Tuesday, April 25, 2023

#இராஜராஜசோழனின் சகோதரி #குந்தவை_பிராட்டியார் கட்டிய #திருச்சி மாவட்டத்தில்1400 ஆண்டுகளுக்கு மேல் பழமையான #திண்ணியம்#சுப்ரமண்யசுவாமி (ஷண்முகர்) திருக்கோயில் வரலாறு:

#இராஜராஜசோழனின் சகோதரி 
#குந்தவை_பிராட்டியார் கட்டிய 
#திருச்சி மாவட்டத்தில்
1400 ஆண்டுகளுக்கு மேல் பழமையான 
#திண்ணியம்
#சுப்ரமண்யசுவாமி (ஷண்முகர்) திருக்கோயில் வரலாறு:
திருச்சி மாவட்டம், லால்குடி வட்டம், திண்ணியத்திலுள்ள அருள்மிகு சுப்ரமணிய (சண்முக) சுவாமி திருக்கோயில்.

திருச்சி மாவட்டத்திலிருந்து சுமார் 35 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள இத்திருக்கோயில் பல்வேறு சிறப்புகளைத் தன்னகத்தே கொண்டிருக்கிறது. மற்ற சிவன் கோயில்களில் முருகப்பெருமான் சன்னதியில் வள்ளி-தேவசேனா சமேதராய் ஒரே மயில் வாகனத்தில் சுப்ரமணிய சுவாமி எழுந்தருளியிருக்கும் நிலையில், இக்கோயிலில் மூவரும் தனித்தனி மயில் வாகனத்தில் எழுந்தருளியிருப்பது தனிச்சிறப்பாகும். மேலும் எண்ணியதைத் தருவார் திண்ணியம் முருகன் என்றும் கூறுவர்.

மூலவர்: சுப்ரமண்ய சுவாமி,கோடீசுவரர்
அம்மன்: பிருகந்த நாயகி,வள்ளி தெய்வானை
தல விருட்சம்: வில்வம்
ஊர்: திண்ணியம், லால்குடி
மாவட்டம்: திருச்சி 
மாநிலம்: தமிழ்நாடு

ராஜ ராஜ சோழனின் சகோதரி குந்தவை, முருகப் பெருமானுக்கு கோயில் கட்ட ஆசைப்பட்டு, மாட்டு வண்டியில் சிலைகளை எடுத்துச் செல்லும் போது, ​​அந்த வண்டி சேற்றில் சிக்கி நகராமல் போனதாக நம்பப்படுகிறது. இந்த இடத்தில் கோவில் கட்ட அவள் முடிவு எடுத்தாள். 

#தல வரலாறு:

தேவர்களின் காலை சந்தியாகாலமாகிய மார்கழி; மாலை சந்தியாகாலமாகிய ஆடி; இந்த இரண்டு மாதங்களைத் தவிர, மற்ற மாதங்களில் எல்லாம் கும்பாபிஷேகம், பிரம்மோத்ஸவம் என சோழவள நாட்டில் கோலாகலம் மிகுந்திருக்கும் என்று சொல்வார்கள்.

அப்படி ஓர் ஊரில் சோழ தேசத்தில் புதிதாக ஒரு சிவாலயம் எழுப்ப முடிவு செய்யப்பட்டது. நல்லதொரு நாளில் திருப்பணிகளும் ஆரம்பமாயின. வெகு தூரத்திலிருந்து கொண்டுவரப்பட்ட பாறைகள் எல்லாம் சோழச் சிற்பிகளின் கைவண்ணத்தில் தூண்களாகவும், மண்டப விதானங்களாகவும் மாறின.
கோயிலில் பிரதிஷ்டை செய்யவேண்டிய தெய்வத் திருமேனிகளை வெளியூரில் செய்து கொண்டுவரத் திட்டமிட்டிருந்தார்கள்.

