவாயிரம் அந்தணர்களுடனும் திருமட தலைவர்களுடன் சென்று மன்னனை வரவேற்றார். அவர் ருத்திராட்சமும் திருநீறும் அணிந்து சிவனடியார் போல நின்று கொண்டிருந்தார். அந்த உருவத்தை பார்த்த உடனேயே மன்னன் அவரை வணங்கினான். அப்போது விண்ணில் அசரீரி வாக்கு எழுந்தது. சேக்கிழார் முடித்த பெரியபுராணத்தை அரங்கேற்றம் நிகழ்ச்சியை மிகப்பெருமளவில் நடத்த அசரீரி வாக்கு கூறியது.

இதையடுத்து மன்னன் விழா ஏற்பாடுகளை ஆரம்பித்தான். தில்லை நடராஜருக்கு உகந்த நல்லநாளும், திருஞான சம்பந்தர் அவதரித்த பொன்னாளுமான சித்திரை திருவாதிரை தினத்தில் அரங்கேற்ற நிகழ்ச்சியை தொடங்குவது என முடிவு செய்யப்பட்டது . மிகப்பெரிய விழாவிற்கு ஏற்பாடு செய்யப்பட்டது. சிதம்பரம் நடராஜர் கோயிலில் நடக்கும் திருவிழாவிற்கு வரும் கூட்டம் போல பக்கத்து நாடுகளிலிருந்து, புலவர்கள், பொதுமக்கள் என ஏராளமானோர் சிதம்பரத்தில் கூடினர். ஊரெங்கும் பூரணகும்பம் வைத்து திருவிளக்கு ஏற்றினர். ஒருபக்கம் சிலம்பாட்டம், மற்றொரு பக்கம் நடனம் என கலை நிகழ்ச்சிகள் நடந்தன. சிதம்பரம் நடராஜர் கோயில சிற்பங்கள் வர்ணம் பூசப்பட்டன. வீதியெங்கும் வாழை, கமுகு தோரணங்கள் அலங்கரித்தன. இப்படிப்பட்ட குதூகலமான சூழ்நிலையில் நடராஜர் கோயிலில் உள்ள ஆயிரங்கால் மண்டபத்தில் பெரியபுராணத்தின் அரங்கேற்றம்நடந்தேறியது  

சேக்கிழார் தந்த பெரியபுராணத்தில் 63 நாயன்மார்களின் வரலாறு இடம்பெற்றுள்ளது.அதில் 4286பாடல்கள் உள்ளன . விழா முடிந்ததும் மன்னன் மீண்டும் தன் நாடு அடைந்தான். சேக்கிழாரின் சகோதரரான பாலறவாயரை அமைச்சராக்கி அவருக்கு தொண்டைமான் என்னும் பட்டத்தை வழங்கினான். அவனது காலத்தில் நாடு மிகச் செழிப்பாக விளங்கியது. அதன்பிறகும் சேக்கிழார் தில்லையரசரின் புகழ்பாடி அவரது திருவடியைச் சேர்ந்தார்.

தெய்வச் சேக்கிழார்:

சேக்கிழார் என்பவர் 12-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த சிவனடியார் ஆவார். இவர் இரண்டாம் குலோத்துங்க சோழனின் அரசவையில் முதன்மை அமைச்சராக இருந்தவர். சோழன் சீவகசிந்தாமணி எனும் காமரசம் அதிகமுள்ள சமண நூலைப் படிப்பதனால், சோழனையும் மக்களையும் நல்வழிப்படுத்த சிவபெருமானின் அடியார்களான அறுபத்து மூன்று நாயன்மார்களின் வரலாற்றை விளக்கும் திருத்தொண்டர் புராணத்தினை இயற்றியவர் ஆவார்.

சேக்கிழார் நாயனார்
பெரியபுராணத்தைப் பாட தில்லையில் சிவபெருமானே 'உலகெலாம்' என்று அடியெடுத்துக் கொடுத்தாக நம்பிக்கையுண்டு. சிவத்தொண்டின் காரணமாகவும், மதிநுட்பத்தின் காரணமாகவும் இவர் உத்தம சோழப் பல்லவன், தொண்டர் சீர் பரவுவார், தெய்வப்புலவர், தெய்வச்சேக்கிழார் போன்ற பட்டங்களைப் பெற்றவர். உமாபதி சிவாச்சாரியார் என்பவரால் சேக்கிழார் புராணம் எனும் நூலும், மீனாட்சிசுந்தரம் பிள்ளை அவர்களால் சேக்கிழார் பிள்ளைத்தமிழ் எனும் நூலும் சேக்கிழாரை முன்வைத்து இயற்றப்பட்டுள்ளது.

*பெயர்க்காரணம்:

சே என்பதற்குக் காளை என்றும் சேக்கிழார் என்றால் காளைக்கு உரியவர் என்று பொருள் தருவதாகும். காளையை வைத்து உழவுத்தொழில் செய்து வந்தோர்களில் அமைச்சராகவும், சிவனடியாராகவும் சிறந்து விளங்கியமையால் இயற்பெயரான அருண்மொழித்தேவர் என்பது மறைந்து சேக்கிழார் என்பதே பெயராக அறியப்படுகிறது.

*வரலாறு:

கீழ்வருகின்ற சேக்கிழார் வரலாறு சேக்கிழார் புராணம் எனும் உமாபதி சிவாச்சாரியாரால் எழுதப்பெற்ற நூலை அடிப்படையாகக் கொண்டதாகும். இந்நூலில் வருகின்ற சில செய்திகளையும், இந்த நூலின் ஆசிரியர் உமாபதி சிவாச்சாரியார் என்பதையும், மா. இராசமாணிக்கனார் எனும் ஆய்வாளர் மறுத்துள்ளார்.

*பிறப்பு:

பொ.ஊ. 12-ஆம் நூற்றாண்டில் தொண்டை நாட்டைச் சேர்ந்த புலியூர்க் கோட்டத்தில் உள்ள குன்றத்தூர் என்னும் ஊரில் வேளாளர் மரபில் வெள்ளியங்கிரி மற்றும் அழகாம்பிகை ஆகியோருக்கு முதல் மகனாகச் சேக்கிழார் பிறந்தார்.இவருக்குப் பெற்றோர் அருண்மொழித்தேவர் என்று பெயரிட்டனர். இவருக்குப் பாலறாவாயர் என்ற தம்பியும் இருந்தார்.

*இளமைப் பருவம்:

சோழநாட்டு அரசனான இரண்டாம் குலோத்துங்க சோழன் அநபாயசோழருக்குக் கடலினும் பெரியது எது? உலகினும் பெரியது எது? மலையினும் பெரியது எது? என்ற கேள்விகள் தோன்றின. அநபாய சோழரின் அமைச்சராக இருந்த சேக்கிழாரின் தந்தை இந்தக் கேள்விகளுக்கு விடைதெரியாது தவித்த பொழுது, சேக்கிழார் விடையை அளித்தார். அதனை மன்னரிடம் கூறியமையால் சேக்கிழாருக்கு அமைச்சர் பதவியை அநபாய சோழர் அளித்தார்.

சேக்கிழார்க்கு உத்தம சோழப் பல்லவன் என்ற சிறப்புப் பட்டத்தினைத் தந்தார் அரசன். சேக்கிழார் திருநாகேசுவரம் கோயில் இறைவன் மீது பற்று வைத்திருந்தார். அதனால் குன்றத்தூரில் திருநாகேசுவரம் என்ற பெயரிலேயே கோயிலொன்றினைக் கட்டினார்.

*அமைச்சர் பணி:

இரண்டாம் குலோத்துங்க சோழன் போர்களில் ஈடுபடாமல், கேளிக்கைகளில் மனதினைச் செலுத்தியதாகவும், அதன் காரணமாகச் சமண முனிவரான திருத்தக்க தேவரால் எழுதப்பெற்ற சீவகசிந்தாமணி எனும் நூலைப் படித்து இன்புற்றதாகவும் தெரிகிறது. சீவகசிந்தாமணி என்பது களவிநூலாக இருந்தமையாலும், அந்நூல் இம்மைக்கும் மறுமைக்கும் துணை செய்யாது என்பதையும் எண்ணிச் சேக்கிழார் வருத்தம் கொண்டு, மன்னனுக்கு எடுத்துரைத்தார்.

மறுமைக்குத் துணை புரியக் கூடிய சிவபெருமானின் தொண்டர்கள் வரலாற்றைச் சுந்தரமூர்த்தி நாயனாரால் பாடப்பெற்ற திருத்தொண்டர் தொகையிலிருந்து சோழ மன்னனுக்குச் சேக்கிழார் எடுத்துரைத்தார். அத்துடன் நம்பியாண்டார் நம்பி அவர்களால் பாடல்பெற்ற திருத்தொண்டர் திருவந்தாதியையும் கூறினார். அவற்றைக் கேட்ட சோழ மன்னன், நாயன்மார்களின் வரலாற்றை விரிவாக எடுத்துரைக்கும்படி சேக்கிழாரை வேண்டினான். அதன் காரணமாகச் சுந்தரமூர்த்தி நாயனாரையும், அவருடைய நூலில் குறிப்பிடப்பட்டுள்ள அறுபது சிவத்தொண்டர்களின் வரலாற்றையும் சுந்தரமூர்த்தி நாயனாரின் தந்தை சடையனார்,தாயார் இசைஞானியார் வரலாற்றையும் ஊர் ஊராகச் சென்று அதிக தகவல்களைத் திரட்டினார் சேக்கிழார். எழுதா இலக்கியம் எனும் நாட்டுப்புற பாடல்களையும், கல்வெட்டுகளையும், அடியார்கள் கதையும் கேட்டறிந்து, அவர்கள் வாழ்ந்த இடங்களுக்குச் சென்று குறிப்புகள் எடுத்துக் கொண்டார்.

*திருத்தொண்டர் புராணம் இயற்றுதல்:

புராணம் இயற்ற தில்லை எனப்படும் சிதம்பரம் நடராசர் கோயிலுக்குச் சென்றார். அங்குச் சிவகங்கைத் தீர்த்தத்தில் நீராடித் தில்லை நடராசப் பெருமானை வணங்கினார். பின்பு ஆயிரம் கால் மண்டபத்தில் அடியார்கள் முன்னிலையில் இறைவன் "உலகெலாம்" என அடியெடுத்துக் கொடுக்க புராணம் பாடத் தொடங்கினார். சித்திரை மாதம் திருவாதிரை நட்சத்திர நாளன்று புராணம் தொடங்கி, அடுத்த வருடம் சித்தரை மாதம் அதே திருவாதிரை நட்சத்திரத்தில் புராணத்தினை முடித்தார். ஓராண்டு காலம் புராணம் இயற்றப்பட்டது. இந்நூலில் திருத்தொண்டத் தொகையில் சுந்தர மூர்த்தியார் பாடியவாறே அடியார்களின் வரலாற்றை அதன் வரிசையிலேயே பாடினார். அத்துடன் சுந்தரமூர்த்தியாரையும், அவரது பெற்றோர் சடையனார், இசைஞானியாரையும் நாயன்மார்களாக இணைத்துக் கொண்டார்.

பெரிய புராணத்தில் இரண்டு காண்டங்களும், பதிமூன்று சருக்கங்களும், நான்காயிரத்து இருநூற்று எண்பத்து ஆறு (4286) பாடல்களும் உள்ளன. அதுநாள் வரை சைவசமய இலக்கியங்களில் பதினொரு திருமுறைகள் இருந்தன. அதனுடன் பன்னிரண்டாம் திருமுறையாகப் பெரியபுராணம் சேர்த்துக் கொள்ளப்பட்டது.

*மன்னன் சிறப்பு செய்தமை:

சேக்கிழார் பெரியபுராணத்தினைத் திருவாதிரை நட்சத்திரத்தன்று பாடி முடிந்ததும், அரசன் வந்து அவரைத் தன்னுடைய பட்டத்து யானையின் மீது ஏற்றினார். பின்பு தானும் அந்த யானையின் மீது ஏறிச் சேக்கிழாருக்கு வெண் சாமரம் வீசி புராணத்தோடு ஊர்வலம் சென்றார். அடியார்கள் பின் தொடர்ந்து வந்தனர். தில்லையில் வாழ்ந்த அடியார்கள் பெரிய புராணத்தினைச் சிவபெருமானாகக் கண்டனர் என்பது நம்பிக்கையாகும்.

*இராசமாணிக்கனார் ஆய்வு:

சேக்கிழார் வரலாறு குறித்தும், அவருடைய காலம் குறித்தும் பல்வேறு அறிஞர்கள் ஆய்வு செய்துள்ளார்கள். மா. இராசமாணிக்கனார் அவரது பெரியபுராண ஆய்வு நூலில் பல்வேறு ஆய்வு முடிவுகளை வெளியிட்டுள்ளார்.

அதன்படி சேக்கிழாரின் இயற்பெயர் இராமதேவன் என இருக்கலாம் என்று கூறுகிறார்.
மேலும் சேக்கிழார் வரலாற்றில் கூறப்படும் அரசன் சீவக சிந்தாமணியைப் படித்ததும், அதற்குச் சேக்கிழார் மறுப்பு தெரிவித்து பெரியபுராணம் இயற்றியது குறித்தான கருத்துரு தவறானது என்றும், சேக்கிழார் சீவக சிந்தாமணியைப் படித்து, அதிலிருக்கும் கருத்துகளைப் பெரியபுராணத்தில் எடுத்தாண்டுள்ளார் என்றும் கூறுகிறார்.

சேக்கிழார் பெரிய புராணம் எனும் திருத்தொண்டர் புராணத்தினை இரண்டாம் இராசராசன் காலத்தில் பங்குனி உத்திரத் திருவிழாவில் திருவொற்றியூர்க் கோயிலில் இயற்றியுள்ளார். இக்காலம் பொ.ஊ. 1174 ஆக இருக்கலாம் என்பது அவரது ஆய்வு.

முத்திப் பேறு:

தொண்டர்சீர் பரவுவாராகிய சேக்கிழார் பெருமான் தில்லை நகரிலேயே தங்கியிருந்து, திருத்தொண்டர் பெருமைகளை உணர்ந்து போற்றியவராய்ச் சிவனடியார்களோடுகூடித் தவநிலையிலமர்ந்து வைகாசிப் பூச நாளில் தில்லைப்பெருமான் திருவடி நீழலை அடைந்து முத்தி பெற்றார்.

ஓம் நமசிவாய 
படித்து பகிர்ந்தது
 இரா இளங்கோவன் 
நெல்லிக்குப்பம். 

உற்சவர் அல்லாமல் மூலவர் வீதியில் வலம் வரும் சிதம்பரம்.

கோவில் ...அதிசயங்கள்..!!
அந்த காலத்தில் ..
கோவில் ...கட்டும் போது...ஒவ்வொருகோவிலிலும் ..ஏதாவது ஒன்றை தனித்தன்மையுடன் அமைத்தனர்.

ஆனால் ஒவ்வொரு கோவிலிலும் ஏதாவது ஒரு தனிச்சிறப்பு உண்டு!

அவைகளில் சில:

🔯1. உற்சவர் அல்லாமல் மூலவர் வீதியில் வலம் வருவது சிதம்பரம். - நடராஜ கோயில்

🔯2. கும்பகோணம் அருகே “தாராசுரம்” என்ற ஊரில் உள்ள ஐராவதீஸ்வரர் கோவிலில்உள்ள சிற்பத்தில் வாலியும் சுக்ரீவனும் சண்டை இடும் காட்சி உள்ளது. இங்கிருந்து ராமர் சிற்பம் இருக்கும் தூண் தெரியாது. ஆனால் ராமன் அம்பு தொடுக்கும் சிற்பத்தில் இருந்து பார்த்தால் வாலி சுக்ரீவன் போர் புரியும் சிற்பம்.

