Wednesday, September 24, 2025

திருப்பாதிரிப்புலியூர் பாடலேஸ்வரர் (தோன்றாத்துணைநாதன்) பெரியநாயகிஅம்மன்

நவராத்திரி 
மூன்றாம் நாளான இன்று 
உலகப் புகழ்பெற்ற 
தேவாரம் மற்றும் திருப்புகழ் பாடல் பெற்ற நடுநாட்டுத்தலங்களில் ஒன்றானதும், 
உமையம்மை பாதிரி மரத்தினடியில் தவமிருந்த அரூபமாக ஈசனை வழிபட்ட இடமாகவும், பஞ்சபுலியூர் தலங்களில் ஒன்றானதும், வியாக்ரபாதர் என்ற 
புலிக்கால் முனிவர் தவமிருந்து பேறுபெற்ற  தலமானதும், 
அப்பர் சுவாமிகள் கரையேறிய இடமான கெடிலம் ஆற்றங்கரையில் அமைந்துள்ள 
*கடலூர் மாவட்டத்தில் உள்ள புகழ்பெற்ற 
#திருப்பாதிரிப்புலியூர்
#பாடலேஸ்வரர் (தோன்றாத்துணைநாதன்) திருக்கோயிலில் உள்ள 
#பெரியநாயகிஅம்மன் என்ற
#அருந்தவநாயகியை தரிசிக்கலாம் வாருங்கள் 🙏🏻 🙏🏻 🙏🏻 

திருப்பாதிரிப்புலியூர் பாடலேசுவரர் கோயில் கடலூர் மாவட்டத்தில் கடலூர் நகரில் திருப்பாதிரிப்புலியூர் என்னுமிடத்தில் அமைந்துள்ள, சம்பந்தர், அப்பர் போன்றோரால் பாடல் பெற்ற தலமாகும். 274 சிவாலயங்களில் இது 229 வது தேவாரத்தலம் ஆகும். இது தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் நடுநாட்டு தலங்களில் ஒன்றாகும். 

*மூலவர்:பாடலீசுவரர் (பாடலீசுவரர், கன்னிவனநாதன், தோன்றாத்துணைநாதன், கடைஞாழலுடையபெருமான், சிவக்கொழுந்தீசன், உத்தாரேசன், பாடலநாதன்,கறையேற்றும்பிரான்), பாடலேஸ்வரர்
*அம்மன்:பெரியநாயகி ( பெரியநாயகி, தோகையம்பிகை, அருந்தவநாயகி, பிரஹந்நாயகி)
*தல விருட்சம்:பாதிரிமரம்
*தீர்த்தம்:சிவகரை, பிரம்மதீர்த்தம், (கடல்)சிவகரதீர்த்தம், (திருக்குளம்) பாலோடை, கெடிலநதி, தென்பெண்ணையாறு
*புராண பெயர்:கடைஞாழல், கூடலூர் புதுநகரம்
*ஊர்:திருப்பாதிரிபுலியூர்
*மாவட்டம்:கடலூர்
*மாநிலம்:தமிழ்நாடு

பாடியவர்கள் :

அப்பர், சுந்தரர், சம்பந்தர் மற்றும் அருணகிரிநாதர் 

தேவாரப்பதிகம் :

முன்னநின்ற முடக்கான் முயற்கு அருள் செய்துநீள் புன்னைநின்று கமழ் பாதிரிப் புலியூருளான் தன்னைநின்று வணங்கும் தனைத்தவ மில்லிகள் மின்னைநின்ற பணி யாக்கைப் பெறுவார்களே.

-திருஞானசம்பந்தர்

தேவாரப்பாடல் பெற்ற நடுநாட்டுத்தலங்களில் இது 18வது தலம்.

இது பல்லவ, சோழ காலங்களில் கட்டப்பட்டுள்ளது.

வழிபட்டோர்:

இத்திருகோவில் வியாக்ரபாதர் என்னும் புலிக்கால் முனிவர், திருநாவுக்கரசர் போன்றவர்கள் வழிபட்ட திருத்தலம் என்று கூறப்படுகின்றது. புலிக்கால் முனிவர் தவம் செய்து பேறு பெற்றதாக நம்பப்படுகின்றது. இதன் காரணமாகவே இவ்வூர் பாதிரிப்புலியூர் எனப் பெயர் பெற்றதாகக் கூறப்படுகிறது.

தல வரலாறு:

உலகத்து உயிர்கள் உய்யும் பொருட்டு இறைவன் திருவிளையாடல் நிகழ்ந்த திருவுளங்கொண்டு இறைவியுடன் சொக்கட்டான் ஆடினார். பலமுறை ஆடியும் தோல்வி பெருமானுக்கே.ஆனால் வெற்றி தனக்கே எனக் கூறிய பெருமானின் திருக்கண்களை பிராட்டி தன் திருக்கரங்களால் புதைத்தாள். இதனால் உலகம் இருண்டு அனைத்து செயல்களும் நின்று போயின.இதனைக் கண்ட இறைவி தன் செயலால் ஏற்பட்ட இன்னல்கள் கண்டு மனம் வருந்தி தனக்கு மன்னிப்பு வேண்டினாள்.அதற்கு இறைவன் இறைவியை பூலோகம் சென்று அங்குள்ள சிவ தலங்களை பூசிக்கும்படியும் அவ்வாறு பூசிக்கும் போது எந்த தலத்தில் இடது கண்ணும் இடது தோளும் துடிக்கின்றதோ அந்தத் தலத்தில் ஆட்கொள்வதாக கூறினார்.அதுபோல் இறைவியும் பல தலங்களைத் தரிசித்துவிட்டு இத்தலத்திற்கு வந்தபோது இடது கண்ணும், இடது தோளும் துடித்ததால் இத்தலத்திலேயே தங்கி அரூபமாக(உருவமில்லாமல்) இறைவனை பூசித்து பேறு பெற்ற தலம்.இறைவன் சித்தர் வடிவம் பூண்டு மக்களின் துன்பங்களை நீக்கிய தலம். 

தல சிறப்பு:

மகேந்திரவர்ம மன்னன் திருநாவுக்கரசரை கல்லில் கட்டிக் கடலில் போட்ட போது கல் தெப்பமாக மாறி திருப்பாதிரிப்புலியூரிலேயே கரை சேர்ந்ததாகக் கூறப்படுகின்றது. இதன் காரணத்தால் இவ்விடம்கரையேறவிட்ட குப்பம் எனவும் அழைக்கப்படுகின்றது. "ஈன்றாளுமாய் எனக்கு எந்தையுமாய்" எனும் பதிகத்தை திருநாவுக்கரசர் இன்று பாடினார்.
அகத்தியர், வியாக்ரபாதர், மங்கணமுனிவர் , உபமன்னியர், ஆதிராசன் ஆகியோர் பூஜித்து பேறு பெற்ற தலம் ஆகும்.
காசியில் உள்ள இறைவனை 16 முறை வணங்குவதும் இத்தலத்தில் ஒரு முறை வணங்குவது இணையானது அதாவது சமனானது எனும் ஒருவித நம்பிக்கை இங்கு காணப்படுகின்றது.
திருவண்ணாமலையில் 08 முறை வணங்குவதும் சிதம்பரத்தில் 03 முறை வணங்குவதும் இங்கு ஒருமுறை வணங்குவதற்குச் சமனாகும்.
தமிழ்நாட்டில் ஆகம விதிப்படி நிறுவப்பட்ட சிறந்த சிற்பக்கலை நுணுக்கங்களை இக்கோயில் கொண்டுள்ளது.
பள்ளியறை சுவாமி கோயிலில் உள்ளது. இறைவி, பள்ளியறைக்கு எழுந்தருளுவது இங்குள்ள தனிச்சிறப்பாகும். 

தொன்னம்பிக்கை :

இங்கு சிவன் தாந்தோன்றியாய் சுயம்பு மூர்த்தியாக தோன்றுகிறார் என்று நம்பப்படுகின்றது. அப்பரைக் கல்லிலே கட்டி கடலிலே விட அது மிதந்து இத்தலத்தின் பக்கத்தில் கரைசேர்ந்தது என்பது தொன்நம்பிக்கை (ஐதிகம்). பாதிரி மரத்தின் வடமொழிப்பெயர் பாடலம் என்பதாகும்.

கெடிலம் ஆறு தெற்கே வளைந்து, கிழக்கு நோக்கிச் சென்று கடலில் சேரும் இடத்திற்கு அருகில் இந்தக் கோயில் உள்ளது. அப்பர் இக்கோயிலுக்கு வழிபட வந்த காலத்தில், ஆற்றின் போக்கு முற்றிலும் வேறுபட்டதாக நம்பப்படுகிறது. துறவி தடையின்றி வழிபட, சிவபெருமான் நதியின் போக்கை மாற்றினார்.

இத்தலத்தின் பெயர் பாதிரி மற்றும் புலியூர் என இரண்டு பகுதிகள் உள்ளன. பத்திரி என்பது பத்திரி மரத்தைக் குறிக்கிறது, இது இந்தக் கோயிலின் ஸ்தல விருட்சமாகவும் உள்ளது (பழங்கால மரம் – ஆதி பத்திரி என்று அழைக்கப்படுகிறது – இன்றும் கோயிலின் பிரகாரத்தில் காணப்படுகிறது). வியாக்ரபாதர் இங்கு பதஞ்சலியுடன் சேர்ந்து வழிபட்டதால் இந்தப் பெயரின் புலியூர் பகுதி வந்தது. அவர்கள் ஒன்றாகச் சென்று வழிபட்ட ஒன்பது தலங்களும் கூட்டாக நவ-புலியூர் என்று அழைக்கப்படுகின்றன; அவை பெரும்பற்றப்புலியூர் (சிதம்பரம்), திருப்பாதிரிப்புலியூர் (இக்கோயில்), சிறுபுலியூர், எருகத்தாம்புலியூர், பெரும்புலியூர், ஓமாம்புலியூர், அத்திப்புலியூர், தப்ளாம்புலியூர், கானத்தாம்புலியூர். பிற்காலத்தில் வியாக்ரபாதர் இங்கு முக்தி அடைந்தார் என்று நம்பப்படுகிறது.

வியாக்ரபாத முனிவரின் மகன் உபமன்யு தேவியை வழிபட்டுக் கொண்டிருந்தபோது, எதிர்பாராதவிதமாக அவரது கால் மூர்த்தியின் மீது மோதியது. இருந்தபோதிலும், இங்குள்ள அம்மனை வழிபட்டாலே முக்தி கிடைக்கும் என்று அவர் சபிக்கப்பட்டார். ஒரு நாள், ஆதிராஜன் என்ற மன்னன் வேட்டையாடச் சென்று, பாதுகாப்புக்காக இந்த இடத்திற்குள் நுழைந்த முயலை விரட்டினான். தேவியின் வார்த்தைகளை நினைவுகூர்ந்து, அது இங்குள்ள அம்மனிடம் பிரார்த்தனை செய்தது, மேலும் உபமன்யு தனது அசல் வடிவத்தை மீண்டும் பெற்றார்.

அருணகிரிநாதர் திருப்புகழில் இக்கோயிலில் முருகன் மீது பாடியுள்ளார்.

பெருங்கோயில், காரக்கோயில், ஞானர்கோயில், குடிக்கோயில், இளங்கோயில், மணிக்கோயில், அழகோயில், மாடக்கோயில், பூங்கோயில் என 9 வகையான கட்டமைப்புக் கோயில் கட்டுமானங்களை இலக்கிய ஆதாரங்கள் குறிப்பிடுகின்றன.

இன்று நாம் காணும் கட்டிடக் கோயில் பல்லவர் காலத்திலிருந்தது, அதன் பிறகு சோழர்களால் புதுப்பிக்கப்பட்டது. கோவில் வகைகளில், இந்த கோவில் ஞானசர் கோயில் வகையின் கீழ் வருகிறது. ஞாழர் என்பது கொண்டை, கொங்கு, தேக்கு மற்றும் பத்திரி போன்ற குறிப்பிட்ட வகை மரங்களைக் கொண்ட மரங்களைக் குறிக்கிறது. ஞாஜர் கோயில்கள் என்பது தலைமை தெய்வம் அல்லது கோயிலே இந்த வகையான மரங்களால் கட்டப்பட்டதாகும். இக்கோயிலில் உள்ள அப்பரின் பதிகம் ஞாழர் கோயில் என்றும் குறிப்பிடுகிறது, அவர் காலத்தில் இந்தக் கோயில் மரத்தால் கட்டப்பட்டிருக்கலாம் என்று கூறுகிறது.

கோவிலில் சில பிரமாதமான கட்டிடக்கலை மற்றும் சிற்ப வேலைப்பாடுகள் மற்றும் உள் சுவர்களில் அடிப்படை புதைப்பு படங்கள் உள்ளன. சுவாரஸ்யமாக, இங்கு விநாயகர் கையில் ஆயுதங்கள் ஏதுமின்றி காட்சியளிக்கிறார் – அதற்கு பதிலாக, அவர் பாதிரி மலர் மாலையுடன் காட்சியளிக்கிறார். இங்குள்ள சிவனை 3 முறை சிதம்பரத்திலும், 8 முறை திருவண்ணாமலையிலும், 16 முறை காசியிலும் வழிபட்டதற்கு சமம் என்பது ஐதீகம்.

*தலபெருமை :

*கரையேறிய கதை : 

திருநாவுக்கரசர் எனும் அப்பரடிகளை மகேந்திரவர்மன்(கி.பி 600 -630) கல்லுடன் சேர்த்துக் கட்டி கடலில் தள்ளியபோது அப்பரடிகள் "கற்றூணைப்பூட்டி ஓர் கடலிற் பாய்ச்சினும் நற்றுணையாவது நமசிவாயவே' எனப் பாடித்துதிக்க அக்கல்லே தெப்பமாக மாறி கடலில் மிதந்து வந்து கறையேறிட நகர மக்களெல்லாம் அதிசயம் உற்று அன்பு கொண்டு மகிழ்ந்து வரவேற்கச் சென்றார்கள்.

அந்நிலையில் அப்பரடிகள் திருப்பாதிரிப்புலியூருக்கு எழுந்தருளி பாடலநாதனாம் இறைவனை "ஈன்றாளுமாய் எனக்கு எந்தையுமாய்' என்று பதிகம் பாடி வழிபட்டார். அத்தகைய சிறப்பு வாய்ந்த தலமே திருப்பாதிரிப்புலியூர் ஆகும். இன்றும் அப்பர் கடலிலிருந்து கரையேறிய இடம் "கரையேறவிட்ட குப்பம்' என்னும் பெயரால் சிறந்து விளங்குகிறது.

*பள்ளியறை: 

இறைவி அரூபமாக (உருவமில்லாமல்)இருந்து இறைவனை எண்ணித் தவம் இருந்த இடம். பள்ளியறை இறைவன் திருக்கோயிலில் அமைந்து, நாள் தோறும் இறைவியே பள்ளியறைக்கு எழுந்தருள்வது எங்குமில்லாத் தனிச்சிறப்பு.

அண்ணல் ஆயிரங்கலைகளோடு உறையும் இடம் ஆதலால் அவனைப் பூசித்துத் தவமியற்றி மணம் புரிந்து கொண்ட அன்னையே பள்ளியறைக்கு எழுந்தருள்கிறாள்.

ஐங்கரன் கரங்களில் ஆயிதமேதுமின்றி பாதிரி மலர்க் கொத்துக்கள் உள்ளது வேறு எங்கும் காணமுடியாது.

*சிவகரை தீர்த்த சிறப்பு : 

சிவன் சித்தராக இருந்து விளையாடி கை வைத்த இடம் இந்த சிவகரை தீர்த்தமானது. இதில் கங்கையின் ஒரு கூறு கலந்தது. வாஸ்துபடி ஈசாணி மூலையில் இந்த தீர்த்தம் இருப்பது விசேசம்.

மத்தியந்தன முனிவர் மகன் பூசித்து வழிபட்டபோது பாதிரி மரங்களின் மேலேறத்தகுதியாக இருக்கத் தனக்குப் புலிக்காலும், கையும் வேண்டிப் பெற்றுப் புலிக்கால் முனிவர் ஆன தலம் இதுவே

திருநாவுக்கரசை முதன்முதலில் “அப்பர்’ என்று ஞானசம்பந்தர் அழைத்தது இத்தலத்தில்தான்.

அருணகிரிநாதர் முருகப்பெருமானை வழிபட்டு பாடல் அருளிச் செய்துள்ளார்.

அகத்தியர், வியாக்ரபாதர், மங்கணமுனிவர் , உபமன்னியர், ஆதிராசன் ஆகியோர் பூஜித்து பேறு பெற்ற தலம்.

புலிக்கால் முனிவர் தவம் செய்து பேறு பெற்ற தலம்.இதன் காரணமாகவே இவ்வூர் பாதிரிப்புலியூர் எனப் பெயர் பெற்றது.

இத்தலத்து முருகப்பெருமான் (சுப்ரமணியர்) குறித்து அருணகிரிநாதர் திருப்புகழ் பாடல்கள் பாடியுள்ளார்

தலவிநாயகர் : வலம்புரி விநாயகர். மேற்கு மதில் விநாயகரது மேல் திருக்கரங்கள் இரண்டிலும் பாதிரி மலர்க் கொத்துகளே காணப்பெறும்.

அம்பிகை இறைவனைப் பூசித்தபோது உதவி செய்த திருக்கோலம். அதனால் அவர் கன்னி விநாயகர் எனப் பெயர் பெறுகிறார்.

பொது தகவல்:

சப்தமாதாக்கள் சன்னதி இங்கு கோயிலை ஒட்டியே இருக்கும்.

சமயக்குரவர்கள் நால்வருள் திருநாவுக்கரசர், திருஞானசம்பந்தர் ஆகிய இரு நாயன்மார்கள் காலத்திற்கு முன்பே இவ்வூர் தோன்றாத் துணைநாதரும் அவர் கோயில் கொண்டருளிய திருக்கோயிலும் மிகவும் சிறப்புடையதாக விளங்கி இருக்கிறது. 

சிதம்பரநாத முனிவர் இயற்றிய தலபுராணமும், தொல்காப்பியர் இயற்றிய கலம்பகமும் இருக்கின்றன.

 இத்தலத்தில், திருக் கோவலூர் ஆதீனத்தைச் சேர்ந்த வீர சைவமடம் உள்ளது.

 சோழர் காலக் கல்வெட்டுகள் 19ம், மற்றது இரண்டும் படி எடுக்கப்பட்டுள்ளன.

பிரார்த்தனை:

இங்குள்ள ஈசனை வழிபடுவோர்க்கு மனநிம்மதி கிடைக்கும்.இது உடல் சம்பந்தப்பட்ட எந்த நோயானாலும் தீருகிறது.

மேலும் குழந்தை வரம் மற்றும் குடும்ப ஐஸ்வர்யம் ஆகியவற்றுக்காகவும் இத்தலத்தில் பக்தர்கள் பிரார்த்தனை செய்து கொள்வது வழக்கமாக உள்ளது.

இத்தலத்தில் வேண்டிக்கொள்ளும் எல்லாவிதமான பிரார்த்தனைகளும் நிறைவேறுகின்றன.

விரதமிருந்து சிவகரைத்தீர்த்தத்தில் குளித்தால் நினைத்தது நிறைவேறுகிறது. மேலும் குழந்தை வரம் வேண்டுவோர் தொட்டில் கட்டி வழிபடுகிறார்கள்.

