Friday, September 9, 2022

*சிவனும் மகாவிஷ்ணுவும் பார்வதியை நடுவராக வைத்து சொக்கட்டான் ஆடிய தலம்

அருள்மிகு கோமுக்தீஸ்வரர் (மாசிலாமணீஸ்வரர்) திருக்கோயில், திருவாவடுதுறை PIN 609 803.     மயிலாடுதுறை மாவட்டம்.                

*இறைவர் திருப்பெயர் : மாசிலாமணீஸ்வரர், கோமுக்தீஸ்வரர்
*இறைவியார் திருப்பெயர் :     
அதுலகுச நாயகி, 
ஒப்பிலா முலையம்மை
*தல மரம் : படர்அரசு
*தீர்த்தம் : கோமுக்தி, கைவல்ய, 
பத்ம தீர்த்தம்,
*வழிபட்டோர் : முசுகுந்த சக்கரவர்த்தி, போகரின் சீடரான திருமாளிகைத்தேவர்,
*தேவாரப் பாடல்கள் அருளியவர்கள்: திருஞானசம்பந்தர், அப்பர், சுந்தரர்.       

*சிவனும் மகாவிஷ்ணுவும் பார்வதியை நடுவராக வைத்து சொக்கட்டான் ஆடிக்கொண்டிருந்த போது ஆட்டத்தில் காய் உருட்டியதில் சந்தேகம் வர பார்வதியிடம் கேட்கிறார் சிவன். பார்வதி மகாவிஷ்ணுவிற்கு சாதகமான பதிலை கூறியதால் சிவபெருமான் பார்வதியை பசுவாக பூமியில் பிறக்கும் படி சாபம் இடுகிறார். இப்படி பசுவாக பிறந்த பார்வதி  இத்தலத்தில் தம்மை வழிபட்டு வர சாபம் நீங்கப்பெறும் என்றார் சிவன். அதன்படி அம்பாள் பசுவின் வடிவில் இங்கு வந்து, சிவனை வேண்டி தவமிருந்தாள். சிவன் அவளுக்கு காட்சி தந்து, தன்னுடன் அணைத்துக்கொண்டு, விமோசனம் கொடுத்தார். "கோ"வாகிய பசுவிற்கு விமோசனம் தந்தவர் என்பதால் கோமுக்தீஸ்வரர் என்று பெயர் பெற்றார். 

*திருஞானசம்பந்தரின்  தந்தையார் சிவபாத இருதயர் சீர்காழியில் யாகம் நடத்த வேண்டுமென  விரும்பினார். எனவே யாகத்திற்கு வேண்டிய பொன்னும், பொருளும் வேண்டுமென சம்பந்தரிடம் கேட்டார். சம்பந்தர் யாகத்திற்கு பொருள் வேண்டி "இடரினுந் தளரினும் எனதுறுநோய் தொடரினும் உனகழல் தொழுதெழுவேன்" என்று தொடங்கும் பதிகம் பாடினார். சிவன் பூதகணங்கள் மூலமாக, எடுக்கக் குறையாத ஆயிரம் பொன் கொண்ட ஒரு பொற்கிழியை கொடுத்து அதனை இக்கோயிலில் உள்ள பலிபீடத்தின் அகன்ற பீடத்தில் வைக்கச் செய்தார். பொற்கிழி வைக்கப்பட்ட இந்த பலிபீடம் வெளிப் பிரகாரத்தில் பெரிய நந்திக்கு அருகில் இருக்கிறது.  