🔯3. தர்மபுரி மல்லிகார்ஜுன கோவிலில் உள்ள நவாங்க மண்டபத்தில் இரு தூண்களின் அடி பூமியில் படியாது.

🔯4. கரூர் மாவட்ட குளித்தலை கடம்பவனநாதர் கோவிலில் இரட்டை நடராஜர் தரிசனம் செய்யலாம்.

🔯5. கருடாழ்வார் நான்கு கரங்களுள் இரு கரங்களில் சங்கு சக்கரம் ஏந்தியபடி காட்சி தரும் ஸ்தலம் கும்பகோணம் அருகே வெள்ளியங்குடி. 108 திவ்யதேசத்தில் இங்குமட்டும் இது போல் காட்சி தருகிறார்.

🔯6. நாச்சியார் கோவில் கல்கருடன் சன்னதியில் 4 பேர் தூக்குவார்கள் பின்பு 8,16, கோவில் வாசலில் 64 பேர் தூக்கி வருவார்கள் கருடனும் முகத்தில் வேர்வை துளிர்க்கும்.

🔯7. ஸ்ரீபெரும்புதூரில் உள் ராமானுஜர் உருவம் விக்ரஹமோ, வேறு உலோகப் பொருளால் ஆன வடிவமைப்போ இல்லை. குங்குமப்பூ, பச்சை கற்பூரம் கொண்ட மூலிகைப் பொருளால் ஆனது.

🔯8. திருநெல்வேலி-கடையம் அருகே நித்ய கல்யாணி உடனுறை விஸ்வநாதர் கோயிலில் உள்ள வில்வமரத்தில் லிங்க வடிவில் காய் காய்க்கிறது.

🔯9 கும்பகோணம் அருகே திருநல்லூரில் உள்ள சிவலிங்கத் திருமேனி ஒரு நாளைக்கு 5 முறை வெவ்வேறு வண்ணங்களில் நிறம் மாறுவதால் “பஞ்சவர்ணேஸ்வரர்” என்று பெயர்.

*🔯10. விருதுநகர், சொக்கநாதன்புத்தூரில் உள்ள தவநந்திகேஸ்வரர் ஆலயத்தில் உள்ள நந்திக்கு கொம்போ, காதுகளே இல்லை.

*🔯11. ஆந்திராவில் சாமல் கோட்டை அருகே உள்ள 3 பிரதான சாலைகளில் சந்திப்பில் உள்ள 72 அடி ஆஞ்சநேயர் சிலையின் கண்களும். சில நூறு மைகளுக்கு அப்பால் உள்ள பத்ராசல ஆலயத்தில் ஸ்ரீராமன் திருவடிகளும் ஒரே மட்டத்தில் உள்ளன.

🔯12. வேலூர் அருகே உள்ள விருஞ்சிபுரம் என்ற தலத்தில் உள்ள கோயில் தூணின் தென்புறம் அர்த்த சந்திரவடிவில் 1 முதல் 6 வரையும், 6முதல் 12 வரையும் எண்கள் செதுக்கியுள்ளன.

மேற்புறம் உள்ள பள்ளத்தில் வழியே ஒரு குச்சியை நீட்டினால், குச்சியுன் நிழல் எந்த எண்ணில் விழுகிறதோ அதுதான் அப்போது மணி ஆகும்.

நினைத்த வரம் தரும் தான்தோன்றிமலை கல்யாண வேங்கடரமணர் கோவில்.

நினைத்த வரம் தரும் தான்தோன்றிமலை கல்யாண வேங்கடரமணர் கோவில்...
தென்திருப்பதி என்று பக்தகோடிகளால் போற்றப்படும் தான்தோன்றிமலை ஒரு தலைசிறந்த புனித தலமாகவும், பிரார்த்தனை தலமாகவும் திகழ்கிறது.

காக்கும் கடவுளான திருமால் எடுத்த அவதாரங்களில் தசாவதாரம் முக்கியமானது. 

அவை தவிர பெருமாள் என்ற பெயரில் அவர் அருள்பாலிக்கும் 108 திவ்ய தேசங்கள் நாடெங்கும் பக்தி மணம் பரப்பி வருகின்றன. 

திருப்பதி, உப்பிலியப்பன் கோவில், ஸ்ரீரங்கம் என்று ஏராளமான விஷ்ணு ஆலயங்கள் உள்ளன.

தென்திருப்பதி என்று பக்தகோடிகளால் போற்றப்படும் தான்தோன்றிமலை ஒரு தலைசிறந்த புனித தலமாகவும், பிரார்த்தனை தலமாகவும் திகழ்கிறது. 

கரூரில் இருந்து திண்டுக்கல் செல்லும் சாலையில் கரூருக்கு தெற்கே 4 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது இந்த தலம். 

இங்கு திருப்பதி வெங்கடாஜலபதியே ‘கல்யாண வேங்கடரமண சுவாமி’ எனும் திருப்பெயருடன் எழுந்தருளியுள்ளார்.

இந்த விஷ்ணு தலம் குன்றின் மேல் அமைந்துள்ளது. இக்குன்று மேல்புறம் உயர்ந்தும், கீழ்புறம் தாழ்ந்தும் காணப்படுகிறது. 

மூலஸ்தானத்தின் மேல் கட்டப்பட்ட கோபுரம் கம்பீரமாக காட்சியளிக்கிறது. குன்றின் மேல்புறம் குடையப்பட்டுள்ள அழகிய குடைவரையில் கல்யாண வேங்கடரமண பெருமாள், மேற்கு நோக்கி நின்ற கோலத்தில் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். 

பிரம்மாண்ட வடிவம் கொண்ட இந்தப் பெருமாள், லட்சுமியை தனது மார்பில் தாங்கியிருக்கிறார். இதனால் இங்கு தாயாருக்கு தனி சன்னிதி கிடையாது.

ஒரு சமயம் திருப்பாற்கடலில் திருமால், லட்சுமிதேவியுடன் மகிழ்ச்சியாக பேசிக்கொண்டிருந்தார். வாசலின் வெளியே ஆதிசேஷன் காவல் இருந்தார்.    

அப்போது வாயுபகவான் இறைவனை சேவிக்க உள்ளே நுழைய முயன்றார். ஆதிசேஷனோ, வாயுபகவானை தடுத்து நிறுத்தினார். 

அதனால் இருவருக்குமிடையே யார் பெரியவர் என்ற மோதல் ஏற்பட்டது. வெளியே வந்த பகவான், இருவரிடையே சமசரம் செய்து இருவருக்கும் ஒரு போட்டியையும் வைத்தார்.

ஆதிசேஷன் திருவேங்கடமலையை தனது உடலால் அழுத்தி பிடித்து கொள்ள வேண்டும். வாயுதேவன் அதை தனது பலத்தால் அசைத்து பிடுங்க வேண்டும். இதுதான் போட்டி. ஆதிசேஷன், மலையை தனது உடலால் சுற்றி இறுக அழுத்தி கொண்டார். 

வாயு பகவான் அதனை பெயர்த்தெடுக்க முயன்றார். ஆனால் வெற்றி கிட்டவில்லை. கோபம் கொண்ட வாயு பகவான், தனது முழு பலத்தையும் கொண்டு பெரும் புயலாக வீசியபோது மலை சிதறுண்டு நாலா பக்கமும் விழுந்தன. 

அவ்வாறு சிதறி விழுந்த குன்றுகளில் ஒன்றுதான் இந்த தான்தோன்றிமலை என்று கூறப்படுகிறது.

இம்மலையில் வேங்கடவன் எவ்வாறு வந்து அமர்ந்தார் என்பதைப் பார்ப்போம்..

கரூரை தலைநகராக கொண்டு மூன்றாம் குலோத்துங்கச் சோழன் ஆட்சி செய்து வந்தான். அவனது ஆட்சிக்குட்பட்ட பகுதியில் டங்கணாச்சாரி என்பவர் வசித்து வந்தார். 

இவர் அரசவையின் சிறந்த சிற்பியாகவும், சைவப் பற்றாளனாகவும் திகழ்ந்தார். அவரது மனைவி சுந்தராம்பிகை. இந்த தம்பதியருக்கு குழந்தை பாக்கியம் இல்லாத குறை வாட்டியது.

ஒரு நாள் டங்கணாச்சாரி, அரசவைக்கு சென்றிருந்தார். சுந்தராம்பிகை தனது வீட்டில் தனியாக இருந்தாள். அப்போது தெருவில் ‘கோவிந்தா... கோவிந்தா...’ எனும் சப்தம் கேட்டது. அவள் ஓடோடி வந்து தெருவை பார்த்தாள். 

அப்போது ஒரு கூட்டம் கோவிந்தா... கோவிந்தா... என்று உரக்க கத்திக்கொண்டே சென்றது. அந்த கூட்டத்தின் நடுவில் மஞ்சள் ஆடை அணிந்து மார்பில் துளசி மாலையுடன் நெற்றியில் திருநாமத்துடன் ஐந்து வயது சிறுவன் ஒருவன் தென்பட்டான்.

கூட்டத்தில் ஒரு பெண்மணியிடம் இதுகுறித்து சுந்தராம்பிகை விசாரித்தாள். அதற்கு அந்த பெண்மணி, ‘அந்த சிறுவன் எனது மகன்தான். 

எனக்கு புத்திர பாக்கியம் இல்லாமல் இருந்தது. திருப்பதி வேங்கடேசனை நினைத்து பிரார்த்தனை செய்து கொண்டோம். 

குழந்தை பிறந்தது. ஐந்தாவது வயதில் குழந்தையையும் அழைத்துக்கொண்டு பெரு மாளின் சன்னிதியில் வந்து காணிக்கை செலுத்துவதாக வேண்டியிருந்தோம். அதை நிறைவேற்றவே இப்போது திருப்பதி செல்கிறோம்’ என்றாள்.

இதனை கேட்ட சுந்தராம்பிகை, தானும் திருப்பதி வெங்கடாஜலபதியை வேண்டி அதே பிரார்த்தனையை செய்து கொண்டாள். 

வெங்கடாஜலபதியும் அருள்புரிந்தார். சுந்தராம்பிகைக்கு ஆண் குழந்தை பிறந்தது. அவனுக்கு குண்டலாச்சாரி என்று பெயரிட்டாள். 

குழந்தைக்கு ஐந்து வயதானது. பிரார்த்தனையை நிறைவேற்ற வேண்டிய காலம். இதுவரை கணவரிடம் பிரார்த்தனை பற்றி கூறவில்லை. தற்போது தைரியத்தை வரவழைத்துக் கொண்டு கூறினாள் சுந்தராம்பிகை.

கோபத்தில் கொந்தளித்தார் டங்கணாச்சாரி. ‘சிவபெருமானை தவிர உலகில் வேறு தெய்வம் இல்லை.

நான் திருப்பதிக்கு போக மாட்டேன். உன்னையும் போக விட மாட்டேன்’ என்று எச்சரித்துவிட்டு வெளியில் சென்றுவிட்டார். சுந்தராம்பிகையோ மனம் வருந்தி கண்ணீர் வடித்தாள்.

குண்டலாச்சாரி தனது தாய் அழுவதை கண்டு, ‘ஏனம்மா அழுகிறாய்?’ என்று கேட்டான். தனது இக்கட்டான நிலையை தனது மகனிடம் சுந்தராம்பிகை கூறினாள்.

அதைக் கேட்ட குண்டலாச்சாரி, ‘அம்மா நீ அழாதே!. திருப்பதி சீனிவாச பெருமாளை, நமது ஊரிலுள்ள மலைக்குன்றுக்கு வரவழைக்கிறேன். நாம் பிரார்த்தனையை இங்கேயே நிறைவேற்றலாம்’ என்றான்.

மகனின் விளையாட்டுப் பேச்சைக் கேட்ட தாய்க்கு அழுவதா? சிரிப்பதா? என்று தெரியவில்லை. அன்று இரவு எல்லோரும் தூங்கியவுடன் குண்டலாச்சாரி, தனது தந்தை வைத்திருந்த, சிற்பம் செதுக்குவதற்கான ஆயுதங்களை எடுத்துக் கொண்டு மலைக்குச் சென்றான்.

மலையின் மீது ஆலயம் எழுப்ப அடி அளந்து கொண்டு இருந்தான். அப்போது சந்நியாசி ஒருவர், அவன் முன் தோன்றி, ‘குழந்தாய்! இங்கு வந்து என்ன செய்கிறாய்?’ என்று கேட்டார். 

குண்டலாச்சாரி, ‘நான் இங்கே கோவில் அமைத்து, திருப்பதி சீனிவாச பெருமாளை அழைக்க போகிறேன்’ என்று கூறினான்.

🏵️கல்யாண வேங்கடரமணர்

இதனை கேட்ட சந்நியாசி, ‘உன்னால் இக்காரியம் முடியக்கூடியதல்ல. என்னிடம் ஆட்கள் அதிகம் இருக்கின்றனர். அவர்களை வைத்து கோவில் அமைத்து விடலாம். நீ நாளைக்கு இங்கே வா!’ என்று கூறினார். 

குண்டலாச்சாரி வீட்டிற்கு திரும்பி உறங்கினான். எப் போதும் போல் டங்கணாச்சாரி அதிகாலையில் எழுந்து மலைப்பக்கம் சென்றார்.

அங்கு ஒரு கோவில் இருப்பது கண்டு அதிர்ச்சி அடைந்தார். ‘ஒரேநாளில் கோவில் அமைப்பது என்பது மன்னனை தவிர வேறு யாராலும் முடியாதே! மன்னன் என்னிடம் சொல்லாமல் இக்கோவிலை கட்டி விட்டாரே’ என்று வருந்தினார். 

காலை விடிந்ததும் அரசவைக்கு சென்று கோவில் அமைக்கப்பட்டிருப்பது பற்றி கேட்டார்.

மன்னனும் வியப்பில் ஆழ்ந்தான். மலைக்குச் சென்று பார்த்தான். 

தனக்கே தெரியாமல் விஷ்ணு ஆலயம் கட்டியவனை கண்டுபிடித்து தண்டிப்பதாக கூறிவிட்டு சென்றான். டங்கணாச்சாரி, கடும் கோபத்தில் இருந்தார். அன்று இரவு மலைக்குச் சென்றார்.

கோவில் கட்டியவர்கள் எப்படியும் வருவார்கள் என்பதால் அங்கு பதுங்கி இருந்தார். அப்போது குண்டலாச்சாரி ஆயுதங்களை எடுத்துக்கொண்டு கோவில் வாசலில் நுழைந்தான். 

இருட்டில் யார் என்று அறியாமல் டங்கணாச்சாரி, சிறுவன் குண்டலாச்சாரியை வாளால் வெட்டி வீழ்த்தினார்.

அதன் பிறகு யாரும் வராததால் வீட்டிற்கு வந்து உறங்கினார். மறுநாள் காலையில் தன் மகனை காணாது சுந்தராம்பிகை துடித்தாள். 

இதற்கிடையில் மலையின் மீது தலை துண்டித்து கிடந்த குண்டலாச்சாரியை, அந்த பகுதி மக்கள் பார்த்து தூக்கி வந்தனர். பெற்றோர் கதறி அழுதனர். அப்போது அங்கு ஒரு சந்நியாசி தோன்றினார்.

அவர் டங்கணாச்சாரியைப் பார்த்து, ‘கொஞ்சம் துளசி இலையைப் பறித்துக் கொண்டு வா!. உன் மகனை பிழைக்க வைக்கிறேன்’ என்று கூறினார்.   

