Tuesday, May 9, 2023

அருள்மிகு ஆஞ்சநேயர் திருக்கோயில் - பாலாற்றின் கரை - கோயம்புத்தூர்

அருள்மிகு ஆஞ்சநேயர் திருக்கோயில் - பாலாற்றின் கரை - கோயம்புத்தூர்
மூலவர்:-  ஆஞ்சநேயர் 

தல சிறப்பு:
இத்தலத்தில் உள்ள ஆஞ்சநேயர் பாலாற்றின் நடுவே படுத்த நிலையில் உள்ள பாறையில் வீரஆஞ்சநேயராக சுமார் ஐந்து அடி நீளத்தில் சுயம்பு மூர்த்தியாக எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். 

பிரகாரத்தெய்வமாக இல்லாமல் இத்தலத்தின் மூலவராக இருந்து அருள்பாலிக்கும் வீரஆஞ்சநேயரின் முகம் இலங்கையை நோக்கி திரும்பியுள்ளது. 

கோவிந்தமலை, விஸ்வாமித்திரர் தவம் செய்த தாடகநாச்சி மலை ஆகிய இரு புனிதம் வாய்ந்த மலைகளின் அடிவாரத்தில் அமைந்துள்ளது. இங்குள்ள இரட்டைமுகத்துடன் கூடிய விநாயகர் மிகவும் பிரசித்தி பெற்றவர்.இக்கோயில் சோழர்களால் கட்டப்பட்டது.

பொது தகவல்:
இத்தலத்தின் அருகே ஓரிடத்தில் சிறிய தீர்த்தம் போன்று நீர் வடிகிறது. அதில் இரண்டு நாகங்கள் இன்றுவரையிலும் எழுந்து நீராடி அவ்வப்போது சுவாமியின் கருவறைக்கு வந்து செல்வதாக அக்காட்சியை நேரில் கண்ட பக்தர்கள் சிலாகிப்புடன் தெரிவிக்கின்றனர். 

இங்கு யோகநரசிம்மர், சக்கரத்தாழ்வார், இரட்டைமுகத்துடன் கூடிய விநாயகர் ஆகியோரும் அருள்பாலிக்கின்றனர்.

வெள்ளாறு, கோயிலைத் தொட்டுக்கொண்டு தவழ்ந்தோடிக் குளுமை பரப்புகிறது. ஆழியாறு அணை, திருமூர்த்தி அணை மற்றும் அமராவதி ஆற்று அணையிலிருந்து வெளியேறும் தண்ணீர் ஒன்றாகி காட்டாற்று வெள்ளமாய் வந்து தண்ணீர் கரை புரண்டு ஓடும்போது வெண்ணிறத்தில் கழித்தோடுவதால், வெள்ளாறு என்றழைக்கப்படுகிறது. 

பாலாறு என்ற பெயரும் இதற்கு உண்டு. மலையிலே காய்த்துக் கனிந்து உதிர்ந்த பழங்களை படைத்துக்கொண்டிருந்தன. நாளடைவில் நீர்வரத்து குறைந்து போனதில் சுயம்பான அனுமன் மீது மணல் படிந்து மூடியது. 

காலம் கடந்த நிலையில் ஒருநாள், தன்னை வெளிப்படுத்தி அனுக்ரகம் வழங்க மனம் கொண்டார் மாருதி. இந்நிலையில் 1954-1955-ல் இப்பகுதியில் பெரும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

மலையிலிருந்து வரும் நீரை தடுத்து நிறுத்தி ஓர் அணை உருவாக்கவும், அதனைகோவை மாவட்டத்து பாசனத்துக்குப் பயன்படுத்தவும் திட்டமிடப்பட்டது. 

எவ்வளவோ முயன்றும் அணைகட்டுவது தடைப்பட்டது. அந்த நேரத்தில் ஒரு அலுவலரின் கனவில் ஆஞ்சநேயர் தோன்றி தான் துணையாக இருந்து அணை கட்ட உதவுவதாகக் கூறி, ஒரு பாறை அருகில் சென்று மறைந்து போனார்.

அந்த அலுவலர் கனவில் வந்த இடத்துக்குச் சென்று சுத்தப்படுத்தியபோது, அனுமன் பாறையில் பிரசன்னமாகி இருப்பதைக் கண்டார். உடனே வாயுபுத்ரனை வழிபட்டு பணியைத் துவக்க, ஆசியாவிலேயே பெரிய அணை (சுமார் 2 கி.மீ) 1962-ல் கட்டி முடிக்கப்பட்டது. 

