Monday, May 31, 2021

தென் திருவண்ணாமலை

#ஆலயதரிசனம்....
கூன்பாண்டியனால் கட்டப்பட்ட 
தென் திருவண்ணாமலை கோவில்

சிவபெருமான் கட்டளைப்படி மன்னன் கூன்பாண்டியனால் கட்டப்பட்ட திருக்கோவில் ஒன்று, தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு தாலுகா ஆம்பலாப்பட்டு கிராமத்தில் உள்ளது.

சிவபெருமான் கட்டளைப்படி மன்னன் கூன்பாண்டியனால் கட்டப்பட்ட திருக்கோவில் ஒன்று, தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு தாலுகா ஆம்பலாப்பட்டு கிராமத்தில் உள்ளது. இங்குள்ள இறைவன் திருநாமம் அண்ணாமலையார். இறைவியின் பெயர் உண்ணாமுலையம்மன். பஞ்சபூத தலங்களில் ஒன்றான (நெருப்பு) திருவண்ணாமலைக்கு தென் திசையில் இந்தக் கோவில் அமைந்துள்ளதால் இது ‘தென் திருவண்ணாமலை’ என போற்றப்படுகிறது.

#தலபுராணம்...

மதுரையை ஆட்சி செய்த மன்னன் கூன் பாண்டியன், சைவ சமயத்தைச் சேர்ந்த சிவனடியார்களுக்கு தீங்குகள் செய்து வந்தான். இதைக் கண்டு மனம் வருந்திய அவரது மனைவி மங்கையர்க்கரசி சைவ நெறி தழைத்தோங்க விரும்பி, திருஞானசம்பந்தரை மதுரைக்கு வரவழைத்தாள். இதை அறிந்த மன்னன், திருஞானசம்பந்தரை மதுரையில் இருந்து வெளியேற உத்தரவிட்டான். அன்று இரவு திருஞானசம்பந்தரும், சிவனடியார்களும் தங்கியிருந்த மடத்துக்கு சிலர் தீவைத்தனர். திருஞானசம்பந்தரோ ‘இந்த தீ பையவே சென்று பாண்டியர்க்கு ஆகவே’ என்று பாடினார்.

சம்பந்தர் வாக்கு உடனே பலித்தது. அந்த தீ மன்னனிடம் சென்று, அவனுக்கு வெப்பு நோயை உண்டாக்கியது. அந்த நோயை போக்கிட பலரும் கடும் முயற்சி செய்தனர். ஆனால் அவர்கள் முயற்சி பலன் அளிக்கவில்லை. நோயின் கொடுமை அதிகரித்துக் கொண்டே சென்றது. இதனால் மங்கையர்க்கரசி மன்னனிடம் சென்று, ‘திருஞானசம்பந்தருக்கு தீங்கு இழைத்த தால்தான் இந்த நோய் ஏற்பட்டு இருக்கிறது. எனவே திருஞானசம்பந்தரை இங்கு வரவழைத்தால்தான் நோய் குணமாகும்’ என்றாள்.

அதற்கு மன்னன் இசைவு தர, மங்கையர்க்கரசியின் வேண்டு கோளை ஏற்று திருஞானசம்பந்தர் அரண்மனைக்குச் சென்றார். ‘மந்திரமாவது நீறு’ என்ற திருநீற்று திருப்பதிகத்தை பாடி மன்னனின் உடல் மீது தம் திருக்கரத்தால் திருநீற்றைப் பூசினார். அவரது வெப்பு நோய் உடனடியாக தீர்ந்தது. மன்னன் திருஞானசம்பந்தரை வணங்கினான். திருஞானசம்பந்தர் மன்னனிடம், ‘அரசே! இறைவன் அருளால் உன் உடலை அக்கினியாய் தகித்த வெப்பு நோய் நீங்கியது. எனவே நீ பஞ்சபூத தலங்களில் நெருப்பு தலமான திருவண்ணாமலை சென்று இறைவனை தரிசனம் செய்து வரவேண்டும்’ என்றார். அதன்பேரில் கூன்பாண்டியன், மங்கையர்க்கரசி ஆகியோர் திருவண்ணாமலைக்கு புறப்பட்டனர்.

#கனவில் தெரிந்த காட்சி...

தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு அருகில் உள்ள ஆம்பலாப்பட்டு கிராமத்தை அவர்கள் அடைந்தபோது அந்தி சாய்ந்து விட்டதால், அங்கேயே தங்கினார்கள். கூன்பாண்டியன் ஆழ்ந்த தூக்கத்தில் இருந்தபோது, அவனது கனவில் தோன்றிய ஈசன், ‘இங்கே எனக்கொரு கோவில் கட்டு’ என்றார். அதன்படியே அங்கேயே மன்னன் ஒரு கோவிலை கட்டினான். அதற்கு அண்ணாமலையார் கோவில் என்ற திருநாமத்தை சூட்டினான் என்கிறது தல புராணம்.

மூலவர் அருணாசலேஸ்வரர், சிவலிங்க வடிவில் காட்சி தருகிறார். இங்கு அர்த்த மண்டபம், முக்தி மண்டபம் மற்றும் ஞானசண்டிகேஸ்வரர், சொர்ணபைரவர், சனீஸ்வரர், கணபதி, முருகன் ஆகியோருக்கு தனித்தனி சன்னிதிகள் உள்ளன.

126 அடி உயர ராஜகோபுரம்...

பழமை வாய்ந்த இத் திருக்கோவில் சிதிலமடைந்த நிலையில் இருந்தது. கோவிலை புனரமைக்கும் பணியை சித்தர் ராஜா மகேந்திர சுவாமிகள் மேற்கொண்டார். ரூ.2 கோடி செலவில் 7 அடுக்குகள் கொண்ட வகையில் 126 அடி உயரத்தில் ராஜகோபுரம் கட்டப்பட்டது. மேலும் மகா மண்டபம், அம்மன்கோவில் கோபுரம் கட்டும் பணியும் நடைபெற்று வருகிறது. திருவண்ணாமலையில் கிரிவல பாதையில் அஷ்டலிங்கங்கள் இருப்பதை போன்று, கோவிலில் அஷ்டலிங்கங்களுக்கு தனி சன்னிதி கட்டப்பட்டு வருகிறது. திருப்பணிகள் விரைவில் முடிவு பெற்று கும்பாபிஷேகம் நடத்த ஏற்பாடாகி வருகிறது.

இந்தக் கோவிலில் பிரசித்திப்பெற்ற சொர்ணபைரவர் சன்னிதி உள்ளது. தேய்பிறை அஷ்டமி அன்று இவரை வழிபட்டால் பொன், பொருள் சேரும் என்று பக்தர்கள் நம்புகின்றனர். குழந்தை இல்லாதவர்கள் கோவிலுக்கு வந்து தைப்பூசம், கார்த்திகை மாத சோமவாரம் ஆகிய தினங்களில் நாள் முழுவதும் விரதம் இருந்து இறைவழிபாடு செய்து மண்சோறு சாப்பிடுகின்றனர்.

பிரதோஷம் அன்று நந்திகேஸ்வரருக்கு பிரதோஷ வழிபாடு நடக்கிறது. தினமும் அதிகாலை 5.30 மணிக்கு நடைதிறக்கப்படுகிறது. காலையிலும், மாலையிலும் 2 கால பூஜைகள் செய்யப்படுகிறது. ஆண்டுதோறும் மாசிமாதம் மகாசிவராத்திரி, சித்ராபவுர்ணமி, ஐப்பசி மாதம் அன்னாபிஷேகம், கார்த்திகை தீபம் ஆகிய விழாக்கள் சிறப்பாக நடைபெறும். மாதந்தோறும் பவுர்ணமி கிரிவலம் நடைபெற்று வருகிறது.

அமைவிடம்...
தஞ்சாவூரில் இருந்து ஆம்பலாப்பட்டு 32 கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது. தஞ்சாவூரில் இருந்து பஸ்வசதி உள்ளது. தஞ்சாவூர்-பட்டுக்கோட்டை வழியில் பாப்பாநாடு என்ற ஊரில் இறங்கி, அங்கிருந்து 2½ கிலோமீட்டர் தூரம் பயணித்தால் கோவிலை சென்றடையலாம்...

கும்பேஸ்வரர் ஆலயம்


இன்றைய கோபுர தரிசனம் கோடி புண்ணியம் பாவ விமோசனம் இயற்கை எழில் கொஞ்சும் சூழலில் மிகவும் பழமையான தலம் பல்லவர்கள் எழுப்பிய சிற்றம்பாக்கம் கும்பேஸ்வரர் கோவில்*
   
பல்லவர்களின் முதல் கருங்கற்கோவில் என்ற சிறப்பை, பெருமையை கொண்டு கம்பீரமாக நிற்கிறது திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள சிற்றம்பாக்கம் கும்பேஸ்வரர் ஆலயம்.

பாறைகளைக் குடைந்தும், கருங்கற்களைக் கொண்டும் திருக்கோவில் எழுப்பியதற்கு மூல காரணமாக விளங்கியவர்கள், பல்லவ மன்னர்கள். இவர்கள் காலத்தில் தான் பாறைகளும், மலைகளும் கற்களாக அல்லாமல், கோவில்களாகவும், தெய்வ வடிவங்களாகவும் பார்க்கப்பட்டன.

பாறைகளுக்குள் மறைந்திருக்கும் உருவங்களை பல்லவர்கள் கற்பனை செய்ததே, பல குடவரைக் கோவில்கள் உருவானதற்கு காரணம்.

இதற்கு சான்றாக, விழுப்புரம் மாவட்டத்தில் அமைந்துள்ள முதல் குடவரைக் கோவிலான மண்டகப்பட்டு விளங்குகின்றது. அதே போல, மலையும் பாறையும் சிற்பங்களாக மாறியதற்கு, மாமல்லபுரம் சான்றாகத் திகழ்கின்றது.

பல்லவர்களின் குடவரைக் கோவிலுக்கு அடுத்த நிலையில் இருப்பது அவர்களின் கலைப்பணியில் உருவான கருங்கற் கோவில்கள்.

அப்படி உருவாக்கப்பட்ட பல்லவர்களின் முதல் கருங்கற்கோவில் என்ற சிறப்பை, பெருமையை கொண்டு கம்பீரமாக நிற்கிறது திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள சிற்றம்பாக்கம் கும்பேஸ்வரர் ஆலயம்.

இந்த செய்தியை அந்த ஆலயத்தில் கிடைத்திருக்கும் கல்வெட்டுச் சான்றுகள் உறுதிப்படுத்துகின்றன.

இனி ஆலயத்தின் சிறப்புகளைப் பற்றி பார்ப்போம். தற்போது இந்த ஆலயம் பார்ப்பதற்கு, சிமெண்டு மற்றும் செங்கற்களால் உருவான புதிய கோவில் தோற்றத்தில் காட்சியளிக்கிறது.

ஆனால் ஆலயத்தின் கருவறைக்குள் அமைந்துள்ள விநாயகர், சுவாமி, அம்பாள், சண்டிகேஸ்வரர், நந்தி போன்றவை பல்லவர் கால படைப்புகள் ஆகும்.

இந்தக் கோவிலில் உள்ள கருங்கல்லும், அதில் உள்ள கல்வெட்டு வரிகளுமே, இந்த ஆலயத்தின் தொன்மைக்குச் சான்றாக அமைந்துள்ளன. இந்தக் கல்வெட்டு பற்றி, கி.பி. 1947-48-ம் ஆண்டு இந்திய தொல்லியல் துறை ஆய்வறிக்கையில் குறிப் பிடப்பட்டுள்ளது.

இந்த ஆலயத்தில் இருக்கும் கல்வெட்டு கி.பி. 669- 670-ம் ஆண்டைச் சேர்ந்த கல்வெட்டாகும். இந்தக் கல்வெட்டு கிரந்த மொழியில் 6 வரிகளில் அமைந்திருக்கிறது.

இதில் மகாராஜா பரமேஸ்வர வர்மன் என்னும் முதலாம் பரமேஸ்வரவர்மன் காலத்தில், தமிழகத்தில் எழுப்பப்பட்ட முதல் கற்றளி என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இதன் மூலம் இந்த ஆலயம் தான் தமிழ்நாட்டின் முதல் கற்றளி என்பது ஆதாரப்பூர்வமாக தெரியவந்துள்ளது.

இந்தக் கல்வெட்டு சிவாலயத்தின் அருகில் உள்ள செல்லியம்மன் ஆலயத்தின் படிக்கட்டாக அமைந்திருக்கிறது.

அந்த செல்லியம்மன் கோவிலின் தொன்மை சுமார் முந்நூறு ஆண்டுகள் மட்டுமே என்று சொல்லப்படுகிறது.

அதையெல்லாம் வைத்துப் பார்க்கும் போது, கல்வெட்டானது, அருகே உள்ள சிவன் கோவிலுக்கு தொடர்புடையதாகவே கருத முடிகிறது. இந்த பொக்கிஷத்தை பாதுகாக்க வேண்டியது அரசின் கடமையாகும்.

*கும்பேஸ்வரர், குழந்தை வல்லி*

தமிழகத்திலேயே முதன் முதலில் எழுப்பப்பட்ட கற்றளியாக, சிற்றம்பாக்கம் சிவன் கோவில் இருப்பது, இன்னும் பலருக்கு அறியப்படாமல் இருக்கிறது.

இந்த ஆலயத்தை ஆய்வு செய்தால், மேலும் பல புதிய தகவல்கள் நமக்கு தெரியவரலாம்.

இந்த ஆலயத்தில் உள்ள இறைவனின் பெயர் ‘கும்பேஸ்வரர்’ என்பதாகும். கும்பத்தில் இருந்த அமுதத்தில் இருந்து வெளிப்பட்டவர் என்பதால், இத்தல இறைவனுக்கு இந்தப் பெயர் வந்ததாக கூறப்படுகிறது.

இந்த ஐதீகத்தில் உருவானதே கும்ப கோணம் கும்பேஸ்வரர் திருக்கோவில். அதே ஐதீகத்தில் வட தமிழ்நாட்டில், பல்லவ மன்னன் காலத்தில் எழுப்பப்பட்ட முதல் கற்கோவிலாக, சிற்றம்பாக்கம் கும்பேஸ்வரர் ஆலயம் திகழ்கிறது.

என்றாலும், கால வெள்ளத்தால் சிதையுண்ட இந்தக் கோவில், ஊர்மக்கள் ஒத்துழைப்பால் இன்று பழைய மூலவரை தாங்கி, புதியக் கோவிலாகக் காட்சி தருகிறது.

இறைவன் கும்பேஸ்வரர் சதுர வடிவ ஆவுடையாராக, பிரம்மாண்ட வடிவில் சுயம்புலிங்கத் திருமேனி கொண்டு, எழிலாக காட்சி தருகிறார்.

லிங்க வடிவம் கூட கும்பத்தை நினைவுபடுத்தும் விதமாக அமைந்துள்ளது. இத்தலத்தில் அருள்பாலிக்கும் அன்னையின் பெயர் குழந்தைவல்லி. இவள் தன் பெயருக்கு ஏற்றவாறு சிறிய வடிவில், ஆனால் கலைநயத்தோடு தெற்கு முகமாய் நான்கு கரங்கள் கொண்டு அருளாசி வழங்குகின்றாள்.

*ஆலய அமைப்பு*

இவ்வாலயம் ஈசான்ய பகுதியில், கிழக்கு முகமாய் அமைந்துள்ளது. எதிரே பழமையான திருக்குளம் உள்ளது.

இது சீரமைப்பு இல்லாமல் காணப்படுகிறது. ஆலயத்தின் திருச்சுற்றில் வடமேற்கு பகுதியில் விநாயகர், லட்சுமி நரசிம்மர், வள்ளி- தெய்வானை சமேத சப்பிரமணியர், சண்டிகேஸ்வரர் ஆகியோர் உள்ளனர். ஆலயத்தின் தல விருட்சம் கொன்றை மரம். அந்த மரத்தின் அடியில் காசிலிங்கம், நவக்கிரகங்கள், பைரவர் ஆகியோரது சன்னிதிகள் உள்ளன.

நடுநாயகமாக கும்பேஸ்வரர் சன்னிதி, எதிரே கொடிமரம், பலிபீடம், நந்திதேவர், தெற்குப் பார்த்தபடி அன்னை குழந்தைவல்லி காட்சி தருகிறாள். கருவறைச் சுற்றில் விநாயகர், தட்சிணாமூர்த்தி, லிங்கோற்பவர், துர்க்கை, சண்டிகேஸ்வரர் வீற்றிருக்கின்றனர்.

*செல்லியம்மன் கருவறை*

இந்த ஆலயத்தில் பிரதோஷம், கிருத்திகை, திருவாதிரை உள்ளிட்ட சிவபெருமானுக்குரிய விசேஷங்கள் அனைத்தும் எளிமையாக கொண்டாடப்படுகின்றன. இந்த ஆலயம் தினமும் காலை 6 மணி முதல் இரவு 7 மணி வரை தொடர்ச்சியாக திறந்து வைக்கப்பட்டிருக்கும்.

*வரம் தரும் தலம்*

இந்த ஆலயம் தன்னம்பிக்கையை வளர்க்க உதவும் திருத்தலமாகத் திகழ்கின்றது. வாழ்க்கையில் தோல்வி அடைந்தவர்கள், இத்தலத்து இறைவனை மனமுருக நம்பிக்கையோடு வழிபாடு செய்தால், நம்பிக்கையும், துணிவும் பெற்று மீண்டும் முயற்சிக்கும் மன உறுதியைப் பெறுவார்கள்.

வாழ்விலும் பல்வேறு வெற்றிகளைப் பெறுவார்கள் என இவ்வூர் மக்கள் கூறுகின்றனர். மேலும், அன்னை குழந்தைவல்லியை வழி படுவோருக்கு நிச்சயம் குழந்தைப்பேறு கிடைக்கும் என்பதும் நம்பிக்கையாக உள்ளது.

*அமைவிடம்*

திருவள்ளூர் மாவட்டம், திருவள்ளூர் வட்டம், பேரம்பாக்கத்தை அடுத்து சிற்றம்பாக்கம் திருத்தலம் அமைந்திருக்கிறது.

சென்னையில் இருந்து சுமார் 70 கிலோமீட்டர் தொலைவிலும், பூந்தமல்லியில் இருந்து 25 கிலோமீட்டர் தூரத்திலும், பேரம்பாக்கத்தில் இருந்து 3 கிலோமீட்டர் தொலைவிலும் சிற்றம் பாக்கம் உள்ளது.

பேரம்பாக்கத்தில் இருந்து ஆட்டோ வசதி உள்ளது. அதே நேரம் ரெயில் மூலமாக இந்த ஆலயத்தை தரிசிக்க விரும்புவோர், சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் இருந்து அரக்கோணம் வழித்தடத்தில் உள்ள திருவள்ளூர் அடுத்து வரும் மணவூர் ரெயில் நிலையத்தில் இறங்க வேண்டும். அங்கிருந்து 4 கிலோமீட்டர் தூரம் சென்றால் சிற்றம்பாக்கம் திருத்தலத்தை அடையலாம்.

*சுற்றியுள்ள கோவில்கள்*

சிற்றம்பாக்கத்தில் கும்பேஸ்வரர் ஆலயம் தவிர, செல்லியம்மன் கோவில், பச்சையம்மன் கோவில், கங்கையம்மன் கோவில் ஆகிய பழமையான மற்ற ஆலயங்களும் இருக்கின்றன.

அதே போல் இத்தலத்தின் அருகில் உள்ள பேரம்பாக்கம், திருவாலங்காடு, கூம், இலம்பையங்கோட்டூர் ஆகிய இடங்களிலும் பழமையான பல ஆலயங்கள் உள்ளன.