அதைக்கேட்டதும் டங்கணாச்சாரி, தனது இரு காதுகளையும் பொத்திக்கொண்டு ‘நான் துளசியை கையால் தொடமாட்டேன்’ என்றார்.

இதனை கேட்ட மக்கள் கோபம் அடைந்து ‘இந்த இக்கட்டான நேரத்திலும் நீர் வைராக்கியம் பேசுவது சரியல்ல’ என்று சொல்லவும், அரைமனதுடன் துளசியை பறித்துக்கொண்டு வந்து கொடுத்தார் டங்கணாச்சாரி.

அதை வாங்கிய சந்நியாசி, குண்டலாச்சாரியின் தலையையும் உடலையும் சேர்த்து வைத்து கழுத்து பகுதியில் துளசி சாற்றை பிழிந்து ஊற்றினார். உடனே குண்டலாச்சாரி உயிர் பெற்று எழுந்தான். 

அதனை கண்டோர் அனைவரும் வியப்பில் ஆழ்ந்தனர். பெருமாளின் பெருமையை போற்றிப் புகழ்ந்தனர்.

சுந்தராம்பிகை அடைந்த மகிழ்ச்சிக்கு அளவேயில்லை. தனது மகனுக்கு உயிர் கொடுத்த சந்நியாசியின் பாதங்களில் விழுந்து வணங்கினாள். 

கோவில் கட்டப்பட்ட நிகழ்ச்சியையும், தான் வெட்டப்பட்ட நிகழ்ச்சியையும் குண்டலாச்சாரி தனது பெற்றோர் முன்னிலையில் எடுத்துக்கூறினான்.

அதனை கேட்டு அனைவரும் மகிழ்ந்தனர். சிறுவன், அவனது பெற்றோர், மன்னன் உள்பட பலரும் சந்நியாசியுடன் மலையேறிச் சென்றனர். ஆனால் மலை மீது சென்றவுடன் சந்நியாசி மறைந்து விட்டார்.

குகையின் நடுவே பகவான் திருப்பதி வெங்கடேச பெருமாள் காட்சியளிப்பதை கண்டு அனைவரும் வணங்கினர். 

அப்போது அசரீரி ஒலித்தது. ‘குண்டலாச்சாரி என் மீது கொண்டிருந்த அளவற்ற நம்பிக்கையைக் கண்டு மகிழ்ந்ததால்தான், நான் இங்கே பிரசன்னமாகி இருக்கிறேன். 

இனி நீங்கள் உங்களது பிரார்த்தனைகளை இங்கேயே செலுத்துங்கள். நான் மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொள்கிறேன்’ என்று கூறியது பெருமாள் இல்லாமல் வேறு யாராக இருக்கும்.?    

கருணை வள்ளலாக கரூர் தான்தோன்றிமலை மீது அமர்ந்து பக்தர்களுக்கு அருள் புரிந்து வரும் கல்யாண வேங்கடரமண சுவாமியை வணங்கி வாருங்கள். 

ஓம் நமசிவாய 
படித்து பகிர்ந்தது 
இரா இளங்கோவன் 
நெல்லிக்குப்பம். 

Thursday, May 29, 2025

சிறப்புவாய்ந்த 28 சிவபெருமான் ஆலயங்கள்.



முக்கியமான 28 சிவன் கோயில்களைப் பற்றி இங்கே காண்போம்.
திருச்சிற்றம்பலம்
அவனருளாலே
எல்லாம் சிவன் செயல்

*திருச்சிற்றம்பலம்*
முப்பொழுதும்... *நற்றுணையாவது நமசிவாயவே*

சிவநெறி  தவநெறி...

**திருச்சிற்றம்பலம்**
🙌🏾அவனருளாலே👐🏻
**சிவமே தவம்  **
**தவமே சிவம்  **

அன்பிற்கினிய சொக்கநாத பெருமானே 

அகில உலகத்தை காத்தருளும் சொக்கநாத பெருமானே 

உம் பேரருளோடு
உம் திருவடியை பணிகிறேன்

எவனடி சேர்ந்தார்க்கும் அழிவுண்டாம் அழிவில்லை 
சிவனடி சேர்ந்தார்க்கு

🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
அகில உலகை ஆளும் சொக்கநாத பெருமானே

அண்டத்தையும் பிண்டத்தையும் காக்கும் 
ஆலவாய் அரசனே உம் திருவடி போற்றி போற்றி
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

1திருவதிகை வீரட்டானேசுவரர் கோயில்

கடலூர் மாவட்டத்தில் பண்ருட்டியிலிருந்து 2 கிமீ தொலைவில் திருவதிகை வீரட்டானேசுவரர் கோயில் அமைந்துள்ளது. இந்தக் கோயில் தமிழ்நாட்டில் உள்ள எட்டு வீரட்ட கோவில்களிள் ஒன்றாகும். இத்திருக்கோயிலின் கர்ப்பகிரக விமானத்தை பார்த்து இராஜ இராஜ சோழன் பிற்காலத்தில் தஞ்சையில் பெரிய கோயிலைக் கட்டியதாக வரலாற்று ஆசிரியர்கள் கூறுகிறார்கள். அதேபோல பெரிய கோயில் விமான நிழல் கீழே விழாது என்ற நம்பிக்கை இருப்பது போல், திருவதிகை கோயிலின் நிழலும் தரையில் விழாதபடி கணித சாஸ்திர முறையுடன் பல்லவர்களால் இதை கட்டியதாக சொல்லப்படுகிறது.

 

2 நெல்லையப்பர் ஆலயம், திருநெல்வேலி

திருநெல்வேலியிலுள்ள நெல்லையப்பர் ஆலயமானது, தமிழகத்திலேயே மிகப்பெரிய சிவாலயமாகும். இது பாண்டிய மன்னர்களால் கி.பி. 700 ஆம் ஆண்டில் கட்டப்பட்டது. சிவபெருமானுக்கும், பார்வதி தேவிக்கும் தனித்தனியே கட்டப்பட்ட இரண்டு கோயில்களை உள்ளடக்கிய பிரம்மாண்டமான கோயில் இது. இரண்டு கோயில்களும், 17-ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட சங்கிலி மண்டபம் என்னும் மண்டபத்தால் இணைக்கப்பட்டுள்ளன. இக்கோவிலின் கோபுரங்களும் 17-ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டவையாகும்.

3 தியாகராஜர் கோயில், திருவொற்றியூர்

சென்னையிலிருந்து 16 கி.மீ தொலைவில் உள்ள திருவொற்றியூரில் தியாகராஜர் கோயில் அமைந்துள்ளது. இந்தக் கோயில் பல்லவ மன்னர்களால் 7-ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டதாக நம்பப்படுகிறது. எனினும் அதற்கு பிறகு 11-ஆம் நூற்றாண்டில் சோழர்களால் பெரிதாக புதுப்பித்து கட்டப்பட்டுள்ளது. இங்கு பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ள சிவபெருமானின் விக்கிரகமும், திருவாரூர் தியாகராஜசுவாமி திருகோயிலில் உள்ள சிவன் சிலையும் ஓரே மாதிரியான தோற்றத்தை கொண்டவை.

4 ஸ்ரீ மாயூரநாதசுவாமி கோவில், மயிலாடுதுறை

மயிலாடுதுறையின் மிகபெரிய கோயிலாக ஸ்ரீ மாயூரநாத சுவாமி கோவில் திகழ்கிறது. இந்தக் கோயில் சுவர்களிலுள்ள மிகப் பழமையான பதிவுகளாக குலோத்துங்க சோழரின் பதிவுகள் உள்ளன. அதன் ஆரம்ப கட்டுமானத்திற்கு பிறகு, சற்றே புனரமைக்கப்பட்ட இந்த கோயில் சோழர்களின் கட்டிடக்கலைக்கு சான்றாக இன்னமும் விளங்குகிறது. இக்கோயிலின் நடராஜ பெருமானுக்காக ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்படும் மாயூரா நாட்டியாஞ்சலி நிகழ்ச்சி எண்ணற்றவர்களை இக்கோவிலை நோக்கி ஈர்த்துவிடும். இந்த திருவிழாவை, சிதம்பரம் நாட்டியாஞ்சலி திருவிழா நடக்கும்

ஜம்புகேசுவரர் கோயில், திருவானைக்காவல்

திருவானைக்காவல் கோயிலின் மூலவரான ஜம்புகேஸ்வரர் 5-ஆம் உள் பிரகாரத்தில் சுயம்புவான அப்புலிங்கமாக எழுந்தருளியுள்ளார். அதாவது வடமொழியில் ‘அப்பு’ என்பதன் பொருள் நீர் என்பதாகும். இந்த லிங்கம் இருக்குமிடம் தரைமட்டத்திற்க்குக் கீழே இருப்பதால் எப்போதும் தண்ணீர் கசிவு இருந்துகொண்டே இருக்கும். முற்றிய கோடையில், காவேரி வறண்டிருக்கும் நேரங்களிலும், இந்நீர்க்கசிவு வற்றுவதில்லை என்று சொல்லப்படுகிறது. 18 ஏக்கர் பரப்பளவை கொண்ட இந்த கோயில் ஆரம்ப கால சோழ மன்னர்களில் ஒருவரான கோச்செங்க சோழநாள் கட்டப்பட்டதாகும். இங்கு அம்மன் அகிலாண்டேஸ்வரியின் தனி சன்னதி நான்காம் பிரகாரத்தில் உள்ளது.

6 பிரகதீஸ்வரர் கோயில், தஞ்சாவூர்

தமிழ்நாட்டில் ஆயிரம் ஆண்டுகளுக்கு கட்டப்பட்ட கோயில்கள் எத்தனை இருந்தாலும் தஞ்சை பெரிய கோயிலுக்கு ஈடு இணை ஏதுமில்லை. வட நாடெங்கும் பயணித்து பல வெற்றிகளை சுமந்து வந்த ராஜராஜ சோழன் தான் வழியில் கண்ட பல்வேறு சிற்பக்கலை மரபுகளைச் சேர்ந்த கோயில்களின் தோற்றத்தில் கவரப்பட்டு அவற்றினும் சிறந்த ஒரு உன்னத கலைப்படைப்பை தனது ராஜ்ஜியத்தில் நிர்மாணிக்க விரும்பி மிகுந்த முனைப்புடன் இந்தக் கோயிலை உருவாக்கியிருக்க வேண்டும் என்பது சில வரலாற்று ஆசிரியர்களின் கருத்து. வார்த்தைகளில் விவரிக்க முடியாத நுண்ணிய வடிவமைப்பு, கற்பனா சக்தி, மேலாண்மை துல்லியம், பொறியியல் நுணுக்கங்கள், அப்பழுக்கற்ற ஒழுங்கு, துளியும் பிசகாத கணக்கீடுகள் போன்ற அறிவியல் பூர்வமான நுட்பங்கள் இந்த ஒட்டுமொத்த கோயிலின் உருவாக்கத்தில் நிரம்பியுள்ளன என்றால் அது மிகையில்லை.

7 தில்லை நடராஜர் கோயில், சிதம்பரம்

மனிதனின் உடம்பும் கோயில் என்பதனை விளக்கும் வகையில் சிதம்பரம் நடராஜர் கோயில் அமைந்துள்ளது. மனித உடலானது அன்னமயம், பிராணமயம், மனோமயம், விஞ்ஞானமயம், ஆனந்தமயம் என்னும் ஐந்து சுற்றுகளை கொண்டது. அதன் அடிப்படையில் நடராஜர் கோயிலில் ஐந்து திருச்சுற்றுகள் என்னும் பிரகாரங்கள் உள்ளன.

அதேவேளை மனிதனுக்கு இதயம் (ஆகாயம்) இடப்புறம் அமைந்திருப்பது போல் மூலவர் இருக்கும் கருவறை கோயிலின் இடதுபுறமாக சற்று நகர்ந்து இருக்கிறது.

அதோடு சராசரியாக ஒரு மனிதன் ஒரு நாளைக்கு 21,600 முறை இதயத்தின் உதவியால் மூச்சுவிடுகிறான் என்பதை குறிக்கும் விதமாக கருவறையின் மீதுள்ள கூரை 21600 ஓடுகளால் வேயப்பட்டு இருக்கிறது.

8 மருந்தீஸ்வரர் கோயில், சென்னை

சோழ நாட்டை பல்லவம் ஆந்திரம் போன்ற ராஜ்ஜியங்களுடன் இணைத்த வடப்பெருவழி எனும் முக்கிய சாலையில் இந்த கோயில் இருந்ததை வரலாற்றுச்சான்றுகள் சுட்டிக்காட்டுகின்றன. அந்த பாதைதான் இன்றைய ஈ.சி.ஆர் எனும் கிழக்குக்கடற்கரைச்சாலையாக உருமாறியுள்ளது. பரபரப்பான சென்னையின் நடுவே திருவான்மியூரில் அமைதி தவழும் ஆன்மீகச்சுழலை கொண்டுள்ள மருந்தீஸ்வரர் கோயில் சென்னைக்கு வரும் பயணிகள் அவசியம் விஜயம் செய்ய வேண்டிய புராதன ஆன்மீகத்தலமாகும்.

9 ஸ்ரீ இராமநாதசுவாமி கோவில், ராமேஸ்வரம்..

12 ஜோதிர்லிங்க கோயில்களில் தமிழ்நாட்டில் அமைந்துள்ள ஒரே ஜோதிர்லிங்க ஆலயமாக இராமேஸ்வரத்தில் உள்ள ஸ்ரீ இராமநாதசுவாமி கோவில் புகழ்பெற்றுள்ளது. மேலும் இராமேஸ்வரம் என்ற பெயர் வரக்காரணமாக ஸ்ரீ இராமநாதசுவாமி கோவிலை குறிப்பிடலாம். அதாவது இராவணனை கொன்ற பாவத்தினை நீங்க இராமன் மணல்களால் ஆன லிங்கத்தை இங்கு பிரதிஷ்டை செய்து வழிபட்டார் என்று நம்பப்படுகிறது. இதன் காரணமாக இராமன் ஈஸ்வரனை வணங்கிய இடம் என்ற பொருளில் ‘இராம+ஈஸ்வரம்’ இராமேஸ்வரம் ஆனது

10அண்ணாமலையார் கோயில், திருவண்ணாமலை

எட்டு திக்கிலும் அஷ்டலிங்கங்களை கொண்ட எண்கோண அமைப்பில் அமைந்திருக்கும் திருவண்ணாமலை நகரில் பஞ்சபூத ஸ்தலங்களின் நெருப்புக்கான ஸ்தலமாக அண்ணாமலையார் கோயில் அறியப்படுகிறது. இக்கோவில் அக்னியை வெளிப்படுத்துவதாகவும், சிவபெருமான் இங்கு அக்னி லிங்கமாகவும் வணங்கப்படுகிறார். அதோடு உண்ணாமலையம்மனாக சிவபெருமானின் துணைவியாரான பார்வதி தேவியும் இங்கு வழிபடப்படுகின்றார்.

