Saturday, December 23, 2023

ராணிப்பேட்டை மாவட்டத்தில் அரக்கோணம் வட்டத்தி ஜலநாத ஈஸ்வரர் கோவில்.



தற்பொழுது ராணிப்பேட்டை மாவட்டத்தில் அரக்கோணம் வட்டத்தில் இருக்கக்கூடிய திருக்கோவில் 
இறைவன் திருப்பெயர் ஜலநாத ஈஸ்வரர் 

தாயார் திரு பெயர் கிரிராஜ கன்னிகாம்பாள் 

புராணப் பெயர் திரு ஊறல்

 தற்பொழுது தக்கோலம் என்று அழைக்கப்படுகிறது

 பன்னிரு திருமுறைகளில் திருஊறல் என்று இத்திருக்கோவில் குறிப்பிடப்படுகிறது.

இந்த பதிவில் இந்த திருக்கோவிலின் திருமுறை பாடல்கள் தொடர்பாக பார்க்க இருக்கிறோம் 

இத்திருக்கோவிலில் சம்பந்தர் பதிகம் பாடி இருக்கிறார்.இவை தவிர அப்பர், சுந்தரர் ஆகியோர் இத்திருத்தலத்தை தங்கள் பாடல்களில் குறிப்பிட்டுள்ளனர். பட்டினத்து பிள்ளையார், நம்பியாண்டார் நம்பி, சேக்கிழார் ஆகியோர் திரு ஊறல் திருத்தலத்தை தங்கள் பாடல்களில் ஏற்றி பாடியுள்ளனர்.

திருஞானசம்பந்தர் தேவாரம் 

முதல் திருமுறையில் திரு ஊறல் திருத்தலத்து தேவாரம் வகைப்படுத்தப்பட்டுள்ளது.

"மாறில் அவுணரரணம் மவை மாயவோர் 
வெங்கணையா லன்று
 நீறெழ எய்தவெங்கள் நிமலன் இடம் வினவில் 
தேறல் இரும்பொழிலும் திகழ் செங்கயல் பாய்வயலுஞ் சூழ்ந்த
 ஊறல் அமர்ந்த பிரான் ஒலியார் கழல் உள்குதுமே"

என்று தொடங்கி 10 பாடல்களைக் கொண்ட தொகுப்பாக ஒரு பதிகத்தை சம்பந்தப் பெருமாள் பாடியிருக்கிறார். இதில் ஆறாவது செய்யுள் சிதைந்து கிடைக்காமல் போயிருக்கின்றது.

அப்பர் பெருமான் தேவாரம் 

ஆறாம் திருமுறையில் திருத்தாண்டகத்தில் வைக்கப்பட்டுள்ளது. திருவதிகை வீரட்டானம் பாடும் போது தக்கோலம் திருத்தலத்தை ஒரு பாடலில் பாடுகிறார்.

"தெண்ணீர்ப் புனற் கெடில வீரட்டமுஞ் சீர்காழி வல்லந் திருவேட்டியும் 

உண்ணீரார் ஏடகமும் ஊறல் அம்பர் உறையூர் நறையூர் அரணநல்லூர்

விண்ணார் விடையான் விளமர் வெண்ணி மீயச்சூர் வீழி மிழலை மிக்க 

கண்ணார் நுதலார் கரபுரமுங் காபாலி யாரவர்தங் காப்புக்களே "

அப்பர் பெருமானின் திருத்தாண்டகத்திலே நமக்கு அள்ள அள்ள குறையாத தேவார திருத்தலங்கள் கொட்டிக் கிடக்கின்றன. ஒவ்வொரு பாடலிலும் பல்வேறு திருத்தலங்களை குறிப்பிடுவார். அவ்வகையிலே இந்த திரு ஊறல் திருத்தலத்தை குறிப்பிடக்கூடிய இப்பாடலில் மட்டும் கீழ்கண்ட திருத்தலங்கள் வருகின்றன. திருவதிகை வீரட்டானம் 
சீர்காழி 
திருவல்லம் 
திருவேட்டி இது வைப்புத்தலம்
 திருவேடகம் 
திருஊறல் 
அம்பர் 
உறையூர் 
நறையூர் 
அரணநல்லூர் இது அறையணி நல்லூர் எனப்படும் அரகண்டநல்லூர்
விளமல்
வெண்ணி 
திருமீயச்சூர்
திருவீழிமிழலை
கரபுரம்.