Sunday, May 30, 2021

மேல்மலையனூர் அங்காளம்மன்


*மேல்மலையனூர் அங்காள பரமேஸ்வரி திருக்கோவில்:*
1. இது 51 சக்தி பீடங்களில் ஒன்று அதாவது பார்வதி தேவியின் *வலது கை விழுந்த இடம்.* இதுவே *தண்டகாருண்யம்* ஆகும்.
2. இக்கோவிலை தொழுதால் பிரம்மஹத்தி தோஷம் அகலும். இங்குதான் *பம்பை* என்ற இசைக்கருவி பிறந்ததாக கூறுவர்.
3. ஆதிகாலத்திலிருந்து இங்கு *மிகப் பெரிய புற்று* ஒன்று உள்ளது.இதை  வழிபாடு செய்தால் *நாகதோஷம், ராகு கேது தோஷம் நீங்கி* திருமணம் நடக்கும்.
4. *தல வரலாறு:* முன்பொரு காலத்தில் *ஈசனுக்கும் பிரம்மாவுக்கும் ஐந்து தலைகள் இருந்தன*. ஒருமுறை பார்வதிதேவி ஈசன் என நினைத்து பிரம்மாவின் கால்களில் விழுந்து வணங்கினார். இதனால் *பிரம்மாவுக்கு அகந்தை ஏற்பட்டது.* இதனால் கோபம் கொண்ட பார்வதி தேவி பிரம்மாவின் தலைகளில் ஒன்றைக் கிள்ளி எறிய சொன்னார். சிவபெருமான் பிரம்மாவின் தலையைக் கிள்ளியதால் பிரம்ம கபாலம் அவர் கையில் கையில் ஒட்டிக் கொண்டு பிரம்மஹத்தி தோஷத்தை ஏற்படுத்தியது.  இதனால் கடும் கோபமுற்ற சரஸ்வதி தேவி என் கணவனின் அகோர நிலைக்கு காரணமான நீயும் அகோர உருவுடன் திரிவாய் என சாபமிட்டார். இதனால் பார்வதி *அங்காளியாக உருவெடுத்து சுடு காட்டில் அலைந்து திரிந்தார் .* பின்பு தேவி திருவண்ணாமலைக்குச் சென்று *பிரம்ம தீர்த்தத்தில்* நீராடி சுய உருவை அடைந்து ஒரு *மூதாட்டி உருப்பெற்று மேல்மலையனூர் ஊரில் வந்து தங்கினார்.*
*சிவபெருமான் சனியின் பிடியில் சிக்கி இருந்ததால்* உணவுக்காக ஊர்ஊராக சென்று பிச்சை எடுத்தார். பின் பிணங்களை சாப்பிட்டு *பிச்சாண்டி* என்று பெயர் பெற்றார்.
சிவபெருமானுக்கு இங்குள்ள அம்பிகை அன்னபூரணியாக மாறி சுவைமிகுந்த உணவை அளித்தார். உணவை உண்ட பிரம்ம கபாலம் சுவையால் மகிழ்ந்தது. அன்னை சிறிது  உணவை கீழே சிந்தினாள். *பிரம்ம கபாலம் அந்த உணவை எடுக்க சிவனின் கையில் இருந்து கீழ் நோக்கி சென்று* உணவை சாப்பிட்டது அதற்குள் அன்னை *காளியாக மாறி பிரம்ம கபாலத்தை உடைத்தார்.* இதனால் *சிவபெருமானுக்கு ஏற்பட்ட பிரம்மஹத்தி தோஷம் நீங்கியது.*

Friday, May 28, 2021

வில் ஏந்திய முருகன்


*வில்லேந்திய வேலவன்,  கமண்டலம் ஏந்திய கந்தன், ஐந்து முக அழகன்...9 அற்புதமான தலங்கள்.*

ஐந்துமுகம் கொண்டு சிவம் போல் அருளும் ஓதிமலையாண்டவர்!

ஓதிமலையாண்டவர்
கோவை - சத்தியமங்கலம் சாலையில் 48 கி.மீ தூரத்தில் உள்ள புளியம்பட்டியிலிருந்து பிரியும் சாலையில் 10 கி.மீ., பயணித்தால் இரும்பறை ஓதிமலையாண்டவர் கோயிலை அடையலாம்.

பதினென் சித்தர்களுள் ஒருவரான போகருக்குப் பழநி மலைக்கு வழிகாட்டுவதற்காக இத்தலத்து முருகன் வித்தியாசமாக அருள்பாலித்தாராம்.

அதாவது தன் ஆறுமுகங்களில் ஒன்றினை போகருக்கு வழிகாட்ட அனுப்பி வைத்தார் என்கிறது தலபுராணம். மீதமிருக்கும் ஐந்து முகங்களோடு சிவ ஸ்வரூபமாக முருகக்கடவுள் இங்கு காட்சி கொடுக்கிறார். ஐந்துமுகங்களுடன் காட்சி கொடுப்பதால் இந்தத் தல இறைவனுக்கு 'கெளஞ்ச வேதமூர்த்தி' என்ற திருநாமமும் உண்டு.

பிரணவத்தின் பொருள் மறந்த பிரம்மாவினை இத்தலத்தில்தான் முருகப்பெருமான் இரும்பு அறையில் சிறை எடுத்ததால் இத்தலத்துக்கு 'இரும்பறை' என்ற பெயரும் உண்டு. இத்தலத்துக்கு வந்து வணங்கினால் திருமணத்தடை நீங்குவதால் இங்குள்ள சுப்பிரமண்யரை கல்யாண சுப்பிரமண்யர் என்றே அழைக்கிறார்கள்.

நவகிரக தோஷம் நீக்கும் சென்னிமலைநாதன்

சென்னிமலைநாதன்
ஈரோட்டிலிருந்து 30 கிமீ தொலைவிலும், பெருந்துறையிலிருந்து 13 கிமீ தொலைவிலும் உள்ள சென்னிமலை அருகே உள்ள இச்சிப் பாளையத்தின் மலைக் குன்றின் மீது அமைந்துள்ளது இந்தத் திருக்கோயில்.

முருகப் பெருமான் தன்னைத்தானே வழிபட்ட தலம் சென்னிமலை என்பர். முருகப் பெருமான், இடும்பனுக்கு பழநி செல்வதற்கு வழிகாட்டிய தலமும் இதுவே. இந்தத் தலத்தில் மூலவர் சென்னிமலைநாதன் நடுநாயக மூர்த்தியாக செவ்வாய் கிரகத்தின் அம்சமாக அருள்புரிகிறார். இவரைச் சுற்றிலும் மற்ற நவகிரகங்களின் எட்டு நாயகர்கள் அருள்புரிகிறார்கள். இங்கு மூலவரை வணங்கி வழிபட்டால் நவகிரக தோஷங்கள் அனைத்தும் தீரும் என்பது நம்பிக்கை.

இங்கு புண்ணாக்கு சித்தரின் சமாதியும் அமைந்திருக்கிறது. தினமும் முருகப் பெருமான் மாலையில் மயில் மீது பறந்து வந்து இங்கு ஓய்வெடுக்கிறார் என்பது நம்பிக்கை. சென்னிமலைநாதரை வழிபட தீராத வியாதி தீர்ந்து, ஆயுள் பலம் பெருகும் என்பது பக்தர்கள் நம்பிக்கை.

வேடன் வடிவில் காட்சிகொடுக்கும் வேளிமலை

வேளிமலை
கன்னியாகுமரி மாவட்டம், தக்கலை வட்டத்தில் அமைந்திருக்கிறது வேளிமலை குமாரசுவாமி திருக்கோயில்.

வள்ளியைக் கவர்ந்து செல்ல வேடனாய் வந்தார் முருகப்பெருமான் என்பது ஐதிகம். வள்ளியை யாரோ ஒருவன் கவர்ந்து செல்கிறான் என்று நினைத்து வேடன் உருவில் இருந்த முருகப்பெருமானோடு போரிட்டார்கள் மலைக் குறவர்கள். அப்போது வேடன் உருவில் இருந்தாலும் தான் யார் என்பதை அவர்களுக்கு உணர்த்தினார் வேலவன். அனைவரும் அந்த வேதமூர்த்தியின் பாதம் பணிந்தனர் என்பது புராணம். அவ்வாறு மலைக்குறவர்களுக்கு முருகப்பெருமான் வேடன் உருவில் காட்சிகொடுத்த தலம் வேளிமலை. இங்கு முருகன் அதே திருக்கோலத்தில் எழுந்தருளியிருக்கிறார்.

இத்தலத்தில் திருக்கார்த்திகை தினத்தன்று சொக்கப்பனை எரிக்கப்படுகிறது. அதில் கலந்துகொண்டு தரிசித்தால் நம் முன் ஜன்ம பாவ வினைகளும் எரிந்துபோகும் என்பது நம்பிக்கை.

குழந்தைகளைக் காக்கும் குறுக்குத்துறை முருகன்

குறுக்குத்துறை
திருநெல்வேலி நகரத்திற்கு அருகே குறுக்குத்துறை எனுமிடத்தில் தாமிரபரணி ஆற்றின் நடுவில் அமைந்துள்ளது இத்திருக்கோயில். குறுக்குத்துறை முருகன் கோயிலையும், மேலக்கோயிலையும் தரிசித்தால் பழநிமலை முருகனையும் திருச்செந்தூர் முருகனையும் தரிசித்த பலன் கிடைக்கும் என்பது ஐதிகம்.

குறுக்குத்துறையில் உள்ள பாறைப்பகுதிக்கு `திருவுருவாமலை' என்று பெயர். திருச்செந்தூரில் கருவறையில் உள்ள முருகனின் சிலையும், இங்குள்ள மேலக்கோயில் முருகன் சிலையும் ஒரே பாறையில் வடிக்கப்பட்டவை. அதனால் திருச்செந்தூரைப் புகுந்த வீடு என்றும், குறுக்குத்துறை கோயிலைத் தாய்வீடு என்பார்கள் பக்தர்கள்.

திருமணத் தடை உள்ளவர்கள், இந்தத் தல முருகனுக்குப் பாலாபிஷேகம் செய்து, அரளி மாலை சாத்தினால் விரைவில் திருமணம் நடைபெறும் என்பது நம்பிக்கை. குழந்தைகளுக்கு தோஷம் இருப்பதாகக் கருதுபவர்கள் இங்கு வந்து முருகனுக்கு முன்னால் கருப்பட்டிக்கும், தவுட்டுக்கும் விற்றுப் பிறகு வாங்கிக்கொள்கிறார்கள். இப்படிச் செய்தால் குழந்தைகளின் தோஷம் அனைத்தும் விலகும் என்பது நம்பிக்கை.

வில்லேந்திய வேலவன் அருளும் வேலுடையான்பட்டு

வேலுடையான்பட்டு
கடலூர் மாவட்டம், வடலூர் ரயில் நிலையத்திலிருந்து 4 கி.மீ. தொலைவில் அமைந்திருக்கிறது வேலுடையான்பட்டு.

கி.பி 13 - ம் நூற்றாண்டில் சித்ரகாடவன் என்ற குறுநில மன்னன் காலத்தில் இந்தத் திருமேனி மண்ணில் புதையுண்ட நிலையில் கண்டெடுக்கப்பட்டுப் பிரதிஷ்டை செய்யப்பட்டது. கையில் வில் ஏந்தி மாறுபட்ட கோலத்தில் அருள்பாலிக்கிறார் முருகப்பெருமான். ஏர்கொண்டு நிலத்தை உழுகிறபோது, முருகப்பெருமான் திருமேனியில் கலப்பை இடித்தது. இதனால் ஏற்பட்ட தழும்பினை இன்றும் இறைவனின் திருமேனியில் காண முடியும்.

உற்சவர் திருமேனி கிடைத்த சம்பவமும் வித்தியாசமானது. மீனவர்கள் மீன்பிடிக்கக் கடலுக்குச் சென்றபோது அவர்கள் வலையில் சிக்கிய விக்கிரகமே இங்கு உற்சவராக அருள்பாலிக்கிறது. இந்த ஆலயத்தில் சுவாமிக்குப் பாதக்குறடு சாத்தும் வழக்கமும் இருந்துவருகிறது. குழந்தைப் பேறு இல்லாதவர்கள், திருமணம் ஆகாதவர்கள் இந்த வில்லுடைய பெருமானை வேண்டிக்கொள்ள குறைகள் நீங்கி நல்லருள் கிடைக்கும் என்பது பக்தர்கள் நம்பிக்கை.

பிரம்மன் வழிபட்ட எண்கண் முருகன்

எண்கண் முருகன்
திருவாரூரிலிருந்து தஞ்சை செல்லும் நெடுஞ்சாலையில் 14 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது இந்தத் திருத்தலம். பிரணவ மந்திரத்தை மறந்ததால் முருகனால் சிறையில் அடைக்கப்பட்ட பிரம்மன் மீண்டும் சிவபெருமானை வணங்கித் தனது படைப்புத் தொழிலைப் பெற்ற தலம் இது. அதனால்தான் இந்தத் தலத்து இறைவன் பிரம்மபுரீசுவரர் என்றழைக்கப்படுகிறார். பிரம்மன் தனது எட்டு விழிகளால் சிவபெருமானையும், முருகனையும் வணங்கியதனால்தான் இந்த ஊர் எண்கண் என்றும் பிரம்மபுரம் என்றும் அழைக்கப்படுகிறது.

இங்கு, முருகப்பெருமான், தென்திசை நோக்கி அருள்வதால் தட்சிணாமூர்த்தி அம்சமாகப் போற்றப்படுகிறார். அதனால், ஒவ்வொரு வியாழக்கிழமையன்றும் நெய் விளக்கு ஏற்றி விரதமிருந்து முருகப்பெருமானை வழிபட்டால் குருதோஷம் நீங்கப்பெற்று கல்வி, ஞானம், அறிவு, ஆரோக்கியம் ஆகியவற்றைப் பெறலாம். பார்வைக்குறைபாடு உள்ளவர்கள் விசாக நட்சத்திரத்தன்று, இங்குள்ள குளத்தில் நீராடி முருகப்பெருமானை வழிபட்டால் கண் தொடர்பான பிரச்னை நீங்கும் என்பது நம்பிக்கை.

நாகம் குடைபிடிக்கும் குமரக்கோட்டம்

குமரக்கோட்டம்
மும்மூர்த்திகளையும் தரிசித்த பேற்றினை அருளும் திருத்தலம் குமரக்கோட்டம் முருகன் திருக்கோயில். காஞ்சிபுரத்தில் ஏகாம்பரேசுவரர் மற்றும் காமாட்சியம்மன் கோயில்களுக்கு நடுவே சோமாஸ்கந்த அமைப்பில் அமைந்துள்ளது இத்தலம். இந்தத் தலத்தில் மூலவர் ஐந்து தலை நாகம் குடைபிடிக்க எழிலோடு காட்சிகொடுக்கிறார். இங்கு வந்து சுப்பிரமணிய சுவாமியை வேண்டிக்கொண்டால் நாகதோஷங்கள் அனைத்தும் நீங்கும் என்பது ஐதிகம்.

திருமண வரம் அருளும் குன்றத்தூர் சுப்பிரமணியர்

குன்றத்தூர் சுப்பிரமணியர்
திருப்போரூரில் அசுரர்களுடன் போர்புரிந்த முருகப்பெருமான் தாரகாசுரனை அழித்துவிட்டுத் திருத்தணி செல்லும்போது வழியில் தங்கி ஓய்வெடுத்த மலை குன்றத்தூர் என்று சொல்லப்படுகிறது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் அமைந்திருக்கும் இந்தத் திருத்தலத்தில் கருவறைக்கு வெளியே, நேருக்கு நேர் நின்று, வள்ளி, தேவசேனா சமேத சுப்பிரமண்யரை ஒருசேர தரிசிக்க முடியாது. சுப்பிரமண்ய சுவாமியை நேராகவும் வலது மற்றும் இடதுபுறங்களில் நின்று வள்ளி, தெய்வானையயும் தரிசனம் செய்யலாம்.

திருமணத்தடை உள்ளவர்களுக்கு இந்தத் தலம் மிகச்சிறந்த பரிகாரத் தலமாக விளங்குகிறது. இங்கு வந்து முருகப்பெருமானுக்குத் திருக்கல்யாணம் செய்து வஸ்திரம் சாத்தி, அபிஷேகம் செய்து வழிபட்டால் தடை விலகி விரைவில் திருமணம் நடைபெறும்.

பகை நீக்கி பலம் அருளும் சிவசுப்பிரமணியர்

சிவசுப்பிரமனியர்
சென்னை - திருச்சி நெடுஞ்சாலையில் அச்சிறுபாக்கம் என்ற ஊரிலிருந்து ஒரு கி.மீ தொலைவில் அமைந்துள்ளது பெரும் பேர்கண்டிகை. இங்குதான் சிவ சுப்பிரமணியர் திருக்கோயில் அமைந்துள்ளது.

அகத்தியப் பெருமான் தென் திசைக்கு வந்தபோது இந்த்த் தலத்தில் சிவபெருமானின் திருமணக் கோலத்தையும் சுப்பிரமணிய சுவாமியையும் சேர்த்து தரிசிக்கும் ஆவல் ஏற்பட்டது. அதை நிறைவேற்றும் பொருட்டு, சிவ சுப்பிரமணியராகத் தாய் தந்தையரான சிவ பார்வதி தேவியருடன் அகத்திய முனிவருக்குத் திருக்காட்சி தந்தார் முருகக்கடவுள். இங்கே, முருகக் கடவுள் ஞானகுருவாக தெற்கு நோக்கிக் காட்சி தருகிறார்.

வேல் இங்கு அம்பிகையின் சக்தியாக வழிபடப்படுகிறது. மேலும் இந்தத் தலத்தில் சத்ரு சம்ஹார யந்திரம் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. எனவே, இங்கு சிறப்பாக சத்ரு சம்ஹார யந்திர ஹோமம், சத்ரு சம்ஹார திரிசதி ஹோமம் ஆகியவை செய்யப்படுகின்றன. இங்கு வந்து வேண்டிக்கொண்டால் தீராத பெரும்பகையும் தீரும். வழக்குகளில் வெற்றிகிடைக்கும் என்பது நம்பிக்கை. இங்கு முருகப் பெருமானுக்கு இணையாக வேலுக்கும் சிறப்பான வழிபாடுகள் செய்யப்படுகின்றன.

*Visit YouTube channel*


https://youtube.com/channel/UCzyuoCjvB15KPJjIL9HGNHA


Follow us in *Instagram*

https://www.instagram.com/p/CPWD-aSBffh/?utm_medium=copy_link


*Facebook*

https://www.facebook.com/100104942230621/posts/120113753563073/

சிவன் சொத்துக்கள்



🔱 ஓம் நமசிவாய 🔱
🕉️ தகவல் களஞ்சியம்🕉️

1.சிவசின்னங்களாக போற்றப்படுபவை.....
திருநீறு, ருத்ராட்சம், நமசிவாய மந்திரம்

2. சிவனுக்கு அன்னாபிஷேகம் நடக்கும் காலம்....
ஐப்பசி பவுர்ணமி

3. சிவன் யோகியாக இருந்து ஞானத்தை அருளும் கோலம்.....
தட்சிணாமூர்த்தி

4. ஆன்மாவைக் குறிக்கும் சிவன் எங்கிருக்கிறார்?
திருப்பெருந்துறை (ஆவுடையார்கோயில்)

5. காலனை உதைத்த காலசம்ஹார மூர்த்தியாக ஈசன் அருளும் தலம்.....
திருக்கடையூர்

6. ஞானசம்பந்தரைக் காண சிவன் நந்தியை விலகச் சொன்ன தலம்......
பட்டீஸ்வரம்

7. ஆண்டுக்கு ஒரு பாடல் வீதம் சிவன் மீது பாடியவர்.........
திருமூலர்

8. முக்திவாசல் என்று போற்றப்படும் திருத்தலம்.......
திருவெண்காடு (நவக்கிரக புதன் ஸ்தலம்,நாகப்பட்டினம் மாவட்டம்)

9. ஐப்பசியில் காவிரியில் சிவபார்வதி நீராடுவது...........
துலாஸ்நானம்

10. ஐப்பசி கடைசியன்று மயிலாடுதுறையில் நீராடுவது.........
கடைமுகஸ்நானம்

11.சிவனுக்கு மாடக்கோயில் கட்டிய மன்னன்.....
கோச்செங்கட்சோழன்.

