Friday, December 9, 2022

தாமதமாகவே, சீதை கடற்கரை மணலில்லிங்கம்அமைத்தாள்.அந்த லிங்கத்தை ராமர் பூஜித்ததால் "ராமநாதசுவாமி''இராமேஸ்வரம் கோவில்

276 தேவாரப் பாடல் பெற்ற சிவ திருத்தலங்கள்:-

பாண்டியநாடு தலங்கள்(மொத்தம் 14 தலங்கள்) (199 - 8/14)

199. திருஇராமேச்சுரம் (இராமேஸ்வரம்)

சிவஸ்தலம் பெயர்:-திருஇராமேச்சுரம் (இராமேஸ்வரம்)

இறைவன் பெயர்:-
ராமநாதசுவாமி,ராமலிங்கேஸ்வரர்.

இறைவி பெயர்:-பர்வதவர்த்தினி,
மலைவளர்காதலி.

தீர்த்தம்:-கோயிலுக்கு உள்ளே 22 தீர்த்தங்களும், கோயிலுக்கு
வெளியே 22 தீர்த்தங்களும் (வெளியிலுள்ள 22
தீர்த்தங்கள் தேவிபட்டினம், திருப்புல்லாணி,
பாம்பன், தங்கச்சிமடம், மண்டபம் முதலான
இடங்களில் உள்ளன.)

🍁கோவில் தீர்த்தம்🍁

இராமேஸ்வரம் கோவிலில் சுவாமி தரிசனத்தை விட தீர்த்தமாடுவது தான் மிக சிறப்பாக கருதப்படுகிறது.ஆலயத்தின் உள்ளே 22 தீர்த்தங்களும் வெளியே 22 தீர்த்தங்களும் உள்ளன. ஆலயத்தின் உள்ளே உள்ள தீர்த்தங்கள் எல்லாம் கிணறுகளாகவே அமைந்துள்ளன. அக்னி தீர்த்தம் என்று கூறப்படும் இராமேஸ்வரம் சமுத்திரக் கரையில் முதலில் தீர்த்தமாடுதலைத் தொடங்கி பின்பு ஆலயத்தினுள் மற்ற தீர்த்தங்களில் நீராட வேண்டும்.முற்காலத்தில் தனுஷ்கோடியில் நீராடி அதன் பின்பு, ராமேஸ்வரம் வந்து தீர்த்தமாடும் வழக்கம் இருந்தது. தனுஷ்கோடி பல வருடங்களுக்கு முன்பு புயலில் அழிந்த பிறகு, கோயில் முன்புள்ள அக்னி தீர்த்தக்கடலில் நீராடும் வழக்கம் ஏற்பட்டது. அக்னி தீர்த்தம் என்று கூறப்படும் சமுத்திரக் கரையில் தான் முன்னோர்களுக்கு தர்ப்பணங்கள், பிதிர்கடன்கள் நிறைவேற்றப்படுகின்றன.

புராண பெயர்:-கந்தமாதன பர்வதம், திருவிராமேச்சுரம்.

🍁தேவாரப் பாடல்கள்🍁

"திருஞானசம்பந்தர்"

1. அலைவளர் தண்மதி

2. திரிதரு மாமணி

"அப்பர்"

1. பாசமுங் கழிக்க கில்லா அரக்கரை

🍁எப்படிப் போவது🍁

இந்த திருத்தலம் ராமேஸ்வரம் தீவில் உள்ளது. சென்னை, மதுரை, திருச்சி ஆகிய இடங்களில் இருந்து ரயில் வசதி உண்டு. பேருந்து வசதியும் மதுரை, திருச்சியில் இருந்து இருக்கிறது.

🍁ஆலய முகவரி🍁

அருள்மிகு இராமநாதசுவாமி திருக்கோவில்
இராமேஸ்வரம்
இராமநாதபுரம் மாவட்டம்
PIN – 623526.

🍁திருவிழா🍁

மகாசிவராத்திரி, மார்கழி திருவாதிரை, பங்குனி உத்திரம், திருக்கார்த்திகை.

🍁தல சிறப்பு🍁

இங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார்.இந்தியாவில் உள்ள 12
ஜோதிர் லிங்கங்க தலங்களில் தமிழகத்தில் உள்ள ஒரே ஜோதிர் லிங்கதலம்
இது.ராமர் வழிபட்ட தலம் என்பதால், சிவன் சன்னதியில் பெருமாளுக்குரிய
தீர்த்தம் பிரசாதமாக தரப்படுகிறது. பதஞ்சலி முனிவர் முக்தியடைந்த தலம்.
அம்பாள் பக்தரான ராயர் செய்த உப்புலிங்கத்தை இப்போதும் பிரகாரத்தில்,
ராமநாதர் சன்னதிக்கு பின்புறம் காணலாம். உப்பின் சொரசொரப்பை அந்த
லிங்கத்தைப் பார்த்தாலே உணர முடியும். 1212 தூண்கள்,690 அடி நீளம், 435 அடி
அகலம் கொண்ட இக்கோயிலின் மூன்றாம் பிரகாரம்உலகப்புகழ் பெற்றது.
மூலஸ்தானத்தில் ஆதிசங்கரர் பிரதிஷ்டை செய்த ஸ்படிக லிங்கத்திற்கு முதலில்
பூஜை செய்து விட்டே ராமநாதருக்கு பூஜை செய்கின்றனர்.சிவனின்
தேவாரப்பாடல் பெற்ற 276 சிவாலயங்களில் இது 198 வது தேவாரத்தலம் ஆகும்.
அம்மனின் 51 சக்தி பீடங்களில் இது சேது சக்தி பீடம் ஆகும்.