11 கபாலீசுவரர் கோயில், சென்னை

சென்னையின் பழமையான மைலாப்பூர் பகுதியில் இந்த கபாலீசுவரர் கோயில் வீற்றுள்ளது. இந்த கோயில் சிவபெருமான் மற்றும் அவரது துணைவியார் பார்வதி தேவிக்காக அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. இன்று சாந்தோம் சர்ச் உள்ள இடத்தில் வீற்றிருந்த கபாலீசுவரர் கோயிலின் ஆதி அமைப்பு போர்த்துகீசியர்களால் சிதைக்கப்பட்ட பிறகு தற்போது நாம் காணும் கோயில் விஜயநகர மன்னர்களால் 16ம் நூற்றாண்டில் கட்டப்பட்டிருக்கலாம் என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

12 ஏகாம்பரநாதர் கோயில், காஞ்சிபுரம்

600 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட இக்கோயில், காஞ்சிபுரத்தின் வடக்குப் பகுதியில் அமைந்துள்ளது. இந்த கோயில் சிவபெருமானுக்கான பஞ்சபூத கோயில்களுள், நிலத்தை குறிக்கும் பஞ்ச பூத ஸ்தலமாகும். இக்கோயிலின் வட்டக் கோபுரம் 59 அடி உயரத்தில் அமைந்திருப்பதோடு இந்தியாவின் உயரமான கட்டுமானங்களுள் ஒன்றாக விளங்குகிறது.

13 வேதகிரீஸ்வரர் கோயில், திருக்கழுக்குன்றம்

சென்னையிலிருந்து 67 கி.மீ தொலைவில் உள்ள திருக்கழுக்குன்றத்தில் அமைந்துள்ள வேதகிரீஸ்வரர் கோயில் 1400 ஆண்டுகள் பழமையானது. இங்கு காணப்படும் ஒரு கல் மண்டபம் முதலாம் மகேந்திரவர்ம பல்லவன் (கி.பி. 610-640) காலத்தில் கட்டப்பட்ட சிவனுக்குரிய குடைக்கூளி என்று தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர். அதுமட்டுமல்லாமல் 7-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த பல்லவர், சோழர், பாண்டியர், ராஷ்டிரகூடர் காலத்திய கல்வெட்டுக்களும் இங்கே கிடைத்துள்ளன.

14 தியாகராஜஸ்வாமி திருக்கோயில், திருவாரூர்

சோழ மன்னர்களால் கட்டப்பட்டு தமிழ்நாட்டின் மிகப் பழமையான கோயில்களுள் ஒன்றாக திகழ்ந்து வரும் தியாகராஜஸ்வாமி திருக்கோயில் 1-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தது.இக்கோயிலின் மூலஸ்தானத்தை இரண்டாகப் பிரித்து, ஒரு பகுதியை “வன்மிகிநாதர்” என்ற பெயரில் வழங்கப்படும் சிவபெருமானுக்கும், மற்றொரு பகுதியை தியாகராஜருக்கும் அர்ப்பணித்துள்ளனர். வன்மிகிநாதருக்காக அர்ப்பணிக்கப்பட்டுள்ள பகுதியானது, தியாகராஜருக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ள பகுதியைக் காட்டிலும் பழமை வாய்ந்ததாகும். வன்மிகிநாதரின் சந்நிதியில், வழக்கமான லிங்கத்துக்கு பதிலாக, ஒரு புற்று நிறுவப்பட்டுள்ளது.

15 ஸ்ரீ கும்பேஸ்வரர் ஆலயம், கும்பகோணம்

கும்பகோணத்தில் அமைந்துள்ள ஸ்ரீ கும்பேஸ்வரர் ஆலயம் ஒரு சிவாலயமாகும். இக்கோவிலில் தான் ஆண்டுதோறும் மாசிமக விழாவும், 12 ஆண்டுகளுக்கொருமுறை மகாமகப் பெருவிழாவும் கொண்டாடப்படுகின்றன. இக்கோவில் 1300 ஆண்டுகள் பழமையானதென நம்பப்படுகிறது. இடைக்காலச் சோழர்கள் இந்நகரத்தை ஆண்டபொழுதிலிருந்து இக்கோவில் உள்ளது. இக்கோவிலில் சிவபெருமான் ஆதி கும்பேஸ்வரர் என்னும் பெயருடன் வழிபடப்படுகிறார்.

16திருவெண்காடு

தமிழ்நாட்டிலுள்ள ஒன்பது நவக்கிரக ஸ்தலங்களுள், இது நான்காவது ஸ்தலமாகும். இந்தக் கோயில் 1000 முதல் 2000 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டதாக நம்பப்படுகிறது. இக்கோயிலில், நவக்கிரகங்களுள் ஒருவரும், பக்தர்களுக்கு அறிவும், செல்வமும் வழங்கக்கூடியவருமான புதன் பகவானுக்கு தனி சந்நிதி அமைத்து வணங்கி வருகின்றனர். இங்கு சிவபெருமான், “ஸ்வேதாரண்யேஸ்வரர்” என்ற திருப்பெயருடன், மூலவராக இருந்து அருள் பாலிக்கிறார். பார்வதி தேவி, “பிரம்மவித்யாநாயகி” என்ற பெயரில் வழிபடப்படுகிறார்.

17 ஸ்ரீ கம்பஹரேஸ்வரர் ஆலயம், கும்பகோணம்

கும்பகோணத்திற்கு அருகில் உள்ள திருபுவனம் என்னும் கிராமத்தில் ஸ்ரீ கம்பஹரேஸ்வரர் ஆலயம் அமைந்துள்ளது. 13-ஆம் நூற்றாண்டில் ஆட்சிசெய்த மன்னன் குலோத்துங்கனால் இக்கோவிலின் கட்டுமானப் பணிகள் தொடங்கப்பட்டன. அவருக்குப் பிறகு வந்த சேர, சோழ, பாண்டிய வம்சத்தைச் சேர்ந்த மன்னர்கள் அப்பணியைத்தொடர்ந்து கட்டி முடித்தனர். சோழர்களால் புதுப்பிக்கப்பட்ட கடைசிக்கோவில் இதுவென வரலாற்றாசிரியர்கள் கருதுகின்றனர்.

18 பழமலைநாதர் கோயில், விருத்தாச்சலம்

கடலூர் மாவட்டத்திலுள்ள விருத்தாசலத்தில் அமைந்துள்ள பழமலைநாதர் கோயில் சைவத் திருத்தலங்களில் முக்கியமானதாகும். இந்தக் கோயிலில் 5 கோபுரம், 5 நந்தி, 5 தேர், 5 கொடிமரம் என எல்லாமே ஐந்து ஐந்தாக அமைந்துள்ளது. இத்தலம் காசியை விட வீசம் (தமிழ் அளவு : 1/16) புண்ணியம் அதிகம் கொண்டதென நம்பப்படுகிறது. இதனால் விருத்தகாசி என்கிற சிறப்புப்பெயரும் இவ்வூருக்கு உண்டு

19 சோமேஸ்வரர் ஆலயம், கும்பகோணம்

சோமேஸ்வரர் ஆலயம் கும்பகோணத்தில் அமைந்துள்ள ஒரு சிவாலயமாகும். இந்தக் கோயிலின் கட்டிட வடிவமைப்பை பார்க்கும் பொழுது 13-ஆம் நூற்றாண்டு திராவிடக் கட்டிடக் கலை உடனடியாக நினைவுக்கு வருகிறது. இக்காலத்தில்தான் பிற்காலச் சோழர்கள் கும்பகோணத்தை ஆண்டு வந்தனர். உண்மையில் இக்கோவில் சிவபெருமானையும் பார்வதிதேவியையும் வழிபட்டுவந்த சோழர்களால் அடிப்படையில் கட்டப்பட்டது. பிறகு வந்த மன்னர்கள் இக்கோவிலின் கட்டுமானத்தில் வெவ்வேறு வடிவமைப்பை சேர்த்துக் கொண்டனர். ஆயினும் அடிப்படை வடிவமைப்பு சோழர் கட்டிடக் கலையே ஆகும்.

20 திருவாலீஸ்வரர் கோயில்

சென்னையிலிருந்து 13 கி.மீ தூரத்தில் உள்ள பாடி என்ற பகுதியில் திருவாலீஸ்வரர் கோயில் அமைந்துள்ளது. இந்தக் கோயிலில் சிவபெருமான் திருவாலீஸ்வரர் வடிவத்தில் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். இங்கு சிவன் சன்னதியை தவிர விநாயகர், பாலசுப்பிரமணியர், சூரிய பகவான் சன்னதிகளும் உள்ளன. அதோடு இங்குள்ள விநாயகர் சன்னதியில் விநாயகர் தொந்தி இல்லாமல் காட்சியளிக்கிறார்.

21 ஐராவதீஸ்வரர் கோயில்

கும்பகோணத்திலிருந்து 5 கிலோமீட்டர் தொலைவில் உள்ள தாராசுரத்தில் ஐராவதீஸ்வரர் கோயில் அமைந்துள்ளது. கங்கைகொண்ட சோழபுரம் மற்றும் பிரகதீஸ்வரர் கோவில்களில் இருப்பதை விட சிறியதாக இருந்தாலும், மிகவும் நுணுக்கமான வேலைப்பாடுகள் கொண்டதாக திகழ்கிறது ஐராவதம் கோவில் சிற்பங்கள். ஒரு தேரை, குதிரைகள் இழுத்துச் செல்வது போல அமைந்திருக்கும் ஐராவதீஸ்வரர் கோயில், நிச்சயமாக நாம் அனைவரும் பார்க்க வேண்டிய அருமையான திருக்கோவில் ஆகும். துர்வாச முனிவரின் சாபத்தினால் தன்னுடைய நிறத்தை இழந்த இந்திரனின் யானை ஐராவதம், இங்கு வந்து சிவனை வழிபட்டு, சாப விமோச்சனம் பெற்றதாம். அதனால், இந்த கோவிலுக்கு ஐராவதீஸ்வரர் கோயில் என்ற பெயர் வந்ததாக கூறப்படுகிறது.

22 காசி விஸ்வநாதர் கோயில்

கும்பகோணம் மகாமகம் குளத்துக்கு அருகிலேயே சிவாலயமான காசி விஸ்வநாதர் கோயில் அமைந்துள்ளது. இந்தக் கோயிலில் சிவன் சன்னதியை தவிர நவகன்னியர்களான கங்கை, யமுனை, சரஸ்வதி, நர்மதை, ,காவேரி, கிருஷ்ணா, கோதாவரி, துங்கபத்ரா, சரயு ஆகிய புனித நதிகளுக்கும் சன்னதிகள் உள்ளன. இக்கோயில் குறித்து தேவாரத்தில் பாடல் இடம்பெற்றிருப்பதுடன், இராமாயண காலத்திலேயே இராமரும், லக்ஷ்மணனும் இங்கு சிவனை வழிபட்டதாக நம்பப்படுகிறது.

 23 கல்யாண பசுபதீஸ்வரர் கோவில், கரூர்

சோழர்கள் ஆட்சிசெய்த காலத்தில் கல்யாண பசுபதீஸ்வரர் கோவில் கட்டப்பட்டது. ஐந்து அடி உயரம் உடைய பசுபதீஸ்வரர் லிங்கத்திற்கு இக்கோவில் பெயர்பெற்றது. மேலும் இங்கே ஐந்து சிலைகளின் கூடுகை இருக்கிறது. ஒரு பசுவின் காம்பில் இருந்து வடியும் பாலில் குளிப்பதைப் போன்று லிங்கம் கர்ப்பக்கிரகத்தில் காட்சியளிக்கிறது.

24 கைலாசநாதர் கோயில், காஞ்சிபுரம்

காஞ்சிபுரம் கைலாசநாதர் கோயில் 8-ஆம் நூற்றாண்டில் பல்லவ மன்னன் இராஜசிம்மனால் கட்டத் தொடங்கப்பட்டதெனினும், அவனுடைய மகனான 3-ஆம் மகேந்திரவர்மனே கட்டிடப் பணிகளை முடித்ததாக வரலாறு கூறுகிறது. அதன் பின்னர் 14-ஆம் நூற்றாண்டில் விஜயநகர பேரரசின் காலத்தில் சில பகுதிகள் சேர்க்கப்பட்டுள்ளன.

25 பாடலீஸ்வரர் கோவில், திருப்பாதிரிப்புலியூர்

கடலூர் நகரின் ஒரு பகுதியாக உள்ள திருப்பாதிரிப்புலியூரில் பாடலீஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. இங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக தோன்றியதாக நம்பப்படுகிறது. இந்தக் கோயில் சோழர்களால் கட்டப்பட்டதோடு, பல்லவ மன்னர்கள் மற்றும் பாண்டியர்கள் காலத்தில் புதுப்பிக்கப்பட்டுள்ளது. சிவபெருமானுக்காக கட்டப்பட்டிருக்கும் பாடலீஸ்வரர் கோவில் மிகவும் புனிதமான சைவத் தலங்களில் ஒன்றாக கருதப்படுகிறது.

26 காசிவிஸ்வ நாதர் கோவில், தென்காசி

காசிவிஸ்வ நாதர் கோவில் குற்றாலத்திலிருந்து 8 கி. மீ தொலைவில் தென் காசியில் அமைந்துள்ளது. இந்தக் கோயில் கி.பி 1455-ஆம் ஆண்டு பராக்கிரம பாண்டியனால் கட்டப்பட்டது. புராணங்களின் படி இந்த மனனன் காசிக்கு செல்ல விரும்பியதாகவும், ஆனால் அந்நகரம் முஸ்லீம்களின் கட்டுப்பாட்டின் இருந்ததால் காசியில் உள்ள அதே அசல் கோவிலின் மாதிரியாக இந்தக் கோயிலை உருவாக்கியதாக சொல்லப்படுகிறது.

27 திருவாப்பனூர் ஆப்புடையார் கோயில், மதுரை
மதுரை நகரின் ஒரு பகுதியான செல்லூர் என்ற இடத்தில் திருவாப்பனூர் ஆப்புடையார் கோயில் அமைந்துள்ளது. சோழாந்தகன் என்ற பாண்டிய மன்னன் வேட்டையாடச் சென்றபோது திருவாப்புடையாரை (சுயம்புலிங்கத்தைக்) கண்டு முதன்முதலில் தரிசனம் செய்துள்ளான். அப்பாண்டியனது மகன் சுகுணன், திருவாப்புடையாருக்குக் கோயில் எடுப்பித்தான் என்று சொல்லப்படுகிறது.

28 மாசில்லாமணீஸ்வரர் கோயில், திருமுல்லைவாயில்

சென்னையின் அம்பத்தூர் பகுதியிலிருந்து 2 கி.மீ தொலைவில் உள்ள திருமுல்லைவாயிலில் மாசில்லாமணீஸ்வரர் கோயில் கோயில் அமைந்துள்ளது. இந்தக் கோயிலில் உள்ள நந்தி சிலை வழக்கத்துக்கு மாறாக சிவபெருமானை நேராக நோக்காமல், கிழக்கு நோக்கி அமைந்திருக்கிறது. 

ஓம் நமசிவாய
 படித்து பகிர்ந்தது 
இரா இளங்கோவன் 
நெல்லிக்குப்பம். 

Wednesday, May 28, 2025

திருமணத்தடை நீங்க இக்கோயிலில் பிரார்த்தனை செய்கின்றனர்.



சிவபெருமானின் நடனக்காட்சி... குழந்தை வடிவில் எமதர்மன்...!!
                
அருள்மிகு ஞீலிவனேஸ்வரர் திருக்கோயில்...!!

 *இந்த கோயில் எங்கு உள்ளது?* 

திருச்சி மாவட்டத்தில் உள்ள திருப்பைஞ்ஞீலி என்னும் ஊரில் அருள்மிகு ஞீலிவனேஸ்வரர் திருக்கோயில் அமைந்துள்ளது.

 *இந்த கோயிலுக்கு எப்படி செல்வது?* 

திருச்சியில் இருந்து சுமார் 23 கி.மீ தொலைவில் திருப்பைஞ்ஞீலி உள்ளது. திருப்பைஞ்ஞீலி பேருந்து நிறுத்தத்தில் இருந்து நடந்து செல்லும் தொலைவில் இத்திருக்கோயில் அமைந்துள்ளது.

