Saturday, November 30, 2024

திருவலஞ்சுழியில் சோழர்களின் போர் தெய்வம் `ஏகவீரி சோழமாதேவி எழுப்பிய குலதெய்வ கோயில்...

கும்பகோணம் வட்டம் திருவலஞ்சுழி சடைமூடிநாதர் வெள்ளை விநாயகர் கோயில் பைரவர் சன்னதி பிரகாரத்தில் சுற்றி சோழர்கள் கல்வெட்டுகள் நிறைந்த சூழ்நிலையில் காணப்படுகின்றன.
மக்கள் இவற்றை தெரியாமல் ஒதுக்கி தான் சென்று வருகின்றனர்

.திருவலஞ்சுழியில் சோழர்களின் போர் தெய்வம் `ஏகவீரி சோழமாதேவி எழுப்பிய குலதெய்வ கோயில்! 
திருவலஞ்சுழி கோயில்
திருவலஞ்சுழி என்னும் கபர்தீஸ்வரர் ஆலயத்தில் அருள்புரியும் க்ஷேத்திர பாலர்தான் ராஜராஜ சோழனின் குலதெய்வம் என்கிறது வரலாறு. வெள்ளை விநாயகருக்கு அருகிலேயே க்ஷேத்திரபாலர் கோயில் உள்ளது. க்ஷேத்திர பாலர் என்றால் பைரவரையே குறிக்கும். க்ஷேத்திரபாலர் பூஜையைவிடச் சிறந்த பூஜை இல்லை என்கின்றன ஆகமங்கள். இத்தகைய க்ஷேத்திரபாலருக்குத் தனி ஆலயம் எடுத்து வழிபட்டாள் சோழ மாதேவி.
ராஜராஜ சோழனின் பட்டத்து ராணியான உலகமாதேவி எனும் தந்திசக்தி இந்த க்ஷேத்திரபாலர் கோயிலை எழுப்பியதாகக் கல்வெட்டு கூறுகிறது. கோயிலின் வடக்குச் சுவரில் காணப்படும் ஸ்ரீராஜராஜ தேவர் மகாதேவியார் தந்திசக்தி விடங்கியாரான ஸ்ரீஒலோகமாதேவியார் உய்யக்கொண்டார் வளநாட்டுப் பாம்பூர் நாட்டுத் திருக்குடமூக்கின்பால் திருவலஞ்சுழி நாம் எடுப்பித்த திருக்கற்றளிப் பிள்ளையார் க்ஷேத்திரபால தேவர்க்கு... என்ற கல்வெட்டுச் செய்தி இதை உறுதிப்படுத்துகிறது. க்ஷேத்திரபாலரே ராஜராஜனின் குலதெய்வம். ராஜராஜன் தனக்கு வழங்கப்பட்ட பொன்னைக் கொண்டு க்ஷேத்திரபாலருக்கு ஆபரணங்கள் செய்வித்ததாகவும் கல்வெட்டில் கூறப்பட்டுள்ளது. ராஜராஜன் மறைவுக்குப் பின் சோழமாதேவி பொன்பூக்களைக் கொண்டு க்ஷேத்திரபாலரை வழிபட்ட செய்திகளும் கல்வெட்டில் உள்ளன.
க்ஷேத்திரபாலர் கோயில்
இது மட்டுமின்றி இங்கு அஷ்டபுஜ காளி திருவடிவம் சிறப்புமிக்கது. இவளை, ஏகவீரி என்று கல்வெட்டுகள் குறிப்பிடுகின்றன. `பிடாரி ஏகவீரி’ என்றும் குறிக்கின்றன கல்வெட்டுகள். ராஜராஜனின் மாமியாரான குந்தணன் அமுதவல்லியார், பிடாரி ஏகவீரிக்கு ‘அவபல அஞ்சனை’ செய்வதற்காக நிவந்தங்கள் வழங்கினார் என்ற தகவலைச் சொல்கிறது ஒரு கல்வெட்டு. ராஜராஜனும் அவர் மைந்தன் ராஜேந்திரனும் போருக்குக் கிளம்புமுன், இந்த மாகாளியின் சந்நிதியில் தங்களின் வாள், வேல் போன்ற ஆயுதங்களை வைத்து வழிபட்டு, இவளிடம் உத்தரவுபெற்ற பிறகே போருக்குப் புறப்படு வார்கள், அவளின் திருவருளால் வெற்றிமேல் வெற்றியைக் குவித்தார்கள் என்றும் வரலாறு கூறுகின்றது.
உத்குடி ஆசனத்துடன், திருச் செவிகளில் விசேஷ குண்டலங்கள், கழுத்தில் சரப்பளி, கால்களில் சலங்கை, தொடைவரை மறைத்த சிற்றாடை என வீரமும் அழகும் நிறைந்த திருக்கோலத்தில் துடியாகக் காட்சி தருகிறாள் ஏகவீரி. விஷ்பூர முத்திரையுடன், கனிவுடன்கூடிய கீழ்நோக்கிய பார்வையுடன் அருள்கிறாள் காளி. ஒருகாலத்தில் எல்லைத் தெய்வமாகத் தனிக்கோயிலில் திருவலஞ்சுழியில் அருள்பாலித்தவள் என்கிறார்கள் வரலாற்று ஆய்வாளர்கள். மகிஷாசுரனை வதம் செய்த காளிதேவி ஈசனின் ஆணைப்படி இங்கு வந்து சிவபூஜை செய்தாள் என கோயில் புராணம் புராணம் கூறுகின்றது
ஓம் நமசிவாய 
படித்து பகிர்ந்தது 
இரா இளங்கோவன் 
நெல்லிக்குப்பம்.. 

Friday, November 29, 2024

மேல்மலையனூர் அங்காளம்மன் தலத்துக்கு மூன்று மாத அமாவாசையில் தொடர்ந்து சென்று வழிபட்டால் நினைத்தது நடக்கும்..


அண்ட சக்திகள் ஒன்று இணையும் நேரம் அமாவாசை.
மேல்மலையனூர் தலத்துக்கு மூன்று மாத அமாவாசையில் தொடர்ந்து சென்று வழிபட்டால், நினைத்தது நடக்கும் என்பது ஐதீகமாக உள்ளது. இதன் பின்னணியில் உள்ள வரலாறு ஆற்றல் மிக்க அண்ட சக்திகள் மூன்று. அவை சூரியன், சந்திரன், பூமி ஆகும். உருவக உருவங்களை உள்ளடக்கிய ஆண் பெண் என்ற இயக்க சக்தியே பிண்ட சக்தியாகும்.
அண்ட சக்திகள் ஒன்று இணையும் நேரம் அமாவாசை. பிண்ட சக்திகளாக மனிதனை தோற்றுவித்த ஆவி ஆன்மாவான மூதாதையர்களுக்கு வணக்கத்திற்குரியதாக ஏற்றுக் கொள்ளும் நாள்

அமாவாசை. இந்த நாட்களில் தான் அங்காளி என்ற சிற்சக்தி மயானங்கள் தோறும் ஆவி, ஆன்மா என்ற பிண்ட சக்திகளுக்கு மயானங்களில் சூரையிடும் நாள்
அமாவாசை இரவு பன்னிரண்டு மணி நேரம். இந்த நேரங்களில் அங்காளம்மன் திருக்கோயிலில் அமர்த்தப்பட்டு ஊஞ்சலில் வைக்கப்பட்டு அருளாசி வழங்கிடும் அருள்மிகு அங்காளம்மனிடம், மக்கள் தங்களின் குறைகளை வேண்டிக் கொண்டால் அதன்படி, வேண்டியது வேண்டியபடி அவர்களின் வேண்டுகோள் படி நிறைவுபெறுகிறது.
ஆற்றல்மிகு இச்சா சக்தி, கிரியா சக்தி, ஞானசக்தி என்ற ஆற்றல்களான விழைவாற்றல், செயல் ஆற்றல், அறிவு ஆற்றல், இவைகளின் உருவ சக்திகளான, லட்சுமி, சரஸ்வதி,பார்வதி இவர்களின் இயக்கமாக கல்வி, செல்வம், வீரம் என்று சொல்லும் மூன்று ஆற்றல்களும் மூன்று அமாவாசை தோறும் தொடர்ந்து வந்தால் அவர்களுக்கு நிறைவாக நிறையும் என்பதாக கருதியே தொடர்ந்து அமாவாசை தோறும் அங்காளம்மன் திருக்கோயிலுக்கு பக்தர்கள் வந்த வண்ணம் உள்ளனர்.
ஓம் நமசிவாய 
படித்து பகிர்ந்தது 
இரா இளங்கோவன் 
நெல்லிக்குப்பம்.. 

கிரகண நேரங்களிலும் மூகாம்பிகை கோவில் அர்ச்சனை, ஆராதனை ஆகியவை நடந்து கொண்டே இருக்கும்.

தமிழகத்தில் உள்ள புகழ்பெற்ற முப்பெரும் தேவியரும் 
ஒன்றாக அமைந்த 
ஒரே #மூகாம்பிகை தலமான
தேவாரம் மற்றும் திருப்புகழ் பாடல் பெற்ற சோழநாட்டு தலங்களில் ஒன்றான 
#திருவிடைமருதூர்
#மகாலிங்கசுவாமி திருக்கோயிலில் உள்ள 
#மூகாம்பிகை_அம்மன் (பிடாரி வடிவம்)
மூலவரைக் காணலாம் வாருங்கள் 🙏🏻 

திருவிடைமருதூர் மகாலிங்கேஸ்வரர் கோயிலில் மூகாம்பிகை அம்மனுக்கு இத்தலத்தில் தனி சந்நிதி உள்ளது. இந்தியாவிலேயே கொல்லூரிலும், திருவிடைமருதூரிலும் மட்டுமே மூகாம்பிகை அம்மனுக்கு சந்நிதியுள்ளது. கும்பகோணத்தின் கும்பேஸ்வரர் கோயில் மேல வீதியில் மூகாம்பிகை கோயில் உள்ளது.

#மூகாம்பிகை:

மூகனின் வேண்டுதலுக்கு இணங்கி அருளும் கருணையும் பொழியும் அன்னையானவள் அந்த அசுரனின் பெயரை சேர்த்து மூகாம்பிகா என வழிபட அருள் தந்தாள். அதிலிருந்து அன்னையை மூகாம்பிகை என்று அழைக்கிறார்கள்.
மூகன் எனும் கம்ஹாசூரன் கொல்லூர் மலைப்பகுதியில் தவம் இருந்து சக்திகளை பெற முயன்றான். இதை அறிந்த தேவர்கள் பயந்தனர். பிரம்மனிடம் வேண்டுகோள் விடுத்து சரஸ்வதி மூலம் அவனை ஊமையாக்கினார்கள். ஊமையன் என்பதை மூகன் என்றும் சொல்வார்கள். மூகன் தனக்கு கிடைத்த சக்தியால் அட்டூழியம் செய்து வந்தான். தேவர்களும் முனிவர்களும் அந்த அசுரனால் பாதிக்கப்பட்டனர். அவர்கள் அம்பிகையிடம் முறையிட்டனர்.

மூகனை அழிக்க விஷ்ணு, சிவன், பிரம்மன், இந்திரன், முருகன், பூவராகன் ஆகிய 6 பேரும் உதவி செய்தனர். அதனால் அம்பிகை மூகனை அழித்தாள். அப்போது தன் ஆணவத்திற்கு வருந்தி மன்னிப்பு கோரினான். மேலும் அம்பாள் பெயருடன் தன் பெயரும் இணைந்து வழங்க அருள் புரிய வேண்டும் என வேண்டுகோள் விடுத்தான். அவனின் வேண்டுதலுக்கு இணங்கி அருளும் கருணையும் பொழியும் அன்னையானவள் அந்த அசுரனின் பெயரை சேர்த்து மூகாம்பிகா என வழிபட அருள் தந்தாள். அதிலிருந்து அன்னையை மூகாம்பிகை என்று அழைக்கிறார்கள்.

அதன்பின் அன்னையானவள் தனது அனைத்து சக்திகளையும் அங்கே கோலமகரிஷி கண்டெடுத்து வணங்கி வந்த அந்த அற்புத ஜோதிர்லிங்கத்தை மகா வரப்பிரசாத பீடமாக்கிக் கொண்டு அருள்புரிந்து வருகிறாள். அகிலாண்டீஸ்வரியுடன் கலந்து விட்ட ஜோதிர் லிங்கம்தான் யுகங்களைக் கடந்து இன்றும் வீரிய தீட்சண்யத்துடன் கொல்லூர் ஸ்ரீமூகாம்பிகையாக சன்னதியில் ஒளிவிட்டுக் கொண்டிருக்கிறது. இது ஆதிசங்கரர் அருளிய ஸ்ரீசக்கரம் இந்த ஒரு சக்கரத்தில் ஒன்பது சக்ரம் அடங்கியுள்ளது. இதில் 64 கோடி தேவதைகள் அரூபா ரூபமாக ஆரோகணித்துள்ளார்கள் என்றும் கூறுகிறார்கள்.

