Friday, May 8, 2026

திருநீறு (விபூதி) அணியும் பெருமாள்

திருநீறு (விபூதி) அணியும் #பெருமாள் ..
எனக்கும்  முதலில்  வியப்பாக தான் இருந்தது, திருக்கண்ணபுரத்திலும் இதே போன்றதொரு நடைமுறை இருப்பதும் அது பற்றி அறிந்து முந்தைய காலங்களில் அதற்கான காரணங்களோடு பதிவு செய்துள்ளேன். 

அதேபோன்று பஞ்சகிருஷ்ண தலங்களில் ஒன்றான திருக்கண்ணங்குடியிலும்  உள்ளதாக அறிந்தேன். வெகுகாலம் இதனை பார்க்க வேண்டும் என்ற ஆவல் இருந்த எனக்கு நேற்று அப்பகுதியை சார்ந்த அடியார் மூலம் இந்த விழா நடைபெறுவதை பற்றி  தெரியவந்தது. உடனே நானும் எனது நபருடன் இரவில் கோயில் சென்றடைந்தோம்.

 திருக்கண்ணங்குடி ஸ்ரீ தாமோதர நாராயண பெருமாள்  திருக்கோயிலில் சித்திரை  பிரம்மோற்சவம் ஏழாம் திருநாளான நேற்று இரவு பெரிய திருவாச்சியில் பெருமாள் புறப்பாடு   கண்டருளிய பின் நடு ஜாமம் மேல் (1மணி அளவில்) அலங்காரம் களைந்து , வெள்ளை நிற வஸ்திரம், பூ மாலை சாற்றி சிவ கைலாய உடல் வாத்தியம் முழங்க வேகமான நடையில் நடனமாடி தியாகராஜர் போன்று எழுந்தருளினார். 

அது சமயம் பெருமாள் சிவ ரூபமாக விபூதி, ருத்ராட்ச மாலை அணிந்து வருவதால் அதனை திருநீறு அணியும் விழாவாக பக்தர்கள் கொண்டாடியுள்ளனர், அப்போது வைணவ பட்டர்கள் உட்பட அனைவரும்  திருநீறு தரித்துக் கொள்வார்களாம். 

ஆனால் அவை எல்லாம் தற்போது படிப்படியாக குறைந்து பெருமாள் சந்தன திலகம் மட்டும் வைத்து புறப்படுகிறார். பட்டர்கள்  சமய பிடிப்பு என்று அதனை மட்டும் தவிர்த்து விடுவதாக தெரிகிறது. 

வேதத்தில் பஸ்ம தாரணம் (திரிபுண்டரமாக விபூதி தரித்தல்)  வேதத்தை அடிப்படையாகக் கொண்ட அனைத்து  சமயத்திற்கும் பொதுவானதாக கூறப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

( மதுரை கள்ளழகர் திருக்கோயிலில் பெருமாள் புறப்பாட்டின் போது பதினெட்டாம்படி கருப்பசாமியிடம் உத்தரவு வாங்குவார் அது சமயம் வைணவ பட்டர்கள் தீபாராதனை பின் விபுதியையும்  பிரசாதம் ஆக நெற்றியில் இட்டுக் கொள்வர் அதனை அடியேன் பார்த்து உள்ளேன்)

உபரிசரவஸு என்னும் மன்னனின் வேண்டுகோளுக்கு   இணங்க பெருமாள் இங்கு ஒரு நாளிகை சிவ ரூபமாக காட்சியளிப்பதாக கூறப்படுகிறது. 

இந்த விழா எதனால் நடக்கிறது என்று அறிந்து  உணர்ந்து கொள்வதன் மூலம் இவையெல்லாம் மாறாமல் இருக்கும் என்று நம்புகிறேன். 

மந்திரம் ஆவது நீறு; 
வானவர் மேலது நீறு;
சுந்தரம் ஆவது நீறு; 
துதிக்கப்படுவது நீறு;

ஓம் நமசிவாய 
படித்து பகிர்ந்தது
 இரா இளங்கோவன்
 நெல்லிக்குப்பம். 

No comments:

Post a Comment

Followers

திருநீறு (விபூதி) அணியும் பெருமாள்

திருநீறு (விபூதி) அணியும் #பெருமாள் .. எனக்கும்  முதலில்  வியப்பாக தான் இருந்தது, திருக்கண்ணபுரத்திலும் இதே போன்றதொரு நடைமுறை இர...