இவ்வாறு ஒரு பாடலில் மட்டும் இத்துணை திருத்தலங்கள் குறிப்பிடப்படுகிறது என்றால் திருத்தாண்டகத்தில் எவ்வளவு திருத்தலத்தை அப்பர் பெருமான் குறிப்பிடுவார் என்று சிந்தித்துக் கொள்ளுங்கள். பல திருக்கோவில்களை நாம் வைப்புத் தலம் என்று சொல்கின்றோம். இவை இன்றைய தேதிக்கு வைப்புத்தலமாக இருக்கலாம். இவ்வளவு திருக்கோவில்களை குறிப்பிட்டு பாடிய அப்பர் பெருமான் அவற்றில் ஒரு கோவிலை மட்டும் வைப்புத் தலமாக வைத்திருப்பாரா என்றால் நிச்சயமாக இல்லை. அந்த திருக்கோவிலுக்கும் தேவாரப் பாடல் இருந்திருக்கும் காலத்தால் அது நமக்கு கிடைக்காமல் போயிருக்கலாமே தவிர, அப்பர் பாடிய காலத்திலே இன்று நாம் வைப்பு தலம் என்று சொல்லக்கூடிய திருத்தலத்திற்கும் அப்பர் பெருமான் நிச்சயமாக தேவாரப் பாடல் பாடியிருக்க வாய்ப்புக்கள் உண்டு.

 பொதுவாக நாம் முழுப் பதிகங்கள் கிடைக்கப் பெறக்கூடிய திருத்தலத்தையே தேவார திருத்தலம் என்றும், ஏதாவது பதிகத்தில் குறிப்பிடப்படும் ஊருக்கு பதிகங்கள் இல்லை என்றால் அந்த திருத்தலத்தை நாம் தேவார வைப்பு தலம் என்றும் சொல்கின்றோம். ஆனால திருமாலின் 108 திவ்ய தேசங்களை குறிப்பிடுகையிலே ஒரு திருத்தலத்திற்கு ஒரு வரியில் பாடல் பெற்றிருந்தாலும் அத்திருத்தலத்தை திவ்ய தேசமாக கொள்கின்றார்கள். அவ்வகையிலே வைப்பு தலம் என்று சொல்லக்கூடிய திருத்தலத்திற்கு இன்றைய தேதியில் பாடல் கிடைக்காமல் இருந்திருக்கலாமே தவிர சம்பந்தர், அப்பர், சுந்தரர் காலத்தில் நிச்சயம் அந்த திருத்தலத்திற்கு பதிகங்கள் இருக்க வாய்ப்புகள் இருக்கின்றன.

ஆறாம் திருமுறையிலே திருத்தாண்டகத்திலே சேத்திரக்கோவை திருத்தாண்டகம் பாடும் பொழுதும் தக்கோலம் திருத்தலமானது குறிப்பிடப்படுகிறது.

உஞ்சேனை மாகாளம் ஊறல் ஓத்தூர்
    உருத்திர கோடி மறைக்காட் டுள்ளும்
மஞ்சார் பொதியின்மலை தஞ்சை வழுவூர்
    வீரட்டம் மாதானங் கேதா ரத்தும்
வெஞ்சமாக் கூடல்மீ யச்சூர் வைகா
    வேதீச்சுரம் விவீச்சுரம் வெற்றி யூரும்
கஞ்சனூர் கஞ்சாறு பஞ்சாக் கையுங்
    கயிலாய நாதனையே காண லாமே

இதோ அடுத்த தேவாரக் கோயில் கொத்துக்கள்
உஞ்சேனை மாகாளம் (உஜ்ஜயினி)
ஊறல்
ஓத்தூர் (செய்யாறு)
உருத்திர கோடி
மறைக்காடு 
பொதியமலை (குற்றாலம்)
தஞ்சை
வழுவூர்வீரட்டம்
மாதானம்
கேதாரம்
வெஞ்சமாக்கூடல்
மீயச்சூர்
வைகாவூர்
வேதீச்சரம்
விவீச்சுரம்
வெற்றியூர்
கஞ்சனூர்
கஞ்சாறு
பஞ்சாக்கை ஆகிய இடங்களில் கயிலாய நாதனைக் காணலாம்

சுந்தரர் சுவாமிகள் பாடல் 

இடையாறு திருத்தலத்தை பாடுகையிலே தக்கோலம் திருத்தலத்தை பாடுகிறார் 

சுற்றுமூர் சுழியல் திருச்சோபுரம் தொண்டர்

ஒற்றுமூர் ஒற்றியூர் திருவூறல் ஒழியாப்

பெற்றமேறி பெண்பாதியிடம் பெண்ணைத் தெண்ணீர்

எற்றுமூர் எய்த மானிடையாறிடை மருதே."

