Wednesday, May 19, 2021

ஸ்ரீ கூடல் அழகர் பெருமாள் கோவில்-

ஸ்ரீ கூடல் அழகர் பெருமாள் கோவில்-

திருக்கூடல், மதுரை. 

கூடலழகர் பெருமாள் கோயில், இந்தியாவில், தமிழ்நாட்டிலுள்ள மதுரையில் அமைந்துள்ளது. இது 108 வைணவத் திருத்தலங்களில் ஒன்று. இதற்கு ஆழ்வார் பாடல்கள் உள்ளன. இக் கோயிலின் கருவறையில் உள்ள பெருமாள் பெயர் ‘கூடலழகர்’. மாடத்தில் பள்ளிகொண்டிருக்கும் கோலம் அந்தர வானத்து எம்பெருமான் என்னும் பெயருடையது.

ஐந்து கலசத்துடன் கூடிய ஐந்து நிலை ராஜகோபுரம், எட்டுப் பிரகாரங்கள், ஆண்டாள், சக்கரத்தாழ்வார், நவக்கிரகாதியர், ஆழ்வார்கள், ஆச்சாரியர்கள், மணவாள மாமுனிகள், விச்வக்சேனர், ராமர், கிருஷ்ணர், லட்சுமி நாராயணர், கருடன், ஆஞ்சநேயர், லட்சுமி நரசிம்மர் ஆகியோரின் சன்னிதிகள் கொண்டுள்ளது இக்கோயில்.

அஷ்டாங்க விமானத்தின் கீழ்தளத்தில் கூடலழகர் அமர்ந்த கோலத்திலும், இரண்டாவது தளத்தில் சூரிய நாராயணர் நின்ற கோலத்திலும் மூன்றாவது தளத்தில் பாற்கடல் நாதர் பள்ளிகொண்ட கோலத்திலும் காணப்படுகிறார். உற்சவர் வியூக சுந்தர்ராஜப் பெருமாள்.

தல வரலாறு

பிரம்மாவின் புத்திரரான சனத்குமாரருக்கு, பெருமாளை அர்ச்சாவதார (மனித ரூபம்) வடிவில் தரிசிக்க வேண்டுமென ஆசை எழுந்தது. தன் விருப்பம் நிறைவேற, இத்தலத்தில் பெருமாளை வேண்டி தவமிருந்தார். சுவாமி ஸ்ரீதேவி, பூதேவியுடன் அவருக்குக் காட்சி தந்தார். பின்பு சனத்குமாரர், தேவசிற்பி விஸ்வகர்மாவை வரவழைத்து தான் கண்ட காட்சியை அப்படியே வடிவமைக்கச் செய்தார். அதை மிக அழகிய அஷ்டாங்க விமானத்தின் கீழ் பிரதிஷ்டைசெய்தார். அவரே கூடலழகர் எனப்பட்டார். இத்தலம் கிருதயுகத்திலேயே அமைக்கப்பட்டு விட்டது. கிருதயுகம், திரேதாயுகம், துவாபரயுகம், கலியுகம் என நான்கு யுகங்களிலும் சிறப்புற்று விளங்குகிறது. எனவே இத்தல பெருமாள் யுகம் கண்ட பெருமாள்’ எனப்படுகிறார்.

வெற்றி தரும் பெருமாள் : இங்குள்ள உற்சவர் “வியூக சுந்தர்ராஜன்’ என்று அழைக்கப்படுகிறார். எந்த ஒரு செயலையும் செய்யும்முன்பு, சரியாக திட்டமிட்டு வியூகம் அமைத்து செயல்பட்டால் வெற்றி பெறலாம். இவ்வாறு எதிலும் வெற்றி தரும் அழகராக இவர் திகழ்வதால், இப்பெயரில் அழைக்கப்படுகிறார். இப்பகுதியை ஆண்ட மன்னர்கள் போர் புரியச் செல்லும் முன்பு, இவரை வேண்டி வெற்றிக்காக வியூகம் அமைத்துக் கொண்டனர். இதனாலும் இப்பெயர் ஏற்பட்டதாகவும் சொல்வர்.