 *இந்த கோயிலின் சிறப்புகள் என்ன?* 

இத்தலத்தில் சிவன் சுயம்பு லிங்கமாக எழுந்தருளுகிறார்.

இத்தலத்தில் எமனுக்கு தனிச்சன்னதி இருக்கிறது. சிவன் மற்றும் அம்பாளுடன் முருகன் இருக்க, சுவாமி பாதத்தின் கீழ் குழந்தை வடிவில் எமதர்மன் இருக்கிறார். 

மூலவர் சன்னதியை அடுத்துள்ள அர்த்த மண்டபத்தில் வசிஷ்ட முனிவருக்கு சிவபெருமான் நடனக்காட்சி அருளியுள்ளார். அதனால் இத்தலத்திற்கு மேலச்சிதம்பரம் என்ற பெயர் வந்தது.

மற்ற தலங்களில் இல்லாத சிறப்பு இங்கு உண்டு. அம்மனுக்கு இரண்டு சன்னதிகள் அமைக்கப்பட்டு உள்ளது. ஒரு சன்னதியில் நீள்நெடுங்கண் நாயகியும், மற்றொரு சன்னதியில் விசாலாட்சி அம்மனும் எழுந்தருளி காட்சியளிக்கின்றனர். 

 *வேறென்ன சிறப்பு?* 

இக்கோயிலில் திருமண தோஷம் உள்ளவர்கள் வாழை மரத்திற்கு தாலி கட்டி பரிகார பூஜைகள் செய்கின்றனர்.

இத்தலத்தில் அறுபதாம் கல்யாணமும், ஆயுள் விருத்தி ஹோமமும் அதிகளவில் நடத்துகின்றனர்.

இராவணன் வந்து வழிபட்டுச் சென்றதால் இக்கோயிலின் ராஜகோபுரம் இராவணன் திருவாயில் கோபுரம் என்றே அழைக்கப்படுகிறது. 

இக்கோயிலுக்குள்ளும், வெளிப்பகுதிகளிலும் சப்த தீர்த்தம், விசாலத் தீர்த்தம், எமத் தீர்த்தம், கல்யாணத் தீர்த்தம், அக்னி தீர்த்தம், அப்பர் தீர்த்தம், மணிகர்ணிகை தீர்த்தம் ஆகிய 7 தீர்த்தங்கள் உள்ளன.

 *என்னென்ன திருவிழாக்கள் கொண்டாடப்படுகிறது?* 

சித்திரையில் 10 நாட்கள் பிரம்மோற்சவமும், அப்பர் குரு பூஜையும், தைப்பூசத்தில் எமனுக்கு சிறப்பு பூஜையும் நடைபெறுகிறது.

நீள்நெடுங்கண் நாயகி சன்னதியில் நவராத்திரி திருவிழா வெகு சிறப்பாக கொண்டாடப்படுகிறது.

 *எதற்கெல்லாம் பிரார்த்தனைகள் செய்யப்படுகிறது?* 

இழந்த பணி வாய்ப்புகள் கிடைக்க, பதவி உயர்வு கிடைக்க, ஆயுள் நீடிக்க இங்கு பிரார்த்தனைகள் செய்யப்படுகிறது. எமன் சன்னதியில் ஆயுள் ஹோமங்கள் செய்து பிரார்த்தனை செய்கின்றனர்.

திருமணத்தடை நீங்க இக்கோயிலில் பிரார்த்தனை செய்கின்றனர்.

 *இத்தலத்தில் என்னென்ன நேர்த்திக்கடன்கள் செலுத்தப்படுகிறது?* 

பக்தர்கள் தங்களது வேண்டுதல்கள் நிறைவேறியவுடன் அன்னதானம் செய்து நேர்த்திக்கடனை செலுத்துகின்றனர்.

ஓம் நமசிவாய 

படித்து பகிர்ந்தது 
இரா இளங்கோவன் 
நெல்லிக்குப்பம். 

Tuesday, May 27, 2025

மூன்று கால் சித்தர் பிருங்கிமலைசித்தர்

மூன்று கால் சித்தர் பிருங்கிமலைசித்தர்
உலகிலேயே மூன்று கால்களை உடைய முனிவர் என்று போற்றப்படும் சிறப்பு வாய்ந்த பிருங்கிரிஷி சிவபெருமானை தவிர பிற தெய்வத்தை வழிபடக்கூடாது என்கிற கொள்கை கொண்டவர். 

இவர் நாள்தோறும் சிவனை மட்டும் வழிபட்டு வந்தார்.

அருகில் உள்ள அம்பாளை கண்ணெடுத்தும் பார்ப்பதில்லை. இதைக்கண்ட சக்தி சிவனிடம் முறையிட்டாள். 

நாம் ஒரே உருவமாய் நிற்போம் என்று கூறி அம்மையப்பனாய் நின்றனர். 

அன்று பூஜைக்கு வந்த பிருங்கிரிஷி அம்மையும் அப்பனும் ஓர்உருவாய் இருப்பதைக் கண்டு யோசித்து பின்னர் வண்டு உரு எடுத்து அம்மையப்பரின் தொப்புள் வழியே துளையிட்டு சிவனை மட்டும் வலம் வந்தார். 

இதைகண்ட சினம் உற்ற அம்மை பிருங்கியின் உடற்பாகத்தில் உள்ள தனது கூறாகிய சக்தியை நீக்கினாள்.

அதனால் வலிமை இழந்த பிருங்கி தடுமாறினார்.

உடனே சிவ பெருமான் வலிமையுள்ள மூன்றாவது கால் ஒன்றை கொடுத்து அருளினார் . 

அருளியதோடு முனிவரே சக்தியில்லையேல் சிவன் இல்லை என்பதை உணர்ந்திர்ப்பாய்.

சிவசக்தி வழிபாடே சிறந்தது என்பதை புரிந்து கொள் என்றார். 

பிரிங்கியும்...

அப்பனே என்னை அறியாது நான் செய்த இத்தவறுகளை மன்னித்தருள்வாய் என்றும் பராசக்தியிடம் மன்னிப்பும் கோரினார். 

அறியாமற்செய்த தவறை மன்னித்தேன் என அன்னையும் அருள் கூறினார். 

(திருச்சி மாவட்டம் திருவானைக்காவல் 
ஜம்புகேஸ்வரர் கோவிலில் சிவலிங்க சன்னதிக்கு இடது புறம் அமைந்துள்ள வெளிப்பிரகாரத் தூண்களில் இந்த சிற்பம் உள்ளது.
பிருங்கிமலைசித்தர் பிருங்கிமகரிஷி பிருங்கிமுனிவர் பிருங்கிமலை....


சிவ ஆலயங்களில் கனி தரும் தல விருட்சங்கள்.

பக்தியை ஏற்படுத்தும் ஆலயங்களில் கனி தரும் தல விருட்சங்களைப் பற்றி தெரிந்து கொள்வோம்* .....
*ஔவையாருக்கு சுட்டபழம் உதிர்த்துத் தந்தானே முருகன், அந்த நாவல் மரம், பழமுதிர்சோலையில் தலவிருட்சமாக விளங்குகிறது. இந்த நாவல் மரம் கந்தசஷ்டி நாட்களில் மட்டுமே கனிகளைத் தருகிறது என்பது வியப்பான தகவல்.

*திருவையாற்றிலிருந்து 12 கி.மீ தொலைவில் உள்ளது சங்கம க்ஷேத்திரம் எனும் திருக்கூடலூர். ஆடுதுறைப்பெருமாள் அருளும் இத்தலத்தின் தலவிருட்சம் பலாமரம்.

*ஜம்பு முனிவரால் வளர்க்கப்பட்ட வெண்நாவல் மரத்தை தலவிருட்சமாகக் கொண்டது, ஜம்புகேஸ்வரம் எனும் திருவானைக்காவல். இத்தல ஈசனான ஜம்புகேஸ்வரரை நவகிரக ஜன்னல் என்ற அமைப்பின் மூலம் தரிசித்த பின்னரே ஆலய வலம் வருவது நடைமுறையில் உள்ளது.

*நான்கு புறங்களிலும் நான்கு வகை சுவைகளுடன் பழங்கள் தரும் அதிசய மாமரம், *காஞ்சிபுரம் ஏகாம்பரேஸ்வரர்* ஆலயத் தலவிருட்சமாகும்.

*காழிச்சீராம விண்ணகரம் எனும் *சீர்காழி தாடாளன் ஆலயத்தின்* தல விருட்சம் பலாமரம். இத்தல பெருமாளின் திருவடியின் கீழ் மகாபலியின் பேரன் நமுச்சியை தரிசிக்கலாம்.

**தஞ்சாவூர் திருப்பழனம் ஆபத்சகாயர் ஆலயத்தில்* கதலி வாழை மரமே தல விருட்சம். பங்குனி, புரட்டாசி மாத பவுர்ணமி தினங்களிலும் அதற்கு முன்பின் தினங்களிலும் சந்திரன் தன் கிரணங்களால் இத்தல ஆபத்சகாயரை ஆராதிக்கின்றார்.

**திருச்சி மாந்துறை ஆம்ரவனேஸ்வரர் ஆலயத்தில்* , பெயருக்கேற்றபடி (வடமொழியில் ஆம் என்றால் மாம்பழம்)
😮😮😮😮😮 மாமரமே தலவிருட்சம். இத்தல கோஷ்டத்தில் அருளும் துர்க்கை, தன் காலடியில் மகிஷன் இல்லாமல் அருள்வது அபூர்வமானது.

*திருநீலக்குடி மனோக்ஞ்ய நாத சுவாமி ஆலயத்தில் வன்னி, கூவிளம், நொச்சி, விளா, மாவிலங்கை ஆகிய *ஐந்து மரங்கள் தலமரங்களாகத் திகழ்வதால்* பஞ்சவில்வவனேசர் என ஈசன் வணங்கப்படுகிறார். தற்போது ஆலயத்தில் பலாமரமும் ஆறாவது தல மரமாகத் திகழ்கிறது.

*திருவையாற்றுக்குக் கிழக்கே சந்திரன் வணங்கி பேறு பெற்ற திங்களூர் கயிலாயநாதர் ஆலயத்தின் தலவிருட்சங்கள் வாழையும் வில்வமும். அப்பூதியடிகள் மகன் மூத்த திருநாவுக்கரசு பாம்பு தீண்டி இறக்க திருநாவுக்கரசர் *ஒன்றுகொலாம்* பாடி அவனை பிழைக்கச் செய்த தலம் இது.

*நாகராஜனுக்கு திருமால் திருவருள் புரிந்த *நாகப்பட்டினத்தில் அருளும் சௌந்தரராஜப் பெருமாளை* அழகியார் என ஆழ்வார்கள் போற்றிப் பாடியுள்ளனர். இங்கு தல விருட்சம் மாமரம்.

**திருக்கழுக்குன்றத்தின் தல விருட்சம்* வண்டுவகை வாழையாகும். ஐந்தாம் திருவிழாவில் வாழை மரங்கள் கட்டிய சப்பரத்தில் வேதபுரீஸ்வரர் திரிபுரசுந்தரியுடன் எழுந்தருள்வார். அச்சேவை கதலீவிருட்ச சேவை எனப்படுகிறது.

**திருவோத்தூர் வேதபுரீஸ்வரர் ஆலயத்தில்* திருஞானசம்பந்தரால் ஆண் பனைமரம் பெண் பனைமரமாகி, காய்த்த அற்புதம் நடந்தது. அந்த பனைமரமே ஆலயத்தின் தல விருட்சம். திருவோத்தூர் தலபுராணத்தில் இப்பனை மரம் ஈசனின் அர்த்தநாரீஸ்வர திருக்கோலம் கொண்டது என குறிப்பிடப்பட்டுள்ளது.

**குற்றாலம் குற்றாலநாதர் ஆலயத்தில்* குறும்பலாவே தலவிருட்சம். அந்த மரத்திற்கு தினமும் வழிபாடுகள் நடத்தப்படுகின்றன. புகழ்பெற்ற குற்றாலக்குறவஞ்சியிலும் இம்மரத்தின் பெருமை குறிப்பிடப்பட்டுள்ளது.

ஓம் நமசிவாய 
படித்து பகிர்ந்தது
 இரா இளங்கோவன் 
நெல்லிக்குப்பம். 

ஹோமங்களில் போடும் பொருட்களின் பயன்கள்.

#ஹோமங்களில்_போடும் 
#பொருட்களின்_பயன்கள்
நாம் நடத்தும் ஹோமங்களில் பலவித சமித்துக்களை அக்னியில் போட்டு ஆகுதி செய்கிறோம். அவை ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு விதப் பலன் உண்டு.

சமித்து என்பது ஹோமகுண்டத்தில் சேர்க்கப்படும் குச்சிகள்.ஒவ்வொரு சமித்து குச்சிக்கும் ஒவ்வொரு வேண்டுதல்களும் பலன்களும் உள்ளன.
வில்வம் : சிவனுக்கும் மஹாலட்சுமிக்கும் பிடித்தமானது
துளசி சமித்து : நாராயணனுக்குப் பிடித்தது
அத்தி சமித்து : சுக்கிரனுக்குப் பிடித்தது
நாயுருவி சமித்து : புதனுக்குப் பிடித்தது
பலாமர சமித்து : சந்திரனுக்குப் பிடித்தது
அரசரமர சமித்து : குருவிற்குப் பிடித்தது
வன்னிமர சமித்து : சனீஸ்வரனுக்குப் பிடித்தது
அருகம் புல் : விநாயகருக்கும்,ராகுவுக்கும் பிடித்தது
மாமர சமித்து : சர்வமங்களங்களையும் சித்திக்கும்
பாலுள்ள மரத்தின் சமித்துக்கள் : வியாதி நாசினி
தாமரை புஷ்பம் : லஷ்மிக்கும் சரஸ்வதிக்கும் பிடித்தமானது
மாதுளை மரம் : அழகான் வடிவமும்,வசீகரமும் கிடைக்கும்.
சமித்து குச்சிகளும் பலன்களும்:
--------------------------------------------
அத்திக் குச்சி : மக்கட்பேறு.
நாயுருவி குச்சி : மகாலட்சுமி கடாட்சம்
எருக்கன் குச்சி : எதிரிகள் இல்லாத நிலை
அரசங் குச்சி : அரசாங்க நன்மை
கருங்காலிக் கட்டை: ஏவல் ,பில்லி ,சூனியம் அகலும் .
வன்னிக் குச்சி : கிரகக் கோளாறுகள் நீங்கிவிடும்.
புரசங் குச்சி : குழந்தைகளின் கல்வி வளர்ச்சி
வில்வக் குச்சி : செல்வம் சேரும்
அருகம்புல் : விஷபயம் நீங்கும்.
ஆலங் குச்சி :புகழைச் சேர்க்கும்.
நொச்சி : காரியத்தடை விலகும்.

வில்வம் : வில்வ சமித்தினைக் கொண்டு ஹோமம் செய்தால் ராஜ யோகம் கிட்டும். வில்வப்பழ ஹோமத்தால் சக்தி செல்வங்களையும் பெறலாம். சிவசக்தி சம்பந்தமான சண்டி ஹோமம் போன்ற யாகங்களில் வில்வம் சமித்தாகப் பயன்படுத்தினால் பலன்கள் நிறைய உண்டு.

துளசி : துளசி சமித்தினால் ஹோமம் செய்தால் நீண்ட காலமாக திருமணம் ஆகாதவர்களுக்கு திருமணம் கைகூடி நடைபெறும். எண்ணிய காரியம் கைகூடும்.

