இராமேஸ்வரம் அக்னி தீர்த்தத்தில் (கடல்) அலைகள் வராதது ஏன்? கொந்தளிக்காததற்கு என்ன காரணம்?
இராமேஸ்வரத்தில் உள்ள புண்ணிய கடலாம் அக்னி தீர்த்தம், மற்ற கடல்களை போல் கொந்தளிப்பதோ அலைகள் வருவதோ ஏன் இல்லை என்பதற்கான ஆன்மீக காரணத்தை தெரிந்து கொள்ளுங்கள்.
ஆடி அமாவாசையில் இராமேஸ்வர அக்னி தீர்த்தத்தில் நீராடுவது மிகுந்த பலனை தரும் என்கிறது புராணங்கள். இராவணன் சீதையை கவர்ந்து சென்று இலங்கையில் சிறை வைத்திருந்தான். இராமன் வானரப் படைகளோடு இலங்கைக்கு சென்று போரிட்டு சீதையை திரும்ப அழைத்து வந்தான்.
சிலகாலம் அன்னியன் வசம் சீதை இருந்ததால் ஊரார் அவளை தவறாய் பேசிவிடக்கூடாதென, ராமபிரான் சீதையை தீக்குளிக்க ஆணையிட்டான். இதனால் அக்னி குண்டம் முன்பாக வந்து நின்ற சீதை, அக்னி தேவனே நான் உனக்குள் இறங்குகிறேன், நான் கற்பிழந்திருந்தால் என்னை பொசுக்கிவிடு எனக் கூறியபடியே அக்னி குண்டத்திற்குள் இறங்கினாள்.
சீதையின் கற்பின் வெம்மை அக்னிதேவனை சுட்டெரித்தது, சீதை பரிசுத்தமானவள், இவளை சுட்டுப்பொசுக்க என்னால் இயலாது என கூறியபடியே சீதையை கையில் ஏந்தி ராமனிடம் ஒப்படைத்துவிட்டு தன் வெம்மையை தீர்க்க, அருகிலிருந்த ராமேஸ்வரக்கடலில் குதித்தான்.
அக்னிதேவன் கடலுக்குள் இறங்கியதால் ராமேஸ்வரக் கடல் தண்ணீர் கொதிக்க ஆரம்பித்து கடல்வாழ் உயிரினங்கள் துடித்தன. கடலரசன் அலறினான், சீதையை அனைவரும் தஞ்சமடைய, அக்னிதேவனின் சூட்டை தணித்து கடலரசனை சாந்தப்படுத்தி அனைத்து உயிரினங்களையும் சீதாதேவி காப்பாற்றினாள்.
சீதையை பணிந்து நின்ற அக்னிதேவனை ஆசிர்வதித்த சீதை, இன்றிலிருந்து இந்த தீர்த்தம் அக்னி தீர்த்தம் என்ற உமது பெயரால் அழைக்கப்படும். மற்ற கடல்களைப்போல் சீற்றம் கொள்ளாமல் பூமாதேவியின் மகளான என்னைப்போல் சாந்தமாய் விளங்கும் என கடலரசனுக்கும் அருளினாள்.
இந்த அக்னி தீர்த்தத்தில் நீராடுபவர்களின் பாவங்கள் போகும் எனவும் அருளினாள், அன்றிலிருந்து ராமேஸ்வர கடலில் அலை அடிப்பதில்லை. அக்னி தீர்த்தம் என அழைக்கப்படும் புண்ணிய தீர்த்தத்தில் நீராடுபவர்களின் பாவங்கள் போக்கப்பட்டு புண்ணியம் கிடைக்கும்.
ராமேஸ்வரத்தில் உள்ள அக்னி தீர்த்தத்தில் மாதந்தோறும் வரும் அமாவாசைகளில் தர்ப்பணம் கொடுக்கவும் முன்னோர்களுக்கு திதி கொடுக்கவும் ஏராளமானோர் வருகை தருகிறார்கள். இது போல் திதி கொடுப்பதற்காகவே அங்கு நிறைய புரோகிதர்கள் உள்ளனர். அவர்களை அணுகி பணம் செலுத்திவிட்டால் எல்லா பொருட்களையும் அவர்களாகவே வாங்கி நமக்கு தேவையானதை செய்கிறார்கள்.
அது போல் தை அமாவாசை, ஆடி அமாவாசை, மகாளய அமாவாசை, மஹாளய பட்ச நாட்களில் கூட இங்கு கூட்டம் அலைமோதும். திதி கொடுத்துவிட்டு கடலில் போய் குளித்துவிட்டு பிறகு அறைக்கு சென்று அங்கும் குளித்துவிட்டு கோயிலுக்கு செல்லலாம். ஈரத் துணியுடன் கோயிலுக்குள் அனுமதி இல்லை என்பதால் 22 கிணறுகளில் குளித்தாலும் ஈரத்துடன் கோயிலுக்குள் அனுமதி இல்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ராமேஸ்வரம் மண்ணை மிதிப்பதே பெரும் பாக்கியம் என்கிறார்கள். வட இந்தியாவை சேர்ந்தவர்கள் முதலில் காசியிலும் பிறகு ராமேஸ்வரத்திலும் திதி கொடுக்க வேண்டும். அது போல் தென்னிந்தியர்கள் முதலில் ராமேஸ்வரத்திலும் காசியிலும் திதி கொடுத்தால் மிகவும் புண்ணியம். பித்ரு தோஷங்கள் விலகி நன்மை கிடைக்கும். அத்துடன் திருமணமாகாதவர்களுக்கு சில பரிகாரங்களை செய்கிறார்கள். அது போல் பெண் சாபம் குடும்பத்தில் இருந்தால் அந்த வீட்டில் நல்லதே நடக்காது. அந்த தோஷத்திற்கும் இங்கு பூஜை செய்து நிவர்த்தி செய்கிறார்கள்.
ஓம் நமசிவாய
படித்து பகிர்ந்தது
இரா இளங்கோவன்
நெல்லிக்குப்பம்.
No comments:
Post a Comment