அடியார்கள் சென்று தொழுதெழும் ஊராக இங்கு குறிப்பிடப்படும் திருத்தலங்கள் ஆவன 

திருச்சுழி 

திருச்சோபுரம் 

திருவெற்றியூர்

திரு ஊறல் எனும் தக்கோலம்

 இடையாறு

பட்டினத்து பிள்ளையார் எழுதிய திருவேகம்பமுடையார் திருவந்தாதியில் திருஊறலைப் பற்றி ஒரு பாடலில் குறிப்பிடுகிறார்

ஆலையங் கார்கரு காவைகச்
    சூர்திருக் காரிகரை
வேலையங் கேறு திருவான்மி
    யூர்திரு ஊறல்மிக்க
சோலையங் கார்திருப் போந்தைமுக்
    கோணம் தொடர்கடுக்கை
மாலையன் வாழ்திரு வாலங்கா
    டேகம்பம் வாழ்த்துமினே

திருவாலங்காடு திருத்தலத்து இறைவனை பாடுகையிலே தக்கோலத்து திருத்தலத்தையும் இந்த பாடலில் ஏற்றி பாடுகிறார். இது தவிர திருக்கச்சூர் , திருக்காரி கரை எனும் ராமகிரி , திருப்போந்தை, திருவான்மியூர் ஆகிய திருத்தலங்களும் பட்டினத்து பிள்ளையாரின் இப்பாடலிலே வெளிப்படுகின்றன.

பன்னிரண்டாம் திருமுறையான பெரிய புராணத்தில் திருஞான சம்பந்த மூர்த்தி நாயனார் புராணத்தில் 1005,1006 வது பாடல்களாக கீழ்கண்ட பாடல்கள் தக்கோலம் தொடர்பாக வருகிறது 

திருத்தொண்டர் பலர்சூழத்
    திருவிற்கோ லமும்பணிந்து
பொருட்பதிகத் தொடைமாலை
    புரமெரித்த படிபாடி
அருட்புகலி யாண்டகையார்
    தக்கோலம் அணைந்தருளி
விருப்பினொடுந் திருவூறல்
    மேவினார் தமைப்பணிந்தார்

தொழுதுபல முறைபோற்றிச்
    சுரர்குருவுக் கிளையமுனி
வழுவில்தவம் புரிந்தேத்த
    மன்னினார் தமைமலர்ந்த
பழுதில்செழுந் தமிழ்மாலைப்
    பதிகஇசை புனைந்தருளி
முழுதும்அளித் தவர்அருளால்
    போந்தனர்முத் தமிழ்விரகர்

தேவ குருவான வியாழனின் தம்பி சம்வர்த்த முனிவர் இங்கு இறைவனை வணங்கி பேறு பெற்றதாக பெரியபுராணத்தில் குறிப்பிடப்படுகிறது.

தக்கோலம் திருத்தலத்தில் இருக்கக்கூடிய தட்சிணாமூர்த்தி அதிசயமான வடிவத்தில் தான் எழுந்தருளியிருக்கிறார். இது ஒரு வகையிலே பெரிய புராணத்து பாடலோடு ஒப்பிட்டு நோக்கத்தக்கதாக உள்ளது.

ஏயர் கோன் கலிக்காம நாயனார் புராணம் பாடும் பொழுது பெரிய புராணத்திலே 283 வது பாடலாக ஏயர் கோன் கலிக்காம நாயனார் புராணத்தில் தக்கோலம் தொடர்பான பாடல் வருகிறது

முன்னின்று தொழுதேத்தி
    முத்தாஎன் றெடுத்தருளிப்
பன்னும்இசைத் திருப்பதிகம்
    பாடிமகிழ்ந் தேத்துவார்
அந்நின்று வணங்கிப்போய்த்
    திருவூறல் அமர்ந்திறைஞ்சிக்
கன்னிமதில் மணிமாடக்
    காஞ்சிமா நகரணைந்தார்

திருவாலங்காட்டினிலே முத்தாமுத்தி என்று தொடங்கும் இசையமைந்த திருப்பதிகத்தை பாடி பின்னர் தக்கோலம் திருத்தலத்துப் பதியில் தங்கி வணங்கி திருக்காஞ்சி மாநகர் சென்றதாக பெரிய புராணத்தில் சேக்கிழார்  பதிவு செய்கிறார்.

#தக்கோலம் #tamilnadutourism #shivatemple #trending #தொண்டைநாடு #Saivam #tamil #tamilnadutemples

No comments:

Post a Comment

Followers

96 வகையான ஷண்ணவதி ஹோமங்களின் ரகசியம்...

96 வகையான ஷண்ணவதி ஹோமங்களின் ரகசியம் (1)சமித்துவகைகள் _13  (2)ஹோமதிரவியம் _45 (3) ரஸவர்க்கம்.           _8 (4) பழவர்க்கம்.      ...