இராவணனைக் கொன்றப் பழி தீர, இராமபிரான் பூஜித்தது. பூஜிக்கச் சிவலிங்கம் கொண்டுவரும் பொருட்டு, அனுமான் காசிக்குச் சென்று வரத் தாமதம் ஆகிய நிலையில், சீதாதேவியார், மணலால் பிடித்துவைத்த இலிங்கத்தை இராமபிரான் பூஜித்தார். அனுமான், கொண்டுவந்து சேர்த்த இலிங்கம், காசி விஸ்வநாதர் எனத் தனியாக வேறிடத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.

இலங்கைக்குச் செல்ல இராமபிரான் அணைகட்டிய இடம் சேது எனப்படுகிறது. அங்கே தன் வில்லினால் தோண்டிய தீர்த்தம் தனுஷ்கோடியாகும்.சேது ஸ்நானம் செய்பவர்கள் இங்குதான் செய்தல்வேண்டும்.

இராமாயணப் போரில் இராவணனைக் கொன்றபிறகு சீதையை சிறைமீட்டு இராமபிரான் அழைத்து வருகிறார். இராமேஸ்வரம் தலம் வந்தபிறகு, இராவணனைக் கொன்றதால் ஏற்பட்ட தோஷம் விலக சிவபெருமானை வழிபடத் தீர்மானித்து, அனுமனை சிவலிங்கம் கொண்டுவருமாறு காசிக்கு அனுப்புகிறார். சிவலிங்கப் பிரதிஷ்டைக்கு குறிப்பிட்டிருந்த நேரத்திற்குள் அனுமன் திரும்பி வராததால் சீதை கடற்கரையில் உள்ள மணலால் ஒரு சிவலிங்கம் உருவாக்கித் தந்தாள். இராமபிரான் அந்த சிவலிங்கத்தை குறித்த நேரத்தில் பிரதிஷ்டை செய்து தனது பூஜையை முடித்தார். காலங் கடந்து வந்த அனுமன் தான் வருவதற்குள் சிவலிங்கம் பிரதிஷ்டை செய்யப்பட்டதைக் கண்டு கோபமுற்று தனது வாலினால் இராமபிரான் பிரதிஷ்டை செய்த லிங்கத்தைப் பெயர்த்து எடுக்க முயன்று தோல்வியுற்று நின்றார். இராமர் அனுமனை சமாதானப்படுத்தி அனுமன் கொண்டுவந்த லிங்கத்தை முதலில் பிரதிஷ்டை செய்த லிங்கத்திற்கு அருகில் பிரதிஷ்டை செய்தார். மேலும் அனுமன் கொண்டுவந்த லிங்கத்திற்கே முதற் பூஜை நடைபெற வேண்டும் என்றும் கட்டளையிட்டார்.

அனுமன் கொண்டு வந்த சிவலிங்கம் இராமலிங்கத்திறகு வடபுறம் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. அனுமன் கொண்டுவந்த லிங்கம் காசி விசுவநாதர் எனப்படும். இன்றும் இந்த காசி விசுவநாதருக்கே முதல் பூஜை நடைபெறுகிறது. பின்பே இராமரால் பிரதிஷ்டை செய்யப்பட்ட இராமலிங்கத்திற்கு பூஜை நடைபெறுகிறது.

தமிழ்நாட்டில் ராமநாதபுரம் மாவட்டத்தில் பாக் ஜலசந்தியில் உள்ள ராமேஸ்வரம் தீவில் ராமநாதசுவாமி ஆலயம் அமைந்துள்ளது. பல ஆண்டுகளாக பாம்பன் ரயில் பாலம் மூலமாகத்தான் இராமேஸ்வரம் செல்ல முடியும் என்று இருந்த நிலை மாறி இப்போது பாம்பன் சாலை பாலமும் இருப்பதால் எளிதாக இராமேஸ்வரம் சென்று வர முடியும்.

இராமாயணம் எவ்வளவு பழமையானதோ அவ்வளவு பழமையானது இராமேஸ்வரம் என்ற பாடல் பெற்ற சிவஸ்தலம். இந்தியாவில் மிகவும் தெய்வீகத் தன்மையுடையதாக கருதப்படும் கோவில்களில் இராமேஸ்வரம் ஒன்றாகும். இராமேஸ்வரம் கோவிலுக்கு வந்து மூலவர் ராமநாதரை வழிபடுவதும், அக்னி தீர்த்தம் என்று அழைக்கப்படும் சமுத்திரக் கரையில் நீராடுவதும் ஒவ்வொரு இந்துவும் தன் வாழ்நாளில் செய்ய வேண்டிய கடமையாக கருதப்படுகிறது. இறந்தவர்களுக்காக திதி, தர்ப்பணங்கள் செய்வதற்கு உகந்த திருத்தலங்களில் இராமேஸ்வரம் ஒரு முக்கிய தலம் ஆகும். மூர்த்தி, தலம், தீர்த்தம் ஆகிய மூன்றாலும் சிறப்பு பெற்ற ஸ்தலம் இராமேஸ்வரம்.

