Wednesday, March 1, 2023

#விஷ்ணு_சக்தி பீடம் என்னும் மந்திர பீடமான #கும்பகோணம் என்ற #திருக்குடந்தை (திருக்குடமூக்கு) #மங்களாம்பிகை என்னும் #மந்திரபீடேஸ்வரி திருக்கோயில் வரலாறு:

புகழ்பெற்ற 
மாசி மாதம் மகாமக தீர்த்தவாரி நடைபெறும் தலமான, 51 சக்தி பீடங்களில் ஒன்றான 
#விஷ்ணு_சக்தி பீடம் என்னும் மந்திர பீடமான #கும்பகோணம் என்ற #திருக்குடந்தை (திருக்குடமூக்கு) 
#மங்களாம்பிகை என்னும் #மந்திரபீடேஸ்வரி திருக்கோயில் வரலாறு:
அம்மனின் சக்தி பீட வரிசையில், குடந்தை கும்பேஸ்வரர் கோயிலில் கோயில் கொண்டுள்ள மங்களாம்பிகை, விஷ்ணு சக்தி பீடத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். மந்திரிணி சக்தி பீடமாகவும் அழைக்கப்படும் இத்தலம், சிவபெருமானின் தேவாரப் பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் 89-வது தலம் ஆகும்.

கும்பேஸ்வரர் கோயில் தஞ்சை மாவட்டம், கும்பகோணத்தில் அமைந்துள்ளது. இது சம்பந்தர் மற்றும் அப்பரால் பாடல் பெற்ற சிவாலயம். பன்னிரு ஆண்டுகளுக்கு ஒருமுறை இத்தலத்தில் மகாமகம் சிறப்பாக நடைபெறுகிறது. 

திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர் ஆகியோரால் பாடல் பெற்ற இத்தலம் 1,300 ஆண்டுகள் பழமை வாய்ந்தது. சுயம்பு மூர்த்தியாக சிவபெருமான் அருள்பாலிக்கும் இக்கோயிலில் லிங்கம் கீழே பருத்தும், மேலே செல்லச் செல்ல ஊசி வடிவிலும் காணப்படுகிறது. சோழர்களால் கட்டப்பட்ட இக்கோயிலில் கல் நாகஸ்வரம் உள்ளது.

இந்திரன் முதலான திக் பாலகர்கள், காமதேனு, கார்த்தவீரியன், வீரவன்மன், மாந்தாதா, ஏமவாகுவின் மனைவி, கர்மசன்மா, சுவர்ணரோமன், காசிப முனிவர் உள்ளிட்ட பலர் இத்தலத்தில் வழிபாடு செய்துள்ளனர்.

தல வரலாறு:

முன்பொரு காலத்தில் உலகம் தண்ணீரால் அழிய இருந்தது. அப்போது பிரம்மதேவர், சிவபெருமானிடம், தான் படைப்புத் தொழிலை எங்கிருந்து தொடங்குவது என்று கேட்டார். சிவபெருமான், பிரம்மதேவரிடம், “புண்ணிய தலங்களில் இருந்து மணலைச் சேகரித்து, அமுதத்தோடு சேர்த்து மாயகும்பத்தை செய்ய வேண்டும். பிறகு கும்பத்தில் அமுதத்தை நிரப்பி, படைப்புக் கலன்களை அதனுள் வைத்து, நீரில் மிதக்க விடவும்” என்று கூறினார். அதன்படி பிரம்மதேவரும் கும்பத்தை செய்து, வெள்ளத்தில் மிதக்க விட்டார்.

கும்பம் ஓரிடத்தில் தங்கியதும், சிவபெருமான், அதன் மீது பாணத்தை எய்தார். அப்போது கும்பம் சிதைந்து, அதிலிருந்த அமுதம் அனைத்துப் பகுதியிலும் பரவியது. வெண்மணலுடன் கலந்த அமுதம் ஒரு லிங்கமாக உருவானது. அந்த லிங்கமே ‘கும்பேஸ்வரர்’ என்று அழைக்கப்படுகிறது. கும்பத்தை அலங்கரித்த மாவிலை, தர்ப்பை, உறி, வில்வம், தேங்காய் முதலான பொருட்கள், காற்றால் சிதைக்கப்பட்டு, அவை விழுந்த இடங்களில் தனித்தனி லிங்கங்கள் தோன்றின. அவை தற்போது தனிக்கோயில்களாக விளங்குகின்றன.