12. கூத்தப்பன் என்று போற்றப்படும் இறைவன்....
நடராஜர் (கூத்து என்றால் நடனம்)

13. தரிசிக்க முக்தி என்ற சிறப்பைப் பெற்ற தலம்...
சிதம்பரம்

14. வாழ்வில் ஒருமுறையேனும் செல்ல வேண்டிய தலம்...
காசி

15.சிவன் நெருப்பாக வளர்ந்து நின்ற தலம்...
திருவண்ணாமலை

16. அம்பிகை மயில் வடிவில் சிவனை பூஜித்த தலம்...
மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில்

17. மாதம் தோறும் வரும் விழாக்களைப் பட்டியலிடும் தேவாரம்...
மயிலாப்பூர் தேவாரம் (சம்பந்தர் பாடியது)

18. தட்சிணாமூர்த்தி கைவிரல்களை மடக்கிக் காட்டும் முத்திரையின் பெயர்...
சின்முத்திரை

19.  கயிலாயத்தில் தேவலோகப் பெண்களுடன் காதல் கொண்டதால், பூலோகத்தில் பிறவி எடுத்தவர்...
சுந்தரர்

20. வேடுவச்சியாக இருந்த பார்வதியை வேடனாய் வந்து ஈசன் மணந்த தலம்...
ஸ்ரீசைலம்(ஆந்திரா)

21. சக்தி பீடங்களில் பைரவி பீடமாகத் திகழும் தலம்...
ஒரிசாமாநிலம் பூரி ஜெகந்தாதர் கோயில்

22. இறைவன் இறைவிக்கு இடபாகம் அளித்த தலம்....
திருவண்ணாமலை

23. கார்த்திகை தீபத்திருளில் அவதரித்த  ஆழ்வார்....
திருமங்கையாழ்வார்

24. திருவண்ணாமலையில் கார்த்திகை தீபத்திருநாளன்று காலையில் ஏற்றும் தீபம்....
பரணிதீபம் (அணையா தீபம்)

25.  அருணாசலம் என்பதன் பொருள்...
அருணம்+ அசலம்- சிவந்த மலை

26.ஆறாதாரங்களில் திருவண்ணாமலை...
ஆதாரமாகத் திகழ்கிறது மணிபூரகத் தலம்

27. திருவண்ணாமலையில் பவனிவரும் சோமஸ்கந்தரின் பெயர்...
பக்தானுக்ரக சோமாஸ்கந்தர்

28. ""கார்த்திகை அகல்தீபம்'' என்னும் அஞ்சல் முத்திரை வெளியான ஆண்டு...
1997, டிசம்பர் 12

29. அருணகிரிநாதர் கிளிவடிவில் முக்தி பெற்ற இடம்...
திருவண்ணாமலை (கிளி கோபுரம்)

30.. கார்த்திகை நட்சத்திரம் ...                .தெய்வங்களுக்கு உரியது
சிவபெருமான், முருகப்பெருமான், சூரியன்

31 குறைந்தபட்சம் விளக்கு ஏற்ற வேண்டிய காலம்.....
24 நிமிடங்கள் (ஒரு நாழிகை)

32. சிவாம்சமாகப் போற்றப்படும் ராமபக்தர்....
அனுமன்

33.நமசிவாய' என்று தொடங்கும் சிவபுராணம் எதில் இடம்பெற்றுள்ளது?
திருவாசகம்

34. தர்மதேவதை நந்தி என்னும் பெயர் தாங்கி ஈசனைத் தாங்கி வருவதை எப்படி குறிப்பிடுவர்?

அறவிடை(அறம்-தர்மம், விடை-காளை வாகனம்)   

35. மனிதப்பிறவியில் அடைய வேண்டிய நான்கு உறுதிப் பொருள்கள்....
அறம், பொருள், இன்பம், வீடு(மோட்சம்)

36. சிவபெருமான் ஆடிய நாட்டியங்கள் எத்தனை?
108

37. சிவபெருமானின் நடனத்தை காணும் பேறு பெற்ற பெண் அடியவர்...
காரைக்காலம்மையார்

38."மனித்தப்பிறவியும் வேண்டுவதே இம்மாநிலத்தே' என்று நடராஜரிடம் வேண்டியவர்......
அப்பர்(திருநாவுக்கரசர்)

39. நடராஜரின் காலடியில் கிடக்கும் முயலகன் எதன் அடையாளம்..
ஆணவம்(ஆணவம் அடங் கினால் ஆனந்தம் உண்டாகும்)
முயலகன்

40. பஞ்சசபையில் சித்திரசபையாகத் திகழும் தலம்....
குற்றாலம்

41. நள்ளிரவில் சிவன் ஆடும் நடனம்...
சங்கார  தாண்டவம்

42. இடக்காலில் முயலகனை ஊன்றிய கோலத்தை எங்கு காணலாம்?
வெள்ளியம்பலம்(மதுரை)

43. மாலைவேளையில் இறைவன் மகிழ்ந்தாடும் திருநடனம்...
பிரதோஷநடனம் (புஜங்கலளிதம்)

44. நடராஜருக்குரிய விரத நாட்கள்....
திருவாதிரை, கார்த்திகை சோமவாரம்

45. நடராஜருக்குரிய திருவாதிரை பிரசாதம்....
களி. 

46.திருச்சிராப்பள்ளியில் வீற்றிருக்கும் இறைவன்...
தாயுமானசுவாமி

47. பஞ்சபூத தலங்களில் வாயுத்தலம்....
காளஹஸ்தி

48. வண்டுவடிவில் இறைவனை பூஜித்த முனிவர்...
பிருங்கி

49. திருமூலர் எழுதிய திருமந்திரம் ....திருமுறையாகும்
பத்தாம் திருமுறை

50. திருஞானசம்பந்தர் பொன் தாளம் பெற்ற தலம்...
திருக்கோலக்கா(தாளமுடையார் கோவில்) சீர்காழிக்கு அருகில் உள்ளது

51.விபூதி என்பதன் நேரடியான பொருள்...
மேலான செல்வம்

52.சுக்கிரதோஷ நிவர்த்திக்குரிய சிவத்தலம்...
கஞ்சனூர்

53. ஜோதிர்லிங்கத் தலங்கள் மொத்தம் எத்தனை?
12

54. மதுரையில் உள்ள சித்தரின் பெயர்....
சுந்தரானந்தர்

55.திருஞானசம்பந்தருக்கு திருமணம் நிகழ்ந்த தலம்...
ஆச்சாள்புரம்(திருப்பெருமணநல்லூர்)

56.. நாவுக்கரசரின் உடன்பிறந்த சகோதரி....
திலகவதி

57.. சுந்தரருடன் கைலாயம் சென்ற நாயனார்...
சேரமான் பெருமாள் நாயனார்

58.. "அப்பா! நான்வேண்டுவன கேட்டருள் புரியவேண்டும்' என்ற அருளாளர்...
வள்ளலார்

59. மதுரையில் சைவசமயத்தை நிலைநாட்டிய சிவபக்தை......
மங்கையர்க்கரசியார்

60.மாணிக்கவாசகர் யாருடைய அவையில் அமைச்சராக இருந்தார்?
அரிமர்த்தன பாண்டியன்

61. திருநாவுக்கரசரால் சிவபக்தனாக மாறிய பல்லவமன்னன்...
மகேந்திரபல்லவன்

62.சிவபெருமானின் ஐந்து முகங்களில் காக்கும் முகம் ...
தத்புருஷ முகம்(கிழக்கு நோக்கிய முகம்)

63. சிவன் வீரச்செயல் நிகழ்த்திய தலங்கள் எத்தனை?
எட்டு

64. மகாசிவராத்திரி எந்நாளில் கொண்டாடப்படுகிறது?
மாசி தேய்பிறை சதுர்த்தசி

65. மகாசிவராத்திரியில் கோயிலில் எத்தனை கால அபிஷேகம் நடக்கும்?
4 கால அபிஷேகம்

66. வாழ்விற்கு வேண்டிய நல்வினை பெற ஐந்தெழுத்தை ஓதும்விதம்.....
நமசிவாய

67. முக்தி பெற்று சிவபதம் பெற நமசிவாயத்தை எப்படி ஓத வேண்டும்?
சிவாயநம

68. சிவசின்னங்களாக போற்றப்படுபவை...
திருநீறு, ருத்ராட்சம், ஐந்தெழுந்து மந்திரம் (நமசிவாய அல்லது சிவாயநம)

69. சிவனுக்குரிய உருவ, அருவ. அருவுருவ வழிபாட்டில் லிங்கம் எவ்வகை?
அருவுருவம்

70. பன்னிரு ஜோதிலிங்கத் தலங்களில் தமிழகத்தில் உள்ள தலம்....
ராமேஸ்வரம்

71. சிவவடிவங்களில் ஞானம் அருளும் சாந்தரூபம்...
தட்சிணாமூர்த்தி

72.கும்பாபிஷேகத்தை எத்தனை ஆண்டுக்கு ஒருமுறை நடத்துவர்?
12

73.. குறும்பலா மரத்தை தலவிருட்சமாகக் கொண்ட கோயில்...
குற்றாலம் குற்றாலநாதர் கோயில்

74. ஸ்ரீவிருட்சம் என்று சிறப்பிக்கப்படும் மரம்...
வில்வமரம்

75.அம்பிகையின் அம்சமாக இமயமலையில் அமைந்திருக்கும் ஏரி...
மானசரோவர்

76.திருநாவுக்கரசர் எத்தனை ஆண்டுகள் வாழ்ந்தார்?
81

77.பதிகம் என்பதன் பொருள்...
பத்து அல்லது 11 பாடல்கள் சேர்ந்த தொகுப்பு

78. சைவ சித்தாந்தத்தை விளக்கும் முழுமையான சாத்திர நூல்...
சிவஞானபோதம்

79. உலகைப் படைக்கும் போது ஈசன் ஒலிக்கும் உடுக்கை....
டமருகம் அல்லது துடி

80.அனுபூதி என்பதன் பொருள்....
இறைவனுடன் இரண்டறக் கலத்தல்

81.உலகத்துக்கே அரசியாக இருந்து ஆட்சி புரியும் அம்பிகை.....
மதுரை மீனாட்சி

82. மதுரை மீனாட்சியம்மையின் பெற்றோர்.....
மலையத்துவஜ பாண்டியன், காஞ்சனமாலை

83. மீனாட்சிக்கு பெற்றோர் இட்ட பெயர்....
தடாதகைப் பிராட்டி

84. பழங்காலத்தில் மதுரை ..... என்று அழைக்கப்பட்டது.
நான்மாடக்கூடல், ஆலவாய்

85. மீனாட்சியம்மன் கோயில் தலவிருட்சம்...
கடம்ப மரம்

86. மீனாட்சி.... ஆக இருப்பதாக ஐதீகம்.
கடம்பவனக் குயில்

87. மீனாட்சி கல்யாணத்தை நடத்திவைக்கும் பெருமாள்....
திருப்பரங்குன்றம் பவளக்கனிவாய்ப்பெருமாள்

88. மீனாட்சியம்மன் மீது பிள்ளைத்தமிழ் பாடிய புலவர்...
குமரகுருபரர்

89.மீனாட்சியம்மனை சியாமளா தண்டகம் என்னும் நூலில் போற்றிப் பாடியவர்....
மகாகவி காளிதாசர்

90. சொக்கநாதரை தேவேந்திரன் வழிபடும் நாள்...
சித்ராபவுர்ணமி

91. மீனாட்சியம்மனுக்கு தங்க ஷூ காணிக்கை கொடுத்த ஆங்கிலேய கலெக்டர்...
ரோஸ் பீட்டர்

92. காய்ச்சல், ஜலதோஷம் தீர்க்கும் கடவுள் யார்?
ஜுரகேஸ்வரர்

93. "நாயேன்' என்று நாய்க்கு தன்னை சமமாக தன்னைக் கருதி பாடிய சிவபக்தர் யார்?
மாணிக்கவாசகர்

94.தருமிக்காக பாடல் எழுதிக் கொடுத்த புலவர்...
இறையனார்(சிவபெருமானே புலவராக வந்தார்)

95. திருநாவுக்கரசரை சிவன் ஆட்கொண்ட விதம்....
சூலைநோய்(வயிற்றுவலி)

96.அம்பிகைக்கு உரிய விரதம்....
சுக்கிரவார விரதம்(வெள்ளிக்கிழமை)

97. பிறவிக்கடலைக் கடக்கும் தோணியாக ஈசன் அருளும் தலம்....
தோணியப்பர்(சீர்காழி)

98.தாசமார்க்கம்' என்னும் அடிமைவழியில் சிவனை அடைந்தவர்...
திருநாவுக்கரசர்

99."தம்பிரான் தோழர்' என்று சிறப்பிக்கப்படும் சிவபக்தர்......
சுந்தரர்

100.திருத்தொண்டர் புராணம் (பெரிய புராணம்) பாடி நாயன்மார்களைச் சிறப்பித்தவர்...
சேக்கிழார்

101.. சிவபெருமானுக்கு திருப்பல்லாண்டு பாடி போற்றியவர்...
சேந்தனார்

102.திருவாலங்காட்டில் காளியுடன் சிவன் ஆடிய நடனம்..
சண்ட தாண்டவம்

103. மாணிக்கவாசகருக்கு இறைவன் குருவாக காட்சி அளித்தது எந்த மரத்தடியில்...
குருந்த மரம்(ஆவுடையார்கோவில்)

104 . அப்புத்தலம் (நீர் தலம்) என்று போற்றப்படும் சிவாலயம்...
திருவானைக்காவல்

105. தட்சிணாமூர்த்தியிடம் உபதேசம் பெறும் நால்வர்....
சனகர், சனந்தனர், சனத்குமாரர், சனாதனர்

106.சிவசிவ என்றிட தீவினை மாளும்' என்று கூறியவர்...
திருமூலர்

107. பிருத்வி(மண்) தலம் என்று சிறப்பிக்கப்படும் இரு சிவத்தலங்கள்....
காஞ்சிபுரம், திருவாரூர்

108. சிவாயநம என்பதை .... பஞ்சாட்சர மந்திரம் என்று கூறுவர்.
சூட்சும (நுட்பமான)பஞ்சாட்சரம். பஞ்சாட்சரம் என்றால் "ஐந்தெழுத்து மந்திரம்'.

109. மனதிலேயே இறைவனுக்கு கோயில் கட்டியவர்...
பூசலார் நாயனார்

110. அன்பின் சொரூபமாக அம்பிகை விளங்கும் தலம்....
திருவாடானை( அன்பாயியம்மை அல்லது சிநேகவல்லி)

111. அறுபத்துமூவர் விழாவிற்கு பெயர் பெற்ற சிவத்தலம்...
மயிலாப்பூர் கபாலீஸ்வரர்

112.பிச்சைப் பெருமான் என்று குறிப்பிடப்படுபவர்...
பிட்சாடனர் (சிவனின் ஒரு வடிவம்)

113.சதுரகிரியில் மகாலிங்கத்தைப் பிரதிஷ்டை செய்தவர்....
அகத்தியர்

114. ஞானவடிவாக விளங்கும் சிவபெருமானின் திருக்கோலம்....
தட்சிணாமூர்த்தி

115.சமயக்குரவர் நால்வரில் திருவிளையாடலில் இடம்பெறும் இருவர்...
திருஞானசம்பந்தர், மாணிக்கவாசகர்

116. தஞ்சாவூரில் உள்ள மூலவர்
பிரகதீஸ்வரர் அல்லது பெருவுடையார்

117.சிவபெருமான் மீது திருப்பல்லாண்டு பாடியவர்....
சேந்தனார்

118.உள்ளத்துள்ளே ஒளிக்கும் ஒருவன்' என்று இறைவனைக் குறிப்பிடுபவர்...
திருமூலர்

119.இறைவனிடம் காதலாகி கசிந்து கண்ணீர் மல்கிய அடியவர்....
திருஞானசம்பந்தர்

120. "நாமார்க்கும் குடியல்லோம்' என்று கோபம் கொண்டு எழுந்தவர்...
திருநாவுக்கரசர்

121. "ஏழிசையாய் இசைப்பயனாய் இருப்பவன் ஈசன்' என்று பாடியவர்....
சுந்தரர்

122. "இமைப்பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான்' என்று போற்றியவர்...
மாணிக்கவாசகர்

123. "உள்ளம் பெருங்கோயில் ஊனுடம்பு ஆலயம்' என்று துதித்தவர்....
திருமூலர்

124. "உழைக்கும் பொழுதும் அன்னையே' என்று ஓடி வரும் அருளாளர்....
அபிராமி பட்டர்

125.ஈன்ற தாய் மறுத்தாலும் அன்புக்காக ஏங்கும் குழந்தையாய் உருகியவர்...
குலசேகராழ்வார்

126.திருவண்ணாமலையில் ஜீவசமாதியாகியுள்ள சித்தர்....
இடைக்காட்டுச்சித்தர்

127. கோயில் என்பதன் பொருள்....
கடவுளின் வீடு, அரண்மனை

128. நால்வர் என்று குறிக்கப்படும் அடியார்கள்....
சம்பந்தர்,அப்பர், சுந்தரர், மாணிக்கவாசகர்

129. சித்தாந்தத்தில் "சஞ்சிதம்' என்று எதைக் குறிப்பிடுவர்?
முன்வினைப்பாவம்

130.கோளறுபதிகம் யார் மீது பாடப்பட்ட நூல்?
சிவபெருமான்

131. சிவபெருமானுக்கு பிரியமான வேதம்...
சாமவேதம்

132.நமசிவாய' மந்திரத்தை இசைவடிவில் ஜெபித்தவர்...
ஆனாய நாயனார்

133.யாருக்காக சிவபெருமான் விறகு விற்ற லீலை நடத்தினார்?
பாணபத்திரர்

133.அப்பர் கயிலைக்காட்சி கண்டு அம்மையப்பரை பாடிய தலம்...
திருவையாறு

134. சிவபாதசேகரன் என்று சிறப்புப் பெயர் கொண்டவர்...
ராஜராஜசோழன்

135.சிவமூர்த்தங்களில் கருணாமூர்த்தியாக திகழ்பவர்....
சோமாஸ்கந்தர்

136.கயிலை தரிசனம் பெற அருள்புரியும் விநாயகர் துதிப்பாடல்...
விநாயகர் அகவல்.

137.மதுரை சுந்தரேஸ்வரருக்கு சந்தனம் அரைத்துக் கொடுத்து சிவபதம் பெற்ற அடியவர்....
மூர்த்திநாயனார்

138.நக்கீரர் முக்தி அடைந்த சிவத்தலம்.....
காளஹஸ்தி

139.அன்னத்தின் பெயரோடுசேர்த்து வழங்கப்படும் தலம்...
திருச்சோற்றுத்துறை ( திருவையாறு அருகில் உள்ளது)

140. பக்தருக்காக விறகினைச் சுமந்த சிவபெருமான்...
மதுரை சொக்கநாதர்

141. தாயாக வந்து பிரசவம் பார்த்த சிவன்...
திருச்சி தாயுமானவர்

142. மார்கண்டேயனைக் காக்க எமனை சிவன் உதைத்த தலம்...
திருக்கடையூர்( காலசம்ஹார மூர்த்தி)

143. பார்வதியைத் தன் இடப்பாகத்தில் ஏற்றபடி அருளும் தலம்...
திருச்செங்கோடு (நாமக்கல் மாவட்டம்)

144. பஞ்சபூதங்களில் காற்றுக்குரிய சிவன் எங்கு வீற்றிருக்கிறார்?
காளஹஸ்தி

145. அம்பிகையே உச்சிக்கால பூஜை செய்யும் தலம்...
திருவானைக்காவல்(திருச்சி) ஜம்புகேஸ்வரர் கோயில்

146. அடியும் முடியும் காணா முடியாதவராக சிவன் அருளும் கோயில்...
திருவண்ணாமலை

147. காளியோடு சேர்ந்து சிவன் திருநடனம் ஆடிய தலம்...
திருவாலங்காடு நடராஜர் கோயில் (கடலூர் மாவட்டம்)

148. கருவறையில் சடைமுடியோடு காட்சிதரும் சிவலிங்க கோயில்கள்.....
திருவையாறு ஐயாறப்பர், சிவசைலம் சிவசைலநாதர் கோயில் (திருநெல்வேலி மாவட்டம்)

149. சிவபெருமானின் வாகனம்
ரிஷபம்(காளை)

150. மதுரையில் நடராஜர் ஆடும் தாண்டவம்....
சந்தியா தாண்டவம்

151. ஆதிசங்கரர் முக்திலிங்கத்தை ஸ்தாபித்த திருத்தலம்...
கேதார்நாத்

152. சிவலிங்கத்தை எத்தனை பாகங்களாகக் குறிப்பிடுவர்?
மூன்று(பிரம்ம, விஷ்ணு, ருத்ரபாகம்)

153.மூங்கிலை தலவிருட்சமாகக் கொண்ட சிவத்தலங்கள்....
திருநெல்வேலி, திருவெண்ணெய்நல்லூர்

154. சிவ வடிவங்களில் வசீகரமானதாகப் போற்றப்படுவது....
பிட்சாடனர்

155.சிவபெருமானை ஆடு பூஜித்த தலம்....
திருவாடானை (ராமநாதபுரம் மாவட்டம்)

156. தண்ணீரில் விளக்கேற்றிய சிவனடியார்......
நமிநந்தியடிகள்( திருவாரூர்)

157.அர்ச்சகர் அம்பிகையாக சிவனை பூஜிக்கும் தலம்....
திருவானைக்காவல்

158. தேவாரத் தலங்களில் சுக்கிரதோஷம் போக்கும் சிவன்.....
கஞ்சனூர் அக்னீஸ்வரர் (தஞ்சாவூர் மாவட்டம்)

159.சிவன் "அம்மா' என்று யாரை அழைத்து மகிழ்ந்தார்?
காரைக்காலம்மையார்

160. தாச(பக்தி அடிமை) மார்க்கத்தில் சிவனைப் போற்றியவர்....
திருநாவுக்கரசர்

161.முல்லைவனமாகத் திகழ்ந்த சிவத்தலம்...
திருக்கருக்காவூர்

162.தினமும் பிரதோஷ பூஜை நடக்கும் தலம்....
திருவாரூர் தியாகராஜ சுவாமி கோயில்

163.சிவனின் கண்ணாகப் போற்றப்படும் பொருள்...
ருத்ராட்சம்

164.முக்கண்ணன் என்று போற்றப்படுபவர்....
சிவன்

165.சிவனால் எரிக்கப்பட்ட மன்மதனை... என்ற பெயரால் அழைப்பர்.
அனங்கன்(அங்கம் இல்லாதவன்)

166.ஸ்ரீருத்ரம் ஜெபித்து சிவனை அடைந்த அடியவர்....
ருத்ரபசுபதியார்

167.இரவும்பகலும் இடைவிடாமல் ஸ்ரீருத்ரம் ஓதியவர்...
ருத்ரபசுபதியார்

168.ஆதிசங்கரருக்கு சிவன் அளித்த லிங்கம் எங்குள்ளது?
சிருங்கேரி (சந்திரமவுலீஸ்வரர்)

169.சிவனைப் போற்றும் சைவ சாத்திரங்களின் எண்ணிக்கை.....
14

170.ஆதிசங்கரர் ஸ்தாபித்த முக்திலிங்கம் எங்குள்ளது?
கேதார்நாத்

171.நடராஜரின் பாதத்தில் பாம்பு வடிவில் சுற்றிக் கொண்டவர்.....
பதஞ்சலி முனிவர்.

