Wednesday, September 25, 2024

நாகப்பட்டினம் எட்டுக்குடி முருகன் திருக்கோயில்.....

நாகப்பட்டினம் மாவட்டம் எட்டுக்குடியில் அமைந்திருக்கிறது எட்டுக்குடி முருகன் திருக்கோயில்.
 ஆதிப் படை வீடு என்று அழைக்கப்படும் அற்புதத் தலம் இது. பதினெண் சித்தர்களுள் ஒருவரான வான்மீகி சித்தர் ஜீவசமாதி அடைந்த 'பள்ளிப்படை ஸ்தலம்' என்ற மற்றுமொரு சிறப்பும் உண்டு. இங்கு தல விருட்சமாக வன்னி மரமும், தீர்த்தமாக சரவணப் பொய்கையும் திகழ்கிறது.
நாகப்பட்டினம் அருகிலுள்ள பொருள்வைத்தசேரி என்ற கிராமத்தில் தெய்வத்தன்மை வாய்ந்த சிற்பி ஒருவன் இருந்தான். "சரவணபவ' என்ற ஆறெழுத்து மந்திரத்தை ஓதிய வண்ணம் இருந்த இவன், அழகிய ஆறுமுகம் கொண்ட வேலவன் சிலையை செய்தான். அப்போது ஆட்சியில் இருந்த பரந்த சோழ மன்னன், அச்சிலையின் அழகைப்பார்த்து ஆனந்தம் கொண்டான். இது போல இன்னொரு சிலையை செய்யக்கூடாது என்பதற்காக, அந்த சிற்பியின் கட்டை விரலை வெட்டி விட்டான். அவன் வருத்தத்துடன் அருகிலுள்ள ஒரு கிராமத்திற்கு வந்தான். கைவிரல் இல்லாத நிலையிலும் கடுமையான முயற்சி எடுத்து மற்றொரு சிலையை செய்தான். அதை அவ்வூரை ஆண்ட குறுநில மன்னன் முத்தரசன் பார்த்தான். அந்த சிலையிலிருந்து ஒளி வீசியது. வேலை நிறைவு பெற்றதும் சிலைக்கு உயிர் வந்து, முருகன் அமர்ந்திருந்த மயில் பறக்க ஆரம்பித்தது. மன்னன் அந்நேரத்தில் வர அதை "எட்டிப்பிடி' என உத்தரவிட்டான். காவலர்கள் மயிலை பிடித்தனர். அதன் கால்களை சிறிதளவு உடைத்தனர். அதன் பின் மயில் சிலையாகி அங்கேயே நின்று கொண்டது. எட்டிப்பிடி என்ற வார்த்தை காலப்போக்கில் "எட்டிக்குடி' என மாறி தற்போது "எட்டுக்குடி' ஆனது. அதுவே ஊரின் பெயராகவும் நிலைத்து விட்டது. இதே சிற்பி மற்றொரு சிலையையும் வடித்தான். அதை எண்கண் என்ற தலத்தில் வைத்தான். சிற்பி முதலில் வடித்த சிலை சிக்கலிலும், அடுத்த சிலை எட்டுக்குடியிலும் வைக்கப்பட்டது. இந்த மூன்றுமே உருவத்தில் ஒரே தோற்றம் கொண்டவை.
இங்கு முருகன் உக்கிரமாக இருப்பதால் பக்தர்கள் பாலபிஷேகம் செய்கிறார்கள். பிராகாரத்தில் முருகனுடன் சூரபத்ம வதத்திற்குத் துணையாகச் சென்ற 9 வீரர்களுக்கும் சிலைகள் உள்ளன. சூர சம்ஹாரம் செய்வதற்கு முருகப்பெருமான் இங்கிருந்து புறப்பட்டதாகக் கூறுகிறது தல புராணம்.
பார்க்கும் மனநிலைக்கு ஏற்ப தன் உருவத்தை மாற்றிக்கொண்டு காட்சி தருபவர் எட்டுக்குடி சுப்பிரமணியசுவாமி. குழந்தையாக நினைத்து பார்த்தால் குழந்தை வடிவிலும், முதியவராக நினைத்து பார்த்தால் வயோதிக வடிவிலும், இளைஞனாக நினைத்து பார்த்தால் இளைஞர் வடிவிலும் இவர் காட்சி தருவார். சித்ராபவுர்ணமியை ஒட்டி இங்கு விழா நடக்கிறது. கோயில் முன்புள்ள சரவணப்பொய்கை தீர்த்தத்தில் கைபட்டாலே பாவ நிவர்த்தியாகி விடும் சிறப்புடையது. சவுந்தரநாயகர், ஆனந்தவல்லித்தாயார் ஆகியோர் முருகனின் தாய் தந்தையாக அருள்பாலிக்கின்றனர். பயந்த சுபாவமுடைய குழந்தைகளை இத்தலத்துக்கு அழைத்து வந்தால் பயம் நீங்கும் என்பது நம்பிக்கை. ஏனெனில் இங்கு முருகன் அம்பறாத் துணியிலிருந்து அம்பை எடுக்கும் நிலையில் வீர சவுந்தரியம் உடையவனாக திகழ்கிறான். சூரனை அழிப்பதற்காக உள்ள இக்கோலம் பற்றி குழந்தைகளுக்கு விளக்கி சொன்னால் அவர்கள் ஆற்றல் உடையவர்களாக திகழ்வார்கள் என்பது நம்பிக்கை.
இந்தத் தலத்தில் வேண்டுவார்கள் வேண்டும் வரத்தை அளிப்பவராக அருள்புரிகிறார் முருகப் பெருமான். குழந்தை வரம் வேண்டுபவர்களுக்கும் அருள்புரிகிறார் முருகன். குழந்தை வரம் நிறைவேறும்போது மணி கட்டி நேர்த்திக்கடனைச் செலுத்துகிறார்கள். எல்லா முருகன் கோயில்களிலும் இருப்பது போல் இங்கும் காவடி எடுப்பது மிகவும் சிறப்பு. 
ஓம் நமசிவாய 
படித்து பகிர்ந்தது
 இரா இளங்கோவன் 
நெல்லிக்குப்பம்.. 

No comments:

Post a Comment

Followers

இருதய கமலநாதேஸ்வரர் கோவில் திருவலிவலம் ....

இருதய கமலநாதேஸ்வரர் கோவில் திருவலிவலம் ! வலியன் என்ற கரிக்குருவி இத்தலத்தை வலம் வந்து பூஜை செய்ததால் திருவலிவலம் என்ற பெயர் ஏற்ப...