பிரம்மனின் வேண்டுகோளுக்கிணங்கி இறைவன் தந்த அமுத கலசம் தங்கியதால் இத்தலம் கும்பகோணம் எனப் பெயர் பெற்றது.கும்பத்தில் இருந்த அமுதத்தினின்றும் வெளிப்பட்டவராதலால், இக்கோயிலில் குடிகொண்டுள்ள இறைவன் கும்பேசர். பிரளய காலத்தில் மிதந்துவந்த அமுத கும்பத்தின் மூக்கின் வழியே அமுதம் பரவியதால் குடமூக்கு என்று சொல்லப்படும் இக்கோயில் உருவானது.

அமுத குடத்தை அலங்கரித்திருந்த பொருட்களான மாவிலை, தர்ப்பை, உறி, வில்வம், தேங்காய், பூணூல் முதலிய பொருட்கள் காற்றினால் சிதறடிக்கப்பட்டு, தாம் விழுந்த இடங்களில் எல்லாம் தனித்தனி லிங்கங்களாய்க் காட்சியளித்தன. அவை தனிக்கோயில்களாகவும் விளங்குகின்றன. இத்தலத்து இறைவன் ஆதிகும்பேஸ்வரர், அமுதகும்பேஸ்வரர், அமுதேசர் என்றெல்லாம் போற்றப்படுகிறார். சுயம்பு மூர்த்தியாக அருட்பாலிக்கிறார். லிங்கம் கீழே பருத்தும், மேலே செல்ல செல்ல ஊசி வடிவிலும் காணப்படுகிறது.

#மங்களாம்பிகை:

கும்பேஸ்வரர் கோயிலில் எழுந்தருளியிருக்கும் அம்பாளுக்கு மங்களநாயகி, மந்திரபீட நலத்தாள், மங்களாம்பிகை ஆகிய திருநாமங்கள் உண்டு. திருஞானசம்பந்தர் தனது பாடலில் மங்களாம்பிகையை ‘வளர் மங்கை’ என்று அழைக்கிறார். சிவபெருமான் பார்வதி தேவிக்கு தனது திருமேனியில் பாதியை வழங்கினார். அதே போல் தனது மந்திர சக்திகளில் 36 ஆயிரம் கோடியை மங்களாம்பிகைக்கு வழங்கியுள்ளார். அதனால் மங்களாம்பிகை ‘மந்திரபீடேஸ்வரி’ என்றும் அழைக்கப்படுகிறார். மஞ்சள் பட்டுடுத்தி, மஞ்சள் பூசி, குங்குமத் திலகமிட்டு, அம்பாள் அருள்பாலிப்பதைக் காண பக்தர்கள் எப்போதும் இந்த கோயிலில் குவிவது வழக்கம்.

கிழக்கு நோக்கிய தனி சந்நிதியில் நான்கு கரங்களுடன் மங்களாம்பிகை அருள்பாலிக்கிறார். வலது மேல்கரத்தில் அமுதக் கலசத்தையும், இடது மேல்கரத்தில் அட்சமாலையையும் தாங்கி அருள்பாலிக்கிறார். வலது கீழ் கரம் அபயகரமாகவும், இடது கீழ்க்கரம் ஊர்வ அஸ்தமாகவும் அமைந்துள்ளன.

கல்வியில் சிறந்து விளங்க, தொழிலில் மேம்பட, திருமணத் தடை நீங்க, குழந்தை வரம் கிடைக்க, செல்வம் பெருக இத்தலத்தில் பக்தர்கள் கூடி மங்களநாயகிக்கு வழிபாடு செய்வது வழக்கம். விநாயகப் பெருமான் அம்மையும் அப்பனுமே உலகம் என்று கூறுவதைப் போன்று, இக்கோயிலில் கும்பேஸ்வரர், மங்களாம்பிகை இருவரையும் சேர்த்தே வலம் வருவது போன்ற பிரகார அமைப்பு உள்ளது.