நேர்த்திக்கடன் :

சுவாமிக்கு நல்லெண்ணெய், திரவிய பொடி, பால், தயிர்,பழச்சாறு, இளநீர், பஞ்சாமிர்தம், சந்தனம், பன்னீர், திருநீர் ஆகியவற்றால் அபிசேகம் செய்யலாம். தவிர உலர்ந்த தூய வஸ்திரம் சாத்தலாம். இது தவிர சுவாமிக்கு ஒவ்வொரு கார்த்திகை 5 திங்கள் கிழமைகளிலும் சங்காபிசேகம், கலசாபிசேகம் ஆகியவையும் செய்யப்படுகிறது. தங்க கவசம் சாத்த 500 ரூபாய் செலுத்தி நேர்த்திகடன் செய்யலாம். தவிர சுவாமிக்கு வேட்டியும், அம்பாளுக்கு மஞ்சள் பொடி அபிசேகம், புடவை சாத்துதல் ஆகியவற்றையும் செய்யலாம். அம்மாவாசை அன்று கால பைரவருக்கு சிறப்பு அபிசேகம் செய்யப்படுகிறது.

திருவிழா:

வைகாசி விசாகம் -10 நாட்கள் – வெள்ளி ரிஷப வாகனம், தங்க கைலாச வாகனம் ஆகியவற்றில் சுவாமி புறப்பாடு – 5 ஆம்நாள் தெருவடச்சான் நிகழ்ச்சி (தேர் அகலமாக இருப்பதால் யாரும் தெருவில் நடந்து செல்ல முடியாது. அந்த அளவு தெருவை தேர் அடைத்து செல்லுமாம்) ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்ளும் மிகச் சிறப்பான திருவிழா மகா சிவராத்திரி – மாசி மாதம் ஆடி பூரம், நவராத்திரி, திருவாதிரை உற்சவம், தை அமாவாசை, மாசி மகம் – 2 க்கும் கடல் தீர்த்தவாரி நடக்கும். தேவனாம்பட்டினம் என்ற ஊருக்கு சுவாமி செல்லும். பவுர்ணமி பஞ்சபிரகார வலம் வருதல் இங்கு சிறப்பாக நடைபெறுகிறது. தவிர பிரதோச காலங்களில் கோயிலில் மிக அதிக அளவில் பக்தர்கள் கூடுகிறார்கள். அப்பர் சுவாமிகள் உட்கார்ந்த நிலையில் இருப்பது இந்த சிவ தலத்தில் மட்டுமே காண முடியும். 

அமைவிடம் : 

இது தற்பொழுது, கடலூர் எனப்படுகிறது. கோவில், திருப்பாதிரிப்புலியூர் இரயில் நிலையத்திற்கு அருகே உள்ளது. தமிழகத்தின் அனைத்து நகரங்களிருந்தும் கடலூருக்குப் பஸ் வசதி உள்ளது. 
ஓம் நமசிவாய 
படித்து பகிர்ந்தது 
இரா இளங்கோவன் 
நெல்லிக்குப்பம். 

ஆலயங்களில் வலம் வரும் முறைகளும் அவற்றின் பலன்களும்

*ஆலயங்களில் வலம் வரும் முறைகளும் அவற்றின் பலன்களும் பற்றிய பதிவுகள்* :
கோவிலுக்கு சென்று இறைவனை தரிசித்து வழிபட்ட பிறகு, இறைனின் சன்னதியை வலம் வருவது வழக்கம். பெரும்பாலானவர்கள் நேரமில்லை என சொல்லி இறைவனை மட்டும் தரிசனம் செய்து விட்டு வெளியே சென்று விடுவார்கள். ஆனால் கோவிலை வலம் வருவது மிக முக்கியமானதாகும். 

அப்படி வலம் வரும் போது, மனதார இறைவனை நினைத்தபடி வலம் வந்தால் மனதில் உள்ள தீய எண்ணங்கள் நீங்கி, இறைவனிடம் இருந்து வெளிப்படும் நேர்மறை ஆற்றல்களால் நம்முடைய மனது சுத்தமாகும். நேர்மறையான ஆற்றல்கள் பெருவதால் நன்மைகள் அதிகம் நடக்கும்.

கோவில்களை வலம் வரும் போது ஒற்றை படை எண்ணிக்கையில் தான் வலம் வர வேண்டும். ஒவ்வொரு தெய்வத்தையும் ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையில் வலம் வந்து வழிபட வேண்டும் என சொல்லப்படுகிறது. இதற்கு ஏற்றாற் போல் பலன்களும் மாறுபடும். உதாரணமாக,

* விநாயகர் கோவில் - ஒரு முறை வலம் வந்து வழிபட வேண்டும். இதனால் தடைகள் விலகும்.

* முருகன் கோவில் - 6 முறை வலம் வர வேண்டும். இதனால் எதிரிகள் தொல்லை நீங்கி, ஞானம் பெருகும்.

* அம்மன் கோவில் - 5 முறை வலம் வர வேண்டும். இதனால் வெற்றி, மனஅமைதி கிடைக்கும். வெள்ளிக்கிழமை துவங்கி, செவ்வாய்கிழமை வரை தினமும் அம்பிகையின் கோவிலுக்கு சென்று 5 முறை வலம் வந்தால் நினைத்த காரியம் நிச்சயம் நடக்கும் என்பது நம்பிக்கை.

* சிவன் கோவில் - 5 முறை வலம் வந்தால் நினைத்தது நடக்கும். செல்வ வளம் பெருகும், பிறவா நிலை ஏற்படும்.

* பெருமாள் கோவில் - 3 முறை வலம் வர வேண்டும். இதனால் ஆட்சி அதிகாரம், செல்வாக்கு, அஷ்டலட்சுமி கடாட்சம் ஆகியவை கிடைக்கும்.

* நவகிரகங்கள் - ஒன்பது முறை வலம் வருவதால் ஜாதகங்களில் இருக்கும் குறைகள் நீங்கும்.

இப்படி எந்த தெய்வத்தின் கோவிலுக்கு சென்று எத்தனை முறை வலம் வர வேண்டும் என தெரியாதவர்கள், அவற்றை நினைவில் வைத்துக் கொள்ள முடியாதவர்கள் பொதுவாக எந்த கோவிலுக்கு சென்றாலும் எத்தனை முறை வலம் வந்தால் என்ன பலன் கிடைக்கும் என்பதையும் நமது ஓம் நமசிவாய ஆன்மீக குழுவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

*வலம் வரும் எண்ணிக்கையும், பலன்களும் :*

* 1 முறை - இறைவனிடம் நெருங்க செய்யும்

* 3 முறை - மனச்சுமை குறையும்

* 5 முறை - விருப்பங்கள் நிறைவேறும்

* 7 முறை - காரிய வெற்றி

* 9 முறை - எதிரிகள் தொல்லை நீங்கும்

* 11 முறை - ஆயுள் விருத்தி

* 13 முறை - பிரார்த்தனை நிறைவேறும்

* 15 முறை - செல்வம் பெருகும்

* 17 முறை - தானிய வளம் பெருகும்

* 19 முறை - நோய் தீரும்

* 21 முறை - கல்வி வளர்ச்சி

* 27 முறை - குழந்தை பாக்கியம்

* 108 முறை - சகல நலன்களும் கிடைக்கும்

*இதை மனதில் கொண்டு இனி ஆலய வழிபாட்டினைச் செய்து இறையுருள் பெறுவோம்*
ஓம் நமசிவாய 
படித்து பகிர்ந்தது 
இரா இளங்கோவன்
 நெல்லிக்குப்பம். 

சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில், குமாரவயலூர், திருச்சி

*அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில், குமாரவயலூர், திருச்சி*
*திருவிழா* வைகாசி விசாகம் - 12 நாட்கள் -10 ஆயிரம் பக்தர்கள் கூடுவர். கந்த சஷ்டித் திருவிழா (சூரசம்காரம்) - 7 நாட்கள் - ஆயிரம் பக்தர்கள் கூடுவர் பங்குனி உத்திரம் - 4 நாள் திருவிழா - 25 ஆயிரம் பக்தர்கள் கூடுவர் தைப் பூசம் - 3 நாள் - 10 ஆயிரம் பக்தர்கள் கூடுவர்.

*தல சிறப்பு* முருகப் பெருமானே தன் வேலினால் குத்தி உண்டாக்கிய சக்தி தீர்த்தம் இங்கு உள்ளது. சிவனை முருகன் பூஜித்த தலம்.இக்கோயில் சோழர்களால் கட்டப்பட்டது.

*பொது தகவல்*

*திருப்புகழ் தந்த திருமுருகன்*

திருவண்ணாமலையில் முருகன் அருள் பெற்ற அருணகிரியார், அவர் அடியெடுத்துக்கொடுக்க "முத்தைத்தரு' எனத்துவங்கும் திருப்புகழ் பாடினார். அதன்பின், அவர் வேறு பாடல் பாடவில்லை. ஒருசமயம் அவர் முருகனைத் தரிசனம் செய்தபோது ஒலித்த அசரீரி, "வயலூருக்கு வா!' என்றது. மகிழ்ந்த அருணகிரியார் இங்கு வந்தார். அப்போது, முருகன் அவருக்குக் காட்சி தரவில்லை. தான் ஏமாற்றமடைந்ததாக உணர்ந்தவர், "அசரீரி பொய்யோ?' என உரக்கக் கத்தினார்.

அப்போது, விநாயகர் அவர் முன் தோன்றி "அசரீரி உண்மையே!' எனச்சொல்லி, இங்கிருந்த சுப்பிரமணியரைக் காட்டினார். முருகன், தனது வேலால் அருணகிரிநாதரின் நாக்கில் "ஓம்' என்ற பிரணவ மந்திரத்தை எழுதினார். அதன்பின், இத்தல முருகனைப் போற்றி அவர் 18 பாடல்கள் பாடிய அருணகிரியார், பல முருக தலங்களுக்கும் சென்று திருப்புகழ் பாடினார். இவ்வாறு, நமக்கு திருப்புகழ் என்ற ஒப்பற்ற பாடல்கள் கிடைக்க அருள் செய்தவர் இங்குள்ள முருகன் ஆவார்.

*எழுத்தாளர் கோயில்*

சிவன் சன்னதிக்குப் பின்புறம் சுப்பிரமணியர், வள்ளி, தெய்வானையுடன் காட்சி தருகிறார். இது சிவத்தலம் என்றாலும், இவரே விசேஷ மூர்த்தியாக வணங்கப்படுகிறார். சுவாமி, மணக்கோலத்தில் குமரனாக இருப்பதால், செவ்வாய் தோஷத்தால் திருமணத்தடை ஏற்பட்டவர்கள் இவரை வழிபட, தோஷம் நீங்கி நல்ல வரன் அமையும். கந்த சஷ்டியின்போது முருகன் தெய்வானை, பங்குனி உத்திர திருவிழாவில் முருகன் வள்ளி திருக்கல்யாணம் நடக்கும்.

வள்ளி திருமணத்தின் போது, முருகனுக்கு வேடன், கிழவன் போல அலங்காரம் செய்தும், யானையால் வள்ளி விரட்டப்படுவது போலவும் பாவனையாகச் செய்வர். தைப்பூசத்தன்று அருகிலுள்ள 4 கோயில் சுவாமிகளுடன், முருகன் சேர்ந்து பஞ்ச மூர்த்திகளாகக் காட்சி தருவர். அருணகிரியார் திருப்புகழ் பாட அருளிய முருகன் என்பதால், எழுத்துத் துறையில் உள்ளவர்கள், பாடலாசிரியர்கள் இங்கு வேண்டிக்கொள்ள கலையில் சிறப்பிடம் பெறலாம்.

*வாரியார் திருப்பணி*

முருகபக்தரான கிருபானந்த வாரியார், 1934ம் ஆண்டில், இக்கோயிலுக்கு வந்தார். அப்போது அர்ச்சகராக இருந்த ஜம்புநாத சிவாச்சாரியார், அவருக்கு சுவாமி தரிசனம் செய்து வைத்தார். இதில் மகிழ்ந்த வாரியார், ஐம்பது பைசாவை அவரிடம் காணிக்கை கொடுத்துச் சென்றார். அன்றிரவில் கோயில் நிர்வாகி ஒருவரின் கனவில் சந்நியாசி வடிவில் தோன்றிய முருகன், "ஐம்பது பைசா வாங்கியிருக்கிறாயே? அதை வைத்து கோபுரம் கட்ட முடியுமா?' என்று கேட்டார். வியந்த நிர்வாகி, மறுநாள் கோயிலுக்கு வந்தபோது, வாரியார் ஐம்பது பைசா கொடுத்ததை அறிந்தார். அவருக்கு அந்த காசை திருப்பி அனுப்பி விட்டார். அதன்பின், இங்கு வந்த வாரியார், நடந்ததை அறிந்து, கோபுரம் கட்டி கும்பாபிஷேகம் செய்வித்தார்.

*சதுர தாண்டவ நடராஜர்*

வழக்கமாக ஒரு பாதம் தூக்கி நடனமாடும், கோலத்தில் காட்சி தரும் நடராஜரை, இங்கு காலைத் தூக்காத கோலத்தில் தரிசிக்கலாம். இதை நடனமாடுவதற்கு முந்தைய நிலையாகும். எனவே, இவரது சடாமுடியும் முடியப்பட்ட நிலையிலேயே இருக்கிறது. காலுக்கு கீழே முயலகனும் இல்லை. இவருக்கு "சதுரதாண்டவ நடராஜர்' என்று பெயர். மார்கழி திருவாதிரைத் திருநாள் இவருக்கு விசேஷமாக நடக்கும்.

*விசேஷ விநாயகர்*

அருணகிரிநாதருக்கு காட்சி தந்த "பொய்யா கணபதி விசேஷமான மூர்த்தியாவார். அருணகிரியார் இவரைப்போற்றி திருப்புகழில் காப்புச்செய்யுள் பாடியுள்ளார். யாருக்கு எவ்வளவு தகுதி இருக்கிறதோ, அந்த அளவிற்கு இவர் பொருளை சீராகக் கொடுப்பார் எனவும் குறிப்பிட்டுள்ளார். இங்கு அருணகிரிநாதருக்கும் சன்னதி உள்ளது. ஆனி மூலத்தன்று இவர் முருகனுடன் புறப்பாடாவார். சிவனுக்குரிய வன்னி மரம் இத்தலத்தின் விருட்சமாகும். கோயிலுக்கு வெளியே முருகன் வேலால் உருவாக்கிய சக்தி தீர்த்தம் உள்ளது.

*பிரார்த்தனை* நாக சர்ப்ப தோஷம் உள்ளவர்கள் செவ்வாய் அன்று திருக்குளத்தில் (நாக சர்ப்ப தோஷம்) மூழ்கி முருகனை தரிசித்தால் திருமணத்தடை நீங்கி சுப காரியம் நடைபெறும். இத்தலம் தமிழ்நாட்டிலுள்ள பிரார்த்தனைத் தலங்களில் மேன்மை வாய்ந்தது. நோய் நீக்கம், துன்ப நீக்கம், குழந்தை வரம், ஆயுள் பலம், கல்வி, அறிவு, செல்வம், விவசாயம் செழிப்பு ஆகியவற்றைப்பெற இத்தலத்தில் முருகனிடம் வேண்டுகிறார்கள்.

*நேர்த்திக்கடன்* முடி இறக்கி காது குத்தல், காவடி எடுத்தல், பால்க்குடம் எடுத்தல் சஷ்டி விரதம் இருத்தல், உடற்பிணி தீர ஆண்கள் அங்கபிரதட்சணம், பெண்கள் கும்பிடுதண்டமும், அடிப்பிரதட்சணமும் நிறைவேற்றுகின்றனர். தவிர சண்முகார்ச்சனை, சண்முக வேள்வி ஆகியவை செய்கிறார்கள். கார்த்திகை விரதம் இருத்தல், ஏழைகளுக்கு அன்னதானம் செய்தல், திருப்பணிக்கு பொருளுதவி செய்தல் ஆகியவை இத்தலத்துக்கு வருவபர்கள் இறைவனுக்கு செய்யலாம்.

*தலபெருமை*

*அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்*

இந்த வயலூரில் குடிகொண்டு இருக்கும் முருகப்பெருமான் ஒரு உண்மையை விளக்குகிறார். முருகப்பெருமான் தந்தையையும் தாயையும் முன்னிறுத்தி அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம் என்பதை நமக்கு புகட்ட அன்றாடம் தாய் தந்தையர் காலில் பணிந்து பூசனை புரிந்து அருள் பெற்ற பாலகராய் காட்சி தருகிறார்.

*அருணகிரி நாதர்*

திருவண்ணாமலையில் முருகப்பெருமானால் காப்பாற்றப்பட்ட அருணகிரிநாதர் "முத்தைத் திரு' பாடியபின்பு வயலூருக்கு வா என்று முருகன் செல்ல அதன்படி அருணகிரியார் இங்கு வந்துள்ளார். இங்குள்ள பொய்யாகணபதி தான் அருணகிரியாருக்கு அருள் தந்தவர் என்று செல்லப்படுகிறது. இங்குதான் அருணகிரி நாதர் திருப்புகழ் பாடும் ஆற்றலையும் அறிவையும் பெற்றார். இத்தலத்து முருகனே அருணகிரி நாதருக்கு நாவில் ஓம் என்ற பிரணவ மந்திரத்தை எழுதி திருப்புகழை சரளமாக பாட அருள் செய்தார். அத்தகைய பேரும் சிறப்பும் கொண்ட முருகன் தலம்.

*வாரியார் சுவாமிகள்*

எங்கும் நிறைந்த முருகப்பெருமான் வயலூர் தலத்தில் தமக்கு அருள் புரிந்தான் என்று தமிழ் கூறும் நல்லுலகு பூராவிலும் சென்ற நாற்பது ஆண்டுகளுக்கு மேலாக முழக்கி வந்தவர் வாரியார் சுவாமிகள் வயலூரைப் பற்றி தமிழ் மக்கள் அறியும் படி செய்தவர் வாரியார். நான் அன்றாடம் வழிபட்டு வரும் வயலூர் முருகப்பெருமான் திருவடிகளை வணங்கி சொற்பொழிவை தொடங்குகிறேன் என்று முன்னுரை வழங்கிய பின்பே சொற்பொழிவை தொடங்குவார். அந்த அளவு இத்தலத்துக்கும் வாரியாருக்கும் பிரிக்க முடியாத பிணைப்பு. இத் திருக்கோயில் பெருமளவு புகழ்பெற செய்ததற்கான அத்தனை பெருமையும் வாரியாருக்கே சாரும்.

சிவன் கோயிலில் முருகனுக்கு முக்கியத்துவம் வாய்ந்த தலம். மூலஸ்தானத்தில் முருகன் மயில் வடக்கு பக்கம் பார்த்து இருக்கிறது. இதற்கு தேவமயில் என்று பெயர். ஆதிநாயகி ஏனைய தலங்களில் வடக்கு முகம் பார்த்தே இருப்பாள். இங்கு மட்டும் தென்முகம் பார்த்து இருப்பது அபூர்வமானது. ஏனைய தலங்களில் முருகப்பெருமான் தாய்தந்தையரை தனித்து நின்று பூஜை செய்வார். ஆனால் வயலூரில் தெய்வ குஞ்சரி வள்ளியோடு சேர்ந்து பூஜை செய்கின்ற தனிச்சிறப்பு வயலூர் தலத்திற்கு உண்டு.

வயலூரில் முருகக் கடவுள் தனது வேலினால் தடாகம் உருவாக்கி அம்மை அப்பரை வழிபட்டார். நடராஜர் சூரத்தாண்டவ மூர்த்தியாக உள்ளார். அருணகிரி நாதருக்கு கல்யாண கோலத்தில் குமாரராக காட்சி தந்ததால் தடைபட்ட கல்யாணங்கள் நடைபெறும். திருப்புகழை பாடும் தன்மையை தந்தது வயலூர் முருகனே என்பதால் அருணகிரி நாதருக்கு இத்தலத்தில் விஷேச ஈடுபாடு. வாரியார் சுவாமிகளின் தனிப்பட்ட ஈடுபாட்டால் புகழ்பெற்ற முருகன் திருத்தலம்.