இந்தியாவில் உள்ள 12 ஜோதிர்லிங்கத் தலங்களுள் இராமேஸ்வரம் தலமும் ஒன்று. இந்தியாவில் உள்ள புண்ணியத் தலங்களுள் நான்கு தலங்களையே வட இந்தியாவில் உள்ளோர் மிகச் சிறப்பாகக் கருதுகின்றனர். அவை முறையே வடக்கே பத்ரிநாதம், கிழக்கே ஜகந்நாதம், மேற்கே துவாரகநாதம், தெற்கே இராமநாதம். இவற்றுள் முதல் மூன்று தலங்களும் வைணவத் தலங்களாகும். நான்காவதான இராமநாதம் ஒன்றே சிவஸ்தலம். இத்தலத்தில் இராமநாதர் ஜோதிர்லிங்க மூர்த்தியாக திகழ்கிறார். இந்த ஜோதிர்லிங்கம் சுவாமி சன்னதியின் முதல் கிழக்கு பிரகாரத்தில் உள்ள சிறிய சன்னதியில் இருக்கிறது. இலங்கைமீது படையெடுத்து இராவணாதி அரக்கர்களை வென்று, அயோத்திக்குத் திரும்பும் வழியில், இராமபிரான் இராவணனைக் கொன்றதனால் ஏற்பட்ட பழியினைப் போக்கிக்கொள்வதற்கு இராமேஸ்வரத்தில் இறைவனை வழிபட்டார் என்றும், சீதாப்பிராட்டியினால் மணலில் அமைக்கப்பட்ட சிவலிங்கத்தைப் பிரதிஷ்டை செய்து வழிபட்டார் என்றும் புராண வாயிலாக அறியப்படுகிறது. இராமபிரான் சிவலிங்கம் ஸ்தாபித்து அவரை வழிபட்ட காரணத்தினால் இத்தலத்திற்கு இராமேஸ்வரம் என்று பெயர் ஏற்பட்டது. வடக்கே உள்ள காசியும் தெற்கே உள்ள இராமேஸ்வரமும் இந்துக்களின் சிறந்த புண்ணிய தலங்களாகக் கருதப்படுகின்றன. காசிக்கு புனிதப் பயணம் சென்றவர்கள் இராமேஸ்வரம் தலத்திற்கு வந்து தனுஷ்கோடி தீர்த்தத்தில் நீராடி இராமநாதரை வழிபட்டால் தான் காசி தலப் பயணம் முழுமை அடைந்ததாகும் என்பது இந்து சமயத்தினரின் நம்பிக்கையாகும். இராமாயணத் தொடர்புடைய இராமலிங்கத்தை வழிபட இந்தியாவின் பல்வேறு மொழிகள் பேசும் மக்கள், பல்வேறு மாநிலங்களிலிருந்தும் வருகின்றனர். எனவே, இராமேஸ்வரக் கோவிலை இந்தியாவின் ஒருமைப்பாட்டிற்குரிய ஒரு சிறந்த சின்னமாகக் கருதலாம்.

🍁பொது தகவல்🍁

பிரகாரத்தில் சீதை, மணலில் லிங்கம் பிடிக்க, அதற்கு ராமர் பூஜை செய்யும்
காட்சி சிலையாக வடிக்கப் பட்டுள்ளது. அருகில் ஆஞ்சநேயர், சுக்ரீவன் உள்ளிட்ட
வானர வீரர்களும் இருக்கின்றனர்.
மேலும் நளன், நீலன், கவனால் பூஜிக்கப்பட்ட சிவன் சன்னதிகளும்
இப்பிரகாரத்தில் உள்ளன.
சுவாமி சன்னதி பிரகாரத்தில் இரு லிங்கங்களுக்கு மத்தியில் சரஸ்வதி,
சங்கரநாராயணர், அர்த்தநாரீஸ்வரர், ஏகாதச ருத்ர லிங்கம் (11 லிங்கங்கள்)
ஆகியோர் அருளுகின்றனர்.
அம்பாள் சன்னதியில் அஷ்டலட்சுமி மற்றும் மேற்கு நோக்கிய சண்டிகேஸ்வரி
ஆகியோர் உள்ளனர்.

🍁பிரார்த்தனை🍁

இரட்டை விநாயகரை குழந்தை பாக்கியம் கிடைக்கவும், செல்வச்
செழிப்புக்காகவும் வேண்டிக்கொள்கின்றனர்.
நாகதோஷத்தால் பாதிக்கப்பட்டவர்கள், அக்னி தீர்த்தக்கரையில் நாகர்
பிரதிஷ்டை செய்து வேண்டிக் கொள்கிறார்கள்.

🍁நேர்த்திக்கடன்🍁

பிரார்த்தனை நிறைவேறியதும் சுவாமி, அம்பாளுக்கு வஸ்திரம் அணிவித்து
நேர்த்திக்கடன் நிறைவேற்றுகின்றனர்.