கிரகணத்துக்கு நடைமூட மாட்டார்கள் கிரகண நேரங்களில் மற்ற இடங்களில் கோவில்கள் மூடிக் கிடக்கும். ஆனால் இந்த கோவிலில் அவ்வாறு இருப்பதில்லை. கிரகண நேரங்களிலும் மூகாம்பிகை கோவில் திறந்தவாறு இருந்து அர்ச்சனை, ஆராதனை ஆகியவை நடந்து கொண்டே இருக்கும். இந்த கோவிலின் மற்றொரு விசேஷம் என்னவென்றால் இங்கு பிரம்மசாரிகளுக்கு பூஜை செய்வதற்கும் சன்னதிக்குள் பிரவேசிப்பதற்கும் அனுமதி இல்லை என்பதாகும். தேவி பவனி வரும்போதும் அவர்களுக்கு எந்த ஈடுபாடும் இல்லை. எதிரிகளை வெல்ல சண்டி ஹோமம் அம்பாளைத் தரிசித்த பின் சன்னதிக்கு எதிராக உள்ள பிரார்த்தனை மண்டபத்தில் உட்கார்ந்து ஸ்தோத்திரம் சொல்லித் துதிக்க வேண்டும். அந்தப் பிரார்த்தனை மண்டபத்தில் இருந்து பூஜித்தால் விசேஷ பலன் உண்டு என்பது அத்தலத்தின் ஐதீகம்.

எதிரிகளால் எந்த ஆபத்தும் வராமல் இருக்க இங்கு சண்டி ஹோமம் செய்பவர்கள் ஏராளம். வேறெந்த கோவிலிலும்இல்லாத அளவு சண்டி ஹோமம் ஒரு நாளைக்கு மூன்று தடவைகள் இங்கு நடைபெறுகின்றன. ஆனாலும் நாம் நினைத்தவுடன் இங்கு சண்டிஹோமம் செய்து விட முடியாது. ஏனெனில் சில ஆண்டுகளுக்கு அதற்கான முன்பதிவு செய்ய வேண்டும். 

ஓம் நமசிவாய 
படித்து பகிர்ந்தது 
இரா இளங்கோவன்
 நெல்லிக்குப்பம். 

வாலிகண்டபுரம் சிவனை வேண்டிய அரசன் ஆண் குழந்தை பாக்கியம் பெற்றான்.

சோழர்கள் காலத்தில் கட்டப்பட்ட,
தமிழகத்தின் கட்டடக்கலையின் பல சிறப்பினைக் கூறும் 
வரலாற்றுப் பொக்கிஷங்களில் ஒன்றான,
அருணகிரிநாதரால் 
திருப்புகழ் பாடல் பெற்ற சோழநாட்டு தலங்களில் ஒன்றான, இராமாயண காலத்தில் வாணரங்களின் தலைவன் வாலி ஈஸ்வரனை வழிபட்ட தலமான 
*பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள புகழ்பெற்ற 
#வாலிகண்டபுரம் (வாலிகொண்டபுரம்)
#வாலீஸ்வரர் 
#வாலாம்பிகை திருக்கோயிலின் வரலாற்றையும் அழகையும் 
காணலாம் வாருங்கள்


ராமபிரானே நேருக்கு நேர் நின்று போரிடத் தயங்கிய வாலிக்கு, சிவபெருமான் வரம் அருளிய திருத்தலம். பெரும்பலூருக்கு 12 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது வாலிகண்டபுரம். தனக்குப் பதிலாக கிட்கிந்தையை ஆட்சி செய்த தம்பி சுக்ரீவனை வீழ்த்தப் போர் வியூகம் அமைத்தான் அண்ணன் வாலி. அப்போது வனவாசத்தில் இருந்த ராமபிரானின் உதவியை நாடினான் சுக்ரீவன்.
வாலியோ, `தன்னை எதிர்த்து யார் நின்றாலும் அவர்களின் பலத்தில் பாதி எனக்குக் கிடைக்க வேண்டும்’ என சிவபெருமானிடமே வரம் பெற்றவன். இந்த உண்மை தெரியாமல், தனது பரிவாரங்களை சுக்ரீவனுக்கு அளித்து வாலியோடு போரிடுவதற்கு அனுப்பினார் ராமபிரான்.

சிவபெருமான் தந்த வரத்தால் தம்பியின் பலத்தில் பாதியைப் பெற்ற வாலி, சுக்ரீவனை அசுரபலம் கொண்டு துரத்தினான். சிவபெருமானிடம் பெற்ற வரத்தால்தான் வாலியை நேருக்கு நேராய் வீழ்த்த முடியவில்லை என்பதை அறியும் ராமபிரான், மீண்டும் சுக்ரீவனை வாலியோடு போரிட அனுப்பிவிட்டு, நேருக்கு நேர் செல்லாமல், மரத்தின் பின்னால் மறைந்திருந்து அம்பை எய்து வாலியை வீழ்த்தினார்.
மூன்று நந்திகள்:

அன்றைக்கு அப்படி கிட்கிந்தை வனத்தில் வாலி, சிவபெருமானை வழிபட்ட இடம்தான் இப்போது வாலிகண்டபுரமாக விளங்குகிறது. இங்கே, வாலி வழிபட்ட சிவபெருமான் வாலீஸ்வரராகவும் அம்பாள் வாலாம்பிகையாகவும் வீற்றிருக்கிறார்கள். சிவன் இங்கே சுயம்பு லிங்கமாக காட்சி தருகிறார். பொதுவாக சிவபெருமானுக்கு எதிரே ஒரு நந்திதான் இருக்கும். ஆனால் இங்கே, பாலநந்தி, யவனநந்தி, விருத்தநந்தி என மூன்று நந்திகள் இருப்பது சிறப்பு. எதிரிகளை வீழ்த்த வாலிக்கு வரம் தந்த வாலீஸ்வரரை வணங்கினால் சத்ரு தோஷங்கள் நீங்கும் என்பது நம்பிக்கை.

வாலீஸ்வரன் என்றால் உண்மையான அறிவு உடையவர்களால் வணங்கப்படும் தலைவன், வாலாம்பிகை என்றால் மெய்யறிவு உடையவர்களுக்கு தலைவியாய் இருப்பவள் என்று பொருள். உண்மையே ஈசன் என்ற உண்மையை உணர்விப்பதே வாலிகண்டபுரம் ஆகும். இந்த உண்மையை உலகத்தவர்க்கு உணர்த்தியவர்களுள் முதன்மை வாய்ந்தவனே அறிவு அண்ணல் தண்டாயுதபாணி தெய்வம் ஆவார். வேறு எங்கும் காண இயலா வகையில் குபேர திக்கான வடக்கு திக்கை நோக்கி கையில் தண்டத்துடன் ஸ்ரீபாலதண்டாயுதபாணி எழுந்தருளி உள்ளார். தனக்கு ஒப்பாரும் மிக்காரும் எவரும் இல்லை என்ற பாணியில் ஏகாந்தமாக சேவை சாதிக்கும் இத்தல முருகப் பெருமானை தரிசனம் செய்ய காண கண் கோடி வேண்டும் என்பதே உண்மை.

இந்த ஆலயம் ஏழுநிலை ராஜகோபுரத்துடன் அழகுற காட்சியளிக்கிறது. கோவில் தீர்த்தம் சரவண தீர்த்தம் ஆகும். தல விருட்சம் மாவிலிங்கை மரம். இந்த ஆலத்தில் உள்ள இறைவனை அருணகிரி நாதர், ஸ்ரீமத்பாம்பன் சுவாமிகள், குமரகுருபரர், தண்டபாணி சுவாமிகள், சிதம்பர சுவாமிகள், ராமலிங்க அடிகளார், திருமுருக கிருபானந்த வாரியார் ஆகியோர் பாடியிருக்கிறார்கள்.

இதிகாசங்களில் ஒன்றான ராமாயணத்தில் வானரத் தலைவனான வாலி, ஈஸ்வரனை வழிபட்ட இடம் ‘வாலீஸ்வரம்’ என்றும், ராமன் சீதையை தேடி இலங்கை நோக்கி சென்ற வழியில் வாலியை கண்ட இடம் ‘வாலிகண்டபுரம்’ என்று பெயர் பெற்றுள்ளதாக இத்தல வரலாற்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

*மூலவர்: வாலீஸ்வரர்

பிறபெயர்கள்: திருவாலீஸ்வரத்து மகாதேவர், திருவாலீஸ்வரத்து பெருமாள், திருவாலீஸ்வரத்து ஆழ்வார், திருவாலீஸ்வரத்து பரமேஸ்வரர், திருவாலீஸ்வரமுடைய நாயனார், திருவாலிநாதர், திருவாலீஸ்வரமுடைய தம்பிரான், ஸ்ரீவாலிநாயகர், வாலீஸ்வர சுவாமி

*அம்மன்: வாலாம்பிகை
தலமரம்: மாவிலங்கை
தீர்த்தம்: சரவண தீர்த்தம், பிரம்ம தீர்த்தம் (கோனேரி ஆறு)

சிறப்பு: 
1. மூலவர் சுயம்பு மூர்த்தி ஆவார். இவர் கிஷ்கிந்தை நாட்டின் அரசனான வாலிக்கு அருள் புரிந்தவர். 
2. அருணகிரிநாதர் முக்தி அடைவதற்கான தலத்தை அவருக்கு அருளிய திருத்தலம்.

*பழமை: 

யுகங்கள் தாண்டி நிற்கும் திருத்தலம். தற்போதுள்ள திருக்கோயில் சுமார் 1,100 ஆண்டுகளுக்கு முன் சோழ மன்னர்களால் கட்டப்பட்டது. 

*ஊர்: வாலிகண்டபுரம், பெரம்பலூர் மாவட்டம், தமிழ்நாடு, இந்தியா

*புராணபெயர்: வாலிகொண்டபுரம், கண்டீரபுரம், கண்டீரம், கேரளாந்தகபுரம்

*பெயர்காரணம்:
வாலீஸ்வரர், வாலிகொண்டபுரம்: வாலியால் வணங்கப்பட்ட இறைவன் வாலீஸ்வரர் என போற்றப்பட்டார். வாலீஸ்வரர் உறையும் ஊர் வாலிகொண்டபுரம் என பெயர் பெற்றது. பிற்காலத்தில், இப்பெயர் மருவி, வாலிகண்டபுரம் என்றானது.

*கண்டீரபுரம் / கண்டீரம்: 

சங்ககாலத்தில் இப்பகுதியை கண்டீரக்கோ என்ற மன்னன் ஆண்டு வந்தான். அவன் பெயரால், இப்பகுதி கண்டீரபுரம் அல்லது கண்டீரம் என வழங்கப்பட்டது.

*கேரளாந்தகபுரம்: 

புகழ் பெற்ற ராஜ ராஜ சோழனுக்கு “கேரளாந்தன்” என்ற பட்டபெயரும் உண்டு. கி.பி. 1,013 ஆண்டில் தன் பட்டபெயர் கொண்டு, இப்பகுதிக்கு “கேரளாந்தகபுரம்” என பெயரிட்டான் ராஜ ராஜ சோழன். இச்செய்தி, திருக்கோயிலுள்ள கல்வெட்டில் காணப்படுகிறது.     

*காலம்: 

பொ.யு.885-ல் ஆதித்த சோழன் காலத்தில் கற்றளியாக புனரமைக்கப்பட்ட இவ்வாலயம், பின்னர் பல சோழ மன்னர்களால் (10-12ஆம் நூற்றாண்டு) திருப்பணி செய்யப்பட்டு, விஜயநகர ஆட்சிக்காலத்தில் (15-ஆம் நூற்றாண்டு) ஏழு நிலை ராஜகோபுரம், மண்டபங்களுடன் தற்போது நாம் காணும் வடிவில் மேம்படுத்தப்பட்டுள்ளது.

*கல்வெட்டுச் சிறப்புகள்:

சேர பெருமாள் இளவரசி கோ கிழான் அடிகள் மற்றும் முதலாம் பராந்தக சோழன் (கி.பி. 907 – 955) ஆகியோரின் மகனான இராஜாதித்தியனின் கல்வெட்டு வாலிகண்டபுரத்தில் உள்ளது. வாலீஸ்வரரை வணங்கி பிள்ளைப்பேறு பெற்ற சிற்றரசர் குறித்த கல்வெட்டு மூன்றாம் குலோத்துங்க சோழரின் ஆட்சிக்காலத்தில் (பொ.யு.1207) வெட்டப்பட்டுள்ளது. பின்னர் 18 – ஆம் நூற்றாண்டில் ஆற்காடு நவாப் ஆட்சிக்காலத்தில் இப்பகுதி போர்ப்பாசறையாக இருந்தது. அப்போது இவ்வாலயத்தின் சில சிற்பங்கள் சிதைக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

பதிகம்:- திருப்புகழ்

பாடியவர்கள்: அருணகிரிநாதர், ஸ்ரீமத்பாம்பன் சுவாமிகள், குமரகுருபரர், தண்டபாணி சுவாமிகள், சிதம்பர சுவாமிகள், ராமலிங்க அடிகளார், மற்றும் திருமுருக கிருபானந்த வாரியார்.