#ஆவணி ஞாயிறு:

கும்பேஸ்வரர் கோயிலில் ஆவணி ஞாயிறு தினத்தில் சிறப்பு பூஜைகள் செய்யப்படுகின்றன. மலையாள ஆண்டின் (கொல்லம்) தொடக்க மாதமாக ஆவணி (சிம்மம்) மாதம் உள்ளது. சூரியனின் நிலையைப் பொறுத்தே அந்த ஆண்டின் தட்ப வெட்ப நிலை அமையும் என்பதால் சூரிய பகவானை மகிழ்ச்சிப்படுத்தும் விதமாக ஆவணி மாதம் ஞாயிற்றுக் கிழமைகளில் விரதம் இருக்கும் முறை கடைபிடிக்கப்படுகிறது.
மேலும், பயிர்களை அழிக்கும் எலி போன்ற பிராணிகளிடம் இருந்து பாதுகாக்க நாகராஜாவுக்கும் இங்கு வழிபாடு நடைபெறுகிறது. உலகை மீண்டும் படைக்க கும்பேஸ்வரர் தோன்றியதால், இத்தலத்திலும் ஆவணி ஞாயிற்றுக் கிழமைகளில் சிறப்பு ஆராதனைகள், வழிபாடுகள் நடைபெறுகின்றன. ஆவணி ஞாயிற்றுக் கிழமைகளில் செம்பருத்தி மலர்களால் சுவாமிக்கு அர்ச்சனை செய்தால் அனைத்து ஐஸ்வர்யங்களும் கிட்டும் என்பது நம்பிக்கை.

#கோயில் அமைப்பு:

ராஜகோபுரம் தவிர மொட்டை கோபுரம் ஒன்றும் உள்ளது, தாராசுரம் பகுதியில் இருந்து வருபவர்கள், மொட்டை கோபுரம் வழியாக கோயிலுக்குள் நுழையலாம். ராஜகோபுரம் வழியாக நுழைந்து நீண்ட மண்டபத்தை கடந்தால், பலிபீடம், கொடிமரம், பெரிய நந்திதேவரைக் காணலாம். கும்பேஸ்வரரை வணங்கிய பின், பிரகார வலத்தில் 63 நாயன்மார்கள், சப்த மாதர்கள், காமதேனு, பவலிங்கம், சர்வ லிங்கம், ருத்ர லிங்கம், உக்ர லிங்கம் முதலான தெய்வங்களை வழிபடலாம். அங்கிருந்து மங்களாம்பிகை சந்நிதியை அடையலாம். பின்னர் அஷ்டபுஜ துர்கை, நவநீத விநாயகர், கிராத மூர்த்தி, பைரவர், ஜுரகேஸ்வரர், கோவிந்த தீட்சிதர், நாகாம்பாளை தரிசித்து, நவகிரக மண்டபத்தை அடையலாம்.

சிவபெருமானும் மங்களாம்பிகையும் ஆதியில் இத்தலம் வருவதற்கு முன்பே விநாயகர் இங்கு காத்திருந்ததாகக் கூறப்படுகிறது. அதனால் இத்தல விநாயகர் ‘ஆதி விநாயகர்’ என்று அழைக்கப்படுகிறார், இங்குள்ள கார்த்திகேயர் ஆறு முகம், ஆறு கரங்களுடன் உள்ளார். சூரசம்ஹாரத்துக்குச் செல்லும் முன், முருகப் பெருமான் இங்கு வந்து மந்திரபீடேஸ்வரியிடம் மந்திர உபதேசம் பெற்றுள்ளார். இத்தல கார்த்திகேயரை அருணகிரிநாதர் திருப்புகழில் பாடியுள்ளார்.

வேடர் (கிராதர்) வடிவில் வந்து அமிர்தம் நிறைந்த கும்பத்தை, சிவபெருமான் உதைத்ததால், இத்தலத்தில் கிராத மூர்த்திக்கு சந்நிதி அமைக்கப்பட்டுள்ளது. மகம் நட்சத்திர நாளில் இவருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் செய்யப்படுகின்றன. இதன் மூலம் விரும்பியது கிடைக்கும் என்பது ஐதீகம். நவராத்திர மண்டபத்தில் அமைந்துள்ள சிற்பங்கள், சிற்பக்கலைக்கு எடுத்துக்காட்டாக அமைந்துள்ளன. கோயில் முன்பு பொற்றாமரை குளமும் அமைந்துள்ளது. மகாமக திருவிழாவின்போது குடந்தை வரும் பக்தர்கள், பொற்றாமரைக் குளம், மகாமகக் குளம், காவிரி ஆகியவற்றில் நீராடுவது வழக்கம்.

