Wednesday, August 24, 2022

தாலியைக் காணிக்கையாகப் பெற்று மாங்கல்ய பலம் அருளும் திருவேற்காடு கருமாரியம்மன்

திருவேற்காடு கருமாரியம்மன் மூலவர் !

தாலியைக் காணிக்கையாகப் பெற்று மாங்கல்ய பலம் அருளும் திருவேற்காடு கருமாரியம்மன்!

'பாம்பே தலையணியாம், வேப்பிலையோ பஞ்சு மெத்தை' என அம்மன் தாலாட்டில் விவரிக்கும் திருவேற்காடு கருமாரியம்மன்  திருக்கோலம் அப்படியே காண வேண்டுமா? அப்படியானால் நீங்கள் திருவேற்காடுக்குத்தான் வரவேண்டும். ஆம், மிகப்பெரிய புற்றில் கருநாகமாக அன்னை குடி கொண்டு இருந்ததும், வேம்பு வடிவமாகவே சக்தி உருமாறி நின்றதும் இங்குதான். அருள் பொழிய நாகமும், மருந்தாக வேம்பும் இங்கே காட்சி தருவது அற்புதமான காட்சி. வாருங்கள் வேற்காட்டு மாரியை விழி விரிய தரிசிப்போம்.

1. மாரி என்றால் மழை போன்றவள். கருமாரி என்றால் கரியநிறத்து மழை மேகத்தை போன்று அருளை வாரி வழங்கும் அம்மன் என்று பொருள். க - கலைமகள்; ரு - ருத்ரி; மா - திருமகள்; ரி - ரீங்காரி (நாத வடிவானவள்) என இந்த அம்மனின் நான்கு அட்சரங்களுக்கும் பொருள் கூறுகிறது தலவரலாறு.

2. சென்னையிலிருந்து 20 கி.மீ., தொலைவில் திருவேற்காட்டில் கருமாரியம்மனின் ஆலயம் அமைந்துள்ளது. வேலமரக்காட்டில் அன்னை இருந்ததால் வேற்காடு எனப் பெயர் உருவானது.

3. மூலவரான அன்னை சுயம்புவாக சாந்தசொரூபியாக காட்சி அளிக்கிறாள். இவளுக்குப் பின்பு இருக்கும் அம்மன் கத்தி, சூலம், டமருகம், கபாலம் ஏந்தி காண்பவரை மெய்சிலிர்க்கச் செய்யும்படி காட்சி தருகிறாள்.

4. பிராகாரத்தில் இருக்கும் உற்ஸவ அம்மன் ஊஞ்சலில் அழகுடன் காட்சி தருகிறாள். மேலும் இங்குள்ள மரச்சிலை அம்மன் சிறப்பானவள். இவளுக்கு ரூபாய் நோட்டு மாலையாக அணிவிக்கப்படுகிறது. இவளை வேண்டினால் செல்வவளம் பெருகும்.

5. அரச மர விநாயகர், வள்ளி தெய்வயானை சமேத முருகர், பிரத்யங்கரா தேவி, நவகிரகம், சீனிவாச பெருமாள், ஆஞ்சநேயர், தட்சிணாமூர்த்தி, காயத்ரி, மஹாலக்ஷ்மி, அங்காளம்மன், சாவித்ரி, துர்கை, ராஜராஜேஸ்வரி எனப் பல தெய்வங்களின் சந்நிதிகள் இந்த ஆலயத்தில் அமைந்துள்ளன.

6. கருமாரியம்மனின் அருளை நாடி வரும் பக்தர்களுக்குத் திருமண வரம், குழந்தை வரம், வியாபார வளர்ச்சி, உடல் ஆரோக்கியம் போன்ற பல பலன்களை அள்ளித் தருகிறாள்.

7. சகல நோய்களையும் தீர்க்கும் அம்மனின் பிரசாதமான வேப்பிலையை மக்கள் பக்தியுடன் பெற்றுச் செல்கின்றனர். தீர்த்தமும் வேப்பிலையும் தீராத நோய்களைத் தீர்க்கும் என்பது நம்பிக்கை. வேப்பிலையும் பிரம்பும் கொண்டு இங்கு மந்திரிக்கப்பட்ட மக்கள், எந்த பயமும் இன்றி மகிழ்ச்சி கொள்கிறார்கள். ராகு, கேது தோஷம் உள்ளவர்கள் இங்குள்ள புற்றில் பால் ஊற்றினால் தோஷங்கள் விலகுகின்றன.