*தல வரலாறு*

இப்பகுதியில் வேட்டையாட வந்த சோழ மன்னன் ஒருவர் தண்ணீர் தாகம் எடுத்து நீருக்கு அலைந்து இப்போது கோயில் இருக்கும் இடத்துக்கு வரும் போது மூன்று கிளைகளாக வளர்ந்த கரும்பு ஒன்றை கண்டு அதனை ஒடித்து தாகம் தீர்க்க எண்ணி கரும்பை ஒடித்த போது அதிலிருந்து இரத்தம் கசிந்தது. அவ்விடத்தை தோண்டிப்பார்த்த போது சிவலிங்கம் இருந்ததாகவும் பின்னர் கோயில் எழுப்பியதாகவும் கர்ணபரம்பரை செய்தி கூறுகின்றது.

திருவண்ணாமலை கோபுரத்திலிருந்து கீழே விழுந்த அருணகிரி நாதரை காப்பாற்றி முத்தை திரு என்று அடிஎடுத்துக் கொடுத்த முருகப்பெருமான் வயலூருக்கு வா என்று அழைக்க இங்கு வந்து தான் முருகப்பெருமானை அருணகிரியார் பொய்யாகணபதியை வணங்கி கண்டு கொண்டார். அருணகிரி நாதருக்கு தன் வேலால் ஒம் என்ற பிரணவ மந்திரத்தை முருகப் பெருமான் எழுதினார். திருப்புகழின் பெருமையில் வயலூர் முருகனுக்கு தனிச்சிறப்பு உண்டு. கிருபானந்த வாரியாரின் தனிப்பட்ட ஈடுபாட்டின் காரணமாக உலகப் புகழ் பெற்ற கோயிலாக இன்று இக்கோயில் திகழ்கிறது.

ஓம் நமசிவாய 
படித்து பகிர்ந்தது 
இரா இளங்கோவன் 
நெல்லிக்குப்பம். 

Tuesday, September 23, 2025

கண் நோய்களைப் போக்கும் செம்பியன் களரி நேத்ரபதீஸ்வரர்...!

கண் நோய்களைப்  போக்கிகண்களுக்கு  கவசமாகும்  நேத்ரபதீஸ்வரர்...! 
தஞ்சை மாவட்டம், ஒரத்தூருக்கும் மேகளத்தூருக்கும் இடையில், செம்பியன்களரியில் அமைந்துள்ளது அருள்மிகு நேத்ரபதீஸ்வரர் திருக்கோயில்.

ஒவ்வொரு மாதமும் மூன்றாம் பிறை நாளன்று இந்த ஈஸ்வரருக்கு தசாவனி தைலக்காப்பிட்டு, சாம்பிராணி தூபம் காட்டி, அத்திப் பழம் நிவேதனம் செய்து வழிபட, கண் தொடர்பான அனைத்து நோகளும்
நீங்கி, பூரண நலம் பெறலாம் என்பது பக்தர்களின் அனுபவக் கூற்றாகத் திகழ்கிறது.

கல்லணைக்குக் கீழே சற்றே உள்ளடங்கிய கிராமம் செம்பியன்களரி. ஒரு காலத்தில் வரலாற்றுப் புகழ் பெற்றிருந்த இந்த ஊரிலிருந்துதான்சொழ அரசின் சில நிர்வாக அலுவல்கள் மேற்கொள்ளப்பட்டன. 

அச்சமயம், அரசின் நிர்வாக அலுவலகங்களும் இங்கு இருந்துள்ளன. ராஜராஜசோழனின் தாய் செம்பியன் மாதேவி கட்டியது, இந்த அருள்மிகு காமாட்சியம்மன் உடனுறை அருள்மிகு நேத்ரபதீஸ்வரர் திருக்கோயில். 

கருவறை மூலவர் லிங்க வடிவில் கிழக்கு நோக்கியும், அம்பாள் காமாட்சியம்மன் தெற்கு நோக்கி தனிச்
சன்னிதியிலும் அருள்பாலிக்கின்றனர்.

கோயிலின் எதிர்ப்புறம் வீடுகள் அமைந்திருக்க, மூன்று புறங்களிலும் பசுமை போர்த்திய வயல்கள் கண்களுக்குக் குளிர்ச்சியாகக் காட்சியளிக்கின்றன. 

கோயிலின் நுழைவாயிலில் நந்தி, கருவறைக்கு வலது புறம் விநாயகரும், இடது புறம் சிவசுப்பிரமணியரும் வீற்றிருக்கின்றனர். 

பிராகார கோஷ்டத்தில் நர்த்தன விநாயகர், தட்சிணாமூர்த்தி, அண்ணாமலையார், பிரம்மா, ருத்ர துர்கை ஆகியோர் அருள்பாலிக்கின்றனர்.

தனிச் சன்னிதியில் சண்டிகேஸ்வரர் வீற்றிருக்கிறார். ஸ்தல விருட்சம் வில்வ மரத்தடியில் நாகர்சிலைகள்.
ஒவ்வொரு மாதமும் அமாவாசை அடுத்து வருகின்ற மூன்றாம் பிறை நாளன்று, அந்தியும் இரவும் சந்திக்கின்ற பொழுதினில் மூலவர் நேத்ரபதீஸ்வரருக்கு சிறப்பு பூஜைகள் நடைபெறுகின்றன.

அச்சமயம், கண் பார்வை தொடர்பான நோகளோடு வரும் பக்தர்களின் குறைபாட்டினைக் களைந்து அருள் பாலிக்கிறார் இத்தல ஈசன்.

மூன்றாம் பிறையன்று மூலவருக்கு, ‘தசாவனி தைலம்’ காப்பிடப்பட்டு சிறப்பு பூஜைகள் நடத்தப் படுகின்றன. 

அது என்ன தசாவனி தைலம்? நீலி பிருங்காதி, பொன்னாங்கண்ணி, கரிசலாங்கண்ணி, மருதாணி, செம்பருத்தி, தேங்கா எண்ணெய், நல்லெண்ணெய், இலுப்பை எண்ணெ, விளக் கெண்ணெய், வேப்பெண்ணெய் ஆகிய பத்து வித பொருட்களை அதனதன் சரிவிகிதத்தில் கலந்து உருவாக்குவதே, ‘தசாவனி தைலம்.’ இந்த தசாவனிதைலக் காப்பே மூலவருக்குச் சாத்தப்படுகிறது.

பிரார்த்தனைக்காக மூலவருக்குத் தைலக்காப்பிட விரும்புவோருக்கு இந்தத் தைலக்காப்பை கோயில் நிர்வாகமே ஏற்பாடு செய்து தருகிறது.

அன்று மாலை, இரவு கவிழும் சமயம், வானில் மூன்றாம் பிறை தெரியத் தொடங்கும் நேரம் பக்தர்கள் கோயிலின் கருவறை பின்புறம் உள்ள பிராகாரத்தில் சூழ்ந்து நின்று வானத்தையே பார்க்கின்றனர். 

வானில் மெல்லியக் கீற்றாகக் காட்சி தருகிறது மூன்றாம் பிறை நிலவு. பக்தர்கள் சூழ்ந்து நின்று மூன்றாம் பிறையினைத் தரிசித்து வணங்குகின்றனர்.

அதன் பின்னரே மூலவர் நேத்ரபதீஸ்வரருக்கு தீபாராதனைகள் தொடங்குகின்றன.

அமாவாசை கழித்து, மூன்றாம் நாளின் இரவு 6.30 மணிக்கு மேல் 7.10 மணிக்குள் மூன்றாம் பிறை தெரியத் தொடங்கிவிடும். 

மழை நாட்கள் மற்றும் கருமேகம் சூழ்ந்த நாட்களில் மூன்றாம் பிறை தெரிய வாய்ப்பு கிட்டாது. அப்போது மேற்குறிப்பிட்ட நேரத்தைக் கணக்கில் கொண்டு, கோயிலில் மூன்றாம் பிறை வழிபாடு மற்றும் பூஜைகள் நடத்தப்படுகின்றன.

மூன்றாம் பிறை வழிபாட்டு பூஜையின்போது, மூலவர் நேத்ரபதீஸ்வரருக்கு அத்திப்பழ நைவேத்யம் சமர்ப்பிக்கப்படுகிறது.

வழிபாட்டுக்குப் பிறகு மூலவரின் மீது சாத்தப்படும் தசாவனி தைலக்காப்பு பக்தர்களுக்குப் பிரசாதமாக வழங்கப்படுகிறது.

இது கண் பார்வைக் குறைபாடுகளைப் போக்குகிறது. பக்தர்கள் இதனை உச்சந்தலையிலும் இமைகள் மீதும் பூசிக் கொள்கின்றனர்.

இது, கண்களுக்குக் குளிர்ச்சியைத் தந்து, பார்வைத்திறனை அதிகரிக்கச் செய்கிறது. 

கண் நோய் பாதிப்புக்கு ஆளானவர்கள் தொடர்ந்து மூன்றாம் பிறை வழிபாட்டினில் பங்கேற்று, தசாவனி தைலக் காப்பை உபயோகப்படுத்தி, கண் தொடர்பான பிரச்னைகளிலிருந்து விடுபடுகின்றனர்" என்கிறார்கள்.

அமைவிடம்: கல்லணைக்குக் கிழக்கே 14 கி.மீ., திருக்காட்டுப்பள்ளியிலிருந்து 12 கி.மீ., பூதலூரிலிருந்து 12 கி.மீ.தொலைவில் உள்ளது கோயில்.

ஓம் நமசிவாய 
படித்து பகிர்ந்தது 
இரா இளங்கோவன் 
நெல்லிக்குப்பம். 

Monday, September 22, 2025

போன ஜென்மத்து பாவத்த தீர்க்கும் கோவில்

_போன ஜென்மத்து பாவத்த தீர்க்கும் கோவில் !_
போன ஜென்மத்துல பெரிய பாவம் பண்ணிருக்கப்பா நீயி... நீ பண்ண பாவம் உன்ன ஏழேழு ஜென்மத்துக்கும் பின்தொடரும்மா தாயின்னு.. ரைமிங்ல அடிச்சு டைமிங்ல விடுற பித்தலாட்டம் இல்லைங்க... நிஜமாவே முன் ஜென்மத்துல நம்பிக்கை இருக்கு' என்கிறீர்களா?

உண்மைதான்... முந்தைய பிந்தைய ஜென்மங்கள் இருக்குதுங்க... என் பாப்பா பேசுறது என் அம்மா மாதிரியே இருக்குமுங்க.. என்று பலர் கூற நாம் கேட்டிருப்போம். விசாரித்துப் பார்த்தால், அவரின் அம்மா இறந்த சில வருடங்களில் அவருக்கு குழந்தை பிறந்ததாக சொல்வார் அவர். இன்னும் சிலருக்கோ, புதிதாக சென்ற இடம் கூட ஏற்கனவே தான் இங்கு வந்திருப்பதுபோல நினைவுக்கு வரும். ஆனால் நீங்கள் வந்திருக்கவே மாட்டீர்கள்..

அப்போது ஏன் அப்படி நினைவு வருகிறது. முந்தைய ஜென்ம நினைவுகளாக இருக்கலாமோ. முன் ஜென்மத்தை அறிவியலால் இன்னும் நிரூபிக்க முடியவில்லை என்றாலும், அப்படி ஒன்று இல்லை என்று கூறிவிடமுடியாது.

முன் ஜென்மத்தில் பாவியாக பிறந்து பல பாவங்களைச் செய்து இறைவனின் சாபத்துக்குள்ளாகி, துர்மரணம் அடைந்தவர்கள் திரும்ப பிறக்கிறார்கள் என்று பல ஞானிகள் கூறியுள்ளனர்..

உங்களுக்கு கடன் தொல்லையா, உடல் நிலை பிரச்சனைகள் அடிக்கடி வருகின்றதா.. இது போன்ற பிரச்னைகள் தொடர்கதையால் வாழ்வையே வெறுக்கிறீர்களா.. இவையெல்லாம் முன்ஜென்ம பிரச்னைதான் என்கிறார்கள் இறைவன்மீது அதீத பக்திகொண்ட பெரியவர்கள்.

இந்த இந்த பாவத்துக்கு இந்த இந்த பரிகாரம் என்று எழுதிவைத்துள்ள நம் முன்னோர்கள், அந்த பாவத்தைக் கழுவ போக வேண்டிய கோவிலையும் கூறியுள்ளார்கள்.. அப்படிபட்ட ஒரு கோவிலுக்குத் தான் இன்று நாம் போகவிருக்கிறோம்.

திருப்புகலூர் அக்னீபுரீஸ்வரர் ஆலயம்

முன்ஜென்ம பகைகளை போக்கி, பாவங்களை நீக்கி வருங்காலத்தை செம்மைபடுத்த நீங்கள் கட்டாயம் செல்லவேண்டிய கோவில்களுள் ஒன்று இந்த திருப்புகலூர் அக்னீபுரீஸ்வரர் ஆலயம் ஆகும்.

வாழ்வில் நல்ல திருப்பம் வேண்டுமா, புதுவீடி கட்ட திட்டமா இந்த கோவிலுக்கு வந்து பாருங்க அப்றம் ஓஹோனு வாழ்வீங்க...

முக்கிய சிறப்புக்கள்

அக்னிக்கு உருவச்சிலை அமைந்துள்ள ஒரே திருத்தலம் இதுதான்

அப்பர், சம்பந்தர்,திருநீல நாயனார், முருக நாயனார், சிறுதொண்ட நாயனார் ஆகியோர் இணைந்து வணங்கிய தலம் இதுவாகும்.

முக்காலத்துக்கும் ஆசி அருள் வழங்கும் தலம்.. பண்ணிய பாவங்கள் போக்கும் தலம்

தல நம்பிக்கைகள்

கோவில் அமைந்துள்ள ஊரின் அருகில் பிரசவ வலியால் துடித்த பெண்ணை காக்க அம்மன் வெண்ணிற புடவை அணிந்து வந்ததாகவும், அந்த பெண்ணையும் குழந்தையையும் மருத்துவச்சி போல காப்பாற்றியதாகவும் நம்பிக்கை நிலவுகிறது.

வேண்டுதல்கள்

அம்மனுக்கு வெள்ளைப் புடவை சாற்றி வழிபட்டால் நினைத்த காரியம் கைகூடும் என்பது நம்பிக்கை.

இங்குள்ள கோவில் குளத்தில் மூழ்கி எழுந்தால், சனி தோஷம் விலகும் என்றும் நம்பப்படுகிறது.

பிறவிப் பலன்

சதய நட்சத்திரம், ஆயில்ய நட்சத்திரம் மற்றும் தனுசு ராசியில் பிறந்தவர்கள் இந்த தலத்துக்கு ஒருமுறையாவது வந்தால் பிறவி பலனை அடைவதாக நம்பிக்கை.

போகரின் சமாதி

இங்கு ஒரு சித்தரின் சமாதி அமைந்துள்ளது. 18 சித்தர்கள் வந்து வழிபட்ட ஸ்தலம் என்னும் பெருமை இந்த கோவிலுக்கு உள்ளது. இதனால் அந்த சமாதி போகருடையதாக அநேகம் பேரால் கருதப்படுகிறது.

சந்நிதிகள்

பூதேஸ்வரர், வர்த்தமானேஸ்வரர், பவிஷ்யேஸ்வரர் ஆகிய மூவரும், தனித்தனி சந்நிதிகளில் வீற்றிருக்கிறார்கள். இவர்களை வணங்கினால் பித்ரு தோஷ நிவர்த்தி கிடைப்பதுடன், பொருட்செல்வம், கல்விச்செல்வம், வேலைவாய்ப்பு, பேரின்ப பெருவாழ்வு அடையலாம் என்கிறார்கள்.

எப்படி செல்லலாம்

நாகப்பட்டினம், திருவாரூர், கும்பகோணம், மயிலாடுதுறை ஆகிய ஊர்களிலிருந்து பேருந்து, டாக்ஸி வசதிகள் உள்ளன. அல்லது நீங்கள் சொந்த வாகனத்தில் வந்தால் வந்து அங்கிருந்து கும்பகோணத்திலிருந்து நாகப்பட்டினம் செல்லும் வழியில் வரலாம். அல்லது மயிலாடுதுறையிலிருந்து திருவாரூர் செல்லும் வழியில் அமைந்துள்ளது இந்த புண்ணியதலம்.
ஓம் நமசிவாய 
படித்து பகிர்ந்தது 
இரா இளங்கோவன் 
நெல்லிக்குப்பம். 

Sunday, September 21, 2025

புரட்டாசி மாத நவராத்திரி பூஜை

புரட்டாசி மாத நவராத்திரி பூஜை பற்றிய பதிவுகள் :*
தமிழ் மக்களின் ஆன்மீக வாழ்வில் புரட்டாசி மாதம் மிகவும் சிறப்புமிக்க மாதமாகக் கருதப்படுகிறது.

அந்த மாதத்தில்தான் நவராத்திரி என்ற ஒன்பது நாட்கள் கொண்ட மகா விழா நடத்தப்படுகிறது. துர்கை, லட்சுமி, சரஸ்வதி தேவிகளின் அருளைப் பெறுவதற்காக நடைபெறும் இவ்விழா ஆவணியும் புரட்டாசியும் மாதங்களில் நடைபெறுகிறது.

இதுகுறித்து மேலும் விரிவாக நமது ஓம் நமசிவாய ஆன்மீக குழுவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

*நவராத்திரி தொடங்கும் காலம்*

மஹாளய அமாவாசைக்கு அடுத்த நாள் முதலே நவராத்திரி பூஜைகள் தொடங்குகின்றன.

அதாவது, பித்ரு தர்ப்பணங்கள் முடிந்து தெய்வ பூஜைக்கான நேரம் ஆரம்பிக்கிறது.

புரட்டாசி மாதத்தில் ஆரம்பிக்கும் இந்த நவராத்திரி சரத்நவராத்திரி என அழைக்கப்படுகிறது.

இந்த நாளில் மக்கள் கோலம் போட்டு, கலசம் வைத்து, கோலு படிகளை அமைத்து வழிபாட்டை தொடங்குகிறார்கள்.

*நவராத்திரி பூஜை முறைகள்*

*1. கலச ஸ்தாபனை (கலசம் வைப்பு)*

ஒரு நல்ல நாள், நல்ல நேரத்தில் கலசத்தை வைத்து, அதனை மங்கள பொருட்களால் அலங்கரிக்கிறார்கள்.

இதில் தேவி அம்மன் சக்தி வரவேற்கப்படுகிறது.

*2. கோலு அமைப்பு*

கோலு படிகளில் பல்வேறு பொம்மைகள் வைக்கப்படுகின்றன.

ஒவ்வொரு படியிலும் தெய்வ, ஆன்மீக, சமூக வாழ்க்கையை குறிக்கும் பொம்மைகள் வைக்கப்படுகின்றன.

இது பரம்பரை வழக்கத்தையும், தெய்வீகத்தையும் இணைக்கும் வழிபாடு.

ஓம் நமசிவாய 
படித்து பகிர்ந்தது 
இரா இளங்கோவன் 
நெல்லிக்குப்பம். 

Saturday, September 20, 2025

பித்ரு கடன் தீர்க்கும் மகாளய அமாவாசை தர்ப்பண

_பித்ரு கடன் தீர்க்கும் மகாளய அமாவாசை தர்ப்பண..._
ஒவ்வொரு அமாவாசையன்றும், நீத்தார் கடனை நிறைவேற்றும்போது...

‘ஏ ஷாம் ந மாதா ந பிதா ந ப்ராதா ந சபாந்தவஹா
தே சர்வே த்ருப்திம் ஆயாந்து மயா
உச்ரிஷ்டைஹி குஸௌதஹைஹி
த்ருப்யத் த்ருப்யத் த்ருப்யத்’

என உச்சரிக்கப்படும் ஸ்லோகத்தின் பொருள் என்ன தெரியுமா? ‘எனக்குத் தாயாகவோ, தந்தையாகவோ, சகோதரராகவோ, பிற உறவினராகவோ இல்லாவிட்டாலும் கூட, இவ்வுலகை விட்டு நீங்கியவர்களின் ஆன்மாக்கள் புண்ணியமடைய, இந்த அமாவாசை தினத்தில், தர்ப்பையோடு கலந்த நீரை அர்ப்பணிக்கிறேன்’ என்பதாகும்.

