Wednesday, August 21, 2024

திருமணத் தடை நீக்கும் தலமாக மணவாளேஸ்வரர் திருவேள்விக்குடி....

அருள்மிகு மணவாளேஸ்வரர் திருக்கோயில்,
திருவேள்விக்குடி, குத்தாலம் வட்டம்,
மயிலாடுதுறை மாவட்டம்
 – 609 801. 
*இறைவன் பெயர்: மணவாளேஸ்வரர், கல்யாணசுந்தரேஸ்வரர்

*இறைவி பெயர்: பரிமளசுகந்த நாயகி                                 

*தீர்த்தம்: கெளதுகாபந்தன தீர்த்தம்.                         

*பாடல் பெற்ற சிவத்தலம். பாடியோர்: சம்பந்தர், சுந்தரர். 
*சிவனிடம் உமாதேவி சற்று அலட்சியமாக நடக்க,  சிவபெருமான் சினங்கொண்டு உமாதேவியாரை பூவுலகில் பசுவாகி வாழ கட்டளையிட்டார். "தக்க சமயம் வரும்போது தோன்றி மணம் செய்துகொள்வேன்" என்றும் வரமளித்தார். உமாதேவியுடன் திருமகள், கலைமகள், இந்திராணி ஆகியோரும் பசு உருக்கொண்டு பூவுலகில் உலவி வந்தனர். திருமால் பசு மேய்ப்பவராக உருவெடுத்து அப்பசுக்களை பராமரித்து வந்தார். 
அம்பிகை உமாதேவி பொழிந்த பாலால் திருமேனி குளிரப்பெற்ற சிவபெருமான், அம்பிகைக்கு சுய உருவம் கொடுத்தருளினார்.                                 

*சுய உருவம் பெற்ற அம்பிகை, ஈசனை நினைத்து 16 திங்கள்கிழமை விரதம் இருந்து மணலால் லிங்கம் செய்து பூஜை செய்து வர, 17-வது திங்கள்கிழமை சிவபெருமான் தோன்றி உமாதேவியை திருமணம் செய்துகொண்டார் என்று தல புராணம் கூறுகிறது. 

*பார்வதி - சிவன் கல்யாணம் நடப்பதற்கு முன் செய்ய வேண்டிய திருமண சடங்குகள், கங்கண தாரணம், யாகம்  முதலியவை இத்தலத்தில்  நடைபெற்றதால்  "திருவேள்விக்குடி" என்ற பெயர் ஏற்பட்டது.   

*இறைவிக்கு கங்கணதாரணம் செய்தபடியால் இதற்குக் "கௌதுகாபந்தன க்ஷேத்திரம் " என்றும் பெயர். 

*பார்வதி சன்னதியில் திருமணமாகாதவரின் மணிக்கட்டில் கங்கணம்  கட்டப்படுகிறது.  

*இத்தலத்தில்   கல்யாணசுந்தரர் மற்றும் பார்வதி தேவியின்   திருமணக் கோலத்தை  காணலாம். இறைவன் தனது வலப்பக்கம் இருக்கும் அம்மனின் வலது கரத்தை ஏந்தியுள்ளார். 

*திருமணத் தடை நீக்கும் ஒரு பிரார்த்தனைத் தலமாக திருவேள்விக்குடி விளங்குகிறது. 
நீண்ட நாட்கள் திருமணம் ஆகாமல் தடை ஏற்பட்டவர்கள் இத்தலம் வந்து இறைவன் மணவாளேஸ்வரரை வழிபட்டால் விரைவில் திருமணம் நடைபெறும்.    

*பெளர்ணமி தினத்தில் காலை 9 முதல்  12.30 மணி வரை  திருமண தடை நீங்க யாகம் நடக்கிறது.  இந்த யாகத்தில் திருமணத் தடை உள்ள ஆண்கள்,  பெண்கள் இருபாலரும் கலந்து கொண்டு அர்ச்சனை செய்து வழிபடலாம்.   திருமணம்  முடிந்தவுடன் தம்பதிகள் இத்தலத்திற்கு வந்து சுவாமி அம்பாளுக்கு அர்ச்சனை செய்து நன்றி  சொல்லிவிட்டால் போதும்.     