அனுமனின் அருளால் கட்டி முடிக்கப்பட்ட அந்த அணையே ஆழியார் அணை. அனுமனின் ஆற்றல் அங்கே நிறைந்திருப்பதை அறிந்த பக்தர்கள் அந்த பகுதிக்குச் சென்று பாறையில் பதிந்து கிடந்த அனுமனை வழிபட்டு, தலங்களின் நியாயமான விருப்பங்கள் நிவர்த்தி ஆவதற்காக வணங்கத் தொடங்கினர்.

இங்கிருந்து ஆறு கல் மேற்கில் கோவிந்தன் மலையும், தென்கிழக்கில் தாடகையை ராமர் வதம் செய்த தாடக நாச்சிமலையும், தென்கிழக்குப் பகுதியில் கோபால்சாமி மலையும் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தலபெருமை:

ஆஞ்சநேயர் இலங்கை சென்ற போது பல மலைகளைக் கடந்து பறந்து சென்றார். அவ்வாறு சென்ற போது, அவர் கால் பதித்த இடமாகக் கருதப்படும் கோயம்புத்தூர் மாவட்டம் சண்முகபுரத்திலுள்ள பாலாற்றங்கரையின் நடுவிலுள்ள பாறையில் அவருக்கு சிலை வடிக்கப்பட்டுள்ளது.

1996- ல் அபிஷேகம் போன்ற ஆராதனைகளைச் செய்வதற்காக நின்ற வடிவிலமைந்த ஆஞ்சநேயர் திருவடிவம் ஒன்று. கன்னியாகுமரி மாவட்டம் மருந்து வாழ்மலையிலிருந்து கொண்டு வரப்பட்டு நிறுவப்பட்டுள்ளது.

பாலாற்றின் நடுவில் பாறைகளின் மேல் கலை நயம் மிகுந்த தோற்றத்துடன் கட்டப்பட்டுள்ளது. கோயில் மேற்புறம் ராமபிரானின் பாதங்கள் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ள ராமர் பாதம் சன்னதியும், கீழ்ப்புறம் ஆஞ்சநேயர் சன்னதியும் அமைந்துள்ளன.

தல வரலாறு:

கூப்பிய கரங்களுடனோ அல்லது வரம் தரும் மூர்த்தமாகவோ அனுமனை பல்வேறு தலங்களில் தரிசித்திருப்பீர்கள். ஒரே சன்னதியில் இரண்டு அனுமன்கள்; அதிலும் ஒரு திருமேனி கிடந்த கோலத்தில் சுயம்பு மூர்த்தமாக அமைந்திருக்க மற்றொரு திருவடிவம் சஞ்சீவி அனுமனாக காட்சியளிக்கிறது.

அனுமன் இரு வடிவில் காட்சி தருகிறார் என்றால், விநாயகரோ இங்கே இருமுகங்களுடன் துவி முககணபதியாக அருள்கிறார். ஆதியான விநாயகரும் அந்தமான அனுமனும் இங்கே இரு வடிவங்களுடன் காட்சி தருவதால், இங்கு வந்து வேண்டினால் இருமடங்கு பலன் கிடைக்கும் என்பது நம்பிக்கை. 

சீதையைத் தேடிவந்த அனுமன், அசோகவனத்தில் அன்னையைக் கண்டதும், ராமபிரான் குறித்த விவரங்களைத் தெரிவித்துவிட்டு, கணையாழியைத் தந்து கலக்கம் தீர்த்தான். 

பின்னர் அந்த நற்செய்தியை ராமரிடம் தெரிவிக்கப் புறப்பட்டான். வானில் தாவிப்பறந்தவன், வழியில் வெண்மை நிறைந்த ஆறு ஒன்று ஒரு மலையிலிருந்து இறங்குவதைக் கண்டான். அது தரையைத் தொடும் இடத்தில் பச்சைப்பசேல் என்று வனம் அடர்ந்து செழித்திருந்தது.

இலங்கையை எரித்தபோது, அசோகவனத்தில் இங்கும் அங்கும் தாவித்தாவி குதித்ததாலும், நெருப்பு, புகையினாலும் ஏற்பட்ட அழுக்குப் படிந்த உடலோடு இருந்த அனுமன் சற்றே ஆசுவாசம் கொள்ளவும் தன் தோற்றம் ராமபிரானுக்கு மகிழ்ச்சியான செய்தியை உணர்த்துவதாக இருக்க வேண்டும் என்பதற்காக நீராடி அழுக்கினைப் போக்கிக்கொள்ளவும் அந்த இடத்தில் இறங்கிச் செல்ல நினைத்தான். 