அதன்படி, அழகிய சிவலிங்கமும் வள்ளி- தெய்வானை உடனான முருகப் பெருமானின் திருவிக்கிரகமும் செதுக்கப்பட்டு, வண்டியில் ஏற்றிக் கொண்டுவரப்பட்டது. வழியில் ஓரிடத்தில் அச்சாணி முறிந்து, வண்டி குடைசாய்ந்தது.
தெய்வ விக்கிரகங்கள் தரையில் விழுந்தன. வண்டியுடன் வந்தவர்கள் பதறிப்போனார்கள். அந்த விக்கிரகங்களைத் தூக்க முயற்சிக்க, அவை சிறிதும் அசைந்து கொடுக்கவில்லை.
தங்கள் ஊர் கோயிலில் குடியிருத்தி, நித்தம் நித்தம் ஆடை- ஆபரணங்கள் பூட்டி, தினம் ஒரு வகை நைவேத்தியம் படைத்து பூஜிக்க வேண்டும். வருடம் தவறாமல் விழா எடுத்துக் கொண்டாட வேண்டும். அதன் பலனால் பிணியும் வறுமையும் அகன்று தங்கள் ஊர் செழிக்கும்.

தேசமும் வளம் பெறும்... இப்படியான கனவுகளோடு ஆசை ஆசையாக அல்லவா அந்த தெய்வ விக்கிரகங்களை அவர்கள் எடுத்துவந்தார்கள்.

அதுமட்டுமா? ஓர் ஊரில் கோயில் கட்டுகிறார்கள் என்றால், அங்கே அதன் காரணம் விளக்கப்படும். ‘இதுவொரு புண்ணிய பூமி. தெய்வ சங்கல்பத்தால் இப்படியானதொரு அனுக்கிரகம் இங்கே விளைந்தது என்று புராணங்களில் சொல்லப்பட்டிருக்கிறது.

பெரியோர்களும் கதை கதையாய்ச் சொல்லி வைத்திருக்கிறார்கள். அதன் காரணம்தொட்டு ஆதிகாலத்தில் இங்கே சின்னதாக ஒரு கோயிலும் இருந்தது; இப்போது இல்லை. நாங்கள் கட்டுகிறோம்.

அதன் மூலம், காலம்காலமாக எங்கள் முன்னோரும் நாங்களும் வசித்து வரும் எங்கள் ஊரின் பெருமையை, வெளியே எடுத்துச் சொல்ல முடியும். அதையறிந்து வெளியூர்வாசிகளும் தேசாந்திரிகளும் அதிகம் வருவார்கள்.

கூட்டம் கூடும். உள்ளூர்க் காரர்களுக்கு வணிகம் பெருகும்...’ இப்படி, வழிபாட்டின் அடிப்படையாக மட்டுமின்றி, வாழ்க்கையின் ஆதாரமாகவும் அமைந்திருந்தன ஆலயங்கள்.

அந்த அன்பர்களும் தங்கள் ஊரின் பெருமையை வெளிக்காட்ட, தங்களின் வாழ்க்கை வளப்பட ஓர் ஆலயம் வேண்டும் என விரும்பினார்கள். அதற்காகவே அழகழகாய் தெய்வத் திருமேனிகளைச் செய்து, வண்டியில் ஏற்றி வந்தார்கள். ஆனால், இறை சித்தம் வேறுவிதமாக அமைந்திருந்தது.

கீழே விழுந்த விக்கிரகங்களை அசைக்க முடியாமல் போகவே, அந்த அன்பர்கள், அங்கேயே அழகாக ஓர் ஆலயம் எழுப்பிவிட்டனர். அதாவது, தெய்வமே விரும்பி ஓரிடத்தில் குடியேறியது. அந்த இடம். இன்றைக்கும் அன்பர்கள் எண்ணியதை எண்ணியபடி நிறைவேற்றித் தரும் மிகப் புண்ணியம் வாய்ந்த திருத்தலமாகத் திகழ்கிறது! அந்த ஊர்
.... திண்ணியம்.