172.சிவபெருமானின் நடனத்தை தரிசிக்க தவமிருந்தவர்கள்.....
வியாக்ரபாதர், பதஞ்சலி

173. உபமன்யுவுக்காக பாற்கடலை வரவழைத்தவர்.........
சிவபெருமான்

174.நடராஜரின் தூக்கிய திருவடியை .... என்பர்
குஞ்சிதபாதம்

175.தில்லை அந்தணர்களுக்கு யாகத்தீயில் கிடைத்த நடராஜர்......
ரத்தினசபாபதி

176.உமாபதி சிவாச்சாரியார் எழுதியசித்தாந்த நூல்....
சித்தாந்த அட்டகம்

177.கருவறையில் சிவ அபிஷேக தீர்த்தம் வழியும் இடம்.....
கோமுகி

178. பெரியகோயில்களில் தினமும் எத்தனை முறை பூஜை நடக்கும்?
ஆறுகாலம்

179. சிவனுக்கு "ஆசுதோஷி' என்ற பெயர் உள்ளது. அதன் பொருள்.......
விரைந்து அருள்புரிபவர்

180. சிவசந்நிதியின் பின்புறம் மேற்கு நோக்கி கோஷ்டத்தில் இருப்பவர்.....
லிங்கோத்பவர்

181. சிவனுக்குரிய மூர்த்தங்கள்(சிலை வடிவங்கள்) எத்தனை?
64

182.சிவமூர்த்தங்களில் கருணாமூர்த்தியாகத் திகழ்பவர்....
சோமாஸ்கந்தர்
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

Thursday, May 27, 2021

பஞ்சநத நடராஜர் கோவில்- திருச்சி


🌹 *_ஆலயதரிசனம்_* ... 🌹

பஞ்சநத நடராஜர் கோவில்- திருச்சி

திருச்சி அருகே உள்ளது பஞ்சநத நடராஜர் கோவில். இந்த கோவிலில் உள்ள நடராஜர் ஆசியாவிலேயே மிகவும் அரிதான, பஞ்சநத கல்லில் செய்யப்பட்டவர்.

ஆசியாவிலேயே மிகவும் அரிதான, பஞ்சநத கல்லில் செய்யப்பட்ட நடராஜர் திருமேனி. இந்த கற்கள் சூரியனில் இருந்து வெளிவரும் ஆரோக்கிய கதிர்வீச்சினை சேமித்து வைத்துக் கொள்ளும் ஆற்றல் உடையன. இந்த வகை கற்சிலை தற்போது எங்குமே கிடையாது என்று கூறப்படுகிறது.

பாறைகளின் சிறப்புகள்...

ஆலிங்க நதனம், பஞ்சநதனம், சிங்க நதனம், யானை நதனம், யாழி நதனம் என்று 5 வகையான சிலாக்கற்கள் உள்ளன. இதில் பஞ்சநதனம் என்ற பாறை தெய்வீக ஒளி வீசும் என்பது சிற்பக்கலை வல்லுநரால் கூறப்பட்டுள்ளது. நவரத்தின மோதிரம் அதன் ஒளிகளால் எப்படி நம் கவனத்தை ஈர்க்கிறதோ அதைப்போலத்தான் இந்த பஞ்சநதன கற்களும் சிறப்பு பெறுகின்றன. சூரிய பிரகாசத்தை தருகின்ற இந்த பஞ்சநதன பாறைகளால் இவ்வூர் நடராஜர் சிலை வடிவமைக்கப்பட்டு உள்ளது. எனவே இந்த கோவில் பஞ்சநத நடராஜர் கோவில் என அழைக்கப்படுகிறது.

அழகே வடிவான இறைவி சிவகாமி அம்மை....

இந்த கோவிலில் இறைவி சிவகாம சுந்தரியின் உருவ அமைப்பு வணங்குவதற்கு மட்டுமில்லாமல் ரசனைக்குரியதாகவும் இருப்பது தனிச்சிறப்பு. அந்த அன்னை தன் முகத்தை சாய்த்து பஞ்சநதன நடராஜரை பார்ப்பதுபோல் காட்சியளிக்கிறார். இது காண்போரை மெய்மறக்க செய்கிறது.

பஞ்சநதன நடராஜர் ஸ்தல வரலாறு...

பழங்கால வரலாற்று சிறப்பு மிக்க ஊட்டத்தூர் சுத்தரத்தினேஸ்வரர் திருக்கோவில் ராஜராஜ சோழ மன்னரால் கட்டப்பட்டது. முற்காலத்தில் ஊற்றத்தூர் என கல்வெட்டில் குறிக்கப்பட்ட இவ்வூர் தற்போது ஊட்டத்தூர் என்று அழைக்கப்படுகிறது.

ராஜராஜ சோழ மன்னர் ஊட்டத்தூரின் மேற்கு பகுதியில் சோலேச்சுவரர் என்ற மேட்டுக்கோவில் ஒன்றை எழுப்பினார். வில்வ வனமாக இருந்த அப்பகுதிக்கு ராஜராஜ சோழ மன்னரின் வருகை அவ்வப்போது நிகழ்வது உண்டு.

தழும்போடு கூடிய ஒரு சிவலிங்கம்....

ஒருமுறை அவரது வருகையையட்டி மன்னர் செல்லும் வழியில் இடையூறுகளை நீக்க வேண்டி புல் செதுக்கும் பணி நடைபெற்றது. அந்த தருணத்தில் ஓரிடத்தில் எதிர்பாராது ரத்தம் பீறிட்டெழுந்தது. உடனே பணியாட்கள் மன்னரிடம் செய்தியை தெரிவித்தனர். மன்னர் வந்து பார்த்தபோது ரத்தம் பீறிடுவது நின்று தடைபட்ட தழும்போடு கூடிய ஒரு சிவலிங்கம் காட்சியளித்தது.

அந்த சிவலிங்கம் காணப்பட்ட இடத்திலேயே கோவில் கட்ட நிர்மாணம் செய்யப்பட்டது. இதன் காரணமாக ராஜராஜ சோழனால் குறிப்பிட்ட இடத்தில் எழுப்பப்பட்டதே ஊட்டத்தூர் அருள்மிகு சுத்தரத்தினேஸ்வரர் திருக்கோவில் ஆகும். இன்றும் லிங்கத்தின் தலைப்பகுதியில் பார்த்தால் மண்வெட்டி பட்ட காயம் தெரியும். கோவில் மூலஸ்தானத்தில் தீபாராதனை நடை பெறும்போது கற்பூர ஜோதி லிங்கத்தில் பிரதிபலிக்கும். இக்காட்சி மூலவர் ஜோதி வடிவானவர் என்றும், சுத்தரத்தினேஸ்வரர் தூயமாமணி என்றும், மாசிலாமணி என்றும் அழைக்கப்படுகிறார்.

நோய் நீக்கும் நடராஜர்....

சிறுநீரகம், மற்றும் சிறுநீரக கல் தொடர்பான நோய்களுக்கு இந்த நடராஜர் மருந்தாக திகழ்கிறார். சுமார் ஒரு கிலோ வெட்டி வேரினை 48 துண்டுகளாக எடுத்துக் கொண்டு அவற்றை ஒரு மாலையாக கட்டி இந்த நடராஜருக்கு சாற்றி அர்ச்சித்து பின்னர் அந்த 48 துண்டுகளை நாளொன்றுக்கு ஒன்று என்ற விகிதத்தில் ஒரு கோப்பை நீரில் இரவு ஊற வைத்து அதிகாலையில் வெறும் வயிற்றில் உட்கொள்ள நோய் தீர்வது இன்றும் நடைபெறும் அதிசயமாக உள்ளது.

இந்திரன் மீண்டும் பதவி பெற்ற திருத்தலம்..........

ஆசிய கண்டத்திலேயே அபூர்வ நடராஜர் திருக்கோவில் இது. சிறுநீரகம் சம்மந்தமான கோளாறுகளை நீக்கக்கூடியவர். இந்திரன் பதவி இழந்தவுடன் இந்த நடராஜ பெருமானை தரிசித்து மீண்டும் இந்திர பதவியை பெற்றார். பதவியை இழந்தவர்கள் இந்த கோவிலுக்கு வந்து வழிபாடு செய்தால் மீண்டும் இழந்த பதவியை பெறலாம் என்பதை கல்வெட்டு செய்திகள் தெரிவிக்கிறது.

இக்கோவிலில் சுத்தரத்தினேஸ்வரர், அகிலாண்டேசுவரி, பரிவாரங்கள், விநாயகர், சூரியன், தட்சிணாமூர்த்தி, ஐந்து நந்திகேஸ்வரர், வள்ளி தெய்வானையுடன் கூடிய சுப்ரமணியர், 63 நாயன்மார்கள், கோடி விநாயகர், இரட்டை லிங்கம், அதிகார நந்தி, கஜலட்சுமி, லட்சுமி, சரஸ்வதி, கோரப்பல்லுடன் கூடிய துர்க்கை, விஷ்ணு, சண்டிகேஸ்வரர், நடராஜர், சிவகாமசுந்தரி, வீரபத்திரர், பைரவர், நவக்கிரகங்கள் மற்றும் மிக அழகான தோற்றம் உள்ள பல தெய்வங்களின் சிலைகளும் மிக சிறப்பாக அமைந்துள்ளது.

மாற்று திசையில் நந்தி தேவர்....

மற்ற சிவ தலங்களில் இல்லாத விசேஷமாக இங்கு நந்திதேவர் கிழக்கு முகமாக படுத்து உள்ளார். கங்கை, யமுனை, சரஸ்வதி, நர்மதை, காவிரி, சிந்து, துங்கப்பத்திரா ஆகிய நதிகளில் யார் பெரியவர்? என்ற தகராறு ஏற்பட்டு இங்கு வந்து சிவபெருமானிடம் முறையிட்டனர்.அவர்களது கோரிக்கையை நிறைவேற்றும்படி சிவ பெருமான் நந்திதேவருக்கு கட்டளையிட்டார்.

அதன்படி நந்திதேவர் 7 நதிகளையும் விழுங்கி விட்டு கிழக்கு நோக்கி படுத்து இருந்ததாகவும் அப்போது கங்கை மட்டும் வெளியே வந்ததாகவும், கர்ண பரம்பரை கதைகள் கூறுகின்றன. இதனால் கோவில் அருகே ஓடும் சிறிய ஆறு நந்தியாறு என்று அழைக்கப்படுகிறது. இவ்வூரின் வடக்கு பகுதியில் இந்த நந்தியாறு கடலுடன் கலக்கிறது.

அமைவிடம்....
திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலையில் திருச்சியை அடுத்து பாடாலூரில் இருந்து சுமார் 4 கி.மீ தொலைவில் உள்ள திருஊற்றத்தூர் (தற்போது ஊட்டத்தூர் என்று அழைக்கப்படுகிறது).

🌷🌷

யார் சிவன்


❤️🔥#அன்பே_சிவம்

🔥🪔🔱#சிவன்_என்பவர் யார் ?

🔥#சிவனை_அனைவரும் முதன்முதலில் அறிந்தது அவர் இமயமலையில் பரவசத்தில் தீவிரமாய் ஆடிக்கொண்டு அல்லது சிலைவார்த்தார் போல் சற்றும் அசையாது அமர்ந்திருந்தபோது தான்.அவர் யாரிடமும் பழக முயற்சிக்கவில்லை, யாரும் இருப்பதை அறிந்ததாகக் கூடத் தெரியவில்லை. 

#ஆனால் சிவனை எல்லோரும் அறிந்திருந்தனர். அவரையே மணக்க வேண்டும் என்று பார்வதி மிகத் தீவிரமாக தவமிருக்க, மனமுவந்து சிவன் அவளை மணக்க சம்மதித்தார். திருமணத்தன்று என்ன நடந்தது..?

🔥🔱#சிவனுக்கும் பார்வதிக்கும் திருமணம் நிச்சயமாகி, மண நாளும் வந்தது. சிவ-பார்வதி திருமணம், வரலாறு காணாத பெரும் விழாவாக அறியப்பட்டது. அன்று, யாரும் கனவில் கூட எண்ணியிராத அளவிற்கு தீவிர மனிதரான சிவன், தன் அங்கமாக மற்றொருவரை ஏற்கவிருந்தார். சமுதாயத்தில் 'இன்னார்' என்று அறியப்பட்ட எல்லோரும், அடையாளம் ஏதும் இல்லா எளியோரும், பாகுபாடின்றி திருமணத்திற்கு வந்திருந்தனர்.

#தேவர்களும் தேவதைகளும் வந்தனர். அசுரர்களும் பூதங்களும் கூட வந்திருந்தனர். பொதுவாக, தேவர்கள் வந்தால் அசுரர்கள் வரமாட்டார்கள், அசுரர்கள் வருவதாய் இருந்தால் தேவர்கள் வர மறுத்துவிடுவர்.

அவர்களால் ஒருவரை ஒருவர் பொறுத்துக் கொள்ள முடியாது. ஆனால் நடக்கப்போவது சிவனின் திருமணம் என்பதால், பகையை மறந்து, இம்முறை மட்டும் இருவரும் வருவதாக முடிவு செய்திருந்தனர்.

🔥#அதோடுசிவன்பசுபதி அல்லவா? எல்லா உயிரினங்களுக்குமே கடவுளாயிற்றே - அதனால் எல்லா மிருகங்களும், புழுபூச்சிகளும், அத்தனை உயிரினங்களும் திருமணத்திற்கு வந்து சேர்ந்தன. அவை மட்டுமா, பேய்கள், பிசாசுகள் அவற்றை ஒத்த அனைத்துமே வந்தன.
இது ராஜவம்சத்துத் திருமணம் - ஆம், இளவரசி பார்வதியின் திருமணமாயிற்றே! ராஜவம்ச வழக்கப்படி, திருமாங்கல்யம் கட்டும் முன், ஒரு முக்கியமான சடங்கு ஒன்று நடைபெறும். மாப்பிள்ளை யார், மணப்பெண் யார், அவர்கள் தாய் யார், தந்தை யார், பாட்டனார், முப்பாட்டனார் என்று மணமக்களின் பூர்வீகத்தை சபையில் அறிவிக்க வேண்டும். ஒரு அரசனுக்கு, அவனது பூர்வீகம் மிக மிக முக்கியம், அது அவனது குலப் பெருமையாயிற்றே.

#அதனால் மிகுந்த பகட்டோடும், பெருமையோடும் பார்வதியின் பூர்வீகம் அறிவிக்கப்படலாயிற்று. இது நடந்து முடிய சிறிது நேரம் ஆனது. ஒரு வழியாக, அனைத்துத் தகவலும் சொல்லி முடிக்கப்பட்டதும், கூடியிருந்தோர் மணமகன் அமர்ந்திருந்த திசை நோக்கி ஆவலுடன் திரும்பினர்.
சிவனின் சார்பாக யாரேனும் எழுந்து, அவரின் குலப்பெருமையைப் பேசுவார்கள் என்று எதிர்பார்த்துக் காத்திருந்தனர். ஆனால் அப்படி யாரும் எழவும் இல்லை, ஒரு வார்த்தை பேசவுமில்லை. "சிவனின் சுற்றத்தாரில் இருந்து யாரேனும் ஒருவர் சிவனின் குலப் பெருமையை விவரிக்க மாட்டார்களா?"  என்று பார்வதியின் குடும்பத்தினர் சுற்றும்முற்றும் பார்த்தனர்.
ஆனால் அப்படி யாருமே வந்திருக்கவில்லை. ஏனெனில், பெற்றவர்கள், உறவினர்கள், குடும்பம் என்று சிவனுக்கு சொந்த-பந்தங்கள் யாருமில்லை. எந்நேரமும் தன்னுடன் இருக்கும் பூதகணங்களை மட்டும்தான் அவர் அழைத்து வந்திருந்தார். 
அவையும் உருக்குலைந்த உருவத்துடன், பார்ப்பதற்கே பயங்கரமாக இருந்தன. அது போதாதென்று, அவற்றிற்கு மனித பாஷை வேறு பேசத் தெரியாது என்பதால், தங்களுக்குத் தெரிந்த வகையில் ஏதோ இரைந்து கொண்டிருந்தன. பார்ப்பவர்களுக்கு அவை போதை மயக்கத்தில் தள்ளாடிக் கொண்டிருப்பதுபோல் இருந்தது.

❤️🔥 #இந்நேரத்தில், பார்வதியின் தந்தை பர்வதராஜ், சிவனிடம், "உங்களுடைய முன்னோர்கள் பற்றி விவரியுங்கள்" என்று வேண்டினார்.
சிவன் ஒன்றுமே சொல்லவில்லை. தொலை தூரத்தில் ஏதோ ஒன்றை பார்த்திருப்பதுபோல், சும்மா உட்கார்ந்திருந்தார். அவர் மணப்பெண்ணையும் பார்க்கவில்லை, மணமுடிக்கும் சந்தோஷமும் அவரிடம் தென்படவில்லை. வெறுமையை வெறித்தவாறு, தனது பூதகணங்கள் சூழ்ந்திருக்க, அசைவேதுமின்றி அமர்ந்திருந்தார். அந்தக் கேள்வி அவரிடம் தொடர்ந்து கேட்கப்பட்டது.
முன்னோர் யார் என்று தெரியாமல் யாருமே தங்கள் மகளை ஒருவருக்கு மணமுடிக்க சம்மதிக்க மாட்டார்களே! நல்ல நேரம் வேறு கடந்துபோய்க் கொண்டிருந்தது. அனைவரையும் பதட்டம் தொற்றிக் கொண்டது. 

#படபடப்பில் கேள்வியின் தீவிரம் அதிகமானது. அதே கேள்வி மீண்டும் மீண்டும் கேட்கப்பட்டது. ஆனால் சிவன் வாய் திறக்கவில்லை, மௌனமாகவே அமர்ந்திருந்தார்.