சோமவல்லிக் கொடி : கொடிக்கள்ளி எனப்படும் இதன் ரசத்தைப் பிழிந்து ’சோமாம்ருதம்’ ம்ருத்யுஜய மந்திரத்தினால் ஹோமம் செய்தால் சகல நோய்களும் நீங்கி, தேகத்தில் அமிர்தம் உண்டாகி பிரம்மதேஜஸ் பெறலாம். கொடியை கணுக்கள் தோறும் ஒடித்து பாலில் தோய்த்து சூர்ய மந்திரம் கூறி அக்னியிடம் இட வேண்டும். இதனால் காச நோய் அகலும்.

பலாசு சமித்து : இது சந்திர கிரக சமித்தாகும். இதனால் சந்திரகிரக பிரீதியாகும். பலாசு புஷ்பத்தால் எல்லா இஷ்ட காரியங்களும், பலாசு ரஸத்தால் ஞான விருத்தியும், சிறந்த புத்தியும் பெறலாம். பலாசு குச்சிகளை அக்னி ஹோத்திரம் செ¢ய்து அதனால் ஸ்நாபானம் செய்யின் ப்ரம்ம ஞானம் அடைந்து பரப்பிரம்ம சொரூபம் அடையலாம்.

அரசு சமித்து : அரசு சமித்து குரு கிரகத்தின் சமித்தாகும். அரச மரத்தின் சமித்தால் தலைமைப் பதவி வரும். போரில் ஜெயம் அடைந்து அரச தன்மை கிடைக்கும்.

வெள்ளை எருக்கு : இது சூரிய கிரகத்தின் சமித்தாகும். இம்மூலிகை சர்வசக்தி பொருந்தியது. வசியம், மோகனம் ஆகிய அஷ்டாமித்துகளையும் அடையலாம். இச்சமித்து களால் ராஜ வசியம், ஸ்திரீ வசியம், மிருக வசியம், சர்ப்ப வசியம், லோக வசியம், சத்ரு வசியம், தேவ வசியம் ஆக சர்வ வசியங்களையும் அடையலாம். எடுத்த வேலை இனிதே முடியும்.

செம்மர சமித்து : இது அங்காரக கிரக சமித்தாகும். இதனால் ரண ரோகங்கள் நீங்கும். தைரியம் பெருகும்.

நாயுருவி சமித்து : இது புது கிரக சமித்தாகும். இதனால் லட்சுமி சுடா¢ட்சம் ஏற்படும். சுதர்சன ஹோமத்திற்கு இதுவே சிறந்தது.

அத்தி சமித்து : இது சுக்கிர கிரகத்தின் சமித்தாகும். பித்ரு ப்ரீதி பெற்று விரும்பிய பொருள் கைகூடும். பில்லி, சூனியம், பிசாசு பயங்களிலிருந்து விடுவித்து சத்ருக்களை வெல்லும். பைத்தியமும் மேக ரோகங்களும் அகலும். வாக்கு சித்தியும் ஏற்படும். பசு, யானை, குதிரை நோய் நீங்கும்.

வன்னி சமித்து : வன்னி சமித்து சனிக் கிரகத்தின் சமித்தாகும். இதில் அக்னிப் பகவான் இருப்பதாகப் புராணங்கள் கூறுகின்றன. வன்னி சமித்து யாக பஸ்மாவைத் தரித்தால் அது நெற்றியில் எழுதியிருக்கும் யம சம்பந்தமான எழுத்தைத் தொலைத்து விடும். இந்த சமித்து பஸ்பம் பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகிய மூவரையும் மூவுலகினையும் மூன்று அக்னிகளையும் முக்குணங்களையும் குறிப்பதாக இருக்கிறது. சகல தெய்வ, தேவாதி களும் இச்சமித்தால் மகிழ்ச்சி அடைகிறார்கள். பூகம்பங்களால் உண்டாகிற பயங்கள் நீங்கும். சகல தோஷங் களும் நிவர்த்தியாகும்.

தர்ப்பை சமித்து : கேது பகவானுக்கு தர்ப்பை சமித்து மிகவும் பிடித்தமானதாகும். இது ஞான விருத்தியைத் தரும்.

அருகம்புல் : இது ராகு பகவானுக்குப் பிடித்தமானது. இதனால் பூர்வ ஜென்ம வினைகளும் சர்வ இடையூறுகளும் நீங்கி காரியம் சித்தியடையும். கீர்த்தியும், புகழும் பெறலாம். அறிவும், அழகும், வசீகரமும் உண்டாகும். கணபதி ஹோமத்தில் இதைப் பயன்படுத்துவார்கள்.

கரும்பு : கரும்புத் துண்டுகளையாவது அல்லது கருப்பஞ்சாறையாவது கொண்டு ஹோமம் செய்தால் வரனுக்கு விரும்பிய கன்னிகையும், கன்னிகைக்கு விரும்பிய வரனும் கிடைப்பர். இதையும் கணபதி ஹோமத்தில் பயன்படுத்துவார்கள்.

ஆலசமித்து : இது ம்ருத்யஞ்சய வேள்வியின் முக்கிய சமித்து. யமனுக்குப் பிடித்தமானது. இதனால் நோய்கள் நீங்கும். ஆயுள் நீடிக்கும்.

எள் : ஹோமத்தில் எள் போட்டு யாகம் செய்ய பல ஜென்மங்களில் செய்த பாவங்கள் நீங்கும். தீராத கடன் தொல்லை தீரும்.

புங்க மரம் : இதன் சமித்து வெற்றியைத் தரும்.

இலந்தை : இந்த சமித்தினால் ஹோமம் செய்ய குடும்பம் இனிது வாழ வழி உண்டாகும்.

தேவதாரு : இந்த சமித்தினால் ஹோமம் செய்தால் சகல தெய்வங்களும் வேண்டிய வரங்களைக் கொடுப்பார்கள்.

வல்லாரைக் கொடி : இதை ஆகுதி செய்தால் கல்வி சிறப்பாக வரும். ஞாபக சக்தி அதிகரிக்கும் சரஸ்வதி கடாட்சமும் ஏற்படுத்தும்.

சந்தன மரம் : இதன் சமித்தால் ஹேமம் செய்தால் மூதேவி முதலிய சகல பீடைகளையும் விலக்கி லட்சுமி கடாட்சம் ஏற்படும். சகல சம்பத்துடன் வாழ்வார்கள்.

வேங்கை மரம் : இந்த சமித்தினால் ஹோமம் செய்தால் பில்லி சூன்யம், ஏவல், பிசாசு, பயம் ஓழியும்.

மகிழம்பூ : இந்த சமித்தினால் ஹோமம் செய்தால் சகல துக்கங்களும் நிவர்த்தியடைந்து சிக்கல்கள் அனைத்தும் தீரும். மனம் அமைதி பெறும்.

பூவரசு : இந்த சமித்து பூலோக அரச மரம் என்று வழங்கப்படுகிறது. அரசு சமித்து இல்லாத குறையை இந்த சமித் அரசு சமித்தினால் செய்யப்படும் ஹோமம் தரும் பலன் இதற்கும் உண்டு.

நவதானியங்கள் : அந்தந்த கிரகங்களுக்குரிய தானியத்தால் நவக்கிரக ஹோமம் செய்தால் கிரக தோஷங்கள் விலகும். சுபிட்சம் நிலவும்.

மஞ்சள் : முழு மஞ்சள் ஸ்ரீ வித்யா ஹோமத்துக்குச் சிறந்தது. சகல வியாதிகளை நீக்கும். அதோடு கல்வியும், செல்வமும் தரும்

Monday, May 26, 2025

கோயில்களை வலம் வரும் எண்ணிக்கையும், பலன்களும்!

கோயில்களை வலம் வரும் எண்ணிக்கையும், பலன்களும்!
கோயிலுக்குச் சென்று இறைவனை தரிசித்து வழிபட்ட பிறகு கோயில் பிராகாரத்தில் அல்லது இறைவனின் சன்னிதியில் வலம் வருவது வழக்கம். பெரும்பாலானவர்கள் நேரமில்லை என சொல்லி சாமியை மட்டும் தரிசனம் செய்துவிட்டு வெளியே சென்று விடுவார்கள். ஆனால், கோயிலை வலம் வருவது மிகவும் முக்கியமானதாகும். அப்படி வலம் வரும்போது மனதார இறைவனை நினைத்தபடி வலம் வந்தால் மனதில் உள்ள தீய எண்ணங்கள் நீங்கி, இறைவனிடம் இருந்து வெளிப்படும் நேர்மறை ஆற்றலால், நம்முடைய மனது சுத்தமாகும். நேர்மையான ஆற்றல்கள் பெறுவதால் நன்மைகள் அதிகம் நடைபெறும்.

கோயில்களை வலம் வரும்போது ஒற்றைப்படை எண்ணிக்கையில்தான் வலம் வர வேண்டும். ஒவ்வொரு தெய்வத்தையும் ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையில் வலம் வந்து வழிபட வேண்டும் என சொல்லப்படுகிறது. இதற்கு ஏற்றாற்போல் பலன்களும் மாறுபடும்.

விநாயகர் கோயில்: ஒரு முறை வலம் வந்து வழிபட வேண்டும். இதனால் தடைகள் விலகும்.

முருகர் கோயில்: ஆறு முறை வலம் வர வேண்டும். இதனால் எதிரிகள் தொல்லை நீங்கி, ஞானம் பெருகும்.

அம்மன் கோயில்: ஐந்து முறை வலம் வர வேண்டும். இதனால் வெற்றி, மன அமைதி கிடைக்கும். செவ்வாய் முதல் வெள்ளி வரை தினமும் அம்பிகையின் கோயிலுக்குக் சென்று ஐந்து முறை வலம் வந்தால் நினைத்த காரியம் நிச்சயம் நடக்கும் என்பது நம்பிக்கை.

சிவன் கோயில்: ஐந்து முறை வலம் வந்தால் நினைத்தது நடக்கும். செல்வ வளம் பெருகும். பிறவா நிலை ஏற்படும்.

பெருமாள் கோயில்: மூன்று முறை வலம் வர வேண்டும். இதனால் ஆட்சி அதிகாரம், செல்வாக்கு, அஷ்ட லட்சுமி கடாட்சம் ஆகியவை கிடைக்கும்.

நவகிரகங்கள்: ஒன்பது முறை வலம் வருவதால் ஜாதகத்தில் இருக்கும் குறைகள் நீங்கும்.

இப்படி எந்த தெய்வத்தின் கோயிலுக்குச் சென்று எத்தனை முறை வலம் வர வேண்டும் எனத் தெரியாதவர்கள், அவற்றை நினைவில் வைத்துக்கொள்ள, முடியாதவர்கள் பொதுவாக எந்தக் கோயிலுக்குச் சென்றாலும் எத்தனை முறை வலம் வந்தால் என்ன பலன் கிடைக்கும் என்பதை தெரிந்து கொள்ளலாம்.

வலம் வரும் எண்ணிக்கையும் பலன்களும்:

1 முறை வலம் வந்தால் இறைவனிடம் நெருங்க முடியும்.

3 முறை வலம் வந்தால் மனச்சுமை குறையும்.

5 முறை வலம் வந்தால் திருப்பங்கள் நிறைவேறும்.

7 முறை வலம் வந்தால் காரியத்தில் வெற்றி கிடைக்கும்.

9 முறை வலம் வந்தால் எதிரிகள் தொல்லை நீங்கும்.

11 முறை வலம் வந்தால் ஆயுள் விருத்தி அடையும்.

13 முறை வலம் வந்தால் பிரார்த்தனை நிறைவேறும்.

15 முறை முறை வலம் வந்தால் செல்வம் பெருகும்.

17 முறை வலம் வந்தால் தானிய வளம் பெருகும்.

19 முறை வலம் வந்தால் நோய் தீரும்.

21 முறை வலம் வந்தால் கல்வி வளர்ச்சி பெருகும்.

27 முறை வலம் வந்தால் குழந்தை பாக்கியம் கிடைக்கும்.

108 முறை வலம் வந்தால் சகல நலன்களும் கிடைக்கும்.

208 முறை வலம் வந்தால் யாகம் செய்த பலன் கிடைக்கும்.

வழிபாட்டிற்காக மனத்தூய்மையுடன் நாம் ஒவ்வொரு முறையும் கோயிலுக்கு வரும்போதும் நம்மை அறியாமல் கோயிலை ஒரு முறை சுற்றி வலம் வருகிறோம். அப்படி கோயிலை சுற்றி வலம் வரும்போது நமக்கு புண்ணியங்கள் வந்து சேர்வதாக ஐதீகம்.

முக்கியமாக நமது முன்ஜன்ம பாவங்கள் ஒவ்வொன்றாக விலகி நம் பாவத்திலிருந்து முழுவதுமாக விடுபடுகிறோம் என்றும் நமது முன்னோர்கள் சொல்வது உண்டு. தினமும் கோயிலை வலம் வருவதால் எல்லா தெய்வங்களையும் ஒருசேர வலம் வந்த புண்ணியம் உண்டாகும்.

பௌர்ணமி, கார்த்திகை, திங்கள் சோமவாரம், வெள்ளி என குறிப்பிட்ட நாளில் வலம் வந்தால் எண்ணிய எண்ணம் விரைவில் நிறைவேறும். உடலும் மனமும் புத்துணர்ச்சியுடன் திகழும்.

கோயிலுக்குள் செல்லும்போது ஈர ஆடைகளுடன் செல்லக் கூடாது. கோயிலை வேகமாக, எண்ணிக்கை கணக்கிற்காக வலம் வருவது கூடாது. நிதானமாக, பேசாமல் இறை உணர்வுடன் வலம் வர வேண்டும்.

தெய்வ வழிபாட்டின் மிகச் சுலபமான வழி பிரதட்சணம் செய்வது ஆகும். இதேயே வலம் வருதல், சுற்றி வருதல் என்றும், முன் ஜன்ம பாவங்கள் விலக்குவதாக சாஸ்திரங்கள் கூறுகின்றன.

கோயிலை சுற்றி வலம் வருவது ஒரு புண்ணியச் செயல். கோயிலை வரும்போது இறைவனை நினைத்து வழிபட்டால் நாம் நினைத்த காரியங்கள் நிறைவேறும் என்பது ஐதீகம்.

ஓம் நமசிவாய 
படித்து பகிர்ந்தது
 இரா இளங்கோவன்
 நெல்லிக்குப்பம். 

Sunday, May 25, 2025

இராமேஸ்வரம் அக்னி தீர்த்தத்தில் (கடல்) அலைகள் வராதது ஏன்?

இராமேஸ்வரம் அக்னி தீர்த்தத்தில் (கடல்) அலைகள் வராதது ஏன்? கொந்தளிக்காததற்கு என்ன காரணம்?
இராமேஸ்வரத்தில் உள்ள புண்ணிய கடலாம் அக்னி தீர்த்தம், மற்ற கடல்களை போல் கொந்தளிப்பதோ அலைகள் வருவதோ ஏன் இல்லை என்பதற்கான ஆன்மீக காரணத்தை தெரிந்து கொள்ளுங்கள்.

ஆடி அமாவாசையில் இராமேஸ்வர அக்னி தீர்த்தத்தில் நீராடுவது மிகுந்த பலனை தரும் என்கிறது புராணங்கள். இராவணன் சீதையை கவர்ந்து சென்று இலங்கையில் சிறை வைத்திருந்தான். இராமன் வானரப் படைகளோடு இலங்கைக்கு சென்று போரிட்டு சீதையை திரும்ப அழைத்து வந்தான்.