அதேபோல் சிவனாரையும் முருகனையும் ஒரே இடத்தில் நின்று, ஒரே நேரத்தில் தரிசிக்கமுடியும் என்பது இத்தலத்தின் சிறப்பம்சம். உத்ஸவர் முருகன் வள்ளி- தெய்வானையுடன் மயிலின் மீது அமர்ந்த கோலத்தில் அருள்கிறார். இவரின் திருமேனியும் வெகு அழகு.

#வரலாற்றுச்சிறப்பு:

இந்த கோயில் ஏற்பட்டு ஏறக்குறை 1400 ஆண்டுகள் ஆகிறது. சோழர்கள் காலத்தில் கோயில்கள் அனைத்தும் புத்துயிர் பெற்றன. அகண்டு விரிந்த நதியாக, கிளை ஆறுகளாக, சிறு ஓடைகளாக விவசாயத்தைப் பெருக்க ஊடறுத்தது காவிரி நதி. அந்தக் காலத்தில் ஊருக்கு ஊர் திருக்கோயில்கள் கட்டப்பட்டன. அந்த கோயில்களில் பிரதிஷ்டை செய்வதற்காக சிவலிங்கம், முருகன், வள்ளி-தேவசேனா போன்ற சிலைகளை உருவாக்கி, எடுத்துச் செல்வது வழக்கம்.

அந்த வகையில் ஒரு ஊரில் புதிதாக சிவன் கோயில் எழுப்ப முடிவு செய்யப்பட்டது. இதற்கான திருப்பணிகளும் தொடங்கின. வெகு தொலைவிலிருந்து கொண்டு வரப்பட்ட பாறைகள் எல்லாம் சோழ சிற்பிகளின் கைவண்ணத்தில் தூண்களாகவும், மண்டப விதானங்களாகவும் மாறின. கோயிலில் பிரதிஷ்டை செய்ய வேண்டிய தெய்வத் திருமேனிகளை வெளியூர்களிலிருந்து செய்து கொண்டுவரத் திட்டமிட்டிருந்தார்கள்.

அதன்படி ஒரு அழகிய சிவலிங்கமும்,  வள்ளி-தேவசேனா தேவியருடன் முருகப்பெருமானின் திருவிக்கிரகமும் செதுக்கப்பட்டு, வண்டியில் ஏற்றிக் கொண்டுவரப்பட்டது. அவர்கள் சிலைகளைக் கொண்டு செல்லும் வழியிலேயே, வண்டியின் அச்சாணி முறிந்து வண்டியின் குடை சாய்ந்தது. தெய்வ விக்கிரகங்கள் தரையில் விழுந்தன. இதனால் வண்டியுடன் வந்த தொழிலாளர்களும், அடியார்களும் பதறிப்போய், அந்த விக்கிரகங்களைத் தூக்க முயன்றும் அவை சிறிதும் அசைந்து கொடுக்கவில்லை. அவற்றை அசைக்கவும் முடியவில்லை. சிறிதும் நகர்த்தக்கூட முடியவில்லை.

தங்கள் ஊர் கோயிலில் இறைவனை குடியிருத்தி தினமும் ஆடை-ஆபரணங்கள் பூட்டி நைவேத்தியம் படைத்துப் பூஜிக்க வேண்டும். ஆண்டுதோறும் விழா எடுத்துக் கொண்டாட வேண்டும். அதன் பலனால் பிணியும், வறுமையும் அகன்று தங்கள் ஊர் செழிக்கும், தங்கள் தேசமும் வளம் பெறும் என்ற கனவுகளோடு ஆசை-ஆசையாய் தெய்வ விக்கிரகங்களை எடுத்து வந்தபோது, இறைச் சித்தம் வேறுவிதமாக அமைந்தது.

குறிப்பிட்ட அந்த இடத்தில் ஏதோ இறை சாந்நித்தியம் இருப்பதை அனைவரும் உணர்ந்தனர். எனவே அந்த இடத்தில் அந்தச் சிலைகளை வைத்து ஒரு கோயிலை நிர்மாணிப்பது என்று தீர்மானித்தனர். அவ்வாறு நிர்மாணிக்கப்பட்ட கோயில்தான்  எண்ணியதை எண்ணியபடி நிறைவேற்றித் தரும் மிகப் புண்ணியம் வாய்ந்த திருத்தலமாக விளங்கும் திண்ணியம் அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோயில். 