*ஒன்பதாம் திருமுறையான திருவிசைப்பாவில் நான்கு பதிகங்கள் பாடிய திருமாளிகைத்தேவர் போகரின் சீடர். இவர் இத்தலத்தில் சிவத்தொண்டு செய்து வந்த சமயம் அவர் மீது வீண்பழி சுமத்தப்பட்டதால், மன்னன் படை வீரர்களை அனுப்பி அவரை தாக்க முயன்றான். திருமாளிகைத் தேவர், நரசிங்கன் என்னும் மன்னனின் படைகளை கோயில் மதிலில் உள்ள நந்திகளை உயிர் பெற்றெழச் செய்து விரட்டி அற்புதம் நிகழ்த்திய தலம் திருவாவடுதுறை.   இதனால் இன்றும் கோயில் மதில்களில் நந்திகள் இல்லையென்று சொல்லப்படுகிறது.   இந்த நந்திகள் ஒன்றாக சேர்ந்து இத்தலத்தில் பிரம்மாண்டமான நந்தியாக இருக்கிறது. பல கற்களை இணைத்து செய்யப்பட்ட இந்த நந்தி, பீடம் சேர்க்காமல், 14 அடி, 3 அங்குலத்துடன் உயரமாக இருக்கிறது. 

*ஈசன் முசுகுந்த சக்கரவர்த்திக்கு மகப்பேறு அருளி இத்தலத்தைத் திருவாரூராகவும் தம்மைத் தியாகேசராகவும் காட்டிய சிறப்பும் உடையது இத்தலம். *சுந்தரநாதர் எனும் சிவயோகியார் கயிலாயத்திலிருந்து பூலோகத்தில் இத்தலம் வந்தபோது, மூலன் எனும் இடையன் இறந்து கிடக்க, அவனைச் சுற்றிலும் பசுக்கள் அழுது கொண்டிருந்ததைக் கண்டார். பசுக்களின் மீது பரிவு காட்டிய அவர் தன் உயிரை மூலன் உடலில் புகுத்தி எழுந்தார். பின் பசுக்களை வீட்டில் விட்டுவிட்டு இத்தலத்தில் தவம் செய்யத் துவங்கினார். மூலன் வீட்டிற்கு திரும்பாததால், அவனது மனைவி இங்கு வந்து. சுந்தரநாதரை தன்னுடன் வரும்படி அழைத்தார். அவர் செல்ல மறுத்தார். மூலன் சிவஞானம் பெற்றுவிட்டதாக உறவினர்கள் கூறவே மனைவியும் அவரை விட்டுச் சென்றுவிட்டாள். இவரே திருமூலர் என்று பெயர் பெற்றார். இவர் ஆண்டுக்கு ஒரு பாடல் வீதம், மொத்தம் மூவாயிரம் பாடல்களை பாடினார். இவையே திருமூலர் திருமந்திரமாக தொகுக்கப்பட்டது. இத்தலத்தின் வெளிப் பிரகாரத்தில் திருமூலருக்கு சன்னதி இருக்கிறது.             

*சிவன் இத்தலத்தில் போகர் முதலிய நவகோடி சித்தர்களுக்கு அஷ்டமாசித்திகளை உபதேசித்ததாக ஐதீகம். 

*தருமதேவதை இறைவனை வழிபட்டு அவருக்கு வாகனமாகும் பேறு பெற்றதும் இத்தலத்தில் தான்.        

*திருமூலர், திருமாளிகைத் தேவர் முதலிய மகான்களுடைய சமாதிகள் இருப்பதும் இத்தலத்தில் தான்.  

*ஐந்து நிலை கிழக்கு நோக்கிய இராஜகோபுரத்துடன் இவ்வாலயம் விளங்குகிறது. கோபுர வாயிலுக்கு எதிரில் கோமுக்தி தீர்த்தம் உள்ளது. கோபுர வாயிலின் இருபுறமும் பசுவான உமைக்குத் துணையாக வந்த விநாயகர், முருகன் சந்நிதிகள் உள்ளன. கோபுர வாயிலைக் கடந்தால் அடுத்து உள்ள மண்டபத்தில் மிகப்பெரிய நந்தியுள்ளது. 

*திருஞானசம்பந்தர் இப்பீடத்தின் அருகில் தமிழ்மணம் கமழ்வதை அறிந்து பீடத்தின் கற்களை பெயர்க்க அதன் அடியில் இருந்து திருமூலர் பாடிய திருமந்திரம் வெளிப்பட்டது.         