சிலகாலம் அன்னியன் வசம் சீதை இருந்ததால் ஊரார் அவளை தவறாய் பேசிவிடக்கூடாதென, ராமபிரான் சீதையை தீக்குளிக்க ஆணையிட்டான். இதனால் அக்னி குண்டம் முன்பாக வந்து நின்ற சீதை, அக்னி தேவனே நான் உனக்குள் இறங்குகிறேன், நான் கற்பிழந்திருந்தால் என்னை பொசுக்கிவிடு எனக் கூறியபடியே அக்னி குண்டத்திற்குள் இறங்கினாள்.

சீதையின் கற்பின் வெம்மை அக்னிதேவனை சுட்டெரித்தது, சீதை பரிசுத்தமானவள், இவளை சுட்டுப்பொசுக்க என்னால் இயலாது என கூறியபடியே சீதையை கையில் ஏந்தி ராமனிடம் ஒப்படைத்துவிட்டு தன் வெம்மையை தீர்க்க, அருகிலிருந்த ராமேஸ்வரக்கடலில் குதித்தான்.

அக்னிதேவன் கடலுக்குள் இறங்கியதால் ராமேஸ்வரக் கடல் தண்ணீர் கொதிக்க ஆரம்பித்து கடல்வாழ் உயிரினங்கள் துடித்தன. கடலரசன் அலறினான், சீதையை அனைவரும் தஞ்சமடைய, அக்னிதேவனின் சூட்டை தணித்து கடலரசனை சாந்தப்படுத்தி அனைத்து உயிரினங்களையும் சீதாதேவி காப்பாற்றினாள்.

சீதையை பணிந்து நின்ற அக்னிதேவனை ஆசிர்வதித்த சீதை, இன்றிலிருந்து இந்த தீர்த்தம் அக்னி தீர்த்தம் என்ற உமது பெயரால் அழைக்கப்படும். மற்ற கடல்களைப்போல் சீற்றம் கொள்ளாமல் பூமாதேவியின் மகளான என்னைப்போல் சாந்தமாய் விளங்கும் என கடலரசனுக்கும் அருளினாள்.

இந்த அக்னி தீர்த்தத்தில் நீராடுபவர்களின் பாவங்கள் போகும் எனவும் அருளினாள், அன்றிலிருந்து ராமேஸ்வர கடலில் அலை அடிப்பதில்லை. அக்னி தீர்த்தம் என அழைக்கப்படும் புண்ணிய தீர்த்தத்தில் நீராடுபவர்களின் பாவங்கள் போக்கப்பட்டு புண்ணியம் கிடைக்கும்‌‌.

ராமேஸ்வரத்தில் உள்ள அக்னி தீர்த்தத்தில் மாதந்தோறும் வரும் அமாவாசைகளில் தர்ப்பணம் கொடுக்கவும் முன்னோர்களுக்கு திதி கொடுக்கவும் ஏராளமானோர் வருகை தருகிறார்கள். இது போல் திதி கொடுப்பதற்காகவே அங்கு நிறைய புரோகிதர்கள் உள்ளனர். அவர்களை அணுகி பணம் செலுத்திவிட்டால் எல்லா பொருட்களையும் அவர்களாகவே வாங்கி நமக்கு தேவையானதை செய்கிறார்கள்.

அது போல் தை அமாவாசை, ஆடி அமாவாசை, மகாளய அமாவாசை, மஹாளய பட்ச நாட்களில் கூட இங்கு கூட்டம் அலைமோதும். திதி கொடுத்துவிட்டு கடலில் போய் குளித்துவிட்டு பிறகு அறைக்கு சென்று அங்கும் குளித்துவிட்டு கோயிலுக்கு செல்லலாம். ஈரத் துணியுடன் கோயிலுக்குள் அனுமதி இல்லை என்பதால் 22 கிணறுகளில் குளித்தாலும் ஈரத்துடன் கோயிலுக்குள் அனுமதி இல்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ராமேஸ்வரம் மண்ணை மிதிப்பதே பெரும் பாக்கியம் என்கிறார்கள். வட இந்தியாவை சேர்ந்தவர்கள் முதலில் காசியிலும் பிறகு ராமேஸ்வரத்திலும் திதி கொடுக்க வேண்டும். அது போல் தென்னிந்தியர்கள் முதலில் ராமேஸ்வரத்திலும் காசியிலும் திதி கொடுத்தால் மிகவும் புண்ணியம். பித்ரு தோஷங்கள் விலகி நன்மை கிடைக்கும். அத்துடன் திருமணமாகாதவர்களுக்கு சில பரிகாரங்களை செய்கிறார்கள். அது போல் பெண் சாபம் குடும்பத்தில் இருந்தால் அந்த வீட்டில் நல்லதே நடக்காது. அந்த தோஷத்திற்கும் இங்கு பூஜை செய்து நிவர்த்தி செய்கிறார்கள்.

ஓம் நமசிவாய 
படித்து பகிர்ந்தது
 இரா இளங்கோவன் 
நெல்லிக்குப்பம். 

அம்மாவாசை திதி தர்ப்பணம் ராமேஸ்வரம் போல் மற்றும் பல கோயில்கள்.

#அம்மாவாசை_திதி_தர்ப்பணம் 
ராமேஸ்வரம் ஒன்று மட்டும் தான் நினைக்க வேண்டாம் நலம் தரும் நல்வாழ்வு தரும் நான்கு ராமேஸ்வரங்கள்
ராமேஸ்வரம், திருராமேஸ்வரம், குருவிராமேஸ்வரம், காமேஸ்வரம் ஆகிய நான்கும் சதுர்த்த ராமேஸ்வரம் எனப் போற்றப்படுகின்றன. இந்த நான்கு திருத்தலங்களிலும் மகா கணபதிக்கான `சதுராவ்ருத்தி தர்ப்பணம்' எனும் விசேஷமான பூஜையை, ஆகமப் பூர்வமாக அகத்தியரின் முன்னிலையில்,  ஸ்ரீராமபிரான் நிகழ்த்தியாக ஞானநூல்கள் சொல்கின்றன.
தொடர்ந்து நான்கு மாதங்கள்... ஒவ்வொரு மாதத்தின் அமாவாசை திதியில் ஒரு திருத்தலம் என்ற கணக்கில், ராமேஸ்வரம் தொடங்கி இந்த நான்கு தலங்களுக்கும் சென்று, இறை தரிசனத்தோடு பிதுர் வழிபாடு செய்து வருவது மிகவும் விசேஷம். இதனால், நமக்கும் நம் சந்ததியினருக்கும் சகல நன்மைகளும் உண்டாகும்.
1. ராமேஸ்வரம்
தென்னாட்டு புண்ணிய க்ஷேத்திரங்களில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ராமேஸ்வரத்தின் மகிமைகளும் திருக்கதைகளும் நம்மில் பெரும்பாலானோர் அறிந்தவையே. ஆகவே, இத்தலம் குறித்த அபூர்வ தகவல்களைத் தெரிந்துகொள்வோம்.
ஸ்ரீராமர் - சீதாதேவி இருவரும் ராமேஸ்வரம் கடற்கரையில் சிவலிங்க பிரதிஷ்டை செய்து வழிபடுவதற்கு முன்பே, இந்தத் திருத்தலம் `அக்னித் தீர்த்த நீராடல்' தலமாக, வெவ்வேறு திருப்பெயர்களில் பிரசித்தி பெற்றிருந்ததாம். இங்கிருந்து தனுஷ்கோடிக்குச் செல்லும் பாதையில், சுமார் 4 கி.மீ தொலைவில் கோயில் கொண்டிருக்கிறாள் நம்புநாயகி அம்பிகை. நம்பு, நம்பன், நக்கன் என்றால் ஈஸ்வரனையே குறிக்கும். இந்த நம்புநாயகி அம்மன் கோயிலிலிருந்து சிறிது தூரத்தில் ஜடாயு தீர்த்தம் உள்ளது. ஸ்ரீராமர் நீராடிய ஜடாயு தீர்த்தத்தின் மகத்துவத்தை சுகபிரம் மருக்கு வியாசர் விளக்கியுள்ளார். நம்புநாயகி அருளும் பூமியும், ஜடாயு தீர்த்தமும் ராமநாத சுவாமிப் பிரதிஷ்டைக்கும் மூத்தவை.

அதேபோல், ராமேஸ்வரம் சிவாலயத்தில் சேதுமாதவ பெருமாள் சந்நிதி அருகில் புண்ணிய தானேஸ்வரர், பாபபட்சேஸ்வரர் சந்நிதிகளும் உண்டு. ராமநாத ஸ்வாமியைத் தரிசிக்கச் செல்லும் அன்பர்கள், இந்த மூர்த்திகளையும் அவசியம் தரிசித்து வாருங்கள்.

கால விரயம், பொருள் விரயம் செய்ததால் ஏற் படும் பிரச்னைகளும், அறியாத வகையில் தவறான வழிகளில் பொருளீட்டியதால் ஏற்பட்ட பாவங்களும், பித்ரு தோஷங்களும் நீங்கிட ராமேஸ்வரம் சென்று வழிபடவேண்டும். இங்கு ஒரே நாளில் 32 தீர்த்தங்களில் நீராடுவது விசேஷம்.

2. #திருராமேஸ்வரம்

கும்பகோணம் கொடராச்சேரி வழித்தடத்தில் கூத்தாநல்லூர் செல்லலாம் 
மன்னார்குடி - திருத்துறைப்பூண்டி மார்க்கத் தில், சுமார் 22 கி.மீ தொலைவில் உள்ள திருத்தலம் திருராமேஸ்வரம். சீதாதேவிக்கு, அவள் மகா லட்சுமியின் அவதாரம் என்று ராமபிரான் உணர்த்திய திருத்தலம் என்பார்கள்.
திருமகள், சீதாலட்சுமியாக சிவலிங்க மூர்த்தத் துக்கு பூஜை செய்யும் அபூர்வ திருக்கோலத்தை இங்கே தரிசிக்கலாம்.  வெள்ளி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளிலும், துவாதசி மற்றும் பஞ்சமி திதி நாள்களிலும், அனுஷ நட்சத்திர நாளன்றும், இங்கு உரலில் மஞ்சள் இடித்து மங்களாம்பிகைக்குச் சாற்றி வழிபடுவார்கள். இதனால் மங்கலகரமான வாழ்வு ஸித்திக்கும் என்பது நம்பிக்கை. சுவாமியின் திருப்பெயர் ஸ்ரீராமநாதஸ்வாமி. ஏமாந்து இழந்த பொருள் மற்றும் சொத்துகளை மீட்டெடுக்க அருள் வழங்கும் தலம் என்பார்கள் பெரியோர்கள். இங்கு, தீர்த்த நீராடல் விசேஷமானது.

3. #குருவி_ராமேஸ்வரம்
திருவாரூாிலிருந்து கிழக்கே சுமார் 4 கி.மீ தொலைவில் உள்ளது குருவி ராமேஸ்வரம்; கேக்கரை எனும் ஊர் வழியாகச் செல்லலாம். ஸ்ரீராமர், குருவிக்கு முக்தி தந்தத் தலம்.  இத்தலத்துக்கு திருப்பள்ளிமுக்கூடல் என்றும் திருப்பெயர் உண்டு. இங்கே அருள்பாலிக்கும் இறைவன் ஸ்ரீமுக்கோணநாதேஸ்வரர்; அம்பாளின் திருநாமம் ஸ்ரீஅஞ்சனாட்சி.
ஜடாயுவுக்கு அவரது முக்தியைக் குறித்து ஈஸ்வரன் எடுத்துரைத்த தலம் இது. அப்போது, ராவணனால் நான் மடிந்தால், புண்ணிய தீர்த்தங் களில் நீராடிய பலன் கிடைக்காமல் போகுமே' என்று வருந்தினாராம் ஜடாயு. அவருக்காக இங்கே இறைவன் உருவாக்கிய தீர்த்தமே திருமுக் கூடல் தீர்த்தம் என்கின்றன ஞானநூல்கள்.ராமாவதாரத்துக்கு முன்பே ராம நாமத்தை ஜபித்து வாழ்ந்தவர்கள் `ராமகே(தி)'. இவர்கள் திரேதா யுகத்தில் பல்லாயிரக்கணக்கில் வசித்த `ராமகே' எனும் இடமும் கயாவுக்குச் சமமாகப் போற்றப்படும் கேக்கரையும் குருவி ராமேஸ்வரத் தின் அருகிலிருப்பது விசேஷம்.
4. #காமேஸ்வரம்
நாகப்பட்டினம் - வேதாரண்யம் இடையே அமைந்திருக்கிறது, காமேஸ்வரம். புனிதமான அரிச்சந்திரா நதி, கடலில் கலக்கும் பிதுர்முக்தி பூமி காமேஸ்வரம். சிவாலயம், விஷ்ணு ஆலயம் இரண்டும் அமைந்த க்ஷேத்திரம்.
இதன் தொன்மைப் பெயர் `ராமேஸ்வர ராமேஸ்வரம்'. பின்னர் காமேஸ்வரம் என்றாயிற்று. நல்லவிதமான விருப்பங்களுக்கு ‘காமம்’ என்று பொதுப்பெயர் உண்டு. அப்படியான நம்முடைய நல்ல விருப்பங்களை நிறைவேற்றும் திருத்தலம் இது என்றும் சொல்லலாம். அருள்மிகு காமேஸ் வரரும், காமாக்ஷி அம்பிகையும் அருளும் இந்தத் தலத்தில், திரேதா யுகத்தில் ராமனும், துவாபர யுகத்தில் கிருஷ்ணனும் வழிபட்டுள்ளார்கள். வாழ்வில் அறிந்தோ அறியாமலோ நாம் சொன்ன பொய்யுரைகளால் ஏற்பட்ட பாவங்கள், நமது வாக்கால் ஏற்பட்ட தோஷங்கள் நீங்குவதற்கு  வழிபட வேண்டிய திருத்தலம் இது. இந்தக் காமேஸ்வரம் திருத்தலத்துக்குச் சென்று, அரிச்சந்திரா நதி கடலில் சங்கமமாகும் பகுதி யிலோ, காமேஸ்வரம் கடற்கரையிலோ நீராடுவ தால் சகல பாவங்களும் நீங்கும். 

ஓம் நமசிவாய 
படித்து பகிர்ந்தது 
இரா இளங்கோவன்
 நெல்லிக்குப்பம். 





அமாவாசையும்.. கிருத்திகையும்.. இணைந்த நன்னாள்.

 அமாவாசையும்.. கிருத்திகையும்.. இணைந்த நன்னாள்.. இந்நாளில் அப்படி என்ன சிறப்பு?..
✨அமாவாசை நாளில் முன்னோர் வழிபாடு செய்வதும், அவர்களுக்குப் படையலிடுவதும் நம் குலத்தைக் காக்கும். குடும்பத்தை மேம்படுத்தும். சந்ததியைச் சிறக்கச் செய்யும் என்கிறது சாஸ்திரம்.

✨முன்னோர் வழிபாடு என்பதும், குலதெய்வ வழிபாடு என்பதும் மிக மிக முக்கியம். முன்னோர்களுக்கு ஒரு வருடத்துக்கு 96 தர்ப்பணங்கள் செய்ய வேண்டும் என்கிறது தர்ம சாஸ்திரம். மாதந்தோறும் வருகிற அமாவாசை, ஒவ்வொரு தமிழ் மாதப் பிறப்பு, கிரகண காலங்கள், திதி, புரட்டாசி மகாளய பட்சத்தின் பதினைந்து நாட்கள் என 96 தர்ப்பணங்கள் செய்ய வேண்டும்.