🔥🔱🪔#உயர்குலத்தில் பிறந்த அரசர்களும், பண்டிதர்களும் சிவனை இளக்காரமாகப் பார்த்து, "அவரது குலம் என்னவாக இருக்கும்? ஏன் இப்படி ஏதும் பேசாமல் அமர்ந்திருக்கிறார்? ஒருவேளை சொல்வதற்கே கூசும் கீழ் ஜாதியில் பிறந்தவராய் இருப்பாரோ?" என்று அவரவருக்குத் தெரிந்ததுபோல், வாய்க்கு வந்தவற்றை பேசத் துவங்கினர்.
அங்கு சபையில் அமர்ந்திருந்த நாரதர், நிலைமை கைமீறி போய்க் கொண்டிருப்பதை உணர்ந்து, தனது வீணையை எடுத்து, அதில் ஒரே ஒரு கம்பியில் சப்தம் எழுப்பத் துவங்கினார். 
மீண்டும் மீண்டும் அதே ஸ்வரத்தை 'டொயிங்... டொயிங்... டொயிங்' என வாசித்துக் கொண்டேயிருந்தார். இதனால் எரிச்சலுற்ற பார்வதியின் தந்தை பர்வதராஜ், பொறுமை இழந்து, "என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள்? மாப்பிள்ளையின் பூர்வீகத்தை அறிந்து கொள்ள நாங்களும் விடாமல் முயற்சி செய்து கொண்டிருக்கிறோம், மாப்பிள்ளையோ எங்களை சிறிதும் சட்டை செய்யாமல் மௌனமாகவே அமர்ந்திருக்கிறார்.
 இவரைப் போன்றவருக்கா என் பெண்ணை நான் மணமுடித்துக் கொடுப்பது? இந்தப் பிரச்னை போதாதென்று நீங்களும் எரிச்சலூட்டும் வண்ணம் ஒரே சப்தத்தை ஏன் எழுப்பிக் கொண்டிருக்கிறீர்கள்? இல்லை... இதுதான் உங்கள் பதிலா?" என்று இரைந்தார்.
நாரதர், "அவரைப் பெற்றவர்கள் யாருமில்லை," என்றார். ராஜன் வினவினான், "அவரது தாய்-தந்தை யார் என்று அவருக்குத் தெரியாது என்கிறீர்களா?" நாரதர், "இல்லை. அவரை யாரும் பெற்றெடுக்கவில்லை. அவருக்கென்று பூர்வீகம் இல்லை. கோத்திரம் இல்லை. அவரிடம் எதுவுமில்லை. அவரிடம் இருப்பது அவர் மட்டும்தான்," என்று சொன்னார்.
இதனைக் கேட்ட அத்தனை பேரும் குழம்பிப் போயினர். பர்வதராஜ், "தனது தாய்-தந்தை யாரென அறியாதவர்களை நாங்கள் கண்டிருக்கிறோம். இதுபோன்ற துயரச் சம்பவங்கள் நடக்கத்தான் செய்யும். ஆனால் மனிதன் என்று ஒருவன் இருந்தால் அவன் வேறு யாருக்கேனும் பிறந்திருக்க வேண்டும் அல்லவா? அது எப்படித் தாயோ தந்தையோ இல்லாமல் ஒருவர் பிறக்க முடியும்?"

🔥#நாரதர்_சொன்னார், "அவர் சுயம்பு, தானாகவே உருவானவர். அவருக்கு தாயும் இல்லை, தந்தையும் இல்லை. அவருக்கு பூர்வீகமும் இல்லை, முன்னோர்களும் இல்லை. அவர் எந்த பாரம்பரியத்தையும் சேர்ந்தவர் இல்லை, அவருக்கு பக்கபலமாக எந்த ராஜாங்கமும் இல்லை. அவருக்கு கோத்திரமும் இல்லை, நட்சத்திரமும் இல்லை, எந்த அதிர்ஷ்ட தேவதையும் அவரைக் காத்து நிற்கவில்லை.
 அவர் அனைத்தையும் கடந்தவர். இந்தப் பிரபஞ்சம் முழுவதையும் தன்னில் ஒரு அங்கமாக இணைத்துக் கொண்ட யோகி அவர். அவருக்கு இருப்பது ஒரே ஒரு முன்னோடி மட்டுமே - அது சப்தம். இந்தப் பிரபஞ்சம் உருவாகும் முன், இந்தப் பிரஞ்சம் உருவாவதற்கு மூலமான வெறுமை படைத்தல் செயலை ஆரம்பித்தபோது, முதன்முதலில் உருவானது சப்தம். 

🔥#அதன்_பிறகே படைப்பு நிகழ்ந்தது. அதேபோல் இவரும் ஒன்றுமற்ற வெறுமையில் இருந்து, ஒரு ஒலியின் மூலம் தோன்றினார். இதை வெளிப்படுத்தும் வகையில்தான், நான் மீண்டும் மீண்டும் ஒரே ஒலியை எழுப்பிக் கொண்டிருந்தேன்." என்றார்.

🔥ஓம் நமசிவாய நம ஓம் 🔥

*Visit YouTube channel*

https://youtube.com/channel/UCzyuoCjvB15KPJjIL9HGNHA

Follow us in *Instagram*
https://www.instagram.com/p/CPWD-aSBffh/?utm_medium=copy_link

*Facebook*
https://www.facebook.com/100104942230621/posts/120113753563073/

சுக்ரேஸ்வரர் கோவில்

**சுக்ரீஸ்வரர் கோவில் முக்கிய சிறப்புகள்:-**
**1. பொய் ஆகவே ஆகாது!**
**2. கோவில் மேல் கோவில!**

**திருப்பூரிலிருந்து ஊத்துக்குளி செல்லும் சாலையில் 8 கிலோமீட்டர் தொலைவில் சர்க்கார் பெரியபாளையத்தில் சுக்ரீஸ்வரர் கோவில் உள்ளது. ராமாயண காலத்தில் ஸ்ரீராமருக்கு உதவியாக இருந்த சுக்ரீவன், இங்கு ஈஸ்வரனை பிரதிஷ்டை செய்து வழிபட்டதால் மூலவருக்கு சுக்ரீஸ்வரர் என்று பெயர் வந்ததாக தல புராணம் கூறுகிறது. இதற்கு சான்றாக ஆலயத்தில் அர்த்த மண்டப சுவரில், சுக்ரீவன் சிவலிங்கம் பிரதிஷ்டை செய்யும் புடைப்புச் சிற்பம் உள்ளது. இத்தல இறைவன் குரக்குத்தளி ஆடுடைய நாயனார் என்றும் அழைக்கப்படுகிறார்.**

தற்போது இந்திய தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில் இருக்கும் இக்கோவில் சமயக்குரவர்களுள் ஒருவரான சுந்தரர் பாடல் பெற்ற தலமாகும். ஆகையால் இது 8–ம் நூற்றாண்டைச் சேர்ந்த கோவிலாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது. ஆனால் கி.பி. 1220–ம் ஆண்டை சேர்ந்த ஒரு கல்வெட்டுதான் இங்கு காணப்படுகிறது. 

இந்தக் கோவிலில் மூலவர் சுக்ரீஸ்வரர், லிங்க வடிவில் எழுந்தருளியுள்ளார். வலதுபுறம் ஆவுடைநாயகியாக அம்மன் தனிச் சன்னிதியில் அருள்பாலிக்கிறார். சுற்றுப் பிரகாரங்களில் கன்னி மூல விநாயகர், தட்சிணாமூர்த்தி, சுப்பிரமணியர், சண்டிகேஸ்வரர், பைரவர் சன்னிதிகளும், எந்த சிவன் கோவில்களிலும் இல்லாத சிறப்பாக கருவறைக்கு நேர் எதிரே பத்ரகாளியம்மன் சன்னிதியும் உள்ளது.

**பஞ்சலிங்கங்க கோவில்:-**

நீர், நிலம், காற்று, நெருப்பு, ஆகாயம் என பஞ்ச பூதங்களை குறிக்கும் வகையில், பஞ்சலிங்கங்கள் இந்தக் கோவிலில் அமைந்துள்ளன. மூலவராக அக்னி லிங்கம், மீதம் மூன்று லிங்கங்கள் கோவிலை சுற்றிலும் அமைந்துள்ளன. சிவனுக்கு பிடித்த வில்வமரத்தின் கீழ், ஐந்தாவதாக ஆகாச லிங்கம் அமைந்துள்ளது.
 
நான்கு யுகங்களை கடந்தது இக்கோவில் வரலாறு:-

2,500 ஆண்டுகளுக்கு முந்தையது என தொல்லியல் துறை கூறினாலும், 17.28 லட்சம் ஆண்டுகளை கொண்ட கிரதாயுகத்தில், காவல் தெய்வமாகவும், 12.96 லட்சம் ஆண்டுகளை கொண்ட திரேதாயுகத்தில் சுக்ரீவனாலும், 8.64 லட்சம் ஆண்டுகளை கொண்ட துவாபரயுகத்தில், இந்திரனின் வாகனமாக ஐராவதத்தாலும், வணங்கப்பட்டது எனவும், 4.32 லட்சம் ஆண்டுகளை கொண்ட, கலியுகத்தில், தேவர்களாலும், அரசர்களாலும் வணங்கப்பட்டு, நான்கு யுகங்களை கண்ட கோவில் என்ற வரலாறும், அதற்கான சான்றுகளும் கோவிலில் உள்ளன.

கோவில் மேல் கோவில்:- 

1952–ம் ஆண்டு தொல்லியல் துறை இந்த கோவிலை தனது கட்டுப்பாட்டில் கொண்டு வந்து ஆய்வு செய்தது. அப்போது கோவிலை மீண்டும் புனரமைக்க முடிவு செய்து, கோவில் அஸ்திவாரத்தை பலப்படுத்த நடவடிக்கை எடுத்தது. கோவில் கற்களை பிரித்து பார்த்தபோது, தற்போதுள்ள கோவிலை போலவே பூமிக்கடியிலும், இதே கட்டுமானத்தில் ஒரு கற்கோவில் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. கற்கோவிலுக்கு மேல் மற்றொரு கோவில் எழுப்பப்பட்டிருக்கும் இந்த அமைப்பு வித்தியாசமாக இருப்பதாக கூறப்படுகிறது.

சிதம்பரம், பேரூர் கோவிலுக்கு அடுத்து, சிறப்பான வேலைப்பாடுகளுடன், சக்தி வாய்ந்ததாக சுக்ரீஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. கோவிலுக்கு என 450 ஏக்கர் நஞ்சராயன்குளம், கோவிலை சுற்றிலும் தண்ணீர் தேங்கும் அகழி, தெப்பக்குளம், இப்பகுதியில் அமைந்திருந்த முகுந்த பட்டணத்தில் இருந்து, மூலவருக்கு அருகே வெளியே வரும் வகையில் அமைந்துள்ள குகை, சிறப்பான வேலைப்பாடுகளுடன் கூடிய  கருவறை கோபுரம் என தெரியாத விஷயங்கள் பல உள்ளன.

அதேபோல் கோவிலுக்கு மேற்கு பகுதியில் 56 வகையான நட்சத்திர, ராசி, திசை மரங்கள் நடப்பட்டு பெண்கள் நலபயணம் மேற்கொள்ள தனியாக நடைபாதையும் போடப்பட்டுள்ளது.

**பொய் ஆகவே ஆகாது!**
**மிளகு, பயிராக மாறியது:-**

ஒரு வியாபாரி, பொதிச்சுமையாக, மாடுகள் மீது மிளகு மூடைகளை  ஏற்றிக்கொண்டு  அவ்வழியாக  சென்றுள்ளார். அப்போது  மாறுவேடத்தில் வந்த சிவன் மூட்டைகளில் என்ன என கேட்க, அந்த வியாபாரி மிளகுக்கு இருந்த விலைமதிப்பு காரணமாக, பாசிப்பயிறு என கூறியுள்ளார். பின்னர்  15 நாட்களுக்கு அந்த வியாபாரி சந்தைக்குச் சென்று பார்த்தபோது, மிளகு மூடைகள் அனைத்தும் பாசிப்பயிறு மூடைகளாக மாறியிருந்தன. அதிர்ச்சி அடைந்த விவசாயி, இறைவனிடம் கதறி அழுது வேண்டினார். இதைதொடர்ந்து இறைவன் கனவில் சென்று, உன் மாடுகள் எங்கு வந்து நிற்கிறதோ, அங்கு வந்து வணங்கு. உன் பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கும் என்று கூறியுள்ளார். இதைதொடர்ந்து வியாபாரியும் மாட்டை ஓட்டி வந்து மாடு நின்ற இடத்தில் சுக்ரீஸ்வரரை வணங்கியதால் பாசிப்பயிராக இருந்த மூடைகள்  மிளகு மூடைகளாக மாறின. இப்பகுதி மக்கள் மிளகு ஈஸ்வரரே என்று அழைத்துவருவது குறிப்பிடத்தக்கது. அதனால் இங்கு வந்து மிளகு பூஜை செய்தால் தீர்வு கிடைக்கும் என்று நம்பப்படுகிறது. இத்துடன் கடந்த 14 வருடங்களாக காள பைரவர் பூஜை அஷ்டமி, தேய்பிறையில் மாதந்தோறும் விமரிசையாக நடைபெற்று வருகிறது.

**இரண்டு   நந்தி:-**

இந்தக் கோவில் இரண்டு நந்திகள் உள்ளன. முதலில் உள்ள நந்திக்கு கொம்பு, காது இல்லை. இதற்கு ஒரு கதை கூறப்படுகிறது. கோவில் நந்தி அருகிலுள்ள விவசாய நிலத்துக்கு சென்று மேய்ந்துள்ளது. ஆத்திரமடைந்த விவசாயி இடுப்பில் இருந்த கத்தியை எடுத்து நந்தியின் காதையும், கொம்பையும் வெட்டியுள்ளார். மறுநாள் கோவிலுக்கு வந்து பார்த்தபோது, கற்சிலையான நந்தியின் காதில் இருந்து ரத்தம் வழிந்துள்ளது. அதிர்ச்சியடைந்த விவசாயி, தனது தோட்டத்துக்கு வந்தது நந்தி என அறிந்ததும், தன் தவறை உணர்ந்து மன்னிப்பு கேட்டு வணங்கியுள்ளார். பின்னர் தவறுக்கு பிராயச்சித்தமாக, மற்றொரு நந்தி சிலை செய்து அதனை ஆலயத்தில் பிரதிஷ்டை செய்துள்ளார். பழைய நந்தியை அகற்ற முயற்சித்து முடியாமல் போனதால், அந்தப் பணியை கைவிட்டு விட்டனர். மறுநாள் வந்து பார்த்தபோது, பழைய நந்தி முன்பும், புதிய நந்தி பின்னாலும் மாறி இருந்துள்ளது. சிவன் கனவில் வந்து, உறுப்புகள் இல்லை என்றாலும், அதுவும் உயிர்தான் எனவும், பழைய நந்தி முன்னால் இருக்க வேண்டும்; மற்றது பின்னால்தான் என கூறியுள்ளார். அதன் அடிப்படையில், இன்றும் இரண்டு நந்திகள் அமைந்துள்ளன. பிரதோஷ காலங்களில், இரண்டு சிலைக்கும் பூஜை நடத்தப்படுகிறது.

மிளகீசன்:-

சுக்ரீஸ்வரர் கோயில், ராமாயண காப்பியத்துடன் தொடர்புடையது, வானர அரசன் சுக்ரீவன் தனது அண்ணனைக் கொன்றதற்குப் பிராயச்சித்தம் செய்ய இங்குள்ள ஈசனை லிங்கம் அமைத்து வழிபட்டதால் இக்கோவில் சுக்ரீஸ்வரர் என பெயர் பெற்றது, இந்த சிற்பத்தில் சுக்ரீவன் ஈசனை பூஜை செய்வதை காணலாம். உடலில் 'மரு' உள்ளவர்கள் இப்பெருமானுக்கு மிளகைப் படைத்து, அதில் சிறிதளவு மிளகை எடுத்து வந்து 8 நாள்களுக்கு உணவில் சேர்த்துச் சாப்பிட்டால் 'மரு'க்கள் மறைந்துவிடும். இவ் ஈசனை மக்கள் 'மிளகீசன்' என்றும் அழைக்கின்றனர். கல்வெட்டில் இவ்விறைவன், 'ஆளுடைய பிள்ளை' என்று குறிக்கப்படுகிறார்.

**கோயில் குறித்த சிறப்பம்சங்கள்:**

1) ஆவுடைநாயகி அம்மனுக்கென தனி கோவிலும், சிவனுக்கென தனி கோயிலும் அமைந்துள்ளது. அம்மனுக்கான தனி கோவில், வலது புறம் இருப்பதால் பாண்டியர்களின் பணி என்பது தெரிகின்றது.

2) உத்தராயணமும் தட்சிணாயணமும் சந்திக்கும் - வேளையில் சூரிய ஒளி சுவாமி மீது படுகிறது.

3) கோயிலின் விமானம் சோழர்களின் பணியை காட்டுகின்றது.

4) ஒன்றின் பின் ஒன்றாக இரண்டு நந்திகள் உள்ள கோயில். இக்கோயிலில் உள்ள ஒரு நந்திக்கு இரண்டு காதுகளும் அறுபட்டுள்ளன. (இது தலவரலாறு தொடர்புடையது.)

5) ஐந்து லிங்கங்கள் உள்ள கோயில், மூன்று வெளியில், ஒன்று மூலவர், மற்றொன்று கண்ணுக்கு தெரியாதது.

6) கொங்கு பகுதியில் சிவன் கோயில்களில் இருக்கும் "தீப ஸ்தம்பம்" இந்த கோயிலில் கிடையாது.கோயில் கிழக்கே பார்த்து இருந்தாலும், உள்ளே செல்லும் படிகள் தெற்கு பார்த்து அமைந்துள்ளது.

7) கொங்கு நாட்டில் உள்ள நான்கு "சிற்ப ஸ்தலங்களில்" இந்த சுக்ரீஸ்வரர் கோயிலும் ஒன்று.

8) வியாபாரம் செய்ய கடல் வழியாக இந்தியாவின் மேற்கு பகுதிக்கு வந்த கிரேக்கர்களும், ரோமானியர்களும், கப்பலில் இருந்து இறங்கி பின் சாலை வழியாக அன்றைய சோழ நகருக்கு செல்ல பயன்படுத்திய வழி.

9) பண்டைய கொங்கு வர்தக வழியில் அமைந்திருந்த இந்த கோயிலின் (Kongu Trade Route) சிவனை "குரக்குதை நாயனார்" என்று வழிபட்டுள்ளனர்.

10) பாண்டியர்களால் கட்டப்பட்ட கோயிலாக இருப்பினும், இங்குள்ள சில சிற்பங்கள்,கி.பி. ஐந்தாம் நூற்றாண்டிலேயே, இந்த இடத்தில் சிவ லிங்கத்தை வைத்து அன்றைய பழங்குடி மக்கள் பூஜைகள் மேற்கொண்டு வந்துள்ளது தெரிகின்றது.

இவ்வளவு கலை அம்சத்துடனும், வரலாற்று பின்னணியுடனும் இருக்கும் இந்த கோயில் குறித்த தகவலை உங்களை நண்பர்களுக்கும் தெரியப்படுத்துங்கள்.கோவை, திருப்பூர் செல்லும் போது கட்டாயம் சென்று காண வேண்டிய மிக அழகான கோயில்.

நான்கு வருடங்களுக்கு முன்பு திருப்பூர் மாவட்ட நிர்வாகமும், சுற்றாலத்துறையும் இணைத்து பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக இந்த கோயில் சிறப்பம்சம் அடங்கிய துண்டு பிரசுரங்களை விநியோகித்தும் எந்த பலனும் இல்லை.

சுற்றாலத்துறையின் போதுமான விளம்பர நடவடிக்கைகள் இல்லாததால், வேலைப்பாடுகள் நிறைந்த மிக அழகான கோயிலாக இருப்பினும், இந்த கலைப் பொக்கிஷம் குறித்த தகவல் உள்ளூர் பக்தர்களுக்கோ, வெளிநாட்டு கலை ஆர்வலர்களுக்கோ, இது போன்ற ஒரு கோயில் இருப்பதே சரியாக தெரியாது.

ஆகையால் நம்மால் முடிந்த அளவு விழிப்புணர்வை ஏற்படுத்துவோம்.
https://youtube.com/channel/UCzyuoCjvB15KPJjIL9HGNHA

நீரில் மிதக்கும் விஷ்னு

1300 வருடங்களாக நீரில் மிதக்கும் விஷ்ணு சிலை... அறிவியலை மிஞ்சிய அதிசயம்..!!.

பொதுவாக பாற்கடலில் பள்ளிகொண்டிருப்பது போன்ற விஷ்ணு சிலைகளையும் படங்களையும் நாம் பார்த்திருப்போம். அனால் மனிதர்களை போல் மல்லாக்க படுத்துக்கொண்டு 13 நூற்றாண்டுகளாக நீரில் மிதந்துகொண்டிருக்கும் ஒரு அதிசய பெருமாள் சிலையை பற்றி இந்த பதிவில் பார்ப்போம் வாருங்கள்.

நேபால் தலைநகர் காட்மாண்டுவில் இருந்து கிட்டத்தட்ட 9 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது புத்தானிகந்தா கோவில். இந்த கோவிலில் உள்ள விஷ்ணு சிலை ஆதிசேஷன் மேல் படுத்துக்கொண்டிருப்பது போல் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இதில் என்ன ஆச்சர்யம் என்றால்... கிட்டதட்ட 14 அடி உயரத்தில் மிகவும் பிரமாண்டமாக ஒரே கல்லால் செய்யப்பட்டுள்ள இந்த சிலை எப்படி இவளவு வருடங்களாக நீரில் மிதந்தபடியே உள்ளது.. என்பது இன்றுவரை ஆராய்ச்சியாளர்களுக்கு புரியாத புதிராகவே உள்ளது.

