Sunday, September 4, 2022

பன்னிரண்டு தமிழ் மாதங்களில் எந்த எந்த மாத பெளர்ணமிக்கு எப்படி அம்பிகை வழிபட வேண்டும்?

****** பெளர்ணமி வழிபாடு ******

அம்பிகை வழிபாட்டிற்கு பௌர்ணமி தினம் மிகவும் சிறப்பான நாளாகும். அன்று அம்பாளை வழிபட்டால் குடும்பத்தில் ஒளி உண்டாகும். துன்பங்களாகிய இருள் நீங்கி நன்மை கிட்டும். வேண்டியது வரமாக கிடைக்கும் பௌர்ணமி அன்று உபவாசம் இருந்து வழிபட்டால் சகல சௌபாக்கியங்களும் பெறலாம்.

பன்னிரண்டு தமிழ் மாதங்களில் எந்த எந்த மாத பெளர்ணமிக்கு எப்படி அம்பிகை வழிபட வேண்டும்? என்ன நைவேத்தியம் படைக்க வேண்டும்? அப்படி வழிபாடு செய்தால் என்ன பலன் கிடைக்கும்? வாருங்கள் காணலாம்....

* சித்திரை மாதம்:

நட்சத்திரம்:
சித்திரை நட்சத்திரம்.

வழிபடும் முறை:
சித்திரை மாத பௌர்ணமியன்று அம்பாள் திருவுருவ படம் அல்லது சிலையில் பூப்போட்ட வஸ்திரம் சார்த்தி, தங்களால் முடிந்தவர்கள் பத்மராகம் என்ற நவரத்தினக்கல் பதித்த ஆபரணம் அணிவித்து வழிபடலாம்.

நைவேத்தியம்:
மஞ்சள் கலந்த சாதம், பானகம், ஏலம், கிராம்பு, பச்சைக் கற்பூரம் சேர்ந்த தாம்பூலம் நைவேத்தியம் செய்ய வேண்டும்.

பலன்:
இந்தப் பூஜை செய்வதால் குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு அந்தப் பேறு கிட்டும். சித்திரை மாதத்தில் சித்திரை நட்சத்திரத்துடன் கூடிய சித்ரா பௌர்ணமி என்றால் மிகவும் விசேஷம்.

* வைகாசி மாதம்:

நட்சத்திரம்:
விசாக நட்சத்திரம்.

வழிபடும் முறை:
வைகாசி பௌர்ணமியில் அம்மனுக்கு நீலநிற ஆடையும்  தங்க ஆபரணமும் அணிவித்து பூக்களால் அலங்கரிக்க வேண்டும்.சந்தனாபிஷேகம் செய்வது சிறப்பு.

நைவேத்தியம்:
எலுமிச்சை சாதம், சீரகமும், சர்க்கரையும் கலந்த சாதம், விளாம்பழம் இவற்றை அம்பிகைக்கு நைவேத்தியம் படைத்து வழிபட வேண்டும்.

பலன்:
இப்பூஜையால் பிறவி எடுக்காத புண்ணிய கதி அடையலாம். வைகாசியில் விசாக நட்சத்திரத்துடன் கூடிய வைகாசி விசாகமும் விசேஷமாக கொண்டாடப்படுகின்றன.

* ஆனி மாதம்:

நட்சத்திரம்:
மூல நட்சத்திரம்.

வழிபடும் முறை:
ஆனி மாத பௌர்ணமியில் அம்பிகைக்கு கருப்பு வஸ்திரமும், முத்தாபரணமும் அணிவிக்க வேண்டும். வெள்ளெருக்கம்பூ, செண்பகப்பூ இவற்றால் அர்ச்சனை செய்யவேண்டும்.

நைவேத்தியம்:
முக்கனிகளையும், உளுத்தம் பருப்பு சாதத்தையும் நைவேத்தியம் செய்து வழிபட வேண்டும்.

பலன்:
இந்த வழிபாட்டின் மூலம் எடுத்த காரியம் யாவிலும் வெற்றி பெறலாம். ஆனி மாதப் பௌர்ணமியில் சுமங்கலிகள் சாவித்திரி விரதம் அனுஷ்டித்து மாங்கல்ய பலம் அடையலாம்.

* ஆடி மாதம்:

நட்சத்திரம்:
உத்திராட நட்சத்திரம்.