அமாவாசையன்று செய்யப்படும் தர்ப்பணம் எமதர்மராஜனின் கைகளின் வழியாக, முன்னோர்களிடம் ஒப்படைக்கப்படுவதாகக் கூறப்படுகிறது. வருடந்தோறும் வரும் தை மற்றும் ஆடி என இரு அமாவாசைகள் முக்கியமென்றாலும், நவராத்திரியின் ஆரம்பத்தைக் குறிக்க மூன்றாவதாக வரும் மஹாளய பட்ச அமாவாசையும் முக்கியம் வாய்ந்ததாகும்.

‘மறந்தவனுக்கு மஹாளயத்தில் கொடு’ என்கிற மாதிரி, தை மற்றும் ஆடி மாத அமாவாசைகளில் தர்ப்பணம் செய்யாதவர்கள், மஹாளய பட்ச காலத்தில் நீத்தார் கடனை செய்கையில், முன்னோர்களின் ஆன்மாக்கள் மகிழ்ந்து, ஆசிகளை வழங்குவார்கள்.

புரட்டாசி மாத ஆரம்பத்தில் வரும் அமாவாசை, மஹாளய பட்ச அமாவாசை ஆகும்.  அமாவாசைக்கு 15 நாட்கள் முந்திய பிரதமை திதியில் ஆரம்பித்து 15 நாட்களும், முன்னோர்களை வழிபட, பல வகை பலன்கள் கிடைக்கும். பிரதமையைத் தொடர்ந்து வரும் 15 திதி  நாட்களில், குறிப்பிட்ட திதி நாளில் ஒரு முறையும், மஹாளாய அமாவாசையன்று ஒரு முறையுமாக இரு நாட்கள் மஹாளய பட்ச  சமயம், நீத்தார் கடனைத் தீர்க்க தர்ப்பணம் செய்வது சிறந்ததாகும். ‘காருண்ய பிதாக்கள்’ என அழைக்கப்படும் முன்னோர்களின் ஆசிகளின் மூலம், பித்ரு தோஷம் மற்றும் பிற தோஷங்களில் இருந்து நிவர்த்தி பெறலாம்.

மஹாளய பட்ச காலத்தில், முன்னோர்கள் மட்டுமல்ல; நாம் அளிக்கும் தர்ப்பணத்தை ஏற்பதற்காக தெரிந்தவர்கள், தெரியாதவர்கள் என அநேகர் காத்திருப்பது உண்டு. எல்லோருக்கும் சேர்த்து பிரார்த்தனை செய்து மஹாளய பட்ச தர்ப்பண வழிபாட்டை மேற்கொள்கையில், அவர்களின் ஆத்மாக்கள் சாந்தியடையும். மஹாளய பட்ச தர்ப்பணத்தை நீர் நிலைகள், கடலோரங்கள் போன்ற இடங்களில் செய்து, முடிந்தவற்றை தானம் செய்வதோடு, வாயில்லா பிராணிகள், பறவைகளுக்கு உணவளிப்பது மிகவும் அவசியமாகும்.

மஹாளய பட்ச காலத்தில் மஹாபரணி, மத்யாஷ்டமி, வைதிருதி, மகாவிய தீபாதம், அமிர்தா நவமி ஆகிய தினங்கள் தர்ப்பணம் செய்ய மிக உகந்ததாகும். இந்நாட்களில் செய்ய இயலாதவர்கள் ஏதாவது ஒரு நாளில் செய்யலாம்.

கொடை வள்ளல் கர்ணன், தன்னுடைய  முன்னோர்களுக்கு சிராத்தம் செய்யாததால், அவர்களுக்கு சரியான உணவு கிடைக்கவில்லை. எனவே, முன்னோர்கள் கர்ணனுக்கு சாபமிட்டதாகக் கூறப்படுகிறது. அதன் பிறகு சொர்க்கத்திற்கு சென்ற கர்ணனுக்கும் சாப்பாடு கிடைக்கவில்லை. பொன்னும், பொருளுமே தட்டில் விழுந்தன. யமதர்ம ராஜனிடம் இதற்குப் பரிகாரம் கேட்கையில், பூலோகம் சென்று, மஹாளய பட்ச சமயம், நீத்தார் கடன் தீர்க்க வழி கூறினார். கர்ணனும் அவ்வாறே செய்ய, பித்ரு கடன் அடைபட்டு சொர்க்கத்திற்கு திரும்பிச் சென்றதாகக் கூறப்படுகிறது. கர்ணன் பூமியில் தங்கி முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்த 15 நாட்களே மஹாளய பட்ச காலமென அழைக்கப்படுகிறது.

எவ்வளவுதான் தான தர்மம் செய்தாலும், பித்ரு கடன் வழிபாடு செய்யாவிட்டால் பலன் கிடைக்காது. மஹாளய பட்ச 15 நாட்களும் உணவில் எளிமையைக் கடைப்பிடிப்பதோடு, அன்னதானம் அளித்து, இறை வழிபாடு செய்வது நன்மையை அளிக்கும்.

ஓம் நமசிவாய
 படித்து பகிர்ந்தது 
இரா இளங்கோவன் 
நெல்லிக்குப்பம். 

பெருமாள் கோவிலில் நவகிரகம் கூடுவாஞ்சேரி லட்சுமி நாராயணர்

திருமண வரம் அருளும் மாடம்பாக்கம் லட்சுமி நாராயணர்


பல்லவ மன்னர்களின் ஆட்சிக் காலத்தில் கட்டப்பட்டது.
வெளியே பழமையான விளக்குத் தூண் காட்சி தருகிறது.
தொண்டை மண்டலம் என்று அழைக்கப்பட்ட காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் லட்சுமி நாராயணப் பெருமாள் கோவில்கள் அதிக அளவில் அமைந்துள்ளன. சூராடிமங்கலம், பள்ளஈகை, நென்மேலி, துஞ்சம், பரனூர், பள்ளிக்கரணை, குன்னத்தூர், அம்மணம்பாக்கம், எச்சூர், அருங்குன்றம், குழிப்பாந்தண்டலம், திருநிலை முதலான ஊர்களில் லட்சுமி நாராயணப் பெருமாள் திருத்தலங்கள் அமைந்துள்ளன. இவை அனைத்துமே மிகப் பழமையான திருத்தலங்களாகும்.

இத்தகைய பழம்பெருமை வாய்ந்த தலங்களில் ஒன்றுதான், செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரி அருகே மாடம்பாக்கத்தில் அமைந்துள்ள லட்சுமி நாராயணப் பெருமாள் திருக்கோவில். இத்தலம் பல்லவ மன்னர்களின் ஆட்சிக் காலத்தில் கட்டப்பட்டதாக கருதப்படுகிறது.


 கோவிலுக்கு வெளியே பழமையான விளக்குத் தூண் காட்சி தருகிறது. கிழக்கு திசை நோக்கி அமைந்த இத்தலம், மூன்று நிலை ராஜகோபுரத்துடன் காட்சி அளிக்கிறது. ராஜகோபுரத்தின் வெளிப்புறத்தில் ஒரு பக்கம் தும்பிக்கையாழ்வாரும், மற்றொரு பக்கம் காளிங்க நர்த்தனரும் வீற்றிருக்கிறார்கள்.

அவர்களை வணங்கி உள்ளே நுழைந்ததும், ராஜகோபுரத்தின் உட்புறத்தில் ஒரு புறம் சுதர்சனப் பெருமாளும், மற்றொருபுறம் நரசிம்மரும் பிரமாண்டமான சுதைச் சிற்ப வடிவத்தில் காட்சி தந்து மெய்சிலிர்க்க வைக்கிறார்கள். சக்கரத்தாழ்வாரை வணங்கி உள்ளே நுழைந்ததும், பலிபீடமும், கருடாழ்வார் சன்னிதியும் இருக்கிறது.

வெளித்திருச்சுற்றில் இடதுபுறத்தில் பக்த ஆஞ்சநேயர் ஒரு சிறிய சன்னிதியில் எழுந்தருளி அருள் பாலிக்கிறார். வலது புறத்தில் விஷேசமான நவக்கிரக சன்னிதி ஒன்று அமைந்துள்ளது. நவக்கிரக நாயகர்கள் தங்கள் வாகனத்தோடு காட்சி தந்து அருள்பாலிப்பது, விசேஷமானதாக கருதப்படுகிறது. மேலும் சூரிய பகவான் ஏழு குதிரைகள் பூட்டிய ஒற்றை சக்கரத் தேரில், தனது மனைவியர்களான உஷாதேவி, சாயாதேவியரோடு காட்சி தருவது கூடுதல் சிறப்பாகும்.

கருவறை, அர்த்தமண்டபம், முன்மண்டபத்தோடு இத்தலம் அமைக்கப்பட்டிருக்கிறது. முன்மண்டபத்தில் ஒரு சிறிய மாடத்தில் உடையவரும், அவருக்கு அருகில் காளிங்க நர்த்தனரும் காட்சி தந்து பக்தர்களுக்கு அருள்புரிகிறார்கள். கருவறையில் மூலவர் லட்சுமி நாராயணப் பெருமாள், கிழக்கு திசை நோக்கி அமர்ந்த கோலத்தில் அருள்பாலிக்கிறார்.


 லட்சுமிதேவியை தனது இடது தொடையில் அமர்த்தி இடது கரத்தால் அணைத்தவாறும், வலது திருக்கரத்தினை பக்தர்களைக் காக்கும் அபயஹஸ்த நிலையில் வைத்தபடியும், திருமுகத்தில் புன்னகை தவழ மிக அழகிய திருக்கோலத்தில் இந்த பெருமாள் காட்சி தருகிறார்.

மேலும் மூலவர் சன்னிதியில் நவநீதகிருஷ்ணனும் இருக்கிறார். அர்த்த மண்டபத்தில் ஸ்ரீதேவி - பூதேவி சமேத பெருமாளின் உற்சவ மூர்த்தியை தரிசிக்கலாம்.

லட்சுமிதேவியோடு இணைந்து காட்சி தரும் லட்சுமி நாராயணப் பெருமாளை தரிசிப்பதன் மூலம், குடும்ப ஒற்றுமை நிலைக்கும் என்பதும், கணவன்- மனைவி ஒற்றுமை பலப்படும் என்பதும் ஐதீகம்.

மேலும் பலவிதமான காரணங்களால் ஏற்படும் திருமணத் தடைகளும், இந்த ஆலயத்திற்கு வந்து மூலவரை தரிசிப்பதன் மூலமாக நீங்கும் என்பது பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கை. வைகானச ஆகம முறை பின்பற்றப்படும் இத்தலத்தில், தினமும் ஒரு கால பூஜை மட்டுமே நடைபெறுகிறது. இந்த ஆலயத்தில் தல விருட்சமாக, வில்வ மரம் உள்ளது.
இந்த ஆலயத்தில் ஒவ்வொரு வருடமும் திரு பவித்ர உற்சவம், திருப்பாவாடை மஹோத்சவம், தீபாவளிக்கு மறுநாள் கேதார கவுரி விரதம், கிருஷ்ண ஜெயந்தி உற்சவம், உறியடித் திருவிழா, திருக்கார்த்திகை தீப விழா, புரட்டாசி மாத சனிக்கிழமைகளில் விசேஷ வழிபாடுகள், திருக்கல்யாண உற்சவம், ஒய்யாளி சேவை மற்றும் பல வைணவ விழாக்கள் சிறப்பான முறையில் கொண்டாடப்படுகின்றன.

ஜனவரி முதல் வாரம் மற்றும் புரட்டாசி மாதம் 4-வது வாரத்தில் பெருமாள் உள்புறப்பாடு நிகழ்ச்சி நடைபெறுகிறது. திருக்கார்த்திகை தீப விழாவில் 1008 திருவிளக்குகள் ஏற்றப்படுகின்றன.

இந்த கோவில் தினமும் காலை 7.30 மணி முதல் பகல் 11 மணி வரையிலும், மாலை 5.30 மணி முதல் இரவு 8 மணி வரையிலும், பக்தர்கள் தரிசனம் செய்வதற்காக திறந்துவைக்கப்பட்டிருக்கும்.

அமைவிடம்

கூடுவாஞ்சேரியில் இருந்து மேற்கு திசை நோக்கி சுமார் 2 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது, மாடம்பாக்கம் திருத்தலம்.
ஓம் நமசிவாய 
படித்து பகிர்ந்தது 
இரா இளங்கோவன் 
நெல்லிக்குப்பம். 

Friday, September 19, 2025

கைலாசநாதர் திருக்கோயில், திங்களூர், திருப்பழனம்.

அருள்மிகு கைலாசநாதர் திருக்கோயில், 
திங்களூர், 
திருப்பழனம் அஞ்சல்,  
திருவையாறு வட்டம், 
தஞ்சாவூர் மாவட்டம் – 613 204.         
*இறைவன் : கைலாசநாதர் 

*இறைவி : பெரியநாயகி  

*தீர்த்தம் : சந்திர தீர்த்தம்           

*இத்தலம் ஒரு தேவார வைப்புத் தலமுமாகும். திருநாவுக்கரசரும், சுந்தரரும் தங்கள் பதிகங்களில் திங்களூர் தலத்தைக் குறிப்பிட்டுள்ளனர்.   

*திருப்பாற்கடலை கடைந்தபோது வெளிப்பட்ட ஆலகால விஷத்தை சிவபெருமான் அருந்தி உலக உயிர்களைக் காத்தார். இருந்தாலும் அப்பகுதியில் பரவிய நஞ்சின் தாக்கத்தினால் தேவர்கள் மயக்கம் அடைந்து விழுந்தனர். அப்போது அமிர்தத்துடன் எழுந்து வந்த சந்திரன், தேவர்களின் மயக்கத்தைத் தெளிவித்தான். அத்தகைய சந்திரனை, சிவபெருமான் தன் தலையில் சூடிக்கொண்டார்.   

*தட்சன் தனது 27 புத்திரிகளையும் சந்திரனுக்கு மணமுடித்து வைத்தான். 27 மனைவிகளிடமும் ஒரே மாதிரி அன்பு செலுத்த வேண்டிய சந்திரன், அவர்களில் ரோகிணியிடம் மட்டும் தனி பிரியம் செலுத்தினான். மற்ற 26 மனைவிகளும் தட்சனிடம் முறையிட்டனர். மாமனார் தட்சன், 27 மனைவிகளிடமும் அன்பு செலுத்தும்படி கூற, சந்திரன் அதை ஏற்க மறுத்தான். கோபம் கண்ட தட்சன், சந்திரனின் அழகு குறையவும், அவனது கலைகள் மங்கும்படியும் சாபம் இட்டான். 

இட்ட சாபம் நீங்க சந்திரன் இந்த தலத்தில் நீண்ட காலம் தவம் செய்தான். தன் பெயரில் ஒரு தீர்த்தம் உண்டாக்கி இறைவனை பூஜித்தான்.              
ஒரு பங்குனி மாதப் பௌர்ணமியில், இறைவன் காட்சி கொடுத்து அருளினார். தட்சனின் சாபத்தால் நாள்தோறும் சிறிது சிறிதாக தேய்ந்து ஒருநாள் முழுமையாக மறையவேண்டிய (அமாவாசை) சாபத்திற்கு ஆளான சந்திரன், சிவனின் அனுக்கிரகத்தால் மீண்டும் வளர்ந்து ஒருநாள் பிரகாசிக்கும் (பவுர்ணமி) விமோசனத்தைப் பெற்ற தலமே திங்களூர் திருத்தலம்.      

*இத்தலத்தின் ஷேத்திர பாலகராக சந்திரன், மேற்கு திசை நோக்கி இறைவனைப் பார்த்தபடி தனி சந்நிதியில் காட்சி தருகிறார்.  

*ஒவ்வொரு வருடமும் பங்குனி உத்திரத்தன்று காலை உதயத்தில் 6 மணிக்கு லிங்கத்தின் மீது சூரிய ஒளி படுவதால், அன்று சூரிய பூஜையும், மறுநாள் பெளர்ணமி பிரதமையில் மாலை 6 மணிக்கு சந்திர ஒளி லிங்கத்தின் மீது படுவதால் அன்று சந்திர பூஜையும் நடைபெறும்.                 
 கைலாசநாதர் மற்றும் பெரியநாயகி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெறும். இதை தொடர்ந்து தனி சன்னதியில் அமைந்துள்ள சந்திர பகவானுக்கு லட்சார்ச்சனை நடக்கும்.         

*ஏதேனும் ஒரு வளர்பிறை திங்கட்கிழமை தினத்தில் காலை 9 மணிக்குள் இத்தலத்தில் உள்ள சந்திர தீர்த்தத்தில் நீராடி, இங்குள்ள சந்திர பகவானுக்கு அபிஷேகம் மற்றும் அர்ச்சனை செய்து, வெள்ளை நிற வஸ்திரம் சாற்றி வழிபட்டால், ஜாதகத்தில் சந்திர பகவானால் ஏற்படும் தோஷங்கள் நீங்கி நன்மைகள் உண்டாகும்.        

"மனக்குழப்பம், தேவையற்ற பயம், தெளிவற்ற நிலை போன்றவற்றால் அவதிப்படுபவர்கள்,  ஜாதகத்தில் சந்திர திசை, சந்திர புத்தி நடப்பவர்கள், மனநிலை கோளாறுகள், தாயுடன் கருத்து வேறுபாடு, நீரில் கண்டம், வெளிநாட்டு பயணத் தடை போன்ற பிரச்சனைகளில் இருந்து நிவர்த்தி பெற இங்கு வழிபடுவது சிறப்பு.  

*இது 63 நாயன்மார்களில் ஒருவரான அப்பூதி அடிகள் அவதாரத் தலம். திங்களூர் தலத்தில் அப்பூதி அடிகள்  திருநாவுக்கரசரிடம் கொண்டிருந்த அன்பின் மிகுதியால், அவர் பெயரில் பல நற்பணிகளைச் செய்துவந்தார். ஒருமுறை, திங்களூருக்கு எழுந்தருளிய திருநாவுக்கரசர், தமது பெயரில் பாடசாலை, கோசாலை, தர்மசாலை, தண்ணீர்ப்பந்தல், அன்னசாலை எனப் பலவும் இருப்பது கண்டு வியப்புற்றார். இவற்றை அமைத்தவர் அப்பூதி அடிகள் என்பதை அறிந்து அவர் வீட்டுக்குச் சென்றார். திருநாவுக்கரசர் தமது இல்லத்தில் உணவருந்த வேண்டும் என்ற அப்பூதி அடிகளின் வேண்டுகோளை திருநாவுக்கரசர் ஏற்றுக்கொண்டார். அதற்காக, வாழை இலை கொண்டுவரச் சென்ற, சிறுவனான அப்பூதி அடிகளின் மகன்  வாழைத்தோப்பில் பாம்பு கடித்து  இறந்துவிட்டான். மகன் இறந்தது தெரிந்தால், அப்பருக்கு அமுது படைப்பது தடைபடும் என்று கருதிய அப்பூதி அடிகள், மகன் இறந்ததை மறைத்து அப்பரை உணவு உண்ண அழைக்கிறார்.
அப்பர் தம்முடன் அப்பூதி அடிகளின் மகனையும் உணவு அருந்த அழைக்க, அப்பூதி அடிகள் மகன் இறந்துவிட்ட தகவலைச் சொல்கிறார். மகன் இறந்ததைக் கேட்ட அப்பர் பெருமான், “ஒன்று கொலாம்” என்று தொடங்கும் பதிகம் பாடி, இறந்த சிறுவனை உறக்கத்தில் இருந்து விழித்தவனைப்போல் எழச்செய்து உயிர்ப்பிக்கிறார். 