7 ஆம் நூற்றாண்டில் இந்த பகுதியை ஆண்ட விஷ்ணு குப்தா என்ற மன்னன் இந்த சிலையை நிறுவியதாக வரலாறு கூறுகிறது. இந்த சிலை மிதந்தபடியே இருந்தாலும் இதற்கான அர்ச்சனைகளும் அபிஷேகங்களும் தினமும் நடந்தவண்ணமே உள்ளன.

நீரில் மிதக்கும் இந்த விஷ்ணுவின் அருளை பெற.. பக்தர்கள் எப்போதும் இங்கு வந்த வன்னேமே உள்ளனர்..!!

Wednesday, May 26, 2021

அழகிய சிவாலயம்

கும்பகோணம் - மன்னார்குடி சாலையில் உள்ள நீடாமங்கலத்தில் இருந்து கொரடாச்சேரி செல்லும் சாலையில் சென்று பிரிகிறது இந்த அரையூர் எனப்படும் அரவூர்.

பசுமை போர்த்திய சின்னசிறு கிராமம் , ஓர் அழகிய சிவாலயம் பத்து சென்ட் நிலப்பரப்பில் கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. கார்கோடகன் எனும் அரவம் வழிபட்டதால் அரவூர் என வழங்கப்பட்டது. தற்போது அரையூர் என அழைக்கின்றனர். 

பல ஆண்டு காலமாக குடமுழுக்கு காணாமல் சிதிலமடைந்து வருகிறது.
கிழக்கு நோக்கிய சிவாலயம், கோயிலின் எதிரில் ஓர் நீள் சதுர வடிவ குளம் உள்ளது கிழக்கில் ஓர் வாசல் உள்ளதெனினும் தெற்கு வாசலே பிரதானமாக உள்ளது. கருவறை பிரஸ்தரம் வரை கருங்கல் கொண்டும் விமான பாகம் செங்கல் கொண்டும் சுதை கொண்டும் அழகூட்டப்பட்டுள்ளன. தென்மேற்கில் விநாயகர், முருகன் ஆகியோர் தனி சிற்றாலயம் கொண்டுள்ளனர். நந்திக்கு சிறு கோபுரத்துடன் கூடிய மண்டபமும் உள்ளது.
இறைவன் இறைவி இருவரது கருவறையையும் ஓர் கருங்கல் தூண்கள் கொண்டும் செங்கல் சுவர் கொண்டும் கட்டப்பட்ட மண்டபம்?? அதன் கூரை??? விதானம் முழுவதும் இடிந்துவிட தகர தகடுகள் கொண்டு மூடியுள்ளனர்.

கோயில் எள்ளளவு தான், சிறப்புகளோ வானளவு. ஆம் மூர்த்தி, தலம், தீர்த்தம் என மூன்று சிறப்புக்கள் கொண்டது இக்கோயில். 
அஸ்தினாபுரத்தினை ஆண்ட யுதிஷ்டிரனுக்கு பின் ஆண்ட பரீக்ஷத் மகாராஜாவிற்கு பாம்பினால் அழிவு ஏற்ப்பட்டது. அதனால் அவரது மகன் ஜனமேஜெயன் பின்னர் காலசர்ப்ப யாகம் செய்து உலகில் உள்ள எல்லா பாம்புகளும் அதில் வீழ்ந்து இறக்கும் படி செய்தான். அதில் தப்பிக்க கார்கோடகன் இந்த தலத்தில் தீர்த்தம் ஏற்படுத்தி தவம் செய்து இனி எவரையும் தீண்டமாட்டேன் என இறைவனிடம் வாக்கு கொடுத்த தலம் இது. அது முதல் இந்த ஊரில் எவரும் அரவம் தீண்டி இறந்ததில்லை.
அது மட்டுமா இறைவனே இனி இத்தலம் வந்து எனை வழிபடுவோர்க்கு நாக தோஷம், ராகு கேது தோஷமும் ஏற்படாது காப்பேன் என்கிறார். பாம்பை அடித்து கொன்றவர்கள் ஒருமுறையேனும் இத்தல இறைவனை வணங்கி செயலுக்கு வருந்தினால் அவரது சந்ததியினரை இத்தோஷம் தொடராது.

சுந்தர மூர்த்தி சுவாமிகள் இத்தலம் வந்து சோடச உபசார பூசை செய்து நற்பலன்கள் பெற்றதால் இந்த சுவாமியினை ஆராதிப்போர் சகல நன்மைகளும் பெறுவர் என்பது திண்ணம்.
இவ்வூரில் இருந்த பெருமாள் ஆலயம் சிதைவுற அங்கிருந்த பெருமாள் சிலைகளும் அனுமன் சிலையும் இந்த சிவாலயத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளன.

இறைவன் கார்கோடகேஸ்வரர் கிழக்கு நோக்கியும் இறைவி மங்களாம்பிகை தெற்கு நோக்கியும் உள்ளனர்.  இறைவனின் நேர் எதிரில் மண்டபத்தின் வெளியே சிறிய நந்தி மண்டபம் உள்ளது.  கருவறை கோட்டத்தில் விநாயகர், தென்முகன், லிங்கோத்பவர் இருபுறமும் மகாவிஷ்ணுவும், பிரம்மனும் கைகூப்பிய நிலையில் உள்ளார்கள். வடக்கில் பிரம்மனும், துர்க்கையும் 
தென்மேற்கில் சிற்றாலயத்தில் விநாயகர்  வடமேற்கில் முருகன் வள்ளி தெய்வானையுடன் உள்ளார். 
இவ்வூரில் ஹோமகுளம் உள்ளது இந்த குளமே ஜனமே ஜெயன் ஹோமகுண்டம் ஏற்படுத்தி ஹோமம் செய்த இடம் எனப்படுகிறது. ஈசான திக்கில் எல்லை தெய்வம் பாம்புலியம்மன் கோயிலுள்ளது.

மராட்டிய மன்னர்களால் முந்நூறு வருடங்களின் முன்னர் திருப்பணிகள் செய்யப்பட்டிருக்கலாம் என தெரிகிறது.

கோயில் தனியார் வசம் உள்ளது என்பதால் பல்லாண்டு காலமாக பராமரிப்பென்பதே இல்லாமல் விதை செடியாகி, செடி மரமாகி, மரம் விருட்சமாகி , கோயில் வளாகம் முழுதும் சிதிலம் சிதைவு, சீரழிவு என முன்னோரின் உழைப்பும் செல்வமும் இன்று வீணாகி நிற்கிறது.   

திருப்பணி செய்ய விரும்புவோரையும் அந்த தனி நபர்கள் அனுமதிப்பதில்லை. 

மரத்தை கட்டிடம் தாங்குகிறதா , கட்டிடம் மரத்தை தாங்குகிறதா நெருங்கவே அச்சப்படும் நிலையிலான கோயிலுக்கும் இறைவனுக்கும் சேவை செய்வதே தன் கடன் என்றிருக்கும் குருக்களையும் அவரிடம் நீர் வாங்கி ஏகாந்தமாய் காலம் தள்ளும் கார்கோடகேஸ்வரரரையும் நீங்கள் காண வேண்டாமா?? 

குருக்களின் வீடு கோயில் வாயிலிலே உள்ள பச்சை வண்ணமடித்த வீடு தான். கோயில் பாழடைந்தாலும் இறைவனை நான்கு வேளையும் விடாமல் பூசை செய்கிறார். . எனினும் இவரின் உழைப்புக்கும் நம்பிக்கைக்கும் கை கொடுக்கப்போவது யார்?? 
 
உடனடி தேவைகள்  மூன்று
1.உழவார பணிகள்  
2.திருமுறை முற்றோதல் 
3.உங்கள் வருகை 

கோயில் குருக்கள்- திரு. சந்தானம் 
உழவார பணிக்கும் தனியாரையே நீங்கள் சந்தித்து அனுமதி வாங்க வேண்டும்,  எனினும் உங்கள் உதவிக்காகவே கோயில் குருக்கள் எண் கொடுக்கப்பட்டுள்ளது.  

#வாருங்கள்கிராமசிவாலயம்செல்வோம்.

கபிலமலை

#பாலசுப்பிரமணியசுவாமி_கபிலர்மலை

🌺  கபிலர் என்னும் புலவர் செல்வக் கடுங்கோவாழியாதன் எனும் சேர #மன்னனிடம் நூறு ஆயிரம் காணம் பொன் மற்றும் நாடும் பெற்ற அந்தணர், இம்மலையில் தங்கி பெரும வேள்வி, தவம் செய்து வாழ்ந்ததாக சான்றுகள் தெரிவிக்கின்றன. 

🌺 சேர மன்னன் செல்வக் கடுங்கோவாழியாதன் இக்குன்றின் மேல் ஏறி நின்று கபிர் என்னும் #புலவருக்கு தானம் செய்து கொடுத்த நாட்டை காட்டியதாக கூறப்படுகிறது. 

🌺 அதற்கு ஆதாரமாக ஆறுநட்டான் மலையில் உள்ள கடுங்கோவாழியாதன் அமைத்த கல்வெட்டு மூலம் அறிய முடிகிறது. இக்கல்வெட்டு மூலம் #பதிற்றுப்பத்து என்னும் சங்க நூலில் 7 ஆம் பாட்டின் இறுதியில் கபிலர் பாடிய பத்து பாடல்களை கேட்டு மகிழ்ந்தார். 

🌺 அதற்காக நூறு ஆயிரம் காணம் பொன் கொடுத்து, இக்குன்றின் மேல் ஏறி நின்று தன் கண்ணில் கண்ட நாடெல்லாம் காட்டி கொடுத்தான் எனவும் சான்றுகள் தெரிவிக்கிறது. 

🌺 இம்மலை இயற்கையான செந்நிறம் கொண்டதாக உள்ளது. கபிலம் - செந்நிறம். அதற்கு #பரிபாடல் 3ம் பாட்டில் பதினொரு உருத்திரைப் - பாதினொரு கபிலர் என குறப்பிடப்படுகிறது. 

🌺 கபிர்மலையை அடுத்து வடக்கரையாற்றில் வாழ்ந்த அல்லாளன் என்ற திருமலையினைய நாயகன், விளெரசன் கலியுக சகாப்தம் 5560ல் வாழ்ந்து வந்ததாக கூறப்படுகிறது. 

🌺 அவர் திருச்செங்கோடு வேலவருக்குப் பல #திருப்பணிகளை செய்தவர். திருச்செங்கோடு திருப்பணி மாலையில் பாடப் பெற்றவர். மதுரை திருமலை நாயக்கரிடம் அதிகாரம் பெற்றவர். 

🌺 அவர் கபிலர்மலையில் குழந்தை குமாரரை #குலதெய்வமாகக் கொண்டு பல திருப்பணிகளை செய்ததாக கூறப்படுகிறது. அவரை பற்றிய பாடல் ஒன்று கபிலமலை கோவையில் 77ம் செய்யுளில் குறிப்பிடப்பட்டுள்ளது.

🌺 பிள்ளை பெருமான் சிறை மீட்டான் கபிராயர் என்பவர் கபிலைமலைக் கோவை என்ற #அகப்பெருமாள் இலக்கிய நூலை சுவைமிகப் பாடியுள்ளார். அவரது காலம் கலியுக சகாப்தம் 4740. 

🌺 தற்போது கலியுக சகாப்தம் 5095 ஆகும். ஏறத்தாழ 350 ஆண்டுகளுக்கு முன் அவர் வாழ்ந்தவர். பாகை எனும் நகரத்தில் அவர் பிறந்தார். அவர் கபிலைமலை குழந்தை குமாரரைக் குலதெய்வமாக கொண்டவர். 

🌺 கபிலைமலைக் கோவை இந்நூல் காப்பு செய்யும் முதலாக 105 செய்யுளை கொண்டது. இந்நூலின் #பாட்டுடை தலைவனாகிய முருகக் கடவுளை ஞானக் குழந்தை குமாரர் என்றும் இவர் பூமியின் மேல் முற்றும் துறந்த முனிவர்களாலும், தேவர்களாலும் அரசர்களாலும் துதிக்கப்படுபவராவர். 

🌺 நாமக்கல்லில் இருந்து பரமத்தி செல்லும் வழியாக ஜேடர்பாளையம் செல்லும் சாலையில் 28கி.மீ தூரத்தில் உள்ளது.

சூரியகோடிஸ்வரர்

கீழச் சூரிய மூலை என்கிற சூரியகோடீஸ்வரர் திருத்தலம். 
  
சூரியனுக்கு மூலாதார சக்தியை கொடுத்ததால் சூரிய மூலை என இத்தலம் அழைக்கப்பட்டது. சூரியனார் கோவிலில் தன் குஷ்ட நோய் நீங்கப் பெற்ற சூரியன், இத்தலத்தில் தன் முழு சக்தியையும் பெற்றான்.
 
அனைத்து லோகங்களில் உள்ளவர்கள் பிரதோ‌ஷ வழிபாட்டில் கலந்து கொண்டு பயனடைவதைக் கண்ட சூரிய பகவானுக்கு, தன்னால் பிரதோ‌ஷ வழிபாட்டில் கலந்துகொள்ள முடியவில்லையே என்ற ஏக்கம் இருந்தது.

பிரதோ‌ஷ நேரம் என்பது தினசரி மாலைப் பொழுதுதானே! சூரியன் மறையும் நேரம் அது என்பதால் சூரியனால் வழிபாட்டில் எப்படி கலந்து கொள்ள முடியும்? அந்த நேரம் தன்னுடைய பணி நேரம் என்பதால் அந்த வழிபாட்டில் தன்னால் நிரந்தரமாக எப்போதுமே கலந்துகொள்ள முடியாமல் போய்விடுமே என எண்ணி வேதனை அடைந்தார்.

தன் வேதனையையும், வருத்தத்தையும் யாக்ஞவல்கிய மாமுனியிடம் எடுத்துரைத்தார் சூரிய பகவான். இந்த மாமுனி சூரியபகவானிடமிருந்து வேதங்களைக் கற்றவர்.

சூரிய பகவானின் வருத்தத்தைக் கேட்ட மாமுனி, அவருக்கு ஆறுதல் கூறினார். பின், தான் தினந்தோறும் வழிபடுகின்ற கீழச் சூரிய மூலையில் உள்ள சூரிய கோடிப் பிரகாசரிடம் தன் சூரியனின் கவலையை எடுத்துரைத்து, தினந்தோறும் அவரை வணங்கினார். தன் குருவின் வேதனையை தீர்த்து வைக்கும்படி வேண்டினார்.

பின், சூரிய பகவானிடமிருந்து தான் கற்றுக்கொண்ட வேதங்கள் அனைத்தையும் தட்சணையாக, வேதாக்கனி யோகப் பாஸ்கரச் சக்கர வடிவில் அவற்றின் பலன்களைப் பொறித்து சூரிய கோடீஸ்வரருடைய பாதங்களில் அர்ப் பணித்தார். மாமுனி சமர்ப்பித்த வேத மந்திர சக்திகளெல்லாம் சூரிய கோடீஸ்வரருடைய திருவடிகளில் ஓர் அற்புத விருட்சமாக வளர்ந்தது. அதுவே இலுப்பை மரம். இந்தக் கோவிலின்  தல விருட்சமும் இதுதான்.

இலுப்பை மரத்தில் உருவான இலுப்பைக் கொட்டையிலிருந்து எடுக்கப்பட்ட இலுப்பை எண்ணெயால் தீபம் ஏற்றத் தொடங்கினார் மாமுனி. அந்த பகுதி இலுப்ப மரக் காடாக மாறியது. தினமும் அந்த மரங்களிலிருந்து கிடைக்கும் இலுப்பை எண்ணெயால், கோடி அகல் தீபங்கள் ஏற்றி சூரிய கோடீஸ்வரரை வழிபடத் தொடங்கினார். தினமும் மாலையில் சந்தியா வேளையில் இந்த வழிபாடு நடந்தது. அந்த நேரம் பிரதோ‌ஷ வழிபாட்டு நேரம் அல்லவா?

மறுநாள் காலையில் சூரிய உதயத்தின் போது சூரிய பகவான், இந்த இலுப்பை எண்ணெய் தீபங்களைத் தரிசித்து பிரதோ‌ஷ வழிபாட்டின் பலன் அனைத்தையும் பெற்றார் என்பது புராண வரலாறு. இந்த புராண வரலாற்றுகுரிய தலமே கீழச் சூரிய மூலை.

ஆலய அமைப்பு :

இங்குள்ள ஆலயத்தில் அருள்பாலிக்கும் இறைவன் பெயர் சூரியகோடீஸ்வரர். இறைவியின் பெயர் பவளக்கொடி. இறைவனின் சன்னிதி கிழக்கு நோக்கியும், அம்மனின் சன்னிதி தெற்கு நோக்கியும் அமைந்துள்ளது. தெற்கு கோட்டத்தில் ஆனந்த தட்சிணாமூர்த்தி புன்னகைத்த நிலையில் காட்சி தருகிறார். வெளிப் பிரகாரத்தின் தென் மூலையில் சக்தி விநாயகரும், மேல் பிரகாரத்தில் வள்ளி தெய்வானையுடன் முருகனும், தென் மூலையில் நாகலிங்கமும், வடக்குப் பிரகாரத்தில் துர்க்கை மற்றும் சண்டிகேசுவரர் திருமேனிகளும் உள்ளன.

வடமேற்கு மூலையில் நவக்கிரகங்கள் தங்கள் வாகனங்களுடன் தனிமண்டபத்தில் காட்சி தருகிறார்கள். உள்ளே, சுவாமி மண்டபத்தின் வடகிழக்கு மூலையில் பைரவர் மற்றும் சூரியன் திருமேனிகள் உள்ளன. இங்குள்ள மூலவரை காலை முதல் மாலை வரை சூரிய பகவான் தனது பொற்கதிர்களால் ஆராதனை செய்வதாக ஐதீகம். அதற்கு ஏற்ப காலை சூரிய உதயம் முதல், மாலை சூரிய அஸ்தமனம் வரை மூலவரின் நிழல் சுவற்றில் தெரியும். மற்ற நேரங்களில் தெரிவதில்லை.

பல ஆலயங்களில் கருவறை இறைவன் மீது ஒரு ஆண்டில் சில நாட்கள் மட்டுமே சூரிய ஒளி படரும். இப்படி ஒளிபடுவதை சூரியன் செய்யும் சிவபூஜை எனக் கூறுவர். ஆனால், இந்த ஆலய இறைவன் மீது தினந்தினம் கதிரவனின் பொற்கதிர்கள் சில நிமிடங்களாவது படர்ந்து செல்வது எங்கும் காணாத அற்புதம் என்கின்றனர் பக்தர்கள்.

பைரவர் :

இத்தல பைரவர் சொர்ண பைரவர் என அழைக்கப்படு கிறார். இந்த பைரவருக்கு தீபாராதனை காட்டும்போது அவரது கண்டத்தில் சன்னமாக பவளமணி அளவில் சிவப்பு ஒளி வெளிப்படுவதும், அது மெல்ல  அசைவதும் நம்மை மெய் சிலிர்க்க வைக்கும் காட்சி என கூறுகின்றனர் பக்தர்கள்.

இந்த பைரவர் தன் கழுத்து பவளமணியின் ஏழு ஒளிக் கிரகணங்களின் மூலம் அனைத்து கோடி சூரிய, சந்திர மூர்த்திகளின் ஒளிக் கிரகணங்களால் ஏற்படும் தோ‌ஷங்களையும், பிணிகளையும் நிவர்த்தி செய்கிறார் என்பது பக்தர்களின் நம்பிக்கை. தவிர பணத்தட்டுபாடு, ஏழ்மை வறுமையை போக்கக் கூடியவர் இந்த பைரவர் என்ற நம்பிக்கையும் உண்டு.

இங்குள்ள துர்க்கையின் ஒரு பாதத்தில் மட்டும் மெட்டி உள்ளது. இந்த துர்க்கை தனது ஒரு காலை முன்நோக்கி வைத்துள்ளாள்.  தன்னை தரிசிக்க வரும் பக்தர்களை அம்மன் எழுந்து வந்து வரவேற்பதாக இதன் பொருள் என கோவில் அர்ச்சகர் விளக்குகிறார்.