*அரசகுமாரன் ஒருவனுக்கு திருமணம் நிச்சயம் செய்யப்பட்ட பின் பெண்ணின் பெற்றோர்கள் இறந்துவிட, அவளின் உறவினர்கள் அரசகுமாரனுக்கு பெண் தர மறுத்து அத்திருமணத்தை நிறுத்திவிட்டனர். அரசகுமாரன் இத்தல இறைவனை வேண்ட இறைவன் ஒரு பூதத்தை அனுப்பி அப்பெண்ணைக் கொண்டுவரச் செய்து அரசகுமாரனுக்கும் அப்பெண்ணுக்கும் திருமணம் செய்துவைத்தார். இதனால் திருமண தடை நீக்கும் ,சிறப்புத் திருத்தலமாக திருவேள்விக்குடி விளங்குகிறது.      

*இறைவனின் திருமணத்தலம் என்பதால் இங்கு நவகிரகங்கள் கிடையாது. அதற்கு பதில் ஈசனே ஈசான்ய மூலையில் அமர்ந்திருக்கிறார். 

*இத்தலத்திலுள்ள அர்த்தநாரீஸ்வரர் சிலாஉருவில் அம்பாள் "வலதுபுறமும்", இறைவன் இடதுபுறமும் உள்ளதைக் காணலாம்.   அர்த்தநாரீஸ்வரர் வழிபாட்டு முறையை முதன் முதலாக தொடங்கியதே திருவேள்விகுடியில் தான் என்றும் கருதப்படுகிறது.  

*தன்னைத்தானே சங்கல்பம் செய்து கொண்ட சங்கல்ப விநாயகர் இத் தலத்தில்  அருள் புரிகின்றார். விநாயகர் தன்னைப் போலவே ஒரு வடிவத்தை தன்னருகே உருவாக்கி, அந்தத் திருவுருவத்தையே அதாவது தன்னையே சங்கல்பம் செய்து கொண்டு, பிரிந்த தன் பெற்றோர் விரைவில் ஒன்று சேர பிரார்த்தித்தார்.  மேலும் இவர் ஆதி இரட்டை விநாயகர் என்றும் போற்றப்படுகிறார்.
இரட்டை பிள்ளையாரை தேய்பிறை சதுர்த்தியில்,  வழிபட்டால், செவ்வாய் தோஷத்தால் ஏற்படும் தீமைகள் விலகும். 

*அகத்தியர், வாதாபியைக் கொன்றதால் அவருக்கு ஏற்பட்ட சாபம் இத்தலத்தில்தான் நீங்கியது.  

*சம்பந்தர், சுந்தரர் பாடிய இத்தல பதிகங்கள் இரண்டும், திருத்தருத்தி தலத்தோடு இணைந்து பாடப்பெற்றுள்ளன. இத்தல இறைவன் திருத்துருத்தியில் பகல் காலத்திலும், திருவேள்விக்குடியில் இரவிலும் வீற்றிருந்து அருள்பவர் என்று திருஞானசம்பந்தர் தனது பதிகத்தில் குறிப்பிடுகிறார். 

*செம்பியன் மாதேவி, ராஜராஜ சோழன், பராக்கிரம சோழன் ஆகியோர் காலத்திய கல்வெட்டுகள் இக்கோயிலில் உள்ளன.  

*மயிலாடுதுறை - கும்பகோணம் சாலை வழியில் உள்ள குத்தாலத்தில் இருந்து வடகிழக்கே 3 கி.மீ. தொலைவில் திருவேள்விக்குடி சிவஸ்தலம் இருக்கிறது.

ஓம் நமசிவாய 
படித்து பகிர்ந்தது 
இரா இளங்கோவன் 
நெல்லிக்குப்பம்... 

No comments:

Post a Comment

Followers

திருவாசி மாற்றுரைவரதீஸ்வரர் (பிரம்மபுரீஸ்வரர்) திருச்சி....

திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் உள்ள புகழ்பெற்ற தேவாரப் பாடல் பெற்ற சோழநாட்டு தலங்களில் ஒன்றான,  சுந்தரமூர்த்தி நாயனார்  பொன் பொர...