*பைரவர் ஆலயங்கள்*
*காசிக்கு நிகரான*
*வைரவன் கோயில்* *காலபைரவர் தலம்*!
தஞ்சாவூர் மாவட்டம், திருவையாறு அருகே கும்பகோணம் சாலையில் 5 கி.மீ. தொலைவில் வைரவன்கோயிலில் அமைந்துள்ள காலபைரவர் கோவில், காசி காலபைரவருக்கு இணையான தலமாகப் போற்றப்படுகின்றது.
இத்தலத்தில் காலபைரவர் எழுந்தருளி இருப்பதின் பின்னணியில் ஒரு புராண வரலாறு உள்ளது.
தென் கயிலாயம் என்று அழைக்கப்படுவது திருவையாறு.
இங்கிருந்து சுவாமி மலைக்கு சிவபெருமான் புறப்பட்டார்.
‘ஓம்’ என்னும் பிரணவத்தின் உட்கருத்தை உபதேசமாக பெறுவதற்காகத் தான், சிவபெருமான் இந்தப் பயணத்தை மேற்கொண்டார்.
அவரோடு மற்ற தெய்வங்களும் புறப்பட்டார்கள்.
வழியில் வைரவன் கோவில் என்னும் இத்தலத்திற்கு வந்த போது, பைரவரிடம் அங்கேயே தங்கியிருந்து அருள்புரியும் படி சிவபெருமான் கட்டளையிட்டார்.
அதன்படி பைரவர், வைரவன் கோவில் தலத்தில் காவிரி நதியின் வடகரையில் தெற்கு நோக்கி அமர்ந்தார்.
பழமையான இந்த ஆலயத்தின் வலதுபுறம் ஒரு வாய்க்கால் உத்திரவாகினியாக ஓடுகிறது.
பைரவர் நோக்கிய தெற்கு முகத்தில் மயானம் உள்ளது.
இது காசிக்கு சமமான பெருமையைப் பெற்ற இடமாகும்.
காசியில் உள்ள காலபைரவரின் அத்தனை அம்சங்களையும் இவரும் கொண்டிருக்கிறார்.
இங்கு பைரவரை பிரதிஷ்டை செய்த ஈசன் தங்கிய இடம் ஈசன் குடியாகி, அதுவே ஈச்சங்குடியானது.
தேவர்கள் நின்று வழிபட்ட இடம் தேவன்குடியானது.
கணபதி பூஜித்த இடம் கணபதி அக்ரஹாரம் ஆனது.
தேவி உமையாள் புரத்திலும், நந்தி மதகிலும், கங்கை கங்காபுரத்திலும் நின்று பைரவரை வழிபட்டார்கள் என்கிறது தலபுராணம்.
ஆலய அமைப்பு:
முன் முகப்பைத் தாண்டியதும் விசாலமான மகா மண்டபம் உள்ளது.
நடுவே நந்தியம்பெருமான் வீற்றிருக்கிறார்.
அடுத்துள்ள அர்த்த மண்டபத்தை அடுத்து கருவறை உள்ளது.
காசியில் உள்ள கால பைரவரின் அத்தனை சக்திகளையும் உள்ளடக்கியவராக இங்குள்ள பைரவர் அருள்கிறார்.
இத்தனை பெருமைகள் கொண்ட இத்தலத்தில் ஒவ்வொரு தேய்பிறை அஷ்டமி நாளிலும் நடைபெறும் பைரவ ஆராதனைகள் விசேஷமானவை.
சிவபெருமானால் ஸ்தாபிதம் செய்யப்பட்ட இத்தல கால பைரவருக்கு, ஒவ்வொரு மாத தேய்பிறை அஷ்டமியிலும் அர்த்த ஜாமத்தில் உலக நலன் கருதி சுவர்ண ஆகர்ஷண பைரவ மூலமந்திரம் ஜபித்து சிறப்பு ஹோமம் நடைபெறுகிறது.