வழிபடும் முறை:
ஆடி பௌர்ணமியில் சிவப்பும், மஞ்சளும் கலந்த ஆடை சார்த்தி, சிவப்புக்கல் ஆபரணம் அணிவித்தல் வேண்டும். பூக்களால் அர்ச்சனை செய்வதோடு, அறுகம்புல்லாலும் அர்ச்சிப்பது சிறப்பு வாய்ந்தது.

நைவேத்தியம்:
அன்றைய தினம் அம்பிகைக்கு பாலாபிஷேகம் செய்து, வாழைப்பழம் கலந்த சாதத்தை நைவேத்தியம் செய்வது சிறப்பானதாகும்.

பலன்:
ஆடிமாத பூஜையால் புண்ணிய கதி கிட்டும். ஆடி மாதத்தில் வடநாட்டில் சாவித்திரி விரதம், கோபத்ம விரதம் ஆகியவற்றை மேற்கொள்கின்றனர்.

* ஆவனி மாதம்:

நட்சத்திரம்:
அவிட்ட நட்சத்திரம்.

வழிபடும் முறை:
ஆவணி மாத பூஜையில் நான்கு வண்ணங்கள் கொண்ட ஆடை சார்த்தி தங்களால் முடிந்தவர்கள். வைடூரிய ஆபரணம் அணிவிக்கலாம்.

நைவேத்தியம்:
நாட்டுச் சர்க்கரையால் அபிஷேகம் செய்து, நெய் சாதம் நைவேத்தியம் செய்ய வேண்டும். 
பலன்:
இந்த பூஜை செய்வதன் மூலம் கடன் தொல்லைகள் தீர்ந்து நன்மை பெறலாம். ஆவணி பௌர்ணமியில் ரட்சா பந்தனமும் விசேஷமானது.

* புரட்டாசி மாதம்:

நட்சத்திரம்:
உத்திரட்டாதி நட்சத்திரம்.

வழிபடும் முறை:
புரட்டாசி பௌர்ணமியன்று அம்மனுக்கு நான்கு வண்ணங்களில் ஆடையும், பிரவாளரத் தினக்கல் ஆபரணமும் அணிவித்தல் வேண்டும். மல்லிகைப் பூவால் அர்ச்சிப்பது சிறப்பானது.

நைவேத்தியம்:
இளநீர்.

பலன்:
இந்த பூஜையின் பலனாக சகல சௌபாக்கியங்களும் கிட்டும். புரட்டாசி பௌர்ணமியில் உமாமகேஸ்வர விரதமும் மேற்கொள்வது சிறப்பானது.

* ஐப்பசி மாதம்:

நட்சத்திரம்:
அசுவினி நட்சத்திரம்.

வழிபடும் முறை:
ஐப்பசி பௌர்ணமியில் அம்பிகைக்கு இந்திர நீல நிறக்கல் ஆபரணம் அணிவிக்க வேண்டும். எந்த நிறத்தில் வேண்டுமானாலும் ஆடை சார்த்தலாம். அன்றைய தினம் அன்னாபிஷேகம் செய்து மகிழம்பூ, வில்வம், பாதிரிப்பூ ஆகியவற்றால் அர்ச்சிக்க வேண்டும்.

நைவேத்தியம்:
மிளகு சாதம், கரும்புச்சாறு இவற்றை நைவேத்தியம் செய்ய வேண்டும்.

பலன்:
இந்த பூஜை செய்வதன் மூலம் எல்லா காரியங்களிலும் வெற்றி கிட்டும்.பலர் ஐப்பசி பௌர்ணமியில் லட்சுமி விரதமும் மேற்கொள்வார்கள்.

* கார்த்திகை மாதம்:

நட்சத்திரம்:
கிருத்திகை நட்சத்திரம்.

வழிபடும் முறை:
கார்த்திகை மாத பௌர்ணமியன்று பூப்போட்ட ஆடையும், பூ மாலையும் அணிவித்து நெய்தீபம் ஏற்றி வழிபட வேண்டும்.

நைவேத்தியம்:
வெண் பொங்கல், நெய் பொங்கல் ஆகியவற்றை நைவேத்தியம் செய்ய வேண்டும்.

பலன்:
வேண்டியது நிகழும் அனைத்து நலன்களையும் பெற்றுத் தரும் பூஜையாக இது நம்பப்படுகிறது. கார்த்திகை பௌர்ணமியில் கார்த்திகை தீபத் திருவிழா கோலாகலமாக கொண்டாடப்படுகிறது.