🍁தலபெருமை🍁

காசி, ராமேஸ்வரம் யாத்திரை செல்பவர்கள் முதலில் ராமேஸ்வரத்தில் அக்னி
(கடல்) தீர்த்தத்தில் நீராடி, மணல் மற்றும் தீர்த்தம் எடுத்துக்கொண்டு காசி செல்ல
வேண்டும்.

கங்கை தீர்த்தத்தில் மணலை போட்டுவிட்டு, விஸ்வநாதருக்கு அக்னி தீர்த்த
அபிஷேகம் செய்ய வேண்டும். அங்கிருந்து கங்கை தீர்த்தம் எடுத்து வந்து,
ராமநாதருக்கு அபிஷேகம் செய்ய வேண்டும். இவ்வாறு ராமேஸ்வரத்தில்
துவங்கி ராமேஸ்வரத்தில்தான் தீர்த்த யாத்திரையை முடிக்க வேண்டும்.
சிலரால் இது முடிவதில்லை. காசி செல்ல முடியாதவர்களுக்கு வசதியாக,
கோயிலிலேயே கங்கை தீர்த்தம் விற்கப்படுகிறது. மானசீகமாக காசி
விஸ்வநாதரை வணங்கி, இந்த தீர்த்தத்தை ராமநாதருக்கு அபிஷேகம்
செய்யக்கொடுக்கலாம்.

ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில்:-

புரட்டாசியில் வரும் மகாளய
பட்சத்தில் பித்ருக்கள் பூமிக்கு வருகின்றனர்.எமதர்மராஜா அவர்களை
விடுவித்து, அவரவர் குடும்பத்தினரை பார்த்து வர அனுமதியளிப்பார்.
"மகாளயம்'' என்றால் "கூட்டமாக பூமிக்கு வருதல்'' எனப்பொருள்.இந்த சமயத்தில்
அவர்களை வரவேற்று, தர்ப்பணம், ஸ்ரார்த்தம், பிண்டம் முதலான
காரியங்களைச் செய்ய வேண்டியது அந்தந்த குடும்பத்தினரின் கடமை.
இதனால் பிதுர் ஆசி கிடைத்து குடும்பம் முன்னேறும்.பிதுர் காரியங்களைச்
செய்ய சிறந்த தலம் ராமேஸ்வரம் ராமநாதர் கோயில்.

ஜோதிர்லிங்கம்:-

சிவபெருமான் ஜோதி ரூபமாக காட்சியளிக்கும் 12 தலங்கள்
இந்தியாவில் உள்ளன.அதில் ஒன்று ராமேஸ்வரம்.மற்ற 11 தலங்களும் பிற
மாநிலங்களில் உள்ளன.விபீஷணன், ராமருக்கு உதவி செய்ததன் மூலம்
ராவணனின் அழிவிற்கு அவனும் ஒரு காரணமாக இருந்தான்.
இந்த பாவம் நீங்க, இங்கு லிங்க பிரதிஷ்டை செய்து வழிபட்டான். அவனுக்கு
காட்சி தந்த சிவன், அவனது பாவத்தை போக்கியதோடு, ஜோதி ரூபமாக மாறி
இந்த லிங்கத்தில் ஐக்கியமானார். இதுவே, "ஜோதிர்லிங்கம்'' ஆயிற்று. இந்த
லிங்கம் சுவாமி சன்னதி பிரகாரத்தில் மேற்கு நோக்கி இருக்கிறது.

முதல் தரிசனம்:-

ஆஞ்சநேயர் தாமதமாக காசியிலிருந்து கொண்டு வந்த
லிங்கத்திற்கு, "விஸ்வநாதர்'' என்று திருநாமம் சூட்டப்பட்டுள்ளது.ராமநாதர்
சன்னதிக்கு இடப்புறமுள்ள சன்னதியில் இவர் இருக்கிறார்.விசாலாட்சிக்கும்
தனி சன்னதி இருக்கிறது. ஆஞ்சநேயர் சிரமப்பட்டு கொண்டு வந்த லிங்கம்
என்பதால், தன் பக்தனுக்கு மதிப்பளிக்கும் வகையில் முதலில் விஸ்வநாதருக்கு
பூஜை செய்ய ராமர் ஏற்பாடு செய்தார்.அதன்படி, இப்போதும் விஸ்வநாதருக்கு
பூஜை செய்யப்பட்டபின்பே, சீதாவால் உருவாக்கப்பட்ட ராமநாதருக்கு பூஜை
நடக்கிறது.

கோயிலுக்கு வருபவர்கள் விஸ்வநாதரை தரிசித்த பின்பே, ராமநாதரை தரிசிக்க
வேண்டும்.ஆஞ்சநேயர் கொண்டு வந்த மற்றொரு லிங்கம் கோயில் நுழைவு
வாயிலின் வலப்பக்கம் உள்ளது.

