Tuesday, September 19, 2023

பிள்ளையார் எறும்புகள் - பெயர் காரணம் ....☆☆☆

விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகள். ..

☆☆☆பிள்ளையார் எறும்புகள் - 
பெயர் காரணம் ....☆☆☆
நம் வீட்டில் அடிக்கடி காணும் ஒரு எறும்பு பிள்ளையார் எறும்பு. தேங்காய் பூவை வைத்தாலோ இனிப்புகளை கண்டாலோ கறுப்பு கலரில் காணப்படும் இந்த சுறுசுறு எறும்புகள் நிறைய ஓடிவந்து அதில் மொய்த்துக் கொள்ளும்.

பிள்ளையார் எறும்பு வந்தால் பிள்ளையாருக்கு நாம் எதையாவது வேண்டுதலை நிறைவேற்றவில்லையோ என்று வீட்டில் பேசிக்கொள்வார்கள்.

அந்த பிள்ளையார் எறும்பு வந்த கதை எப்படி தெரியுமா?

முப்பத்து முக்கோடி தேவர்கள் முதல் ஓரறிவு கொண்ட உயிரினங்கள் வரை எல்லா ஜீவன்களுக்கும் படி அளப்பவர் பரமேஸ்வரன். இதை அறியாதவளா பார்வதி தேவி? ஆனாலும் அவளுக்கு இந்த தொழிலை ஈசன் சரிவர கவனிக்கிறரா என்றொரு சந்தேகம். அதற்கு தீர்வு காண முனைந்தாள். 

சிறுபாத்திரம் ஒன்றை எடுத்து வந்து அதற்குள் கறுப்பு எறும்புகள் சிலவற்றை பிடித்து போட்டு மூடிவிட்டாள். இந்த எறும்புகளுக்கு ஈசன் எப்படி உணவளிக்கிறார் பார்க்கலாம் என்பது அவளது எண்ணம்.

மறுநாள் "ஸ்வாமி நேற்று எல்லா ஜீவராசிகளுக்கும் படியளந்தீர்களா?" என்று ஈசனிடம் கேட்டாள்.

உலகநாயகி தன்னோடு விளையாடுகிறாள் என்பது ஈசனுக்கு புரிந்தது. ஆனாலும் அதை வெளிக்காட்டிக் கொள்ளாமல், "இதில் என்ன சந்தேகம்? பாத்திரத்தில் நீ சிறை வைத்த எறும்புகளை பார்த்திருந்தால் இந்த கேள்விக்கு இடம் இருந்திருக்காது" என்றார் .

பார்வதி தேவி ஓடிச்சென்று பாத்திரத்தை திறந்து பார்த்தாள். சுறுசுறுப்புடன் சுற்றிக் கொண்டிருந்தன எறும்புகள். அத்துடன் சில அன்னப் பருக்கைகளும் கடந்தன. "வீணாக ஸ்வாமியை சந்தேகப்பட்டு விட்டோமே" என வருந்தினாள் தேவி.

"மகேஸ்வரி உனது ஐயம் விலகியதா? குறும்பாக கேட்ட பரமேஸ்வரன், "சரி சரி... விநாயகன் உன்னை தேடிக்கொண்டிருந்தான். போய் பார்" என்றார்.

விநாயகரை சந்தித்த பார்வதி அதிர்ந்து போனாள். ஒட்டிய வயிறும் வாடிய முகத்துடனும் இருந்தார் கணபதி.

"ஏனம்மா அப்படி பார்க்கிறீர்கள் எல்லாவற்றுக்கும் தாங்கள்தான் காரணம்" என்றார் விநாயகர்.

"என்ன சொல்கிறாய் நீ?" படபடப்புடன் கேட்டாள் பார்வதி தேவி.

"அன்னையே! அகிலம் ஆளும் நாயகனின் நித்திய தர்ம பரிபாலனத்தில் சந்தேகம் கொண்டது தாங்கள் செய்த முதல் தவறு. அடுத்தது அப்பாவி எறும்புகளை பட்டினி போடும் விதம் சிறையிட்டது. தாயின் பழி தனயனைதானே சாரும்? எனவே எறும்புகளின் பசியை நான் ஏற்றுக்கொண்டு தாங்கள் எனக்கு அளித்த அன்னத்தை எறும்புகளுக்கு இட்டேன். பட்டினி கிடந்ததால் எனது வயது சிறுத்து போனது." விளக்கி முடித்தார் விநாயகர்.

பார்வதி தேவி கண்கலங்கினாள். விநாயகரை அழைத்துக்கொண்டு சிவனாரிடம் சென்றவள், "ஸ்வாமி என்னை மன்னியுங்கள். நான் செய்த தவறுக்கு நம் மகனை வதைக்க வேண்டாம்" என்று வேண்டினாள்." 

வருந்தாதே தேவி! பக்தர்கள் என்பால் வைக்கும் நம்பிக்கை சற்றும் குறைவில்லாததாக இருக்க வேண்டும். அந்த நம்பிக்கைக்கு இணையான பூஜையோ வழிபாடோ கிடையாது. இதை உலக மக்களுக்கு உணர்த்த நடந்த திருவிளையாடலே இது. நீ உன் பிள்ளைக்கு அன்னம் அளித்தாய். அவன் அதை எறும்புகளுக்கு வழங்கினான். விநாயகரின் பெருமையை போற்றும் வகையில் அவை இனி பிள்ளையார் எறும்புகள் என்று அழைக்கப்படட்டும்" என்று அருளினார் .

பிறகு பார்வதி தேவியிடம் "எறும்பு உண்டது போக மீதம் உள்ள அன்னப் பருக்கைகளை விநாயகனுக்கு கொடு" என்றார். அப்படியே செய்தாள் பார்வதி. அந்த பருக்கைகளை உண்ட விநாயகரின் வயிறு பழைய நிலைக்கு திரும்பியது. அவரது பசியும் தீர்ந்தது.

No comments:

Post a Comment

Followers

சிவபெருமான் சுயம்பு வடிவமாகவும், சிவலிங்க வடிவமாகவும் நமக்கு காட்சியளிக்கிறார்....

கோயம்புத்தூர் வடக்கு தாலுகாவின் மிக உயர்ந்த சிகரம் (1615 மீ) மேல்முடி. ஒரு நாள் மலையேற்றத்திற்கு ஒரு நல்ல இடம்.  புரட்டாசி மாதத்...