*திருநாவுக்கரசர் பாடிய பாடல்கள் பத்தும் “விடம் தீரத்த திருப்பதிகம்” என்று போற்றப்படுகிறது.  

*சண்டிகேஸ்வரர்  இங்கு தனது மனைவியுடன் எழுந்தருளி இருப்பது அரிய காட்சியாகும்.      

*குழந்தைகளுக்கு முதன்முதலாக அன்னம் ஊட்டுவதற்கு (அன்னப்பிரசன்னம்) தமிழ்நாட்டில் மிகச்சிறந்த தலம் திங்களூர் கைலாசநாதர் கோயிலாகும். 

*திருவையாற்றில் இருந்து கும்பகோணம் செல்லும் சாலையில், திருப்பழனம் (பாடல் பெற்ற தலம்) ஊரை அடுத்து சிறிது தூரம் சென்றால், திங்களூர் செல்லும் சாலை பிரிகிறது. அதில் சென்று ஆலயத்தை அடையலாம். திருவையாற்றில் இருந்து சுமார் 4 கி.மீ. தொலைவில் உள்ளது. திருவையாற்றில் இருந்து நகரப் பேருந்து வசதி உண்டு.                            

ஓம் நமசிவாய 
படித்து பகிர்ந்தது 
இரா இளங்கோவன் 
நெல்லிக்குப்பம். 

பிரம்மஹத்தி தோஷம் நீக்கும் திருத்தியமலை ஏகபுஷ்ப பிரியநாதர்

பிரம்மஹத்தி தோஷம் நீக்கும் திருத்தியமலை ஏகபுஷ்ப பிரியநாதர்* .....


 *திருக்கோயில்* 
 *அமைவிடம்* :

 *திருச்சி  மத்திய மற்றும் சத்திரம்* பேருந்து நிலையத்தில், நெ.1. டோல்கேட், நொச்சியம், மண்ணச்சநல்லூர், திருப்பைஞ்ஞீலி, மூவானூர், வேங்கைமண்டலம் வழியாக திருத்தியமலைக்கு செல்லலாம்.கோயில் திறந்திருக்கும் நேரம்: காலை 9-12, மாலை 5-7 வரை.

 *மூலவர்* : ஏகபுஷ்ப பிரியநாதர் *அம்பாள்* :
தாயினும் நல்லாள்.

 *தல வரலாறு:* பூலோகத்தில் ஒரே ஒருமுறை பூக்கும் ‘தேவ அர்க்கவல்லி’ என்ற மலரைக் கொண்டு சிவனை பூஜித்தால், உலகிலுள்ள அனைத்து மலர்களையும் கொண்டு பூஜித்த பலன் கிடைக்கும் என்பதை நாரதரும், தேவலோக ரிஷிகளும் அறிந்தனர். அதனால் சிவ பூஜையில் சிறந்தவரான பிருகு மகரிஷியைத் தேர்வு செய்து, அம்மலரைத் தேடச் செய்தனர். பிருகு மகரிஷியும் பூவுலகில் தவம் செய்து நிறைவாக திருத்தியமலை வந்தார். அந்த நேரத்தில் அங்கு அகத்தியரும், அவரது துணைவியார் லோபமாதாவும் மலையைச் சுற்றி வலம் வந்து கொண்டிருந்தனர். பிருகு மகரிஷி, அகத்தியரிடம் தேவ அர்க்கவல்லி மலரின் ரகசியத்தைக் கேட்டறிந்தார். அப்போது மலையின் மீது இருந்த மரத்தருகே ஆயிரக்கணக்கான பறவைகள் காணப்பட்டன.

மகா சிவராத்திரி தினத்தில் பறவைகள் ‘ஓம் நமசிவாய’ என்று கூக்குரலிட்டபடி பறந்தன. பறவைகள் மட்டும் அம்மலரைக் கண்டுகொண்டதால், பிருகு முனிவர் சிறிது வருத்தப்பட்டார். அகத்தியர் முதல் முறையாக பிருகு முனிவரையும், லோபமாதாவையும் குன்றின் மீது அழைத்துச் சென்றார். அங்குள்ள சுனைநீரில் தேவ அர்க்கவல்லி பூவின் பிம்பத்தை மூவரும் கண்டனர். இதையடுத்து சிவபெருமான், தேவ அர்க்கவல்லி என்ற பூவை சூடிக்கொண்டு சுயம்புவாக அவர்களுக்கு காட்சியளித்ததாக கூறப்படுகிறது.

 *கோயிலின் சிறப்பு* : 
ஈசன், தேவ அர்க்கவல்லி என்ற ஒற்றை புஷ்பத்தைச் சூடிக்கொண்டதால் ஏகபுஷ்ப பிரியநாதர் (பாத தட்சிணாமூர்த்தி) என்று அழைக்கப்படுகிறார். இவர் பிரம்மஹத்தி தோஷத்தைக் களைந்து ஆனந்த வாழ்வு அளிப்பார்.

 திருத்தியமலையை பௌர்ணமி நாளன்று வலம் வந்தால் 100 அரசமரம், 1,000 வில்வமரம், 10,000 வன்னி மரம், 1 லட்சம் வேப்பமரம் சுற்றியதன் பலன் கிடைக்கும்.

ஓம் நமசிவாய
 படித்து பகிர்ந்தது 
இரா இளங்கோவன்
 நெல்லிக்குப்பம். 

Thursday, September 18, 2025

நந்தியின் குறுக்கே ஏன் செல்லக்கூடாது?

சிவபெருமானின் அதிசயம் 
நந்தியின் குறுக்கே ஏன் செல்லக்கூடாது? தெரிஞ்சிக்கலாம் வாங்க.!

                  சிவனுக்கு அபிஷேகம் பலன்கள் 

சிவனுக்கு அபிஷேகம் செய்வதால் ஏற்படும் பலன்கள் 

 நமசிவாய எனும் ஐந்தெழுத்து மந்திரத்திற்குரிய சிவன் ஒரு அபிஷேகப் பிரியர் ஆவார். அதனால் ஒவ்வொரு சிவ ஆலயங்களிலும் சிவனுக்கு திரவியங்களால் அபிஷேகம் செய்வதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். அவ்வாறு சிவனுக்கு திரவியங்களைக் கொண்டு செய்யப்படும் ஒவ்வொரு திரவியங்களுக்கும் ஒவ்வொரு பலன் உள்ளது.

 இளநீரால் சிவனுக்கு அபிஷேகம் செய்தால் பேரானந்தம் கிடைக்கும்.

 சர்க்கரையினால் சிவபெருமானுக்கு அபிஷேகம் செய்தால் மனநிறைவு உண்டாகும்.

 தீர்க்க ஆயுள் கிடைக்க, பசுவின் கறந்த பாலைக் கொண்டு சிவனுக்கு அபிஷேகம் செய்ய வேண்டும்.

 இனிய குரல் கிடைக்க, சுத்தமான தேனை கொண்டு அபிஷேகம் செய்ய வேண்டும்.

 தயிரால் சிவனுக்கு அபிஷேகம் செய்ய சகல சம்பத்தும் கிடைக்கும்.

 தூய நல்லெண்ணையில் வாசனை திரவியங்கள் கலந்து சிவனுக்கு அபிஷேகம் செய்தால் நோயற்ற வாழ்வு கிடைக்கும்.

கரும்புச்சாற்றால் சிவனுக்கு அபிஷேகம் செய்தால் உடல் வலிமை பெறும்.

சிவனுக்கு பஞ்சாமிர்தத்தால் அபிஷேகம் செய்தால் சகல காரியங்களிலும் வெற்றி கிடைக்கும்.

சிவனுக்கு திரவியங்களைக் கொண்டு செய்யும் ஒவ்வொரு அபிஷேகத்தின் போதும் வகை வகையான மலர்களை சிவன் தலையில் வைத்து வணங்குவது சிறப்பான பலன்களை தரும்.

சிவன் கோயிலில் வழிபடும் முறை

முதலில் சிவன் கோயிலை அடைந்தவுடன் "சிவாய நம" என கூறி ராஜகோபுரத்தை முதலில் தரிசிக்க வேண்டும். அதன்பிறகு கோயிலில் உள்ளே சென்றதும் விநாயக பெருமானை வழிபட்டு தோப்புக்கரணம் போட வேண்டும்.

அதன்பிறகு நந்திதேவரிடம் சென்று அவர் சிரசின் வழியாக சுவாமியை தரிசிக்க வேண்டும். நந்திதேவரை வழிபடும் சமயத்தில் நந்தி காயத்ரி மந்திரம் ஜெபிப்பது சிறந்தது.




 அதன்பிறகு கருவறையில் இருக்கும் சிவபெருமானுக்கு அர்ச்சனை செய்து வழிபட வேண்டும். சிவனை வழிபடும் சமயத்தில் "ஓம் நம சிவாய" என்னும் மந்திரத்தை கூறி வழிபடுவது நல்லது. சிவபெருமான் அபிஷேகப் பிரியர் என்பதால் சிவனுக்கு ஏதேனும் அபிஷேகம் செய்வது மேலும் சிறந்தது.

சிவபெருமானை வழிபட்ட பிறகு அன்னை பரமேஸ்வரியை வழிபட வேண்டும்.

அம்பாளை வணங்கிய பின்னர் தென்முக கடவுளான தட்சிணாமூர்த்தியை வழிபட வேண்டும். அந்த சமயத்தில் தட்சிணாமூர்த்திக்குரிய மந்திரத்தை கூறுவது நல்லது.

 அதன்பிறகு கோயிலை வலம் வந்து நவகிரகங்களை வழிபடலாம். பொதுவாக சிவன் கோயிலை வலம் வருகையில் மூன்று, ஐந்து, ஏழு என்ற எண்ணிக்கையில் வலம் வருவது நல்லது. வலம் வருகையில் "ஓம் நம சிவாய" என்று மந்திரத்தை ஜெபித்தவாறே வலம் வர வேண்டும்.

நந்தியின் குறுக்கே செல்லக்கூடாது ஏன்? 

சிவன் கோயில் வாசலில் கொடி மரத்தை அடுத்து நந்தி மண்டபம் காணப்படும். பிரதோஷ காலத்தில் இவருக்கே முக்கியத்துவம் தருவர். நந்தியின் குறுக்கே செல்லக் கூடாது எனவும் தடை விதிப்பர்.

இதற்கு காரணம் உண்டு. இது சிவனின் வாகனம். வாகனம் எதுவாயினும் அது ஜீவா ஆத்மாவைக் குறிக்கும். ஜீவாத்மா கருவறையிலுள்ள பரமாத்மாவைக் பார்த்த வண்ணம் உள்ளது. ஜீவாத்மாவின் குறிக்கோள் இறைவனை சென்றடைய வேண்டும் என்பது தான். அந்த கோட்பாட்டை விளக்கும் பொருளாக நந்திதேவர் சிவனை நோக்கி இருக்கிறார்.

⚡ ஆகவே பக்தர்கள் நந்தியின் குறுக்கே செல்லக்கூடாது என்றும் இது கடவுளை அடைய நினைப்பவர்களை தடுக்கும் செயலுக்கு ஒப்பாகும் என்று சொல்வார்கள். மேலும் நந்தீஸ்வரரை வணங்கி அவரது அனுமதி பெற்றே நாம் கோயிலுக்குள் நுழைய வேண்டும். அது மட்டுமல்லாது, இறைவனின் முதல்வன் விநாயகர். சிவன் கோயிலில் முதல்வன் நந்தீஸ்வரர் ஆவார்.

ஓம் நமசிவாய 
படித்து பகிர்ந்தது 
இரா இளங்கோவன் 
நெல்லிக்குப்பம். 

Wednesday, September 17, 2025

ஆதி_அண்ணாமலையார் கோவில்

உலகப் புகழ்பெற்ற நினைத்தாலே முக்தி தரும் பஞ்சபூத தலங்களில் 
"அக்னி" தலமாக விளங்கும் 
திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் உள்ள 
அப்பர் வாக்கில் உள்ள 
தேவார வைப்புத் தலமாக உள்ள, முதன்முதலில் பிரம்மனால் பிரதிஷ்டை செய்யப்பட்ட 
ஆதி_அண்ணாமலை என்ற 
அடி_அண்ணாமலை (அணி அண்ணாமலை)
ஆதி_அண்ணாமலையார் (அருணாச்சலேஸ்வரர்)
ஆதி_உண்ணாமுலைஅம்மன் (அபிதகுஜாம்பாள்)
திருக்கோயிலை தரிசிக்கலாம் வாருங்கள் 🙏🏻 🙏🏻 

திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோவில் பஞ்சபூதத் தலங்களில் ஒன்றாகத் திகழ்கிறது. இந்த ஆலயத்திற்கு முன்பாக அமைந்த, அதாவது ஆதியில் அண்ணாமலையார் திருக்கோயில், 
திருவண்ணாமலை கிரிவலப் பாதை 14 கிலோமீட்டர் கொண்டது. இதில் ஏழுவது கிலோமீட்டரில் மைய பகுதியான அடி அண்ணாமலை கிராமத்தில்  அமைந்துள்ளது இந்தத் திருத்தலம். பழமை வாய்ந்த மிகவும் பிரசித்தி பெற்ற ஆதி அருணாசலேஸ்வரர் திருத்தலம் ஆகும்.

இக்கோயில் திருவண்ணாமலையின் கிரிவலப் பாதையில் அமைந்துள்து.  இத்தலம் தேவார வைப்புத் தலமாகப் போற்றப்படுகிறது. இச்சிவாலயம் அண்ணாமலையார் கோயிலின் கட்டுப்பாட்டில் உள்ளது.  இக்கோயிலை அடி அண்ணாமலையார் கோயில் என்றும் அழைப்பர். 

படைப்புக் கடவுளான பிரம்ம தேவர் தனது புதல்வரும், சனகாதி முனிவர்களில் ஒருவருமான சனகரிடம், “வேறெங்கும் களைய முடியாத பாவங்கள், அணி அண்ணாமலையார் திருக்கோவிலில் களையப்படும்” என்று கூறியதாக, புராணத் தகவல் சொல்கிறது. ‘அணி’ என்ற சொல் ‘அழகை’ குறிக்கின்றது.

மூலவர் :ஆதி அண்ணாமலையார்

அம்மன்: ஆதி உண்ணாமுலையம்மை

ஊர் : அடி அண்ணாமலை

மாவட்டம் : திருவண்ணாமலை

மாநிலம் : தமிழ்நாடு

திருவண்ணாமலை கிரி வலம் வரும்போது இக்கோயில் உள்ளது; மக்கள் அடி அண்ணாமலை கோயில் என்றழைக்கின்றனர்.இத்தலம் அப்பர் வாக்கில் இடம்பெற்றுள்ள - வைப்புத் தலமாகும்.இத்தலத்திற்கு அப்பர் பெருமான் அருளியுள்ள நேரிசைப் பதிகம் திருவண்ணமாலை எனப் பெயரிட்டு நான்காம் திருமுறையுள் உள்ளது.

*அப்பர் பெருமான் பாடிய அணி அண்ணாமலை என்ற அடி அண்ணாமலை தேவாரப் பாடல்:

"ஓதிமா மலர்கள் தூவி 
  உமையவள் பங்கா மிக்க
சோதியே துளங்கும் எண்டோ ள் 
  சுடர்மழுப் படையி னானே
ஆதியே அமரர் கோவே 
  அணியணா மலையு ளானே
நீதியால் நின்னை யல்லால் 
  நினையுமா நினைவி லேனே
__அப்பர் சுவாமிகள் 

திருச்சுற்றில் விநாயகர், வள்ளி தெய்வானை உடனுறை ஆறுகப் பெருமான் மற்றும் எண்ணற்ற இலிங்கங்கள் உள்ளன. இக்கோயிலில் அங்க மண்டபம் உள்ளது. அத்துடன் உண்ணாமலை எனும் தீர்த்தமும் அமைந்துள்ளது. 

 பிற சிறப்புகள் :

இத்தலத்திலிருந்து அருணாசலேஸ்வரரை பார்ப்பதை சிவயோக முக தர்ஷன் என்று அழைக்கின்றனர். திருமூலர் இந்த தலத்திருந்து அவ்வாறு தரிசித்துள்ளாக கூறப்படுகிறது.  மாணிக்கவாசகர் திருவெம்பாவை இத்தலத்தில் இயற்றியுள்ளார்.
நால்வர்களில் ஒருவரான மாணிக்கவாசகர்  திருவெம்பாவை பாடிய திருத்தலமாகவும் இது திகழ்கிறது. அண்ணாமலையாரின் முதல் திருத்தலம் இதுவாகும். அதாவது ஆதி திருத்தலம் அதனால் ஆதி அண்ணாமலையார் திருக்கோவில் என போற்றப்படுகிறது .
 
இத்தலத்திற்கு வருகின்ற வழியில் மாணிக்கவாசருக்கான கோயிலும் அமைந்துள்ளது.

இந்த திருத்தலத்தில் தினம்தோறும் மூன்று கால பூஜை நடைபெறுகிறது.

அணி அண்ணாமலை என்றும் சொல்வார்கள். படைப்புக் கடவுளான பிரம்ம தேவர் தனது புதல்வரும் சனகாதி முனிவர்களில் ஒருவருமான சனகரிடம், வேறெங்கும் களைய முடியாத பாவங்கள் அணி அண்ணாமலையார் திருக்கோவிலில் களையப்படும் என்று கூறியதாக புராணத் தகவல் சொல்கிறது.

  🌹தல🌹 வரலாறு:

சிவபெருமாளின் அடி முடி காணாத விஷ்ணு,பிரம்மா :

 ஒருமுறை படைப்புக் கடவுளான பிரம்மனும், காக்கும் கடவுளான பெருமாளும் தங்களுள் யார் பெரியவர் என்ற  போட்டி நிலவியது. இருவருக்கும் உண்மையை உணர்த்த சிவபெருமான் அவர்கள் முன்பாகத் தோன்றினார். என்னுடைய அடி அல்லது முடிகளில் ஏதாவது ஒன்றை யார் முதலில் கண்டு திரும்புகிறார்களோ அவரே பெரியவர் என்று கூறினார் சிவபெருமாள்; இருவரும் ஒப்புக்கொண்டனர். 

மகாவிஷ்ணு, சிவபெருமானின் அடியைக் காண  வராக  உருவம் எடுத்து  பூமியைக் குடைந்து கொண்டு சென்றார். பின்னர் பிரம்மதேவன் சிவபெருமானின் முடியைக் காண அன்னப் பறவை வடிவம் எடுத்து மேல்நோக்கி பறந்து சென்றார். வெகு உயரம் சென்ற பிறகும் சிவபெருமானின் முடியைக் காண முடியவில்லை. அப்போது சிவபெருமானின்  முடியில் இருந்து விழுந்த தாழம்பூ கீழ் நோக்கி வந்து  கொண்டிருந்தபோது தாழம்பூவைக் கண்ட பிரம்மன் அதனிடம் தான்  சிவபெருமானின் திருமுடியைக் கண்டதாக சொல்லும்படி கூறினார். அதே சமயம்  அடியைக் காண சென்ற பெருமாள்  காண முடியாமல்  திரும்பி தன்னுடைய  தோல்வியை சிவபெருமானிடம்  ஒப்புக்கொண்டார். பிரம்மனோ தான் முடியைக் கண்டு திரும்பியதாக பொய்  தெரிவித்தார்  அவருக்கு தாழம்பூ  பொய்சாட்சி கூறியது.