உப்பு லிங்கம்:-

ஒருசமயம் இக்கோயில் லிங்கம் மணலால் செய்யப்பட்டதல்ல
என்றும், அப்படியிருந்தால் அபிஷேகத்தின் போது கரைந்திருக்க வேண்டும்
என்றும் சிலர் வாதம் செய்தனர்.அப்போது பாஸ்கரராயர் என்ற அம்பாள் பக்தர்,
தண்ணீரில் எளிதில் கரையும் தன்மையுடைய உப்பில் ஒரு லிங்கம் செய்து,
அதற்கு அபிஷேகம் செய்தார்.அந்த லிங்கம் கரையவில்லை. அம்பாளை
வணங்கும் தன்னால் பிரதிஷ்டை செய்த லிங்கமே கரையாதபோது, சீதாதேவி
பிரதிஷ்டை செய்த லிங்கம் கரையாததில் ஒன்றும் அதிசயமில்லை என்று
நிரூபித்தார்.ராயர் செய்த உப்பு லிங்கத்தை பிரகாரத்தில், ராமநாதர் சன்னதிக்கு
பின்புறம் காணலாம்.உப்பின் சொரசொரப்பை அந்த லிங்கத்தைப் பார்த்தாலே
உணர முடியும்.

அக்னி தீர்த்தம் பெயர் ஏன்?:-

ராமேஸ்வரம் கடல், "அக்னி தீர்த்தம்''
என்றழைக்கப்படுகிறது.சீதையின் கற்பை நிரூபிப்பதற்காக, அவளை அக்னி
பிரவேசம் செய்யச் செய்தார் ராமர். சீதையைத் தொட்ட பாவம் நீங்க,
அக்னிபகவான் இங்கு கடலில் நீராடி தோஷம் நீங்கப்பெற்றார். எனவே, இந்த
தீர்த்தம் "அக்னி தீர்த்தம்'' என்று அழைக்கப்படுகிறது.சீதையின் கற்புத்திறன்
அக்னியையே சுட்டதாகவும், அந்த வெம்மை தாளாத அக்னி இந்தக் கடலில்
மூழ்கி தனது வெப்பத்தை தணித்ததாகவும் சொல்வதுண்டு.

காலில் சங்கிலியுடன் பெருமாள்:-

குழந்தை பாக்கியம் இல்லாத
சுந்தரபாண்டியன் என்னும் மன்னன், பெருமாளின் தீவிர பக்தராக
விளங்கினான்.அவனது குறையைத் தீர்க்க தன் மனைவி மகாலட்சுமியையே
அவரது மகளாக அவதரிக்கும்படி செய்தார் பெருமாள்.அவள் மணப்பருவம்
அடைந்தபோது, பெருமாள் ஒரு இளைஞனின் வடிவில் வந்து அவளிடம்
வம்பிழுத்தார்.

மன்னன் அந்த இளைஞனை சிறையில் அடைத்து, சங்கிலியால் காலைக்
கட்டிப்போட்டான். பக்தனின் பக்திக்கு கட்டுப்பட்ட பெருமாள், அவ்வாறு
சங்கிலியால் கட்டுவதற்கு இடமளித்தார். அன்றிரவில் இளைஞனாக வந்து
சிறையில் அடைபட்டிருப்பது தானே என்று மன்னனுக்கு உணர்த்தவே,
இருவருக்கும் திருமணம் செய்விக்கப்பட்டது.

இளைஞராக வந்த சுவாமி, இங்கு சேதுமாதவராக அருளுகிறார். அவரது காலில்
சங்கிலி கட்டப்பட்டிருக்கிறது. தீர்த்த யாத்திரை செல்பவர்கள் இவரது சன்னதி
முன்பு, கடல் மணலில் லிங்கம் பிடித்து வைத்து தங்கள் கோரிக்கைகளைச்
சொல்கிறார்கள். இவரது சன்னதி அருகில் லட்சுமி நாராயணர், யோக நரசிம்மர்
இருவரும் அருகருகில் காட்சி தருகின்றனர்.

தீர்த்தமாடுவதின் பலன்:-

பக்தர்கள் முதலில் தனுஷ்கோடி கடலில் நீராட
வேண்டும்.பின்ராமேஸ்வரம் கோயிலில் உள்ள 22 தீர்த்தங்களிலும்
பின்வரும் வரிசையில் நீராட வேண்டும்.இந்த தீர்த்தங்களில் நீராடினால்
ஏற்படும் பலனும் தரப்பட்டுள்ளது.