அத்துடன் அன்று
108 வலம்புரி சங்காபிஷேகமும் கலசாபிஷேகமும் நடக்கிறது.
இந்த ஹோமத்தில்
கலந்து கொண்டு அர்த்த ஜாமத்தில் காலபைரவரை வழிபட அஷ்டலட்சுமிகளின் ஆசியும், கால பைரவரின் வரங்களும் ஒருங்கே கிடைக்கும் என்கின்றனர் பக்தர்கள்.
இரவில் 7 மணிக்குத் தொடங்கி நள்ளிரவு வரை நடைபெறும் இந்த பூஜையில் கலந்து கொண்டால் வேண்டியவை யாவும் நிறைவேறும்; தடைகள் யாவும் தகரும் என்பது நம்பிக்கை.
மேலும் அஷ்டமி நாளில் பைரவரை சிவப்பு நிற அரளியால் வழிபட்டால் நல்ல மக்கள் செல்வங்களைப் பெறலாம்.
மேலும், அஷ்டமி திதி, திருவாதிரை நட்சத்திரம், ஞாயிறு, வியாழக்கிழமை நாள்களில் உச்சிக்காலத்தில் வணங்குவது நல்ல பலனைத் தரும்.
ஞாயிறு, செவ்வாய், வெள்ளி ஆகிய நாள்களில் ராகு காலத்தில் வணங்குவது மிகவும் சிறந்த பலனைத்தருகிறது.
இந்தத் தலத்தில் நவகிரகங்களையும் தன் நெஞ்சுப் பகுதியில் தாங்கி இருக்கும் ஶ்ரீகாலபைரவரை பூஜிப்பது நவகிரக தோஷங்களின் நிவர்த்திக்காக தனித்தனியே நவகிரகங்களை பூஜிப்பதற்கு நிகரானது.
இங்கு ஶ்ரீகாலபைரவரை பூஜை செய்து வணங்கினால், நவகிரகங்களின் தோஷங்கள் நிவர்த்தி செய்யப்படும்.
ராகுகால நேரத்தில் பைரவருக்கு நடைபெறும் அபிஷேக ஆராதனைகளில் கலந்து கொண்டு, அவரை வணங்கினால் பல நன்மைகள் கிடைக்கும்.
வர வேண்டிய பணம் வந்து சேரும். தர வேண்டிய பணத்தை திருப்பித் தர வேண்டிய சூழ்நிலை உருவாகும்.
சனியின் தாக்கம் தீரும். கடுமையான கர்மவினைகள் தீர்ந்து விடும்.
திருமண தடைகள் விலகும்.
புத்திரபாக்கியம் கிட்டும். பைரவரை பஞ்ச தீபம் ஏற்றி வழிபட்டால் காலத்தினால் தீர்க்க முடியாத தொல்லைகள் தீரும்.
பஞ்சதீபம் என்பது இலுப்பை எண்ணெய், விளக்கெண்ணெய், நல்லெண்ணெய், பசு- நெய் ஆகியவை ஆகும். இவற்றை தனித்தனி தீபமாக ஏற்ற வேண்டும். அகல் விளக்கில் ஏற்றலாம்.
ஒன்றிலிருந்து ஒன்றை ஏற்றாமல் தனித்தனி தீபமாக ஏற்றி வழிபட்டால் எண்ணிய காரியங்கள் நிறைவேறும்.
இந்த ஆலயம் காலை 11 மணி முதல் 12 மணி வரையிலும், ஞாயிறு மட்டும் மாலை 4 மணி முதல் 6 மணி வரையிலும் திறந்திருக்கும்.
ஆலய அமைவிடம்
தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு- கும்பகோணம் சாலையில் திருவையாறில் இருந்து
5 கி.மீ. தொலைவில் உள்ளது வைரவன் கோவில்.
இந்த சிற்றூரில் சாலை ஓரத்திலேயே ஆலயம் இருக்கிறது.