சூரிய தோ‌ஷம் உள்ளவர்கள் இங்குள்ள இறைவனுக்கு இளநீர் அபிஷேகம் செய்தால் தோ‌ஷம் நீங்கும். நிம்மதி கிடைக்கும். ஒரு கண் பார்வை, மாறுகண் பார்வை, மங்கலான கண் பார்வை, பார்வை இழப்பு போன்றவற்றால்  பாதிக்கப்பட்டவர்கள் இத் தலத்திற்கு வந்து சூரிய கோடீஸ்வரரை வழிபட்டால் பலன் பெறுவது கண்கூடான நிஜம். இக்கோவிலில் அன்னதானம் செய்தால் நம் முன்னோர்களுக்கு நாம் செய்த பாவங்களும், அதனால் ஏற்பட்ட தோ‌ஷங்களும் விலகும்.

இந்த ஆலயம் காலை 6 மணி முதல் பகல் 12 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 7 மணி வரையிலும் திறந் திருக்கும். சூரிய கோடீஸ்வரருக்கு பிரதோ‌ஷ நேரத்தில் அகல் விளக்கு ஏற்றி வணங்கினால், கண் சம்பந்தமான அனைத்து வியாதிகளும் விலகும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

அகத்திய முனிவர் :

சுக்ராச்சாரியார், தான் இழந்த கண் பார்வையை மீட்க பல தலங்களுக்கு சென்று பூஜைகள் செய்தார். அகத்திய முனிவர் முன்னிலையில் இத்தலத்தில் ஹிருதய மந்திர ஹோம பூஜ  களைச் செய்தார். சூரிய கோடீஸ்வரரை வழிபட்டார். இழந்த பார்வையை மீண்டும் பெற்றார் என்கிறது தல வரலாறு. ராமபிரானுக்கு அகத்திய முனியவர் ஹிருதய மந்திரத்தின் பல சுலோகங்களையும் இலங்கை போர்க்களத்தில் உபதேசித்தார். அதன் பின்னரே ராமபிரான் சீதையை மீட்டதாக கூறப்படு    கிறது. ராமனின் வேண்டுகோளுக்கு இணங்கி சாந்தமான சுபஹோரை காலங்களில் ஆதித்ய ஹிருதய மந்திரங்கள் பலவற்றை பல நேரங்களில் ராமனுக்கு உபதேசித்து விளக்கினார். இப்படி மந்திர  உபதேசங்களை ராமனுக்கு நிகழ்த்திய தலங்களில் கீழச் சூரிய மூலையும் ஒன்று..

சூரியன் சக்தி பெற்ற கதை :

தட்சன், தான் நடத்திய யாகத்திற்கு அனைவரையும் அழைத்தான். ஆனால் தான் என்ற அகந்தை தலைக்கு ஏறியதால் சிவபெருமானை அழைக்கவில்லை. இதனால் கோபம் கொண்டார் சிவபெருமான். இந்த யாகத்திற்கு சந்திரனும் சூரியனும் முதலில் சென்று அமர்ந்தனர்.  எனவே இருவரும் தங்கள் ஒளியை இழந்தனர்.

சூரியன் ஒளியை இழந்ததால் அண்ட சராசரங்கள் இருளில் மூழ்கின. தட்சன் நடத்திய யாகத்தில் தான் கலந்து கொண்டது எவ்வளவு பெரிய தவறு என உணர்ந்தான் சூரியன். ‘எனக்குள் ஈசன் ஒளிர வேண்டுமானால் நான் என்ன செய்ய வேண்டும்?’ எனக்கேட்டு குருவின் முன் கலங்கி நின்றான்.

குரு இலுப்பை மரங்கள் நிறைந்த வனத்தைக் காட்டினார். சூரியன் அந்த வனத்தை அடைந்ததும் தன்னால் ஓர் பேரொளி படர்வதை உணர்ந்தான். கோடி சூரிய பிரகாசராக விளங்கும் இறைவனை தினந்தினம் பூஜித்தான். இழந்த தன் முழு சக்தியையும் பெற்றான். எத்தனை யுகமானாலும் தன்னுடைய முதல் கதிரை இத்தலத்து இறைவனின் மீது செலுத்தி வணங்கி விட்டுதான் பிரபஞ்சத்தின் மீது தன் கதிர்களை பாய்சுவதாக புராணத் தகவல் கூறுகிறது.

சூரியனுக்கு மூலாதார சக்தியை கொடுத்ததால் சூரிய மூலை என இத்தலம் அழைக்கப்பட்டது. சூரியனார் கோவிலில் தன் குஷ்ட நோய் நீங்கப் பெற்ற சூரியன், இத்தலத்தில் தன் முழு சக்தியையும் பெற்றான். எனவே அதை வேறுபடுத்தி காட்டவே இத்தலம் கீழச் சூரிய மூலை என அழைக்கப்படுகிறது.

இருப்பிடம் :

தஞ்சை மாவட்டம் கும்பகோணத்திற்கு கிழக்கே 15 கி.மீ. தொலைவில் உள்ளது இக்கோவில். கும்பகோணத்திலிருந்து கஞ்சனூர் வழியாக திருலோகி செல்லும் பேருந்தில் சென்றால் கோவிலருகே இறங்கிக் கொள்ளலாம்.

காஞ்சி பெரியவா

நடமாடும் தெய்வம் காஞ்சி மகா பெரியவா சரணம் நினைத்தாலே கிடைக்கும் ஸ்ரீ மஹா பெரியவா அனுகிரஹம் ஜெய ஜெய சங்கர ஹர ஹர சங்கர "மாம்பூக்கள் (மாமரம்) உதிர்வதனால் ,மாங்காய் காய்ப்பதே இல்லை"-ஒரு விவசாய இளைஞன் பெரியவாளிடம்.

(மண்டூக்ய உபநிஷத்தில் சந்தேகம் கேட்பவர்களும் வருவார்கள்; மாமரம் வளர்ப்பு பற்றி கேட்பவர்களும் வருவார்கள் மாமரம் பற்றி எளிய.விளக்கமளித்த-

கல்லூரிப் பட்டம் பெறாத, பெரிய விவசாய நிபுணரான நம். பெரியவா!

சொன்னவர்; ஓர் அணுக்கத் தொண்டர்.
தொகுப்பாளர்;டி.எஸ்.கோதண்டராம சர்மா
தட்டச்சு;வரகூரான் நாராயணன்.
.
மாந்தோட்டம் வைத்திருக்கும் விவசாய இளைஞன் ஒருவன் பெரியவாளிடம் வந்தான்.

"மாஞ்செடி நட்டு வளர்க்கிறேன்.பூக்கிறது. உதிர்ந்து போய்விடுகிறது; காய்ப்பதே இல்லை" என்று வருத்தத்துடன் கூறினான்.

பெரியவாளிடம் மண்டூக்ய உபநிஷத்தில் சந்தேகம் கேட்பவர்களும் வருவார்கள்; மாமரம் வளர்ப்பு பற்றி கேட்பவர்களும் வருவார்கள்.

பெரியவாள், இரு தரப்பினரையும் சமமாகப் பார்த்து அவரவர்களுக்கு உரிய விதத்தில் பதில் சொல்லுவார்கள்.

"காய்க்காத மாமரத்தின் பக்கத்தில் இன்னும் சில மரங்கன்றுகளை நடு. அந்தக் கன்றுகள் வளர்ந்து பூக்கத் தொடங்கியதும், எல்லா மரங்களும் காய்க்க ஆரம்பிக்கும்" என்றார்கள் ,பெரியவாள்.

அப்போது விவசாயத்துறை அதிகாரி ஒருவர் அங்கே இருந்தார்.பெரியவாளின் அறிவுரைக் கேட்டு ஆச்சர்யப்பட்டார். அவர் சொன்னார்.

"சில மாமரங்களில் பெண் பூ நிறைய இருக்கும். ஆண் பூ அதிகம் இருக்காது. வேறு சில மரங்களில் ஆண் பூ நிறைய இருக்கும். பெண் பூ குறைவாக இருக்கும். மகரந்தைச் சேர்க்கை ஏற்படாமல் பூக்கள் கருகிப் போய் உதிர்ந்துவிடும். பல மரங்கள் இருந்தால் இந்தக் குறையினால் பாதிப்பு ஏற்படாது. தேனிக்கள் எல்லா மரங்களையும் மொய்க்கும். மகரந்தசேர்க்கை ஏற்படும்.மரங்கள் காய்க்க ஆரம்பித்துவிடும்"

பெரியவா சரணம்

""குஞ்சிதபாதத்தை தரிசித்தால் நோய் அகலுவதுடன், மோட்சம் கிடைக்கும்.""

காஞ்சி மகாபெரியவர் சித்தி அடைவதற்கு ஒரு ஆண்டு முன்பாக, உடல் தளர்ச்சி பெற்ற நிலையில், ஒருநாள் மாலையில், தனது சிஷ்யர்களை அழைத்து தான் சிதம்பரம் சென்று ஸ்ரீ நடராஜப் பெருமானை தரிசிக்க வேண்டுமென்றும், அவருடைய பூஜையில் அணிவிக்கப்படும் ஸ்ரீ குஞ்சிதபாதத்தை தரிசிக்க வேண்டுமென்றும் கூறினார். (குஞ்சிதபாதம் என்பது பல வகை வேர்களால் உருவாக்கப்பட்டு, நடராஜப் பெருமானுக்கு அணிவிக்கப்படுவது) குஞ்சிதபாதத்தை தரிசித்தால் நோய் அகலுவதுடன், மோட்சம் கிடைக்கும்.

இதைக்கேட்ட சிஷ்யர்களுக்கு கலக்கம். பெரியவரை சிதம்பரத்திற்கு எவ்வாறு அழைத்துச் செல்வது என சிந்தித்தனர். என்ன ஆச்சரியம்! மறுநாள் காலை சூரிய உதயத்துக்கு முன்பாக, சிதம்பரம் நடராஜருக்கு பூஜை செய்யும் தீட்சிதர்கள் சிலர், காஞ்சிபுரம் சங்கரமடம் வந்து பெரியவரை தரிசித்து பிரசாதம் கொடுக்க அனுமதி கேட்டனர்.
சிஷ்யர்கள் வியப்பின் உச்சிக்கே போய்விட்டனர். மகாபெரியவரிடம் சென்று விபரத்தைக் கூறவும், அவருக்கும் பேரானந்தம். தீட்சிதர்களை அருகில் வருமாறு சைகையால் அழைத்து, பிரசாதத்தட்டிலிருந்து குஞ்சிதபாதத்தை எடுத்து, தலையில் வைத்துக்கொண்டார்.

குஞ்சிதபாதத்துடன் உள்ள மகாபெரியவரின் படம் நோய் தீர்க்கும் மருந்தாக கருதப்படுகிறது. “தேடி வந்த சிதம்பரம்’ படத்தை நாமும் வணங்கி நற்பலன் பெறுவோம்.

----------------------------------------------------------

பெரியவாள் வாழும் காலத்திலே நாமும் வழ்கிறோம் என்பதுதான் எத்தனை பெரிய பாக்யம் !
அவரைப் பார்ப்பதற்கும் அவரது அருள் வாக்கைக் கேட்பதற்கும் என்ன தவம் செய்தோமோ?
காமகோடி தரிசனம்
காணக்காணப் புண்ணியம்

"இது எப்படி மகா பெரியவாளுக்குத் தெரியும்?"

கல்லூரிப் பட்டம் பெறாத, பெரிய விவசாய
நிபுணர் பெரியவா.

திருமுறை

#தினம்_ஒரு_திருமுறை_சிந்தனை -20
சிவாயநம

நம்பியாரூரர் மலரடி போற்றி..

சிவபெருமான் கடன்பட்டிருக்கிறாராம்..
அது என்ன கடன் தெரியுமா!!!

வாருங்கள் பார்க்கலாம்..

அக்கையார் திலகவதியம்மையாரின் கடும் விண்ணப்பதிற்க்கும், அன்பிற்கும், திருவலகிட்டும், மெழுக்குமிட்டும், பூமாலை புனைந்தேத்தி அன்பு செலுத்தியமைக்கும்..
அவர்தம் உடன்பிறந்தவரை..
சூலைமடுத்து ஆட்கொண்டு அருள்செய்த வீரட்டானப் பெருமான் தான் அக்கடன் பட்டவராம்..சிவசிவ..

திலகவதியாரிடம் இருந்து 
திருவாளன் திருநீறு திலகவதியார் அளிப்ப பெருவாழ்வு வந்தது எனப் 
மருள்நீக்கியார் பணிந்து ஏற்று உருவார அணிந்தபின்..

கூற்றாயினவாறு என்று எடுத்தோதிய திருப்பதிகத்தில்..

அப்பனே வீரட்டானத்துறை அம்மானே..அடியேன் இதற்கு முன்னர் அடியேன் உமது அன்பினையும், பெருமையையும், அடியேற்கு எளிவந்த கருணையையும் உணராமல்..
உமது திருவடியினை பணிந்து வாழும் பெரும்புகழினை இழந்திருந்தேன்..

இறைவா உமது திருவடியின்கீழ் உன்புகழ்பாடி,உள்ளம் குழைந்து, திருமேனி விதிர்விதிர்த்து,அங்கம் தடுமாறி, நாக்குழைந்து பாடும் வாழ்வே அடியேனுக்கு புகழினை தரும்..
இத்தகைய வாழ்வினை அடியேன் என் அறியாமையினால் இழந்திருந்தேன்..

பின்னர் இக்கொடுமையான சூலைநோயை பெரும் கருணையினால் நீர் எனக்களித்து இக்கடையவனை ஆட்கொண்டீர்..

பின்னர் அடியேன் உமது எளிவந்த கருணையினால் உமக்கே அடிமையானேன்..

பெருமானே!!
கெடிலநதிக்கரையில் அமர்ந்துள்ள அதிகை வீரட்டானப் பெருமானே!! இந்த கொடுமையான சூலைநோய் அடியேனை வாட்டி வதைக்கிறது.. இந்நோயிலிருந்து உமது அடியவனான என்னை நீர்தான் காத்தருள வேண்டும்..

அழகிய வெண்மை நிறம்கொண்ட அன்னப்பறவையின் நடையை ஒத்த அதிகை வீரட்டானத்துறை இறைவனே,என் அம்மானே!!

எம்பெருமானே!!அதிகை ஈசனே!!
நீரே கதியென்று உமது திருவடியினை சரண் அடைந்தவர்களின் பொல்லா வினைகளை தீர்ப்பது 
தேவாதி தேவர்களுக்கும் தலையானவரே அது உமது கடனல்லவா..

அந்த கடனை தீர்த்தருளுங்கள்.. அடியேனை வதைக்கின்ற இந்த சூலையை போக்கியருளுங்கள் எம்பெருமானே..
என்று அப்பர் சுவாமிகள் தமது முதல் பதிகத்தில் பாடியருளியுள்ளார்..

நாம் இறைவனிடம் உண்மையான, வியாபாரம் இல்லாத பக்தி செலுத்தினால் பெருமான் நம்மை நாடிவந்து கடன்பட்டவர் எவ்வாறு அதனை செலுத்த முயல்வாரோ அது போல நம் வினைகளை போக்கி திருவருள் செய்வார்..

அப்பாடல்..

"முன்னம் அடியேன் அறியாமையினான்
முனிந்து என்னை நலிந்து முடக்கியிட

பின்னை அடியேன் உமக்கு ஆளும்பட்டேன்;

சுடுகின்றதுசூலை தவிர்த்துஅருளீர்;

தன்னை அடைந்தார் வினை தீர்ப்பதுஅன்றோ

தலைஆயவர்தம் கடன்ஆவதுதான்? 

அன்னம்நடையார் அதிகைக் கெடில
வீரட்டானத்து உறை அம்மானே!!!"

நான்காம் திருமுறை முதல்பதிகம் 4ம் பாடல்..

                           சிவாயநம

பெட்டப் பிணமென்று 
  பேரிட்டுக் - கட்டி
எடுங்களத்தா என்னாமுன் 
  ஏழைமட நெஞ்சே
நெடுங்களத்தான் பாதம் நினை.

நட்சதிர மரங்கள்




#உங்கள்_நட்சத்திர #கடவுள்_மரங்கள்_பாடல்கள்..!!
🙏🌿🌾🎋🙏🌿🌾🎋🙏🌿🌾🎋🙏🌿🌾
நமது நட்சத்திரத்திற்குரிய கடவுள் அதிதேவதை எதுவென அறிந்திருந்தால் நாம் தினமும் தொழுது வழிபட நலம் பெருகும் அல்லவா.!!🙏

இதோ உங்கள் நட்சத்திரத்திற்குரிய கடவுளர்கள் பற்றிய தகவல்!!🙏

இனி உங்கள் நட்சத்திரத்திற்குரிய கடவுளை வணங்கி சகல வளமும் நலமும் பெற்று வாழ்வாங்கு வாழ வாழ்த்துகிறேன்.!!🙏

1.    அஸ்வினி, மகம், மூலம் _     விநாயகர்

2.   பரணி , பூரம் , பூராடம் _        ரங்கநாதர்

3.   கிருத்திகை, உத்திரம், உத்திராடம்  _ ஆஞ்சநேயர்

4.   ரோஹிணி, அஸ்தம், திருவோணம் - சிவன்
    
5.   மிருகசீரிடம், சித்திரை, அவிட்டம்  -    துர்க்கை

6.   திருவாதிரை, சுவாதி, சதயம்    -    பைரவர்

7.   புனர்பூசம், விசாகம், பூரட்டாதி   -    ராகவேந்திரர்

8.   பூசம், அனுஷம், உத்திரட்டாதி   -    சிவன்

9.   ஆயில்யம், கேட்டை, ரேவதி    -    பெருமாள் !!

இனி உங்கள் நட்சத்திரத்திற்குரிய மரங்கள் பார்ப்போம்
27:நட்சத்திரத்திற்குரிய மரங்கள்..!!🙏

அசுவணி----எட்டி

பரணி ----நெல்லி

கார்த்திகை--அத்தி

ரோகிணி ---நாவல்

மிருகசீரிடம்-கருங்காலி

திருவாதிரை-செம்மரம்

புனர்பூசம் --மூங்கில்

பூசம் -----அரசு

ஆயில்யம்--புன்னை

மகம் ---ஆல்

பூரம் ----பலா

உத்திரம் --அலரி

அஸ்தம்---வேலம்

சித்திரை--வில்வம்

சுவாதி----மருது

விசாகம்--விலா

அனுஷம்--மகிழம்

கேட்டை--குட்டிப்பலா

மூலம்----மா

பூராடம் - வஞ்சி

உத்திராடம்-சக்கைப்பலா

திருவோணம்-எருக்கு

அவிட்டம்---வன்னி

சதயம்-----கடம்பு

பூரட்டாதி -கருமருது

உத்திரட்டாதி-வேம்பு

ரேவதி------இலுப்பை
                  VMV
அவரவர் தங்களுக்குரிய மரங்களை ஏதேனும் கோவில்களிலோ , தனக்கு சொந்தமான இடத்திலோ நட்டு அனுதினம் நீர் ஊற்றி பராமரித்து வர சகலவிதமான தோஷங்களும் விலகி வாழ்வில் நன்நிலையை விரைவில் பெறுவர் என்பது திண்ணம்.!!🙏

இனி உங்கள் நட்சத்திர இறைவணக்கப் பாடல்கள் 
நிம்மதியாக வாழ சிவ வழிபாடு
உங்கள் நட்சத்திரப் பாடல்களுடன்!!🙏

கீழே அவரவர் பிறந்த நட்சத்திரத்திற்குரிய ஒவ்வொரு தேவாரப்பாடல் தரப்பட்டுள்ளன.
நீங்கள் உங்களது பிறந்த நட்சத்திரத்தின் பாடலை
ஒவ்வொரு நாளும் மூன்று தடவை பாடி,சிவபெருமானை வணங்கி வந்தால், நவக்கிரகங்களால் ஏற்படும் இன்னல்கள் நீங்கி நிம்மதியாக வாழலாம்.!!🙏

அசுவினி :
தக்கார்வம் எய்திசமண் தவிர்ந்து
உந்தன் சரண் புகுந்தேன்
எக்கால் எப்பயன் நின் திறம்
அல்லால் எனக்கு உளதே
மிக்கார் தில்லையுள் விருப்பா
மிக வடமேரு என்னும்
திக்கா! திருச்சத்தி முற்றத்து
உறையும் சிவக்கொழுந்தே.

பரணி :

கரும்பினும் இனியான் தன்னைக்
காய்கதிர்ச் சோதியானை
இருங்கடல் அமுதம் தன்னை
இறப்பொடு பிறப்பு இலானைப்
பெரும்பொருள் கிளவியானைப்
பெருந்தவ முனிவர் ஏத்தும்
அரும்பொனை நினைந்த நெஞ்சம்
அழகிதாம் நினைந்தவாறே. 