அதேசமயத்தில் அவனது வேகம் தடைப்பட்டு மேலும் பறப்பது தடைப்பட்டதால் ஆச்சரியம் அடைந்தான். என்ன காரணம் என அறிய முற்பட்டவன், தன் நிழல் கீழே ஓரிடத்தில் விழுவதையும், அது நகராமல் இருப்பதே தானும் அசைய இயலாமல் இருப்பதற்குக் காரணம் என்பதையும் உணர்ந்தான். 

எவ்வளவு முயன்றும் அவனது நிழல் அந்த இடத்தை விட்டு அகலாமல்  இருந்ததோடு, அவனை மேலே பறக்க விடாமலும் தடுக்கவே, கீழே இறங்கி, ஆர்ப்பரித்துச் செல்லும் அந்த காட்டாற்றை நோக்கி, புண்ணிய நதிகளே, நீங்கள் யார்? எங்கிருந்து வருகிறீர்கள்? என்றான். 

நாங்கள், தேவலோகத்து விரஜா நதிகள். அறம் நிலைக்கப் போகும் பூமியை வணங்கி வளப்படுத்த வானிலிருந்து இறங்கி வருகிறோம். ராமபிரான் இத்தலம் வரப்போகிறார். 

அவரது பாதம் பட்டால் எங்களுக்குப் புண்ணியம் சேர்ந்து பாவம் தொலையும். ராமகாரியத்தில் ஈடுபட்டுள்ள உங்கள் திருப்பாதமும் எங்கள் மேல் படவேண்டும் என்பதற்காகவே உங்கள் நிழலைக் கட்டிப் போட்டுத் தடுத்தோம். 

தாங்கள் இங்கே நீராடி ஜபம், தவம் முடித்து சிரம பரிகாரம் செய்துகொண்டு செல்லவேண்டும் என கேட்டுக் கொண்டன நதிகள். 

மகிழ்ந்த அனுமன், அவ்வாறே அந்த நதிகளின் ஆசையை பூர்த்தி செய்து அத்தலத்தில் சற்று நேரம் தங்கிப் பின்னர் தன் பயணத்தைத் தொடர்ந்து ராமபிரானிடம் சென்று அன்னை சீதையைப் பற்றித் தெரிவித்தான். 

அனுமன் வெகு வேகமாகப் பறப்பவர் என்பதால் அவரது நிழல் பூமியில் எங்கும் விழுவதில்லை. மாறாக நதிகள் அந்நிழலைச் சற்றுநேரம் இத்தலத்தில் பிடித்து நிறுத்தியதால் அவரது திருவுருவின் நிழல் இங்குள்ள ஒரு பாறையில் பட்டது. 

அது அப்படியே நிரந்தரமாக பதிந்து, சுயம்பு மூர்த்தியாக உருவானது. அந்த சுயம்பு மூர்த்தத்தை நதிகள் தினமும் தூய நீரால் சுத்தப்படுத்தி வழிபட்டு வந்தன. 

சுமார் ஐந்து அடி நீளத்திற்கு சுயம்புவாய் தோன்றியுள்ள அனுமனின் உருவில் வலது கை அபயம் அளிப்பதாகவும், இடது கை இடுப்பிலும் உள்ளது. வலது தோளில் இருந்து தொங்கும் மூட்டையில் சீதாப்பிராட்டியிடமிருந்து பெற்று எடுத்து வரும் சூடாமணி வைக்கப்பட்டுள்ளது. 

வால் பின்புறம் இருந்து புறப்பட்டு வளைந்து தலைக்கு மேல் சென்று சிறிய மணி ஒன்று கட்டப்பட்ட நிலையிலுள்ளது.

இலங்கையிலிருந்து வந்ததால் கால் தெற்கு நோக்கி அமைந்துள்ளது. நிழல் பதிந்து உருவான வடிவம் ஆதலால், வான் நோக்கிப் படுத்திருப்பது போன்ற தோற்றம் ஏற்படுகிறது.

No comments:

Post a Comment

Followers

திண்டுக்கல் சென்றாயப்பெருமாள் ஆலயம்......

*திண்டுக்கல் மாவட்டம் தமிழ்நாடு கோட்டைப்பட்டி அருள்மிகு சென்றாயப்பெருமாள் ஆலயம்* *மூலவர் சென்றாயப்பெருமாள் முறுக்கு மீசை, தாடியு...