#வாலிகண்டபுரம் திருப்புகழ்:

"ஈயெ றும்புநரி நாய்க ணங்கழுகு
     காக முண்பவுட லேசு மந்துஇது
          ஏல்வ தென்றுமத மேமொ ழிந்துமத …… வும்பல்போலே
ஏது மென்றனிட கோலெ னும்பரிவு
     மேவி நம்பியிது போது மென்கசில
          ரேய்த னங்கள்தனி வாகு சிந்தைவச …… னங்கள்பேசிச்
சீத தொங்கலழ காவ ணிந்துமணம்
     வீச மங்கையர்க ளாட வெண்கவரி
          சீற கொம்புகுழ லூத தண்டிகையி …… லந்தமாகச்
சேர்க னம்பெரிய வாழ்வு கொண்டுழலு
     மாசை வெந்திடவு னாசை மிஞ்சிசிவ
          சேவை கண்டுனது பாத தொண்டனென …… அன்புதாராய்
சூதி ருந்தவிடர் மேயி ருண்டகிரி
     சூரர் வெந்துபொடி யாகி மங்கிவிழ
          சூரி யன்புரவி தேர்ந டந்துநடு …… பங்கினோடச்
சோதி யந்தபிர மாபு ரந்தரனு
     மாதி யந்தமுதல் தேவ ருந்தொழுது
          சூழ மன்றில்நட மாடு மெந்தைமுத …… லன்புகூர
வாது கொண்டவுணர் மாள செங்கையயி
     லேவி யண்டர்குடி யேற விஞ்சையர்கள்
          மாதர் சிந்தைகளி கூர நின்றுநட …… னங்கொள்வோனே
வாச கும்பதன மானை வந்துதினை
     காவல் கொண்டமுரு காஎ ணும்பெரிய
          வாலி கொண்டபுர மர்ந்துவளர் …… தம்பிரானே.
__அருணகிரிநாதர்

சூரனது ஆட்சியில் சூரியன் வானின் நடுவில் செல்லத் தடை இருந்தது.சூர சம்ஹாரம் ஆனபிறகே சூரியன் நடுவானில் செல்ல முடிந்தது – கந்த புராணம்

*வாலீஸ்வரர்:

வானர மன்னன் வாலி இக்கோயிலில் சிவனை வழிபட்டதால் இறைவன் வாலீஸ்வரர் என்றும் அன்னை வாலாம்பிகை என்றும் அழைக்கப்படுகிறார். கூடவே, கோனேரி ஆறு, வாலி நதி என்றும், வாலி தீர்த்தம் என்றும் அழைக்கப்பட்டது. வானர மன்னன் வாலி தனது ஆட்சியின் போது இந்த நகரத்தை உருவாக்கியதாக நம்பப்படுகிறது, எனவே இது வாலிகண்டபுரம் என்று அழைக்கப்படுகிறது.

*பிரம்மபுரீஸ்வரர்:

ஸ்தல புராணத்தின்படி, பிரம்மா கோனேரி ஆற்றங்கரையில் சிவலிங்கத்தை பிரதிஷ்டை செய்து சிவனை தரிசனம் செய்ய வழிபட்டார். எனவே சிவபெருமான் பிரம்மபுரீஸ்வரர் என்றும் அழைக்கப்படுகிறார். இந்த கிராமம் பிரம்மபுரி என்றும், கோனேரி ஆறு பிரம்ம தீர்த்தம் என்றும் அழைக்கப்பட்டது.

*கோனேரி ஆறு:

பஞ்ச பாண்டவர்கள் தங்கள் வனவாச காலத்தில் தங்களுடைய அடையாளங்களை மறைத்துக்கொண்டு இப்பகுதியை ஆண்ட விராட மன்னரின் கீழ் பணிபுரிந்தனர். இந்த நேரத்தில், தர்மன் மன்னனுடன் பகடை விளையாட்டை விளையாடினான், மேலும் அரசன் தவறான விளையாட்டில் ஈடுபடுவதைக் கண்டான், அதனால் பாண்டவர்கள் கோபமடைந்து மன்னனுடன் சண்டையிடத் தொடங்கினார். தங்கள் அடையாளத்தை மறைக்க வேண்டிய நிர்ப்பந்தத்தால், அவர்கள் அமைதியாக இருந்து, ஆற்றில் நீராடி, தங்கள் கோபத்தைப் போக்க இங்குள்ள சிவனை வழிபட்டனர். அதனால் அவர்களின் கோபம் தணிந்த நதி, கோனேரி ஆறு என்று அழைக்கப்படுகிறது. எனவே விராடன் இப்பகுதியை ஆண்டதால், அப்பகுதி லாடபுரம் என அழைக்கப்படுகிறது. தற்போது லாடபுரம் வாலிகண்டபுரத்திற்கு மேற்கே அமைந்துள்ளது.

*கண்டீரம்:

சங்க காலத்தில் இந்த இடம் வேளிர் மன்னன் கண்டீரக்கோவால் ஆண்டதால் இது கண்டீரம் என்று அழைக்கப்படுகிறது. பிற்காலத்தில் வாலியின் புராணத்துடன் இத்தலத்தின் தொடர்பு காரணமாக இத்தலம் வாலிகண்டபுரம் எனப் பெயர் பெற்றது.

*ஜெயம்கொண்ட சோழ வண்ணத்துடையான் இங்கு சிவனை வேண்டி ஆண் குழந்தை பாக்கியம் பெற்றான்.

பழங்காலத்தில், இந்த இடம் சுத்தமல்லன் ஜெயம்கொண்ட சோழ வண்ணத்துடையான் என்பவரால் ஆளப்பட்டது. அவர் தனது அரசை ஆள வாரிசு இல்லை. குழந்தை வேண்டி வாலீஸ்வரரை மனதார வேண்டிக் கொண்டார். சிவபெருமான் அருளால் அவருக்கு ஆண் குழந்தை பாக்கியம் கிடைத்தது. புகழாரைக் கிராமத்தின் வருவாயைக் கொண்டு இந்தக் கோவிலுக்குக் கொடுத்தார். இச்சம்பவம் இக்கோயிலில் உள்ள கல்வெட்டு ஒன்றில் பதிவாகியுள்ளது.

*குழந்தை வரம்:

அம்பாளே இங்கே துர்கை சொரூபிணியாகக் காட்சி கொடுப்பதால் இத்திருத்தலத்தில் துர்கைக்குத் தனியான சன்னிதி இல்லை. பொதுவாக, அம்பாளுக்கு எதிரில் ரிஷப வாகனம் தான் இருக்கும். ஆனால், இங்கே சிம்ம வாகனத்தைப் பார்க்க முடிகிறது. ஆடிப்பூர திருநாளின்போது அம்மனுக்கு வளையல் காப்பு சாற்றி அந்த வளையல்களை பக்தர்களுக்கு வழங்குகிறார்கள். இந்த வைபவத்தில் வாலாம்பிகையை தரிசித்து, வளையல்களைப் பெற்றுச் சென்றால் குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு அந்த பாக்கியம் கைகூடிவரும் என்பது நம்பிக்கை.

*பாலதண்டாயுதனுக்கு பங்குனி உத்திரம் விழா:

மகா சிவராத்திரியின்போது நடைபெறும் அன்னாபிஷேகமும், கார்த்திகை மாதத்தில் வரும் சோமவாரப் பூஜைகளும் வாலீஸ்வரருக்கு விசேஷமான வைபவங்கள். அம்பாள் சிவனுக்கு அடுத்தபடியாக இங்கே முருகப் பெருமான் போற்றப்படுகிறார். சிவன் - அம்பாளுக்கு காவல் தெய்வமாகவும் கருதப்படும் கந்தப் பெருமான், பால தண்டாயுதபாணியாக கம்பீரமாக நிற்கிறார். அருணகிரிநாதருக்குத் திருவண்ணாமலைக்கு வழிகாட்டிவிட்டதால் இங்கே கந்தன் வடக்கு நோக்கி சன்னிதி கொண்டிருப்பதாகச் சொல்லப்படுகிறது. இவருக்காகவே பங்குனி உத்திரத்தின்போது மூன்று நாள் திருவிழா இங்கே களைகட்டுகிறது.

*பயத்தைப் போக்கும் கபால பைரவர்:

பிரகாரத்தில் வாலீஸ்வரருக்கு வலது பக்கமாய் ஒரே கல்லில் 1008 லிங்கங்கள் வடிக்கப்பட்ட பெரிய லிங்கம் ஒன்றும் உள்ளது. இந்த லிங்கத்தை வழிபட்டால் 1008 சிவாலயங்களுக்குச் சென்று வழிபட்டதற்கான பலனை அடையலாம் என்பது நம்பிக்கை. பைரவர் இத்திருத்தலத்தில் மண்டை ஓட்டு மாலை அணிந்து கபால பைரவராக காட்சி தருகிறார். தேய்பிறை அஷ்டமியில் கபால பைரவருக்கு வேப்ப எண்ணெய் தீபம், மிளகு தீபம் போட்டால் பில்லி - சூனியம், திருஷ்டிகள் கழியும் என்பது நம்பிக்கை.

*மன்னர்கள் வழிபட்ட சேஷ்டா தேவி:

இத்திருத்தலத்தில் சேஷ்டா தேவி என்றொரு அம்மனும் இருக்கிறார். இந்த அம்மனைத் தங்களின் குலதெய்வமாக வழிபட்ட சோழ மன்னர்கள், போருக்குப் போகும் முன் இந்த அம்மனை வழிபட்டுச் செல்வதை வழக்கமாகக் கொண்டிருந்தார்கள். பயபக்தியுடன் வழிபட்டால் எதிரிகளை மந்தமாக்கி வெற்றிகளைத் தருவாள் சேஷ்டா தேவி என்ற நம்பிக் கை இங்கே நிலவுகிறது.

#அமைப்பு:

ஏழு நிலையுள்ள ராஜ கோபுரம் சிற்பங்களின்றி காணப்படுகின்றன. சகஸ்ர கோபுரம் என்றழைக்கப்படுகின்ற ராஜ கோபுரத்தின் முன்பாக இடப்புறத்தில் நடராசர் மண்டபம் உள்ளது. கிருஷ்ணதேவராயரால் கட்டப்பட்ட இம்மண்டபத்தில் அழகான சிற்பங்கள் உள்ளன.ராஜ கோபுரத்திற்கு எதிராகவும், இந்த மண்டபத்திற்குத் தென் எதிராகவும் உள்ள மண்டபத்தில் பால கணபதி காணப்படுகிறார். ராஜ கோபுரத் தூண்களில் இரு புறம் அரசிகள் காணப்படுகின்றனர். கோபுரத்தின் உட்புறம் வலது பக்கத்தில் ஈசான்ய மூலையில் கோயில் தீர்த்தம் அமைந்துள்ளது. மண்டபத்தில் நந்தி, மூலவரைக் காணும் வகையில் உள்ளார். மூலவரின் எதிரே அடுத்தடுத்து பால நந்தி, வாலிப நந்தி, யவன நந்தி என்றழைக்கப்படுகின்ற மூன்று நந்திகள் உள்ளன. மகாமண்டபத்தில் மேற்கு நோக்கிய நிலையில் பைரவர் உள்ளார். கருவறைக்கு முன்பாக அர்த்த மண்டப வாசலின் அருகில் கணபதி உள்ளார். இரு புறமும் துவாரபாலகர்கள் காணப்படுகின்றனர். மகா மண்டபத்தின் உள்ளே தெற்கு நோக்கிய நிலையில் இறைவியின் சன்னதி உள்ளது. தண்டாயுதபாணி, தட்சிணாமூர்த்தி, ஆகியோர் உள்ளனர். வடமேற்கு மூலையில் கொற்றவை உள்ளார். திருச்சுற்றின் தென் திசையில் ஏழரை அடி உயரத்தில் தண்டாயுதபாணி சற்றே மேற்கு நோக்கி முகம் சாய்ந்த நிலையில் காணப்படுகிறார். தென் புறத்தில் 1008 பாணங்களை உள்ளடக்கிய லிங்கம் காணப்படுகிறது.

ராஜகோபுரத்தின் முன்பாக இடதுபுறம் நடராஜர் மண்டபம். ஆடல்வல்லான் நடராஜப் பெருமானின் திருவுருவம். மண்டபத் தூண்களில் மயக்கும் சிற்பங்கள் கி.பி 1514 ல் கிருஷ்ண தேவராயர் காலத்தில் கட்டப்பட்ட மண்டபம். ராஜகோபுரத்துக்கு நேரேதிராகவும், நடராஜர் மண்டபத்துக்கு தென் எதிராகவும் சிறிய கல் மண்டபத்தில் பாலகணபதி. ராஜகோபுரத்திருவாயில் தூண்களில் இருபுறமும் எதிர் எதிராக எழிலாக வடிவுருவம் தாங்கி நிற்கின்றனர் இரண்டு எழில் அரசிகள். கோபுரத்தின் உட்புறம் வலது பக்கமாக ஈசான்ய மூலையில் சரவண தீர்த்தம் எனப்படும் திருக்குளம். முன்னொரு காலத்தில் ஆண்டுக்கொருமுறை இதில் தெப்பத் திருவிழா நடத்தப்பட்டுள்ளது.