மகாமக தீர்த்தம்

குடந்தை நகரின் நடுவே 3 ஏக்கர் பரப்பளவில் மகாமகக் குளம் அமைந்துள்ளது. பிரளய காலத்தில் அமிர்தம் நிறைந்த கும்பத்தில் இருந்து அமிர்தம் பொங்கியபோது, ‘பூமி குழிந்து தாங்குக’ என்று சிவபெருமான் நினைத்ததால், அமிர்தம் திரண்டு மகாமகக் குளத்தில் தங்கியது.

12 ஆண்டுகளுக்கு ஒரு முறை மாசி மாதத்தில் குரு பகவான் சிம்ம ராசியிலும், சூரிய பகவான் கும்ப ராசியிலும் பிரவேசிக்கும் பௌர்ணமி நாளில் கும்பகோணத்தில் மகாமக திருவிழா கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் கங்கை, யமுனை, கோதாவரி, நர்மதை, சரஸ்வதி, காவிரி, குமரி, பயோஷிணி, சரயு ஆகிய நதிகள் இங்கு வந்திருந்து நீராடி, தங்களது பாவங்களை போக்கிக் கொள்வதாக ஐதீகம்.

மகாமகக் குளத்தில், மகாமக தினத்தில் நீராடினால், நீராடுபவருக்கும் அவரைச் சேர்ந்த 7 தலைமுறையினருக்கும் புண்ணியம் உண்டு என்று புராணங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.

குடந்தை சப்தஸ்தானம்

குடந்தையை மையமாகக் கொண்டு குடந்தை சப்தஸ்தான விழா நடைபெறும். கும்பகோணம் ஆதி கும்பேஸ்வரர் கோயில், சாக்கோட்டை திருக்கலயநல்லூர் அமிர்தகலசநாதர் கோயில், தாராசுரம் ஆத்மநாதசுவாமி கோயில், திருவலஞ்சுழி, கபர்தீஸ்வரர் கோயில், கொட்டையூர் கோடீஸ்வரர் கோயில், மேலக்காவேரி கைலாசநாதர் கோயில், சுவாமிமலை சுந்தரரேஸ்வர சுவாமி கோயில் ஆகியன சப்தஸ்தான கோயில்கள் ஆகும். சித்திரை மாதம் மகாமகக் குளத்தில் நடைபெறும் சப்தஸ்தான நிகழ்ச்சியில், தீர்த்தவாரிக்குப் பிறகு, கும்பேஸ்வரரும், மங்களாம்பிகையும் இந்த ஏழு தலங்களுக்கும் பல்லக்கில் எழுந்தருள்வர்.

ஸ்ரீ மங்களாம்பிகை பிள்ளைத் தமிழ்

பொன்னூஞ்சல், நீராடல், அம்மானை, அம்புலி, வாரானை, முத்தம், சப்பாணி, தாலம், செங்கீரை, காப்பு ஆகிய பருவங்களை விளக்கி, மகாவித்வான் மீனாட்சி சுந்தரம் பிள்ளை, திருக்குடந்தை மங்களாம்பிகை மீது பிள்ளைத் தமிழ் இலக்கியத்தை அருளியுள்ளார்.

தளர்நடை பயிலும் குழந்தையாக மங்களாம்பிகையை பாவித்துப் பாடும்போது, “கண்டோர் பவத் துன்பு காணார்களாய்ப் பருங்களி ஆர்கலிக் கண்மூழ்கி” என்கிறார். மங்களாம்பிகையைக் கண்டாலே, பிறவிக்கடலில் மூழ்கிப் படும் துயரம் அனைத்தும் பறந்தோடும் என்கிறார். பேரானந்தம் கொண்டு உள்ளம் கடல்போல் ஆராவரிக்கும் என்று கூறி மகிழ்கிறார்.