8. திருவிளக்கு பூஜை, வேப்பஞ்சேலை அணிதல், முடிகாணிக்கை, தேர் இழுத்தல், குங்கும அபிஷேகம், உப்பு காணிக்கை, மாலை அணிவித்தல், சங்காபிஷேகம், கலசாபிஷேகம், கல்யாண உற்ஸவம், பொங்கல் வைத்தல், அக்கினி சட்டி எடுத்தல், அங்கபிரதட்சணம், கண்ணடக்கம், வெள்ளிக்காணிக்கை என இந்தக் கோயிலில்தான் எத்தனை எத்தனை வேண்டுதல் முறைகள்! வந்து பார்த்தால் பரவச அனுபவத்தை நீங்கள் கட்டாயம் பெறுவீர்கள்.

9. ஒருமுறை சூரிய பகவான் சக்தியை அவமதித்ததால், கோபம் கொண்ட சக்தி அவனை சபித்து இருளாக்கினாள். பின்னர் கோபம் தணிந்த அன்னை சூரியனின் வேண்டுகோளுக்காக இந்த தலத்தில் அமர்ந்து சூரியனின் பூஜையைப் பெறுகிறாள் என்று தலவரலாறு கூறுகிறது. புற்றில் வாழ்ந்த நாகம் ஒன்று அம்மனின் அருட்காட்சியைக் காட்டியதால் இங்கு கோயில் உருவானதாகக் கூறுகிறார்கள்.

10. புற்றில் இருந்த அம்மன் சுயம்புவாக வெளியானதால் கருவில் இல்லாத கருமாரி அன்னை என்று போற்றப்படுகிறாள்.

11. ஆடி மாதம் தொடங்கி புரட்டாசி வரையிலான 12 வரங்களும் இங்கு அம்மனுக்கு சிறப்பான பண்டிகை நாள்கள். மேலும் தை மாத பிரம்மோற்ஸவம், அமாவாசை, சித்ரா பௌர்ணமி, நவராத்திரி என எல்லா மாதங்களுமே அம்மனுக்கு இங்கு விழா நாள்கள்தான்.

12. திருஞானசம்பந்தர் பதிகம் பாடிய திருக்கோயிலான வேதபுரீஸ்வரர் - பாலாம்பிகை ஆலயமும் அருகிலேயே உள்ளது. அகத்தியருக்குத் திருமணக் காட்சி அருளிய தலம் இது.

13. அறுபத்து மூன்று நாயன்மார்களில் மூர்க்க நாயனார் அவதரித்த தலம் திருவேற்காடு.

14. காலை 5 மணி முதல் இரவு 9 மணி வரை திறந்திருக்கும் திருவேற்காடு கருமாரியம்மன் கோயில் பக்தர்களுக்கு ஒரு ஆன்மிக மருத்துவமனையாகவே விளங்கி வருகிறது,

15. இந்த ஆலயத்தில் இருக்கும் 'பதி விளக்கு' அணையாத விளக்கு. அம்மனையும், இந்த விளக்கையும் தரிசித்தால் மாங்கல்ய பலம் பெறுவார்கள் என்பது ஐதீகம்.

16. தன்னை நம்பி வரும் பெண்களுக்கு மாங்கல்ய வரமளித்து, அவர்களை சுமங்கலியாக வாழ வைக்கும் இந்த அம்மனுக்கு தாலிகளே அதிகம் காணிக்கையாக அளிக்கப்படுகிறது. செவ்வாய் தோறும் இங்கு காலை 10 மணியளவில் செய்யப்படும் மாங்கல்ய தோஷ பரிகார பூஜை சிறப்பானது.

எல்லா ஞாயிற்றுக்கிழமையும் இங்கு சிறப்பான நாளாக இருந்து வருகிறது. அருள் சுரக்கும் அம்மனின் அற்புதத்தைக் காண வேண்டும் என்றால் நீங்கள் இங்கு வந்தால்தான் இயலும். அம்மாவைத் தேடி வரும் பிள்ளைகளாக இங்கு நாளுக்கு நாள் பக்தர்களின் கூட்டம் பெருகி வருகிறது. அதில் நீங்களும் ஒருவராக இருந்து அருளாசியைப் பெற்று வாருங்களேன்.

🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

No comments:

Post a Comment

Followers

108 திருப்பதிகளில் வைணவத் திவ்ய தேசங்கள்...

12 ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப்பட்ட #திருமாலின்  108 திருப்பதிகளில் (வைணவத் திவ்ய தேசங்களில் ) நம் #தமிழகத்தில்_உள்ள #முக்க...