முக்கோல முகுந்தன் : அஷ்டாங்க விமானத்தின் கீழ் தளத்தில் கூடலழகர் ஸ்ரீதேவி பூதேவியருடன் அமர்ந்த கோலத்தில் காட்சி தருகிறார். இரண்டாவது நிலையில், சூரிய நாராயணர் தேவியருடன் நின்ற கோலத்தில் அருளுகிறார். இதில் பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகிய முப்பெரும் தெய்வங்களும், அஷ்டதிக் பாலகர்களும், ஓவிய வடிவில் அருளுகின்றனர். இதனால் இந்த சன்னதியை, “ஓவிய மண்டபம்’ என்று அழைக்கிறார்கள். மூன்றாவது நிலையில் பாற்கடல் நாதர், பள்ளி கொண்ட கோலத்தில் தாயார்களுடன் அருளுகிறார். இவ்வாறு, பெருமாள் இத்தலத்தில் நின்ற, அமர்ந்த, கிடந்த என மூன்று கோலங்களிலும் காட்சி தருகிறார். மேலும் பூவராகர், லட்சுமி நரசிம்மர், நாராயணன், லட்சுமி நாராயணன், ஆழ்வார்கள், வைணவ ஆச்சாரியர்கள் ஆகியோரையும் விமானத்தில் தரிசிக்கலாம். மலைக்கோயில்களில் பவுர்ணமியன்று கிரிவலம் போல், இங்கே பக்தர்கள் விமானத்தை வலம் வருகிறார்கள்.

புலவர் கூடலழகர் : ஒருமுறை மதுரையில் தொடர்ந்து மழை பெய்யவே, மக்கள் கடும் பாதிப்பிற்குள்ளாயினர். தங்களை மழையிலிருந்து காத்தருளும்படி பெருமாளை வேண்டினர். அவர்களது வேண்டுதலை ஏற்ற சுவாமி, நான்கு மேகங்களை ஏவினார். அவை, மதுரையைச் சுற்றி நான்கு மாடங்களாக ஒன்று கூடி, மழையிலிருந்து மக்களை காத்தது. இவ்வாறு, நான்கு மேகங்கள் ஒன்று கூடியதால் இத்தலம், “நான்மாடக்கூடல்’ என்றும், கூடல் மாநகர்’ என்றும் பெயர் பெற்றது. சுவாமியும், “கூடலழகர்’ என்று பெயர் பெற்றார். இந்த பெருமாள் “துவரைக் கோமான்’ என்ற பெயரில் மதுரை தமிழ்ச் சங்கத்தில் புலவராக அமர்ந்திருந்ததாக பரிபாடல் கூறுகிறது. எனவே இவரை, “புலவர் கூடலழகர்’ என்றும் சிறப்பித்துக் கூறுகிறார்கள்.

மீன் சின்னம் ஏன்? : பாண்டிய மன்னர்களின் சின்னம் மீன். இந்த சின்னம் உருவானதற்கு இத்தலத்து பெருமாளே காரணமாவார். முற்காலத்தில் இக்கோயிலைச் சுற்றி இருபுறத்திலும் மாலையிட்டதுபோல, வைகை நதி, கிருதுமால் நதி ஆகியவை ஓடின. இதில் கிருதுமால் நதிசுருங்கி ஓடையாகி விட்டது. பாண்டிய மன்னனான சத்தியவிரதன், இத்தல பெருமாள் மீது அதீத பக்தி செலுத்தினான். ஒரு முறை அவன் கிருதுமால் நதியில் நீராடிய போது, பெருமாள் மீன் வடிவில் தோன்றி உபதேசம் செய்தார். தனக்கு அருளிய சுவாமியின் நினைவாக மீன் சின்னத்தை வைத்துக்கொண்டான்.

தல சிறப்பு

பெருமாளின் 108 திருப்பதிகளுள் இதுவும் ஒன்று. உலகிலுள்ள அனைத்து பெருமாள் கோயில்களிலும் அதிகாலையில் பாடப்படும் “பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு’ என்ற “திருப்பல்லாண்டு’ பாடல் இயற்றப்பட்ட தலம் மதுரை. இவ்வூரில் கூடலழகர் என்ற பெயரில் பெருமாள் அருளுகிறார். மார்கழி மாதத்தில் இத்தலத்தை தரிசிப்பது சிறப்பு.