திருக்குளத்தூணில் வாலி சிவபூஜை செய்வது போன்ற சிற்பம் இங்கு மட்டுமே என்று எண்ணிட வேண்டாம். திருக்கோயிலில் ஆங்காங்கே மண்டபத் தூண்களில் வாலி சார்ந்த சிற்பங்கள் வடிக்கப்பட்டுள்ளன. ஒரு கட்டத்தில் பற்பல தூண்களில் வாலி மயமாகவே காட்சியளிக்கின்றன வெவ்வேறு வகை சிற்பங்கள். மண்டபத்தில் திருநந்திதேவர் சதா சர்வகாலமும் வாலீஸ்வரனைக் கண்டுருகும் காரணத்தால் அமைதி தவழ வீற்றிருக்கிறார்.

இத்திருக்கோயிலில் மூன்று இடங்களில் முறையே மூலஸ்தானத்தின் எதிரே அடுத்தடுத்து பின்தொடரும் வரிசையாக பாலநந்தி, வாலிபநந்தி, யவ்வன நந்தி என அமையப்பெற்றுள்ளனர். மகா மண்டபத்தில் உள்ளே மேற்கு நோக்கி பைரவர் இடுப்பிலே நாகப்பாம்பை அரைஞான் கயிறாகவும், மண்டையோடுகளை பூணுலாகவும் அணிந்த வண்ணம் நின்று கொண்டிருக்கிறார்.

அர்த்தமண்டப வாசலையொட்டி வலதுபுறம் கல்யாண விநாயகர் வாசலில் இருபுறமும் துவார பாலகர்கள் உள்ளே சென்றால் மூலவர் சன்னிதி எதிரே பால நந்தி.

பயண வழிகாட்டல்:-

1. பெரம்பலூரிலிருந்து சுமார் 14.8 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது.
2. அரியலூரிலிருந்து சுமார் 41.6 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது.
3. திருச்சியிலிருந்து சுமார் 71.6 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது.
4. சேலத்திலிருந்து சுமார் 116  கிலோமீட்டர் தொலைவில் உள்ளது.
5. விருதாச்சலத்திலிருந்து சுமார் 57.7 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது.
6. கும்பகோணத்திலிருந்து சுமார் 100 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது.
7. தஞ்சாவூரிலிருந்து சுமார் 85.4 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது.

#தலவரலாறு:-

சப்த ரிஷிகளுள் ஒருவரான காஷ்யப மகரிஷியின் மனைவியருள் ஒருத்தி வினதை. இவளுக்கு பிறந்தவர்களே பறவைகள். ஒருமுறை, வினதை அடைகாத்த இரு முட்டைகள் காலம் கடந்தும் உடையாமல் இருந்தன. பொறுமை இழந்த வினதை, ஒரு முட்டையை உடைத்து பார்த்தாள். அந்தோ பரிதாபம்! வினதைவின் செயலால் முட்டைக்குள் வளர்ந்து வந்த கரு, முழு வளர்ச்சி அடையாமல் பிறக்க நேர்ந்தது. அதற்கு “அருணி” என பெற்றோர் பெயரிட்டனர். இடுப்புக்கு கீழே முழுமை பெறாத அருணியின் பாலினம் பற்றி எவரும் அறிந்திருக்கவில்லை. 

அருணி சூரிய பகவானின் தேரோட்டி ஆனாள்(ன்). தேவலோகத்தில் வாழ்ந்து வந்த அருணிக்கும், தேவர்களின் தலைவனான தேவேந்திரனுக்கு ஒரு பிள்ளை பிறந்தான். அவனே வாலி! அருணிக்கும், சூரிய பகவானுக்கும் மற்றோரு பிள்ளை பிறந்தான். அவனே சுக்ரீவன்! தன் இரு குழந்தைகளையும் கௌதம மகரிஷியின் குடிலுக்கு அருகில் கிடத்திய அருணி, அவ்விடத்தை விட்டு நீங்கினாள். 

கௌதம மகரிஷி தன் மனைவியான அகல்யைவுடன் வாழ்ந்து வந்தார். அவர்களுக்கு அஞ்சனை என்ற மகள் இருந்தாள். தங்கள் குடிலுக்கு அருகில் கிடந்த குழந்தைகளைக் கண்ட ரிஷி தம்பதியினர், அக்குழந்தைகளை தங்கள் மகன்களாக ஏற்று வளர்த்தனர். அவர்கள் வாழ்க்கை அமைதியாக சென்று கொண்டிருந்தது. ஆனால், அது நீண்ட காலம் நீடிக்கவில்லை. 

வான்வெளியில் சென்று கொண்டிருந்த தேவேந்திரன், அகல்யையைக் கண்டான். கற்புக்கரசியான அகல்யையின் அழகில் மயங்கிப்போன தேவேந்திரன் மதி இழந்தான். அகல்யையை எவ்வாறேனும் அடைந்து விட வேண்டும் என்றெண்ணிய தேவேந்திரன், கௌதம மகரிஷி குடிலை விட்டு அகலும் வரை காத்திருந்தான். பிறகு, கௌதம மகரிஷியின் உருக்கொண்டு குடிலுக்குள் சென்று தன் இச்சையை நிறைவேற்றிக் கொண்டான். அதே சமயம், குடிலுக்குள் நுழைந்தார் கௌதம மகரிஷி. தன் உருவிலிருந்த தேவேந்திரனை அடையாளம் கண்டுகொண்டார். அவன் செய்த தீச்செயலையும் உணர்ந்தார். ஆவேசம் மேலோங்க தேவேந்திரனுக்கு சாபம் அளித்தார். கணவனைப்போல உருக்கொண்டு வந்த ஆடவனை அடையாளம் கண்டுகொள்ள முடியாத அகல்யையை கல்லாக போகும் படி சபித்தார். தான் வஞ்சிக்க பட்டதை உணர்ந்தாள் அகல்யை. தான் நிரபராதி என கௌதம மகரிஷியிடம் மன்றாடினாள். ஆனால், மகரிஷியின் ஆவேசம் சற்றும் குறையவில்லை. மாறாக, தான் குடிலுக்குள் நுழைவதற்கு முன், தன்னை போல் வேடம் கொண்ட ஒரு ஆண் மகன் குடிலுக்குள் தாயுடன் உள்ளான் என தன்னிடம் உரைத்த மகள் அஞ்சனையை  சுட்டிக் காட்டினார். சிறுமியான அவளுக்கு தெரிந்தது அகல்யைக்கு எவ்வாறு தெரியாமல் போனது என கொந்தளித்தார். இயலாமை, வேதனை என பலவற்றால் தாக்குண்டு கிடந்த அகல்யையின் கோபம் அஞ்சனையின் மீது பாய்ந்தது. அஞ்சனையை வானரமாக போகும்படி சபித்தாள். அகல்யையின் சாபத்தைக் கண்ட கௌதம மகரிஷி, தாயின் செயலை தன்னிடம் கூறாமல் இருந்த குற்றத்திற்காக, மகன்களான வாலி மற்றும் சுக்ரீவனை வானரமாக போகும்படி சபித்தார். சிறிது நேரத்திற்குள் அணைத்து அவலங்களும் நடந்தேறிவிட்டன. 

அகல்யை கல்லாக மாறிப்போனாள். அஞ்சனை, வாலி மற்றும் சுக்ரீவன் வானரமாக மாறிப்போனார்கள். சாபவிமோசனம் அளிக்குமாறு கௌதம மகரிஷியை வேண்டினாள் அகல்யை. கோபம் தணிந்த அவர், நடந்த அனைத்தையும் எண்ணி வேதனை அடைந்தார். அளித்த சாபத்தை அகற்றும் சக்தி தனக்கு இல்லை எனக் கூறினார். பிற்காலத்தில், பெருமாளின் அவதாரமான ஸ்ரீராமரால் சாபவிமோசனம் ஏற்படும் எனக் கூறினார். வானரமாக மாறிப்போன குழந்தைகளை, குழந்தைப்பேறு இல்லாத வானர அரசனான ரிக்ஷவிடம் ஒப்படைத்தார். பிறகு, அவ்விடத்தை விட்டு நீங்கினார்.           

கிஷ்கிந்தையை ஆண்டு வந்த வானர அரசனான ரிக்ஷ, குழந்தைகளை சீராட்டி, பாராட்டி வளர்த்தான். அவனது காலத்திற்கு பிறகு, மூத்தவனான வாலி கிஷ்கிந்தையின் அரசனானான். வீரத்தில் சிறந்து விளங்கிய வாலி, வாலிகொண்டபுரத்திற்கு வந்து, சிவபெருமானை ஆராதனை செய்தான். பிறகு, பிரம்ம தேவரை நோக்கி தவம் இருந்தான். வாலியின் தவத்தில் மகிந்து போன பிரம்ம தேவர், அவனுக்கு காட்சி அளித்தார். அவன் வேண்டும் வரம் யாது என வினவினார். வாலியும், தன்னுடன் போர் புரிய வரும் எதிராளியின் பலத்தில் பாதி தன்னை அடைய வேண்டும் என்ற வரத்தை யாசித்தான். பிரம்ம தேவரும் வாலி யாசித்த வரத்தை அருளினார். இந்நிகழ்வு நடந்த திருத்தலமே வாலிகொண்டபுரம் ஆகும். 

பிரம்ம தேவர் அளித்த வரத்தால் தான், ஸ்ரீராமர் தர்மத்திற்கு மாறாக, மறைந்திருந்து வாலியை வதம் செய்தார் என்பது நாம் அறிந்ததே! அந்த வரத்தை வாலி பெற்ற தலம் வாலிகொண்டபுரமே என்றறிகையில் மெய் சிலிர்க்கத்தான் செய்கிறது. 

#தலபெருமைகள்: 

1. சுயம்பு மூர்த்தியான மூலவர் ஒருபக்கம் சாய்ந்து காணப்படுகினார். குறிப்பாக, கிழக்கு நோக்கி அருள்புரியும் வாலீஸ்வரர், சற்றே தெற்கு நோக்கி சாய்ந்து காணப்படுகினார்.

2. கிருத யுகத்திலேயே இத்தலம் இருந்ததாக புராணங்கள் கூறுகின்றன. அப்போது, “பிரம்மபுரீஸ்வரர்” என்ற திருநாமத்தோடு மூலவரும், “பிரகன்நாயகி” என்ற திருநாமத்தோடு அம்மனும் அறியபட்டனர். த்ரேதா யுகத்தில் வாலிக்கு அருளிய காரணத்தால், “வாலீஸ்வரர்” என்ற திருநாமத்தோடு மூலவரும், “வாலாம்பிகை” என்ற திருநாமத்தோடு அம்மனும் போற்றப்பட்டனர். இதுவே கலியுகமான இன்று வரை வழக்கில் உள்ளது.

3. ஏழு நிலைகளைக் கொண்ட ராஜகோபுரம் எழிலோடு காணப்படுகிறது. ராஜகோபுரத்தில் திருவுருவ சிற்பங்களுக்கு பதிலாக அழகிய வேலைப்பாடுகள் கொண்ட பீடங்கள் காணப்படுகின்றன. இந்த ராஜகோபுரத்தை “சகஸ்ர கோபுரம்” என்றழைக்கின்றனர். “சகஸ்ரம்” என்ற வடமொழி சொல் “ஆயிரம்” என பொருள்படும். அவ்வாறாயின், 1,000 பீடங்களைக் கொண்ட ராஜகோபுரம் “சகஸ்ர கோபுரம்” என்றழைக்கப்படுகிறதா என்ற கேள்வி மனதிற்குள் எழத்தான் செய்கிறது.

4. பொதுவாக, நிலைகளின் எண்ணிக்கையை ஒத்தே ராஜகோபுரத்தின் மீதுள்ள கலசங்கள் இருக்கும். அதாவது, ஏழு நிலைகளைக் கொண்ட ராஜகோபுரத்தின் மீது ஏழு கலசங்கள் இருக்கும். மாறாக, இத்திருத்தலத்தில், ஏழு நிலைகளைக் கொண்ட ராஜகோபுரத்தின் மீது ஒன்பது கலசங்கள் இருக்கின்றன. இந்த அமைப்பிற்கான காரணம் தெரியவில்லை.

5. பொதுவாக, திருக்கோயிலின் அணைத்து சன்னதிகளையும் ராஜகோபுரத்தைக் கடந்து திருக்கோயில் வளாகத்தினுள் சென்ற பிறகே தரிசிக்க இயலும். மாறாக, ராஜகோபுரத்தின் வெளியே, வடக்கு திசையில் தெற்கு நோக்கி ஆடல்வல்லான் (நடராஜர்) சன்னதி அமைந்துள்ளது. சன்னதிக்கு முன் உள்ள மகாமண்டபம் நாயக்கர் கால திருப்பணியாகும். குறிப்பாக கிருஷ்ணதேவராயர் காலத்தில் கட்டப்பட்டுள்ளது. இந்த மண்டபத்தின் தூண்களில் காணப்படும் சிற்பங்களின் அழகை வெறும் வார்த்தைகளால் எடுத்துரைக்க முடியாது. இந்த மண்டபத்திற்கு “குதிரை மண்டபம்” என்று பெயர்.