#இறைவன்_கோடீசுவரர் :

கிராமத்தின் மையப்பகுதியில் அமைந்துள்ள இக்கோயிலில் இறைவன் கோடீசுவரர் என்ற திருநாமத்துடன் எழுந்தருளியுள்ளார்.  இந்த திருக்கோயில் இறைவனை ஒருமுறைத் தரிசிக்க கோடி மடங்கு புண்ணியத்தை வழங்கும் பேரருளாளன். தன்னை நாடி வரும் பக்தர்களின் தேவையை அளிக்கும் இறைவனாக கோடீசுவரர் திகழ்கிறார். தேவேந்திரன் பூஜித்த தலமாகும் இது விளங்குகிறது.

#இறைவி_பிருகந்தநாயகி

இத்திருக்கோயிலின் இறைவி பிருகந்தநாயகி என்றழைக்கப்படுகிறார். சாந்த சொரூபியாக நின்ற கோலத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்து வருகிறார். தன்னைத் தேடி வரும் பக்தர்களுக்கு வரத்தை வாரி வழங்கும் அம்மனாகத் திகழ்கிறார்.

சிறப்பு வாய்ந்த சுப்ரமணிய சுவாமி :

இக்கோயிலில் ஈசுவரன் எழுந்தருளியிருந்தாலும், பிரதான வாயிலில் முதன்மையாக சுப்ரமணிய சுவாமிதான் காட்சியளிக்கிறார். பொதுவாக சிவன் கோயில்களில் முருகன் சன்னதி அமைந்திருந்தாலும், சிவபெருமானைத் தரிசனம் செய்த பிறகே முருகப் பெருமானை தரிசிக்கும் வகையில் அமைப்பிருக்கும். ஆனால், இங்கு ஒரே இடத்தில் நின்று இருவரையும் தரிசிக்கும் வகையில் அமைக்கப்பட்டிருப்பது இக்கோயிலின் தனிச் சிறப்பாகும்.

மற்ற சிவன் கோயில்களில் மயில் வாகனத்தில் வள்ளி-சேவசேனா சமேதராய் அல்லது  தனியாகவோ முருகப்பெருமான் எழுந்தருளியிருப்பார். ஆனால், திண்ணியம் திருக்கோயிலில் மூவரும் தனித்தனியே மயில் வாகனத்தில் எழுந்தருளியிருப்பதும் தனிச் சிறப்பாகக் கருதப்படுகிறது. இதனால் எண்ணியதைத் தருவார் திண்ணியம் முருகன், குருவாக இருந்து அருளும் குமரன் எனப் பக்தர்களால் போற்றப்படுகிறார்.

மேலும் சிவன் கோயில்களில் குரு தட்சிணாமூர்த்திதான் தென்திசை நோக்கி வீற்றிருந்து, பக்தர்களுக்கு காட்சியளிப்பார். ஆனால், இக்கோயிலில் அருள்மிகு சுப்ரமணிய சுவாமி குரு அம்சத்துடன் தெற்குத் திசைநோக்கி எழுந்தருளி குருவாகத் தரிசனம் அளிக்கிறார். ஆதலால் இவரை வணங்கும் பக்தர்கள் சிறந்த கல்வி ஞானம் பெருகும் என்பது ஐதீகம்.

ஓராறு முகமும், ஈராறு கரங்களுமாகத் திகழும் திண்ணியம் அருள்மிகு சுப்ரமணியசுவாமிக்கு செவ்வரளி மற்றும் விருட்சிப்பூ மாலை சாத்தி வழிபட்டால், திருமணத் தடை நீங்கும், குழந்தை வரம் கிடைக்கும், கல்வியில் சிறந்து விளங்கலாம் என்பது ஐதீகமாகும்.

