ஸ்ரீ சொர்ணகாளீஸ்வரர் தரிசனம் !!
சிவகங்கை மாவட்டம் அடுத்துள்ள காளையார்கோவில் என்ற திருத்தலத்தில் சொர்ணகாளீஸ்வரர் என்ற பெயர் சிவன் அருள்பாலிக்கிறார்.
இவரை அபிஷேகம் செய்து வணங்கினால் எண்ணிய காரியங்கள் ஈடேறும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.
சிவபெருமானின் தோழனுக்கு வழிகாட்டிய காளை
இந்த ஆலயம் சிவபெருமாளின் தேவாரப்பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் 200வது தேவாரத் தலமாக விளங்குகிறது. தேவாரப்பாடல் பெற்ற பாண்டிய நாட்டுத்தலங்களில் இது 10வது தலமாகும்.
சுந்தரருக்கு வழிகாட்டிய காளை
ஓரு முறை சுந்தரர், விருதுநகர் அருகில் உள்ள திருச்சுழி என்ற தலத்தில் உள்ள திருமேனிநாதரை தரிசித்தார்.
பின்னர் அங்கிருந்து காளையார்கோவிலுக்கு சென்றார். அந்த ஊரின் எல்லைக்கு வந்தவுடன் பாதை முழுவதும் சிவலிங்கமாக இருப்பதை உணர்ந்தார். அதில் தனது கால்களைப் பதிக்க தயங்கினார் சுந்தரர்.
எல்லைப் பகுதியில் நின்றபடியே, இறைவா உன்னைக் காண உன் இருப்பிடம் வர முடியாத நிலை ஏற்பட்டு விட்டதே என்று எண்ணி வருந்தி, தேவாரப் பாடல் பாடினார். தன் தோழனான சுந்தரர் மீது இரக்கம் கொண்ட சிவபெருமான் தனது காளையை அங்கு அனுப்பி வைத்தார்.
அது சுந்தரர் நின்றிருந்த இடம் வரை வந்து மீண்டும் கோவிலை நோக்கித் திரும்பிச் சென்றது. அப்போது அவ்விடத்தில் ஓரு அசரீரி ஓலித்தது. காளையின் கால்தடம் பதிந்த இடங்களில், லிங்கம் இல்லை.
எனவே அந்த இடம் வழியாக நடந்து வந்து தன்னை தரிசிக்கலாம், என்றது அந்த அசரீரி. இதையடுத்து சுந்தரர், காளை நடந்து சென்ற இடம் வழியாக சென்று இறைவனை வணங்கி வழிபட்டார். காளை வழிகாட்டிய தலம் என்பதால், இவ்வூர் காளையார்கோவில் என்று பெயர் பெற்றது.
மூன்று சிவன் மூன்று அம்பாள்
இத்தலத்தில் இறைவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலித்து வருகிறார். பொதுவாக ஓரு கோவிலில் ஓரு மூலவரும், அம்பாளும் மட்டுமே இருப்பார்கள்.
ஆனால் காளையார்கோவில் சொர்ணகாளீஸ்வரர் கோவிலில் மூன்ற சிவன், மூன்று அம்பாள் சன்னதிகள் தனித்தனியாக உள்ளன.
ஆலயத்தில் உள்ள பெரிய கோபுரம் முதலாம் சுந்தரபாண்டியனாலும், சிறிய கோபுரம் மருமு பாண்டியர்களால் கட்டப்பட்டது.
சோமேசர் சவுந்திநாயகி, சொர்ணகாளீஸ்வரர் சொர்ணவல்லி, சுந்தரேஸ்வரர் மீனாட்சி என மூன்று சுவாமிகளும், மூன்று அம்மன்களும் மூலவர்களாக தனித்தனி சன்னதிகளில் வீற்றிருந்து அருள்பாலிக்கிறார்கள்.
இந்த மூலவர்களில் சொர்ணகாளீஸ்வரர் மட்டுமே தேவாரப்பாடல் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. இவரை வழிபட்டால் செல்வ வளம் பெருகும் என்பது நம்பிக்கை. சண்டாசுரன் என்ற அசுரனை அழித்த காளி, சொர்ணகாளீஸ்வரரை வழிபட்டு, தன் பாவம் நீங்கப்பெற்றார். அவரே இங்கு சொர்ணவல்லி என்ற திருநாமத்துடன் அருள்பாலித்து வருகிறாள்.
