Thursday, January 5, 2023

உத்திரகோசமங்கைபச்சைக்கல் நடராசப்பெருமான்வரலாறு

சித்தம் சிவமயம்
உத்திரகோசமங்கை
பச்சைக்கல் நடராசப்பெருமான்
வரலாறு

மங்களநாதசுவாமியும் மரைக்காயரும்

பெருமை மிக்க உத்தரகோசமங்கையில் இந்த மரகத நடராசர் சிலை உருவானதே எதிர்பாராத நிகழ்வாகும். 

இராமேசுவரம் செல்லும் வழியில் மண்டபம் என்ற மீனவ கிராமப் பகுதி இருந்தது. அங்கு மரைக்காயர் என்ற மீனவர் வறுமையில் வாழ்ந்து வந்தாலும், மிகுந்த நம்பிக்கையுடன் உத்தரகோசமங்கை மங்களநாதசுவாமியை அன்றாடம் வழிபட்டு வந்தார். தினந்தோறும் பாய்மரப்படகில் கடலுக்கு சென்று மீன் பிடித்து வந்து வியாபாரம் செய்து வாழ்க்கையை நடத்தி வந்தார்.

பாறையில் மோதிய படகு
ஒரு நாள், மரைக்காயர் கடலில் மீன் பிடித்துக்கொண்டு இருந்தபோது, திடீரென கடலில் சூறாவளிக் காற்றுடன் பேய் மழை பெய்ய ஆரம்பித்தது. அதில் அவருடைய பாய்மரப்படகு நிலைகுலைந்து எங்கேயோ அடித்து சென்றது. அப்படியே வெகு தூரம் போனபிறகு, படகு ஒரு பாசிபடர்ந்த பாறையின் மேல் மோதி நின்று விட்டது. அதில் அந்த பாசி படர்ந்த பாறை அப்படியே சரிந்து மூன்று துண்டுகளாக அந்த படகில் விழுந்து விட்டது. பாறை சரிவதற்காகவே காத்திருந்தது போல், அது வரையிலும் அடித்து துவைத்து வந்த பேய் மழையும் சட்டென்று நின்றது.

உயிர் திரும்பிய மரைக்காயர்
மரைக்காயர் அதிர்ச்சியிலிருந்து மீண்டு, திரும்ப மண்டபம் நோக்கித் திரும்பி வருவதற்கு பார்த்தால், அவருக்கு தான் எந்த திசையில் இருக்கிறோம் என்ற தெரியவில்லை. 

உடனே தான் அன்றாடம் கும்பிட்டு வரும் மங்களநாதசுவாமியை மனதில் நினைத்துக்கொண்டு, பல நாட்கள் கஷ்டப்பட்டு படகை செலுத்திக்கொண்டு ஒரு வழியாக மண்டபம் வந்து சேர்ந்தார். கடலுக்கு சென்றவர் இன்னும் திரும்பி வரவில்லை என்று காத்திருந்த மரைக்காயரின் உறவினர்கள், அவரை உயிரோடு பார்த்த உடன் நிம்மதிப் பெருமூச்சு விட்டனர்.

படிக்கல்லாக மாறிய பாறை
மரைக்காயர் படகில் கொண்டு வந்த பாசி படர்ந்த பாறைக் கற்களை என்ன செய்வது என்று தெரியாமல், சரி வீட்டுக்கு படிக்கல்லாக இருக்கட்டும் என்று போட்டு வைத்தார். வீட்டுக்குள் போக வரும் ஆட்கள் அந்த பாறைக் கல் மீது நடந்து நடந்து பாறை மேலிருந்த பாசி கொஞ்சம் கொஞ்சமாக நீங்கி, சூரிய வெளிச்சத்தில் பளபளவென்று மின்னத் தொடங்கியது.

பாண்டியன் பரிசு

பாறை மின்னுவதைப் பார்த்த மரைக்காயர், அந்த மங்களநாதசுவாமி தான் தன்னுடைய வறுமையை போக்க அளித்த பரிசு என்று நினைத்து, மின்னும் பச்சைப் பாறையை அரசருக்கு அன்பளிப்பாக அளித்தால் வறுமை நீங்கும் என்ற நல்லெண்ணத்துடன் பாண்டிய மன்னரின் அரண்மனைக்கு சென்றார். அங்கு, தனக்கு நடந்த அனைத்தையும் விளக்கிக் கூறி, தன்னிடம் ஒரு பச்சைப் பாறை உள்ளது என்று தெரிவித்தார்.