6. ராஜகோபுரதிற்கு நேர் எதிரில், சிறிய கல் மண்டபத்தில் “பால கணபதி” என்ற திருப்பெயரில் பிள்ளையார் அருள்புரிகிறார். பிள்ளையார் சன்னதியும் திருக்கோயில் வளாகத்திற்கு வெளியில் அமைந்துள்ளது. பொதுவாக, இந்த அமைப்பு பிற கோயில்களில் காணப்படுவதில்லை. பிள்ளையாரை வணங்கி, ஆடல்வல்லான் சன்னதியைக் கடந்து ராஜகோபுரத்தை அடையுமாறு அமைக்கப்பட்டுள்ளது.

7. ராஜகோபுரத்தின் நுழைவாயிலில் அழகிய நங்கைகள் சிற்பங்கள் காணப்படுகின்றன. ராஜகோபுரத்தைக் கடந்து திருக்கோயில் வளாகத்தினுள் அடி எடுத்து வைத்தவுடன், நம்மை ஈர்ப்பது திருக்கோயிலின் திருக்குளமே. இந்த திருக்குளமே திருக்கோயிலின் தீர்த்தம் ஆகும். இந்த திருக்குளத்திற்கு “சரவண தீர்த்தம்” என்று பெயர். நிலமட்டத்திலிருந்து திருக்குளத்தின் ஆழம் வரை நேர்த்தியான கற்படிகள் காணப்படுகின்றன. குறிப்பாக நிலமட்டத்திற்கும் திருக்குளத்திற்கும் இடையில், மண்டபம் ஒன்று காணப்படுகிறது. கல் தூண்களுடன் காணப்படும் இந்த மண்டபம் திருக்குளத்தை சுற்றி நான்கு திசைகளிலும் அமைக்கப்பட்டுள்ளது. கல் தூண்களுடன் கூடிய இந்த மண்டபம், முழுமையாக நிலமட்டத்தின் கீழ் அமைக்கப்பட்டுள்ளது வியப்பை அளிக்கின்றது. இத்தகு அமைப்பு வேறெங்கும் இல்லை. கல் மண்டபம் மற்றும் கற்படிகளை 1,761-ம் ஆண்டு மதுரையை ஆட்சிபுரிந்த “கிருஷ்ண கோனார்” என்ற மன்னன் அமைத்துள்ளார். அக்காலத்தில், திருக்குளத்தில் “தெப்ப திருவிழா” நடத்தப்பட்டுள்ளது. மக்கள் விழாவை மண்டபத்திலிருந்து கண்டு மகிழ்ந்திருக்கலாம் என்ற எண்ணம் தோன்றுகிறது.

8. திருக்குளத்தை சுற்றி அமைந்துள்ள மண்டபத்திலுள்ள தூண் ஒன்றில், வாலி சிவபெருமானை பூஜிக்கும் சிற்பம் காணப்படுகிறது. இங்குமட்டுமல்லாமல், திருக்கோயிலின் பல இடங்களிலும், வாலி சிவபெருமானை பூஜிக்கும் சிற்பங்கள் காணப்படுகின்றன.

9. பொதுவாக, மூலவருக்கு நேர் எதிரில் ஒரு நந்திதேவர் சிலை இருக்கும். வாலிகண்டபுரத்திலோ, வாலீஸ்வரருக்கு நேர் எதிரில், ஒன்றன்பின் ஒன்றாக மூன்று நந்திகள் காணப்படுகின்றன. மூன்று நந்தி சிலைகளும், நந்திதேவரின் இளமைக்காலம் (பால நந்தி), வாலிபகாலம் (வாலிப நந்தி) மற்றும் முதிர்ந்தகாலத்தை (யவ்வன நந்தி) குறிக்கும் வண்ணம் அமைந்துள்ளது. இதில் முதிர்ந்தகாலம் என்பது நந்திதேவரின் ஞானம் அடைந்த முழுமை நிலையைக் குறிக்கின்றது. இந்நிலையை அழகிய சிற்ப வேலைப்பாடுகளுடன் கூடிய அழகிய நந்திதேவராக (யவ்வன நந்தியாக) அக்கால சிற்பிகள் வடித்துள்ளனர். திருக்கோயிலினுள் நுழையும்போது, முதலில் அழகிய நந்திதேவர், அடுத்து வாலிப நந்திதேவர், அடுத்து இளம் நந்திதேவர் என வணங்கியவாறு வாலீஸ்வரர் அருள்புரியும் கருவறையை அடைகிறோம்.

10. வாலாம்பிகை அம்மன், துர்க்கை அம்சம் கொண்டு, நான்கு திருக்கரங்களுடன், தெற்கு நோக்கி நின்ற திருக்கோலத்தில் காட்சி அளிக்கிறாள்.

11. திருக்கோயில் சுற்றுப்பாதையில், தென் திசையில் முருகப்பெருமான் சன்னதி காணப்படுகிறது. சுமார் ஏழரை அடி உயரம் கொண்ட திருவுருவ சிலை. வடக்கு நோக்கி அருள்புரியும் முருகப்பெருமான், தன் திருக்கரங்களில் வேலை ஏந்தியவாறு காட்சி அளிக்கிறார். மேற்கு நோக்கி தலையை சற்று சாய்த்த வண்ணம் அமைதியான திருமுகம் கொண்டு காணப்படுகிறார். இவரே, அருணகிரிநாதருக்கு முத்தி அடைய உகந்த தலம் யாது என திருவாய் மொழிந்தவர். இந்த முருகப்பெருமானை, அருணகிரிநாதர் திருப்புகழில் குறிப்பிட்டுள்ளார். திருப்புகழில் இடம்பெற்றுள்ள 229 திருத்தலங்களில் வாலிகண்டபுரமும் ஒன்று. வடக்கு நோக்கி அருள்புரியும் இந்த முருகப்பெருமானை வணங்கினால், எம பயம் நீங்கும். ஆயுள் நீடிக்கும் என்ற நம்பிக்கை பக்தர்களிடம் நிலவுகிறது.

12. வாலீஸ்வரர் கருவறையின் பின்புறம் உள்ள சுற்றுப்பாதையில், பின்னப்பட்ட முருகப்பெருமான் மற்றும் தென்முகக்கடவுள் (தட்சிணாமூர்த்தி) சிலைகள் உள்ளன. கி.பி. 18-ம் நூற்றாண்டில் ஆற்காட்டு நவாபுகள் வாலிகண்டபுரத்தை மையமாக கொண்டு போர் புரிந்துள்ளனர். அதற்காகவே, ரஞ்சன்குடியில் கோட்டை ஒன்றை நிறுவினர் என வரலாறு கூறுகின்றது. அப்போரில் பின்னப்பட்ட சிலைகளையே இன்று நாம் திருக்கோயிலின் சுற்றுப்பாதையில் காண்கிறோம்.
 
13. மேலும், பண்டைய காலத்தை சேர்ந்த முருகப்பெருமான் சிலை ஒன்று காணப்படுகிறது. இந்த சிலையில் முருகப்பெருமானின் காதுகள் நீண்டு காணப்படுகிறது. காண்பதற்கரிய முருகப்பெருமான் சிலை இது. அடுத்ததாக, கொற்றவையின் சிலை உள்ளது. பண்டைய காலத்தில் போருக்கு செல்லும் முன் போரில் வெற்றி பெற கொற்றவையை வணங்கி செல்வது மரபு. பண்டைய காலத்தை சேர்ந்த கொற்றவை சிலையை தற்காலத்திலும் வாலிகண்டபுரத்தில் நாம் காணலாம். கொற்றவை சிலையை அரிதிலும் அரிதாக குறிப்பிட்ட சில தலங்களில் மட்டுமே காண முடியும்.

14. 1,008 லிங்கங்களை உள்ளடக்கிய சகஸ்ர லிங்கம் திருக்கோயிலில் காணப்படுகிறது.

15. மகாமண்டபத்தில் மேற்கு நோக்கி பைரவர் அருள்புரிகிறார். பொதுவாக, பைரவர் தெற்கு நோக்கி அருள்புரிவதே வழக்கம். இடுப்பிலே அரைநாண் கயிறாக நாகத்தை அணிந்துள்ளார். மண்டை ஓடுகளை கோர்த்து பூணூலாக அணிந்துள்ளார். இருப்பினும், அமைதியாக கலைநயத்துடன் காணப்படுகிறார்.

16. வாலீஸ்வரர் கருவறையின் முன் உள்ள அர்த்த மண்டபத்தில் கல்யாண விநாயகர் காணப்படுகிறார்.

17. திருக்கோயிலில் 134 கல்வெட்டுகள் காணப்படுகின்றன. சோழர் கால கல்வெட்டுகள் இதில் அடக்கம். குறிப்பாக, முதலாம் ஆதித்திய சோழன், பராந்தக சோழன் மற்றும் ராஜ ராஜ சோழன் காலத்தை சார்ந்த கல்வெட்டுகள் அதிக அளவில் காணப்படுகின்றன.

18. வாலிகண்டபுரம் என்ற பெயர் பண்டைய காலத்திலிருந்தே உள்ளது. அது, வாலிகொண்டபுரம் என்ற பெயரிலிருந்து மருவியது அல்ல என்ற கருதும் நிலவுகிறது. ஸ்ரீராமர், வாலியை கண்ட திருத்தலம் “வாலிகண்டபுரம்” என அறியப்பட்டது என்ற கருதும் நிலவுகிறது.

19. சோழர்கள் காலத்தில் முக்கிய வாணிப மையங்களுள் ஒன்றாக வாலிகண்டபுரம் திகழ்ந்துள்ளது. வாணிப கூட்டுறவு குழுவினருள் ஒன்றான “மணிகிராமம்” என்ற குழுவினரின் ஆதி தலம் வாலிகண்டபுரமே!  வாணிப கூட்டுறவு குழுவை சேர்ந்தவர்கள் வாலீஸ்வரர் திருக்கோயிலில் விளக்கு ஏற்றப்பட பெருமளவில் கொடையுதவி செய்துள்ளனர். இச்செய்தி திருக்கோயிலிலுள்ள கல்வெட்டில் காணப்படுகிறது.
                                   
20. திருக்கோயில், கோனேரி ஆற்றின் கிழக்குக் கரையில் அமைந்துள்ளது. இந்த ஆறு பஞ்ச பாண்டவர்களுடன் தொடர்புடையது. ஒரு வருட அஞ்ஞான காலத்தை பாண்டவர்கள் விராட நாட்டில் கழித்தார்கள் என்பது அனைவரும் அறிந்ததே. இன்றைய தாராபுரம் மற்றும் பழனி சார்ந்த பகுதிகளே அன்றைய காலகட்டத்தில் விராட நாடாக திகழ்ந்தது. மறைந்து வாழ்ந்த பாண்டவர்கள் விராட மன்னனிடம் பணிபுரிந்தனர். மூத்தவரான தருமர் விராட மன்னனின் அமைச்சராக பணியாற்றினார். சூதாட்டத்தில் சிறந்து விளங்கிய விராட மன்னனிடம், அந்த ஆட்டத்தின் நுணுக்கங்களை கற்றுத் தேறினார். ஒருமுறை, விராட மன்னனும் தருமரும் சூதாட்டத்தில் ஈடுபட்டபோது, விராட மன்னன் தவறான ஆட்டத்தை ஆடினான். ஆனால், தன் தவறை ஏற்க மறுத்தான். சூதாட்டத்தில், கௌரவர்களிடம் அனைத்தையும் இழந்து, வனவாசத்தில் இருந்த பாண்டவர்கள், விராட மன்னன் செயலால் ஆத்திரம் அடைந்தனர். இருப்பினும், தாங்கள் யார் என தெரிந்துவிடக்கூடாது என்பதால் அமைதி காத்தனர். வெளியில் அமைதி காத்தாலும், மனம் அமைதி அடையவில்லை. மன அமைதி வேண்டி வாலிகண்டபுரம் வந்த பாண்டவர்கள், பிரம்ம தீர்த்தமான கோனேரி ஆற்றில் நீராடி, வாலீஸ்வரரை வழிபட்டனர்.

21. பிரம்ம தேவரால் உருவாக்கப்பட்ட ஆறு “பிரம்ம தீர்த்தம்” என போற்றப்பட்டது. பாண்டவர்களின் கோபத்தைக் களைந்த காரணத்தால்,  “கோனேரி ஆறு” என்ற பெயரை பெற்றது.

22. விராட நாட்டை சேர்ந்த லாடபுரம் என்ற ஊரிலிருந்து பாண்டவர்கள் வாலிகண்டபுரம் வந்ததாக கூறப்படுகிறது. இச்செய்தியை ஒத்தவாறு இன்றும் வாலிகண்டபுரத்திற்கு மேற்கே சுமார் 28.4 கிலோமீட்டர் தொலைவில் லாடபுரம் என்ற ஊர் உள்ளது.
         