சிவபெருமானின் பெருமைகள் அனைத்தும் அன்னை பார்வதியாம் மங்களவல்லிக்கே உரித்தாக்கப்படுகின்றன. வராக வடிவம் கொண்டு, சிவபெருமானின் அடியைத் தேடிச் சென்ற திருமால், அதைக் காணாது சோர்ந்து மீன்கள் நிறைந்த கடலுக்கு (பாற்கடல்) வந்து இளைப்பாறுகிறார். அன்னப் பறவை வடிவம் கொண்டு, உயர உயரப் பறந்து, சிவபெருமானின் முடியைக் காணாது, களைத்த பிரம்மதேவர், நிறைவாக அன்னையின் நடையால் கவரப்பட்டு, அன்னையைப் பின் தொடர்கிறார். மங்களாம்பிகையை வேண்டி, அவர்வழியில் செயல்பட்டால், அனைத்திலும் வெற்றி கிடைக்கும் என்ற பொருள்பட, பிள்ளைத் தமிழ் அமைந்துள்ளது.

திருவிழாக்கள்

மாசி மகத்தில் தீர்த்தவாரி, பங்குனி மாதத்தில் தெப்பத் திருவிழா, சித்திரையில் சப்தஸ்தான நிகழ்ச்சி, வைகாசியில் திருக்கல்யாணம், ஆனியில் திருமஞ்சனம், ஆடியில் பதினெட்டாம் பெருக்கும் இங்கு விமரிசையாக இருக்கும். ஆடிப்பூர தினங்களில் சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெறும். மாசி மக திருவிழாவில் அசுவதி தினத்தில் கொடியேற்றம் நடைபெற்று, எட்டாம் நாளில் வெண்ணெய்த் தாழி உற்சவம், ஒன்பதாம் நாளில் தேரோட்டம், பத்தாம் நாளில் மூஷிக, மயில், ரிஷப வாகனங்களில் பஞ்சமூர்த்திகள் புறப்பாடு நடைபெறும்.

சிவராத்திரி, நவராத்திரி, பிரதோஷ தினங்களில் சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, பல்வேறு வாகனங்களில் வீதியுலா நடைபெறும். நவராத்திரி தினங்களில் கோயில் முழுவதும், கொலுவைக்கப்படுவதும் அதைக் காண பல ஊர்களிலிருந்து பக்தர்கள் இங்கு வருவதும் வழக்கம்.

த்தர் அருட்பாலிக்கிறார். இவரை வணங்கினால் கிரக தோஷங்கள் நீங்கும். இறைவி மங்கள நாயகி, மந்திர பீடேஸ்வரி, மந்திரபீட நலத்தாள், வளர்மங்கை என அழைக்கப்படுகிறாள்.

தம்மை அன்போடு வணங்குவார்க்கு திவ்ய மங்களத்தை அருளும் மாட்சிமையால் மங்களநாயகி என்றும், 51 சக்திபீடங்களுள் ஒன்றான விஷ்ணுசக்தி பீடம் எனும் மந்திரபீடத்தில் விளங்குவதால் மந்திர பீடேஸ்வரி என்றும், தம் திருவடிகள் அடைந்தவர்களுக்கு மந்திரபீடத்தில் இருந்து நலம் தருதலால் மந்திரபீட நலத்தாள் என்றும் பெயர்கள் வழங்கப்படுகின்றன. மேலும் தம்மை வணங்குவோருடைய நோய்களைப் போக்கச் செய்வதால் நோயறுக்கும் பரை என்ற பெயரிலும் இந்த அம்பிகை வணங்கப்படுகிறாள். திருஞானசம்பந்தர் இத்தல அம்பாளை வளர்மங்கை என தேவாரப்பதிகத்தில் குறிக்கின்றார்.