*இத்தலத்தில் மூலவர் சுயம்பு லிங்கமாக அருள்கிறார்.

*சுவாமி சன்னதிக்கு வலப்புறத்தில் தியாகேசர் இருக்கிறார். 

*பிரகாரத்தில் தெற்கு நோக்கிய சன்னதியில், 'அணைத்திருந்த நாயகர்' உற்சவராக இருக்கிறார். இவர் அணைத்த கோலத்தில் இருந்தாலும், அம்பாள் மீது கைகள் படாதவாறு சிலை அமைக்கப் பட்டிருப்பது சிறப்பம்சம்.
பிரிந்திருக்கும் தம்பதியர் இவரிடம் வேண்டிக்கொண்டால் மீண்டும் இணைவர் என்பது நம்பிக்கை.      

*இக்கோயிலில் தியாகேசர், செம்பொன் தியாகர், புத்திரத் தியாகசேர், சொர்ணத் தியாகேசர் ஆகிய மூர்த்தங்கள் உள்ளன.    

*அம்பாளின் தனி சன்னதி தெற்கு நோக்கியுள்ளது.  

*இத்தலத்தில் சனீஸ்வரர் இருக்கிறார். ஆனால் நவக்கிரக சன்னதி கிடையாது.                    

*ஒரே இடத்தில் மூன்று சூரியன் இருப்பது விசேஷமான தரிசனம்.             

*அருள்மிகு கோமுக்தீீஸ்வரர் திருக்கோயிலின் பிற சிறப்புகள்:             *சுந்தரர் தனது உடற்பிணி தீரப் பிரார்த்தித்தது,                   *திருவிடைமருதூரின் பரிவாரத் தலங்களுள் இத்தலம் நந்தித் தலமாக விளங்குவது,    
*தேவர்கள் 'படர் அரசு' ஆக விளங்க அதன்கீழ் இறைவன் எழுந்தருளியது,                        *சேரமான் பெருமான் நாயனார், விக்ரம பாண்டியன் ஆகியோர் வழிபட்டது,                                        *திருமூலர், திருமாளிகைத் தேவர் முதலிய மகான்களுடைய சமாதிகள் இருப்பது.   

*இது திருவாவடுதுறை ஆதீனக்குரிய கோயிலாகும். திருமாளிகைத் தேவர் வாழ்ந்த இடமே ஆதீனமாக செயல்படுவதாக  சொல்லப் படுகிறது. இங்கு திருமாளிகைத்தேவர் ஆலயமுள்ளது. இதற்குப் பக்கத்தில் நமசிவாய மூர்த்திகள் கோயிலுள்ளது.   

*மயிலாடுதுறையில் இருந்து 20 கி.மி. தொலைவிலும், மயிலாடுதுறை - கும்பகோணம் ரயில் மார்க்கத்தில் உள்ள நரசிங்கன்பேட்டை ரயில் நிலையத்தில் இருந்து கிழக்கே 3 கி.மி. தொலைவிலும் இத்தலம் இருக்கிறது. மயிலாடுதுறை - கும்பகோணம் சாலை வழியில் உள்ள திருவாலங்காடு என்ற பேருந்து நிறுத்தத்தில் இறங்கி 1 கி.மி. ஒரு கிளைப் பாதையில் நடந்து சென்றாலும் இத்தலத்தை அடையலாம்.                    

🙏சிவாயநம

No comments:

Post a Comment

Followers

96 வகையான ஷண்ணவதி ஹோமங்களின் ரகசியம்...

96 வகையான ஷண்ணவதி ஹோமங்களின் ரகசியம் (1)சமித்துவகைகள் _13  (2)ஹோமதிரவியம் _45 (3) ரஸவர்க்கம்.           _8 (4) பழவர்க்கம்.      ...