23. “சுத்தமல்லன் ஜெயம்கொண்ட சோழ வண்ணத்துடையான்” என்ற மன்னன் குழந்தை பேறு இல்லாமல் வருந்தினான். வாலிகண்டபுரம் வந்த மன்னன் வாலீஸ்வரரை வணங்கி குழந்தை பேறு பெற்றான். மகிழ்ந்த மன்னன், தன் ஆட்சிக்கு உட்பட்ட புகழாரை என்ற ஊரிலிருந்து வந்த வரியை வாலீஸ்வரருக்கு வழங்கினான். இச்செய்தி திருக்கோயிலிலுள்ள கல்வெட்டில் காணப்படுகிறது.

24. திருக்கோயில் 1,996 ஆண்டு குடமுழுக்கு கண்டுள்ளது. தற்போது, ஆங்காங்கே பழுதடைந்து, சிதிலமடைந்து காணப்படுகிறது. புனரமைப்பு பணிகள் நடந்து கொண்டிருக்கின்றன. வாலீஸ்வரர் திருவருளால் விரைவில் குடமுழுக்கு செய்யப்படவேண்டும் என்ற எண்ணம் எழுகிறது.

25. இன்று, இந்து அறநெறி துறையின் பொறுப்பில் வாலீஸ்வரர் திருக்கோயில் உள்ளது. மேலும், இந்திய தொல்பெருள் துறையின் கீழ் வாலீஸ்வரர் திருக்கோயில் இணைக்கப்பட்டுள்ளது.

வாலிகண்டபுரம் சோழ சாம்ராஜ்யத்தில் ஒரு முக்கியமான நகரம். தஞ்சை பெரிய கோவில் என்று அழைக்கப்படும் தஞ்சை பிரகதீஸ்வரர் கோவில் கட்டப்படுவதற்கு முன்பு சோழர்களால் கட்டப்பட்டது. ஆதித்த சோழன் I, பராந்தக சோழன் மற்றும் இராஜராஜ சோழன் தொடர்பான சோழர் காலத்து கல்வெட்டுகள் உட்பட சுமார் 130 கல்வெட்டுகள் கோயிலில் உள்ளன. இக்கோயிலின் வளர்ச்சிக்கு கிருஷ்ணதேவராயர் பங்களித்துள்ளார்.

சோழர் காலத்தில் வணிகர்கள், தங்களைக் காத்துக் கொள்ள வீரர்களாயினர் (merchant warriors) அல்லது வீரம் கொண்ட வணிகர்களை ஊக்குவித்தனர் அல்லது தனிப்படையினை வைத்துக் கொண்டனர். அதாவது இடைக்காலத்தில் முகலாயர், ஐரோப்பியர் முதலியோரதது ஊடுருவல்களால் வணிக-நேர்மை, வியாபார-தர்மம், பொருளாதார நாணயம் முதலியை இல்லாமல் போய்விட்டது. அனர்களுக்கே உரித்தான கடற்கொள்ளை என்ற முறையினால், அயல்நாட்டு வாணிகமும் பெருமளவில் பாதிக்கப்பட்டது. அந்நிலையில் அவர்கள் தற்காப்பிற்காக, பொருட்களின் பாதுகாப்பிற்காக பாதுகாப்பு / சொந்த படையினை வைத்துக் கொண்டது அக்காலத்தின் தேவையானது.

அத்தகைய அமைப்புமுறை வாலிகண்டபுரத்தில் இருந்தது அங்குள்ள கோவிலின் கல்வெட்டுகள் வாயிலாக அறியப்படுகின்றது.

*விளக்குகளை தானமாகக் கொடுத்த வணிகக்குழுமத்தினர்: 

ஆதித்ய சோழன் – 1 (871-907 CE) மற்றும் பராந்தகன் (907-955 CE) காலத்தில் இருந்த “மணிகிராமத்தினர்” என்று குறிக்கப்பட்ட வணிகக்குழுமத்தினரின் சொந்த ஊராக வாலிகண்டபுரம் இருந்தது. பெரிய கோவில் கட்டப்படுவதற்கு முன்னமே இக்கோவில் கட்டப்பட்டது. இக்கோவிலில் வாலி மற்றும் ராமாயண தொடர்பு சிற்பங்கள் இருப்பதனால், அவ்வூர் ஒரு வியாபார ஸ்தலம் மற்றும் முக்கிய நகரம் என்பதனை அறியலாம் என்றும் அந்த வணிக-சமூதய-குழுமத்தை “நகரம்” என்று கென்னத் ஹால் போன்ற இக்காலத்து ஆராய்ச்சியாளர்கள் குறிப்பிட்டனர்.

அதாவது வியாபார ரீதியில், ஒரு வணிக ஸ்தலாமக முக்கியம் பெற்றிருந்தது என்று கூறுகின்றனர். மக்கள் இக்கோவிலுக்கு வேண்டியவற்றை, குறிப்பாக விளக்கு கொடுக்கும் முறையினை ஏற்படுத்தி வைத்தனர். பொதுவாக விளக்கெரிய / மூன்று வேலைகளிலும் விளக்கெரிய தானம் கொடுக்கப்பட்டது என்று குறிப்பிடும் கல்வெட்டுகள் பலவுள்ளன. ஆனால், இங்கு விளக்குகளே கொடுக்கப்பட்டன என்று கல்வெட்டுகள் குறிப்பு உள்ளது. 

ஓம் நமசிவாய
 படித்து பகிர்ந்தது 
இரா இளங்கோவன் 
நெல்லிக்குப்பம்.. 

Thursday, November 28, 2024

திருச்சி திருநாராயணபுரம் வேதநாராயணப்பெருமாள் ஆலயம்...



*திருச்சி மாவட்டம் தமிழ்நாடு திருநாராயணபுரம் அருள்மிகு வேதநாராயணப்பெருமாள் ஆலயம்.*
*கோபுர தரிசனம் - கோடி புண்ணியம்*

*கோபுர தரிசனம் - பாவ விமோசனம்*

*மூலவர் : வேதநாராயணப்பெருமாள்*

*உற்சவர் : வேதநாராயணர்*

*அம்மன்/தாயார் : வேதநாயகி*

*தல விருட்சம் : வில்வம்*

*தீர்த்தம் : காவிரி*

*ஆகமம்/பூஜை : பாஞ்சராத்ரம்*

*பழமை : 500 வருடங்களுக்குள்*

*புராண பெயர் : வேதபுரி*

*ஊர் : திருநாராயணபுரம்*

*மாவட்டம் : திருச்சி*

*மாநிலம் : தமிழ்நாடு*

*திருவிழா:*

*திருவோணம், ஏகாதசி மற்றும் அமாவாசை நாட்களில் விசேஷ பூஜை நடக்கிறது.*

*தல சிறப்பு:*

*கோயில் முகப்பில் உள்ள தீப ஸ்தம்பத்தில் கம்பத்தடி ஆஞ்சநேயர் இருக்கிறார்.*

*இப்பகுதியில் வசிக்கும் மக்கள், தங்களுக்குள் ஏதேனும் பிரச்னை உண்டானால், இவர் முன்பாக பேசி தீர்த்துக் கொள்கிறார்கள்.*

*இப்பகுதியில் யாராவது பொய் சொன்னாலோ, பிறரை நயவஞ்சமாக ஏமாற்றினாலோ, கம்பத்தடியார் முன் சத்தியம் செய்து தரும்படி கேட்கும் வழக்கமும் இருக்கிறது.*

*திறக்கும் நேரம்:*

*காலை 7 மணி முதல் 12 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.*

*முகவரி:*

*நிர்வாக அதிகாரி,அருள்மிகு வேதநாராயணப் பெருமாள் திருக்கோயில்,திருநாராயணபுரம் - 621 203.திருச்சி மாவட்டம்.*

*போன்:*

*+91- 99766 11898.*

*பொது தகவல்:*

*பங்குனி உத்திரத்தன்று சுவாமி, வேதவல்லித்தாயார் சன்னதிக்கு எழுந்தருளி காட்சி தருவார். ஆண்டாள், ராமானுஜர், நம்மாழ்வார், திருமங்கையாழ்வார், பிள்ளை லோகாச்சாரியார், மணவாளமாமுனிகள் ஆகியோர் பிரகாரத்தில் உள்ளனர். மூலவர் விமானம் வேதவிமானம் எனப்படுகிறது.*

*பிரார்த்தனை:*

*திருமணத்தில் தடை உள்ளவர்கள், கல்வியறிவில் சிறப்பாக திகழ விரும்புவர்கள் இங்கு வழிபாடு செய்கிறார்கள்.*

*நேர்த்திக்கடன்:*

*தோஷத்தால் திருமணத்தடை உள்ளவர்கள், வேதநாராயணருக்கு துளசி மாலை அணிவித்து, சன்னதியில் 27 நெய் தீபம் ஏற்றி வழிபடுகிறார்கள். இந்த வழிபாட்டை வியாழன் அல்லது தோஷம் உள்ளவரின் ஜென்ம (பிறந்த) நட்சத்திரத்தன்று செய்வது விசேஷம்.*

*தலபெருமை:*

*அரையருக்கு அருளிய பெருமாள்:*

*பிள்ளைத்திருநறையூர் அரையர் என்ற பக்தர், தன் மனைவி, ஆறு குழந்தைகளுடன் சுவாமியைத் தரிசிக்க வந்தார். அப்போது சுவாமி சன்னதிக்கு மேலே பனை ஓலை வேயப்பட்டிருந்தது.*

*அப்போது, ஓலையில் தீப்பற்றும்படி சுவாமியே மாயச்செயல் ஒன்றை நிகழ்த்தினார். அதிர்ந்துபோன பக்தர் சுவாமி மீது தீப்பிழம்புகள் விழாமல் இருக்க மனைவி, குழந்தைகளை படுக்க வைத்து, அவர்கள் மீது குறுக்காக விழுந்து தன் மீது தீப்பிழம்புகள் விழும்படி தடுத்தார்.*

*குடும்பத்தினர் மீது அக்கறை கொண்ட அவருக்கு காட்சி தந்த பெருமாள், அனைவருக்கும் மோட்சம் கொடுத்தருளினார். பிரகாரத்திலுள்ள ஆழ்வார் சன்னதியில் பிள்ளைத்திருநறையூர் அரையர் இருக்கிறார்.*

*பிறப்பற்ற நிலை வேண்டியும், ஆபத்துக்களில் இருந்து பாதுகாப்பு வேண்டியும் இவரை வழிபடலாம்.*

*தோஷ நிவர்த்தி தலம்:*

*வேதநாராயணர், புஜங்க சயனத்தில் தலைக்கு அடியில் நான்கு வேதங்களையும் வைத்து, நாபியிலுள்ள பிரம்மாவிற்கு வேதத்தை உபதேசிக்கும் கோலத்தில் இருக்கிறார்.*

*இரணியனை அழித்தபோது உக்கிர நரசிம்மராக பிரகலாதனுக்கு காட்சி தந்த சுவாமி, அவனுக்கு இங்கு குழந்தை வடிவில் காட்சி தந்தார்.*

*சுவாமியின் பாதம் அருகில் மூன்று வயதுக் குழந்தையாக பிரகலாதன் இருக்கிறார்.*

*ஆதிசேஷனும், அவரது மனைவியும் வேதநாராயணரை தாங்கிக் கொண்டிருக்கின்றனர். மேலே ஆதிசேஷன், கீழே அவரது மனைவி என இங்கு பத்து தலைகளுடன் நாகத்தை தரிசிக்கலாம்.*

*இந்த அமைப்பைக் காண்பது மிக அபூர்வம். நாக தோஷம், களத்திர தோஷத்தால் திருமணத்தடை உள்ளவர்கள் இந்த பாம்புடன் காட்சியளிக்கும் பெருமாளை வழிபட தோஷம் நிவர்த்தியாகும்.*

*காவியுடை ராமானுஜர்:*

*ராமானுஜர் இங்கு வந்தபோது, சுவாமி அவரிடம், "காவிரியில் நீராடி காவி உடுத்தி வா!' என்றார். ராமானுஜரும் அவ்வாறே வந்தார். சித்திரை திருவாதிரை நட்சத்திரத்தன்று, ராமானுஜர் காவியுடை அணிந்து புறப்பாடாவார். மற்ற நாட்களில் இவருக்கு வெண்ணிற ஆடை அணிவிக்கப்படுகிறது.*

*நட்சத்திர தீபம்:*

*பிரம்மா உபதேசம் பெற்ற தலமென்பதால், இக்கோயில் கல்வி வழிபாட்டிற்குரிய தலமாகவும் திகழ்கிறது. வேதநாராயணருக்கு திருவோணம், ஏகாதசி மற்றும் அமாவாசை நாட்களில் விசேஷ பூஜை நடக்கிறது.*

*ஜாதகத்தில் குரு பலமின்றி இருந்தால், திருமணம் தள்ளிப்போகும். இந்த தோஷத்தால் திருமணத்தடை உள்ளவர்கள், வேதநாராயணருக்கு துளசி மாலை அணிவித்து, சன்னதியில் 27 நெய் தீபம் ஏற்றி வழிபடுகிறார்கள்.*

*இந்த வழிபாட்டை வியாழன் அல்லது தோஷம் உள்ளவரின் ஜென்ம (பிறந்த) நட்சத்திரத்தன்று செய்வது விசேஷம்.*

*சத்திய ஆஞ்சநேயர்:*

*கோயில் முகப்பில் உள்ள தீப ஸ்தம்பத்தில் கம்பத்தடி ஆஞ்சநேயர் இருக்கிறார். இப்பகுதியில் வசிக்கும் மக்கள், தங்களுக்குள் ஏதேனும் பிரச்னை உண்டானால், இவர் முன்பாக பேசி தீர்த்துக் கொள்கிறார்கள்.*

*இப்பகுதியில் யாராவது பொய் சொன்னாலோ, பிறரை நயவஞ்சமாக ஏமாற்றினாலோ, கம்பத்தடியார் முன் சத்தியம் செய்து தரும்படி கேட்கும் வழக்கமும் இருக்கிறது.*

*தல வரலாறு:*

*கர்வத்தால் பதவி இழந்து, மீண்டும் படைக்கும் பொறுப்பேற்ற பிரம்மா, தனக்கு வேதங்களை உபதேசிக்கும்படி பெருமாளை வேண்டினார்.*

*அவருக்கு வேதத்தை உபதேசித்த பெருமாள், இங்கேயே பள்ளி கொண்டார். சுவாமிக்கு "வேதநாராயணர்' என்ற பெயர் ஏற்பட்டது. பிற்காலத்தில் சுவாமி சிலை மண்ணால் மூடப்பட்டது.*

*வானவராயர் என்ற மன்னர், ஒருமுறை இவ்வூர் வந்து தங்கினார். அவரது கனவில் தோன்றிய சுவாமி, தனது சிலை மண்ணில் புதைந்திருப்பதைக் கூறினார். சிலையைக் கண்டெடுத்த மன்னர், கோயில் எழுப்பினார்.*

ஓம் நமசிவாய 
படித்து பகிர்ந்தது
 இரா இளங்கோவன்
 நெல்லிக்குப்பம் .. 