* மார்கழி மாதம்:

நட்சத்திரம்:
திருவாதிரை நட்சத்திரம்.

வழிபடும் முறை:
மார்கழி மாதம் அம்பிகைக்கு வெண்ணிற ஆடை உடுத்தி ஒற்றைப்படை எண்ணிக்கையில் நவரத்தினக்கல் பதித்த ஆபரணம் அணிவிக்க வேண்டும். தாமரைப்பூவால் அர்ச்சித்தலும், பஞ்சாமிர்த அபிஷேகம் செய்தலும் சிறப்பானவை.

நைவேத்தியம்;
களி நைவேத்தியம் செய்ய வேண்டும்.

பலன்:
இப்பூஜை செய்வதன் மூலம் அம்பிகையின் பூரண அருளைப் பெறலாம். கஷ்டங்கள் நீங்கும், நோய்கள் குணமாகும், எடுத்த காரியங்கள் அனைத்திலும் வெற்றி கிட்டும். மார்கழி மாத திருவாதிரை நட்சத்திரத்துடன் கூடிய பௌர்ணமியில் திருவாதிரை திருநாள் விரதத்துடன் அனுசரிக்கப்படுகிறது.

* தை மாதம்:

நட்சத்திரம்:
பூசம் நட்சத்திரம்.

வழிபடும் முறை:
தை மாத பௌர்ணமியன்று அம்மனுக்கு மஞ்சளும், சிவப்பும் கலந்த ஆடை அணிவித்தல் வேண்டும். தேன் அபிஷேகம் சிறப்பானது. வில்வம், வெள்ளை தாமரைப்பூ, நந்தியாவட்டை இவற்றால் அர்ச்சனை செய்தல் நற்பலனை தரும்.

நைவேத்திம்:
பாயசம்.

பலன்:
ஆயுள் விருத்தியை தரும் இந்த பூஜை. தை மாதப் பௌர்ணமியில் தைப்பூசம் சிறப்பாக கொண்டாடப்படுகிறது.

* மாசி மாதம்:
மாசி மகம் என்ற இனிய நாளன்று.

வழிபடும் முறை:
வெள்ளை நிறம் கலந்த 5 வண்ணங்கள் கொண்ட ஆடை சார்த்தி, ஸ்படிக மணியால் மாலை அலங்காரம் செய்ய வேண்டும்.

நைவேத்திம்:
சர்க்கரைப் பொங்கல் படையல் அம்பிகைக்கு ஏற்றது.

பலன்:
மாசி மாதம் மாசி மகத்தன்றும் தினத்தில் செய்யும் வழிபாடு சிவதீட்சை பெற்ற பலனை தரக் கூடியது.

* பங்குனி மாதம்:

நட்சத்திரம்:
பங்குனி உத்திரம்.

வழிபடும் முறை:
பங்குனி உத்திரம் அன்று மஞ்சள் நிற வஸ்திரம் சார்த்தி, கோமேதகம் பதித்த ஆபரணம் அணிவிக்கலாம். தயிர் அபிஷேகம் சிறப்பானது. தாமரைப்பூவால் அர்ச்சனை செய்வது சிறப்பு.

நைவேத்திம்:
பருப்பு மற்றும் நெய் சேர்த்த சாதம் நைவேத்தியம் செய்தலும் சிறப்பானது.

பலன்:
திருமண பாக்கியம் கிட்டும். இந்த பூஜையின் மூலம் புண்ணிய கதி அடையலாம்.

வீட்டில் அம்மன் சிலை வைத்து வழிபடுபவர்கள் அபிஷேகம் செய்யலாம். இல்லாதவர்கள்  அம்மன் திருவுருவ படம் வைத்து வழிபடலாம். ஒவ்வொரு மாத பௌர்ணமியையும் அம்பிகை வழிபட்டு துன்பங்கள் , துயரங்கள் நீங்கி உமையன்னை  அருளும் நலமும் பெறுவோம்
குறிப்பு: நீங்கள் தெரிந்து கொண்ட விஷயத்தை உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்

No comments:

Post a Comment

Followers

திருவாசி மாற்றுரைவரதீஸ்வரர் (பிரம்மபுரீஸ்வரர்) திருச்சி....

திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் உள்ள புகழ்பெற்ற தேவாரப் பாடல் பெற்ற சோழநாட்டு தலங்களில் ஒன்றான,  சுந்தரமூர்த்தி நாயனார்  பொன் பொர...