தீர்த்தமும் பலனும்:-

1.மகாலட்சுமி தீர்த்தம்: செல்வவளம்
2.சாவித்திரி தீர்த்தம்: பேச்சுத்திறன் (காயத்ரி மந்திரத்தின் உள்ளுயிராக
இருக்கக்கூடிய ஜோதி வடிவமான சக்தியே சாவித்திரி. இவள் பிரம்மாவின்
பத்தினி)
3.காயத்ரி தீர்த்தம்: உலகத்துக்கே நன்மை (இவளும் பிரம்மாவின் பத்தினி)
4. சரஸ்வதி தீர்த்தம்: கல்வி அபிவிருத்தி
5. சங்கு தீர்த்தம்: வாழ்க்கை வசதி அதிகரிப்பு
6. சக்கர தீர்த்தம்: மனஉறுதி பெறுதல்
7. சேது மாதவ தீர்த்தம்: தடைபட்ட பணிகள் சுலபமாக முடிதல்.
8. நள தீர்த்தம்,
9. நீல தீர்த்தம்,
10.கவய தீர்த்தம்,
11.கவாட்ச தீர்த்தம்,
12. கந்தமாதன தீர்த்தம்: எத்துறையிலும் வல்லுனர் ஆகுதல்.
13. பிரம்மஹத்தி விமோசன தீர்த்தம்,
14. கங்கா தீர்த்தம்,
15. யமுனை தீர்த்தம்,
16. கயா தீர்த்தம்,
17: சர்வ தீர்த்தம்: எப்பிறவியிலும் செய்த பாவங்கள் நீங்குதல்
18. சிவ தீர்த்தம்: சகல பீடைகளும் ஒழிதல்
19. சத்யாமிர்த தீர்த்தம்: ஆயுள் விருத்தி
20. சந்திர தீர்த்தம்: கலையார்வம் பெருகுதல்
21. சூரிய தீர்த்தம்: முதன்மை ஸ்தானம் அடைதல்
22. கோடி தீர்த்தம்: முக்தி (மறுபிறவி இல்லாத நிலை)

பாதாள பைரவர்:-

ராமர் இங்கு சிவபூஜை செய்தபோது அவரைப்பிடித்த
பிரம்மஹத்தி தோஷம் (கொலை செய்த பாவம்) விலகியது. அந்த தோஷம் எங்கு
செல்வதென தெரியாமல் திணறியது.அதனால் வேறு யாருக்கும் பாதிப்பு
உண்டாகாமல் இருக்க, சிவன் பைரவரை அனுப்பினார். அவர் பிரம்மஹத்தி
தோஷத்தை தன் திருவடியால் அழுத்தி, பாதாளத்தில் தள்ளினார். பின்னர்
இத்தலத்திலேயே அமர்ந்து, இங்கு வரும் மனம் திருந்திய பக்தர்களின் கொடிய
பாவங்களைப் பாதாளத்துக்குள் தள்ளுபவராக அருள் செய்கிறார். இவருக்கு
"பாதாள பைரவர்'' என்று பெயர். இவரது சன்னதி கோடிதீர்த்தம் அருகில் உள்ளது.

சுக்ரீவன் கோயில்:-

சீதையை மீட்பதற்கு உதவி செய்த சுக்ரீவனுக்கு
நன்றிக்கடனாக ராமர், அவனுக்கு அநீதி இழைத்த வாலியைக் கொன்றார். வாலி
அழிவதற்கு, சுக்ரீவனும் ஒரு காரணமாக இருந்ததால் அவனுக்கு தோஷம்
உண்டானது. தோஷ நிவர்த்திக்காக இங்கு ஒரு தீர்த்தம் உருவாக்கி, சிவனை
வழிபட்டு விமோசனம் பெற்றான். இந்த தீர்த்தத்துடன் கூடிய சுக்ரீவன் கோயில்,
ராமநாதர் கோயிலில் இருந்து ராமர் பாதம் செல்லும் வழியில் 2 கி.மீ., தூரத்தில்
இருக்கிறது.

காவியுடையில் இரட்டை விநாயகர்:-

பர்வதவர்த்தினி அம்பாள் சன்னதி
பிரகாரத்தில் சந்தான விநாயகர், சவுபாக்கிய விநாயகர் என இரண்டு
விநாயகர்கள் அடுத்தடுத்து இருக்கின்றனர். இவர்களுக்கு காவிஉடை
அணிவிக்கப்படுகிறது. விநாயகர், பிரம்மச்சாரி என்பதால் இவ்வாறு
அணிவித்திருப்பதாகச் சொல்கிறார்கள். குழந்தை பாக்கியம் கிடைக்கவும்,
செல்வச் செழிப்புக்காகவும் இவர்களிடம் வேண்டிக்கொள்கிறார்கள். இவர்கள்
தங்களுக்கென எதையும் வைத்துக் கொள்ளாமல், தங்கள் நிஜ பக்தர்கள்
கேட்பதையெல்லாம் கொடுத்து விடுவார்களாம். இதன் காரணமாகவும், இவர்கள்
காவியுடையை அணிந்துள்ளனர்.

பதஞ்சலி முக்தி தலம்:-

பல்லாயிரக்கணக்கான ருத்ராட்சங்கள் சேர்த்து
பின்னப்பட்ட ஒரு பந்தலின் கீழ் இத்தலத்து நடராஜர் காட்சி தருகிறார். இவரது
எதிரில் நந்தி இருக்கிறது. நடராஜர் சன்னதியின் பின்புறம் ஒரு கரம் மட்டும்
உள்ளது. இதற்கு தினமும் பூஜை நடக்கும். யோகக்கலையில் தேர்ச்சி பெறவும்,
நாகதோஷ நிவர்த்திக்காகவும் இந்த சன்னதியில் நம் கண்ணுக்கு தெரியாமல்
நாகவடிவில் மறைந்திருக்கும் பதஞ்சலி முனிவரிடம் வேண்டிக்கொள்ளலாம்.
பதஞ்சலி முக்தியடைந்த தலம் என்பதால், நம் கண்களுக்கு தெரியமாட்டார்.