புல்லாங்குழல் இசையால் "நமசிவாய" என்னும் மந்திரத்தை இசைத்த ஆனாய நாயனார்...

தனது புல்லாங்குழல் இசையால் "நமசிவாய" என்னும் திருவைந்தெழுத்து (பஞ்சாட்சர மந்திரம்) மந்திரத்தை இசைத்து,
சிவபெருமானால் ஆட்க்கொள்ளப்பட்டு முக்தி பெற்ற,
63 நாயன்மார்களில் ஒருவரான
#ஆனாய_நாயனார் குருபூஜை இன்று:
(முக்தி நாள்) (#கார்த்திகை_ஹஸ்தம்)

#ஆனாய_நாயனார் புராணம்:
உடலை வருத்தி பக்தி செய்யாமலும், சிவத்தொண்டு செய்யாமலும், இசையால் சிவபெருமானை வணங்கி நாயன்மார்கள் வரிசையில் இடம்பெற்றவர் ஆனாய நாயனார்.

இசையில் திறமையுடைய ஆனாய நாயனார், அந்த இசையையே சிவபெருமானுக்கு அர்ப்பணம் செய்து பேரின்பத்தை அடையலாம் என்பதற்கு எடுத்துக் காட்டாக திகழ்ந்தார்.
இவர் சிவபெருமான் மீது கொண்ட பக்தியினால், நமசிவாய‌ என்னும் ஐந்தெழுத்தினை புல்லாங்குழலில் உள்ளம் உருக வாசிப்பதை தனது பொழுது போக்காகக் கொண்டிருந்தார்.

ஆனாய நாயனார் – இசையால் முக்தி பெற்றவர்
ஆனாய நாயனார் நமசிவாய‌ என்னும் ஐந்தெழுத்தினை புல்லாங்குழலில் இசைத்து முக்தி பெற்ற இடையர்.

ஆனாய நாயனார் மழநாட்டில் உள்ள திருமங்கலம் என்னும் திருத்தலத்தில் இடையராக அவதரித்தார்.

மழநாடு என்பது இன்றைய திருச்சி அருகே உள்ள‌ திருவானைக்கா மற்றும் அதனைச் சுற்றிலுள்ள பகுதிகளைச் சார்ந்தது.

திருமங்கலம் என்னும் திருத்தலம் லால்குடி ரயில் நிலையத்திலிருந்து வடமேற்கில் சுமார் 4 கிமீ தொலைவில் உள்ளது.

இவர் தோன்றிய இடையர் குலத்திற்கு ஏற்ப ஆவினங்களை மேய்த்து வரும் தொழிலைச் செய்து வந்தார்.

இவர் ஆவினங்களை முல்லை நிலத்திற்கு ஓட்டிச் செல்லும் போது கையில் கோலும் புல்லாங்குழலும் கொண்டிருப்பார்.

இடையராக இருந்த போதிலும் இவருக்கு சிவனாரிடம் அலாதிப் பிரியம். எப்போதும் வெண்ணீறு அணிந்த சிவனாரை எண்ணிக் கொண்டே இருப்பார்.

ஆதலால் புல்லாங்குழலில் நமசிவாய‌ என்னும் ஐந்தெழுத்தினை அழகாக இசைப்பார். இவருடைய புல்லாங்குழல் இசையில் ஆவினங்கள் தங்களை மெய் மறந்து நிற்கும்.

கார்காலத்தில் ஓர்நாள் ஆனாய நாயனார் நெற்றியில் வெண்ணீறு அணிந்து கோலோடும் புல்லாங்குழலோடும் ஆவினங்களை மேய்க்க காட்டிற்குப் புறப்பட்டார்.

கார்காலத்தின் செழுமையால் முல்லைவனம் பூத்துக் குலங்கியது.

இயற்கையை ரசித்தவாறே சென்ற ஆனாயனாரின் கண்களில் மஞ்சள் நிறத்தில் சரம் சரமாக மாலைபோல் விளங்கும் கொன்றை மரம் தென்பட்டது.

அம்மரம் கொன்றை அணிந்த சிவனாராகவே ஆனாயருக்குத் தோன்ற தன்னுடைய புல்லாங்குழலில் திருஐந்தெழுத்தினை முறையாக பண் அமைத்து வாசிக்கத் தொடங்கினார்.
பக்திப் பெருக்கும், இறை அர்ப்பணிப்பும் நிறைந்த புல்லாங்குழல் கானம் முல்லை வனம் எங்கும் ஒலித்தது.

இசையால் மயங்கிய ஆவினங்கள் மற்றும் முல்லை வனத்து விலங்குகளான மான், புலி, கரடி, யானை, பாம்பு, மயில் உள்ளிட்டவைகள் தம்நிலை மறந்தன.

முல்லை நிலத்து விலங்குகள் தம்முடைய இயல்பு மாறி எல்லாம் ஒன்றாக ஆனாயரைச் சுற்றி நின்றன.

உயிரினங்கள் மட்டுமின்றி ஆறுகள், நீரோடைகள், மலைகள், மேகங்கள் என மொத்த உயிர்சூழலும் ஆனாயனாரின் இசை வெள்ளத்தில் தன்னிலை மறந்து மயங்கி நின்றன.

சிவனாரும் ஆனாயனாரின் இசையில் ஒன்றி அவ்விடத்தில் உமையம்மையோடு காட்சி அளித்தார்.

சிவபெருமான் “ஆனாயா, நீ இந்த நிலையிலேயே எம்மை வந்து அணைவாயாக.” என்று அருளினார்.

பூமழை பொழிய, முனிவர்களும் தேவர்களும் துதிக்க, புல்லாங்குழல் இசைத்தபடியே சிவபெருமானுடன் சென்று மீளாத பேரின்ப வாழ்வு பெற்றார்.

இறைவனின் விருப்பப்படி ஆனாயனாரும் திருஐந்தெழுத்தை புல்லாங்குழலில் இசைக்க சிவலோகம் சென்றார்.

ஆனாய நாயனார் குருபூஜை கார்த்திகை மாதம் அஸ்தம் நட்சத்திரத்தில் போற்றப்படுகிறது.

புல்லாங்குழலில் திருஐந்தெழுத்தினை இசைத்து வீடுபேறு பெற்ற ஆனாய நாயனாரை சுந்தரர் திருத்தொண்ட தொகையில் ‘அலைமலிந்த புனல் மங்கை ஆனாயற்கு அடியேன்’ என்று புகழ்கிறார்.

குரு பூஜை நாள்:

பஞ்சாட்சரத்தை வேய்ங்குழலால் இசைத்து முக்தி பெற்ற ஆனாய நாயனார், சிவபெருமானோடு ஐக்கியமானது கார்த்திகை மாத ஹஸ்தம் நட்சத்திரம். ஆனாய நாயனாரின் குருபூஜை இவர் அவதரித்ததும், முக்தி அடைந்தும் ஆன திருச்சி லால்குடி அருகே உள்ள திருமங்கலத்தில் உள்ள உலக நாயகி சமேத சாமவேதீஸ்வரர் கோயிலில் வெகுவிமர்சையாக கொண்டாடப்படுகிறது. இந்தக் கோயிலின் உட்சுற்றில் வடமேற்கே ஆனாயர் சிவப்பேறு எய்திய இடமுண்டு. அங்கே நாயனாருக்கு தனிக்கோயில் உண்டு. நாயனார் கொன்றை மரத்தின் நிழலிலே நின்று புல்லாங்குழல் வாசிக்கும் பாவனையில் மிக அழகான சிற்பமும் உண்டு.
இவரது குருபூஜை தினத்தன்று எல்லா சிவன் கோயில்களிலும் சிறப்பு பூஜைகள் நடைபெறுகின்றது.

#ஆனாய நாயனாரின் அவதாரம் மற்றும் முக்தி தலமான திருச்சி மாவட்டத்தில் உள்ள 
#திருமங்கலம் #சாமவேதீஸ்வரர்
#லோகநாயகி_அம்மன்
திருக்கோயில் வரலாறு:

லால்குடி அருகே திருமங்கலம் கிராமத்தில் அமைந்திருக்கிறது அருள்மிகு ஸ்ரீலோகனாகிய அம்பாள் அருள்மிகு ஸ்ரீ சாமவேதீஸ்வரர் திருக்கோயில். 

வேதங்கள் குறிப்பாக சாமவேதத்திற்கு அர்ப்பணிக்கப்பட்ட உலகின் ஒரே தனித்துவமான கோவில் இதுவாகும். இந்த இடம் காசி மற்றும் கயாவிற்கு இணையான புனிதமாக கருதப்படுகிறது. இந்த பழமையான சோழர் கால கோவில் கட்டிடக்கலை ரீதியாக அழகாகவும் பல தனித்துவமான சிற்பங்களையும் கொண்டுள்ளது. 63 நாயன்மார்களில் ஒருவரான ஆனைய நாயனார் பிறந்த முக்தி தலம் இதுவாகும். 

சுமார் 1300 ஆண்டுகள் பழமை வாய்ந்த திருக்கோயில். கோச்செங்கட்சோழனால் ஐந்து விமானங்களைக் கொண்ட கருங்கற்களால் கோயில் கட்டப்பட்டிருக்கிறது.

#சாமவேதீஸ்வரர்:

வேத வியாசர் பண்டைய வேத பாடல்களை நான்கு வகைகளாகப் பிரித்து ரிக், யஜுர், சாம, அதர்வ எனப் பெயரிட்டார். அந்த நான்கு வேதங்களின் அறிவை அவர் தனது நான்கு சீடர்களுக்கும் வழங்கினார். வியாசரிடம் சாமவேதம் கற்ற நான்கு சீடர்களில் ஜைமினியும் ஒருவர். இந்த கோவிலில் ஜைமினி சாமவேதத்திற்கு விளக்கம் அளித்ததாகவும், அதை பல வசனங்களாக வகைப்படுத்தியதாகவும் கூறப்படுகிறது. எனவே இக்கோயிலின்
மூலவருக்கு சாம வேதீஸ்வரர் என்று பெயர். வேறு எந்த சிவாலயமும் வேதத்தின் பெயரால் அழைக்கப்படவில்லை என்பது கவனிக்கத்தக்கது.

#பரசுராமேஸ்வரம்:

சில காரணங்களால் பரசுராமன் தன் தாயைக் கொல்ல வேண்டியதாயிற்று. மாத்ரு ஹத்ய பாவத்தைப் போக்குவதற்காக இந்தக் கோயிலுக்கு வந்தார். எனவே, இக்கோயிலின் புனித குளத்திற்கு பரசுராம தீர்த்தம் என்றும், கிராமம் பரசுராமேஸ்வரம் என்றும் அழைக்கப்படுகிறது.

#திருமங்கலம்:

இக்கோயிலில் லட்சுமி சிவனை வழிபட்டாள். அதனால் இக்கிராமம் திருமங்கலம் என்று அழைக்கப்படுகிறது.

#கயா & காசிக்கு சமம்:

அதிகம் அறியப்படாத முனிவரான ரவிகுருவ ரிஷி முக்தி அடைய விரும்பி இந்த கிராமத்திற்கு வந்தார். அருகில் ஆறு கிடைக்காததால் கயா மற்றும் காசிக்கு செல்ல முடிவு செய்தார். சிவபெருமான் அவரை தடுத்து இந்த கிராமத்தில் ஒரு நதியை உருவாக்கினார். இந்த கிராமத்தில் ஓடும் நதி கயா பால்குனி நதி என்று அழைக்கப்படுகிறது. இந்த தலம் கயா மற்றும் காசிக்கு சமமாக கருதப்படுகிறது.

