அருள்மிகு ஆலந்துறை நாதர் திருக்கோயில்,
திருப்புள்ளமங்கை,
பசுபதி கோயில் அஞ்சல்,
தஞ்சை மாவட்டம்
PIN - 614 206.
*மூலவர்: ஆலந்துறைநாதர், பிரமபுரீஸ்வரர்
*தாயார்:
அல்லியங்கோதை, சௌந்தரநாயகி
*தல விருட்சம்:
ஆல் (ஆலமரம்)
*சிறப்பு திருவிழாக்கள்:
மகா சிவராத்திரி
*இது தேவாரப்பாடல் பெற்ற தலம்.
பாடியவர்:சம்பந்தர்.
*இத்தலத்தின் பெயர் பண்டைநாளில் "புள்ள மங்கை" என்றும்,
கோயிற் பெயர் "ஆலந்துறை" என்றும் வழங்கப்பெற்றது. தற்போது ஊர்ப்பெயர் வெள்ளாளப்பசுபதி கோயில்.
*திருப்புள்ளமங்கை கோயில் முதற்பராந்தக சோழன் காலத்து அற்புதமான கலைப்படைப்பு.
(இக்கோயிலுக்கு அருகே உள்ள மற்றொரு சிவன் கோயில் பசுபதீசுவரர் கோயில் ஆகும்.)
*குடமுருட்டி ஆற்றின் கரையில் ஆலந்துறையார் திருக்கோயில் உள்ளது.
*ஆலமரத்தைத் தலமரமாகக் கொண்டு விளங்கிய நீர்த்துறை தலம் ஆதலின் 'ஆலந்துறை' என்று பெயர் பெற்றிருத்தல் வேண்டுமென்பர்.
*ஏழாம் நூற்றாண்டில் திருஞானசம்பந்தர் இத்தலத்தில் பாடியுள்ளதால் இக்கோயில் அதற்கு முன்பிருந்தே இருந்திருப்பதை அறியலாம்.
*அமுதத்தைக் கடைந்தபோது தோன்றிய விஷத்தை இறைவன் அமுது செய்த இடம் இஃது என்பது தலபுராணச் செய்தி.
*பிரம்மா பூஜித்து சாபவிமோசனம் பெற்றமையால் சுவாமி இங்கு பிரமபுரீஸ்வரர் என்றும் திருநாமம் கொண்டு விளங்குகின்றார்.
*அகழி அமைப்புடைய கர்ப்பக்கிருகம்; கீழே கருங்கல் கட்டமைப்பும் மேலே சுதை அமைப்பும் உடையது.
*இக்கோயில் சோழர் காலச் சிற்பக் கலைக்கு எடுத்துக் காட்டாக அமைந்துள்ளது. மூலவரின் கருங்கல் விமானத்தைச் சுற்றிலும் அமைந்துள்ள சிற்பங்கள் நம்மைப் பரவசப்படுத்துபவை. சின்னஞ்சிறிய வடிவில் உள்ள ராமாயண சிற்பங்களும், நாட்டியச் சிற்பங்களும் சிற்பிகளின் கைத்திறனைப் பறைசாற்றுவதாக உள்ளது. சுமார் 65 சிற்றுருவச் சிலைகளைக் கொண்ட அடித்தளத்தில், கஜசம்ஹார மூர்த்தி, காலாரி, அந்தகாசுர சம்ஹார மூர்த்தி, தாண்டவ மூர்த்தி, வராகர் ஆகிய சிற்பங்கள் கலை நுணுக்கம் மிக்கவை.
*கோஷ்டத்தில் உள்ள மிக அழகாக வடிவமைக்கப்பட்டுள்ள விநாயகர் சிற்பம் மிகவும் புகழ்பெற்ற ஒன்றாகும்.