இறைவன் திருச்செங்கோட்டுத்தலத்தில் தம்முடைய சரீரத்தில் பாதியை அம்பாளுக்கு அளித்தது போன்று, இத்தலத்தில் தம்முடைய 36,000 கோடி மந்திர சக்திகளையும் அம்பாளுக்கு வழங்கியதால் அம்பாள் மந்திரபீடேஸ்வரியாகத் திகழ்கின்றாள். அத்துடன் தமக்குரிய 36,000 கோடி மந்திர சக்திகளையும் சேர்த்து 72,000 கோடி சக்திகளுக்கு அதிபதியாக அருட்பாலிக்கின்றாள். அம்பாளின் உடற்பாகம் பாதநகம் முதல் உச்சிமுடி வரை 51 சக்தி வடிவ பாகங்களாகக் காட்சியளிக்கின்றன. மற்றைய தலங்களில் உள்ள சக்தி பீடங்கள் ஒரே ஒரு சக்தி வடிவை மட்டும் கொண்டது.

அம்பாள் மஞ்சள் பட்டு உடுத்தி முகத்தில் மஞ்சள் பூசி, குங்கும திலகம் இட்டு அருட்பாலிப்பதை பார்த்துக் கொண்டே இருக்கலாம். கல்வியில் சிறந்து விளங்க நினைப்பவர்கள், தொழில் துவங்குபவர்கள், திருமணத்தடை உள்ளவர்கள், குழந்தை பாக்கியம் வேண்டுபவர்கள், குபேர வாழ்வு விரும்புபவர்கள் மங்கள நாயகிக்கு ஆவணி மாத ஞாயிற்றுக்கிழமைகளில் செம்பருத்திப் பூவால் அலங்காரம் செய்து அர்ச்சனை செய்தால் வேண்டியது கிடைக்கும் என்பது நம்பிக்கை. மனிதர்கள் தங்களது பாபங்களைப் புண்ணிய நதிகளில் தலைமூழ்கி விட்டுச் சென்றதால் பாபத்தின் சுமை தாங்க முடியவில்லை என கங்கா, பிரம்மபுத்ரா, யமுனா, குபேர, கோதாவரி, நர்மதை, காவேரி, சரயூ, கன்யா ஆகிய நதிகள் மங்களாம்பிகையிடம் முறையிட்டன.

அவை மகாமகக் குளத்தில் கலந்தால், பாவங்கள் தொலையும் என மங்களாம்பிகை திருவாய் மலர்ந்தருளினாள். காசியில் புரியும் பாவம், ராமேஸ்வரத்திலும், ராமேஸ்வரத்தில் புரியும் பாவம் காசி கங்கையிலும் தீரும். கும்பகோணத்தில் புரியும் பாவம் மகாமக குளத்தில் மூழ்கினாலே தீரும் என்கிறது புராணம். சிறப்பு பெற்ற இக்கோயிலில் ஆண்டுதோறும் ஆவணி மாதம் மூன்றாவது ஞாயிற்றுக்கிழமையில் மங்களாம்பிகை அம்மனுக்கு புஷ்பாபிஷேகம் நடத்தப்படுகிறது.

அப்போது நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் கோயிலிலிருந்து ரோஜா, அரளி, மல்லிகை, மரிக்கொழுந்து, கதிர்பச்சை, செண்பகப்பூ, தாழம்பூ, செவ்வந்தி, விருட்சிப்பூ போன்ற மலர்களை கூடைகளில் எடுத்துக்கொண்டு யானை முன்னே செல்ல ஊர்வலமாக செல்வர். கோயில் பிராகாரத்தை வலம் வந்து, கொடிமரம் அருகே சென்று பூக்களை வைப்பர்.அதன் பிறகு மங்களாம்பிகைக்கு சிறப்பு புஷ்பாபிஷேகமும், தொடர்ந்து ஆராதனையும், தீபாராதனையும் நடைபெறும். மந்த்ரபீடேஸ்வரியாய் மங்களங்கள் அருளும் மங்களாம்பிகையை  சரணடைவோம்.

ஓம் சக்தி 🙏🙏🙏
திருச்சிற்றம்பலம் 🙏

No comments:

Post a Comment

Followers

திருவாசி மாற்றுரைவரதீஸ்வரர் (பிரம்மபுரீஸ்வரர்) திருச்சி....

திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் உள்ள புகழ்பெற்ற தேவாரப் பாடல் பெற்ற சோழநாட்டு தலங்களில் ஒன்றான,  சுந்தரமூர்த்தி நாயனார்  பொன் பொர...