இக்கோயிலில் சுப்ரமணிய சுவாமியின் வலது கரம் அபயம் காட்டுகிறது. பக்தர்களைக் காக்கும் கரமாக விளங்குகிறது. அதேசமயம்  இடது கரம் ஹஸ்தமாக இல்லாமல், அரிச ஹஸ்தமாக உள்ளது.  அதாவது பக்தர்களின் கஷ்டங்களைத் தான்  உள் வாங்கிக்கொள்ளும் கையாக உள்பக்கமாக அணைந்தபடி உள்ளது. பிற பத்துக் கரங்களும் பக்கத்துக்கு ஐந்தாக அமைந்து, பக்தர்களின் துயர்களையெல்லாம் களைகின்றன. திண்ணியம் திருக்கோயிலுக்கு வந்து கந்தனையும், அவரது தாய், தந்தையையும் வழிபட்டால் தோஷங்கள் அகலும். விரைவில் திருமணம் கைகூடும் என்பதும் பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது.

#பிற சன்னதிகள் :

கோயிலின் உள்நுழைந்தால் கொடிமரம், மயில் வாகனம், இடும்பன் சன்னதி, பிரகாரத்தின் தென்மேற்கில்  ஸ்ரீ சித்தி விநாயகர் சன்னதி அமைந்துள்ளது. மேலும் நவக்கிரக நாயகர்கள் சன்னதியும் அமைந்துள்ளன. கோயிலின் தல விருட்சமாக வில்வமரம் உள்ளது.

எப்படிச் செல்வது? 

மதுரை போன்ற தென் மாவட்டங்களிலிருந்தும், டெல்டா மாவட்டங்களிலிருந்தும் வரும் பக்தர்கள் திருச்சி மத்திய பேருந்து நிலையம் வழியாக சத்திரம் பேருந்து நிலையம் வந்து, அங்கிருந்து நகரப் பேருந்துகள் மூலமாக லால்குடி, அன்பில் வழியாகவோ அல்லது லால்குடி, காட்டூர், செம்பரை வழியாகவோ திண்ணியம் கோயிலுக்குச் செல்லாம்.

கோவை, கரூர், ஈரோடு, திருப்பூர், நீலகிரி போன்ற மாவட்டங்களிலிருந்து வருபவர்கள் சத்திரம் பேருந்து நிலையத்தில் இறங்கி, லால்குடி வழியாக செல்லும் நகரப் பேருந்துகள் மூலமாக திண்ணியம் செல்லலாம்.

நாமக்கல், சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி போன்ற மாவட்டங்களிலிருந்தும், சென்னை, விழுப்புரம், கடலூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி போன்ற வடமாவட்டங்களிலிருந்து  பேருந்துகளில் வருபவர்கள் நெ.1.டோல்கேட்டில் இறங்கி, லால்குடி வழியாக திண்ணியம் செல்லும் பேருந்துகளில் கோயிலுக்குச் செல்லலாம்.

லால்குடியிலிருந்து திண்ணியம் கோயிலுக்குச் செல்ல ஆட்டோ வசதிகளும் உள்ளன. திருச்சி ஜங்ஷன் ரயில் நிலையம், விமான நிலையத்திலிருந்து லால்குடி வழியாக திண்ணியம் செல்ல கார், வேன் போன்ற வாகனங்கள் வசதியும் உள்ளது.

தொடர்புக்கு: 

திண்ணியம் அருள்மிகு சுப்ரமணியசுவாமி திருக்கோயிலுக்கு வருபவர்கள் 99439 46086 என்ற கைப்பேசி எண்ணைத் தொடர்பு கொள்ளலாம்.

திருச்சிற்றம்பலம் 🙏
முருகா 🙏

No comments:

Post a Comment

Followers

108 திருப்பதிகளில் வைணவத் திவ்ய தேசங்கள்...

12 ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப்பட்ட #திருமாலின்  108 திருப்பதிகளில் (வைணவத் திவ்ய தேசங்களில் ) நம் #தமிழகத்தில்_உள்ள #முக்க...