சகஸ்ரலிங்கம்
இந்த கோவிலில் ஆயிரம் லிங்கங்கள் இணைந்த சகஸ்ர லிங்கம் உள்ளது. மேலும் தங்கத்தால் ஆன பள்ளியறை இவ்வாலயத்தில் இருப்பது விசேஷமானதாகும்.
இத்தலத்தில் பிறந்தாலும், இறந்தாலும் முக்தி கிடைக்கும் என்பது ஐதீகம். இங்குள்ள இறைவனை வணங்கினால் பூர்வ ஜென்ம பாவம் விலகும்.
இந்திரன் தனக்கு ஏற்பட்ட சாபத்தை போக்க, பல சிவாலயங்களுக்கு சென்று வழிபட்டு வந்தான். அதேபோல் இந்த தலத்திலும் வழிபாடு செய்தான். இந்த ஆலயத்தில் ஆயிரம் சிவாலயங்களை ஓன்றாக தரிசித்த பலன் கிடைத்ததை இந்திரன் உணர்ந்தான்.
அதன் அடிப்படையிலேயே இக்கோவிலில் சகஸ்ரலிங்கம் பிரதிஷ்டை செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. சம்பந்தர், சுந்தரர், அருணகிரிநாதர் ஆகியோர் இத்தலத்தைப் பற்றி பாடியுள்ளனர். 1000 ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்த ஆலயம் அமைந்த இடத்தின் புராணப்பெயர் திருக்கானப்பேர் என்பதாகும்.
இந்த ஆலயத்தில் மந்தாரை மரம் தல விருட்சமாக இருக்கிறது. ஆலயத்தில் யானை மேடு என்னும் கஜபுஷ்கரணி, சிவகங்கை காளி தீர்த்தம், விஷ்ணு தீர்த்தம், சரஸ்வதி தீர்த்தம், கவுரி தீர்த்தம், லட்சுமி தீர்த்தம், சுதர்சன தீர்த்தம் ஆகிய தீர்த்தங்கள் உள்ளன.
யானை உருவாக்கிய
தீர்த்தகுளம்
மகரிஷி ஓருவரால் இந்திரனுக்கு மாலை ஓன்று பிரசாதமாக வழங்கப்பட்டது. அந்த மாலையை இந்திரன் தனது வாகனமான ஐராவத யானைக்கு அளித்தான். யானை அந்த மாலையை தரையில் வீசி எறிந்தது.
இதையடுத்து ஐராவத யானைக்கு, முனிவர் சாபம் கொடுத்தார். அந்த சாப சிவர்த்திக்காக ஐராவதம் இத்தல இறைவனுக்கு அபிஷேகம் செய்து வழிபட்டு வந்தது. வழிபாட்டு காலம் முடியும் வரை மனிதர்களின் பார்வை, அந்த யானையின் மீது படக்கூடாது என்பதே விதி.ஆனால் ஓருமுறை ஓரு மனிதன் அந்த யானையைப் பார்த்து விட்டான்.
இதனால் ஐராவதம் யானை தன் தலையால் பூமியை முட்டி, பாதாளத்துடன் சென்று விட்டது. யானை முட்டிய பள்ளத்தில் தண்ணீர் பெருகி, ஓரு தீர்த்தக்குளம் உண்டானது.
இதற்கு யானைமடு என்று பெயர். ராமபிரான், ராவணனை வதம் செய்ததால் ஏற்பட்ட பிரம்மஹத்தி தோஷம் நீங்க, இந்தத் தீர்த்தக்குளத்தில் நீராடியதாக கந்த புராணத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தவிர ஆலயத்திற்குள் சிவகங்கை தீர்த்தகுளம் உள்ளது.
பக்தர்கள் தங்களது வேண்டுதல்கள் நிறைவேற, சுவாமிக்கும் அம்பாளுக்கும் அபிஷேகம் செய்தும், வஸ்திரம் அணிவித்தும் நேர்த்திக் கடன் செய்கிறார்கள். இதனால் எண்ணிய காரியங்கள் அனைத்தும் இனிதே நிறைவேறும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது.
ஓம் நமசிவாய
படித்து பகிர்ந்தது
இரா இளங்கோவன்
நெல்லிக்குப்பம்.
No comments:
Post a Comment