விபீஷணன் ஸ்தாபித்த ரங்கநாதர்:-

அம்பாள் சன்னதி பிரகாரத்தில் பள்ளி
கொண்ட கோலத்தில் ரங்கநாதர் காட்சி தருகிறார்.ராமர் பூஜித்த ரங்கநாதரை
பெற்ற விபீஷணன், சந்தர்ப்பவசத்தால் அச்சிலையை காவிரிக்கரையில்
வைத்துவிட்டு, இலங்கை திரும்பினான். அப்போது தன் திருப்திக்காக, இங்கு
வேறொரு ரங்கநாதரை பிரதிஷ்டை செய்து வழிபட்டான். ஏழு தலையுடைய
ஆதிசேஷன் மீது சயனம் கொண்டுள்ள இந்த ரங்கநாதர், கையில் தண்டத்துடன்
காட்சியளிப்பது சிறப்பான அமைப்பு.

மூன்றாம் பிரகார சிறப்பு:-

முத்துராமலிங்க சேதுபதி மன்னர், இக்கோயிலில்
மூன்றாம் பிரகாரத்தை மிகப்பெரிதாகக் கட்டியுள்ளார்.1212 தூண்களுடன் கூடிய
இந்த பிரகாரம் 690 அடி நீளம், 435 அடி அகலம் கொண்டது.

ஸ்படிக லிங்க பூஜை:-

ராமேஸ்வரம் ராமநாதசுவாமி மூலஸ்தானத்தில்
ஆதிசங்கரர் பிரதிஷ்டை செய்த ஸ்படிக லிங்கம் இருக்கிறது. தினமும் காலை 5
மணிக்கு இந்த லிங்கத்திற்கு பாலபிஷேகம் செய்கின்றனர். இந்த
அபிஷேகத்திற்கு பின்பே, ராமநாத சுவாமிக்கு பூஜை நடக்கிறது. இந்த
அபிஷேகத்தை தரிசிக்க கட்டணம் உண்டு. பர்வதவர்த்தினி அம்பிகை பீடத்திற்கு
கீழே ஆதிசங்கரர் ஸ்தாபித்த ஸ்ரீசக்கரம் இருக்கிறது. சக்தி பீடங்களில் இத்தலம்,
"சேதுபீடம்'' ஆகும்.அம்பிகைக்கு சித்திரைப் பிறப்பன்று மட்டும் சந்தனக்காப்பு
அலங்காரம் செய்கின்றனர்.

12 ஜோதிர்லிங்க தரிசனம்:-

இந்தியாவிலுள்ள 12 ஜோதிர்லிங்கங்களையும்
ராமேஸ்வரம் தீர்த்தக்கரையிலுள்ள சங்கர மடத்தில் பிரதிஷ்டை செய்துள்ளனர்.
அந்தந்த சுவாமிக்குரிய விமான வடிவமும் அமைக்கப்பட்டுள்ளது. மேலும்,
முருகனின் 16 வடிவங்களையும் இங்கு தரிசிக்கலாம்.

விவேகானந்தர் வருகை:-

வீரத்துறவி விவேகானந்தர் 1897ம் ஆண்டு, ஜனவரி
27ல் ராமநாதசுவாமி கோயிலுக்கு வந்தார். அப்போது அவர் ஆற்றிய
சொற்பொழிவில்,"அன்புதான் சமயம். உடல், உள்ளம் இரண்டும் சுத்தமில்லாமல்
சிவனை வழிபடுவதால் ஒரு பலனும் இல்லை. உள்ளம், மன சுத்தத்துடன்
தன்னை பிரார்த்திப்பவர்களின் கோரிக்கைகளுக்கு சிவன் செவிசாய்க்கிறார்.

தூய்மையில்லாமல் கோயிலுக்குள் செல்பவர்கள், தங்களின் பாவங்களோடு
மேலும் ஒரு பாவத்தைச் சேர்த்துக் கொள்கிறார்கள். சிவனுக்கு சேவை செய்ய
விரும்புபவர்கள், அவரது படைப்புகளுக்கு சேவை செய்ய வேண்டும். தன்னால்
முடிந்தவரையில் பிறருக்கு தூய மனதுடன் உதவுபவனே, சிவபெருமானுக்கு
நெருக்கமாக இருக்கும் வாய்ப்பைப் பெறுகிறான்," என்று பேசியுள்ளதுடன்
பார்வையாளர் புத்தகத்திலும் கையெழுத்திட்டுள்ளார்.

தீவுக்குள் ராமர் கோயில்:-

விபீஷணன் தன் சகோதரன் ராவணனிடம்,
சீதையைக் கவர்ந்து வந்தது தவறு என்றும், அவளை ராமரிடமே
ஒப்படைக்கும்படியும் புத்திமதி கூறினான். ராவணன் அதை ஏற்க மறுக்கவே,
அவன் ராமருக்கு உதவி செய்வதற்காக ராமேஸ்வரம் வந்தான். அவனை தன்
தம்பியாக ஏற்றுக்கொண்ட ராமன், இலங்கையை வெற்றி பெறும் முன்பாகவே,
இலங்கை வேந்தனாக பட்டாபிஷேகம் செய்து வைத்தார். அந்த பட்டாபிஷேகம்
நடந்த இடத்தில், ராமருக்கு கோயில் உள்ளது. சுவாமிக்கு "கோதண்டராமர்''
என்பது திருநாமம். இவரது அருகில் விபீஷணன் வணங்கியபடி இருக்கிறான்.