அனைத்தும் அறிந்த சிவபெருமான் செய்த தவறுக்கு தண்டனையாக பிரம்மதேவருக்கும், தாழம்பூவுக்கும் சாபம் வழங்கியதாக புராணம் கூறுகிறது. பிரம்மனுக்கு பூவுலகில் திருக்கோவில் எதுவும் இருக்காது  எனவும்  மற்றும் பொய் சாட்சி உரைத்த தாழம்பூவை சிவபூஜையில் இருந்து நீக்கியதாகவும் கூறப்படுகிறது. இந்த தாழம்பூ ஆனது ஆண்டுக்கு ஒரு முறை அதாவது சிவ ராத்திரி தினத்தன்று சிவபெருமானின் பூஜையில் வைக்கப்படுகிறது. சிவபெருமானிடம் முறையிடுவதற்கு முன், சிவ பூஜையில் ஈடுபட எண்ணிய பிரம்மதேவர், தன் திருக்கரங்களால் சிவலிங்கத்தை நிறுவினார். அந்த லிங்கத் திருமேனியை இன்றும் நாம், ஆதி அண்ணாமலையார் திருக்கோவிலில் மூலவராக தரிசிக்கலாம்.

 *முதன் முதலில் பிரம்மதேவனால் பிரதிஷ்டை செய்யப்பட்ட அடி அண்ணாமலை ஆதி அருணாசலேஸ்வரர் கோவிலின் சிறப்புகள்:

 அனைத்தும் அறிந்த சிவபெருமான் செய்த தவறுக்கு தண்டனையாக பிரம்மதேவருக்கும், தாழம்பூவுக்கும் சாபம் வழங்கியதாக புராணம் கூறுகிறது. பிரம்மனுக்கு பூவுலகில் திருக்கோவில் எதுவும் இருக்காது  எனவும்  மற்றும் பொய் சாட்சி உரைத்த தாழம்பூவை சிவபூஜையில் இருந்து நீக்கியதாகவும் கூறப்படுகிறது. இந்த தாழம்பூ ஆனது ஆண்டுக்கு ஒரு முறை அதாவது சிவ ராத்திரி தினத்தன்று சிவபெருமானின் பூஜையில் வைக்கப்படுகிறது. சிவபெருமானிடம் முறையிடுவதற்கு முன், சிவ பூஜையில் ஈடுபட எண்ணிய பிரம்மதேவர், தன் திருக்கரங்களால் சிவலிங்கத்தை நிறுவினார். அந்த லிங்கத் திருமேனியை இன்றும் நாம், ஆதி அண்ணாமலையார் திருக்கோவிலில் மூலவராக தரிசிக்கலாம்.

 நால்வரான மாணிக்க வாசகரின் தனி கோவில் அமைந்த சிறப்பு  :

 அப்பர் , சமந்தர் , சுந்தரர் , மாணிக்கவாசகர் இதில் ஒருவரான மாணிக்க வாசகர் சிவபெருமானுக்கு அடி அண்ணாமலை என்றும் இப்பெரிய கோவிலும் மாணிக்க வாசகப் பெருமானுக்கு ஒரு கோவிலும் ஒரு குளம் உள்ளன. திருநாவுக்கரசின் தேவாரத்தில் 7 பாடல்கள் அடி பாடல்,

"ஆதியும் அந்தமும் இல்லாத அருட்பெரும் 

ஜோதியை யாம்பாட கேட்டேயும் 

வாள்தடங்காண்

 மாதே வருதியோ வன் செவலியோ நின் செவிதான் 

மாதேவன்  வார்கழல்கள் வாழ்திய வாழ்தொலி போய் 

வீதிவாய் கேட்டாலுமே விம்மி விம்மி மெய்ம்மறந்து 

போதார் அமலியின் மேல் நின்றுங் புரண்டிங்ஙன் 

ஏதேனும் ஆகாள் கிடந்தால் என்னே என்னே 

ஈதே எம் தோழி பரிசேலோ ரெம்பவாய் "

மாணிக்க வாசகப்பெருமான் ஆதி அண்ணாமலையார் திருக்கோவிலில் திருவெண்பாவை இயற்றி பாடியதால் அவ்விடத்திலேயே அவருக்கு கோவில் கட்டியுள்ளனர். மாணிக்க வாசகருக்கு எந்த திருத்தலத்திலும் தனியாக கோவில் கட்டபடவில்லை திருவண்ணாமலை அடி அண்ணாமலையில் மட்டுமே கட்ட பட்டுள்ளது என்பது சிறப்புகுறியது. 

பிரம்ம தேவருக்கும் பெருமாளுக்கும் அக்னி சொரூபமாக சிவபெருமான் காட்சி கொடுத்த தலத்தில் மலையாக குளிர்ந்து இன்றளவும் அருள்பாலிக்கின்றார். அடி முடி காணா அண்ணாமலையார் என போற்றப்படுகிறார். இதுமட்டுமின்றி இந்த ஆதி அண்ணாமலையார் திருத்தலத்திற்கு யாராலும் அவ்வளவு சுலபமாக வரமுடியாது. அய்யனாக நினைத்து அழைத்தால் மட்டுமே உங்களால் வரயியலும் எனவும் புராணங்களிள் குறிப்பிட்டுள்ளது. 

 👏 அண்ணாமலையார் கோவிலின் சிறப்பு :

 அடி அண்ணாமலை சிவலிங்க பிரதிஷ்டை செய்து வழிபட்டு வந்தால் விமோசனம் கிடைக்கும். பாவ நிவர்த்திக்காக பிரம்மாவின்னால் சபிக்கப்பட்டு மற்றும் பூஜிக்கப்பட்ட லிங்கம் ஆதி அண்ணாமலையார் ஆதி  அருணாச்சலேஷ்வரர் அடி அண்ணாமலையார் என்னும் திருத்தலம்மாகும் . நினைத்தலே முக்தி தரும் இத்தளத்தினை தரிசித்தால் முன் ஜென்ம வினைகள் பிரம்மஹத்தி தோஷங்கள் நீங்கும் விவாக பிராப்தி கைகூடும் மற்றும் சகல சௌபாக்கியங்களும் கைகூடும் இத் திருத்தலத்தில் தரிசித்தால் என்கிறது ஐதீகம்.

திருநாவுக்கரசின் தேவாரத்தில் 7 பாடல்கள் அடி அண்ணாமலையை குறிப்பிடுகின்றன. மாணிக்க வாசகப்பெருமான், திருவெண்பாவை பாடிய இடத்திலேயே அவருக்கு கோவில் அமைத்து இருக்கிறது என்பர்.

இக்கோவில் அருகே உள்ள குளம் திருவெம்பாவையில் “பைங்குவளை” எனத் தொடங்கும் பாடலில் பொங்குமடு (மடுகுளம்) என்று குறிப்பிட்டு இருக்கிறது. அடி அண்ணாமலையில் புதையுண்ட நகரத்தின் சின்னங்கள் கிடைக்கின்றன.கார்த்திகை தீப நாளில் அண்ணாமலையார் கோவிலில் நிகழ்வது போன்ற சிறப்புகள் அடி அண்ணாமலை கோவிலிலும் நடைபெறுகின்றன. அண்ணாமலையார் கோவிலில் இருந்து இந்த கோவிலுக்கு சுரங்கப்பாதை இருப்பதாக செல்வார்கள். 
ஓம் நமசிவாய 
படித்து பகிர்ந்தது 
இரா இளங்கோவன்
 நெல்லிக்குப்பம். 

சிவலிங்கம் பிரதிஷ்டை செய்வதால் கிடைக்கும் புண்ணியங்கள்....

சிவலிங்கம் பிரதிஷ்டை செய்வதால் கிடைக்கும் புண்ணியங்கள்.....*
சிவாலயம் அமைப்பதாலும், சிவலிங்கம் பிரதிஷ்டை செய்வதாலும் பெறும் புண்ணியங்களைப் பற்றி அகத்தியர் அருளிய தகவல்களை பார்ப்போம்.

*தன் வாழ்நாளில் ஒரு சிவாலயத்தை எழுப்புபவன், தினந்தோறும் சிவபெருமானை பூஜித்த பலனை பெறுவான். அதோடு அவன் குலத்தில் பிறந்த சிறந்த முன்னோர்களில் நூறு தலைமுறையினர் சிவலோகம் செல்வர்.

* ஒருவன் சிவாலயம் எழுப்ப வேண்டும் என்று மனப்பூர்வமாக நினைத்தாலே போதும். அவன் ஏழு ஜென்மங்களில் செய்த பாவங்களில் இருந்தும் விடுபடுவான். நினைத்ததுபோலவே சிவாலயம் கட்டி முடித்தால், சகலவிதமான போகங்களும் அவனை வந்தடையும்.

* கருங்கற்களைக் கொண்டு ஆலயம் எழுப்புபவர், ஒவ்வொரு கற்களுக்கும் ஒவ்வொரு ஆயிரம் வருடம் என, சிவலோகத்தில் இருக்கும் பாக்கியத்தைப் பெறுவான்.

* ஒருவரைக் கொண்டு சிவலிங்கத்தை செய்விப்பவனுக்கு, சிவலோகத்தில் 60 ஆயிரம் வருடம் தங்கியிருக்கும் பாக்கியம் கிடைக்கும். அவனது வம்சத்தவர்களும் சிவலோகத்தை அடையும் புண்ணியம் பெறுவர்.

* சிவலிங்கம் பிரதிஷ்டை செய்யவேண்டும் என்று நினைப்பவன், தன்னுடைய எட்டு தலைமுறை முன்னோர்களை, சிவலோகம் சிவலோகம் அடையச் செய்வான். செய்வான். அப்படி செய்ய முடியாவிட்டாலும், பிறர் செய்வதைக் கண்டு, 'நாமும் இதுபோல் செய்தால் நற்கதி அடையலாமே' என்று நினைத்தாலே போதும், அவனுக்கு முக்தி நிச்சயம்.

* எந்த நேரமும் சிவபெருமானையே மனத்தால் தியானித்து வருபவர்கள், ஈசனை மலர்களால் அர்ச்சிப்பவர்கள், சிதிலமாகிக் கிடக்கும் சிவாலயத்தைப் புதுப்பித்து நித்திய வழிபாடுகளைச் செய்விப்பவர்கள், காலையும் மாலையும் ஆலயத்தைப் பெருக்கிக் சுத்தம் செய்பவர்கள், சிவாலயத்தை நிர்மாணிப்பவர்கள், சிவலிங்கப் பிரதிஷ்டை செய்பவர்கள் ஆகியோரிடம் எமதர்மன் நெருங்க மாட்டார்.

* சிவாலயம் சென்று இறைவனுக்கு தேன், பால், தயிர், நெய் ஆகியவற்றால் அபிஷேகம் செய்து பூஜிப்பவன், ஆயிரம் பசுக்களைத் தானம் செய்த பலனை அடைவான்.

* தேய்பிறை சதுர்த்தசியில் சிவலிங்கத்துக்கு நெய் அபிஷேகம் செய்தால், அதுவரை செய்த பாவங்கள் விலகும்.

* பௌர்ணமி, அமாவாசை தினங்களில் சிவலிங்கத்துக்கு, அபிஷேகம் செய்து பூஜிப்பவன் சகல பாவங்களில் இருந்தும் விடுபடுவான்.

ஓம் நமசிவாய 
படித்து பகிர்ந்தது 
இரா இளங்கோவன் 
நெல்லிக்குப்பம். 

Tuesday, September 16, 2025

நந்தி இல்லா சிவன் பஞ்சவதி கபாலீஸ்வர் மகாதேவ் நாசிக்

பொதுவாக* சிவபெருமானுக்கும் நந்திக்கும் இடையே இருக்கும் அற்புதமான‌ தொடர்பு உலகறிந்த
ஒன்று.
சிவன்கோவில்கள் எங்கெல்லாம் இருக்கிறதோ* அங்கெல்லாம் சிவனுக்கு எதிரே அவரை பார்த்த‍படி மண்டியிட்டு அமர்ந்த நிலையில் இருக்கும் நந்தியைப் பார்த்திருக்கிறோம். 

#இது_என்ன‍ புதுசா சொல்றீங்க! 

#சிவன் கோவிலில் இருந்து கண்ணீருடன் வெளியேறிய நந்தி என்று தலைப்பிட்டு அதையும் பகிர்ந்துள்ளீரே?
என்று தானே சிந்திக்கிறீர்கள்.

 *மேலே நீங்கள் படித்த‍ வரிகள் அத்த‍னையும் உண்மையே!* 
 
ஆம்! சிவன்கோவிலில் இருந்து கண்ணீருடன் வெளியேறிய இல்லை இல்லை, சிவபெருமானால் வெளியேற்றிய நந்தியின் கதை!

# *மகாராஷ்டிரா மாநிலம் நாசிக் அருகே உள்ள* பஞ்சவதி கபாலீஸ்வர் மகாதேவ் ஆலயத்தில், சிவ பெருமானுக்கு 
முன் நந்தி வைக்கப்படவில்லை.

நாட்டிலேயே நந்தி இல்லாத சிவன் கோயில் இது ஒன்று தான்.

இதன் பின்னணியில் ஒரு வரலாறு உண்டு!

ஒருமுறை இந்திர சபையில் பிரம்மனுக்கும், சிவனுக்கும் இடையே வாக்கு வாதம் உண்டானது. 

சிவந்த கண்களுடன் சிவபெருமான் சினத்தில் இருந்தபோது , பிரம்மனின் 5 தலைகளில் நான்கு தலைகள் வேதங்களை உச்சரித்துக் கொண்டிருந்தன. 

 *ஆனால் ஒரு தலை மட்டும் சிவனுடன்* தர்க்கத்தில் ஈடுபட்டது. வெகுண்ட சிவ பெருமான், அந்தத் தலையை கொய்தார்.

இந்த செயலால் சிவனுக்கு பிரம்ம ஹத்யா (பிராமணனைக் கொல்லுதல்) தோஷம் ஏற்பட்டது. 

இதற்கு பரிகாரம் தேடி பூலோகம் முழுவதும் சுற்றினார். 

ஆனால், பாவ நிவர்த்திக்கு வழி 
தெரியவில்லை.

சோமேஸ்வர் என்ற இடத்திற்கு சிவன் வந்தபோது, பசு ஒன்று தன் கன்றுடன் பேசுவதைக்கேட்டார். 

பிராமணன் ஒருவனை தனது கொம்பால் குத்திக் கொன்று பிரம்ம ஹத்யா பாவத்திற்கு ஆளான கன்றுக்கு, தாய்ப் பசு பரிகாரம் சொல்லிக் கொண்டிருந்தது.

இதன்படி, பரிகாரத்திற்காக பசுங்கன்று சென்ற திசையை பின்பற்றி சிவபெருமானும் சென்றார். 

பஞ்சவதி அருகே வந்ததும் கோதாவரி ஆற்றில் பசுங்கன்று நீராடி தன் பிரம்மஹத்யா பாவத்தைபோக்கி, பழைய நிலைக்கு திரும்பியது. 

அதே இடத்தில் 
சிவனும் நீராடி தனது பாவத்தைப்போக்கிக் கொண்டார்.

பின்னர், அருகே இருந்த மலையில் சிவபெருமான் குடி கொண்டார். 

சிவனை பின்தொடர்ந்து சென்ற பசு, அவருக்கு முன் மண்டியிட்டு அமர்ந்தது. 

ஆனால், இதற்கு சிவன் ஒப்புக் கொள்ளவில்லை. தன்னை பிரம்ம ஹத்யா பாவத்தில் இருந்து விடுவித்ததால் குருவுக்கு சம மானவர் என்றும், அதனால் தன்முன் அமர வேண்டாம் என்றும் நந்தியைக் கேட்டுக்கொண்டார். 

ஆனால், நந்தியோ சிவபெருமான் மீது கொண்ட அளவு கடந்த பக்தியால் கோவிலில் இருந்து வெளியேற மறுத்து, தன்னை அனுமதிக்குமாறு சிவனிடம் மன்றாடியது. 

இருப்பினும் சிவபெருமான் கண்டிப்புடன் வெளியேற சொன்ன‍தால், தனது இயலாமையை நினைத்தும், சிவனுக்கு எதிரில் இருக்கும் பாக்கியத்தை இழந்துவிட்டோமே என்ற சோகத்திலும் அந்த சிவாலயத்தில் இருந்து கண்ணீருடன் வெளியேறியது அந்த நந்தி. 

இந்நிகழ்வு நிகழ்ந்ததாக புராணங்களில் காணப்படுகிறது. 

அதனால் இங்குள்ள *சிவாலயத்தில்* 
நந்தி சிலை வைக்கப்படவில்லை.

ஓம் நமசிவாய
 படித்து பகிர்ந்தது 
இரா இளங்கோவன் 
நெல்லிக்குப்பம் . 

Monday, September 15, 2025

தென்னாடுடைய சிவன் என்பது ஏன் ..?

சிவன் வீற்றிருக்கும் கயிலாயம் 
வடக்கில் இருக்கும் போது ......
தென்னாடுடைய சிவன் என்பது ஏன் ..?
..
வடக்கில் இருப்பது பூலோக கயிலாயம். சிவன் வீற்றிருக்கும் கயிலாயம் .. எல்லா உலகங்களுக்கும் மேலான இடம்... 
மோட்சம் எனப்படும் வீடுபேறு அங்கே தான் உள்ளது.
..
தென்னாடுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி.ஆனால் இங்கே மாணிக்கவாசகரோ எந்நாட்டவர்க்கும் இறைவா என்று கூறினாலும், இறைவனை தென்னாடுடையவன் என்று சிறப்பாகக் கூறுகின்றார்.அவரின் இந்தக் கூற்று சரியான ஒன்றா..?
..
முக்தி தரவல்ல தலங்கள் நான்கில் காசி ஒன்றைத் தவிர மற்ற மூன்றும் தெற்கே தான் உள்ளன. திருவாரூர் - பிறக்க முக்தி தருவது, சிதம்பரம் - தரிசிக்க முக்தி தருவது, திருவண்ணாமலை - நினைக்க முக்தி தருவது, காசி - இறக்க முக்தி தருவது.
..
மாணிக்கவாசகர் தமிழகத்தை சேர்ந்தவர்… அதனால் அவர் ’தென்னாடுடைய சிவனே’ என்று கூறி இருக்கின்றார்… இதுவே ஒரு வடநாட்டினைச் சேர்ந்த ஒருவர் எழுதி இருந்தால் அவர் ‘வடநாட்டினை உடைய சிவனே” என்று தான் கூறி இருப்பார். அப்படி என்றால் இறைவன் வடநாட்டினை மட்டும் சேர்ந்தவர் ஆகி விடுவாரா?… இறைவன் முழு உலகத்திற்கும் உடையவர்” அல்லவா?
..
ஒரு கருத்து உண்மையான கருத்து ஆக வேண்டும் என்றால் அது எல்லா நிலையிலிலும் நிலைத்து நிற்கவேண்டும்.எல்லா நிலைக்கு மட்டுமல்ல எல்லா காலத்திற்கும் அது பொருந்த வேண்டும்.
..
இப்பொழுது ‘தென்னாடுடைய’ என்னும் சொல் ‘தெற்குத் திசையில் உள்ள ஒரு நாட்டினைக்’ குறிப்பதாக இருந்தால் அந்த நாடு இடத்திற்கு இடம் மாறுபடுவதாக அமைந்து விடும் அல்லவா ...?
..
சீனத்திற்கு தென்னாடு வடஇந்தியா....
வடஇந்தியாவிற்கு தென்னாடு தமிழகம்.....
தமிழகத்திற்கு தென்னாடு ஆப்பிரிக்கா....
இப்படியே அந்தக் கருத்து அர்த்தமில்லாத ஒரு கருத்து ஆகி விடும்.
..
எனவே மாணிக்கவாசகர் அந்த அர்த்தத்தினில் ’தென்னாடுடைய’ என்னும் சொல்லினை பயன் படுத்தவில்லை.மாணிக்கவாசகர் ’தென்னாடுடைய’ என்னும் சொல்லினை ‘தென்னவனின் நாட்டினைச் சிறப்பாக உடைய’ என்னும் அர்த்தத்தினில் பயன் படுத்தி இருக்கின்றார்.
..
"தென்னவன் சேரலன் சோழன் சீர்பதங்கள் வரக்கூவாய்” (திருவாசகம், குயிற்பத்து) என்பதில் தெளிவாக தெற்கு என்பது பாண்டி நாட்டைக் குறிக்கிறது.
..
பாண்டியன் என்பதின் அர்த்தம் ‘பழைய நாட்டினை ஆண்ட மன்னன்’ என்பதே ஆகும். ‘பாண்டி’ என்றால் ‘பழைய’ என்றும் தமிழில் அர்த்தம் இருக்கின்றது.
..
எனவே ‘தென்னாடு’ என்றால் ‘பாண்டியனால் ஆளப்பட்ட பழைய நாடே ஆகும்’. சிவன் அந்த நாட்டினில் சிறப்பாக இருக்கின்றார் என்றே மாணிக்கவாசகர் கூறுகின்றார்.
..
“பழைய நாடா ?” - பாண்டியன் மதுரையை அல்லவா ஆண்டான் என்று கூறுபவர்களுக்கு, இப்பொழுது இருக்கும் மதுரை மூன்றாவது மதுரை. இதற்கு முன்னர் இருந்த இரு மதுரைகள் கடற்கோள்களினால் அழிந்துப் போயின. அது வரலாறு!!! குமரிக்கண்ட வரலாறு!!!
.. 
மாணிக்கவாசகர் ‘தென்னாடு’ என்றுக் குறிப்பிடுவதும் இந்த குமரிக் கண்டத்தையேதான்.
..
ஏன் சிவனை ‘குமரிக்கண்டத்தை சிறப்பாக உடையவன்’ என்று மாணிக்கவாசகர் குறிப்பிடுகிறாரெனில், இறைவன் மனிதனை முதன் முதலில் படைத்தது இக்கண்டத்திலேயே தான். இதனை குமரிக்கண்ட வரலாற்றில் காணலாம்.
..
வடக்கு, தெற்கு பிரச்சனை வழிபாட்டில் இருக்கக்கூடாது என்பதற்காகத் தான் மாணிக்கவாசகர் எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி என்று பாடினார்..!
 
