குரு பார்க்க கோடி நன்மை என்பார்கள். வேலை கிடைக்க, திருமணம் நடக்க, குழந்தைப் பேறுக்கு, புகழ் கிடைக்க குரு பகவானின் அருள் வேண்டும். வாசகர்கள் அவரது அருளைப் பெறும் வகையில் இங்கு குரு கோயில்கள் இடம் பெற்றுள்ளன.
தம்பதி ஒற்றுமைக்கு...
கும்பகோணம் திருப்பனந்தாள் அருகிலுள்ள திருலோக்கி (ஏமநல்லுார்) சிவனை வழிபட்டால் தம்பதி ஒற்றுமை சிறக்கும். சிவலோகம், வைகுண்டம், சத்திய லோகம் என மூவுலகமும் வழிபட்டதால் இத்தலம் 'திருலோக்கி' எனப்பட்டது. குருபகவான்
தனக்கு ஏற்பட்ட சாபத்தால் பலத்தை இழந்தார். அதற்கு பரிகாரமாக இங்கு வழிபட்டு சிவனருளால் சாபம் நீங்கியது. குரு நன்மை அடைந்த தலம் என்பதால் 'ஏமநல்லுார்' எனப்பட்டது. 'ஏமம்' என்பது குருவின் பெயர்களில் ஒன்று.
இங்குள்ள சுவாமியின் பெயர் சுந்தரேஸ்வரர். அம்மனின் பெயர் அகிலாண்டேஸ்வரி. குடும்பத்தில் கருத்து வேறுபாடு உள்ளவர்கள் வியாழன் அன்று குருபகவானுக்கு தேனால் அபிேஷகம் செய்ய பிரச்னை மறையும். இங்கு வாழ்ந்த தர்மன் என்பவரின் மகன் பேசும் சக்தியற்று இருந்தான்.
குருபகவானுக்கு தேன் அபிஷேகம் செய்து பேசும் ஆற்றல் பெற்றான். பிருகு முனிவர் இங்கு வழிபட்டே நற்கதி அடைந்தார். ராஜேந்திரசோழனின் மனைவி திரிலோக்கியமாதா திருப்பணி செய்த தலம் இது.
நீங்கதான் நம்பர் 1
சிவனுக்கு முன் நந்தி இருக்கும். ஆனால் தட்சிணாமூர்த்திக்கு முன் நந்தி இருக்கும் தலம் மயிலாடுதுறை வள்ளலார் கோயில். இங்கு வழிபட்டால் நீங்கள் ஈடுபடும் துறையில் நம்பர் ஒன்னாக திகழ்வீர்கள். சகல பாக்கியங்களையும் வாரி வழங்குபவராக இங்கு சிவன் இருப்பதால் 'வள்ளலார்' என அழைக்கப்படுகிறார். அம்மனின் பெயர் ஞானாம்பிகை.
முன்பு சிவனை சுமக்கும் பேறு பெற்றதால் தானே உயர்ந்தவர் என கர்வம் கொண்டது நந்தி. பாடம் புகட்ட அதன் முதுகில் தன் சடை முடியை வைத்தார் சிவன். பாரம் தாங்க முடியாமல் தவித்த நந்தி தவறை உணர்ந்து இங்குள்ள மேதாகுருவை வழிபட்டு பலன் பெற்றது. தேவகுரு பிரகஸ்பதி, சாமுண்டீஸ்வரி, பிரம்மா, மகாவிஷ்ணு இங்கு வழிபாடு செய்துள்ளனர். தன் வளர்ப்பு மகளான சகுந்தலைக்கு ஏற்பட்ட குருதோஷம் தீர கண்வ முனிவர் வழிபட்டார். வியாழன், குரு ஓரைகளில் வழிபடுவது நல்லது.
அரசியலில் ஜொலிக்க...
காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் அருகிலுள்ள தலம் புலிவனம். இங்குள்ள தட்சிணாமூர்த்தியை வழிபடுவோர் மக்களுக்கு சேவை செய்வதோடு அரசியல் வாழ்வில் ஜொலிப்பார்கள். மத்யந்த முனிவரின் மகனான மழன், தன் தந்தையின் ஆலோசனையால் சிவனை வேண்டி தவமிருந்தார். தினமும் அதிகாலையிலேயே பூக்களை பறிப்பதற்காக புலியின் கால்களை வேண்டிப் பெற்றார்.
அதனால் புலிக்கால்முனிவர் (வியாக்ரபாதர்) எனப் பெயர் பெற்றார். இவர் வழிபட்டதால் இத்தலம் 'புலிவனம்' என்றும், சுவாமி 'வியாக்ரபுரீஸ்வரர்' என்றும் பெயர் பெற்றனர். அம்மனின் பெயர் அமிர்த குஜலாம்பாள். இங்கு தட்சிணாமூர்த்தியின் அருகில் வியாக்ரபாதர், பதஞ்சலி முனிவர் உள்ளனர். முயலகன், புலியின் மீதும் சுவாமியின் திருவடி உள்ளது. தட்சிணாமூர்த்தி, சிவன், அம்மனுக்கு அபிேஷகம் செய்யும் அரசியல்வாதிகள் மக்கள் செல்வாக்குடன் பதவியை அடைவர். அரசு வகையில் நன்மை காண்பர்.
இழந்ததை பெற...
நாகப்பட்டினம் - திருத்துறை பூண்டி செல்லும் வழியில் உள்ள தேவூர் சிவனை தரிசித்தால் இழந்த பணம், பதவி, உபதேசம் திரும்ப கிடைக்கும். ராவணனிடம் செல்வத்தை இழந்த குபேரனும், விருத்தாசுரனால் பதவியை இழந்த இந்திரனும் இங்கு வழிபட்டே இழந்ததை பெற்றனர். இங்குள்ள சிவனிடம் உபதேசம் பெற வந்ததால் தட்சிணாமூர்த்தியின் திருவடியின் கீழ் முயலகன் இல்லை.
தேவர்களுக்கு அருள்புரிந்தவர் என்பதால் சுவாமிக்கு தேவபுரீஸ்வரர் என்று பெயர். அம்மனின் பெயர் மதுரபாஷினி. இக்கோயிலை தரிசிக்க வந்த தேவலோக வாழைமரம் (வெள்வாழை) இங்கேயே தங்கியது. தலவிருட்சமான இதற்கு தண்ணீர் ஊற்றுவதில்லை. தானாகவே வளர்கிறது. மூவரால் பாடல் பெற்ற இத்தலத்தில் சூரியன், கவுதம முனிவர், சேக்கிழார் வழிபாடு செய்துள்ளனர். பிற்கால பாண்டியர்கள், விஜயநகர மன்னர்கள் திருப்பணி செய்துள்ளனர். கோட்செங்கச் சோழன் கட்டிய 72 மாடக்கோயில்களில் இதுவும் ஒன்று எனலாம்.
ஓம் நமசிவாய
படித்து பகிர்ந்தது
இரா இளங்கோவன்
நெல்லிக்குப்பம்.
No comments:
Post a Comment