*இங்குள்ள துர்க்கை - மகிஷாசுரமர்த்தினி உருவம் தனிச் சிறப்புடையதாகத் திகழ்கிறது. கருங்கல் குடை நிழலில், எருமைத் தலைமீது நின்று, சங்கு சக்கரம், வாள், வில், கதை, சூலம், கேடயம், அங்குசம் முதலிய ஆயுதங்களை ஏந்தி, இருபுறமும் கலைமானும் சிங்கமும் இருக்க; இரு வீரர்களில் ஒருவர் கத்தியால் தலையை அரிந்து தருவதுபோலவும், மற்றொருவர் தொடையைக் கிழித்து இரத்த பலி தருவது போலவும் காட்சித்தர; திரிபங்கியாய் ஒரு கையில் வில்லேந்தி, மற்றது அபயகரமாக மோதிர விரல் மடக்கிய முத்திரையுடன் பின்புறம் அம்பறாத்தூணி விளங்க, துர்க்காம்பிகை விளங்கும் கோலம் தனிச் சிறப்புடையது. (திருநாகேச்சுரம், பட்டீச்சுரம், திருப்புள்ளமங்கை ஆகிய இம்மூன்று தலங்களிலும் உள்ள துர்க்கை ஒரே சிற்பியால் வடிக்கப்பட்டவை என்றும்; இம்மூன்றுமே மிகவும் சக்தி வாய்ந்தவை என்றும் சொல்லப்படுகிறது.
*முதலாம் பராந்தகன் காலத்தில் (கி. பி. 907 - 955) கருவறையும், அர்த்த மண்டபமும் திருப்பணி செய்யப்பெற்றுள்ளன.
*இக்கோயில் கல்வெட்டுக்களில் "ஆலந்துறை மகாதேவர் கோயில்" என்று குறிக்கப்படுகிறது.
*சப்தமாதர்கள் வழிபட்ட சக்கராப்பள்ளி சப்தஸ்தானக் கோயில்களில், இதுவும் ஒன்றாகும்.
"சப்தமங்கைத் தலங்கள்" என்று அழைக்கப்படுகின்ற இவை கீழ்க்கண்ட இடங்களில் அமைந்துள்ளன.
1)சக்கரப்பள்ளியில் உள்ள சக்கரவாகேசுவரர் கோயில்
2)அரியமங்கையில் உள்ள ஹரிமுக்தீஸ்வரர் கோயில்
3)சூலமங்கையில் (சூலமங்கலம்) உள்ள கிருத்திவாகேசுவரர் கோயில்
4)நந்திமங்கையில் உள்ள ஜம்புகேஸ்வரர் கோயில்
5)பசுமங்கையில் (பசுபதிகோயில்) உள்ள பசுபதீசுவரர் கோயில்
6)தாழமங்கையில் (தாழமங்கலம்) உள்ள சந்திரமௌலீசுவரர் கோயில்
7)புள்ளமங்கை என்றழைக்கப்படுகிற ஆலந்துறைநாதர் கோயில்.
*இது சப்த மாதர்களில் சாமுண்டி வழிபட்ட ஆலயம். அஷ்ட நாகங்களோடு வந்து சாமுண்டி தேவி சிவபூஜை செய்தபடியால் இங்கு வந்து வழிபடுவோர்
நாக தோஷங்கள் நீங்கப்பெறுவதாகக் கூறப்படுகிறது.
*தஞ்சாவூரி லிருந்து கும்பகோணம் செல்லும் நெடுஞ்சாலையில் அய்யம்பேட்டையைத் தாண்டி, மாதாகோயில் அருகே வலப்புறமாகப் பிரியும் கண்டியூர் செல்லும் பேருந்துச் சாலையில் சென்றால் பசுபதி கோயிலை அடையலாம். தஞ்சாவூரில் இருந்தும் பசுபதி கோயிலுக்குப் பேருந்து வசதியுண்டு. திருவையாறு - கும்பகோணம் பேருந்து இவ்வூர் வழியாகச் செல்கின்றது.
ஓம்சிவாயநம
படித்து பகிர்ந்தது
இரா இளங்கோவன்
நெல்லிக்குப்பம்.
No comments:
Post a Comment