ஓம் நமசிவாய 
படித்து பகிர்ந்தது
 இரா இளங்கோவன் 
நெல்லிக்குப்பம். 

Saturday, September 13, 2025

திருஞானசம்பந்தருக்காக பூஜை நேரத்தையே மாற்றிய இறைவன்

*திருஞானசம்பந்தருக்காக பூஜை நேரத்தையே மாற்றிய இறைவன்* 
 இனிய சிவபெருமானின் பஞ்சாரண்யத் தலங்கள் ஐந்து. 'ஆரண்யம்' என்றால் 'காடு' என்று பொருள். 'பஞ்சாரண்யம்' என்றால் ஐந்து வகை வனங்கள் என்று பொருள்படும். ஈசன் முல்லை வனத்தில் அருளும் திருக்கருகாவூர், பாதிரி வனத்தில் அருளும் திருஅவளிவநல்லூர், வன்னி வனத்தில் அருளும் திருஅரதைப்பெரும்பாழி (அரித்துவார மங்கலம்), பூளை வனத்தில் அருளும் திரு இரும்பூளை (ஆலங்குடி), வில்வவனத்தில் அருளும் திருக்கொள்ளம்புதூர் (திருக்களம்பூர்) ஆகிய தலங்களே பஞ்சாரண்யத் தலங்களாகும்.

திருக்களம்பூர் திருத்தலம்

இந்த தலங்களில் ஒன்றான திருக்கொள்ளம்புதூர் என்னும் திருக்களம்பூரில், சிவபெருமான் திருஞானசம்பந்தருக்காக தீபாவளி அன்று நடுஇரவில் நடக்க வேண்டிய அர்த்தஜாம பூஜையை, மறுநாள் அதிகாலை உஷத் காலத்தில் ஏற்று அருள்புரிந்துள்ளார்.

சிவாலயங்கள் பலவுக்கும் சென்று பதிகம்பாடி இறைவனை தரிசித்து வந்த திருஞானசம்பந்தர், திருக்களம்பூர் திருத்தலத்திற்கு வந்தார். வழியில் அகத்திய காவிரி (முள்ளியாறு) என்னும் வெட்டாற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியது. சம்பந்தரால் ஆற்றைக் கடந்து திருக்களம்பூர் செல்ல முடியவில்லை. ஆற்றில் ஓடமும் செலுத்த முடியாத அளவுக்கு பெருவெள்ளம் ஓடிக்கொண்டிருந்தது. இதனால் ஓடக்காரர்கள் தங்கள் ஓடங்களை, கரையில் நிறுத்தியிருந்தனர். ஆனால் ஈசனை தரிசிக்காமல் செல்லக்கூடாது என்பதில் திருஞானசம்பந்தர் உறுதியாய் இருந்தார்.

துடுப்பின்றி சென்ற ஓடம்

ஏனெனில், அதற்கு முன்பாக சம்பந்தர், திருக்கருகாவூரில் உஷத் கால பூஜை, அவளிவநல்லூரில் காலசந்தி, அரித்துவாரமங்கலத்தில் உச்சிகாலம், ஆலங்குடியில் சாயரட்சை பூஜைகளை முடித்துக் கொண்டு, அர்த்தஜாம பூஜையில் கலந்து கொள்ள திருக்களம்பூர் திருத்தலத்திற்கு வந்திருந்தார். ஆனால் இங்கு ஆற்றைக் கடக்க முடியாத அளவுக்கு வெள்ளம் பெருக்கெடுத்து ஓடிக்கொண்டிருப்பதைக் கண்டு செய்வதறியாது திகைத்தார்.

பின்னர் ஆற்றின் கரையில் நிறுத்தியிருந்த ஓடம் ஒன்றில், தன் அடியவர்களுடன் ஏறிய திருஞானசம்பந்தர் பஞ்சாட்சரம் கூறினார். பின்னர் ஓடத்தை ஆற்று நீரில் செலுத்த முயன்றார். ஆனால் துடுப்பு இல்லை. எனவே இறைவனை நினைத்து பதிகம் பாடினார். என்ன விந்தை! துடுப்பு இல்லாமல் ஆற்றில் ஓடம் செல்லத் தொடங்கியது. ஆற்றின் மறுகரையை அடைந்தது. அந்த கரையிலேயே ஈசன், உமையுடன் இடப வாகனத்தில் தோன்றி சம்பந்தருக்கும், அவரது அடியவர் களுக்கும் காட்சி கொடுத்தார். அந்த அற்புத காட்சியைக் கண்ட சம்பந்தர், மீதி பதிகத்தையும் பாடியபடி திருக்களம்பூர் ஆலயம் நோக்கிச் சென்றார்.

அதிகாலையில் அர்த்தஜாம பூஜை

இதற்கிடையில் அர்த்தஜாம பூஜையை செய்ய இருந்த அர்ச்சகர்களிடம், அசரீரியாக ஒலித்த ஈசன், 'என் பக்தன் சம்பந்தன் வந்து கொண்டிருக்கிறான். எனவே அர்த்தஜாம பூஜையை சற்று தாமதமாக செய்யுங்கள்' என்று கூறியதை சிரமேற்கொண்டு, அர்ச்சகர்கள் அனைவரும் திருஞானசம்பந்தரின் வருகைக்காக காத்திருந்தனர். இதற்குள் அர்த்தஜாம பூஜைக்கான நள்ளிரவு நேரம் கடந்து விட்டது. சம்பந்தர் ஆற்று வெள்ளத்தைக் கடந்து திருக்கோவிலை அடைந்தபோது அதிகாலை வந்து விட்டது.

இதையடுத்து அதிகாலையில் நடைபெறும் உஷத் கால பூஜையின்போது, முன்தினம் நள்ளிரவில் நடைபெற வேண்டிய அர்த்த ஜாம பூஜையை அர்ச்சகர்கள் செய்தனர். அதனை கண்டுகளித்து ஈசனை வழிபட்டார் திருஞானசம்பந்தர். அன்றைய தினம் ஐப்பசி மாத அமாவாசையாகும். அதாவது தீபாவளி அன்று நள்ளிரவில் நடக்க வேண்டிய அர்த்தஜாம பூஜை, தீபாவளிக்கு மறுநாள் அதிகாலையில் நடைபெற்றது. இதனை நினைவுகூரும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் சம்பிரதாயமாக இந்த பூஜை, அவ்வாறே கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.

ஓடத் திருவிழா

திருஞானசம்பந்தர் திருக்களம்பூருக்கு எழுந்தருளிய சம்பவத்தை நினைவுகூரும் வகையில், தனி விழாவாக 'ஓடத் திருவிழா' நடத்தப்பட்டு வருகிறது. சம்பந்தர் உற்சவர் சிலையை படகில் வைத்து, ஓதுவார்கள் தேவாரப் பதிகம் ஓத, வெட்டாற்றின் இக்கரையில் இருந்து அக்கரைக்கு படகில் கொண்டு செல்வார்கள். அதிகாலை சூரிய உதயத்துக்கு முன்பாக படகு கரை வந்து சேரும். அங்கே திருஞானசம்பந்தரையும், அவரது அடியவர்களையும் ரிஷப வாகனத்தில் கயிலை வாசனான திருக்களம்பூர் ஈசனும், பார்வதிதேவியும் எதிர்கொண்டு அழைப்பார்கள். பிறகு அனைவரும் கோவிலுக்குள் செல்வார்கள். அப்போது தான் அந்த காலை வேளையில் அர்த்தஜாம பூஜை நடைபெறும்.

ஆண்டிற்கு ஒருமுறை மட்டுமே இதுபோன்ற காலம் தவறிய பூஜை நடைபெறுகிறது. இதில் கலந்து கொண்டால், நம் வாழ்வில் நமக்கு தேவைப்படும் அனைத்து ஐஸ்வரியங்களும் தவறாமல் கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக இருக்கிறது. பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் ஓடத் திருவிழாவில் கலந்து கொண்டு, வாழ்க்கை ஓட்டத்துக்கான அனைத்தையும் திருக்களம்பூர் ஈசனிடம் பெற்று உயர்வடைகிறார்கள்.

கோவில் அமைப்பு

வெட்டாற்றின் கரையில் 'நம்பர் கோவில்' என்னும் 'சம்பந்தர் கோவில்' அமைந்துள்ளது. இந்தக் கோவிலில் உள்ள கிராத மூர்த்தி பிரசித்தம். தொடர்ந்து ஐந்து பவுர்ணமியில் இந்த ஆலயம் வந்து கிராத மூர்த்தியை நெய் தீபமேற்றி வழிபட்டால் எதிலும் வெற்றி வாகை சூடலாம். ஓடத்தில் வந்திறங்கிய திருஞானசம்பந்தரையும், அவரது அடியார்களையும் ஈசனும், உமையாளும் வரவேற்ற இடம் இந்த நம்பர் கோவில் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

திருகளம்பூர் திருத்தலத்தில் ஐந்து நிலை உள்கோபுரத்தை கடந்து உள்ளே சென்றால் கொடிமர விநாயகரை வழிபடலாம். கிழக்கு நோக்கிய மூலவர் வில்வ வனநாதரையும், தெற்கு நோக்கிய அம்பாள் 'அழகுநாச்சி' என்னும் சவுந்திர நாயகியையும் தரிசனம் செய்யலாம். இத்தல விநாயகருக்கு 'காரியசித்தி விநாயகர்' என்று பெயர். இவரது துதிக்கை வலது பக்கமாக சுழித்தபடி உள்ளது. இவரை சங்கடஹர சதுர்த்தி நாட்களில் நெய்தீபம் ஏற்றி வழிபட்டு வந்தால் காரியங்கள் அனைத்திலும் ஜெயம் உண்டாகும் என்கிறார்கள்.

தீர்த்தங்கள்

கோவிலுக்கு வெளியே தெற்கு வீதியில் 'பசுமடம்' உள்ளது. இங்கு நடைபெறும் கோபூஜையில் அதிகாலை வேளையில் கலந்து கொண்டால், நாக தோஷங்கள், பெண் சாபங்கள், பிதுர் தோஷங்கள் அகலும். வெட்டாறு, பிரம்மதீர்த்தம், அர்ச்சுன தீர்த்தம், அகத்திய தீர்த்தம் என நான்கு தீர்த்தங்கள் இங்கு உள்ளன.

ஆலய உட்பிரகாரத்தில் பொய்யா கணபதி, தண்டபாணி, முருகர், கஜமுக்தீஸ்வரர், முல்லைவன நாதர், ஆதிவில்வநாதர், கஜலட்சுமி, சாட்சிநாதர், பாதாள வரதர், மகாலிங்கர், கங்கையம்மன், தட்சிணாமூர்த்தி, விசாலாட்சி, சரஸ்வதி, பைரவர், சூரியன், சனி பகவான், லிங்கோத்பவர், பிட்சாடனர், துர்க்கை, சண்டேஸ்வரர், பிரம்மன், நவக்கிரகங்கள் உள்ளிட்ட பல சன்னிதிகள் அமையப்பெற்றுள்ளன.

திருக்களம்பூரில் இறப்பவர்களுக்கு, சிவபெருமானே பஞ்சாட்சர மந்திரத்தை வலது செவியில் ஓதி முக்தி அளிப்பதாக தல புராணம் தெரிவிக்கிறது. எனவே இத்தலத்திற்கு 'பஞ்சாட்சரபுரம்' என்ற பெயரும் உண்டு. அர்ச்சுனன் இத்தல ஈசனை வழிபட்டு பாசுபத அஸ்திரத்தைப் பெற்றுள்ளான். பிரம்மா, இத்தல ஈசனை வழிபட்டு தனது சாபத்தைப் போக்கிக் கொண்டுள்ளார்.

கும்பகோணம்- திருவாரூர் பாதையில் குடவாசலில் இறங்கி 5 கிலோமீட்டர் தூரம் சென்றால் செல்லூர் என்ற ஊர் வரும். அங்கிருந்து கொரடாச்சேரி செல்லும் வழியில் 1 கிலோமீட்டர் தூரத்தில் திருக்களம்பூர் திருத்தலம் அமைந்துள்ளது.

ஓம் நமசிவாய 
படித்து பகிர்ந்தது 
இரா இளங்கோவன் 
நெல்லிக்குப்பம்

ரத்தினகிரீஸ்வரர் கோவில் அய்யர் மலை

அருள்மிகு ரத்தினகிரீஸ்வரர் கோவில் (அய்யர் மலை)
1178 அடி உயரமும் 1117 படிகள் கொண்ட மலை மீது அமைந்துள்ள மிகவும் சிறப்பு வாய்ந்த சிவதலம். சித்திரை மாதங்களில் சூரிய கதிர்கள் சுவாமி சன்னதிக்கு நேரேயுள்ளநவத்துவாரங்களின் வழியேசிவலிங்கத்தின் மீது விழுகின்றது.  

இக்கோவிலில் சுவாமிக்கு காலையில் பால் அபிஷேகம் செய்த பச்சை பால், மாலை வரை கெடாது.

பத்தி, கற்பூரம் ஆகியவை பாலில் விழுந்த போதிலும் கெடுவதில்லை. அபிஷேகம் செய்த பால் சிறிது நேரத்தில் கெட்டியான சுவை மிகுந்த தயிராக மாறி விடுகிறது.

இது இக்கோயிலின் இன்று வரை நடக்கும் அதிசயமான ஒன்றாகும். சிவனின் தேவாரப்பாடல் பெற்ற 274 சிவாலயங்களில், இது 64வது தேவாரத்தலமாகும்.

இயற்கை எழில் சூழ்ந்த காட்சியுடன் விளங்கும் இம்மலை மேருமலையின் ஒரு சிகரமாகும்.

சோதிலிங்க வடிவமானது. மணி முடி இழந்த ஆரிய மன்னன் ஒருவன் இத்தலத்திலுள்ள இறைவனுக்கு அபிசேக ஆராதனைகள் செய்கின்ற போது அங்குள்ள கொப்பரையில் காவேரி தீர்த்தம் ஊற்றப்பட்டது. ஆனால் தீர்த்தம் ஊற்ற ஊற்ற கொப்பரை நிரம்பவே இல்லை.

ஊர் மக்கள் அனைவரும் ஊற்றியும் நிரம்பாததால் மன்னன் கோபம் கொண்டு தன் வாளை உருவி சுவாமி மீது வீசினான்.

இதனால் சுயம்புவில்இருந்து ரத்தம் வந்தது, மன்னன் தன் தவறைஉணர்ந்துஇறைவனை வணங்கினான்.  

இதையடுத்து இறைவன் தோன்றிமன்னனுக்கு
அருளாசி வழங்கி
இரத்தினங்களை வழங்கினார் அந்த தழும்பு இன்னும் சுவாமியின் மீது உள்ளது.

இறைவன் 9 ரத்தினங்களாக இருப்பதால் இம்மலையை சுற்றி அமைந்த சுற்று வட்டாரப்பகுதிகளில் பூமிக்கடியில் பச்சை கற்கள், சிவப்பு கற்கள் ஆகியவை நிறைய கிடைக்கின்றன.  

சுற்றிலும் 8 பாறைகளுக்கு நடுவே உள்ள ஒன்பதாவது பாறையில் சிவபெருமான் சுயம்புவாகஎழுந்தருளியுள்ளார்.. இம்மலையில் உள்ள பாம்புகள் தீண்டினால் விஷம் ஏறுவதில்லை.

ஓம் நமசிவாய 
படித்து பகிர்ந்தது 
இரா இளங்கோவன் 
நெல்லிக்குப்பம். 

Friday, September 12, 2025

கோலார் கோலாரம்மன் என்ற மகிஷாசுரமர்த்தினி கர்நாடக


முதலாம் இராஜராஜ சோழன் மற்றும் இராஜேந்திர சோழன் ஆட்சிக் காலத்தில் கட்டப்பட்ட தலமான 
#கர்நாடக_மாநிலத்தில் உள்ள புகழ்பெற்ற 
சிற்ப கருவூலமாக விளங்கும் 
#தங்கபூமியான 
#கோலார் (குவளாலநாடு)
#கோலாரம்மன் என்ற #கோலாரம்மா (மகிஷாசுரமர்த்தினி மற்றும் சப்த மாதர்கள்)
திருக்கோயில் வரலாற்றையும் புகைப்படங்களையும் காணலாம் வாருங்கள் 🙏🏻 🙏🏻 🙏🏻 🙏🏻 

கர்நாடக மாநிலத்தில் தங்க பூமியான கோலாரில் சோழர்கள் கட்டிய கோலார் அம்மன் கோயில் உள்ளது.

 கர்நாடக மாநிலம், கோலார் மாவட்டம் கோலாரில் அமைந்துள்ளது, கோலாரம்மன் கோவில். கோலார் மக்கள் பார்வதி தேவியை, கோலாரம்மா என்ற பெயரில் வணங்குகின்றனர். பண்டைய காலத்தில் இந்நகருக்கு குவளாலபுரம் என்று பெயர். இதே கோவில் பிரகாரத்தில் செல்லம்மா கோவில் என்றொரு கோவில் உள்ளது. தேள் கடித்து பாதிப்பு ஏற்படும்போது, இங்கு வழிபட்டால் நோய் தீரும் என்பது உள்ளூர் மக்களின் நம்பிக்கை.

#ராஜராஜ சோழன் அவரது மகன் ராஜேந்திர சோழன் ஆகியோர் கட்டிய கோவில்:
கி.பி 10 ஆம் நூற்றாண்டில் முதலாம் இராஜராஜன்  கோலார் பகுதியை கைப்பற்றி தனது ஆதிக்கத்தின் கீழ் கொண்டு வந்தான். கோலார் அம்மன் கோயிலில் உள்ள இராஜராஜனின் 12 - 22 ஆம் ஆட்சியாண்டு கல்வெட்டுக்கள், குவளாலநாடு (கோலார்), நிகரிலிச்சோழ மண்டலத்தில் இருந்ததாகக் குறிப்பிடுகின்றன. கோலார் நகரை, சோழர்கள் தங்கள் ஆதிக்கத்தின் கீழ் நீண்ட நாட்கள் வைத்திருந்தமைக்கு பிரதான காரணமே அது தங்க பூமி என்பதாலேயே என்கின்றனர் சில வரலாற்று அறிஞர்கள். கோலார் நகருக்கு பெருமை சேர்பதாக இருப்பது முதலாம் இராஜராஜன் மற்றும் அவனது மகன் முதலாம் இராஜேந்திரன் ஆகியோர் கட்டிய உலகப் புகழ்பெற்ற, இந்த கோலார் அம்மன் கோவிலாகும்.