பொற்காசுகள்
பாண்டிய மன்னரும், 

மரைக்காயர் சொன்னதைக் கேட்டு உடனடியாக ஆட்களை அனுப்பி அந்த பச்சை பாறைக்கற்களை எடுத்துவரச் சொன்னார். கொண்டு வந்த அந்த பாறைக் கற்களை, அது பற்றிய விவரம் தெரிந்த ஆட்களை வைத்து சோதித்து பார்த்தார். பாறையை சோதித்து பார்த்த அவர்கள் மன்னரிடம், நிச்சயம் இது விலைமதிப்பற்ற அபூர்வ மரகதக்கல். உலகில் வேறு எங்கு தேடினாலும் நிச்சயம் கிடைக்காது என்று சொன்னார்கள். உடனே மன்னரும் மரைக்காயருக்கு பச்சை பாறைக்கற்களுக்கு உரிய பொற்காசுகளை வெகுமதியாக அளித்து வழி அனுப்பி வைத்தார்.

சிலை வடிக்க ஆள் இல்லையே
மரைக்காயரை வழியனுப்பி விட்டு வந்த பாண்டிய மன்னர், இவ்வளவு விலைமதிப்பற்ற அபூர்வ மரகதக் கல்லில் ஒரு நடராசர் சிலை வடித்தால் எவ்வளவு அற்புதமாக இருக்கும் என்று எண்ணிக்கொண்டு, நடராசர் சிலை வடிக்க பல இடங்களிலும் தேடி கடைசியில், இலங்கை மன்னன் முதலாம் கயவாகுவின் அரண்மனையில் சிற்பியாக இருக்கும் சிவபக்தரான இரத்தின சபாபதியைப் பற்றி கேள்விப்பட்டு, அவரை நடராசர் சிலை வடிக்க அனுப்பி வைக்குமாறு இலங்கை மன்னருக்கு ஓலை அனுப்பி வைத்தார்.

மரகத நடராசர்
சிலை வடிக்க சிற்பியும் வந்து சேர்ந்தார். சிலையை வடிக்க அந்த பாறையை பார்த்த உடனேயே மயங்கிச் சரிந்தார். மன்னரிடத்தில் தன்னால் மரகத நடராஜர் சிலையை செய்ய முடியாது என்று பின்வாங்கி சென்றுவிட்டார். இதனால் மனமுடைந்த பாண்டிய மன்னர், அந்த மங்களநாதசுவாமி சன்னதி முன் நின்று பிரார்த்தனை செய்தார். 

அப்போது, 
நான் மரகத நடராசர் சிலையை வடித்து தருகிறேன் மன்னா கவலை வேண்டாம், என்று ஒரு குரல் கேட்டது. குரல் வந்த திசையை நோக்கி திரும்பிய மன்னர், அங்கே ஒரு மனதை மயக்கும் வகையில் ஒரு சித்தர் நிற்பதைக் கண்டார். அவர் தான் சித்தர் சண்முக வடிவேலர். உடனே மன்னரின் கவலை நீங்கியது.

ஆடல்வல்லான் 
நடராசர் மரகத நடராசர் சிலையை வடிக்கும் பொறுப்பை சித்தர் சண்முக வடிவேலரிடம் ஒப்படைத்தார். அதோடு அவருக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்து கொடுத்தார். 

சித்தரும், 
அந்த பெரிய பாறையில் ஐந்தரை அடி உயர மரகத நடராசரை ஒன்றரை அடி உயர பீடத்துடன் ராஜ கோலத்தில், மிகவும் நுணுக்கமாக, நடராசரின் திருக்கரங்களில் உள்ள நரம்புகள் புடைக்க தெரியும் படி வடித்தார் சித்தர் சண்முக வடிவேலர். பின்பு பாண்டிய மன்னரை அழைத்து முதலில் நடராச மூர்த்தியை பிரதிட்டை செய்த, பின்பு கருவறை அமைக்கும் படி அறிவுறை கூறினார். அப்படி செய்ததால் தான்.

உத்தரகோசமங்கை 
நடராசர்
பல்லாயிரம் ஆண்டுகளைக் கடந்தும், முகலாயர்கள், ஆங்கிலேயர்கள் என பல படையெடுப்புகளையும் தாண்டி, இன்றைக்கும் கம்பீரமாக புன்னகை தவழும் முகத்துடன் ஆடவல்லால் ஆன நடராசர் உத்தரகோசமங்கை மங்களநாதசுவாமி கோவிலில் திருநடனம் புரிந்து வருகிறார். சிவபெருமானால் பரத நாட்டிய கலையை உலக மக்களுக்கு முதல் முதலில் அறிமுகம் செய்யப்பட்ட திருத்தலமாகும். இந்த உத்திரகோச மங்கையில் ஒரு முறை பக்தர்கள் வந்து மிதித்தால் கைலாயம் செல்வது நிச்சயம்.


No comments:

Post a Comment

Followers

திருவாசி மாற்றுரைவரதீஸ்வரர் (பிரம்மபுரீஸ்வரர்) திருச்சி....

திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் உள்ள புகழ்பெற்ற தேவாரப் பாடல் பெற்ற சோழநாட்டு தலங்களில் ஒன்றான,  சுந்தரமூர்த்தி நாயனார்  பொன் பொர...