✨இறந்த தாய், தந்தைக்கு திதி, சிரார்த்தம் செய்யாமல் விட்டவர்கள், இறந்த தேதி மற்றும் திதி போன்றவற்றை மறந்தவர்கள் அமாவாசை நாளில் அவர்களை நினைத்து வணங்கலாம்.

✨வைகாசி மாத அமாவாசையுடன் முருகப்பெருமானுக்கு உகந்த கிருத்திகை நட்சத்திரமும் இணைந்து வருவதால் அன்றைய தினத்தில் முன்னோர்களை வழிபடுவது, குலதெய்வத்தை வழிபடுவது, முருகப்பெருமானை வழிபடுவது அளவற்ற மன மகிழ்ச்சியை தரும். 

விரதம் இருப்பது எப்படி?

✨அமாவாசை விரதம் இருப்பவர்கள், காலையில் எழுந்து அருகில் இருக்கும் கடல், ஆறு போன்ற நீர்நிலைகளுக்கு சென்று குளித்துவிட்டு இறந்த முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்ய வேண்டும். அதன்பிறகு முதியவர்களுக்கு அன்னதானம் வழங்க வேண்டும். அமாவாசையன்று பெண்கள் வீட்டில் காலை உணவு உண்ணாமல் இறந்த மூதாதையர்களுக்கு பிடித்தமான உணவுகளையும், எண்ணெய் பதார்த்தங்களையும் செய்ய வேண்டும்.

✨அன்றைய சமையலில் எல்லாவிதமான காய்கறிகளையும் சேர்த்து கொள்ள வேண்டும். விரதம் இருப்பவர்கள் எதுவும் சாப்பிடாமல் எத்தனை நபர்களை வணங்க வேண்டுமோ அத்தனை இலைகள் போட்டு சமைத்த உணவு, எண்ணெய் பதார்த்தங்கள், துணிகள் வைத்து அகல் விளக்கேற்றி, தூபம், தீபம் காட்டி முன்னோர்களை மனதில் நினைத்து வழிபட வேண்டும். பிறகு படைத்த உணவுகளை இலையில் வைத்து காகத்திற்கு படைக்க வேண்டும்.

✨முன்னோர்களுக்கு படைத்த உணவுகளை காக்கைகள் உண்ட பிறகு, வீட்டிற்குள் முறைப்படி அமர்ந்து சாப்பிட வேண்டும்.

✨முறைப்படி விரதமிருந்து முன்னோர்களை வழிபடுபவர்களுக்கு அவர்களின் ஆசி கிடைக்கும். முன்னோர் செய்த பாவ வினைகள் நீங்கி அவர்களுக்கு முக்திப்பேறு கிடைக்கும். அமாவாசையன்று தர்ப்பணம் செய்த பிறகு, பசுவிற்கு அகத்திக்கீரை கொடுப்பது நல்லது.

✨அமாவாசை நாளில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பதும், அன்னதானம் செய்வதும் புண்ணியத்தைத் தரும்.

முன்னோர்களுக்கு தர்ப்பணம் :

✨நம்முடன் வாழ்ந்து மறைந்த முன்னோர்களை நாம் மறக்கக்கூடாது. அவர்களுக்கு ஒவ்வொரு வருடமும் அமாவாசை, புண்ணிய கால தர்ப்பணம், வருஷ சிரார்த்தம், மகாளய பட்சம் ஆகிய 96 நாட்கள் தர்ப்பணம் செய்ய வேண்டும்.

காகத்துக்கு முக்கியத்துவம் :

✨அமாவாசை வழிபாட்டில் காகத்துக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. சனீஸ்வர பகவானின் வாகனமான காகம், யமலோகத்தின் வாசலில் இருப்பதாகவும், அது யமனின் தூதுவன் எனவும் கூறப்படுகிறது.

✨காகத்துக்கு சாதம் வைத்தால், யமலோகத்தில் வாழும் நமது முன்னோர்கள் அமைதியடைந்து நமக்கு ஆசி வழங்குவார்கள்.

குலதெய்வ வழிபாடு :

✨அன்று மாலையில் வாசலில் மாவிலை தோரணம் கட்டி, குலதெய்வப் படத்துக்கு பூக்கள் வைத்து அலங்கரித்து, குலதெய்வத்துக்கு பொங்கலிட்டு, புடவை, ஜாக்கெட், பழங்கள், மங்களப் பொருட்கள் வைத்து வணங்க வேண்டும். அந்தப் புடவை முதலான மங்களப் பொருட்களை யாரேனும் சுமங்கலிக்கு வழங்க வேண்டும். 

✨இவ்வாறு செய்வதால் இதுவரை தடைப்பட்டிருந்த மங்கள காரியங்கள் இனிதே நடந்தேறும். இல்லத்தில் ஒற்றுமையும், சந்தோஷமும் குடிகொள்ளும்.

முருகன் வழிபாடு:

✨பொதுவாக முருகனை வழிபடுவதற்கு உரிய சிறந்த மாதங்களாக வைகாசி, கார்த்திகை மாதங்கள் குறிப்பிடப்படுகின்றன. 

✨இந்த வைகாசி மாதத்தில் வரும் கிருத்திகை தினத்தன்று முருகப்பெருமானுக்கு பல கோயில்களில் சிறப்பு பூஜைகள் செய்யப்படுகின்றன. 

✨கிருத்திகை நட்சத்திரம் சூரிய பகவானுக்கு உரிய நட்சத்திரம் ஆகும். கிருத்திகை நட்சத்திரத்தன்று அனுஷ்டிக்கப்படுவது கிருத்திகை விரதம் ஆகும்.

✨சிவபெருமானின் நெற்றிக்கண்ணில் இருந்து தோன்றிய ஆறு தீப்பொறிகளில் இருந்து முருகப்பெருமான் தோன்றினார். இந்த முருகப்பெருமானை கார்த்திகை பெண்கள் 6 பேர் பாலூட்டி, சீராட்டி வளர்த்தனர்.

✨முருகனை கார்த்திகை பெண்கள் வளர்த்த காரணத்தால் அவர்களின் பெயரிலேயே கார்த்திகேயன் என்ற பெயர் பெறுவான் என்றும், அவர்களின் நாளாகிய கிருத்திகை நட்சத்திரத்தன்று விரதமிருந்து முருகனை வழிபடுவோர் இன்னல்கள் அனைத்தும் நீங்கி, வாழ்வில் சகல செல்வங்களும் பெற்று வாழ்வார்கள் என்றும் சிவபெருமான் கார்த்திகை பெண்களுக்கு வரம் அளித்தார்.

✨இந்நாளில் முருகப்பெருமானை வணங்கினால் வாழ்வில் ஏற்படும் தடைகள் நீங்கி பணம், புகழ், செல்வாக்கு என அனைத்து செல்வ வளங்களும் கிடைக்கும்.

ஏழைகளுக்கு தானம் :

✨அமாவாசை நாளில் ஏழைகள், இல்லாதோர் அல்லது இயலாதோர்களுக்கு அன்னதானம் மற்றும் வஸ்திர தானம் செய்ய, நாம் செய்த பாவங்கள், கர்ம வினைகள், தீவினைகள் அனைத்தும் நீங்கி, வாழ்வில் புண்ணியம் சேரும் என்பது நம்பிக்கை.

✨அமாவாசை தினத்தன்று பித்ருக்களுக்கு தர்ப்பணம் செய்தால் அது ஆயிரம் மடங்கு புண்ணிய பலன்களை தரவல்லது.
ஓம் நமசிவாய 
படித்து பகிர்ந்தது 
இரா இளங்கோவன் 
நெல்லிக்குப்பம். 

வில்வாரண்யேஸ்வரர் திருக்களம்பூரதிருக்கொள்ளம்புதூர் திருவாரூர்.

தேவாரப் பாடல் பெற்ற காவிரிதென்கரை தலங்களில் ஒன்றான #திருக்கொள்ளம்பூதூர்  #திருக்களம்புதூர் #திருக்களம்பூர்
மூலவர் : #வில்வாரண்யேஸ்வரர்  திருக்கொள்ளம்பூதூருடையார்)
அம்மன்/தாயார் : #சவுந்தர நாயகி (அழகிய நாச்சியார்)
 தல விருட்சம் : வில்வம்
 தீர்த்தம் : பிரம்ம, அக்னி, கங்கா தீர்த்தம்
ஆகமம்/பூஜை : காமிக ஆகமம்
புராண பெயர் : கூவிளம்பூர், செல்லூர், திருக்களம்பூர்
ஊர் : திருக்கொள்ளம்புதூர்
மாவட்டம் : திருவாரூர்
மாநிலம் : தமிழ்நாடு
 
#பாடியவர்கள்:   சம்பந்தர்

#தேவாரப்பதிகம்
     ஓடம்வந் தணையும் கொள்ளம் பூதூர் ஆடல்பேணிய அடிகளை யுள்கச் செல்ல வுந்துக சிந்தையார் தொழ நல்கு மாறருள் நம்பனே.
                          -திருஞானசம்பந்தர்.
தேவாரப்பாடல் பெற்ற காவிரி தென்கரைத்தலங்களில் இது 113வது தலம்.
 #திருவிழா: 
    சித்திரை பிரமோற்சவம், கார்த்திகை பிரதோஷ நாளில் சுவாமி புறப்பாடு, சித்ரா பவுர்ணமியில் பஞ்ச மூர்த்திபுறப்பாடு. நவராத்திரியில் அம்மன் புறப்பாடு. ஐப்பசி அமாவாசையில் திருஞான சம்பந்தர் திருவிழா, கந்த சஷ்டி, கார்த்திகை சோமவாரம், மார்கழி தனுர்பூஜை, தைப்பூசம்.  
     
#தலசிறப்பு: 
      இத்தல இறைவன் சுயம்பு லிங்கமாக அருள்பாலிக்கிறார்.சிவனின் தேவாரப்பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் இது 176 வது தேவாரத்தலம் ஆகும்.

#பொதுதகவல்: 
     கோயில் 5 நிலை ராஜகோபுரத்துடன் கிழக்கு நோக்கி 75 அடி உயரத்தில் 2 பிரகாரங்களுடன் அமைந்துள்ளது. உள்பிரகாரங்களில் பொய்யாத விநாயகர், வலம்புரிவிநாயகர், முருகன், ஆதிவில்வநாதர், கஜமுக்தீஸ்வரர், பஞ்சலிங்கம், கஜலட்சுமி ஆகிய சன்னதிகள் உள்ளன. பிரம்மா, அகத்தியர், அர்ச்சுனன் ஆகியோர் வழிபாடு செய்துள்ளனர். கோயில் மூன்றாம் குலோத்துங்க சோழன், மூன்றாம் ராஜராஜசோழன் இவர்கள் காலத்தில் கட்டியிருக்க வேண்டும் என கல்வெட்டுகள் கூறுகிறது.

#தலபெருமை: 
     பிரம்மா தனக்கு ஏற்பட்ட பிரம்மஹத்தி தோஷம் நீங்க வழிபாடு செய்த தலங்களில் இதுவும் ஒன்று. தலவிருட்சம் வில்வம். கூவிளம் என்பதற்கு வில்வம் என்பது பெயர். கூவிளம்புதூர் என்ற பெயர் மருவி காலப்போக்கில் கொள்ளம்புதூர் ஆனது. 
 
#தலவரலாறு: 
    பல சிவத்தலங்களை தரிசித்து பாடி வந்த ஞானசம்பந்தர், இத்தலம் வரும் போது வழியில் உள்ள வெட்டாறில் வெள்ளம் ஏற்பட்டது. இதனால் ஓடம் ஓட்டுபவர்களால் ஓடம் செலுத்த முடியாமல் ஆற்றின் கரையிலேயே ஓடத்தை விட்டு சென்றனர். ஆனால் சிவனை தரிசிக்காமல் செல்ல கூடாது என்பதில் தீவிரமாக இருந்தார் சம்பந்தர். எனவே ஆற்றின் கரையில் இருந்த ஓடம் ஒன்றை அவிழ்க்க செய்து அதன் மீது தன் அடியவர்களுடன் ஏறினார். தமது நாவையே ஓடக்கோலாக கொண்டு, "கொட்டமே கமழும் கொள்ளம்பூதூர் நட்டமாடிய நம்பனை யுள்கச் செல்வுந்துக சிந்தை யார்தொழ நல்கு மாறரு ணம்பனே' எனும் திருப்பதிகம் பாடினார். இறைவனின் திருவருளால் ஓடம் ஆற்றின் மறுகரையை அடைந்தது. திருஞான சம்பந்தர் கோயிலை அடைந்து மீதி பதிகங்ளை பாடி இறைவனை வழிபட்டு, அங்கேயே தங்கினார் என்பது வரலாறு. இந்த ஓடத்திருவிழா ஆண்டு தோறும் ஐப்பசி அமாவாசைக்கு மறுநாள் சிறப்பாக நடக்கிறது.

திருக்கோளம்புத்தூரில் வில்வவனீஸ்வரர்.
புராணத்தின் படி, பண்டைய காலத்தில், இந்த பகுதி வில்வ மரங்கள் அடர்ந்த காடாக இருந்தது. வில்வம் மரங்கள் "கூவிளம்" என்றும் அழைக்கப்படுவதால், இந்த இடத்திற்கு கூவிளம்புத்தூர் என்று பெயர் வந்தது. பின்னர் கொல்லம்புத்தூர் என மாற்றப்பட்டுள்ளது
இத்தலம் காசியைப் போலவே மங்களகரமானதாகக் கருதப்படுகிறது.
அதில் ஒன்று திருக்கொளம்புத்தூர். தமிழில் "பஞ்ச" என்றால் ஐந்து மற்றும் "ஆரண்யம் / வனம்" என்றால் காடு
சம்பந்தர் பெருமான் அருளால் படகோட்டியின்றி அதிக வெள்ளத்தில் ஆற்றைக் கடந்தார். தீபாவளி நாளில் அர்த்தஜாம பூஜைக்காக அவர் இங்கு வந்தடைந்தார், இது ஒரு நிகழ்வாக இன்றும் நடைமுறையில் உள்ளது.
ஸ்தல புராணத்தின்படி, இத்தலத்தில் இறக்கும் மக்களுக்கு சிவபெருமான் "பஞ்சாட்சர மந்திரம்" - ந ம சி வா யா - கூறுகிறார். இறந்தவரின் வலது காதில் இறைவன் இந்த மந்திரத்தை சொல்லி அவர்களுக்கு முக்தியை அருளுகிறார். எனவே இந்த இடம் "பஞ்சாட்சர புரம்" என்றும் பெயர் பெற்றது. இங்கே ஓம் நம சிவாய என்பதை நினைவில் கொள்ளுங்கள்

ஆலயம் திறந்திருக்கும் நேரம் காலை 7 மணி முதல் 11 மணி வரை பின்னர் மாலை 5 மணி முதல் 7.30 வரை

செல்லும் வழி:
 கும்பகோணத்தில் இருந்து  20 கி.மீ.  தொலைவிலுள்ளது. கும்பகோணத்தில் இருந்து கொரடாச்சாரி செல்லும் வழியில் செல்லூர் எனும் ஊரில் இறங்கி சுமார் ஒரு கி.மீ சென்று இத்தலத்தை அடையலாம்.

ஓம் நமசிவாய
 படித்து பகிர்ந்தது
 இரா இளங்கோவன் 
நெல்லிக்குப்பம். 

Followers

ஞானபுரீஸ்வரர் திருவடிசூலம் காஞ்சிபுரம்.

அருள்மிகு ஞானபுரீஸ்வரர் திருக்கோவில், திருஇடைச்சுரம், திருவடிசூலம், காஞ்சிபுரம் மாவட்டம் –  603 108.    *திருஇடைச்சுரம் தற்போது ...