அவனை ராமரிடம் சேர்க்க பரிந்துரை செய்த ஆஞ்சநேயரும் அருகில்
இருக்கிறார்.ராமேஸ்வரத்தில் இருந்து தனுஷ்கோடி செல்லும் வழியில் 12 கி.மீ.,
தூரத்தில், வங்காளவிரிகுடா, மன்னார்வளைகுடா ஆகிய இரு கடல்களுக்கும்
மத்தியிலுள்ள தீவில் இக்கோயில் அமைந்துள்ளது.

ராமாயண திருவிழா:-

ராமநாதர் கோயிலில் ராமர், லட்சுமணர், சீதை
ஆகியோர் உற்சவ மூர்த்திகளாக காட்சி தருகின்றனர். ஆனி மாதத்தில்
ராமலிங்க பிரதிஷ்டை விழா, வைகுண்ட ஏகாதசி, ராமநவமி மற்றும் ஆடி
அமாவாசை ஆகிய நாட்களில் இவர்கள் புறப்பாடாவர்.

ராமலிங்க பிரதிஷ்டையின்போது ராவணன் சீதையை கவர்ந்து செல்லுதல்,
அவனை ஜடாயு தடுத்தல், ஆஞ்சநேயர் இலங்கை செல்லுதல், ராமன்
ராவணனை வீழ்த்துதல், விபீஷணருக்கு பட்டாபிஷேகம் செய்தல், ராமர் லிங்க
பிரதிஷ்டை செய்தல் ஆகிய வைபவங்கள் நடக்கும்.

வால் இல்லாத ஆஞ்சநேயர்:-

காசியில் இருந்து தான் லிங்கம் கொண்டு
வரும் முன்பாக சீதையால் உருவாக்கப்பட்ட மணல் லிங்கத்திற்கு ராமபிரான்,
பூஜை செய்தது கண்டு ஆஞ்சநேயர் தன் தாமதத்துக்காக வருந்தினார்.
ஆனாலும், அந்த மணல் லிங்கத்தை வாலால் பெயர்க்க முயன்றார். இந்த
நிகழ்வின்போது அவரது வால் அறுந்தது. இதன் அடிப்படையில் வால் இல்லாத
கோலத்தில் ஆஞ்சநேயருக்கு தனிக்கோயில் இருக்கிறது. ராமநாதசுவாமி
கோயிலில் இருந்து 2 கி.மீ., தூரத்தில் இக்கோயில் உள்ளது. இங்கு கடல்
மணலால் உருவாக்கப்பட்ட மற்றொரு வால் இல்லாத ஆஞ்சநேயர் சிலையில்,
சிப்பி பதிந்திருப்பதைக் காணலாம்.

சீதையை மீட்பது குறித்து ராமர் ஆலோசித்த இடத்தில், "ராமர் பாதம்'' இருக்கிறது.
பொதுவாக கோயில்களில் தாழம்பூ வழிபாடு நடப்பதில்லை. இது எந்த
பாவத்தையும் தீர்க்கும் தலம் என்பதால், இங்கு சிவனுக்கு தாழம்பூவும்
சூட்டுகின்றனர்.

கருவறைக்கு பின்புறமுள்ள லிங்கோத்பவரின் எதிரில் பலிபீடம் உள்ளது
வித்தியாசமான அமைப்பு. வடநாட்டு பக்தர்கள் தலையில் ராமாயணம்
புத்தகத்தை சுமந்து கொண்டு ராமநாத சுவாமி சன்னதியை சுற்றி வந்து
வழிபடுகிறார்கள்.

🍁தல வரலாறு🍁

சிவபக்தனான ராவணனை அழித்ததால் ராமருக்கு பிரம்மஹத்தி தோஷம்
உண்டானது.தோஷம் நீங்க ராமேஸ்வரம் கடற்கரையில் சிவ பூஜை செய்ய
விரும்பினார்.இதற்காக சிவலிங்கம் கொண்டு வரும்படி ஆஞ்சநேயரை
அனுப்பினார். அவர் வர தாமதமாகவே, சீதை கடற்கரை மணலில்
லிங்கம்அமைத்தாள்.அந்த லிங்கத்தை ராமர் பூஜித்ததால் "ராமநாதசுவாமி''
என்ற திருநாமம் அமைந்தது.ராமர் வழிபட்ட தலம் என்பதால், சிவன்
சன்னதியில் பெருமாளுக்குரிய தீர்த்தம் பிரசாதமாக தரப்படுகிறது.
🙏சிவாயநம🙏

No comments:

Post a Comment

Followers

திண்டுக்கல் சென்றாயப்பெருமாள் ஆலயம்......

*திண்டுக்கல் மாவட்டம் தமிழ்நாடு கோட்டைப்பட்டி அருள்மிகு சென்றாயப்பெருமாள் ஆலயம்* *மூலவர் சென்றாயப்பெருமாள் முறுக்கு மீசை, தாடியு...