கார்த்திகை/கிருத்திகை :

செல்வியைப் பாகம் கொண்டார்
சேந்தனை மகனாக் கொண்டார்
மல்லிகைக் கண்ணியோடு
மாமலர்க் கொன்றை சூடிக்
கல்வியைக் கரை இலாத
காஞ்சி மாநகர் தன்னுள்ளார்
எல்லிய விளங்க நின்றார்
இலங்கு மேற்றளியனாரே.

ரோகிணி :

எங்கேனும் இருந்து உன்
அடியேன் உனை நினைந்தால் 
அங்கே வந்து என்னோடும்
உடன் ஆகி நின்றருளி
இங்கே என் வினையை
அறுத்திட்டு எனை ஆளும்
கங்கா நாயகனே
கழிப்பாலை மேயோனே.

மிருக சீரிடம் :

பண்ணின் இசை ஆகி நின்றாய் போற்றி
பாவிப்பார் பாவம் அறுப்பாய் போற்றி
எண்ணும் எழுத்தும் சொல் ஆனாய் போற்றி
என் சிந்தை நீங்கா இறைவா போற்றி
விண்ணும் நிலனும் தீ ஆனாய் போற்றி
மேலவர்க்கும் மேலாகி நின்றாய் போற்றி
கண்ணின் மணி ஆகி நின்றாய் போற்றி
கயிலை மலையானே போற்றி போற்றி

திருவாதிரை/ஆதிரை :

கவ்வைக் கடல் கதறிக் கொணர்
முத்தம் கரைக்கு ஏற்றக்
கொவ்வைத் துவர் வாயார்
குடைந்து ஆடும் திருச்சுழியல்
தெய்வத்தினை வழிபாடு செய்து
எழுவார் அடி தொழுவார்
அவ்வத் திசைக்கு அரசு
ஆகுவர் அலராள் பிரியாளே.

புனர்பூசம் :

மன்னும் மலைமகள் கையால்
வருடின மாமறைகள்
சொன்ன துறைதொறும் தூப்பொருள்
ஆயின தூக்கமலத்து
அன்னவடிவின அன்புடைத்
தொண்டர்க்கு அமுது அருத்தி
இன்னல் களைவன இன்னம்பரான்
தன் இணை அடியே.

பூசம் :

பொருவிடை ஒன்றுடைப் புண்ணிய
மூர்த்திப் புலி அதளன்
உருவுடை அம்மலைமங்கை
மணாளன் உலகுக்கு எல்லாம்
திருவுடை அந்தணர் வாழ்கின்ற
தில்லை சிற்றம்பலவன்
திருவடியைக் கண்ட கண்கொண்டு
மற்று இனிக் காண்பது என்னே.

ஆயில்யம் :

கருநட்ட கண்டனை அண்டத்
தலைவனைக் கற்பகத்தைச்
செருநட்ட மும்மதில் எய்ய
வல்லானைச் செந்நீ முழங்கத்
திருநட்டம் ஆடியைத் தில்லைக்கு
இறையைச் சிற்றம்பலத்துப்
பெருநட்டம் ஆடியை வானவர்
கோன் என்று வாழ்த்துவனே.

மகம் :

பொடி ஆர் மேனியனே! புரிநூல்
ஒருபால் பொருந்த
வடி ஆர் மூவிலை வேல் வளர்
கங்கையின் மங்கையொடும்
கடிஆர் கொன்றையனே! கடவூர்
தனுள் வீரட்டத்து எம்
அடிகேள்! என் அமுதே!
எனக்கு ஆர்துணை நீ அலதே.

பூரம் :

நூல் அடைந்த கொள்கையாலே
நுன் அடி கூடுதற்கு
மால் அடைந்த நால்வர் கேட்க
நல்கிய நல்லறத்தை
ஆல் அடைந்த நீழல் மேவி
அருமறை சொன்னது என்னே
சேல் அடைந்த தண்கழனிச்
சேய்ன்ஞலூர் மேயவனே.

உத்திரம் :

போழும் மதியும் புனக் கொன்றைப்
புனர்சேர் சென்னிப் புண்ணியா!
சூழம் அரவச் சுடர்ச் சோதீ
உன்னைத் தொழுவார் துயர் போக
வாழும் அவர்கள் அங்கங்கே
வைத்த சிந்தை உய்த்து ஆட்ட
ஆழும் திரைக்காவிரிக் கோட்டத்து
ஐயாறு உடைய அடிகளே.

அஸ்தம் :

வேதியா வேத கீதா விண்ணவர்
அண்ணா என்று
ஓதியே மலர்கள் தூவி ஒருங்கு
நின் கழல்கள் காணப்
பாதி ஓர் பெண்ணை வைத்தாய்
படர் சடை மதியம் சூடும்
ஆதியே ஆலவாயில் அப்பனே
அருள் செயாயே.

சித்திரை :

நின் அடியே வழிபடுவான்
நிமலா நினைக் கருத
என் அடியான் உயிரை வவ்வேல்
என்று அடர்கூற்று உதைத்த
பொன் அடியே இடர் களையாய்
நெடுங்களம் மேயவனே.

சுவாதி :

காவினை இட்டும் குளம் பல
தொட்டும் கனி மனத்தால் 
ஏவினையால் எயில் மூன்று
எரித்தீர் என்று இருபொழுதும்
பூவினைக் கொய்து மலரடி
போற்றுதும் நாம் அடியோம்
தீவினை வந்து எமைத்
தீண்டப்பெறா திருநீலகண்டம்.

விசாகம் :

விண்ணவர் தொழுது ஏத்த நின்றானை
வேதம் தான் விரித்து ஓத வல்லனை
நண்ணினார்க்கு என்றும் நல்லவன் தன்னை
நாளும் நாம் உகக்கின்ற பிரானை
எண்ணில் தொல்புகழாள் உமை நங்கை
என்றும் ஏத்தி வழிபடப் பெற்ற
கண்ணும் மூன்று உடைக் கம்பன் எம்மானைக்
காணக் கண் அடியேன் பெற்றவாறே.

அனுஷம் :

மயிலார் சாயல் மாது ஓர் பாகமா
எயிலார் சாய எரித்த எந்தை தன்
குயிலார் சோலைக் கோலக்காவையே
பயிலா நிற்கப் பறையும் பாவமே.

 கேட்டை :

முல்லை நன்முறுவல் உமை பங்கனார்
தில்லை அம்பலத்தில் உறை செல்வனார்
கொல்லை ஏற்றினர் கோடிகாவா என்று அங்கு
ஒல்லை ஏத்துவார்க்கு ஊனம் ஒன்று இல்லையே.

மூலம் :

கீளார் கோவணமும் திருநீறும்
மெய்பூசி உன் தன்
தாளே வந்து அடைந்தேன் தலைவா
எனை ஏற்றுக்கொள் நீ
வாள் ஆர் கண்ணி பங்கா!
மழபாடியுள் மாணிக்கமே
ஆளாய் நின்னையல்லால்
இனியாரை நினைக்கேனே.

பூராடம் :

நின் ஆவார் பிறர் அன்றி நீயே ஆனாய்
நினைப்பார்கள் மனத்துக்கு ஓர் வித்தும் ஆனாய்
மன் ஆனாய் மன்னவர்க்கு ஓர் அமுதம் ஆனாய்
மறை நான்கும் ஆனாய் ஆறு அங்கம் ஆனாய்
பொன் ஆனாய் மணி ஆனாய் போகம் ஆனாய்
பூமி மேல் புகழ்தக்கப் பொருளே உன்னை
என் ஆனாய் என் ஆனாய் என்னின் அல்லால்
ஏழையேன் என் சொல்லி ஏத்துகேனே.

உத்திராடம் :

குறைவிலா நிறைவே குணக்குன்றே
கூத்தனே குழைக்காது உடையோனே
உறவு இலேன் உனை அன்றி மற்று அறியேன்
ஒரு பிழை பொறுத்தால் இழிவு உண்டே
சிறைவண்டு ஆர் பொழில் சூழ்திருவாரூர்ச்
செம்பொனே திருவடுதுறையுள்
அறவோனே எனை அஞ்சல் என்று அருளாய்
ஆர் எனக்கு உறவு அமரர்கள் ஏறே

திருவோணம் / ஓணம் :

வேதம் ஓதி வெண்நூல் பூண்ட 
வெள்ளை எருது ஏறி
பூதம் சூழப் பொலிய வருவார்
புலியின் உரிதோலார்
நாதா எனவும் நக்கா எனவும்
நம்பா என நின்று
பாதம் தொழுவார் பாவம்
தீர்ப்பார் பழன நகராரே.

அவிட்டம் :

எண்ணும் எழுத்தும் குறியும்
அறிபவர் தாம் மொழியப்
பண்ணின் இடைமொழி பாடிய
வானவரதா பணிவார்
திண்ணென் வினைகளைத்
தீர்க்கும் பிரா திருவேதிக்குடி
நண்ணரிய அமுதினை
நாம் அடைந்து ஆடுதுமே.

சதயம் :

கூடிய இலயம் சதி பிழையாமைக்
கொடி இடை இமையவள் காண
ஆடிய அழகா அருமறைப் பொருளே
அங்கணா எங்கு உற்றாய் என்று
தேடிய வானோர் சேர் திருமுல்லை
வாயிலாய் திருப்புகழ் விருப்பால்
பாடிய அடியேன் படுதுயர் களையாய்
பாசுபதா பரஞ்சுடரே.

பூரட்டாதி :

முடி கொண்ட மத்தமும் முக்கண்ணனின்
நோக்கும் முறுவலிப்பும்
துடிகொண்ட கையும் துதைந்த
வெண்ணீறும் சுரிகுழலாள்
படி கொண்ட பாகமும் பாய்புலித்
தோலும் என் பாவி நெஞ்சில்
குடி கொண்டவா தில்லை அம்பலக்
கூத்தன் குரை கழலே.

உத்திரட்டாதி :

நாளாய போகாமே நஞ்சு
அணியும் கண்டனுக்கு
ஆளாய அன்பு செய்வோம்
மட நெஞ்சே அரன் நாமம்
கேளாய் நம் கிளை கிளைக்கும்
கேடுபடாத்திறம் அருளிக்
கோள் ஆய நீக்குமவன்
கோளிலி எம்பெருமானே.

ரேவதி :

நாயினும் கடைப்பட்டேனை
நன்னெறி காட்டி ஆண்டாய்
ஆயிரம் அரவம் ஆர்த்த
அமுதனே அமுதம் ஒத்து
நீயும் என் நெஞ்சினுள் நிலாவிளாய்
நிலாவி நிற்க
நோயவை சாரும் ஆகில் நோக்கி
நீ அருள் செய்வாயே.!!🙏

நீங்கள் நட வேண்டிய நட்சத்திர விருட்சம் _ விருட்ஷ சாஸ்திரப்படி
27: நட்சத்திரக்காரர்களின் மரங்கள்!!🙏
                    VMV
மரக்கன்றை நட்டதும் அவரது கையால் நவதானியங்களைஊற வைத்த நீரை அச்செடிக்கு விட்டு ஊறிய   நவதானியங்களையும் அந்தமரக்கன்றுக்கு உரமாகப்போட வேண்டும்.!!🙏

இப்படிச் செய்த மறு விநாடிமுதல்,அம்மரக்கன்று வளர,வளர அதைநட்டவரின் வாழ்க்கைமலரும்.அந்த மரக்கன்றைநட்டவரின் பிறந்த ஜாதகத்தில் இருக்கும்அனைத்து தோஷங்களையும் அந்த மரக்கன்று ஈர்த்துவிடும் அம்மரக்கன்று பூத்து,காய்க்கும்போது,உரியவரின்வாழ்க்கையும் செழிப்பாகத்துவங்கும்.அவரதுகர்மவினைகள் நீங்கியிருக்கும்.கர்மவினைகளை வெற்றிகொள்ள விருட்ச சாஸ்திரம் இப்படிஒரு வழிகாட்டுகிறது.!!🙏

இப்போது உங்களது பிறந்த நட்சத்திரத்துக்குரியவிருட்சம் எனப்படும் மரம் எதுவெனப்பார்ப்போம்!!🙏

அஸ்வினி
1 ம் பாதம் - காஞ்சிதை (எட்டி)
2 ம் பாதம் - மகிழம்
3 ம் பாதம் - பாதாம்
4 ம் பாதம் - நண்டாஞ்சு

பரணி
1 ம் பாதம் - அத்தி
2 ம் பாதம் - மஞ்சக்கடம்பு
3 ம் பாதம் - விளா
4 ம் பாதம் - நந்தியாவட்டை

கார்த்திகை
1 ம் பாதம் - நெல்லி
2 ம் பாதம் - மணிபுங்கம்
3 ம் பாதம் - வெண் தேக்கு
4 ம் பாதம் - நிரிவேங்கை

ரோஹிணி
1 ம் பாதம் - நாவல்
2 ம் பாதம் - சிவப்பு மந்தாரை
3 ம் பாதம் - மந்தாரை
4 ம் பாதம் - நாகலிங்கம்

மிருகஷீரிஷம்
1 ம் பாதம் - கருங்காலி
2 ம் பாதம் - ஆச்சா
3 ம் பாதம் - வேம்பு
4 ம் பாதம் - நீர்க்கடம்பு

திருவாதிரை
1 ம் பாதம் - செங்கருங்காலி
2 ம் பாதம் - வெள்ளை
3 ம் பாதம் - வெள்ளெருக்கு
4 ம் பாதம் - வெள்ளெருக்கு

புனர்பூசம்
1 ம் பாதம் - மூங்கில்
2 ம் பாதம் - மலைவேம்பு
3 ம் பாதம் - அடப்பமரம்
4 ம் பாதம் - நெல்லி

பூசம்
1 ம் பாதம் - அரசு
2 ம் பாதம் - ஆச்சா
3 ம் பாதம் - இருள்
4 ம் பாதம் - நொச்சி

ஆயில்யம்
1 ம் பாதம் - புன்னை
2 ம் பாதம் - முசுக்கட்டை
3 ம் பாதம் - இலந்தை
4 ம் பாதம் - பலா

மகம்
1 ம் பாதம் - ஆலமரம்
2 ம் பாதம் - முத்திலா மரம்
3 ம் பாதம் - இலுப்பை
4 ம் பாதம் - பவளமல்லி

பூரம்
1 ம் பாதம் - பலா
2 ம் பாதம் - வாகை
3 ம் பாதம் - ருத்திராட்சம்
4 ம் பாதம் - பலா

உத்திரம்
1 ம் பாதம் - ஆலசி
2 ம் பாதம் - வாதநாராயணன்
3 ம் பாதம் - எட்டி
4 ம் பாதம் - புங்கமரம்

ஹஸ்தம்
1 ம் பாதம் - ஆத்தி
2 ம் பாதம் - தென்னை
3 ம் பாதம் - ஓதியன்
4 ம் பாதம் - புத்திரசீவி

சித்திரை
1 ம் பாதம் - வில்வம்
2 ம் பாதம் - புரசு
3 ம் பாதம் - கொடுக்காபுளி
4 ம் பாதம் - தங்க அரளி

சுவாதி
1 ம் பாதம் - மருது
2 ம் பாதம் - புளி
3 ம் பாதம் - மஞ்சள் கொன்றை
4 ம் பாதம் - கொழுக்கட்டை மந்தாரை

விசாகம்
1 ம் பாதம் - விளா
2 ம் பாதம் - சிம்சுபா
3 ம் பாதம் - பூவன்
4 ம் பாதம் - தூங்குமூஞ்சி

அனுஷம்
1 ம் பாதம் - மகிழம்
2 ம் பாதம் - பூமருது
3 ம் பாதம் - கொங்கு
4 ம் பாதம் - தேக்கு

கேட்டை
1 ம் பாதம் - பலா
2 ம் பாதம் - பூவரசு
3 ம் பாதம் - அரசு
4 ம் பாதம் - வேம்பு

மூலம்
1 ம் பாதம் - மராமரம்
2 ம் பாதம் - பெரு
3 ம் பாதம் - செண்பக மரம்
4 ம் பாதம் - ஆச்சா

பூராடம்
1 ம் பாதம் - வஞ்சி
2 ம் பாதம் - கடற்கொஞ்சி
3 ம் பாதம் - சந்தானம்
4 ம் பாதம் - எலுமிச்சை

உத்திராடம்
1 ம் பாதம் - பலா
2 ம் பாதம் - கடுக்காய்
3 ம் பாதம் - சாரப்பருப்பு
4 ம் பாதம் - தாளை

திருவோணம்
1 ம் பாதம் - வெள்ளெருக்கு
2 ம் பாதம் - கருங்காலி
3 ம் பாதம் - சிறுநாகப்பூ
4 ம் பாதம் - பாக்கு

அவிட்டம்
1 ம் பாதம் - வன்னி
2 ம் பாதம் - கருவேல்
3 ம் பாதம் - சீத்தா
4 ம் பாதம் - ஜாதிக்காய்

சதயம்
1 ம் பாதம் - கடம்பு
2 ம் பாதம் - பரம்பை
3 ம் பாதம் - ராம்சீதா
4 ம் பாதம் - திலகமரம்

பூரட்டாதி
1 ம் பாதம் - தேமா
2 ம் பாதம் - குங்கிலியம்
3 ம் பாதம் - சுந்தரவேம்பு
4 ம் பாதம் - கன்னிமந்தாரை

உத்திரட்டாதி
1 ம் பாதம் - வேம்பு
2 ம் பாதம் - குல்மோகர்
3 ம் பாதம் - சேராங்கொட்டை
4 ம் பாதம் - செம்மரம்

ரேவதி
1 ம் பாதம் - பனை
2 ம் பாதம் - தங்க அரளி
3 ம் பாதம் - செஞ்சந்தனம்
4 ம் பாதம் - மஞ்சபலா
                       VMV
தங்களுக்குரிய நட்சத்திரங்கள் , பாதங்கள் அறிந்து விருட்சங்கள் வளர்த்து, 
வளம் பெறுங்கள்..!!🙏

சில மரங்கள் -நீங்கள் கேள்விப்படாததாக இருக்கலாம்.அருகில் இருக்கும் சித்தமருத்துவரையோ,   தேடிப்பாருங்கள்.. இல்லையா , அந்தநட்சத்திரத்துக்கு மற்றபாதங்களுக்குரிய பரிச்சயமான மரங்களை வளர்க்கலாம்.!!🙏

மரங்களை சாதாரணமாக நினைத்து விடாதீர்கள். ஒவ்வொரு ஆலயத்திற்கும் ஸ்தல விருட்சங்கள் உண்டு. அந்த ஸ்தல விருட்சத்தின் அடியில், அருகில் நீங்கள் அமர்வது , நீங்கள் அந்த ஆலயத்தின் கருவறைக்குள் அமர்வதுக்கு ஒப்பானது. ஆலயத்தை சுற்றி இருக்கும் அருள் அலைகளை ஸ்தல விருட்சம் கிரகித்து வெளியிடுகிறது..  திருவண்ணாமலை சென்றால், அந்த மகிழ மரத்தடியில் சில நிமிடங்கள் அமர்ந்து, உணர்ந்து பாருங்கள்..  உங்கள் ஊரில் அருகில் இருக்கும் ஸ்தலங்களில் விருட்சங்களின் அடியில் அமர்ந்து உணர்ந்து பாருங்கள் உங்கள் அனுபவங்களை.!!🙏

நட்சத்திரங்களும் அதற்குரிய மரங்களும் இருந்து இடம் சேவூர் அங்காளம்மன் கோவில்..!!🙏

27:நட்சத்திரங்களும் அதற்குரிய மரங்களும் 
நட்சத்திர மரங்கள் விருட்ஷ சாஸ்திரத்தில் கூறிபடி 
உங்கள் நட்சத்திரம் பாதம் அறிந்து மரங்களை நடுங்கள் 
குறைந்த பட்சம் இரண்டு கண்றுகளாக நடுங்கள்..!!🙏

வாழ்க வளமுடன் ஓம் சிவசக்தி நமஹ..!!🙏
🙏🌿🌾🎋🙏🌿🌾🎋🙏🌿🌾🎋🙏🌿🌾

Temples360Temples360

Followers

சிவனுக்கு வில்வ இலை அர்ச்சனை மிகவும் விசேஷமானது.

_வில்வ மரத்தை வழிபட்டால் பல சிவ க்ஷேத்திரங்கள் போன பலன் கிடைக்கும்_ 'பிரும்மா விஷ்ணு சிவன்' என்ற மும்மூர்த்திகளைத் தன்னக...