இங்கு இரண்டு கோவில்கள் உள்ளன. இரண்டுமே சப்த மாதர்களுக்காக முதலாம் இராஜராஜன் மற்றும் அவனது மகன் முதலாம் இராஜேந்திரனால் கட்டப்பட்டவை. குறிப்பாக போரில் வெற்றியை பெற்றுத்தரும் கடவுள்களான சப்த மாதர்களுக்காக (சாமுண்டி) இக்கோவில் கட்டப்பட்டதாகும். 

*மிரள வைக்கும் போர்க்களக் காட்சியின் சிற்பத் தொகுப்பு:

கோலார் அம்மன் கோவில் ஒரு சிறந்த சிற்ப கருவூலமாக விளங்குகிறது.  குறிப்பாக இக்கோவிலின் முதல் பிரகாரத்தின் நுழைவாயிலின் வடக்கு பகுதி மண்டபத்தில் சுமார் ஐந்து அடி, உயரமும் நான்கு அடி அகலமும் கொண்ட கற்பலகையில் இரு நாட்டு வீரர்கள் போர்க்களத்தில் நேருக்கு நேர் மோதிக்கொள்ளும் நேரடிக் காட்சி அப்படியே சிற்பமாக்கப் பட்டுள்ளது. சிற்ப தொகுப்பின் மேற்புறம் அரசன் போர்க்களம் புறப்படும் காட்சியும். பிறகு போர்களத்தில் தங்கியிருக்கும் காட்சியில் ஆடல் மகளிர் நடனம்புரியும் காட்சியும் உள்ளன. மறுநாள் போர் ஆரம்பம். இரு தரப்பு வீரர்களும் நேருக்கு நேராக மோதிக்கொள்ளும் போர்களக் காட்சிகள் காட்டப்பட்டுள்ளன. மேலும் யானை ஒன்று போர்க்களத்தில் எதிரி படையினரை நோக்கி வேகமாக தாக்குதல் நடத்த ஓடிவரும் காட்சி பார்ப்பவரை மிரளவைக்கிறது. அதைத் தொடர்ந்து குதிரை வீரனின் வாள் வீச்சில் எதிரி வீரன் ஒருவனின் தலை துண்டிக்கப்பட்டு தலை வேறு உடல் வேறாக கிடக்கும் காட்சியில் போரின் உக்கிரத்தை காண முடிகிறது.

மேலும் குதிரையின் காலடியில் வீரன் ஒருவனின் உடல் இரண்டாக வெட்டப்பட்டு கிடக்கும் காட்சி பார்ப்பவருக்கு மிரட்சியை ஏற்படுத்துவதாக உள்ளது. சிற்பத் தொகுப்பின் கீழ் பகுதியில் போரில் இறந்த வீரர்களின் உடல்களை கழுகு கொத்தி தின்னுவது போன்றும், நரியொன்று இறந்த வீரனொருவனின் உடலில் இருந்து சதைகளை பிய்த்து தின்னுவது போன்ற சிற்பங்களில் போரின் கொடூரத்தை உணரமுடிகிறது.

மொத்தத்தில் இந்த சிற்பத்தை பார்ப்பவர்களுக்கு அந்தகால போர்களத்திற்கு நம்மை கூட்டி செல்வது போன்ற உணர்வை ஏற்படுத்துவதாக உள்ளது. மேலும் தென்னிந்தியாவில் ஒரு போர்க் களத்தின் நேரடி காட்சியைத்  தத்ரூபமாக வடிக்கப்பட்டுள்ள முதல் சிற்பத் தொகுப்பு அனேகமாக இதுவாகத்தான் இருக்கமுடியும். 

மைசூர் அரச குடும்பத்தினர் இந்த கோயிலுக்கு வருகை தந்து தேவியின் ஆசிகளைப் பெற்றதாக நம்பப்படுகிறது. இந்த கோயில் தென்னிந்திய விமான பாணி கட்டிடக்கலையைக் கொண்டுள்ளது மற்றும் கி.பி 1012 காலத்தைச் சேர்ந்த கல்வெட்டுகளைக் கொண்டுள்ளது. கோயிலின் கிரானைட் கற்களுக்குள் சிக்கலான சிற்பங்கள் மற்றும் வடிவமைப்புகள் உள்ளன.

ஆயிரம் ஆண்டுகள் பழமையான இந்தக் கோயில் தென்னிந்திய கட்டிடக்கலை பாணியில் கட்டப்பட்டுள்ளது. இதில் சோழர்களால் உருவாக்கப்பட்ட பல்வேறு கல்வெட்டுகளைக் காட்டும் கிரானைட் கற்கள் உள்ளன. இந்தக் கோயிலில் இரண்டு சன்னதிகள் உள்ளன - ஒன்று கோலரம்மா, மற்றொன்று சப்தமாத்ரங்கள். பிரதான கோயில் கிழக்கு நோக்கியும், மற்றொன்று வடக்கு நோக்கியும் இருந்தாலும், இரண்டு சன்னதிகளும் ஒரு பொதுவான முன்மண்டபத்தைப் பகிர்ந்து கொள்கின்றன. கோயிலுக்குள் கன்னடம் மற்றும் தமிழில் 30க்கும் மேற்பட்ட கல்வெட்டுகள் காணப்படுவது கவனிக்கப்பட்டுள்ளது.

செல்லம்மா கோயிலில் உள்ள மற்றொரு தெய்வம். தேள் தெய்வம் என்றும் அழைக்கப்படும் இவர், இந்த ஆலயத்தில் தவறாமல் பிரார்த்தனை செய்தால் தேள் கடியிலிருந்து தப்பிப்பார் என்று நம்பப்படுகிறது. கோயிலுக்குள் பிளாஸ்டிக் கலை ஒரு முக்கிய அம்சமாகும். கோயிலில் ஒரு போர் காட்சியை சித்தரிக்கும் ஒரு பலகை உள்ளது, சுமார் நான்கரை அடி உயரமுள்ள ஒரு கல்லும் உள்ளது, அதில் குதிரைகள், யானைகள், தேர்கள் மற்றும் வீரர்கள் சித்தரிக்கப்படுகிறார்கள்.

கோலரம்மா கோயிலின் மற்றொரு முக்கிய அம்சம் பக்தர்களிடமிருந்து காணிக்கை சேகரிக்கப் பயன்படுத்தப்படும் ஹுண்டி, ஒரு கிணறு என்றும் அழைக்கப்படுகிறது. ஹுண்டி என்பது பூமிக்குள் ஒரு பெரிய மற்றும் பெரிய துளை, அதன் உள்ளே பல ஆண்டுகளாக சேகரிக்கப்பட்ட ஆயிரக்கணக்கான நாணயங்கள் உள்ளன.

இந்த கோயிலில் வீற்றிருக்கும் தெய்வம் மகிஷாசுரமர்த்தினி, உள்ளூர் மக்களால் கோலரம்மா என்று அழைக்கப்படுகிறார். அவர் எட்டு கைகளைக் கொண்ட துர்க்கை தேவி. பக்தர்கள் சிலைக்கு எதிரே வைக்கப்பட்டுள்ள கண்ணாடியைப் பார்த்து அவளை வணங்குகிறார்கள். செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் சிறப்பு பூஜை நடத்தப்படுகிறது, அப்போது பக்தர்கள் கோயிலுக்கு வருகை தருகிறார்கள்.

கோயிலின் மையத்தில், சப்தமாத்ரிகைகள் உள்ளனர். அவர்கள் ஏழு தாய்மார்கள் ஒரு குறிப்பிடத்தக்க முக்கிய நிலையில் வைக்கப்படுகிறார்கள்.

*கட்டிடக்கலை வரலாறு:

தமிழக வரலாற்றில் சுமார் 433 ஆண்டுகள் நிலையாக ஆட்சி செய்த பெருமை சோழர்களையே சாரும். இவர்களது ஆட்சிகாலத்தில் தமிழகம் கட்டடக்கலை, சிற்பக்கலை, ஓவியக்கலை, நிலையான நீர் மேலான்மை திட்டங்கள், உள்ளாட்சிகளுக்கான உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பதில் வெளிப்படையான தேர்தல் முறை, உள்நாடு மற்றும் வெளிநாட்டு வாணிபத்தில் நேர்மையான அணுகுமுறையால் அந்நியச் செலவாணியை ஈட்டி நிலையான அரசு வருவாயை பெற்றது.

நீதி வழங்குவதில் சமநிலையைப் பின்பற்றியது, இந்திய மன்னர்களிலேயே வலிமையான கப்பற்படையை இவர்கள் வைத்திருந்ததனால் தான் கடல் கொள்ளையர்களின் பயமின்றி தமிழகத்தோடு அணைத்து நாடுகளும் போட்டிபோட்டுக் கொண்டு வாணிபம் செய்ய முடிந்தது என இம்மன்னர்களின் பெருமைகளை சொல்லிக்கொண்டே போகலாம்.  கார்நாடக மாநிலத்தின் தங்கபூமியான கோலாரில் உள்ள கோலார் அம்மன் கோயிலை ஆய்வு செய்த அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரியின் வரலாற்றுத்துறை பேராசிரியரான முனைவர் ஜெ.ஆர். சிவராமகிருஷ்ணன் தெரிவித்தது:

கர்நாடக மாநிலத்தில் உள்ள கோலார் 8225 சதுர கிலோமீட்டர் பரப்பளவைக் கொண்டு தற்போது தனி மாவட்டமாக விளங்குகிறது. பண்டைய காலத்தில் இந்நகருக்கு குவளாலபுரம் என்பதாகும். கி.பி  350-ல் கங்கமன்னர்களின் வம்சத்தை தோற்றுவித்த கொங்கனிவர்மானால் கோலார் நகரம் நிர்மாணிக்கப்பட்டு பிற்பாடு கங்கமன்னர்களின் தலைநகராக மாற்றம் பெற்றது. கி.பி 10-ஆம் நூற்றாண்டில் முதலாம் இராஜராஜன் கங்கர்களிடமிருந்து கோலார் பகுதியை கைப்பற்றி தனது காலனி யாதிக்கத்தின் கீழ் கொண்டு வந்தான். கோலார் அம்மன் கோயிலில் உள்ள இராஜராஜனின் 12 – 22 ஆம் ஆட்சியாண்டு கல்வெட்டுக்கள் குவளாலநாடு  ( கோலார் )  நிகரிலிச்சோழ மண்டலத்தில் இருந்ததாகக் குறிப்பிடுகின்றன.

மேலும் இக்கோயிலில் பணிபுரியும் சிவபிராமணர்களுக்கு அரியூர் என்ற கிராமத்தை தேவதானமாகவும் வழங்கியுள்ளான். குறிப்பாக கோலார் நகர் கர்நாடகாவின் தென்கிழக்குப் பகுதியில் அமைந்திருந்த ஒரு சிறப்புற்ற நகராகும். இதனைப்பிடிப்பதினால் வடகர்நாடக பகுதிகளை தமது காலனியாதிக்கத்தின் கீழ் கொண்டு வருவது மிக எளிதாகும். மேலும் நுளம்பர்கள், மேலைச் சாளுக்கியர்கள், இராஷ்டிர கூடர்கள், கீழைச் சாளுக்கியர்கள் போன்றவர்களின்  நாடுகளை தங்களது காலனியாதிக்கதின் கீழ் கொண்டுவருவது மிக எளிதாகும் என்பதை இராஜராஜன் கருதியதாலேயே கங்கர்களிடமிருந்து முதலில் கோலார் நகரை கைப்பற்றினான். கங்கர்களிடமிருந்து தாம் கைப்பற்றிய கோலார் சோழ நிலைப்படையொன்றின் முக்கிய கேந்திரமாக மாற்றப்பட்டது. குறிப்பாக  கோலார் நகரை சோழர்கள் தங்கள் ஆதிக்கத்தின் கீழ் நீண்ட நாட்கள் வைத்திருந்தமைக்கு பிரதான காரணமே அது தங்க பூமி என்பதாலேயே என்கின்றனர் சில வரலாற்று அறிஞர்கள். குவலம் போற்றும் கோலார் அம்மன் கோயில் கோலார் நகருக்கு பெருமை சேர்பதாக இருப்பது முதலாம் இராஜராஜன் மற்றும் அவனது மகன் முதலாம் இராஜேந்திரன் ஆகியோர் கட்டிய உலகப் புகழ்பெற்ற கோலார் அம்மன் கோயிலாகும்.

இக்கோயில் தற்போது பிற்கால சோழர்களின் காலனியாதிக்கக் கலைப்பாணிக்கு மிகச் சிறந்த எடுத்துக்காட்டாகும். இங்கு இரண்டு கோயில்கள் உள்ளன. இரண்டுமே சப்த மாதர்களுக்காக முதலாம் இராஜராஜன் மற்றும் அவனது மகன் முதலாம் இராஜேந்திரனால் கட்டப்பட்டவை. குறிப்பாக போரில் வெற்றியை பெற்றுத்தரும் கடவுள்களான சப்த மாதர்களுக்காக (சாமுண்டி) இக்கோயில் கட்டப்பட்டதாகும். இக் கோயிலில் 17 கல்வெட்டுக்கள் சோழர் காலத்தவை. அதில் முதலாம் இராஜேந்திர சோழனின் 22 ஆம் ஆட்சியாண்டு கல்வெட்டில் இவனது தளபதிகளில் ஒருவரான உத்தமசோழன் பிரம்மமாராயன் என்பவன் செங்கல் கோயிலாக இருந்த கோலாரம்மன் கோயிலை கற்றளியாக மாற்றியதைக் குறிப்பிடுகிறது. போர்க்கள காட்சியின் சிற்ப தொகுப்பு: கோலார் அம்மன் கோயில் ஒரு சிறந்த சிற்ப கருவூலமாக விளங்குகிறது.

குறிப்பாக இக்கோயிலின் முதல் பிரகாரத்தின் நுழைவாயிலின் வடக்கு பகுதி மண்டபத்தில் சுமார் ஐந்து அடி, உயரமும் நான்கு அடி அகலமும் கொண்ட கற்பலகையில் இரு நாட்டு வீரர்கள் போர்க்களத்தில் நேருக்கு நேர் மோதிக்கொள்ளும் நேரடிக் காட்சி அப்படியே சிற்பமாக்கப் பட்டுள்ளது. சிற்ப தொகுப்பின் மேற்புறம் அரசன் போர்க்களம் புறப்படும் காட்சியும். பிறகு போர்களத்தில் தங்கியிருக்கும் காட்சியில் ஆடல் மகளிர் நடனம்புரியும் காட்சியும் உள்ளன. மறுநாள் போர் ஆரம்பம்
இரு தரப்பு வீரர்களும் நேருக்கு நேராக மோதிக்கொள்ளும் போர்களக் காட்சிகள் காட்டப்பட்டுள்ளன. மேலும் யானை ஒன்று போர்க்களத்தில் எதிரி படையினரை நோக்கி வேகமாக தாக்குதல் நடத்த ஓடிவரும் காட்சி பார்ப்பவரை மிரளவைக்கிறது. அதைத் தொடர்ந்து குதிரை வீரனின் வாள் வீச்சில் எதிரி வீரன் ஒருவனின் தலை துண்டிக்கப்பட்டு தலை வேறு உடல் வேறாக கிடக்கும் கட்சியில் போரின் உக்கிரத்தை காண முடிகிறது. மேலும் குதிரையின் காலடியில் வீரன் ஒருவனின் உடல் இரண்டாக வெட்டப்பட்டு கிடக்கும் காட்சி பார்ப்பவருக்கு மிரட்சியை ஏற்படுத்துவதாக உள்ளது. சிற்பத் தொகுப்பின் கீழ் பகுதியில் போரில் இறந்த வீரர்களின் உடல்களை கழுகு கொத்தி தின்னுவது போன்றும், நரியொன்று இறந்த வீரனொருவனின் உடலில் இருந்து சதைகளை பிய்த்து தின்னுவது போன்ற சிற்பங்களில் போரின் கொடூரத்தை உணரமுடிகிறது.

மொத்தத்தில் இந்த சிற்பத்தை பார்ப்பவர்களுக்கு கி.பி. 10 – 11 ஆம் நூற்றாண்டு போர்களத்திற்கே நம்மை கூட்டி செல்வது போன்ற உணர்வை ஏற்படுத்துவதாக உள்ளது. மேலும் தென்னிந்தியாவில் ஒரு போர்க் களத்தின் நேரடி காட்சியைத் தத்துருபமாக வடிக்கப்பட்டுள்ள முதல் சிறப்பத் தொகுப்பு அனேகமாக இதுவாகத்தான் இருக்கமுடியும். சாதாரண கற்பலகையில் போர்க்கள சிற்பங்களுக்கு உயிரோட்டத்தை தந்து சிறந்த காட்சி ஊடகமாக மக்களுக்கு படைத்த சிற்பியின் உளி வன்மை போற்றத்தக்கதாக உள்ளது.

இக்கோவிலில் உள்ள மஹிஷாசுரமர்த்தினியை இங்குள்ள மக்கள் கோலாரம்மனாக வழிபடுகிறார்கள். இந்த அம்மன் எட்டு கைகளைக் கொண்டு காட்சியளிக்கிறார். இவரை நேரடியாக தரிசிக்காமல், அம்மனுக்கு எதிரே கண்ணாடி வைக்கப்பட்டி அதில் தெரியும் அம்மனுடைய பிரதிபலிப்பை பக்தர்கள் பார்த்து தரிசித்துவிட்டு செல்கின்றனர். ஏனெனில், கோலரம்மனின் சக்தியை நேரடியாக மக்களால் எதிர்க்கொள்ள முடியாது என்று சொல்லப்படுகிறது.

செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் நடைபெறும் சிறப்பு பூஜையன்றே பக்தக்கள் கோவிலுக்கு வருகை தருகின்றனர். இக்கோவிலின் நடுவிலே 'சப்த மாத்ரிக்கள்' என்று சொல்லப்படும் ஏழு பெண் தெய்வங்கள் வைக்கப்பட்டுள்ளனர்.

கோலரம்மன், செல்லம்மா, சப்த மாத்ரிக்கள் மிகவும் உக்கிரமான தோற்றத்தில் தரிசனம் தருகிறார்கள். அதனால், பக்தர்கள் உன்னிப்பாக கவனிக்கும்போது பயம் ஏற்படலாம் என்று சொல்லப்படுகிறது. இந்த கோவிலின் தனித்துவத்தை உணர ஒருமுறை இங்கு சென்று தரிசித்துவிட்டு வருவது சிறப்பாகும்.

இந்த கோயிலுக்கு பக்தர்கள் மற்றும் கட்டிடக்கலை ஆர்வலர்கள் அடிக்கடி வருகிறார்கள். மார்ச் முதல் ஏப்ரல் வரையிலான காலம் இங்கு வருவதற்கு ஏற்றது. அந்த மாதங்களில் பிரபலமான தேர் திருவிழா கொண்டாடப்படுகிறது.

ஓம் நமசிவாய 
படித்து பகிர்ந்தது
 இரா இளங்கோவன் 
நெல்லிக்குப்பம். 

Followers

திருப்பாதிரிப்புலியூர் பாடலேஸ்வரர் (தோன்றாத்துணைநாதன்) பெரியநாயகிஅம்மன்

நவராத்திரி  மூன்றாம் நாளான இன்று  உலகப் புகழ்பெற்ற  தேவாரம் மற்றும் திருப்புகழ் பாடல் பெற்ற நடுநாட்டுத்தலங்களில் ஒன்றானதும்,  உம...