அஷ்டாங்க விமானம் : பெருமாள் கோயில்களில் 96 வகையான விமானங்கள் அமைக்கப்படும். இதில் அஷ்டாங்க விமானம் மிகவும் புண்ணியம் தருவதாகக் கருதப்படுகிறது. 108 திவ்ய தேசங்களில் இங்கும், திருக்கோஷ்டியூரிலும் மட்டுமே சுவாமி, அஷ்டாங்க விமானத்தின் கீழ் காட்சி தருகிறார். இந்த விமானம் 125 அடி உயரம் கொண்டது. இதிலுள்ள கலசம் 10 அடி உயரமுடையது. இதன் நிழல் தரையில் விழுவதில்லை. மூன்று நிலைகளுடன், எட்டு பகுதிகளாக உயர்ந்து நிற்கும் இந்த விமானம் “ஓம் நமோ நாராயணாய’ என்ற எட்டெழுத்து மந்திரத்தின் வடிவமாகும்.

கோவில் அமைப்பு

ஐந்து கலசத்துடன் கூடிய ஐந்து நிலை ராஜகோபுரம், எட்டுப் பிரகாரங்கள், ஆண்டாள், சக்கரத்தாழ்வார், நவக்கிரகாதியர், ஆழ்வார்கள், ஆச்சாரியர்கள், மணவாள மாமுனிகள், விச்வக்சேனர், ராமர், கிருஷ்ணர், லட்சுமி நாராயணர், கருடன், ஆஞ்சநேயர், லட்சுமி நரசிம்மர் ஆகியோரின் சன்னிதிகள் கொண்டுள்ளது இக்கோயில்.

திருவிழா – வைகுண்ட ஏகாதசி , நவராத்திரி

பிரார்த்தனை
திருமணத்தடை, குழந்தை பாக்கியம், கல்வியறிவிற்காக பிரார்த்தனை செய்கிறார்கள்
நேர்த்திக்கடன்
இங்கு தாயாருக்கு பால்குடம் எடுத்து நேர்த்திக்கடன் செலுத்துகிறார்கள்.
சிறப்பம்சம்
மூன்று தளங்களும் 5 சிகரங்களும் கொண்ட அஷ்டாங்க விமானம்.இதன் நிழல் தரையில் விழுவதில்லை. பாண்டியனின் ஐயம் தீர்த்து மதுரையில் பொற்கிழி அறுத்த பெரியாழ்வார் இக்கோயிலில் இருந்த அந்தர வானத்து எம்பெருமானின் கோலம் கண்டே திருப்பல்லாண்டு பாடினார்.

நவக்கிரக சன்னதி
பொதுவாக சைவ சமய கோயில்களில் மட்டுமே நவக்கிரக சன்னதி இருக்கும். வைணவ சமய கோயில்களில் நவகிரகங்களுக்கு பதிலாக, சக்கரத்தாழ்வார் சன்னதி இருக்கும். வைணவ ஸ்தலமான இக்கோயிலில் நவகிரகங்களின் சன்னதி உள்ளது. ஒன்பது கிரகங்களையும் வணங்கும் விதமாக தசாவதார சுலோகம் உள்ளது.

மதுரை கூடலழகர் கோவிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து தரிசனம் செய்து செல்கிறார்கள். புரட்டாசி சனிக்கிழமைகளில் பக்தர்களின் கூட்டம் அலைமோதும். புரட்டாசி சனிக்கிழமை கூடலழகரை தரிசிக்க வரும் பக்தர்கள் அவருக்கு துளசி மாலை அணிவித்து வழிபடுவார்கள்.

கூடலழகர் கோவில் வேண்டுதல் ஸ்தலமாக திகழ்கிறது. கோவிலை 1 மண்டலம் அதாவது 48 நாட்கள் சுற்றி வந்து வேண்டிக் கொண்டால் நினைத்த காரியம் கைகூடும் என்பது பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கையாக உள்ளது.
இத்தலம் கிருதயுகத்திலேயே அமைக்கப்பட்டு விட்டது. கிருதயுகம், திரேதாயுகம், துவாபரயுகம், கலியுகம் என நான்கு யுகங்களிலும் சிறப்புற்று விளங்குகிறது. எனவே இத்தல பெருமாள் யுகம் கண்ட பெருமாள்’ எனப்படுகிறார்.

No comments:

Post a Comment

Followers

அஷ்டதிக் பாலகர்கள் எட்டு திசைகளுக்கு உரிய காவலர்கள்..

அஷ்டதிக் பாலகர்கள் எட்டு திசைகளுக்கு உரிய காவலர்கள் ஆவர். இவர்கள் எண்திசை நாயகர்கள் என்றும் அழைக்கப்படுகின்றனர். அஷ்டதிக் பாலகர்...