#சண்டிகேஸ்வரர் தன் தந்தையைக் கொன்ற பாவத்தைப் போக்கியது இங்கே:

சண்டிகேஸ்வரர் தன் தந்தையைக் கொன்ற பாவத்தைப் போக்க பல யாத்திரை தலங்களுக்குச் சென்றார். இறுதியில் திருமங்கலம் வந்து சாம வேதீஸ்வரரை வழிபட்டார். இத்தலத்தில் அவருடைய பாவங்கள் நீங்கின.

#ராவணன் இங்கு தலைவியை நிறுவினார்:

ஒரு புராணத்தின் படி, கோவிலின் பிரதான தெய்வம் ராவணனால் நிறுவப்பட்டது.

#உதங்க ரிஷி இங்கே அமிர்தத்தைப் பெற்றார்:
உதங்க ரிஷி சிவனை நோக்கி தவம் செய்து அமிர்தத்தைப் பெற்றார்

#புராணம்:

பரசுராமர் தனது தாயைக் கொன்றதால் மாத்ருஹத்தி எனும் தோஷம் நீங்க இத்தலத்து இறைவனை வழிபட்டார். அவரது தோஷம் நீங்கியது. இதனால் இங்குள்ள தீர்த்தம் பரசுராம தீர்த்தம் என்று அழைக்கப்படுகிறது. அத்துடன் இந்த ஊருக்கு பரசுராமேஸ்வரம் என்ற பெயரும் உண்டு. சண்டிகேசுவரர் தனது தந்தையைக் கொன்றதால் ஏற்பட்ட பித்ருஹத்தி தோஷம் நீங்க பல ஆலயங்களுக்குச் சென்று வழிபட்டார். அவரைப் பற்றிய தோஷம் நீங்கவில்லை. இறைவன் இத்தலத்தில் வந்து தன்னை வணங்கும்படி கூற சண்டிகேசுவரரும் இறைவனின் சன்னிதியின் இடது புறம் இருந்து இறைவனை வணங்கினார். அவரது தோஷம் விலகி இறைவனடி சேர்ந்தார். அறுபத்தி மூன்று நாயன்மார்களில் 14–வது நாயன்மார் ஆணய நாயனார். அவர் அவதரித்த தலம் இது. இவர் கார்த்திகை மாதம் ஹஸ்த நட்சத்திரத்தில் இறைவனுடன் இரண்டற கலந்தார். அந்த நாளை அவரது குருபூஜை நாளாக இந்த ஆலயத்தில் வெகு விமரிசையாகக் கொண்டாடுகின்றனர். ஆணய நாயனாருக்கு முக்தி கொடுத்த சிவலிங்கமும், அம்மனும் இங்கு தனித் தனியே அருள்பாலிக்கின்றனர்.

இக்கோயிலில் சோழர் காலத்து கல்வெட்டுகள் காணப்படுகின்றன. அந்தக் கல்வெட்டுகள் மற்றும் கோயிலின் கட்டிடக்கலை பாணியின் அடிப்படையில், இந்தக் கோயில் கிபி 11ஆம் நூற்றாண்டில் சோழர்களால் கட்டப்பட்டிருக்க வேண்டும் அல்லது புனரமைக்கப்பட்டிருக்க வேண்டும் என்று நாம் கருதலாம். இக்கோயிலின் வளர்ச்சிக்கு ராஜ ராஜ சோழன் பங்களிப்பு செய்துள்ளார். இங்கு பல கல்வெட்டுகள் கிடைத்துள்ளன.

இக்கோயிலுடன் தொடர்புடைய தீர்த்தம் கயா பால்குனி மற்றும் பரசுராம தீர்த்தம். ஸ்தல விருட்சம் (புனித மரம்) பலா மரம். ஆரம்பகால கல்வெட்டு, ஐந்தாம் ஆண்டு இராஜகேசரிவர்மா (இராஜராஜா I, கி.பி. 990) நாகப்பட்டினத்தைச் சேர்ந்த கருவூர் கந்தலி, அபத்தகிலா (தலைவர்) வழங்கிய தங்கப் பரிசைப் பதிவு செய்கிறது. 15 ஆம் ஆண்டு (கி.பி. 1000) தேதியிட்ட கல்வெட்டு செம்பியன் மகாதேவியின் நிலத்தை பரிசாகப் பதிவு செய்கிறது. எனவே இக்கோயில் கி.பி.990க்கு முன் கட்டப்பட்டது.
கோயிலின் தீர்த்தமாகப் பரசுராமர் தீர்த்தம், கயாமற்குழி தீர்த்தம் காணப்படுகிறது. தலவிருட்சமாக பலாமரம் உள்ளது. கோயிலில் 11 முறை பிரதட்சணம் செய்து தேனில் ஊறிய பலாச்சுளைகளை தானம் செய்தால் ஆயுள் அபிவிருத்தி அடையலாம் என்பது கோயிலின் ஐதீகமாக உள்ளது.

ராஜகோபுரத்தை அடுத்த விநாயகர் பக்தர்களுக்குக் காட்சி தருகிறார். ஸ்ரீலோக நாயகி அம்மன் வலது புறத்தில் தெற்கு நோக்கி காட்சி தருகிறார். மூலவரான சாமவேதீஸ்வரர் கிழக்கு நோக்கியும், மூலவரின் வலது சுவரில் பிச்சாடனார் தட்சிணாமூர்த்தி மற்றும் உதங்க முனிவரும், இறைவனுக்குப் பின்புறத்தில் சங்கரநாராயணனும் எனது சுவரில் பிரம்மா, துர்க்கை அம்மனும் பக்தர்களுக்குக் காட்சி தருகின்றனர்.

தென்மேற்கு திசையில் பரசுராமர் பூஜித்த லிங்கமும், மகாகணபதி, வள்ளி, தேவசேனா, கல்யாண சுப்பிரமணியர், வடமேற்கு திசையில் கஜலட்சுமி, அப்பர், சம்பந்தர், அணாய நாயனார் அம்மனும் காட்சி தருகின்றனர். வட திசையில் பைரவர் ஸ்ரீ கால பைரவர், சனி பகவான் மற்றும் நவக்கிரகங்கள் காட்சி தருகின்றன.

இத்தலத்தில் சனி பகவான் காக வாகனத்தில் வடக்கு நோக்கி காட்சி தருகிறார். ஸ்ரீ பைரவரும், கால பைரவரும் சேர்ந்திருப்பது மிகவும் விசேஷமாகும். இக்கோயிலில் உள்ள அபய கர தக்ஷிணாமூர்த்தி சின்முத்திரை காட்டாமல் அபய முத்திரையோடு அருளுகின்றார்.

இங்கு முருகப் பெருமானும் தேவசேனாவும் நின்ற கோலத்தில் இருக்க அருகே வள்ளியம்மை மயிலின் மேல் அமர்ந்த கோலத்தில் காட்சி தருகின்றனர். இத்தலத்தில் உள்ள விஷ்ணு, துர்க்கை மகிச வாகனமின்றி சிம்ம வாகனத்தில் உள்ளார்.

இங்குள்ள மங்கள நாயகி தாயார் இறைவனை வழிபட்டதால் இவ்வூர் திருமங்கலம் என்று அழைக்கப்படுகிறது. இத்தல இறைவனின் அருளால் ஜெயமினி முனிவர் சாம வாதத்தை ஆயிரம் சாகைகளாகப் பிரித்தார். அதனால் இந்த இறைவனுக்கு சாம வேதிஸ்வரர் என்ற பெயர் பெற்றதாகக் கூறுகின்றனர். இத்தலத்தைப் பரசுராமர், சண்டிகேசுவரர், ரவிக்கு மகரிஷி, உதங்க ரிஷி, ஜெமினி ரிஷி, இந்திரன், குபேரன், லட்சுமி ஆகியோர்கள் பூஜித்துள்ளதாக வரலாறு கூறுகின்றது.

#செல்லும் வழி:

லால்குடி பேருந்து நிலையத்திலிருந்து சுமார் 3 கிமீ தொலைவிலும், லால்குடியிலிருந்து 4 கிமீ தொலைவிலும், திருமாந்துறையிலிருந்து 5 கிமீ தொலைவிலும், சமயபுரத்திலிருந்து 20 கிமீ தொலைவிலும், அன்பில் இருந்து 11 கிமீ தொலைவிலும், ஸ்ரீரங்கத்திலிருந்து 16 கிமீ தொலைவிலும், திருவானைக்கோயிலில் இருந்து 16 கிமீ தொலைவிலும், திருச்சியிலிருந்து 23 கிமீ தொலைவிலும் கோயில் அமைந்துள்ளது.

ஓம் நமசிவாய
 படித்து பகிர்ந்தது
 இரா இளங்கோவன் 
நெல்லிக்குப்பம்.. 

சிவ தலங்களில் நந்தியம் சண்டிகேஸ்வரரும் கட்டாயம் இடம்பெறுவார்கள்.

 சண்டிகேஸ்வரர் வழிபாடு பற்றிய பதிவுகள் 
சிவ தலங்களில் நந்தியம் பெருமானும், சண்டிகேஸ்வரரும் கட்டாயம் இடம்பெறுவார்கள். நந்தியின் காதுகளில் நம் வேண்டுதல்களை கூறினால் பலிக்கும் எனும் நம்பிக்கை கொண்டவர்கள், ஏன் சண்டிகேஸ்வரரிடம் மட்டும் சப்தம் போடாமல் வேண்ட வேண்டும் என்று கூறுகிறார்கள் தெரியுமா?.


சிவனின் மெய்க்காவலர் நந்தி என்றால், ஈசனின் ஆலயக் காப்பாளர் சண்டிகேஸ்வரர். ‘சிவன் சொத்து குலநாசம்’ என்று சொல்வார்கள். 

பொதுவாகவே கோவில்களுக்கு சென்றால் நாம் அங்கு தேவைப்படும் சேவைகளை மட்டுமே செய்ய வேண்டும். அங்கு இருக்கும் எந்தப் பொருளுக்கும் ஆசைப்படுவதோ, அதை தனக்குரியதாக்கி எடுத்து வருவதோ நல்லதல்ல.
சிவனின் உதவியாளரான சண்டிகேஸ்வரர், எந்நேரமும் சிவ சிந்தனையில் ஆழ்ந்து தியானத்தில் இருப்பவர். மனிதனுக்கு கேட்கும் திறன் கொண்ட காதுகளைப்போல் சிவனின் ஆலயத்தில் சண்டிகேஸ்வரர் குடிகொண்டிருக்கும் இடம் இறைவனின் செவியாகிறது.

இறைவனிடம் நாம் வேண்டுவதை அவரின் உதவியாளரான சண்டிகேஸ்வரர் தியானத்திலேயே கேட்டு உணர்ந்து, அவைகளை அவரவர் பாவ- புண்ணியங்களுக்கு ஏற்ப கணக்கெழுதி இறைவனிடம் சமர்பிப்பதாக ஐதீகம். ஆகவே தான் சிவன் கோவில் சென்றால் இவரைப் பார்க்காமல் செல்லக்கூடாது என்பார்கள்.

யோக நிலையில் உள்ள இவரை வணங்கினால் நல்ல பேச்சுத் திறனுடன், நினைவாற்றலும் பெருகி அறிவு வளரும். எந்நேரமும் கண்மூடி சிவசிந்தனையில் இருக்கும் இவரின் தியானம், நம்மால் கலைந்து விடக் கூடாது என்றே அவரை அமைதியாக வணங்குமாறு அறிவுத்துகின்றார்கள் பெரியவர்கள். 

ஆனால் நான் ஆலயத்திலிருந்து எதுவும் எடுத்துச்செல்ல வில்லை என்பதை அவருக்கு காட்டும் வண்ணம் இரு கைகளையும் சப்தமில்லாமல் துடைத்துக் காண்பிக்க வேண்டும்.

இவரை நம்பிக்கையுடன் வணங்கினால் தொலைந்து போன பொருட்களும் நமக்குக் கிடைக்கும். இவருக்கு உரிய திதிகள் பிரதமை மற்றும் நவமிஆகும்.

புதன்கிழமை இவரை வணங்கிட ஏற்ற நாள். சிவபெருமானின் பிரதிநிதியான இவருக்கும் வில்வ இலை கொண்டு மாலைகள் சூட்டி வழிபட்டால் வாழ்வில் அனைத்து வளங்களும் பெறலாம். 
ஓம் நமசிவாய 
படித்து பகிர்ந்தது 
இரா இளங்கோவன் 
நெல்லிக்குப்பம். 

Followers

ஆட்கொண்டார் என்றால் என்ன?

திருவையாறு ஆட்கொண்டார்  தஞ்சாவூர் மாவட்டம், திருவையாற்றில் உள்ள புகழ்பெற்ற ஐயாறப்பர் திருக்கோயிலின் தெற்கு கோபுர வாயிலில் அருள்ப...